Search This Blog

28.12.18

எழுத்துரு அளவு Larger Font Smaller Font
தந்தை பெரியார்
"கட்டாய இந்தி ஒழிந்ததுபற்றி நாம் மகிழ்ச்சி கொண் டாடுகிற நேரத்திலேயே மற்றொரு துக்ககரமான சம்பவம் அதாவது வகுப்புவாரி உரிமை இந்திய அரசியல் சட்டத் திற்கு விரோதமானது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு ஏற்பட்டுவிட்டதால், மற்றொரு கிளர்ச்சி துவக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டது. இயற்கை நமக்கு ஓய்வு தருவதில்லை.
வகுப்புவாரி உரிமைக்கு ஆகவேதான் ஜஸ்டிஸ் கட்சி ஏற்பட்டது. அதாவது பார்ப்பனரல்லாத மக்களின் நலனுக் காக, அவர்களுக்கும் உத்தியோகத் துறையிலும், கல்வித் துறையிலும் அவர்களுக்கான விகிதாசாரம் கொடுத்து நியாயம் வழங்கப்படவேண்டும் என்பதற்காகத்தான் ஜஸ்டிஸ் கட்சி ஏற்பட்டது. நானும் காங்கிரசில் இருந்த காலம் முதற்கொண்டே வகுப்புவாரி உரிமைக்கு ஆகவே பாடு பட்டு, அதன் காரணமாகவே, அதாவது வகுப்புவாரி பிரதிநிதித்துவத் தீர்மானத்தை நான் காஞ்சிபுரம் காங்கிரஸ் மாநாட்டிற்குக் கொண்டு போனபோது, அந்தத் தீர்மான மானது காங்கிரசின் கொள்கைகளுக்கு விரோதமாய் இருக்கிறது என்று கூறப்பட்டு என்னுடைய தீர்மானம் தள் ளப்பட்டு விட்டதால் நான் காங்கிரசிலிருந்து அதற்காகவே விலகினேன்.
பின்னர் சுயேச்சை அமைச்சர்கள் பதவிக்கு வந்தபோது வகுப்புவாரி உரிமைத் திட்டம் சட்டமாக்கப்பட்டு, எவ் வளவோ எதிர்ப்புகளுக்கு இடையில் அமல் நடத்தப்பட்டு வந்தது. அந்த சட்டமும் சரியானபடி, மக்களின் விகிதாசாரக் கணக்குப்படி அவர்களுக்குப் பங்கு அளித்தது என்று கூற முடியாது. ஆனாலும், நம்மவர்கள் - பல தொல்லைகள், சங்கடங்கள் இருந்தபோதிலும், வகுப்புவாரி உரிமையின் பயனாய் ஓரளவுக்கு முன்னுக்கு வந்தார்கள். குறிப்பாக போலீஸ் இலாகாவிலும், டிப்டி கலெக்டர்களிலும் நம்ம வர்கள் கணிசமான அளவில் முன்னேறினார்கள். நம்மவர் களுக்கு மேல் உத்யோகஸ்தர்களாய் பார்ப்பன அதிகாரிகள் இருந்ததால் அவர்கள் நம் உத்தியோகஸ்தர்கள் மேலுக்குவர முடியாமல் அழுத்தி தங்கள் வர்க்கத்தாருக்கே சலுகை காட்டி, அவர்களின் கொள்ளைக்கும் வழி செய்து கொடுத்து வந்தார்கள்.
நமது முன்னாள் முதல் மந்திரி ஓ.பி. ராமசாமி ரெட்டியார் அவர்கள் காலத்திலேதான்  வகுப்பு வாரி உரிமையின்படி, கல்லூரிகளில் மாணவர் களைச் சேர்ப்பது என்ற முறை நடைமுறைக்கு வந்தது.
அதிலும், அடுத்த ஆண்டில் அப்போது கல்வி மந்திரியாய் இருந்த தோழர் அவினாசிலிங்கம் அவர்கள் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கப்படும்போது தகுதி, திறமை என்பவை களின் பேரால் 20, 30 சதவிகிதம் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர் என்றும், அந்தப்படி 'தகுதி', 'திறமை' என்ற அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்பட்ட மாணவர்களுக்குப் போக மீதி இருக்கும் இடத்திற்குத்தான் வகுப்புவாரி பிரதிநிதித்துவ முறை கையாளப்படும் என்றும் ஆக்கி வைத்தார்கள்.
இந்தப்படியாக சரியானபடி விகிதாசாரம் கொடுக்கப்படாமலும், பார்ப்பனர்களுக்கு அவர்களின் எண்ணிக்கைக்கு மேற்பட்டு 8, 10 மடங்கு என்று கொடுக்கப்பட்டு, நமக்கு மிகக் குறைந்த அளவுக்கே பங்கு கொடுக்கப்பட்ட வகுப்புவாரி உத்தரவும் இனிமேல் செல்லுபடி யாகாது என்று தீர்ப்பு கூறப்பட்டு விட்டது.
ஆகவே, இனிமேல் இதுவரை அனுஷ்டிக் கப்பட்டு வந்த வகுப்புவாரி திட்டமானது 1950இல் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பால் ஒழிக் கப்பட்டுவிட்டது. நாமும் இந்த வகுப்புவாரி திட்டம் போதாததாய் இருப்பதால், இது ஒழிக்கப்படவேண்டும் என்கிறோம். ஏன்? இது சரியானபடி மக்களின் எண்ணிக்கைக்குத் தகுந்தபடி விகிதாசாரத்தை பிரதிபலிக்க வில்லை, எனவே, இந்தத் திட்டம் ஒழிக்கப்பட்டு அந்த மக்களின் எண்ணிக்கைக்குத் தகுந்த ரீதியில், அதாவது இந்த நாட்டு ஜனசமுதா யத்தில் 100-க்கு 3 பேராக இருக்கும் பார்ப் பனர்களுக்கு 3 ஸ்தானமும், அதேபோல் மற்ற வகுப்பார்களின் எண்ணிக்கைக்கு ஏற்ற மாதிரியில் அவரவர்களுக்கு விகிதாசாரப்படி பங்கு வழங்கும் புதிய திட்டம் ஏற்படுத்த வேண்டும் என்றும் கூறுகிறோம்.
இன்றைய உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புப்படி இனிமேல் தகுதி, திறமை என்பவைகளின் பேரால்தான் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். இப்போது கல்லூரிகளில் சேர்வதற்குத் தகுதி, திறமையாக வைத்திருப்பது மார்க் ஒன்றுதான் ஆகும். இந்த மார்க்கை பார்ப்பனப் பிள்ளைகள்தான் அதிகமாக வாங்கத் தக்கபடி கல்வியில் சூழ்ச்சி இருக்கிறது. அதிக மார்க் எப்படி வாங்குவது என்ற வழியைப் பார்ப்பனர்கள் நன்றாக அறிந்திருக்கிறார்கள் என்பதோடு, மார்க் அவர்கள் காலடியிலேயே போய் விழுகிற மாதிரியில் இன்று கல்வித் துறையில் அவர்களுக்கு வாய்க்கால் வெட்டிவிடப் பட்டிருக்கிறது.
இரண்டாவதாக, அவர்கள் பரம்பரையாக விஷயங் களின் கருத்தைப்பற்றி கவலை இல்லாமல் சொற்களை உருப்போட்டு படிக்கப்பட்ட பரம்பரையில் உதித்தவர்கள். ஆகவே, படித்ததை நெட்டுருப் பண்ணி பரீட்சையில் வாந்தி எடுப்பது அவர்களுக்கு சுலபமான காரியமாகும்.
நம்மவர்களுக்கு இரண்டுமே கிடையாது. கருத்தை உட்கொண்டு அறிவு பெறுவது வழக்கம். அந்தப்படி இருக்கும்போது நம் பிள்ளைகள் எப்படி இன்று கல்லூரியில் சேருவதற்கு 'தர்மாமீட்டராய்' இருக்கும் தகுதியையும், திறமையையும் பெற முடியும்? எனவே, இவர்கள் சொல்லுகிற தகுதியையும், திறமையையும் பெற்று நம்முடைய பிள்ளைகள் படிக்க முடியாது. படிக்காத காரணத்தினால் உத்தியோகமும் வகிக்க முடியாது. பழைய வேலைக்குத்தான், அதாவது மனு (அ) தர்ம காலத்துக்குத்தான், பார்ப்பானுக்கு சேவை - பூஜை செய்து அவன் காலைக் கழுவி தண்ணீர் குடிப்பதால் நற்பதவி கிட்டும் என்ற தன்மைக்குப் போகவேண்டும். இதைத்தான் பார்ப்பனர்களும் விரும்புகிறார்கள்.
ஏனென்றால், நாமும் படித்து உத்தி யோகம் வகித்து பார்ப்பனர்களோடு சரிசம மாகப் போட்டியிட தலைப்பட்டால், 'சூத் திரர்கள்' செய்யவேண்டிய வேலைகள் என்று தர்ம சாஸ்திரத்தில் விதிக்கப்பட்டு 'ரிசர்வ்' செய்யப்பட்டிருக்கிறதே, ஏர் உழுவது, துணி வெளுப்பது, சிரைப்பது, செருப்புத் தைப்பது, வண்டி இழுப்பது, மூட்டை தூக்குவது, கக்கூஸ் எடுப்பது போன்ற காரியங்களுக்கு ஆட்கள் கிடைக்கமாட்டார்கள். பார்ப்பனர் களுக்கும் முகத்தில் பிறந்தவர்கள் என்ற மரியாதையோ, உயர்ந்த ஜாதிக்காரர்கள் என்ற பெருமையும் இல்லாமல் அவர்களும் சாதாரண மனிதர்களாவதுடன், எல்லா வேலை களையும் அவர்களும் சேர்ந்து செய்யவேண்டிய நிலைமை வந்துவிடுமே என்பதற்காகத்தான் அடிப்படையிலேயே, அதாவது நம் மக்கள் படித்து, மான உணர்ச்சியோ, மனிதத் தன் மையோ அடைந்துவிடக் கூடாது என்பதற்காக நம்மை படிக்கவொட்டாமலேயே அடிப்பது என்ற முயற்சி செய்து தற்காலிகமான வெற்றியும் பெற்றுவிட்டார்கள்.
இந்தக் காரியத்தில் நாம் சற்று அலட்சிய மாகவோ, அஜாக்கிரதையாகவோ, கவலை யற்றோ இருந்தோமேயானால், நிச்சயமாய் இன்று பார்ப்பனர்கள் பெற்றிருக்கிற இந்த தற்காலிக வெற்றியானது சாசுவத வெற்றியாகி நாமெல்லாம் என்றும் மீளா அடிமையில், படுகுழியிலேதான் அழுந்திக் கிடக்க நேரிடும்.
எனவே, இதை இப்படியே விட்டுவிடாமல் நம்முடைய இன நலத்தைக் கருதி, நம்முடைய பிற்கால சந்ததிகளின் நன்மையைக் கருதி, நம்முடைய பிள்ளைகள் மாடு மேய்ப்பதற்கே தகுதியுடையவர்களாக ஆகாமல், மனிதத் தன்மை யுடையவர்களாக வாழவேண்டும் என்பதை மனதில் கொண்டு இதிலே நாம் பெருத்த கிளர்ச்சி செய்யவேண்டும்.
இந்தக் காரியத்திலே ஏமாந்துவிட்டுவிட்டோமானால், நம்முடைய வாழ்வு மனுக்காலத் தன்மைக்குத்தான் போய்விடும். எனவே, இதில் முழு மூச்சோடு 'இரண்டில் ஒன்று பார்த்துவிடுவது' என்ற முடிவோடு நீங்கள் இருக்கவேண்டும்.
இந்தக் காரியத்தில் கிளர்ச்சி துவக்குவதற்காக அடுத்த மாதத்தில் சென்னையிலாவது, திருச்சியிலாவது ஒரு பொது மாநாடு கூட்ட இருக்கிறேன். அதற்காக முன்னேற்பாடு கூட்டம் ஒன்று அடுத்தவாரம் கூட்டுவேன். மாநாட்டில் இனிமேல் என்ன நடவடிக்கை எடுத்துக்கொள்வது என்பதுபற்றி யோசித்துக் கூறுகிறேன். அதற்குப் பின்னர் நாம் பெருத்த முறையில் கிளர்ச்சி செய்யவேண்டும். அத்தகைய கிளர்ச்சிக்கு நீங்கள் அனைவரும் ஆதரவு தரவேண்டும் என்று கேட்டுக்கொள்வதோடு, பெருவாரியாக மக்கள் அனைவரும் வரப் போகும் வகுப்புரிமைக் கிளர்ச்சியிலே பங்குகொண்டு, நம் உரிமைக்காகப் போராட வேண்டும்".
(24.8.1950 அன்று ஈரோட்டில் நடைபெற்ற
பொதுக் கூட்டத்தில் பெரியார் ஆற்றிய உரை)


(உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு தொகுதி - 3)
எழுத்துரு அளவு Larger Font Smaller Font
எனக்கு (நான் பிறந்து) நாளது செப்டம்பர் மாதம் 17-ஆம் தேதியோடு, 93 ஆண்டு முடிவ டைந்து, 94-ஆம் ஆண்டு முதல் நாள் தோன்றி விட்டது.
93 ஆண்டு என்றால், நான் பிறந்து, மாதங்களில் 1116 மாதங்கள், நாட்களில் 34,045 நாட்கள், பிறை களில் (அமாவாசைகளும்) 1,635 ஏற்பட்டு மறைந்து விட்டன. இனிமேலும் எத்தனை காலத்துக்கு வாழ்ந்தாலும், வாழ்வில் தேய்மானம்தான் காண முடியுமே ஒழிய வளர்ச்சி காண்பது என்பது (இயற்கையில்) முடியாத காரியமேயாகும்.
நினைத்தேன்- -& சொன்னேன் -& நடத்திக் காட்டினேன்
என் வாழ்நாளில் நான், மற்றவர் (அனேகர்) கடவுள், மதம், சாஸ்திரம், முன்னோர்கள் கருத்து என்பவைகளில், யாரும் நினைக்காததும், நினைத் தாலும் வெளியில் சொல்ல பயப்படுவதும், துணிந்து சொன்னாலும் செய்கையில் நடவாததும் நடத்திக்காட்ட முடியாததுமான காரியத்தை, எளிதாய் நினைத்து, வெளியில் எடுத்துச் சொல்லி (பிரசாரம் செய்து) காரியத்திலும் நடந்து வந்த தோடு, ஓரளவுக்கு மற்றவர்களுக்கும் தெரியும்படி-விளங்கும்படி, ஓரளவுக்கு நடத்திக் காட்டியும் வந்திருக்கிறேன்,
இந்த நிலை உலகெல்லாம் பரவவேண்டும் என்ற எண்ணம் கொண்டு அதற்காக வாழ்கிறேன், என்ற எண்ணத்தில் இருந்து வருகிறேன். அப்படிப் பட்ட காரியம் (எண்ணம்) என்னவென்றால், தெய்வம் இல்லை, தெய்வசக்தி என்பதாக எதுவும் இல்லை, மனிதத்தன்மைக்கு மேற்பட்ட தெய்வ சக்தி - தெய்வீகத் தன்மை என்பதாக எதுவுமில்லை; அப்படிப்பட்ட தெய்வீகத் தனம் கொண்டவர்கள் என்பதாக யாருமே இல்லை ; அப்படிப்பட்ட காரியம் என்பதாகவும் எதுவுமே இல்லை என்றும் திண்ணமாய்க் கருதி, உறுதியான பணியாற்றியும் வந்திருக்கிறேன் - வருகிறேன்.
இந்த எனது நிலையால், எனது 93 ஆண்டு வாழ்நாளில் எனக்கு யாதொரு குறைவும், சங்கடமும், மனக்குறைவோ, அதிருப்தியோகூட ஏற்பட்டதேயில்லை. மேற்கண்ட எல்லா காரியங் களிலும், மற்றவர்கள் எளிதில் பெற முடியாத அநேக ஏற்றங்களை சாதாரணமாகப் பெற்றிருக் கிறேன்; மக்களால் நல்ல அளவுக்கு மதிக்கப்பட்டும், பாராட்டப்பட்டும், விரும்பப்பட்டும், போற்றப்பட்டும் வந்திருக்கிறேன். இதனால் உலகுக்கு-மக்க ளுக்கு யாதொரு கெடுதியும் ஏற்பட்டதில்லை என்ப தோடு நாட்டுக்கும், மக்களுக்கும், பிற்படுத் தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் யாவருக்குமே நல்ல வளர்ச்சியும், முன்னேற்றமும் ஏற்பட்டு வருகின்றன என்றே சொல்லலாம். நோயும் சாவும் மட்டும் ஏராளம் நமது கருத்து வெளியீடும், பிரசாரமும் துவக்கப்பட்ட காலத்தில்,
நமது மக்களின் சராசரி ஆயுள் (வாழ்நாள்) பத்து ஆண் டே யாகும். கல்வியில் நமது மக்கள் 100க்கு 8 பேர், 10பேர் என எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள் ஆவார்கள். ஏராளமான நோய் நலிவுகள்; அவற்றுள் பரிகாரம், சவுக்கியம் செய்ய முடியாத நோய்கள் அதிகம். காலரா (வாந்தி பேதி) வந்தால் 100க்கு 90 பேர் சாவார்கள்; பிளேக் வந்தால் 100க்கு 100ம் சாவார்கள். இருமல் (க்ஷயம்) வந்தால் 100க்கு 80 பேர் சாவார்கள். அம்மை (வைசூரி) வந்தால் 100க்கு 50 பேர்களுக்குமேல் சாவார்கள். தொத்து நோய்களும் பல- குழந்தைச் சாவுகளும் ஏராளம். கர்ப்பஸ்திரீகள் சாவுகளும் ஏராளம் இருந்தன. இதற்கு ஏற்ப ஏழ்மையும் கீழ்த்தரமான வாழ்க்கை நிலையும் இருந்து வந்தன,
அரசியலில் அந்நிய ஆதிக்கம், பார்ப்பன ஆதிக்கம் தலைவிரித்தாடின. அது போலவே உத்தியோகத் துறையிலும் பார்ப்பன மயமும், முன்னேற்ற வகுப்பார் ஆதிக்கமும் இருந்து வந்தன. முதலாளிகள் ஆதிக்கமும், எஜமான் - அடிமைத் தன்மையும், இயற்கை என்று சொல்லும் தன்மையில் தாண்டவமாடின. செல்வநிலையோ, ஒரு லட்சம் என்பதுதான் உயர்ந்த நிலை. 10 லட்சம் என்பது மிக மிக உயர்ந்த நிலையாய் இருந்தது. மற்றும் எவ்வளவோ கீழ் நிலைக்கு ஆளாகியி ருந்தது மாத்திரமல்லாமல், அந்நிலைபற்றி வெட்கப் படாமலும், கவலைப்படாமலும் வாழ்ந்து வந்தோம்.
"எல்லாம் கடவுள் செயல்; நம்மால் ஆவதில்லை"
இப்படிப்பட்ட நிலையில், இந்த நிலைபற்றி யாருமே கவலைப்படாமல்-இவற்றின் விளைவு பற்றி யாருமே கவலைப்படாமல், "எல்லாம் கடவுள் செயல். நம்மாலாவது ஒன்றுமே இல்லை" என்று கருதி, நிம்மதியுடன் மக்கள் இருந்த காலத்தில், நான் ஒருவன் மாத்திரமே தீவிரமாய் சிந்தித்து, இந்த நிலைக்குக் காரணம் நமது முட்டாள்தனமும், இதுவரை சிந்திக்காததுமேதான் என்று கருதி, துணிந்து கடவுளையும், மதத்தையும், சாஸ்திரங்களையும், முன்னோர் கூற்றையும் அழித்து, ஒழித்துக்கட்டி, மக்களுக்கு புது எண்ணங்களை - அறிவை உண்டாக்க வேண்டும் என்று பாடுபட்டு வந்ததே இம்மாற்றங் களுக்கு வழியேற்படக் காரணமாயிற்று.
கடவுள், மதம், சாஸ்திரம், முன்னோர் கூற்று ஆகியவைகளை எதிர்க்கவும் அழிக்கவும், ஒழிக் கப்படவும் துணிவு எனக்கு எப்போது, ஏன் வந்தது; எப்படி வந்தது என்றால் மேற்கண்ட அவை எல்லாம் மனித சமுதாயத்தின் காட்டுமிராண்டிக் காலமான சுமார் 2000-3000 ஆண்டுகளுக்கு முந்தின மிருகப்பிராயத்தில் ஏற்பட்டவைகளே. அக்காலம் அறிவில்லாத காலம் என்பது மாத்திரம் அல்லாமல்; தாய்-மகன், தந்தை-மகள், அண்ணன்  - தங்கை என்பவைகளான முறை பேதங்கள் இல்லாத காலம். அவை மாத்திரமா ? பகுத்தறிவு, சிந்தனை அற்ற காலம் ; வளர்ச்சி என்பதாக ஒரு தன்மை இருக்கிறது என்பதே தெரியாத காலம்.
சாதாரணமாகக் கந்த புராணம், வாயு புராணம், பாரத புராணம், இராமயண புராணம் முதலிய கடவுள் சம்பந்தமான, மதசம்பந்தமான, சாஸ்திர சம்பந்தமான சாஸ்திர புராண இதிகாசங்களையும், சிவ புராணம், விஷ்ணு புராணம், பாகவதம், வெகு சமீபத்தில் ஏற்படுத்தப்பட்ட பக்த விஜயம், திரு விளையாடல் புராணம், பெரிய புராணம் முதலிய ஆதாரங்களையும், இலக்கியங்களையும் பார்த் தாலே நல்ல வண்ணம் உண்மை விளங்கும்.
மற்றும் இந்த மடமைக் கூளங்களை இன்றைய தினத்திலேயே நம்மில், 100க்கு - 90க்கு மேற்பட்ட மக்கள், அதிகம் புலவர், பண்டிதர், வித்துவான், மகாமகோபாத்தியாய, பி.ஏ., எம்.ஏ., டாக்டர் பட்டம் பெற்ற பெரிய படிப்பாளி, அறிவாளிகள் என்பவர் களெல்லாம் கூட நம்பி, அதன்படி நடக்கத் துணிந்தவர்களும் இருக்கிறார்கள் என்றால், பக்தி என்றாலே, இதைக்காட்டுமிராண்டிக் காலத்திய கற்பனையை நம்புவதும், நடிப் பதும் அதற்கேற்ற கோயில், குளம், உற்சவம், பண்டிகைகள் ஆகிய வைகளை ஏற்படுத்தி பரப்பி கொண்டாடி வந்தனர் என்றால், அறிவிலிகள் எவ்வளவு மோசமாக ஏற்பட்டவர்களாக காட்டுமிராண்டி களாக இருந்திருக்க மாட்டார்கள்?
அந்தத் துணிவில் அதிசயம் ஏது?
அவ்வளவு ஏன், கிரகணங் களை நம்புகிறவர்கள் எத்தனை பேர்? இன்றுகூட சாதாரணமாகச் சொல்ல வேண்டுமானால் இந்தி யாவுக்கு அப்பால் உலகம் இருப்ப தாகவே தெரியாதோர் எத்தனை? இன் றைக்கு 150, 200, 300 ஆண்டு களுக்கு முன் நம் நிலை என்ன என்று பார்ப்போமானால் - நெருப் புக்குச்சி ஏது? ரயில், கார், கப்பல், ஆகாயக்கப்பல் ஏது? நடக்க நல்ல பாதை ஏது? இந்த நிலைமையில் உள்ள மக்களின் மூட காட்டு மிராண்டி நம்பிக்கையான - அதன் தோற்றங்களான கடவுள், மதம், சாஸ்திரம், பெரியோர் கருத்து என் பவைகளை ஒழிக்க ஒரு மனிதன் துணிவு கொள்ளுவானானால், அத் துணிவில் அதிசயம் ஏது? எப்படியிருக்க முடியும்?
பகுத்தறிவுள்ள மனிதனாக இருந்து கொண்டு, கடவுள், மதம், சாஸ்திரம், பெரி யோர் கருத்து என்பனவாகியவைகளை நம்புவதும்; அழிக்காமல், ஒழிக்காமல் இருப்பதும் - பின்பற்றுவதும்தான் முட் டாள்தனமான; காட்டுமிராண்டித்தனமான துணிவு கொண்ட தன்மையாகும் என்று சொல்லலாம்.
மூடனுக்கும் புரியாமல் போகாதே
நிற்க, மேலே கண்ட எனது துணிவான கருத் துக்களால், பிரசாரத்தால் இவ்வைம்பது ஆண்டுக் கப்பால் நம் நாட்டாருக்கு மனித சமுதாயத்துக்கு ஏற்பட்ட தீமை என்ன? கேடு என்ன என்று பார்த் தால்; ஒரு சாதாரண மனிதனுக்கும், அவன் கடு களவு சிந்தனையாளனாக இருந்தால் ஒன்றும் ஏற்பட வில்லை என்பதோடு மேலே காட்டப்பட்ட அனேக நன்மைகள் ஏற்பட்டிருப்பது தெரியாமல் போகாதே.
அது மாத்திரமா? இந்தக் கடவுள், மதம், சாஸ் திரம், முன்னோர் கருத்து என்பவைகளால் நாட் டுக்கு - மனித சமுதாயத்திற்கு ஏற்பட்ட கேடுகளும், வளர்ச்சித் தடைகளும் எப்படிப்பட்ட மூடனுக்கும் புரியாமல் போகாது. எனவே நான், 93 ஆண்டு வாழ்ந்ததை வீண் வாழ்வு என்று கருதவில்லை - என் பணிகளை வீண்பணி என்றும் கருதவில்லை.   இனிமேலும் வாழ்வதைத்தான் கஷ்டமாகக் கருதுகிறேன். என் உடல் நிலைமை மிக மோசமாகி விட்டது. நினைவு சரியாக இல்லை . மறதி அதிகம். கண், காது சரியாக இல்லை. கால்கள், நடக்கவே முடிவதில்லை . அசதி அதிகம்.
இப்படிப்பட்ட நிலையிலும் சற்று மகிழ்ச்சி, சிறிது உற்சாகம் கொள்ளுகிறேன் என்றால், இன்று நமக்கு வாய்த்திருக்கும் தி.மு.க. ஆட்சிப் பணி களால்தான். காரணம் என்னவென்றால், இதன் முன்னர் இருந்த ஆட்சியின் யோக்கியதைகளை அவைகளால் நாட்டுக்கு - சமுதாயத்திற்கு ஏற்பட்ட கேடுகளை ஒழித்துக் கட்டாததால் சமுதாய விஷயத்தில், ஜாதி அமைப்பு விஷயத்தில், கல்வி விஷயத்தில் எப்படி நடந்து கொண்டார்கள்; என்ன கொள்கை மேற்கொண்டார்கள் என்பவை களைச் சிந்தித்தால் தெரிய வரும்.
ஏதாவது பொல்லாத வாய்ப்பால் இப்போதைய இந்த தி. மு. க. ஆட்சிக்கு ஏதாவது மாறுதல் காலம் ஏற்பட்டால், வேறு எந்த ஆட்சிவரும், அதன் பலன் என்ன ஆகும் என்பவைகளை சிந்தித்தால் பெரும் பயம் ஏற்படுகிறது. மற்றபடி மகிழ்ச்சியோடு இதை முடிக்கிறேன்.
- ஈ.வெ.ராமசாமி
(தந்தை பெரியார் 94ஆவது பிறந்த
நாள் 'விடுதலை' மலரிலிருந்து.... - 17.9.1972)
எனது 95ஆம் ஆண்டு பிறந்த நாள் துவக்கத்துக்கு வழமைபோல் ஆண்டு மலரில் ஒரு கட்டுரை எழுதவேண்டியிருக்கிறது. அதை முன்னிட்டு இக்கட்டுரை எழுதுகிறேன், அப்படி எழுதப்படும் இக் கட்டுரை என்னால் ஆண்டு மலர்களுக்கு எழுதப்படும் கட்டுரைகளில் இதுவே கடைசியான கட்டுரையாக இருந்தாலும் இருக்கலாம். ஏன் இப்படி எழுதுகிறேன் என்றால், அடுத்த ஆண்டு மலர் எழுதப்பட வேண்டிய காலத்தில் நான் இருப்பேனோ, இல்லையோ என்கிற பிரச்னை மாத்திரமல்லாமல், எழுதும்படியான வாய்ப்பு இருக்குமோ, இருக்காதோ என்பதே முக்கிய காரியமாகும். ஏனெனில், இன்னும் நாம் இருப்பது போலவே அதாவது, இந்திய ஆட்சி என்பதற்குள் பிரஜையாகவும், சமுதாயத்தில் நாலாஞ் சாதி (சூத்திர மக்களா கவும்) சட்டப்படி, சாஸ்திரப்படி பார்ப்பானின் தாசி மகன் என்னும் பெயருடன் நமது தாய்மார்கள் பார்ப்பானின் தாசிகளாகவும் இருக்கும் தன்மையாலேயே இருப்போமா என்கின்ற கருத்தைக் கொண்டே இப்படி எழுதுகிறேன். !
நம்மில் பலர் சிறையில் இருக்க நேரிடலாம்
இந்திய அரசியல் சட்டப்படி நாம் இந்திய ஆட்சியில் பிரஜையாய் இருக்கும்வரை இந்துவாய் அதாவது, கிறிஸ்துவனாகவோ, முஸ்லீமாகவோ நாம் மதம் மாற்றிக் கொள்ளாதவரை நாம் நமது பண்டார சன்னதிகள் உட்பட பவுத்தனுக்கும், ஜெயினனுக்கும் சமானமாக இருக்கும்படியாக இருந்தாலும், பகுத்தறிவுவாதியாக இருந்தாலும், வேறு எந்தப் பெயரில் வாழ்ந்து வருபவனாக இருந்தாலும் சூத்திரனாகத்தான், பார்ப்பானின், தாசி மகனாகத்தான் இருந்தாக வேண்டும். இது தான் இன்றைய இந்திய அரசியல் சட்டமாகும். இந்த சட்டத்தைத் திருத்தவோ மாற்றவோ நம் மக்களுக்கு ஒருநாளும் சக்தியோ, உரிமையோ ஏற்படும் என்று கருதவே முடியாத நிலையில் இருக்கிறோம். அது மாத்திரமல்லாமல் இந்திய ஆட்சியில் இருந்து தமிழ் நாட்டை விலக்கிக் கொள்ள முயற்சி செய்தே ஆகவேண்டிய ஒரு கட்டாயமான - நிர்பந்தமான நிலையில் இருக்கிறோம். இந்த முயற்சியில் நாம் இந்திய ஆட்சியிலிருந்து விலகிக் கொள்ளும் வாய்ப்பு ஏற்படுமா என்பது பற்றி நமக்கு முடிவு செய்து கொள்ள முடியாமல் இருந்தாலும் இம் முயற்சியில்
நாம் பலர் சிறையில் இருக்க நேரிடலாம் என்கிறதாலேயேதான் இந்தப்படி எழுதுகிறேன்.  உடனடியாக விடுதலை முயற்சியில் ஈடுபட வேண்டும் நமக்கு இன்றைய இந்திய ஆட்சியில் அரசியல் பிரச்னை எப்படி இருந்தாலும், சமுதாயப் பிரச்னையில் நாம் இன்று இருக்கும் இழி தன்மையில் இருந்து, அதாவது சூத்திரனாக, தாசி மகனாக நம் தாய்மார்கள் தாசிகளாக சட்டப்படி, சாத்திரப்படி இருக்கும் நிலைமையை மாற்றிக்கொள்ள முயற்சிக்காமல் நாம் இருக்க முடியுமா? இந்தியாவில் நாம் இருக்கும்வரை இந்துவாகத்தானே இருந்து ஆகவேண்டும். இந்து என்றாலே, முஸ்லீம், கிறிஸ் துவம் தவிர மற்ற யாவருமே சூத்திரர் தாசி மக்கள் தான் என்று இருப்பதால், ஏதாவது முயற்சி செய்து தான் ஆகவேண்டும். நம் மக்கள் எளிதில் மதம் மாறமாட்டார்கள். மதம் மாறுவதை இழிவாய்க் கருதுபவர்களாவார்கள். ஆதலால் நாம் உடனடியாக விடுதலை அதாவது இந்திய கூட்டாட்சியிலிருந்து விலகி சுதந்திரத் தமிழ் நாட்டை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டாக வேண்டியவர்களாக இருக்கிறோம். இம் முயற்சிக்கு இன்றைய நம் தி.மு.க. ஆட்சி இணங்கும் என்று கருதமுடியாது.
ஏனெனில், தி.மு.க. ஆட்சி விரும்புவதெல்லாம் இந்திய கூட்டாட்சி ஆதிக்கத்திற்கு உள்பட்ட மாகாண சுயாட்சிதான் அது விரும்புகிறது. மாகாண சுயாட்சி என்றால், அரசியலில் தான் ஏதோ சில மாறுதல்களைச் செய்து கொள்ள முடியுமே தவிர சமுதாயத் துறையில் அரசியல் சட்டத்திற்கு விரோதமாக ஒரு காரியமும் செய்ய முடியாது. 'இந்து' என்றால் சட்டப்படியான விளக்கம் இந்திய அரசியல் சட்டத்தில் சமுதாய (மத) சம்பந்தமான காரியங்களைப் பற்றி பழைய மனுதர்ம நிலையை மிகமிகப் பலப்படுத்திக்கொண்டபடியிருக்கிறது. உதாரணமாக சொல்ல வேண்டுமானால், கர்ப்பகிரகத்திற்குள் சூத்திரன், அதாவது பண்டார சன்னதி உட்பட இந்து என்ற தலைப்பில் வரும் எவருமே, பார்ப்பான் தவிர்த்து எவருமே செல்ல முடியாதென்று உயர்நீதி (சுப்ரீம்) மன்ற தீர்ப்பு இருப்பதினாலும், இன்னும் கோவிலுக்கு சாமி தரிசனத்திற்கென்று போகும் யாருமே தீண்டத்தகாதவர்கள்போல் வாயில்படிக்கு வெளியில் தான் எட்டி நிற்கவேண்டும் என்றால், மற்றப்படி எ தில் நாம் மாறுதலைக் காணமுடியும் ?
இன்று அமுலில் இருக்கும் இந்து லா என்னும் சட்டத்திலும், பல உயர் நீதி மன்றங் களின் தீர்ப்பிலும், பார்ப்பனரல்லாத இந்து மக்கள் என்பவர் களை மிகமிக இழிவாகக் கூறி, நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது. இந்து என்னும் சொல்லுக்கு சட்டத்தில் கொடுத்திருக்கும் விளக்கம் என்னவென்றால், "கிறிஸ்துவர்கள்- முஸ்லீம்கள் தவிர்த்த இந்தியாவில் உள்ள மக்கள் அனைவருமே இந்துக்கள் ஆவார்கள்.'' இதன்படி நாத்திகன், பகுத்தறிவுவாதி, பரதேசி முதலிய சகலரும் இந்துக்கள் ஆகி சூத்திரர், பார்ப்பானின் தாசி மகன் என்று  ஆகிவிடுகிறார்கள்.
சுயமரியாதை இயக்கத்தின் 50 வருட சாதனை
நான் முதலில், நான் இந்து அல்ல என்று சொல்லிவிட்டால் இழிவு நீங்கிவிடும் என்று தான் கருதினேன். பிறகு சட்டங்களைப் பார்க்க ஆரம்பித்த பிறகு கிறிஸ்துவர்கள், முஸ்லீம்கள் தவிர்த்த, இந்தியாவில் உள்ள மக்கள் அனைவரும் இந்துக்கள் - இந்துக்கள் என்றால் சூத்திரர்கள், வேசி மக்கள் என்று பல இடங்களில் காணப்படுகின்றன. ஆதலாலேயே தீவிர முயற்சி எடுக்கவேண்டும் என்று தோன்றுகிறது. இன்று நம் நாட்டில் இந்துக்கள் எல்லோருக்குமே அரசியலில் தான் முக்கிய கவனம் இருக்கிறது. அன்றியும் நாட்டுப் பிரிவினை என்றால், எல்லா மக்களுமே பயப்படுகிறார்கள். காரணம் பதவி கிடைக்காதே என்கின்ற காரணம் மாத்திரமல்லாமல், சிறைக்குச் செல்ல வேண்டுமே என்றும் பயப்படுகிறார்கள். 50 வருஷ காலமாக சுயமரியாதை இயக்கம் சாதித்தது என்ன என்று பார்த்தால், சிறிது படிப்பு - பல பதவி உத்தியோகம் பெற நேர்ந்ததோடு அரசியலில் பார்ப்பனர் கொட்டத்தை நல்ல அளவுக்கு அடக்கிற்று என்பதல்லாமல் சமுதாயத் துறையில் உள்ள அடிப்படை இழிவு நல்ல அளவுக்கு பலம் பெற்றுவிட்டது என்று தான் சொல்ல வேண்டும்.  எனவே, நாம் சட்டத்தைப் பற்றி பயப்படாமலும், பதவி கிடைக்காதே என்று கவலைப் படாமலும், சுதந்திரத் தமிழ்நாடு பெற ஒவ்வொருவரும் முடிவு செய்து கொண்டு முன்வர வேண்டியது ஒவ்வொரு தமிழனுக்கும் அவசியமான காரியம் என்பதை பணிவோடு தெரி வித்துக் கொள்கிறேன்.  "சுதந்திரத் தமிழ்நாடு எனது இலட்சியம் ''
என்ற சொற்களை ஒவ்வொருவரும் இலட்சியச் சொல்லாகக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். பதினாயிரக் கணக்கில் பாட்ஜுக்கு ஆர்டர் கொடுத்து தயார் செய்து மக்களுக்கு வினியோகிக்க ஆசைப்படுகிறேன். பொது மக்களுக்கும் இதுவே இலட்சியச் சொல் (கூப்பாடாக) லாக இருக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். பொது மக்களே ! இளைஞர்களே ! பள்ளி, கல்லூரி மாணவர்களே ! மாணவிகளே! உறுதி கொள்ளுங்கள்! உறுதி கொள்ளுங்கள்!! உறுதி கொள்ளுங்கள்!!!
- ஈ.வெ.ராமசாமி
(தந்தை பெரியார் 95ஆவது பிறந்த நாள்


'விடுதலை' மலரிலிருந்து.... - 17.9.1973)
எழுத்துரு அளவு Larger Font Smaller Font
தந்தை பெரியார்

"பிச்சைக்கு வந்தவன் பெண்டுக்கு மாப்பிள்ளை "  என்பதுபோல் நாம் கட்டின கோவிலைக்காத்து வயிறு வளர்க்க ஏற்பட்டவர்கள் இப்போது நம்மை வெளியில் தள்ளி கதவு சாத்தவும், உள்ளே தள்ளி கதவு சாத்தவும் ஏற்பட்டுவிட்டார்கள் என்றால் நமது மானங்கெட்ட தன்மைக்கு இதைவிட என்ன உதாரணம் வேண்டும்?
நமது நாட்டில் இருக்கும் பார்ப்பனர்கள் அரசியலின் பெயராலும், மதத்தின் பெயராலும், மதச்சடங்கின் பெயராலும் நமக்கு இழைத்துவரும் கேடுகளுக்கும், தொல்லைகளுக்கும் அளவேயில்லை. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வினாடியும் இக்கொடுமைகளிற் சிக்கிச்சீரழிந்து சுயமரியாதை, மானம், வெட்கமற்று அல்லற்படுகிறோம். இவைகளில் இருந்து வெளியேற நாம் பிரயத்தனப் படுமிக்காலத்திலேயே மேலும் மேலும் நமக்கு இழிவை உண்டாக்கித் தொல்லைப் படுத்துகிறார்களென்றால் மற்றபடி நாம் சும்மா இருந்தோமேயானால் நம் கதி யென்னவாகும்? 'அன்ன நடைக்கு ஆசைப்பட, உள்ள நடையும் போயிற்று' என்பதுபோல் கோவில்களில் நமக்கென்று தனி இடமும், பார்ப்பனர்களுக்கென்று தனி இடமும் கூடாது என்று நாம் சொல்ல ஆரம்பித்த பிறகு கோவிலுக்குள் நீ வரவேகூடாது என்று சொல்லவும், கோவிலை மூடிக் கதவைத் தாழ்போட்டுக் கொள்ளவும் ஆரம்பித்து விட்டார்கள். தெலுங்கில் ஒரு பழமொழியுண்டு. 'காலானிக்கி வேஸ்தே மூலானிக்கி வஸ்த்துடு' என்பார்கள். அதன் அர்த்தம் 10-க்கு அடிபோட்டால் 5-க்கு வருவான் என்பது; அது போல் கோவிலுக்குள் வரவேண்டாம் என்பதாகவே சொல்லி விட்டால் கும்பிட்டு  விட்டாவது போய்விடுகிறேன் என்று சொல்ல வருவான்; இல்லாவிட்டால் சம உரிமை கேட்பான் என்று நினைத்து போகிறபட்சமெல்லாம் கதவைச் சாத்துகிறார்கள். கோவிலுக்குள் போக உரிமை கிடைத்தவருக்குச் சுவாமி கும்பிட உரிமை உண்டா இல்லையா? சுவாமி கும்பிட உரிமையுள்ளவனுக்கு சுவாமிக்கு தேங்காய் பழம் உடைத்து வைக்க உரிமை உண்டா இல்லையா? இந்த உரிமைகளைக் கூட இப்பார்ப்பனர்கள் அபகரிப்பார்களேயானால் இவர்களை விட வெள்ளைக் காரர்கள் எந்த விதத்தில் கெட்டவர்கள்? நமது நாட்டுப் பார்ப்பனர்களை விட தென் ஆப்பிரிக்கா வெள்ளைக்காரர்கள்  ஆயிரமடங்கு யோக்கியர்கள் என்று சொல்லுவோம்.
இந்தப் பார்ப்பன ஆட்சியிலும், அடக்கு முறையிலும் இருப்பதைவிட அந்த வெள்ளையர்கள் ஆட்சியே மேலென்பதாகக்கூடச் சொல்லி விடலாம். வரவர இந்தப் பார்ப்பனர்கள் எவ்வளவு அக்கிரமங்கள் செய்யத் துணிந்து விட்டார்கள் என்பதை நினைக்கும் போது நமது ரத்தம் கொதிக்கின்றது! குலை நடுங்குகின்றது! "பிச்சைக்கு வந்தவன் பெண்டுக்கு மாப்பிள்ளை "  என்பதுபோல் நாம் கட்டின கோவிலைக்காத்து வயிறு வளர்க்க ஏற்பட்டவர்கள் இப்போது நம்மை வெளியில் தள்ளி கதவு சாத்தவும், உள்ளே தள்ளி கதவு சாத்தவும் ஏற்பட்டுவிட்டார்கள் என்றால் நமது மானங்கெட்ட தன்மைக்கு இதைவிட என்ன உதாரணம் வேண்டும்? சுவாமியைத் தொட்டுக் கும்பிடுவதும் சுவாமி பக்கத்தில் போய் கும்பிடுவதும், பார்ப்பனரும் தாமும் சரிசமமாய்க் கும்பிடுவதும் ஆகிய விஷயங்கள் இருக்கட்டும்; வெளியிலிருந்து தேங்காய் பழம் உடைத்து வைத்துக் கும்பிடுவதில் இந்தப் பார்ப்பனர்களுக்கிருக்கும் ஆட்சேபணை என்ன? இது பார்ப்பனர்களின் எந்த வேதம் சாஸ்திரம் ஆகமங்களுக்கு விரோதம் என்று சொல்லக்கூடும்? கை வலுத்தவன் காரியமாயிருக்கிறதேயல்லாமல் இதில் ஏதாவது நியாயம் இருக்கிறதா? நாம் தேங்காய் உடைப்பதால் கோவிலின் வரும்படி குறைவதா யிருந்தால் அவர்கள் கேட்பதைத் தரத் தயாராயிருக்கிறோம்.
பார்ப்பனர்களின் வரும்படி குறைந்துபோகும் என்று சொல்வதானாலும் அவர்களுக்கும் கொடுக்கவேண்டியதைக் கொடுக்கத் தயாராயிருக்கிறோம். மற்றபடி இவர்கள் ஆட்சேபிக்கக்காரணம் என்ன? மதுரைக்கோவிலில் ஸ்ரீமான் இராமநாதனை உள்ளே வைத்தடைத்ததும், அவரைத் தேங்காய் உடைக்காமல் தடுத்ததும் எதைக் காட்டுகின்றன? திருவண்ணாமலைக் கோவிலில் ஸ்ரீமான் கண்ணப்பரையும் மற்றவர்களையும் உள்ளே விடாமல் கதவை மூடிய விஷயம் கோர்ட்டிலிருப்பதால் அது முடியட்டும், மற்றபடி மதுரை விஷயத்தைப்பற்றி நமக்கு ஏற்பட்ட அவமானம் பொறுக்கக் கூடியதல்ல.
இதுபோலவே கொஞ்ச நாளைக்கு முன் தென்காசி கோவிலிலும் தேவாரம் படித்த பிறகு பிரசாதம் வாங்குவது தங்களுக்கு அவமானம் என்பதாகக்கருதி அங்குள்ள பார்ப்பனர்கள் கோவிலைவிட்டு போய்விட்டதுமல்லாமல் சுவாமி எழுந்தருளும் போது கதவை மூடிக்கொண்டார்களாம். தேவாரம்  படிக்கக் கேட்பதும், அதன் பிறகு பிரசாதம் வாங்குவதும் இந்தப் பார்ப்பனர்களுக்கு அவமானமாய்த் தோன்றினால் நம்மைத் தேங்காய் பழம் உடைத்து வைத்து சுவாமி கும்பிட வேண்டாம் என்றால் அது எவ்வளவு பெரிய இழிவு என்பதை அவர்களே சொல்லட்டும்.
ஒவ்வொரு அர்ச்சகனுக்கும் சுவாமி பூஜை  செய்ய சம்பளம் உண்டு. அது கோவில் கட்டினவர்களே இத்தனை வேளை பூஜையென்றும், அதற்கு இன்ன சம்பளம் என்றும் ஏற்படுத்தியிருக்கிறார்கள். மற்றவர்கள் செய்யும் பூஜைக்கும், இவர்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. அநேக இடங்களில் பக்தர்களே பூஜை செய்கிறது இன்னும் வழக்கமாகத்தான் இருக்கிறது. பிள்ளையார், மாரியம்மன், காளியம்மன் மற்றும் ரதோற்சவ காலங்களில் ரதத்தில் சுவாமி இருக்கும்போதும், கோவிலிலும் பக்தர்கள் தாங்களே தேங்காய் பழம் உடைத்து பூஜை செய்வதும் வழக்கமாகவே இருந்துவருகிறது.
இதுவரையில் இவ்வித வழக்கத்தை யாவரும் ஆட்சேபித்ததே கிடையாது. இதை இப்படியே விட்டுவிட்டால் பம்பாயில் புரோகிதர் சட்டம் வந்ததுபோல் அதாவது பார்ப்பானுக்குப் பணம் கொடுத்துத்தான் திதிசெய்ய வேண்டும் என்று சொன்னது இங்கும் ஆகிவிடுமென்றே சொல்லலாம். அங்காவது பார்ப்பானுக்குப் பணம் கொடுத்துவிட்டுத் தாங்களாகவே திதி செய்து கொள்வதில் ஆட்சேப மில்லை என்பதாக ஒரு திருத்தம் கொண்டு வரப்பட்டது. இங்கு பார்ப்பானுக்கு பணம் கொடுத்தாலும் நாம் செய்து கொள்ள பாத்திய மில்லை என்கிற சட்டம் இருக்கிறதுபோல் இருக்கிறது. எந்தக் காரணத்தைக் கொண்டு மதுரைத் தலைவர் ஸ்ரீமான், வி.ஜி. சுப்பிரமணிய முதலியார் அவர்கள் மறு உத்தரவுவரை தேங்காய் உடைக்கக்கூடாது என்று பொது ஜனங்களுக்கு 144 உத்திரவு போட்டாரோ தெரிய வில்லை. ஒரு சமயம் இதனால் கலகம் உண்டாகுமென்று நினைத்து மறு உத்தரவு வரை யாரும் கோவிலுக்குப் போகாதீர்கள் என்று உத்தரவு போட்டிருந்தால் அது சுயமரியாதையைக் காப்பாற்றப்போட்ட உத்திரவாகும். அதில்லாமல் பார்ப்பன ருக்குப் பயந்துகொண்டு போட்ட உத்திரவானது நமது சுயமரியாதையை பாதிக்கத் தக்கதென்றே சொல்லுவோம். இதனால் என்ன கலகம் எப்படி நடந்து விடக்கூடும். நாம் தேங்காய் உடைத்தால் மீனாட்சியம்மனும், சொக்கலிங்க சுவாமியும் கோவிலைவிட்டு ஓடிவிடுவார்களா? அல்லது உலகம் முழுகிப் போகுமா? அல்லது பாவமூட்டை ஏற்பட்டுவிடுமா? என்பது நமக்கு ஒன்றும் விளங்கவில்லை. எல்லா மக்களுக்கும் சமத்துவ உரிமை வேண்டுமென்றும் யாவரும் கோவிலுக்குள் போய் சுவாமி தரிசிக்கும் உரிமை வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டிருக்கு மிக்காலத்தில் ஏற்கனவே உரிமையுள்ள காரியங் களையும் விட்டுக் கொடுப்பதானால் நாம் சம உரிமை அடைய யோக்கிய முடையவர்களாவோமா? தேங்காய் உடைப்பதால் என்னதான் ஏற்பட்டுவிடும்? பார்ப்பனர்கள் சர்க்காரிடம் போய்த்தான் 144 உத்தரவு வாங்கி வரட்டுமே அதையும் பார்த்துவிட்டிருக்க வேண்டுமே அல்லாமல் அதைத் தடுத்தது நமக்குத் திருப்தியளிக்கவில்லை.
கலகம் நடக்க வேண்டும் என்கிற எண்ணத்தோடு நாம் சொல்லவரவில்லை.  நாம் சரியென்று நமது மனப்பூர்வமாய் யோசித்து தீர்மானித்துச் செய்யும் காரியங்களுக்கு ஒரு சிறு தடை ஏற்பட்டால் உடனே பின்வாங்கிக் கொள்கிற தென்று ஆரம்பித்து விட்டால் எப்படி முன்னேற முடியும்?   நமக்குப் பின்னால் யாராவது பிரயத்தனப்படுபவர்களுக்கு இது பெருத்த குந்தகமாய் வந்து முடியும் என்றுதான் பயப்படுகிறோம்.  ஒரு காரியத்துக்குப் போகக் கூடாது.  சிரமம் என்று நினைத்து தலையிட்டு விட்டால் அதைச் சுலபத்தில் விட்டு விட்டு ஓடவும் கூடாது;  ஆதலால், ஸ்ரீமான் முதலியார் அவர்கள் யோசித்து சீக்கிரத்தில் ஏதாவது ஒரு வசதி செய்யக் கோருகிறோம்.  இன்னும் மற்ற ஊர்களிலும் இவ்விதமான தடைகள் இல்லாமல் அவரவர்கள் தங்கள் தங்கள் சுதந்திரத்தைக் காப்பாற்றிக் கொள்ள விரும்புகிறோம்.
-  'குடிஅரசு' - தலையங்கம் - 13.02.1927
எழுத்துரு அளவு Larger Font Smaller Font
தந்தை பெரியார்
கனவான்களே! இந்த இடங்களில் இதற்குமுன் அநேக தடவைகளில் வந்து பேசியிருக்கிறேன். அப்போது வந்த சமயங்களில் நான் எதைப்பற்றிப் பேசினேனோ அதே விஷயங்களைப்பற்றித் தான் இப்போதும் பேசவந்திருக் கிறேன். ஆனால் அந்தக்காலங்களில் எனது பிரசங்கத்தைக் கேட்க, வந்த ஜனங்களை விடவும் உற்சாகத்தை விடவும் இப்போது எத்தனையோ மடங்கு அதிகமான ஜனங்களும் உற்சாகங்களும் காணப்படுவது எனக்கே ஆச்சரியமாய் இருக்கிறது. ஒரு சமயம் எனது கொள்கைகள் ஏதாவது மாற்றமடைந்து விட்டதா என்பதாக நானே யோசித்து பார்ப்பதுண்டு. எவ்வளவு யோசித்தாலும் எனது பழைய கொள்கைகளிலிருந்து ஒரு சிறிதும் மாற்றிக் கொண்டதாக எனது மனச்சாட்சி சொல்லுவதே இல்லை.
மகாத்மா காங்கிரஸ் காலத்திலும், அதற்கு முன் நான் தனியே அபிப்பிராயம் கொண்டிருந்த சமயத்திலும் எந்தக் கொள்கையில் நம்பிக்கை கொண்டிருந்தேனோ அவற்றில் ஒரு சிறிதும் மாற்ற மேற்பட்டதாக எனக்குத் தோன்றுவதே இல்லை. அதாவது மகாத்மாவின் ஒத்துழையாமை காங்கிரசுக்கு முன்னால் பார்ப்பனரல்லாதார் அரசியல் உரிமைகளுக்கும், சமுக உரிமைகளுக்குமாக காங்கிரஸ் சார்பாக ஏற்பட்டிருந்த சென்னை மாகாணச்சங்கம் என்னும் பார்ப்பனரல்லாதார் மக்களுக்காக மாத்திரம் ஏற்பட்டிருந்த சங்கத்தில் நானும் ஒரு முக்கியஸ்தனாக இருந்த காலத்தில் எனது கொள்கையும் அச்சங்கக் கொள்கையுமான வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்திலும், மகாத்மா காங்கிரசில் நான் இருந்த போது காங்கிரஸ் கொள்கையாகவும் எனது கொள்கையாகவும் இருந்த நிர்மாணத்திட்டம் அதாவது கதர், தீண்டாமைவிலக்கு, மதுவிலக்கு ஆகிய கொள்கை களிலும் ஒரு சிறிதும் மாறுபடாததோடு அவைகள் அப்பொழுதைவிட இன்னமும் பலமாக என்மனதில் பதிந்து கிடக்கின்றன. வகுப்புவாரி உரிமை இல்லாமல் நமது நாட்டி லுள்ள வகுப்புகள் ஒற்றுமைப்படாது என்பதும், நிர்மாணத் திட்டங்கள் நிறைவேற்றப்படுவதல்லாமல் வேறொன்றும் சுயராஜ்யமடைய மார்க்கமல்ல என்பதும் எனது சரீரத்திலும் ரத்தத்திலும் மயிர்கால்களிலும் இரண்டறக்கலந்து ஊறிவிட்டதோடு, இவ்விரண்டையும் பெறுவதன் முன்னம் மக்கள் சுய மரியாதை அடைய வேண்டும் என்பதும் சித்திரவதை செய்தாலும் மாற முடியாதபடி பதிந்து ஊறிக்கிடக்கின்றது.
ஆனால் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தைப்பற்றி என்னுடன் கூட அக் காலத்தில் ஒத்துழைத்த தலைவர்கள் என்போர் அரசியல் தந்திரம் என்னும் பேரால் சுயநலத்தைக் கொண்டோ பிற நலத்தைக்கொண்டோ குட்டிக்கரணங்கள் போட்டுக் கொண்டிருந்தாலும் எந்தக்காரணத்தை முன் னிட்டும் எனக்கு அதில் ஒரு சிறிதும் மாற்றமேற்படவில்லை. அது போலவே நிர்மாணத் திட்டங்களைப் பற்றியும் மகாத்மாகாந்தி காங்கிரஸ் காலத்தில் என்னுடன் ஒத் துழைத்த தலைவர் களும் காங்கிரசுசபை என்பதும் சுய நலத்தை உத்தேசித்தோ சுயநலப்பட்டவர்கள் காங்கிரசைச் சுவாதீனப்படுத்திக் கொண்டு மகாத்மாவை வெளியேறச் செய்ததினாலோ முறையே மாறுபட்ட அபிப்பிராயங் கொண்டு விட்டாலும் காங்கிரசின் ஆதிக்கத்திலிருந்து இத்திட்டங்கள் மாறுபாடடைந்து விட்டாலும்கூட அதன் தத்துவங்களும்  அவசியங்களும் எனது மனதிலும் வாக்கிலும் செய்கை யிலும் ஒரு சிறிதும் மாறுபடமாட்டேன் என்கின்றன. ஆனால் சென்னை மாகாண சங்கத்தின் மூலம் செய்து வந்த வகுப்புவாரி உரிமை பெறும் தொண்டும் காங்கிரன் மூலம் செய்து வந்த நிர்மாண திட்டப் பிரசாரத் தொண்டும் இப்போது எந்த சமுகத்தாருக்கு முக்கியமாயும், உண்மையாயும் அது யாருக்கு ஏற்பட வேண்டுமோ அந்த சமுகத்தார் சங்கம் மூலமாக நிறைவேற்றி வந்திருக்கிறேன். இது தான் வித்தியாசம் என்று சொன்னால் சொல்லலாம். ஆனால் இச்சங்கத்தின் மூலம் தான் இவற்றை உண்மையாய் நிறைவேற்றி வைக்க முடியுமேயல்லாமல் இக்கொள்கை களுக்கு பிறவி எதிரிகளாகிய பார்ப்பனர்கள் அவர்கள் சம்மந்தப் பட்டதும் அவர்கள் ஆதிக்கத்தி லிருப்பதும் அவர்கள் சுயநலத்திற்காகவே ஏற்படுத்தப்பட்டதான சென்னை மாகாணச்சங்கத்தின் மூலமாகவோ காங்கிரசின் மூலமாகவோ நிறைவேற்றப் பாடுபட்டதைப்போல முட்டாள்தனமான காரியம் வேறில்லை என்பதை நான் இப்போது நன்றாய் உணர்ந்தேன். நான் மாத்திரமல் லாமல் மகாத்மா காந்தியும் உணர்ந்து தனியே இவற்றை நடத்தி வைக்கப்பாடுபட்டு வருகிறதையும் நீங்கள் பார்க்கிறீர்கள் அல்லவா? உதாரணமாக வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத் திற்கு பார்ப்பனர்கள் சம்மதிப்பார்களா? 100-க்கு மூன்று பேராயுள்ள சமுகத்தார் 100-க்கு 97 பங்கு உத்தியோகத்தையும் அரசியல் சுதந்திரங்களையும் அனுப வித்துக்கொண்டு
100-க்கு 97 பேர்களாய் உள்ள நமக்கு 100-க்கு மூன்று பங்கு வீதம் அதுவும் பிச்சைக்கொடுப்பது போல் கொடுத்து மீதியை ஏகபோகமாய் அனுபவித்துக் கொண்டு நம்மை அடக்கி ஆண்டு கொண்டி ருப்பவர்கள் 100-க்கு 3 போக பாக்கி 100-க்கு 97 இழக்கும்படியான வகுப்புவாரி உரிமையை ஒப்புக் கொள்ளுவார்களா? என்பதை யோசித்துப்பாருங்கள். அது போலவே நிர்மாணத் திட்டம் என்பதையும் பார்ப்பனர்களின் ஆதிக்கத்திலிருக்கும் இயக்கங்களே ஒப்புக்கொள்ள முடியுமா என்பதையும் யோசியுங்கள்.
கதரினால் பார்ப்பனர்களுக்கு ஏதாவது லாபமுண்டா? அவர்கள் பெண்டு பிள்ளைகள் கூலியில்லாமலும் வயிற் றுக்கு ஆகாரமில்லாமலும் எங்காவது பாடுபடுகிறார்களா? அல்லது கதர் நிறைவேற்றப்படுவதால் அவர்களுக்கு ஒரு காசாவது ஆதாய முண்டா? வேஷத்திற்கும் இத்திட்டம் நிறைவேற்றுவது என்கிறபேரால் நம்மை ஏமாற்றி நம்மிடம் பொருள் பறிக்கவும் ஓட்டுப்பெறவும் அந்தப் பேரைச் சொல்லிக்கொண்டு சில பார்ப்பனர்கள் நம்மை ஏமாற்றி வயிறு வளர்க்கவும் ஒட்டுப்பெறவுமே அல்லாமல் வேறு எதற்கு அவர்கள் பாடுபட அவசியமிருக்கிறது.
அதுபோலவே தீண்டாமை விஷயத்திலும் பார்ப்பனர் களுக்கு ஏதாவது அக்கறை உண்டா? அவர்கள் நம் எல்லோரையும் தீண்டாதவர்கள் தாழ்ந்த வர்கள் இழிந்த வர்கள் தங்களது வைப்பாட்டிமக்கள் என்று சொல்லிக் கொண்டு ஆதிக்கம் செலுத்திவாழுகிறவர்கள் நம்முடன் சமமானவர்கள் என்று சொல்லிக்கொள்ள சம்மதிப்பார்களா? தீண்டாமை ஒழிந்தால் இந்த நாட்டில் பார்ப்பனர்கள் பிராமணர்கள் என்று சொல்லிக்கொள்ள இடமுண்டா? ஆதலால் அவர்களோ அவர்கள் ஆதிக்கத்தில் உள்ள சங்கங்களோ இதை நிறைவேற்றி வைக்க சம்மதிக்கும் என்று நினைப்பதைப்போன்ற பெரிய இளிச்சவாய்த்தனமான காரியம் வேறில்லை. ஏதோ சில பார்ப்பனர் தீண்டாமை ஒழிப்பதில் வெகு அக்கறை உள்ளவர்கள் போல் காட்டிக் கொண்டாலும் 'பறையர்', 'சக்கிலியர்', 'நாயக்கர்', 'நாடார்' என்று சொல்லப்படுகிறவர்கள் வீட்டில் சாப்பிட்டாலும் தீண்டாமை ஒழியவும் மக்கள் பிறவியில் வித்தியாசமில்லை என்று சொல்லவும் செய்யப்பட்ட தீர்மானங்களை எதிர்த்து ராஜினாமா கொடுத்துவிட்டு ஓடிவிட்டார்கள் என்பது பொய்யல்ல. அதுபோலவே மதுவிலக்கு செய்யவேண்டிய அவசியமும் நமது பார்ப்பனருக்கு எப்படி ஏற்படும்? பார்ப்பனர்களா மதுவருந்திக் கெடுகிறார்கள்? அவர்களிலும் சிலர் மதுவருந்துவதாக வைத்துக் கொண்டாலும் அது அவர்கள் குடும்பம் கெடும் மாதிரியோ ஒழுக்கம் கெடும்மாதிரியோ இல்லை. அவர்கள் மதுவருந்துவதினாலும் லாபமடைகிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.
அதனால் சமுகச் சீர்திருத்தக்காரர்கள் என்கிற பேரும் பெற்று பெரிய துரைகள் சிநேகமும் பெற்று பணமும் பதவியும் உத்தியோகமும் சம்பாதிக்க வழிசெய்து கொள் ளுகிறார்களே அல்லாமல் நம்மைப்போல் 'குடிகாரர்கள்' ஆவதில்லை. உண்மையாய் பார்ப்பனரல்லாதாராகிய நம் சமுகத்தில் அடியோடு குடி எடுபட்டுப் போகுமானால் பார்ப்பனர்கள் உத்தியோகத்தின் மூலமாகவும் வக்கீல் உத்தியோகத்தின் மூலமாகவும் இப்போதைப் போல் பிழைக்கமுடியுமா? குடி நின்றுவிட்டால் பார்ப்பன உத்தி யோகத்தில் பகுதி எடுபட்டுப் போகாதா? பார்ப்பன வக்கீல் போர்டுகள் எல்லாம் காப்பி ஓட்டல் போர்டுகளாகவும், பஞ்சாங்கப் போர்டுகளாகவும், பிச்சை எடுக்கும் தொழில் போர்டுகளாகவும் ஆகிவிட வேண்டாமா? ஆதலால் அவர்கள் மதுவிலக்குக்கு அனுகூலமாய் இருப்பார்கள் என்பது ஓநாய் ஆட்டுக்கு வைத்தியம் செய்வதுபோல்தான் இருக்கும். ஏதோ சில பார்ப்பனர் மதுவிலக்குக்குப் பாடு படுவதாய்ச் சொல்லுவது நம்மை ஏமாற்றவே அல்லாமல் வேறென்ன? உதாரணமாக ஒரு ஒத்துழையாமைப் பார்ப்பனர் ஒரு கள்ளு உற்பத்தி செய்து பணம் சம்பாதிக்கும் பார்ப்பனருக்கு மதுவிலக்குப் பேரால் ஓட்டு வாங்கிக் கொடுக்கவில்லையா? தவிர சுயராஜ்யக் கட்சியார் மதுவிலக்கு செய்ய ஒப்புக்கொண்டார்கள்; அவர்களுக்கு ஓட்டுக் கொடுங்களென்று குறள் எழுதவில்லையா? இப்பொழுது அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது அந்த 'ஒத்துழையாமை' பார்ப்பனருக்குத் தெரியவில்லையா? ஆகவே பார்ப்பனர்களோ பார்ப்பன ஆதிக்கமுள்ள சங்கமோ மதுவிலக்குச் செய்யும் என்று எண்ணுவதைப் போன்ற ஏமாந்த தன்மை வேறில்லை.
ஆதலால்தான் அவர்கள் சம்பந்தமும் ஆதிக்கமும் உள்ள சங்கங்களை விட்டுவிட்டு உண்மையாய் அவசிய முள்ள சங்கத்திற்கு வந்து பிரசங்கம் செய்ய வந்திருக் கின்றேன். அதைவிட பல மடங்கு ஜனங்கள் இங்கு வந்திருப்பதின் மூலமும் நீங்கள் காட்டும் உணர்ச்சியின் மூலமும் உங்கள்  கடமைகளை அறிந்திருக்கிறீர்கள் என்பதை உணருகிறேன். அதுவும் சென்ற மதுரை மகா நாட்டில் இத்தீர்மானங்களை ஏக மனதாய் ஒப்புக் கொண்ட திலிருந்தும் அதற்குப்பிறகு நாட்டில் எங்கு பார்த்தாலும் கதர்விருத்தியும் சுய மரியாதையில் கவலைகொண்டு அதற்குப் பூர்வாங்கமான வேலையும் நடத்துவருவதைப் பார்க்கும்போது எனக்கு ஏற்படும் மனத்திருப்தியும் ஆனந்தமும் அளவிடக் கூடவில்லை. இவ் விஷயங்களை நடந்துவிப்பதற்காகவே ஜஸ்டிஸ் கட்சி ஏற்பட்டிருந்தாலும் அது அரசியலில் செலவழித்த காலத்தை இதில் செலவழித்ததாக சொல்ல முடியவில்லை.
ஜஸ்டிஸ் கட்சியார் இத்திட்டங்களை நிறைவேற்றவும் நிறைவேற்றுகையில் இத்திட்டங்களின் எதிரிகளால் ஏற்படும் கொடுமைகளிலிருந்து தப்பவும் சிறு சிறு அரசியல் சுதந்திரங்களைப் பெறலாம் என்று நினைத்து அதில் கருத்தைக்செலுத்த ஆரம்பித்ததும் ஏற்கனவே அரசியல் சுதந்திரத்தை ஏகபோமாய்க் கைப்பற்றிக் கொண்டிருந்த கூட்டத்தார் தங்களுக்கு ஆபத்து வந்துவிட்டதாகக் கருதி ஒன்று சேர்ந்து கொண்டு பல வழிகளின் மூலமாகவும் இக்கட்சியாருக்கு செய்து கொண்டு வந்த தொந்திரவுகளும் உபந்திரவங்களும் சூழ்ச்சிகளும் கொடுமைகளும் தாங்க முடியாததானதோடு இக்கூட்டத்தாருடன் சமாளிக்கும் வேலைக்கே தங்கள் காலமுழுவதும் செலவழிக்க ஏற்பட்டு விட்டதாலும் அதிகமாக உத்தேசித்த காரியங்களை நிறைவேற்றமுடியாமல் போயிற்று.
ஆனாலும் நமது மக்கள் எவ்வழியிலும் மற்றொரு சமுகத்தாருக்கு தாழ்ந்தவர்கள் அல்ல என்பதையும், பங்கா இழுத்தல் செடிக்குத் தண்ணீர் ஊற்றல், தபால் ஆபீசுக்குப் போதல், வீதி கூட்டுதல், குழந்தைகுட்டிகளைத் தூக்கிக் கொண்டு திரிந்து மார்க்கெட்டுக்குப் போய் காய்கறி வாங்குதல், ஜட்கா வண்டி ஒட்டுதல் முதலிய வேலைகள் அல்லாமல் வேறு வேலைக்கு லாயக்கில்லை என்று மற்ற நாட்டாரும் அரசாங்கத்தாரும் நினைக்கும்படி நமது  பார்ப்பனர்கள் செய்து வைத்திருந்த மீளாத இழிவிலிருந்து தப்பிக் கரையேறி அவர்களின் உண்மையான யோக்கிய தைகளாகிய அரசாங்க நிர்வாகம் நடத்துதல் முதல் எல்லா உயர்ந்த பதவிகளையும் வகிக்கத் தகுந்தவர்கள் என்பதை நிலைநிறுத்தி உயர்தர நீதிமன்றம் மந்திரி பதவி முதலிய எல்லா ஸ்தானங்களிலும் நம்மவர்களையும் அமரச்செய்து மற்றெல்லோரையும் விட எவ்விதத்திலும் குறைவானவர்கள் அல்ல என்பதையும் உலகத்திற்கு மெய்ப்பித்து நம்மிலும் பலரை அந்த ஸ்தானங்களிலும் இருத்தி ஒருவகையான சுயமரியாதையை உண்டாக்கி இருப்பதோடு நமது எதிரிகள் பிச்சைக்கு லாயக்குடையவர்கள் என்பதையும் உலகமறியச் செய்து விட்டார்கள்; என்றாலும் பாமர மக்களிடம் செய்ய வேண்டிய வேலை எவ்வளவோ அவ்வளவும் செய்தார்கள் என்று சொல்ல முடியாது ஆதலால், அதை நிறைவேற்றவே இப்போது இக்கட்சியாருக்கு நல்ல சந்தர்ப்பம் கிடைத் திருக்கின்றது. அதுவும் இரண்டு விதத்தில் என்றே சொல்ல லாம். அதாவது (1) இக்கட்சியார் பதவியில் இருந்தகாலத்தில் இவர்கள் பேரில் பலவித பழிகளைச்சுமத்தியும் பார்ப்பனரல் லாதாரிலும் சில ஆகாதவர்களைப் பிடித்து கூலியும் விலையுங்கொடுத்து இழி மொழிகளால் பழி சுமத்தியும் பாமர ஜனங்களை ஏமாற்றிய அயோக்கியத் தனமானது வெளியாகவும் அரசியலிலும் நமது எதிரிகள் கூட்டத்தாரே பதவியும் ஆதிக்கமும் பெறத்தகுந்த நிலைமையை அடைந்திருப் பதன் மூலம் தாங்கள் இக் கட்சியாரைவிட என்ன சாதிக்க யோக்கியதை உள்ளவர்கள் என்பதை ஜனங்கள் அறிய சந்தர்ப்பம் ஏற்பட்டிருப்பதும், (2) தேர்தல் மூலம் ஜஸ்டிஸ் கட்சியார் பாமரமக்களிடம் இறங்கி வேலை செய்ய தாராளமான சவுகரியமும், மற்றொரு விதத்திலும் பெற்றிருக்கிறார்கள்.
ஆகவே இந்தச் சமயத்தைக் கைவிடாமல் பார்ப்பன ரல்லாத மக்கள் ஒன்று சேர்ந்து இதை உபயோகப் படுத்திக் கொள்ள வேண்டும். இதற்கான பிரசாரம் செய்வதற்குப் பத்திரிகைகளும், அவைகளை ஆதரிக்க உங்களுடைய ஆதரவுகளும் வேண்டும். நமது பாமர மக்களின் மனம் பெரும்பாலும் விஷத்தன்மையானதற்குக் காரணம் நமது எதிரிகளின் பத்திரிகைகளும் அவர்கள் தயவில் நடக்கும் நம்மவர்கள் பத்திரிகைகளும் அவர்களிடம் கூலி பெற்று நம்மவர்கள் செய்த பிரச்சாரங்களுமே தவிர வேறில்லை. ஆதலால் அதை நாம் வெல்ல வேண்டுமானால் உறுதியும், தைரியமும், உண்மையுள்ள பத்திரிகைகளும், பிரசாரகர் களும் நமக்கு வேண்டும்; அவைகள் இல்லாமல் நாம் எவ்வளவு யோக்கியமாய் நடந்தாலும் உண்மையான கொள்கைகளை வைத்துக் கொண்டிருந்தாலும் பிரயோ ஜனப்படாது, மகாத்மாவை ஜனங்கள் அறியவும், அவரது கொள்கையை மக்களிடம் பரப்பவும், ஒரு கோடி ரூபாய் இருந்தாலும் 20000  'யங் இந்தியா' பிரதிகளும் 30000 'நவஜீவன்' பிரதிகளும் உலவியதாலும் தானே ஒழிய வேறில்லை. இப்பொழுது மறுபடியும் ஒரு கோடி ரூபாய் கிடைக்குமானால் மறுபடியும் மகாத்மா காங்கிரசைக் கைப்பற்றி ஆதிக்கம் செலுத்தி தனது கொள்கை களைப் பரப்பக்கூடும். ஆதலால் பணமும் பத்திரிகையும் இல்லாமல் ஒரு காரியமும் செய்ய முடியாது. நம்மில் எத்தனை பேர் லட்சாதிபதிகள், பத்து லட்சாபதிகள் கோடீஸ்வரர்கள் இருக்கிறார்கள்! ஆனாலும் அவர்கள் இந்த முக்கியமான விஷயங்களைக் கவனிப்பதில்லை.
இவ்வளவு கோடி செல்வவான்களாயிருந்தாலும் அரசியலில் ஒருசிறு ரெவினியூ இன்ஸ்பெக்டரைக் கண்டால்  நடுங்கவேண்டியவர்களாகத் தானே இருக் கிறார்கள். சமுக இயலில் ஒரு தூது பார்ப்பானைக் கண்டால் சுவாமி என்று கூப்பிடவும், கையெடுக்கவும் யோக்கியதை உள்ளவர்களாகத்தானே இருக் கிறார்கள். இந் நாட்டுச் செல்வவான்கள் லட்சுமி புத்திரர்களென்று ஆணவமாய் நினைத்துக்கொண்டிருக்கும் பைத்தியக்கார பிரபுக்களுக்கு இதுபடுகிறதா? தாங்கள் தேடிவைக்கும் பொருள்கள் தங்கள் பின் சந்ததி யாளர்களுக்கு உதவுமே என்றாவது நினைக்க என்ன உறுதி இருக்கிறது. அப்படியே இன்னமும் 10 லட் சமும்  பல பங்களாக்களும், ஜமீன்களும், உத்தியோகங்களும் சேர்த்துவைத்தாலும் அவர்கள் ஒரு சிறு பிச்சைக்கார பார்ப்பனப் பையனால் தன்னை விடத் தாழ்ந்தவன் என்று நினைக்க கூடியவர்கள் தானே.
இங்கே இருக்கும் ஸ்ரீமான் பனகால் ராஜா அவர்கள் எத்தனை தலை முறைகளாக ராஜவம்சத்தைச் சேர்ந்தவ ரானாலும் எவ்வளவு சமஸ்கிருத பாண்டித்தியமுடையவ ரானாலும் இன்னும் எவ்வளவு பெரிய பூணூல் போட்டி ருந்தாலும், எவ்வளவு பெரிய பரம்பரை ராஜாபட்டம் பெற்றிருந்தாலும் இன்னும் 94 வருடங்களுக்கு மந்திரிப்பதவி வகித்தாலும் அவரும் 'சூத்திரன்' பார்ப்பனர்களின் 'வைப்பாட்டி மகன்', அடிமை, வேதம் படிக்கக் கூடாதவர்; சுவாமி அருகில் போய் சுவாமியைத் தொடக்கூடாதவர்; ஒரு இழிவான பார்ப்பனன் பக்கத்தில் கூட உட்கார்ந்து சாப்பிடக்கூடாதவர் என்று சொல்லப் படுவதை நன்றாய் உணருங்கள். இவ்வூரிலுள்ள பிரபுவான ஸ்ரீமான் தளவாய் முதலியார் அவர்கள் இன்னும் வருஷத்தில் 2,3 லட்சம் ரூபாய் அதிகமான வரும்படி வந்தாலும் இன்னும் 10 அரண்மனை மாடமாளிகை கூடகோபுரமிருந் தாலும் இன்னும் அனேக கோவில்கள் கட்டி கட்டளைகள் நடத்தினாலும், அவர்களும் அவர்கள் பிள்ளை குட்டிகளும் சூத்திரர்களென்றுதான் கருதப்படு கிறார்கள் என்பதை மறந்து விடாதீர்கள். இது ஒழிக்கப்பட வேண்டுமா? அல்லது இன்னும் மந்திரி உத்தியோகமும் வேண்டுமா? என்று தான் உங்களைக் கேட் கிறேன். ஆகையால் சகோதாரர்களே! நமது பார்ப்பனர்களால் பதினாயிரக்கணக்கான வருஷங் களாக நம் தலையில் வைக்கப்பட்ட இழிவானது வெகு சீக்கிரத்தில் மாறக்கூடியகாலம் வந்திருக்கிறது; இதை இழந்து விடாதீர்கள். இது சமயம் தவறினால் பின்னால் விமோசனமே இல்லையென்றே சொல்வேன். நமது உணர்ச்சியை இது சமயம் உலகம் ஒப்புக்கொண்டு விட்டது. பார்ப்பனர்களும் இதுவரை தங்கள் சூழ்ச்சியின் பெயரால் ஆணவம் அடைந்திருந்தவர்கள் இப்போது வெட்கப்படு கிறார்கள், நல்ல சமயத்தைக் கைவிட்டு விடாதீர்கள். பணங்கொடுக்கக் கூடியவர்கள் பணங் கொடுங்கள். பத்திரிகை வாங்கிப் படிக்கக் கூடியவர்கள் வாங்கிப் படியுங்கள்; ஒன்றும் உதவ முடியாதவர்கள் பார்ப்பனர்களின் காலில் விழாதீர்கள்; அவன் காலைக் கழுவிவிடாதீர்கள்; அவன் காலைக்கழுவி தண்ணீர் சாப்பிடாதீர்கள்; அவனுக்குப் பணங்கொடுத்து விழுந்து கும்பிட்டால் உங்கள் பெற்றோர்களுக்கும் உங்களுக்கும் உங்கள் பிள்ளை குட்டிகளுக்கும் மோட்சம் உண்டு என்று நினைக்கும் முட்டாள் தனத்தை ஒழியுங்கள். பார்ப்பனர் மூலம் தான் சுவாமியைத் தரிசிக்கவேண்டும், அவன்தான் தரிசனை காட்ட வேண்டும்; அவனைத்தான் தரகனாக்க வேண்டும் என்கிற அறியாமையையாவது விலக்குங்கள். சுயமரியாதை இல்லாத சுயராஜ்யம் காதொடிந்த ஊசிக்கும் சமானமாகாது - மனிதரின் பிறப்புரிமை சுயமரியாதை! சுயமரியாதை!! சுயமரியாதை!!!... என்பதை உணருங்கள்.
(திருநெல்வேலி ஜில்லாவில் பாளையம்கோட்டை, திருநெல்வேலி முதலிய இடங்களில் செய்த பிரசாரத்தின் சாராம்சம்)
'குடிஅரசு' - சொற்பொழிவு -  27.02.1927
எழுத்துரு அளவு Larger Font Smaller Font
தந்தை பெரியார்
தலைவரவர்களே! சகோதரிகளே!! சகோதரர்களே!!!
சுயமரியாதை இயக்கம் என்பதைப் பற்றி பேச வேண்டுமென்பதாக நண்பர் பெருமாள் அவர்களால் இக்கூட்டம் கூட்டப்பட்டிருக்கின்றது. நாங்கள் திரு. பெருமாளின் குமாரத்தியின் திருமணத்திற்கு என்று அழைக்கப்பட்டு இங்கு வந்தோம், இந்தச் சந்தர்ப்பத்தில் இந்த ஊரில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசவேண்டுமென்ற ஆசை அநேக நண்பர்களுக்கு இருந்ததால் நானும் இந்த சந்தர்ப்பத்தை வீணாக்காமல் சிறிது பேசலாமென்றே
கருதுகின்றேன். சுயமரியாதை இயக்கத்தின் தீவிரமான கொள்கைகளையெல்லாம் இப்போது உங்களுக்கு எடுத்துச் சொல்வது என்பது சற்று கஷ்டமானாதா யிருக்குமென்றே கருதுகின்றேன்.
ஏனென்றால் இதற்கு முன் இங்கு இந்தப்பிரசாரம் நடத்தப்பட்டதாக எனக்குத் தெரியவில்லை. அதன் தீவிரக் கொள்கைகளை நீங்கள் முதல் முதலாக கேட்கும்போது. அது உங்களைத் திடுக்கிடச் செய்யும். அவற்றின் உண்மையை அறிவது என்பது இன்றே சுலபத்தில் புலப் படக் கூடியதாகாது. ஆதலால் உங்களுக்குச் சிறிது நிதானமான முறையில் தான் பேச வேண்டியவனா யிருக்கிறேன். அதாவது இந்த நான்கு, அய்ந்து வருஷங் களுக்கு முன் கிராம ஜனங்களின் முன் நான் எந்த நிலையில் பேசினேனோ அது போல் முதல் பாடத்திலிருந்து பேச வேண்டியவனாயிருக்கிறேன். ஏன் இந்தப்படி சொல்லு கிறேன் என்றால் திரு. பெருமாள் வீட்டுக் கல்யாணத்திற்குப் பார்ப்பான் வரவழைக்கப்படாததாலேயே இவ்வூரார் அவர்மீது மிகுந்த கோபமாய் இருப்பதாகவும், நான் கோவில் குளங்களைப்பற்றி குற்றம் சொல்லுகின்றவன் என்பதாகவும், ஜாதிகளையெல்லாம் ஒன்றாக்க வந்திருக்கின்றேன் என்பதாகவும், குற்றம் சொல்லி இந்தக் கூட்டத்திற்கு யாரும் போகக்கூடாதென்று சிலர் பிரசாரம் செய்தார்களாம். இப்படிப்பட்ட முயற்சிக்காரர்கள் முன்னால் பார்ப்பனர் களின் நடத்தையையும் கோவில் குளங்களினுடைய தொல்லையையும் எடுத்துச் சொன்னால் எப்படி அது உங்களால் நடு நிலையில் கிரகிக்கப்படும் என்பதை நீங்களே நினைத்துப்பாருங்கள். புதிய சங்கதி எதுவானாலும் காதை மூடிக்கொள்ளவே நமது மக்கள் கற்பிக்கப்பட்டிருக் கின்றார்கள். சிறு குழந்தைப்பருவத்தில் நமக்குப் புகுத்தப்பட்ட விஷயங் களையே ஆராய்ச்சியின் மூலம், அறிவின் மூலம் கண்டமுடி வென்று கருதி அதற்குத் தலை கொடுத்துக்கொண்டு இருக் கின்றோம். நமது உள்ளத்தில் எது எது பதிக்கப்பட்டு விட்டதோ அதெல்லாம் தேர்ந்த ஞானிகளாலும், தெய்வத்தன்மை பொருந்திய அவதார புருஷர்களாலும் சொல்லப் பட்ட உண்மைகள் என்ற உறுதியுடனே புகுந்தப்பட்டிருக்கிறோம். ஆகையால் புதிய நோக்கங்களையும் தோற்றங்களையும் காண சகிக்காத வர்களாக இருக்கின்றோம். உலகப் போக்கை நாம் தெரிய நேர்ந்தாலும், பார்க்க நேர்ந்தாலும் அதன் அனுபவத்தின் மேன்மையை அடையவும் பாராட்டிப்பேசவும், தயாராய் இருக்கின்றோமே அல்லாமல் அதை நமது வாழ்க்கையுடன், நமது நாட்டு எண்ணங் களுடன் பொருத்திப் பார்ப்பதற்குச் சிறிதும் எண்ணுவதே கிடை யாது. நமது மக்களின் இந்த மாதிரியான நிலையைப் பார்த்துப் பார்த்து, மனம் கஷ்டப்பட்டதால்தான் நாங்கள் இந்த துறையில் இறங்கித் தொண்டு செய்ய வேண்டியவர்களானோம்.
சுயமரியாதை
சுயமரியாதை இயக்கம் என்பதின் முக்கிய கொள்கைகள் என்பவை ஒன்றும் புதி தானதோ, அல்லது ஏதாவது அதிசயமானதோ என்று நீங்கள் மலைக்க வேண்டிய தில்லை. அது மனிதன் அறிவுபெறவும், சமத்துவம் அடையவும், சுதந்திரம் பெறவும் பாடு படுகின்றது. அறிவுக்கும், சமத்துவத்திற்கும் சுதந்திரத்திற்கும் எதிராயும் தடையாயும் இருக்கும் எதையும் அடியோடு ஒழிக்க தைரியம் கொள்ளுகின்றது. இந்த நிலையில் மக்களின் மூடத்தனத்தினாலும் தாழ் வினாலும், அடிமைத்தனத்தினாலும் பயனடைந்து வாழ் கின்றவர்களுக்குச் சுயமரியாதை இயக்கம் ஒரு கோடாலியாய் காணப்படுவதானால் அதிசயமொன்று மில்லை. எங்களைக் கண்டால் துவேஷமும், வெறுப்பும் ஏற்படத்தான் செய்யும், எங்களைவையவும் தொல்லைப் படுத்தவும் அவரவர்கள் மனம் தூண்டத்தான் செய்யும், இவ்வியக்கத்தைக் கையாளுகிறவர்களுக்கு  அவற்றை யெல்லாம் சமாளிக்க சக்தி இருந்தால்தான் இவ்வியக்கத்தால் ஏதாவது பலன் ஏற்படமுடியும். எதிர்ப்புக்கும் தொல் லைக்கும் பயந்தால் ஒரு காரியமும் நடவாமல் போவதோடு பிற்போக்கும் ஏற்பட்டுவிடும்.
சாதாரணமாக நாங்கள் இந்த ஊர் பொது ஜனங்களின் பாராட்டுதலையும், வணக்கத்தையும் மரியாதையும் பெற்று கொஞ்சம் பணமும் சம்பாதித்துக் கொண்டு போக வேண்டுமானால் எங்களால் சுலபத்தில் முடிந்துவிடும். நமது ஜனங்களின் முட்டாள்தனம் எங்கு, எங்கு இருக்கின்றது என்பது எங்களுக்குத் நன்றாய்த் தெரியும்.
உதாரணமாக, நாங்கள் தேசபக்தர்களைப் போல கதர் வேஷம் போட்டு கையில் கொடியைப் பிடித்துக்கொண்டு பாரதமாதாவுக்கு ஜே! சுயராஜ்யத்திற்கு ஜே! மகாத்மாவுக்கு ஜே! என்று கூறிக்கொண்டோ, அல்லது பெரிய கடவுள் பக்தர் போல் வேஷம் போட்டுக் கொண்டு மஞ்சள் உடையோ, காவி உடையோ கட்டிக் கொண்டு பட்டைநாமம் போட்டுடக் கொண்டு குடை, தேசகண்டி இவைகளுடன் நாராயண மூர்த்தி கோவிந்தா கோவிந்தா என்றோ சொல்லிக்கொண்டு பஜனை கோஷ்டியுடனோ கூட்டமாய் வந்தோமானால் நீங்கள்கும்பிட்டு காசு கொடுத்துவிட்டுப் போவீர்கள் என்பது எங்களுக்கு நன்றாய்த் தெரியும். இதற்காக ஒரு துரும்பைக் கிள்ளிப் போடவேண்டிய அவ்வளவு சிறிய கஷ்டம்கூடநாங்கள் படவேண்டியதில்லை.
ஆனால், நாங்களோ இன்று அப்படி சொல்லி வயிறு வளர்ப்பதனுடைய புரட்டுகளை எடுத்துச்சொல்லுகின்ற வேலையை மேற்போட்டுக் கொண்டிருக்கின்றோமாதலால் சோம்பேறிப் பிழைப்புக்காரர்களுடைய கோபத்திற்கும் பழிதீர்த்துக்கொள்ளும் வஞ்சகத்திற்கும் ஆளாக வேண் டியவர்களாக இருக்கின்றோம். இந்திய நாடு சூழ்ச்சிக் காரருடைய ஆட்சிக்கு உட்பட்டகாலம் முதலே எங் களைப்போல் ஒரு கூட்டம் பல தடவை தோன்றி சூழ்ச்சிகளை வெளிப்படுத்தி வந்திருக்கின்றதானாலும் சூழ்ச்சிக்காரர்களின் சாமாத்தியமானது, அவற்றை லட்சி யப்படுத்தக் கூட முடியாமல் செய்துகொண்டே வந்திருக் கின்றது. இன்றைய தினம் அறிவு வளர்ச்சிக்கும், சமத்துவத் திற்கும், சுதந்திரத்திற்கும் விரோதமான காரியங்கள் என்று எதை எதை நாங்கள் கருதுகின்றோமோ அவற்றையெல்லாம் எங்களுக்கு முன்னும் அநேக பெரியார்கள் கருதி வெகுகடினமாக கண்டித்து பேசி இருக்கிறார்கள்.
உதாரணமாக ஜாதி மதத்தை கண்டித்தும், வேத சாதிரங்களைக் கண்டித்தும், கோவில், குளம், கல்லுருவம் தாம்பர உருவம் ஆகியவைகளைக் கண்டித்தும், பூஜை,  உற்சவம், சடங்கு ஆகியவைகளைக் கண்டித்தும், எத்த னையோ பெரியோர்கள் பேசியிருக்கின்றார்கள். சாஸ்திரத் தைச்சுட்டு சதுர் மறையைப் பொய்யாக்கி சூத்திரத்தைக் கொண்டு சுகம் பெறுவதெக்காலம் என்று ஒருவர் சொல்லி யிருக்கிறார். ஒரு பெரியவர் கல்லையும் செம்பையும் வணங்கும் கசடர்காள் என்று சொல்லியிருக்கின்றார். ஜாதி, மத பேதமெல்லாம் சூழ்ச்சியால் ஏற்படுத்தப்பட்டது என்று சொல்லியிருக்கின்றார்.   இன்னும் எவ்வளவோ சொல்லி இருக்கின்றார்கள். ஆனால், நம் மக்களோ அப்பெரி யோர்களை யெல்லாம் தெய்வீகத் தன்மை கொண்டவர்கள் என்றும், ஞானிகள் என்றும் சித்தர்கள் என்றும் கருதி இன்றும் வணங்குகின்றார்கள்.  ஆனால், அப்பெரியோர் சொன்னவை களைக் கவனித்துப் பார்க்கும்படி யாராவது சொன்னால் மாத்திரம் அவர்கள் மீது மிருகப் பாய்ச்சல் பாய்கின்றார்கள்.  இது ஒன்றே போதாதா நம் மக்களின் அறிவின் திறத்தை அளந்து பார்ப்பதற்கு என்று யோசித்துப் பாருங்கள். இந்த மாதிரியான பாமர உணர்ச்சியும் பயங்காளித்தனமும், வைத்ததைச் சுமக்கும் மிருக சுபாவமும் இன்னாட்டு மக்களின் உயர்குணங்களாகப் பாவிக்கப்பட்டு வருவதாலேயே உலகத்தில்  இந்திய நாடு மாத்திரம் வெகுகாலமாகவே அடிமை நாடாகவே, கூலி நாடாகவே சுயமரியாதையும் அறிவும் ஞானமும் அற்ற நாடாகவே இருந்து வருகின்றது. இதற்குக் காரணம் இன்னதுதான் என்பதைக் கண்டுபிடிக்க நம்மவர்களுக்கு இன்னமும் அறிவு ஏற்படவில்லை. ஒரு நாய் வளர்த்து கின்றவன் தன் நாயை மற்றவன்மேல் ஏவிவிடுவது போல் நம்மை யார் சூழ்ச்சி செய்து இக்கெதிக்கு ஆளாக் கினார்களோ, அவர்களேதான் அச்சூழ்ச்சியை ஒழிக்க வரும் ஆட்கள் மேல் நம்மை உசுபடுத்தி விடுவதால் உண்மையை உணர கவலை கொள்ளாமல் அவர்கள் கைகாட்டின பக்கம் திரும்பிக் கொண்டு கத்துகின்றோம்.
நமது நாட்டு அடிமைத்தனம் எத்தனை காலமாய் இருந்து வருகின்றது என்பதை நினைத்துப் பாருங்கள். தர்மராஜ்யம், இராமராஜ்யம், சத்திய கீர்த்தி அரிச்சந்திர ராஜ்யம் முதலிய அவதார ராஜ்யம்  முதல் தெய்வீகத்தன்மை பொருந்திய மூவேந்தர் முதலிய சரித்திர ராஜ்யம் வரை இந்திய மக்கள் நிலைமையைச் சற்று ஞாபகப்படுத்தி ஆராய்ச்சி செய்து உண்மையை கண்டு பாருங்கள். அந்த நிலைக்கு இந்த நிலைமேலானதா? கீழானதா? என்று சுயமரியாதைக்கண்ணாடி மூலம் பாருங்கள். ஞானக் கண்ணாடி மூலம் பாருங்கள். சுதந்திரம், சமத்துவம் என்கின்ற கண்ணாடிகள் மூலம் பாருங்கள்.
நீங்கள் எந்த பார்ப்பனர்களையும் கேட்டுப்பாருங்கள். தங்கள் நிலை இன்றையை நிலையைவிட அன்று அதாவது அவதார ஆட்சியிலும் மூவேந்தர் ஆட்சியிலும் மேலாயிருந்தது. ஆனால், இன்று கீழாயிருக்கின்றது என்றுதான் சொல்லுகின்றார்கள்.  ஆனால், அவர்கள் தவிர மற்ற மக்களாகிய சூத்திரர்கள், பெண்கள், தாழ்த்தப்பட்ட ஜாதியர்கள் என்று இழிவுபடுத்தி இருக்கிற நம்மில் 100க்கு 99 ஜனங்களைக் கேட்டுப் பாருங்கள். நெஞ்சில் கையை வைத்து நினைத்துப் பாருங்கள். அன்றுக்கு இன்று எவ்வளவு மேலான நிலையில் இருக்கின்றோம் என்பதை ஒவ்வொரு துறையாய் ஆராயுங்கள் உண்மை காண்பீர்கள். இதோடு நின்று விடாமல் இந்த நிலையோடு திருப்தி அடையாமல், இன்னும் மேலே போகவேண்டும் என்று சொல்லுங்கள். எவ்வளவு மேலே போகவேண்டுமானாலும் நானும் கூடவே வர பாடுபடுகின்றேன். ஆனால் பழைய நிலையே மேல் அதற்கே போக வேண்டும் என்றுசொன்னால் அதைச் சகிக்க முடியவில்லை. அரைநிமிஷம்கூட அதை ஆதரிக்க முடியாது. உலகம் அறிவு பொருள் முதலிய அகத்திலும் புறத்திலும் சமத்துவத்தையும் பூரண சுயேச்சையையும் அடைய தீர்மானித்து விட்டது. இந்தியா மாத்திரம் மூடர்களாய், அடிமைகளாய் இழிமக்களாய் இருக்கும் அவதார ராஜ்ஜியத் திற்குப் போகவேண்டுமென்றால் இந்நாடு அடியோடு அழிந்து போவதே மேலான காரியமல்லவா?
நண்பர்களே, உலகத்தை ஒருகண்ணில் பார்த்து இந்தியாவை ஒரு கண்ணில் பார்த்து, இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை உண ருங்கள். நம் கல்வி, செல்வம், வாழ்வு விவசாயம் வீரம், மானம், அறிவு ஆராய்ச்சி, முற்போக்கு ஆகியவைகள் எல்லாம் எப்படி இருந்தது, இருக்கிறது. மற்ற நாடுகள் எப்படி இருந்தன, இருக்கின்றது என்பவைகளை சிந்தித்துப் பாருங்கள் என்று சொல்லி, ஒவ்வொன்றிலும் வெளிதேசத்தையும் இந்தியாவையும் ஒப்பிட்டு பார்க்கும்படி விளக்கிக் காண்பித்து விட்டு உட்கார்ந்தார்.
"உபசாரப்பத்திரம்"
இந்த சமயத்தில் ஒரு வாலிபர் கடலூர் வாலிபர்கள் சார்பாக திரு இராமசாமிப் பெரியாருக்கு உபசாரப்பத்திரம் படிக்க வேண்டும் என்று சொல்லி அதன் பிரதி ஒன்றை தலைவரிடம்  கொடுத்தார். தலைவர் அதை வாங்கித் தானே வாசித்துப் பார்த்தார் அவ்வுபசாரப் பத்திரத்தில் முதல் இரண்டு மூன்று வாக்கியங்களில் திரு.இராமசாமியை பாராட்டும் பாவனையாகவும் பின் இரண்டு வாக்கியத்தில் கதரைப்பற்றிய அபிப்பிராயத்தை விளக்க வேண்டுமென்றும், தாலி கட்டுவது அடிமைத்தனத்திற்கு அறிகுறி என்று சொல்லும் தங்கள் மனைவியார் ஏன் தாலி கட்டி இருக்கிறார் என்றும் கேள்வி கேட்கும் பாவனையாக எழுதப்பட்டிருந்தது.
பின்னர் திரு. இராமசாமி எழுந்து பதில் சொல்லும் முறையில் தாலி கட்டிக்கொண்டிருப்பது அடிமைத் தனத்திற்கு அறிகுறி என்று அநேக பெண்கள் இன்னமும் உணரவில்லையென்றும், உணர்ந்த பல பெண்களும் தாங்கள் அடிமைகளாய் இருப்பதைப்பற்றிக் கவலைப் படாமல் இருக்கிறார்கள் என்றும், சிலர் சமுகத் துறைக்குப் பயந்து கட்டிக்கொண்டிருக் கிறார்கள் என்றும் எந்த எண் ணத்தின் மீது தனது மனைவி யார் கட்டிக்கொண்டிருந்தாலும் அவர்களது இஷ்டத்திற்கு விரோ தமாய் பலவந்தம் செய்யத்தான் துணியவில்லை என்றும் சொன் னார். ஒருவர் மத்தியில் எழுந்து உங்கள் குடும்ப மனைவியையே நீங்கள் அடக்கி ஆளமுடிய வில்லையானால் மற்றவர்களை எப்படி திருத்தமுடியும் என்றார். இதற்கு திரு. இராமசாமி சமாதானம் சொல்லுகையில் மனைவியை அடக்கி ஆளவில்லை என்று சொன்ன நண்பர் மனைவி என்றால் அடிமை என்கின்ற நமது பழைய கொள்கையை மனதில் வைத்துக் கொண்டு பேசுகின்றாரேயொழிய, அவர்கள் இஷ்டப்படி நடக்க அவர்களுக்கு உரிமை உண்டு என்றும் சிறிதும் கவனியாமல் சொல்லுகிறார் என்றே கருது கின்றேன் என்றும், பெண்களுக்கு கல்வியறிவும், சுதந்திர உணர்ச் சியும், சுயமரியாதையும் ஏற்பட்டால் தானாகவே தாலியை அறுத் தெரிந்து விடுவார்கள் என்றும் சுதந்திர உணர்ச்சி உள்ள பெண்கள் இனி தாலி கட்ட கழுத்தைக் கொடுக்க மாட்டார்கள் என்றும், இவ்விஷயங்களில் மற்ற வெளிஜனங்கள் என்பவர்களுக்கும் குடும்பத்தார் என்பவர்களுக்கும் பிரமாத வித்தியாசம் இல்லையென்றும், சொல்லிவிட்டு கடைசியாக இந்தக் கூட்டத்தில் அரசியல் சம்பந்தமான பேச்சை தான் வேண்டுமென்றே பேசாமல் விட்டு விட்டதாகவும் ஏனெனில் இதுவே முதல் கூட்டமானதால் அதிகமான விஷயங்களை ஜீரணம் செய்விக்க முடியாதென்று கருதியே அப்படிச் செய்ததாகவும் ஆனபோதிலும் காங்கிரசுக்காரர்கள் என்கின்ற முறையில் சிலர் அவர்களாகவே நம்மை பேசும்படி செய்ததால்தான் அதற்கு நன்றி செலுத்துவதாகவும் கூறி கதரைப்பற்றியும் அதற்கும் அரசியலிற்கும் பொருளதாரத்திற்கும் உள்ள சம்பந்தத்தைப் பற்றியும் அது எவ்வளவுதூரம் தொழில் முறையிலோ பொருளாதாரத் துரையிலோ உதவி இருக்கின்றதென்றும் அது சமதர்ம கொள்கைக்கும் மனிதனின் இயற்கையான ஆசாபாசங்களுக்கும் முன்னேற் றத்திற்கும் எவ்வளவு இடையூறென்றும் எடுத்துக் காட்டியதுடன் திரு.காந்தியே மில்லை ஆதரிக்க வந்து விட்டதுடன் புதிய யந்திரம் கண்டுபிடிக்க ஆசைப்பட்டு கண்டுபிடிப்பவருக்கு ரூ.100000 சன்மானம் கொடுக்க முன்வந்துவிட்டார் என்றும் கதர்தற்காலசாந்திதான் என்பதாக திரு. ராஜகோபாலாச் சாரியார் சொல்லியிருக்கும் அபிப்பிராயங்களையும் எடுத்துச் சொல்லிவிட்டு கதரை ஒரு தர்ம கைங்கரியமாக வைத்துக் கொண்டாலும்கூட ஏழைகள் பிழைக்கவென்று மக்களிடம் கதரின் பேரால் 4அணா வசூலித்து அவர்களுக்கு ஒரு அணா போய்ச் சேரும்படியிருப்பது தர்ம கைங்கரியம் ஆகாதென்றும் எப்படியெனில் ஒரு நாளைக்கு கால்ராத்தல் நூல் நூற்று ஒரு அணா கூலி அல்லது ஒன்ணேகாலணா கூலி பெரு கின்றார்கள் என்றால் அந்த கால் ராத்தல் நூலால் நெய்யப்பட்ட கதரை வாங்க வேண்டியவர் 6  அணா கொடுக்கிறார்.  இந்த நீளமுள்ள துணியை மில் துணியாக வாங்கினால் 0-2-6 அணாவுக்கு வாங்கலாம், ஆகவே ஒரு அணா தர்மம் செய்யமற்றவனிடம் 3-6 தட்டிப்பறிக்கவேண்டி இருக்கின்றது என்று புள்ளி விபரத்துடன் எடுத்துக் காட்டினார்.
மற்றொரு வாலிபர் ஒரு சந்தேகம். 1. கடவுள் உண்டா இல்லையா? 2. கடவுளை அடையும் மார்க்கம் என்ன? 3. மனிதன் கடமை என்ன? என்று கேட்டார்.
இதற்கு திரு. இராமசாமி, கடவுள் என்பதை தான் ஒரு அர்த்தமற்ற வார்த்தை என்று கருதியிருப்பதாகவும், ஆனால், கடவுளைப் பற்றி பேசுபவர்கள் அதற்குத் தனித்தனி அர்த்தம் கற்பித்துக் கொள்ளுகிறார்கள் என்றும், கேள்வி கேட்பவர் கடவுளுக்கு இன்ன விதமான அர்த்தம் கொண்டு இருக்கிறார் என்று தெரிந்தால் அது உண்டு இல்லை என்றும் எப்படி அடைவதென்றும் ஒரு வார்த்தையில் முடித்து விடலாம் என்று சொன்னார். இதற்குக் கேள்வி கேட்டவர் ஒன்றும் பதில் சொல்லவில்லை.
பிறகு மனிதனுடைய கடமை என்பது தனியாக ஒன்று இல்லை என்றும் அவரவர் அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் அனுபவத்திற்கும் சரி என்று பட்ட விஷயங்களின்படி அவரவர் நடந்து கொள்ளுவதைத் தான் கடமையாகக் கொள்ள வேண்டுமென்று சொன்னார்.
'குடிஅரசு' - சொற்பொழிவு - 20.09.1931
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தந்தை பெரியார்
தலைவரவர்களே, சகோதரர்களே, நான் இங்கு இப்படி ஒரு கூட்டத்தில் பேச வேண்டியிருக்கும் என்று கருதவே யில்லை. ஜமீன்தாரர் (டாக்டர் சுப்பராயன்) அவர்கள் ஒரு காரியமாய் என்னை இங்கு வர வேண்டுமென்று 10, 15 நாட்களுக்கு  முன்னமே எழுதியதை உத்தேசித்து அவர்களைக் காண நான் வந்தேன். சற்று முன்புதான் இங்கு ஒரு மீட்டிங்குகூட்டப்பட்டிருப்பதை அறிந்தேன். இக்கூட்டம் ஜமீன்தாரர் அவர்களையும் திரு. கண்ணப்பர் அவர்களையும் உத்தேசித்தே கூட்டப்பட்டது என்பதையும் அறிந்தேன். இதில் நான் பேசுவது என்பது அசௌகரியமான காரியம் என்றாலும் நண்பர் நடேச முதலியார் அவர்கள் சொல்லையும் ஜமீன்தார் அவர்கள்  சொல்லையும் தட்ட முடியாமல் ஏதோ சிறிது பேசவேண்டியவனாக இருக் கிறேன். இன்று  பேசவேண்டிய விஷயம் தற்கால இராஜ்ய நிலைமை என்பதாக நோட்டீசில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. நானோ  இராஜீய திட்டசம்பந்தமான விஷயங்களில் மாறுபட்ட  ஒரு அபிப்பிராயம் கொண்டி ருப்பவன். இராஜீய துறையில்  சிறிதுகாலம்  இருந்து பார்த்துவிட்டு அதன் கொள்ளை களில்  அதிருப்தி  கொண்டு  வெளியேறி என் சொந்த இஷ்டப்படி சமுகத் துறையில் வேலை செய்து கொண்டிருப்பவன். அப்படிப்பட்ட  நான் இராஜீய நிலை மையைப் பற்றி என்ன பேச முடியும்? என்பதை நீங்களே யோசித்துப்பாருங்கள். சகோதரர்களே, இன்றைய நிலை மையில் நான் இராஜீயத்துறை கொள்கைகளில் மாத்திரம் அபிப்பிராய பேதங்கள் கொண்டவனல்ல. தற்கால இராஜீய விஷயம் என்பதையே நாணயமானதல்ல என்று கருதுவதோடு  இந்தியநாட்டின் விடுதலைக்கு இன்று இரா ஜீயத்துறை அவ்வளவு முக்கியமான தல்லவென்றும்,  மற்ற விஷயங்களின் வரிசைக்கிரமத்தில் அரசியல் சீர்திருத்தம் என்பது எவ்வளவோ பின்னால் இருக்கவேண்டியது என்றும் கருதுகின்றவன், நமக்கு இருக்கும் வேலை எல்லாம் நாம் செய்யவேண்டிய முதல்வேலை எல்லாம் சமுதாய சம்பந்தமானதே தவிர  அரசியல் வேலையல்ல.
ஏனெனில், சமுகத் துறையில் நமது நிலைமை என்ன? நமது அடிமைத்தனத்தின் கொடுமை எவ்வளவு? இவை களுக்குக் காரணம் என்ன? என்பதை நினைத்துப் பார்த்தால் அறிவும் மானமும் உள்ள மனிதன் அரசியல் தன்மையைக் கொஞ்சமும் பெரிதாகக் கருதி  லட்சியம்  செய்யமாட்டா னென்றே  கருதுகிறேன். உங்களில் யார் எப்படி  நினைத்துக் கொண்டாலும் சரி என்னைப் பொறுத்தவரை நமது நாட்டு மதசம்பந்தமான சமுக சம்பந்தமான, அடிமைத்தனத்தால் தான் நாம் சுதந்திரமிழந்து, மானமிழந்து  இழி ஜாதியாய் வாழ்கின்றோமேயொழிய  அரசியல் அடிமைத்தனத்தாலல்ல என்பதே எனது அபிப்பிராயம் நான் இப்போது அரசாங்க ஆட்சியின் சுதந்திரத்தை முதன்மையானதாக விரும்ப வில்லை. உத்தியோகத்தை பிரமாதமானதாகக் கருத வில்லை அதிகாரத்தை ஆசைப்படவில்லை.
என்னுடைய நாட்டு மனிதன்  ஒருவன் என்னை ஒரு மனிதனாய்க் கருத வேண்டும், அவன் என்னை பிறவியில் சமமாய் நினைக்க வேண்டும் என்றுதான்  ஆசைப்படு கின்றேன். இந்த இழிவுத்தன்மையும் அவமானமும் தான்  என்னை வருத்துகின்றது.  நினைத்தால் வயிறு பற்றி எறிகின்றது, நெஞ்சம் குமுறுகின்றது.  இதற்கு ஏதாவது ஒரு மார்க்கம் ஏற்பட  இன்றைய எந்த அரசியலாவது இடையூறாயிருந்தால் சொல்லுங்கள். அப்பொழுது அந்த அரசியலைப்பற்றி கவனிப்போம். அதை யொழிப்போம். இல்லாவிட்டால் வேறு எது இடையூறோ, யார் இடையூறாயிருக் கின்றார்களோ அவற்றையொழிக்க ஒன்று சேரலாம் வாருங்கள். அதைவிட்டு  விட்டு இவ்வளவு பெரிய அக்கிரமத்தையும் கொடுமையையும் மூடி வைத்துக் கொண்டு 'அரசியல் அரசியல்' என்றால் என்ன அருத்தம்? இது யாரை ஏமாற்றுவது? இன்னும் எத்தனை நாளைக் குத்தான் இப்படியே காலத்தை கடத்துவது? என்பவைகளை யோசித்துப்பாருங்கள்.
'அரசியலைப்பற்றிக்கூட நமக்குக் கவலையில்லை, அன்னியனை ஒழிக்க வேண்டாமா? என்று சிலர் கேட்கிறார்கள், இதிலும்  உண்மையோ அறிவுடைமையோ இருப்பதாக நான் கருத வில்லை. ஏனென்றால், யார்  அன்னியன்? என்பதை முதலில் கவனித்துப்பாருங்கள்.
என்னை அடிமை என்பவனும், வைப்பாட்டி மகன் என்பவனும், கிட்ட வர வேண்டாம் தொடவேண்டா மென்பவனும், கிட்ட வந்தாலே கண்ணில் தென் பட்டாலே தோஷம் என்பவனும், நான் தொட்டதைச் சாப்பிட்டால்  என் எதிரில் சாப்பிட்டால் நரகம் என்பவனும் அந்நியனா? அல்லது உனக்கும் எனக்கும் வித்தியாசமில்லை, தொட் டாலும்  பரவாயில்லை, நாம் எல்லோரும் சமம் தான்'  என்று சொல்லுகின்றவன் அந்நியனா? என்பதை  யோசித்துப் பாருங்கள்.
நமது ஜனங்கள் 100க்கு 90 பேர்கள் மூடமக்களாக யிருந்துவருகின்றார்கள். கல்விவாசனையும் இல்லை. அறிவு வாசனையும் இல்லை. இருந்தாலும் அறிவு சுதந்திர மில்லை. இவர்களைக் கூட்டி வைத்துக்கொண்டு  யார்  என்ன பேசினாலும் கைதட்டுவார்கள். கூடவே கோவிந்தா போடுவார்கள். ஆகவே சரி எது? தப்பு எது? என்று தெரிந்து கொள்ளும் அறிவில்லாதவர்கள். இவர்கள் முன்  எதைச் சொன்னால் தான் என்ன? என்கின்ற முறையில் தேசத்தில் எத்தனையோ  புரட்டுகள்  நடக்கின்றன. இதைப்பார்த்துக் கொண்டே இந்த நிலைமையை மாற்றவேண்டியதே  நமது முதல் வேலையாயிருக்க வேண்டும், என்பதை யாருமே  கவனிப்பதில்லை. எந்த தலைவருமே  நினைப்பதில்லை. இப்படியே காலம் கடந்தால்  நமக்கு  எப்போது விடுதலை கிடைக்க கூடும்?  என்பதை யோசித்துப்பாருங்கள்.
பொருளாதாரத் துறையில் நாம் அடிமையாய் இருக் கின்றோம். நமது பொருள் கோடிக்கணக்காக வெளியில் போகின்றது.  அதை நிறுத்த  வேண்டாமா? என்கிறார்கள் மற்றொரு  கூட்ட அரசியல்  கூட்டத்தார். இதையும் என் னால் லட்சியம் செய்யவோ ஒப்புக் கொள்ளவோ, முடிய வில்லை. ஏனென்றால் பொருள்  நஷ்டம் என்பது இப்போது நமது நாட்டில் யாருக்கு இருக்கிறது? என்று யோசித்து பாருங்கள்.
நமது நாட்டில் சமுகத் துறையிலேயே, பிறவிலேயே பொரு ளாதார உரிமை அநேக மக்களுக்குத் தடுக்கப்பட் டிருக்கின்றது.
உதாரணமாக புரோகிதன், உத்தியோகஸ்தன், வக்கீல், வியாபாரி, முதலாளி, ஜமீன்தாரன், மிராசுதாரன் ஆகியவர்களின் கூட்டங் களுக்குத்தான்  பொருளாதார உரிமை இருக்கின்றதேயொழிய மற்ற ஜனங்களுக்கு வயிற்றுக்கு எவ்வளவு வேண்டும் என்கின்ற அளவுக் குட்பட்ட அடிமை உரிமைதானே  இருந்து  வருகின்றது?  முற்கூறிய கூட்டங்களுக்குப் பொருளாதார  உரிமை  என்பது  பிறவிலேயே கொடுக்கப்பட்டிருக்கின்றது  என்ப துடன்  மற்ற வர்கள்  அதற்கு  அருகரல்லாமல் இருக்கும் படியான நிர்பந்தங்களும் செய்யப்பட்டிருக்கின்றன.
உதாரணமாக, ஒரு இட்டிலிக்கடைப்பார்ப்பானுடைய மகன் ஹைகோர்ட் ஜட்ஜாகவரலாம். ஒரு பஞ்சாங்கப் பார்ப்பனன்  மகன்  மந்திரி ஆகலாம்.  ஒரு தோட்டியினுடைய மகன் ஹைகோர்ட்ஜட்ஜாக வரமுடியுமா?  யோசித்துப் பாருங்கள். ஜாதியின்  பேரால் வகுக்கப்பட்டிருக்கும் பிரி வானது இம் மாதிரி சிலருக்கு நன்மையையும் சிலருக்குத் தீமையையும் செய்துவருகின்றது,  வெகுகாலமாய் செய்தும் வந்திருக்கின்றது. இனி  மேல்  இந்தப்படி செய்யாமல் இருக்க நமது ' அரசியல் சுயராஜ்யத்தில்' எவ்வித திட்டமும் இல்லை என்பதோடு இந்த  முறைமையைக்காப்பாற்றவும் திட்டம்  போடப்பட்டிருக்கின்றது என்றால் அறிவுள்ள மனிதன் எப்படி இந்த அரசியலை ஒப்புக்கொள்ள முடியும்?
இன்றைய தினம் இந்த திருச்செங்கோட்டில் ஒரு பறையன் இட்லி சுட்டானானால் அது எவ்வளவு பெரிதா யிருந்தாலும் மற்றவர்கள் நாயிக்கு வாங்கிப்போடக்கூட அவனிடம் இட்லி வாங்கமாட்டார்கள். ஒரு பார்ப்பனன் இட்லி சுட்டால் அது எவ்வளவு சிறிதாயிருந்தாலும் எவ் வளவு மோசமாயிருந்தாலும் 'சாமி சாமி' என்று கெஞ்சி ஒன்றுக்கு ஆறு விலை கொடுத்து வாங்குவார்களென்றால் இது அரசியல் சுதந்திரமில்லாத காரணத்தாலா? சமுக சுதந்திரமில்லாத காரணத்தாலா? என்று தயவு செய்து யோசித்துப்பாருங்கள். பறையன் இட்லி வயிறு நிறையாதா? அது விஷம் கலந்ததா? மதமும் ஜாதியுமல்லவா இப்படி செய்கின்றது?
ஏழை ஜனங்களையும் சரீரத்தால் பாடுபடும்  தொழி லாளிகளையும் கீழ் ஜாதி என்றும், தொடக்கூடாதவர்கள் என்றும் கொடுமைப்படுத்தி தாழ்த்தி வைத்திருக்கும் ஜனங் களையும் கவனித்து, அவர்களை அவர்களுடையக் கஷ் டங்களில் இருந்து  விடுதலை  செய்யமுடியாத அரசியல்  திட்டம் யாருக்கு வேண்டும்? என்று கேட்கின்றேன். மேல் ஜாதிக்காரனுக்கும் முதலாளிகளுக்குமல்லவா அது பயன் படும். தொழிலாளிகளுக்கு  எவ்வளவு கூலிகொடுப்பது  என்பதை  யோசிப்பது தான்  அரசியல் திட்டத்தில் ஒரு கொள்கையாய் இருக்கின்றதே தவிர முதலாளி எவ்வளவு  லாபத்திற்கு மேல் சம்பாதிக்கக்கூடாது என்பதாக யாராவது திட்டம்  போடுகிறார்களா? பாருங்கள்.
நமது  மக்களின்  இழிவும், அடிமைத்தனமும், பொருளா தாரக் கஷ்டமும் நமது மதத்தின் பலனாய் சமுதாய முறையின்  பயனாய் இருந்து வருகின்றதா?  அல்லது  இல்லையா? என்று பாருங்கள். பணக்கார ஜமீன்தாரனும், பணக்கார பிரபுவும் தங்கள்  பணங்களை இந்நாட்டில் என்ன  செய்கிறார்கள்?  என்று சற்று கவனித்துப் பாருங்கள்? மதத்தின் பயனாய் ஏற்பட்ட  முட்டாள் தனத்தின் காரண மாய் இதோ எதிரில் தெரிகின்ற கோவிலின்  பேரால்  பாழாகின்ற பணம் இவ்வள வென்று உங்களுக்குத் தெரி யாதா?   பணம்  சேரச்சேர  மண்ணால் கட்டின  கோவிலை இடித்து கல்லால் கட்டுகின்றான். பிறகு  சலவைக்கல்லால் கட்டுகின்றான், சித்திர வேலை செய்கின்றான், பிறகு வெள்ளியிலும் தங்கத்திலும் வாகனம் செய்கின்றான். தங்க ஓடு போட்டு கோவில் கூரையை வேய்கின்றான். இந்த மூட மக்களைக்கொண்ட  நாட்டிற்குப் பணம் மிச்சமாவதால்  என்ன லாபம்?
பாமர மக்களை அறிவாளிகளாக்கி அவர்கள் கையில் பணத்தை ஒப்புவித்தால்தான் அந்த பணம் நாட்டின்  நலத்திற்கு பயன்படும். அப்படிக்கில்லாமல் பாழாவதற்கும் சோம்பேறிகளும், சூழ்ச்சிக்காரர்களும் பிழைப்பதற்காகப் பணத்தைக் காப்பாற்றுவதில் என்ன பலன்? என்று யோசித்துப்பாருங்கள்.

மற்றொரு கூட்டத்தார் 'நமக்குச் சமத்துவம் வேண்டியதற்காக சுயராஜ்யம் வேண்டு'மென்கிறார்கள். இதுவும் அர்த்தமற்றதும் அறிவற்றதுமான பேச்சு என்றுதான் சொல்லுவேன், பார்ப்பனனும், பறையனும் இருக்கும்  நாட்டின், இருக்க வேண்டிய நாட்டின் இருக்கும்படிக் காப்பாற்றபட வேண்டிய நாட்டின் மக்களுக்குச் சமத்துவம் சம்பாதிப்பது என்பது  புரட்டா?  அல்லது நாணயமானதா என்று யோசித்துப் பாருங்கள். வீண்வாய் பேச்சில் வெட்டிப் பேச்சில், மயங்குகின்ற  பாமர மக்களைக்கூட்டுவித்துப் பேசிவிடுவதினாலேயே எந்தக் காரியமும் நடந்து விடாது. எப்படியானாலும்  ஒரு காலத்தில் வெளியாய்தான் தீரும். நாட்டிற்கு உண்மை விடுதலை வேண்டுமானால் விடு தலைக்கேற்ற அரசியல் சுதந்திரம் வேண்டுமானால் பயன் படத்தக்க  நாணயமானதான சுதந்திரம் வேண்டுமென்று தான் சொல்லுகின்றேன். வரப்போகும் வரவேண்டுமென்று கேட்கப்படும், சுதந்திரத்தின் பயனாய் இனிமேல் நமது நாட்டில் பார்ப்பனனும் பறையனும், இருக்க மாட்டானா?  என்று கேட்கின்றேன், பறையன் உள்ளே விடப்படாத கோவில்கள் இடிபடுமா?  என்று கேட்கின்றேன். சாமிகளின் பேரால் நடைபெறும் வீண்செலவுகள் ஒழிக்கப்படுமா?  என்று கேட்கிறேன். இன்றைய தினம்  ஜாதிகளின்  பேரால்  இருந்து வரும் கொடுமையும் இழிவும் கொள்ளையும் ஒழிக்கப்படுமா? என்று கேட்கின்றேன். குடும்பத்துடன் பாடுபட்டும் பட்டினி கிடப்பவனும், பாடுபடாமல்  இருந்து கொண்டு  குடும்பத்தோடு மேன்மையாய் வாழுபவனும் இருக்கமாட்டானா? என்றும் கேட்கின்றேன். ஜமீன்தாரன்  என்பவனும் குடியானவன் என்பவனும் இல்லாமல் போய்விடுவார்களா? என்றும் கேட்கின்றேன். இவைகளை ஒழிக்காத சமத்துவம் என்ன சமத்துவமாகும்?  இந்த வித்தியாசங்களிருக்கும் சுயராஜ்யத்துக்கும் இப்போது இருக்கும்  அந்நிய ராஜியத் திற்கும்  என்ன வித்தியாசம் இருக்கக்கூடும்?  என்பதை யோசித்துப் பாருங்கள் மதமூடநம்பிக்கையில் மக்கள் அறிவீனர்களாய் இருப்பது போலவே அரசியலிலும் மூடநம்பிக்கையுள்ளவர்களா யிருந்து அறிவீனர்களாகி தாங்களும் கெட்டு அந்நியரையும் கெடுத்து நாட்டின் முற்போக்கை பாழாக்குகிறார்கள்.
நமது நாட்டில் அரசியல் கிளர்ச்சி ஆரம்பித்த காலம்  முதல்  இதுவரை  சமுக சம்பந்தமான  முற்போக்கு  ஏதாவது ஏற்பட்டி ருக்கின்றதா? என்று  பாருங்கள். சமுக முற்போக்கு  சீர்திருத்தம்  என்பவை ஏற்பட  தீவிர முயற்சி  செய்யப்படும் போதெல்லாம் அரசியல்  என்பது குறுக்கிட்டு தடைக்கல்லாய் இருந்து  வந்திருக்கின்றதே ஒழிய என்ன நன்மை  ஏற்பட் டிருக்கின்றது?  என்று  சொல்லுங்கள் பார்ப்போம்.  இவ் வளவு  விழிப்பான இந்தக் காலத்திலும்  அரசியல்  தலை வர்கள்  வருணாசிரம  பாதுகாப்பும்  மத நடுநிலைமையும் என்று சொல்லிக்கொண்டுதானே இன்று சுயராஜ்யம் வேண்டுமென்கிறார்கள். சுயராஜ்ஜியமும் வாங்கப் போயு மிருக்கிறார்கள். எந்தத் தலைவராவது சுயராஜ்ஜியத்தில் வருணாசிரமம் ஒழிக்கப்படும், மதக்கொடுமை ஒழிக்கப்படும் மத சம்பந்தமான பழக்கவழக்கம் கீழ் - மேல்  நிலைமை ஆகியவைகள் ஒழிக்கப்படும் என்று சொன்னார்களா?  சொல்லுகின்றார்களா? என்று நன்றாய் கவனித்துப் பாருங்கள்.
வருணாசிரமமும் மதக்கொடுமையும் ஒழிய வேண்டு மென்கிற நான் எப்படி  இந்த அரசியலைச் சுயராஜ்ஜியத்தை ஆதரிக்க முடியும்? மத நடுநிலைமையில் பறையன் ஒழிவானா? சூத்திரன் ஒழிவானா?  என்று ஆராய்ந்து  பாருங்கள். அப்படியிருக்க சுயராஜ்ஜியக் கிளர்ச்சியில் பறையன் என்பவனுக்கும், சூத்திரன் என்பவனுக்கும் அறிவும்  மானமும் இருந்தால்  அதில் சேரக்கூடுமா?  என்று  யோசித்துப் பாருங்கள்.
நண்பர்களே! நான் இதுவரை  பேசியது தங்களில் யாருக்காவது அபிப்பிராய பேதத்திற்கோஅதிருப்திக்கோ இடமிருக்ககூடியதாக இருந்தாலும் இருக்கலாம். ஆனால் நான் எனது அபிப்பிராயம் என்கின்ற முறையில் இந்த இடத்தில் எனக்குப் பட்டதைப் பேசவேண்டுமே  ஒழிய, கூட்டத்திற்குத் தகுந்தபடி சந்தர்ப் பத்திற்குத் தகுந்தபடி என்று  பேசக்கூடாது என்கின்ற முறையில் பேசினேன். இந்தக் கருத்துக்கள் தப்பாக  இருக்கலாம். இவற்றையெல்லாம் அடியோடு நீங்கள்  கண்டிக்கக்கூடியதாகவும் இருக்கலாம். ஆனால்  என் அபிப் பிராயம் என்கிற முறையில் வெளியிட  எனக்குள்ள  பாத்தியதையில் உங்களுக்கு ஆட்சேபமிருக்கா தென்று கருதியே பேசினேனேயொழிய வேறில்லை.
ஆகவே  தாங்கள் நான் சொன்னதையும் இனியும்  கனவான்கள் பலர் சொல்லப் போவதையும் தயவு செய்து  ஒத்திட்டு ஆராய்ச்சி செய்து பார்த்து உங்களுக்கு இஷ்டப் பட்டதை ஏற்றுக்கொள்ளுங்கள் என்றே  கேட்டுக் கொள்ளு கின்றேன்.
(01.09.1931-ந் தேதி தற்கால இராஜிய நிலை என்பதைப்பற்றி திருச்சªங்கோட்டில் பொதுக் கூட்டத்தில் ஆற்றிய சொற்பொழிவு)
'குடிஅரசு' - சொற்பொழிவு - 06-09-1931