Search This Blog

31.12.12

நாஸ்திகமும் சமதர்மமும்


என்னை நாஸ்திகன் என்று சொல்லுகிறவர்கள் நாஸ்திகன் என்பதற்கு என்ன அர்த்தம் கொண்டு சொல்லுகிறார்களோ அந்த அருத்தத்தில் நான் நாஸ்திகன்தான் என்பதை வலியுறுத்திச் சொல்லுகின்றேன்.

 நாஸ்திகத்திற்குப் பயந்த வனானால் ஒரு காரியமும் செய்ய முடியாது. அதிலும், சமதர்மக் கொள்கையைப் பரப்ப வேண்டுமானால் நாஸ்திகத்தினால்தான் முடியும். நாஸ்திகமென்பதே சமதர்மம் என்று பெயர். அதனால் ருஷியாவையும் நாஸ்திக ஆட்சி என்கிறார்கள்.

பவுத்தரையும் நாஸ்திகம் என்றதற்குக் காரணம், அவர் சமதர்மக் கொள்கையைப் பரப்ப முயன்றதால்தான் நாஸ்திகம் என்பது சமதர்மக் கொள்கை மாத்திரமல்ல, சீர்திருத்தம் அதாவது ஏதாவது ஒரு பழைய கொள்கையை மாற்ற வேண்டுமானால், அந்த மாற்றத்தையும், ஏன், எவ்விதச் சீர்திருத்தத்தையுமே நாஸ்திகம் என்றுதான் யதாபிரியர்கள் சொல்லித்திரிவார்கள். எங்கு எங்கு அறிவுக்கு மரியாதை இல்லையோ, சமத்துவத்திற்கு இடமில்லையோ அங்கு எல்லாம் இருந்துதான் நாஸ்திகம் முளைக்கின்றது.

கிறிஸ்துவையும், முகமது நபியையும் கூட நாஸ்திகர்கள் என்று யூதர்கள் சொன்னதற்கும் அவர்களது சமதர்மமும், சீர்திருத்தமும்தான்  காரணமாகும். துருக்கியில் பாட்சாவும், ஆப்கானியஸ்தான் அமீரும் நாஸ்திகர்கள் என்று அழைக் கப்பட்டதற்கும் அவர்களது சீர்திருத் தந்தான் காரணம்.

ஏனென்றால், இப்போது வழக்கத்தில் இருக்கும் கொள்கைகளும், பழக்கங்களும் எல்லாம் கடவுள் செய்தவையென்றும், கடவுள் கட்டளை என்றும், கடவுளால் சொல்லப் பட்ட வேதங்கள், சாஸ்திரங்கள் ஆகி யவைகளின் கட்டளையென்றுமேதான் யதாப்பிரியர்கள் சொல்லுகின்றார்கள். 

ஆகவே நாம் இப்போது எதை எதை மாற்றவேண்டும் என்கின்றோமோ அவைகள் எல்லாம் கடவுள் செய்ததாகவும்  அல்லது கடவுள் தனது அவதாரங் களையோ, தனது தூதர்களையோ செய்யச் சொன்னதாகவுமே சொல்லப் படுவதால் அவைகளைத் திருத்தவோ, அழிக்கவோ புறப்படுவது கடவுள் கட் டளையை மீறின அல்லது கடவுள் கட்டளையை மறுத்ததேயாகும்.

உதாரணமாக மக்களில் நான்கு ஜாதி கடவுளால் உற்பத்தி செய்யப் பட்டது என்று சொல்லப்படுகையில், மேற்படி ஜாதி ஒழிய வேண்டுமென்றால், அவன் கண்டிப்பாகக் கடவுளை மறுத்தோ அலட்சியம் செய்தோதான் ஆகவேண்டும். எல்லா மதங்களும், மதக்கொள்கைகளும் கடவுளாலோ, அவதாரங்களாலோ, கடவுள் தன் மையாலோ ஏற்பட்டவை என்று சொல் லப்படு கையில், அம்மத வித்தியாசங்கள் ஒழிய வேண்டும் என்றும் மதக்கொள்கைகள் மாற்றப்படவேண்டும் என்றும் சொல்லும்போது, அப்படிச் சொல்லு பவன் அந்தந்தக் கடவுள்களை, கடவுள்களால் அனுப்பப் பட்ட தெய்வீகத் தன்மை பொருந்தினவர்களை அலட்சியம் செய்த வனேயாகின்றான்.

அதனால் தான் கிறிஸ்துவர் அல்லாதவர் அஞ்ஞானி என்றும், மகமதிய ரல்லாதவர் காபர் என்றும், இந்து அல்லாதவர் மிலேச்சர் என்றும் சொல்லப்படு கின்றது. அன்றியும் கேவலம் புளுகும், ஆபாசமும் நிறைந்த புராணங்களை மறுப்பதே இந்துமதக் கொள்கைப்படி நாஸ்திகம் என்று சொல்லப்படும்போது ஜாதியையும், கர்மத்தையும் மறுப்பதை ஏன் நாஸ்திகம் என்று சொல்லமாட்டார்கள்?

ஜாதி, உயர்வு-தாழ்வு, செல்வம்-தரித்திரம், எஜமான்-அடிமை ஆகியவை களுக்குக் கடவுளும், கர்மமும்தான் காரணம் என்று சொல்வதானால், பிறகு மக்களுக்கு விடுதலையும் முன்னேற்றமும் எங்கே இருக்கின்றது? 

கடவுளையும், கர்மத்தையும் ஒழித்தாலொழிய, அதற்காக மனிதன் எப்படிப் பாடுபடமுடியும்? மேடும் பள்ளமும் கடவுள் செயலானால், மேட்டை வெட்டிப் பள்ளத்தில் போட்டுச் சமன் செய்வது கடவுள் செயலுக்கு விரோதமான காரியமேயாகும்.

மனிதனுக்கு முகத்தில், தலையில் மயிர் முளைப்பது கடவுள் செயலானால், சவரம் செய்து கொள்வது கடவுள் செயலுக்கு எதிராகவே செய்யும் அதாவது ஓரளவுக்கு நாஸ்திகமான காரியமேயாகும். அதிலும் சவரம் செய்யச் செய்ய மறுபடியும் மறுபடியும் மயிர் முளைப்பதைப் பார்த்தும் மேலும் சவரம் செய்வது வடிகட்டின நாஸ்திகமேயாகும். பிச்சைக்காரனுக்கு சோறு போடுவதும் நாஸ்திகமேயாகும்.

ஏனெனில் கடவுள் பார்த்து ஒருவனை அவனது கர்மத் திற்காக பட்டினி போட்டிருக்கும் போது நாம் அவனுக்குச் சோறு போடுவது கடவுளுக்கு விரோதமான காரியமே யாகும். அதாவது, கடவுளை நம்பாத கடவுள் செயலை லட்சியம் செய்யாத தன்மையேயாகும். இப்படியே பார்த்துக் கொண்டு போனால் உலகத்தில் ஆஸ்திகன் ஒருவனும் இருக்க முடியாது.

ஆதலால், நம்மைப் பொறுத்தவரை நாம் பல மாறுதல் ஏற்பட விரும்புவதால் அவை கடைசியாய் நாஸ்திகமேயாகும். நாஸ்திகமும் சாஸ்திர விரோதமும் தர்மத்திற்கு விரோதமும் செய்யாமல் யாரும் ஒரு சிறிதும் உண்மையான சீர்திருத்தம் செய்ய முடியவே முடியாது. நமது நாட்டினர்களே ஏழைகளை வஞ்சித்துக் கொள்ளை அடிக்கிறார்கள். பாமர மக்கள் கடவுள் செயல் என்று கருதிக் கொள்வதால் தினமும் ஏய்த்துக் கொண்டே வருகின்றார்கள்.
அப்படிப்பட்ட பாமர மக்களை விழிக்கச் செய்து நீங்கள் ஏழைகளாய் தரித்திரர்களாய் இருப்பதற்கு கடவுள் செயல் காரணமல்ல; உங்கள் முட்டாள்தனம்தான் காரணம், ஆதலால் நீங்கள் கடவுள் செயலை லட்சியம் செய்யாதீர்கள் என்று சொன்னால்தான், செல்வந்தர்களின் அக்கிரமங்களைப் பாமர மக்கள் அறியக்கூடும். அப்பொழுது கடவுள் செயலையும், அதிக மூடர்களிடம் கடவுளையும் மறுத்துத்தான் ஆக வேண்டும். இந்த நாட்டில் ஒரு புறம் ஏழைகள் பட்டினி கிடக்க, ஒரு புறம் சிலர் கோடீஸ்வரராய்  இருந்துகொண்டு தலை கொழுத்து டம்பாச்சாரியாய்த் திரிவது கடவுள் செயல் என்றால், இந்த நாட்டுச் செல்வத்தை வெளியாள் சுரண்டிக் கொண்டு போவதும், அவன் இங்கு ஆடம்பரமாய் வாழ்வதும் கடவுள்செயல் என்றுதான் சொல்ல வேண்டும்.

ஆகையால், கடவுள் செயல்கள் ஒரு காரியத்திற்கும் மற்றொரு காரியத்திற்கும் மாறுபடுவது போலவே தர்மமும், நீதியும்கூட ஒரு சமயத்திற்கும் மற்றொரு சமயத்திற்கும் மாறுபட வேண்டியனவேயாகும். ஒரு காலத்தில் அரசர்கள் விஷ்ணு அம்சமாய் இருந்தார்கள். ஆனால் இப்போது அரசர்கள் கொள்ளைக் காரர்கள் என்று சொல்லப்படுகிறார்கள். அதுபோலவே செல்வவான்கள் இந்தக் காலத்தில் லட்சுமி புத்திரர்களாய் இருக்கிறார்கள். இன்னொரு காலத்தில் அவர்கள் பெருத்த வஞ்சகப் பகற் கொள் ளைக்காரர்கள் என்று அழைக்கப்பட்டுப் பலாத்காரத்தில் அவர்களிடமிருக்கும் செல்வங்களைப்பிடுங்கிக் கொள்ளப்பட வேண்டியவர்கள் ஆவார்கள்.
உதாரண மாக மனுதர்ம சாஸ்திரத்தில் சூத்திரன் பொருள் சேர்த்து வைத்திருந்தால், பார்ப்பனன் அதைப் பலாத்காரத்தினால் பிடுங்கிக் கொள்ளலாம் என்று இருக்கிறதை இன்னும் பார்க்கின்றோம். கொஞ்சகாலத்திற்கு முன் இது அமலிலும் இருந்திருக்கிறதாம். இனி கொஞ்சநாள் போனால் பார்ப்பான் பணம் வைத்திருந்தால் பார்ப்பனரல்லா தார் பலாத்காரமாய் பிடுங்கிக் கொள் ளலாம் என்று தர்மம் ஏற்பட்டாலும் ஏற்படும். அப்படி ஏற்படுவது முன்னைய வழக்கத்திற்கு விரோதம் என்பதாக யாரும் சொல்ல முடியாது.

காலம் போகப்போக நேரில் உழுது பயிர்செய்ய முடியாதவனுக்கு பூமி இருக்க வேண்டி யதில்லை என்றும், அப்படியிருந்தாலும் சர்க்காருக்கு வரி கொடுப்பதுபோல் ஒரு சிறு அளவுதான் பாத்தியமுண்டே யொழிய, இப்போது இருப்பதுபோல் உழுகின்றவன் தன்வயிற்றுக்கு மாத்திரம் எடுத்துக் கொண்டு, ஏன் சில சமயங்களில் அதற்கும் போதாமலும் இருக்கப் பூமிக்குடையவனுக்கு பெரும்பாகம் கொடுப்பது என்கின்ற வழக்கம் அடிபட்டாலும் அடிபடலாம். அதுபோலவே இன்று கோவில் கட்டுவது தர்மமாக இருக்கின்றது.
ஆனால் பிற்காலத்தில் கோயிலை இடித்து விக்கிரகங்களை உடைத்து பள்ளிக் கூடங்களும், தொழிற்சாலை களும் ஏற்படுத்துவது தர்மம் என்றானாலும் ஆகலாம். இதுபோலவே அநேக விஷயங்களில் இன்றைய தர்மம், நாளைக்கு அதர்மமாகி, தலைகீழாக மாறக்கூடும். அப்பேர்ப்பட்ட நிலைமை வரும்போது இன்றைய நிலைமை எல்லாம் கடவுள் கட்டளை என்றால் அதை மாற்ற முற்படுகின்றவன் கடவுள் கட்டளையை மறுக்க, ஏன் கடவுளையே மறுக்கத் துணிந்தாக வேண்டும். கட வுளை மறுக்கத்துணிந்தவனே தர்மத் தின் பேரால் உள்ள இன்றைய கொடு மைகளை ஒழிக்க முடியும். அப்படிக் கில்லாமல் கடவுளுக்கும், மோட்சத்திற் கும் பயந்து கொண்டிருப்பவனால் ஒரு காரியமுமே செய்யமுடியாது என்பதுறுதி.

ஏனெனில் அரசியல், சமுக இயல், பொருளாதார இயல் ஆகியவைகளில் உள்ள இன்றைய கொடுமையான நிலையும், முட்டாள்தனமான நிலையும், அயோக்கியத்தனமான நிலையும் எல்லாம் கடவுள் கட்டளையாலும், மோட்ச சாதனங்களாலும், சாஸ்திர தர்மங்களாலுமே ஏற்பட்டவைகளாகும். ஆகையால்தான் அவ்விஷயங்களில் நான் அவ்வளவு உறுதியாய் இருக் கிறேன்.

             ---------------------------------- தந்தை பெரியார்'குடிஅரசு' - கட்டுரை - 21.05.1949

30.12.12

ஆன்மிகம் மக்களின் வளர்ச்சிக்குக் கண்டு பிடித்துக் கொடுத்தது என்ன?

அரசுக்குப் பொறுப்பில்லையா?
மாயன் காலண்டர் என்ற புழுதி அடித்து ஓய்ந்து விட்டது. நம் நாட்டு ஊடகங்கள் இப்பிரச்சினையில் நடந்துகொண்டமுறை வெட்கித் தலைகுனியத் தக்கது.

ஒரு பிரச்சினை ஓய்ந்து இன்னொரு பிரச்சினை அவர்களுக்குக் கண்டிப்பாக முதலீடு தேவைப்பட கிறது. அந்த வியாபார தந்திரத்துக்காகவே மக்களைக் குழப்புவதுபற்றிக் கவலைப்படாமல், முட்டாள்தனமான ஒன்றைக் காற்று ஊதி உயரே பறக்கச் செய்கிறார்கள்.

அறிவியலுக்கு விரோதமானது என்பதை நன்கு தெரிந்து வைத்திருந்தும், வேண்டுமென்றே மக்களிடத்தில் கண், காது, மூக்கு வைத்துப் பரப்புவது மோசடியில்லாமல் வேறு என்னவாம்?

இந்திய அரசமைப்புச் சட்டம் 51-ஏ(எச்) என்ற பகுதி ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக் கடமை என்ன என்று கூறுகிறது!

விஞ்ஞான ரீதியான அணுகுமுறை, மனிதாபிமானம் மற்றும் ஆராய்ச்சி, ஊக்கம், சீர்திருத்தம் ஆகியவற்றை வளர்ப்பதும், காப்பதும் அவசியம் என்று ஒவ்வொரு குடிமகனின் கடமை என்று வலி யுறுத்தியுள்ள நிலையில், அந்த விஞ்ஞானத்துக்கு விரோதமாக மாயன் காலண்டர் என்பது போன்ற மூடத்தனங்களைப் பரப்பும் வேலையில் ஊடகங்கள் ஈடுபடலாமா? நாய் விற்ற காசு குரைக்காது என்ற மனப்பான்மைதான் அதற்குக் காரணம் என்றால், இதைவிட நாணயமற்ற, நேர்மையற்ற ஒன்று இருக்க முடியுமா?
எதை மன்னித்தாலும் மனிதனின் அறிவை நாசப்படுத்தும் எந்தக் காரியத்தையும் மன்னிக்கவே கூடாது என்று தந்தை பெரியார் கூறும் கருத்தில் ஒளிரும் சமூகப் பொறுப்புணர்ச்சியை சற்று நினைத்துப் பார்க்கட்டும்.


மக்களுடைய அறிவு, காலம், பொருள் இவற்றைப் பாழ்படுத்துவதற்கு, சீர்குலைப்பதற்கு யாருக்கும் உரிமை கிடையாது.

நியாயமாக மக்கள் நல அரசு (Welfare State) என்றால், இதுபோன்ற மூடத்தனமான - மோசடியான வற்றைப் பரப்பும் அல்லது அதற்கு ஊக்கம் கொடுக் கும் ஊடகங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமே!
லண்டன் தொலைக்காட்சியில் ருத்திராட்சம் பற்றி ஒரு விளம்பரம் ஒளிபரப்பப்பட்டது. கெட்ட ஆவிகளை ருத்திராட்சம் விரட்டும் என்று கூறப்பட்டது. எதிர்ப்பு வெடித்துக் கிளம்பவே அந்த விளம்பரம் உடனே தடுத்து நிறுத்தப்பட்டது.

இங்கு என்னடா என்றால், பொழுது விடிந்தது முதல் ஊசிப் போன சரக்கு விநியோகம்தானே நடந்துகொண்டு இருக்கிறது.

திருவண்ணாமலை தீபம் என்று கூறி டன் டன்னாக நெய்யைக் கொட்டி, ஆயிரக்கணக்கான மீட்டர் துணிகளை எரிய விடும் ஒரு நிகழ்ச்சியை நேரிடையாக இங்குள்ள தொலைக்காட்சிகள் ஒளிபரப்புகின்றன என்பது எத்தகைய வெட்கக்கேடு!

ஒவ்வொரு வாரமும் ஆன்மீகச் சிறப்பிதழை நாளேடுகள் வெளியிடுகின்றன. புராணக் குப்பை களை அபத்தமானவற்றை அவற்றில் அள்ளிக் கொட்டுகின்றன.

எல்லா அக்கப்போர்களையும் எழுதிவிட்டு கடைசியில் எப்படி முடிப்பார்கள் தெரியுமா? .....என்பது அய்தீகம்..... என்பது நம்பிக்கை என்று முடிப்பார்கள்.வெளியிடுகிறவர்கள் அதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ளாமல் மக்களை மடையர்களாக்குவது கொலை குற்றத்தைவிட மோசமானது அல்லவா!

இராசி பலன்களை வெளியிடுவது யோக்கியமான செயலா? இப்பொழுது 2013 ஆம் ஆண்டுக்கான ஆன்மிகத் தகவல்கள் என்று சிறப்பிதழை வெளியிடு கிறார்கள்.

எத்தனை ஆயிரம் ஆண்டுகாலமாக ஆன்மிகம் இருந்து வருகிறது? காதொடிந்த ஊசி அளவுக் காவது பலன் உண்டா?

ஆன்மிகம் மக்களின் வளர்ச்சிக்குக் கண்டு பிடித்துக் கொடுத்தது என்ன? விரலை மடக்க முடியுமா?

நம்மை முட்டாளாக்கியது - சோம்பேறிகளாக் கியது - நமது பொருளையும் - பொழுதையும் பாழாக் கியது அல்லாமல் ஆன்மிகத்தால் ஏற்பட்ட நிகரப் பலன் என்ன?

மதங்களுக்கு உரிமை உண்டு, அதன் விடயங் களில் அரசு தலையிடாது என்பது பொறுப்பான நிலைப்பாடா?

இன்னும் பள்ளிப் பாடங்களில் புராணக் குப்பைகள் இடம்பெறுவது ஏன்? 

எதிர்காலம் நிகழ்கால இருபால் மாணவர்களின் கைகளில்தானே இருக்கிறது - அவர்களுக்கு அறிவைக் கொடுக்க வேண்டாமா?

அரசும், பொதுநல விரும்பிகளும், அறிவியல்வாதிகளும் இந்த வகையில் சிந்திக்கட்டும்! செயல் படட்டும்!!
                        ------------------------”விடுதலை” தலையங்கம் 29-12-2012

29.12.12

இரட்டை நாக்குக்குப் பெயர்தான் டாக்டர் இராமதாஸ்- உரசிப் பார்க்க ஆசைப்படுகிறாரா - மருத்துவர் இராமதாஸ்?


உரசிப் பார்க்க ஆசைப்படுகிறாரா - மருத்துவர்? கலி.பூங்குன்றன்
துக்ளக் இதழுக்கு (2.1.2013) மருத்துவர் திரு.ச. இராமதாஸ் பேட்டி ஒன்று கொடுத்துள்ளார்.

திராவிட இயக்கத்தை கொச்சைப்படுத்த - அவதூறு சொல்ல பார்ப்பனரல்லாதார்களில் யாரேனும் கிடைத்தால் பார்ப்பன ஏடுகள் அவர்களுக்கு தலைப்பாகை கட்டி விடும்.

இதே துக்ளக்கில் திரு.ச. இராமதாஸ் அவர்கள் தந்தை பெரியார் அவர்களை காட்டிக் கொடுத்து பேட்டிக் கொடுத்ததுண்டு. (15.4.1988)

துக்ளக் கேள்வி: பெரியார் ஜாதியை ஒழிக்க போராடினார் என்றெல்லாம் சொல்கிறீர்கள். அவர் ஆரம்பித்த நீதிக்கட்சி ஆட்சிக்கு வந்து என்ன செய்தது?

டாக்டர் ச.இராமதாஸ் பதில்: எல்லோருமே சேர்ந்துதான் எங்களை ஏமாற்றினார்கள். பிராமணர், பிராமணரல்லாதார் என்ற கோஷத்தை கொண்டு வந்தார்கள். பிராமணரல்லாதார் என்று சொல்லும் பொழுது நாங்கள் எல்லாம் முன்னுக்கு வருவது போல் இருந்தது என்று நினைத்தோம். ஆனால் ஏமாந்தோம் 

என்று தந்தை பெரியாரை இன எதிரியான பார்ப்பனரிடம் - அதுவும் சோ.இராமசாமியிடம் காட்டிக் கொடுத்து பேட்டிக் கொடுத்தவர்தான் இவர்.
பார்ப்பனர் எதிர்ப்பு என்று ஒன்று இல்லையானால் ஆச்சாரியாரின் குலக்கல்வி திட்டம்தானே நடைமுறைக்கு வந்திருக்கும்?

அந்த நிலை என்றால் மருத்துவர் திரு.ச.இராமதாசு கழுத்தில் ஸ்டெதாஸ் கோப்பா தொங்கும்? ஒரு கணம் மனச்சான்றுடன் நினைத்துப் பார்க்க வேண்டும் - அப்படி ஒன்று இருந்தால்.

நன்றி உணர்ச்சியுடன் நினைத்துப் பார்க்க வேண்டும் - அப்படியொரு உணர்ச்சி இருந்தால். பார்ப்பனர் எதிர்ப்பு உணர்ச்சியின் அடிப்படையில் பிறந்ததுதானே சமூக நீதி உணர்ச்சி?

இந்த சமுதாய சீர்திருத்தம் முதற்படி பார்ப்பன ஆதிக்கத்தில் இருக்கும் பதவி உத்தியோகங்களை விகிதாச்சாரம் கைப்பற்ற வேண்டியது என்பதைதான் A,B,C,D யாக கொண்டோம் - கொள்கிறோம்.

ஆனதாலேயே தான் நான் வகுப்புவாதி என்று சொல்லப்பட்டேன் என்பதல்லாமல் நானும் வகுப்பு வாத உருவமாகவே இருந்து வருகிறேன். நான் அரசியலில் பல மாறுதலில் ஈடுபட்டிருக்கலாம் என்றாலும் சமுதாயத்துறையில் பார்ப்பனீய வெறுப்பு உள்ளவன் நான். அதுதான் என்னை பகுத்தறிவு வாதியாக (நாத்திகனாக) ஆக்கியது (விடுதலை, 5.3.1968) என்றாரே தந்தை பெரியார்.

