Search This Blog

3.9.08

இளைஞர் பற்றி தந்தைபெரியார்




இளைஞர் கூட்டுறவும், அவர்களிடம் எனக் குள்ள நம்பிக்கையும் எனது தொண்டிற்கோ கொள்கைக்கோ எப்படிப்பட்ட எதிர்ப்பு ஏற்பட்டாலும், எப்படிப்பட்டவர்கள் எதிர்த்தாலும், யார் பிரிந்து போனாலும், சிறிதும் மன முறிவோ சலிப்போ இல்லாமல் எவ்வித எதிர்ப்புகளும் அடிக்கும் பந்து உயருவது போல் எனது உணர்ச்சிகளையும் ஊக்கத்தையும் தட்டி எழுப்பக் கூடியதாகவே முடிகிறது.

*********************** *********************

இளைஞர்கள் குழந்தைகளுக்குச் சமமானவர்கள். சமீபத்தில் உள்ளதைப் பற்றுகிறவர்கள். பின் விளைவை அனுபவித்து அறியாதவர்கள். கண்ணோட்டம் விழுந்தால்பற்றி விடுபவர்கள். எழுச்சி என்பது எங்கெங்குக் காணப்படுகிறதோ, கூட்டம் குதூகலம் என்பவை எங்கெங்குக் காணப்படுகின்றனவோ அவற்றையெல்லாம் பற்றுவதும், அவை மறைந்தால் கைவிட்டு விடுவதுமான குணமுடையவர்கள்.

******************8 88888888888 ******************

வாலிபர்களுக்கு வெறும் உற்சாகமும், துணிவும், தியாகப் புத்தியும் மாத்திரம் இருந்தால் போதாது. நன்மை தீமை அறியும் குணமும், சாத்தியம் அசாத்தியம் அறியும் குணமும், காலதேச வர்த்தமானத்தைப் பயன்படுத்திக் கொள்ளும் குணமும், ஆய்ந்து ஆய்ந்து பார்க்கும் தன்மையும் ஆகியவைகள் இருந்தால்தான் வாலிபர்கள் பொதுவில் பயன்படக் கூடியவர்கள் ஆவார்கள். இல்லாவிட்டால் அவர்கள் ஒரு குறிப்பிட்ட சுயநலச் சூழ்ச்சிக்கு இரையாகிவிடுவார்கள்.

**************** ****************************8

வாலிபப் பருவம் அபாயகரமான பருவம். சுலபத்தில் நெருப்புப் பற்றிக் கொள்ளக்கூடிய பொருளைப்போல் மிகப் பத்திரமாய்க் காப்பாற்றப்பட வேண்டிய பருவம். அப்பருவத்தைப் பொறுப்பற்ற தற்கால விளம்பரக் காரியங்களுக்கு அடிமைப்படுத்தி விடாமலும், பின்னால் சலிப்பும் துக்கமும் பட வேண்டிய காரியங்களுக்குச் சம்பந்தப்படுத்தி விடாமலும் நன்றாய் ஆய்ந்து ஆய்ந்து பார்த்து அவசியமானதும், நிலையானதும், காரியத்தில் செய்யவும் பயனளிக் கவும் கூடியதுமான காரியத்துக்குப் பயன்படுத்த வேண்டும்.



வாலிபர்களைச் சுயமாகச் சிந்திக்குமாறு பழக்கப்படுத்துவதே யில்லை; பகுத்தறிவை உபயோகிக்கச் சந்தர்ப்பம் அளிக்கப்படுவதே யில்லை; அறிவுக்கும் அனுபவத்துக்கும் சம்பந்தப்படுத்தப் பழக் குவதேயில்லை. இத்தகைய நிலைமை மாறாதவரை வாலிபர்கள் சுயமாகச் சிந்தித்துப் பார்த்து ஆராய்ந்து தாங்களே ஒரு முடிவுக்கு வருவது ஒரு நாளுக்கு ஆகாது.

************** ***********************

வாலிபர்களுக்குப் புதுமை சீக்கரம் தோன்றும்; சீக்கிரம் பிடிக்கும். காரணம் அவர்கள் உள்ளம் எழுதாத வெறும் சிலேட்டு போன்றது. வயதானவர்கள் உள்ளம் பல சங்கதிகள் எழுதப் பெற்றது. புதிய தன்மைகள் பதியப்பட வேண்டுமானால் முன்னால் பதிந்தவைகள் அழிக்கப்பட வேண்டும். அவைகள் சுலபத்தில் அழிக்க முடியாத மாதிரி ஆழப் பதிந்து போயிருக்கும்.

