Search This Blog

22.9.18

கி.வீரமணியின் வேலை இனி எடுபடாது! -தினமலரின் அருள்வாக்கு

தினமலரின் அருள்வாக்கு

***கவிஞர் கலி. பூங்குன்றன்***


கி.வீரமணியின் வேலை இனி எடுபடாது! என்று தினமலரில் ஒரு கடிதம் வெளிவந்துள்ளது.
ராமானுஜரும், பாரதியாரும் தாழ்த்தப் பட்டவர்களுக்குப் பூணூல் போட்டு பெரிய புரட்சியைச் செய்ததாகப் புலம்பும் பேர் வழிக்கு ஒரே ஒரு கேள்வி.
அந்த ராமானுஜரும், பாரதியாரும் அதில் ஏன் வெற்றி பெறவில்லை? அந்த ராமானு ஜரையும், பாரதியையும் பெருமைக்குரிய இடத்தில் வைத்துப் பேசும் பேர்வழிகளை நோக்கி ஒரே ஒரு கேள்வி. அந்தப் பணிகளை இப்பொழுது செய்ய ஏன் தயக்கம்?
சங்கராச்சாரியாரையும், ஜீயரையும் பார்த்துக் கேள்வி கேட்கும் திராணி - நல்ல புத்தி இவர்களுக்கு உண்டா?
காஞ்சிப் பெரியவாளே, சிறீப்பெரும்புதூர் ஜீயர் வாளே மரியாதையாக ராமானுஜரும், பாரதியாரும் மேற்கொண்ட அந்த வேலைகளை தொடர்ந்து செய்யுங்கள் - அப்படி நீங்கள் செய்ய ஆரம்பித்தால், இந்த வீரமணிகள் எல்லாம் இப்படித் துள்ளு வார்களா? என்று கேள்வி கேட்கும் அறிவு நாணயம் தினமலர் வகையறாக்களுக்கு உண்டா?
இவற்றிற்கெல்லாம் மூல காரணம் ஜாதிதானே. பூணூல் - கீணூல் பிரச்சினை எல்லாம் இந்தப் பாழாய்ப் போன ஜாதியால் தானே - கடவுள் படைப்பில் மேல்ஜாதி - கீழ்ஜாதி என்று எப்படி இருக்க முடியும்? எல்லாம் நாமாகப் பார்த்து செய்த ஏற்பாடு தானே!
வைஷ்ணவ பெரியவா ராமானுஜர், திருக் கச்சி நம்பி என்ற பிராமணரல்லாதாரைக் குருவாக ஏற்றுக் கொண்டு இருக்கிறார்கள் - அப்படி இருக்கும்போது, சங்கர மடத்திலும், வைணவ மடத்திலும் திருக்கச்சி நம்பி பரம்பரையைச் சேர்ந்த ஒருவரை அமர்த்த என்ன தடை? அது சாஸ்திரத் தடையாக இருந்து தொலையட்டும் - எவ்வளவோ மாற்றங்கள் வந்துவிட்டன - இதில் ஒரு மாற் றத்தைக் கொண்டு வந்தால் வீண் பிரச்சினை கள் தொடை தட்டி வெடித்துக் கிளம்பாதோ என்று சங்கர, ஜீயர் மடாதிபதிகளிடம் கோரிக்கை வைக்க முன்வருவார்களா?
இதே ஜீயரிடம் ஆனந்தவிகடன் சார்பில் திருவாளர் மணியன் பேட்டி கண்டபோது, என்ன சொன்னார்?
இதுதானே இன்றைய நிலை? இதற்கு நாணயமாகப் பதில் சொல்ல வக்கில்லாமல் திராவிடர் கழகத் தலைவரைப் பார்த்து வக்கணைப் பேசி என்ன பயன்?
இன்னவர்தான் பூணூல் போட வேண்டும் என யாரும் கூறவில்லையாம் - அடேயப்பா - பொய்யைச் சொல்லு வதற்கு இந்தப் பூணூல் கும்பல் சற்றும் வெட்கப்படாது என்பதற்கு இது ஒன்று போதாதா?
விடுதலையில் ஆதாரத்தோடு எந் தெந்த வருணத்தைச் சார்ந்தவர்கள் எத்த கைய நூலால் பூணூல் தரிக்கவேண்டும் என்பதை அவர்களின் மனுதர்ம சாஸ் திரத்திலிருந்தே எடுத்துக்காட்டப்பட்டு இருந்தது. ஜாக்கிரதையாக மறந்து போயிருந்தால், இப்பொழுதுகூட மீண்டும் எடுத்துக்காட்டுகிறோம்.
மனுதர்மம் - அத்தியாயம் இரண்டு; சுலோகம் 42 என்ன கூறுகிறது?
பிராமணனுக்கு மிஞ்சிப் புல்லினாலும்,
க்ஷத்திரியனுக்கு வில்லின் நாணை யொத்த முறுவற் புல்லினாலும்,
வைசியனுக்கு க்ஷணப்ப நாரினாலும் மேடு பள்ளமில்லாமல் மெல்லிதாகப் பின்னி மூன்று வடமா மேலே அரைஞாண் கட்ட வேண்டியது.
அடுத்த 43 ஆம் சுலோகம் என்ன சொல்லுகிறது?
இந்த மூன்றும், அகப்படாத காலத்தில், மேற்சொன்ன மூன்று வருண பிரம்மச்சா ரிகளுக்கும் கிரமமாக தருப்பை நாணல் சவட்டைக் கோரை - இதுகளினால் மூன்று வடம் அல்லது தங்கள் குல வழக்கப்படி அய்ந்து வடமாவது ஒரு முடியுடன் கட்ட வேண்டியது.
அதற்கடுத்த சுலோகம் (44) என்ன கூறுகிறது?
பிராமணனுக்குப் பஞ்சு நூலிலானும்,
க்ஷத்திரியனுக்கு க்ஷணப்ப நூலாலும்,
வைசியனுக்கு வெள்ளாட்டின் மயிரா லும் மூன்று வடமாகத் தோளில் பூணூல் தரிக்கவேண்டியது.
தினமலர் திரிநூல் கூட்டத்துக்கு ஒரே ஒரு கேள்வி.
இத்தனை சுலோகங்களிலும் எந்த இடத்திலாவது சூத்திரர்களுக்குப் பூணூல் அணியும் உரிமை கொடுக்கப்பட்டுள்ளதா? அறிவு நாணயத்தோடு பதில் சொல்லட் டுமே பார்க்கலாம்.
அப்படி சொல்லியிருந்தால், அடே யப்பா எப்படியெல்லாம் சலாம் வரிசை ஆடியிருக்கும் இந்த அக்கிரகார அம்பிக் கூட்டம்!
சொல்லாதது மட்டுமல்ல, தப்பித்தவறி சூத்திரர்கள் அந்தப் பூணூலை அணிந் தால் அவர்களின் கெதி என்னவாகி இருக் குமாம்!
சூத்திரன் பிராமண ஜாதிக் குறியை - பூணூல் முதலியதைத் தரித்தால் அரசன் சூத்திரர்களின் அங்கங்களை வெட்டி விடவேண்டும். (மனுதர்மம் அத்தியாயம் 9; சுலோகம் 224).
தினமலர் வகையறாக்களுக்கு இப் பொழுது ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. விடுதலைக்கோ, வீரமணி அவர்க ளுக்கோ முந்திரிக் கொட்டை மாதிரி பதில் எழுத பேனாவைக் கையில் எடுப்பதற்கு முன்பு அந்த வேலை முடிந்தாகவேண்டும்.
இந்து மதத்தில் இந்த மனுதர்மம் என்பது வெறும் குப்பை - இதனை நாங்கள் ஏற்கமாட்டோம் என்று கூறுவதோடு அமைந்துவிடாமல், காஞ்சிபுரத்திலோ அல்லது ஜீயர் சுவாமிகள் சஞ்சரிக்கும் இடத்திலோ ஒரு மாநாடு கூட்டி மனு தர்மத்தை எரிக்கும் போராட்டத்தை நடத்திட முன்வரவேண்டும்; அதற்குப் பிறகு வீரமணிகளுக்குச் சவால் விடலாம். தயாரா என்ற சவால் விட்டே கேட்கிறோம்.
1937 இல் சக்ரவர்த்தி ராஜகோபாலாச் சாரியார் சென்னை மாநில பிரதமராக வந்தபோது ஓர் உத்தரவு போட்டார் - அது என்னவென்று தெரியுமா?
இனி ஆசாரிகள் ஆச்சாரியார் என்று போடக் கூடாது என்பதுதான் அந்த உத்தரவு - இப்படி உத்தரவு போட்டவருக்கு உடம் பெல்லாம் மூளையாம்! (ஹி... ஹி....)
தீண்டாமை க்ஷேமகரமானது என்று கூறும் சங்கராச்சாரியாரை ஜெகத்குரு என்று கூறும் கூட்டம் வக்கணையாக எழுதுவது பாரு...
'எச்சல் பொறுக்கும்  ................... க்கு
ஏப்பத்தைப் பாரு'
என்ற பழமொழிதான் நினைவிற்கு வந்து தொலை(க்)கிறது.
இன்னொரு பெரிய கேள்வியைக் கேட்டுவிட்டதாக சிண்டை வெளியில் எடுத்து விட்டுக் கேள்வி கேட்கிறது தினமலர்.
கி.வீரமணி ஜாதி பேதம் பார்க்காதவ ரானால், ஈ.வெ.ரா. அறக்கட்டளை தி.க. சொத்துகளுக்கு அதிகாரமிக்கவராக ஆதி திராவிடர் ஒருவரை அப்பதவியில் அமர்த்தி விட்டு, தான் விலகட்டும் பார்க்கலாம்; அப்போது அவரைப் பாராட்டலாம் என்கிறது  தினமலர்.
சபாஷ் சரியான கிடுக்கிப்பிடி - வீரமணி யைத் திணற அடித்துவிட்டதாக ஒரு நினைப்பு.
பெரியார் அறக்கட்டளையில் தாழ்த்தப் பட்டோர் இருக்கக் கூடாது; அதற்குத் தலைவராக வரக் கூடாது என்று எந்த சட்ட விதிமுறையும் கிடையாது. தந்தை பெரியார் கொள்கையை ஏற்றுக்கொண்ட தாழ்த்தப் பட்டவர் ஒருவர் தாராளமாக வரலாம் - அதற்கான தடை ஏதும் கிடையாது.
ஆனால், தினமலர் ஜெகத்குரு என்று தூக்கிச் சுமக்கும் சங்கர மடத்தில் பார்ப்ப னரைத் தவிர வேறு யாராவது சங்கராச் சாரியாராக வர முடியுமா?
பார்ப்பனர் அல்லாதார் வரக்கூடாது என்ற தடை. அங்கே இருக்கிறதா, இல் லையா? சங்கர மடத்தில் சமைக்கப்படும் மீதியான உணவைக் கூட சூத்திராள், பஞ்சமாள் சாப்பிட்டு விடக்கூடாது என்று குழிதோண்டிப் புதைக்கும் கும்பலா சமத்துவம்பற்றி எல்லாம் பேசுவது?
திராவிடர் கழகத்தைப் பொருத்த வரையில் கட்சிக்குள் ஜாதி கிடையாது. அந்த எண்ணம் உள்ள எவருக்கும் இடமும் கிடையாது. பொறுப்பில் இருப்பவர்கள் யார்? என்ன ஜாதி? என்று அறிந்திருக்கவும் கிடையாது.
இந்து மதத்தில் உள்ள எந்த ஜாதியி னரும் அதற்குப் பயிற்சி கொடுத்து கோவில் அர்ச்சகராகலாம் என்று சட்டம் செய்தால், அதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்திற்கு 12 பார்ப்பனர்கள் சென்றார்களே - அப் பொழுது எங்கே சென்றது இந்தத் தினமலர் கும்பல். ஜீயரும், சங்கராச்சாரியார்களும், ராஜாஜிகளும் அதற்கு எதிர்நிலை எடுத்தது ஏன்? அடியாட்கள் தேவைப்பட்டால் இந்துக்களே ஒன்று சேருங்கள் என்பதும், நாங்களும் இந்துக்கள்தானே - முறையாக அர்ச்சகர் பயிற்சி பெற்று விட்டோமே நாங்களும் ஏன் அர்ச்சகர் ஆகக்கூடாது என்று கேட் டால், ஆகமங்களைக் காட்டி ஏய்ப்பதும் தானே பார்ப்பனப் புத்தி!
உண்மையான தொண்டினால் கழகத் தின் எந்த முக்கிய பொறுப்புக்கும் எவரும் வரலாம். அதுதான் இங்கு நடைமுறை.
தினமலர்கள் கண்ணாடி வீட்டிலிருந்து கல்லெறிய ஆசைப்படக்கூடாது.
பிராமணர்கள் உடல், பொருள் அனைத் தும் இழந்து தேச விடுதலைக்காகவும், தீண்டாமையை எதிர்த்தும் போராடியதை மறக்க முடியுமா? என்று கேள்வி கேட்கும் தினமலருக்கு ஒரு கேள்வி. அது உண்மையாக இருந்தால், இந்து மதத்தின் நான்கு திசைகளிலும் உள்ள சங்கராச்சாரி யார்கள் ஒன்று சேர்ந்து ஒரே ஒரு அறிக்கையைக் கொடுக்கச் சொல்லுங்கள் பார்க்கலாம் - ஜீயர்கள் அவர்களோடு சேர்ந்து வரமாட்டார்கள் - அவர்கள் வேண்டு மானால், தனியாகவே அறிக்கை கொடுக் கட்டும்.
இந்து மதத்தில் நிலவும் தீண்டாமையை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் - தீண்டாமையையும், அதற்கு மூல வேரான ஜாதியும் ஒழிக்கப்பட வேண்டியவைதான் - இந்துக்களே இன்று முதல் இவற்றை விட்டுத் தொலையுங்கள் - இந்துக்கள் அனைவரும் சரி சமம் என்று ஒரே ஒரு அறிக்கையை வெளியிடச் செய்யுங்கள் பார்க்கலாம்.
தீண்டாமை ஒழிப்புக்காக காந்தியார், காஞ்சி சங்கராச்சாரி சந்திரசேகரேந்திர சரசுவதியை பாலக்காட்டில் (15.10.1927) சந்திக்கச் சென்றபோது (மாட்டுக் கொட்ட கையில்தான் காந்தியாரை உட்கார வைத் துப் பேசினார் சங்கராச்சாரியார் என்பது நினைவில் இருக்கட்டும்) காந்தியாரிடம் சங்கராச்சாரியார் என்ன பதில் சொன்னார்?
ஹரிஜன ஆலயப் பிரவேச விஷயத்தில் சாஸ்திரங்களையும், பழைய வழக்கங்க ளையும் நம்பி இருப்பவர்கள் நம் நாட்டில் பெரும்பாலோர் இருக்கிறார் களென்றும், அவர்களுடைய மனம் நோகும்படி செய்யும் எந்த மாறுதலும் இம்சைக்கு ஒப்பாகுமென்றே தாம் முடிவுக்கு வரவேண்டியி ருக்கிறதென்றும் ஸ்வாமிகள் காந்தியடிகளிடம் தெரிவித்தார்.
(நூல்: தமிழ்நாட்டில் காந்தி, பக்கம் 576).
கடைசியாக ஒரு கேள்வி: திருப்பதி ஏழுமலையானுக்கு மூன்றரைக் கிலோ எடையில் தங்க பூணூலையும், திருப்பரங் குன்றம் சுப்பிரமணிய சாமிக்கு ரூ.15 லட்சம் செலவில் தங்கப் பூணூலையும், காஞ்சி சங்கராச்சாரியார் அணிவித்தாரே, சிறீரங் கம் ரங்கநாதனுக்கு ரூ.52 லட்சம் செலவில் நாராயண ஜீயரும் தங்கப் பூணூலை அணிவித்தாரே, (தினமணி, 27.2.2014) கடவுளையும் பார்ப்பன ஜாதியில் சேர்த்து விட்டதை என்ன சொல்ல! பார்ப்பானை ஒழித்தால் கடவுளும், கடவுளை ஒழித்தால் பார்ப்பானும் ஒழிந்துவிடுவான் என்பது தானே உண்மை.


பார்ப்பனர்களிலேயே உயரமான பீடாதிபதியாக இருக்கக்கூடிய லோகக் குரு ஒருவரின் மனப்பான்மையே இப்படி பச்சை யாக தீண்டாமையை வலுவாகப் பிடித்துக் கொண்டு தூங்கும்போது, தினமலர்க் கும்பல் எந்தப் பார்ப்பனரை நம்பச் சொல்லு கிறது என்பது அறிவுக்கு விருந்தளிக்கும் அரிய கேள்வியே!
******************************************************************************************

இதுதான் இந்து மதத்தின் ‘ஜாதி பாராமைக்கான’ இலட்சணமா?


கேள்வி: தமிழ்நாட்டில் அரிஜனங்கள் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட இருக்கிறார்களே... அதைப் பற்றி?

சங்கராச்சாரி: அர்ச்சனை நடந்த அவர்களுக்குத் தகுதியில்லை. ஆகவே அவர்களை அர்ச்சகர்களாக நியமிப்பது சரி இல்லை.

கேள்வி: அர்ச்சனை முறைகளைக் கற்றுக் கொள்ளலாம் அல்லவா? அதற்கு பிறகு அர்ச்சகர்களாகப் பணிபுரியும் தகுதி அவர்களுக்கு ஏற்படலாமே?

சங்கராச்சாரி: அவர்களுக்கு தகுதி இல்லை. அவ்வளவுதான். மேலே இதைப்பற்றி விவாதத்திற்கே இடமில்லை.

கேள்வி: ‘சாதுர்வர்ணயம்மயா சிருஷ்டம்’ என்ற கீதையின் சுலோகத்தைப் பற்றிச் சுவாமிகள் என்ன கருதுகிறார்கள் என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.

சங்கராச்சாரி: பிராமணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் போன்ற நால்வகையினரையும் தாமே படைத்ததாகக் கடவுள் கூறுகிறார்.

கேள்வி: ஆனாலும் குணம், தொழில் அடிப்படையில் (குணகர்மா) அவர்கள் பிரிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று தானே கீதாசிரியர் கூறுகிறார்?

சங்கராச்சாரி: 
இக்காலத்துக் குணகர்மங்களின் அடிப்படையில் அல்ல. முற்பிறவியில் அவர்கள் செய்த குணகர்மங்களின் அடிப்படையில்தான் பிராமணர்கள் என்றும், க்ஷத்திரியர்கள் என்றும் படைக்கப்பட்டிருக்கிறார்கள். அந்த சுலோகத்தில் சொல்லப்படும் குணகர்மா முற்பிறவி சம்பந்தப்பட்ட குணகர்மாவாகும். ஒரு பிராமணன் தன்னுடைய கடமைகளைச் செய்யாவிட்டால் அடுத்த பிறவியில் கடவுள் அவனைத் தண்டிப்பார்.




- பூரி சங்கராச்சாரியாரிடம் மணியன் பேட்டி,
‘ஆனந்த விகடன்’, 16.6.1974


*****************************************************************************************************
                ------------------கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்கள் 22-9-2018  ‘விடுதலை’ ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை

27 comments:

தமிழ் ஓவியா said...

பார்ப்பனரைப்பற்றிய பழமொழிகள்



1897ஆம் ஆண்டில் தமிழ்ப் பழமொழிகள் 3644 அய்த் தொகுத்து ஹெர்மன் ஜென்சன் பாதிரியார் (Rev. Herman Jensen) என்பவர் 523 பக்கங்கள் கொண்ட நூலாக வெளியிட்டார். (அது 1982ஆம் ஆண்டில் புதுடில்லி Asian Educational Services ஆல் மறுபதிப்புச் செய்யப்பட்டுள்ளது). A Classified Collection of Tamil Proverbs என்னும் அந் நூலில் பார்ப்பனரைப் பற்றிக் காணப்படும் பழமொழிகள் வருமாறு:-

241: அண்டை வீட்டுப் பார்ப்பான் சண்டை மூட்டித் தீர்ப்பான்.

744: குள்ளப் பார்ப்பான் கிணற்றில் விழுந்தால், தண்டு எடு, தடி எடு என்பார்கள்.

887: அறிந்த பார்ப்பான் சிநேகிதன் ஆறு காசுக்கு மூன்று தோசையா?

981: பானையில் அரிசி இருந்தால் பார்ப்பான் கண் உறங்காது.

1581: அக்கிகாரத்து நாய் பிரதிஷ்டைக்கு அழுததுபோல

1625: அப்பன் சோற்றுக்கு அழுகிறான்; பிள்ளை கும்பகோணத்தில் கோதானம் செய்கிறான்.

1626: ஆத்தாள் அம்மணம்; கும்பகோணத்தில் கோதானம்

1657: பெற்ற தாய் பசித்திருக்க, பிராமண போஜனம் செய்வித்தது போல

1930: சாகிற வரையில் வைத்தியன் விடான்; செத்தாலும் விடான் பஞ்சாங்கக்காரன்

2278: கெட்டுப்போன பார்ப்பானுக்குச் செத்துப்போன பசுதானம்

2884: ஆனைமேலிருக்கிற அரசன் சோற்றைவிட பிச்சை எடுக்கிற பார்ப்பான் சோறுமேல்

2902: பசு சாதும் பார்ப்பான் ஏழையும் நம்பப்படாது.

2904: பத்து விதத்திலும் பறையனை நம்பலாம்; பார்ப்பானை நம்பக் கூடாது.

தமிழ் ஓவியா said...

ஆசிரியர் விடையளிக்கிறார்


வினாயகர் ஊர்வலத்தை அனுமதிக்கலாமா?



கேள்வி 1: பெண்கள் தற்கொலை இந்தியாவில் தான் அதிகம் என்ற தகவல் பற்றி...

- கு.மனோகரி, திருச்செந்தூர்

பதில்: சரஸ்வதி, லட்சுமி, காளி-மூளி என பெண் கடவுள்களாக கும்பிடும் “ஞானபூமி”யின் யோக்கியதை இதுதானா?

கேள்வி 2: இந்து தேசியவாதத்தால், இந்தியாவில் மதச்சார் பின்மைக்கு ஆபத்து என்று அமெரிக்க நாடாளுமன்றம் அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளதே?

- வி.க.திருஞானம், கொண்டல்

பதில்: உலகமே வியக்கும் மோடியின் சாதனை இதுதான் பாரீர்! என்று ஆர்.எஸ்.எஸ்., விளம்பரம் கூட இதை வைத்துச் செய்யுமோ?

கேள்வி 3: குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதலில் பெரும்பாலும் பாதிப்புக்கு ஆளானவர்கள் தலித்துகள் என்ற தகவல் எதைக் காட்டுகிறது?

- வி.ஈசுவரன், தேவூர்

பதில்: பிரதமர் மோடி ஆட்சி மத்தியில் - மாநிலங்களில் உள்ள மகளிர் மாண்பறியாத மண்ணாங்கட்டிகளின் ஆட்சியில் கண்ட பலன் இதுதான், என்று நம் இதயத்தில் இரத்தம் வடிகின்ற நிலைதான்!

கேள்வி 4: சட்டங்கள் இயற்றுவது சரி - அவை செயல்படுகின்றனவா என்பது தானே முக்கியம்?

- மு.கோவேந்தன், மொரப்பூர்

பதில்: செயல்படாத சட்டங்களால் என்ன பயன்? அவை வெறும் கண்ணாடி படம் போடப் பயன்படும் மரச்சட்டங்களே!

கேள்வி 5: விநாயகர் சதுர்த்தி விழாவை பல ஊர்களில் திமுகவினரே முன்னின்று நடத்தியுள்ளார்களே! (திருச்சியில் கூட)

- வி.முல்லை, திருச்சி

பதில்: மகா வெட்கக்கேடு! மல்லாந்து படுத்துக்கொண்டு துப்ப நாம் விரும்பவில்லை. திமுக தலைமை இத்தகைய கொள்கை விரோதப்போக்கை முளையிலேயே கிள்ளி எறிந்து, கலைஞர் காத்த பாரம்பரியத்தை கொள்கை நெறியைக் காக்க வேண்டும் என்பது நமது அன்பு வேண்டுகோள் ஆகும்.

கேள்வி 6: வங்கிகளில் கடன் வாங்கி வெளிநாடு சென்ற பண முதலைகளை இந்தியாவிற்குக் கொண்டு வந்தால், அவர்களுக்காக சொகுசாக சிறை வசதி செய்யப்படும் என்பது எந்த வகை நீதி?

- துரை.வீரசேனன், விளாத்திக்குளம்

பதில்: நம்நாட்டு உரிமைப் போராளிகள், ஏழை விவசாயிகள் தவிர, மற்ற கடத்தல், கடல் கடந்து சென்று திரும்பி கைதியாக வரும் கடன் செலுத்தாத “கண்ணியவான்களுக்கு” சொகுசு சிறைவாசம்! ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்று ஆடுவோமோ, பள்ளுபாடுவோமே!

கேள்வி 7: 29 வெளிநாடுகளுக்கு ஒரு லிட்டர் பெட்ரோலை ரூ. 34க்கு இந்திய அரசு அனுப்புகிறதே?

- வி.ஷாஜகான், குன்னூர்

பதில்: அப்படியா? நாமெல்லாம் வெளிநாடுகளுக்கு ஓடிவிடத் தூண்டுகிறதோ இந்த அரசு? புரியவில்லை! ஜெய்ஹிந்து - பாரத் மாதாக்கீகீகீ ஜே!

கேள்வி 8: பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் குழந்தைகளுக்கு அளிக்கப்படும் சத்துணவில் முட்டையைத் தவிர்ப்பது சரியா?

- ந.பல்லவன், மேடவாக்கம்

பதில்: இந்துத்துவா என்ற சத்தற்ற, சாரமற்ற விஷம் பாயும் ஆட்சிகளுக்கு விடைகொடுத்து அனுப்புவதே, குழந்தைகளை சத்துடன் வளர்க்க உதவும் போலும்!

கேள்வி 9: ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் ஊர்வலத்தில் கலவரங்கள் நடந்தும் அதனை அனுமதிப்பது எப்படி?

- சா.பரதன், சென்னை-6

பதில்: ஒரு லட்சம் போலீசார் என்ற குவியலுக்குப் பிறகு கலவரம் - அதுவும் மதக்கலவர முயற்சிகள் என்றால் காரணமானவர்களை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டாமா?

கேள்வி 10: கண் திருஷ்டியால் முக்கொம்பு அணை உடைந்ததாமே? (சொன்னவர் தமிழக அமைச்சர் ஒருவர்)

- ந.வேலாயுதன், மதுரை - மேலூர்

பதில்: இந்தியாவிலேயே அதிபுத்திசாலிகள் கொண்ட அமைச்சரவைதான் தமிழக அமைச்சரவை! சேக்கிழார் எழுதிய கம்பராமாயணம் பற்றியும் இந்த கண்திருஷ்டி பற்றியும், தெர்மாக்கோல் போர்வை போட்டு மூடிடும் வைகை நதி பற்றியும் வேறு எங்கு எவர் பேச முடியும்? அந்தோ!

தமிழ் ஓவியா said...

கடவுள் பற்றாளர்கள்தாம் நேர்மையாளர்களா?

கடவுள் உருவச் சிலைகள் திருட்டுகள் குறித்துத் தாங்கள் தெய்வ நம்பிக்கை உள்ளவர்கள் என்பதால் நேர்மையாக நடவடிக்கை எடுப்போம் எனச் சார்புரை அமைச்சர் ஒருவர் பேசியுள்ளதாகச் சில வாரங்களுக்கு முன்னர் ஒரு செய்தியைப் படித்தேன்.

அமைச்சர்களும் அதிகாரிகளும் நேர்மை யாளர்களா அல்லரா என்பதை மக்கள் அறி வார்கள். எனினும், தவறாகப் பாகுபடுத்தும் வரையறை மூலம் நேர்மையை அளவிட்டுப் பெருமை பேசக்கூடாது.

நேர்மையாக வாழும் ஒருவர் தன்னை நேர்மையாளராகச் சொல்லிக் கொள்ளலாம். ஆனால், நான் படித்தவன், நேர்மையாகத் தான் வாழ்வேன் எனச் சொல்லக்கூடாது. படித்தவர்கள்தாம் மிகுதியும் நேர்மைக் குறைவுடன் நடந்து கொள்கிறார்கள். அவர் கள் நேர்மையின்றி வாழும் முறையையும் படித்துக் கொள்கிறார்கள். படித்தவன் நேர்மையாளன் என்றால் படிக்காதவன் நேர்மைக் குறைபாடு டையவனா? உண்மையில் சூது - வாது படிக்காதவன்தான் நேர்மையாளனாக உள்ளான். எனவே, கல்வி அடிப்படையில் நேர்மையை அளவிட்டுக் கூறுவது தவறாகும்.

சிலர், நான் உண்மையான கிறித்துவன், பொய் பேச மாட்டேன் அல்லது குற்றம் புரிய மாட்டேன் என்பர். அப்படியானால், இந்து, இசுலாம், புத்தம் முதலான பிற சமயங்களைச் சார்ந்தவர்கள் குற்றம் புரிபவர்களா? இவ்வாறு சமய அடிப்படையில் நல்லவன் அல்லது தீயவன் என மதிப்பிடுவதும் தவறாகும்.

இதுபோல்தான் தெய்வப் பற்றுள்ளவன் எனவே நேர்மைக் குறைபாடுடையவன் அல்லன்; நேர்மையாளன் எனக் கூறுவதும். கடவுள் மறுபிறப்பாகக் கூறிக்கொண்ட காஞ்சி செயேந்திரன்தான் கற்பழிப்பு, கொலை, ஒழுக்கக்கேடுகளின் உறைவிடமாக வாழ்ந் தான் என அவனுடன் வாழ்ந்தவர்களே தோலு ரித்துக் காட்டினர். தெய்வப்பணி புரிந்த தேவ நாதன்தான் கருவறையிலேயே திருமணமான பெண்களை ஏமாற்றி உறவு கொண்டவன். கிருட்டிணன் போன்ற கடவுள் பிறப் பெடுத்தவனாகக் கூறிக்கொண்ட சாமியார் நித்தியானந்தன்தான் பெண்கள் பலர் வாழ்வில் விளையாடி உள்ளான்.

ஒழுக்கக்கேடுகளால் நீதிமன்றம் முன் நிறுத்தப்பட்ட “ஆசாராம் சாமியார், குற்ற உணர்ச்சி ஏதுமின்றி, எங்கள் கடவுள் கிருட்டிணன் செய்த காம விளையாட்டுகளைத்தான் நானும் செய்தேன்” என்று நீதிமன்றத்திலேயே சொன்னதை யாரும் மறந்திருக்க முடியாது.

சாமியார்கள் என்றாலே பெண்களின் கற்புடன் விளையாடுபவர்கள் என்பதைத் தான் நாளும் நிகழ்வுகள் காட்டுகின்றன. இறை நம்பிக்கையைப் பரப்புபவர்களில் பெரும்பான்மையர் இறை நம்பிக்கையற்ற ஒழுக்கக்கேடர்களாக உலவி மக்களை ஏமாற்றி வருவதையும் நாம் அன்றாடம் காண்கிறோம்.

தமிழ் ஓவியா said...

சாமியார்களை ஒழுக்கவான்களாகப் புகழ்வதும் அவர்கள் குற்றவாழ்க்கை தெரிய வந்தால் போலி சாமியார்கள் என்று சொல்வதும் வழக்கமாகப் போய் விட்டது. உண்மையில் சாமியார் என்று ஏய்த்துத்திரியும் அனைவருமே போலிகளே! உண்மையான அறவா ணர்கள் விளம்பரம் எதுவுமின்றி அமைதி யாக நற்பணிகள் ஆற்றி வருகின்றனர்.

அடுத்தவர் பணத்தில் அறப்பணி செய்து நம்பிக்கையை அறுவடை செய்து கொண்டு ஒழுக்கக்கேடுகளில் ஈடுபடும் இத்தகைய போலிகள் ஆயிரக்கணக்கில் உள்ளனர். அன்றாடம் இறைப்பணிபுரி யும் உத்தமர்கள் எனக் கூறிக் கொள் பவர்கள்தாம் சாமிச் சிலைகளைத் திருடி விற்று வருகிறார்கள்.

இவர்கள் எல்லாம் கடவுள்களைக் கொண்டு தங்கள் பிழைப்பை நடத்து கிறார்களே தவிர, கடவுள்மீதுள்ள அச்சத் தால் குற்றம் தவிர்க்க வில்லை. இறை நம்பிக்கை இவர்களை நேர்மையாளராக வாழ வைக்கவில்லை. எனவே, தெய்வ நம்பிக்கை அடிப்படையில் நேர் மையை மதிப்பிடுவது பெருந் தவறா கும். இறை ஏற்பாளர்களை விட இறை மறுப்பாளர்கள்தாம் தீவினைக்கு அஞ்சி வாழ்கிறார்கள்; என்றாலும் பகுத்தறிவாளன். எனவே, பண்பாளனாக வாழ்கிறான் என யாரையும் சொல்ல முடியாது.

ஆனால், ஒழுக்க நெறியில் வாழ்பவன், பண்பாளன் எனவே தவறான பாதையில் செல்லவில்லை என நாம் அத்தகை யோரைச் சொல்ல முடியும். எனவேதான் திருவள்ளுவர் ஒழுக்கத்தைச் சிறப்பித்துக் கூறுகிறார். ஒழுக்க நெறியில் வாழ்பவன் தவறிழைத்தால் அவன் ஒழுக்க நெறியில் வாழ்பவனாக முடியாதே! எனவே, அமைச் சர் பெருமான், தாங்கள் ஒழுக்கநெறியில் வாழும் பண்பு நிறைந்தவர்கள்/ எனவே நேர்மையாளராகத்தான் செயல்படுவோம் என உண்மையாக இருப்பின் கூறலாம்.

ஒழுக்க நெறியில் வாழாமலேயே ஒழுக்க நெறியில் வாழ்வதாக ஒருவர் சொல்லிக் கொள்ளலாம். ஆனால் உண் மையை மக்கள் அறிவர். என்றாலும் பண்பை அடிப்படையாகக் கொண்டு நேர் மையை அடையாளம் காண்பது சரியே! ஆனால், அமைச்சர் இவ்வாறு பேசியுள்ள தால் இறை நம்பிக்கையற்றவர்கள் நேர் மைக் குறைபாடு உடையவர்கள் எனப் பொருளாகிறது.

அமைச்சரின் இத்தகைய பேச்சிற்கு நாம் கண்டனம் தெரிவிக்கிறோம். பிறரையும் கண்டனம் தெரிவிக்க வேண்டுகிறோம். நேர்மைக்கும் கடவுள் பற்றிற்கும் தொடர்பில்லை என்னும் உண்மையை உரக்கச் சொல்ல விரும்புகிறோம். அப்படி இருந்தது என்றால் உலகில் நேர்மை எங்கும் வாழ்ந்திருக்குமே! இதற் காகக் கடவுள் நம்பிக்கையாளர்கள் நேர்மையற்றவர்கள் என்று சொல்வ தாகப் பொருளல்ல. அவர்களுள்ளும். தெய்வ நம்பிக்கையால் தங்களுக்குள் வேலி அமைத்துக்கொண்டு அல்லன பக்கம் கடக்காமல் வாழும் நேர்மையாளர்கள் பலர் உள்ளனர். அவர்கள் கடவுள் நம்பிக்கை யுடன் பண்பாளர்களாகவும் வாழ்பவர்கள். கடவுள் நம்பிக்கைக்கும் நேர்மைக்கும் முடிச்சு போட வேண்டா என்றுதான் சொல்கிறேம்.

ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை

இழுக்கத்தின்

எய்துவர் எய்தாப் பழி.

(திருவள்ளுவர், திருக்குறள் 137)



இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழ் ஓவியா said...

தாலி கட்டுவது தேவையற்ற சடங்கு

அறிஞர் அண்ணாவின் தெளிவுரை



மக்கள் சடங்குகளைத் தள்ளி விடுவதைக் கண்டு சந்தேகப்படு வதும், பழைய பழக்க வழக்கங்களை விட்டு விட்டோமே என்பதற் காக பதைபதைப்பதும் அர்த்தமற்றதாகும்!

திருமணத்தின்போது தாலிகட்டும் பழக்கம் மக்களிடையே இருந்துவருகிறது. தாலிக் கயிற்றில் புலியின் நகத்தைப் போலும் பல்லினைப் போலும் பொன்னால் சேர்த்துக் கட்டுகிறார்கள். இதற்கு என்ன அர்த்தம்?

நம்முடைய பெரியவர்களும் இதற்கு ஒரு விதமான விளக்கம் கூறுகிறார்கள். அதாவது பழங்காலத்திலே காடுகள் அதிகம், நாடுகள் குறைவு. காட்டிலே புலிகளும் அதிகம். ஆத லால் ஒரு மங்கையை மணக்க விரும் பிடும் வாலிபன், காட்டிற்குச் சென்று புலியை வேட்டையாடிக் கொன்று அதனுடைய பல்லையும், நகத்தையும் கொண்டுவந்து, தான் காதலிக்கும் பெண்ணிடம் காட்டுவானாம்! இதோ பார்! நான் வேட்டையாடிக் கொன்ற புலியின் நகம், இதுதான் அதனுடைய பல் என்று - அந்த மங்கை நல்லாளிடம் தன் வீரத்தை அறிவிப்பான். இதைக் கண்ட மங்கையும் இப்படிப்பட்ட வீரனைத்தான் நான் மணப்பேன் என்று கூறி அந்த வீரனையே மணந்து கொள்வாள். தனது காதலனின் வீரத்தின் சின்னமாக அந்த புலி நகத்தையும், பல்லையும் தன் கழுத்தில் அணிந்து கொள் வாள். இதுதான் தாலிகட்டுவதன் பொருள் என்று கூறுகின்றனர். அன்று காடுகள் அதிகம், நாடுகள் குறைவு. எனவே காட்டிலிருந்து நாட்டுக்குள் புகுந்து மனிதனை தாக்கிடும் புலியையும் எதிர்க்கும் உடல் வலிமையும் உள்ள உரமும் படைத்தவனைத்தான் பெண் கள் மணக்க வேண்டும் என்ற ஏற்பாடு - தீர்மானம் இருந்தது பொருத்தமாக இருந் திருக்கலாம்.

இதே ஏற்பாடு இன்றைக்கும் இருக்க வேண்டுமா? உண்மையில் எத்த னையோ பேர் திருமணம் செய்து கொள் வதற்காக, இத்தகைய புலிவேட்டைக்குப் போய்வரத் தயாராக இருப்பர், இந்த நாளில் ஒருவரும் இருக்க மாட்டார்கள்!

இன்று அத்தகைய ஏற்பாடும் பழக் கமும் ஒரு சிறிதும் இல்லையென்றாலும், தாலிக் கயிற்றில் மட்டும் பொன்னால் புலிநகமும் பல்லும் செய்து கோர்த்திட நாம் தவறுவதில்லை, இது தேவைதானா?

இன்றைக்கு நாடுகள் அதிகமாகவும் காடுகள் குறைவாகவும் இருக்கின்றன. இருக்கின்ற காடுகளிலும் புலிகள் காணப் படுவது குறைவு. அந்த நாட்களைப் போல இன்றும் நான் போய் காட்டில் புலி வேட்டையாடி, புலியைக் கொன்று அதன் பல்லையும், நகத்தையும் எடுத்துச் சென்று என் காதலியிடம் என் வீரத்தைக் காட்டி அவள் கழுத்தில் இவைகளைத் தாலியாகக் கட்டுவேன் என்று எந்த இளைஞனாவது இன்றைக்குக் கிளம்ப முடியுமா? அப்படிக் கிளம்பினால் காடுகள் அனைத்தும் சர்க்காரின் காட்டு ரிசர்வ் இலாகாவைச் சேர்ந்திருப்பதால் புலிவேட் டையாட விடமாட்டார்கள்! பழைய காலத்தைப்போலவே இன்றும் புலி வேட்டையாடி காதலிக்குத் தன்னு டைய வீரத்தை வெளிப்படுத்திய பிறகே மணமுடிப்பேன் என்று எவனாவது ஒரு வாலிப வீரன், எப்படியோ ஒரு புலியைக் கண்டுபிடித்து அதனைக் கொன்று விடு கிறான் என்றே வைத்துக் கொள்ளுங்கள்.

தான் வேட்டையாடிக் கொன்ற புலியின் நகத்தையும் பல்லையும் காதலி யிடம் காட்டி, பெண்ணே இதோ பார்! நானே - வேட்டையாடிய புலியின் நகம்! இதுதான் அதனுடைய பல்! என் வீரத்தைக் கண்டாயா! இவைகளை என் வெற்றிச் சின்னமாக உனக்குத் தருகிறேன். இவைகளைக் கயிற்றில் கோர்த்துக் கழுத்தில் தாலியாக கட்டுகிறேன் என்று கூறுவதனால் எத்தனை பெண்கள் சரி என்று ஏற்பர்! ஏற்கும் சூழ்நிலை இன்று இருக்கிறதா? இல்லையே!

புலியைக் கொன்றேன். இதோ அதன் பல்! அதன் அளவைப்பார்! நகத்தின் கூர்மையைக் கண்டாயா! என்று கேட்கும் - காதலனின் வீரத்தையா இந்தக் காலத்துப் பெண் எண்ணிப் பெருமைப்பட முடியும்?

காதலனிடம் சிக்கிய காட்டுப்புலிக்கே இந்தக் கதி ஏற்பட்டுவிட்டதே! இப்படிப் பட்டவனிடம் நாம் சிக்கிவிட்டால் என்ன பாடுபட வேண்டியிருக்குமோ என்று தானே அஞ்சி நடுநடுங்குவாள்.

தமிழ் ஓவியா said...

இந்தக் காலத்துப் பெண்கள் தங்கள் கணவன்மாரிடம் புலிவேட்டையாடும் அளவுக்கு வீரத்தை எதிர்பார்க்கவில்லை. எந்தக் கணவனும் புலி என்றவுடன் கிலி கொண்டிடும் நிலையில்தானே இருக்கிறார் கள். பெண்கள் இன்று தங்கள் கணவன்மார் களின் கட்டற்ற வீரத்தை மட்டுமே பெரிய தாகக் கருதவில்லை.

அவர்கள் தங்களுக்கு வரப்போகும் கணவன் அழகாக இருக்க வேண்டும். அதோடு அன்புடையவனாக நடந்து கொள்ள வேண்டும். நல்ல குணவானாக பண்புள்ளம் படைத்தவனாக இருக்க வேண் டும். வெளியில் செல்லும்போது தங்களை யும் அழைத்துச் செல்ல வேண்டும். நல்ல நாகரிகமுடையவனாக விளங்க வேண்டும். குடும்பத்தில் அக் கறையுடையவனாகத் திகழ வேண்டும் என்றுதான் விரும்புகிறார் கள்.

எதிர்ப்பவர்களைத் தாக்கித் தகர்த் திடும் கட்டான உடலும், உள்ள உரமும், உருட்டு விழியும் உள்ளவனாக ஊரார் கண்டு நடுங்கிடும் மனிதனாகத் தங்கள் கணவன் மார் இருக்க வேண்டும் என்பதைப் பெண் கள் விரும்பிய காலம் போய்விட்டது.

எனவே தாலி கட்டுவதிலும் நாம் செய்யும் அர்த்தமுள்ளதா? அறிவுக்குப் பொருத்தமானதுதானா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டுகிறேன்.



கழக வெளியீட்டின் முகப்புத் தோற்றம்

அய்யரை அழைத்து மந்திரம் ஓதாமல், அம்மி மிதித்து அருந்ததி காட்டுவது போன்ற சடங்குகளைச் செய்யாமல் நடைபெற்று வரும் திருமணங்கள் சட்டப்படி செல்லாது என்று மக்களிடையே ஒரு பயம் முன் பெல்லாம் நிலவி வந்தது. சந்தேகம் உதித்து வந்தது.

நான் கேட்கிறேன், யாருக்கு சட்டத்தின் பாதுகாப்பு தேவையென்று? நாமெல்லாம் பெரும்பாலும் ஏழைகள் தானே! நமக்குப் பிறக்கும் பிள்ளைகளுக்கு நமது சொத்து பற்றிய உரிமை ஏற்பட வேண்டும் என்பதற் குத்தானே சட்டம் தேவைப்படுகிறது.

(ஆதாரம்: "சுயமரியாதைத் திருமணம் - ஏன்?"


- அண்ணா பேரவை வெளியீடு)

தமிழ் ஓவியா said...

பகுத்தறிவு அடிப்படையில் பாடதிட்டங்கள்

பள்ளிப்புத்தகத்தைப் பார்க்கிறோம். ஆரம்பப்பள்ளியின் புத்தகத்தில் ஒரு படம் இருக்கும். ஒரு குழந்தை குனிந்து நிற்க, இன்னொரு குழந்தை முதுகில் ஏறி உறியிலிருந்து வெண்ணெய் எடுப்பதாகப் படம் இருக்கும்.

கண்ணன் தின்னும் பண்டம் எது? "கண்ணன் தின்னும் பண்டம். வெண்ணெய் என்பதைக் கற்றுத்தர இப்படிப்போட்டிருக்கும். கைக்கெட்டாத பொருளை எவருக்கும் தெரியாமல் எப்படி எடுப்பது என்பதைச் சொல்லிக்கொடுக்கும் வகையில் இப்படம் இருக்கிறது. இப்படி நான் சொல்வதால் புராணம் கூடாது என்று சொல்வதாக எடுத்துக்கொள்ளக்கூடாது. அந்தக்கருத்தை இங்கு சொல்லவில்லை. மாலை 6 மணிக்குமேல் பொதுக்கூட்டத்தில் வைத்துக்கொள்கிறேன்.

பள்ளிக்கூடத்துக் கட்டடத்துக்குப் பக்கத்தில் உள்ள பிறர் வீட்டுத்தோட்டத்தில் காய்த்துத் தொங்குகிற மாங்கனியைப்பறிக்க சோனிப்பையன் ஒருவனை குனியவைத்து மாங்காய் பறிக்கலாம் என்ற வழியை பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுப்பதாக ஆகிறது. இந்தக்கருத்தை பகுத்தறிவு என்று எடுத்துக்கொண்டாலும் சரி, சுயமரியாதைக்கருத்து என்று எடுத்துக் கொண்டாலும் சரி, பயப்படாமல் உலக அறிவு என்று திருத்தி அமைத்தால் கல்வி அறிவும் தரமும் பெருகும்.

-முதலமைச்சர் சி.என்.அண்ணாதுரை கல்வி மான்யக்கோரிக்கை விவாதத்திற்குப் பதிலளிக்கையில்

23.3.1967இல் பேசிய பேச்சின் ஒருபகுதி.

தமிழ் ஓவியா said...

பார்ப்பனர் சிறு தொகையினர் தான். ஆனால்...



பார்ப்பனரிடம் ஏனய்யா பயம்? அவர்களைக் கண்டு பொறாமை எதற்கு? அவர்கள் 100-க்கு 3 பேர்தானே! நீங்கள் 100-க்கு 97 பேரன்றோ? சிறுபான்மைச் சமூகத்திடம் பெரும்பாலான சமூகம் ஏன் பயங்கொண்டு பாதுகாப்புக் கோர வேண்டும் என்று அடிக்கடி தேசியத் தோழர்கள் கேட்பதுண்டு. அப்படிக் கேட்கும் போதெல்லாம் தங்கள் அறிவின் திறத்தைத் தாமே மெச்சிக் கொள்வர் - அத்தோழர்கள்... சமுகத்தைக் கவனித்தால் பார்ப்பனர் சிறு தொகையினர்; பார்ப்பனரல்லாதாரின் மூச்சு, பாப்பனரைத் திணற வைக்கும்... அவ்வளவு அதிக எண்ணிக்கை உள்ளவர்கள்தான் பார்ப்பனரல்லாதார்.

ஆனால் பார்ப்பனீயம் எண்ணிக்கையைப் பொறுத்ததல்ல. இதுவரை அதற்குப் பலவழிகளிலும் தரப்பட்ட படை பலத்தைப் பொறுத்திருக்கிறது.

- அண்ணா, (திராவிட நாடு 25.4.1948)

தமிழ் ஓவியா said...

மானுடப் போராளி தந்தை பெரியார் -140



1973 ஆம் ஆண்டில் மறைந்த பேராசிரி யர். ந.சஞ்சீவியுடன் புரட்சிக் கவிஞர் பாரதி தாசன் பற்றிய அரிய தகவல்களைப் பெறுவ தற்காக நான் பாண்டிச்சேரிக்குச் செல்லும் வாய்ப்பினைப் பெற்றேன்.

இரண்டு நாட்கள் ஒரு மருத்துவர் இல்லத் தில் தங்கியிருந்தோம்.

முதலில் புரட்சிக் கவிஞரின் மகளாரைச் சந்தித்து உரையாடினோம். அந்த அம்மை யார், பாண்டிச்சேரியின் முதல் திராவிட இயக்க முன்னோடி பெரியவர் நோயல் அவர் களைச் சந்திக்குமாறு கேட்டுக் கொண்டார்.

அவரும் அப்பாவும் இணை பிரியா நண்பர்கள். அவரிடம் புரட்சிக் கவிஞர் பற்றி ஏராளமான தகவல்களைப் பெறலாம் என்றார்.

பாரதிதாசனாரைப் பெரியாரோடு இணைத்தவர் தான் பெரியவர் நோயல் என்பது எங்களுக்கு அரியத்தகவலாக இருந்தது.

அவரும் ஆசிரியராகப் பணிப்புரிந்தவர்.

பெரியவர் நோயல்தான் பாண்டிச்சேரிக் குப் பெரியாரை அடிக்கடி அழைத்துக் கூட்டங்களை நடத்தியவர். அதனால் எண் ணற்ற இடர்களைச் சந்தித்தவர்.

பாரிஸ் நகர் சென்று பிரஞ்சு உயர் நீதிமன்றத்தில் வழக்காடி, பெரியார் பணி மேற் கொள்வதற்காக பலத் தடைகளை உடைத் தவர்.

85 அகவையிலும் பெரியவர் நோயல் பல பயனுள்ள தகவல்களை அளித்தார்.



பெரியார், வீட்டின் திண்ணையில் அமர்ந்து தான் அக்காலக்கட்டத்தில் பேசு வாராம். ஒலிப் பெருக்கியும் கிடையாது.

பெரியார் கூட்டத்திற்கு நான் இன்று தலைமை தாங்கப் போகிறேன். கனக சுப்பரத்தினமும் (புரட்சி கவிஞரின் இயற்பெயர்) கலந்து கொள்ளவேண்டும் என்று நோயல் வேண்டுகோள் விடுத்தார்.

பெரியாரின் கருத்துகளோடு எனக்கு உடன்பாடில்லை, அவரிடம் பல வினாக்களை எழுப்புவேன். தகராறுகூட செய்யத் தயங்க மாட்டேன் என்றாராம் புரட்சிக் கவிஞர்.

வழக்கம் போல ஒலிப்பெருக்கி இல்லா மல் திண்ணையில் அமர்ந்து பெரியார் ஒரு மணி நேரத்திற்கு மேல் பேசினார்.

வந்த 10 பேர்களில் சிலர் கலவரம் செய்யும் எண்ணத்தோடு வந்தார்களாம்.

பெரியார் பேச்சில் இருந்த "தரணிக்குத் தேவையான தங்கநிகர் எண்ணங்கள்" (ராஜா ராணி திரைப்படத்தில் பெரியாரை நினைவு கூறும் வகையில் சாக்ரட்டீஸ் பற்றிய கலைஞரின் வசனம்) கேட்டு, புரட் சிக் கவிஞர் பெரியாரின் சீடராக மாறினார்.

கலவரம் செய்ய வந்தவர்களும் கட்சித் தொண்டர்களாக மாறினர்.

இன்று பெரியவர் நோயல் அவர்களு டன் உரையாடியதை நினைத்துப் பார்க்கி றேன். அங்குலம் அங்குலமாக, அடி அடியாக பெரியார் இந்தச் சமுதாயத்தைத் திருத்த எவ்வாறு பாடுபட்டார் என்பதற்கு பாண் டிச்சேரி நிகழ்வு ஒரு சிறிய அடையாளம் ஆகும்

எதிர்ப்புகளை, ஏளனங்களை, கல்வீச் சுகளை, செருப்பு வீச்சுகளை எல்லாம் எதிர் கொண்டு தனது தொடர் பயணத்தை 70 ஆண்டுகள் மேற்கொண்டது போல உல கில் எந்தச் சிந்தனயாளரும், சமூகப் புரட்சி யாளரும் மேற்கொண்டதில்லை எனலாம்.

மானுட வளர்ச்சிக்குத் தடையாக ஒட்டிக் கொண்டு வளர்ந்த கடவுளா, மதமா, சாதியா, இவைகளை வளர்ப்பதற்கு ஏற்பட்ட ஆறு கால பூஜைகளா, இதை நிலைநிறுத்த உதவிய சீமான்களா, பூசாரிகளா, ஊர் பெரிய மனிதர்களா யாரைப் பற்றியும் பெரியார் கவலைப்படவில்லை. குறுக்கே காந்தியார் வந்தபோதும் கூட கவலைப்படவில்லை.

அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்பார்கள்.

பெரியார் அடித்த அடியில் கோயிலே ஆடிப்போனது.

இன்று ஒடுக்கப்பட்ட சமூகத்தினரும் கோயில்களில் அர்ச்சகராக ஆகலாம். அரசுகள் தயங்கியதை, ஆதினங்கள் செய்ய முடியாததைப் பெரியாரும், திராவிட இயக்கமும் செய்து முடித்தது.

பெரியாரின் பெரும் பணிகளை இன்று உலகமே உற்றுப் பார்க்கிறது.

ஆனால், சிறகொடிந்த சில அரசியல் ஊர் குருவிகள் பெரியார் சிலை மீது எச்சம் இட்டு கீச்! கீச்! என்று கத்துகின்றன.

தான்தான் ராஜா என்று எண்ணி கிணற்று தவளைகளும் அருவருப்பான கூச்சல்களை எழுப்புகின்றன.

ஆனால் பெரியாரின் சிந்தனைகள் உலகை நோக்கி விரிகின்றன.

தமிழ் ஓவியா said...

ரிக் வேதத்தில்

டாக்டர் ராஜேந்திரலால் மித்ரா, அவர்கள் கூறுவது மாதிரி, இரத்த பலி கொடுப்பது அன்றும் இன்றும் நடைபெற்று வரும் ஒரு பண்டைய வழக்காகும். வங்காளத்தில் இன்றும் காணலாம், துர்க்கா பூஜை காலங்களில் சிலை முன்பு நின்று கொண்டு பெண்கள் தங்கள் மார்பு இரண்டுக்கும் நடுவிலுள்ள பாகத்தில் சற்று சீறி ரத்தம் வெளிப்படுத்தி தங்களது முன்னாளைய பிரார்த்தனையைச் செலுத்துவதன் அறிகுறியாக, கன்னங்களில் வெள்ளி வேலால் குத்திக் கொள்ளும் பழக்கம் இன்றும் - உண்டே தென்னாட்டுப் பகுதியில்!

பழங்குடி மக்கள் மேல் படையெடுத்துச் செல்லுமுன்னர் அவர்கள் தங்கள் கடவுளர்களைப் பிரார்த்திக்கும் முறை பாருங்கள்! சிறு சிறு பகுதியாக வந்து, நூற்றுக்கானக்கான ஆண்டுகட்குப் பிறகேதான் சற்றேனும் இடத்தைப் பிடிக்க முடிந்தது அவர்களால் என்பது நினைவில் இருக்கட்டும். தங்கள் கடவுள்களை வேண்டின முறை பாரீர்!

எரியல் விழுங்கிந்த எத்தர்

களையும் பித்தர்களையும் (36.20)

இடியே இ எறியவர் மேல்

உன் வச்சிராயுதத்தை! (36.20)

அழியல் வறிவிலர் தமை

எரித்துவிடு ஒழியக் குழுவை

துரத்தக் கொடியாரை

அழல்கண் னரையழியாப்

பகையால்பாட்டு

தழலோய் கூட்டோடே

கடிந்திடப் பகையை.

ரிக்வேதம் 8.18:13

(ஆங்கில மொழி பெயர்ப்பின் கருத்தி னைக் கொண்டது. ஆ.ர்.)

பச்சை மாமிசம் தின்போர், திருடர், வஞ்சகர், கொலைஞர், அழிவுக்காரர்கள் என்றெல்லாம் திராவிடர்களைப் பற்றிக் கூறும் பொருட்டு வசைபாடும், அது தான் வேதமாக இருக்கிறது.

- விடுதலை 8.7.1953


பக்கம் 3

தமிழ் ஓவியா said...

நாம் தாழ்வுற்றதேன்?

(டாக்டர் ரவீந்திரநாத் தாகூர்)

டாக்டர் ரவீந்திர நாத் தாகூர் தமது நண்பர் ஒருவருக்கு எழுதிய கடிதத்தில் காணப்படும் ஒரு பகுதி இது!

இந்துமதம் இந்தியாவின் தலைவிதியானது நீக்க முடியாத ஒரு தலைவிதியாகும். அதன் கதி இந்தப்படித் தவிர வேறுவிதமாகயிருக்க முடியாது. ஏனென்றால், நாம் நமக்குள் ஜாதி ஜாதியாகப் பிரிந்து விட்டோம். அந்தந்த ஜாதிக்குள்ளும் வகுப்பு வகுப்பாகவும் பிரிந்து விட்டோம், இவ்வண்ணம் நாம் துண்டு துண்டு களாகப் பிரிந்து போய்விட்டோம், இதனால் நாம் ஒத்து ஒருவரிடத்தில் ஒருவர் மனிதத் தன்மையாக இருக்க முடியாமல் போய்விட்ட தனால், நாம் அழிந்து ஒழிந்து போவதற்குத் தகுதியுடையவர்களாக ஆனோமே தவிர, நாம் இனி, உலகத்தில் உயிருடன் இருக்கத் தகுதியுடையவர்களாக இல்லை. இப்படி நாம் பிரிந்துவிட்டதாலேயே நாம் எக்காலத்திலும் நம் நாட்டை பிறருக்கு வசப்பட்டுப் போகும் படி கொடுத்துக் கொண்டே வந்திருக்கிறது.

நாம் நம் ஜாதிப்பிரிவுகளால் தற்கொலை செய்துக் கொண்டவர்களாக ஆகிவிட் டோம். நாம் ஜாதிகளை ஒழித்து அதனால் நாம் முன்னுக்கு வர வழிகோலவே இல்லை. நம் சாஸ்திரங்கள் ஜாதிப்பிரிவு களை மீறக் கூடாதென்றும், மீறினால் இவ்வளவு பாவம் - இவ்வளவு தண்டனை யென்றும் உரைத்து நம்மை அடக்கி விட்டன.

நம் ஜாதிகளையும், அவற்றை வலி யுறுத்தி நிலைநிறுத்தும் சாஸ்திரங்களை யும், பெரியோர்கள் ஏற்படுத்தினார்கள் என்ற காரணத்தினால் அவை ஆதிகாலம் தொட்டு நடைமுறையில் அனுஷ்டிக்கப் பட்டு வருவதனால் அவற்றை நாம் தற்சமயம் இடையில் கலைக்கப்படாது என்ற மூடக்கட்டுப்பாட்டை வைத்துக் கொண்டிருப்பதனால், நாம் மனிதத் தன்மை இழந்து உலகிலுள்ள பெரிய ஜன சமூகங்களுக்கு இடையில் தாழ்ந்துவிட் டோம்.

- விடுதலை 6.7.1953, பக்கம் 3

தமிழ் ஓவியா said...

காரியத்தின் பலன் கவலை

ஒரு மனிதன் ஒரு பலனை எதிர்பார்த்துக் காரியம் செய்கிறது என்பதில், எப்படிப்பட்ட காரியமானாலும் அதன் கவலை அவனைப் பிடித்துத்தான் தீரும்.

'குடிஅரசு' 18.7.1937

தமிழ் ஓவியா said...

செத்த பாம்பு (பைத்தியம் கிழித்தது)

13.03.1932- குடிஅரசிலிருந்து

சென்ற 01.03.1932ல் ராஜாங்க சட்ட சபைக் கூட்டத்தில், கனம் ராஜ ரகுநாத தாஸ் பிரசாத் என்பவர் சாரதா அவர்களால் நிறைவேற்றப்பட்ட பாலிய விவாகத் தடைச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென ஒருத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்பொழுது கனம் ஜி. ஏ. நடேசனும், கனம் திவான்பகதூர் ஜி. நாரா யணசாமி செட்டியாரும் அச்சட்டத்தை ரத்து செய்வதற்கு வேண்டிய காரியம் ஒன்றுமே நடைபெற வில்லை யென்று கூறி எதிர்த்தனர். பிறகு உள்நாட்டு இலாகா காரியதரிசியாகிய கனம் எமர்சன் அவர்களும் ரத்து செய்ய வேண்டும் என்னும் தீர்மானத்தை எதிர்த்தார். இறுதியில் தீர்மானம் நிராகரிக்கப்பட்டது. கனம் எமர்சன் அவர்கள் தீர்மானத்தை எதிர்த்தபோது கூறிய வார்த்தைகள் கவனிக்கத் தக்கன. அவர் வார்த்தையிலிருந்தே சாரதா சட்டம் ஒன்றுக்கும் பயனில்லாமல் செத்த பாம்பாக இருக்கிறது என்று உணரலாம் கனம் எமர்சன் பேசியதாவது:-

பெரும்பான்மையோர் சமுதாய சீர்திருத்தத்திற்கு மிகவும் அவசியமானதென்று கருதும் ஒரு சட்டத்தை இந்திய அரசாங்கம் எப்பொழுதாவது ரத்து செய்தது உண்டா? சாரதா சட்டம் இந்திய சட்டசபையிலும் இந்தச் சட்டசபையிலும் நிறைவேற்றப்பட்டதாகும். நான் சொல்லுவதென்னவென்றால் இந்தியா எவ்வளவு ரூபாய்க்கு அடமானம் வைத்திருந்தாலும், பணக் காரனுக்கும் பூமி சொந்தக்காரனுக்குந்தான் கவலை யேயொழிய பணமும் பூமியுமில்லாத ஏழைக்கென்ன வென்பதே.

உண்மை இவ்விதமிருக்க ஏழைகளுக்காகவே சுயராஜ்யம் என்று காங்கிரஸ்தலைவர்கள் வாய்ப் பந்தல் போடுகிறார்கள். ஏழைப் பணக்காரன் என்று இரு பிரிவு இருக்கும் வரை ஏழைகளுக்குக் கஷ்டம் ஒழியாதென்பது உலகமறிந்த உண்மை ,ஏழைகளுக் காகவே சுயராஜ்ஜியம் என்னும் காங்கிரஸ் சுயராஜி யத்தில் ஏழை பணக்காரன் இல்லாதொழிய வேண்டும். அப்படியல்லாமல் ஏழை பணக்காரன் என்ற பிரிவுகள் காங்கிரஸ் சுயராஜியத்திலிருந்தால் ஏழைகளுக்காகவே சுயராஜியம் என்று சொல்லுவது அர்த்தமில்லாதது மட்டுமின்றி ஏமாற்றுவித்தை என்றே சொல்ல வேண்டியிருக்கிறது.

நண்பர்களே! இவ்வியாசத்தை நீங்கள் படித்தபின் காங்கிரஸ் அபிமானிகளுக்கு இதைப் படித்துப்பார்க்கும் படி அவர்களிடம் கொடுக்க வேண்டுமாய்க் கோரு கிறேன்.

தமிழ் ஓவியா said...

மலேயா தமிழர்கள்


07.02.1932 - குடிஅரசிலிருந்து...

மலேயாவில் உள்ள பினாங்கு நகரில் சென்ற 16, 17-01-1932இல் அகில மலேயாத் தமிழர்களின் இரண்டாவது மகாநாடு மிகவும் விமரிசையாக நடைபெற்றதை அறிந்து நாம் மிகவும் மகிழ்ச்சி யடைகிறோம்.

மலேயாவில் நமது சுயமரியாதை இயக்கத்தின் முக்கிய தலைவர்களாக இருந்து தொண்டாற்றிவரும் திருவாளர்களான வி. கே. முருகேசம் பிள்ளை, ஆர். ஆர். அய்யாறு, தாமோ தரம், ஜி. சாரங்கபாணி, சுவாமி அற்புதானந்தா, எச். எச். அப்துல்காதர் முதலானவர்கள் அம்மகாநாட்டில் அதிகமானப் பங்கு எடுத்துக் கொண்டு வேலை செய்திருக் கின்றார்கள்.

அந்த மகாநாட்டில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் எல்லாம் நமது இயக்கக் கொள்கையை அநுசரித்தனவாகவே இருக்கின்றன.

அத்தீர்மானங்களில் முக்கியமானவை பொருத்த மற்ற விவாகங்களைக் கண்டிப்பதும், விதவா விவாகத்தை ஆதரிப்பதும், விவாகரத்தை ஆதரிப் பதும், இறந்து போனவர்களுக்காகச் செய்யப்படும் அர்த்தமற்ற சடங்குகளைக் கண்டிப்பதும் அகில மலேயா தமிழர் மகாநாடு என்பதை அகில மலேயா தமிழர் சீர்திருத்த மகாநாடு என்று மாற்ற வேண்டும் என்பதும் முக்கியமான தீர்மானங்களாகும் இது போலவே வாலிபர் மகாநாட்டிலும், பிறப்பினால் ஏற்றத்தாழ்வு இருப்பதைக் கண்டிப்பதாகவும், விவாகங்களைச் சடங்குகள் இல்லாமல் குறைந்த செலவில் பதிவு செய்து கொள்ளும் முறையில் செய்ய வேண்டுமென்றும் தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டிருக்கின்றன.

இத்தீர்மானங்களையெல்லாம் நாம் மனப்பூர் வமாகப் பாராட்டுகிறோம்.

தீர்மானங்களோடு நில்லாமல், வாலிபர்களும் சீர்திருத்த ஆர்வமுடைய தோழர்களும் இவை களை அநுஷ்டானத்தில் கொண்டு வர வேலை செய்வார்களென்று நம்புகின்றோம்.

தமிழ் ஓவியா said...

தீண்டாதார் துன்பம்

21. 02. 1932 - குடிஅரசிலிருந்து...

வெள்ளைக் காரர்களைப் பார்த்து நீங்கள் எங்களைக் கொடுமை படுத்துகிறீர்கள்! ஆகையால் உங்களுடைய அரசாட்சி எங்களுக்குப் பிடிக்கவில்லை; ராஜ்யத்தை எங்களிடம் விட்டு விட்டு நீங்கள் உங்கள் தேசத்திற்குப் போய் விடுங்கள்; நாங்கள் ஒற்றுமையாயிருந்து எங்கள் தேசத்தை ஆண்டு கொள்வோம் என்று சுயராஜ்ய வாதிகள் கூச்சலிடுகின்றனர்; இதற்காகச் சட்டமறுப்பு செய்கின்றனர்; சிறைக்குச் செல்லுகின்றனர்; இன்னும் சத்தியாக்கிரகத்தின் பெயரால் என்னென்ன காரியங்களையோ செய்து கொண்டிருக்கின்றனர். ஆனால் வடநாட்டில் இந்து களுக்கும் முஸ்லீம்களுக்கும் உள்ள கலகமும் வெறுப்பும், இன்னும் ஓய்ந்த பாடில்லை. இவர்கள் ஒற்றுமையாய் வாழ்வதற் குரிய காரியங்களைச் செய்யவும் இல்லை.

இது ஒருபுறமிருக்க மிகவும் பரிதாபகரமான வாழ்வில் இருந்து துன்பப்படும் ஆதிதிராவிடர் போன்ற தீண்டாத மக்களின் கதி இன்னும் மோசமானதாகவே இருந்து கொண்டிருக்கின்றது. தீண்டாதவர்கள் கோயில் பிரவேசத்தின் பொருட்டு நாசிக்கிலும், குருவாயூரிலும் சத்தியாக்கிரகம் புரிந்து கொண்டு துன்பப்படுதலும், அவர்களை வைதிக இந்துக்கள் எதிர்த்து துன்பப்படுத்துதலும் ஒருபுறமிருக்க, அவர்கள் தங்கள் மட்டிலாவது சுத்தமாகவும், நாகரிகமாகவும், சவுகரியமாகவும் வாழக்கூட மனஞ்சகிக்காத இந்துக்கள் அவர்களுக்குப் பண்ணும் கொடுமை மிகவும் அதீதமாக இருக்கின்றது என்ற விஷயம் நமது நாட்டு மக்களுக்குச் தெரியாததல்ல. சென்ற ஆண்டில் ராமநாதபுரம் ஜில்லாவில் ஜாதி இந்துக்கள் தீண்டாதவர்களுக்குச் செய்த கொடுமையும், திருச்சி ஜில்லாவில் ஜாதி இந்துக்கள் தீண்டாதவர்களுக்குச் செய்த கொடுமையும் இன்னும் மறக்கப்படவில்லை. இதுபோலவே ஒவ்வொரு கிராமத்திலும் தீண்டாதவர்களுக்குப் பல கஷ்டங்களி லிருந்து வருகின்றன. ஆனால் அத்தீண்டாத மக்கள் தங்கள் வயிற்றுப் பிழைப்புக்கு உயர்ஜாதி இந்துக்களின் கையையே எதிர்பார்த்திருப்பதாலும், பெரும்பாலான வர்கள் கல்வி அறிவும் உலக நாகரிக உணர்ச்சியும் இல்லாமையால் தங்களை ஆண்டவன் என்பவன் தீண்டதகாதவராகவே கஷ்டப் படும்படி படைத்தான் எல்லாம் தமது தலை விதியின்படி நடக்கும் என்ற நம்பிக்கையுடையவர் களாயிருப்பதனாலும் தங்கள் துன்பத்தைச் சகித்துக் கொண்டு வாழ்க்கை நடத்தி வருகிறார்கள்.

இப்படி இல்லாமல் தீண்டாத மக்கள் கொஞ்சம் சுயமரியாதை உணர்ச்சி பெற்று தங்களைச் சீர்திருத்தம் செய்துகொள்ள முந்துவார் களானால், அப்பொழுதே அவர்களை முன்னேற ஒட்டாமல் நசுக்கி பழைய சாக்கடையிலேயே அமிழ்த்தி வைக்க ஜாதி இந்துக்கள் தயாராகிவிடுகிறார்கள். இதற்கு உதாரணமாக இப்பொழுது சேலம் ஜில்லா, ராசிபுரம் தாலுகா, தாத்தையங்கார் பட்டிகிராமத்திலிருக்கும் தீண்டத்தகாத மக்களை, அவர்கள் முன்னேற்றமடையாதபடி அடக்கி வைக்க உயர்ஜாதி மக்கள் அவர்களுக்கு விதித்திருக்கும் நிபந்தனைகளைப் பார்த்தால் விளங்கும். இதைப்பற்றி அவர்கள் சேலம் ஜில்லா கலெக்டருக்கும், போலீஸ் சூப்பரிண்டென்டிற்கும் செய்து கொண்டிருக்கும் விண்ணப்பத்தில் குறிப்பிட்டு காட்டியிருக்கின்றனர்.

தமிழ் ஓவியா said...

எங்களூர் குடியானவர்கள், நாங்கள் நாகரிகமாக இருப்பதற்காகப் பொறாமைப்பட்டு எங்களைக் கண்ட இடங்களில் எல்லாம் அடித்தும், எங்கள் தெருப் பெண்களை வாய்க்கு வந்தபடி திட்டியும் கஷ்டப்படுத்துகிறார்கள். அதோடு அல்லாமல் கீழ்க்கண்ட நிபந்தனைகள் ஏற்படுத்தி அதன்படி நடக்காது போனால் எங்கள் கால்களை ஒடித்து விடுவோம் என்று சொல்லுகிறார்கள்.

நிபந்தனைகள்

1. பறையர்கள் கிராப்பு வைக்கக் கூடாது

2. பள்ளிக்கூடம் தெருவில் இருக்கவும் கூடாது; படிக்கவும் கூடாது.

3. வெள்ளை வேஷ்டிக் கட்டக்கூடாது; அழுக்கு வேஷ்டியிலிருந்தாலும் முழங்காலுக்கு மேல் கட்டவேண்டும்.

4. பெண்கள் மாராடை போடக்கூடாது; மீறி மாராடைப் போட்டால் மாரை அறுத்துவிடுவது.

5. நாகரிகமான நகைகள் போடக்கூடாது.

6. குடைகள் பிடிக்கவும் கூடாது, குடையிருந்தால் நெருப்பு வைத்து கொளுத்தி விடவேண்டும்.

7. பெட்டிகள் கையில் கொண்டு வரக்கூடாது; புஸ்தகமும் கையில் பிடிக்கக்கூடாது (தமிழ்நாடு)

என்பது தீண்டாதவர்களின் விண்ணப்பம். இந்த கொடுமைகளையார் பொறுத்துக் கொண்டிருக்க முடியும் என்று கேட்கின்றோம். இந்த நிலைதான் கிராமாந்திரங்களிளெல்லாம் இருந்து வருகின்றது. இதை மாற்றுவதற்கு இதுவரையிலும் என்ன முயற்சியை, எந்த தேசியவாதிகள் செய்தார்கள் என்று கேட்கிறோம். அந்நியர்கையில் அதிகாரமும், தாங்கள் சுதந்திரமின்றி அந்நிய நாட்டினருக்கு அடிமையாக இருக்கும் இக்காலத்திலேயே இந்த உயர்ஜாதி இந்துக்கள் தீண்டாதவர்களுக்கு இக்கொடுமையைச் செய்வார்காளாயின் இவர்கள் கையில் ஆட்சியும் அதிகாரமும் கிடைத்துவிட்டால் அவர்களைச் சித்திரவதை செய்யமாட் டார்களா? என்று யோசித்துப்பாருங்கள்.

இந்த மாதிரி வலுத்தவர்கள் இளைத்தவர்களுக்குக் கொடுமை செய்வதைப் பொருட்டுபடுத்தாத ஒரு தேசியம், அல்லது ராஜ்ஜியம் எதற்குப் பயன்படும்? இவ்வாறு தீண்டாதவர்களைக் கொடுமைப்படுத்தும் எண்ணத்தை உயர்ஜாதி இந்துக்களின் மனதில் பதிய வைத்திருப்பதற்குக் காரணம், பாழும் மதமும், வைதிகமும், பழக்க வழக்கங்களுமே அன்றோ? ஆகையால் இந்த பாழும் மதமும், வைதிகமும், பழக்க வழக்க மூட நம்பிக்கையும் தொலைந்தா லொழிய உயர்ஜாதி இந்துக்களின் மனத்தில் மாறுதல் ஏற்படுமா? ஒரு காலும் முடியாது. ஆகவே இனியும் தீண்டாதவர்கள் கடவுளையோ மதத்தையோ நம்பிக்கொண்டிருந்தால் ஒரு சிறிதும் முன்னேற்றமடையப் போவதில்லை. தம்மையே நம்பி இடைவிடாது கிளர்ச்சி செய்வதன் மூலமும் வைதிகர்களாகிய அரசியல் கிளர்ச்சிக்காரர்கள் எல்லாம் சுயராஜ்யம் வந்தபிறகு பார்த்துக் கொள் ளலாம் என்று கூறும் வார்த்தைக்கு ஏமாறாமல் முயற்சிசெய்வதன் மூலமும்தான், தாங்கள் விடுதலைப் பெற்று மனிதர்களாக வாழமுடியு மென்று எச்சரிக்கின்றோம்.

தமிழ் ஓவியா said...

ஆசிரியர் பதில்கள்

வந்தேறிகளின் வேட்டைக் காடாகக் கூடாது தமிழகம்!



கே : மேட்டூர் அணை திறக்கப்பட்டு ஒரு மாதம் ஆகியும் கடைமடை பாசனத்திற்கு தண்ணீர் வராமைக்கு காரணம் என்ன?

- அ.சீலன், காரமடைவந்தேறிகளின் வேட்டைக் காடாகக் கூடாது தமிழகம்!

ப : இயற்கை உதவும் வகையில் மழை பொழிந்தது; முன்கூட்டியே சரியான வகையில், தூர்வாரிடும் பணியை கடைமடை வரை செய்திருந்தால் இந்த அவலம் _ கடைமடை விவசாயிகளுக்கு வேதனையும் துயரமும் ஏற்பட்டிருக்காது. அனைத்துக் கட்சி குழு போட்டு கண்காணித்து பருவ மழை துவங்கும் முன்பே இப்பணியை நடத்தாதது அரசின் தவறு _ செயலின்மை ஆகும்!

கே : கல்லூரி மாணவர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதித்தும் பிறகு அதனைத் திரும்பப் பெற்றும் கல்வித் துறையால் எடுக்கப்பட்ட குழப்பமான முடிவு எதைக் காட்டுகிது?

- ஆர்.ரஞ்சனி, நாமக்கல்

ப : முதல் முடிவு சரியானது; திரும்பப் பெற்றது தவறான முடிவு.

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

எண்ணுவம் என்பது இழுக்கு. (குறள் எண்:467)

கே : என்ஜினியரிங் படிப்பில் மாணவர்கள் சேர்க்கை ஆண்டுதோறும் குறைந்து வருவதற்குக் காரணம் என்ன?

- சி.ரகுபதி, காஞ்சிபுரம்

ப : அமெரிக்கா போன்ற வெளிநாட்டு வேலைகளை நம்பியே என்ஜினியரிங் கல்லூரிகளில் சேரும் போக்கு தவறான கருத்து. நம் நாட்டில் தொழிற்சாலை பெருகினால் சாலை, மற்றும் கட்டடப் பணிகள் தொய்வின்றி நடந்திடும். நிச்சயம் வேலைவாய்ப்புப் பெருகும். மற்ற படிப்பில்கூட வேலை கிட்டாது இருப்பவர்கள் உள்ளனரே. அதற்காக படிக்காமலா இருக்கிறார்கள்? தெளிவுபடுத்த வேண்டியவர்கள் அதைச் செய்யத் தவறுகிறார்கள்.

கே : கவிஞர் மனுஷ்யபுத்திரனின் கவிதை இந்துக் கடவுளுக்கு எதிரானது என்று அவருக்கு மிரட்டல் விடுப்பது பற்றி தங்கள் கருத்து என்ன?

- எஸ்.ரவிச்சந்திரன், குறிஞ்சிப்பாடி

ப : கண்டித்து 22.8.2018 ‘விடுதலை’யில் வந்துள்ள அறிக்கையைப் படியுங்கள்!

கே : ‘நீட்’ தேர்வு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே என்று மத்திய அரசு அறிவித்துள்ளது ஏன்?

- எம்.ரேஷ்மா, சிதம்பரம்

ப : ‘நீட்’ தேர்வை ஒழிப்பதுதான் நமது இலக்கு _ போராடி வெற்றி பெறுவோம்!

கே : “காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காண இந்தியா - பாகிஸ்தான் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்’’ என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கூறியிருப்பது பற்றி தாங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

- பா.குணசேகரன், சமயபுரம்

ப : பேச்சு வார்த்தையால் புதிய தலைமைக்கு ஒரு வாய்ப்புக் கொடுத்துப் பார்ப்பது நல்லதுதானே! எந்த அண்டை நாடும் சுமூக உறவுடன் இருப்பது நல்லதே!

கே : இந்திய அரசாங்கம் கேரளாவிற்குக் கொடுத்தது ரூ.600 கோடி. அயல்நாடான அய்க்கிய அரபு எம்ரேட் கொடுத்தது ரூ.700 கோடி! இது எதைக் காட்டுகிறது?

- பி.எழிலன், மாயவரம்

ப : வெளிநாட்டு உதவி ஏற்கப்படுமா என்பது சந்தேகம். அவர்களது நல்ல மனம் பாராட்டத் தகுந்தது! ‘தேசிய பேரிடர்’ என்று அறிவித்து அதற்கேற்ப மத்திய அரசு உதவிட வேண்டும்!

கே : எதிரிகளும், துரோகிகளும் தி.மு.க.வை மட்டும் முழு மூச்சாய் எதிர்க்கக் காரணம்?

- நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்

ப : அது ஒன்றுதானே தீவிரமான இன உணர்வு, பகுத்தறிவு, சமூக நீதிக்கான ஒரு அரசியல் கட்சி _ பலம் வாய்ந்ததும்கூட _ அதை பலவீனப்படுத்திட முயற்சிகள் நடைபெறுகின்றன.

கே : வந்தேறிகளின் வேட்டைக்காடாக தமிழகம் மாறி வருவதுத் தடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைப் பற்றி தங்கள் கருத்து என்ன?

- ஈ.வெ.ரா.தமிழன், சீர்காழி

ப : துவக்கத்திலிருந்தே தொடர்ந்து கூறி வருபவர்கள் நாம்தான் _ இப்போதுதான் கூறுபவர்கள் அல்லவே!

கே : “கேரள வெள்ள பாதிப்புக்குக் காரணம் அய்யப்பனின் ஆத்திரம்!” என்று குருமூர்த்தி அய்யர் கூறியுள்ளதற்கு தங்கள் பதில்?

- க.குமாரவேல், திண்டிவனம்

ப : கருஞ்சட்டை கடிதம் (19.8.2018) காண்க. எனது பெரியார் திடல் உரையையும் படிக்கவும்.

மின்னணு மெழுகுவர்த்தி

விழாக்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை அலங்கரிக்கும் வகையில் மின்னணு மெழுகுவர்த்தியை அறிமுகம் செய்திருக்கிறது கலிபோர்னியாவின் லுயூடெலா நிறுவனம். ஜாஸ்மின், ஆப்பிள் சிடார் போன்ற பல்வேறு நறுமணங்களில் கிடைக்கிறது. எவ்வளவு நேரம் எரிய வேண்டும் என்பதை தேர்ந்தெடுக்கும் வசதியும் உள்ளது.

தமிழ் ஓவியா said...

உங்களுக்குத் தெரியுமா?

வ.உ.சி.


பிறப்பு: 5.9.1872


சிதம்பரம் பிள்ளைக்கு ஒரு பூணூல் மட்டும் முதுகிலே தொங்கி இருக்குமேயானால், அவரது சிலை மூலைக்கு மூலை வைக்கப்பட்டு இருக்கும், அவரது படம் ஒவ்வொரு அக்கிரகாரவாசிகள் வீடுகளிலும் மாட்டப்பட்டிருக்கும். அவர் பேரால் மண்டபங்கள், மனைவி, பிள்ளை குட்டிகளுக்கு பதவி வாழ்க்கை வசதிகள் எல்லாம் கிடைத்து இருக்கும்.

- தந்தை பெரியார்
‘விடுதலை’ - 13.5.1961

பெரியாரும் வ.உ.சி.யும்




ஆட்சி எப்படிப்பட்டதாய் இருந்தாலும் அரசனை விஷ்ணுவாய்க் கருதி, ஆட்சியை வேதக் கோட்பாடாகக் கருதி வாழவேண்டும் என்று இருந்த பார்ப்பனிய ஆதிக்க காலத்தில் மற்றும் தண்டனை, சிறை என்பவைகள் மகா அவமானகரமாகவும், மகா இழிவாகவும், மகா கொடுமையாகவும், துன்பமாகவும் இருந்த காலத்தில் தென்னாட்டில் முதல் முதல் வெளிவந்து அரசனை எதிர்த்து, அரசியலை இகழ்ந்து துச்சமாய்க் கருதி தண்டனையை அடைந்து சிறைக் கொடுமையை இன்பமாய் ஏற்று, கலங்காமல் மனம் மாறாமல் வெளி வந்த வீரர்களில் முதன்மை வரிசையில், முதன்மை லக்கத்தில் இருந்தவராவார் நமது சிதம்பரம். அதன் பலன் எப்படியோ ஆனாலும், அவராலேயே அநேக பார்ப்பனரல்லாத மக்கள் உண்மை வீரர்களாகவும், சுயநல மற்றவர்களாகவும் வெளிவர முடிந்தது.

தோழர் சிதம்பரம் ஒரு பார்ப்பனராய் இருந்திருப்பாரானால் லோகமானியர், முனீந்திரர், சிதம்பரம் கட்டடம், சிதம்பரம் உருவச்சிலை, சிதம்பரநாதர் கோவில், சிதம்பரம் பண்டு, காங்கிரஸ் மண்டபங்களில், காங்கிரஸ் பக்தர் வீடுகளில் சிதம்பரம் கருத்து, சிலை, சிதம்பரம் உருவப்படம் இருக்கும்படியான நிலையை அடைந்திருப்பார். ஆனால் அவர் பிள்ளை, அதுவும் சைவப் பிள்ளையானாலும் சூத்திரப்பிள்ளை ஆனதால், அவர் வாழ்வு அவருக்கே அவ்வளவு மகிழ்ச்சியை கொடுக்காமல் இருந்தது என்பதோடு, அவருக்காக ஏற்படுத்தப்பட்ட பண்டுகூட வெளியிட யோக்கியதை இல்லாததாய் இருந்து வருகிறது.

சிதம்பரம் பிள்ளையின் அனுபவத்தை மற்ற தேசாபிமான பார்ப்பனரல்லாதாரும் அறியட்டும் என்பதற்காகவே இதைக் குறிப்பிட்டோம். அரசியல் உலகம் அவர் இறங்கின காலத்தில் ஒரு விதமாகவும், இப்போது ஒரு விதமாகவும் இருக்கிறபடியால் ஓர் அளவுக்கு பார்ப்பனரல்லாத தேச பக்தர்களைப் பற்றி ஆறுதல் அடைகிறோம். எப்படியெனில், பார்ப்பனரல்லாத தேச பக்தர்களை பார்ப்பனர் ஓர் அளவுக்காவது, வேஷத்துக்காகவாவது அணைத்துத் தீர வேண்டிய நிலையில் வேறு பல இயக்கங்கள் நிர்ப்பந்தித்துக் கொண்டிருப்பதால் அதிகம் பயப்பட வேண்டியதில்லை.
ஆகையால், சிதம்பரம் பிள்ளையை ஓர் உதாரணமாகக் கொண்டு மற்ற தேச பக்தர்கள் அதற்கேற்றபடி நடந்து கொள்வார்களாக.

- ‘குடிஅரசு’ - பெரியார் எழுதிய துணைத்தலையங்கம்

- 22.11.1936

தமிழ் ஓவியா said...

சுயமரியாதைச் சுடரொளி ஊ.பு.அ. சவுந்தரபாண்டியனார்



தந்தை பெரியார் அவர்கள் தாம் உருவாக்கிய சுயமரியாதை இயக்கத்திற்கு தாம் துணைத் தலைவராக இருந்துகொண்டு, வேறு ஒருவரை தலைவராக தேர்ந்தெடுக்கிறார் என்றால், அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் ஒருவர் சமூகத்தின் பால் கொண்ட பற்று வியக்கத்தக்கதாக போற்றத்தக்கதாக இருக்க வேண்டும் அல்லவா?

அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டவர்தான் சுயமரியாதைச் சுடரொளி ஊ.பு.அ.சவுந்தரபாண்டியனார். தென்மாவட்டங்களில் சுயமரியாதை இயக்கத்தின் தூணாக விளங்கியவர்.

1893ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் நாள் மதுரை மாவட்டம் பட்டிவீரன்பட்டியில் பிறந்த இவர் நீதிக் கட்சியுடன் தொடர்பில் இருந்தார். 1929ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நடைபெற்ற சுயமரியாதை இயக்கத்தின் முதலாவது மாகாண மாநாட்டிற்கு தலைமை வகிக்க சவுந்தரபாண்டியன் நாடாராக வந்தவர், அம்மாநாட்டு தீர்மானத்தின்படி சவுந்தரபாண்டியனாக திரும்பினார். சுயமரியாதை இயக்க கொள்கைகளை தொடர்ந்து மாநாடுகளிலும் கூட்டங்களிலும் தாம் பங்கேற்ற பிற நிகழ்வுகளிலும் முழங்கினார்.

முழங்கியது மட்டுமல்லாமல் அவற்றை நடைமுறைபடுத்தும் செயல்களிலும் வெற்றிகண்டார். தென்மாவட்ட பிற்படுத்தப்பட்ட மக்களிடையே விதவை திருமணங்களையும் ஜாதி மறுப்புத் திருமணங்களையும் ஏராளம் நடத்தி சுயமரியாதைப் புரட்சியில் நல்ல பங்கு எடுத்துக் கொண்டார்.
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சிக் கழகத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்பு பெற்ற நிலையில், அந்த அதிகாரத்தை பயன்படுத்தி செய்த செயல்கள் செயற்கரியனவாகும்.

அந்த காலக் கட்டத்தில் பேருந்து வண்டிகளின் உரிமையாளர்களிடம் ஜாதி வெறி தாண்டவமாடியது. பேருந்துகளில் “பஞ்சமர்க்கு இடமில்லை’’ என்று எழுதப்பட்டிருந்ததுடன் டிக்கட்களிலேயும் அவ்வாறு எழுதப்பட்டு தீண்டாமை கோலோச்சியது.

மாவட்ட ஆட்சி கழக தலைவராக சவுந்தரபாண்டியனார் கீழ்க்கண்ட ஆணையை துணிவாக போட்டார்.

“இந்த ஜில்லாவில் உள்ள சில மோட்டார் கம்பெனி முதலாளிகள் ஆதிதிராவிடரை பஸ்களில் ஏற்றுவதில்லை என்றும், டிக்கட்களில், “ஆதிதிராவிடர்களுக்கு டிக்கட் கொடுக்கப்பட மாட்டாது என்றும் நிபந்தனை ஏற்படுத்தியுள்ளதாக அறிகிறோம்.

இவ்வழக்கம் பயணிகளுக்கு இடைஞ்சல் உண்டு பண்ணத்தக்கதாகவும், மிக அக்கிரமமானதாகவும் இருக்கிறது. ஆகவே, மோட்டார் கம்பெனி முதலாளிகள் ஏதேனும் ஒரு சமூகத்தாரை பஸ்ஸில் ஏற்றிச் செல்ல மறுக்கவோ, டிக்கட்களில் மறுப்பு விதிகளை அச்சிடவோ செய்தால் அவர்களது லைசென்கள் முன்னறிவிப்பு இன்றி ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை செய்கிறோம்’’ இந்த சுற்றுக் கடிதம் கிடைத்த ஒரு வாரத்திற்குள் அந்த தடை விதி நீக்கப்பட்டதா? இல்லையா என்று சாம்பிள் டிக்கட்டுகளுடன் ரிப்போர்ட் செய்துகொள்ள வேண்டும் என்று துணிச்சலாக ஆணையிட்டு ஜாதி வெறியை அடக்கினார்.

முதலாவது இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது சூறாவளி சுற்றுப் பயணம் செய்து மக்களை சந்தித்து மொழி உணர்வை எழுப்பி போராட்டத்தில் பங்கேற்க செய்தார்.

சென்னை சட்டமன்ற மேலவைக்கு மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர். 1953 பிப்ரவரி 22ஆம் நாள் மறைவுற்றார்.

தமிழ் ஓவியா said...

தமிழினத்தின் தலைமகன் அண்ணா

அறிவும், கல்வியும், ஆங்கிலப் பேச்சும்

ஆரிய பார்ப்பனர்க்கே என்ற ஆணவம் தகர்த்து,

கூரிய மூக்கில் விரல்வைத்து அவர்கள் வியக்க,

சீரிய திறங்காட்டி பாரில் உயர்ந்தவர்!



சூட்சிக்குப் பெயர் பெற்ற சூத்திரதாரியை

கூட்டு சேர்த்து ‘ஓட்டு’ பெற்ற பின்,

ஆட்சியைப் பிடித்ததும் அவரை ஒதுக்கி

அய்யாவுக்கே காணிக்கையாக்கிய ஆற்றலாளர்!



“தமிழ்நாடு’’ பெயர் தந்து சரித்திரம் படைத்தவர்!

சுயமரியாதைத் திருமணச் சட்டம் தந்தவர்!

உலகத் தமிழ் மாநாடு சென்னையில் கண்டவர்!

உலகத் தமிழர்களை உள்ளத்துள் கொண்டவர்!



ஏல் பல்கலைக்கழகத்தில் எல்லோரையும் வியக்க வைத்தார்!

நூல் மார்பர் நாண ஆங்கிலத்தை ஆண்டிட்டார்!

புற்றுநோய் பற்றியதால் புகழுடம்பு அடைந்தாலும்

பற்றுகொண்ட தமிழ் இனத்தின் தலைமகனாய் வாழ்கின்றார்!



- மஞ்சை வசந்தன்

தமிழ் ஓவியா said...

தேவை! தேவை! ஜாதி இல்லாத நாடு! சாமியார் இல்லாத இந்தியா!



நம் நாட்டில் பக்தி என்ற மூடநம்பிக்கை ஒரு மிகப் பெரிய தொற்றுநோய் _ வெறி போன்றது.
ஒரே வரியில் தந்தை பெரியார் அவர்கள், “பக்தி வந்தால் புத்தி போகும்; புத்தி வந்தால் பக்தி போகும்’’ என்று மிக அருமையாகச் சொன்னார்!

ஏமாற்றுக்காரர்களும், ஏமாறுபவர்களும் எல்லா நாட்டிலும் உண்டு என்றாலும், ஜாதி போலவே சாமியார்களும், காவி உடை தரித்து காமாந்தகார காலித்தன ஆசிரமவாசிச் சாமியார்களும், தங்கள் மனம் போன போக்கில் எதையாவது கிறுக்குத்தனமாகச் செய்து அதையே தமது “பேடண்டு (றிணீtமீஸீt) மாதிரிகளாக’’ ஆக்கி, பிரபலம் அடைவது, பணம் சம்பாதித்து குறுக்கு வழியில் உல்லாச _ சல்லாப வாழ்க்கை வாழுவது என்பது அங்கிங்கெனாதபடி எங்கும் உள்ளது!
ஒருமுறை ஏமாந்தவர்கள் மறுமுறையாவது ‘புத்தி கொள்முதல்’ செய்து அறிவு பெறுகிறார்களா என்றால் ‘இல்லை’ என்பதே பதிலாகிறது.

“தன் முகத்தில் எச்சில் துப்பினால் நினைத்தது நடக்கும்’’ என்று நம்பும் முட்டாள் பக்தர்கள், “சாராய பாட்டில் தந்து குடித்துவிட்டு முகத்தில் துப்பினால் நல்லது நடக்கும்’’ என்று நம்பும் அறியாமை பக்தர்கள், பீடி சாமியார், ஓங்கி அறை கொடுக்கும் சாமியார் (அதை வாங்கிக் கொண்டு ‘காணிக்கை’ செலுத்தும் நோபல் பரிசு பெற வேண்டிய முட்டாள் பக்தர்கள், முத்தங்களைக் கொடுத்து ஆசி தரும் சாமியார்கள், இப்படி எத்தனை எத்தனையோ புதுப்புது ரக சாமியார்கள்!

வடநாட்டிலே, நிர்வாணச் சாமியார்கள்!

உடல் முழுவதும் தங்கத்தை _ நகைகளைப் போட்டு நடமாடி தங்கள் பால் கவனத்தை ஈர்க்க பொன்னுக்கு ஏங்கிய சாமியார்கள்.

‘யோகா’ என்ற ஒரு மூலத்தை வைத்து கோடி கோடியாகக் கொள்ளையடிக்கும் சாமியார்கள்!

நடிகர்களின் ‘மேக்_அப்’ களையெல்லாம்கூட தோற்கடித்துவிடும் அளவுக்கு விதவிதமான உடை அலங்காரத்துடன் வித்தை காட்டி, தத்துவங்களை தமிழில் பேசுவதைவிட ஆங்கிலத்தில் பேசினால் தமக்குக் கிடைக்கும் அடிமைகள் அதிகம்; வருவாய் பெருக்கம் _ ஏழை விவசாயிகள் நிலத்தையும் அரசு நிலங்களையும் அபகரித்து, உலக மஹா சாமியார்கள் மற்ற நாட்டு முட்டாள் பக்தர்களின் மூலபலம் போட்டு, எலக்ட்ரானிக் கருவிகளைக் காட்டும் சாமியார்கள் _ இத்தியாதி! இத்தியாதி!

இவர்களின் பூர்வோத்திரங்களை விசாரித்தால், மாஜி கிரிமினல் குற்றவாளிகள் பட்டியலில் இருந்து தப்பிக் காவிக்குள் ‘நின்னைச் சரணடைந்தேன்’ என்று நீக்கமற அய்க்கியமாகிவிட்ட அயோக்கியர்கள் என்பதை, தண்டனை அடைந்த பிரேமானந்தாக்கள் முதல் இன்று வடநாட்டு சிறைச்சாலைகளில் உள்ள பற்பல சாமியார்களும் சாட்சியர்களாவார்கள்!

இந்தப் பட்டியலில், அசாமில் ஒரு சாமியார் _முத்தம் கொடுத்தே எல்லாவற்றையும் _ நிறைவேற்றிட, பக்தர்களுக்கு ‘ஆசி’ வழங்குவாராம்!

பெண்களுக்கு முத்தம் கொடுத்தே அவர்கள் நினைத்ததையெல்லாம் நடைபெறும்படிச் செய்கிறார். எங்கே, கிழக்குப் பகுதியில் அசாம் மாநிலத்தில், ‘இந்து’ ஏட்டில் (இங்கிலீஷ்) 24.8.2018 அன்று இப்படி ஒரு செய்தி.

‘Assam Police arrest Kissing Baba’ ‘முத்தங்கொடுக்கும் பாபா’ _ ‘சாயிபாபா’ பழையது ஆகிவிட்டதால் ‘முத்தபாபா’ புதிய டெக்னிக்.

அதற்கு தெற்கே ஒரு அம்மையார் ஏற்கனவே ‘காப்பிரைட்’ வைத்துள்ளார்!

அவர் (அசாம் பாபா) விஷ்ணு அவதாரமாம்! முத்தம் கொடுத்தால் எல்லாம் மொத்தமாகக் கிடைக்குமாம்; அவரது அம்மாவே சாட்சி சொல்கிறாராம்! இவரைக் கைது செய்து உள்ளே தள்ளியுள்ளார்கள்!

சாமியார் பிரிவு, சாமியார் ஜெயில் என்று தனியே சிறைகள் தேவை; பல காவி முதல்வர் சாமியார்களும்கூட அங்கே ‘தியானம்’ செய்து முக்திக்கு வழி தேடுவார்கள் போலும்.



ஜாதி இல்லாத நாடு!

சாமியார் இல்லாத இந்தியா!

தேவை! தேவை!


- கி.வீரமணி,
ஆசிரியர், ‘உண்மை’

தமிழ் ஓவியா said...

நெருங்கிய உறவில் திருமணம் கூடாது! ஏன்?

இன்று உலக மக்கள் தொகையான 760 கோடியில் 10 முதல் 12 சதவிகிதம் வரை நெருங்கிய ரத்த சம்பந்த உறவில்தான் திருமணம் (Consanguineous marriages) செய்து கொள்கிறார்களாம்! காரணம் இதில் குடும்பப் பின்னணியை ஆராயத் தேவையில்லை; தலைமுறை உறவுகள் நீடிக்கும்; குடும்பச் சொத்துக்கள் மற்றவர் கைகளுக்குப் போகாது என்று பல காரணங்கள்.

வளைகுடா நாடுகள், மத்திய கிழக்கு மற்றும் மேற்கு ஆசிய நாடுகள் பலவற்றில் இப்பழக்கம் கலாசார ரீதியில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது. சில அய்ரோப்பிய நாடுகளிலும் நெருங்கிய சொந்தத்தில் மணம் செய்வதுண்டு.

நம் நாட்டில் தாய்வழி உறவுகளில் முறை மாப்பிள்ளை, முறைப்பெண் என்று தேர்ந்தெடுத்து மணம் முடிக்கும் வழக்கம் இருக்கிறது.

பெற்றோர், உடன்பிறப்புகள், பெரியப்பா, சித்தப்பா, மாமா, அத்தை அவர்களுடைய வாரிசுகள் இரத்த உறவுகள் ஆகும்.

உலக வரலாற்றில் நெருங்கிய ரத்த சம்பந்த உறவு திருமணங்கள் :

அரச பரம்பரை வாரிசுகளில் சிலர் நோஞ்சானாக இருந்தார்கள்; பலருக்கு ரத்தம் உறைவதில் சிக்கல் (Hemophila) இருந்தது; மனநலம் குன்றி அவலட்சணத்துடன் இருந்த ஸ்பெயின் மன்னர் சார்லஸ்மிமி 1700ஆம் ஆண்டு இறந்தபோது வாரிசு இல்லாமல் அந்த வம்ச ஆட்சியே முடிவுக்கு வந்தது.

உறவில் மணம் செய்த டார்வினின் மூன்று குழந்தைகள் இளம் பிராயத்திலே நோய்வாய்ப்பட்டு இறந்து போயின; மேலும் மூவருக்கு வாரிசுகள் இல்லாமல் போயின. டார்வினே நோய்வாய்ப்பட்ட வாழ்க்கை வாழ்ந்ததற்கு அவருடைய தாத்தாவும் பாட்டியும் நெருங்கிய ரத்த சம்பந்த உறவினர்கள் என்பதே காரணம்.

பின்னாளில் டார்வினின் நான்கு தலைமுறைகளை ஆராய்ந்தவர்கள் நெருங்கிய சொந்தத்தில் மணமுடித்தவர்களின் வாரிசுகளில் சிலருக்கு பிறவிக் குறைபாடுகள் இருந்ததை உறுதி செய்தார்கள். உறவுத் திருமணங்களில் பிறந்த குழந்தைகளுக்கு பிறவிக் குறைபாடுகள் உண்டாவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் என்பது உறுதி ஆயிற்று.

உறவுத் திருமணத்தால் பிறக்கும் குழந்தைகளில் சிலருக்கு வாய் பேசாமை, காது கேளாமை, இதயக் கோளாறுகள், மனநலம் பாதிப்பு போன்றவை உண்டாவதைக் காணமுடிகிறது.
காரணம் என்ன?

ஒரு மனிதக் கரு உருவாகும்போது தாயிடம் இருந்த 23 குரோமோசோம்களையும் தந்தையிடம் இருந்து 23 குரோமோசோம்களையும் பெறும். அவற்றில் ஆயிரக்கணக்கான மரபணுக்கள் (Genes) இருக்கும்.

இதில் ஒரு குறிப்பிட்ட குரோமோசோம் ஜோடிதான் குழந்தை ஆணா அல்லது பெண்ணா என்று தீர்மானிக்கும் பெண்ணின் அந்த குரோமோசோமில் X, X என்று ஒரே ரக உயிரணுக்கள் இருக்கும். ஆணில், X, சீ என்று மாறுபட்டு இருக்கும். X உடன் X சேர்ந்தால் பெண்; X உடன் சீ சேர்ந்தால் ஆண்! ஆணா பெண்ணா என்று திர்மானிப்பது ஆணின் விந்தில் இருக்கும் குரோமோசோம்களே.
மற்ற 22 குரோமோசோம் ஜோடிகளில் நிறம், அங்க அமைப்பு, ஆரோக்கியம் உட்பட பல்வேறு பரம்பரை இயல்புகள் பதிவாகியிருக்கும்.

இந்த ஜோடிகளில் இருக்கும் அணுக்களில் ஆதிக்கம் செலுத்துபவை (Dominant), அடங்கி இருப்பவை (Recessive) என்று இருவகை உண்டு.

முன்னோர்களின் பண்புகள்தான் மரபணு மூலம் மணமக்களுக்கு வரும். இப்படி ஒரே பண்புடன் கூடிய மரபணுக்கள் (Homozygotes) தம்பதியினர் இருவர் மூலமும் குழந்தைக்கு வருவதுதான் இச்சிக்கலுக்குக் காரணம். ஒடுங்கி இருக்கும் ஒரே வகை குறைபாடுகள் குழந்தைக்கு பிறவிக் குறைபாடுகளாக (Autosomal recessive disorders) வெளிப்படுகிறது.

தமிழ் ஓவியா said...

பாவலர் பாலசுந்தரம்



1933 இல் இயக்கத்தில் இணைந்து சொற்பொழிவாளராகவும், எழுத்தாளராகவும், கவிஞராகவும், சிறந்த களப் பணியாளராகவும் விளங்கியவர் பாவலர் பாலசுந்தரம்.

இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் தொடங்கி தந்தை பெரியார் அறிவித்த அனைத்து போராட்டங்களிலும் பங்கேற்றவர். 1938ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்று ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் 6 மாதமாக குறைக்கப்பட்டு, சிறைவாசம் அனுபவித்தவர். 1957இல் தந்தை பெரியார் அறிவித்து நடத்திய ‘பிராமணாள்’ அழிப்பு போராட்டத்தில் பங்கேற்று சிறை தண்டனை விதிக்கப்பட்டவர்.

‘தமிழ் அரசு’ என்னும் இயக்கத் பத்திரிகையையும், ‘தென்சேனை’, ‘வாழ்வு’ போன்ற இதழ்களையும் நடத்தியவர். ‘முரளிஸ் கபே’ உரிமையாளர் தந்தை பெரியாரை சந்தித்து மன்னிப்புக் கேட்ட தகவலை தமது எட்டில் பதிவு செய்துள்ளவர்.

இவரது துணைவியார் பட்டம்மாள் பாலசுந்தரம் அவர்களும் இந்தி எதிர்ப்பில் தொடங்கி எல்லா நிகழ்வுகளிலும் பங்கேற்றவர். சட்ட எரிப்பு போரில் ஈடுபட்டு சிறை சென்றவர். பெரியார் திடலில் தங்கி இறுதி காலம் வரை பணியாற்றியவர்.

தமிழ் ஓவியா said...

பெண்ணால் முடியும்!

மெட்ரோ ரயில் நிலையங்களை நிர்வகிக்கும் மகளிர் அணி!



பெண்கள் உடலளவிலும் மனதளவிலும் பலகீனமானவர்கள் என்கிற பொய்மைக் கருத்து ஆணாதிக்க சமூகத்தில் இன்றளவும் நிலவிக் கொண்டுதான் இருக்கிறது. இது முற்றிலும் அறியாமை என்று நிரூபிக்கும் வகையில் எல்லாத் துறைகளிலும் பெண்கள் இன்று சாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் முதல் சென்ட்ரல் ரயில் நிலையம் வரை மற்றும் மீனம்பாக்கம் விமான நிலையம் முதல் தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வரை என இரண்டு வழித்தடங்களில் இயங்கிக் கொண்டிருக்கும் சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மொத்தம் 26 மெட்ரோ ரயில் நிலையங்கள் உள்ளன. அவற்றில் சென்னை கோயம்பேடு மற்றும் ஷெனாய் நகர் மெட்ரோ ரயில் நிலையங்கள் முழுவதும் பெண்களின் கட்டுப்பாட்டுக்குள் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

நிலையத்தில் அறிவிப்பு செய்வதில் தொடங்கி, பயணச் சீட்டு வழங்குதல், பயணிகளை கையாளுதல், கண்காணிப்புப் பணி, பயணிகளை பரிசோதனை செய்வது, வாடிக்கையாளர் சேவை, ரயில் நிலையத்தை பராமரிப்பது, துப்புரவுப் பணி என அனைத்து வேலைகளிலும் முழுக்க முழுக்க பெண்களே உள்ளனர்.

எல்லாத் துறையிலும் நுண்ணிய பயிற்சி அளித்தால் மிகப் பெரிய அளவில் பெண்கள் சாதனைகளை செய்வார்கள். ஆட்சி நிர்வாகத்திலிருந்து அடிமட்ட வேலைவரை அத்தனைத் துறைகளிலும் ஆண்களுக்கு நிகராய் பங்கு பெற வேண்டும். அப்பொழுதுதான் நாடும் வீடும் நலம் பெறும்.


விமானம் ஒட்டி சாதித்த வீரப்பெண்!



“ஆண்கள் மட்டும்தான் விமானியாக முடியும். உன்னால் முடியாது. நடுத்தர குடும்பத்தில் பிறந்த உனக்கு எதற்கு இந்த கனவு?’’ என்று எத்தனையோ பேர் ஏளனம் செய்த பின்பும் அந்த இலக்கிலிருந்து காவ்யா பின்வாங்கவில்லை. ஆனால், அவருடைய தந்தை அவருக்கு உறுதுணையாக இருந்தார். விமானி ஆவதற்கான பயிற்சி எடுக்க வேண்டிய கட்டணத்தைச் செலுத்த அவரது பொருளாதாரச் சூழல் இடம் கொடுக்கவில்லை. ஆனாலும், அவர் மனம் தளரவில்லை.

அரசு கல்வி உதவியுடன், விமானிக்கான பயிற்சி எடுத்துக் கொள்வதற்கான நுழைவுத் தேர்வை எழுதி வெற்றி பெற்றார். அரசு உதவியுடன் பெங்களூருவில் விமானி பயிற்சி வகுப்பிற்குச் சென்றார்.வகுப்பில் இரண்டு பெண்கள் மட்டுமே, மற்ற அனைவரும் ஆண்கள், ஆரம்பத்தில் காவ்யாவிற்கு ஆங்கிலம் சரளமாக வரவில்லை. மிகவும் கஷ்டப்பட்டார். தினமும் ஆங்கிலப் பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டார். நாளடைவில் பயிற்சி முடியும் தருவாயில் சிறப்பாக ஆங்கிலத்தில் பேசக் கூடியவராக உருவானார். 2 வருட விமானிக்கான பயிற்சியில் 200 மணி நேரம் விமானத்தை ஓட்டிச் சாதித்தார்.

ஒரு முறை “யார் துணையும் இல்லாமல் விமானத்தில் செல்ல வேண்டும். யார் செல்கிறீர்கள்?’’ என்று பயிற்சியாளர் கேட்ட போது, தயங்காமல், ‘நான் செல்கிறேன்’ என்றார். அப்போது பயிற்சியாளர், ‘நீங்கள் ஒரு பெண்... எவ்வாறு...?’’ என்று தயங்கியுள்ளார். “எல்லா துறைகளிலும் ஆண்களுக்கு பெண்களும் நிகரானவர்கள்தான். இதிலும் நான் நிரூபித்துக் காட்டுகிறேன்...’’ என்று சொல்லி, தனியாக விமானத்தை ஓட்டிச் சாதித்து, தமிழகத்தின் முதல் பெண் விமானி என்ற பெருமையை காவ்யா பெற்றார். வறுமையிலும் வெல்ல முடியும் என்று நிரூபித்த இந்த சாதனைப் பெண், சாதிக்க துடிக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு ஊக்கசக்தி என்பதில் அய்யமில்லை!

தமிழ் ஓவியா said...

பெரிய தியாகி ஈ.வெ.ரா!



திரு. இராமசாமி நாயக்கரைப்பற்றி, நான் அதிகம் சொல்ல வேண்டியதில்லை. அவரைப் பற்றி அய்ரோப்பாவிலே உள்ள பார்லிமெண்டில் பேசப்படுகிறது என்றால் நாயக்கரின் புகழைப்பற்றி நான் என்ன சொல்வது?

திரு.நாயக்கரிடத்திலுள்ள விசேஷ குணம் என்னவென்றால், மனத்திற்படும் உண்மையை ஒளிக்காமல் சொல்லும் ஓர் உத்தம குணந்தான்.

அவரை எனக்கு 20 வருடமாய்த் தெரியும். அவரும் நானும், ஒரே இயக்கத்தில் சேர்ந்து வேலைசெய்து வந்தோம். அந்த இயக்கத்தில் (காங்கிரஸ்) நேர்மையற்றவர்கள் சிலர் வந்து புகுந்தபின், நானும் அவரும் விலகிவிட்டோம். பிறகு நாயக்கர் அவர்களால் ஆரம்பித்து நடத்தப்பெறும் சுயமரியாதை இயக்கத்தைப் பார்த்து, இது எல்லா இயக்கத்திலும் நல்ல இயக்கமாயிருப்பதால், நானும் என்னாலான உதவியை அவ்வியக்கத்துக்குச் செய்து வருகிறேன்.

சுருங்கச் சொல்லின், நாயக்கரவர்கள் தமிழ்நாட்டின் எல்லாத் தலைவர்களையும் விடப் பெரிய தியாகி என்றுதான் சொல்ல வேண்டும்.

கப்பலோட்டிய தமிழர்

வ.உ.சிதம்பரம்பிள்ளை அவர்கள் (1928)

தொகுப்பு : தேனீ

தமிழ் ஓவியா said...

“அண்ணா மறைந்தார்; அண்ணா வாழ்க!”

“அண்ணா முடிவெய்துவிட்டார். அண்ணா வாழ்க’’ அதாவது அண்ணா தொண்டு வாழ்க. தோழர்களே! “நோய் வருவதும், முடிவெய்துவதும் மனித ஜீவனுக்கு இயற்கையேயாகும். இதில் யாரும் தப்ப முடியாது.’’ ஆனால், அதற்காக மக்கள் வருந்துவதும், துக்கம் கொண்டாடுவதும் மக்களுக்கு ஒரு சம்பிரதாயமேயாகும் என்றாலும், இவ்விஷயத்தில் அறிஞர் அண்ணாஅவர்கள் சம்பிரதாயத்தை எல்லாம் தாண்டி மக்களின் உச்ச நிலைத் துக்கக் கொண்டாட்டத்தைப் பெற்றுவிட்டார். யானறிந்தவரை, சரித்திரம் கண்டவரை, அண்ணா முடிவுக்குப் பொதுமக்கள் காட்டிய துக்க கொண்டாட்டத்தில் 4இல், 8இல் ஒரு பங்கு அளவு கூட வேறு எவருடைய முடிவுக்கும் காட்டியதான நிகழ்ச்சி கிடையவே கிடையாது.

இந்த அளவுக்கு அண்ணா தமிழ் மக்கள் உள்ளத்தில் இடம் பெற்றுவிட்டார்கள். இது அண்ணாவின் இரண்டாண்டு ஆட்சியில் தமிழர்களுக்கு ஏற்பட்ட உணர்ச்சி என்பதோடு, இவ்விஷயத்தில் “மனித வாழ்வில் வேறுயாருக்கும் கிடைக்க முடியாத பெருமையை அண்ணா அடைந்து விட்டார்.’’ எனவே, அண்ணாவின் நற்குண நற்செய்கை பெருமைக்கு இதற்கு மேல் எடுத்துக் காட்டமுடியாது.

இன்று மக்களுக்கு உள்ள கவலை எல்லாம் நானறிந்த வரை அண்ணா முடிவடைந்து விட்டாரே, இனி ஆட்சி எப்படி இருக்குமோ என்பது தான். நான் சொல்லுவேன் “அண்ணா இறந்து விட்டார்.’’ “அண்ணா வாழ்க’’ என்பதற்கிணங்க, இனி நடைபெறும் ஆட்சியில் எவ்வித மாறுதலும் (திருப்பமும்) இல்லாமல் அவரது கொள்கை வளர்ந்தே வரும். ஆட்சியாளர்கள் தாங்கள் தமிழர்கள், தமிழர்களுக்காகத் தமிழர்களாக, ஆட்சி செய்கிறோம் என்கின்ற உணர்ச்சியோடு மற்ற இனத்தார் காட்டும் இன உணர்ச்சியைத் தங்களுக்கு வழிகாட்டியாக வைத்துக் கொண்டு அதன்படி நடந்து கொள்வார்கள் என்றே கருதுகிறோம். இயற்கையும் அவர்களை அந்தப்படி நடக்கச் செய்யும் என்பது உறுதி. அதற்காக யாரும் கவலைப்பட வேண்டாம் என்று வேண்டிக் கொள்ளுகிறேன். அண்ணா நோய்ப் பட்டிருந்த காலத்தில் மேன்மை தங்கிய கவர்னர் பெருமானும், மாண்புமிகு மந்திரிமார்களும் பட்ட கவலையும் காட்டிய ஆறுதல் ஆதரவுகளும் சிகிச்சை செய்வதில் டாக்டர் சதாசிவம், கிருஷ்ணமூர்த்தி முதல் வேலூர் டாக்டர்களும் எடுத்துக் கொண்ட மனிதத் தன்மைக்கு மேற்பட்ட முயற்சியும், 15 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்தி ஒழுங்காக நடத்தியதில் போலீஸ் அதிகாரிகளும், சிப்பந்திகளும் நடந்து கொண்ட பாதுகாப்புத் தன்மைகளும், ரேடியோ நிலையத்தாரும், பத்திரிகைக்காரர்களும், விஷயங்களை அவ்வப்போது மக்களுக்குக் கூடியவரை தெரிவித்து வந்த நேர்மையும், மிகமிகப் பாராட்டத்தக்கதும், நன்றி செலுத்துவதற்கு உரியதுமாகும். தமிழ் மக்கள் அண்ணாவிடம் காட்டிய அன்பு போலவே இன்றைய நமதுமந்திரிகள் எல்லோரிடமும் காட்டி பரிவாய் நடந்து கொள்ள வேண்டுமென்று வேண்டிக் கொண்டு இதை முடித்துக் கொள்ளுகிறேன்.’’

04.02.1969 அன்று சென்னை வானொலி மூலம், பேரறிஞர் அண்ணா மறைவுற்றமைக்கு தந்தை பெரியார் ஈ.வெ.ராமசாமி அவர்கள் ஆற்றிய ஆழ்ந்த இரங்கல் உரை: நூல் - வானொலியில் பெரியார்.


***

தமிழ் ஓவியா said...


“நாமெல்லோரும் அறிஞர் அண்ணா அவர்கள் முடிவெய்தியதை முன்னிட்டு நமது அனுதாபத்தைக் காட்டிக் கொள்வதற்காக இங்கே கூடியிருக்கிறோம். அண்ணா அவர்களைப் பத்தி இரண்டு வார்த்தைகள் சொல்லுவது பொருத்தமாகும். பெரும்பாலும் அவரைப் புகழ்வதற்காகவே நாம் இங்கே கூடவில்லை. “அவருடைய தொண்டுக்கு நன்றி காட்டவும், அவரைப் பின்பற்றி அவர் கூறியுள்ள கொள்கைகளைப் பரப்பவும் கூடியிருக்கிறோம்.’’ “அண்ணா அவர்கள் மாபெரும் பகுத்தறிவுவாதி. இரண்டாவது அவர் காரியத்திலேயும் அதைக் காட்டிக் கொண்டார். மூன்றாவது அவர் பகுத்தறிவை வைத்துக் கொண்டு மூட நம்பிக்கைகள் தனக்கு இல்லை என்று அதைக் காட்டுவதற்கு எங்குமில்லாத திருமண விஷயத்திலே, கடவுள், மதம், ஜாதி, சம்பிரதாயக் காரியங்கள் இருக்கக்கூடாது என்று, அதில் கூடாது என்று, கருத்து கொண்ட ‘சுயமரியாதைத் திருமணம்’, ‘சீர்திருத்த திருமணம்’ என்பதைச் சட்டமாக்கினார். சட்டமாக்கினா ரென்றால், திருமணத்தைச் சட்டமாக்கியதே, முக்கிய கருத்துமல்ல.’’ “அதிலே கொண்டு வந்து கடவுளை, மதத்தை, சாஸ்திரத்தைப் புகுத்தக் கூடாது என்ற கருத்திலே.’’ இப்படிப் பல விஷயத்திலேயும் அவர், தான் பகுத்தறிவுவாதி என்பதையும் உண்மையாக அவர் மக்களுக்கு எடுத்துக் காட்டி மக்களை எல்லாம் அந்தப் பக்கத்துக்குக் கொண்டு வரவேண்டுமென்று ரொம்பப் பாடுபட்டார். அவ்வளவு செய்த மகானுக்கு இன்று இங்கு இவ்வளவு பெரிய மாபெரும் கூட்டம் அவர் காலமான அன்றைக்கும், “அவரின் இறுதி ஊர்வலத்திலும் 30 லட்சம் மக்கள் அவரைப் பின் தொடர்ந்தார்கள் என்றால் அவர் தன்னுடைய கருத்தை மட்டிலும் காட்டினார் என்பதல்லாமல் இந்த நாட்டு மக்களையே ஓரளவுக்கு அவர் பண்படுத்தி விட்டார் என்பது தான் அதனுடைய கருத்தாகும். முடித்துக் கொள்ளுகிறேன்.’’

(6.2.1969 அன்று நடைபெற்ற அண்ணா இரங்கல் கூட்டத்தில் பெரியார் ஆற்றிய உரை - நூல்: பெரியார் சிந்தனை திரட்டு.)
சேர, சோழன், பாண்டியன் வெங்காயம் எல்லாம் என்ன செய்தார்கள். அதற்குப் பிறகு வெள்ளைக்காரர்கள்தான் ஆண்டார்களே அவர்களால் பெரும் மாற்றத்தைச் செய்ய முடிந்ததா என்றால் இல்லையே! அண்ணா நேற்று செய்ததற்கு மாறாகத்தானே அவர்கள் செய்தார்கள். மக்களிடையே மூடநம்பிக்கைகளைப் புகுத்தி அந்தக் காரியங்களைப் பாதுகாப்பதுதான் அரசியல் ஆட்சியின் லட்சியம் என்று அல்லவா அவர்கள் காலத்தில் கருதப்பட்டது! மூவேந்தர்கள் செய்தது என்ன? கோவில்களைக் கட்டினார்கள். கடவுள்களை உற்பத்தி செய்தார்கள் பார்ப்பானுக்கு அரசர்கள் தன் மனைவிகளை விட்டுக் கொடுத்தாகிலும் புண்ணியம் சம்பாதிக்க வேண்டும் என்று நடந்து கொண்டார்கள். பார்ப்பன நலத்தைத்தான் கொள்கையாக கொண்டு இருந்தனர்.

துணிந்து கைவைத்தது அண்ணா ஆட்சி

பறையன் பறையனாகவும், சக்கிலி சக்கிலியாகவும், சூத்திரன் சூத்திரனாகவும் இருக்கத்தான் ஆட்சி பயன்பட்டது. தவிர மனுஷன் மனுஷனாக வாழ்கிறான் என்று பார்க்கப் பயன்படவே இல்லையே! முடியவில்லையே! தப்பித் தவறி ஒரு ஆட்சி அப்படித் திரும்ப முயற்சித்தாலும் ஒழித்திருப்பார்களே! முஸ்லீம்கள், வெள்ளைக்காரர்கள் ஆண்டார்கள் என்றாலும், அவர்களும், பழைய இராஜாக்கள் காலத்து ஆட்சியைப் போல் கடவுள், மதம், சாதி, சாஸ்திரம், சம்பிரதாயம் _ இவற்றில் கை வைக்காமல் ஆட்சி புரியும்படி பார்ப்பான் ஆக்கி வைத்துக் கொண்டானே! வெள்ளைக்காரன் சில மாற்றங்களை செய்ய ஆரம்பத்தில் முன்வந்தான் என்றாலும் மாற்றவிடாமல் மிரட்டி சரிப்படுத்திக் கொண்டார்கள் அவனும் நமக்கெதற்கு வம்பு, நமக்கு சிக்கியது வரை சரிதான் என்றல்லவா ஆண்டான்? அண்ணா அவர்கள் அமைத்த அரசாங்கம் தானே இவற்றில் துணிந்து கைவைக்கக்கூடிய அளவுக்கு பகுத்தறிவாளர் ஆட்சியாக உள்ளது.

- 1970 பம்பாய் சுற்று பயணத்தின்போது தந்தை பெரியார் ஆற்றிய உரையிலிருந்து...
(‘விடுதலை’ 12.4.1970)