Search This Blog

11.5.10

தார்மீக நெறியைக் காப்பவைகளா புராணங்கள்?



உலகத் தமிழ் மாநாட்டில் பக்தி இலக்கியங்களுக்கு இடம் இருக்கவேண்டும்; தமிழில் பக்தி இலக்கியங்களுக்கு முக்கிய இடம் உண்டு; அவற்றையெல்லாம் ஒதுக்கிவிட்டு முதலமைச்சர் தாம் சார்ந்த திராவிட இயக்கக் கொள்கைகளை முன்னிறுத்தக் கூடாது என்கிற பாணியில் பார்ப்பன ஏடுகள் (இவ்வார கல்கி உள்பட) எழுதிக் கொண்டு இருக்கின்றன.

இன்னொரு பக்கத்தில் புராண கதாகாலட்சேபங்கள் நாட்டில் அதிகம் நடந்துகொண்டே இருக்கவேண்டும். தார்மீக நெறிகளைத் திரும்பத் திரும்ப நினைவூட்டுவது இன்றைய சமுதாயத்துக்கு மிகமிக அவசியம் அந்த நெறிகள் மிகுந்த அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கின்றன என்று கல்கி (16.5.2010) கூறுகிறது.

எங்கு சுற்றி வந்தாலும் இந்தப் பார்ப்பனர்கள் புராண இதிகாச சாத்திரக் குப்பைகளை மாலையாக மாட்டிக்கொண்டு அலைவதில்தான் குறியாக இருக்கிறார்கள்.

உலகத் தமிழ் மாநாட்டைப் பொறுத்தவரை பக்தி இலக்கியங்களுக்கு உரிய இடம் உண்டு என்று நிதியமைச்சர் மாண்புமிகு க. அன்பழகன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

உலகத்தமிழ் மாநாடு என்பது தமிழை மேல் நோக்கி, விஞ்ஞானப் பார்வையோடு அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்லுவதற்கான உருப்படியான திட்டங்கள் வகுக்கப்படுவதாக இருக்கவேண்டும். அத்தகு எதிர்பார்ப்பு தான் பயனுள்ளது. அதை விட்டுவிட்டு இன்னும் கந்த புராணங்கள்பற்றி ஆய்வு செய்வதும், அதன் இலக்கண இலக்கியம், உவமானம், உவமேயங்களை எடுத்துக்காட்டுவதும், நம்மைப் பின்னோக்கி இழுத்துச் செல்லத்தான் பயன்படும்.

கந்த புராணம் போன்றவற்றை ஆய்வு செய்வது என்றால், அதன் பகுத்தறிவுக்கும், ஒழுக்கத்துக்கும் முரண்பாடான உள்ளீடுகளையும் வெளிப்படுத்துவதற்கு வாய்ப்பு அளிக்கப்படவேண்டும் அதற்கு கல்கி கூட்டம், இராமகோபாலன் வகையறாக்கள் தயார்தானா?

கந்த புராணத்தை விஞ்சிய புளுகு வேறு எந்த புராணத்திலும் கிடையாது என்ற சொலவடை வழக்கில் இருக்கிறதே.

புராண கதாகாலட்சேபங்கள் தொடர்ந்து நாட்டில் நடைபெற்றால்தான் தார்மீக நெறிகள் காப்பாற்றப்படுமாம்; இதனைப் படிக்கும் புத்தியுள்ள எவரும் வாயால் சிரிக்கமாட்டார்கள்.

திருவிளையாடல் புராணத்தில் மாபாதகம் தீர்த்த படலத்தை எடுத்துப் பிரச்சாரம் செய்தால், கேட்பவர்களின் ஒழுக்கம் எங்கே போகும்?

அன்னையைப் புணர்ந்து தாதை

குரவனாம் அந்த ணாளன்

தன்னையும் கொன்ற பாவம்

தணித்து வீடளித்த தென்றால்

பின்னைநீ விழிநோய் குட்டம்

பெருவயிறீளை வெப்பென்று

இன்னநோய் தீர்க்கும் தீர்த்தம்

என்பதோ இதற்கு மேன்மை

இந்தப் பொற்றாமரைக் குளம் இருக்கிறது. இதன் சிறப்பு என்ன தெரியுமா? தாயைப் புணர்ந்து, தந்தையைக் கொன்ற பார்ப்பானுக்கு மோட்சம் அளித்த பெருமையுடையது என்று திருவிளையாடல் புராணம் மதுரையம்பதி புண்ணியக் குளத்தின் பெருமையைப் பேசுகிறது.

எடுத்துக்காட்டுக்கு ஒன்று இது. எடுத்துக் கொட்டினால் ஏட்டில் அடங்காது. அத்திப் பழத்தைப் புட்டால் அத்தனையும் சொத்தை என்பது போன்றதுதான் இந்தப் புராண இதிகாச கலாட்சேபங்கள்.

இவற்றைத்தான் விடாது மக்களுக்குச் சொல்லிக் கொடுக்கவேண்டுமாம். அப்பொழுதுதான் தார்மீக நெறி கட்டிக் காப்பாற்றப்படுமாம்.

தெய்வத்தின் பெயரில் ஏற்றிக் கூறினால் கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்வார்கள் என்ற மூடத் தைரியத்தில்தான் கல்கிகள் கதைக்கின்றன என்பதை நம் மக்கள் உணர்வார்களாக!

---------------------- “விடுதலை” தலையங்கம் 11-5-2010

0 comments: