Search This Blog

4.6.13

கலைஞர் 90ஆம் ஆண்டு பிறந்த நாள் மலரில் கி.வீரமணி













மானமிகு சுயமரியாதைக்காரன் என்ற ஒரு வரி விமர்சனத்தில் தன்னைக் குறிப்பிட்ட தமிழினத்தின் தன்னிகரற்ற தலைவரான முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் வரும் ஜூன் 3 இல் 90ஆவது வயதில் அடியெடுத்து வைக்கிறார்கள்.

இந்தத் தொண்ணூறு வயதில், ஏறத்தாழ 75 ஆண்டுகள் பொது வாழ்க்கை! வியப்பான வித்தக சாதனை!

உலகம் இதுவரை கண்டிராத, கேட் டிராத அதிசயங்களில் இது ஒன்று!

பள்ளிப் பருவத்திலேயே...

பள்ளிப் பருவத்திலேயே பகுத்தறி வுப் பகலவன் தந்தை பெரியாரின் இயக்கம் அவரை ஈர்த்தது.

அய்யாவின் அந்நாள் தளபதியாகச் செயல்பட்ட அறிஞர் அண்ணாவின் பார்வை, இளம் மாணவராக இருந்த (கலைஞர்) கருணாநிதி எழுதிய கட்டுரையை தனது வார ஏடான திராவிட நாடு இதழில் வெளியிடும் அளவுக்கு அவரது எழுத்தாற்றலின் துவக்கமே, அண்ணாவுக்கு அமைந்த பரிந்துரைக் கடிதமானதும் மற்றொரு அதிசயமே!

மாணவப் பருவத்திலேயே லட்சிய தாகம் - இவரிடம் பீறிட்டது!

அவர் திருவாரூரின் மாணவப் பேச்சாளர் - எழுத்தாளர் என்பதோடு, மாணவர் மன்ற அமைப்பாளரும் ஆன அனுபவத்தை அவருக்கு உருவாக்கிக் கொடுத்தது.

அந்த அடிநாள் உழைப்பு இன்னும் அவரை விட்டு நீங்கவில்லை; இன்றும் அது ஓங்கி நின்று ஒளியூட்டும் கலங்கரை விளக்கமாக கழகத்திற்குக் கிடைத்துக் கொண்டே இருக்கிறது!

துள்ளித் திரிந்திடும் வேளையில், பள்ளிப் பருவத்திலும்கூட இன இழிவு ஒழிப்பு, சுயமரியாதைச் சூறாவளிப் பேச்சுகளைக் கேட்ட இவரது காது களும், கால்களும் அவரை ஈரோடு, காஞ்சி என்றே அழைத்து நிறுத்தியது!

ஈரோட்டுக் குருகுலத்திலே...

அந்நாள் குடிஅரசு வார ஏடு ஒரு புரட்சிப் பாசறை - அது அவருக்கு நல்லதோர் வாய்ப்பாக இடந்தந்து, ஈரோட்டுக் குருகுலத்தின் இணை யற்ற மாணவ மணியாக ஆக்கி, பயிற்சிக் களத்தில் நிறுத்தியது.

அப்போதே கவிதையல்ல...! என்ற தலைப்பில் கவிதை வரிகளைப் போன்றே வெடித்துக் கிளப்பிய எரி மலை எழுத்துக்கள்!

குடிஅரசின் துணை ஆசிரியராக இருந்த நிலையில், அவர்தம் எழுத்துக் கள், தந்தை பெரியாரின் பாராட்டுகளை பெற்றது. குருகுலவாசமே இவர் பன் முனையிலும் கூர்தீட்டிட குதூகலமான தொரு வாய்ப்பாக ஆகியது. அந்நாள் இன்றும் அவருக்குப் பொன்னாள்! மறக்கமுடியாத கலைக்கூட அனுப வங்கள்!
குருகுலத்திலிருந்து வெளியேறி னாலும் குருவிடம் கற்ற பாடங்களை குவலயத்திற்கே கொண்டு சேர்க்கும் பணிக்கே அவரது வாழ்க்கை அன்று முதல் இன்று வரை பயன்படுகிறது!

கலைத்துறை ஆற்றல்

அவரது கலைத்துறை ஆற்றல் இளம் வயதிலேயே நாடகங்களை எழுதிடத் தூண்டியது; அவைகூட வெறும் கேளிக்கைகள், கூத்துக்கள் அல்ல; கொள்கைப் போத்துக்களை நட்டு வைத்து, நாடகம் பார்த்தோரை சிந்திக்க வைத்த லட்சிய வகுப்பு களாகவே அமைந்தன!

திரையுலகப் பிரவேசம் செய்ய அவை துணை நின்றன; கூன் விழுந்த சமூகத்தை நிமிர்த்திடவும், கூழைக் கும்பிடு போட்டுக் கோணலாகிப் போன மக்களை பெரியாரின் பகுத் தறிவு வழியில், அண்ணாவைப் போலவே எழுதி, நிமிர்த்திடும் வெற்றி வாகை சூடிய வீரராக வளர்ந்தார்!

பராசக்தி பேசமாட்டாள்  அது கல்!

பராசக்தி பேசமாட்டாள், அது கல்! என்று பேசவைத்து பாமர மக்களிடம் கூட கைதட்டலைப் பெறவைத்தார்.  கட்டணம் கொடுத்துக் கேட்கவும் வைத்தார். பகுத்தறிவுப் பிரச்சாரத் தினை, திரையுலகைத் திகைக்கச் செய்து, திராவிடர் இயக்கக் கொள் கைகள் திக்கெட்டும் பரவச் செய்து திரையும் எனக்கு ஒரு அறிவாயுதமே என்று காட்டினார் திறம்பட தீரம்மிக்க எழுத்துக்களால்.
முரசொலி என்ற கையெழுத்து ஏட்டினை திருவாரூரில் 60 ஆண்டு களுக்குமுன் துண்டறிக்கைபோல் தொடங்கி, இன்று தூக்கி நிறுத்தும் அவர்தம் உறுதிப்பாடும், உழைப்பும் எதிரிகளாலும் புரிந்துகொள்ள முடியாத ஒன்று!
தி.மு.க. அரசியல் கட்சியாகியது. தான் போட்டியிட்ட தேர்தல் களத்தில் கலைஞர் தோல்வி காணாத அரசியல் தலைவர் என்ற சரித்திர சாதனையைச் செய்தார்!

55 ஆண்டுகாலம் தொடர்ந்ததும் ஒரு உலகச் சாதனைதான்!

இயக்கத்தின் 1967 ஆம் ஆண்டு வெற் றிக்கு இவரது பங்கு கொஞ்சநஞ்சமல்ல.
முதல்வராக, அண்ணாவையே புறந் தள்ள செய்த முயற்சிகளை முறியடித்த ராஜதந்திரி - இவர் தனி முத்திரை பொறித்தவர்!

தி.மு.க. கப்பலின் மீகாமன்

அண்ணாவுக்குப்பின் முதலமைச்சர் என்பதை, தி.மு.க. என்ற கப்பலுக்கு மீகாமன் (கேப்டன்) என்பதுபற்றி சலசலப்புகளும், சஞ்சலங்களும் உருவான போது, கலைஞர்தான் தகுதிமிக்கவர் என்று தன்னை ஆளாக்கிய தந்தை பெரி யாரால் ஆணையிடப்பட்டு, அரியாசனம் ஏறி அமர்ந்து சூத்திரர்களுக்கான, சூத்திரர்களால் ஆளப்படும் சூத்திர ஆட்சி என்ற சரித்திரம் படைத்தவர்;
வாய்ப்பு நேர்ந்த போதெல்லாம் ஆட்சியை வெறும் காட்சியாக நடத்தாமல், இனத்தின் மீட்சியாகவே நடத்திட்ட எழுச்சி நாயகனாகவே காட்சியளித்தார்!
ஈழத் தமிழர் பிரச்சினையிலும் கலைஞருக்கு இருக்கும் தொடர்பின் வரலாறு நெடிது.

1985 மே 15 இல் உருவாக்கப்பட்ட டெசோவை மீண்டும் புதுப்பித்து (30.4.2012) புது முறுக்கேற்றி, உலகளவில் ஈழத் தமிழர் பிரச்சினையைக் கொண்டு சென்றதில் கலைஞர் அவர்களின் பங்கு மகத்தானது.

ஈழத் தமிழர் பிரச்சினைக்காகவே இருமுறை ஆட்சி பறிக்கப்பட்டது என்பதெல்லாம் சாதாரணமானதுதானா?

இருமுறைக் கலைப்பு!

1976 இல் முதல் முறை, 1990 இல் இரண்டாம் முறையாகவும்  இவர்தம் ஆட்சி நியாயமில்லாமல், டில்லி துரைத் தனத்தால் கலைக்கப்பட்டபோதெல்லாம் கூட, ஆரியமும் அதன் அடிவருடிகளும், மகிழ்ந்தபோது, அவர்கள் போட்டது தப்புக்கணக்கு என்று காட்ட அச்சமின்றி, எதிர்ப்பைத் துச்சமாக்கி, துணிவின் உச்சியிலே நின்ற கலைஞரை எவர் மறைத்தாலும் சரித்திரம் மறைக்குமோ; மறைத்தாலும் அது பிழைக்குமோ!

கழகப் பொது வாழ்வு அவருக்கு மலர்ப் படுக்கையாக என்றும் இருந்ததில்லை. எதிர்ப்புகளும், ஏளனங்களும் அவர்மீது பொழியப்பட்டன அடைமழைபோல! அவரால் ஆளாக்கப்பட்டவர்களே கூட அவரது முதுகில் குத்தியபோதும்கூட அவர் அதையும் தாங்கித் தாங்கி, தனது லட்சியப் பயணத்தை பெரியார் வழியில், அண்ணா வழியில் தொடர்ந்து கொண்டே இருப்பவர்!

அவரிடம் செங்கோலைப் பறித்த நிகழ்வுகள் பலமுறை உண்டு.

அது ஜனநாயகத்தின் விசித்திரம்; ஏற்றுக்கொண்டே தீரவேண்டிய அரசியல் நியதி. நியாயம்தானா? என்று யாரும் கேட்பதில்லை. அதுபற்றி அவர் கவலைப் பட்டது மில்லை. காரணம், பெரியாரின் துணிவு, அண்ணாவின் கனிவு, அவரது அகத்தினைப் பக்குவப்படுத்தியுள்ள வன்மை. இதுவே அவரது அறிவுடைமை!
கொள்கை உடைமை!
செங்கோலும் - எழுதுகோலும்!
செங்கோல் பறிபோகலாம்; காரணம், மக்களாட்சியில் அந்த மகுடம் மாறி மாறி வரும். ஆனால், அவர் கையில் உள்ள வலிமைமிக்க எழுதுகோலைப் பறிக்க எந்த சக்தியாலும் முடியாது!

முதுமையே முயன்று அவரிடம் தோற்றுவிட்ட பிறகு, அந்த எழுது கோலைப் பறிக்க எவர் முயன்றாலும் ஏமாறுவர்!

1976 - நெருக்கடி நிலை காலத்தில் நடைபெற்ற அதிகார மிரட்டல்கள், அச்சுறுத்தல்கள் அவரது எழுதுகோலின் மூலம் வரும் எண்ண ஊற்றுகளை நிறுத்திட முடிந்ததா?

பெரியாரிடமிருந்து எப்படி சுற்றுப் பயணத்தை எவராலும் இறுதிவரை நிறுத்திட முடியவில்லையோ, அது போலத்தான் கலைஞரின் எழுத்துக்கள் என்ற சிந்தனை சிற்பியின் உளி செதுக்கல்களை - எவர்தான் தடுத்திட முடியும்?

ஈரோட்டுக் குருகுலத்தில் பெற்ற அந்த இளமைப் பயிற்சி இன்றும் என்றும் கைகொடுக்கிறது! அவரது வற்றாத கொள்கை பலத்திற்கு மூலாதாரம் அதுவே.
முதுமையைத் தோற்கடிக்கும் முதிர்ச்சி!

முதுமை அவரிடம் போட்டியிடு கிறது! ஆனால் அவர்தம் முதிர்ச்சியால் அதை முறியடித்து, விரட்டி ஓடச் செய்கிறது!

நினைவாற்றல் என்ற அரிய அற் புதம் அவருக்கே உரிய தனித்ததோர் அறிவுப் படைக்கலன்! பெறற்கரிய பேறு!

எந்த நெருக்கடியிலும் நகைச்சுவை உணர்வைக் கையாண்டு, சிரிக்க, சிந்திக்க, சினம் போக்க ஆக்கிடும் அவரது சிறந்த பண்பு, எளிதில் எவருக்கும் கிட்டாத அரியதோர் அள்ளக் குறையாத அறிவுச் செல்வம்!

அவர்தம் ஆயுள் மேலும் பலப்பல ஆண்டுகள் நீண்டு நூறாண்டினையும் தாண்ட வேண்டும் என்ற விழைவு அவருக்காக மட்டுமல்ல; இந்த நாதி யற்ற திராவிடர் இனம் - நன்றியை அடிக்கடி மறந்து நயவஞ்சகர்களின் கண்ணிவெடிகளுக்குப் பலியாகும் பரிதாபத்திற்குரிய இனம் - பாதுகாக்கப்பட இந்தத் தலைவர்தான் - இன்றும்  இனம் பேசும் ஈரோட்டு நெறியில் இணையற்ற அரசியல் தலைவர்.

எனவே, அவர் வாழ்ந்தால் அது இனத்தின் ஏற்றம்!

எந்தச் சோதனையும் சரி, எதிர்ப்பும் ஏளனமும் சரி, அவரது கொள்கைப் பயிரும் விளையும் பண்ணையில் வீசப்படும் உரங்கள் - அவைகளினால் அவருக்கு வளர்ச்சி ஏற்படுமே தவிர, தளர்ச்சி ஏற்படாது!

90 வயது இளைஞர் வாழ்கவே!

90 வயது இளைஞராம் அவரை வாழ்த்தி நாம் மானமும், அறிவும் உள்ளவர்கள் என்று காட்டுவோம்; அம் மானமிகு சுயமரியாதைக்காரரை வாழ்த்துவதுதானே மானத்தை, அறிவைப் போற்றுவது - இல்லையா!
வாழ்க கலைஞர் பல்லாண்டு!
------------------------------- கி.வீரமணி, தலைவர், திராவிடர் கழகம். (விடுதலை - கலைஞர் 90ஆம் ஆண்டு பிறந்த நாள்  மலரிலிருந்து)

2.6.13

ஜாதியின் பெயரால் அரசியலா?

தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட சட்டம் என்பதற்காக அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை பிரச்சினையில் தமிழ்நாடு அரசு அலட்சியம் காட்டக் கூடாது
ஆகஸ்டு முதல் தேதியன்று சிறை நிரப்பும் போராட்டம்!
செய்தியாளர்களிடம் கழகத் தலைவர் அறிவிப்பு
குற்றாலம், ஜூன் 2- அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்பது திமுக ஆட்சியில் மட்டுமல்ல; எம்.ஜி.ஆர். ஜெயலலிதா ஆட்சியிலும் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒன்றுதான்; அதனை நிறைவேற்ற முன் வராவிட்டால், ஆகஸ்டு முதல் தேதி சிறை நிரப்பும் போராட்டத்தில் திராவிடர் கழகம் ஈடுபடும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

குற்றாலத்தில் நேற்று (1.6.2013) செய்தியாளர்களிடம் திராவிடர் கழகத் தலைவர் அவர்கள் அளித்த பேட்டியில் கூறியதாவது: திராவிடர் கழகத்தின் சார்பில் பெரியார் பயிற்சிப் பட்டறை 36ஆவது ஆண்டாக இந்தக் குற்றாலத்தில் நடைபெறுகிறது. கடந்த நான்கு ஆண்டு காலமாக கல்வி வள்ளல் வீகேயென் அவர்களின் மாளிகையில், திருமண மண்டபத்தில் அவர்களின் மிகுந்த உபசரிப்போடு நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.

மருத்துவக் கல்லூரி மாணவர், பொறியியல் கல்லூரி மாணவர்கள், பட்டதாரிகள் என்று பல நிலைகளிலும் உள்ளவர்கள் இந்த முகாமில் பங்கு கொண்டு நான்கு நாட்களாகப் பயிற்சி பெற்றனர். இன்று நிறைவு நாள்!
76 இருபால் மாணவர்கள் சிறப்பாகப் பயிற்சி பெற்றுள்ளனர்.

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை

தந்தை பெரியார் இறுதியாக அறிவித்த போராட்டம் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை வேண்டும் என்பதாகும்.
தந்தை பெரியார் அதற்கான போராட்டத் திட்டத்தை அறிவித்த நிலையில், முதல் அமைச்சர் கலைஞர் அவர்கள் போராட்டத்துக்கு இடம் அளிக்காமல், அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைக்கான சட்டத்தை நிறைவேற்றினார்.

அதனை எதிர்த்து பார்ப்பனர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். அதனால் கலைஞர் காலத்தில் நிறைவேற்றப்பட்ட இந்தச் சட்டம் செயல்படுத்தப்பட முடியாத நிலைக்கு ஆளாகிவிட்டது.

ஆனாலும் திராவிடர் கழகம் தொடர்ந்து போராட்டங் களை நடத்தி வந்தது.
தந்தை பெரியார் அவர்களின் நூற்றாண்டையொட்டி எம்.ஜி.ஆர். அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது தந்தை பெரியார் அவர்களின் இறுதி ஆணையை நிறைவேற்றும் வகையில் நீதிபதி எஸ். மகராஜன் தலைமையில் ஆணையம் ஒன்றினை அமைத்தார்.

அந்த ஆணையம் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் ஆக ஆகமத்தில் தடையில்லை என்று கூறியது.

செல்வி ஜெயலலிதா அவர்கள் முதல் அமைச்சராக இருந்தபோதும் இந்தத் திட்டத்தை ஆதரித்தார்; 69 சதவீத அடிப்படையில் அனைத்து பிரிவினரையும் அர்ச்சகர் ஆக்கும் திட்டத்தை செயல்படுத்துவோம் என்றார் திருச்சிக்குப் பக்கத்தில் கம்பரசம் பேட்டையில் பயிற்சிக் கான இடமும் தேர்வு செய்யப்பட்டதாக அறிவித்தார்.

2006இல் கலைஞர் அவர்கள் ஆட்சிக்கு வந்த நிலையில் முதல் கையொப்பத்தை இதற்காகத்தான் போட்டார்.

மீண்டும் ஒரு முறை தமிழ்நாடு சட்டப் பேரவையில் சட்டம் இயற்றப்பட்டது; மீண்டும் பார்ப்பனர்கள் உச்சநீதிமன்றம் சென்று இடைக் காலத் தடை உத்தரவைப் பெற்றுள்ளனர்.

இதன் காரணமாக கலைஞர் காலத்தில் பயிற்சி அளிக்கப்பட்ட 206 பேர்களும் அர்ச்சகர் பணியில் சேர முடியாமல் தடுக்கப்பட்டுள்ளனர்.

இது ஏதோ அர்ச்சகர் பணிக்கான கோரிக்கை அல்ல; ஜாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு சம்பந்தப்பட்டதாகும்.

தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட சட்டம் என்பதற்காக அ.இ.அ.தி.மு.க. ஆட்சி அலட்சியமாக நடக்கக் கூடாது. ஏற்கெனவே எம்.ஜி.ஆர். அவர்களும், ஜெயலலிதா அவர்களும் ஏற்றுக் கொண்ட ஒன்றாகும்.

உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கில், நீதிமன்றத்திற்கு வெளியே சுமுகமாகத் தீர்த்துக் கொள் கிறோம் என்று ஆட்சி சார்பில் இப்பொழுது கூறப் பட்டுள்ளது.

சுமூகமாக என்றால் அதன் பொருள் என்ன? விளக்கப்பட வேண்டும் என்று திராவிடர் கழகம் கேட்ட தற்கு இதுவரை அரசு தரப்பிலிருந்து எந்தவிதமான பதிலும் இல்லை. கிராமக் கோயில் பூசாரிகளாக, பயிற்சி பெற்றவர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று அரசு தரப்பில் சொல்லப் போகிறார்களோ என்ற அய்யப்பாடும் எங்களுக்கு எழுகிறது.

உண்மையைச் சொல்லப் போனால், இப்பொழுது பெரிய பெரிய கோயில்களில் அர்ச்சகர்களாக இருக்கும் பார்ப்பனர்களுக்கு முறையாக ஆகமங்கள் தெரியாது என்று ஏற்கெனவே வெளிவந்த ஆய்வு அறிக்கைகள் கூறுகின்றன.

இந்த 206 பேர்களோ முழுமையாகப் பயிற்சி பெற்றவர்கள்; அப்படி இருக்கும்போது ஜாதி அடிப்படையில் இவர்கள் சூத்திரர்கள் என்று கூறி வாய்ப்பு மறுக்கப்படுமேயானால் அதனைத் தடுத்து நிறுத்த கழகம் தீவிரமாகப் போராடும்; ஆகஸ்டு முதல் தேதி சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்தவிருக்கிறோம்.

கிளர்ச்சிக்காக நடத்தப்படும் போராட்டமல்ல இது. அதிகாரபூர்வமாக ஜாதி - தீண்டாமையை ஒழிப்பதற்காக நடத்தப்படும் போராட்டமாகும்.

2006இல் கலைஞர் அவர்கள் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த நிலையில் நீதியரசர் ஏ.கே. ராஜன் அவர்களின் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அதில் தவத்திரு குன்றக்குடி அடிகளார் போன்றவர்கள், சிவாச்சாரியார்கள் எல்லாம் இடம் பெற்றிருந்தனர். எப்படி செயல்படுத்துவது என்றெல்லாம் அவர்களின் அறிக்கையில் விரிவாக எடுத்துக் கூறப்பட்டுள்ளது.

எஸ். மகாராஜன், கிருஷ்ணசாமி ரெட்டியார், ஏ.கே. ராஜன் என்று நீதிபதிகள் தலைமையில் அமைக்கப்பட்ட குழுக்கள் எல்லாம் ஏற்றுக் கொண்ட நிலையில் இந்தச் சட்டம் செயல்பாட்டுக்கு வராதது ஏன்?

இது வெறும் பக்திப் பிரச்சினையல்ல; மனித உரிமைப் பிரச்சினையாகும். அர்ச்சகர் பயிற்சி பள்ளிகள் தொடர்ந்து இயங்க வேண்டும்; அதனை மூடி விடக் கூடாது.

ஜாதியின் பெயரால் அரசியலா?

இன்றைக்குச் சிலர் ஜாதியை மய்யப்படுத்தி அரசியல் நடத்தப் பார்க்கிறார்கள்; அரசியலில் கொள்கை ரீதியாகச் செயல்பட முடியாதவர்கள் ஜாதி கை கொடுக்காதா என்று முயற்சி செய்து பார்க்கிறார்கள். தமிழ்நாட்டில் நிச்சயம் ஜாதி கை கொடுக்காது - கொடுக்கப் போவதும் இல்லை.

ஜாதி என்பது அடிப்படையற்றது. அடையாளப் படுத்தப்பட முடியாதது. ஒவ்வொரு ஜாதிக்கும் தனித் தனி ரத்தப் பிரிவா இருக்கிறது?
அய்யர் ரத்தம், அய்யங்கார் ரத்தம், வன்னியர் ரத்தம், பறையன் ரத்தம், பள்ளன் ரத்தம் என்றா இருக்கிறது? நோயாளிகளுக்கு ரத்தம் கொடுப்பது ஜாதியின் அடிப்படையிலா?

வேலை வாய்ப்பு

தென் மாநிலத்தில் ஜாதிக் கலவரம் ஏற்பட்டபோது நீதிபதி எஸ். ரத்தினவேல் பாண்டியன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. வேலை வாய்ப்பு இன்றி இருக்கும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தப்பட வேண்டும் என்று அந்தக் குழுவின் அறிக்கை கூறியது.

அந்த அடிப்படையில் சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் மிக முக்கியமானது. அந்தத் திட்டம் நிறைவேற் றப்பட்டால் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக் கிட்டும்.

ராமனைக் காட்டி அதனை முடக்கியுள்ளனர். மக்கள் மத்தியிலே விழிப்புணர்வுப் பிரச்சாரத்தையும் திராவிடர் கழகம் செய்யும்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு

பெட்ரோல், டீசல் விலை உயர்வு பற்றி செய்தியா ளர்கள் எழுப்பிய வினாவுக்கு விடையளிக்கையில், பெட்ரோல், டீசல் விலையைத் தனியார் நிறுவனங்கள் முடிவு செய்யும்  என்ற கொள்கையை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்.
அரசுக்குத்தான் மக்களைப் பற்றிய கவலை இருக்க முடியும். முதலாளிகள் லாபம் ஈட்டத்தான் பார்ப்பார்கள். எனவே பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் உரிமையை தனியாரிடமிருந்து மத்திய அரசு மீண்டும் தன் வசம் கொண்டு வர வேண்டும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.
                -------------------------"விடுதலை” 2-6-2013

வாரியாருக்கு வாயடைப்பு! -ராமர் பாலம் பற்றி கலைஞர்

ராமர் பாலம் பற்றி கலைஞர்
கேள்வி: ராமர் பாலத்தை இடிக்காமல் இந்தத் திட்டத்தை நிறைவேற்ற அய்ந்து மாற்றுத் திட்டங்கள் மத்திய அரசுக்கு தரப்-பட்டுள்ளதாகவும், ராமர் பாலத்தை இடிக்காமல் வேறு பாதையைப் பரிசீலிக்-கலாம் என்றும் ஜெய-லலிதா சொல்கிறாரே?

கலைஞர்: இரண்டு முறை முதலமைச்சராக இருந்தவர் இப்படி அறியாமையாக இருக்கிறாரே! இவர் கூறுகிற அய்ந்து பாதைகளும் ஏற்கத்தக்கதல்ல என்று விஞ்ஞான ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், சுற்றுப்புறச் சூழல் ரீதியாகவும் ஆய்வு செய்யப்பட்டு முடிவு செய்யப்பட்டு விட்டது. இப்போது போய் அந்தத் திட்டங்களைப் பரிசீலிக்கலாம் என்கிறார் ஜெயலலிதா.

அதுமாத்திரமல்ல; திட்டம் தொடங்கப்பட்டு ஓராண்டிற்குப் பிறகு, திட்டத்தை மாற்றலாம் என்றால் எவ்வளவு நிதி விரயமாகும், மீண்டும் எவ்வளவு காலம் தாமதமாகும் என்பதைப் பற்றிய சிந்தனையே இல்லாமல் கூறுகிறார்.
அதிமுக தேர்தல் அறிக்கையில், ஜெயலலிதா நிறைவேற்ற வேண்டுமென்று கேட்டிருப்பது _ இப்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் 6ஆவது பாதையைத்தானே? அப்போது அவர்கள் கேட்டுக் கொண்ட பாதையில்தானே இப்போது திட்டம் செயல்பட்டு வருகிறது. இந்தப் பாதையில் ராமர் பாலம் உள்ளது என்றால் _ அதிமுக தேர்தல் அறிக்கையில் அந்தப் பாதை வழியாக சேது திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென்று கேட்டது ஏன்?
-------------------------------------(முரசொலி, 2.10.2007)
சேகர் குப்தா: வாஜ்பாய் ஒப்புதல் அளித்தார் என்று சொல்கிறீர்கள். இப்போது அது மதப் பிரச்சினையாக ஆகியிருக்கிறது. ஏனென்றால் ஏராளமானவர், இந்தப் பாலத்தை ராமர் கட்டினார் என்று நம்புகிறார்கள். அந்தப் பாலத்தை உடைத்து பாதை அமைக்கப்படும் என்று நினைக்கிறார்கள்.

கலைஞர்: அது தேவையே இல்லை. அதை உடைக்க வேண்டிய அவசியம் கிடையாது. உடைப்பது ராமர் கட்டிய பாலமும் அல்ல. நான் இன்னும் சொல்கிறேன்; அப்படியே இருந்தாலும் என்ன, அதனை அகற்றக் கூடாதா? நாட்டு மக்களின் நலனுக்காக அதை அகற்றிவிட்டு புதுப்பாலம் கட்டக் கூடாதா?
(முரசொலி, 29.10.2007)

வாரியாருக்கு வாயடைப்பு!
நான் திருவாரூரில் படித்துக்கொண்டிருக்கும் போது எங்கள் ஊருக்கு காலட்சேபம் செய்ய திருமுருக கிருபானந்த வாரியார் அடிக்கடி வருவார். அவரைக் கலாட்டா செய்ய வேண்டு மென்பதற்காகவே, பள்ளிக் கூடத்திற்கு டிமிக்கி கொடுத்துவிட்டு நண்பர்களுடன் செல்வேன்.

காலட்சேபத்தில் கதை கூறும்போது திருவாரியார் அவர்கள், உயிருள்ள ஒன்றையும்_ மிருகங்களையோ, பறவைகளையோ கொன்று மனிதன் சாப்பிடுவதற்காக கடவுள் படைக்க வில்லை என்றார். நான் எழுந்து, சிங்கத்திற்கு கடவுள் என்ன உணவைப் படைத்தார் என அவரிடம் கேட்டேன்.
வாரியார் என்னை உட்காரும்படி அடக்கிவிட்டு தாவரங்களுக்கு உயிர் இருக்கிறதே, அதைச் சாப்பிடலாமா? என்று மாமிசம் உண்போர் கேட்பார்கள். காய்கறிகளை பறித்தபின் அவைகளின் வளர்ச்சி தடைப்படுவதில்லை. ஆனால், மனிதன் காய்கறிகளைத் தாராளமாக உண்ணலாம். இது யாருக்கும் தெரியாது என்றார்.

உடனே நான் எழுந்து, கீரைத்தண்டை வேரோடு பறித்து உண்கிறோம்; அது எப்படி? என்று கேட்டேன். மறுபடியும் என்னை அடக்கி உட்கார வைத்தார் வாரியார்.
அன்று நான் எழுப்பிய கேள்விக்கு இன்றுவரை பதில் கிடைக்கவில்லை. அதனால் நானும் என் கொள்கையை மாற்றிக்கொள்ளவில்லை.
-கலைஞர்

சட்டமன்றத்தில் சுயமரியாதை
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின்மீது பேசிய ஓர் எதிர்க்கட்சித் தலைவர் அமைச்சரவைக்குள் சுயமரியாதை இருந்தால்..... என்று குறிப்பிட்டபோது முதலமைச்சர் கலைஞர் குறுக்கிட்டார்.
சுயமரியாதை எங்கள் சொத்து, நாங்கள் தந்தை பெரியார் அவர்களின் பிள்ளைகள். முழுக்க முழுக்க சுயமரியாதை இயக்கத்திலேயே வளர்ந்தவர்கள்தான் என்று குறிப்பிட்டார். (8.8.1973)

இது கவிதையல்ல
தருமனும் பீமனும் மற்றும் மூவரும் போதாமல்
கர்ணனையும் காதலித்தாள் பாஞ்சாலி!
அடடா, இலக்குமியும், பார்வதியும்
இசைச்செல்வி கலைமகளும்
கடலை தனை வறுக்க வில்லை
கற்பிழந்த காரணத்தால்
கைச்சரக்கல்ல கதையுண்டு
இத்தனைப் புராணத்தினையும் இந்நாட்டுப் பண்டிதர்கள்
முத்தமிழில் விரித்துத் தந்தார்,
மலை வந்து எதிர்த்தபோதும்
கற்புக் குலையோமென வீரமொழி பேசும் பெண்டிர்
மேற்சொன்ன பெண்களெல்லாம் தெய்வம் என்றால்
ஏற்பாரோ பானத்தார் உங்கள் பேச்சை?
_ கலைஞர்

1.6.13

ஊருக்கு இளைத்தவர் கலைஞர் தானா?


கேள்வி: பெரியாரின் பகுத்தறிவுப் பிரச்சாரங்களுக்குப் பிறகும் மூட நம்பிக்கைகள் நிலவுவது வேதனை அளிக்கிறது என்கிறாரே கலைஞர்?

பதில்: காமராஜர் காலத்துக்குப் பிறகும் ஊழல் இருப்பது வேதனை அளிப்பதாக அவர் கூறியிருந்தால் உள்ளபடியே இன்னும் சந்தோஷமாக இருக்கும்.
                            ---------------- ஆனந்தவிகடன் 8.5.2013 பக்கம் 24

பச்சைத் தமிழர் காமராசரே சொல்லி இருக்கிறார். ஊழலை யாரும் ஒழிக்க முடியாது _- ஊழல் மனிதனை ஒழித்து விடும் என்று சொல்லியிருக்கிறார்.
ஊழல் குற்றச்சாற்று காமராசர் ஆட்சிக் காலத்திலேயே கூட வந்ததுண்டு. அதுபற்றி காமராசரே கூறி இருக்கிறார்.

லஞ்சம் பெருகி விட்டது -_ ஊழல் மலிந்து விட்டது என்று கூச்சல் போடு கிறார்கள் இந்தக் கூச்சலில் மக்களி டையே உணர்ச்சியை மாற்றிட முனை கிறார்கள்.

லஞ்சம் கொடுப்பவர்களும், ஊழலுக்குக் காரணமாக இருப்பவர் களும் யார்? இந்தப் பரம்பரை ஆதிக் கக்காரர்கள்தான் குழந்தையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டி விடுகிறார்கள் சமுதாயத்தில் ஊழலை வளர்ப்பவர்கள் இந்தப் பரம்பரை ஆதிக்கக்காரர்கள்தான். இவர்கள் பரம்பரையாக வசதியோடு வாழ்ந் தார்கள். அந்த வசதியைக் கொண்டு படைத்தவர்கள் அந்தப் படிப்பையும் தங்களுக்கே ஏகபோகமாக வைத்துக் கொள்ள வேண்டுமென்று கருது கிறார்கள். காரணம், படித்தவன்தான் டாக்டராக முடியும், என்ஜினியராக முடியும்.

இப்படி எல்லாம் பகுதி களையும் அடைத்துக் கொள்வதன் மூலம் ஊழலை வளர்க்க முடியும். லஞ்சத்தை ஊக்குவிக்க முடியும். இவைகளையெல்லாம் இவர்களே நடத்தி விட்டு சுலபமாக அரசாங்கத் தின்மீது பழியைப் போட்டு விட்டு, மக்களுடைய உணர்ச்சிகளைத் திசை திருப்பிட முடியும் என்று இந்த ஆதிக் கக்காரர்களின் கூட்டம் நம்புகிறது! (நூல்: தகுதி - திறமை மோசடி!)
-இவ்வாறு கூறியிருப்பவர் வேறு யாருமல்லர்; பச்சைத் தமிழர் காமராசர் தான்.
அந்தக் காமராசரை துணைக் கழைத்து, கலைஞரோடு மோத விடுவது ஆனந்த விகடனின் பூணூல் புத்தி. கலைஞரைக் கொச்சைப்படுத்த வேண்டுமானால் ஆனந்த விகடன் களுக்கு ஒரு காமராசர் தேவைப் படுகிறார்.

இந்தக் கூட்டம் காமராசரை எப்படி எல்லாம் விமர்சித்தது -_ கொச்சைத்தன மான சேறுகளை அள்ளி வீசியது?.

பெரிய பதவி சின்ன புத்தி என்று காமராசரை இந்தக் கூட்டம் கார்ட்டூன் போடவில்லையா?

சென்னை - கடற்கரைக் கூட்டத்தில் கறுப்புக் காக்கையைக் கல்லால் அடிக்க வேண்டும் என்று அவர்களின் ராஜகுலத்திலகம் ராஜாஜி காமராஜர் மீது ஜாடையாக வன்முறையை ஏவினாரே - அந்தத் தருணத்தில் இந்த விகடன்கள் ஆச்சாரியாரைக் கண்டித்து எழுதியதுண்டா?

திராவிடர் இயக்கம் வந்து தான் இலஞ்சத்தை வளர்த்தது என்பது போன்ற ஒரு மாயையே உருவாக் குவதுதான் அவாளின். அவாள் ஊடகங்களின் நோக்கமாகும்.

1947இல் ஆச்சாரியார் ராஜாஜி மத்திய கைத்தறித்துறை அமைச்சராக இருந்தபோது 6 கோடி ரூபாய் அரசுக்கு நட்டம் ஏற்பட்டதற்குக் காரணம் ஆச்சாரியார் அங்கம் வகித்த துறையினர் ஊழல் என்று அம்பல மாகவில்லையா? அந்தக் கால கட்டத்தில் ஆறு கோடி ரூபாய் என்பது பெரிய தொகை தானே!

ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி அப்பொழுது மத்திய அரசால் தற்காலிக நீக்கம் செய்யப்பட்ட  எஸ்.ஏ. வெங்கட்ராமன் அய்.சி.எஸ். பார்ப்பனரை ரெவ்னியூ போர்டுக்கு முதல் மெம்பராக ஆக்கினாரே - ஆச்சாரியார் இது ஊழலுக்கு துணை போனதோடு அல்லாமல் ஊழலுக்கு மகுடம் சூட்டிய ஆபாச மாயிற்றே!
நாணயக் கேட்டுக்கும் ஊழலுக்கும் சொந்தக்காரர் என்று டி.எஸ்.எஸ். ராஜனை காங்கிரஸ் கட்சி, கட்சியி லிருந்து நீக்கி வைத்த நிலையில், அதனைப் பற்றியெல்லாம் சிறிது கவலைப்படாமல் தமது அமைச் சரவையில் சேர்த்துக் கொண்டு சுகாதார இலாகாவையே தூக்கிக் கொடுத்தாரே _- இது ஊழலை விட மோசமான ஒழுக்கக் கேடுதானே?

ஆச்சாரியார் எத்தகைய பேராசைக்காரர்! கவர்னர் ஜெனரலாக இருந்து ஓய்வு பெற்ற ராஜாஜி, தான் நெடுங்காலம் வாழப் போவதாகவும், அக்காலம் முழுவதும் தனக்கு வரவேண்டிய பணி ஓய்வுத் தொகைகளைக் கணக்கிட்டால் கிண்டி ராஜபவனத்தின் மதிப்பை விடக் கூடுதலாக வரும் என்றும், எனவே  அரசு இந்த ராஜ்பவன் நிலத்தைக் தனக்குக் கொடுத்து விட வேண்டும் என்று கேட்டுக் கொண்டதை அரசு நிராகரித்து விட்டது.

சொல்லப் போனால் பேராசை என்பதும் மகா ஊழல் புத்திதான்!

திராவிட இயக்கத்தை _ குறிப்பாக திமுகவைக் கொச்சைப்படுத்த வேண்டும் என்பதுதான் அவாளின் நோக்கம். லஞ்சத்தையே தி.மு.க.தான் கண்டு பிடித்தது போல சாதிப்பார்கள் உண்மையிலே மலைமுழுங்கி மகாதேவன்கள் இந்தப்  பார்ப்பனர்கள்தான்! இதோ ஒரு எடுத்துக்காட்டு.

சத்திய மூர்த்தி லஞ்சம் வாங்கு கிறாராமே! என்று போகிற போக்கில் சிலர் சொல்லி விட்டுப் போய் விடு வார்கள். இதை அவரிடமே நேரில் ஒரு தரம் சொன்னேன். அவர் கொஞ் சம்கூட என்மீது கோபப்படவில்லை. நிதானமாக பதிலளித்தார்.

நாள்பூராவும் வேலை செய்ய வேண்டும். எங்காவது பஞ்சாயத்துத் தேர்தலென்றால் அதற்கு மேளம் வாசிப்பதற்கு சத்தியமூர்த்தி வர வேண்டும். நான் பணக்காரனில்லை. நான் எப்படி சாப்பிடுவது? இந்த நாட்டில் அரசியல்வாதிகளுக்குக் கார்னிஜி நிதி யா வைத்திருக்கிறர்கள்? தேர்தல் தம்பட்டம் அடித்து விட்டு, நானும் என் குடும்பத்தினரும் வாயு பக்ஷணமா செய்ய முடியுமா?

லஞ்சம் யாரிடம் வாங்குகிறேன்? வெள்ளைக் காரனிடம் பணம் வாங்கிக் கொண்டு, அல்லது பட்டம் பதவி வாங்கிக் கொண்டு என் தேசத்தைக் காட்டிக் கொடுத்து விட்டேனா? யாராவது ஒரு பணக்காரனுக்கு அசெம்பிளியில் ஒரு கேள்வி கேட்க வேண்டியிருக்கும். அவரிடம் பணம் இருக்கிறது. என்னிடம் கேள்வி கேட்கும் திறமை இருக்கிறது. எப்பொழுதாவது இதைச் செய்தால் இது லஞ்சமாகுமா? என்று சத்தியமூர்த்தி பதில் சொன்னார். (பாரததேவி 8.12.1943) 

ஆனந்த விகடன்களுக்கு இதெல்லாம் தெரியாது - காரணம் அவர் சத்தியமூர்த்தி அய்யர் ஆயிற்றே!

ஊழல் இலஞ்சம் என்று ஊளை இடுகிறார்களே. அந்த ஊழல் - இலஞ்சம் உற்பத்தியாகும் இடம் கோயிலும் பக்தியும் தானே? மறுக்க முடியுமா?
காமராசரை முன்னிறுத்தியதால் அவரையே நாமும் முன்னிறுத்துவோம்!
தஞ்சாவூர் மாவட்டத்தில் காமராசர் சுற்றுப் பயணம் செய்தபோது சீர்காழி எத்திராஜ் உங்கள் வழிபாட்டுக் கொள்கை என்ன? என்று கேட்டார்.
அதற்கு கடவுள் இருக்கார். இல்லை என்பதில் எனக்குக் கவலை இல்லை. பக்தனா இருக்கிறதைவிட, யோக்யனா இருக்கணும் ஊருக்கு நூறு சாமி, வேளைக்கு நூறு பூஜைன்னா மனுஷன் என்றைக்கு உருப்படுகிறது?
நான் தீபாவளியைக் கொண்டாடினது மில்லே எண்ணெய்த் தேய்ச்சு குளிச்சதுமில்லே, புதுத்துணி கட்டினதுமில்லே என்றார் காமராஜர்

                  ---------------(நூல்: காமராஜர் நினைவுகள்)

கடவுள் பக்தி இருப்பதைவிட யோக்கியமாக இருப்பதுதான் முக்கியம் என்பதோடு காமராசர் நிறுத்திக் கொள்ளவில்லை; ஊருக்கு நூறு சாமி (வளைக்கு நூறு பூஜைன்னா உருப் படுமா நாடு என்ற அர்த்தமிக்க வினாவையும் எழுப்பியுள்ளார்.

ஊருக்கு நூறு கோயிலும் வேளைக்கு நூறு பூஜையும் நடத் துவதன் நோக்கமும் என்ன?

காமராசர் சொல்லுவதுபோல நூறு பூஜைக்கு வேலை தான் என்ன? கடவுளுக்குக் காணிக்கை கொடுப் பது அதாவது இலஞ்சம் கொடுப்பது - அதன் மூலம் கடவுளிடமிருந்து பலனை - சாதகங்களை எதிர்பார்ப் பதுதானே?
ஒவ்வொரு கோயிலின் வாசலிலும் பட்டியல் தொங்குகிறதே தெரியுமா? (பெட்டிச் செய்தி தனியே)
 *******************************************************************************
ஆச்சாரியாரின் ஊழல் தெரியாதா?

டில்லி அசெம்பிளிக்குப் போய்வருவது தமது தேக நிலைமைக்கு சிரமமாய் இருக்கிறதென்று ஸ்ரீமுத்துரங்க முதலியார் தமது ஸ்தானத்தை ராஜினாமா செய்தார் அந்த ஸ்தானத்திற்கு ஒரு பெண் காங்கிரஸ்காரரை போடும்படி காமராஜிடம் ராஜாஜி சொன்னார் அப்படிப் போடுவதில் காமாராஜூக்கும் ஆட்சேபணை இல்லை; ஆனால் ராஜாஜி அதோடு நிற்கவில்லை; மற்றொரு வரிடம் பேசி அவரை விண்ணப்பம் அனுப்பும்படிச் செய்தார். அவருடைய பெயரைச் சொல்லவேண்டாம் அவர் பெயரை கே.ரெட்டியார் என்று வைத்துக்கொள்வோம்.

செங்கற்பட்டில் ஒரு காங்கிரஸ்காரரை அழைத்து அபேட்ச கராக அவர் நிற்பதைப் பற்றிக் காமராஜ் பேசினார். கே.ரெட்டி யாரிடமிருந்து தமக்கு வந்த கடிதத்தை அவர் காமராஜிடம் காட்டினார் தம்மை அபேட்சகராக நிற்கும்படி ராஜாஜி சொல்லியிருப்பதாகவும், தமக்குத் தேர்தலில் உதவி செய்ய வேண்டுமென்றும் கே.ரெட்டியார் அக்கடிதத்தில் எழுதியிருந்தார்.

இதைப்பார்த்த பின்புதான் மேலே சொல்லிய பெண் அபேட்சகரை போடும்படி ராஜாஜி முதலில் சொல்லியதற்குக் காரணம் ஒரு சூழ்ச்சியோ என்று காமராஜ் சந்தேகப்பட்டார். காமராஜ் சிபாரிசு செய்து அபேட்சகரை மேலிடத்தார் அங்கீகரிக்கவிடாமல் செய்து விட்டால், காமராஜரின் மதிப்பு குறையுமல்லவா? அப்புறம் தான் ராஜாஜி சொல்லியபடி செய்யாமல் கடலூர் சீதாராமரெட்டியாரை சிபாரிசு செய்வதென்று காமாராஜ் முடிவு செய்தார்.
..ராஜாஜி சென்னைக்கு வந்து கே.ரெட்டியாரை ஒப்புக்கொள்ளும்படி காமராஜிடம் வற்புறுத்தினார். காமராஜ் ஒப்புக்கொள்ள மறுத்தார். காரியக்கமிட்டி சார்பாக கே.ரெட்டியாரை அபேட்சகராக தாம் போட்டால் என்ன செய்வீர்கள் என்று கேட்டார்.

காமராஜ் பின்வருமாறு பதில் சொன்னார்.

தமிழ்நாடு கமிட்டி சார்பாக நாங்கள் சீதாராம ரெட்டியாரை நிறுத்தி வைப்போம்; நீங்கள் நிறுத்தி வைக்கும் கே.ரெட்டியார் மீது பொப்பிலிராஜா காலத்திலேயே பொதுப் பணத்தை கையாடிய தற்காக வழக்குத் தொடர எல்லா ஏற்பாடுகளும் செய்து வைத்திருந்தும் உங்கள் (ராஜாஜி) காலத்தில் ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் விட்டுவிட்டதை அம்பலப்படுத்துவோம் வோட்டர்கள் விருப்பப்படி நடக்கட்டும்.

-------------------- நவயுகப் பிரசுராலயத்தின் காமராஜ் என்ற புத்தகத்திலிருந்து.

ஊழலை ஒழிப்பதற்காகவே பிறந்தவர் போல நடிக்கிறார்கள். அவர்களின் கைச்சுத்தம் பற்றிய பழைய குற்றச்சாட்டு இது. இந்தப் புத்தகத்தை எழுதியவர் வேறு யாருமல்ல, காமராஜரின் மிகநெருங்கிய நண்பர் டி.எஸ்.சொக்கலிங்கம் பிள்ளைதான்; ஊழல் பெருச்சாளி ஒன்றைக் காப்பாற்றியவர்களா ஊழல் என்று ஊருக்கு உபதேசம் செய்வது? பார்ப் பனர்களின் ஊழல் புராணத்தில் ஒரே ஒரு செங்கல்லை உருவினால் பெரிய கட்டடமே சரிந்து விடும்! இவர்கள்தான் திராவிட இயக்கத்தால்தான் ஊழல் என்பது போல ஒரு சித்திரத்தைத் தீட்ட முயற்சிக்கிறார்கள்..

திராவிடர் இயக்கம் என்று கூறும்போது அதிமுக ஊழல் பற்றிப் பேச மாட்டார்கள் திமுகவை - கலைஞரைத்தான் குறி வைப்பார்கள் - அவர்கள் நோக்கம் அரசியலில் திமுக தானே ஆரிய எதிர்ப்புக் கொள்கையைக் கொண்டு இருக்கிறது - அதனை வீழ்த்த வேண்டும் என்பதே!

 ************************************************************************************
வியாபார முன்னேற்றம், பிணி நீங்கல், ஆயுள் விருத்தி, ராஜயோகம், நன்மக்கள் பேறு, மரண பயம் நீங்குதல், சகல ஞானமும் கைகூடல், லட்சுமி கடாட்சம் இன்னும் இவை எல்லாம் கிடைக்க ஒவ்வொன்றுக்கும் இன் னின்ன பொருள்களை அபிஷேகத் துக்குக் கொடுக்க வேண்டும் என்பது கடவுளுக்குக் கொடுக்கப்பட்ட இலஞ்சம் என்பதல்லாமல் வேறு என்னவாம்?
பிரார்த்தனை என்பதுதான் என்ன? இதோ தந்தை பெரியார் கூறுகிறாரே - பிரார்த்தனை என்பதற்கு வேறு வார்த்தையில் ஒரு மாற்றுப் பெயர் சொல்ல வேண்டுமானால் பேராசை என்றுதான் சொல்ல வேண்டும். பேராசை என்றால் தகுதிக்குமேல்  விரும்புவது, வேலை செய்யாமல் கூலி பெறுவது என்பதே ஆகும்.

       ---------------(பகுத்தறிவு மலர் இதழ் 9.1935) 

என்கிறாரே தந்தை பெரியார் _ இதில் ஒரு வரியை மறுக்க முடியுமா?

பொது ஒழுக்கத்தை விரும்புபவர் கள், உண்மையான இலஞ்ச லாவண் யத்தை எதிர்ப்பவர்கள் இவற்றை யெல்லாம் கண்டிக்காதது ஏன்?

கண்டிக்காதது மட்டுமல்ல; இந்த ஒழுக்கக் கேட்டின் மூல ஊற்றை மூளையைக் கசக்கிக் காப்பாற்றிக் கொண்டு இருக்கும் கூட்டம் தான் இலஞ்சத்தைப்பற்றி ஏழூர் கேட்கக் கத்துகிறது.

12 வருடம் பஞ்சமா பாதகம் செய்தாலும் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் கும்பகோணம் மகா மகக் குளத்தில் ஒரு முழுக்குப் போட்டு விட்டால், எல்லாப் பாவங்களும் ஒரு நொடிப் பொழுதில் பஞ்சாய்ப் பறந்து விடும் என்றால் நாட்டில் ஒழுக்கம் எப்படி உயிர் வாழும்? ஒழுக்கத்துடன் வாழ வேண்டும் என்ற எண்ணத்தை எப்படி ஏற்படுத்தும்?

அடிப்படையான ஒழுக்கக் கேட்டுக்குக் கோட்டை கட்டிக் காவல் காத்துக் கொண்டு இருப்பவர்கள் பொருளாதார இலஞ்சத்தைப் பற்றி புலிக் குட்டி போல துள்ளி எழுதுகிறார்கள்.

காஞ்சிபுரத்திலே மச்சேந்திரக் கோயிலின் குருக்கள் பார்ப்பான் தேவேந்திரன், கருவறையைக் கருவை உருவாக்கும் அறையாக மாற்றினானே _ அதைவிடவா ஒழுக்கக் கேடு உலகில் உண்டு?

லோகக் குருவே கொலைக் குற்றவாளியாக ராஜ நடைபோட்டுத் திரிகிறாரே _ ஆனந்தவிகடன் அய்யர்கள் கண்டு கொள்ளாதது ஏன்?

ஊருக்கு இளைத்தவர்கள் திராவிட இயக்கத்தவர்கள் தானா? அதிலும் குறிப்பாகக் கலைஞர் தானா? அதிமுக பக்கம் போக மாட்டார்கள்_  காரணம் தெரிந்ததே!

இந்து என்றால் திருடன் என்று சொல்பவர் கலைஞர் தானே? கற்பழிக்காத கடவுள் உண்டா? என்று நாக்கைப் பிடுங்கக் கேட்பவரும் அவர்தானே? அந்த ஆத்திரத்தை வேறு வகையில் காட்டும் சூட்சமத்தை நமது சூத்திர பஞ்சம தமிழர்கள் உணர வேண்டாமா?

----------------- மின்சாரம்அவர்கள் 1-6-2013 “விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை

கடவுள் நம்பிக்கையற்ற காலம் மலரப் போகிறது!

16.9.2005 நாளிட்ட இந்து ஏட்டில் ஒரு கருத்துக் கணிப்பு வெளி வந்தது. எந்த அளவுக்கு கடவுள், மத நம்பிக்கை மக்களிடம் உள்ளது என்பது தொடர்பான கணிப்பு அது.

நீங்கள் எந்த அளவு மதப் பற்றாளர்களாக இருக்கிறீர்கள் என்ற கேள்விக்கு ஓரளவு பற்றுக் கொண்டுள்ளேன் என்று 49 விழுக்காட்டினரும் எனக்கு மதப்பற்று இல்லை என 14 விழுக்காட் டினரும் அதிகப் பற்றுக் கொண்டுள்ளேன் என்று 45 விழுக்காட்டினரும் பதில் அளித்தனர்.
வழிபாட்டிற்கு அவ்வப்போது செல்வீர்களா? என்ற கேள்விக்கு வாரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட முறையில் செல்லுவேன் என 31 விழுக்காட்டினரும், வாரம் ஒரு முறை செல்லுவேன் என்று 38 விழுக் காட்டினரும், மாதத்திற்கு ஒரு முறை செல்லுவேன் என்று 18 விழுக்காட்டினரும் மாதம் ஒரு முறையாவது செல்லுவேன் என்று 9 விழுக்காட்டினரும், இரு வாரத்துக்கு ஒரு முறை செல்லுவேன் என்று 4 விழுக்காட்டினரும் கூறியுள்ளனர்.

இன்றைய நாளில்  இளைஞர்களுக்குக் கடவுள் நம்பிக்கை உள்ளதா என்ற கேள்விக்கு சிலருக்கு உள்ளது என 45 விழுக்காட்டினரும், அதிகமானவர் களுக்கு உள்ளது என்று 34 விழுக்காட்டினரும், சிலருக்கே உள்ளது என்று 21 விழுக்காட்டினரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இதன் மூலம் ஒன்று வெளிப்படை கடவுள், மதப் பக்தி என்பது முன்பு இருந்த நிலையிலிருந்து இறக்கம் காணப்படுகிறது என்பது வெளிப்படை!

கடவுளுக்குச் சக்தி உண்டு; கடவுள் கண்ணைக் குத்தி விடுவார் என்ற பயமெல்லாம் மலையேறிக் காலமாகி விட்டது.

காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி 1976 மே மாதத்தில் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற அகில இந்திய இந்து மாநாட்டில் ஓர் உண்மையை ஒப்புக் கொண்டார்.

மக்களிடையே கஷ்டங்கள் அதிகரித்து வருவதால் கடவுள்மீது அதிகப் பக்தி கொண்டு வருவதற்கான அறிகுறிகள் காணப்படுகின்றன. கோயிலுக்குப் போவதையும், மதச் சடங்குகளில் கலந்து கொள்வதையும் ஒரு ஃபேஷனாகக்  (Fashion) கருதுகின்றனர். பக்தர்கள் பெரும்பாலோரிடம் வர்த்தக மனப்பான்மை காணப்படுகிறது என்று கூறி விட்டாரே!

இதிலிருந்து ஒன்று மட்டும் தெளிவாகி விட்டது கோயிலுக்குச் செல்வதாலேயோ, மதச் சடங்குகளில் கலந்து கொள்வதாலேயே அவர்கள் கடவுள் நம்பிக்கையாளர்கள் மத நம்பிக்கையாளர்கள் என்ற புள்ளி விவரத்தில் சேர்த்துக் சொல்லுவதுகூட சரியானதாக இருக்க முடியாது. கடவுள் சர்வ சக்தி வாய்ந்தவர் என்றும், எங்கும் நிறைந்திருப்பவர் என்றும் ஒரு பக்கத்தில் கூறிக் கொண்டு, அதனை நிறுவனப்படுத்தியது - கோயில் கட்டி, விசேஷங்களைக் கொண்டாடுவது எல்லாம் அவர்கள் கூறும் கடவுள் பற்றிய இலக்கணத்துக்கே முரண்பாடானது தானே!

கோயில் திருவிழாக்கள், தேரோட்டங்கள் எல்லாம் பிரச்சாரம்தானே? 

பிரச்சாரம் செய்துதான் கடவுளை நிலை நிறுத்த முடியும் என்றால், அது எப்படி சர்வசக்தி இலக்கணத்துக்குள் பொருந்தி வரும்?

கோயில்கள் விபச்சார விடுதிகள் என்று காந்தியார் சொல்லும் அளவுக்குத்தானே அதன் நடப்புகள் அமைந்துள்ளன. திருக்கடவூர், திரு நள்ளாறு, இராமேசுவரம் முதலிய கோயில்களுக்குப் பக்தர்களை அழைத்து வர முகவர்களும் உண்டு என்பது எத்தகைய கேலிக் கூத்து!

உண்மை என்னவென்றால் யாரும் கடவுளை நம்பி எந்தப் பிரச்சினையையும் கடவுளிடம் ஒப்படைத்து விடுவதில்லை.

நெப்போலியன் சொன்னதுபோல கடவுளை வேண்டுமானால் நம்பு - அதே நேரத்தில் வெடி மருந்து  ஈரமாகாமல் பார்த்துக் கொள்! என்பதுதான் நடைமுறை உண்மையாகும்.

உடல் நலம் இல்லை என்றால் மருத்துவரிடம் தான் செல்ல வேண்டும்; கற்க வேண்டுமானால் கல்விக் கூடங்களுக்குத் தான் செல்ல வேண்டும்.
இந்த நிலையில் எதை நம்பி மனிதன் கையைக் கட்டிக் கொண்டு நிற்க முடியும்?

திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் கூறுவதுபோல கடவுள் நம்பிக்கை - பக்தி என்பது மனிதனின் மூளையில் மாட்டப்பட்ட விலங்காகும்!

பேராசையும்; பயமும் சேர்ந்து பெற்றெடுத்த கற்பனையிலிருந்து மனிதன் விடுபட்டே தீருவான்  -அதை நோக்கி தான் காலமும் நகர்ந்து கொண்டு இருக்கிறது.
                    --------------------------"விடுதலை” தலையங்கம் 31-5-2013