Search This Blog

29.11.15

காந்தியாரைக் கொன்றவன் ஆர்.எஸ்.எஸ். - இல்லையா?



காந்தியாரைக் கொன்றவன் அசல் ஆர்.எஸ்.எஸ்.காரனே என்பது உலகத்திற்கே தெரியும். ஆனால், பி.ஜே.பி.க்காரர்கள் ஒன்றைத் திருப்பித் திருப்பிச் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். நீதிமன்றமே சொல்லி விட்டது. நாதுராம் கோட்சே ஆர்.எஸ்.எஸ்.காரரல்ல என்று; அதற்குப் பிறகும் கோட்சேவை ஆர்.எஸ்.எஸ். என்று சொல்லுவது நியாயம் தானா? என்று பெரிய புத்திசாலிகள் போலவும், கேள்வி கேட்ட வர்களை மடக்கி விட்டது போலவும் சட்டையின் கழுத்துப் பட்டையைச் சற்றுத் தூக்கி விட்டு நடை போடுகிறார்கள்.
காந்தியாரைக் கொன்றவன் ஆர்.எஸ்.எஸ். என்று காங்கிரஸ் துணைத் தலைவர் கூறிவிட்டாராம். அதனால் ஆர்.எஸ்.எஸ்.காரர்களுக்கு மானம் கப்பலேறி விட்டதாம்.
பிஜேபி என்ன செய்தது? ஆர்.எஸ்.எஸ்.மீது  காந்தி கொலைக் குற்றத்தை சுமத்தி, அதன்மூலம் ராகுல் காந்தி அரசியல் செய்ய இருக்கிறார் என்று புகார் செய்தது.
நாதுராம் கோட்சே ஆர்.எஸ்.எஸ். இல்லையென்றால் அவன் எந்த அமைப்பைத்தான் சேர்ந்தவன் என்ற கேள்வி எழுகிறது. அதற்கு ஆர்.எஸ்.எஸ். தரப்பில் என்ன பதில் கூறப்பட்டது? கோட்சே இந்து மகாசபை என்கிற அமைப்பைச் சேர்ந்தவன் என்று பதில் வந்தது.
ஆர்.எஸ்.எசுக்கும் - இந்து மகாசபைக்கும் அப்படி என்ன சித்தாந்த வேறுபாடு - கருத்து மாறுபாடு? இன்னொரு கட்டத்தில் இந்த இரண்டு அமைப்புகளும் இணைந்தும் விட்டன என்கிறபோது காந்தியைச் சுட்டுக் கொன்றதற்கான பொறுப்பை ஆர்.எஸ்.எஸ். ஏற்றுக் கொள்ளத்தானே வேண்டும்? அதில் ஏன் நழுவல்? அறிவு நாணயமற்ற தன்மையே தான் இதற்குக் காரணமாக இருக்க முடியும்.
நீதிமன்றம் சொல்லுவது ஒருபுறம் இருக்கட்டும்; நாதுராம் கோட்சேயின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்ன சொல்லுகிறார்கள் என்பதுதானே முக்கியம்? காந்தியார் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற கோபால் கோட்சே நாதுராம் கோட்சேயின் சாட்சாத் தம்பிதான்; அந்தத் தம்பி என்ன சொல்லுகிறான்?
இந்துக் குடும்பத்தைச் சேர்ந்த ஃப்ரண்ட்லைன் இதழ் கோபால் கோட்சேயைப் பேட்டி கண்டு பகிரங்கமாக உண்மையை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்து விட்டதே. சங்பரிவார்கள் நாக்கைப் பிடுங்கிக் கொள்ளவில்லையே ஏன்?
கேள்வி: நாதுராம் கோட்சே ஆர்.எஸ்.எஸில்தான் இருந்தாரா? அதைவிட்டு வெளியேறிடவில்லையா?
பதில்: ஆர்.எஸ்.எஸில் நாதுராம் கோட்சே ஒரு பவிதி காரியலா (அறிவுப் பூர்வப் பணியாளர்) ஆக இருந்தார். நாதுராம் ஆர்.எஸ்.எசை விட்டு விலகியதாக (காந்தியார் கொலை வழக்கின்போது நாதுராம் கோட்சே அளித்த அறிக்கையில்) குறிப்பிட்டு இருந்தார். காந்தியார் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஆர்.எஸ்.எசுக்கும், கோல்வாக்கருக்கும், நெருக்கடிகள், பிரச்சினைகள் ஏற்பட்டதன் காரணமாக அவர் அப்படிக் குறிப்பிட நேர்ந்தது. ஆனால், உண்மையில் நாதுராம் கோட்சே ஆர்.எஸ்.எசை விட்டு விலகவேயில்லை (ஃப்ரண்ட்லைன் 28.1.1944)
இதே இதழில் இன்னொன்று ஆர்.எஸ்.எசுக்கும் நாதுராம் கோட்சேவுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று அத்வானி கூறி இருக்கிறாரே? என்ற கேள்விக்கு கோபால் கோட்சே பதில் என்ன தெரியுமா?
இது கோழைத்தனமானது -அவரது கூற்றை நான் மறுக்கிறேன் போ, காந்தியைக் கொல்லு! என்று ஆர்.எஸ்.எஸ். தீர்மானம் போடவில்லை என்று வேண்டுமானால் கூறலாம். ஆனால், நாதுராம் கோட்சேவுக்கும் ஆர்.எஸ்.எசுக்கும் சம்பந்தம் இல்லை என்று நீங்கள் கூற முடியாது என்று அதே பேட்டியில் காந்தியாரைப் படுகொலை செய்த நாதுராம் கோட்சேயின் தம்பியும், காந்தியார் படுகொலையில் ஆயுள் தண்டனை பெற்று இடையில் விடுதலை பெற்றவருமான கோபால் கோட்சே வெட்டொன்று துண்டு இரண்டாக அப்பட்டமாகச் சொன்ன பிறகும், நாதுராம் கோட்சே ஆர்.எஸ்.எஸ். இல்லை என்று கூறுவது அப்பட்டமாகப் பொய்ச் சொல்லுவதில் ஆர்.எஸ்.எசை வென்றிட உலக அரங்கில் யாருமே கிடையாது என்பதைத்தான் காட்டுகிறது.
இதில் இன்னொரு சூழ்ச்சியும், ஏமாற்றுத்தனமும் உண்டு - அதனைக் கவனிக்கத் தவறக் கூடாது. ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் சேர்க்கை கிடையாது. அதனால் உண்மையிலேயே ஆர்.எஸ்.எஸ்.காரராக இருக்கும் எவரையும் ஆர்.எஸ்.எஸ். என்று சொல்லுவதற்கான ஆதாரம் கிடையாது. குற்றம் செய்து விட்டு, அதிலிருந்து ஆர்.எஸ்.எசைத் தப்பிக்கச் செய்ய ஆர்.எஸ்.எஸ்.செய்து வைத்திருக்கும் தந்திரமும், சூழ்ச்சியும் இதுவாகும்.
நீதிமன்றம் நாதுராம் கோட்சே ஆர்.எஸ்.எஸ். இல்லை என்று சொல்லி விட்டது. எனவே அவனை ஆர்.எஸ்.எஸ். என்று சொல்லாதீர்கள் என்கிறார்களே - அவர்களின் கனிவான பார்வைக்கு இதோ ஒரு நீதிமன்ற தீர்ப்பு. பஞ்சாப்  அரியானா உயர்நீதிமன்ற நீதிபதி மகேஷ் குரோவர் வழங்கிய தீர்ப்புதான் (மே 2015).
இந்தியா டுடே ஏட்டின் முதன்மை ஆசிரியர்,  வெளியீட்டாளர் ஆகியோர் மீது அவமதிப்பு வழக்கு ஒன்றினை முகேஷ் கார்க் என்பவர் 2004 இல் தொடர்ந் திருந்தார். இதனை ஏற்று, மேற்கண்ட மூன்றுபேர்களுக்கும் அழைப்பாணை வழங்கப்பட்டது. இதனை எதிர்த்து பத்திரிகையாளர் மூவரும் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். பத்திரிகையாளர்களுக்காக மூத்த வழக்குரைஞர் ஆர்.எஸ்.சீமா வாதாடினார். செய்திக்கட்டுரை அவமதிப்பானது எனக் கருத முடியாது. ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை குறைகூறி எதுவும் எழுதப்பட வில்லை என வழக்குரைஞர் கூறியதை நீதிபதி மகேஷ் குரோவர் ஏற்று கொண்டார்.
கட்டுரையைப் படித்துப் பார்த்தால் நாதுராம் கோட்சேயை ஆர்.எஸ். எஸ்.காரர் என எழுதியிருக்கிறார்கள்; ஆர்.எஸ்.எஸ். இயக்கம் இந்து தேசிய இயக்கம் எனவும் எழுதியிருக்கிறார்கள். வரலாறும் வரலாற்றில் இடம் பெற்றவர்களும் உயர்ந்து நின்றாலும் பிற்காலத்தவர்களால் புரிந்து கொள்ள முடியாத வர்களாக இருப்பர். அந்த வகையில் கோட்சேயைப் பற்றிய பின்புல ஆய்வு செய்து எதனால் நாட்டின் தந்தையான காந்தியாரைக் கொலை செய்தார் என்பதையும் ஆய்வது வழக்கமானதே. அப்படி ஆராயும்போது, அவரும் அவர் சார்ந்திருந்த இயக்கத்தினைப் பற்றியும் குறிப்புரைகள் எழுதப் பட்டுள்ளன என நீதிபதி குறிப்பிட்டார். ஆர்.எஸ்.எஸின் உறுப்பினர் என்னும் முறையில் கோட்சே பற்றி எழுதப்பட் டதை அவமரியாதையானது என்றோ, அவமதிப்பானது என்றோ கருத முடியாது என்று குறிப்பிட்ட நீதிபதி வழக்கையும் பத்திரிக் கையாளர்களுக்கு வழங்கப்படட அழைப்பாணையையும் ரத்து செய்து ஆணையிட்டார்.
ஒரு கட்டுரையை முழுமையாகப் படித்துப் பார்க்க வேண்டும். இந்தக் கட்டுரை சாதாரண வாசகரின் மனதில் எம்மாதிரி எண்ணங்களைத் தோற்று விக்கும் என்பதை ஆயும் கடமை நீதிமன்றத்துக்கு உண்டு. போலித்தனமான ஆள்கள் தம் குருட்டுக் கண்களால் பார்த்தால் மட்டுமே இக்கட்டுரை அவ தூறானது எனக் கூறுவார்கள் என்று மிகக் கடுமையான சொற்களைப் பயன்படுத்தி தீர்ப்பு எழுதப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுவும் நீதிமன்ற தீர்ப்புதான். ஆர்.எஸ்.எஸ். என்று நாதுராம் கோட்சேயைக் கூறாதீர்கள் என்பவர்களின் வாய்கள் இதற்குப் பிறகாவது அடைபடட்டும்!
                              --------------------------"விடுதலை’ தலையங்கம் 28-11-2015

7.11.15

பார்ப்பன அடிமை ராஜராஜன் உங்கள் ஜாதியா?



தமிழ் ‘இந்து’ நாளேட்டில் (4.11.2015) ‘சாதிச் சூழலில் காவிரிப் படுகை’ எனும் தலைப்பில் எம். மணிகண்டன் என்பவர் எழுதிய கட்டுரை ஒன்று வெளியாகியுள் ளது. அதன் ஒரு பகுதி இதோ:
நிமிடக் கட்டுரை: 
சாதிச் சுழலில் காவிரிப் படுகை!
ஆத்துல ஒழுங்கா தண்ணி வராட்டியும் ஒரு குரூப் கையில காசு பொழங்கத்தான் செய்யுது மாப்ள. தெக்கலங்கமே திக்குமுக் காடுதுடா, ஒரு நெல்லு மணி விழுந்தாக்கூட எடுக்க முடியாத அளவுக்கு மொய்க் குறானுவ. சில தினங்களுக்கு முன்பு தஞ்சையிலிருந்து அழைத்த என்னுடைய நண்பன் செல்வம் தீபாவளிக் கூட்டம் பற்றி சொன்ன வார்த்தைகள் இவை.
தஞ்சை பெரிய கோயிலைப் பார்க்க வந்த வெளிநாட்டினர் சிலர், நகரின் சுவர் ஒன்றில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட் டியைப் பார்த்து, ஏதாவது கலை நிகழ்ச்சி நடக்கிறதா? என்று அவனிடம் கேட்டார் களாம். நகர் விழாக்கோலம் பூண்டிருப்பதில் வெளிநாட்டுக்காரர்களுக்கு அத்தனை மகிழ்ச்சி. ஆனால், அந்தச் சுவரொட்டியில் எழுதப்பட்டிருந்ததை மட்டும் அவர்களால் வாசிக்க முடிந்திருந்தால் வெள்ளைக்காரர் களின் முகம் வெளிறியிருக்கும்!
ஆமாம், அத்தனை சுவரொட்டிகளிலும் சாதி வாடை. தஞ்சையில் ஒரு சுவர்கூட சுவரொட்டியின் கபளீகரத்திலிருந்து தப்ப வில்லை. எங்கும் எதிலும் சுவரொட்டிகள். இலக்கியம், கட்டிடவியல், சமயம் வளர்த்த பூமியில் சாதிய துதிகளைத் தாங்கிய அந்தச் சுவரொட்டிகளைப் பார்க்கும் யாருக்கும் தஞ்சாவூர் சாதிச் சண்டை மைதானமாகி விட்டதோ என்றுதான் எண்ணத் தோன்றும். ஜீரணிக்க முடியாத மாற்றம் இது!
ஓர் ஊர் இப்படிக்கூட உருமாறுமா என்று ஆயாசமாக இருக்கிறது. ராஜ ராஜனைச் சொந்தம் கொண்டாடி மட்டுமே 5 சாதிகளின் ஆட்கள், சுவரொட்டிக் களே பரங்களை நடத்தியிருந்தனர். இதனுடன் மருதுபாண்டியர்கள், முத்துராமலிங்கத் தேவரைப் போற்றும் சுவரொட்டிகளும் சேர்ந்துகொண்டன.
அடக்கி ஆண்ட கூட்டம், அடங்கிப் போக மாட்டோம். பாசமுன்னா உயிரக் கொடுப்போம், பகைன்னா உயிர எடுப்போம்... இன்னும் இத்யாதி இத்யாதி. தமிழ்த் திரைப்படங் களில் பஞ்ச் டயலாக் எழுதுபவர்களை மிஞ்சிவிட்டார்கள், இந்தச் சுவரொட்டிச் சிந்தனையாளர்கள்!
இவ்வாறு கூறுகிறது தமிழ் ‘இந்து’

ராஜராஜனோ அவனது முன்னோர், பின்னோர் எனப்படும் சோழ வேந்தர்களோ நாட்டுக்குச் செய்த நல்ல காரியங்கள் என்னென்னவாம்?
அவன் எங்கள் மூதாதை, எங்கள் உறவினர் எங்கள் ஜாதிக்காரர் என்று உரிமை கொண்டாடும் தோழர்களின் சிந்தனைக்கு வைக்கப்பட வேண்டிய தகவல்கள் ஏராளம் உண்டு.
பார்ப்பனர்களைக் கட்டியழுது அவர் களின் குண்டிக் கொழுக்கக் கொட்டிக் கொடுத்தவன் அல்லாமல் அவனைப் பராக்குப் பாட என்னதான் இருக்கிறது?
இன்றைக்குச் சொந்தம் கொண்டாடு கிறார்களே - அந்த ஜாதிக்காரர்கள் உள் ளிட்ட தமிழர்களின் கல்விக் கண்களைத் திறந்தானா? கல்விக் கூடங்களை கட்டிக் கொடுத்தானா?
மானியங்களை யாருக்கு அள்ளிக் கொடுத்தான்? இறையிலி மங்கலங்கள் என்ற பெயரால் நிலபுலன்கள் யார் வயிற்றில் அறுத்துக் கட்டப்பட்டன?
மங்கலம் மங்கலம் என்று முடிகின்ற பெயர் உள்ள கிராமங்கள் அத்தனையும் பார்ப்பனர்களுக்குத் தானங்களாகத் தாரை வார்க்கபட்டவை என்ற வரலாற்றினை அவர்கள் அறிவார்களா?
அப்படி வழங்கப்பட்ட நிலங்களுக்கு வரி விலக்கு (இறையிலிமங்கலங்கள்) அளிக்கப்பட்டதுபற்றி யோசித்துப் பார்த்த துண்டா?
மூன்று வேதங்களை படித்திருந்தால் திரிவேதி என்றும், நான்கு வேதங்களைக் கற்றிருந்தால் சதுர்வேதி என்றும் பட்டங் களைக் கொடுத்துப் பார்ப்பனர்களுக்கு நிலங்களை வாரி வழங்கியது பற்றி எப்பொழுதாவது சிந்தித்ததுண்டா?
அருண்மொழி தேவன் என்ற அருந்தமிழ்ப் பெயரை ராஜராஜன் என்று சமஸ்கிருதத்தில் தன் பெயரை மாற்றிக் கொண்டவனைப் பெருமைக்குரிய எங்கள் ஜாதியைச் சேர்ந்தவன் என்று சொல்லிக் கொள்வது எந்த வகையில் சரியானது?
தமிழ்நாட்டில் திராவிடர் இயக்கம் தோன்றி மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது; அதன் விளைவுதான் நாராயணசாமியாக இருந்தவர் தன் பெயரை நெடுஞ்செழியன் என்று தமிழில் மாற்றிக் கொண்டார்.
இராமையன் என்ற அண்ணாமலைப் பல்கலைக் கழக மாணவர் தன் பெயரை அன்பழகன் என்று மாற்றிக் கொண்டார்; சோமசுந்தரம் மதியழகன் ஆனதும், கோதண்டபாணி தில்லை வில்லாளன் ஆனதும் - தந்தை பெரியாரும், திராவிடர் இயக்கமும் ஊட்டிய தன்மான உணர்ச்சி, தமிழ் உணர்ச்சியாலும் தானே! கோயிலைக் கட்டி அங்குப் பார்ப்பனர்களை அர்ச்சகர் களாகத் திணித்தது யார்? வழிபாட்டு மொழி யான தமிழை வெளியில் தள்ளி சமஸ் கிருதத்தைக் குடியேற வைத்தவன் யார்?
ஏதோ பொத்தாம் பொதுவில் ராஜராஜ சோழனையோ, சோழர் குல ராஜ மார்த் தாண்டர்களையோ குறை பாடித் தீர்க்க வில்லை.
எதைச் சொன்னாலும் எதை எழுதி னாலும் ஆதாரத்துடன் நிலை நாட்டு என்று சொன்ன பகுத்தறிவுப் பகலவனின் மாணவர்களாகிய நாங்கள் அதே வழியைப் பின்பற்றக் கூடியவர்களே - இதோ சில எடுத்துக்காட்டுகள்: ராஜ ராஜனை சொந்தம் கொண்டாடும் அருமைத் தோழர்களுக்கு ஓரிரண்டைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
முதலாம் ராஜராஜன், முதலாம் ராஜேந்திரன் ஆகியோரின் ஆட்சிக் காலங்களில் ஈசான பண்டிதர், சர்வ சிவ பண்டிதர், பவன விசாரன் ஆகியோர் ராஜக் குருக்களாக வந்திருந்தனர்.
இவர்களால்தான் பெண்களைக் கோயில் களில் பொட்டுக் கட்டிவிடும் தேவதாசி முறை கொண்டு வரப்பட்டது.
நான்மறை தெரிந்த பார்ப்பனரை ஆதரித்தவன் முதலாம் ராஜ ராஜசோழன். மனு நெறி நின்று அசுவமேதயாகஞ் செய்தவன் முதலாம் ராஜாதி ராஜன்; மனுவாதி பெருக என்ற பெருமைக்குரியவன் முதலாம் குலோத்துங்க சோழன் மனுவினை வளர்த் தவன் கோபரகேசரி என்று குறிக்கப்பட்ட வன் அதிவீரராஜேந்திர சோழன்; மனு நெறி நின்று அஸ்வமேத யாகம் செய்தவன் என்று குறிப்பிடப்பட்டவன் முதலாம் ராஜாதி ராஜன்.
மன்னுயிர் தழைக்க மனுவாதி விளங்க என்று குறிக்கப்பட்டான் - இரண்டாம் குலோத்துங்க சோழன்; மனுநீதி வளர்த்து நின்றவன் விக்கிரம சோழன், நான் மறை செயல் வாய்ப்ப மனுநெறி தழைத்தோங்க ஆட்சி செய்தவன் மூன்றாம் குலோத் துங்கன் என்று சோழ வேந்தர்கள்பற்றி கல்வெட்டுகள், செப்பேடுகள் கூறுகின்றன.
அவற்றில் எல்லாம் மனு நீதியோடு இணைந்த சோழ வேந்தர்கள் பாராட்டப்படுகின்றனர் என்றால் இந்தக் கேவலத்தைத் தமிழ் மொழியில் சொன்னால் தமிழுக்குக் கூட கேவலமாகும். இந்த நிலையில் இந்த சோழர்கள் எங்கள் ஜாதி என்று மார்தட்டும் மனிதர்களை(?) என்னென்று சொல்லுவது!
மதுராந்தகச் சோழன் குறித்து கரந்தைச் செப்பேடு பகர்வது என்ன? “கோயிலுக்குத் தானம் பிராமணர்களுக்குச் சலுகைகள் அளித்தல் முதலான நடைமுறைகள் தடை யில்லாமல் நடை பெற்றன;
சமூக உற்பத்தி அனைத்தும் கோயிலுக்கும் பிராமணர் களுக்கும், அரசர்களுக்கும் வரியாகவும், நிலமாகவும் பொது மக்களிடம் இருந்து பெறப்பட்டது. எனினும் கோயிலிலிருந்து உழைப்பைத் தவிர, வேறு எவ்விதச் சலுகைகளையும் பெறாமல் அடிமைகளாக தள்ளியே வைக்கப்பட்டிருந்தனர்.
அடிமைகள், கட்டாய உடலுழைப்பு, கோயிலுக்கான இலவச உடலுழைப்பு என்ற முறைகளில் மனித உழைப்பு சுரண்டப் பட்டது. இதனால் பெரிய ஏரிகளையும், குளங்களையும் வாய்க்கால்களையும் பிர மாண்ட கோயில்களையும், ஆடம்பரமான கோட்டைகளையும் சோழ அரசனால் உருவாக்க முடிந்தது. ஊதியமில்லாமல் உணவு மட்டும் அளித்து இலவச உழைப்பின் மூலம் இவை செய்து முடிக்கப்பட்டன.
(இலவச உணவுகூட ஏன் தெரியுமா? அவர்கள் உழைக்க வேண்டுமே - அந்த சுயநலத்துக்காகதான் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்)
சோழர் காலத்தில் குடி மக்களின் மீது நானூறுக்கு மேற்பட்ட வரிகள் விதிக்கப்பட்டன.
.....
ஜாதிகள் வலங்கை, இடங்கை என்று பிரிந்தது சோழர்கள் ஆட்சிக் காலத்தில் தான்; ராஜராஜன் காலத்துக் கல்வெட்டுகள் இதனை விவரிக்கின்றன. இவ்விரு பிரிவின ரிடையே கலகங்கள் நடந்திருக்கின்றன. கிழக்கிந்திய கம்பெனி ஆட்சிக் காலத்திலும் கூட இக்கலவரங்கள் நீடித்துள்ளன.  சென்னை நகர வீதிகளில் ரத்த வெள்ளம் ஓடியது என்று பிரபல வரலாற்று ஆசிரியர் நீலகண்ட சாஸ்திரியார் கூறுகிறார்.
இராசேந்திர சோழன் 57 ஊர்களை 1084 வைணவப் பார்ப்பனர்களுக்கு அவரது அமைச்சராக விளங்கிய சிறீ  சகநாதனோ பரமவைணவன் வேண்டுகோளுக்கிணங்க தானமாகக் கொடுத்தான் என்று  கரந்தைச் செப்பேடு பகர்கிறது.
***
முதலாம் குலோத்துங்கனுடைய ஆட்சி யின் இறுதிக் காலத்தில் அனுலோம வகுப்பைச் சேர்ந்த அய்ந்து வகைப்பட்ட கம்மாளர்கள் பார்ப்பனரைப் போல் பூணூல் அணிந்து அக்கினிஹோத்திரம் ஔ பாசனம் ஆகியவற்றைச் செய்வதற்கு உரிமை வழங்குமாறு சோழப் பேரரசனை வேண்டினர்.
பேரரசனின் ஆணையின்படி இராசாசிரய சதுர்வேதி மங்கலத்தைச்  சேர்ந்த சாத்திரங்களில் வல்லுநர்களான பார்ப்பனர்கள் ஒரு கூட்டம் நடத்தி, அவ் வகுப்பினர் பிரதிலோமரைக் காட்டிலும் உயர்ந்தவர்கள் என்றும், இவர்கள் கட்ட டங்கள், தேர், ஆடம்பர வண்டி முதலி யவை கட்டுவது, கோபுரங்கள் மண்டபங் களின் பணி செய்விப்பது, உருவச் சிலைகள் ஆக்குவது,
யாகத்திற்கு வேண்டிய செயல் களைச் செய்யலாம் என்றும், அவர்களுக் குச் சாத்திரப்படி பூணூல் அணிந்து கொள்ளும் உரிமை மாத்திரம் உண்டு என்றும், ஆனால் உபநயனம் செய்யுங்கால் மந்திரங்களன்றிச் செய்தல் வேண்டும் என்றும் அக்னி ஹோத்திரம் ஔபாசனம் முதலியவற்றைச் செய்தல் கூடாது என்றும் முடிவு கூறினர். (பேராசிரியர் அ. இராமசாமி எழுதிய ‘தமிழ்ப் பேரரசுகளின் சரிவும் வீழ்ச்சியும் - பக்கம் 147-148) பூணூல் அணியலாமாம்;
ஆனால் மந்திரங்களைச் சொல்லக் கூடாதாம்; காரணம் சூத்திரன் மந்திரங்களை படிக்கக் கூடாது - கேட்கக் கூடாது - படித்தால் நாக்கை அறுக்க வேண்டும்; கேட்டால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டுமே, இதுதானே அவாளின் மனுதர்மம்.
.....
பதின்மூன்றாம் நூற்றாண்டில் சிதம்பரத் தின் கிழக்கெல்லையில் உள்ள கொற்றவன் குடி எனும் ஊரில் வாழ்ந்தவரான உமாபதி சிவாசாரியார் என்பவர் தில்லை மூவாயிர வரில் ஒருவர்.
அவர் எட்டு சித்தாந்த நூல் களை இயற்றினார்.  ஆதலின் தில்லை தீட்சதர்கள் அவரைக் குலத்தினின்றும் விலக்கி ஒதுக்கி வைத்தனர்.
அன்று தொடங்கி இன்று வரை தில்லை தீட்சதப் பார்ப்பனர்களின் திமிர் அடங்க வில்லையே! அந்தத் திமிர்க்கான விதையைப் போட்டவர்களே ‘சூத்திர சோழர்கள் தானே!’
.....
படிப்புப் பார்ப்பனர்களுக்கு மட்டுமே!
சோழர்கள் காலத்தில் வேதப் படிப்பு படித்தவர்கள் தனியாக சிறப்புக்குரியவராக மதிக்கப்பட்டனர். வேதம் கற்பிக்கும் கல்விச் சாலைகளுக்கு நில தானங்கள் பல அரசர்களால் கொடுக்கப்பட்டன.
சோழ மண்டலத்தில் ஐம்பத்தேழு ஊர்களை முதலாம் இராசேந்திரன் ‘திரிபுவன மாதேவிச் சதுர்வேதி மங்கலம்’ என்ற பெயருடன் ஒரு தொகுதியாக்கி, வேதங்களிலும் சாத்திரங்களிலும் வல்ல பிராமணர் பலருக்கும் பிரம்மதேயமாக வழங்கினான் என்ற செய்தி வேதங்கள் மீதும் சாத்திரங்கள் மீதும் சோழர்கள் கொண்டிருந்த ஈடுபாட்டைக் காட்டுகிறது.
இதுபோல், வீரராஜேந்திர சோழனின் கன்னியாகுமரிக் கல்வெட்டு அவ்வரசன் சோழநாடு, பாண்டிய நாடு, தொண்டை நாடு, கங்க நாடு, குலூத நாடு என்பவற்றில் மூன்று வேதங்களிலும் வல்ல நாற்பதினாயிரம் பிராமணர்களுக்குப் பிரம்மதேயங்கள் வழங்கி அந்நாடுகளில் நிலைபெற்று வாழு மாறு செய்தான் என்ற செய்தியைக் கூறுகிறது.
பல ஆயிரக்கணக்கான வேதம் வல்ல வடமொழிப் பிராமணர்கள் சோழப் பெரு வேந்தர்களால் தமிழகத்தில் குடியமர்த்தப் பட்டார்கள் என்பதற்கு ஏராளமான கல்வெட்டு  ஆதாரங்கள் உள்ளன. சோழர் காலத்தில் பிராமணர்களுக்கு தானமாகக் கொடுக்கப்பட்ட பிரம்மதேயங்கள், சதுர் வேதி மங்கலங்கள் பல்கிப் பெருகின. பிரம் மதேயமாக மட்டுமில்லாமல் பிற காரணங் களுக்காகவும் பிராமணர்களுக்கு நிலங்கள் தானமாகக் கொடுக்கப்பட்டன. அவை வருமாறு:
வேதம் வல்ல பிராமணர்களுக்கு - பட்டவிருத்தி.
மகாபாரதக் கதையைப் படித்துரைப்ப வர்க்கு - பாரத விருத்தி.
- அர்ச்சனை செய்பவர்களுக்கு  - அர்ச்சனா போகம்.
- வேதம் படிக்கும் அபூர்விகள் போன்ற றோருக்கு உணவளிக்கும் அறச்சாலை களுக்கு - சாலா போகம்.
இது மட்டுமல்லாமல் பாஷ்ய விருத்தி, சைவாச்சாரியக் காணி என பல பெயர்களில் இறையிலி நிலங்கள் பிராமணர்களுக்கு வழங்கப்பட்டன.
சோழர் காலத்தில் வேதக் கல்வி வளர்ப் பதற்காக வடமொழிக் கல்வி நிலையங் களும், கல்லூரிகளும் உருவாக்கப்பட்டன. இக்கால கட்டத்தில் செயல்பட்ட வேதக் கல்வி நிலையங்களும் அங்கு படிக்கப்பட்ட நூல்கள் குறித்த விவரங்களும் வருமாறு:
காமப்புல்லூர் என்ற இடத்தில் வேதப் பயிற்சிப் பள்ளி ஒன்று இயங்கியது. இவ்வேதப் பள்ளிக்கு பட்டவிருத்தி நிலம் அளிக்கப்பட்டது.
ஆனியூர் என்ற இடத்தில் வேதம் மற்றும் வடமொழி இலக்கியம் கற்றுத் தரும் பள்ளி ஒன்று செயல்பட்டது. இங்கு வேதம். பாணி னியின் இலக்கணமாகிய அஷ்டத்தியாயி ஆகியவற்றைப் பயிற்றுவிக்க பட்டவிருத்தி நிலம் அளிக்கப்பட்டது. பட்ட விருத்தியாக நிலம் பெற்ற பட்டர் வேதத்தில் ஆழ்ந்த புலமைப் பெற்றிருக்க வேண்டும் என்றும், பாணினிவியாகரணம், அலங்காரம், மீமாம் சத்தில் 20 அதிகாரங்கள் சொல்லிக் கொடுக் கும் திறமைப் பெற்றவராக இருத்தல் வேண் டும் என்பன போன்ற விதிகள் உருவாக் கப்பட்டிருந்தன.
வேதப் பயிற்சிப் பள்ளிகள் நடை பெற்றது பற்றிய கல்வெட்டுகளின் செய்தி களில் அங்கு பயின்ற மாணவர்களின் எண்ணிக்கைப் பற்றியும் ஆசிரியர்களின் எண்ணிக்கைப் பற்றியும் நடத்தப்பட்ட பாடங்கள் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதுச்சேரிக்கு அருகில் உள்ள திரிபு வனையில் சாத்திரங்கள் பயிற்றுவிக்கும் வடமொழிக் கல்லூரி செயல்பட்டது. இங்கு 270 மாணவரும் 12 ஆசிரியர்களும் இருந்தனர். பாரதம், இராமாயணம், மனுதர்ம சாத்திரம் முதலியன கற்பிக்கப்பட்டன. ஆசிரியரும் மாணவரும் கவலையின்றி வாழ வசதிகள் செய்து தரப்பட்டன.
திருவாவடுதுறை, பெருவேலூர் ஆகிய இடங்களில் பிராமண மாணவர்கள் படிக் கும் வடமொழிப் பள்ளிகள் செயல்பட்டன.
திருவொற்றியூர்க் கோவிலில் வட மொழி இலக்கணம் கற்பிக்க வியாகரண தான - வியாக்யாந மண்டபம் ஒன்று இருந்தது. இது குறைவின்றி நடைபெற 65 வேலி நிலம் தானமாக விடப்பட்டது. பாணினி இலக்கணத்தைக் கற்பிக்கும் சிறந்த இடமாக இக்கல்லூரி விளங்கியது. இங்கு பதினான்கு நாள்களில் பதினான்கு பாராயணங்கள் கற்பிக்கப்பட்டன. மேலும் வேதமும், சித்தாந்த நெறிகளும் கற்கும் இடமாகவும் இக்கல்லூரி விளங்கியது.
வேதக் கல்வி கற்பிக்கும் அதே வேளையில் வேதம் ஒப்புவித்தல் போட்டி களும் அறிவிக்கப்பட்டு பரிசுகளும் அளிக் கப்பட்டன. மேலும் பாரதம் ஓதுபவர் களுக்கும் கொடைகள் அளிக்கப்பட்டது பற்றியும் வேத பாடசாலையில் தங்கிப் பயிலும் மாணவர்களுக்கு அளிக்க வேண்டிய பொருட்களைப் பற்றியும் சில கல்வெட்டுகள் பதிவு செய்கின்றன.
கி.பி. 1170ஆம் ஆண்டு கல்வெட்டின் மூலம் சைமினிய சாமவேதத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியை நன்முறையில் ஓதுப வருக்குத்தான் ஒரு பரிசு வழங்க வேண்டு மென்று ஒருவர் கோயிலுக்கு கொடை யளித்துள்ள செய்தியை அறிய முடிகின்றது.
செங்கல்பட்டில் இருந்து 20 கி.மீ. தொலைவில் திருமுக்கூடல் என்ற சிற்றூர் அமைந்துள்ளது. இங்கு அமைந்துள்ள வெங்கடேசப் பெருமாள் கோயிலில் விரிவான கல்வெட்டு உள்ளது. இதில் இடம் பெறும் செய்தியின் மூலம் இக்கோயிலில் ஒரு கடிகை இயங்கியதை அறிய முடிகிறது. இதனை நிறுவியவன் வீரராசேந்திரச் சோழனாவான்.
இங்கு ரிக், யஜுர் ஆகிய இரண்டு வேதங்களும் இலக்கணமும் கற்பிக்கப்பட்டன. இங்கு மூன்று ஆசிரி யர்கள் பணியாற்றினர். ஒவ்வொரு வேதத் தையும் படிப்பதற்கு 10 மாணவர்களுக்கு மட்டுமே இடமளிக்கப்பட்டது.
இலக்கணம் கற்க 20 மாணவர்கள் மட்டுமே சேர்க்கப் பட்டனர். இக்கல்லூரியில் தங்கிப் பயிலும் மாணவர்களுக்கு உணவும், தங்குவதற்கு இடமும், தலைமுழுக்கு, மற்றும் விளக்கு களுக்கு எண்ணெயும் அளிக்கப்பட்டது.
மேலும் ஊரிலுள்ள மக்களுள் கல்வி பயில முடியாதவர்கள் கேள்வியறிவு பெறும் வண்ணம் சில நூல்கள் கோயிலில் இருந்த வியாக்கியான மண்டபத்தில் படித்து விளக் கப்பட்டன. கல்வி பயிலும் மாணவர்களுக் கும், ஊரிலுள்ளோர்க்கும் மருத்துவம் செய்வதற்கென்று ஓர் ஆதுலர் சாலையும் (மருத்துவமனை) இருந்தது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கூரம் என்ற ஊரில் சிவன் கோயில் ஒன்று அமைந் துள்ளது. இக்கோயிலில் உள்ள மண்டபத்தில் மகாபாரதம் படிக்க கொடையளித்தது குறித்து கல்வெட்டு மூலம் அறிய முடிகிறது.
தஞ்சாவூர் மாவட்டம் செந்தலை என்னும் ஊரிலுள்ள சுந்தரேசுவரர் கோவி லில் மகாபாரதம் படிப்பதற்காக கொடை வழங்கப் பெற்றுள்ள செய்தியை அவ்வூர்க் கல்வெட்டு குறிப்பிடுகின்றது.
(தமிழகத்தில் வேதக் கல்வி வரலாறு - சி. இளங்கோ பக்கம் 104-107)

பார்ப்பனர் ஆதிக்கம்
“சமுதாயத்தில் பிராமணர்களின் ஆதிக்கம் மேலோங்கி இருந்தது. ஆனால் சங்க காலத்திலிருந்து தமிழ்நாட்டில் வாழ்ந்து வந்த தமிழ்ப் பிராமணர்களின் செல்வாக்குக் குறைந்து, புதிதாக வடநாட்டிலிருந்து வந்து குடியேறிய வடமொழிப் பிராமணர்களின் செல்வாக்கு அதிகமாயிற்று. தமிழ்நாட்டில் தமிழன் கட்டிய கோயில்களின் கருவ றைக்குள் செல்லும் உரிமையை தமிழன் பறி கொடுத்தான். சமுதாயத்தில் கோயில்களே ஆதிக்கம் செலுத்தின.
ஆனால் அக் கோயில்கள் பிராமணர்களின் ஆதிக்க புரியாகவே காட்சி அளித்தன. அரசாங்க அதிகாரமும், சமயச் செல்வாக்கும் குவியப் பெற்றிருக்கும் கைகள் என்றுமே ஓய்ந் திருப்பதில்லை. அவ்வதிகாரத்தையும், செல்வாக்கையும் மென்மேலும் பெருக்கிக் கொள்ளவும், பெருகினவற்றை அழியாமல் பாதுகாத்துக் கொள்ளவும் அக்கைகள் பரபரத்துக் கொண்டிருப்பது இயல்பு.
எனவே உழைப்பின்றியே தானமாகப் பெற்ற நிலங்களும், ஊர்களும், அரசாங்கச் செல்வாக்கும், வேள்வி வளர்க்கும் தனி உரிமையும் தம்மிடம் குவிக்கப் பெற்ற பிராமணர்கள் அவை யாவும், எக்காலமும் தம்மிடமே நிலைத்து நிற்கவும், மென்மேலும் வளர்ந்து வரவும், தம் குலத்தின் தலைமைப் பதவி நீடித்தும் வரவும் பல முயற்சிகளை மேற்கொள்ளலானார்கள். மன்னரின் முழு ஆதரவையும் அவர்கள் பெற்றனர்.
வேந்தர் களுக்கும், அவர்களைச் சார்ந்தவர்களுக் கும் வமிசங்களையும், கோத்திரங்களையும், சூத்திரங்களையும் கற்பித்துக் கொடுத் தார்கள். மன்னர்களும் சாதி ஒழுக்கத்தை நிலை நாட்டுவதே தம் சீரிய கடமையாம் எனக்கூறும் மெய்க் கீர்த்திகளைப் புனைந்து கொண்டனர். ஆரிய பழக்க வழக்கத்தைப் பாராட்டிக் கூறும் சாத்திரங்களும் புராணங் களும் எழுந்தன.
(கே.கே. பிள்ளை எழுதிய தமிழக வரலாறும் மக்களும், பண்பாடும் பக்கம்  - 300)
ஓ, ஜாதி அபிமானிகளே ராஜராஜன் - சோழ அரசர்கள் எங்கள் ஜாதி என்று மார்தட்டி சுவரொட்டி ஒட்டும் சொந்தங் களே- இப்பொழுது சொல்லுங்கள்! எங்கள் உறவு, எங்கள் ஜாதி என்று பெருமையோடு அவர்களைச் சொல்லிக் கொள்ள என்ன இருக்கிறது?
கோயில்களுக்குள் தமிழர்களை உள்ளே விடாது. பார்ப்பனர்களை அர்ச்சகர்களாக நியமித்த ராஜராஜ சோழனின் சிலையைப் பார்த்தீர்களா? மத்திய அரசின் தொல் பொருள்துறை அதனை அனுமதிக்க வில்லையே! ராஜராஜ சோழன் தமிழர்களை வெளியே நிறுத்தியதால் ராஜராஜனின் சிலையும் வெளியில் நிற்கிறதோ!


-------------------மின்சாரம் அவர்கள் 7-11-2015 “விடுதலை” ஞாயிறு  மலரில் எழுதிய கட்டுரை

4.11.15

கண்ணாடி வீட்டிலிருந்து கல்லெறிய வேண்டாம்! காம்ரேடுகளுக்கு நமது கனிவான வேண்டுகோள்-3


கண்ணாடி வீட்டிலிருந்து கல்லெறிய வேண்டாம்!

காம்ரேடுகளுக்கு நமது கனிவான வேண்டுகோள் (3)


சி.பி.எம். அகில இந்திய முன்னணித் தலைவர்களும் சரி மாநில சி.பி.எம். எழுத்தாளர்களும் சரி, நீதிக்கட்சியின்மீது அடிப்படைப் புரிதலின்றிச் சேற்றைவாரி இரைப்பது என்பதை ஒரு பெரிய கண்டு பிடிப்பு போலக் கூறுவதை வழமையாகக் கொண்டுள்ளனர்.
“நீதிக் கட்சி பிராமணர் அல்லாத உயர் ஜாதிக்காக அவர்களால் நடத்தப்படுகிற, அவர்களது கட்சியாகவே பிறப்பெடுத்தது. அரசியல் அதிகாரத்தையும் உத்தியோக செல்வாக்கையும் தங்களுக்காக வென்றெடுப் பதே அவர்களது குறிக்கோள்.
இப்படி ஒரு குறுகிய நோக்கத்துடன் துவக்கப்பட்டிருந்த தால் இவர்கள் இயல்பாகவே ஆங்கில ஏகாதிபத்திய ஆட்சிக்கு அனுசரணையாகவே நடந்து கொண்டார்கள். தங்கள் கையில் அரசியல் அதிகாரம் வரும்வரை  தேசத்தின் சுதந்திர லட்சியத்தையே ஒத்திப் போடலாம் என்றார்கள்” என்று குற்றஞ் சாட்டப்பட் டுள்ளது.
வெள்ளுடை வேந்தர் பிட்டி தியாகராயர் வெளியிட்ட  (1916 டிசம்பர் 20) ‘பார்ப்பனரல் லாதார் கொள்கை’ அறிக்கையை ஆழ்ந்து படித்தால் நீதிக் கட்சியின் தோற்றம், நோக்கம் இவற்றின் அருமை புரியும்.
பொத்தாம் பொதுவில் ஏதோ சொல்லுவது யாருக்கும் எளிது; இதைவிட மேலான தரத்தில் தீக்கதிரிலிருந்து எதிர்பார்த்து ஏமாந்தோம்.
நீதிக்கட்சி ஏன் தோற்றம் பெற்றது? நாம் சொல்லுவதைவிட ‘தினமணி’யின் பழுத்த ஆசிரியரும் - பார்ப்பனருமான திரு. ஏ.என். சிவராமன் என்ன எழுதுகிறார்?
“சென்னை சம்பந்தப்பட்ட மட்டில் மாநில மட்டத்தில் காங்கிரசுக்கு எதிரான கிளர்ச்சி, ஒரு புதிய வடிவில், புதிய உணர்ச்சியுடன் புதிய முடிவுகளுடன் உருவாயிற்று.
இப்போது நமது வரலாற்றுக் கண் ணோட்டத்தை (டெலஸ்கோப் கருவியை) 1920-க்கு முன்னர் இருந்த அய்ந்து ஆண்டு களுக்கு முன் திருப்புவோம்.
1914-1918இல் உலக யுத்தத்தின்போது - காங்கிரஸ் ஸ்தாபனம் இந்தியாவுக்கு டொமினி யன் ஆட்சி (ஆஸ்திரேலியா, கனடா போன்ற சுயாட்சி) வேண்டுமென்று கோரியது. அப் போது காங்கிரஸ் தலைமை பெரும்பாலும் படித்தவர்களிடமே இருந்தது.
அந்தக் காலத் தில் தென்னாட்டில் படித்து உத்தியோகங் களில் அமர்ந்தவர்களின் தொகை, மற்ற இனத்தாரைவிட பிராமணர்கள் தொகை அதிகம் இருந்தது. ஆகையால் காங்கிரசிலும் பெரும்பாலான தலைவர்கள் பிராமணர் களாக இருந்தனர்.
அந்தக் கட்டத்தில் பிரிட்டிஷார் தம்மிடமிருந்த அதிகாரத்தை இந்தியர் கைக்கு மாற்றினால், தென்னாடு சம்பந்தப்பட்ட மட்டில் இது பிராமணர் ஆதிக்கமாகவே இருக்குமென்று பிராமணர் அல்லாதவர்களில் படித்தவர்களும், பணக்காரர்களும் அஞ்சினர் அல்லது அச்சத்தைக் கிளப்பினர்.
இவர்கள் ‘தென்னிந்திய லிபரல் பெடரேஷன்” என்ற சங்கத்தை அமைத்தனர் என்று குறிப்பிட்டு இருக்கிறார். “அஞ்சினர் அல்லது அச்சத்தைக் கிளப்பினர்!” என்று ஏ.என். சிவராமன் கூறுகிற அஞ்சலில்தான் நீதிக்கட்சியின் தோற்றமே அடங்கி இருக்கிறது.
(நீதிக்கட்சி வரலாறு - தொகுதி - 1 - 
க. திருநாவுக்கரசு பக்கம் 209-210).

பார்ப்பனரான பிரபல தினமணி ஆசிரியர் ஒருவராலேயே நீதிக்கட்சி தோற்றுவிக்கப் பட்டதன்  நியாயத்தை மறுக்க முடியவில்லை.  ஆனால், இடதுசாரி கட்சி ஒன்று அதன் பிறப்பிற்கு மாசு கற்பிப்பது என்பது ஒரு கெட்டவாய்ப்பேயாகும்.
இப்படிக் குற்றம் கண்டுபிடிக்கும் ‘தீக்கதிராலேயே’ ஓர் அடிப்படையான உண்மையை மறுக்க முடியவில்லை.
நீதிக்கட்சி முன் வைத்த வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்ற கோரிக்கையில் ஒரு ஜனநாயகத் தன்மை இருந்தது என்று ஒப்புக் கொண்டுள்ளது.
இந்த வகுப்புவாரி உரிமையால் ஏற்படும் பலன் பார்ப்பனர் அல்லாதாரில் உயர் ஜாதியாருக்குத்தான் என்று சாதிக்கப் போகிறார்களா என்று தெரியவில்லை.
மதுரை சொக்கன், பேராசிரியர் அருணன் அவர்களின் “காலந்தோறும் பிராமணீயம்” எனும் தொகுப்புகளை ஒரு முறை படித்தால் பார்ப்பனர் அல்லாதார் இயக்கத்தின் தோற்றத்தின் அருமையை உணர முடியும்.
நீதிக்கட்சி ஆட்சியின் சாதனைப் பட்டியலை அளிக்கத் தயார் - அவற்றைப் படித்துப் பார்த்து விட்டு, அதில் எங்கு பார்ப்பனர் அல்லாதாரில் உயர் ஜாதியினரின் நங்கூரம் பதிந்து இருக்கிறது  என்று கண்டு பிடித்துச் சொல்லட்டும் எடுத்துக்காட்டுக்காக ஒரு சில இங்கே:
  • பொதுத் துறையில் தாழ்த்தப்பட் டோர் உட்பட எல்லா மக்களுக்கும் உரிய இடங்கள் வழங்கப்பட்டன.
  • துப்புரவு வகுப்பினர், தோடர்கள், கோடர்கள், படுகர்கள் ஆகியவர்களுக்காகக் கூட்டுறவுச் சங்கங்கள் ஏற்படுத்தப்பட்டன.
  • தாழ்த்தப்பட்ட வகுப்பினர்க்குப் பணி உயர்வு, உயர் பதவி நியமனங்கள் செய்யப் பட்டன.
  • தாழ்த்தப்பட்டோர்க்கு வீட்டு மனைகள், குடியிருப்புகள் அமைத்துத் தரப்பட்டன. சாலைகள் போடப்பட்டன. அவர்களின் குழந்தைகளுக்குப் பள்ளிகள் ஏற்பாடு செய்யப்பட்டன.
  • தாழ்த்தப்பட்டோரின் முன்னேற்றம் கருதி, தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர். பின்னர், தனி அலுவலர் என்பதை லேபர் கமிஷனர் என்று மாற்றினர்.
  • தாழ்த்தப்பட்ட வகுப்பாரில் என் னென்ன சாதிகள் உள்ளன என்பதைத் தொகுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
  • குறவர்களை எல்லா வகையிலும் சீர் திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டன.
  • கோவை மாவட்டத்திலுள்ள வலை யர், குறவர் ஆகியோரைக் குற்றப் பரம் பரையிலிருந்து மீட்க அவர்களின் குழந்தை களுக்கு ரூ.25 - நிதி உதவிகள் (ஸ்காலர் ஷிப்புகள்) அளிக்கப்பட்டன.
  • ஆதிதிராவிடர்களுக்கு நிலங்கள் வழங்கப்பட்டு அதனைப் பயன்படுத்த மூலதனம், பிற சாதியினரிடமிருந்து பாதுகாப்பு - அடமானம் வைக்காமல் இருக்க அறிவுரை இன்னும் பிற தொல்லைகளிலிருந்து மீட்பு என உதவிகள் செய்யப்பட்டன.
  • தாழ்த்தப்பட்டவர்களுக்கு வீட்டு மனை வாங்குவதற்குக் கடன் வசதி செய்து தரப்பட்டது.
  • ஆதிதிராவிடர்களுக்கு விவசாயத் திற்காக நிலங்களை ஒதுக்குகிறபோது மரங் களின் மதிப்பு நில அளவைக் கட்டணத்தைத் தள்ளுபடி செய்தனர்.
  • அருப்புக்கோட்டையில் குறவர் பையன்களுக்குப் படுக்கை வசதி கொண்ட மன்றம் கட்டித்தர அளிக்கப்பட்ட தொகையை  உயர்த்தித் தர உத்தரவு இடப்பட்டது.
  • மீனவர் நலன் காப்பதற்காக லேபர் கமிஷனர் நியமிக்கப்பட்டார்.
  • கள்ளர் சமுதாய முன்னேற்றத்திற் காகப் புதிதாக லேபர் கமிஷனர் நியமிக்கப் பட்டு, அவர் சில வழிமுறைகளை உருவாக்கித் தர ஏற்பாடு செய்தனர்.
  • நிலத்தில் கட்டடத்தைக் கட்டிக் கொண்டு நில வாடகை செலுத்துவோர்க்கு வாடகைதாரர் குடியிருப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இச்சட்டப்படி நில உரிமை யாளர்களால் அப்புறப்படுத்தப்படுவோம் எனும் பயம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நீங்கியது.
  • பி. அண்டு சி வேலை நிறுத்தத்தின் விளைவுகளால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு உதவிகள் செய்யப்பட்டன.
  • தஞ்சை கள்ளர் மகா சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று, அய்ந்து பள்ளிகளைத் தஞ்சை வட்டாரத்தில் திறக்க உத்தரவிடப் பட்டது.
  • ஆதிதிராவிடர்களின் முன்னேற்றத் திற்காகப் பொது மக்களின் உதவியையும், உறவையும் பலப்படுத்த அரசு வேண்டுகோள் களை அரசு ஆணையாகப் பிறப்பித்தது.
  • குடிப்பழக்கம் உள்ளவர்களின் பழக் கத்தை மாற்ற மக்களை நெறிப்படுத்த ஆணை வெளியிடுதல்.
  • ஆதி ஆந்திரர்களுக்கு சந்தை விலை யில் நிலங்களை அளித்தல்.
  • தஞ்சாவூர் கள்ளர் பள்ளிகளின் நடைமுறை செலவுகளை ஏற்றல்; சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளுதல், கடன் வசதிக்கு ஏற்பாடு செய்தல்.
  • மலபார் மாவட்டத்தில் மீனவப் பிள்ளைகளுக்குப் பள்ளிகள் திறக்கப்பட்டன.
  • சென்னை நடுக்குப்பத்தில் மீனவப் பிள்ளைகளுக்குப் பள்ளிக்கூடம் திறக்கப் பட்டது.
  • கிழக்குக் கடற்கரை ஊர்களில் ஆறு இரவுப் பள்ளிகள் திறக்கப்பட்டன. மேலும் மூன்று தொடக்கப் பள்ளிகள் நிறுவப்பட்டன.
  • உள்ளாட்சி மன்றங்களில் தகுதியான தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கிடைக்கும்போது அவர்களுக்கு நியமனங்கள் வழங்கப்பட வேண்டும் என உத்தரவு இடப்பட்டு இருந்தது.
  • மருத்துவப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் உதவி நிதி பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு வழங்கப் பட்டது.
  • அரசுப் பள்ளிகளில் வகுப்புரிமை நிலைநாட்டப்பட ஆண்டுதோறும் அறிக் கைகள் வெளியிடப்பட பொதுத்துறை கேட்டுக் கொள்ளப்பட்டது.
  • தாழ்த்தப்பட்ட மாணவர்கள், கல்வி கற்பதற்கு கல்வி நிலையங்களில் சேர்த்துக் கொள்வதற்கு ஆணைகள் பிறப்பிக்கப்பட் டன. தடைகள் ஏதாவது செய்யப்படுமானால் உடன் மாற்று ஏற்பாடு செய்யவும் உத்தர விடப்பட்டு இருந்தது.
  • சென்னை மாகாணத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட மாணவர்கள் எஸ்.எஸ். எல்.சி. தேர்வுக்குப் பணம் கட்டத் தேவையில்லை என ஆணை பிறப்பிக்கப்பட்டு இருந்தது.
  • கல்லூரிகளிலும், உயர்நிலைப் பள்ளி களிலும் படிக்கும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு அரைச் சம்பளம் கட்டினால் போதும் எனச் சலுகை வழங்கப்பட்டு இருந்தது.
  • தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு உதவித் தொகையைப் பெறுவதற்கு அவர் களின் எண்ணிக்கையை உயர்த்தியும் கூடுதல் நிதி அளித்தும் சலுகைகள் வழங்கப்பட்டன.
அரசு ஆணைகளின் தொகுப்பு:
1. பெண்களுக்கு வாக்குரிமை அரசாணை எண். 108 நாள்: 10-05-1921.
2. பஞ்சமர் என்ற சொல் நீக்கப் பெறல் - ஆதிதிராவிடர் என அழைக்கப் பெறல். அரசாணை எண். 817 நாள் 25-3-1922
3. கல்லூரிகளில் மாணவர்களைச் சேர்க்க குழுக்கள் அமைத்தல். அரசாணை எண். 536 நாள் 20-5-1922.
4. கல்வி மறுக்கப்பட்டுக் கிடந்த பார்ப் பனரல்லாத பிள்ளைகள் தொடக்கப் பள்ளி களில் சேர்க்கப்பட வேண்டும் அரசாணை எண். 849 நாள் 21-6-1923.
5. தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவர்களைக் கல்வி நிலையங்களில் மிகுதியாக சேர்க்க வேண்டும். அரசாணை எண். (அ) 205 நாள்: 11-2-1924; (ஆ) 1825 நாள்: 24-9-1924.
6. இந்து சமய அறநிலையச் சட்டம் அரசாணை எண். 29 நாள். 27-01-1925.
7. சென்னையிலுள்ள மாநிலக் கல்லூரியில் பார்ப்பனர் அல்லாத மாணவர்களைச் சேர்ப்பது குறித்த ஆணை அரசாணை எண். (அ) 636 நாள்: 2-5-1922. (ஆ) 1880 நாள் 15-9-1928.
8.வகுப்புரிமைக்காகப் பிறப்பிக்கப்பட்ட ஆணை அரசாணை எண்.744 நாள் 13.9.1928.
9. சென்னை பப்ளிக் சர்வீஸ் கமிஷனை உருவாக்கல் அரசாணை எண். 484 நாள் 18-10-1929.
மேலும் தேவதாசி ஒழிப்புச் சட்டம் (1930)

பெரும்பாலும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு நீதிக்கட்சியில் அலை அலையாக நன்மைகள் நடந்தேறியிருக்க, நீதிக்கட்சியால் பார்ப்பனர் அல்லாத உயர் ஜாதியினர் பலன் அடைந்தனர் - தாழ்த்தப்பட்டோருக்கு ஒன்றும் செய்யவில்லை என்று சொல்லலாமா தீக்கதிர்?
நீதிக்கட்சியின் இரண்டாவது அமைச்சர வையின் காலம் (1923-1926). இந்தக் கால கட்டத்தில் நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டம் அதுதான் ஒரு ஒளி முத்து!
ஒன்று அறநிலையப் பாதுகாப்பு சட்டம் ஆகும்.
ஆண்டாண்டுக் காலமாகப் பார்ப்பனர் களின் அடுப்பங்கரையாக கோயில்கள் இருந்தன. கோயில் அர்ச்சகர்களைக் கோயில் பூனைகள் என்று கூறி ஒரு நூலையே எழுதியுள்ளார் கோவை கிழார். (1945).
கோயில் கொள்ளையைக் கட்டுப்படுத்தக் கொண்டு வரப்பட்டதுதான் இந்தச் சட்டம்.
பார்ப்பனர்கள் தலையில் அல்லவா கை வைத்து விட்டனர்! விடுவார்களா? அதற்கு மேல் வாயை அகலப்படுத்த முடியாத அளவுக்கு அலறினார்கள்.
“நீதிக்கட்சியினர் பார்ப்பனர்களை மட்டும் எதிர்க்கவில்லை. கடவுளையும் எதிர்க்கக் கிளம்பி விட்டார்கள். மதத்தை அழிக்க முனைந்து விட்டார்கள். ஆண்டவனையே சட்டம் போட்டுக் கட்டுப்படுத்தும் அடாத செயலை எவரும் ஆதரிக்க மாட்டார்கள். மதத்தின் புனிதத் தன்மையைக் கெடுக்கும் இம்மசோதாவை ஜாதி, மத வித்தியாசமின்றி, கட்சிப் பாகுபாடின்றி ஒருமனதாக எதிர்க்க வேண்டும்”
இப்படி பேசியவர் யார் தெரியுமா? பார்ப்பனர் குலத் திலகம் வாயாடி சத்திய மூர்த்தி அய்யர்வாள்தான்.
சட்டசபையில் இந்த மசோதா கொண்டு வரப்பட்டபோது ஒவ்வொரு பார்ப்பன மெம்பரும் தொண்டை கிழிய கத்தினர் - நா வறண்டு போகும் அளவிற்குப் பேசித் தீர்த்தனர். சிலர் சாபமிடவும், சபிக்கவும் செய்தனர்.
சத்தியமூர்த்தி அய்யர் இட்ட கூச்சல் ஒரே காட்டுக் கூச்சல்தான். ஆங்கிலத்தில் பேசியும், கத்தியும் போதாது என்று சமஸ்கிருதத்திலும் பேசினார் -கத்தினார்!
சமஸ்கிருதத்தில் பேசியதும், கதறியதும், பலன் அளிக்கவில்லை என்று சமஸ்கிருதத் திலேயே பாடவும் செய்தனர்.
(கே. குமாரசாமி எழுதிய “திராவிடர் தலைவர் டாக்டர் நடேசனார் வாழ்வும் தொண்டும்” பக்கம் 73).

நாம் யாரும் நினைத்துப் பார்க்க முடியாத காலத்திலேயே இந்தியாவின் தென் கோடியில் இவ்வளவு சாதனைகள் நடந்துள்ளனவே என்பதற்காகத் தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த மதுரை சொக்கன்கள் தலை நிமிர்ந்து மகிழ வேண்டும்.
எடுத்த எடுப்பிலேயே காங்கிரஸ்கூட இந்தியாவுக்கான சுதந்திரம் கேட்டு விடவில்லை; ஒவ்வொரு காங்கிரஸ் மாநாட் டிலும் இங்கிலாந்து மன்னர் ஆட்சிக்குத் துதி பாடி அந்த ஆட்சியே நிலைக்க வேண்டும் என்று கடவுளைப் பிரார்த்தித்தது உண்டு.
பார்ப்பனர் ஆதிக்கத்தைவிட வெள்ளைக் காரர் மேல்  என்ற எண்ணம் நீதிக்கட்சியின ருக்கு இருந்ததுண்டு. அதே நீதிக்கட்சி முழு சுதந்திரம் என்ற நிலைப் பாட்டை பிற்காலத்தில் எடுத்ததை யெல்லாம் ஏன் வசதியாக மறைக்க வேண்டும்?
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை நீதிக்கட்சி ஆதரித்ததால் மக்களிடம் செல்வாக்கை அடுத்தடுத்த தேர்தல்களில் தோல்விப் பள்ளத்தாக்கை நோக்கிப் பயணம் செய்ததாம். கண்டுபிடித்து விட்டது ‘தீக்கதிர்’
13.2.2015 அன்று நடந்து முடிந்த தேர்தலில் (சிறீரங்கம் சட்டமன்ற இடைத் தேர்தல்) சி.பி.எம். கட்டிய பணத்தைக்கூடத் திருப்பிப் பெற முடியவில்லையே (பெற்ற வாக்குகள் 1552) அதற்கும், இது போன்ற காரணங்கள்தானா? தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கிடைக்குமா என்ற அசசத்திலும் அய்யத்திலும் இருப்பவர்கள் எல்லாம் இப்படி எழுதக் கூடாது.
நீதிக்கட்சியின் காலத்தில் நிகழ்ந்த பல்வேறு சமூகச் சீர்திருத்த சமூக நீதி நடவடிக்கைகளை கம்யூனிஸ்டுகள் அங்கீகரிக்கின்றனர் என்று இன்னொரு இடத்தில் எழுதுகிறது தீக்கதிர்.
‘பீம்சிங்’ இது என்ன குழப்பம்?’ என்று அறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய வசனம் தான் - இந்த இடத்தில் நினைவிற்கு வருகிறது.
வேலைத் திட்டம் ஒன்றை நீதிக்கட்சிக்கு அனுப்பி வைத்து அதை அவர்கள் ஏற்ற பிறகுதான். அந்தக் கட்சியின் தலைவரானார் பெரியார் என்றும் ஒப்புக் கொண்டுள்ளார் தோழர் சொக்கன்.
அப்படிச் சொன்னால் போதுமா? இந்த வேலைத் திட்டத்தில் சொல்லப்பட்டவைகளை ஏற்றுக் கொண்டதன் மூலம் நீதிக் கட்சியின் பரிமாணத்தைப் புரிந்து கொள்ளலாமே!
வேலைத் திட்டமாவது
1. அரசாங்க உத்தியோக சம்பளங்கள் மக்களின் பரிசுத்த தன்மையைக் கெடுக்க கூடியதாகவும், பேராசையை உண்டாக்கக் கூடியதாகவும், இந்தியப் பொருளாதார நிலைமைக்கு மிக மிக தாங்க முடியாததாகவும் இருப்பதால் அவைகளைக் குறைத்து உத்தியோகஸ்தர்களுடைய வாழ்க்கையின் அவசிய அளவுக்கு ஏற்றதாகவும், மீத்துப் பெருக்கி வைப்பதற்கு லாயக்கில்லாததாகவும் இருக்கும்படி செய்ய வேண்டும்.
2. பொதுஜன தேவைக்கும், சௌகரியத் துக்கும் நன்மைக்கும் அவசியமென்று உற்பத்தி செய்யப்படும் சாமான்களின் தொழிற் சாலைகள், இயந்திரசாலைகள், போக்குவரத்து சாதனங்கள் முதலியவை அரசாங்கத்தாலேயே நடைபெறும்படி செய்ய வேண்டும்.
3. ஆகார சாமான்கள் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கும், அவற்றை வாங்கி உபயோகிக்கும் பொது ஜனங்களுக்கும் மத்தியில் தரகர்கள், லேவாதேவிக்காரர்கள் இல்லாதபடி கூட்டுறவு ஸ்தாபனங்கள் ஏற்படுத்தி, அதன் மூலம் விவசாயிகளின் கஷ்டத்தையும் சாமான் வாங்குபவர்களின் நஷ்டத்தையும் ஒழிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
4. விவசாயிகளுக்கு இன்று உள்ள கடன்களை ஏதாவது ஒரு வழியில் தீர்ப் பதுடன், இனிமேல் அவர்களுக்குக் கடன் தொல்லைகள் ஏற்படாமல் இருக்கும்படியும் ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.
5. குறிப்பிட்ட ஒரு காலத்திற்குள் குறிப்பிட்ட ஒரு அளவு கல்வியாவது எல்லா மக்களுக்கும் ஏற்படும்படியாகவும், ஒரு அளவுக்காவது மதுபானத்தின் கெடுதி ஒழி யும்படியாகவும், ஒரு அளவுக்கு உத்தியோ கங்கள் எல்லா ஜாதி, மதக்காரர்களுக்கும், சரிசமமாக இருக்கும்படிக்கும் உடனே ஏற் பாடுகள் செய்வதுடன், இவை நடந்து வரு கின்றதா என்பதையும் அடிக்கடி கவனித்து தக்கது செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும்.
6. மதங்கள் என்பவை எல்லாம் அவரவர்களுடைய தனி எண்ணமாகவும், தனி ஸ்தாபனங்களாகவுமே இருக்கும்படி செய் வதுடன், அரசியலில், அரசியல் நிர்வாகத்தில் அவை எவ்வித சம்பந்தமும், குறிப்பும் பெறாமல் இருக்க வேண்டும். ஜாதிக்கென்றோ மதத்திற்கென்றோ எவ்வித சலுகையோ உயர்வு தாழ்வு அந்தஸ்தோ அவற்றிற்காக அரசாங் கத்திலிருந்து தனிப்பட்ட முறைகளைக் கையாளுவதோ ஏதாவது பொருள் செல விடுவதோ ஆகியவை கண்டிப்பாய் இருக்கக் கூடாது.
7. கூடியவரை ஒரு குறிப்பிட்ட ரொக்க வரும்படிக்காரருக்கோ, அல்லது தானே விவசாயம் செய்யும் விவசாயிக்கோ வரிப் பளுவே இல்லாமலும் மனித வாழ்க்கைக்குச் சராசரி தேவையான அளவுக்கு மேல் வரும்படி உள்ளவர்களுக்கும், அன்னியரால் விவசாயம் செய்யப்படுவதன் மூலம் பயனடைபவர்களுக் கும் வருமான வரி முறைபோல் நிலவரி விகிதங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும்.
8. லோக்கல் போர்டு, முனிசிபாலிட்டி, கோவாப்ரேட்டிவ் இலாகா ஆகியவைகளுக்கு இன்னமும் அதிகமான அதிகாரங்கள் கொடுக்கப்பட்டு, இவற்றின் மூலம் மேலே குறிப்பிட்ட பல காரியங்கள் நிர்வாகம் செய்ய வசதிகள் செய்து தக்க பொறுப்பும், நாணயமும் உள்ள சம்பள அதிகாரிகளைக் கொண்டு அவைகளை நிர்வாகம் செய்யச் செய்ய வேண்டும்.
9. விவகாரங்களையும், சட்ட சிக்கல் களையும் குறைப்பதுடன் சாவு வரி விதிக்கப்பட வேண்டும்.
10. மேலே கண்ட இந்தக் காரியங்கள் நடைபெறச் செய்வதில் நாமே சட்டங்கள் செய்து அச்சட்டங்களினால் அமுலில் கொண்டு வரக் கூடியவைகளை சட்ட சபைகள் மூலமும், அந்தப்படி சட்டங்கள் செய்து கொள்ள அதிகாரங்கள் இல்லாதவைகளை, கிளர்ச்சி செய்து அதிகாரங்கள் பெறவும் ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.
(‘பகுத்தறிவு’ 23.9.1934)

நீதிக்கட்சியின் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் (14.11.1935 - சென்னை) இந்த வேலைத் திட் டங்களை விளக்கிப் பேசுமாறு பெரியாரை முன்மொழிந்து கேட்டுக் கொண்டவர் யார் தெரியுமா? பொப்பிலி ராஜா! தலைமை வகித்தவர் யார் தெரியுமா? திவான்பகதூர் அப்பாதுரை பிள்ளை;
இந்தக் கூட்டத்தில் செல்வந்தர்கள் உண்டு, மிட்டா மிராசுகள் உண்டு. அப்படிப்பட்ட கூட்டத்தில் தான் இத்தகைய பொதுவுடைமைக் கோட் பாடுகளை உள்ளடக்கிய வேலைத் திட்டங்கள் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். இன்றைக்கு 80 ஆண்டுகளுக்குமுன் இது நடந்திருக்கிறது என்பதையும் கவனிக்கத் தவறக் கூடாது.
பெரும் பணக்காரர்கள் இருந்ததாலேயே அவர்களுக்காகத் தான் அந்தக் கட்சி உண்டாக்கப்பட்டது என்று வாய் புளித்ததோ மாங்காய்ப் புளித்ததோ என்று பேசக் கூடாது.
கம்யூனிஸ்டுக் கட்சியில் மோகன் குமார மங்கலங்கள் இருந்தார்கள் என்பதற்காக, ஜோதிபாசுவின் மகன் தொழில் அதிபர் என்பதாலேயே கம்யூனிஸ்டுக் கட்சிமீது வேறு வகையான முத்திரையைக் குத்தலாமா?
தந்தை பெரியார் அவர்கள் நீதிக்கட்சித் தலைவர்கள் பொதுத் தொண்டில் தங்கள் சொத்துக்களை அழித்திருக்கிறார்கள் என்று குறிப்பிடுகிறார். எதையும் நிதானத்துடன் பேசுவதும் - எழுதுவும் நன்மை பயக்கும்.
கடவுள் நம்பிக்கையைப் பற்றியும் சிலாகித் துள்ளது ‘தீக்கதிர்’.
கம்யூனிஸ்ட்க் கட்சி மதம், கடவுள் நம்பிக்கை போன்ற விசயங்களில் திராவிடர் கழகத்தின் அணுகுமுறையல்ல மார்க்சிய அணுகுமுறை; மதம் ஒரு அபின் என்று கூறிய மார்க்ஸ் அது இதயமில்லாத உலகத்தில் இதயமாக இருக்கிறது என்றும் ஒடுக்கப்பட்ட வர்களின் பெரு மூச்சாக இருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கடவுள் நம்பிக்கை உள்ளவர் கட்சியில் சேரத் தடையில்லை. ஆனால் வரலாற்றுப் பொருள் முதல் வாதத்தைக் கற்றறியும் போது கடவுள் காணாமல் போய் விடுவார். இயங்கியல் அடிப்படையிலான அணுகுமுறைதான் மார்க்சிய நாத்திகம் அது உறுதியானது என்று “டயலிட்டிக் மெட்டீரி யலிசம்” பேசுகிறது தீக்கதிர் - சபாஷ், வரவேற்கிறோம்.
கடல் வற்றி மீன் கருவாடு ஆகும் போது கொத்தலாம் என்று காத்திருக்குமாம் கொக்கு.. அதுபோன்றதே இவர்களின் வாதம்.
கட்சியில் உள்ளவர்கள் வரலாற்றுப் பொருள் முதல் வாதத்தை எப்பொழுது கற்று (எத்தனை ஆண்டுகள் தேவைப்படுமோ!) எப்பொழுது கடவுளைக் காணாமற் போகச் செய்வார்களாம்?
கேரள முதல் அமைச்சர் ஈ.கே. நாயனாரும் மூத்த பொதுவுடைமை வாதி சோம்நாத் சட்டர்ஜியும் (பேரனுக்குப் பூணூல் கல்யாணம் நடத்தியவர்) செத்துப் போன கோயில் குரங்குக்குச் செவ்வாடை போர்த்தி புரட்சி வணக்கம் செய்த கேரளத்தைச் சேர்ந்த சி.பி.எம். அமைச்சர்களும்கூட இன்னும் பொருள் முதல் வாதத்தைக் கற்கவில்லையா?
திருவனந்தபுரத்தில் சிருங்கேரி சங்கராச் சாரியார் அளித்த பேட்டி ஒன்றில் (3.1.1980) ஏராளமான கம்யூனிஸ்டுகள் என்னுடைய சீடர்களாக இருக்கிறார்கள். பூஜைகளை செய்து மந்திரங்களை ஓதுகிறார்கள் (‘விடுதலை’ 4.1.1980) என்று சொன்னாரே!
திராவிடர் கழகத்தின் அணுகுமுறை கம்யூனிஸ்டுகளுக்குக் கிடையாதாம். திராவிடர் கழகத்தின் அணுகுமுறையை ஏற்ற கருஞ் சட்டைக்காரன் ஒவ்வொருவனும் கடவுள் மறுப்பாளன்தான்; மத மறுப்பாளன் தான். கம்யூனிஸ்டு அணுகுமுறையைப் பின்பற்றுபவர்களை அவ்வாறு கூற முடியவில்லையே - ஏன்?
இதிலிருந்தே தெரிந்து கொள்ள முடிய வில்லையா - எந்த அணுகுமுறை வெற்றி பெற்ற ஒன்று என்று?
சாதாரண தொண்டர்கள் ஒரு புறம் இருக்கட்டும்; தீபாவளிக்குச் சிறப்பு மலர் வெளியிடும் தீக்கதிர்கூட பொருள் முதல் வாதத்தைக் கற்றுத் தேறவில்லையா?
இதில் என்ன விலா நோகும் வெடிச் சிரிப்பு நகைச்சுவை தெரியுமா? அப்படி மலர் போட்டதற்கு வக்காலத்து வாங்கியதுதான்!
“ஆதி மனிதன் இருள் பயத்திலிருந்து விடுதலை பெறவும் உணவை சமைக்க உதவும் ஆதார சக்தியாக விளங்கிய இயற்கை சக்தியாம் தீயைப் போற்றும் விழாவே தீப விழாவாக நடைபெற்று வருகிறது.”
(‘தீக்கதிர்’ 20.11.2010 பக்.7).
எப்படி இருக்கிறது - சங்கராச்சாரியார் கூட இப்படியொரு வெண்டைக்காய், விளக்கெண் ணெய் விளக்கத்தைக் கூறவில்லை.
தீபாவளி என்பது இந்து மதத்தின் மூடக் கதை; அதற்கென்று புராணம் உண்டு. புராணத்திற்குப் புனுகு பூசும் வேலைதான்  ஒரு மார்க்ஸிட் நாளேட்டின் வேலையா? இதைவிட மார்க்சைக் கொச்சைப்படுத்தும் பாங்கு வேறு உண்டா?
பார்ப்பனீயத்துக்கு ‘கில்ட்டு’ அடிப்பது மார்க்சியமா?
பிரபல நாவலாசிரியரும், கம்யூனிஸ்டு மான அகேலே என்பவரால் எழுதப்பட்ட நூல் “போயாபேட் பபூல்கா” என்பதாகும். பபூல் என்பது காய்க்காத முள்ளு மரமாகும். காய்க்காத முள்ளு மரத்தைக் காய்க்கும் என்று நட்டு வளர்ப்பது போன்றதுதான் மூட நம்பிக்கை என்பது அந்த நாவலின் சாராம்சம். அது இந்து மதத்தை விமர்சிக்கிறது என்று காரணம் காட்டி பிகார் மாநில அரசு தடை செய்தது என்றால் அதனைப் புரிந்து கொள்ள முடியும்!
ஜோதிபாசு தலைமையிலான மேற்கு வங்க கம்யூனிஸ்டுக் கட்சி ஆட்சிக்கு என்ன வந்ததாம்? அதுவும் அல்லவா தடை செய்தது; தடை செய்ததோடு மட்டுமல்ல; நூல் ஆசிரியரைக் கட்சியிலிருந்தும், நீக்கிப் பெரும் ‘புரட்சி’ செய்து விட்டதே!
(ஆதாரம்: பிரபல பகுத்தறிவாளரான ஜோசப் எடமருகு எழுதிய ரணரேகை -1.3.1984)
இன்றைக்கு அதிமுக ஒரு பஜனை மடமாகவே மாற்றப்பட்டு விட்டது. பூஜை புனஷ்காரங்கள் தூள் பறக்கின்றன. கோவில் வழியாக கோட்டை நோக்கி செல்வதே நோக்கம் என்றாகி விட்டது. இந்தத் தவறுக்கு கருப்பு மெழுகு வர்த்திகள் வருத்தப்படு வார்களா? அல்லது மாட்டார்களா என்று தெரியவில்லை என்று குறைபட்டு எழுதுவது ‘தீக்கதிர்’.
வருத்தம் என்ன? கண்டிக்கவே செய் கிறோம். அண்ணா பெயரால் கட்சி எதற்கு? கட்சிக் கொடியில் அண்ணா எதற்கு? என்று கேட்டதைவிட வேறு என்ன அதிகமாக எழுத முடியும் - கேட்கவும் தான் முடியும்?
அதே நேரத்தில் அதிமுகவைப் பற்றி சி.பி.எம்.மின் நிலைப்பாடு என்ன?
“வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெறும் சாத்தியம் பிரகாசமாக உள்ளது. தேசிய அரசியலில் அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக முதலமைச்சருமான ஜெயலலிதாவுக்கு எழுச்சிகரமான எதிர்காலம் உள்ளது என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
தேசிய அரசியலில் அவரது பங்கு மகத்தானதாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.” (மாலை முரசு 2.1.2014) என்று கூறியவர் சாதாரண மானவர் அல்லர்; சி.பி.எம்.மின் அகில இந்திய பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத்.
தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் அவர்கள் “நமக்கு நாமே” - சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதுபற்றி ‘தீக்கதிர்’ என்ன எழுதுகிறது?
அந்தக் காலத்தில் ராஜசூய யாகத்திற்கு முன்பு வலம் வரும் அசுவமேத யாகக் குதிரையைப் போல சட்டமன்ற தேர்தலை எதிர் நோக்கி ‘நமக்கு நாமே பயணம் மேற்கொண்டுள்ள தளபதி பற்றியும் கேலி செய்துள்ளது தீக்கதிர்.
ஓர் அரசியல்வாதி மக்களை நேர்முக மாகச் சந்திப்பது என்பதுகூட மார்க்சிய பார்வையில் குற்றம் என்பதை முதன் முத லாக இப்பொழுதுதான் கேள்விப்படுகிறோம்.
மக்களுக்குத் தொடர்பு இல்லாத காரணத் தால்தானோ என்னவோ சில  கட்சிகள் மக்களிடமிருந்து அந்நியப்பட்டுப் போகின்றன.
தி.மு.க. பொருளாளரின் பயணம் மிகப் பெரிய வெற்றியை ஈட்டியுள்ளது என்பதை - இது போன்றவர்களின் வயிற்றெரிச்சல் விமர்சனங்கள் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது.
ரசம் போன கண்ணாடி என்று நம்மைக் கேலி செய்கிறது ‘தீக்கதிர்’; ரசம் போன கண்ணாடியில் முகம் பார்க்க முடியாமல் இருக்கலாம்! தேவைப்பட்டால் அது ஆயுதமாகக் கூடப் பயன்படுமே! அதே நேரத்தில் ரசம் உள்ள கண்ணாடியை, ‘விடுதலை’யின் விமர்சனம் வழி ஒரு முறை ‘தீக்கதிர்’ தனக்குத்தானே தன் முகத்தைப் பார்த்துக் கொள்வது நல்லது!
வணக்கம் காம்ரேட்!


-------------------------கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்கள் 1-11-2015 “விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை