Search This Blog

31.3.09

பெரியார் கூட்டத்திலே கல், மண் ,சாணியை வீசி கலவரம் செய்தவர்கள் பின்பு உணர்ந்தது என்ன?


"பெரியார் கொள்கையைப் பின்பற்றுகின்ற இலட்சக்கணக்
கானோரில் நானும் ஒருவன்: முதல்வர் அண்ணா"

அண்ணா கூறிய கருத்தை எடுத்துக்காட்டி தமிழர் தலைவர் பேச்சு


தந்தை பெரியார் கொள்கையைப் பின்பற்றுகிற இலட்சக்கணக்கான பேரில் நானும் ஒருவனாக இருப்பதிலே பெருமை அடைகின்றேன் என்று சொன்னவர் பேரறிஞர் அண்ணா என்று திராவிடர் கழகத்தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.

சென்னைப்பல்கலைக் கழகத்தில் - ஈரோடு முதல் காஞ்சி வரை என்ற தலைப்பில் அண்ணா நினைவுநாளில் 3.2.2009 அன்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:-


அதே போல அண்ணா அவர்கள் தன்னுடைய பழைய சம்பவத்தைச் சொல்லுகின்றார்கள்.

சிவகங்கையிலே ஊர் முழுக்க இருக்கின்ற பழைய செருப்புகளைக் கட்டித் தோரணமாகத் தொங்கவிட்டார்கள்.

இன்று நடந்த ஊர் வலத்தில் மாலை போட்டார்கள். கம்பீரமாகச் செல்லுகின்றோம். ஆங்காங்கே கொடிகளும் அசைந்து அசைந்து - வாழ்க வாழ்க என்று வாழ்த்துகின்றன.

ஆனால் அப்பொழுது சிவகங்கையிலே கட்டியது தோரணங்கள் அல்ல. அறுந்துபோன செருப்புகளை எடுத்துத் தோரணமாகக் கட்டிய வர்களின் பிள்ளைகளில் சிலர் இந்த மண்டலத் திற்கு வந்திருக்கிறார்கள் என்று கருதுகின்றேன்.

(அண்ணா அவர்களே இவ்வளவு அழகாகச் சொல்லுகின்றார்கள்)

அன்றைக்குப் பல பேர் தந்தை பெரியார் அவர்களிடத்திலே வந்து நாங்கள் தான் இந்தக் கூட்டத்திலே கல் வீசினோம் என்று சொல்லியிருக்கின்றார்கள். பெரியாரிடத்திலே சொன்னது பெருமை அல்ல. பெரியாருடைய தொண்டர்களாகிய எங்களிடத்திலேயே சொல்லி யிருக்கின்றார்கள்.

அய்யா, அந்த சாணியை எடுத்துத்தூக்கி எறிந்தது நாங்கள் தான். உங்கள் கூட்டத்திலே கல், மண் வீசி கலவரம் செய்தது நாங்கள் தான் என்று அவர்கள் சொல்லுகிற பொழுது, இந்தக் கொள்கையில் உறுதியாக நின்று பிரச்சாரம் செய்வதற்கு எப்படிப்பட்டவர்கள் வந்தார்கள் என்பதை அண்ணா அவர்கள் எவ்வளவு பெரிய வாய்ப்பாகச் சொல்லுகிறார்கள் பாருங்கள்.

ஈரோட்டிலே தொடங்கி அது காஞ்சியிலே எப்படிப்பட்ட திருப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை காஞ்சியிலே பிறந்த அண்ணா அவர்கள் சொல்லுகின்றார்கள்.

காஞ்சி என்று சொன்னாலே அது அண்ணா என்பது தான் பெருமை. காஞ்சிக்கு வேறு பெரு மைகள் கிடையாது. காஞ்சி என்றால் அண்ணா என்பதை மக்கள் மன்றம் இப்பொழுது தெளி வாகப் புரிந்திருக்கிறது.

வரலாற்றுப் பேராசிரியர்கள் களப்பிரர் காலத்தைப் பற்றிப் பேசுகிறார்கள். இந்த காஞ்சிதான் ஒரு காலத்திலே அறிவுக்கே ஆதாரமாக விளங்கிய நகரமாகும். பவுத்தம் என்று சொல்லக்கூடிய புத்தம் இருந்த மண்.

புத்தம் என்றாலே தந்தை பெரியார் மிக அழகாகச் சொன்னார்கள். புத்தர் பற்றிய கருத் தரங்கத்திலே தந்தை பெரியார் அவர்கள் பேசி விட்டுச் சொன்னார்கள். புத்தர் என்றால் அவர் தான் என்று நீங்கள் நினைக்காதீர்கள்.

புத்தியைப் பயன்படுத்துகின்ற எல்லோரும் புத்தர்தான். புத்தி என்பதிலிருந்து தான் புத்தம் என்பது வந்தது. நாகபுரியில் நடைபெற்ற பல்கலைக்கழக ஆய்வுச் சொற்பொழிவிலே இதை நான் குறிப்பிட்டேன்.

நாகபுரி பல்கலைக் கழகத்தில் நான் பேசி முடித்தவுடனே என் கையைப் பிடித்துக் கொண்டார்கள். நாங்களும் இதுவரை பாலி மொழியிலே பல முறை ஆராய்ந்திருக்கின்றோம். சித்தார்த்தன் என்று எப்படி பெயர் வந்தது? சித்தார்த்தர் புத்தராக மாறினார். புத்தராக மாறி னார் என்று வகுப்புகளிலே சொல்லிக் கொடுத்திருக்கின்றோம்.

ஆனால் இன்றைக்கு தந்தை பெரியார் சொன்ன விளக்கத்தை நீங்கள் சொன்ன பிற்பாடுதான், உள்ளபடியே எங்களுக்குத் தெளிவாயிற்று.

பாலி மொழியிலே இருந்து தான் புத்தி என்பது - புத்தன் என்று வந்திருக்கிறது என்பதை - உங்கள் உரையின் மூலமாகத் தெரிந்து கொண்டோம். இனிமேல் நாங்கள் அதைப் பாடப் புத்த கத்திலே சேர்த்து விடுவோம் என்று நாகபுரி பல்கலைக் கழகத்திலே ஒரு 20 ஆண்டுகளுக்கு முன்னாலே 1985, 86 என்று நினைக்கின்றேன். அப்பொழுது அவர்கள் சொன்னார்கள்.

அது ஒரு நூலாகக் கூட ஆங்கிலத்தில் வந்திருக்கிறது.
அவரை முதலிலே புரிந்து கொள்ள மறுத்தார்கள். புரிந்து கொள்ள மறுத்தவர்கள் பிறகு புரிந்து ஏற்றுக் கொண்டனர். ஏற்றுக் கொண்டவர்களும் விரல் விட்டு எண்ணக் கூடியவர்கள் தான் அப்பொழுது இருந்தார்கள். உண் மையை உண்மையாகச் சொல்லுகின்றார்கள் மிகைப்படுத்தாமல். அப்பொழுது அவர் பேசியது இப்பொழுது எல்லோருக்கும் புரிந்து விட்டது.

ஏற்றுக்கொண்டார்களா? என்பது வேறு. புரிவதற்கே தமிழனை இந்த பாடுபடுத்த வேண்டி யிருக்கிறது. அரங்கசாமி அவர்கள் இங்கே சொன்னார்கள் அல்லவா? அவருக்குக் கோபம், ஆத்திரம் இவைகள் - எல்லாம் வந்தன.

தமிழனுக்கு முதலிலே புரிய வைக்க வேண்டும். புரிந்து கொள்வதற்கே தமிழர்கள் தயாராக இல்லை. அவர்கள் காது கொடுத்துக் கேட்பதற்கே தயாராக இல்லை. அந்த அளவுக்கு இருந்த வர்களை முதலில் புரிய வைத்துவிட்டால் ஈரோட்டு மருந்து வேலை செய்யும் என்பது எங்கள் எல்லோருக்குமே தெளிவாகத் தெரியும்.

அண்ணா அவர்கள் எவ்வளவு பரிதாப உணர்ச்சியோடு அவர்களுக்கே உரிய முறையில் அந்த நளினத்தோடு சொல்லுகிறார்கள் பாருங்கள்.

அது புரிந்து விட்டது. பெரும்பாலோருக்கு அது பிடித்துவிட்டது. அதில் மிகப் பெரும்பா லோர் அவற்றைத் தங்களுடைய வாழ்க்கைக்கு வழிகாட்டியாகக் கொண்டிருக்கிறார்கள். அது தான் இந்த வெற்றி யினுடைய அடையாள மாகும். இன்றைக்குக் கூட இது போன்ற அரங்கங் களின் கூட்டத்திலே அய்யா அவர்களைப் பற்றியும், அண்ணா அவர்களைப் பற்றியும் அந்தக் கொள்கையைப் பற்றி பேசுவது என்பதனுடைய நோக்கமே கூட, அண்ணாவைப் பார்த்தவர்கள் நம்மிலே பலர் இருக்கின்றோம். இந்தத் தலை முறையினர் வரையிலே தான். அண்ணா அவர்களைப் பார்க்காத தலை முறை வந்திருக்கிறது. நான்காவது தலைமுறை வந்திருப்பதிலே வியப்பில்லை. ஆனால் அண்ணா அவர்களைப் பற்றிப் படிக்காத தலைமுறை யினர் இருக்கக் கூடாது.

அண்ணாவை, அய்யாவைப் படித்தவர்களாக அவர்கள் மாறிவிட்டால் சரியாகப் படித்தால் பிடித்தவர்களாகவும் மாறிவிடுவார்கள்.

இப்படி ஒரு சமூகத்தை நாட்டு மக்களை ஆளாக்கிய பெருமை உலகத்தில் பல தலை வர்களுக்குக் கிடைத்ததில்லை.


நம்முடைய தமிழகத்திலே பெரியார் அவர்களுக்குத்தான் அந்தத் தனிப்பெருமை சேர்ந் திருக்கிறது. அந்தப் பெருமைக் குரியவர்களாக நாம் நம்மை ஆக்கிக் கொள்ள வேண்டும். எவ்வளவு அற்புதமாகச் சொல்லுகிறார்கள் பாருங்கள்.

அவர்கள் அளித்துள்ள செல்வம் என்கிறார். செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம், அதோடு அறிவுச் செல்வம். அந்த அறிவுச் செல்வத்தைப் பற்றி எவ்வளவு அழகாகச் சொல்லு கிறார்கள் பாருங்கள்.

அவர்கள் காட்டிய இலட்சியப் பாதையிலே நடந்து செல்வதற்கு ஏற்ற ஆற்றல், நமக்கு வர வேண்டும் என்று இன்றைய தினம் நமக்கெல்லாம் அவர் சொல்லுகின்றார். அவரை வாழ்த்துவதற் காக அண்ணா அவர்கள் அழைக்கப்பட்டிருக் கின்றார்கள். திருச்சியிலே பெரியாருடைய பிறந்த நாள் விழா. அந்த விழாவிலே அண்ணா அவர்கள் பேசும் பொழுது சொல்லுகின்றார்.

தந்தை பெரியார் அவர்களிடம் வாழ்த்து பெறுவதற்காக நான் வந்திருக்கின்றேன் என்று அண்ணா அவர்கள் அடக்கத்தோடு சொல்லு கின்றார். இந்த அடக்கம் அண்ணா அவர்களை மிக உயர்த்திக்காட்டிய தனித்தன்மையான ஒன்று.

சுயமரியாதை இயக்கம் இந்த கொள்கைகள் என்று வருகின்ற நேரத்திலே கூட எவ்வளவு அழ காகச் சொல்லுகின்றார்கள் பாருங்கள். அந்தப் பெருமைக்குரியவர்களாக நாம் நம்மை ஆளாக்கிக் கொள்ள வேண்டும். அவர் அளித்துள்ள செல்வம், அவர் காட்டிய இலட்சியப் பாதையில் நடந்து செல்வதற்குரிய ஆற்றல் நமக்கு வரவேண்டுமென்று அவர் இன்றைய தினம் நமக்கெல்லாம் வாழ்த்துச் சொல்ல வேண்டும். அந்த வாழ்த்து நமக்குப் புதிய வல்லமையை புதிய உற்சாகத்தைத் தரும் என்பதில் அய்யமில்லை என்று அண்ணா சொல்லு கின்றார். இதற்கு எடுத் துக்காட்டாகத்தான் அய்ந்தாவது முறையாக பொற்கால ஆட்சியை தமிழகத்திலே நடத்திக் கொண்டிருக்கின்ற கலைஞர் அவர்களுடைய செயலாகும் என்பதை எடுத்துச் சொல்ல விழைகின்றோம். அவருடைய வாழ்த்துக்கு வல்லமை உண்டு. வல்லமை என்றால் இதிலே மூடநம்பிக்கை கிடையாது. ஏனென்றால் வாழ்த்துக்கு வல்லமை எப்பொழுது ஏற்படு மென்றால் யார் அந்த வாழ்த்தைக் கொடுக்கின்றார்களோ - அவர்கள் உங்களுக்குத் துணையாக இருப்போம், தொடர் துன்பங்கள் ஏற்படுகின்ற பொழுது - நாங்கள் வாளாக இருப்போம், கேடயமாக அதைத் தாங்குவோம் என்று சொல்லக்கூடிய பக்குவம் யாருக்கு இருக்கிறதோ அவர்களுடைய வாழ்த்து தான் பயனுள்ள வாழ்த்தாக இருக்க முடியும்.

நானும், நீங்களும் பயணம் செய்கின்றோம். அப்படி பயணம் செய்கின்ற நேரத்தில் எதிரிகள் நம்மைத் தாக்குகின்ற நேரத்தில் அவர்களை முறியடிப்பதற்கு நம்மோடு துணையாக வரக் கூடியவர்கள் இருந்தால் அவர்கள் வாழ்த்துவது பயனுள்ளதாக இருக்கும். அவர்கள் தான் பய னுள்ள நண்பர்கள் என்பது எப்படித் தத்துவரீதியாக மிக முக்கியமானதோ அதே அடிப் படையில் சொல்லுகின்றார்கள்.

அப்படிப்பட்ட வாழ்த்தை நமக்குக் கொடுத்து வழிகாட்டி அழைத்துச் செல்ல பெரியார் அவர்களை கேட்கும் பொழுது, அவரே பார்த்து யார் யார் எந்த வேலைக்கு என்று கருது கின்றாரோ அந்தந்த வேலைக்கு அனுப்பி, தமிழகத்தில் மொத்தத்தில் நன்மை கிடைக்கும் ஒரு சந்தர்ப்பத்தை அவர்கள் ஏற்படுத்திக் கொடுத்து இன்னும் பன்னெடுங் காலம், நம்மோடு வாழ்ந் திருந்து யாருக்கும் தாழ்ந்து விடாமல், யாரையும் தாக்காமல் எவராலும் சுரண்டப்படாமல், எந்தப் புரட்டுக்கும் ஆளாகாமல் எந்தப் புரட்டையும் மூட்டி விடாமல், தன்னிகரற்ற காலத்தை உருவாக்கித் தந்துவிட்டு அதை அவர் கண்டுகளிக்க வேண்டும்.

அதிலே தான் அவர் கவலை. இலட்சியத்தில் வெளிப்படையாகத் தெரிகின்ற பொன் காவி யத்தை அவர் காண முடியும். அதைக் காணுவதற்கான அறிவாற்றலோடு திறமையோடு, தகுதியோடு தமிழ்மக்கள் இன்றைய தினம் இலட்சக் கணக்கான பேர் பின் பற்றிக் கொண்டிருக் கின்றார்கள். அவர்களிலே ஒருவனாக இருப்பதற்கு வாய்ப்பு எனக்குக் கிடைத்ததிலே மிக்க மகிழ்ச்சி யடைகின்றேன் என்று முதலமைச்சர் அண்ணா அவர்கள் சொல்கின்றார். அவர்களில் ஒருவனாக - இலட்சக்கணக்கான பேர் இருக்கிறார்கள். அதிலே நானும் ஒருவன் என்று முதலமைச்சர் அண்ணா சொன்னார் என்பதுதான் மிக முக்கியம்.

------------------தொடரும்..."விடுதலை" 30-3-2009

1 comments:

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதயுடன்)
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....

இவன்
உலவு.காம்