Search This Blog

2.4.19

எழுத்துரு அளவு Larger Font Smaller Font
தந்தை பெரியார்
திராவிடர் கழகத்தின் கொள்கைகளைப்பற்றியும், திராவிடர் கழகத்தின் அவசியத்தைப்பற்றியும், திராவிடர் கழகத்தின் எதிர்காலத்தைப்பற்றியும் நீங்கள் அறிய வேண்டியது மிகமிக அவசியம். திராவிடர் கழகம் என்பது இச்சென்னை மாகாணத்தில் 100க்கு 95 பேராயுள்ள பெரும்பான்மை மக்களின் நலனுக்காகப் பாடுபட்டு வரும் ஒரு கழகம். அதாவது ஆரிய ரல்லாத, தற்போது சூத்திரர் என்று இழிவாகக் கருதப்பட்டுவரும் பிராமணர் அல்லாத மக்களின் நலத்திற்காகப் பாடுபட்டு வரும் கழகம், திராவிடர் கழகத்திற்கு வேறு பெயர் கூற வேண்டு மென்றால் ஆரியரல்லாதார் கழகம் என்றோ , அல்லது சூத்திரர் கழகம் என்றோதான் அழைக்க வேண்டியிருக்கும். சூத்திரர் என்றால் பார்ப்பனரின் தாசிமக்கள், பஞ்சமர்கள், சண்டாளர்கள், 4 ஆம் ஜாதி, 5 ஆம் ஜாதி என்று பொருள், ஆரியர் அல்லாத மக்களுக்கு சூத்திரர் என்ற பெயரை நாங்களாகக் கற்பித்துக் கொண்டோம், வகுப்புத் துவேஷத்தை வளர்ப்பதற்காக, என்று சிலர் கூறுவதுபோல் நீங்கள் யாரும் நினைத்துவிடக் கூடாது.
சூத்திரர் என்பது பார்ப்பனர் படைப்பே
"சூத்திரர்" என்ற பெயர் ஆரியரல்லாத மக்களுக்கு ஆரியர் கொடுத்த பெயர். சூத்திரர் என்று நம்மை இழிவாக அழைத்தது மட்டுமல்ல அவர்கள் தங்கள் வேதத்திலும், சாஸ்திரங்களிலும் கூட அப்படித்தான் எழுதி வைத்துள்ளார்கள். இதிகாசங்களிலும் இதையே வலியுறுத்தி இருக்கின்றனர். கடவுள் பேரால் நம்மைச் சூத்திரர் என்றுதான் அறிமுகப்படுத்தியிருக்கின்றனர். ஆகவே, இது நம்மால் வேண்டுமென்றே கற்பிக்கப்பட்டதல்ல, பார்ப்பனர் கற்பித்ததுதான்.
திராவிடர் என்பது கற்பனையல்ல
திராவிடர் என்ற பெயர் அப்படி யாராலும் கற்பிக்கப்பட்ட தல்ல. ஆரியர் என்ற பெயரும் அப்படித்தான் என்று, மக்கள் அவரவர் வாழ்ந்து வந்த தேசத்தின் சீதோஷ்ண நிலைக்கேற்ப, அமைந்திருந்த அங்கமச்ச  அடையாளங்களைக் கொண்டு பல இனப்பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டனரோ, அன்று  இரண்டு வெவ்வேறு இனங்களுக்குக் கொடுபட்ட  பெயர்தான் திராவிடர், ஆரியர் எனப்படும்  பெயர்கள். இதே சமயத்தில் கொடுபட்ட பெயர்தான் மங்கோலியர் என்பதும், நீக்ரோக்கள் என்பதும்.   உஷ்ணமான ஆப்பிரிக்கக் காட்டுப் பிரதேசங்களில் வாழ்ந்து வந்த சற்று கரடு முரடான மக்களை  நீக்ரோக்கள் என்று அழைத்தனர். நல்ல குளிர்ப்   பிரதேசமான மத்திய ஆசியாவில் வசித்து வந்த தவிட்டு நிற மக்களுக்கு ஆரியர் என்று பெயர் அளித்தனர். அதற்கடுத்தாற்போல் சற்று குட்டையாகவும் சப்பை மூக்குடனும் சீனா, ஜப்பான் பிரதேசங்களில் வாழ்ந்த மக்களை மங்கோலியர் என்று அழைத்தனர். இப்பிரதேசங்களுக்குத் தெற்கே சற்று சம சீதோஷ்ணமான சமவெளிகளில் வாழ்ந்த தென்னாட்டு மக்களைத் திராவிடர்கள் என்றழைத்தனர்.
