Search This Blog

21.9.18

கர்ப்பக்கிருகத்திற்குள் மட்டும் பேதம் எதற்காக?


தந்தை பெரியார்
இப்போது நாம் எடுத்துக் கொண்டிருக்கிற முயற்சி, கோயிலில் கர்ப்பக்கிருகம் இருக்கிற இடத்திலே நீ சூத்திரன்,- இழிசாதிக்காரன், நீ உள்ளே நுழையக்கூடாது என்று பார்ப்பான் நம்மை இழிவுபடுத்தி வைத்திருக்கின்றதை மாற்ற வேண்டும் என்று போராட இருக்கிறோம். இதற்கு முன் தெருவிலே மனிதனை நடக்கக் கூடாது புனிதம் கெட்டுவிடும் என்று சொன்னான்; குளத்தில் தண்ணீர் எடுக்கக்கூடாது என்று வைத்திருந்தான்; ஒவ்வொரு ஊரில் ஒவ்வொரு ஜாதியார் கோயிலுக்கும் போகக்கூடாது என்று வைத்திருந்தான், அதுபோல, சாப்பிடும் பொது இடங்களில் பார்ப்பனருக்கு வேறு இடம், நமக்கு வேறு இடம் என்று வைத்திருந்தான்; இதையெல்லாம் மாற்றி விட்டோம்.
அதனால் ஒன்றும் புனிதம் கெட்டுவிடவில்லை. எந்த மனிதனின் மனமும் புண்படவில்லை. மதம், சம்பிரதாயம் அழிந்து பாழாகி விடவில்லை. மிகப் பெரிய புண்ணிய ஸ்தலங்களாகக் கருதப்படும் காசி, ஜெகநாத், பண்டரிபுரம் ஆகிய இடங்களிலிருக்கிற கோயில்களில் உள்ள சாமி சிலைகளை யார் வேண்டுமானாலும் தொட்டு வணங்கலாம் என்றிருக்கிறது. அதுபோல இங்கேயும் கர்ப்பகிரகத்திற்கு வெளியே இருக்கிற உருபரிவாரங்களை யார் வேண்டுமானாலும் தொடலாம். அதே சிலை கர்ப்பகிரகத்தில் இல்லாமல் வெளியே இருந்தால் நாய்கூட நக்கிவிட்டுச் செல்லலாம். அதனால் அந்தச் சிலையின் புனிதம் ஒன்றும் கெட்டு விடுவதில்லை. கர்ப்பக்கிரகத்திற்குள் இருப்பதைத் தொட்டால் மட்டும் எப்படிப் புனிதம் கெட்டுவிடும்? வெளியே யிருக்கிற சிலைக்கு இல்லாத புனிதம் அதற்கு மட்டும் எப்படி வந்தது என்று கேட்கின்றேன்? பார்ப்பான் ஆக்கிய சோற்றை நம் கண்ணால் பார்த்தால் அதைக் கீழே கொட்டிவிடுவான். இன்று நம்முடன் வந்து உட்கார்ந்தே சாப்பிடுகின்றான்,- நாம் சமைப்பதைச் சாப்பிடுகின்றான்.
இப்படி உண்பதில்- பழகுவதில் எல்லாம் ஒன்றான பின் எல்லோருக்கும் பொதுவான கர்ப்பக்கிருகத்திற்குள் மட்டும் இந்தப் பேதம் எதற்காக என்று கேட்கின்றேன்? சாதி இழிவை, சூத்திரத் தன்மையை நிலைநிறுத்த அல்லாமல் வேறு எதற்காக? வேறு என்ன அவசியத்திற்காக இங்கு மட்டும் நாம்  போகக் கூடாது என்பது என்று நம் மக்கள் நன்கு சிந்திக்க வேண்டும். சிலர் நகை இருக்கிறது அதனால் தான் எல்லோரும் வரக்கூடாது என்று சமாதானம் சொல்கிறார்கள். உன் சாமிக்கு  நகை போட்டிருக்கிறாய் என்பதற்காக நான் சூத்திரன் என்பதை ஒப்புக் கொள்வதா? இடம் சிறிதாக இருக்கிறது, அதிகம் பேர் உள்ளே போக முடியாது என்றால், ஒவ்வொருவராகச் சென்று தொட்டுக் கும்பிட்டு வருகிறார்கள். நகை இருக்கிறது என்றால் இரண்டு போலீசைப் போட்டுப் பாதுகாத்துக் கொள். இவற்றிற்காக நாங்கள் எங்கள் மானத்தை இழக்கத் தயாராக இல்லை.
மொழிக்காகப் போராட்டம் என்கின்றார்கள். இன்றைக்கும் அனேகக் கோயிலில் பார்ப்பான் சமஸ்கிருதம் சொல்லிக்கொண்டு பூசை செய்கிறான். எதற்காகத் தமிழ்நாட்டில் இப்படி நடக்க வேண்டும் என்று இதுவரை எவனுமே கேட்க வில்லை? இந்த அரசாங்கம்- நம் அரசாங்கம் சும்மாவிட்டுவிடும் என்று கருதவில்லை. அவர்கள் கடமையை அவர்கள் செய்வார்கள். அதுபற்றி நாம் அரசாங்கத்தைக் குறை கூறப் போவதில்லை.
காந்தி தாழ்த்தப்பட்ட மக்களுக்காகத் தனிக் கிணறு, தனிக்கோயில், தனி பள்ளிக்கூடம், தனிக் குளம் வெட்டுவது என்று அதற்காக ஒரு இலட்சத்திற்கும் மேல் பணம் ஒதுக்கி அந்தப் பணத்தை என்னிடம் கொடுத்தார்கள். நான் ஆதிதிராவிடர் மக்களுக்குத் தனியாகப்  பள்ளிக்கூடம் கிணறு கட்டுவதை விரும்பவில்லை. அதை அப்படியே திருப்பிக் கொடுத்து விட்டேன்.
நாம் கர்ப்பக்கிருகத்திற்குள் போக வேண்டுமென்பது கடவுள் நம்பிக்கைக்காக, பக்திக்காக, புண்ணியம் சேர்ப்பதற்காக, போக வில்லை; அதில் உள்ள அவமானத்தை நீக்க வேண்டும் என்பதற்காகப் போகிறோம். திறந்து விட்டுவிட்டால் அதனால் என்ன பலன் என்று கேட்பீர்கள். சாமிக்கு இருக்கிற யோக்கியதையே போய் விடும். பார்ப்பானுக்கிருக்கிற உயர்சாதித் தன்மையும் போய் விடும். பார்ப்பானே வெளியே வந்து அங்குக் கடவுள் இல்லை, கல்தான் இருக்கிறது என்று சொல்வான்.
உனக்குத் தான் சாமி இல்லையே- நீ ஏன் அங்கு போகிறாய் என்று கேட்கிறான். மானம் இருப்பதால் போகிறேன். மானம் இல்லாத தால், அறிவு இல்லாததால், இழிவைப்பற்றிச் சிந்திக்காததால் நீ வெளியே நிற்கிறாய்-  என்று சொல்வேன். நாம் போவதற்கு உரிமை வந்துவிட்டால், பிறகு பூசை செய்கிற உரிமை நமக்குத் தானாகவே வந்து விடும்.
மொழிக்காகச் சத்தம் போடுகிறாய்; கோயிலிலே சமஸ்கிருதத்திலே மந்திரம் சொல்கின்றான். அதுபற்றி எவனுமே சிந்திப்பது கிடையாது. தமிழில் சொல்லக் கூடாது என்கின்ற ஏற்பாடு பார்ப்பானாகச் செய்து கொண்டதே தவிர சாஸ்திரத்தில் கிடையாது.
இதெல்லாம் வளர்ந்தால் மனிதனுக்கு இருக்கிற மூடநம்பிக்கைப் போய்விடும்; பூச்சாண்டி போய்விடும்.
சமுதாயத் துறைக்காக இந்த நாட்டிலே என்னைத் தவிர எவனய்யா பாடுபட்டான்? பந்தயம் கட்டிக் கேட்கிறேன். எவன் பாடுபட்டான்?
நீங்களெல்லாம் மதம் போச்சு, கடவுள் போச்சு என்று பயப்படாதீர்கள்; கடவுள் உண்மையில் இருந்தால் அதை ஒழிக்க யாராலும் முடியாது. அது போன்றுதான் இந்து மதம் என்பதும், இல்லாத ஒரு கற்பனையாகும். என்று தெளிவாக எடுத்துவிளக்கி இழிவு நீக்கிக் கிளர்ச்சியில் எல்லா மக்களும் பங்கேற்க முன்வர வேண்டும்.

                         -----------------------------------26.10.1969 அன்று வேலாயுதம்பாளையம் நாகம்மையார் திடலில் ஈ.வெ.ரா.பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு "விடுதலை", 7.11.1969

4 comments:

தமிழ் ஓவியா said...

பார்ப்பனர் சிறு தொகையினர் தான். ஆனால்...



பார்ப்பனரிடம் ஏனய்யா பயம்? அவர்களைக் கண்டு பொறாமை எதற்கு? அவர்கள் 100-க்கு 3 பேர்தானே! நீங்கள் 100-க்கு 97 பேரன்றோ? சிறுபான்மைச் சமூகத்திடம் பெரும்பாலான சமூகம் ஏன் பயங்கொண்டு பாதுகாப்புக் கோர வேண்டும் என்று அடிக்கடி தேசியத் தோழர்கள் கேட்பதுண்டு. அப்படிக் கேட்கும் போதெல்லாம் தங்கள் அறிவின் திறத்தைத் தாமே மெச்சிக் கொள்வர் - அத்தோழர்கள்... சமுகத்தைக் கவனித்தால் பார்ப்பனர் சிறு தொகையினர்; பார்ப்பனரல்லாதாரின் மூச்சு, பாப்பனரைத் திணற வைக்கும்... அவ்வளவு அதிக எண்ணிக்கை உள்ளவர்கள்தான் பார்ப்பனரல்லாதார்.

ஆனால் பார்ப்பனீயம் எண்ணிக்கையைப் பொறுத்ததல்ல. இதுவரை அதற்குப் பலவழிகளிலும் தரப்பட்ட படை பலத்தைப் பொறுத்திருக்கிறது.

- அண்ணா, (திராவிட நாடு 25.4.1948)

தமிழ் ஓவியா said...

மானுடப் போராளி தந்தை பெரியார் -140



1973 ஆம் ஆண்டில் மறைந்த பேராசிரி யர். ந.சஞ்சீவியுடன் புரட்சிக் கவிஞர் பாரதி தாசன் பற்றிய அரிய தகவல்களைப் பெறுவ தற்காக நான் பாண்டிச்சேரிக்குச் செல்லும் வாய்ப்பினைப் பெற்றேன்.

இரண்டு நாட்கள் ஒரு மருத்துவர் இல்லத் தில் தங்கியிருந்தோம்.

முதலில் புரட்சிக் கவிஞரின் மகளாரைச் சந்தித்து உரையாடினோம். அந்த அம்மை யார், பாண்டிச்சேரியின் முதல் திராவிட இயக்க முன்னோடி பெரியவர் நோயல் அவர் களைச் சந்திக்குமாறு கேட்டுக் கொண்டார்.

அவரும் அப்பாவும் இணை பிரியா நண்பர்கள். அவரிடம் புரட்சிக் கவிஞர் பற்றி ஏராளமான தகவல்களைப் பெறலாம் என்றார்.

பாரதிதாசனாரைப் பெரியாரோடு இணைத்தவர் தான் பெரியவர் நோயல் என்பது எங்களுக்கு அரியத்தகவலாக இருந்தது.

அவரும் ஆசிரியராகப் பணிப்புரிந்தவர்.

பெரியவர் நோயல்தான் பாண்டிச்சேரிக் குப் பெரியாரை அடிக்கடி அழைத்துக் கூட்டங்களை நடத்தியவர். அதனால் எண் ணற்ற இடர்களைச் சந்தித்தவர்.

பாரிஸ் நகர் சென்று பிரஞ்சு உயர் நீதிமன்றத்தில் வழக்காடி, பெரியார் பணி மேற் கொள்வதற்காக பலத் தடைகளை உடைத் தவர்.

85 அகவையிலும் பெரியவர் நோயல் பல பயனுள்ள தகவல்களை அளித்தார்.



பெரியார், வீட்டின் திண்ணையில் அமர்ந்து தான் அக்காலக்கட்டத்தில் பேசு வாராம். ஒலிப் பெருக்கியும் கிடையாது.

பெரியார் கூட்டத்திற்கு நான் இன்று தலைமை தாங்கப் போகிறேன். கனக சுப்பரத்தினமும் (புரட்சி கவிஞரின் இயற்பெயர்) கலந்து கொள்ளவேண்டும் என்று நோயல் வேண்டுகோள் விடுத்தார்.

பெரியாரின் கருத்துகளோடு எனக்கு உடன்பாடில்லை, அவரிடம் பல வினாக்களை எழுப்புவேன். தகராறுகூட செய்யத் தயங்க மாட்டேன் என்றாராம் புரட்சிக் கவிஞர்.

வழக்கம் போல ஒலிப்பெருக்கி இல்லா மல் திண்ணையில் அமர்ந்து பெரியார் ஒரு மணி நேரத்திற்கு மேல் பேசினார்.

வந்த 10 பேர்களில் சிலர் கலவரம் செய்யும் எண்ணத்தோடு வந்தார்களாம்.

பெரியார் பேச்சில் இருந்த "தரணிக்குத் தேவையான தங்கநிகர் எண்ணங்கள்" (ராஜா ராணி திரைப்படத்தில் பெரியாரை நினைவு கூறும் வகையில் சாக்ரட்டீஸ் பற்றிய கலைஞரின் வசனம்) கேட்டு, புரட் சிக் கவிஞர் பெரியாரின் சீடராக மாறினார்.

கலவரம் செய்ய வந்தவர்களும் கட்சித் தொண்டர்களாக மாறினர்.

இன்று பெரியவர் நோயல் அவர்களு டன் உரையாடியதை நினைத்துப் பார்க்கி றேன். அங்குலம் அங்குலமாக, அடி அடியாக பெரியார் இந்தச் சமுதாயத்தைத் திருத்த எவ்வாறு பாடுபட்டார் என்பதற்கு பாண் டிச்சேரி நிகழ்வு ஒரு சிறிய அடையாளம் ஆகும்

எதிர்ப்புகளை, ஏளனங்களை, கல்வீச் சுகளை, செருப்பு வீச்சுகளை எல்லாம் எதிர் கொண்டு தனது தொடர் பயணத்தை 70 ஆண்டுகள் மேற்கொண்டது போல உல கில் எந்தச் சிந்தனயாளரும், சமூகப் புரட்சி யாளரும் மேற்கொண்டதில்லை எனலாம்.

மானுட வளர்ச்சிக்குத் தடையாக ஒட்டிக் கொண்டு வளர்ந்த கடவுளா, மதமா, சாதியா, இவைகளை வளர்ப்பதற்கு ஏற்பட்ட ஆறு கால பூஜைகளா, இதை நிலைநிறுத்த உதவிய சீமான்களா, பூசாரிகளா, ஊர் பெரிய மனிதர்களா யாரைப் பற்றியும் பெரியார் கவலைப்படவில்லை. குறுக்கே காந்தியார் வந்தபோதும் கூட கவலைப்படவில்லை.

அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்பார்கள்.

பெரியார் அடித்த அடியில் கோயிலே ஆடிப்போனது.

இன்று ஒடுக்கப்பட்ட சமூகத்தினரும் கோயில்களில் அர்ச்சகராக ஆகலாம். அரசுகள் தயங்கியதை, ஆதினங்கள் செய்ய முடியாததைப் பெரியாரும், திராவிட இயக்கமும் செய்து முடித்தது.

பெரியாரின் பெரும் பணிகளை இன்று உலகமே உற்றுப் பார்க்கிறது.

ஆனால், சிறகொடிந்த சில அரசியல் ஊர் குருவிகள் பெரியார் சிலை மீது எச்சம் இட்டு கீச்! கீச்! என்று கத்துகின்றன.

தான்தான் ராஜா என்று எண்ணி கிணற்று தவளைகளும் அருவருப்பான கூச்சல்களை எழுப்புகின்றன.

ஆனால் பெரியாரின் சிந்தனைகள் உலகை நோக்கி விரிகின்றன.

தமிழ் ஓவியா said...

ரிக் வேதத்தில்

டாக்டர் ராஜேந்திரலால் மித்ரா, அவர்கள் கூறுவது மாதிரி, இரத்த பலி கொடுப்பது அன்றும் இன்றும் நடைபெற்று வரும் ஒரு பண்டைய வழக்காகும். வங்காளத்தில் இன்றும் காணலாம், துர்க்கா பூஜை காலங்களில் சிலை முன்பு நின்று கொண்டு பெண்கள் தங்கள் மார்பு இரண்டுக்கும் நடுவிலுள்ள பாகத்தில் சற்று சீறி ரத்தம் வெளிப்படுத்தி தங்களது முன்னாளைய பிரார்த்தனையைச் செலுத்துவதன் அறிகுறியாக, கன்னங்களில் வெள்ளி வேலால் குத்திக் கொள்ளும் பழக்கம் இன்றும் - உண்டே தென்னாட்டுப் பகுதியில்!

பழங்குடி மக்கள் மேல் படையெடுத்துச் செல்லுமுன்னர் அவர்கள் தங்கள் கடவுளர்களைப் பிரார்த்திக்கும் முறை பாருங்கள்! சிறு சிறு பகுதியாக வந்து, நூற்றுக்கானக்கான ஆண்டுகட்குப் பிறகேதான் சற்றேனும் இடத்தைப் பிடிக்க முடிந்தது அவர்களால் என்பது நினைவில் இருக்கட்டும். தங்கள் கடவுள்களை வேண்டின முறை பாரீர்!

எரியல் விழுங்கிந்த எத்தர்

களையும் பித்தர்களையும் (36.20)

இடியே இ எறியவர் மேல்

உன் வச்சிராயுதத்தை! (36.20)

அழியல் வறிவிலர் தமை

எரித்துவிடு ஒழியக் குழுவை

துரத்தக் கொடியாரை

அழல்கண் னரையழியாப்

பகையால்பாட்டு

தழலோய் கூட்டோடே

கடிந்திடப் பகையை.

ரிக்வேதம் 8.18:13

(ஆங்கில மொழி பெயர்ப்பின் கருத்தி னைக் கொண்டது. ஆ.ர்.)

பச்சை மாமிசம் தின்போர், திருடர், வஞ்சகர், கொலைஞர், அழிவுக்காரர்கள் என்றெல்லாம் திராவிடர்களைப் பற்றிக் கூறும் பொருட்டு வசைபாடும், அது தான் வேதமாக இருக்கிறது.

- விடுதலை 8.7.1953


பக்கம் 3

தமிழ் ஓவியா said...

நாம் தாழ்வுற்றதேன்?

(டாக்டர் ரவீந்திரநாத் தாகூர்)

டாக்டர் ரவீந்திர நாத் தாகூர் தமது நண்பர் ஒருவருக்கு எழுதிய கடிதத்தில் காணப்படும் ஒரு பகுதி இது!

இந்துமதம் இந்தியாவின் தலைவிதியானது நீக்க முடியாத ஒரு தலைவிதியாகும். அதன் கதி இந்தப்படித் தவிர வேறுவிதமாகயிருக்க முடியாது. ஏனென்றால், நாம் நமக்குள் ஜாதி ஜாதியாகப் பிரிந்து விட்டோம். அந்தந்த ஜாதிக்குள்ளும் வகுப்பு வகுப்பாகவும் பிரிந்து விட்டோம், இவ்வண்ணம் நாம் துண்டு துண்டு களாகப் பிரிந்து போய்விட்டோம், இதனால் நாம் ஒத்து ஒருவரிடத்தில் ஒருவர் மனிதத் தன்மையாக இருக்க முடியாமல் போய்விட்ட தனால், நாம் அழிந்து ஒழிந்து போவதற்குத் தகுதியுடையவர்களாக ஆனோமே தவிர, நாம் இனி, உலகத்தில் உயிருடன் இருக்கத் தகுதியுடையவர்களாக இல்லை. இப்படி நாம் பிரிந்துவிட்டதாலேயே நாம் எக்காலத்திலும் நம் நாட்டை பிறருக்கு வசப்பட்டுப் போகும் படி கொடுத்துக் கொண்டே வந்திருக்கிறது.

நாம் நம் ஜாதிப்பிரிவுகளால் தற்கொலை செய்துக் கொண்டவர்களாக ஆகிவிட் டோம். நாம் ஜாதிகளை ஒழித்து அதனால் நாம் முன்னுக்கு வர வழிகோலவே இல்லை. நம் சாஸ்திரங்கள் ஜாதிப்பிரிவு களை மீறக் கூடாதென்றும், மீறினால் இவ்வளவு பாவம் - இவ்வளவு தண்டனை யென்றும் உரைத்து நம்மை அடக்கி விட்டன.

நம் ஜாதிகளையும், அவற்றை வலி யுறுத்தி நிலைநிறுத்தும் சாஸ்திரங்களை யும், பெரியோர்கள் ஏற்படுத்தினார்கள் என்ற காரணத்தினால் அவை ஆதிகாலம் தொட்டு நடைமுறையில் அனுஷ்டிக்கப் பட்டு வருவதனால் அவற்றை நாம் தற்சமயம் இடையில் கலைக்கப்படாது என்ற மூடக்கட்டுப்பாட்டை வைத்துக் கொண்டிருப்பதனால், நாம் மனிதத் தன்மை இழந்து உலகிலுள்ள பெரிய ஜன சமூகங்களுக்கு இடையில் தாழ்ந்துவிட் டோம்.

- விடுதலை 6.7.1953, பக்கம் 3