********************* *********************

வாலிபர்கள் ஒரு செல்வாக்கையோ, ஒரு பிரச்சாரத்தையோ, காதலையோ கண்டுவிட்டால் சுலபத்தில் வழுக்கி விழக்கூடும். செல்வாக்கற்ற காரியத்தில் பற்றாய் இருப்பது மிகச் சங்கடமாகத் தோன் றும். பொது மக்கள் ஆதரவு, புகழ், உற்சாகமான காரியங்களில் இருக் கும் அவா, ஒரு தேக்கமான காரியத்தில் உற்சாகம் காட்ட இடம் தராது.

******************* **************************

எதிர்காலம் அறிவும், அனுபவமும், கட்டுப்பாடும் உடைய நம் இளைஞர்கள் கையில்தான் இருக்கிறது. இவர்கள் தன்னலம் விட்டுப் பொது நலப் பணியாற்ற முன்வர வேண்டும். பொது நலப் பணி என்பது விளம்பரத்துக்கோ சுயநல வாழ்க்கைத் துறைக்கோ இடமானதல்ல. துன்பத்திற்கும், சுயநலக்காரர்கள், பாமர மக்கள், விசமிகள் ஆகியவர்களின் பழிப்புக்கும் இடமானது என்பதை மனதில் இருத்தி பொதுநலப் பணியில் ஈடுபட வேண்டும்.

***************** *******************

இது பிரச்சாரக் காலம். எக்காரியமும் பிரச்சாரம் மூலம்தான் நடைபெறுவது சாத்தியமாயிருக்கிறது. எனவே பிரச்சாரம் செய்ய ஏராளமான வாலிபர்கள் முன்வர வேண்டும். பிரச்சாரம் செய்ய முற்படுவோர் விசமப் பிரச்சாரம் செய்ய ஆளாகாமல் ஒழுக்கத்தோடும் நிறைந்த கட்டுப்பாட்டோடும் நடந்து கொள்ள வேண்டும். இன்றேல் பிரச்சாரம் கோரிய பலனை அளிக்காது.

********************* ***************

இளைஞர்களுக்குச் சொல்கிறேன். நீங்கள் தமிழன் என்ற இன உணர்ச்சியோடு பழக வேண்டும். ஒற்றுமையாக இருக்க வேண்டும். ஒழுக்கம் நாணயத்தோடு நடந்து கொள்ள வேண்டும். தமிழ்நாட்டு நடப்பே மாறுதலடைய வேண்டும்.

*************** *******************


-------------நன்றி: "விடுதலை" 3-9-2008

நாங்கள் கண்ட பெரியார்



நாங்கள் கண்ட பெரியார் - உரைவீச்சு - எண்ணதாசன்

சிக்கனம் என்பதற்கு
எதிர்ச்சொல்
ஊதாரித்தனம்.
நூறு ரூபாய் சம்பாதித்து
தொண்ணூறு செலவழித்து
பத்தைச் சேமிப்பது
சிக்கனம்.
நூறையும் செலவழித்து விட்டு
பத்து ரூபாய் கடன் வாங்குவது
ஊதாரித்தனம்.

இன்னும் விளக்கலாம்
வாளி நீரிலிருந்து
குவளையில் மொண்டு
கால் கழுவுவது சிக்கனம்
வாளி நீரை
அப்படியே காலில் கொட்டுவது
ஊதாரித்தனம்.
ஊதாரிகள் ஒரு போதும்
உயர்வதில்லை.

பெரியாரின் சிக்கனம்
சேமிப்புக்கு இலக்கணம்.
துளித்துளியாக
அவர் சேர்த்த செல்வம்
குளத்து நீரானது - அந்தக்
குளத்து நீரை
ஏரியாக்கிய பெருமை
வீரமணியைச் சாரும்.


சிந்தனைப் பெரியாருக்குள்
சிக்கனமும் அடக்கம்.
சிக்கனப் பெரியார்
காலத்தை மட்டும்
தாராளமாகச் செலவழிப்பார் - ஆம்
மாதத்திற்கு
முப்பது - முப்பத்தொன்று நாள்கள்
என்பது
போக்கிரித்தனம் - என்று
வைது விட்டு

மூன்று பத்து நாள்களையும்
தொடர் சுற்றுப் பயண முழக்கத்தில்
செலவிட்டு விட்டு
நேரமில்லை - என
ஏங்குவார்.

பெரியார்
ஒருநாள்
சிதம்பரத்தில்
கூட்டம் முடித்து விட்டுத்
தொடர் வண்டியில்
திண்டுக்கல் வழியாக
மதுரைக்குப் பயணமானார்.

சந்தனத்தேவன் - எனும்
பெரியார் தொண்டர்
அந்தக் காட்சியைச்
சித்திரச் சொற்களால்
இவ்வாறு சித்தரிக்கின்றார்.

சிதமபரத்தில் கூட்டம்
பேசி முடித்த பெரியார்
சென்னை செங்கோட்டை வண்டியில்
வருவதாகச் செய்தி.
எனக்கோ ரயில்வேயில்
பயணச்சீட்டு தரும் வேலை.
திண்டுக்கல் நிலையத்தில்
வண்டி நுழைய
அய்ந்தே நிமிடமுள்ளது.
என்னிடத்தில்
சக ஊழியரை அமர்த்தி விட்டு
அய்யா வரும் வண்டியை
எதிர்பார்த்து ஓடுகிறேன்.

அய்ந்தாறு கருஞ்சட்டைத் தோழர்கள்
கழகக் கொடி தாங்கி
பெரியார் வாழ்க
என முழக்கமிடுகின்றனர்.

வண்டி வந்து நின்றது.
பெருமூச்சு விட்டவாறு
ஒவ்வொரு பெட்டியாக
எட்டிப் பார்த்துக் கொண்டே ஓடுகிறேன்.
மூன்றாம் வகுப்புப்
பெட்டியொன்றில்
நான்கு பேர் உட்காரும் பலகையில் எட்டுப்பேர்
அவர்கள் மத்தியில்
அய்யா அமர்ந்திருப்பது கண்டு
கலங்கினேன்.
நான்கு தோழர்கள்
அவர் பக்கத்தில்
நின்று கொண்டிருந்தனர்.
அவர்களில் ஒருவர்
புலவர் இமயவரம்பன்.
அவர் கையில் ஒரு வாளி.


அய்யாவுக்கு
கிட்னித் தொல்லை.
தன்னையும் மீறி ஒழுகும்
சிறுநீரைப் பிடிக்க
ஒரு வாளி.
அய்யாவின் இடுப்பைச்
சுற்றியிருந்த ரப்பர் குழாய்
வாளியில் தொங்கியது - அதைப்
பிடித்துக் கொண்டு நினறார் புலவர்


சின்னாளப்பட்டித் தோழர்
உரத்த குரலில்
பெரியாரிடம் சொல்கிறார்.
அய்யா
இந்த வண்டியிலேயே
பயணம் செய்து
மதுரையில் இறங்குறீங்க அங்கே
நாளை இரவுதான் கூட்டம்.
அதுவரை
உங்களுக்கு ஓய்வுதான்
நீங்க
பெரிய மனசு வைச்சு
இங்கே இறங்கினால்
மாலையில்
சின்னாளப்பட்டியில்
கழகக் கூட்டத்திற்கு
ஏற்பாடு செய்கிறோம்.
தமுக்கு அடித்தே
கொஞ்ச நேரத்தில்
கூட்டத்தைச் சேர்த்திடுவோம்.

காலையில்
இங்கிருந்தே
மதுரைக்குப் போக
டாக்சி ஏற்பாடு செய்கிறோம்
அதுவரை - அய்யா
உங்களுக்குத்
தங்கும் வசதி, உணவெல்லாம்
ஏற்பாடு செய்கிறோம்.
தாங்கள்
தலையசைத்தால் போதும்...

அந்தத் தோழர்
பேசி முடிக்கும் முன்பே
அய்யா தலையசைத்து விட்டார்.
எல்லோரும்
திண்டுக்கல்லில் இறங்கி விட்டனர்.
திண்டுக்கல்
ரெயில் நிலையம் அருகேதான்
நகராட்சிப் பயணிகள் விடுதியில்தான்
அய்யா தங்குகிறார் என்ற செய்தி
எனக்குத் தேனாய் இனிக்கிறது.
வாரிச் சுருட்டிக் கொண்டு ஓடுகிறேன்.

தனிமையிலும் தனிமை
படுக்கையில் பெரியார் உட்கார்ந்துள்ளார்
துணைக்குப் புலவர்
அய்யாவை நோக்கிப்
பெரிய கும்பிடு போட்டேன்.
அய்யா யாரு ?
ஊர் உலகுக்கெல்லாம்
அய்யாவான அவருக்கு
நான் அய்யாவாம்.


அய்யா - நான்
கழக அனுதாபி
இரயில்வேயில் வேலை.

அப்படியா. நம்மவங்க
இரயில் உத்தியோகத்துக்கு வருவது
அபூர்வம்.
பார்த்துப் பிழையுங்க.
அது .. சரி
நாங்க
மதுரை வரைக்கும்
டிக்கெட் எடுத்திருக்கிறோம் - ஆனால்
திண்டுக்கல்லிலேயே இறங்கிவிட்டோம்
அந்தப்
பயணம் செய்யாத தூரத்துக்கு
காசு கிடைக்குமா ? வழியுண்டா ?

வழியிருக்குங்க அய்யா
பயணம் செய்யாத டிக்கெட்டை
திண்டுக்கல் ஸ்டேசன் மாஸ்டரிடம்
சரண்டர் செய்தால்
இரசீது - தருவார் - அதைத்
திருச்சி ரயில்வே ஆபிசுக்கு
அனுப்பினால்
பணம் வரும்.

வரட்டுமே ! கசக்கவா செய்யும்.

மொத்தம் பத்து ரூபாய் ரீபண்ட்
வரும் - அதுக்கு
நான்கு ரூபா
தபால் செலவு வரும்.

வரட்டுமே ஒரு பைசாவானாலும்
அதுவும காசுதானே.
அதுவும்
கட்சிக்கு வரவேண்டிய காசு
பொதுமக்கள் காசு.
புலவரே
அய்யாவோடு போய் ரசீது வாங்கி
இவரை வைத்தே
திருச்சிக்கு தபால் எழுதிடு.
போ ! போ !!

அய்யா தனியா இருப்பீங்களே
என்றார் புலவர்.

இம்மாம்பெரிய
கட்டிடம் இருக்கு
என்ன தனிமை ?
கிளம்பு, கிளம்பு

இப்படியெல்லாம் அய்யா
பைசா... பைசாவாகச்
சேர்த்ததுதான் - இன்று
மருத்துவமனையாக
பொறியியல் கல்லூரிகளாக
அரங்குகளாகத் திகழ்கின்றன - என்று
நினைத்துப் பார்க்கும்
எவருக்கும்
கண்கள் மட்டுமா கலங்கும் ?
அய்யோ... இதயமே...!


----------------------- நன்றி : "அறிவுக்கொடி" இதழ் - சூலை 2006

2.9.08

மதவெறி மாய்த்திட மனித நேயம் காத்திட!




(கலைஞர் கேள்வி - பதில்கள்)


கேள்வி: ஒரிசாவில் மதவெறியாட்டம் அரங்கேறியிருக்கிறதே?

கலைஞர்: ஆம் அரங்கேற்றியவர்கள் யார் என்று அனைத்து இந்தியாவிற்கும் தெரியும். பழிக்குப் பழி வாங்குதல் என்ற திரை மறைவில் அராஜக வெறியாட்டம் நடத்தி மனித நேயமற்ற வெறியாளர்கள் நடத்திய வன்முறைத் தாண்டவங்களுக்கு இன்னமும் சில மதவாதிகள் - மதவெறி வளர்க்க இயக்கம் நடத்துவோர் வக்காலத்து வாங்குவதுதான் நினைக்கவே முடியாத வேதனையாக இருக்கிறது. அதற்குத்தான் மதச் சார்பற்ற சமத்துவ நிலையும், மத நல்லிணக்கம் என்ற சமரச நிலையும் உருவாக வேண்டுமென்று பகுத்தறிவு இயக்கத்தார் பணியாற்றுகிறார்கள்.

------------------நன்றி: "விடுதலை" 2-8-2008

ஜாதி வெறி காரணமாக ஏகலைவனுக்கு கல்வி மறுக்கப்பட்டது




ஜாதி வெறி காரணமாக அன்றைக்கு ஏகலைவனுக்கு கல்வி மறுக்கப்பட்டது

இன்று பல்லாயிரக்கணக்கான மாணவர்கள்
கல்வி கற்று வருவதைக் கண்டு ஆனந்தம் கொள்கிறேன்

சென்னை - அண்ணா பல்கலைக்கழகத்தில் முதலமைச்சர் கலைஞரின் சமூகநீதிக் கொள்கைப் பேருரை


சென்னை, செப்.2- மதவெறியின் காரணமாக, ஜாதி வெறியின் காரண மாக அன்றைக்கு ஏகலைவன் என்ற வேடச் சிறுவனுக்கு வித்தை மறுக்கப்பட்டது. கல்வி மறுக்கப்பட்டது. ஆனால், இன்றைக்கு பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் கல்வி பெற்று வருவதைக் காணும்பொழுது ஆனந்தம் கொள்கிறேன் என்று தமிழக முதலமைச்சர் கலைஞர் அவர்கள் கூறி விளக்கிப் பேசினார்.

தமிழக உயர்கல்வித் துறையின் சார்பில் - ஆறு புதிய பொறி யியல் கல்லூரிகள் தொடங்குதல், தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழக வளாக அடிக்கல் நாட்டுதல், தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றக் கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டுதல், உயர் கல்விமன்ற நூல்கள் வெளியிடுதல், சிறந்த கல்வியாளர்களுக்கும் - கல்வி நிறுவனங்களுக்கும் அரசு விருதுகள் வழங்குதல் ஆகிய அய்ம்பெரும் நிகழ்வுகள் இணைந்த மாபெரும் விழா நேற்று (1.9.2008) மாலை சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் நடைபெற்றது.

இவ்விழாவில், முத்தமிழறிஞர் முதல்வர் கலைஞர் அவர்கள், புதிய கல்லூரிகளைத் தொடங்கி வைத்து - புதிய கட்டடங் களுக்கு அடிக்கல் நாட்டி - கல்வியாளர்களுக்கும், கல்வி நிறு வனங்களுக்கும் விருதுகள் வழங்கி, விழாப் பேருரையாற்றினார்.

முதலமைச்சர் கலைஞர் அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:-

நம்முடைய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர் கள் பசு மாட்டை, தென்னை மரத்திலே கட்டி விட்டுப் போயிருக் கிறார். (சிரிப்பு) அந்த மாட்டிலே பால் கறப்பதா? அல்லது அவிழ்த்துவிடுவதா? என்ற இந்தக் கேள்விகளுக்கு பதில் காணு கின்ற முறையில் உங்கள் முன்னால் நான் அமர்ந்திருக்கின்றேன்.

என் குரல்வளம் ஒத்துழைக்காவிட்டாலும்...

அவரே தன்னுடைய உரையில் குறிப்பிட்டதைப்போல் கடந்த இரண்டு நாட்களாக உடல்நிலை பெரிதும், பாதிக்கப்பட்டு இந்த நிகழ்ச்சிக்கு வர இயலுமா என்பது கேள்விக்குறியாகி, மருத்துவப் பெருமக்களும் இரண்டு நாள் ஓய்வெடுத்துக் கொள்வது நல்லது என்று அழுத்தந்திருத்தமாக அறிவுறுத்திய பிறகும் என் கண்ணெதிரே அண்ணா பல்கலைக்கழகமும், நடைபெற வேண்டிய நிகழ்ச்சியும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிற மாணவத் தம்பிமார்களும் தென்பட்ட காரணத்தால், உங்களை யெல்லாம் மதிக்கவேண்டும், உங்களிடத்திலே காட்டுகின்ற அன்பு போலியானதல்ல, அது உண்மையானது என்பதை நிலைநாட்டுகின்ற வகையில் இந்த ஆறு விழாக்களை இணைத்து நடத்துகின்ற பெருவிழாவில் நான் கலந்து கொள்கிற வாய்ப் பினைப் பெற்றிருக்கிறேன்.

இப்போதும் என்னுடைய குரல்வளம் ஒத்துழைப்பதாக இல்லை. இருந்தாலும் முடிந்த வரையில் என்னுடைய பேச்சில் சில கருத்துகளை உங்கள் முன்னால் வைக்கலாமென்று நான் கருதுகின்றேன்.

என்னை துரோணர், பீஷ்மர் என வர்ணித்து..,

இங்கே உரையாற்றியவர்கள் என்னை ``துரோணர் என்றும், ``பீஷ்மர் என்றும் வர்ணித்து அவர்களுடைய கோபத்தைக் காட்டிக் கொண்டிருக்கின்றார்கள். ஏனென்றால் நான் பீஷ்மரை மதிப்பவன்தான். ஆனால் அவருடைய செயல், அவர் யாருக்காக தன்னை ஒப்படைத்துக் கொண்டிருந்தாரோ அவர்களுக்கு இறுதிக் காலத்திலே பயன்படவில்லை - மகாபாரதத்திலே வருவதைப் போல - கடைசி வரையில் பாண்டவர்களுக்காக வாதாடிக் கொண்டிருந்த பீஷ்மர், இறுதிக் கட்டத்திலே துரியோதனர்களுக்காக வாதாடி அவர்களுக்காக களத்திலே அடிபட்டு, அம்புப் படுக்கையில் படுக்க வைக்கப்பட்டு, போர் முடிகின்ற நாள் வரையிலே உயிரோடு இருந்து பிறகு, மாண்டார் என்பது பீஷ்மருடைய கதை. இது இறுதிக் காலத்துக் கதை. அவருடைய தொடக்கக் காலத்துக் கதையை நான் படித்திருக் கிறேன், சொல்ல விரும்பவில்லை.

நம்முடைய ஆசிரியர் வீரமணி அவர்களிடத்திலே
கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்

அதை நீங்கள் நம்முடைய ஆசிரியர் வீரமணி அவர்களிடத்திலே முடிந்தால் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். இயன்றால் படித்துத் தெரிந்து கொள்ளலாம்.
எனவேதான் என்னை இவ்வளவு பெரிய விழாவிற்கு அழைத்து ஏன் திட்டினார்கள் என்றுதான் எனக்குப் புரியவில்லை.

அதைப்போலத்தான், ``துரோணர். துரோணர் என்ற பெயரை எனக்குச் சூட்டியபோது நான் விரும்பாததற்குக் காரணம் - நான் வருத்தப்படுவதற்கே காரணம், இது கல்வி நிலையம். இங்கே இருக்கின்ற மாணவர்கள் கல்வி கற்க விரும்புகின்றவர்கள், பொறியாளர்களாக, மேதைகளாக, அறிஞர் பெருமக்களாக, எதிர் காலச் சிற்பிகளாக வரவேண்டும் என்பதற்காக அண்ணா பல் கலைக்கழகத்திலே உங்களை ஒப்படைத்துக் கொண்டு, இங்கே யுள்ள ஆசிரியப் பெருமக்கள், துணைவேந்தர்கள் இவர்களுடைய துணையோடும், உதவியோடும் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரங் களாக ஆக வேண்டும் என்ற எண்ணத் தோடு வந்திருப்பவர்கள்.

துரோணர் என்று சொன்னதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை

அப்படி வந்திருக்கின்ற உங்களுடைய நம்பிக்கையை குலைப்பதைப் போல துரோணர் என்று சொன்னதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. ஏனென்றால் துரோணர் காலத்தி லேயே அடித்தட்டு மக்களுக்கு சாதியின் பெயரால், வகுப்பின் பெயரால், மதத்தின் பெயரால் உயர் குலம், கீழ்க்குலம் என்ற பேதங்களின் பெயரால் கல்வி மறுக்கப்பட்ட காலம் துரோண ருடைய காலம். அப்படி கல்வி மறுக்கப்பட்ட காரணத்தினால் தான் வில்வித்தை கற்றுக் கொள்ள வேண்டுமென்று ஏகலைவன் துரோணரிடம் சென்று கேட்டபோது, நீ வேடர் குலம், இழிகுலம், கீழ்க்குலம், கீழ்ச் சாதி, உனக்கு நான் வில்வித்தை கற்றுத் தரமாட்டேன் என்று துரோணர் சொல்லிவிட - அப்படியானால் பரவாயில்லை, நான் உங்களைப் போல ஒரு சிலை செய்து வைத்து, அதன் முன்னால் நின்று வித்தையைக் கற்றுக் கொள்கிறேன் என்று சொல்லி, அவருடைய சிலைக்கு முன்னால் நின்று அரும்பாடு பட்டு வில் வித்தையைக் கற்றுக்கொண்டு, துரோணரிடத்திலேயே வந்து - தான் கற்ற வித்தை சரிதானா? என்று கேட்டான்.

உன் கட்டைவிரலை எனக்குக் காணிக்கையாகக் கொடு

துரோணர் ஆச்சரியத்தால் அகல விழிகளை விரித்து, அப்படியா, கற்றுக் கொண்டாயா, எங்கே பார்க்கலாம் என்றார். குறி தவறாமல் உன்னுடைய அம்பு பாய்கிறதா பார்ப்போம் என்று பரிட்சை வைக்க, அவ்வாறே ஏகலைவன் துரோணர் காட்டிய குறியை - அவர் காட்டிய அடையாளத்தின் மீது சரியாக அம்பு எய்து வீழ்த்த - இது என்னைப் போல சிலை செய்து வைத்து நீ இந்த வித்தையைக் கற்றுக் கொண்டிருந் தாலும், நீ எனக்குத் தர வேண்டிய குரு காணிக்கையை தந்தே ஆக வேண்டும் என்று துரோணர் கேட்டார். என்ன காணிக்கை வேண்டு மானாலும் கேளுங்கள் தருகிறேன் என்றான். ஒன்றும் பெரிதல்ல, உன்னுடைய கட்டை விரலை எனக்குக் காணிக்கையாகக் கொடு என்று துரோணர் கேட்க, அவனும் ஆசிரியர் கேட்கிறாரே, அதை மறுக்கக் கூடாதே என்று கட்டை விரலை வெட்டி காணிக் கையாகத் தந்து விடுகிறான்.

கட்டை விரலை எதற்காக கேட்டார் என்ற சூட்சுமம் மறு படியும் அவன் அந்த வில்லை கையிலே எடுத்தபோது தான் அவ னுக்குத் தெரிந்தது. கட்டை விரல் இல்லாமல் வில்லிலே அம்பை வைத்து குறி பார்க்க முடியாது. அவனால் அந்த வில்லைப் பயன்படுத்த முடியாது. தன்னிடத்திலே - உயர்குலத்தைச் சேர்ந்த தன்னிடத்திலே ஒரு தாழ்ந்த குலத்தைச் சேர்ந்த ஏகலைவன் வித்தை கற்றுக்கொண்டு, அதைப் பயன்படுத்தக் கூடாது என்ற அந்த மதவெறியின் காரணமாக - சாதி வெறியின் காரணமாக - ஆதிக்க வெறியின் காரணமாக அன்றைக்கே ஏகலைவன் என்ற வேடச் சிறுவனுக்கு அந்த வித்தை மறுக்கப்பட்டது, கல்வி மறுக்கப் பட்டது.

உரிய கல்வி இல்லாத கஷ்டத்தையும் - உயர்கல்வி கிடைத்திருக்கின்ற மகிழ்ச்சியையும்!

அப்படி கல்வி மறுக்கப்பட்ட பெரிய சமுதாயத்திலே இருந்து வந்த மாணவச் சிங்கங்கள்தான் - மாணவத் தங்கங்கள் தான் என் எதிரே இன்று வீற்றிருக்கின்ற காட்சியை நான் காணு கின்றேன். அன்றைக்கு ஒருவனுக்கு கல்வி இல்லை, வித்தையில்லை என்று சாதியின் பெயரால் விரட்டியடிக்கப்பட்ட அந்தக் காலத்தையும், இன்றைக்குப் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் அண்ணா பெயரால் அமைந்துள்ள இந்தப் பல்கலைக்கழகத்திலே திரண்டி ருக்கின்ற காட்சியையும் அண்ணாவின் தம்பியாகிய நான் இன்று காணும்போது - ஆனந்தம் கொள்ளுகிறேன், அக மகிழ்வு கொள்ளுகிறேன்.

இதற்கு என்ன காரணம் என்று நான் எண்ணிப் பார்க்கின் றேன். அன்றைக்குக் கல்வி தமிழகத்தில் அனுபவ ரீதியாகச் சொல்ல வேண்டுமேயானால் பெருந்தலைவர் காமராஜர் அவர் கள் ஆடு மேய்க்கின்ற சிறுவனையும், மாடு மேய்க்கின்ற சிறு வனையும் வழியிலே கண்டு, அவன் எப்படி முன்னேறுவான் என்று யோசித்து, அவனை அழைத்துப் பேசி, அவனுடைய குடும்ப நிலை என்ன, அவன் பட்டினி கிடந்துதான் படிக்க வேண் டுமென்பதை உணர்ந்து அவனுக்கு மதிய உணவு ஏற்பாடு செய்து, அவனைப் படிக்க வைத்து, அன்றைய தினம் அவனைக் கல்வி யாளனாக ஆக்குவதற்கு அரும்பாடுபட்டார். தம்பி பொன் முடி இங்கே எடுத்துச் சொன்னதைப்போல் பெருந்தலைவர் காமராஜர் கிராமப்புற மக்களுக்கு படிப்பு வேண்டும், கல்வி வேண்டும் என்பதற்காகப் பாடுபட்டார். அதுதான் ஆரம்பக் கட்டம். இப் போது உயர்கல்வி தந்து விட்டோம், கடந்த ஆண்டு 50 ஆயிரம், இந்த ஆண்டு இலட்சம் பேர் என்று பெருமை பேசி னாலுங்கூட, உரிய கல்வி இல்லாத கஷ்டத்தையும் - உயர் கல்வி கிடைத்திருக் கின்ற இந்த மகிழ்ச்சியையும் நாம் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.

இன்றைக்கு உயர்கல்வி பெற்றுத் திளைக்கின்ற மாணவர்கள், ஒரு காலத்திலே உரிய கல்வி கூட கிடைப்பதற்கு தடுக்கப்பட் டார்கள் என்பதை மறந்து விடக்கூடாது. அந்த உரிய கல்வி கிடைக்காமல், அவர்கள் வேதனைப்பட்ட நேரத்தில்தான் - அந்த உரிய கல்வியைப் பெருந்தலைவர் காமராஜர் - அவர்களுக்குத் தர வழி வகுத்தார். அவர் வகுத்த வழி நின்றுதான் இன்றைக்கு நாங்கள் - உரிய கல்வி பெற்றாயா, அடுத்து உயர் கல்வியையும் பெற்றுக் கொள் என்று இன்றைக்கு அவர்களுக்கு உயர் கல்வி தருகின்ற நிலையை ஏற்படுத்தியிருக்கிறோம். அந்தக் காட்சியைத் தான் கண் கொள்ளாக் காட்சியாக என் எதிரே நான் பார்க்கிறேன். இந்தக் காட்சி வளருமேயானால், இந்தக் காட்சி பெருகுமே யானால், இந்தத் தொகை பெருகுமேயானால் இந்த மாணவர்கள் இன்னும் வளருவார்களேயானால் எதிர்காலத் தமிழகத்தை, பூங்காவனமாக, பூந்தோட்டமாக நிச்சயமாக ஆக்குவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. அந்த நம்பிக்கையோடு இன்றைக்கு அய்ந்து அம்சங்கள் கொண்ட இந்தப் பெருவிழா விலே என்னுடைய வாழ்த்துக்களை துணை வேந்தர் அவர் களுக்கும், ஏனைய துணைவேந்தர்களுக்கும் இங்கே வருகை தந்துள்ள மாணவக் கண்மணிகளுக்கும் வழங்கி இந்த அளவிற்கு மேல் என்னுடைய குரல் ஒத்துழைக்காது. இன்றைக்கு நான் பிடி வாதமாகப் பேசிவிட்டாலும் நாளைய தினம், அதற்கு மறுநாள் என்னால் அலுவல்களையே பார்க்க முடியாத அளவிற்கு ஆகிவிடக் கூடும். அது உங்களுக்கு நஷ்டமோ இல்லையோ எனக்கு நஷ்டம். எனக்கு நஷ்டம் என்றால், என்னுடைய செயல் களுக்கு நஷ்டம். என்னுடைய செயல்களுக்கு நஷ்டம் என்றால் ஏழைகளைத் கைதூக்கி விட ஏழைகளுக்கு கல்வி தர - ஏழை களின் பசி போக்க நான் எடுத்த முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை ஆகிவிடும், ஆகவே அந்த முட்டுக்கட்டை அகல நீங்கள் எனக்கு மன்னிப்பை அளித்து, இந்த விழாவிலே இந்த அளவிலே விடை கொடுக்க வேண்டுமென்று மாணவச் செல்வங்களே, உங்களை யெல்லாம் கேட்டுக் கொண்டு விடைபெறுகிறேன்.

---------------- இவ்வாறு முதல்வர்கலைஞர் அவர்கள் உரையாற்றினார்.

சிந்திக்கவேண்டும்




"உலகத்திலேயுள்ள மற்ற மக்கள் தம் அறிவைப் பயன்படுத்திக் கொண்டு முன்னேறிக் கொண்டி ருக்கும்போது, நம் நாட்டு மக்கள் அறிவைப் பயன்படுத்தாமல், பழைமையிலேயே நம்பிக்கை வைத்துக்கொண்டு காட்டுமிராண்டி ஆகலாமா? நம் மக்கள் சிந்திக்கவேண்டும்."

---------------- தந்தைபெரியார் - "விடுதலை," 8.11.1968