பிரிவுக்குக் காரணம் அங்கமச்சமேயன்றி பிறப்பு வேறுபாடல்ல
ஆகவே, அன்று அங்கமச்ச அடையாளங்களைக் கொண்டு மக்களைப் பல இனங்களாகப் பிரித்தார்களேயொழிய, ஒருவன் கடவுளின் நெற்றியில் இருந்து தோன்றியவன் என்றோ, மற்றொருவன் கடவுளின் பாதத்திலிருந்து தோன்றியவன் என்றோ அல்லது கண்ணில் இருந்து வந்தவன், காதிலிருந்து வந்தவன், மூக்கிலிருந்து வந்தவன் என்றோ பிரிக்கவில்லை. இதை நான் பேர் ஊர் தெரியாத எவனோ, மாட்டுக்கும் மனிதனுக்கும் பிறந்த எவனோ எழுதியதாகக் கூறப்பட்டு வரும் எந்த சாஸ்திரங்களைப் பார்த்தோ, வேதங்களைப் பார்த்தோ கூறவில்லை. சரித்திர ஆராய்ச்சி நிபுணர்களின் முடிவை ஆதாரமாக வைத்து எழுதப்பட்டதும், அரசாங்கத்தாரால் அங்கீகரிக்கப்பட்டதும், உங்கள் நாலாவது அய்ந்தாவது வகுப்பு படிக்கும் குழந்தைகளுக்குப் பாடப்புத்தகமாக இருந்து வரு வதும், அசல் ஆரியப் பார்ப்பனர்களால், எழுதப்பட்டிருப்பது மான புத்தகங்களைப் பார்த்துத்தான் கூறுகிறேன்.
பார்ப்பனர்களின் பசப்பான பொய்யுரை
"என்னப்பா இன்றைக்குக் கூட்டமாமே என்ன விசேஷம்" என்று யாராவது இன்று  ஒரு ஹோட்டல் அய்யன் கேட்டிருப்பா ரானால், அவர் என்ன கூறியிருப்பார் தெரியுமா? "எவனோ ஈரோட்டிலிருந்து ஒரு அயோக்கியன் வருகிறானாம். அவன் மைலாப்பூர்  பார்ப்பான் ஒருவனை ஏதோ பணங் கேட்டானாம் அவன் கொடுக்க மறுத்துவிட்டானாம். அதிலிருந்து பார்ப் பனர்களைத் திட்டுவதையே தொழிலாகக் கொண்டு பிரசாரம் செய்து வருகிறான். அதுக்கேன் போப்போறீங்க. அவ்வளவுக்கும் பார்ப்பனத் துவேஷமாகவே இருக்கும்" என்றே கூறியிருப்பான். அப்படித்தானாக்கும் என்று நினைத்தே சற்று தயக்கத்துடன்தான் நீங்களும் வந்திருப்பீர்கள்.
யார் என்ன கூறியிருந்தாலும் சரியே. நான் கேட்கிறேன், பண்டிதர்கள், பாவலர்கள் யாராயிருந்தாலும் பதில் கூறும்படி சவாலிட்டுக் கேட்கிறேன்.
"இந்தியா", "இந்து" இன்று வந்த பெயர்கள்
இன்றைக்கு 200 ஆண்டுகளுக்கு முன்பு 'இந்தியா' என்ற பெயரோ, 'இந்துக்கள்' என்ற பெயரோ, எங்காவது வழங்கப்பட்டி ருந்ததாக உங்களில் யாராவது கூற முடியுமா? கூற முடியுமானால், அதற்கு உங்கள் வேதத்திலோ, சாஸ்திரத்திலோ, இதிகாசங் களிலோ ஒரே ஒரு ஆதாரமாவது காட்ட முடியுமா? ஆதாரம் கண்டோம் என்று யாராவது சொல்லட்டுமே பார்க்கலாம்! யாராவது சொல்வார்களானால், மன்னிப்புக் கேட்டுக் கொள்ளத் தயாராயிருக்கிறேனே! நன்றியறிதலோடு என் தவறைத் திருத்திக் கொள்ளவும் தயாராய் இருக்கிறேனே! 200 ஆண்டுகளுக்கு முன்பு பூகோளத்தின்படி இத்தேசத்திற்கு, இந்தியா என்று பெயர் இருந்ததாக யாராவது காட்ட முடியுமா? இந்தியா என்பதும், இந்துக்கள் என்பதும் நடுவாந்தரத்தில், அதுவும் சமீபத்தில் ஆரியர்களால் கற்பித்துக் கொள்ளப்பட்ட பெயர்களே ஒழிய பழைய மூலப் பெயர்கள் அல்ல. ஆனால், ஆரியர், திராவிடர் என்ற பெயர்கள் மட்டும் என்று தோன் றியனவோ என்றுகூட வரையறுத்துக்கூற முடியாத அளவுக்குப் பழைமைப் பெயர்கள். ஆரியர் அல்லாத திராவிடர்களைத்தான் ஆரியர்கள் 'தஸ்யூக்கள்' என்றும், 'சூத்திரர்' என்றும், இழிவான வேலைகளுக்கே உரியவர்கள் என்றும், அரக்கர்கள், இராட் சதர்கள் என்றும் கூறியிருக்கின்றனர். இதை நாம் கூறவில்லை . சரித்திர ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். பண்டித நேரு கூட தம் மகளுக்கு எழுதிய கடிதத்தில், இராமாயணத்தில் குரங்குகள், அரக்கர்கள் என்று பழித்துக் கூறப்படுவது திராவிடர்களைப் பற்றித்தான் என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது புல்தரை தேடி வந்த ஆரிய லம்பாடிக் கூட்டம், திராவிடர்களோடு போராடித் தமக்கு அடிமைப்பட்டுப் பணியாட்களாக உழைக்க ஒப்புக் கொண்டவர்களைச் சூத்திரர், பஞ்சமர் என்றும், தம்மை எதிர்த்துத் தம் ஆட்சியை வெறுத்து ஓடியவர்களை அரக்கர்கள், இராட்சதர்கள் என்றும் கூறி வந்திருக்கிறது.
யாகத்தை எதிர்க்கும் நாம் அரக்கர்களாம் சூத்திரர்களாம்
நம்மவர் தென்னாட்டில் பெரும் பகுதியாகவும், வடநாட்டில் ஆரியர் பெரும் பகுதியாகவும் இருப்பது வட நாட்டிலிருந்த திராவிடர்கள் ஆரிய எதிர்ப்பைச் சமாளிக்க முடியாமல் தென்னாட்டை நோக்கி வந்து இருக்கவேண்டும் என்பதைத் தான் காட்டுகிறது. ஆரியர்களின் முக்கிய சடங்காகிய யாகத்தை எவன் பழித்தானோ, கெடுத்தானோ அவனே ஆரியர்களால் அரக்கனென்றும், இராட்சதனென்றும் கூறப்பட்டான். ஆகவே, யாகத்தில் உயிர்ப்பலி கூடாது, அத்தியாவசியமான பொருள்கள் நெருப்பில் போட்டு எரிக்கப்படக் கூடாது என்று கூறும் நம்மைத்தான், அரக்கர் என்கின்றனர் இந்த அன்னக்காவடிப் பார்ப்பனர். இன்றும் நாம் யாகத்தைத் தடுக்கிறோம். பழிக் கிறோம். ஜீவஹிம்சை கூடாது என்று கெஞ்சிக் கூத்தாடிச் சர்க்காருக்கு விண்ணப்பித்துக் கொண்டு யாகங் களின் மீது தடையுத்தரவு வாங்கி வருகிறோம்.
யாகம் என்றால் என்ன? என்பதை நீங்கள் அறியமாட்டீர்கள். ஆடு, மாடு தின்ன ஆசைப்படும் சில பிராமணப் பைசாசங்கள் ஒன்று கூடிக்கொண்டு, அவற்றின் இரத்தம் வெளிப்பட்டால் ருசி கெட்டுவிடும் என்பதற்காக, அவற்றை வெட்டிக் கறி செய்யாமல், அவை களைக் கட்டிப் போட்டு, அவற்றின் விதைகளைக் கிடுக்கிக் கொண்டு கசக்கிக் கசக்கிச் சாக வைப்பார்கள். ஒரு ஆடோ, மாடோ இவ்விதம் சாக வைக்கப்பட பல மணிநேரங்கூட ஆகலாம். ஆனாலும், அகோர மாமிச பிண்டங்களான இந்த 'யாகப் பிசாசுகளுக்கு' அதுபற்றிக் கவலையேது? இவ்வாறு உயிர்வதை செய்யப்பட்ட மிருகத்தை யாக குண்டத்திலிட்டு, அதில் நெய்யூற்றி வேக வைத்துத் தின்பதுதான் மனுதர்ம சாஸ்திரப்படி செய்யப் படும் யாகம். இப்படிப்பட்ட கோரவதை கூடாது என்று தடுத்த வர்கள்தான் ஆரியரால் அரக்கராக சித்தரிக்கப்பட்டனர்.
சூத்திரனுக்கு யாகம் செய்யும் உரிமை கிடையாது. யாகத்தை வெறுப்பவன் சூத்திரன். ஆகவே, யாகத்தை வெறுக்கும் திராவிடராகிய நாம் ஆரிய சாஸ்திரப்படி சூத்திரர்தான். ஆரியன் ஏது? சூத்திரன் ஏது? என்று நம்மைக் கேட்கிறார்கள் சில அப்பாவி மக்கள். சட்டம் கூறுமா சூத்திரன் இல்லையென்று? சூத்திரன், பிராமணன் இல்லையென்றால், கோயிலில் மணியடிக்கும் தொழில் ஒரே ஜாதிக்காரன் வசமே இருக்கக் காரணமென்ன? கோயில் அர்ச்சகர்கள் யார்? அவர்கள் ஏன் சமஸ்கிருதம் ஓதுகிறார்கள்? சமஸ்கிருதம்தான் தேவபாஷை, மற்றவை மிலேச்ச பாஷை, நீச்ச பாஷை என்று ஆரிய சாஸ்திரம் கூறியிருப்பதை நீ அறிவாயா? திடுதிடுவென்று நாலு ஜாதியாரும் கோயிலுக்குள் போவோம், சற்றிருங்கள் என்று கூறி, பிராமணத் தோழன் உங்களைத் தாண்டிக் கொண்டு மூலஸ்தானத்திற்குள் போய்விடுகிறானா இல்லையா பாருங் களேன்? இதைப் பார்த்த பிறகும் எந்தத் தோழனாவது பிராமணன் சூத்திரன் இல்லை என்று கூறுவானாயின் அவன் அறிவு மலையேறி விட்டது என்றுதானே கூறவேண்டும். ஏன் இந்த உயர்வு தாழ்வுக் கொடுமையை இன்னும் மூடி வைக்கப் பார்க்கிறீர்கள்? உள்ளதை மூடி வைத்தால் அது புரை ஓட ஆரம்பித்துவிடும் என்பதை நீங்கள் அறியீரோ!
வந்த சுதந்திரம் மனிதத் தன்மையைத் தந்ததா?
திராவிட மக்கள்தான் சூத்திரர்களாக இழிவுபடுத்தப் பட்டுள்ளனர். சுதந்திரம் வந்துவிட்டதென்று கூறிவிட்டால் மட்டும் திருப்தி ஏற்பட்டுவிடாது. இந்த உயர்வு தாழ்வு ஒரே மட்டமாக்கப்படவேண்டும். பணம் பெற்றாலும் சூத்திரப் பட்டம் போகாது; பதவி பெற்றாலும் சூத்திரப் பட்டம் போகாது; பட்டங்கள் பல பெற்றாலும் இப்பட்டம் நீங்காது. பணம், பட்டம், பதவி இவற்றை என்று வேண்டுமானாலும் பெற்றுவிடலாம். ஆனால், இந்த இழிவு நீங்குவது மட்டும் அவ்வளவு சுலபமானதல்லவே. சர்.எ. இராமசாமி முதலியார் பட்டம் பல பெற்றவர்தான். பணமும், செல்வாக்கும் உடையவர்தான். பெரிய பதவிகளை எல்லாம் வகித்தவர்தான். வகித்தது மட்டுமல்ல, எல்லாவற்றையும் திறம்பட நடத்தி உலகத்தின் இரண்டாவது அறிவாளி என்று அமெரிக்க மக்களாலேயே புகழ்ந்து பேசப்பட்டவர்தான். இன்றும் திவான் பதவியில் இருந்து வருபவர்தான் என்றாலும், அவர் சூத்திரர்தானே? அவ்விழிவு அவரது பட்டத்திற்கோ, பணத்துக்கோ, பதவிக்கோ பயந்து ஓடிவிடக் காணோமே! ஆகவே, இவ்விழிவு நீங்க வேண்டுமென்பதுதான் பட்டம், பணம், பதவி இவை பெறுதலைவிட மகா முக்கியமான காரியமாகும்.
இவ்விழிவு நீங்கினால் தம்பிழைப்புப் போய்விடுமே என்று அஞ்சுபவர்களுக்காகவோ அல்லது அவர்களுக்காகப் பரிதாபப்படுபவர்களுக் காகவோ நாம் இவ்விழிவை இதுவரை மறந்திருந்தால்தான், ஒரு காலத்தில் உலகத்திற்கே நாகரிகம் கற்பித்துக் கொடுத்த நாம் இன்று ஆரியர்களால் சின்னப்படுத்தப் பட்டிருக்கிறோம்.
நாம் சுதந்திரம், சுயேச்சை பெற்றுவிட்டால் போதுமா? நாம் மனிதத் தன்மை பெறவேண்டாமா? ஒருவன் உயர்ஜாதி மற்றொருவன் இழிஜாதி என்ற பாகுபாடு இருக்கும் வரையிலும், நாம் எப்படி மனிதர்களாகி விட்டோம் என்று கூறிக் கொள்ள முடியும்? இந்த நாட்டு மக்கள் மனிதத் தன்மை அடைவதற்காக நான் செய்துவரும் இவ்வேலையை யார் ஒப்புக்கொண்டாலும், நான் அவருக்குக் கையாளாயிருந்து பணியாற்றத் தயாராயிருக்கிறேனே! நான் வேண்டியது இழிவு நீக்க வேலையே ஒழிய தலைமைப்பதவி அல்லவே.
யார் கவலைப்பட்டார்கள்?
இதுவரை இவ்விழிவு பற்றி யாராவது கவலை எடுத்துக் கொண்டதுண்டா? எத்தனையோ ரிஷிகள், எத்தனையோ நாயன்மார்கள், எத்தனையோ குருமூர்த்திகள், எத்தனையோ ஆச்சாரியர்கள் தோன்றிய நாடுதானே இது. இவர்களுள் எத்தனை பேர் இவ்விழிவு நீங்க என்ன முயற்சி எடுத்துக் கொண்டார்கள்? தெய்வீகப் பக்தியுள்ள சிலர் ஜாதிப் பிரிவினையை எதிர்த்தனர் என்றாலும், ஆரியம் அதற்கு அடிபணியவில்லையே? மூட நம்பிக்கைகளை வெறுத்த சித்தர்களை நாஸ்திகர் என்று கூறி, மக்கள் அவர்களைப் பின்பற்றாதபடி செய்துவிட்டதே? ஜீவஹிம்சை கூடாது என்று கூறிய பவுத்தர்களையும், சமணர்களையும் கழுவிலேற்றி விட்டதே? வருணாசிரமத்தைப் பாதுகாக்கத்தானே இவ்வளவும் செய்யப்பட்டது. அதுவும் அந்த வருணாசிரம தர்மத்தில் ஆரியத்தின் பிழைப்புச் சிக்கிக் கொண்டதால்தானே அவ்வளவும் செய்யப்பட்டது.)
கீதையை எறிந்து கைகழுவி திருக்குறளைக் கையிலெடு!
பல்லாயிரக்கணக்கான பெண்களைக் கெடுத்த காமாந்த காரனான கிருஷ்ணன் ஏன் கடவுளாக்கப்பட்டான்? அவனது உளறல் மொழிகள் அடங்கிய கீதை ஏன் நித்திய பாராயண மாக்கப்பட்டு விட்டது? மகா ஒழுக்க சீலரான திருவள்ளுவர் ஏன் கடவுளாக்கப்படவில்லை? அவரது பொய்யாமொழிகள் அடங்கிய குறள் ஏன் பாராயணமாக்கப்படவில்லை? இவற்றை நீ சிந்தித்துப் பார்த்ததுண்டா? கிருஷ்ணனும், கீதையும் வருணா சிரம தர்மத்தை (ஜாதிப் பிரிவினையை) ஆதரிப்பதுதான், ஆரியத்தின் போற்றுதலுக்குக் காரணம் என்பதை நீ இன்றா யினும் உணருவாயா? உன் திருவள்ளுவரும் திருக்குறளும் ஆரியத்தால் போற்றப்படாமைக்குக் காரணம் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்'' என்ற கூற்றுத்தான் என்பதை உணர்வாயா? இன்றாயினும் உணர்வு பெற்று கிருஷ்ணனையும், கீதையையும் தூக்கியெறிந்து விட்டு உண்மைத் திராவிடனான வள்ளுவனையும், அவன் குறளையும் அத்திட்டத்தில் வைப்பாயா?
ஏன் தம்பி இவ்வளவு வடநாட்டுப்பற்று?
ராமகிருஷ்ணரைப் போற்றும் அன்பனே! சிந்தித்துப் பார். உன் இராமலிங்கம் எந்த விதத்தில் அவரைவிடத் தாழ்ந்தவர்? அவரை எந்த வடநாட்டானாவது போற்றக் கண்டுள்ளாயா? உன்னுடைய ஒரு நாயன்மாரையாவது வடநாட்டானுக்குத் தெரியுமா? கபிலன் கூறியது என்னவென்று நீ அறிவாயா? ஏன் தம்பி உனக்கு இவ்வளவு வடநாட்டு ஆரியப்பற்று? இனியேனும் இன உணர்வு கொண்டெழு தம்பி! உன் இனத்தான் எந்தவிதத்திலும் அறிவிலோ, ஆற்றலிலோ தாழ்ந்தவன் அல்ல என்பதை இன்றே உணர்வாய்!
ஒரு குலத்துக்கொரு நீதியை ஒழித்திட வரிந்து கட்டு!
இதை எல்லாம் கூறினால் என்னை வகுப்புத் துவேஷி என்கிறாயே! பூசணிக்காய் அளவு எழுத்தில் பிராமணாள் ஹோட்டல் என்று போர்டு போட்டுக் கொள்கிறானே அதை ஏன் அனுமதிக்கிறாய்? ஜாதி பேதம் பாராட்டுவதில்லையென்று பெருமையடித்துக் கொள்ளும் தேசியத் தோழனே! உன் சுதந்திர ராஜ்யத்தில், நடைமுறையில் இருந்துவரும் இந்து லாவில், ஜாதிக்கோர் நீதி ஏன் கூறப்பட்டிருக்கிறது? இந்துலா சட்ட புத்தகத்தின் முதல் பக்கத்திலேயே போடப்பட்டிருக்கிறதே; ''இச்சட்டம் மனுதர்ம சாஸ்திரம் மற்றுமுள்ள இந்துமத சாஸ்திரங்கள் இவற்றை அடிப்படை ஆதாரமாகக் கொண்டு செய்யப்பட்டிருக்கிறது: இச்சட்டத்தில் ஏதாவது சந்தேகம் வருமானால் நீதிபதி தானாக முடிவு கட்டக் கூடாது; இச்சாஸ்தி ரங்களில் வல்லவர்களான சாஸ்திரிகளைக் கொண்டுதான் முடிவு கட்ட வேண்டும் என்று எழுதியிருக்கிறதே'' ஜாதி, பேதம் பாராட்டாத சாஸ்திரிகளை எங்காவது நீங்கள் பார்த்ததுண்டா? அந்தச் சட்டத்தை இன்னும் புரட்டிப் பார்த்தால் ஒரு சூத்திரனுக்கு ஒரு பார்ப்பனத்தியிடம் பிள்ளை பிறக்குமானால், அப்பிள்ளைக்குச் சூத்திரனுடைய சொத்தில் பங்குரிமை இருக்குமென்றும், அதேபோல், ஒரு பார்ப்பனனுக்கு ஒரு சூத்திரச்சியினிடம் ஒரு பிள்ளை பிறக்குமானால், அப் பிள்ளைக்கு பார்ப்பனன் சொத்தில் பங்குரிமை இருக்காதென்றும் கூறப்பட்டிருக்கிறதே. இது உன் கண்களுக்கு ஏன் படாமற் போகிறது? இந்த ஒரு குலத்துக்கொரு நீதியை அனுமதிக்கும் சட்டத்தை மாற்ற உனக்கு ஏன் கவலையில்லை?
முதலில் இவைகளைச் செய்!
பாடுபடும் நான் ஏன் சூத்திரன்? பாடுபடாத சோம்பேறிப் பார்ப்பான் ஏன் பிராமணன்? என்றால் மட்டும் உனக்குப் பொத்துக் கொண்டு வரவேண்டுமோ கோபம்? சிந்திக்கும் அறிவு உனக்குச் சற்றேனும் இருக்குமானால், என்னை வகுப்புத் துவேஷி என்று கூற உனக்கு நாக்கு நீளுமா? ஏன் இந்தப் பித்தலாட்டம்? நாலு ஜாதி என்று பிரித்துக் கூறும் சாஸ்திரங்களை ஏன் அனுமதிக்கிறாய்? ஜாதி பிரிவினை பற்றிக் கூறும் பகுதிகளைச் சாஸ்திரங்களிலிருந்து எடுத்து விட்டாயா? அல்லது அவற்றை எரித்துவிட்டாயா? எங்களை வகுப்புத் துவேஷி என்று கூறுவதற்கு, ஹோட்டல்காரனை மனிதன் ஹோட்டல் என்று போட்டுக் கொள்ளும்படி சொல்! இந்துலாவில் ஜாதிப் பற்றி இருப்பனவற்றையெல்லாம் திருத்தியமை! சாஸ்திரங்களையெல்லாம் கொளுத்தி விடு! ஜாதி பிரிவினைப் பற்றிக் கூறும் சகலத்தையும் அழி! கோயிலில் மணியடிக்கச் சகல ஜாதிக்கும் உரிமையுண்டு என்று சட்டம் செய்! பிறகு நான் வகுப்புப்பற்றிப் பேசினால் வாயேன் சண்டைக்கு? அதுவரை பொறுத்துக் கொண்டிரு தம்பி! இன்றேல் உன் வண்டவாள மெல்லாம் அம்பலமாகி விடப் போகிறது.
சமபந்தியில் பார்ப்பான் என்றால் சந்தோஷப்படலாமா நீ?
பார்ப்பானெல்லாம் இப்போது சம்பந்தி போஜனம்கூட செய்கிறார்களாம் ஜாதி பாராட்டாமல். எங்கள் வீட்டுச் சோறு ருசியாய் இருந்தால் எந்தப் பார்ப்பானும் தான் சாப்பிடுவான். உண்மையில் எத்தனை பிராமணர்கள் தங்கள் வீட்டில் ஒரு பறையனையோ, சக்கிலியையோ தம்முடனிருந்து சாப்பிட அனுமதிப்பார்கள்? நீ சாப்பிடுவதைக்கூட நாங்கள் பார்க்கக் கூடாது என்கிறாயே! அதுதான் போகட்டும் என்றாலும், நான் வெட்டிய குளத்துத் தண்ணீரானாலும், அதையும் திரை போட்டு மறைத்துக் கொண்டுதானே குடிக்கிறாய்!
ஆலயப்பிரவேசம் உண்மை என்றால்
அவனையும் மணி அடிக்கச் செய்!
பஞ்சமனைக் கோயிலில்கூட அனுமதித்து விட்டார்களாம்! அவனும் முடிச்சவிழ்க்க வேண்டுமென்று விட்டாயா? அல்லது மோட்சத்திற்குப் போகட்டுமென்று விட்டாயா? மோட்சத்திற்குப் போவதற்காகவே விட்டிருந்தால், இத்தனை நாள் அடித்து அனுபவித்த அந்த மணியைக் கொஞ்சம் அவனிடம் கொடேன்! அவனும் ஆசை தீர அடிக்கட்டுமே! செய்வாயா? செய்தால் சாமி ஓடிப்போகுமே! அல்லது செத்துப் போகுமே! அப்புறம் உன்னை யார் காப்பாற்றுவார்கள்? ( இந்த அக்கிரமமெல்லாம் செய்ய உனக்கு உரிமையுண்டு. நான் ஏன் சூத்திரன் என்று கேட்பதற்குக்கூட எனக்கு உரிமையில்லையா? கேட்டால் கலகம் செய்கிறேன் என்பதா? உனக்குப் பழக்கமாகிவிட்டது, உன் புத்தி அடிமைத்தனத்தால் சின்னப் புத்தியாகிவிட்டது. ஆகவே, பொறுத்துக் கொண்டிருக்கிறோம். மானமுள்ள, அறிவுள்ள, வேறு எவன் இவ்விழிவைப் பொறுத்துக் கொண்டிருக்க முடியும்? வேறு எந்த நாட்டிலாவது சூத்திரனும், பஞ்சமனும் உண்டா? இந்த உயர்வு தாழ்வு இருக்கும் வரைக்கும் இது ஒரு ஞான பூமியாகவும் ஆக முடியுமா?


'குடிஅரசு' - சொற்பொழிவு - 08.05.1948

0 comments: