Search This Blog

31.8.22

கணபதி உருவ பொம்மை உடைப்பு! ஏன்? எதற்கு? - பெரியார்





 

திராவிடத் தோழர்களே! இந்தியாவில் “வெள்ளைக்கார சக்கரவர்த்தி’’ ஆட்சி ஒழிந்து பார்ப்பன ஆதிக்க “ஜனநாயக ஆட்சி’’ ஏற்பட்டதிலிருந்து, இன்று, இந்த நேரம் வரை ஒவ்வொரு மாத்திரை நேரமும் வருணாச்சிரம தரும ஆட்சி வளர்ந்து வளம் பெற்று வருகிறது.

வருணாச்சிரம தருமத்தைப் புகுத்தப் பார்ப்பன ஆதிக்க ஏகபோக ‘ஜனநாயக’ ஆட்சியானது ஆட்சி முறை  பல துறைகளில் பல கொடுமையான முறைகளைக் கையாண்டு வந்தாலும்  திராவிட நாட்டில் _ தமிழ் நாட்டில் _ தென் இந்தியாவில் _ சென்னை ராஜ்ஜியத்தில் “வெள்ளைச் சக்கரவர்த்தி’’ காலத்தில் ஒரு அளவுக்கு  முன்னேற்ற மடைந்திருக்கிற திராவிடர்களை மனுகால சூத்திரர் ஆக்கத்திட்டம் கொண்டு உத்யோகத் துறையிலும், கல்வித் துறையிலும் திட்டம் வகுத்து செயலில் இறங்கிவிட்டது.

1.    சூத்திரர்களுக்கு அரசாங்க உத்யோகத்தில் இருந்த “சூத்திர’’ வகுப்பு உரிமை, அரசமைப்புச் சட்டத்தின் மூலம் நீக்கப்பட்டு, அய்கோர்ட் (உயர்நீதமன்ற) தீர்ப்பு மூலம் அந்த நீக்கம் உறுதியாகி அமலுக்கு வந்துவிட்டது. இதிலிருந்து “சூத்திரன்’’ (தமிழர்கள்) உத்தியோக உரிமை அற்றவர்களாக  ஆக்கப்பட்டு விட்டார்கள்.

2.    சூத்திரர்களுக்குக் கல்வித் துறையில் ஒரு அளவுக்குப் பெரிய கிளர்ச்சி மீது சிறிது உரிமை இருந்தது. அதுவும் ஆச்சாரியார் ஆட்சியில் அழிக்கப்பட்டுவிட்டது.

3.    கல்வித் துறையில் மேல்வகுப்பு அதாவது உத்தியோகத்திற்குத் தகுதியாகும் படிப்புதான் “சூத்திரன்’’களுக்கு உரிமை இல்லாமல் இருக்கும்படி செய்யப்பட்டுவிட்டது என்றாலும், பொதுக் கல்வி என்பதுகூட சரிவரப் பெறுவதற்கு இல்லாமல் அடிப்படைக் கல்வி என்னும் பேரால் தகப்பன் தொழிலை _ பரம்பரைத் தொழிலை, படிக்கவேண்டும் என்கின்ற நிர்ப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுவிட்டது.

இதை நான் ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் எந்த நாட்டிலும் இல்லாத இந்த அதிசயமான முறையானது, நாட்டுநலனுக்கு  ஆகவோ, கல்வி நலனுக்கு ஆகவோ, ஆட்சி நலனுக்கு ஆகவோ, அல்லது மக்கள் ஒழுக்க நலனுக்கு ஆகவோ அல்லாமல் பார்ப்பான் நலனுக்கும், சர்வ ஆதிக்க நலனுக்கும் ஆதரவு ஏற்படுத்தப்பட்டு இருந்து வருகிற வர்ணாசிரம தரும புதுப்பிப்புக்கு ஆகவே  இந்த “ஜனநாயக ஆட்சி’’ என்பதில் செய்யப்பட்டு வருகிறது என்பதைக் காட்டுவதற்கு ஆகவேயாகும்.

இன்று இந்தத் திராவிட (தமிழ்) நாட்டு திராவிட மக்கள் தங்கள் நாட்டிலேயே, தங்கள் “100க்கு 90க்கு மேற்பட்டு ஓட்டுரிமை’’ பெற்றிருந்தும், “ஜனநாயக’’ ஆட்சியிலேயே இந்த இழிநிலை; அதாவது சூத்திர, பஞ்சமநிலை அடைந்திருப்பதை ஒழித்துக் கொள்ள வேண்டுமானால்-_ இந்து வர்ணாச்சிரம தருமமுறையை அழித்து  ஒழித்தாலொழிய வேறு எந்தக் காரணத்தாலும் யாராலும் முடியாது என்று நான் மனப்பூர்வமாகச் சித்த சுத்தியாக நம்புவதால்,  வருணாசிரம முறையைஅழிக்கமுற்படும் முறையில் முன்னுரையாக இதைக் கூறுகிறேன்.

சமீப காலமாகவே பொதுமக்கள் உணரலாம்; என்னவெனில் ஆட்சியின் வேலையும், அதிகாரிகளின் வேலையும், சவுண்டிப் பார்ப்பனர் முதல் சங்கராச்சாரியார் பார்ப்பனர்வரை சர்வ பார்ப்பனர்களும் வருணாசிரம வேத சாஸ்திர புராண இதிகாசங்களைப் பிரசாரம் செய்வதும், இந்திய பிரசிடென்ட்டு, இந்திய பிரதமர், மற்றும் இராஜ்ய கவர்னர்கள், இராஜ்ய பிரதமர்கள் முதல் யாவரும் பார்ப்பனர்களாகவே ஆகிக்கொண்டு, மேற்கண்ட வேதசாஸ்திர புராண முதலிய பிரச்சாரங்களும் செய்து வருவது என்றால், இதில் ஏதாவது சூழ்ச்சி, உள்கருத்து இல்லாமல் இருக்க முடியுமா?

மற்றும் இவை மாத்திரமல்லாமல் நம் சூத்திர மக்களில் செல்வவான், கல்விமான், அரசியலில் விளம்பரம், பதவிபெற்ற உலக விளம்பர சீமான்கள் முதல் எச்சிலைக் கலைச் செல்வவான்கள் வரையில் 100க்கு ஒருவருக்கு கூட கவலையோ, மான உணர்ச்சியோ இல்லையே என்று நான் காணும்போது, 75 ஆண்டு வாழ்ந்து அண்மையில் சாகப்போகிற நான், 35 ஆண்டுகளாக வீடு, வாசல், செல்வம், தொழில், மனைவி “மக்களை’’ துறந்த சன்னியாசியாக நம் திராவிடமக்களுக்கு இந்தச் சூத்திரப்பட்டம் ஒழிய வேண்டு மென்றே பாடுபட்டு வந்து, வருகிற நான், ஆண்டு ஒன்றுக்கு 30 ஆயிரம், 40 ஆயிரம் ஏன் 50 ஆயிரம் ரூபாய்கூட வரும்படி உள்ளதான எனது எஸ்டேட்டை பாழடையவிட்டுவிட்டு, பரதேசியாய் பிரயாணங்களுக்கும், பிரச்சாரத்திற்கும் பொதுமக்களிடம் செலவு பெற்று வாழ்ந்துவரும் நான், இதற்கு  இந்த வருணாசிரம தரும முறை ஒழிய ஏதாவதொரு நாள் இதற்குக் காரியம் செய்யாமல் என் உயிர்போக எப்படி என்னை விட்டுக்கொண்டு இருக்க முடியும்?

ஆச்சாரியார் முதல்மந்திரி பதவிக்கு வந்தது குறித்து உண்மையில் மகிழ்ச்சி அடைந்தவன் நான். காரணம் பிரகாசம், கம்யூனிஸ்டு, பொறுப்பற்ற “உதிரிகள்’’ என்பவர்கள் ஆட்சியைவிட நமக்கு நன்றாகக் கண்டித்து, எதிர்த்து, போர் துவக்க  வசதி இருக்கக்கூடிய ஓர் ஆட்சி, அதுவும் சொந்த வாழ்வில் கண்ணியமும், உலக அனுபவ அறிவும் உள்ளவர் ஆட்சிக்கு வருவதுமேல் என்று கருதி ஆதரித்தேன்.

இதற்குக் காரணம் தனிப்பட்டவர்கள் சொந்த முறையில் நடந்துகொண்டிருக்கிற முறைபற்றின அனுபவம் எனச் சிறிது இருந்ததேயாகும். ஆச்சாரியாரும் அதுபோலவே ஆட்சிக்கு கவர்மெண்டுக்கு கவுரவம் இருக்கிற  மாதிரியிலேயே பெரிதும் நடந்துவருகிறார். என்றாலும் -_ தனது (பார்ப்பன) வகுப்புக்கு ஒரு வகுப்பின் உத்தமபுத்திரன் எப்படி நடந்துகொள்ளுவானோ அதுபோல், “தேவர்களுக்கு ராமன் நடந்து கொண்டது’’ போல்தான் நடந்து கொண்டிருக்கிறார்.


 நம்மில் துரோகிகள், அனுமார்கள், விபிஷணர்கள் இருந்தால் அதற்கு நான் என்ன செய்யமுடியும்?

ஆனதால் நான் என் சொந்தப் பொறுப்பில் முன்பு பல தடவை கூறி இருப்பதுபோல வருணாசிரம வியாதியை ஒழிக்க கடைசி சிகிச்சையாக, நாளது மாதம் 27ஆம் தேதி புதன்கிழமை தமிழ் நாடெங்கும் புத்த விழா கொண்டாடி மாலை 6 மணிக்குப் பொதுக்கூட்டத்தில் வருணாசிரம வாதிகள் பெரும்பாலோருக்கும் “முதல் தேவன்-_தெய்வம்’’ என்று உருவாக்கி இருக்கும் செயற்கை உருவ கணபதி அறிகுறியை மக்கள் உள்ளத்தில் அழித்துவிட வேண்டும் என்பதாகப் பொது மக்களை அதாவது மனு வருணாச்சிரம தருமத்தை வெறுக்கிற பொதுமக்களையும் திராவிடர் கழகத் தோழர்களைச் _ சிறப்பாக இளைஞர்களையும் வேண்டிக் கொள்ளுகின்றேன்.
அன்று பிள்ளையார் அல்லது கணபதி உருவம் என்பதை மண்ணால் செய்து பொம்மை உருவத்தையே கொள்ளுங்கள்.  சர்க்கார் 144 (தடை ஆணை) போட்டால் உருவத்தை அழிப்பதை நிறுத்திவிடுங்கள். அவர்கள் கழகக் காரியாலயத்தில் அல்லது அவரவர்கள் வீட்டில் உடைத்து மகிழ்ச்சி கொண்டாடுங்கள்.  நரகாசுரனைக் கொன்றதற்கு ஆக பார்ப்பனர்களும் பார்ப்பன அடிமைகளும் எப்படிக் கொண்டாடுகிறார்களோ அது போல் உருவத்தை உடைத்து கொண்டாடுங்கள்.

புத்த பிரான் வருணாச்சிரம தர்மத்தையோ இந்த வருணாச்சிரம தேவர்களையோ ஏற்றுக்கொண்டவர் அல்ல; அவற்றை ஒழிப்பதே புத்தர் மதத்தின் உட்கருத்து, முதல் கருத்து. இந்தத் தேவர்களைத், தெய்வங்களை நாம் வணங்குவது ஏற்பது மிகுதியும் முட்டாள் தனமும் மானமற்ற தன்மையுமாகும். நமக்குக் கடவுள் என்பதெல்லாம் நம் நடத்தையில் சத்தியம்,  நாணயம், தயவு, உபகாரம் செய்தல், துரோகம் செய்யாமல் இருத்தல் ஆகியவையாகும்.

                   --------------------------பெரியார் ஈ.வெ.ரா அறிக்கை: ‘விடுதலை’, 6-5-1953

0 comments: