Search This Blog

28.7.09

அப்பம் பெருகிய அதிசயம்! பகுத்தறிவுக்கு ஒவ்வக் கூடியதுதானா?


நிரூபிப்பார்களா?

அப்பம் பெருகிய அதிசயம்!

மலையின்மேல் பகுதி. இயேசு கிறிஸ்துவின் சொற்பொழிவில் ஆழ்ந்து ஒன்றியிருந்தனர் ஆயிரமாயிரம் பேர்.

அவர்களது ஆன்மீகத் தேவையை மட்டுமல்ல; உடல் ரீதியான குறைகளையும் இயேசு களைந்தார். பார்வையற்றோர் பார்வை அடைந்தனர். காது கேளாதோர் காது கேட்கும் சக்தி பெற்றனர். வாய் பேசாதவர்கள் பேசினர். முடவர்கள் நடந்தனர். இப்படி அவரது அற்புதங்கள் ஏராளம்!

நேரம் கடந்து கொண்டே இருந்தது. அனைவருக்கும் பசி உண்டாயிற்று. இயேசு தன் சீடர்களை அழைத்தார். என்ன செய்யலாம்? என்று கேட்டார்.

பிலிப் என்பவர், இத்தனை பேருக்கும் வெளியில் உணவு வாங்கினாலும் போதாதே! என்றார்.
இன்னொரு சீடரான அந்திரேயா என்பவர், இங்கே ஒரு சிறுவன் இருக்கிறான். அவனிடம் 5 அப்பங்களும், 2 மீன்களும் இருக்கின்றன. ஆனாலும் இத்தனை பேருக்கும் அவை போதாதே என்று கூறினார்.

அதைக் கேட்ட இயேசு பெருமான், அனைவரையும் பந்தியில் அரும்படி சொன்னார். சிறுவன் தன்னிடம் இருந்தவற்றை அவரிடம் கொடுத்தான். இயேசு கிறிஸ்து அதை வாங்கி ஆசீர்வதித்தார்.

என்னே ஆச்சர்யம்! அந்த அய்ந்து அப்பங்களும் ஆயிரமாயிரம் அப்பங்களாக மாறின. பந்தியில் அமர்ந்திருந்த அனைவரும் திருப்தியாக சாப்பிட்டு முடித்தனர். அதோடு மாத்திரமல்ல, 12 கூடை அப்பங்கள் மீதியாயின.

------------------பால்மர் பரமதாஸ்

இந்த வாரம் வெளிவந்த ஓர் இதழில் இந்தச் செய்தி இடம் பிடித்திருந்தது.
இது அந்த இதழின் கற்பனையல்ல பைபிளில் இருக்கும் ஒன்றுதான்.
கிறித்துவ மதத்தைச் சேர்ந்தவர்கள் இன்றைக்கும் இதனை நம்பிக் கொண்டுதானிருக்கின்றனர்.
ஆனாலும் இது பகுத்தறிவுக்கு ஒவ்வக் கூடியதுதானா? நடக்கும் என்று நம்புவார்களேயானால் ஞாயிறன்று கூடும் திருச்சபையில் இயேசுவிடம் மன்றாடி, நிரூபித்துக் காட்டுவார்களா?


---------------------"விடுதலை" ஞாயிறுமலர் 4-7-2009

இட ஒதுக்கீட்டில் முட்டுக்கட்டை எங்கே?




மத்திய அரசுத் துறைகளில், கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு என்ற சட்டம் சொன்னாலும், அதனைச் செயல்படுத்துவதில் ஆயிரம் ஆயிரம் முட்டுக்கட்டைகள் தலைதூக்கி நிற்கின்றன.

அமைச்சர்களையே திசை திருப்பக்கூடிய அதிகாரவர்க்கம் என்பது மத்திய அரசுத் துறைகளில் பார்ப்பனர்களின் கையடக்கத்துக்குள் முடங்கிக் கிடக்கிறது.

மத்திய பணியாளர் தேர்வாணையம் என்கிற சட்ட ரீதியான அமைப்பேகூட சட்ட விரோதச் செயல்களில் துணிந்து இறங்கிச் செயல்படுகிறது.

அய்.ஏ.எஸ். தேர்வில் திறந்தபோட்டியில் வெற்றி பெற்ற பிற்படுத்தப்பட்டவர்களை, பிற்படுத்தப்பட்டோர் பட்டியலுக்குக் கொண்டுவந்து, திறந்த போட்டி என்றால் அது முழுக்க முழுக்க உயர் ஜாதிப் பார்ப்பனர்களுக்கே உரித்தானது என்பதுபோல, சட்ட விரோதமாக ஆக்கப்பட்டுவிட்டது. இந்தச் சட்ட விரோத செயலுக்குக் காலதாமதத் தீர்ப்புகள்மூலம் நீதிமன்றமும் தன் பங்குக்குத் துணை போவது பெரிதும் வருந்தத்தக்கதாகும்.

இந்த ஆண்டு அய்.அய்.டி.,யில் 6000க்கும் மேற்பட்ட இடங்களில் அகில இந்திய நுழைவுத் தேர்வில் 1398 பிற்படுத்தப்பட்டோர் திறந்த போட்டியில் தக்க மதிப்பெண்களுடன் வெற்றி பெற்றுள்ளனர் என்பது மகிழத்தக்க தகவல் ஆகும்.

ஆனால், என்ன நடந்திருக்கிறது? திறந்தபோட்டியில் இடம்பெறவேண்டிய 1398 இடங்களை, பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டிற்குக் கொண்டு சென்றதால், ஏற்கெனவே பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டில் இடம்பெற்ற 1398 பேர்கள் வெளியேறும்படி ஆகிவிட்டது. அதாவது 1398 பிற்படுத்தப்பட்டோர்களுக்கான இடங்கள் சட்ட விரோதமாகப் பறிபோய் விட்டன.

இந்தக் கொலை பாதகச் செயலை யார் கேட்பது? பாதிக்கப்பட்டோர் உச்சநீதிமன்றத்திற்குச் சென்று வாதாடுவது இயலக்கூடியதுதானா? அப்படியே வழக்கைத் தொடுத்தாலும், அரசு தரப்பில் பெரிய புகழ்பெற்ற வழக்கறிஞர்களை ஏற்பாடு செய்து வாதாடுகிறார்கள் அவர்களுக்கு அரசு செலவு பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கோ சொந்த செலவு!

சட்ட விரோதமான காரியங்கள் அரசு முறையில், அரசு செலவில் ஓகோ என்று நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

இதற்கு என்னதான் தீர்வு? பிற்படுத்தப்பட்டோருக்கான நாடாளுமன்றக் குழு அமைக்கப்படுவதும், அரசமைப்புச் சட்ட அங்கீகாரம் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு அளிப்பதுமேயாகும்.

அரசமைப்புச் சட்டத்தின்படி அதிகாரப் பலத்தோடு இவை செயல்படும்போது, சட்ட விரோதமாகச் செயல்படும் அமைப்புகளைத் தட்டிக் கேட்க முடியும்; ஏன், தண்டிக்கவும் முடியும்.

இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவதில் தவறு செய்யும் அதிகாரிகளுக்கு மூன்றாண்டுத் தண்டனை, 50 ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் சேர்ந்து என்று நாடாளுமன்ற நிலைக்குழு (தலைவர் திரு. சுதர்சன நாச்சியப்பன்) பரிந்துரை செய்திருக்கிறது. ஆனால், நாடாளுமன்றத்தில் அதற்கான மசோதாவை வைக்கும்பொழுது மிகவும் விழிப்பாக இருந்து அந்த சரத்துகளை அகற்றிவிட்டனர்.

சமூகநீதிக்கு எதிராக இருக்கக் கூடியவர்கள் மிகவும் திட்டமிட்டு, நயவஞ்சகமாகச் செயல்பட்டு முதுகில் குத்தி வீழ்த்தி விடுகிறார்கள்.


மக்கள் தொகையில் தாழ்த்தப்பட்டோரும், பிற்படுத்தப்பட்டோரும், சிறுபான்மையினரும் 80 விழுக்காட்டுக்கு மேலிருந்தும், அவர்களின் உரிமைகள் மீது இட ஒதுக்கீட்டுக்கு எதிராக இருக்கக் கூடிய சக்திகள் விளையாடிப் பார்க்கின்றன.

தமிழ்நாட்டில் தந்தை பெரியாரும், அவர் கண்ட இயக்கமும் மிகப்பெரிய அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வைத்துள்ளதால் ஆதிக்க சக்திகள் வாலைச் சுருட்டி வளையில் வைத்துள்ளன.

இத்தகைய விழிப்புணர்வு வட மாநிலங்களிலும் பரவினால்தான் சமூகநீதி உறுதிப்படுத்தப்படும்.

ஆம், தந்தை பெரியார் எல்லைகளைக் கடந்து தேவைப்படுகிறார். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் 300 க்கும் மேல் இருக்கின்றனர்.

ஒடுக்கப்பட்ட மக்களின் இந்தப் பிரதிநிதிகள் கடமை உணர்வுடன் கூர்மையாகச் செயல்பட்டால் ஒரு நொடிக்குள் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்குமே!

------------------"விடுதலை" தலையங்கம் 27-7-2009

27.7.09

உலக நாடுகள் -தூரப்பார்வை -செர்பியா


செர்பியா

அய்ரோப்பாவின் தென்கிழக்குப் பகுதியில், மாசிடோனியாவுக்கும் ஹங்கேரிக்கும் இடையில் அமைந்துள்ள செர்பியாவில் மன்னராட்சி 1918இல் தான் ஏற்பட்டது. செர்பியர்கள், குரோட்கள், ஸ்லோவின்கள் என மூன்று இனத்தவரும் சேர்ந்த நாடு. 1929இல் நாட்டின் பெயர் யூகோஸ்லேவியா என மாற்றம் பெற்றது.

1941இல் நாட்டின் மீது ஜெர்மனி படையெடுத்தது. நாட்டில் இருந்த பகுதி ராணுவப் படையினர் தாக்குதலை எதிர்த்தனர். இந்தப் பகுதி ராணுவப் படையினர் அதுகாறும் தங்களுக்குள் சண்டை போட்டுக் கொண்டு இருந்தவர்கள். அந்நியப் படையெடுப்பு ஏற்பட்டவுடன், தங்களுடனே சண்டை போட்டுக் கொண்டே படையெடுப்பையும் எதிர்த்தனர். 1945இல் ஜெர்மனி தோற்கடிக்கப்பட்ட நிலையில் யுகேஸ்லேவியாவின் முழு கட்டுப்-பாட்டையும் ஜோசப் டிட்டோ கைப்பற்றினார்.

டிட்டோ ஒரு கம்யூனிஸ்ட். அவரது ஆட்சியும், 1980க்குப் பிறகு அவர் மறைந்த பிறகு தொடர்ந்த அவரது கட்சி ஆட்சியும் வார்ஸா ஒப்பந்த நாடுகள் எனப்படும் கம்யூனிச நாடுகளுக்கும் மேற்கு நாடுகளுக்கும் இடையில் சுமுகமான முறையில் நடந்து வந்தது குறிப்பிடத்தக்கது. அணி சேரா நாடுகள் என்ற வகையில் இந்தியாவின் நேரு, எகிப்தின் நாசர், யுகோஸ்லேவியாவின் மார்ஷல் டிட்டோ ஆகியோர் உருவாக்கிய கொள்கை, இரண்டு பெரும் வல்லரசுகளான அமெரிக்கா, சோவியத் இடையே நடுவுநிலை வகித்து வந்தன. 45 ஆண்டுகள் இப்படி சீராக ஆட்சி நடந்தது.

1990இல் சோவியத் கலகலத்த பிறகு ஏற்பட்ட மாற்றங்களின் விளைவாக இனக்குழு உணர்வும் விடுதலை உணர்வும் மக்களிடையே எழுந்தன. விளை-வாக, ஸ்லோவேனியா, குரோஷியா, மாசிடோனியா, போஸ்னியா ஆகிய தனித்தனி நாடுகள் 1992இல் உருவாகின. செர்பியாவும் மாண்டெ நெக்ரோவும் புதிய நாடாக யுகோஸ்லேவியக் குடியரசுக் கூட்டாட்சி என்ற பெயரில் ஏப்ரல் 1991இல் ஆனது. அந்நாட்டின் அதிபர், அண்டை நாடுகளில் உள்ள செர்ப் இன மக்களை ஒன்று திரட்டி அகண்ட செர்பியாவை அமைத்திடும் முயற்சிகளில் ஈடுபட்டார். இதன் காரணமாக உலக நாடுகள் மன்றத்தில் இருந்து அந்நாடு 1992இல் நீக்கப்-பட்டது.

1998இல் இந்நாட்டுப் படைகளுக்கும் கொசோவோ நாட்டில் உள்ள அல்பேனிய இனத்தவர்க்கும் நடை-பெற்ற மோதல் போர் உலக நாடுகளின் எதிர்ப்பைப் பெற்றது.

நாட்டோ அமைப்பு யுயோஸ்லேவியத் தலைநகரான பெல்கிரேடில் குண்டு வீசித் தாக்கியது. கொசோவோ நாட்டில் உலக நாடுகளின் போர்ப் படைகள் கொண்டு செல்லப்பட்டு நிறுத்தப்பட்டன.

2001இல் வோஜிஸ்லாவ் கோஸ்டுனிகா என்பவர் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின், உலக நாடுகள் மன்றத்தில் மீண்டும் யுகோஸ்லேவியக் குடியரசுக் கூட்டாட்சி நாடு சேர்த்துக் கொள்ளப்பட்டது. கொசோவோ பகுதி உலக நாடுகள் மன்றத்தால் நிருவகிக்கப்பட்டது. அப்பகுதியின் எதிர் காலம் பற்றிய முடிவு வருங்காலங்களில் எடுக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டது.

2002இல் இந்நாடுகள் தங்களுக்குள் பேசிச் செய்து கொண்ட ஒப்பந்தப்படி, செர்பியா, மாண்டெநெக்ரோ என்கிற இரண்டு குடியரசுகளாக இயங்குவது என்றும் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு பொது வாக்கெடுப்பு நடத்தி முடிவு செய்து கொள்வது என்றும் முடிவாயிற்று. அதன்படி 2006இல் நடைபெற்ற வாக்கெடுப்பில் மான்டநெக்ரோ தனித்த நாடாகப் பிரிவது என்ற முடிவுக்கு ஜூன் 5ஆம் தேதி வாக்களித்தது. ஜுன் 5ஆம் தேதி செர்பியாவும் மான்டநெக்ராவும் இணைந்த கூட்டரசுக்கு செர்பியா எனப் பெயரிடப்பட்டது.

செர்பிய நாட்டின் பரப்பு 88 ஆயிரத்து 361 சதுர கி.மீ. மக்கள் தொகை 94 லட்சம். செர்பிய பழமை வாதக் கிறித்துவம், ரோமன் கத்தோலிகம், புரொடஸ்டன்ட் கிறித்துவம், இசுலாம் ஆகிய மதப் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள். 97 விழுக்காடு படிப்பறிவு பெற்ற மக்கள்.

5.-6.-2006இல் விடுதலை நாளைக் கொண்டாடும் இக்குடியரசில் குடியரசுத் தலைவரும், பிரதமரும் உள்ளனர். மக்களில் 30 விழுக்காட்டினர் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளனர். 32 விழுக்காட்டினர் வேலை கிட்டாதோர்.

--------------------"விடுதலை" 27-7-2009

கடவுள் என்று ஒருவர் இருந்திருந்தால்...


பிறருக்காக, சமுதாயத்திற்காக எவர் தொண்டாற்றுகிறாரோ அவர்தான் உண்மையானமனிதர்! புதுச்சேரியில் தமிழர் தலைவர் விளக்கவுரை

பிறருக்காக, சமுதாயத்திற்காக எவர் தொண்டாற்றுகிறாரோ அவர்தான் உண்மையான மனிதன் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் கூறி விளக்கமளித்தார்.

புதுச்சேரியில் 7.7.2009 அன்று நடைபெற்ற காஸ்மாஸ் ரோட்டரி சங்க நிகழ்ச்சியில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் தொடர்ச்சி

என்னை நீங்கள் அறிமுகப்படுத்தும் பொழுது தந்தை பெரியார் அவர்களுடைய தொண்டன் என்று சொன்னீர்கள். அதுதான் உண்மை. தந்தை பெரியார் அவர்களுடைய இயக்கம் ஓர் அரசியல் கட்சி அல்ல.

மாறாக அது ஒரு சமுதாயப் புரட்சி இயக்கம். சமுதாயத்திலே மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என்ற கொள்கை உறுதி கொண்ட இயக்கம் இந்த இயக்கம்.

நான் பல ரோட்டரி சங்க நிகழ்ச்சிகளிலே பேசியிருக்கின்றேன். இது அய்ந்தாவது, ஆறாவது அல்லது ஏழாவது அமைப்பாக இருக்கும் என்று நினைக்கின்றேன். அந்த வகையிலே இந்த வாய்ப்பைக் கொடுத்தமைக்காக நன்றி செலுத்துகின்ற அதே வேளையிலே திராவிடர் கழகத்திற்கும், இந்த ரோட்டரி அமைப்புக்கும் ரொம்ப நெருக்கமுண்டு.

இதன் கொள்கை என்ன?

நாங்கள் நேரடியாக உங்களிடத்திலே உறுப்பினர்கள் இல்லையென்றாலும், நீங்கள் எங்களுடைய அமைப்பிலே உறுப்பினராக இல்லை என்று சொன்னாலும், சிவ.வீரமணி போன்றவர்கள் இணைப்புப் பாலமாக இருக்கிறார் என்பது உண்மையாக இருந்தாலும், உலகம் முழுவதும் இந்த ரோட்டரி அமைப்பைப் பார்க்கும்பொழுது, இந்த ரோட்டரியினுடைய தனிச்சிறப்பு என்ன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டுமானால், நான்கு தேர்வு அமைப்புகளை நீங்கள் வைத்திருக்கின்றீர்கள்.

ரொட்டேரியனாக வரவேண்டும் என்று எண்ணுகின்றபொழுது, இதனுடைய கொள்கைகள் என்ன என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். அதிலே மிக முக்கியமானதென்ன?

நாம் எதைப்பற்றி எண்ணினாலும், எதைப் பற்றி பேசினாலும், எதைச் செய்தாலும், எண்ணுதல், பேசுதல் ஆக இந்த நிலையிலே இருக்கின்ற பொழுது, அதற்கு எதை அளவுகோலாகக் கொள்ள வேண்டும்? மிக ஆழமான சிந்தனை தேவை.

பாண்டிச்சேரியிலே இருக்கின்ற காஸ்மாசும், இதைத்தான் சொல்லும். சிகாகோவிலே எங்கோ ஒரு மூலையிலே இருக்கின்ற இன்னொரு அமைப்பும் இதைத்தான் சொல்லும்.

உண்மையானதா?

இதில் முதல் அளவு கோலென்ன? இது உண்மையானதுதானா? இரண்டாவது நாம் சிந்திப்பதற்கு பேசுவதற்கு என்ன அளவுகோல்? எல்லோருக்கும் அது ஏற்புடையதா? அது நியாயமானதுதானா? என்று பார்க்க வேண்டும்.

தமிழிலே மொழிபெயர்த்திருக்கின்றார்கள். இது உண்மைதானா? இரண்டாவது தொடர்புடைய எல்லோருக்கும் நியாயமானதா? மூன்றாவது இந்த சிந்தனை இந்த செயலாக்கம் என்ன செய்யும்? நல்லெண்ணமும், சிறந்த நட்புறவும் விளையச் செய்யுமா? இதை நாம் யோசிக்க வேண்டும்.

தொடர்புடைய எல்லோருக்கும் இதனாலே பயன் கிடைக்குமா? பயன் விளையுமா? இந்த நான்கும் தான் தந்தை பெரியார் சுயமரியாதை இயக்கக் கொள்கையின் அடிப்படை என்பதை இந்த நேரத்திலே மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கின்றேன்.

ஒருவருக்கு ஒரு நீதி


ஏனென்றால் எல்லா மக்களுக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும். கிடைக்கும் பொழுது அது உடன்பாடானதாக இருக்க வேண்டும். நியாயமானதாக இருக்க வேண்டும். ஒருவருக்கு ஒரு நீதி இன்னொருவருக்கு இன்னொரு நீதி என்பது ஜாதி அடிப்படையிலே, மத அடிப்படையிலே, கட்சி அடைப்படையிலே அல்லது வேறுபாடுகள் அடிப்படையிலே இருக்கக்கூடாது.

மனித குலத்தின் சமூகநீதி என்று சொல்லுவது நியாயமாக எல்லோருக்கும் இந்த அடிப்படையிலே இருக்க வேண்டும். எனவே, உண்மையானதுதானா? இந்த உண்மையைச் சொல்லும்பொழுதுதான் சங்கடம். பொய் சொல்லும் பொழுது முரண்பாடுவரும். உண்மையைச் சொல்லும் பொழுது முரண்பாடே வராது.

பொய்சொல்லும் பொழுது கற்பனையும் சேர்ந்து

ஏனென்றால் பொய் சொல்லும் பொழுது, கற்பனையாகச் சொல்லும்பொழுது ஒரே மாதிரியாகச் சொல்ல முடியாது. ஒவ்வொரு நேரத்தில் ஒவ்வொரு வகையாகச் சொல்ல வேண்டியிருக்கும்.

ஆனால், நம்முடைய நாட்டிலே உண்மையைப் பேச, சிறிய வயதிலிருந்தே நாம் சொல்லிக் கொடுக்கின்றோம். வேறு இடங்களில் உண்மை பரவவேண்டுமோ இல்லையோ என்பது அது வேறு. ஆனால் நீதிமன்றங்களை எடுத்துக்கொண்டால் என்ன நிலை? நீதிமன்றத்திலே வழக்கு

நீதிமன்றத்திலே ஒரு கொலை வழக்கு நடைபெறுகின்றது. அந்தக் கொலை வழக்கு நடைபெறும் பொழுது அதிலே சாட்சியங்களை கூண்டிலே ஏற்றுகிறபொழுது இரண்டு வகையான சாட்சியங்கள் வருவார்கள். உங்களுக்குத் தெரியும். ஒன்று, வழக்கை பதிவு செய்த போலிஸ் தரப்பு சாட்சியங்கள். மற்றொன்று, அதை மறுக்கக் கூடிய சாட்சியங்கள். இந்த இரண்டு பேரும் நீதிமன்றத்தில் ஏறுவார்கள்.

நமது நீதிமன்றங்களில் பைபிள் மீது சத்தியம் செய்து சொல்லுவர்கள். இன்னும் சில பேர் குரான் மீது சத்தியம் செய்பவர்கள் இருப்பார்கள். இன்னும் சில பேர் கீதை மீது சத்தியம் சொல்கிறவர்கள் இருப்பார்கள்.

அல்லது எங்களைப் போன்றவர்கள் நீதிமன்றத்திற்குப் போனால் இவைகளின் மீது சத்தியம் செய்ய மாட்டோம். உண்மையைச் சொல்லுகிறோம் என்று சொல்லுவோம்.

சத்தியமாகச் சொல்லுகிறேன்

நீதிமன்றத்தில் குமாஸ்தா என்று சொல்லக்கூடிய எழுத்தர் இருக்கிறார் பாருங்கள் அவரே பக்கத்தில் வந்து நின்று அடி எடுத்துக்கொடுப்பார்.

சத்தியமாகச் சொல்-றேன். கடவுள் பெயரால் சொல்கிறேன். உண்மையைச் சொல்கிறேன் என்று சொல்வார்.

அதாவது முழு உண்மை, அப்பட்டமான உண்மை, உண்மையைத் தவிற வேறில்லை என்று சொல்வார்கள். இப்படி சொல்லும்பொழுது முதலில் கடவுள் பெயரை சொல்லிவிட்டுத்தான் சொல்கின்றார்கள்.

அருள்கூர்ந்து எண்ணிப்பாருங்கள். நீதிபதி மேலே அமர்ந்திருக்கின்றார். சாட்சியம் முதலில் சத்தியப் பிரமாணம் செய்துவிட்டுத்தான் ஆரம்பிக்கின்றார்கள். பிராசிகியூசன் விட்னஸ் அவரும் சத்தியமாகத்தான் சொல்கிறார்.

கடவுள் பெயரால்தான் சொல்கிறார். உண்மையைத் தவிர வேறு எதுவும் சொல்லவில்லை.

ஆனால், டிஃபன்ஸ் விட்னஸ் இருக்கிறார் பாருங்கள். இந்தக் கொலை நடந்ததேயில்லை என்று வாதிடுவார். கொலை நடந்தது என்று சொல்பவரும் வாதிடுகிறார்.

இரண்டு பேருமே நீதிமன்றத்தில் கடவுள் பெயரால் சத்யம் செய்கிறார்கள். இரண்டு பேருமே உண்மையைத் தவிர வேறு எதுவும் சொல்லவில்லை என்று சொல்கின்றார்.

அந்த உண்மையை இவர்கள் படுத்துகிறபாடு இருக்கிறதே அது சாதாரணமா? அருள்கூர்ந்து எண்ணிப் பார்க்க வேண்டும்.

உண்மையை மட்டும் படுத்தவில்லை. கடவுளையும் சேர்த்து அவர்கள் படுத்துகிறார்கள்.

கடவுள் என்று ஒருவர் இருந்திருந்தால்...

கடவுள் என்று ஒருவர் இருந்தால், என்னப்பா என்னுடைய பெயரை இவ்வளவு கெடுத்துக் கொண்டிருக்கின்றீர்களே என்று சுலபமாகக் கேட்டிருப்பார்.

உண்மையானதா? என்று பார்க்கும்பொழுது உண்மை அருகிக்கொண்டு வருகின்ற இந்த சமுதாயத்திலே நம்முடைய அணுகுமுறை எப்படி இருக்க வேண்டுமானால் உண்மையானது தானா? என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். பேச்சு, செயல், சிந்தனை இந்த மூன்றிலும் உண்மை இருக்க வேண்டும்.

இப்படிப்பட்ட ஒரு வாழ்க்கை முறை இருக்குமேயானால் இந்த உலகத்திற்குச் சட்டங்கள் தேவையில்லை, காவல்துறை தேவையில்லை, நீதித்துறை தனியாகத் தண்டிப்பதற்குத் தேவையில்லை. அப்படிப்பட்ட ஒரு தொண்டறத்தை நோக்கி நாம் செல்ல வேண்டும்.

எனவே, அந்தப்பணியை அழகாகச் செய்யக்கூடிய அற்புதமானவர்கள். அது சிறு குடும்பங்களாக இருக்கலாம். அதோடு இன்னொரு சிறப்பு என்று சொன்னால், நம்முடைய செல்வநாதன் அவர்கள் பேசும்பொழுது, ஒன்றைத் சொன்னார்கள்.

ஆண் - பெண் சமம்


அவருடைய வாழ்க்கைத் துணைவியரை நான் கேட்டு அவர்களுடைய ஒப்புதலோடு செய்வேன் என்று அவர்கள் சொன்னார்கள். ரொம்ப மகிழ்ச்சிக்குரிய ஒன்று.

ஏனென்றால், ஆண்கள், பெண்கள் சமம் என்று சொல்லக்கூடிய அந்தத் தத்துவத்தை தந்தை பெரியார் அவர்கள் தந்தார்கள். ஒரு காலத்திலே அவர்கள் என்று சொன்னால் எஜமானர்கள் நம்மவர்கள் என்று சொன்னால் அடிமைகள் என்ற எண்ணம் மாறி இன்றைக்குக் குடும்பம் மாதிரி இந்த அமைப்புகளில் வந்து கலந்து கொள்கிறார்கள். பாராட்டப்படுகிறார்கள். அவர்களுடைய தொண்டை அங்கீகரிக்கிறார்கள் என்று சொன்னால், அதைவிட சிறப்பு வேறு இருக்க முடியாது.

ஆகவே, உங்களுடைய அந்த சிறப்பான தொண்டுக்கு பாராட்டுகிற நேரத்திலே அந்தத் தொண்டினுடைய அமைப்பு எப்படியிருக்க வேண்டும் என்று சொன்னால் மனிதனுக்குச் சிறந்த ஆற்றல் இருக்கிறது.

ஆறறிவு படைத்த மனிதன், அவனுடைய ஆறாவது அறிவை வைத்து எதை வைத்து மகிழ்ச்சி அடைவது என்று சொன்னால், இன்னொருவருக்கு உதவி செய்வதன் மூலம்தான் பிறருக்கு உதவி செய்வதற்குத்தான் அறிவு தேவை. அறிவுக்கு அறிவு தேவையில்லை. செயலுக்கு அறிவு தேவை. நாம் சமுதாயத்திற்கு என்ன செய்தோம்? சமுதாயம் நமக்குப் பாடுபட்டிருக்கிறது. நாம் உருவாக சமுதாயம் மறைமுகமாக உதவியிருக்கிறது.

நம்மால் முடிந்ததைச் செய்ய வேண்டும்

ஆகவே, அந்தச் சமுதாயத்தை வளர்ப்பதற்கு, முன்னுக்குக் கொண்டு வருவதற்கு நம்மால் முடிந்ததைச் செய்ய வேண்டும்.

எல்லோரும் செல்வத்தை சம்பாதிக்கிறோம். ஆனால், தன் பெண்டு, தன் பிள்ளை, தன் வாழ்வு என்றிருக்கக் கூடாது.

குருவி கூடு கட்டுகிறது; அது தனக்கு மட்டும்தான் கூடு கட்டுகிறது. ஆனால், மனிதன் வீடு கட்டுகிறான். அவன் பிறருக்கு வீடு கட்டுகிறான் என்று சொல்லும்பொழுது மனிதனுடைய ஆறாவது அறிவு என்பது மற்றவர்களுக்குப் பயன்பட வேண்டும் தொண்டுசெய்ய வேண்டும் என்பதுதான் அதன் அடிப்படை.

அந்த மனிதர்கள் வாழ்வதில்லை

தனக்காக மட்டும் வாழுகிற மனிதர்கள் என்று சொன்னால் அவர்கள் வாழ்வதில்லை. நீங்கள் ஒவ்வொரு வகையிலும் ஊக்கப்படுத்துகின்ற நேரத்திலே இந்த அழைப்பிதழில்கூட சிறப்பாக அச்சடித்து எல்லோரையும் பாராட்டியிருக்கின்றீர்கள்.

இரத்தம், கண், மற்றும் உடல்தானம் செய்வீர்கள் என்று எழுதியிருக்கின்றீர்கள். அதுபோல விழிக்கொடை கொடுத்தவரை அழைத்து நீங்கள் பாராட்டினீர்கள். அது எவ்வளவு பேருக்குப் பயன்படக்கூடிய உறுப்புக் கொடை!

இந்தச் செய்திகள் எல்லாம் மிக அற்புதமானவர்கள். இப்பொழுது மனித நேயத்தோடு எல்லோரும் வளருகிறார்கள்.

மனித நேயம்


மனித நேயம், ஆழ்ந்த பற்று இவைகள் எல்லாம் இருந்தால் மனிதர்களை சமமாக நடத்த வாய்ப்பிருக்கும் பொழுதெல்லாம் மற்றவர்களுக்கு உதவுங்கள். ஈதல், இசைபட வாழ்தல், அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு என்று தெளிவாகச் சொன்னார்.

--------------------தொடரும் ...."விடுதலை" 27-7-2009

சீதை பிடித்து வைத்த மணல் லிங்கத்தை சிதைத்த அனுமான் வால் அறுந்து விட்டதாம்!




வால்


ராமன் ராவணனை வதம் செய்து சீதையுடன் திரும்பும்போது இராமேசுவரம் வந்தான். ஸ்ரீராமன் சிவபக்தன். தன்னைப் பீடித்திருந்த பிரம்ஹத்திதோஷம் நீங்கிட காசி சென்று சிவலிங்கம் கொண்டு வருமாறு அனுமனைப் பணித்தான். அக்கணமே அனுமனும் பறந்தான். ஆனால் சிவலிங்கத்துடன் திரும்பி வர அனுமனுக்குத் தாமதம் ஏற்பட்டது. நல்ல நேரத்துக்குள் சிவபூஜை செய்ய வேண்டுமாம்; இராமன் தவித்தான்.

அதனைப் புரிந்து கொண்ட சீதா பிராட்டியாரோ, கடல் மணலில் சிவலிங்கத்தைப் பிடித்துக் கொடுத்தாள். ராமன் மகிழ்ந்து பூஜையை முடித்தான்.

காலந் தாழ்ந்து வந்த அனுமனுக்கோ அடங்காக் கோபம்! சீதை பிடித்து வைத்த மணல் லிங்கத்தை தனது வாலால் பலம் கொண்டு சிதைத்தான். மணல் லிங்கம் அசையவில்லை _ மாறாக அனுமன் வால் மட்டும் அறுந்து தூரப் போய் விழுந்தது. அந்த இடம்தான் இன்று வரை அனுமன் தீர்த்தமாம்.

ஆன்மீகச் செய்திகளை அள்ளி வீசுவதில் நமது ஏடுகளுக்கும், ஊடகங்களுக்கும் கொஞ்சம்கூட வெட்கம் கிடையாது. போட்டி போட்டுக் கொண்டு அருவருக்கத்தக்க, அறிவுக்குப் பொருத்தமற்ற இத்தகு குப்பைகளால் ஏடுகளை நிரப்பிக் கொண்டிருக்கின்றனர். அரசியலைப்பற்றி அவர்கள் எழுத வேண்டுமே, அடேயப்பா! அணுவைத் துளைத்து ஆகாசயத்தை வளைத்து, அது எப்படி இது எப்படி? நடக்க முடியுமா? என்றெல்லாம் ஆர்ப்பாட்டம் செய்து எழுதுவார்கள். நேரில் பார்த்தது போல கிசுகிசு எழுதுவார்கள்! எதிர் வினா வைப்பார்கள். அங்கெல்லாம் அவர்களின் பகுத்தறிவு சுறுசுறுப்பாக வேலை செய்யும்.

ஆனால், ஆன்மீகச் சமாச்சாரம் என்றதும் வாலையெல்லாம் சுருட்டி வைத்துக் கொண்டு விடுவார்கள்.

ஒரு வார்த்தையைக் கண்டுபிடித்து வைத்துள்ளனர்.

.... என்பது நம்பிக்கை;
........ என்பது அய்தீகம்

என்று சொல்லி அந்த ஓட்டை வழியாகத் தப்பித்துக் கொள்ளப் பார்ப்பார்கள்.

வெட்கம் இல்லை! இது யாருக்கும் வெட்கம் இல்லை!! என்ற பாடல் வரிகள்தான் நினைவிற்கு வருகின்றன.

மணலால் செய்த லிங்கத்தை ஓடுகிற வேகத்தில் நாய்கூட எத்தித் தள்ளி விடுமே அனுமானின் பலம் என்றால் சாதாரணமானதா? அவன் வாலே அறுந்து விட்டதாம்!

என்னதான் துள்ளிக் குதித்தாலும் அனுமான்கள் வாலாகத்தான் இருக்க முடியுமே தவிர, தலையாக இருக்க முடியாதே! அனுமான்கள் சூத்திரர்கள்தானே!


-------------மயிலாடன் அவர்கள் 27-7-2009 "விடுதலை" யில் எழுதிய கட்டுரை