Search This Blog

25.5.15

பார்ப்பானே வெளியேறு என்று ஏன் சொல்லுகின்றோம்?-பெரியார்

குலக் கல்வித் திட்டத்தை ஒழித்துக் கட்டுவோம்! இன்றேல் செத்தொழிவோம்!


 தந்தை பெரியார்



இந்த நாட்டு மக்களாகிய நாம் சூத்திரர்கள் இழிஜாதி மக்களாக இருந்து வருகிறோம். இந்த இழிவுகள் இன்று நேற்றல்ல, 2000, 3000 ஆண்டுகளாக இருக்கின்றன, இவைகளை அதாவது இழிஜாதி மக்களாக, சூத்திரர்களாக, நாம் இருக்கிறோம் என்பதை நீங்கள் உணர வேண்டும், ஏதோ நம்மவர்களில் சில பேர் பூணூல் போட்டுக் கொள்வதாலோ, நாமம் போட்டுக் கொள்வதாலோ, கோவில் கட்டுவதாலோ, உயர்ந்தவர்கள், பெரிய ஜாதி என்று கருதிக் கொள்ளா தீர்கள். இவைகளை  எல்லாம் செய்வ தால்தான் சின்ன ஜாதி என்பதை  நாமாக ஒப்புக் கொள்வதாகும். நான்  இவை களையெல்லாம் சும்மா சொல்லவில்லை; புராணங்களைப் பார்த்து - சரித்திரங் களைப் பார்த்து - ஆதாரங்களைப் பார்த்துச் சொல்லுகின்றேன், திராவிடர் ஆகிய நாம் அனைவரும் ஆண்ட பரம்பரையினர். இந்த நாட்டுக்குச் சொந் தக்காரர்கள்; இந்த நாட்டு வளமை யெல்லாம் நம்முடையது; நம்மை இந்த நாட்டுக்கு வந்த அந்நியர்களான பார்ப் பனர்கள் இழி ஜாதி மக்களாக, சூத்திரர் களாக ஆக்கி வைத்துவிட்டார்கள். பார்ப்பான் நமக்கு அறிவே  இல்லாமல் முட்டாள்களாக்கினான்; அதைச் சொன்னால் பாபம்; இதைச் சொன்னால் பாபம்; கடவுளையோ, பார்ப்பானையோ, கோவிலையோ குற்றம் சொன்னாலும் பாபம் என்று மிரட்டி வைத்தான். அதன்படி பணக்காரர்களும் அவர்களை வணங்கினார்கள். அதைப் பார்த்து ஏழை எளியவர்களும் பின்பற்றினார்கள்; இது நீண்ட நாட்களாக இருந்துவரும் இழிவுத் தன்மை ஆகும்.


நம் உடம்பில் ஒரு சாதாரண புண் இருந்தால், அதற்கு மருந்து போட்டால் ஆறிவிடும்; ஆனால் அழுகிப்போன,  அதாவது புரையோடிப்போன புண்ணாக இருந்தால், காரமான மருந்தை வைத்துக்கட்டுகிறோம். அதற்கும் புண் ஆறவில்லை என்றால்,  புண் உள்ள பகுதியை  வெட்டு என்று வைத்தியர் கூறுகிறபடி செய்வோம்; இல்லாவிடில் உயிருக்கு ஆபத்து என்ற நிலைமைதான் ஏற்பட்டுவிடும். அதுமாதிரி நமது சமு தாயத்தில் புரையோடிப் போயிருக்கும் இந்த இழிவுத் தன்மையைச் சூத்திர தன்மையை ஒழிப்பதற்கு நாங்கள்  காரமான மருந்தாகச்  சொல்லுகின்றோம், முடியாவிடில் வெட்டித்தான் ஆக வேண்டும் என்று கூறுகிறோம்.


இந்த 1954 ஆம் வருடத்திலும் நாம் பார்ப்பனர்களால் இழிஜாதி மக்களாய் ஆக்கிவைக்கப்பட்டிருக்கும் தன்மையை உணரவில்லை. இன்னமும் நமக்கு மானமில்லை, உணர்ச்சியில்லை என்றே சொல்ல வேண்டும். முட்டாள் தனமாகச்  சோம்பேறிப் பார்ப்பான் கையில் நாம் பாடுபட்ட காசைக் கொடுத்து விட்டுச் சிவனே, கடவுளே,  என்று வீடுவந்து நிற்கின்றோம்.


எவராவது, எந்தக் கட்சிக்காரர் களாவது பொதுஜனங்களுக்குப் பாடுபடு பவர்கள் என்று வருகின்றவர்களைப் பாருங்கள். காந்தியார் உட்பட எல் லோரும் எதற்காக உங்களிடையே வந்தார்கள்? பட்டம் பதவிக்குப் போக வேண்டும்; இரண்டொருவர் மந்திரியாக வேண்டும், என்பதைத் தவிர வேறென்ன? எவராவது இந்த நாட்டு மக்களாக  இருக் கிறார்களே என்று கவலைப்பட்டவர்கள் உண்டா? பாடுபட்டவர்கள் உண்டா? எங்களைத் தவிர பாடுபட்டவர்கள் வேறு யார்? வேறெந்த நாட்டிலாவது, உலகத் திலாவது பார்ப்பான் இருக்கின்றானா? பறையன் இருக்கின்றானா? எந்த நாட்டி லாவது தலையில் பிறந்தவன் ஒரு ஜாதி; இடுப்பில் பிறந்தவன் ஒரு ஜாதி; காலில் பிறந்தவன் ஒரு ஜாதி என்று இந்த மானமற்ற இழிவான நாட்டைத்தவிர வேறு எங்காவது உண்டா?


அற்புத, அதிசய விஞ்ஞான நாடு களில் எல்லாம் பார்ப்பானும் இல்லை; பறையனும் இல்லை. ஆனால் இந்த விஞ் ஞான காலத்தில் இவைகளை எடுத்துச் சொல்ல எந்த ஆளும், எந்தக் கட்சியும் இல்லை. கம்யூனிஸ்ட்டுகள் கூட இல்லை. அவர்கள் ஏதோ இரண்டு பணக்காரர் களைப் பற்றிப்பேசிவிட்டுப் போவார்களே தவிர, அவர்களும் பார்ப்பானைப் பற்றி மறந்து ஒரு வார்த்தையும் சொல்ல மாட் டார்கள். ஏன் அந்தக் கட்சியும் பார்ப்பன ஆதிக்கம் உள்ள கட்சி. அதுமட்டுமல்ல. இந்த நாட்டில் எந்தக் கட்சியும், அது காங்கிரசாயிருந் தாலும், கம்யூனிஸ்டாயிருந்தாலும், சோஷி யலிஸ்டாய் இருந்தாலும், பிரஜா சோஷி யலிஸ்டாய் இருந்தாலும், அது எல்லாம் பார்ப்பன ஆதிக்கக் கட்சிகள்தான்.  பார்ப்பன ஆதிக்கம் இல்லாத கட்சி, பார்ப்பன எதிர்ப்புக்கட்சி என்று ஒன்று இருக்கிற தென்றால் அது திராவிடர் கழத்தைத் தவிர வேறு எதுவுமில்லை.


நாங்கள் பார்ப்பானே வெளியேறு என்று ஏன் சொல்லுகின்றோம்? நமக்கென்ன வேறு வேலையில்லையா?


சும்மா இருக்க முடியாமலா இந்தப்படி சொல்லுகிறோம்!  உலகத்தில் எங்கும் இல்லாதபடி இந்த 1954-ஆம் வருடத்திலும் நான் மேல்ஜாதி, நீ கீழ்சாதி என்று இன்னமும் சொல்லி வருகின்ற, ஒரு இனத்தைப் பாடுபடுபவன் சூத்திரன் பாடுபடாதவன் சோம்பேறி சுகவாழ்வு பெறவுமான  தன்மை யில் சமுதாய அமைப்பை அமைத்துக் கொண்டு, இதுதான் கடவுள், இதுதான் மதம், இந்தப்படித்தான் சாஸ்திரம் சொல்லுகிறது என்று வைத்துக் கொண்டு, இந்தப்படியான தன்மையிலேயே அரசியலையும், ஆதிக் கத்தையும் ஏற்படுத்திக் கொண்டு நம்மை ஏறி மிதித்துக் கொண்டிருக்கிற ஒரு இனத்தைப்பார்த்து, வெளியேறு என்று சொல்லுவதில் தவறு என்ன? இதைத் தவிர வேறு வழிதான்  என்ன, திராவிட மக்கள் விடுதலை பெறுவதற்கு? மக்கள் இடையில் இந்த உணர்ச்சி ஏற்படவேண்டும்; எல்லோ ரும் மனிதர்கள்தான் என்கிற முறை வரத்தான் பாடுபடுகின்றோம்.


இந்தக் காரியத்தைச் சும்மா செய்துவிட முடியாது. பெரும் புரட்சி நடைபெற்றாக வேண்டும். அப்பேர்ப்பட்ட புரட்சிக்கு  மக்கள் தயாராய்  இருக்க வேண்டும். உள்ளபடி யோக்கியன், கெட்டவன் என் பதைத் தவிர, அவன் தாழ்ந்த ஜாதி, இழிந்த ஜாதி என்பதை  இந்த நாட்டை விட்டு ஓட்ட வேண்டும் என்பதுதான் திராவிடர் கழகத்தின் இன்றைய வேலையாகும்.


இந்த நாட்டை முதலில் முகலாயர்கள் ஆண்டார்கள். பிறகு வெள்ளைக்காரர்கள் ஆண்டார்கள். வெள்ளைக்காரன் இங்கு பார்ப்பானால் வந்தான். பார்ப்பான் பேச் சையே கேட்டான். கடைசியில் வெள்ளைக் காரன் என்ன நினைத்தான் என்றால் பார்ப்பான் எல்லோரையும் ஏய்க்கின்றான். இந்த முட்டாள் ஜனங்கள் அவனுடைய ஏய்ப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள், என்ப தாக. இப்படிப்பட்ட முட்டாள் மக்களை ஏய்த்து வரும் பார்ப்பானிடம் ஒப்பந்தம் செய்து கொண்டு அவனிடம் சாவி கொடுத்து விட்டுப்போனால் தங்களுக்கு லாபம் என்று கருதிப் பார்ப்பனரிடம் ஆட்சியை ஒப்புவித்தான். ஆனால் வெள் ளைக்காரன் கொஞ்சம் ஓரளவுக்குத் தமிழ னுக்குப் புத்தி வர வசதி செய்து விட்டுப் போனான்: இந்த வெள்ளைக்காரனாலும் சுயமரியாதை பிரச்சாரத்தினாலும் மக்களுக் குக் கொஞ்சம் புத்தி வந்தது.


ராஜாக்களுக்கும் கொஞ்சம் புத்தி வந்தது. திருவாங்கூர் மற்ற ராஜ்யங்களில் கோவிலைத் தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் திறந்துவிடச் சொன்னார்கள். வெள்ளைக் காரன் இங்கு வந்ததும், பார்ப்பனர் தாம் பதவிக்கு வரும் மாதிரியில் ஏற்பாடுசெய்து கொண்டனர். அந்தப் படிக்கே கல்வி முறையையும் உத்தியோகத் தகுதியையும் ஏற்பாடு செய்து கொண்டனர், உதாரணமாக, ஒரு வக்கீல் வேண்டும் என்றால் 18 வருடம் ஆகும்; அதில் பார்ப்பான்தான் வக்கீலாக முடியும். காரணம் அவன் பிச்சையெடுத் தாவது அவன் மக்களைப் படிக்கவைக்க முடியும். அதற்கு அனுசரணை யாகவும், ஆதரவாகவும், அவன் ஜாதி உயர்வு இருக்கிறது. பல அக்கிரமங்கள் செய்து அவனே சகல உத்யோகத்தியோகங்களிலும் அமர்ந்தான்.


இவற்றையெல்லாம் மீறி இரண்டொரு நம்மவர்கள் படித்துவந்தனர். அதுவும் இந்தப் பார்ப்பனர்களுக்குப் பிடிக்க வில்லை. இதைத்தான் ஆச்சாரியார் அவர்கள் தமது திட்டமாகச் சொல்கிறார். அதாவது கிராம மக்களுக்குப் படிப்பு வேண்டியதில்லை என்று சொல்லிவிட்டார். அவன் சிரைக்கணும், வெளுக்கணும், சட்டிப் பானை செய்யணும் என்று சொல்லி விட்டார். உங்கள் ஊர்ப்பள்ளிக்கூடம் 3 மணிநேரம்தான்; மற்ற நேரமெல்லாம் நம் பிள்ளைகள் கழுதை மேய்க்க வேண்டும், இதற்குப்  பெயர் புது ஆரம்பக் கல்வித் திட்டமாம், இப்படிப்பட்ட திட்டத்தை எதிர்ப்பதற்குத்தான் ஈரோட்டில் மாநாடு கூட்டினோம். அதில் ஒரு தீர்மானம் நிறைவேற்றினோம். சட்டப்படி போராட வேண்டும் என்று சர்க்கார் (அரசு) சொல்லு கின்றது. அதாவது சட்டசபைக்குச் சென்று மந்திரி பதவியைக் கைப்பற்றி இந்தத் திட்டத்தை மாற்றவேண்டும் என்று சொல்லுகிறது. சட்டசபைக்கு நாம் போக முடியுமா? இன்னும் சொல்கிறேன்; யோக் கியன் சட்டசபைக்குப் போக முடியுமா? தேர்தலில்  நிற்பதற்கே முதலில் 250 ரூபாய் டிபாசிட் கட்ட வேண்டும்; பார்லிமெண் டுக்கு (நாடாளுமன்றம்) 500 ரூபாய் டிபாசிட் கட்டவேண்டும்; 200, 300 போலிங் ஆஃபீஸ் களுக்கு (வாக்குச்சாவடிகளுக்கு) ஆள் வைக்கவேண்டும்; அதற்கு ஆள் ஒன்றுக்கு 1 ரூபாய் கூலி என்றாலும் 300 ரூபாய் போல் வேண்டும்,


இவை எல்லாவற்றையும் விட நம் மக் களுக்கு ஓட்டுப்போடும்  (வாக்கு அளிக்கும்) தகுதியோ, அறிவோ இல்லாததால் நம் ஜனங்களுக்கு எது எப்படி ஆனாலும் சரி என்று 4 அணா கொடுத்தால்போதும் என்று தம் ஓட்டைப் போட்டு விடும் நிலையில் உள்ளவர்கள் ஆவர். இப்படி இருக்கும் போது யார் சட்டசபைக்கு வரமுடியும்? அப்படியும் போனால்தான் அங்கேபோய் என்ன செய்ய முடியும்? எடுத்துக் கொள் ளுங்களேன், சட்டசபையில் ஆச்சாரி யாரின் கல்வித்திட்டத்தை எதிர்த்து தீர் மானம் நிறைவேறியது. ஆனால் ஆச் சாரியார் அவர்கள்.  இது ஒரு சிபாரிசு என்று கூறிவிட்டார். இப்படி இருக்கும்போது சட்டசபைக்குப் போய்த்தான் என்ன செய்யமுடியும்? அதோடு இந்த ஜனநாய கம் சட்டசபை என்பது எல்லாம் தேர்தலில் நிற்காதவர்களும், தேர்தலில் தோற்றவர்கள் எல்லாரும் மந்திரிகளாக வரக்கூடிய கேவலமான தன்மையில் இருக்கிறது. இந்த நிலைமை இருக்கும் போது சட்டத்தையும் ஜனநாயகத்தையும் பார்த்துக்கொண்டிருக்க முடியுமா? பெரிய புரட்சியின் மூலம்தானே காரியம் சித்தியாகும்? நம்மில் 100, 1000 பேர் பலியாக வேண்டி வந்தாலும் தயார் என்று கச்சைக் கட்டிக்கொண்டு முன் நின்றால் தானே முடியும்!

ஆந்திரா எப்படிப்பிரிந்தது? அங்கே போராடத் தயாராகி விட்டார்கள், எதற்கும். நேரு தாம் இருக்கின்ற வரை ஆந்தி ராவைப் பிரிக்கமுடியாது என்றார். அதற்கு ஆக ஆந்திர மக்கள் சும்மா இருக்க வில்லை. ரயிலை நிறுத்தினார்கள்; அதன் டிரைவரை உதைத்தார்கள்; ஒரு மாதம் வரை சரியான நேரத்துக்கு வண்டிபோக முடியவில்லை. பல சட்டத்துக்குப் புறம் பான செயல்களையெல்லாம் துணிந்து செய்து நஷ்டத்தை உண்டாக்கினார்கள், உடனே  ஆந்திராவைச் சட்புட்டென்று பிரித்துக் கொடுத்துவிட்டார்கள்.


மற்றும் காங்கிரஸ்காரர்கள் இம்மாதிரி காரியங்களைச் செய்து, அதாவது தாங்கள் ஆகஸ்டு கிளர்ச்சி செய்துதான் சுதந்திரம் பெற்றதாகக் கூறிவருகின்றனர், இதனால் தான் நானும் 3 மாத நோட்டீஸ் கொடுத்து சுட்டால் சுடட்டும் என்று போராட்டம் ஆரம்பிக்க இருக்கின்றேன். எப்படியும் இந்தக் கல்வித்திட்டத்தை ஒழித்துத் தீர வேண்டும். வாத்தியார்கள் எதிர்த்தார்கள்; அதோடு போனமாதம் பஞ்சாயத்துத் தலைவர்கள் மாநாடு நடந்தது, 400பேர் கூடினார்கள். இதில் ஆச்சாரியார் அவர்கள் தந்திரமாக ஒரு ஆளை அனுப்பி அதில் பேசி ஏமாற்றப் பார்த்தார். ஆனால் அங்கே அந்த ஆளை வெளியேற்றச் சொல்லிக் கலவரம் நடந்து அந்த ஆள் வெளியேறும்படியாகிவிட்டது. மற்றும் ஜில்லா போர்டுகளும், முனிசிபாலிட்டி களும் இதை எதிர்த்து தீர்மானம் போட்டன.  இவ்வளவுக்குப் பிறகும் ஆச்சாரியார் அவர்களும், நகரங்களுக்கும் இக்கல்வித் திட்டத்தை விஸ்தரிக்கின்றேன் என்று கூறுகிறார் என்றால், நம்மை  மடையர்கள் என்று கருதுவதைத்தவிர வேறு என்னவாக இருக்க முடியும்? ஆகவேதான்  கிளர்ச்சிக் குப் படை திரட்டுகின்றோம். இரத்தம் சிந்தத் தயாராயிருக்கின்றோம். இப்போது ஆள்கிறவர்கள் பார்ப்பனர்; உதைப்பார்கள்; சுடுவார்கள்; எதற்கும் நாம் தயாராக இருக்க வேண்டும். ஏன் இதைச் சொல்கிறேன் என்றால் சட்டத்தால் செய்ய வேண்டிய தெல்லாம் முடிந்துபோய்விட்டன. ஆகவே அரசாங்கம் செய்யும் அக்கிரமங்களைச் சட்டத்தைமீறிக் காரியங்களைச் செய்து தான் நாம் போராட வேண்டியுள்ளது. அந்த நிலைமைக்குச் சர்க்காரே (அரசே) நம்மைக் கொண்டுவந்து விட்டுவிட்டது. ஒன்று அந்தப் படிப்புத் திட்டத்தை ஒழித்துக்கட்டு, அல்லது அங்கேயே சாவு என்று சொல்லி உங்கள் இளைஞர்களை அனுப்ப வேண் டும். தாய்மார்களும் களத்தில் குதிக்க வேண்டும்; இந்தப் போராட்டத்தில் இரண்டி லொன்று  பார்த்துவிட வேண் டியதுதான்.


-------------------23-2-1954 அன்று மெணசியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார்பேருரை: "விடுதலை" 26-2-1954

24.5.15

வள்ளுவன் படத்தைத் தூக்கி எறிந்து விட்டு பாரதிதாசன் படத்தை வைக்க வேண்டும்-பெரியார்

புலவர்களுக்குத் துணிச்சல் இல்லை

இன்றைய உலகம் மாறுதல் உலகம். அதுவும் புரட்சிகரமான மாறுதல் காலம். அந்தப் புரட்சிகரமான மாறுதலுக்கு ஏற்ற தகுதியுடைய மக்களாக நாம் இல்லை. காட்டுமிராண்டிகளாக இருக்கின்றோம். மற்ற உலக மக்களெல்லாம் விஞ்ஞானத்தில் அதிசய, அற்புதங்களையெல்லாம் செய்து கொண்டிருக்கின்றார்கள். நம் நாட்டில் எத்தனை பெரிய அறிஞர்கள், வித்வான்கள், புலவர்கள், டாக்டர் பட்டம் பெற்றவர்கள் யார் வந்தாலும், பழைய குப்பைகளைத் தலை மேல் போட்டுக் கொண்டு, அதைப் பற்றி விளக்கி நம் மக்களை மேலும் மூட நம்பிக்கைக்காரர்களாக்கப் பாடுபடுகிறார்களே ஒழிய, மக்களின் அறிவை வளர்க்க வேண்டுமென்று பாடுபடுவதே கிடையாது.

இன்றைய தினம் இருந்து வருகிற முறைகள், இலக்கியங்கள், புலவர்கள், மகாத்மாக்கள், மகான்கள் எல்லாம் பழைமையைத் தான் கிளறுகிறார்களே தவிர, புதுக் கருத்துக்களை - புதுமையான கருத்துகளை மக்களுக்குத் தேவையானவற்றை எடுத்துச் சொல்வதே கிடையாது. இதை நான் சொல்வது வேண்டுமென்றோ விரோதமென்றோ கருதக் கூடாது. அவர்கள் மனதில் பட்டதை அவர்களுக்குச் சரியென்று பட்டத்தைத்தான் எடுத்துச் சொல்வார்கள். அதனைச் சிந்தித்து உண்மையென்று பட்டதை ஏற்றுக் கொள்ளுங்கள். நான் சொல்வது அத்தனையும் உண்மை, எழுதி நெருப்பில் போட்டால் வேகாது என்று சொல்லவில்லை. நானும் பொய் சொல்லலாம்; நீங்கள், நான் சொல்வதை மற்றவர்கள் சொன்னதைப் போல் உடனே ஏற்றுக் கொள்ளாமல், உங்களை அறிவைக் கொண்டு சிந்தித்து யார் சொன்னது சரியென்று படுகின்றதோ, அதனை ஏற்றுக் கொள்ளுங்கள் என்றுதான் கேட்டுக் கொள்கிறேன்.

நம் நாட்டிலே மனித வாழ்க்கைக்கு - நம் மக்களுக்கு ஏற்றதாக ஒரு இலக்கியம் கூடக் கிடையாது. இருக்கிறது என்று யாராவது எடுத்துக் காட்டினால் பணிவோடு ஏற்றுக் கொள்கின்றேன். நான் ஆணவமாகப் பேசுவதாகக் கருதக் கூடாது. எனக்குள்ள கவலையால் சொல்கிறேன். பழைய வீட்டை இடித்துப் புதிய வீட்டைக் கட்ட வேண்டுமென்று கருதுகின்றவன், பழைய வீட்டில் இடித்த சாமான்களைக் கொண்டு புதிய வீடு கட்ட வேண்டுமென்று முயற்சித்தால் புதிய வீட்டிற்கு இந்தச் சாமான்கள் பொருந்துவதாக இருக்காது. இந்தச் சாமான்களுக்கு ஏற்ற மாதிரி வீட்டை அமைக்க வேண்டியதாக இருக்கும். புதுமைக்குப் பழைமை எவ்வகையாலும் பொருந்தாது. பழையதை எல்லாம் தூக்கிக் குப்பையிலே எறிந்து விட்டு எல்லாவற்றையும் புதியதாக்க வேண்டியிருக்கிறது. நமக்குக் கிடைத்திருக்கிற காலம், சரித்திரம் எல்லாம் பெண், ஆணுக்கு அடிமை என்பது ஏற்பட்ட பின் தான். அதன் பின் தான் மனித தர்ம இலக்கியம் ஏற்பட்டது.

நம் அறிஞர்களும், புலவர்களும் நமக்கு மனித தர்மத்திற்குக் குறளைத் தான் எடுத்துக் காட்டுவார்கள். அந்த வள்ளுவன் கூட இருக்கிற மற்றவனை விடக் கொஞ்சம் பரவாயில்லை என்பது தானேயொழிய, அவன் தான் எல்லாவற்றிற்கும் என்பது பொருந்தாதது. நேற்று ஒரு பள்ளியில் பாரதிதாசன் படத்தைத் திறந்து வைத்துப் பேசும் போது, வள்ளுவன் படத்தைத் தூக்கி எறிந்து விட்டு பாரதிதாசன் படத்தை வைக்க வேண்டுமென்று சொன்னேன். பாரதிதாசனைப் போல சீர்திருத்தக் கருத்துக்களைச் சொல்ல நம் புலவர்கள் முன்வர வேண்டும். புலவர்களை வணக்கத்தோடு கேட்டுக் கொள்கிறேன்.

ஆண்களுக்கு எந்தப் புலவனும் ஒழுக்கத்தைப் பற்றிச் சொல்லவில்லை. அத்தனை நீதி சொன்னவனும், ஒழுக்கம் பற்றிச் சொன்னவனும் பெண்களுக்குத் தான் சொல்லி இருக்கிறான். இன்றைக்கு நாம் நினைப்பதை அவன் எப்படி நினைக்க முடியும். இன்றைய உலகம் வேறு; நேற்றிருந்த உலகம் வேறு.

பழைய வைத்தியன் எவ்வளவு அறிவாளியாக இருந்தாலும், இப்போது இங்கிலீஷ் வைத்தியத்தில் பெயிலாகப் போனவனால் செய்யக் கூடியதைக் கூட அவனால் செய்ய முடியாது. பழைய வைத்தியன் முறையே மணி - மந்திரம் - அவ்டதம் என்பது. இப்போது அதெல்லாம் பயன்படுவது கிடையாது. அதுபோல இன்றைய வாழ்வுக்குப் பழைய சங்கதியைப் படிக்கவே கூடாது. எந்த நெருக்கடியான கட்டமாக இருந்தாலும் நமக்கு எதிரேயுள்ள - நம் அறிவிற்கு, சிந்தனைக்கு, நடப்பிற்கு ஏற்றதைக் கொண்டு தான் செயல்பட வேண்டுமே தவிர, முன்னோர்கள் நடந்து கொண்டார்கள், பழைய புராணம், இதிகாசம் இப்படிச் சொல்கிறது என்று பின்னோக்கியுள்ளதைப் பார்க்கக் கூடாது.

ஓர் ஆணும், பெண்ணும் கூடி வாழ வேண்டுமென்றால், அவர்களாக ஒத்த அன்போடு, நட்போடு கூடி வாழட்டும். புருஷன் - பெண்டாட்டி எஜமான் அடிமைத் தன்மை தேவை இல்லை என்கிறேன். ஒரு மனிதனுடைய வாழ்விற்காக, திருப்திக்காக எதற்காக இன்னொரு ஜீவன் அடிமையாகவே இருக்க வேண்டும். அதற்கு என்ன அவசியம் என்று கேட்கிறேன். மனித ஜீவன்கள் இரண்டுக்கும் ஒரேவிதமான அந்தஸ்து தான் உண்டு. அப்படியிருக்க ஒன்றுக்கு மட்டும் எஜமான் தன்மையையும் மற்றதற்கு அடிமைத் தன்மையையும் ஏன் ஏற்படுத்த வேண்டும்? பெரிய கோடீஸ்வரன் மகளுக்குப் புருஷனானாலும் கவலைப்பட வேண்டியவள் பெண்தான். புருஷனுக்கு அடிமையாக அவன் சொல்வதைக் கேட்டுக் கொண்டு தான் இருக்க வேண்டும். எதிர்த்துப் பேசக் கூடாது. அவனுக்கு வேண்டியவை அத்தனையையும் இவள் தான் செய்ய வேண்டும்.

மனிதன் பகுத்தறிவுவாதி, சிந்தனையுள்ளவன். அவனே இப்படி நடந்து கொள்கின்றான். பகுத்தறிவற்ற ஜீவன்கள் கூட ஒன்றை அடிமையாகக் கருதுவது கிடையாது.

வள்ளுவன் அப்படிச் சொன்னான்; தொல்காப்பியன் இப்படிச் சொன்னான் என்றால், அதெல்லாம் அவன் வாழ்ந்த காலத்திற்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாமே தவிர, இப்போதைக்கு அவை பயன்படக் கூடியதல்ல. இந்த வாழ்க்கைக்கு எவனும் வேலி போட முடியாது. நாளைக்கு எப்படி அமையும் என்று சொல்ல முடியாது. நாளுக்கு நாள், நேரத்திற்கு நேரம் உலகம் மாறிக் கொண்டிருக்கிறது. அதற்கேற்ப மனிதன் மாறிக் கொள்ளத்தான் வேண்டும்.

நம் புலவர்களுக்குத் தைரியம் இல்லை. இலக்கணம் - இலக்கியத்தின் மேலேயே அவர்கள் கண் இருப்பதால் அவர்கள் எண்ணம் பழைமையிலேயே போகிறது. பகுத்தறிவே அவர்களுக்கு ஏற்படுவது கிடையாது. பகுத்தறிவு ஏற்படும்படியான இலக்கியங்கள் - நூல்கள் எதுவும் தமிழில் கிடையாது. இருப்பதெல்லாம் மனிதனின் அறியாமை - முட்டாள்தனம் - மூடநம்பிக்கை இவற்றை வளர்ப்பவை தான். பார்ப்பான் வருகிற வரை நமக்குச் சரித்திரமே கிடையாது. இருந்ததை யெல்லாம் பார்ப்பான் கொளுத்தி விட்டான். ஒன்றிரண்டு மிஞ்சியதையும் மாற்றி விட்டான்.

இந்தப் பெண்டாட்டி போனால், இன்னொன்றைத் தேடிக் கொள்ளலாம் என்று ஆண் கருதுவது போல பெண்களும் கருத வேண்டும். காதல் என்பது ஓட்டலில் போய்ச் சோறு தின்பது போல. நம்மவன் காதலைப் பெரிதுபடுத்தி விட்டான். என்ன காதல் வெங்காயம். அவன் பெரிய பக்தன், அவன் மேல் சாமி இருக்கிறது. அவன் சொன்னால் பலிக்கும் என்று சொன்னால், கேட்கிறவனுக்கு நடுக்கம் தோன்றுவது போல் இருக்கும். அதுபோலத் தான் காதலும். அன்பு என்பது ஒருவருக்கொருவர் காட்டிக் கொள்ளும் வரை தான். ஒருவர் மாறினால், மற்றவரும் மாற்றிக் கொள்ள வேண்டியது தான். இதில் ஒருவர் மட்டும் மாறாமல், அப்படியே இருக்க வேண்டும். இன்னொருவர் தங்கள் இஷ்டப்படி எப்படி வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம் என்பது அயோக்கியத்தனமாகும். சம உரிமையோடு நண்பர்கள் போலிருக்க வேண்டும்.

புலவனென்றால் புதிய கருத்துகளைச் சொல்ல வேண்டும். பழைய குப்பைக் கூளங்களையே கிளறிக் கொண்டிருப்பது, அதற்கு விளக்கம் - உரை - பொருள் என்றெல்லாம் துருவிக் கொண்டிருப்பது பழைமையானது. இன்றைக்கு என்ன நடக்கிறது, நாளைக்கு என்ன நடக்கும் என்பதைப் பற்றிச் சிந்தித்து அதை எடுத்துக் கூறுவதுதான் உண்மை. புலமைக்கும் புலவனுக்கும் இலட்சணமாகும். நாய் எலும்பைக் கடிக்குமாம். அந்த எலும்பில் சதையே இருக்காதாம். அந்த எலும்பு நாயின் எயிறில் பட்டு இரத்தம் வருமாம். அந்த இரத்தம் எலும்பிலிருந்து வருவதாகக் கருதி மேலும் கடித்து எயிறை எல்லாம் கிழித்துக் கொள்ளுமாம். அதுபோன்றுதான் நம் புலவர்கள் பழைய குப்பைகளைக் கிளறி அதன் மூலம் கிடைக்கும் பதவி எலும்பைக் கடிக்க ஆசைப்படுகின்றார்களே தவிர, உண்மை நிலையை எடுத்துச் சொல்லி சமுதாய மக்களை முன்னேற்றுவோம் - அறிவுடையவர்களாக்குவோம் என்று எவரும் பாடுபடுவது கிடையாது.

திருமண சம்பந்தமாகக் கூட்டம் நடந்தால் முதலில் நம் தோழர்கள், அறிஞர் அண்ணாதுரைக்கு வணக்கம் என்று சொல்லித்தான் ஆரம்பிக்க வேண்டும். ஏன் என்றால், 40-வருட காலம் இம்முறையில் பல்லாயிரக்கணக்கான திருமணங்கள் நடைபெற்றும், இது சட்டப்படிச் செல்லுபடி அற்ற திருமணமாக இருந்தது. அதனை அண்ணா அவர்கள் ஆட்சி சட்டப்படிச் செல்லக் கூடியதாக்கி விட்டது. அதற்கு நன்றி தெரிவித்துக் கொள்வதற்காகவே முதலில் அண்ணாவிற்கு வணக்கம் தெரிவித்து ஆரம்பிக்க வேண்டும் என்று சொன்னேன். அடுத்து, கல்வி சம்பந்தமாக ஏதாவது ஆரம்பித்தால் காமராசருக்கு வணக்கம் என்று சொல்லி ஆரம்பிக்க வேண்டும். அறிவுள்ளவன் கட்டாயம் இதைச் செய்வான்.

தமிழனின் பழைய இலக்கியம், சிறந்த இலக்கியம் என்று தமிழ்ப் புலவர்கள் எடுத்துக் கூறும் தொல்காப்பியம் தமிழன் நூலல்ல. வருணாசிரமத் தர்மத்தை பாதுகாக்க ஏற்பாடு செய்து, நமக்குச் சுவையான சிலவற்றையும் சேர்த்து நமக்குள் மடமையையும் - முட்டாள்தனத்தையும் - அறிவற்ற தன்மையையும் வளர்க்க மேல்ஜாதிக்காரனால் புகுத்தப்பட்டதேயாகும்.

அதைத் தான் தமிழ்ப்புலவர்கள் மிக உயர்ந்ததாகப் போற்றுகின்றனர், புகழ்கின்றனர். அதில் இந்த அய்யர் வகுத்த கரணங்கள் மூவோர் மேலோர்க்கும் தான். அது நாளடைவில் கீழோர்க்காயிற்று என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. தமிழனுக்கு இந்நிகழ்ச்சிக்கு முறையே இல்லை என்பதோடு, இதுபோன்ற நிகழ்ச்சி நடைபெற்றது என்பதற்கு ஆதாரமில்லை. தமிழனுக்கு நிகழ்ச்சியானது இருந்திருக்குமானால், தமிழில் அதற்காக ஒரு சொல் இருக்கும். தமிழ் மொழியில் இந்நிகழ்ச்சியினைக் குறிப்பிட்டுக் காட்டக் கூடிய சொல்லே இல்லை என்பதிலிருந்து, இது தமிழனுக்கில்லாத மற்றவனால் புகுத்தப்பட்டது என்பதை உணரலாம். யாராவது புலவர்கள் தமிழர்களுக்கு இந்நிகழ்ச்சி இருந்தது, அதற்கு இதுதான் முறையென்பதை ஆதாரத்தோடு எடுத்துக் காட்டினால் தலைவணங்கி ஏற்றுக் கொள்கிறேன்.

இம்முறையில் திருமணம் செய்து கொள்ளும் மணமக்கள் தங்கள் வாழ்க்கையில் மூட நம்பிக்கையான காரியங்களைக் கைவிட வேண்டும். எக்காரணத்தை முன்னிட்டும் கோயிலுக்குப் போகக் கூடாது. பண்டிகைகள், உற்சவங்கள் முதலான முட்டாள்தனமான காரியங்களில் ஈடுபடக் கூடாது. வரவிற்கு மேல் செலவிடக் கூடாது. எக்காரணத்தை முன்னிட்டும் பிறரிடம் போய் உதவி கேட்கக் கூடாது. நம் சமுதாயத்திற்கும் தங்களாலான உதவிகளைச் செய்ய வேண்டும். குழந்தை பெறுவதில் மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இல்லாமல் இருந்தால் நல்லது. வேண்டுமானால் ஒன்று அல்லது இரண்டோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். ஆடம்பரமான வாழ்வு வாழக் கூடாது. சாதாரண எளிய வாழ்வு வாழ வேண்டும்.

------------------------- 03.07.1968 அன்று நடைபெற்ற பரமசிவம் - பானுமதி திருமணத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை. "விடுதலை" -06.08.1968

23.5.15

கண்ணகிக்கு வீரம் இருந்ததாகக் காட்ட முடியுமா?உண்மையான தமிழன் சிலப்பதிகார மாநாடு நடத்துவானா? - பெரியார்

சிலப்பதிகாரம் பற்றி தந்தை பெரியார்
  

சிலப்பதிகாரம் மூடநம்பிக்கைக் களஞ்சியம்

இப்போது நமது இந்த வகை பிரசாரத்தால் பாரத, ராமாயண, மனு தர்ம சாஸ்திரங்களுக்கும் மதிப்பு குறைந்து விட்டதால்
மனு தர்மத்தையும், ஆரிய தர்மத்தையும் பெரிதும் கொண்ட சிலப்பதிகாரத்தைத் தலையில் தூக்கிக் கொண்டு ஊரூராய் திரிந்து பிரச்சாரம் செய்ய ஒரு கூட்டம் கிளம்பியிருக் கிறது.

இந்த சிலப்பதிகாரம் எப்படி அமைந்திருக்கிறது என்றால் ஆபாச மூட நம்பிக்கை, ஆரியக் கருத்துகளை உட்கருத்தாகக் கொண்டு நல்ல தமிழ் அமைப்பை உடையாகக் கொண்டு தேவடியாளுக்குச் சமமாக அதாவது தேவடியாள் எப்படி பார்ப்பதற்கு அலங்காரமாக இருப்பாளோ, ஆனால் உள்ளே போய்ப் பார்த்தால் உள்ளமெல்லாம் வஞ்சகம் நிறைந்தும் உடலெல்லாம் நோய் கொண்டும் உடையால், அணியால் மக்களை ஏய்த்துப் பிழைத்துக் காணப்படுவாளோ அது போலதான் இந்த சிலப்பதிகாரமுமாகும்.

பாரத-ராமாயணம் போல் அது நாவல் சித்திரக்கதை. அதுவும் குறிப்பிட்ட கொள்கை இல்லாமல் எழுதின கதை.

ஆரியம் தலை தூக்கி நம் அரசர்கள் ஆரியத்திற்கு அடிமைகளாய்த் தாசர்களாய் இருந்த காலத்தில் பகுத்தறிவும் இன  உணர்ச்சியும் இல்லாமல் சித்தரித்த கதையாகும்.

மூட நம்பிக்கைக் களஞ்சியம்; ஆரியக் கோட்டைக்கு அரண். இப்படிப் பட்டதை, தமிழர் பண்புக்கு என்று பிரசாரம் செய்தால் இது மானமுடைமை ஆகுமா?

ஆதிமுதல், அந்தம் வரை, பார்ப்பானை பார்ப்பனியத்தைப் புகுத்தி அமல்படுத்த வேண்டும்; எப்படி எப்படி நாம் நடக்க வேண்டும் என்பதைக் காட்டுகிறது.

நான் ஒன்றும் பயந்து கொண்டு பேசுகிறேன் என்றோ, பொய் பேசுகிறேன் என்றோ நினைக்க வேண்டாம். அந்தக் கதைகளில் உள்ள கருத்தை அப்படியே எடுத்துக் காட்டுகிறேன். ஆகையால் கவனமாகக் கேளுங்கள்.

போன ஜன்மம், வருகிற ஜன்மம் என்று தலைவிதியைக் காட்டி மனிதனை எப்படிப்பட்ட இழிவுக்கும் ஆளாகச் செய்கிறது. பார்ப்பான் சொல்லுகிறபடி, அவன் எது கேட்டாலும் எடைக்கு எடை தங்கம் கொடுக்க வேண்டு மென்று சொல்லுகிறது. ஆரூடம், ஜோதிடம், பில்லி சூனியம் ஆகியவற்றைப் பற்றிச் சொல்லு கிறது.

முட்டாள்தனமாக கற்பையும் பெண் அடிமையையும் பெருமைப்படுத்துகிறது.

கோவலனை அரசன் தண்டித்த மாதிரி நம் நாட்டு ராஜாக்களுக்கே ரொம்பவும் அவமானம் தருவதாகும். ராஜா வீட்டு சிலம்பு எங்கோ போய் விட்டது. கோவலன் சிலம்பு வைத்திருப்பது ராஜாவினுடையது என்று பொய்க்குற்றம் சாட்டப்பட்டதன் உண் மையைக் கண்டுபிடிக்க முடியாத அரசன், கோவலனை வெட்டிக் கொல்லச் சொல்லு கிறான். கோவலன் இறந்து போகிறான்.


இதையறிந்த அம்பாள் கண்ணகிக்குப் பெரும்கோபம் வந்து நிரபராதிகளான மதுரை மக்களைச் சுட்டுச் சாம்பலாக்கினாள்.

 இந்த அம்பாளின் கற்பைப் பற்றிச் சொல்லுவதாய் இருந்தால், தேவடியாள் வீட்டிற்குக் கணவன் போனதை அறிந்த கண்ணகி அந்தத் தேவடியாளை ஏதாவது செய்திருக்க வேண்டும். தாசி மாதவி, கோவலன் கண்ணகியின் கணவன் என்று தெரிந்து அவனை அனுபவிக்கிறாள்.

தேவடியாளுக்கு இதுவா தர்மம்? அப்படிப் பட்டவளுக்குக் கண்ணகி பொருள் கொடுத்து வசதி செய்யலாமா? கோவலன் ஒழுக்கமற்றவன்; கண்ணகி புத்தியற்ற மடப்பெண். அகலிகை, சீதை, துரோபதை, தாரை எல்லாம் கற்புக் கரசிகளாய் இருக்கும்போது, கண்ணகி கற்புக்கு மாத்திரம் முட்டாள்தனம் வேண் டுமா? மற்றும் இந்த அம்மாளுக்குக் கோபம் வந்ததும், தன் மார்பைத் திருகி எறிகிறாள்.

இது என்ன புத்தி? மார்பைக் கையில் திருகினால் வந்துவிடுமா? இந்தப்படி நடந்த சங்கதியும், அனுபவமும் சிலப்பதிகாரம் தவிர வேறு எதிலும் எங்கும் காணக் கிடைக்க வில்லை. அந்தப்படி திருகிப் பிடுங்கின மார்பு (முலை) வீசி எறிந்தால் அது நெருப்புப் பற்றிக் கொள்ளுமா? அதில் பாஸ்பரஸ் இருக்குமா? இந்த மூட நம்பிக்கைக் கற்பனையானது என்ன பயனைக் கொடுக்கிறது?

இதனால் கண்ணகிக்கு வீரம் இருந்ததாகக் காட்ட முடியுமா? அக்கினி பகவானுக்குக் கண்ணகி பார்ப்பனர்களைத் தவிர மற்றவர்களைச் சுடு என்று கட்டளையிட்டாளாம், மதுரை நகரம் சாம்பலாயிற்றாம்;
இதுதான் கண்ணகி கற்பின் பெருமையா? அக்கினி பகவானுக் கென்ன புத்தி வேண்டாமா? ஒரு பெண் பிள்ளை முட்டாள்தனமாக உளறினால் நிர பராதிகளைச் சுடலாமா? ஒரு பட்டணத்தைக் கொளுத்தலாமா என்கின்ற அறிவு வேண் டாமா? பார்ப்பனர்களை எதற்காக மீதி விடவேண்டும். ஆகவே வர்ணாச் சிரம தர்ம மனுநூல், இராமாயண-பாரதத்திற்கும் இதற் கும் என்ன பேதம்? இராமன் பார்ப்பனன். ஆக சூத்திரனைக் கொன்றான்  என்பது இராமாயணம்.

பார்ப்பானை மட்டும் காப்பாற்ற வேண்டு மென்பது சிலப்பதிகாரம். எவ்வளவு முட்டாள்தனமான கொடுமை செய்தாலும் பார்ப்பனர்களைக் காப்பாற்றினால் அவள் பதிவிரதை ஆகிவிடுவாள் என்பது சிலப்பதிகாரம். பாண்டியன் விசாரணை செய்து, அவனுக்குக் கிடைத்த உண்மை மீது கோவலனுக்குத் தண்டனை விதித்தான். ஆனால் கண்ணகி ஒரு விசாரணையும் செய்யாமல் ஒரு குற்றமும் காணாமல் நிரபராதிகளான மக்களை, பெண்களைச் சுட்டு எரித்துக் கொன்றாள். இவள் கற்புக்கரசி, வணங்கத்தக்கவள், தெய்வமானவள். பாண்டியன் குற்றவாளி. இதுதானே சிலப்பதிகாரக் கதை. இதுதான் தமிழர் பண்பாம். இதற்கு மாநாடாம்!

எவ்வளவு முட்டாள்தனம், இந்த மாதிரி யான ஆபாசமும், அநீதியும் நிறைந்து இருக்கும் கதைகளை நாம் வைத்துக் கொண்டு நமக்குச் சொந்தம் என்று சொல்வது?

இவற்றைத்தான் நாம் ஒழிக்க வேண்டு மென்று சொல்லுகிறோம்; சமுதாயத்திற்கு உதவாக்கரை என்று ஒதுக்கி வைக்கிறோம்.
ஆனால் மாநாடு கூட்டும் அன்பர்களோ பார்ப்பானிடம் லஞ்சம் வாங்கிக் கொண்டு, அவன் பிச்சை என்று இடும் பச்சை நோட்டுகளுக்காகப் பிரச்சாரம் செய்கிறார்கள், இந்தப் பச்சோந்திகள்.

மற்றும் இவர்கள், கண்ணகிதான் கற்பு டையவள் என்று கூறுகிறார்கள்; அப்பொழுது மற்றவர்கள் எல்லாம் கற்பில்லாதவர்களா? இது மனிதத் தன்மைக்கே பொருத்தம் இல்லை. ஆனால் அந்த மாதிரி நடந்ததை நாம் பார்த்து இருக்கவும் முடியாது.

இந்தக் கதையைச் சொல்லி நம் பெண்களெல்லாம் கண்ணகிகளாகத் திகழ வேண்டும், அவள்போல் கற்புக்கரசியாக வேண்டும் என்று பிரச்சாரம் செய்கின்றவர்களின் பிள்ளைக் குட்டிகள் முதலாவது இந்த மாதிரி நடந்தால் பொறுப்பார்களா? என்று கேட் கிறோம். இந்தப் பிரசார பிரம்மாக்களின் மாப்பிள்ளைமார்கள் தேவடியாள் வீட்டில் போய் இருந்தால், இவர்கள் பெண்கள் தாசி வீட்டிற்குப் பணம், நகை எல்லாம் அனுப்ப சம்மதிப்பார்களா? இப்படி நடந்தால் ஆண்கள் ஒழுக்கம் உள்ளவர்களாக ஆவார்களா?

இது ஒழுக்கத்தைக் கற்பிக்கும் நூல் ஆகுமா?

ஆகவே, இது போன்ற கதைகள் பெண் களுடைய அடிமைத் தனத்திற்கு அடிகோலுதலாகவும், முட்டாள்தனத்திற்கு மூலாதாரமாகவும், பிற்போக்கிற்கு வழி அமைப்பதாயும், பார்ப்பானுடைய உயர்வைக் காப்பாற்றுவதற் காகவும் செய்யப் பட்ட இலக்கியங்களே தவிர, மனித சமுதாயத்திற்கு எந்த நன்மைக்காகவும் செய்யப்பட்ட இலக்கியங்களாகாது.


----------------------------22.7.1951 இல் சேலம் பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு-"விடுதலை", 27.07.1951.
*********************************************************************************


உண்மையான தமிழன் சிலப்பதிகார மாநாடு நடத்துவானா? - பெரியார்

சென்ற வாரத்தில் சென்னையிலே சிலப்பதிகார மாநாடு என்ற பேரால் ஒரு மாநாடு நடந்தது. உள்ளபடியே கேட்கிறேன், உண்மையான திராவிடன் - தமிழ் மகனாக இருந்தால் சிலப்பதிகார மாநாடு நடத்துவானா? பார்ப்பனர்களுக்கு நல்ல பிள்ளையாக நடத்துவதற்கு ஆக நடத்தப்படுவது என்பதல்லாமல் வேறு என்ன சொல்ல முடியும்?
மற்ற நூல்களைப்பற்றி சொல்ல வேண்டியதில்லை. இந்த 15, 20 வருஷங்களில் நாம் செய்த பிரச்சாரத்தினால் மக்கள் மன்றத்தில் இராமாயணம் நாற்ற மெடுத்துப் போய்விட்டது. அதைக் கொண்டாடவே வெட்கப்படத்தக்க தன்மையிலே வந்து விட்டது. கீதை அஞ்ஞாத வாசம் செய்கிறது. அதனால்தான் இன்று இதை - சிலப்பதிகாரத்தைப் பிடித்துக் கொண்டார்கள். காரணம், இது தமிழ்நாட்டுக் கதை - தமிழன் தொகுத்தது என்று சொல்லித் தமிழர்களை ஏமாற்றுவதற்கே ஆகும்.


இதிலே மட்டும் என்ன வாழ்கிறது? ஒரு ஓவியம் மிக நன்றாக, அழகாக, கண்டோர் வியக்கச் சித்தரிக்கப் பட்டிருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். ஆனால், அந்த ஓவியத்திலேயே ஒரு திராவிடனைக் கால்அடியிலே, கண் பிதுங்க, நாக்கு வெளியே தொங்க, மிதித்துக் கொண்டிருக்கிற மாதிரி சித்தரிக் கப்பட்டிருக்கிறது என்றால் அதை வாழ்த்தவா முடியும்? அதிலே சொட் டுகிற கலைக்காக? அப்படித்தான் சிலப்பதிகாரமும். அதிலே கலை இருக்கிறதென்றால் இருக்கட்டுமே, அதற்காக நம் வாழ்வே இருள் காடாக வேண்டுமா?

சிலப்பதிகாரம் என்பது ஆரியத்தைப் பரப்புகிற ஒரு நூல் என்பதல்லாமல் வேறு என்ன? ஆரம்பம் முதல் இறுதி வரையிலே ஒரே ஆரியம்தானே சாட்சியளிக் கிறது. ஏதோ கதை தமிழ்நாட்டிலே நடந்ததாக ஏற்படுத்தியிருப்பதைத் தவிர.


கோவலனுக்கும், கண்ணகிக்கும் நடக்கிற கல்யாணம் ஆரியப் புரோகிதப்படி - ஆரிய முறைப் படி ஏற்பட்ட திருமணம். அது பெண் அடிமைத் திருமணம். அடுத்தபடியாக அது பண மூட்டைகள் திருமணம். கண்ணகி என்று கூறப்பட்டிருக்கிற பெண்ணுக்குச் சிறிதாவது அறிவு, மனித உணர்ச்சி, தன்மானம் இருந்தது என்று யாராவது ஒப்புக் கொள்ள முடியுமா? அந்தக் கதையின்படி மணமகன் கோவலன் திருமணத்தின்போதே தாசி மீது காதல் கொண்டு தாசி வீடு போய்விடுகிறான். அப்படி யிருந்தும் ஆரியக் கதையில் ஒரு சார்பான கற்பு என்னும் முட்டாள் தனத்தால் கணவனுக்குப் பண உதவி, பண்ட உதவி செய்து வருகிறாள். சொத்து, சுகம், நகை, நட்டு எல்லாவற்றையும் கொடுத்து விடுகிறாள். கணவன் தாசி வீடு போய்விட்டால், இருக்கிற சொத்தையெல் லாமா விட்டுவிட வேண்டும்? ஒரு கணவன் அந்தப்படி நடக்கிற ஒரு மனைவிக்கு அப்படி கொடுப் பானா? கொடுத்தால் கூட்டிக் கொடுப்பவன் என்றுதானே சொல்வோம்.


இந்தக் காலத்திலே ஒரு மடப்பெண்ணாவது இப்படி நடக்க முடியுமா? இதைப் படித்தால் பெண் ஒழுங்காய் நடப்பாளா? ஆண் ஒழுங்காய் நடப்பானா? இதுதான் கற்பு. ஆனால், அப்புறம் ஒவ்வொரு பெண்ணின் கதியும் என்னவாவது? அடுத்தபடியாக ஆருடம் சொல்லுவது, குறி சொல்லுவது போன்ற ஆரிய ஏமாற்றுப் பித்த லாட்டம் சிலப்பதிகாரத்திலே காணப்படுகின்றன.


இதெல்லாம்தான் போகட்டும் என்றால் கடைசி யிலே என்ன நடக்கிறது? நம்முடைய தமிழ்நாட்டு அரசனை ஒரு முட்டாளாகச் சித்தரித்துக் காட்டப்பட்டிருக் கிறது. யாரோ ஒரு ஆசாரி, கோவலன் தான் சிலம்பைத் திருடினான் என்று சொன்ன வுடன் கோவலனைக் கொன்று விடுகிறான். இந்த அரசனை எப்படிப் புத்திசாலி என்று ஒத்துக் கொள்ள முடியும்? இதுதான் போகட்டும் என்றால் கோவலன் இறந்த பிறகு கண்ணகி கோபங்கொண்டு ஒரு பக்கத்துக் கொங்கையைத் திருகி எறிகிறாளாம். உடனே அது நெருப்புக் கட்டியாக மாறுகிறதாம். அதனால் மதுரையே தீப்பிடித்து எரிகிறதாம். நம்ப முடியுமா? பாண்டியன் நடந்து கொண்ட அயோக்கியத்தனத்திற்கு மதுரை மக்கள் சாம்பலாக வேண்டுமா? இதுவா கற்புக்கு யோக்கியதை? தமிழ்க் கவிக்கும் பார்ப்பனக் கவிக்கும் என்ன பேதம்? ஆரியப் புராணங்களுக்கும் தமிழன் இலக்கியங்களுக்கும் என்ன பேதம்? இரண்டும் ஆரிய அடிப்படைக் கொள்கைப் பிரச்சாரம்தானே! அக்கினி பகவான் வந்து கண்ணகியை நான் யாரைச் சுட்டுச் சாம்பலாக்கட்டும் என்று கேட்டால் இந்த மகா பதிவிரதை பார்ப்பனர்களைச் சுடக் கூடாது என்று கட்டளையிடுகிறாள். இதை எப்படித் தமிழர் நூல் என்று கொள்ள முடியும்? கண்ணகிக்கும் சீதைக்கும் என்ன வித்தியாசம்? தமிழர்கள் சிலப்பதிகாரத்தின் தர்மம் வர்ணாசிரமம்தானே.


இராமாயணத்தின் கடைசி தர்மம் சூத்திரன் (சம்பூகன்) கொல்லப்பட்டு வருணாசிரம தர்மம் காப்பாற்றப்பட்டதுதானே! சிலப்பதிகாரத்தின் கடைசி தர்மம், சூத்திரர்கள் அகாரணமாய் எரிக்கப்பட்டு, பார்ப்பனர் காப்பாற்றப்பட்ட வருணாசிரம தர்மந்தானே? இந்த விஷயத்தில் இராமாயணத்திற்கும் சிலப்பதிகாரத்திற்கும் பேதம் என்ன? இதெல்லாம் பார்ப்பனர்களுக்கு நல்ல பிள்ளையாகி நலம் பெற செய்யும் தன்மானமும், இன உணர்ச்சியும் அற்ற தன்மை தானே!

-----------------------30.3.1951 அன்று காங்கேயம் பொதுக் கூட்டத்தில் மணியம்மையார் தலைமையில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரை - "விடுதலை" 3.4.1951


22.5.15

கண்ணகி என்ன செய்திருக்க வேண்டும்?-பெரியார்

கண்ணகி என்ன செய்திருக்க வேண்டும்?

சிலப்பதிகாரத்தில், 'கண்ணகி என்ற பெண் மதுரை மாநகர் மீது தனது முலையைத் திருகி எறிகிறாள் கோபாவேசத்தோடு! உடனே மதுரை பற்றி எரிகிறது!' என்று எழுதியிருப்பதுடன் இதுதான் அவளுடைய கற்புக்கு எடுத்துக்காட்டு என்றும் கூறுகிறார்கள்!

இன்று எந்த ஒரு பெண்ணாவது - அவள் எவ்வளவு தான் கற்புடைய கன்னிகையாயிருந்த போதிலும் - இந்தக் காரியத்தைச் செய்ய முடியுமா? எங்காவது இம்மாதிரி காரியம் நடந்திருக்க முடியுமா? நடக்குமா? அந்தச் சமயத்திலும் அவள் தீய்க்கு ஆணையிடுகிறாள், 'பார்ப்பனர்களை'த் தவிர்த்து, மற்றவர்களை அழித்து விடு என்று! பார்ப்பனரை அழிக்காதே என்று ஆணையிடுகிறவள், தமிழ்ப் பெண்ணாக இருப்பாளா? நீங்கள் சிந்தித்துப் பாருங்கள்!

அவளது கற்புக்கு மற்றோர் எடுத்துக்காட்டாக சொல்லப்படுவது தன் கணவனான கோவலன், மாதவி என்ற ஒரு தாசியோடு கூடிக் குலாவியிருந்த காலத்து அவன் தன்னைப் புறக்கணித்து விட்டு தன்னைத் தேடி தன் வீட்டுக்கு வராமலிருந்தும் கூட, அவன் கஷ்டப்படுகிறான் என்றறிந்து, அவனுக்காக வேண்டித் தனது விலையுயர்ந்த ஆபரணங்களையும், சேலைகளையும் மாதவி வீட்டுக்கு அனுப்பி வைத்தாள் என்பதாகும்.

இத்தகைய முட்டாள்தனமான கற்பு எங்களாவது சிறந்த வீரத் தமிழ்ப் பண்பாகுமா? தமிழ்ப் பண்பு இத்தகைய கற்பையா தமிழ் மக்களுக்குப் போதித்து இருக்கிறது? உண்மை தமிழச்சியானால் அவள் ஒன்று மாதவி வீடேறி அந்தக் கோவலைக் கட்டி இழுத்து வந்திருக்க வேண்டும். அல்லது அவனை அவன் விருப்பப்படியே விட்டு விட்டுத் தான் வேறொரு ஆடவனை மணந்திருக்க வேண்டும். அது தனக்கு விருப்பமில்லையானால் சும்மாவாவது இருக்க வேண்டும். இதை எல்லாம் செய்வதை விட்டு தன் கணவன், மேலும் ஒரு தாசியோடு கூடிக் குலாவிக் கொண்டிருக்கட்டும் என்று தன் நகையையும், சேலையையும் அந்தத் தாசிக்கு அனுப்பி வைப்பதா தமிழ்ப் பண்பு? இல்லை; இல்லை.

இது பெண் ஆணுக்கு அடிமை என்ற ஆரியக் கருத்தைத் தமிழர்களிடையே புகுத்துவதற்காகத் தமிழன் கையைக் கொண்டே எழுதச் செய்யப்பட்ட ஒரு பித்தலாட்டக் கதையே. இதை நம் பண்டிதர்கள் இன்னும் உணராது அய்ம்பெருங் காப்பியங்களில் ஒன்றாகச் சிறப்பித்துக் கூறுகிறார்களே! இது சரியா?

சிறப்பு வாய்ந்த தமிழ் நூல்கள் இருந்திருக்கலாம். அப்படிப்பட்ட தமிழர் பண்பை எடுத்துக்காட்டக் கூடிய தனித் தமிழ் நூல்களை எல்லாம் ஓரளவுக்கு இந்துமதக் கடவுளும், பெருமளவுக்கு ஆரிய சூ ழ்ச்சியால், ஆடி ஆற்றுப் பெருக்கின் போது பழம் சுவடிகளுடன் நதிப் பெருக்கில் இடும் மூடப் பழக்கமும் கொள்ளை கொண்டு விட்டன. எஞ்சி நின்ற ஒன்றிரண்டும் ஆரியத்திற்கு எதிர்ப்பாயிருப்பதால் அவற்றிற்கும் மக்களிடையே செல்வாக்கு ஏற்படாமல் செய்யப்பட்டு வருகின்றன.

தமிழில் ஆரியம் புகுந்ததால் தான் மக்களிடையே காட்டுமிராண்டித்தனம் புகுந்து விட்டது. இதில் பண்டிதர்கள் கவனம் செலுத்த வேண்டாமா? கவலை எடுத்துக் கொள்ள வேண்டாமா? வெளிநாட்டு மக்களெல்லாம் காட்டுமிராண்டிகளாக வாழ்ந்த காலத்தில் கப்பலோட்டி, கடல் கடந்து வாணிகம் நடத்திய தமிழர்களின் மரபில் இன்று ஒரு நியூட்டன் தோன்றவில்லை. ஓர் எடிசன் தோன்றவில்லை. ஒரு மார்க்கோனி தோன்ற முடியவில்லையே என்பதை அறிந்து கொள்ள வேண்டாமா?

----------------------- தந்தை பெரியார் அவர்கள் 'மொழி' என்னும் பொருள் குறித்தும், 'எழுத்து' என்னும் பொருள் குறித்தும் அரசினர் கல்லூரியிலும், சென்னை பச்சையப்பன் கல்லூரியிலும் 20-ஆண்டுகளுக்கு முன்பு ஆற்றிய விரிவுரைகளின் தொகுப்பு. "விடுதலை", 05.01.1968

21.5.15

கண்ணகி கதை பெண்களை முட்டாளாக்குகிறது!

கண்ணகி கதை பெண்களை முட்டாளாக்குகிறது!


இந்த நிகழ்ச்சியானது இதுவரைத் தமிழ் மக்களாகிய நம்மிடையே நடைபெற்று வந்த முறைக்கு மாறாகப் பகுத்தறிவு கொண்டு, திருத்தத்தோடு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

இப்போது இங்கு நடைபெற்ற இம்முறை நிகழ்ச்சியானது இதுவரை சட்டப்படிச் செல்லத்தக்கதாக இருந்ததை, இப்போது வந்துள்ள பகுத்திவாளர்கள் ஆட்சியானது சட்டப்படிச் செல்லுமென்றாக்கி இருக்கிறது. முதலில் நாம் அதற்கு நம் நன்றியைத் தெரிவித்துக் கொள்வது நம் கடமையாகும்.

நம்முடைய சமுதாயத்தில் இம்மாறுதலான நிகழ்ச்சியை நடத்துவதற்கான காரணத்தை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். இதுவரை நம்மிடையே நடைபெற்று வந்த திருமணங்கள் யாவும் வைதிகத் திருமணங்களேயாகும். இப்போது இங்கு நடைபெற்றது பகுத்தறிவுத் திருமணமாகும். வைதிகத் திருமணத்திற்கும், பகுத்தறிவுத் திருமணத்திற்கும் உள்ள பேதம் என்னவென்றால், வேதத்தின் கருத்துப்படியானது வேத முறை என்றால் இந்து மத முறை. வேதம் என்பது பார்ப்பனருக்கு உரிமையானது. மற்றவர் பார்ப்பனரல்லாதார் தொடக் கூடாது, படிக்கக் கூடாது, கேட்கக் கூடாது, பார்க்கவும் கூடாது என்றிருக்கும் போது, வைதிகத் திருமணத்தைத் தமிழன் செய்து கொள்கிறானென்றால், அவன் தனது மானமற்றத் தன்மையையும், இழிவையும் நிலை நிறுத்திக் கொள்கின்றான் என்பதே பொருளாகும்.

வேதத்திற்கும், மதத்திற்கும், கடவுளுக்கும், ஜாதிக்கும் இங்கு இடமில்லை. இம்முறையில் அவற்றைக் குறிக்கும் எந்தக் காரியங்களும் நடைபெறுவது கிடையாது. பகுத்தறிவோடு அவசியத்தைக் கருதி, தேவையானவற்றைக் கொண்டு செய்யப்படுவதே இம்முறையாகும்.

மனிதன் தனது இழிவற்று வாழ வேண்டுமானால், கடவுள் - மதம் - புராணம் - இதிகாசங்களும் ஒழிக்கப்பட வேண்டும். இவற்றையெல்லாம் ஒழித்தால் தான் நம் இழிவு - மானமற்றத் தன்மையும் நீங்கும். இந்நிகழ்ச்சியின் தத்துவம் பெண் சமுதாயம் ஆணிற்கு அடிமையல்ல, ஆண்களுக்குரிய அத்தனை உரிமைகளையும் பெண்கள் பெற வேண்டுமென்பதற்காகவேயாகும்.

பெண்ணடிமையை வலியுறுத்தவும் மக்களைப் பகுத்தறிவுவாதிகளாக்காமல் மடமையில் ஆழ்த்துவதாகவும், ஜாதிப் பிரிவினை, இழிவினை நிலைநிறுத்துவதாகவும் இருந்ததால் இதனை மாற்றிப் பெண்ணடிமையை நீக்கவும், மக்களைப் பகுத்தறிவுவாதிகளாகவும், ஜாதி இழிவுகளை ஒழிக்கவுமென்று ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்று வருகின்றது.

இம்முறைத் திருமணங்களைச் சீர்திருத்தத் திருமணம், பகுத்தறிவு திருமணம், சுயமரியாதைத் திருமணம் - தமிழர் திருமணம் என்னும் பெயரால் 1926-முதல் சுமார் 40, 43-வருடங்களாக நடைபெற்று வருகிறது என்றாலும், இம்முறையானது சட்டப்படிச் செல்லாது என்று இருந்தது ஒரு பெரும் குறையாக இருந்தது.

இப்போது அமைந்திருக்கும் ஆட்சி தமிழர்களாட்சியானதாலும், திராவிடர் கழகக் கொள்கையை உடைய ஆட்சியானதாலும் இதனைச் சட்டப்படிச் செல்லுமென்றாக்கியுள்ளது. இம்முறையில் திருமணம் செய்யும் நாம் முதலில் இந்த அரசுக்கு நன்றி செலுத்துவது கடமையாகும்.

பெண்கள் ஆண்களுக்கு அடிமையாக இருப்பதற்கென்றே பிறப்பிக்கப்பட்டவர்கள். அவர்கள் உரிமையோடு ஆண்களுக்குச் சமமாக வாழக் கூடாதவர்கள் என்பதை வலியுறுத்தத் தான் நம்முடைய இலக்கியங்கள் என்பவைகள் இருக்கின்றன.

நாம் காட்டுமிராண்டிக் காலத்தில் காட்டுமிராண்டியாக மனிதன் இருந்த போது எழுதப்பட்டதுதான் நம் இலக்கியங்களாகும். நம் புலவர்கள் பெருமைப்படும் வள்ளுவன் பெண்களைப் பற்றி என்ன சொல்கிறான் என்றால், பெண் கடவுளைத் தொழ வேண்டும் என்கின்றான். மற்றும் புராணங்கள் - கடவுள் கதைகள், இலக்கியங்கள் எல்லாமே பெண்கள் ஆண்களுக்கு அடிமையாக இருக்க வேண்டியவர்கள் என்பதை வலியுறுத்துவதாகவே இருக்கின்றன. இந்தத் துறையில் ஒரு மாறுதல் ஏற்பட வேண்டுமென்று சொன்னதும் அதற்காகத் தொண்டாற்றியதும் நம் சுயமரியாதை இயக்கமேயாகும்.

பெண் சாகும் வரை தன் கணவனோடு இருக்கத் தக்கவள் என்று சொல்லி - ஆண்கள் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளலாம், எவ்வளவு பெண்களோடு வேண்டுமாலும் சுகம் அனுபவிக்கலாம்.

ஆனால், பெண்கள் கணவனைத் தவிர மற்றவனை நினைத்தாலே கற்புக் கெட்டு விடும் என்கின்றான். நம் கடவுள் கதைகள் - புராணங்கள் - இதிகாசங்கள் யாவும் இதைத்தான் சொல்கின்றன. நம் கடவுள் கதைகளாக இருப்பதில் - ஒரு பக்தன் தன் மனைவியை இன்னொருவனுடன் தன் மனைவியை அடகுப் பொருளாக வைத்திருக்கின்றான் என்பது போன்று பல கதைகள் எழுதி வைத்திருக்கின்றான்.

நம் அரசு கண்ணகிக்குச் சிலை வைத்து நம் சமுதாயத்தை - குறிப்பாகப் பெண்கள் சமுதாயத்தைக் கேவலப்படுத்துவதாகும் என்று குறிப்பிட்டேன். ஏன் இப்படிக் குறிப்பிடுகின்றேன் என்றால், எதற்காக ஒரு பெண், தன் கணவன் இன்னொரு பெண்ணுடன் போனதற்காக உணவருந்தாமல், பாயில் படுக்காமல் இருக்க வேண்டும்? இது மடத்தனத்தைக் காட்டுகிறதே தவிர, கற்பைக் காட்டுவதாக இல்லை.

எந்த ஆணும் தன் மனைவி இன்னொருவனுடன் சென்றுவிட்டாள் என்பதற்காக எவனாவது உணவருந்தாமல், பாயில் படுக்காமல் இருக்கின்றானா? இருந்திருக்கின்றானா? என்றால் கிடையாது. மனைவிக்குக் கொஞ்சம் உடல் நிலை நலம் இல்லை என்று தெரிந்தாலே ஆண்கள் வேறு பெண்ணைத் தேட ஆரம்பித்து விடுகின்றனர். கண்ணகிக் கதை பெண்களை மடைச்சியாக்கப் பயன்படுமே தவிர, அறிவு வளர்ச்சிக்குப் பயன்படாது.

தமிழகத்தில், கற்புடையவள் கண்ணகி - அவளைப் பின்பற்றி அவளை வழிகாட்டியாகக் கொண்டு பெண்கள் வாழ வேண்டும் என்றால், தமிழகத்திலிருக்கிற மூன்று கோடி பெண்களில் கண்ணகி ஒருத்தித் தான் கற்பு உடையவள் என்றால், மற்றப் பெண்கள் எல்லாம் விபசாரிகள் என்பதுதானே பொருள். இதை மானமுள்ள எவனும், அறிவுள்ள எவனும் ஒத்துக் கொள்ள முடியாதே. எதற்காக ஒரு பெண் ஆணிற்கு அடிமையாக இருக்க வேண்டும்? அதற்கு என்ன அவசியம் என்பதை சிந்திக்க வேண்டுகிறேன்.

இரண்டாவது மூட நம்பிக்கையை வளர்ப்பது திருமணம் என்றால், நேரம் பார்க்க வேண்டும், நாள் - நட்சத்திரம் பார்க்க வேண்டும், சாமி கேட்க வேண்டும், பொருத்தம் - ஜாதகம் பார்க்க வேண்டும் என்பதன் மூலம் மடமையையும், சடங்குகள் என்பதாகச் சிறிதும் தேவையும், அவசியமும், சம்பந்தமும் அற்ற முறையில் பானைகள் அடுக்குவது, குத்துவிளக்கு வைப்பது, அம்மி - அரசாணி வைப்பது, ஓமம் வளர்ப்பது என்பதெல்லாம் எதற்காக என்று கேட்கக் கூடாது என்பதன் மூலம் மூடநம்பிக்கையையும் வளர்க்கின்றன. நேரம், காலம், பொருத்தம், ஜாதகம் எல்லாம் பார்த்துச் செய்யப்பட்டவை தான் சீதை, திரவுபதை, கண்ணகி, சாவித்ரி ஆகியோரின் திருமணங்கள் ஆகும் என்று கதை எழுதி இருக்கின்றார்கள். அந்தக் கதைகளில் இவர்கள் எப்படி எப்படி துன்பப்பட்டார்கள், என்னென்ன கொடுமைகளுக்கு ஆளாக்கப் பட்டிருக்கிறார்கள் என்பதைச் சிந்திக்க வேண்டும்.

இந்தப் பொருத்தமும், ஜாதகமும், காலமும், நேரமும் ஏன் அவற்றைத் தடுக்க முடியவில்லை என்பதைச் சிந்தித்தால் இவை யாவும் நம்மை மடையர்களாக்கவும், மூட நம்பிக்கைக்காரர்களாக்கவும் பார்ப்பனர்களால் ஏற்பாடு செய்யப்பட்டவையே யாகும்.

அடுத்தது ஜாதி இழிவைப் பாதுகாப்பது. ஒருவனுக் கொருவன் உயர்ந்தவன் தாழ்ந்தவன் - தீண்டப்படாதவன், பஞ்சமன் - சூத்திரன் என்பதை வலியுறுத்தக் கூடிய வகையில் நம்மை விட உயர்ந்தவன் என்று பார்ப்பானை அழைத்து அவனைக் கொண்டு திருமணம் செய்வது என்பது நம் ஜாதி இழிவை நிலை நிறுத்துவதேயாகும்.

சுயமரியாதை இயக்கத் தொண்டின் காரணமாக இப்போது ஜாதி விட்டு ஜாதி செய்யும் திருமணங்கள் 100-க்கு 50-நடைபெறுகின்றன. பெண்கள் நிறைய படிக்க ஆரம்பித்தால் இன்னும் இது அதிகமாகும். பெண்கள் 20, 22-வயது வரைப் படிக்க வேண்டும். அத்தோடு தங்கள் வாழ்விற்கான ஒரு தொழிலையும் கற்றுக் கொள்ள வேண்டும். அப்போதுதான் திருமணம் ஆனாலும் பெண்கள் ஆண்களோடு சமத்துவமாக வாழ முடியும்.

இதுவரை அமைந்த ஆட்சிகளின் இலட்சியம் என்னவென்றால், மக்களைப் படிக்கவிடாமல் பாதுகாப்பதோடு, மதம், ஜாதி, சாஸ்திரம், பழமை ஆகியவற்றிலிருந்து மாறாமல் நம் மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதேயாகும். நேற்று வரை நடைபெற்ற ஆட்சி இதைக் காப்பதாகத் தான் இருந்தது. இப்போது வந்திருக்கும் தி.மு.க ஆட்சிதான் இதை உடைத்தெரிந்து சுயமரியாதைத் திருமணத்தைச் சட்டபூர்வமாக்கி இருக்கிறது.

மணமக்கள் தங்கள் ஒப்பந்தத்தில் கூறியபடி சமத்துவத்தோடு பழக வேண்டும். முட்டாள்தனமான, மூடநம்பிக்கையான, காட்டுமிராண்டித் தன்மையுடைய பண்டிகைகள், விழாக்கள் கொண்டாடக் கூடாது. வரவுக்கு அடங்கிச் சிக்கனமாகச் செலவிட வேண்டும். பொதுத் தொண்டு செய்வதுதான் இல்லறம் என்று கருத வேண்டும். கூடுமான வரையில் குழந்தை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். முடியவில்லையென்றால் ஒன்று இரண்டு அத்தோடு நிறுத்திவிட வேண்டும்.

------------------ 09.03.1969 அன்று பூதலூரில் நடைபெற்ற திருமணத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை. "விடுதலை", 17.03.1969