Search This Blog

29.1.08

இலஞ்சம்-ஊழல் ஒழிய

இன்று நாட்டில் இலஞ்சம்-ஊழல் கருவரையிலிருந்து, கல்லறை வரை தலைவிரித்தாடிவருகிறது.இதை ஒழிக்க முடியாமல் பல நாடுகள் திணறி வருகின்றன. தினந்தோறும் நாளிதழ்களில் இலஞ்சம்-ஊழல் பற்றி செய்திகள் அதிகமாக வந்து கொண்டே இருக்கிறது.இதைத் தடுப்பதற்கு பெரியார் உயிரோடு இருந்த போது தனது 95 ஆவது பிறந்த நாள் மலரில் பல யோசனைகளை சொல்லியிருந்தார்.அதில் ஒருசிலவற்றை அரசுகள் நடைமுறைப்படுத்தி கடைப்பிடித்து வருகின்றன.பெரியார் சொல்லிய அனைத்து யோசனைகளையும் அரசு கடைப்பிடித்தால் இலஞ்சம்-ஊழலை முற்றாக ஒழிக்கமுடியும் என்ற நம்பிக்கையில் பெரியாரின் ஆலோசனைகளை இங்கு பதித்துள்ளேன். உரியவர்கள் தகுந்த நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நம்பிக்கையுடன்;இதோ பெரியார் தரும் ஆலோசனைகள்:

--நல்ல சம்பளத்தில் துப்பு கண்டுபிடிக்கும் பிரிவு ஒன்றை நியமித்து, அதற்கு இரண்டு அதிகாரிகளையும் நியமிக்க வேண்டும். இந்த இலாக்காவிற்கென்று ஒரு தனிப்பத்திரிக்கை ஏற்பாடு செய்து பெயர் விபரத்தோடு பிடிக்கும் கேசுகளை விளம்பரப்படுத்த வேண்டும்.

--பிடிக்கப்பட்ட வழக்குகளை விசாரிக்க தனிக்கோர்ட் வேண்டும்.சிறைத்தண்டனை குறைவாகவும்,அபராதம் அதிகமாகவும் போட்டுத் தண்டிக்க வேண்டும்.

--குற்றவாளிகளைத் தண்டிப்பதாலும், குற்றம் கண்டு பிடிப்பவர்களுக்கு தக்க சன்மானம் கொடுப்பதாலும்தான் குற்றங்களை குறைக்க முடியும்.

--நாகரிக காலம்,நாகரிக ஆட்சி என்றால் மக்களிடம் குற்றம் அணுகாமல், மக்கள் குற்றம் செய்யாமல் காப்பது தானே ஒழிய குற்றவாளிகளை கவுரவமாய் நடத்தி குற்றம் செய்ய வசதியும் ஊக்கமும் கொடுப்பது நாகரிக ஆட்சி அல்ல.

--ஆகவே நாட்டில் குற்றங்கள் ஏற்படாமல் தடுக்க வேண்டுமானால் குற்றவாளிகள் பெருகாமல் குறைக்க வேண்டுமானால் துப்புக் கண்டுபிடிக்க தரமான சி.அய்.டி. அமர்த்தப்படவேண்டும்.

--குற்றவாளிகள் எளிதில் தப்பித்துக் கொள்ள முடியாமல் நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும்.

--குற்றம் கண்டால் கடினமான தண்டனை அளிக்க வேண்டும்.

--இந்த மூன்றும் இல்லாததால்தான் குற்றங்கள் பெருகுகின்றன. குற்றவாளிகள் பெருகு கின்றனர்.

-----தந்தைபெரியார்-95 ஆவது பிறந்த நாள் "விடுதலை" மலரிலிருந்து

0 comments: