Search This Blog

20.2.10

இந்த ஆபாசத்தை என்ன சொல்ல? இவர்களை என்ன சொல்லி அழைக்க?

இவர்களை என்ன சொல்லி அழைக்க?

உலகத் தமிழ் செம்மொழி மாநாட் டிற்கு சமயச் சான்றோர்களையும், மடாதிபதிகளையும் அழைக்க வேண்டும்; ராம. கோபாலன் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்.

ஹிந்து தர்மம் தீண்டாமையை ஆதரிக்கவில்லை.

அனைத்துப் பிரிவு மக்களும் தங்களுக்குள் ஜாதி பாகுபாடு பார்க்கக் கூடாது.

ஹிந்து தர்மத்தை நிலைநாட்ட சாத்வீகமான முறையில் நாம் முயற்சி செய்தாலே நம்மை தீவிரவாதிகள் என்கிறார்கள். தீவிரவாதிகளை நல்லவர்களாகப் பார்க்கிறார்கள் இன்றைய அரசியல்வாதிகள்.

இவ்வளவையும் தம் திருவாயிலிருந்து (?) அருளியிருப்பவர் வேறு யாருமல்லர். இ.பி.கோ. 302, 120-பி, 34, 201 ஆகிய குற்றப் பிரிவுகளில் கைதாகி, 61 நாள்கள் வேலூர் சிறையில் கம்பி எண்ணி, இப்பொழுது ஜாமீனில் வெளி வந்து திரிந்து கொண்டிருக்கும் சாட்சாத் மாஜி சங்கராச்சாரியார் திருவாளர் ஜெயேந்திர சரஸ்வதிதான். (பேட்டி காமகோடி பிப்ரவரி 2010)

கொலை வழக்கில் மட்டுமல்ல; - அருவருப் பான வகையில் பாலியல் சமாச்சாரங்களிலும் கேவலமாகப் பேசப்பட்டவரும் இவரே!

பவளவிழா என்று சொல்லி ஊருக்கு ஊர் விழாவும். இந்த ஜென்மத்துக்கு ஒரு கேடாம்!

பெரிய அறிவாளி என்ற நினைப்பில் பேட்டி வேறு கொடுக்கிறார்.

உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டிற்குச் சமயச் சான்றோர்களையும், மடாதிபதிகளையும் அழைக்க வேண்டுமாம்.

இவர் கூற்றுப்படி தவத்திரு குன்றக்குடி அடிகளார் அழைக்கப்பட்டால் போதும்தானே? ஏற்றுக்கொண்டு முடங்கிக் கிடக்க வேண்டியதுதானே?

தமிழ்ப் பற்று, தமிழில் புலமை, அருவி போல வெண்கல நாதத்தில் பேசும் திறன் உள்ள இவரை விட எந்த மடாதிபதி அழைக்கப்படவேண்டும்?

கண்டிப்பாக காஞ்சி வகையறா சங்கராச்சாரியார்களை அழைக்க முடியாது கூடாது காரணம், பூஜை வேளையில் அவாள் தமிழ் பேசமாட்டார். காரணம் தமிழ் நீஷப்பாஷையாம். அப்படி தமிழில் பேசிவிட்டால் ஒவ்வொரு முறையும் ஸ்நானம் செய்ய வேண்டும். அக்னிஹோத்திரம் தாத்தாச்சாரியார் இந்தக் குட்டைப் போட்டு உடைத்துவிட்டாரே!

2) ஹிந்து தர்மம் தீண்டாமையை ஆதரிக்க வில்லை என்று கூறியுள்ளார். இதாவது உண்மையா? தீண்டாமை க்ஷேமகரமானது என்று சொன்னவர் யார்? இவரின் மூத்தார் சாட்சாத் சந்திரசேகரேந்திர சரஸ்வதி என்ற மறைந்த சங்கராச்சாரியார்தானே?

(ஆதாரம்: சிறீ ஜெகத்குருவின் உபதேசங்கள் (2ஆம் பாகம்)

அவரை விட்டுத் தள்ளுவோம். தீண்டாமைக்கு எதிராக காஞ்சிபுரத்துக்கும் கல்கத்தாவுக்கும் வாயை அகலத் திறக்கும் இதே ஆசாமி எப்படி நடந்து கொண்டிருக்கிறார்?

10.-11.2002அன்று மதுரை மாவட்டம் தும்பைப் பட்டிக்குச் சென்றார் ஜெயேந்திரர். அவ்வூர் முன்னாள் அமைச்சர் கக்கன் பிறந்த ஊர். அவ்வூர் வீரகாளியம்மன் கோயிலில் வந்து இறங்கினார். அக் கோயில் பூசாரி தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த வெள்ளைச்சாமி என்பவர். அவர் தீப ஆராதனை காட்டினார். அதனைக் கும்பிட்ட ஜெயேந்திரர் அவர் கொடுத்த பிரசாதத்தைப் பெற்றுக் கொள்ளவில்லை. அவரை யாரும் நெருங்கிவிடாதபடி கவனித்துக் கொண்டனர் அவரின் பாதுகாவலர்கள். சுவாமிகளை யாரும் தொட்டுவிடக்கூடாது என மைக்கில் திரும்பத் திரும்ப அறிவித்துக் கொண்டேயிருந்தனர். ஜெயேந்திரரும் தன் தோளில் அணிந்திருந்த சால்வையை எடுத்து தலித்துகள் தன்னைத் தீண்டி விடாதபடி கால்களை மறைத்துக் கொண்டார்.

கோயில் நிகழ்ச்சிக்குப் பின் கக்கன் நினைவு மண்டபத்துக்கு வந்து ஜெயேந்திரர் மாலையிடுவார் எனத் திட்டமிடப்பட்டு இருந்ததால், மக்களும் அங்கு காத்துக் கொண்டிருந்தனர். ஆனால் அங்கு செல்லாமல் புறப்பட்டுவிட்டார்.

(நக்கீரன் 19-11-2002)

ஹிந்து மதத்தில் தீண்டாமைக்கு இடம் இல்லை என்பதற்காக இலட்சணம் இதுதானா?

ஜாதி பாகுபாடு பார்க்கக் கூடாது என்று பறைசாற்றுகிறாரே பூணூல் என்பது ஜாதியின் சின்னம்தானே அந்த ஜாதியின் சின்னமான பூணூலை மூன்று கிலோ எடையுள்ள தங்கத்தில் செய்து திருப்பதி ஏழுமலையானுக்கே அணிவித்த (கடவுளையே தம் ஜாதிக்குள் அடைத்த) மாபெரும் ஜாதி ஒழிப்பு வீரர் ஆயிற்றே இவர்?

(ஆதாரம் - மாலைமலர் 16-3-2002)

தீண்டாமை ஒழிப்பு, ஜாதி ஒழிப்பைப் பற்றி யார்தான் பேசுவது என்ற லஜ்ஜையே இல்லாமல் போய்விட்டதே!

(3) ஹிந்து தர்மத்தை நிலைநாட்ட சாத்வீகமான முறையில் நாம் முயற்சி செய்தாலே நம்மைத் தீவிர வாதிகள் என்கிறார்களே என்று மிகவும் தான் ஆதங்கப்படுவதாக அலட்டிக் கொள்கிறார். அடடா, இவர்களின் சாத்வீகம் பற்றி மக்களுக்குத் தெரியாதா?

1992 டிசம்பர் 6 இல் பாபர் மசூதி இடிக்கப்பட்டதே இந்த இந்துத்துவாவாதிகளால் அல்லவா சாத்வீகத்துக்கான சாட்சாத் எடுத்துக்காட்டு?

இந்தப் பெரிய மனுஷர் ஜெயேந்திரர் என்ன சொன்னார் தெரியுமா? அயோத்தியில் கட்டடத்தை இடித்தது கிரிமினல் நடவடிக்கை எனக் கூற முடியாது. இதற்காக மத்திய அமைச்சர் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி ஆகியோர் பதவி விலகத் தேவையில்லை.

(தினமணி 27-11-2000)

அயோத்தியில் அயோக்கியர்கள் கூட்டம் இடித்தது முசுலிம் மக்களின் வழிபாட்டுத் தலம் அல்லவாம் வெறும் கட்டடம்தானாம்.

இப்படி சொல்பவர்கள்தான் சாத்வீக வாதிகளாம். அடேயப்பா, இவர்களின் வாயில் தப்பித் தவறிக்கூட உண்மை என்பது பிரசவம் ஆகாதா?

21 ஆம் நூற்றாண்டின் பகுதியிலும் மனித சமத்துவத்துக்கு எதிரான ஒரு கூட்டம் அதற்கு ஒரு தலைவர் - அவருக்குப் பெயர் லோக குரு - அவர் கொலைக் குற்றவாளி என்ற பட்டியலிலும் இருப்பார் காம கே()டிகளாகவும் இருந்தாலும் பவளவிழா நாயகராக உலா வர முடிகிறது என்றால்,

இந்த ஆபாசத்தை என்ன சொல்ல? இந்தக் கூட்டத்தை என்ன பெயர் சொல்லி அழைக்க?

------------------------ மின்சாரம் அவர்கள் 20-2-2010 “விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை



3 comments:

Thamizhan said...

காஞ்சி சுப்புணிக்கு விழா எடுக்கும் மானங்கெட்டவர்கள்,
சங்கரராமனின் மனைவியையே தன் வாக்குமூலத்தை மாற்றிச் சொல்லச் சொல்லி, சாட்சிகளையும்,சட்டத்தையும்,தமிழ்நாட்டுக் காவல் துறையையும் கோமாளிகளாகப் பார்க்கும் துணிவும்
கொண்டவர்கள்,
மக்கள் மன்றத்தில் மானங்கெட்டு அலையத்தான் போகிறார்கள்.
இந்த நரிவேடம் பலிக்காது.

Tamilan said...

Hi,
 
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை www.tamildaily.com ல் சேர்த்துள்ளோம்.
 
இதுவரை இந்த www.tamildaily.com இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.
உங்கள் நண்பர்களுக்கும் இத் தளத்தை அறிமுகம் செய்து வையுங்களேன்...

Chittoor Murugesan said...

தங்கள் பதிவில் கடுமையான உழைப்பு தெரிகிறது. ஒரு பெரியார் மட்டும் பிறந்திராவிட்டால் நீங்கள் ஒப்புக்கொண்டால் அவதரிக்காமலிருந்திருந்தால் ஜெயேந்திரர் தம் திருவாயால் // ஹிந்து தர்மம் தீண்டாமையை ஆதரிக்கவில்லை. அனைத்துப் பிரிவு மக்களும் தங்களுக்குள் ஜாதி பாகுபாடு பார்க்கக் கூடாது.// என்றெல்லாம் கூறியிருக்கமாட்டார் என்பது திண்ணம்.
ஒரு புத்தரும், மகாவீரரும் வந்ததால் மட்டுமே சைவமாக மாறியவர்கள் இவர்கள். அதற்கு முன் இவர்கள் எப்படியிருந்தார்கள் என்பது பலருக்கு தெரியாது.

பெரியவாளின் (?) இந்த ஸ்டேட்மென்ட் பெரியாரின் அவதார நோக்கம் நிறைவேறிவிட்டதையே காட்டுகிறது.

பாராட்டுக்கள்