Search This Blog

10.8.22

தாம்பூலத்திற்குப் பதில் புத்தகம்! (வீரமணி - மோகனா திருமணத்தில் புதுமை)


தாம்பூலத்திற்குப் பதில் புத்தகம் (வீரமணி - மோகனா திருமணத்தில் புதுமை)


பேரன்புமிக்க தாய்மார்களே! பெரியோர்களே! நண்பர்களே! இன்றைய தினம் மணமக்களாகிய செல்வர்கள் வீரமணி_-மோகனா ஆகியோர்களது வாழ்க்கைத் துணை ஒப்பந்தத்தை முன்னிட்டு இங்கே கூடியிருக்கின்றோம்.

மணமகன் வீரமணி அவர்களை உங்கள் எல்லோருக்கும் நன்றாகத் தெரியும். அவர் இளம் வயது முதலே நம்முடைய கழகப் பற்று, கொள்கைப் பற்று ஆகியவைகளில் ஈடுபட்டு மிகவும் உழைத்துக் கொண்டு வருபவர்.

 

செல்வி மோகனா அவர்களைப் பற்றி விளக்கினால் நீங்கள் தெரிந்து கொள்வீர்கள். மோகனா அம்மை நண்பர் சிதம்பரம்-_ ரெங்கம்மாள் ஆகியோர்களுடைய அருமை மகள்.

நண்பர் சிதம்பரம்_-ரெங்கம்மாள் ஆகியோர் நமது திருச்சி நகரம் தேவதானத்தில் சுமார் 24, 25 ஆண்டுகளுக்கு முன்பு கலப்பு மணம் செய்து கொண்டவர்கள். நண்பர் சிதம்பரம் காரைக்குடியை அடுத்த கோட்டையூரிலே பெரிய செல்வந்தர். தன வைசியர் குலம் என்று சொல்லுகின்ற நாட்டுக்கோட்டைச் செட்டியார் வகுப்பைச் சேர்ந்தவர்கள்.

ரெங்கம்மையார் திருவண்ணாமலை ரெட்டியார் வகுப்பைச் சேர்ந்தவர்கள். அவர்கள் கலப்பு மணம் என்பதோடு மறுமணம் என்பதையும் சேர்த்து 25 ஆண்டுகளுக்கு முன்பாக மணம் செய்து கொண்டவர்கள்.

அவர்களுடைய மூத்த மகன் மலேசியாவிலே பெரிய தொழில் செய்து கொண்டிருக்கின்றார். இதிலே வேடிக்கையான ஒரு சங்கதியைச் சொல்லவேண்டுமானால், வேடிக்கைதான் அது மற்றபடி இலட்சியமாகச் சிந்திக்கக் கூடியது அல்ல. இவர்களுடைய இந்தத் திருமணம் 4 குழந்தைகளைப் பெற்று, நல்ல வயதுக்கு வந்து வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கின்ற பொழுது, ஒரு விவகாரத்திலே இந்தத் திருமணம் செல்லாது என்று உயர் நீதிமன்றத்திலே தீர்ப்பு வழங்கினார்கள்! அதனாலே அவர்களுக்கு ஒரு பாதகமும் இல்லை. அதை அவர்கள் இலட்சியம் செய்யவும் இல்லை. அது பாட்டுக்கு அது இருந்தது. இது பாட்டுக்கு இது நடந்து கொண்டிருந்தது. சுயமரியாதைத் திருமணம், செல்லாது என்று சொன்ன காரணம் ரொம்ப வேடிக்கையானது. சுயமரியாதைத் திருமணம் சாஸ்திரப்படியும் நடக்கவில்லை; சட்டப்படியும் நடக்கவில்லை; ஒரு வரைமுறைப்படியும் நடக்கவில்லை; ஆனதினாலே, இது செல்லாது! என்று சொன்னார்கள்.

திருமணத்தில் என்ன முக்கியமான காரியங்கள் நடக்க வேண்டுமோ, அது நடந்துதான் இருந்தது. திருமணத்தில் என்ன நடக்க வேண்டுமென்று இருக்கின்றதோ, அதற்கு மாறான விரோதமான காரியங்கள்தான் நடந்திருக்கின்றன.

இன்ன மாதிரி இருக்க வேண்டும். இன்ன முனிவர் சொல்ல வேண்டும். அந்தச் சுலோகங்-களை எல்லாம் அந்த ஜட்ஜ்மென்ட்டிலே எடுத்துப் போட்டிருக்கின்றார்கள். ஆகவே அந்த மாதிரியான ஒரு நிலைமை இருந்தாலும் அவர்கள் இன்பத்திலே, செல்வத்திலே, எல்லாவற்றிலுமே மிக்க திருப்திகரமாகவே நடந்து வந்திருக்கின்றார்கள்.

அவர்களுடைய திருமணம் எப்படி அந்தக் காலத்திலே ஒரு கலப்பு மணமாக நடைபெற்றதோ அதே மாதிரியாகவே தம்முடைய பெண்ணுக்கும் கலப்பு மணமாகவே நடத்த வேண்டுமென்று ஆசைப்பட்டு அவர்கள் தெரிவித்தார்கள்.

அவர்களுக்குத் திருமணமாகி 25 வருடங்கள் ஆகியிருந்த போதிலும் கூட அன்றைய காலத்திலிருந்தே அவர்களை எனக்குத் தெரியும்.

காரைக்குடியில் நடைபெற்ற ஒரு மகாநாட்டிற்கு அய்யா சிதம்பரம் அவர்கள்-தான் வரவேற்புக் கழகத் தலைவர்  ஆர்.கே.சண்முகம் அவர்கள் அப்பொழுது தலைமை வகித்தார். 1930க்கு முன்னாலே உள்ள காலம் அது. அந்த மகாநாட்டிலேயிலிருந்து கொள்கைப் பிடிப்போடு இருந்தார்கள். அதனால்தான் கலப்பு மணம் செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்கள். பற்றுதல் என்றால் பிடிவாதமான பற்றுதலுடன் அந்தக் கொள்கைகளைக் கடைப்பிடித்து வந்தார்கள். இந்த மாதிரியாகவே கலப்பு மணம் நடத்த வேண்டும் என்ற ஆசை இருந்தது. அது போலவே அவர்கள் கேட்டார்கள்.

அப்பொழுது வீரமணி அவர்கள் என் ஞாபகத்திற்கு வந்தார். தனக்கு ஒரு திருமணம் ஆகப்போகின்றது என்று வீரமணி நினைக்கவே இல்லை. அந்த மாதிரி இருக்கும்பொழுது வீரமணி அவர்களிடத்திலே திடீர் என்று இந்த சங்கதியைச் சொன்னேன். வீரமணி திடுக்கென்று கேள்விப்பட்டவுடன் பதில் சொல்லாமல் இருந்தார்.

நான் சொன்னேன். அய்யா, உங்களுக்கு நல்ல வாய்ப்பு என்று நினைக்கிறேன். வசதி உள்ள இடம். அதற்கு வீரமணி பதில் சொன்னார். வசதி இருக்கிறதோ இல்லையோ, அதைப் பற்றி எனக்குக் கவலையே இல்லை. இப்படியே சொன்னார். அய்யா சொல்லுகிறீர்கள் அம்மா சொல்லுகிறீர்கள் என்பதற்காக நீங்கள் என்ன சொன்னாலும் கேட்பேன் என்று சொன்னார். சரி, அப்படியே வைத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னேன். அப்பொழுது அய்யா சிதம்பரம் அவர்கள் ஊரில் இல்லை. மலேயாவில் இருக்கின்றார். ரெங்கம்மையார் சொன்னார்கள். நீங்கள் சொன்னால் ஒத்துக்கொள்வார் பரவாயில்லை என்று சொன்னார்கள். ஒரு வழியாக வீரமணி அவர்கள் ஒப்புதல் கொடுத்தார்கள் என்று தெரிந்த உடனே அம்மையார் அவர்கள் அவரது கணவரிடத்திலே இதைத் தெரியப்-படுத்தினார்கள். உடனே கப்பலில் ஏறி வந்தார்கள். அவசரமாக முடிவுகளை எல்லாம் எடுத்தார்கள்.

திருமணத்தைக் கூடுமானவரை சுருக்கமாக நடத்த வேண்டும் என்பது என்னுடைய ஆசை இல்லை. என்னுடைய சுபாவம் அப்படி! எந்தக் காரியமாக இருந்தாலும், எதுவாக இருந்தாலும் சுருக்கமாகத்தான் நடத்த வேண்டும் என்பது என்னுடைய சுபாவம். அந்த முறையில் நடத்த வேண்டுமென்றுதான் நான் ஆசைப்பட்டேன். ஆனால் முடியவில்லை. தள்ளமுடியாத நிலையில் கொஞ்சம் நீண்டு விட்டது. எனக்குக் கொஞ்சம் கஷ்டம்தான். ஆனாலும் நல்ல-படியாகத் திருப்தியாக முடிந்தது.

ஒருத்தருக்குத் திருப்தி இல்லாவிட்டாலும் இன்னொருத்தருக்காவது திருப்தி இருக்கின்றதே என்று சொன்னால் வரவு செலவு சரியாகப் போய்விட்டது என்று அர்த்தம். நாம் ஒரு கமிட்டி போட்டால், மகாநாடு போட்டால் எப்படி நடக்குமோ அப்படித்தான். வேறே ஒன்றும் அதிசயமானது ஒன்றும் இல்லை.

நம்முடைய கழகத் தோழர்கள் அடிக்கடி சந்திக்க என்ன இருக்கின்றது? வழி வேறு இருக்கின்றதா? ஒன்றும் கிடையாது. தேர்த் திருவிழாவிற்குப் போவதில்லை. மகாநாட்டில் தான் சந்திப்போம்.

மகாநாடு நடத்த வேண்டும் என்று யாராவது கேட்டால் மகாநாடு நடத்தி, அதிலே என்ன பேசி, அதிலே என்ன தீர்மானம் போடுகிறோமோ, அவைகளைப் பத்தாயிரம் பேர் – இலட்சம் பேர் கூடும்படியான கூட்டங்களில் பேசிக் கொண்டே-யிருக்கின்-றோம். மகாநாடு கூட்டினாலே 4,000, 5,000 பேர் வந்தாலே அதிகம். 10,000 பேர் 20,000 பேர் வரவேண்டுமென்றால் நான்கு வருடம், அய்ந்து வருடத்திற்கு ஒரு முறை கூட்ட வேண்டும். மகாநாட்டிலே இயக்கக் காரியமாக, இயக்கக்காரர்களைச் சந்திக்கும் ஒரு வாய்ப்பு. அதுதான் உண்மையிலேயே முக்கியம். அந்த முறையிலேயே இயக்கத் தோழர்களை எல்லாம் சந்திக்கும்படியான ஒரு வாய்ப்பு. அன்பர்-களையும், நமது மரியாதைக்குள்ளவர்களையும் சந்திக்க ஒரு நல்ல வாய்ப்பு என்கிற முறையிலே கொஞ்சம் தாராளமாக இதை நடத்துகின்றோம். இதை எல்லாம் பார்ப்பதற்கு ரொம்ப மகிழ்ச்சி.

இந்தத் திருமணத்திலே ஒரு சின்ன புதிய முறையைப் புகுத்தியிருக்கின்றேன். திருமணத்திற்கு வந்தவர்களை எல்லாம் பாராட்டித் தாம்பூலம் கொடுப்பது முறை. தாம்பூலத்திலே வெற்றிலை பாக்கு விலை ஒரு அணாவுக்குக் குறையாது. சின்னத் தேங்காயாக இருந்தாலும் 2 அணா விலை இருக்கும் பழம் கொடுப்பார்கள். இப்பொழுது ஏறக்குறைய பெரிய மனிதர்கள் எல்லாம் மலைப்பழம் கொடுப்பது வசதியாகப் போய்விட்டது. ஆக 2 பழம் எடுத்துக் கொண்டால் ஒன்றரை அணா. அதுவும் எல்லாவற்றையும் சேர்த்துச் செய்தால் நான்கரை அணா ஆகின்றது.

அதுவும் நண்பர் சிதம்பரம் அவர்கள் செட்டியார் என்கிற முறையிலே செய்வார்களே-யானால் ஒரு வெற்றிலை பாக்கு தாம்பூலத்திற்கு மூன்று ரூபாய் இருக்கும்; இரண்டு ரூபாய்க்குக் குறையாது. ஆப்பிள் இரண்டு, மூன்று போடுவார்கள்.  வெற்றிலை ஒரு வாரத்திற்கு ஆகிறாற்போலப் போடுவார்கள். ஆக இரண்டு, மூன்று ரூபாய்க்கு ஆகும். வாங்கிட்டுப் போகிறவர்களும் ஒரு ரூபாய், ஒன்றரை ரூபாய்க்கு விற்று விடுவார்கள்.  அந்த மாதிரி எல்லாம் இல்லாமல் நாமும் ஏதாவது கொடுத்த மாதிரி இருக்கட்டும். அதுவும் ஏதாவது பயன்படுகிற மாதிரி இருக்க வேண்டும் என்கிற முறையிலே ஒரு எண்ணம் தோன்றியது. 

 

கழக சம்பந்தமான ஏதாவது ஒரு புத்தகம் அந்த விலைகளுக்குள்ளேயே கணக்குப் பார்த்து ஆளுக்கு ஒன்று கொடுக்கலாமா என்று ஒரு எண்ணம் தோன்றியது.

வீரமணியே சொன்னார். அய்யா எத்தனையோ திருமணத்திற்குத் தலைமை வகித்துச் சிறப்புரை எல்லாம் ஆற்றியிருக்-கிறீர்கள். இது திருமண சம்பந்தமாக இருக்கின்றது. அந்தப் பேச்சுகளில் பத்து, இருபது பேச்சுகளைப் புத்தகமாகப் போட்டுவிட்டு, அதற்குப் பெயரை வேண்டு-மானால் வாழ்க்கைத் துணை நலம் என்ற தலைப்புப் போட்டுப் புத்தகமாகக் கொடுக்கலாம் என்று சொன்னார்.

கோவிலுக்குப் போகிறவர்கள் எப்படிச் சர்க்கரையை எடுத்து வாயில் போட்டுக் கொள்வார்களோ அது மாதிரிதான் இது. மற்றபடி திருமணம் சாதாரணமானது தான். பகலிலே ஒன்றும் விருந்தில்லை. திருமணத்திற்கு வந்தவர்கள் அவரவர்கள், ஆங்காங்கே சாப்பிட்டுக் கொண்டார்கள். ராத்திரிக்கு ஏதோ விருந்து ஏற்பாடு பண்ணுகிறோம்.

சிதம்பரம் அவர்களும், ரெங்கம்மாள் அவர்களும் இயக்கத்திற்குத் தொண்டாற்றுமாறு பாடுபட வேண்டும். அவர்கள் பெண்ணைக் கொடுத்ததன் மூலம் நம்முடைய இயக்கத்திற்குப் பயன்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம்.

அதே மாதிரிதான் வீரமணி அவர்களும் நமது இயக்கத்திற்குப் பயன்படும்படியான முறையிலே தொண்டாற்ற வேண்டும். ஒற்றுமையாகத் துணையாக இருந்தால் நல்லது என்று ஆசைப்படுகின்றோம்.

மற்றப்படி இந்த அறிமுகப் பேச்சோடு மணமக்களுக்கு இந்த வாழ்க்கைத் துணை ஒப்பந்தங்களை எடுத்துச் சொல்லி, அதை நிறைவேற்ற உங்கள் சார்பாகக் கேட்டுக் கொள்கிறேன். மணமக்கள் வாழ்க்கை ஒப்பந்த விழாவை இப்பொழுது நடத்திக் கொள்-கிறார்கள். அதற்குப் பிறகு மணமக்களை வாழ்த்திப் பல அறிஞர்கள் பேசுவார்கள்.

நண்பர் உயர்திரு பாரதிதாசன் அவர்கள், சேர்மன் இரத்தினசாமி (பிள்ளை) அவர்கள், உயர்திரு சண்முகநாதன் அவர்கள், சுப்பையா அவர்கள், நரசிம்மன் அவர்கள், முத்துக் கண்ணப்பர் அவர்கள், வெள்ளையன் அவர்கள் இன்னும் பல அறிஞர்கள் பேசுவார்கள். பொறுமையாக இருந்து கேளுங்கள்.

மணமக்கள் வாழ்க்கை ஒப்பந்தத்தை எடுத்துச் சொல்லி இந்த நிகழ்ச்சியின் அறிகுறியாக மணமகளுடைய உருவம் பொறித்த மோதிரத்தை மணமகள் மணமகனுக்கு அணிவிப்பார். மணமகன் உருவம் பொறித்த மோதிரத்தை மணமகன் மணமகளுக்கு அணிவிப்பார். நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது என்று உங்கள் சார்பாகக் கேட்டுக் கொண்டு மணமக்கள் இப்பொழுது உறுதிமொழி கூறுவார்கள்.

                         --------------------------நூல்:"தென்னாட்டுத் திருநாள்" - தந்தை பெரியார்   அவர்கள் கி.வீரமணி & மோகனா அவர்களின்  வாழ்க்கை துணை நல ஒப்பந்தத்தை  நடத்தி வைத்து ஆற்றிய சொற்பொழிவிலிருந்து......

0 comments: