Search This Blog

25.5.11

சமச்சீர் கல்வி நிறுத்தப்படுவதற்கான பின்னணி!


சந்தேகம் வலுக்கிறது

தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்டது; முடிவு செய்யப்பட்டது என்பதற்காக அ.இ.அ.தி.மு.க. ஆட்சி அவற்றையெல்லாம் ரத்து செய்வதோ, மாற்றி யமைப்பதோ பொதுமக்கள் மத்தியில் பொதுவாகக் கெட்ட பெயரைத்தான் சம்பாதித்துத் தரும் என்பது பொது அறிவு உள்ள அனைவராலும் ஒப்புக்கொள்ளப் படக் கூடிய உண்மையாகும்.

முதலாவதாக, 1000 கோடி ரூபாய்க்குமேல் செலவு செய்து கட்டப்பட்ட தலைமைச் செயலகம், சட்டப் பேரவை ஆகியவற்றைப் பயன்படுத்தப் போவதில்லை; மாறாக பழைய கோட்டையிலேயே அவை இயங்கும் என்று அறிவித்ததன்மூலமாக முதற்கெட்ட பெயர் அ.இ.அ.தி.மு.க. ஆட்சிக்கு ஏற்பட்டுவிட்டது.

செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள கட்டடங்கள் பழுதுபட்டுவிட்டன; மழை பொழிந்தால் கோப்புகள் வீணாகின்றன என்று அன்றைய முதலமைச்சர் மாண்புமிகு செல்வி ஜெயலலிதா அவர்களே வெளிப் படையாகக் கூறி, வேறு இடங்களைத் தேடியதெல்லாம் நாட்டு மக்களுக்கு மிக நன்றாகவே தெரியும். இந்த நிலையில், புதிதாகக் கட்டப்பட்ட இடத்தில் பணியாற்ற விரும்பவில்லை என்று கூறுவது வெறும் அரசியல் வெறுப்புதான் என்ற எண்ணம் தொடக்கத்திலேயே எழுந்துவிட்டது.

சில ஏடுகள், சில கட்சிகள் இதுபற்றிக் கருத்துத் தெரிவிக்கவில்லை என்பதாலேயே, தாம் எடுத்த முடிவு சரிதான் என்று முதலமைச்சர் நினைத்திட வேண்டாம்.

அதுபற்றிக் கருத்துத் தெரிவிக்காதது ஏன் என்ற கேள்வி கூட மக்கள் மத்தியில் ஏற்பட்டுவிட்டது.

அடுத்தகட்டமாக சமச்சீர் கல்வித் திட்டம் இந்த ஆண்டு செயல்படுத்தப்படாது; பழைய முறையே தொடரும் என்று அ.தி.மு.க. அமைச்சரவை முடிவு எடுத்திருப்பதும் கடும் எதிர்ப்புக்கும், விமர்சனத்துக்கும் ஆளாகிவிட்டது.

சமச்சீர் கல்வித் திட்டம் என்பது அரசியல்வாதிகள் தயாரித்த திட்டம் அல்ல - கல்வி நிபுணர்கள் ஆய்ந்து பொதுமக்களின் கருத்தையும் கேட்டுக்கூட பரிந்துரைக்கப்பட்டதாகும்.

இந்த நிலையில் அரசியல் கண்ணோட்டத்தோடு இதையும் அணுகுவது ஆரோக்கியமானதாக இருக்க முடியாது.


சமச்சீர் கல்விக்கான பாடப் புத்தகங்கள் அச்சிடப் பட்டுள்ள நிலையில் (சுமார் 200 கோடி ரூபாய்) அவற்றையெல்லாம் மூட்டை கட்டி ஒரு பக்கத்தில் ஒதுக்கித் தள்ளிவிட்டு பழைய பாடத் திட்டம் என்பது - மக்கள் பணம் மதிக்கப்படவில்லை - மாற்றமான கல்வித் திட்டம் மறுக்கப்படுகிறது என்ற எண்ணத்தைத்தான் உருவாக்கும்.


இதற்கிடையில் இந்து முன்னணி அதிபர் திருவாளர் இராம. கோபாலன் அய்யர் குறுக்குச்சால் ஓட்டியுள்ளார்.

கருணாநிதி தயாரித்த சமச்சீர் கல்வித் திட்டம் என்றும், தோற்றுப்போன ஈ.வெ.ரா.வின் கொள்கையைக் கொல்லைப்புறம் வழியாகக் கொண்டுவரும் கல்வித் திட்டம் என்றும் தி.க. தலைவர் கி. வீரமணி இதன் பின்னணியில் இருக்கிறார் என்றும் வழக்கம் போல தனது ஓட்டை வாயைத் திறந்து ஓலம் விட் டுள்ளார். இதிலிருந்து சமச்சீர் திட்டம் நிறுத்தப்படுவதற்கான பின்னணியின் ஒரு முனை வெளிச் சத்துக்கு வந்துவிட்டது.

பெரியார்பற்றி பாடத்தில் இடம்பெறுவதாகவே இருக்கட்டும்; அதில் என்ன தவறு? தந்தை பெரியார் அவர்களைவிட மக்களுக்குத் தொண்டு செய்த மாமனிதர் யார்?

சமூகச் சீர்திருத்தம், சமூகநீதி, பெண்ணுரிமை என்பதெல்லாம் ஒப்புக்கொள்ளப்பட்ட உயர் எண்ணங்கள்தானே?

முதலமைச்சர் இந்தப் பிரச்சினையில் எந்த எண்ணம் கொண்டுள்ளார்? பெரியாரைப்பற்றிப் பாடம் இருந்தால் இந்த முதலமைச்சர் தடுத்துவிடுவார் என்ற எண்ணம் மக்களிடம் பரவவேண்டுமா?

திருவாளர் சோ ராமசாமியா? பெரியார் ராமசாமியா? இந்த ஆட்சிக்கு யார் நெருக்கம் என்பது மக்களுக்குத் தெரிந்துவிடாமல் போகாது.

இந்த ஆட்சியைச் சுற்றி ஒரு பூணூல் வேலி போடத் தீவிர முயற்சிகள் நடந்துகொண்டுள்ளன. எதில் வெல்வார் முதல்வர்? எங்கே பார்ப்போம்!

---------------- "விடுதலை” தலையங்கம் 25-5-2011

மக்களுக்காகத் தான் மொழியே! - கி.வீரமணி சொற்பொழிவு

காலத்திற்கேற்ப தமிழ்மொழி மாற்றம் அடைவதுதான் அறிவுடைமை

தமிழர் தலைவர் தொலைநோக்கு பார்வையுடன் பேச்சு!

காலத்திற்கேற்ப தமிழ் மொழியில் மாற்றம் பெற வேண்யடிதுதான் அறிவுடைமை என்று திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.

தஞ்சை பல்கலைக்கழகத்தில் 21.2.2011 அன்று திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

ஒவ்வொரு மாநாட்டிலும் திருவள்ளுவர் படம்


ஒவ்வொரு மாநாட்டிலும் திருக்குறள் எடுத்துச் சொல்லப்படும். ஒவ்வொரு மாநாட்டிலும் திருவள்ளுவர் படம் திறக்கப்பட்டது. திருவள்ளுவருக்கே ஜாதி முத்திரை குத்திவிட்டார்கள் நம்மாள்கள். அவருக்கு விடுதலை வாங்கிக் கொடுத்தது இந்த இயக்கம்தான். திருவள்ளுவருக்குப் பூநூல் போட்டுவிட்டான். திருவள்ளுவருக்குப் பட்டை போட்டுவிட்டான். ஒரு பக்கம் மழித்தல், இன்னொரு பக்கம் நீட்டல் இன்னொரு பக்கம் கூட்டல். இதை எல்லாம் சேர்த்து கழித்தல் செய்தவர் தந்தைபெரியார்தான் (கைதட்டல்).

இது ஆக்க ரீதியான பணி. அந்த அடிப்படையிலே இவைகளை செய்தார். இந்த மொழி வளர வேண்டும் என்று நினைத்தார்.

இந்த மொழிக்கு என்ன வாய்ப்பு? எழுத்து சீர்திருத்தம் முக்கியம். தமிழில் 247 எழுத்துகள் உள்ளன. எதற்காக ஒரு ஆயுத எழுத்து தேவை.

நம்மாள் கண்டுபிடித்தது எழுத்தில் மட்டும் ஆயுதம்


நம்மாள் எழுத்திலே ஆயுதத்தைக் கண்டு பிடித்தானே தவிர, கருவிகளிலே புதுமைகள் வரவேண்டும் சரி. மொழிகளில் புதுமை வர வேண்டும் என்பதைக் கண்டுபிடிக்க முடிய வில்லையே. இந்த ஒரே ஆயுத எழுத்து சிந்தனை யோடு நின்றுவிட்டான். பெரியார்தான் மொழியில் மாற்றம் வரவேண்டும் என்று சிந்தித்தார்.

நான் 1967ஆம் ஆண்டு சிங்கப்பூர் போயி ருந்தேன். சாரங்கபாணி அவர்களின் தமிழ்முரசு ஏடு இன்னமும் அங்கு நடக்கிறது.

சாரங்கபாணி அவர்கள் சுயமரியாதை வீரர். பெரியார் தொண்டர். அவருடைய ஏட்டிலிருந்து வந்த செய்தியாளர் ஒருவர் என்னிடம் பேட்டி கண்டார். ஏங்க விடுதலையில்லை போடுகிறீர்களே. அது என்னங்க. அந்த லை யை இப்படிப் போடுகிறீர்களே.

ஏட்டிக்குப்போட்டியாம்....!


ஏட்டிக்குப் போட்டி செய்வதுதானே உங்கள் வேலை. பெரியாருடைய ஆட்கள் எதிலும் எதிர்மறையாகச் சொல்வீர்கள். அதற்காகத்தான் இந்த சூழல் என்று எடுத்து சொன்னவுடனே நான் சொன்னேன். அப்படி இல்லிங்க கை என்பதை எப்படி எழுதுவீர்கள் என்று கேட்டேன். அந்த செய்தியாளருக்கு அவ்வளவு தெளிவில்லை.

கை போடுகிறோம். லை என்று இப்படிப் போட்டால் என்னங்க. யானைக்கு போடுகிற மாதிரி துதிக்கையைப் போடுகிற மாதிரி ஒரு எழுத்தை ஏன் வைக்க வேண்டும்? இரண்டாவது நீங்கள் பத்திரிகை அலுவலகத்தில் தானே இருக்கிறீர்கள் என்று கேட்டேன். அப்பொழுதெல்லாம் கணினி வரவில்லை. ஒவ்வொரு எழுத்தாக தனித்தனி பெட்டியில் போட்டு வைத்துதான் அச்சு கோர்ப்பார்கள். ல என்ற எழுத்து இருந்தாலே போதுமே. அது ஏற்கெனவே பலவற்றுக்கும் பயன்படுகின்ற எழுத்தாகிவிட்டதே.

யானை துதிக்கை மாதிரி ஒரு எழுத்து


யானை துதிக்கை மாதிரி ஏன் ஒரு எழுத்தைப் போட வேண்டும்? என்று பெரியார் சிந்தித்து கேள்வி கேட்டார். இத்தனைக்குப் பெரியார் பல்கலைக் கழகத்திற்குப் போகாதவர்.

பெரியார் தன்னை மொழி அறிஞர் என்று சொல்லிக்கொண்டதே கிடையாது. தன்னைப் பற்றி சொல்லும்பொழுது பெரியார் சொல்லுகிறார்.

நான் சாதாரண ஆள். தமிழில் எந்த அளவும் நான் பள்ளியில் பயின்றவன் அல்ல. தமிழைப் பற்றி தமிழ் மக்கள் நலம், தமிழ் மக்கள் தன்மதிப்பு என்ப தல்லாமல், வெறும் பாஷையைப் பற்றியே எவ்வித பிடிவாதம் கொண்டவன் அல்ல. தமிழ் மக்களுடைய தன்மானம் அந்த மக்கள் பேசுகிறமொழி மரியாதை இருக்க வேண்டும் என்று சொல்லிவிட்டுச் சொல் லுகின்றார். தமிழுக்காக எவ்விததொண்டு புரிந்த வனும் அல்ல.

தன்னைத் தாழ்த்திக்கொண்டு...


தன்னை இவ்வளவு தாழ்த்திக்கொண்டு தந்தை பெரியார் சொல்லுகிறார் பாருங்கள். தமிழுக்கு வாழ்த்துக் கூற தலைவரும், எனது நண்பருமான திரு.வி.கலியாணசுந்தரனார் அவர்களும், தமிழ்ப் புலவர் க.நமச்சிவாய முதலியாரும் மற்றும் அவர் களைப் போன்ற பெரியவர்களுமே உண்மையில் தகுதி உள்ளவர்கள்.

நான் தமிழ் பேசுவதும், எழுதுவதும் தமிழை கொலைபுரிவது மாதிரியாகாமல் நான் பல பத்திரிகைகளை நடத்துவதும், சுமார் 50, 60 புத்தகங்கள் வெளியிட்டதும் தலைவர் கலியாண சுந்தரனார் அவர்களின் தமிழ் பாஷையும், தேச பக்தன், நவசக்தி முதலிய பத்திரிகைகளின் தொண்டேயாகும் என்று தன்னைத் தாழ்த்திக் கொண்டு சொல்லுகின்றார்.


மதம், இலக்கணம், மக்கள் சேவகர் உயர்திணை என்றால் என்ன? நரகர்கள் என்றால் யார்? தேவர்கள் யார்? இலக்கணத்திலேயே மதத்தைப் போதித்து விட்டால் நமது கதி என்ன ஆவது? என்றும் கேட்கின்றார்.

ஆகவே அய்யா அவர்களுடைய சிந்தனை என்பதிருக்கிறதே. மொழிப்புலம் என்பதை நல்ல கருவியாக்கி, உலகளாவிய அளவில் கொண்டு போகவேண்டும்.

உலக மொழிகளுடன் போட்டி


இன்றைக்கு உலகப் போட்டியில் தமிழ் முன்னாலே நிற்க வேண்டும். உலக, மொழிகளுடன் போட்டி போட வேண்டும் என்று விரும்பினால் தமிழ்மொழி இன்றைக்கு வளர்ந்து வந்திருக்கிறது. அதில் துணைவேந்தர் அவர்களுடைய பணி பாராட்டத்தக்கது. ஒரு பண்பாட்டுப் படை யெடுப்பு உள்ளே நுழைந்து ஆதிக்கவாதிகள் உள்ளே நுழைந்தால் அதற்கு சில தடைகள் எல்லாம் ஏற்பட்டன.

மறுபடியும் வரக்கூடிய ஒரு வேகமான ஆபத்தைக் கொஞ்சம் நிறுத்தி வைத்திருக்கின்றோம். அதனால்தான் பெரியார் எப்பொழுதும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று சொல்லக் கூடிய இன்றைய நிலை. அடுத்து எழுத்துச் சீர்திருத்தம். பெரியாரின் எழுத்து சீர்திருத்தத்தை பெரியார் நூற்றாண்டு விழாவையொட்டி அப் பொழுது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் அவர்கள் ஆட்சியில் நடைமுறைப்படுத்தினார். இன்றைக்கும் அவர்களுக்கு நன்றி செலுத்த கடமைப்பட்டி ருக்கின்றோம்.

அதற்குப் பிறகு இந்த ஆட்சியில் (திமுக) இன்னும் சிறப்பாக என்னென்ன மாற்றங்கள் வருகிறதோ அதை அத்தனையையும் கலைஞர் செய்துகொண்டு வருகின்றார். மேலும் செய்வார். அதோடு பெரியார் அவர்கள் இன்னும் எழுதி இருக்கிறார்.

காலத்தோடு கருத்துகளையும் மாற்றிக்கொள்ள வேண்டும்


உலகத்து அறிஞர்கள் காலத்தோடு தனது கருத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று எடுத்து சொன்னார்கள். எனவே ஆக்க ரீதியான பணிகள் செய்வதிலே, நம்முடைய இலக்கியங்களாக இருக்கட்டும், மொழியாக இருக்கட்டும், இலக்கணமாக இருக்கட்டும், எல்லாம் மக்க ளுக்காக அவ்வளவு தானே தவிர, மொழிக்காக மக்கள் இல்லை.

மக்களுக்காகத் தான் மொழியே!


மொழியை நாம் காப்பாற்ற வேண்டும். பண்பாட்டுப் படையெடுப்புகளில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டும். தமிழர்கள் தன்மான உணர்வு பெறுவார்கள். ஆனால் இன்றைக்கு அந்த நிலையில்லை. கோயில்களில் தமிழ் இல்லை. தமிழன் வீட்டு நிகழ்வுகளில் தமிழ் இல்லை. அதே போல பல இடங்களில் தமிழ் இல்லை. தமிழக்கு இன்னும் உரிய மரியாதை இல்லை. தமிழுக்கு இன்னும் இரண்டாம் தர, மூன்றாம் தர இடம் தான் என்று இருக்கின்ற நிலை.

இப்பொழுது கலைஞர் ஆட்சி வந்த பிறகு தான். தமிழுக்கும், தமிழனுக்கும் ஏற்றம் பிறந்திருக்கிறது. ஏனென்றால் உண்மையை சொல்ல வேண்டும் அல்லவா? அதிலும் நாங்கள் தான் கேட்டோம் கோயில் உள்ளே போனால் தமிழிலும் அர்ச்சனை செய்யப்படும். என்று எழுதப் பட்டிருக்கிறது. அதில் என்னையா லும் என்று கேட்டோம்.

முத்தமிழும் இருந்திருக்கிறது


தமிழ்நாட்டிற்குள்ளே தமிழிலும் அர்ச்சனை செய்யப்படும் என்றால் அதில் என்ன அர்த்தம்? வட மொழியிலும் செய்யப்படும் என்று கோவிலில் இருந்திருக்க, வேண்டும். அதைவிடுத்து தலைகீழாக இருப்பதா? ஏனென்றால், சமஸ்கிருதம் தமிழ் நாட்டிற்கு தொடர்பில்லாத மொழி, தமிழ்நாட்டில் தமிழ் தானே இருக்க முடியும். அதே மாதிரி நண்பர்களே இன்றைக்கு பார்த்தீர்களேயானால் தமிழ் இசை அதில் கருநாடக இசை, தமிழிசை என்று சொல்லி, கருநாடக இசை முழுவதும் (தெலுங்கு) தமிழிசை தானே!

பெரியாருடைய இயக்கம் தமிழிசையை வளர்த்தது. மிக நீண்ட காலத்திற்கு முன்னாலே இசை இருந்திருக்கிறது. தமிழிசை இல்லாமல் இல்லை. இன்னும் கேட்டால், இயல் தமிழ், இசை தமிழ், முத்தமிழ் என்றும், நாடக தமிழ் என்றும், எதற்கு இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும். அதை நாங்கள் சொல்ல வேண்டிய அவசியமில்லை. அது நன்றாக உங்களுக்குத் தெரியும்.

நடைமுறைக்கு வாருங்கள். சமுதாயத்தில் பல இடங்களில் சென்று பாருங்கள். தமிழுக்குரிய சிறப்பு என்னவென்று மரக் கதவு திறந்தது, சிவபெருமான் வந்தார், முருகன்தான் தமிழ் கடவுள், என்றெல்லாம் சொல்லி, அழகு என்றால் முருகன் தான் என்றெல்லாம் சொல்லி, இப் பொழுது பார்த்தீங்களேயானால் பழனி முருகன் கோயிலில் தமிழில் அர்ச்சனை செய்ய ஆளில்லையே! ஏற்கெனவே பண்டார நாயக்கர்கள் இருந்தார்கள். திருமலை நாயக்கர்கள் என்று சொல்லக்கூடிய காலம் இருந்தது.

முருகன் கோயிலில் ராமப்பிரியர் வேலை


ராமப்பய்யர் என்று ஒரு பார்ப்பனர் வந்தார். இவர் மன்னரின் திவான். நேரே போய் பழனி கோயிலில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்று வந்தார். பந்தோபஸ்து பண்டாரங்கள் என்ப வர்கள் ஏற்கெனவே அங்கே இருந்தார்கள். நீங்கள் எல்லாம் யார்? என்று கேட்டனர். வஸ்தாதுகளா? என்று கேட்டார் ராமப்பய்யர்.

நாங்கள் இங்கேயே தான் இருக்கிறோம் நாங்கள்தான் பாரம்பரியமாக முருகனுக்கு பூஜை பண்ணுகிறோம் என்று சொன்னார்கள். பண்டாரங்கள் முருகனுக்கு தமிழில் ஏன் அர்ச்சனை செய்ய வேண்டும், நீங்கள் போகலாம் இங்கே வேலையில்லை என்று சொல்லி, இரண்டு மணி நேரத்திற்கு மேல் எல்லோரையும் வெளியில் அனுப்பிவிட்டு அர்ச்சனை செய்தார். பார்ப்பனர்கள் செய்த கொடுமை இது.

தமிழ் கடவுள் என்று சொல்லப்படுகின்ற முருகனுக்கே இந்த நிலை. இன்று வரையிலேயே மாற்றம் இல்லையே! இது தான் பெரியாருடைய கேள்வி. ஆகவே பண்பாட்டுப் படை யெடுப்பை எதிர்த்து, பெரியார் காரியங்களை செய்தார். இந்த ஆட்சியிலே தான் மணி மண்டபங்கள் எல்லாம் உருவாயிற்று.

தமிழிசை வளர்த்த மூவர்


மாரிமுத்தா பிள்ளை, முத்து தாண்டவர், அருணாச்சலக் கவிராயர், ஒரு நூற்றாண்டுக்கு முன்பு தோன்றியவர்கள். அதே போல முத்துசாமி தீட்சிதர், தியாகய்யர், சியாமா சாஸ்திரிகள் இந்த மூன்று பேருக்கும் ஒரே நூற்றாண்டு தான் என்று இவர்கள் எல்லாம் மும்மூர்த்திகள் என்று சொல்லி வரலாற்றை எழுதி வைத்தார்கள்.

எனவே, வரலாற்றை திருத்தியவர்கள் அவாள்கள் கூட்டம். இது தமிழர்களுக்கு தெரியாது. எனவே இந்த இயக்கம், இந்த சிந்தனை, தந்தை பெரியாருடைய கேள்விகள் இவைகளுக்கெல்லாம் விடை காண வேண்டும்.

பண்பாட்டுப் படையெடுப்பை ஒழிக்க வேண்டும்


எனவேதான் பெரியார் அவர்களுக்கு முன்தோன்றிய மூத்த குடி என்று சொன்னால் மட்டும் போதாது. பல வகையான மொழி என்று சொன்னால் மட்டும் போதாது. உலக வரலாற்றிலே அது நிற்க வேண்டும். பண்பாட்டுப் படையெடுப்பை எதிர்த்து நிற்க வேண்டும். ஆக்க ரீதியாக செயல்பட வேண்டும். ஆகவே நண்பர்களே! காலம் நேரமாகி விட்டது என்றாலும் கூட இன்னும் பல ஆதாரங்களோடு, அடிகுறியீட்டுகளோடு பல்கலைக்கழக அனுமதியோடு இதைப் புத்தகமாக கொண்டு வர இருக்கிறேன். ஏனென்றால் புதிய கருத்துகள் வரவேண்டும்.

எனவே பெரியாருடைய சிந்தனைகள், பெரியாருடைய பாதைகள் எல்லாமே இந்த பண்பாட்டுப்படை எடுப்புகளிலேயிருந்து காப்பதற்காகத்தான். இவரைவிட, தமிழ்நாட்டிலே மிகப் பெரிய சிந்தனையாளர் வேறு எவரும் இல்லை. மற்றவர்கள் பெரியாரைப் பின்பற்றி வெற்றி பெற்றவர்கள் என்று சொல்லி நன்றி கூறி ஒரு சிறப்பான இந்த நிகழ்ச்சியை நடத்திய உங்களுக்கு இந்த இயக்கத்தினுடைய தனித்த நன்றி உண்டு. ஏனென்றால் நாங்கள் செய்ய வேண்டிய பணியை நீங்கள் செய்து இருக்கிறீர்கள்.

இலட்சியங்கள் வெல்லட்டும்!


எனவே, உங்களுடைய இலட்சியங்கள் வெல்லட் டும். ஆக்கங்கள் ஆக்கரீதியாகட்டும் என்று சொல்லி வாய்பளித்த உங்களுக்கு நன்றி கூறி நீண்ட நேரம் நீங்கள் உட்கார்ந்து இருந்தீர்கள், ஒரு வகுப்பிற்கு கூட உட்கார்ந்திருப்பதில்லை. (சிரிப்பு கைதட்டல்) இந்த பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டிற்காக உட்கார்ந்து இருக்கிறீர்களே (சிரிப்பு வெடி) ஆகவே அனைவருக்கும் நன்றி கூறி விடைபெறுகின்றேன்.

இவ்வாறு தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

--------------- "விடுதலை” 24-5-2011

பெரியார் தமிழ்மொழிக்கு ஆற்றிய பணி என்ன?

தந்தை பெரியார் தமிழ்மொழிக்கு ஆற்றிய பணி என்ன? தஞ்சையில் தமிழர் தலைவர் விளக்கம்

தந்தை பெரியார் தமிழ்மொழிக்கு ஆற்றிய பணி என்ன? என்பதை திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அவர்கள் விளக்கினார்.

தஞ்சை பல்கலைக்கழகத்தில் 21.2.2011 அன்று திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

பெரியாரின் பங்கு பணி என்ன?


நண்பர்களே! இன்னொரு செய்தியை உங்களுக்குச் சொல்ல வேண்டும்.. இப்படிச் சொன்ன தந்தைபெரியாரின் பங்கு பணி என்ன? எதற்கெடுத்தாலும் வெறும் எதிர்மறையாகப் பேசிவிட்டுப் போவதா? அல்லது சந்தனத்தைத் தெளித்துவிட்டு அதோடு போவதா? தந்தை பெரியாரின் ஆக்கப் பணி இருக்கிறதே அதுதான் இன்றைக்குத் தலைவர் அவர்களே என்று நாம் அழைக்கிறோம்.

பெரியார் அவர்கள் இந்தப் பணியைத் துவக்குவதற்கு முன்னால் தமிழில் பிரசங்கம் நடந்தது. தமிழில் பேசியவர்கள் சிலர். அந்த பிரசங்கத்திற்கு யார் தலைமை தாங்குவார்கள்? அக்ராசனதிபதி அவர்கள் தலைமை தாங்குவார். அக்கிராசனாதிபதி அவர்களே! என்று சொல்லு வார்கள்.

எழுதிய கடிதத்தில்...


கடிதம் எழுதும் பொழுதே மகாராஜ ராஜஸ்ரீ சிரஞ்சீவி என்று எழுதுவார்கள். சிரம் தலை, சீவி தலையை வெட்டுவது. விபீஷணன் என்றும் சிரஞ்சீவி மார்க்கண்டேயன் என்றும் சிரஞ்சீவி என்றும் இது மாதிரி ஒவ்வொருவரையும் அழைப்பர்.

பெரியாருடைய தன்மானப் புரட்சி பண் பாட்டுப் புரட்சி வந்தபிற்பாடுதான் பல்கலைக் கழகங்கள் என்ற பெயரே வந்தது. அதற்கு முன்பு சர்வ கலாசாலை என்று பெயர். துணைவேந்தர் கிடையாது. உபஅத்தியேட்சகர் என்றுதான் அழைப்பார்கள் ஆசிரியர் என்று அழைக்க மாட்டார்கள். உபாத்தியாயர்கள் என்றுதான் அழைப்பார்கள். அத்தியாயனம், உப அத்தியாயனம் என்றுதான் சொல்லுவார்கள். அய்யா அவர்கள் குடிஅரசு இதழில் அந்த காலத்தில் சித்ர குப்தன் என்ற புனை பெயரில் எழுதியிருக்கின்றார்.

1939ஆம் ஆண்டே பெரியார் சொன்னார்


பெரியார் அவர்கள் சொல்லுவார். தமிழைப் பற்றிச் சொல்லும்பொழுது எப்பொழுது என்றால் 1939ஆம் ஆண்டு. தந்தை பெரியார் அப்பொழுதே பண்பாட்டுப்படை யெடுப்பை எதிர்த்தார் என்பதற்கு அடையாளம். ஆக்க ரீதியாக பணியாற்றினார் என்பதற்கு அடையாளம் என்ன? வடமொழி இந்திய காங்கிரசை ஆதரிப்பவன். சுயமரியாதை தமிழன் இரண்டு பேருக்கும் வாக்குவாதம் நடக்கிற மாதிரி ஒரு கற்பனையை எழுதியிருக்கின்றார்.

அப்படியானால் தமிழ்நாட்டில் சமுதாயத்துறை யிலும், அரசியலிலும் ஆதிக்கம்பெற்ற பிறகு தமிழுக்கு என்ன யோக்கியதை கொடுத்திருக்கி றார்கள்?

தமிழை எக்கதியாக்கினார்கள்? இந்த பண் பாட்டுப் படை எடுப்பு வந்தவுடனே எப்படி நீச்ச பாஷை என்று ஆக்கினான்? அதனுடைய விளைவு என்ன? சமஸ்கிருதத்தை நாம் படிக்கக் கூடாது என்று ஆக்கினார்கள். பெரியார் எழுதுகிறார்.

பெரியார் செய்த பணி சாதாரணமானதல்ல


மற்றவர்கள் செய்ததைவிட பெரியார் அவர்கள் செய்த பணி சாதாரணமான பணி அல்ல. இதெல்லாம் பல்கலைக் கழகங்கள். ஆய்வு செய்து சொல்ல வேண்டிய கருத்தை குடிஅரசில் ஒரு செய்தியில் எழுதுகின்றார்.

கல்வித்துறையில் வைத்திருக்கின்ற பெயர்களைப் பார்! எல்லாம் பார்ப்பனர்கள் வைத்தது என்று சொல்லுகிறார். வடமொழி சமஸ்கிருதம் பண்பாட்டுப்படையெடுப்பு இவைகளைப் பார்க்க வேண்டும்.

கணிதம், நீஜ கணிதம், பின்னம், சேத்ர கணிதம், தகுபின்னம், இவை போன்ற ஆரிய பாஷைகளின் பெயரைத்தான் அமுலுக்குக் கொண்டு வந்தார்களே ஒழிய இவற்றிக்கு ஏதாவது தமிழ்ப்பெயர் உண்டா?

உனக்கு தமிழ்ப் பெயர் தெரியுமா?


உனக்கு ஏதாவது தமிழ் பெயர் தெரியுமா? மற்றும் பூகோள நிலவிளக்கப்பிரிவை எடுத்துக்கொள், பூகோளம், குணகோளம், குடகோளம், உத்ரதுருவம், தட்சண துருவம், பீட பூமி, கண்டம், மாகாணம், ராஜதானி, தீபகற்பம், தீவு, ஜலசந்தி, அட்சரேகை, பூமத்திய ரேகை-பிரதேசம், கிராமம், நகரம், ராஜ்யம் போன்ற ஆரிய பாஷை பெயர்களையே புகுத்தி நிலைநிறுத்திவிட்டார்கள். இது ஒன்று. அடுத்தது அரசியலை எடுத்துக்கொண்டு பார்.

எத்தனை விதமான வார்த்தைகள்


தேசியம், சுயராஜ்ஜியம், சுதந்திரம், சமதர்தம், அபதவாதம், (இவை அத்தணையம் வடசொற்கள்), பூரண சுயேச்சை, சத்தியாகிரகம், அகிம்சை, மகா ஜனங்கள், அக்கிராசனாதிபதி, உபபதி, (இப்பொழுது ராஷ்ட்ர பதி) சமூகம், சமுதாயம், சமாஜ்யம், சம்மேளனம், பிராஜா மகரம், வியாசமண்டலம், ராஷ்ட்ரபதி, பாரதமாதா, மருத்து வோஜ் சமோஜ், உபன்யாசம், பிரசங்கம், பரிட்சை, மசோதா, அங்கத்தினர், காரிய கமிட்டி, மகா சபை, பிரதம சபை, பிரேரேபணை (முன்மொழிகிறேன் வழி மொழிகிறேன் என்பது) ஆமோதித்து, பிரதிநிதி, நிர்வாக சபை என்ற வடமொழி வார்த்தைகளைப் பற்றி அய்யா அவர்கள் தொகுத்து எப்பொழுது சொல்லுகின்றார். 1939இல் சொல்லுகின்றார்.

எங்களை மாதிரி இருப்பவர்களுக்கு அப் பொழுது 6 வயது மாணவர்கள். பல பேர் பிறந்திருக்கமாட்டார்கள். அந்த காலத்தில் பெரியார் சொன்னார். பெரியார் தமிழுக்கு என்ன தொண்டு செய்தார் என்று கேட்கிறார்களே அவர் களுக்காகத்தான் இதைச் சொல்லுகிறோம். பழையதையே பேசிக்கொண்டிருந்தால் போதுமா?

வெறும் பழையதையே பேசிக்கொண்டிருந்தால் போதுமா? என்று பெரியார் கோபத்துடன் கேட்டார். அந்த கோபம் எதனாலே. அந்த மொழி மீது அவருக்கு இருந்த பற்றின் காரணமாக கருவியாகப் பயன்படவேண்டும் என்ற ஆழ்ந்த பொறுப்புணர்ச்சியும், கவலையும்தான் காரணம் இதற்கு அடிப்படை.

அடுத்து அய்யா அவர்கள் சொல்லுகிறார். வான சாஸ்திரம், வாயு, உஷ்ணம், சீதோஷ்ணநிலை, (தட்ப வெப்ப நிலை என்று சொல்ல மாட்டார்கள்) சீத மண்டலம், சூரியன், சந்திரன், நட்சத்திரம், கிரகணம், லக்னம், திதி, அமாவாசை, பவுர்ணமி, வருஷம் முதலியவைகள்.

பெரியாருடைய குருகுலத்திலே பயின்ற கலைஞர் முதல்வரானார். அவர் முதல்வரானதால் தான் தமிழுக்கு, தமிழனுக்கு ஏற்பட்ட இழிவைத் துடைத்தார்.

இன்னமும் தமிழ்ப்புத்தாண்டு என்று ஏப்ரல் மாதத்தில் கொண்டாடுகிறார்கள். மாணவர்களே இளைஞர்களே, தோழர்களே, தோழியர்களே ஒரு கேள்வியைக் கேளுங்கள். பெரியார் கேட்ட கேள்வி.

கலைஞரால் வந்த புத்தாண்டு


தமிழ்ப்புத்தாண்டு கதை சொல்லுகிறார். 60 ஆண்டுகள் என்று பிரபவ, விபவ, குரோதி, விரோதி ஆண்டுகள் என்று சொல்லுகின்றார்களே.

இந்த ஆண்டுகளை எடுத்துப் பார்த்தால் ஒரு ஆண்டாவது தமிழ்ச்சொல் பெயர் உண்டா? தமிழ் வருஷப் பிறப்பு என்று சொல்லுகிறார்கள். தமிழர் ஆண்டு என்று சொல்லுகிறார்கள்.


இதில் ஒரு சொல்கூட தமிழில் இல்லை என்றால் இதைவிட தமிழுக்கு தமிழனுக்கு மானக்கேடு தமிழுக்கு இழிவுக்கேடு வேறு என்ன இருக்க முடியுமா? இந்த மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு மூல காரணமாக இருந்தவர் தந்தைபெரியார்.

தை முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு


அதற்கு உறுதுணையாக இருந்தவர் முதல்வர் கலைஞர். அதனால்தான் தை முதல்நாள்தான் தமிழர்களுக்கு புத்தாண்டு என்று அறிவித்தார். ஒரு காலத்தில் நினைத்துப் போராடியது. நினைத்துச் சொன்னது. இது எதிர்மறையான கருத்துகள் மட்டுமல்ல. ஆக்க பூர்வமான சாதனைகளும் நிகழ்ந்திருக்கின்றன. அதற்கு மாற்று என்ன என்று கேட்டால் மாற்று ஏமாற்றல்ல. மாற்று இதோ இருக்கிறது.

மேலும் அய்யா சொல்லுகிறார். மதம், வேதம், புராணம், இதிகாசம், சாஸ்திரம், ஸ்ருதி, உபந்நியாசம், பிராமணீயம், ஆகமம், புத்தாந்தம், வேதாந்தம், ஆஸ்ரமம், ஆஸ்மா, மகாத்மா போன்ற வார்த்தைகள் எவ்வளவு பிரபலத்தில் கொண்டு வரப்பட்டன என்பதைப்பார்.

இன்றைக்குத்தானே மரியாதை?


இன்றைக்குத்தானே நமக்கு மரியாதை வந்திருக்கிறது. மாண்புமிகு என்று, ஸ்ரீமான், ஸ்ரீமதி, ஸ்ரீ என்ற வார்த்தைகளே மிகப்பெரிய அளவுக்கு இருக்கிறதே.

திருவாளர், திருச்செல்வி இதெல்லாம் இன் றைக்குத்தானே வந்திருக்கிறது. ஆகவே இதை சாதாரணம் என்று நினைக்காதீர்கள். இது வெறும் சொற்கள் அல்ல. இது வெறும் சொற்கள்-மாறாக இதன் மூலம் ஒரு பெரிய பண்பாட்டுப் பாதுகாப்பு ஏற்பட்டிருக்கிறது. துணைவேந்தர் அவர்கள் சொன்னமாதிரி, தன்மானம் மட்டுமல்ல. தமிழ்மானம் காப்பாற்றப்பட்டிருக்கிறது.

கருவிகள் புதுப்பிக்கப்பட வேண்டும்


எனவே அவர்களுடைய பார்வை என்பது முக்கியம். கருவிகள் புதுப்பிக்கப்பட வேண்டும். எம்மொழிக்கு ஆற்றல் உண்டு. சிறப்பு உண்டு. மொழி வளர்ச்சிக்குத் தடையாக இருப்பதை, மூட நம்பிக்கைகளை தந்தை பெரியார் சுட்டிக்காட்டி கண்டித்தார். நம்மொழி உலகம் முழுவதும் செல்ல வேண்டும் என்று விரும்பினார்.

பெரியாரும், இராமலிங்கரும் 80 ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்ட நூல். குடிஅரசு இதழை நடத்திய பொழுது தொகுத்து வெளியிட்டார். சமஸ்கிருதம் ஒரு மொழி என்று சொன்னார்கள். அதை மறுத்து வள்ளலார் சொன்னார்கள். என்கிற செய்திகளை எல்லாம் தொகுத்துச் சொன்னார்கள்.

பெரியார் அவர்கள் சிறிய நூலாகப் போட்டு இந்தக் கருத்துக்களை மக்கள் மத்தியில் பரப்பி னார்கள். அன்றைக்கு அதை எடுத்துச்சொன்னார். அதே போல திருக்குறள். இன்றைக்குத்தான் திருக்குறளுக்கு இவ்வளவு பெரிய மரியாதை வந்திருக்கிறது.

கீதைக்கும், இராமாயணத்திற்குமுரிய மரியாதை


கீதைக்கும், இராமாயணத்திற்குரிய மரியாதை. திருக்குறளுக்கு வந்திருக்கிறதா? கீதையின் தத்துவம் என்ன? துருவித் துருவி பார்த்தால்-இன்றைக்கு பயங்கர வாதம் பெருகியிருப்பதற்கு அடித்தளமே எது என்றால் இந்த நாட்டில் கீதை பரப்பியதுதான்.

இதனுடைய மூலகாரணத்திற்கு நீங்கள் செல்ல வேண்டும். திருக்குறளை எடுத்துப் பாருங்கள். திருக்குறள் உலக நூல். இளைஞர்களுக்கு, மற்றவர்களுக்கு தெரியவேண்டும்.

திருக்குறளை பரப்பியவர் பெரியார்


1948-க்கு முன்பு திருக்குறளைப் பற்றி யாருமே கவலைப்பட்டதில்லை. புலவர்கள் வீட்டுப்புத்தக அலமாரியிலிருந்த திருக்குறளை மக்கள் மன்றத் திற்குக் கொண்டு வந்த பெருமை பெரியார் அவர் களுடைய பணியாகும் (கைதட்டல்).

அறிவு, திருக்குறளைப் பார். உழைப்பு, திருக் குறளைப் பார். உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ ஊழை உட்பக்கம் காண்பர்

என்பது குறள்.

ஊழழைப் பற்றி பெரியார் சொன்னார். ஊழ் என்றால் சிலபேர் தலை எழுத்து என்று சொல்லுகிறார்கள்.

தலை எழுத்து என்றால்...


தலை எழுத்து என்றால் நம் தலையில் மட்டும் எழுதிவிட்டானா? ஏன் மற்றவர்களுடைய தலையில் எழுதவில்லை. மற்றவன், தலையைக் காட்ட மாட்டேன் என்று சொல்லிவிட்டானா என்று தந்தை பெரியார் கேட்டார். அய்யா பொதுக் கூட்டங்களில் கேட்பார். என்னய்யா நாம் தலை எழுத்து , தலை எழுத்து என்று சொல்லுகின்றோமே.

அமெரிக்ககாரன் தலையைக் காட்ட மாட்டேன் என்று சொல்லிவிட்டுப் போய்விட்டானா? ரஷ்யாக் காரன் தலையைக் காட்ட மாட்டேன் என்று சொல்லிவிட்டானா?

நம்மாள் மட்டும் எவ்வளவு வேண்டுமானாலும் எழுதிக்கொள் என்று சொல்லிவிட்டானா? என்று எளிமையான மக்கள் சிந்திக்கும்படி கேள்வி கேட்டவர் தந்தை பெரியார்.

ஆகவே அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையிலே திருக்குறள் மாநாடு நடத்தினார் பெரியார். அண்ணா அவர்கள் செயலாளராக இருந்து நடத்தி னார். திரு.வி..க நாவலர் சோமசுந்தர பாரதியார், தமிழ்க்கடல் மறைமலை அடிகளார், மா.இராச மாணிக்கனார், இப்படிப்பட்டவர்கள் எல்லாம் திருக்குறள் பரவ, அய்யா, அண்ணா அவர்களுக்கும், தமிழ் மொழி பரவவும் உடன் இருந்து பாடு பட்டவர்கள்.

--------------------தொடரும் ”விடுதலை” 23-5-2011

24.5.11

பெரியார் அவர்களால் ஈர்க்கப்பட்ட மா மனிதர்கள்

விடயபுரம் திருவாரூர் மாவட்டம் - நன்னிலம் வட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் - கண் கொடுத்த வனிதம் என்னும் ஊரையடுத்துள்ள குக்கிராமம் (Hamlet).

இந்த ஊர் இன்று உலக வரலாற்று வரைபடத்தில் நீங்கா இடம் பெற்று விட்டது. அதற்குக் காரணகர்த்தா பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார்.

சுயமரியாதைப் பிரச்சாரப் பள்ளி (பயிற்சி முகாம்) இவ்வூரில் நடைபெற்ற போது தான், தான் இது நாள் வரை சொல்லி வந்த கடவுள் மறுப்புக் கொள்கைக்கு, ஆத்மா மறுப்புக் கொள்கைக்கு வார்த்தை வடிவம் கொடுத்து உலக மானுடத்திற்குப் பிரகடனம் செய்தார். தந்தை பெரியார் அந்த வரலாற்றுச் செப்பம் மிகுந்த புரட்சித் திருநாள் இந்நாள்! (24.5.1967).

கடவுள் இல்லை, கடவுள் இல்லை
கடவுள் இல்லவே இல்லை
கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்
கடவுளைப் பரப்பியவன் அயோக்கியன்
கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி

ஆத்மா, மோட்சம், நரகம், மறுபிறப்பு, பிதிர்லோகம் ஆகியவைகளைக் கற்பித்தவன் அயோக்கியன்; நம்புகிறவன் மடையன்; இவற்றால் பலன் அனுபவிக்கிறவன் மகாமகா அயோக்கியன்.

தந்தை பெரியார் அவர்களின் இத்தகைய அறிவிப்புக்குப்பின் நாடெங்கும் கடவுள், ஆத்மா மறுப்புக் கல்வெட்டுகள் நிறுவப்பட் டன. தந்தை பெரியார் சிலைகளின் பீடங்களிலும் இவை பொறிக்கப்பட்டன.

புத்தரின் கருத்துச் செல்வங்களை அசோக சக்ரவர்த்தி கல்வெட்டுகளில் பொறித்த ஏற்பாட்டுக்கு நிகரானவை இவையாகும்.

உலகில் எந்த நாட்டிலும் கடவுளை எதிர்க்கும், மதத்தை மறுக்கும் இத்தகு மாமணிகள் பொறிக்கப்பட்ட தில்லை. இது வரலாற்றில் புரட்சி அத்தியாயமாகும்.

எங்கள் மனம் புண்படுகிறது என்று கூறி இவ்வாசகங்களை எதிர்த்து நீதி மன்றமும் சென்றவர்கள் இறுதியில் தோல்வியையே சுமந்தனர் என்பது கூடுதல் தகவல் ஆகும்.

அப்பாசாமி நாயுடு என்னும் பெரு நிலக்கிழார். பக்திப் பழம் தான்; ஆனாலும் தந்தைபெரியார் அவர்களின் பால் அதையும் தாண்டிய கூடுதல் பக்தி, கொண் டவர்! எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் கைகட்டி, வாய் பொத்திப் பேசக் கூடிய மாண்பாளர்.


அவர்தான் இந்தப் பயிற்சிப் பள்ளிக்கான அனைத்துச் செலவையும் ஏற்றுக் கொண்டு ஏற்பாடுகளையும், விரிவாகச் செய்து கொடுத்தவர்.

கோடையின் கொப்புளங்களால் தந்தை பெரியார் தகிக்கப்படக் கூடாது என் பதற்காக ஆசிரமப்பாணியில் பூங்கொடிகள் குடைபிடிக்க கொட்டகை அமைத்து, அதற்குப் பூங்கொடி இல்லம் என்றும் பெயர் சூட்டப்பட்டது.

தந்தை பெரியார் அவர்களால் ஈர்க்கப்பட்ட மா மனிதர்கள் இதுபோல் எத்தனை எத்தனை வகையான வித்தியாசமான வண்ண வண்ண மலர்களோ!

---------------- மயிலாடன் அவர்கள் 24-5-2011 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

23.5.11

தீண்டாமை ஒழிப்பு ஒரு பார்வை!


கேரள மாநிலத்தில் பதிவுத்துறை அய்.ஜி.யாக இருந்தவர் ஏ.கே. இராமகிருஷ்ணன். இவர் இவ்வாண்டு ஏப்ரல் மாதம் பதவியிலிருந்து ஓய்வு பெற்றார். அவர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்கிற காரணத்தால் அவர் ஓய்வு பெற்ற பிறகு, அவர் பணியாற்றிய அறையில் இருந்த தளவாடச் சாமான்கள்மீது சாணித் தண்ணீர் தெளித்து சுத்திகரிப்புச் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்த அதிகாரி மனித உரிமை ஆணையத்திற்குப் புகார் செய்துள்ளார்.

மனித உரிமை ஆணையத்தின் தலைவரான நீதிபதி என். தினகர் சம்பந்தப்பட்ட துறைக்குத் தாக்கீடு அனுப்பினார். தனிப்பட்ட நபரை இழிவுபடுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு மட்டும் இவ்வாறு செய்யப்படவில்லை. சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின்மீது நடத்தப்பட்ட தாக்குதலாகவே இதை நினைக்க வேண்டியிருக்கிறது.

அரசில் உயர்தரப் பதவி வகித்த ஒருவருக்கே இதுபோன்ற தீண்டாமைச் சம்பவங்கள் நடைபெறும் என்றால், சாதாரண பொது மக்களின் நிலையை என்னவென்று சொல்வது? என்று நீதிபதி கருத்துத் தெரிவித்துள்ளார்.

இது ஒன்றும் இந்தியத் திருநாட்டில் புதிதான ஒன்றல்ல. இதற்கு முன் உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி தாழ்த்தப்பட்டவர் என்கிற காரணத்தால், அவர் பதவியில் ஓய்வு பெற்றுச் சென்ற நிலையில், அவர் பயன்படுத்திய அறை சுத்திகரிப்புச் செய்யப்பட்ட பின்புதான், உயர்ஜாதி பார்ப்பன நீதிபதி அந்த அறையைப் பயன்படுத்தினார் என்பதையும் இந்த இடத்தில், நேரத்தில் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்து மதம் என்னும் தொழுநோயால் பீடிக்கப்பட்ட இந்தியாவில் இதுபோன்ற உணர்வுகள் இருப்பது ஆச்சாரியமான ஒன்றல்ல. குஜராத் மாநில அமைச்சராக இருக்கக்கூடிய திருவாளர் நரேந்திரமோடி தாம் எழுதிய கர்மயோகி என்னும் நூலில் குறிப்பிட்டு இருந்தது என்ன? சில வேளைகளில் மலம் அள்ளும் பணியில் ஈடுபட்டிருப்போர்க்கு ஞானம் ஊட்டப் பெறலாம். அவர்கள் செய்யும் வேலை சமூகத்தின் மகிழ்ச்சிக் காகவும், கடவுளின் சந்தோஷத்திற்காகவும் செய்யப்படுவதாகும் எனவும் கருதலாம் என்று எழுதவில்லையா? இதன் பொருள் என்ன? மலம் அள்ளுவது - மனித உரிமைக்கு எதிரானது; இது ஒழிக்கப்பட வேண்டும் என்ற கருத்து மேலோங்கி நிற்கும் ஒரு கால கட்டத்தில், இப்படி ஒரு கருத்தினை ஒரு மாநில முதல் அமைச்சர் ஒரு நூல் மூலம் பதிவு செய்கிறார் என்றால் இந்து மனப்பான்மை என்ற ஒன்று - பெரிய நிலையில் உள்ளவர்களின் குருதி ஓட்டத்தில்கூட அழுத்தமாகப் பிடிமானம் கொண்டு இருப்பதாலும், இந்து மதத்தின் வருணதர்மத்தில் ஜாதிக் கண்ணோட்டத்தில் தீண்டாமை என்பது தவிர்க்கப்பட முடியாத அம்சமாக இருக்கிற காரணத்தால் தீண்டாமை ஒழிப்பு சட்டங்களைப் பற்றிக்கூடக் கவலைப்படாமல் பிறப்பின் அடிப்படையில் பேதம் பேசும் தன்மையராய் இருப்பதை அறிய முடிகிறது.

இந்தக் குற்றம் செய்யும் பெரிய மனிதர்களுக்குக் கடுமையான தண்டனை கொடுத்து, அதனை விளம்பரப்படுத்துவதால் தீண்டாமை என்னும் நஞ்சை ஓரளவு முறிக்கலாம் என்றாலும், அதைவிட தீண்டாமைக்குக் காரணமான - ஆதாரமான இந்துமத சாஸ்திர, புராண, இதிகாசக் குப்பைகள் பற்றியும் நாட்டு மக்களுக்கு எடுத்துச் சொல்லி, மக்களே முன்வந்து அவற்றைப் பொது இடத்தில் கொளுத்தும் ஒரு நிலையை உண்டு பண்ண வேண்டும்.

தந்தை பெரியார் இராமாயணத்தை எரிக்கச் சொன்னதும், தந்தை பெரியார் அவர்களுக்குப்பின் மனு தர்ம சாஸ்திரத்தை திராவிடர் கழகம் எரித்ததும் இந்த அடிப்படையில்தான்.

ஏதோ ஒரு காரணத்துக்காகவும் இதுபோன்ற நூல்களைப் பரப்புவதையும், பிரச்சாரம் செய்வதையும்கூட தீண்டாமை ஒழிப்புச் சட்டப்படி தடுக்க வேண்டும்.

தீண்டாமைக்கு மூலமானவற்றை ஒரு பக்கத்தில் பிரச்சாரம் செய்து கொண்டு, இன்னொரு பக்கத்தில் தீண்டாமைக் கொடுமைபற்றிப் பேசுவது எல்லாம் வாய் சாமர்த்தியமே தவிர, மூல நோய் ஒழிப்புக்குப் பயன் படாது என்பது உறுதி, உறுதியே!

-------------------”விடுதலை” தலையங்கம் 23-5-2011