தந்தை பெரியார் அவர்களின் இந்தக் கருத்தை புரிந்து கொண்டவராக இருந்தால் பெரியார் மொழியில் சொல்ல வேண்டும் என்றால் இந்த A,B,C,D யை இராமதாஸ் கற்றிருந்தால் பார்ப்பன எதிர்ப்பை கொச்சைப்படுத்தி (அதுவும் ஒரு பார்ப்பனரிடம்) சபாஷ் பட்டம் வாங்கியிருப்பாரா?
திராவிட இயக்கத்தினருக்கு எதிர்ப்பானவர்கள் என்றால் அவர்களை கொஞ்சம் மூக்கு சொறிந்து காற்றடித்து பலூனை பறக்க விடுவார்கள் பார்ப்பனர்கள்.
அன்றைய இராவணனை காட்டிக் கொடுத்த விபீஷணனுக்கு தானே ஆழ்வார் பட்டம் கிடைத்தது. விசுவாசியாகிய கும்பகர்ணனுக்கு கிடைக்கவில்லை அல்லவா!

இந்த பேட்டியில் கூட தோழர் திருமாவளவன் மீது குற்றப்பத்திரிகை படித்துள்ளார். தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் உயர்ஜாதி பெண்களை காதல் செய்து பிறகு பேரம் பேசுகிறார்கள் என்று திருப்பித் திருப்பி சொல்கிறார்.
ஒரே ஒரு கேள்விக்கு மருத்துவர் பதில் சொல்ல வேண்டும். எந்தத் தேதியில் இருந்து இந்தக் கருத்து இவருக்கு உதித்தது? கடந்த சட்டமன்ற பேரவை தேர்தலுக்குப் பிறகு என்று கூட சொல்ல முடியாதே!

இந்த ஆண்டு ஜனவரி மாததத்தில் கூட (22.1.2012) தேவ நேயப் பாவாணர் நூலக அரங்கில் அனைத்து பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பட்டியலின, பழங்குடி இன சிறுபான்மை சமுதாயங்களைச் சேர்ந்த தலைவர்களைக் கூட்டி ஜாதி வாரி கணக்கெடுப்பு உட்பட பல தீர்மானங்களை நிறைவேற்றவில்லையா? (பா.ம.க.வின் ஏடான தமிழ் ஓசை 23.1.2012, பக்கம் 4) இந்த பத்து மாத இடைவெளியில் தான் தலித்கள் மேல்ஜாதி பெண்களைத் திடீரென்று காதல் செய்யத் தொடங்கி விட்டனரா? தொடர்ந்து நாடாளுமன்றம், சட்டமன்றத் தேர்தல்களில் சந்தித்த கடும் தோல்வி - அவரை விரக்தியின் எல்லைக்கு விரட்டிய நிலையில் எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலைக்கு ஆளாகி, கடைசியில் இந்த ஜாதி என்னும் - தமிழ்நாட்டில் செல்லுபடியாகாத மணற்கயிறை பிடித்துத் தொங்க ஆரம்பித்துள்ளார் என்பதுதான் உண்மை.

தர்மபுரியில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரையோ, அங்குள்ள பிற சமுதாயத்தினரையோ சந்திக்காமல், தலித் பகுதிக்கு மட்டுமே சென்று மூக்கை சிந்திவிட்டு வந்த லெட்டர்பேட் தலைவர்களோ, இராமதாஸ் ஜாதி அரசியல் நடத்துவதாகக் கூறும் மற்றவர்களோ, ஜாதி மறுப்புத் திருமணம் நடத்த புறப்பட்டுள்ள வீரமணி வகையறாவோ, திமுகவோ, கம்யூனிஸ்டுகளோ, முதலில் தங்கள் குடும்பத்தில் ஜாதியை விட்டு ஜாதி மாறி பெண்கொடுப்பது வழக்கமாக கொள்ளட்டும்.

தலித களுடன் கொள்வினை, கொடுப்பினை செய்ய வேண்டும். அப்பொழுதுதான் ஜாதி ஒழியும். இதுதான் எங்கள் கொள்கை என்று இந்தத் தலைவர்கள் அறிவிக்கத் தயாரா என்று கேட்கிறேன் என்று சவால் விட்டுள்ளார் மருத்துவர்.

தருமபுரியில் பாதிக்கப்பட்டவர்களையும் பாதிப்புக்குக் காரணமானவர்களையும் சம அளவில் பார்க்க வேண்டும் என்று திரு.ச.இராமதாஸ் விரும்புவதிலிருந்தே அவரது நேர்மை சறுக்கி விழுந்து விட்டது.

மேல் ஜாதியில் பாதிக்கப்பட்டவர் என்று யாரைச் சொல்லுகிறார்? தற்கொலை செய்து கொண்ட நாகராஜன் என்பவர் பாதிக்கப்பட்டவர் என்று சொல்ல முன்வருகிறாரா?

திருமணம் முடிந்து ஒரு மாதம் கழித்து தற்கொலை செய்து கொண்டவர் பாதிப்புக்கு ஆளானவர் என்று சொல்லுகிறாரா? இதில் பார்க்கப்படவேண்டியது - இளங்கோவின் மகன் இளவரசன் என்ற தோழனை காதலித்து விரும்பி திருமணம் செய்து கொண்டார் நாகராசனின் மகள் திவ்யா என்பது நீதிமன்றத் திலேயே மணமகளின் வாக்குமூலம் உறுதிபடுத்தப் பட்டதே - அதற்குப் பின் இதில் தலையிட பெற்றோர்களுக்கும் உரிமை கிடையாது. ஜாதிக் கொள்ளிக் கண்களுடன் பார்ப்பவர்களுக்கு சட்டப்படியும் நியாயப்படியும் இடமில்லையே!
உண்மை இவ்வாறு இருக்கும் போது பாதிக்கப்பட்ட மேல்ஜாதி மக்கள் வசிக்கும் பகுதிக்குப் போனார்களா? போனார்களா? என்று புலம்பி அனுதாபம் தேடிக் கொள்ள முயற்சிப்பதைக் கண்டு வேண்டுமானால் அனுதாபப் படலாம்.

வீரமணி வகையறாவாம்! மருத்துவர் ராமதாசு அய்யா அவர்கள் கூறும் வீரமணி வகையறா என்பதற்கு என்ன பொருள்?

வீரமணி பாரம்பரியம் என்பது தந்தை பெரியார் அவர்களின் பாரம்பரியம். எண்பது வயதில் 70 ஆண்டு பொது வாழ்க்கைக்கு சொந்தமான பாரம்பரியம்.
40 முறைகளுக்கு மேல் சிறை சென்ற பாரம்பரியம். (சிறைக்குள் இருந்த தன்னை விடுவிக்குமாறு முதலமைச் சரிடம் தூது போகச் சொன்ன பாரம்பரியம் அல்ல) மருத்துவர் வீட்டுத் திருமணத்துக்குக்கூட திருக்குறளாருடன் வீரமணி அவர்கள் வருவதுதான் பெருமை  என்று கருதப்படக்கூடிய வகையறா!

அந்த வகையறா - தோல்வியில் துவண்டவர்களுக்கான துன்பப் பாடலின் தொகையறாவாக மாறிவிட்டது போலும்!

வீரமணி வகையறாவின் விடுதலையின் தலையங்கங்களும், அறிக்கைகளும் தான் மருத்துவர் ராமதாசு உட்பட பலருக்கு சமூகநீதிப்பாடம் சொல்லிக் கொடுப்பவை என்பதை மறந்து விடலாமா?

பார்ப்பனர்கள் கூட பயன்படுத்தத் தயங்கும் வார்த்தையை அவர்களின் தொங்கு சதையாகி விட்டவர்கள் பயன்படுத்து கிறார்கள் என்று புரிந்து கொள்ள முடிகிறது. (கோவையில் மருத்துவர் கூட்டிய அனைத்து ஜாதி சங்க கூட்டத்தில் வாழ்த்து தெரிவித்திருந்த பார்ப்பன சங்கத்தின் வாழ்த்து மடலை மருத்துவர் படிக்க, பலத்த கரவொலியாம்) அடடே! பார்ப்பன எதிர்ப்பை ஒரு கட்டத்தில் எப்படியெல்லாம் முழங்கியவர்! தன் தொண்டர்களை கருப்புச் சட்டை போட சொன்னவர், கேவலம் ஒரு தேர்தல் தோல்வியால் எல்லா மானத்தையும் மூட்டைக் கட்டி பார்ப்பனர்களின் பாதார விந்தங்களில் சமர்ப்பிக்க தயாராகி விட்டனர்- பார்த்தீர்களா?

இன்றைக்குத் தமிழ்நாட்டுல எந்தக் கட்சி கொள்கைக்காக நடக்குது எங்கள் கட்சி உட்பட. எல்லாத்துக்குமே அரசியல் ஆதாயம் ஒண்ணு தான் அடிப்படை என்று பச்சையாக ஆனந்த விகடனுக்கு (13.9.1998) ஒப்புதல் வாக்குமூலம்  கொடுத்தவர். வீரமணி அவர்களைப் பற்றி பேச அடிப்படை தகுதி உண்டா?
இன்றைக்குத் தடித்த நாக்குடன் பேசும் மருத்துவரின் இன்னொரு ஒப்புதல் வாக்குமூலம் இதோ!

திராவிடர் கழகத்திற்கும், பாட்டாளி மக்கள் கட்சிக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால் இது ஓட்டு பொறுக்குகிற கட்சி அவ்வளவுதான். ஓட்டுப் பொறுக்குகிற வேலையையும் சற்று ஒதுக்கி வைத்து விட்டு திராவிடர் கழகத்தின் பின்னாலே வருவதற்கு நாங்கள் என்றைக்கும் தயாராக இருக்கிறோம் என்று சொன்ன வரும் சாட்சாத் இந்த திண்டிவனத்தார்தான். (6.11.1993 அன்று சென்னை பெரியார் திடலில் சமூக நீதி ஆதரவு - மதவெறி ஆதிக்க எதிர்ப்பு மாநாட்டில் மருத்துவர் ஆற்றிய உரை)

திராவிடர் கழகத்தின் பின்னாலே எப்பொழுதும் வரத் தயாராக இருப்பவர் தான் நமது மருத்துவர். இப்பொழுது ஏதோ விரக்தியால் தடுமாறுகிறார். நாளையோ நாளை மறுநாளோ மானமிகு வீரமணி அவர்களின் தலைமையேற்று திராவிடர் கழகத்தின் பின்னால் வரக்கூடியவர் என்று நம்புவோமாக!
இன்னொரு அணுகுண்டு கேள்வியைப் போட்டு அப்படி யே அதிர வைத்து விட்டார் போங்கள்.

வீரமணி வீட்டில் ஜாதி மறுப்பு திருமணம் உண்டா என்பது தான் அந்த அணுகுண்டுக் கேள்வி. வீரமணி அவர்களின் அத்தனை பிள்ளைகளுக்கும் ஜாதி மறுப்புத் திருமணம்தான். மானமிகு வீரமணி அவர்கள் திருமணம் செய்து கொண் டதும் கூட ஜாதி மறுப்பு (விதவையரை) மணந்து கொண் டவர்களின் மகளைத்தான். கலைஞரைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளாரே மருத்துவர் - அவர் வீட்டிலும்கூட தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மருமகள் வரை உண்டே!
சவால் விடும் மருத்துவரை நோக்கி வினா எழுப்பும் நேரம் இப்பொழுது எங்களுக்கு.

பெரியாரை நூற்றுக்கு நூறு பின்பற்றுவதாக முரசு கொட்டும் அய்யா மருத்துவரே - உங்கள் வீட்டில் ஒரே ஒரு பிள்ளைக்காவது ஜாதி மறுப்புத் திருமணம் செய்தது உண்டா? உங்கள் பேரப் பிள்ளைக்காவது அப்படி செய்ய உத்தேசம் உண்டா? சவால் விட்டே கேட்கிறோம்!

ஆம், நான் ஜாதி வெறியன்தான் என்று உளுந்தூர் பேட்டையில் (6.12.2012) ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த வராயிற்றே! இந்தக் கேள்விக்கு ஏது விடை அவரிடம்....?

ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்த கதைபோல தந்தை பெரியார் கருத்துக்கு வியாக்கியானம் செய்ய வேறு ஆரம்பித்து விட்டார்.

இவர்கள் பெரியாரை பற்றி குறிப்பிடுகிறார்கள். பெரியார் பல பிரச்சினைகளுக்காகப் போராடினார். அவற்றில் ஜாதி மறுப்பும் ஒன்று என்று பேட்டிக் கொடுத்துள்ளார். இது உண்மையா, பெரியார் பாடுபட்டவற்றுள் ஏதோ ஒன்றுதான் ஜாதி ஒழிப்பே?

தந்தை பெரியார் அவர்களின் அடிப்படைக் கொள்கை ஜாதி ஒழிப்பு. பேதமற்ற இடமே மேலான திருப்தியான இடமாகும் (குடிஅரசு, 11.11.1944) என்றார் தந்தை பெரியார்.

அந்த பேதத்தில் முதன்மையானது பிறப்பின் அடிப்படை யிலான ஜாதி. அதனை ஒழிக்க புறப்பட்டபோது கடவுள், மதம், வேதம், இதிகாசங்கள், புராணங்கள் குறுக்கே வந்து படுத்தபோது காவல் நாய்களாக அவை குரைத்த போது அத்தனையையும் ஒழிக்க முற்பட்ட மாபெரும் ஜாதி ஒழிப்பு வீரர்தான் தந்தை பெரியார்.

இன்னும் சொல்லப்போனால் ஜாதியை பாதுகாக்கிறது இந்திய அரசமைப்புச் சட்டம் என்றபொழுது அதனைப் பாதுகாக்கும் பகுதியை எரிக்கும் போராட்டத்தை நடத்தி (26.11.1957) பத்தாயிரம்  கருஞ்சட்டை தொண்டர்கள் ஆறுமாதம் முதல் மூன்று ஆண்டுகள் வரை வெஞ்சிறை சென்ற வரலாறெல்லாம் மருத்துவருக்குத் தெரியுமா?

தந்தை பெரியாரை விமர்சிக்கும் பொழுது நிதானம் வேண்டும். அவசரப்பட்டு விடக்கூடாதென்பார் பா.ஜீவானந்தம். அந்த அறிவுரையையே மருத்துவருக்கு கூற விரும்புகிறோம். பெரியார் என்ற வார்த்தையை உச்சரித்து விடுவதாலேயே பெரியாரைத் தெரிந்து கொண்டதாக மனப்பால் குடிக்க வேண்டாம்.

தமிழ் ஓசை நாளேட்டை நடத்தி வந்தாரே பா.ம.க நிறுவனர் திரு.இராமதாஸ். அதையாவது அவர் ஒழுங்காகப் படித்தாரா என்று தெரியவில்லை. பெரியாரின் அடிப்படைக் கொள்கை என்ன என்பது அதில் வெளியாகி உள்ளதே.
சமதர்மம் என்ற வார்த்தைக்கு சமூகத்துறையிலும், பொருளாதார துறையிலும் மக்கள் உயர்வு தாழ்வு இல்லாமல் சமத்துவமாக வாழவேண்டும் என்பதையே சமதர்மம் என்று நான் கருத்துக் கொண்டு சமதர்மம் என்ற வார்த்தையை பிரயோகிக்கிறேன்.... நம் நாட்டிற்கு முதலில் சாதி பேதங்கள் ஒழிந்து மக்கள் யாவரும் பிறவியில் சமம் என்பதான சமதர்ம முயற்சியே முதலில் செய்ய வேண்டி இருக்கிறது.

சாதி, பேதம், பிரிவு ஆகியவை ஒழிந்தால்தான் சமூக வாழ்க்கையில் சமதர்மமாக வாழ முடியும் என்று கூறினார் தந்தை பெரியார். (தமிழ் ஓசை, 9.2.2012, பக்கம் 4)

தந்தை பெரியார் அவர்கள் முதலில் ஒழிய வேண்டியது சாதியே என்று பா.ம.க. நிறுவனர் ஏட்டிலேயே வெளி வந்துள்ளதே - இது கூட புரியாமல் பெரியார் எத்தனையோ பிரச்சினைகளுக்காக பாடுபட்டார்.

அதில் ஒன்று சாதி என்று தன்னுடைய கருத்தை பெரியார் மீது ஏற்றிக் கூறுவது ஏற்புடையதுதானா?

காதல் என்று கூறப்படுவதை கடுமையாக விமர்சித்து நிறைய பேசி இருக்கிறார் பெரியார். அதுபற்றி இவர்கள் எதுவும் பேசமாட்டார்கள் என்று  வேறு குற்றப்பத்திரிகை படித்திருக்கிறார். விமர்சனம் என்பது வேறு - கருத்து என்பது வேறு - இரண்டும் ஒன்றல்ல. காதலை பற்றி தந்தைபெரியார் தன் கருத்தை பதிவு செய்துள்ளார்.

சுதந்திர காதலுக்கு இடமிருந்தால்தான் ஒரு நாடோ, ஒரு சமூகமோ அறிவு, அன்பு, நாகரீகம், தாட்சண்யம் முதலியவைகளில் பெருக்கமடையும். நிர்பந்த காதல் இருக்குமிடத்தில் மிருகத் தன்மையும், அடிமைத்தன்மையும் தான் பெருகும் (குடிஅரசு, 30.11.1929) என்று இன்றைக்கு 83 ஆண்டுகளுக்கு முன்பே காதல் பற்றி கருத்துச் சொன்னவர் பெரியார் ஆயிற்றே!!

கேள்வி: நீங்கள் தலித் அல்லாத பிற ஜாதியினர் கூட்டமைப்பை ஏற்படுத்தியிருப்பதின் நோக்கம் என்ன?

மருத்துவர் பதில்: தமிழகத்தில் எந்த வகையிலும் தீண்டாமை இல்லை, ஆனால் என்னை ஜாதியைச் சொல்லி திட்டினார் என்று புகார் கொடுத்தால் உடனே வழக்கு பதிவு செய்வது, கைது என்று நடவடிக்கைகள் தொடர்கிறார். இந்த பி.சி.ஆர் சட்டத்தில் பதிவாகும் வழக்குகளில் இரண்டு சதவிகிதம் தான் நிரூபிக்கப்படுகின்றன. தலித் அல் லாத பல சமுதாயத்தினர் இந்த பிரிவால் பாதிக்கப்பட்டுள் ளனர் என்பது மருத்துவரின் இன்னொரு குற்றச்சாற்று.
எடுத்த எடுப்பிலேயே தமிழகத்தில் எந்த வகையிலும் தீண்டாமை இல்லையென்று கூறும் மருத்துவர் இதே பேட்டியில் பிற்பகுதியில் என்ன சொல்லுகிறார்?

கும்பகோணம் அருகே குடிதாங்கி என்ற ஊரின் வழியாக தலித் மக்களின் பிணத்தை எடுத்துச் செல்ல முடியாத நிலை இருந்ததை அறிந்து நானே அங்கு போய் தலித் சமூகத்தை சேர்ந்தவரின் பிணத்தை அந்தப் பகுதி வழியாக சுமந்து சென்றேன் என்று சொல்லியிருக்கிறார்.

இதன் மூலம் தமிழ்நாட்டில் தீண்டாமை இருக்கிறது என்று ஒப்புக் கொள்ளவில்லையா? ஏன் இந்த முரண்பாடு?

இன்னும் பல கிராமங்களில் தேநீர்க் கடைகளில் இரண்டு கிளாஸ்கள் இருக்கவில்லையா? சுடுகாட்டுப் பிரச்சினை தீர்ந்துவிட்டதா?
கீரிப்பட்டி, பாப்பாரப்பட்டி, கொட்டாங்கஞ்சி ஏந்தல் என்ற ஊராட்சிகளில் ஊராட்சி தேர்தலே பலமுறை நடத்த முடியாத சூழ்நிலை இருந்ததை மருத்துவர் அறியமாட்டாதவரா? கலைஞர் ஆட்சியில்தானே அதற்கு தீர்வு காணப்பட்டது?

அதற்காக பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி அவர்கள் கலைஞரைப் பாராட்டி பேசவில்லையா? வசதியாக இவற்றையெல்லாம் மருத்துவர் மறந்து விட்டாரோ?

மருத்துவர் ராமதாசு அவர்கள் பொதுவாழ்க்கைக்கு எப்போது வந்தார் என்று எல்லோருக்கும் நன்றாக தெரியும். மண்டல் குழு பரிந்துரைகளை அமல்படுத்துவதற்காக நாம் களம் கண்ட நேரங்களில் எல்லாம் இவர் எங்கிருந்தார்?

மண்டல் நாயகர் வி.பி.சிங்கை எப்படி வர்ணித்தார்? மேல் ஜாதி (ராஜ புத்திரர்) வெறி பிடித்த விபிசிங் அழுகிக் கொண்டிருக்கும் இந்திய அரசியல் பழத்தில் அழுகாதது போல் தோற்றமளிக்கும் பகுதிதான், செல்லாத நாணயத்தில் ராஜிவ் ஒரு பக்கம் என்றால் விபிசிங் மறுபக்கம் ஆவார் என்று தினப்புரட்சி ஏடு தலையங்கம் தீட்டவில்லையா?

இன்றைய சூழ்நிலையில் எதிர்வரும் 7,8,9 ஆகிய நாள்களில் கருணாநிதியுடன் விபிசிங் பங்கேற்கும் தமிழ்நாட்டின் நிகழ்ச்சிகளின் போது பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கத்தினர் விலகியே நிற்க வேண்டும். வேடிக்கை பார்க்கக் கூட வீதிக்கு வரக்கூடாது எனக் கேட்டுக் கொள்கிறேன் (1.2.1990) என்று அறிக்கை விட்டவர்தானே இந்த பாட்டாளி?

அந்த விபிசிங் இல்லையென்றால், திராவிடர் கழகம் இல்லையானால் (42 மாநாடுகளையும், 16 போராட்டங் களையும் அதற்காக நடத்தியது) மத்திய அரசில் பிற்படுத்தப் பட்ட மக்களுக்கு 27 விழுக்காடு கிடைத்திருக்குமா?
பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வருமான வரம்பு ஆணை யை எம்.ஜி.ஆர். கொண்டு வந்தபோதும் எங்கிருந்தார் டாக்டர்?

69 சதவிகித இட ஒதுக்கீடு திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களின் முயற்சியால் (31சி சட்டத்தையே எழுதிக் கொடுத்தவர் இவர்தானே) பாது காக்கப்பட்ட போது அம்பாசங்கர் தலைமையில் அமைக்கப் பட்ட குழு துரோகம் செய்த நேரத்தில் அதனை எதிர்த்து போர்க்கொடி தூக்கியது யார்?

மாநாடு நடத்தியது யார்? அம்பாசங்கர் வன்னியர் என்பதால் அவர் செய்த துரோகத்தை கண்டும் காணாமல் இருந்தவர் யார்? இதற்காக திராவிடர் கழகம் சென்னை பெரியார் திடலில் கூட்டிய மாநாட்டில் பன்மொழிப் புலவர் அப்துல் லத்தீப் மருத்துவர் ராமதாசு அவர்களை உரச வில்லையா? யார் மறந்தாலும் கருஞ்சட்டைக்காரன் இந்த வரலாறுகளையெல் லாம் மறக்க மாட்டான்.
மருத்துவக் கல்லூரியில் சேர சமஸ்கிருதம் படித்து இருக்க வேண்டும் என்ற தடையை திராவிடர் இயக்க ஆட்சி நீக்காமல் இருந்தால் டாக்டராகி இருப்பாரா திரு.இராமதாசு அவர்கள்? இதை எல்லாம் மறந்து இப்பொழுது திராவிடர் இயக்கத்தைக் கொச்சைப் படுத்துகிறார். இதில் இன்னொரு பார்ப்பனத் தன்மை என்ன என்றால் பெரியாரை பாராட்டுவது போல் பேசுவதுதான்.

இரட்டை நாக்குடை....யார்?

இது 1991 இல்

கருணாநிதியின் இந்த இரண்டு வருட ஆட்சிக் காலத்தில் தன்னாட்சி, ஈழப் பிரச்சினை, இடஒதுக்கீடு, நுழைவுத் தேர்வு, தமிழ் வழிக் கல்வி இவற்றில் சரியான தீர்வு எடுக்கவில்லை.

அவரது அரசு தந்திட்ட 20 சதவிகித இடஒதுக்கீடு (மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு) ஒரு மோசடி என்பதை நாம் புள்ளி விவரங்களோடு எடுத்துச் சொல்லியும், அதுபற்றிக் கவலைப்படாமல் ஏதோ வன்னியர்களுக்கு மட்டும் அதிகம் செய்துவிட்டதாகப் பொய்ப் பிரச்சாரம் செய்வதில் முனைப்பாகச் செயல்பட்டார்

                    -------------------  டாக்டர் ச. இராமதாஸ் அறிக்கை 31.1.1991

இது 1999இல்

இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலேயும் அது மத்திய அரசனாலும் சரி மாநில அரசாக இருந்தாலும் சரி, பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு இருக்கின்றதா? ஆனால் இந்தியா வில் எந்த மாநிலத்திலும் மிகவும் பிற்படுத்தப்பட் டோருக்கென்று ஒருபிரிவு இல்லை அந்தப் பிரிவை மிக மிக பின்தங்கிய மக்களுக்காக இடஒதுக் கீட்டை அள்ளித் தந்த கலைஞர் அவர்களை சிறுபான்மை சமுதாயமான 107 சமுதாயமும் மறக்க முடியுமா? அப்படி மறந்தால் அவர்கள் நன்றி கெட்டவர்களாவார்கள்

                    ----------------அரியலூரில் பா.ம.க., சார்பில் நடத்தப்பட்ட சமய நல்லிணக்க மாநாட்டில் டாக்டர் இராமதாஸ் - 9.7.1999



1991இல் குற்றப் பத்திரிகை
1999இல் நன்றி அறிவிப்பு

- இந்த இரட்டை நாக்குக்குப் பெயர்தான் டாக்டர் இராமதாஸ்.


                           ---------------------------” 28-12-2012”விடுதலை”யில் கலி.பூங்குன்றன்அவர்கள்  எழுதிய கட்டுரை

28.12.12

ஊரெங்கும் பெரியார் சிலைகள் உருவாகட்டும்!


எண்ணூரில் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் முழு உருவ வெண்கலச் சிலை திறப்பு விழா 25.12.2012 அன்று எழுச்சியுடன் நடைபெற்றது. ஆயிரக்கணக்கில் பொது மக்கள் உற்சாகத்துடன் திரண்டு இருந்தனர்.
கழகத் தோழர்களின் இடையறாத முயற்சியால் 5 ஆண்டுகள் சிறுகச் சிறுகச் சேர்த்து, சிறு துளி பெரு வெள்ளம் போல் ஆக்கி இந்த மாபெரும் பணியைச் செய்து முடித்துள்ளனர்.

தந்தை பெரியார் சிலையைத் திறப்பது - ஒரு தத்துவத்தை மக்கள் மத்தியில் பறைசாற்றுவதற்காக - நிலை நிறுத்துவதற்காக.

பெரியார் சிலைப் பீடங்களில் பொறிக்கப்படும் வாசகங்கள் மிக மிக முக்கியமானவை.

கடவுள் மறுப்பு, ஆத்மா மறுப்பு உள்ளிட்ட தந்தை பெரியார் அவர்களின் கருத்துக்கள் பீடத்தில் பொறிக்கப்பட்டு வருகின்றன.

உலகில் எந்த நாட்டிலும் இந்த நிலையைக் கேள்விப்பட்டுக்கூட இருக்க முடியாது.

எதையும் மன்னிக்கலாம் - ஆனால் அறிவைக் கெடுப்பவர்களை மன்னிக்கவே கூடாது என்றார் பகுத்தறிவுப் பகலவன்.

அப்படி அறிவைக் கெடுப்பதில் கடவுளும், மதமும் முக்கிய இடம் வகிப்பதால் தந்தை பெரியார் அவர்களின் சிலை பீடத்தில் கடவுள் மறுப்பும், ஆத்மா மறுப்பும் முக்கியமாக இடம் பெற்று வருகின்றன.

இதனை எதிர்த்து நீதிமன்றங்கள் சென்றவர்கள் உண்டு. ஏன், எண்ணூரில்கூட சில அடிப்படை இந்து மதவாத சக்திகள் பிரச்சினையைக் கிளப்பிப் பார்த்தனர். பொது மக்களின் அபரீதமான ஆதரவால் அந்தக் கூச்சல் கிஞ்சிற்றும் எடுபடவில்லை. இதுபோல பொது இடங்களில் இத்தகைய வாசகங்கள் இடம் பெறலாமா என்று வினா எழுப்புபவர்களுக்கு விடையை நாம் எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த நீதியரசர் எம்.எம். இஸ்மாயில் அவர்களே, மட்டை இரண்டு கீற்றாகக் கிழித்துச் சொல்லிவிட்டார்.

பெரியாருக்குச் சிலை வைத்தால் பெரியாரின் கருத்தைத்தானே பொறிப்பார்கள் - அதில் என்ன குற்றம் இருக்கிறது என்ற நெற்றியடி தீர்ப்பை வெளியிட்டு வழக்கினைத் தள்ளுபடி செய்தார்.

ஏன், இரண்டு மாதங்களுக்கு முன் கிருட்டினகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்ட தந்தை பெரியார் சிலை திறப்புத் தொடர்பான வழக்கில்கூட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி நீதியரசர் திரு.கே. சந்துரு சவுக்கடி கொடுத்துபோல தீர்ப்புக் கூறினாரே!

1926இல் பெரியார் தனது சுயமரியாதை இயக்கத்தை உருவாக்கினார். கடவுளைப் பற்றிய அச்சத்தை ஏற்படுத்தி, ஏதுமறியாத அப்பாவி மக்கள்மீது ஆதிக்கம் செலுத்தும் ஒரு பார்ப்பனப் பூசாரி வர்க்கத்தை உருவாக்கி நிலை நிறுத்தும் ஒரு மோசமான சமூக நடைமுறையை மதம்தான் ஏற்படுத்திக் காத்துவருகிறது என்ற அவர் நம்பினார் - அதனால் கடவுள் மறுப்பு மற்றும் மதத்திற்கு எதிரான ஒரு போராளியாக பெரியார் மாறினார் என்று குறிப்பிட்டுள்ளாரே!

இந்த விவரங்கள் எல்லாம் தெரியாமல் சிறு பிள்ளைத்தனமாக இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ். வகையறாக்கள் ஊளை விடுவார்களேயானால், தமிழ்நாட்டு மக்களால்(பக்தர்களாக இருந்தாலும் கூட) அவர்கள் நிராகரிக்கப்படுவார்கள்.

இந்தியா முழுமையும் இந்தக் கும்பல் தங்கள் கை வரிசையைக் காட்டிப் பார்த்தாலும், தமிழ்நாட்டில் அது எடுபடாமல் போனதற்கு தேர்தல்களில் சுத்தமாகத் துடைத்துத் தூக்கி எறியப்படுவதற்குக் காரணமே தந்தை பெரியார்தான் - அவர்தம் தத்துவம்தான் அவரால் உருவாக்கப்பட்ட திராவிடர் கழகம் தான் இந்தக் கொள்கைகளைக் கொண்டுள் இயக்கங் களால்தான், கட்சிகளால்தான்.

மக்கள் மத்தியிலிருந்து பிற்போக்கு மதவாத, தீய நம்பிக்கைகள், போக்குகள் அறவே அழித்தொழிக்கப் படவும் எந்தக் காரணத்தை முன்னிட்டும் அவை காலூன்றச் செய்யாமல் செய்யப்பட வேண்டுமானால் ஊருக்கு ஊர் தந்தை பெரியார் சிலையும், சிலைப்பீடத்தில் வாசகங்களும் மிக முக்கியமானவை.
அந்த வகையில் அண்ணல் அம்பேத்கர் சிலை நிறுவப்படும் இடங்களில் எல்லாம் தந்தை பெரியார் அவர்களின் சிலையும் நிறுவப்படும் என்று எழுச்சித் தமிழர் திருமாவளவன் அறிவித்திருப்பது வரவேற்கத் தக்கது - வரலாற்றினை மிகச் சரியான அறிவிப் பினை ஒரு சரியான கால கட்டத்தில் செய்தவர் என்ற பெருமைக்குரியவராகவும் ஆகி விட்டார் தோழர் திருமாவளவன்.

 -                       --------------------------”விடுதலை” தலையங்கம் 27-12-2012

27.12.12

ஜாதிகளை ஒழிப்பது எப்படி?புதிதாக மணம் புரிவோர் அனைவரும் கலப்புமணம் செய்யவேண்டும்!


ஜாதியை ஒழிப்பதற்குப் பல அடிப்படையான முறைகள் இருக்கின்றன. ஜாதிப் பட்டங்கள் (அய்யர், முதலியார் பிள்ளை, அய்யங்கார், செட்டியார், நாயுடு, நாய்க்கர், ரெட்டியார், நாடார் முதலியன) சட்ட-பூர்வமாகத் தடுக்கப்பட வேண்டும்.
புதிதாக மணம் புரிவோர் அத்தனை பேரும் கலப்பு மணம் செய்யுமாறு தூண்டக் கூடிய சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். ஒரே வகுப்பில், ஒரே ஜாதிப் பிரிவில், திருமணம் செய்பவர்களுக்குப் பல கஷ்டமான நிபந்தனைகளையும், கட்டுத் திட்டங்களையும் விதித்து, அத்தகைய திருமணம் புரிபவர் களுக்குச் சமுதாயத்தில் செல்வாக்கு இல்லாமல் செய்ய வேண்டும். ஜாதிகளைக் குறிக்கும், நெற்றிக் குறி, உடை, பூணூல் முதலிய சின்னங்களையும் சட்ட-பூர்வமாகத் தடுக்கவேண்டும். இவ்வாறு செய்தால்தான் ஜாதிகள் அடியோடு ஒழியும்.

இவை மட்டுமல்ல, ஜாதிக்கு அடிப்படையா யிருப்பது எது? ஹிந்து மதம்! அதை ஆதரித்து நிற்பவை எவை? வேதம், இதிகாசம், சாஸ்திரம், புராணம் முதலிய கட்டுக்கதைகள். இவற்றுக்கு அடிப்படையாக உள்ளவை என்ன? இந்துமதக் கடவுள்கள் என்று கூறப்படும் முழுக் கற்பனைகள். எனவே, இவ்வளவையும் ஆணி வேருடன் பிடுங்கி எறிந்தா லொழிய ஜாதியை எப்படி ஒழிக்க-முடியும்? இவ்வளவையும் காப்பாற்று வதற்காக உள்ள ஒரு சமுதாயமான பார்ப்பனர்களின் வைதீக மனப் பான்மையை மாற்றியாக வேண்டும். அல்லது அவர்களைத் தனியாகப் பிரித்து நீக்கி வைக்க வேண்டும்! ஏன்?
ஜாதிகள் ஒழியவதனால் பாதிக்கப்படுபவர்கள் பார்ப்பனர்களேயாவர். ஜாதி உயர்வு, என்ற அடிப்படையினாலேயே அவர்கள் எல்லாத் துறைகளிலும் முன்னணிக்கு வந்திருக்கிறார்கள். இல்லாவிட்டால் கால்நடைகளை ஓட்டிக் கொண்டு, கால்நடையாக வந்த இந்தக் கால்நடைகள் இன்று இந்நாட்டுக் குடிமக்கள் எல்லோரையும் விட ஆயிரமடங்கு உயர்ந்த நிலைமையில் இருப்பதற்குக் காரணம் என்ன? அது மட்டுமா? இன்று பெரிய பெரிய புரட்சிக்காரன் முதல், மகாகனம் போன்ற பிரிட்டிஷ் ஏகாதிபத்தியக் கைக்கூலி வரையில், எல்லா இயக்கங்களிலும் பார்ப்பனர்கள் இருக்கிறார்களே ஒழிய ஜாதியை ஒழிப்பது என்பதைக் கொள்கை யாகக் கொண்டு இடைவிடாத தொண் டாற்றக் கூடிய ஒரு பார்ப்பனராவது இன்று இந்த நாட்டில் இருப்பதாக யாராவது எடுத்துக்கூற முடியுமா என்று அறை கூவிக் கேட்கிறோம். ஹிந்து மதம் ஒழிந்தால் தான் ஜாதி ஒழியும். ஹிந்து மதம் ஒழிந்தால் பார்ப்பனியமும் அதே நேரத்தில் அழிந்து போகும். இதை பஞ்சமா பாதகம் செய்யும் பார்ப்பான் கூட விரும்பமாட்டான்!
இங்கிலீஷ் அரசியல் அமைப்பு என்ற நூலை எழுதிய புரொபசர் டிசே என்பவர் புரட்சி மனப்பான்மையுடையவன் போப் ஆகவே மாட்டான்; போப் ஆகும் மனிதன் புரட்சி செய்ய விரும்பமாட்டான், கூறியிருக்கிறார். அதுபோலவே, பார்ப்பனனாகப் பிறந்தவன் ஜாதிப் புரட்சிக்காரனாக ஆகவே மாட்டான். ஏனெனில், போப்புக்கு உள்ள அதிகாரம், ஆதிக்கம், இவற்றைக் காட்டிலும் நூறு மடங்கு அதிகமாக இந்நாட்டுப் பார்ப்பனர்களுக்கு இருக்கின்றன! இவர்கள் இதர ஜாதிகளைத் தூண்டி விட்டு, பார்! கழுதையும், குதிரையும் ஒன்றாகுமா? அய்ந்து விரல்களும் சரியாகுமா? என்று கூறிப் பிரித்து வைத்துக் கொண்டேதான் இருப்பார்கள். ஒரு கடைசிப் பிராமணன் இந்நாட்டில் இருக்கும் வரையில் இங்கிலீஷ் காரரைப் பின்பற்றி இந்தப் பிரித்தாளும் பித்தலாட்ட வேலையைச் செய்து கொண்டுதான் இருப்பான்! ஜாதிப் பிரிவுகள் பகுத்தறிவுக்கு முரணானவை என்பதையும் பார்ப்பனர் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். ஏனெனில், பகுத்தறிவுக்கு ஹிந்து சாஸ்திரங்கள் 144 உத்தரவு பிறப்பித்துக்கின்றன.
எந்தப் பிராமணன் தர்க்க சாஸ்திர பலத்தைக் கொண்டு வேதத்தின் உண்மையைப் பற்றிச் சந்தேகிக்கின்றானோ, அப்பேர்ப்பட்ட வேத நிந்தகன் சாதுக்களால் நாஸ்திகன் என்று பகிஷ்கரிக்கப்படுகிறான். என்று மகாபாரதம் கூறுகிறது. எனவே, பார்ப்பான் மட்டுமல்ல எந்த இந்துவுமே பகுத்தறிவுக்கு இடந்தர மாட்டான். இடந் தர முடியாது. இடந்தந்தால் இந்துவாக இருக்க முடியாது!
யார் என்ன சொன்னாலும் ஆயிரக்கணக்கான ஆண்டு களாயுள்ள ஹிந்து மதத்தை அசைக்க எவராலும் முடியாது. எத்தனையோ எதிர்ப்புகளையும், கஷ்டங்களையும் சமாளித்துக் கொண்டு உயிரோடிருக்கிறது நமது ஹிந்து மதம், என்று சர். ராதாகிருஷ்ணன் போன்ற மேதாவிகள் (?) கூறலாம். உயிரோடிருப்பதனால் மட்டும் ஒரு விஷயம் உயர்வான தாய் விடுமா? எவ்வளவோ எதிர்ப்புகளுக் கிடையே எலி, கொசு, ஈ, தேள், பாம்பு, மூட்டைப் பூச்சிகள் கூடத்தான் உயிரோடிருக்கின்றன. மனித சமுதாயமே எதிர்த்து வரும் குடி, விபசாரம் கூடத்தான் உயிரோடிருக்கின்றன? இவை-யெல்லாம் இந்து மதத்தை விடப் புனிதமானவை களா? அதிகப் பலன் தரக் கூடியவைகளா, என்று கேட்கிறோம்.
இறுதியாக ஒன்று கூறுவோம். ஜாதிகளை ஒழிக்க விரும்புவோர் மேடைப் பிரசங்கம் மட்டும் செய்தால் போதாது! கலப்பு மணத்தைத் தவிர வேறு சுயஜாதி மணம் செய்யவே கூடாது. புத்தரும் குருநானக்கும் கூறியதுபோல் வேதமும் சாஸ்திரங்களும் முழுப்பொய் என்று பச்சையாகக் கூறவேண்டும். இவற்றைச் செய்யக்-கூடிய ஆற்றலும், துணிவும், தியாக உணர்ச்சியும் படைத்த இளைஞர்களால் தான் ஜாதியை ஒழிக்க முடியும்? இந்த வேலையைச் செய்பவை தான் நமது திராவிடர் கழகமும், சுயமரியாதை இயக்கமும்.
                             ----------------------- 10.1.1947இல்" விடுதலை"யில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய தலையங்கத்திலிருந்து....

26.12.12

பெரியார் சிலை திறக்கப்படுவது ஏன்?எதனால்?

செங்கற்பட்டு தரும் ஒளி! 

 
தந்தை பெரியார் அவர்களால் 1929 பிப்ரவரி 17,18 நாட்களில் செங்கற்பட்டில் சுயமரியாதை இயக்கத்தின் முதல் மாநில மாநாடு நடத்தப்பட்டது.

அந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க செங்கற்பட்டில் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் முழு உருவ வெண்கலச் சிலை திறப்பு விழாவும் பெரியார் படிப்பகத் திறப்பு விழாவும் வெகு நேர்த்தி யாக நடைபெற்றன.
விழா ஏற்பாடுகள் வெகு நேர்த்தியாகச் செய்யப்பட்டன. அதற்காக பாடுபட்ட தி.க., தி.மு.க. பொறுப்பாளர்கள், தோழர்கள் பெரிதும் பாராட்டப் படத்தக்கவர்கள் - ஏன் நன்றி கூறிடவும் கடமைப்பட்டுள்ளோம்.

தந்தை பெரியார் சிலை திறக்கப்படுவது என்பது அவரின் கொள்கையை மக்கள் மத்தியில் பரப்பும் பணிக்கான ஒரு வகையான நிரந்தர ஏற்பாடாகும்.

தமிழ் நாடெங்கும் திறக்கப்படும் தந்தை பெரியார் சிலை அமைந்துள்ள பீடங்களில் பொறிக்கப்பட்டுள்ள - வாசகங்கள் காலா காலத்திற்கும் மக்களுக்கு வெளிச்சத்தைத் தரக் கூடிய கருவூலக் கருத்துகளாகும்.

இந்த வாசகங்களை எதிர்த்து நீதிமன்றங்கள்  வரை சென்றவர்களும் உண்டு.
பெரியார் கருத்தை, பெரியார் சிலையின் பீடத்தில் பொறிக்காமல் வேறு யாருடைய கருத்துக்களை செதுக்க முடியும் என்று கூறி நீதிமன்றமே - அத்தகைய வழக்குகளை எளிதிற் தள்ளுபடி செய்து விட்டது.

தந்தை பெரியார் ஏதோ ஒரு கட்சிக்கு மட்டும்  சொந்தமானவர் அல்லர்! இன்னும் சொல்லப் போனால் ஒரு நாட்டுக்கு மட்டுமே சொந்தமான தலைவரு மல்லர்.

மண்டைச் சுரப்பை உலகு தொழும் என்று உண்மை யான புரட்சித் தலைவராம் தந்தை பெரியார்பற்றி புரட்சிக் கவிஞர் பாடியது வெற்றுச் சொற்கள் அல்ல. யதார்த்த உண்மையாகும்.

உலகம் முழுவதும் தந்தை பெரியார் அவர்களின் கருத்துகள் பேசப்படுகின்றன.
சர்ச்சைக்கு உட்படுத்தப்படுகின்றன - விவாதிக்கப்படுகின்றன - வரவேற்கவும்படுகின்றன.

குறிப்பாக இன்றைய கால கட்டத்தில் மத அச்சறுத்தல்கள் மதவாதங்கள், அடிப்படை வாதங்கள் கொம்பு முளைத்துக் கிளம்பியுள்ளன.

மதக் கலவரங்களால் மக்கள் ரத்தம் மண்ணில் வழிந்தோடுகிறது இந்த நிலையில் மதமற்ற உலகம் ஒன்றே ஒப்புரவு சமுதாயத்தை - மனிதனை மனிதன் நேசிக்கும் அமைதியுலகைத் தரக் கூடியது என்ற முடிவுக்கு வர வேண்டியுள்ளது.

அந்த மதமற்ற உலகுக்கான திறவுகோல் தந்தை பெரியார் அவர்களே! எனவே தந்தை பெரியார் சிலை தமிழ்நாட்டில் மட்டுமல்ல; இந்தியாவின் பிற பாகத்தில் மட்டுமல்ல; உலகின் பல நாடுகளிலும் திறக்கப்படக் கூடிய நிலை உருவாகிக் கொண்டு இருக்கிறது.

சில மாதங்களுக்குமுன் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில்கூட தந்தை பெரியார் சிலை திறக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் தன்மான இயக்க வரலாற்றில் மிக முக்கியமான இடத்தை வகிக்கும் செங்கற்பட்டில் தந்தை பெரியார் சிலை திறக்கப்பட்டதானது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
 
விழாவில் பங்கு கொண்டு பேசிய திராவிடர் கழகத் தலைவரானாலும்  சரி, திமுக பொருளாளர் தளபதி மு.க. ஸ்டாலின் ஆனாலும் சரி மற்ற மற்ற முன்னணியினர் எடுத்து வைத்த கருத்துக்கள் அனைத்தும் ஓர் அடிப்படையான மய்யப் புள்ளியை வைத்துச் சுழன்றிருக்கின்றன என்று சொல்ல வேண்டும்.

தந்தை பெரியார் 1929 செங்கற்பட்டு மாநாட்டுத் தீர்மானத்தின் வாயிலாகவே ஜாதி ஒழிப்புக்கான குரல் கொடுத்துள்ளார். இன்று ஜாதியை முன்னிறுத்தி அரசியல் நடத்த விரும்புவோர் அந்த எண்ணத்தைக் கைவிட வேண்டும். காரணம் மனித சமூகத்தில் பிளவுகளை உண்டாக்கக் கூடியது - பகைமை உணர்வைத் தூண்டக் கூடியது ஜாதி என்று பொறுப்பான வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.

இரண்டாவதாக திராவிடர் இயக்கத்தைப் பற்றிக் கொச்சைப்படுத்துவோர் பற்றியது.

திராவிடத்தால் வீழ்ந்தோம் என்பது உண்மைக்கு மாறானது என்பது மட்டுமல்ல, திராவிடர் இயக்கம் இந்த நாட்டில் ஏற்படுத்தியுள்ள பார்ப்பனீய ஆதிக்க எதிர்ப்புணர்வை மழுங்கடித்து, மீண்டும் ஆரிய ஆதிக் கத்திற்கு அடிகோலக் கூடியது - இந்தத் துரோகத்தை சம்பந்தப்பட்டவர்கள் கைவிட வேண்டும்.

மூன்றாவதாக அறிவியல் வளர்ந்துவரும் ஒரு கால கட்டத்தில் மக்கள் மத்தியில் மூடநம்பிக்கைகளைப் பரப்பும் பிற்போக்குத்தனத்தை கைவிட வேண்டும் - குறிப்பாக ஊடகங்கள் பொறுப்பாகச் செயல்பட வேண்டும்.
இந்த மூன்று  முத்தான செய்திகளையும் செங்கற்பட்டு பெரியார் சிலை திறப்பு விழா நாட்டு மக்களுக்கு வழங்கியுள்ளது! பெரியார்  வெல்வார் என்பதில் எள்ளளவும் அய்யமில்லை.

               ----------------------” விடுதலை” தலையங்கம் 25-12-2012

25.12.12

தந்தை பெரியார் நினைவு நாள் சிந்தனை

தந்தை பெரியார் மறைந்து 39 ஆண்டுகள் ஓடி விட்டன. ஆனாலும் தந்தை பெரியார் மக்கள் சிந்தனையிலிருந்து மறையவில்லை. மக்கள் வாழ்வோடு நீக்கமற நிறைந்துள்ளார்.

நாட்டு நடப்பு ஒவ்வொன்றும் தந்தை பெரியார் சிந்தனை என்ற உரைகல்லில் வைத்து உரசப்படு கின்றன.

தமிழ்த் தேசியம் என்று கூறி தொடக்கத்தில் தந்தை பெரியார் அவர்களை உரசிப் பார்த்தவர்கள் கூட பிற்பாடு பதுங்குக் குழியைத் தேடும் நிலைதான் இன்று.

காரணம் - சமூக அடிப்படையின் சகல கூறுகளிலும்  அவரின் தாக்கம் இருக்கிறது.

மனித உரிமைகள் என்று பட்டியலிட்டு, மனித சமத்துவம், சகோதரத்துவம், பாலியல் உரிமை, கல்வி உரிமை, வேலை வாய்ப்பு என்ற வேட்கைத்தளம் ஒரு பக்கம்; மனிதனிடத்தில் குடிகொண்டுள்ள பகுத்தறிவுக்கு விலங்கு பூட்டப்பட்ட நிலையில், அதிலிருந்து அவனை விடுவிக்கும் மிகப் பெரிய முயற்சி மறுபுறம்;   இவையெல்லாம் ஒரு தனி மனிதரால் சாதிக்கப்பட்டது என்பதை இதற்கு முன் வரலாறு கேள்விப்பட்டதில்லை.

அதனால்தான் தந்தை பெரியார் பற்றி அறிஞர் அண்ணா குறிப்பிடும்பொழுது பெரியார் ஒரு சகாப்தம், கால கட்டம், ஒரு திருப்பம் என்று மிகத் துல்லியமாகக் கணித்தார்.

அய்யா மறைந்தாலும், எதிர்காலத்தில் நம் பயணம் எந்தத் திசையில் இருக்க வேண்டும் என்ற பார்வையையும் கொடுத்துச் சென்றுள்ளார்.

தந்தை பெரியார் தம் இறுதிப் போராட்டமாக அறிவித்தது அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை பற்றியதாகும்.

அதன் தத்துவம் அனைவரும் கோயிலுக்குள் சென்று சாமி கும்பிட வேண்டும் என்பதல்ல, மிக முக்கியமான இடமாக பெரும்பாலான மக்களால் சரியாகவோ தவறாகவோ நினைக்கப்படும் ஓரிடத்தில் - கருவறையில் ஒரு குறிப்பிட்ட மக்க ளுக்கு மட்டுமே ஆதிபத்தியம்; மற்றவர்களுக்குக் கிடையாது - அது பிறப்பின் அடிப்படையில் அமைந்த ஒன்று என்ற சகிக்க முடியாத பிறவி ஏற்றத் தாழ்வை உடைப்பதுதான் - மனித உரிமையைக் காப்பதுதான்  தந்தை பெரியார் அவர்களின் இறுதிப் போராட் டத்துக்குள் அடங்கியுள்ள தத்துவமாகும்.

இந்திய அரசமைப்புச் சட்டமும் சரி, நீதித்துறையும் சரி, பெரும்பான்மை மக்களை இழிவுபடுத்தும் இந்த ஏற்பாட்டுக்குப் பக்க பலமாக இருப்பது என்பது வெட்கப்படத்தக்கதாகும்.

மண்ணுக்குச் சுதந்திரமா - மனிதனுக்குச் சுதந் திரமா என்ற தந்தை பெரியார் அவர்களின் கேள்விக்கு நாணயமான பதில் இதுவரை கிடைக்க வில்லை.
பொது வீதிகளில் நடப்பதில் தொடங்கி, பொது நீர் நிலைகளைப் பயன்படுத்துவது - உணவு விடுதியில் சமமாக உட்கார்ந்து உண்பது - கல்வி, வேலை வாய்ப்புகளில் இடம் என்று - தடைகள் தகர்க்கப்பட்டு கதவுகள் திறக்கப்பட்ட கால கட்டத்தில் இந்த ஜாதி என்னும் சர்ப்பம் கோயில் கருவறைக்குள் மிகப் பாதுகாப்பாகப் படம் எடுத்து ஆடுகிறதே என்ற அய்யாவின் கேள்விக்கு என்ன விடை? படித்தவர்களைக் கேட்கிறோம் - ஆட்சி அதிகாரங்களில் இருப்பவர்களைக்  கேட்கிறோம் - ஏன் ஆன்மிகவாதிகளையும் கூடக் கேட்கிறோம்.

தந்தை பெரியார் எழுப்பிய வினாவுக்கு என்ன விடை? வெறும் ஆடைகளில், உடைகளில், அணிகலன்களில் மாற்றம் வந்தால் போதுமா? சிந்தனையில் மாற்றம் வர வேண்டாமா? அந்த மாற்றம் என்ற வகையில் பேதமற்ற சமத்துவ நிலை என்ற பிள்ளையைப் பெற்றெடுக்க வேண்டாமா?

மயிர்க் காம்பு பிளந்து எழுதும் எழுத்தாளர்களும், சிந்தனையாளர்களும் தான் பதில் சொல்லட்டுமே பார்க்கலாம்.

ஜாதியைத் தூக்கிக் கொண்டு விட்டேனா பார் என்று திமிர் முறிக்கும் சக்திகள் தலைதூக்காது இருக்க வேண்டுமானால் அமாவாசைகளும், தொப்புளான்களும், ஊமையன்களும் கோயில் கருவறைக்குள் நின்று அர்ச்சனை செய்யவும், ஆராவமுத அய்யங்கார் வெளியில் நின்று கொண்டு என் பெயரில் அர்ச்சனை செய்யுங்கோ! என்று கேட்கும் ஒரு நிலை ஏற்பட்டாக வேண்டும். அது நமது சமூகத்தில் மிகப் பெரிய உளவியல் அதிர்வு அலைகளை உண்டாக்குமே!

அய்யா நினைவு நாளில் உரத்த முறையில் சிந்திப்போம்! உரத்த முறையிலும் செயல்படுவோம்!

இன்றைய கால கட்டத்தில் முற்போக்குச் சிந்தனை  - இடதுசாரித்தனம் என்று எந்தப் பெயர் கொடுத்தாலும் இதனைத் தாண்டி எதுவும் இருக்க முடியாது - முடியவே முடியாது!

                   ------------------------------"விடுதலை” தலையங்கம் 24-12-2012

24.12.12

பெரியார் நினைவு நாள் சூளுரை!





ஊன்றிப் படித்து உண்மையை உணருங்கள்
  • ஒடுக்கப்பட்டோரே, உங்கள் உரிமைகளை மறவாதீர்!
  • தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர்  திசை மாறிய கப்பலாகி விடக் கூடாது!!
தனியார் துறைகளிலும் இட ஒதுக்கீடு - இதுவே தந்தை பெரியார் நினைவு நாள் சூளுரை!
தமிழர் தலைவர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை

சமூக நீதித்துறையில் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்றும், தனியார் துறைகளிலும் இடஒதுக்கீடு என்பதே நமது அடுத்த கட்ட செயல்பாடு - தந்தை பெரியார் நினைவு நாள் சூளுரை என்றும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

கடும் நோய்க்கான கிருமிகளைக் கொல்லும் சக்தி வாய்ந்த மருந்துகளில்கூட அளவான அளவே பயன்படுத் தப்பட வேண்டிய ஜாதி என்ற விஷத்தை, மருந்தை மறந்து விட்டு விஷத்தை மட்டுமே குடித்தால் நீங்கள் என்னாவீர்கள்?

வீடு எரிவதைப் பார்த்துக் கூத்தாடும் சிறு பிள்ளைகளா நீங்கள்?
தந்தை பெரியாரும், அம்பேத்கரும் கூறியபடி, பிற்படுத் தப்பட்ட  ஜாதி சூத்திரர்களும், அடுக்கின் வெளியே தள்ளப்பட்டு அவதிக்குள்ளாகும் பஞ்சமர்கள் என்ற இரு சகோதரர்களும் கைகோர்த்துப் போராட வேண்டிய சகோதரர்கள் அல்லவா? அதைவிட்டு உட்ஜாதி - அரசியல் லாபத்திற்காக - தேர்தல் அரசியலில் வாக்கு வங்கிகளைத் தேடி சந்தர்ப்பவாத சதிக்குப் பலியானால் இதுவரை நீங்கள் பெற்றுள்ள - இனி பெற வேண்டிய சமூக நீதி உரிமைகள் - இடஒதுக்கீடு கல்வி, வேலை வாய்ப் புகள் திடீரென்று காணாமற்போகும் என்பதை நினைத்து, வீடு எரிவதைப் பார்த்து, புரியாத சிறுபிள்ளைகள் கூத்தும் கும்மாளமும் கொள்வதுபோல ஆடாதீர்!
பார்ப்பனர்கள் - ஊடகங்கள் - உங்களில் சிலரை கொம்பு சீவி விட்டு மோத விட்டு, ரத்தம் குடிக்கக் கா த்திருக்கும் நரிகளாகி உசுப்பேற்றுகின்றனர்! ஏமாறலாமா?

மண்டல் கமிஷனின் பரிந்துரைகள் முழுவதும் அமுலாகி விட்டவனவா? யோசித்துப் பார்த்தீர்களா?

இளைய பெருமாள் கமிட்டி (மத்திய அரசு கமிட்டி) செயல் வடிவம் கண்டு விட்டதா?

சமூக நீதிக்குச் சமாதி - புரிந்து கொண்டீர்களா?

உச்சநீதிமன்றத்திலும், பல மாநில உயர்நீதிமன்றங் களிலும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட நீதியரசர்கள் போதிய அளவுக்கு Adequate Representation அடைந்து விட்டார்களா?

பொதுத்துறை நிறுவனங்களாக இருந்தால் இவர்கள் இடஒதுக்கீடு கேட்பார்கள்; பார் பார் இதோ இவற்றை தனியார் மயமாக்கி இடஒதுக்கீட்டிற்கு - சமூக நீதிக்குச் சமாதி கட்டுகிறோம் என்று ஓசைபடாமல் திட்டமிட்டு வெற்றி பெறுகிறதே ஆரியமும் அதில் நுழைந்த அதிகார வர்க்க ஆட்சியும்! புரிந்து கொண்டீர்களா?

மத்திய அரசு துறைகளைப் பாரீர்!

மத்திய அரசுப் பதவிகளில் செயலாளர்கள் என்ற சக்தி வாய்ந்த பதவிகளில் 132இல் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் பூஜ்யம்தான் ராஜ்யம் என்பது போல ஒருவர்கூட இல்லை என்று துறை சார்ந்த அமைச்சரே 6.12.2012இல் நாடாளுமன்றத்தில் கூறியது கேட்டு, உங்களைத் தவறான வழிக்கு அழைத்துச் செல்ல  முயலும் சிலர்  அவர்கள் திருவாசகங்களில் கூறுவதானால் ஓட்டுப் பொறுக்கிகள் அந்தத் தலைவர் விரிக்கும் வலையில் வீழ்ந்து வாழ்வுரிமையை  -வளர்ச்சியை - முன்னேற்றத்தை இழக்கத் துடிக்கலாமா?

வீணைக் கச்சேரி கேட்டுக் கொண்டிருந்தீர்களா?

மண்டல் குழுப் பரிந்துரைகளுக்காகவும், இளைய பெருமாள் கமிட்டி பரிந்துரைக்காகவும் திராவிடர் இயக்கம் போராடியபோது இவர்கள் எங்கே போய் இருந்தனர்? வீட்டின் கதவைச் சாத்திக் கொண்டு வீணைக் கச்சேரி அல்லவா கேட்டுக் கொண்டிருந்தனர்; இப்போது இப்படி வீண் கச்சேரி நடத்தி, மாயையை உருவாக்கி, உங்களுக்கு ஜாதிப் போதையை ஏற்றும் மயக்கப் பானங்களை அல்லவா தரத் துடிக்கிறார்கள்?

18வயது வாக்குரிமையைப் பறிப்பீர்களா?

நியாயந்தானா? சிந்தியுங்கள்! 18 வயது வந்த பெண்ணுக்குத் தனது வாழ்விணையரைத் தேர்வு செய்யத் தகுதி இல்லை என்பது உங்கள் வாதமானால், 18 வயதில் வாக்குரிமையை - ஓட்டுப் போடும் வாய்ப்பை - மாற்றிட நாடு தழுவிய அளவில் பிரச்சாரம், போராட்டம் செய்ய முன் வருவீர்களா? சட்டத்தை மாற்றிடப் போராடுவீர்களா?

21 வயது பெண் மாற்று ஜாதியில் காதல் செய்தால் அதை ஏற்பீர்களா?
பெற்றோர்களைக் கேட்டுத்தான் காதல் திருமணம் வயது வந்தபெண் முடிவு செய்ய வேண்டும் என்றால், இது மகளிரை மறுபடியும் அடிமையாக்கும் சமூக அநீதி அல்லவா?

பெற்றோர்கள் கூறுகிறபடி 18 வயது வந்த ஆண் இளைஞர்கள், குறிப்பாக பெண்கள் பெற்றோர்கள் ஆணைப்படி- சம்மதம் பெற்ற பிறகே அவர்கள் கூறும் வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள் என்று கூறுவீர்களா?

அப்படிக் கூறுவது எப்படி நியாய விரோதம், சட்ட விரோதம், மனித உரிமைப் பறிப்புக் குற்றமோ, அது போன்றது தானே மகளிர் உரிமையைப் பறிப்பதும்?
காதல் இல்லாத இலக்கியம் உண்டா?

தமிழ்ப் பாங்கு, தமிழன், தமிழினம்  என்று கூறும் இவர்களால் காதல் இல்லாமல், குறுந் தொகைப் பாடல்கள் இல்லாத தமிழ் இலக்கியங்கள் உண்டா? குறளின் காமத்துப் பாடல் கண்ணொடு கண் நோக்கொக்கின் குறளும் குற்றமானதா?

வாக்குவங்கி அரசிய லில் நடத்தும் ஒட்டுப் பசி யாளர்களை  ஓரங் கட்டுவீர்!
உண்மையான உரிமைகளை வென்றெடுக்க, திராவிடர் கழகத்தின் - திராவிடர் இயக்கத்தின் பெரியார் தத்துவங்களின் கொள்கையை ஏற்பீர்! வலங்கை, இடங்கைகளைப் பிரிக்காதீர்!

பல்வேறு ஒடுக்கப்பட்ட மக்களையும் மோதவிட்டு அரசியல் பதவிப் பசியைத் தீர்க்க எண்ணாதீர்!

இணைப்பீர்!
இணைப்பீர்!
இன்றேல் வீழுவது நாமே!
வாழ்வது ஆரியமே, அவாளே! புரிந்து கொள்வீர்.
தனியார்த் துறைகளிலும் இடஒதுக்கீடு
சிந்திப்பீர், செயல்படுவீர் தனியார் துறை இட ஒதுக்கீட்டுப் போர்க் குரல் கொடுக்க ஆயத்தமாவீர்!
பெரியார் நினைவு நாள் சூளுரை இதுவே!
கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
23.12.2012  சென்னை

23.12.12

மூடத்தனத்திற்கு முடிவுரை - உலகம் அழியவில்லை!



விஞ்ஞானக் கருவிகளைப் பயன்படுத்தினால் போதுமா?
விஞ்ஞான மனப்பான்மையைக் கொள்ள வேண்டாமா?


கடற்கரையில் தமிழர் தலைவர் கருத்துரை

சென்னை, டிச.22- உலகம் அழியப் போகிறது என்ற மூடப்பிரச்சாரம் பற்றியும், மக்கள் விஞ்ஞானக் கருவிகளைப் பயன்படுத்தினால் மட்டும் போதாது. விஞ்ஞான மனப்பான்மையைக் கைக் கொள்ள வேண்டும் என்றும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் எடுத்துரைத்தார்.

உலகம் அழியப் போகிறது என்று பிரச்சாரம் செய்தது மூடத்தனம் என்று நிரூபிக்கப்பட்டுள்ளதன் தொடர்ச் சியாக இன்று காலை 7 மணியளவில் சென்னைக் கடற்கரை காந்தி சிலை அருகில், பெரியார் பகுத்தறிவு கலை இலக்கிய அணி சார்பாக திராவிடர் கழக இளைஞரணி மாணவரணி தோழர்கள் நடத்திக் காட்டிய வீதி நாடகத்தைத் தொடர்ந்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றுகையில் குறிப்பிட்ட தாவது:

உலகம் அழியப் போகிறது என்ற பிரச்சாரம் கடந்த சில வாரங்களாக மக்கள் மத்தியில் பரப்பப்பட்டு வருகிறது. அந்த மூடத்தனம் இப்பொழுது முடிவுக்கு வந்துவிட்டது.

6ஆவது அறிவு எதற்கு?

மக்களுக்கு 6ஆவது அறிவான பகுத்தறிவு இருந்தும் அதனை எல்லாவற்றிலும் பயன்படுத்துவதில்லை. தன்னம்பிக்கையைத் தூக்கி எறிந்துவிட்டு, மூடநம்பிக் கைக்கு பலியாகியுள்ள நிலையில் ஏமாற்றுகிறவர்கள் பெருகி வருகிறார்கள்.

இதுதான் சந்தர்ப்பம் என்று யாகம், பிராயச் சித்தம் என்று சொல்லி மக்களின் பணத்தைச் சுரண்டுகிறார்கள்.

படித்தவர்கள் ஏமாறுகிறார்களே!

படித்தவர்கள்கூட ஏமாறுகிறார்கள். விஞ்ஞானக் கருவிகளைப் பயன்படுத்துகிறார்களே தவிர விஞ்ஞான மனப்பான்மை உள்ளவர்களாக இல்லை.

சொல்லுகிறவர்கள் எதையாவது சொல்லி விட்டுப் போகட்டும்; கேட்கிறவர்கள் சிந்திக்க வேண்டாமா?

படித்த - அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற அதிகாரி கள்கூட அதிக வட்டி தருகிறேன் என்று சொல்கிறவர் களிடம் ஏமாறுகிறார்களே!

இரண்டு மடங்கு பணம் எப்படி கொடுக்க முடியும் என்று சிந்திப்பதில்லையே! பேராசை பெரும் நட்டத்தில் முடிகிறதே.

பணத்தைக் கொடுத்து ஏமாந்தவர்கள் தங்களுக் கென்று ஒரு தனி சங்கம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய அளவுக்கு மோசமாகி விட்டது.  இந்த மோசடியைத் தடுப்பதற்கென்றே காவல்துறையில் ஒரு தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றால் படித்த மக்களின் பகுத்தறிவற்ற பரிதாப நிலையை நினைத்துப் பார்க்க வேண்டும்.

ஆண்டவன் அருளா - அறிவியல் வளர்ச்சியா?

30 வயது சராசரி என்கிற அளவுக்கு வாழ்ந்து வந்த வர்கள் இப்பொழுது சராசரி 70 வயதை எட்டியது எப்படி?

அறிவியல் வளர்ச்சி, மருத்துவ வளர்ச்சியல்லவா? ஆண்டவன் தலையில் எழுதியதெல்லாம் பொய்யென்று  ஆகிவிடவில்லையா?

செவ்வாய்க்கிரகத்திற்கு சென்று வந்து அங்கு என்ன இருக்கிறது என்பதைத் தெளிவாக விளக்கி சொன்ன தற்குப் பிறகும்  பெண்ணுக்குச் செவ்வாய்த் தோஷம் என்று கூறிக் கல்யாணத் தடையை உண்டாக்கிக் கொள் கிறார்களே.
ஊடகங்களின் கடமை என்ன?

நம் நாட்டு ஊடகங்களின் தன்மை என்ன? உலகம் அழியப் போகிறது என்று மதவாதிகள், மூடநம்பிக்கை வாதிகள் பரப்பினால், அறிவியல் ரீதியாக மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய விஞ்ஞானக் கருவிகளான ஏடுகள், தொலைகாட்சி ஊடகங்கள் பீதியைக் கிளப்பும் வேலையில் அல்லவா ஈடுபடுகின்றனர்? இது அறிவு நாணயமா?

இந்த மூடத்தனத்தை முதலாக வைத்து இன்னும் அதிகப் பிரதிகளை விற்கலாம் என்ற போக்கு தானே - வியாபாரப் புத்தி தானே நமது ஊடகங்களுக்கு!

மூடத்தனப் பரப்புதலையும் - எதிர்ப்பையும் சமமான அளவில் வைத்து செயல்படலாமா?

மாயன் காலண்டர் சரியா?

மாயன் காலண்டரைப் பற்றிப் பேசப்படுகிறது. அந்தக் காலக் கட்டத்தில் பெற்றிருந்த அறிவின் அடிப்படையில் எழுதியிருக்கலாம்.

அய்யாயிரம் ஆண்டுகளில் எவ்வளவோ வளர்ச்சி - புதிய கண்டுபிடிப்புகள்; இந்த நிலையில் 5000 ஆண்டு களுக்கு முன்பு சொன்னதை நம்பி ஏமாறலாமா? பிரச்சாரம் செய்யலாமா?

விஞ்ஞான ரீதியாக என்ன சொல்லப்படுகிறது? குறிப்பாக நாஸா என்ன சொல்லுகிறது? அதைத்தானே கவனிக்க வேண்டும்.

மின்சக்தியா? கடவுள் சக்தியா?

அவனன்றி ஓரணுவும் அசையாது என்கிறார்கள் இன்றைக்குப் பவர் கட் என்றால், கடவுளுக்கும் சேர்த்துத் தானே பவர் கட்?

கடவுள் சக்தியா - மின் சக்தியா என்று கேட்டால் மக்களுக்குத் தேவை மின்சக்தி என்பதுதானே  உண்மை - யதார்த்தம்!

எல்லாம் கடவுள் சக்திதான் என்று மக்கள் நம்புவ தானால், ஏன் மின்சாரம் கிடைக்கவில்லை என்று அந்தக் கடவுளிடம் ஏன் கேட்பதில்லை?
மூளை என்பது குப்பைத் தொட்டியா?

முதலில் மக்கள் தங்கள் மூளையை மூடநம்பிக்கையின் குப்பைத் தொட்டியாகக் கருதக் கூடாது! அந்தக் குப்பைகளைத் தூக்கி எறிய வேண்டும்; அகத்தூய்மை, புறத் தூய்மை இரண்டுமே அவசியமாகும்.

உலகம் அழியப் போகிறது என்று பிரச்சாரம் செய்கிறார் கள். உலகம் அழியாது, பூமியும் அழியப் போவதில்லை. ஆனால் மனிதன் மட்டும் அழியப் போகிறான் என்று தெரிகிறது.
பூமி வெப்பமாதல்!

பூமி வெப்பமாதல் (Global Warming) என்பதுபற்றி விஞ்ஞானிகள் எச்சரித்து வருகிறார்கள்.

காடுகள் அழிக்கப்படுகின்றன; நிலத்தடி நீர் சுரண்டப் படுகிறது. இயற்கை வளங்கள் சுரண்டப்படுகின்றன. கிணற்றைக் காணோம் என்று ஒரு திரைப்படத்தில் சொல் லுவதுபோல குளங்களைக் காணவில்லை, ஏரிகளைக் காணவில்லை, மலையைக் காணவில்லை என்று சொல்கிறார்கள்.

காற்றைக் காசுக்கு வாங்கவேண்டும்  -எச்சரிக்கை!

இனி நல்ல காற்றுக்கூட மீட்டர் வைத்து விற்பனை என்னும் நிலை உருவானால் ஆச்சரியப்படுவதற்கில்லை

இயற்கை வளங்கள் இப்படி சுரண்டப்படுவதால் பூமி வெப்பமாதல் மூலம் தான் மனிதன் அழிவான்! பூமி அழியாவிட்டாலும் மனிதன் அழிவான் - மனிதனின் சுயநலத்தாலும் சமூகப் பொறுப்பு அற்ற தன்மையாலும்,

சமூகம் என்றால் என்ன?


தனி மனிதர்கள் எல்லாம் சேர்ந்தது தான் சமூகம். எனவே ஒவ்வொரு தனி மனிதனுக்கும் பொறுப்பும், கடமை உணர்வும் இருக்கிறது. இதிலிருந்து மனிதன் தப்பிக்க வேண்டுமானால் வீட்டுக்கு வீடு செடிகளை, மரக்கன்றுகளை வைக்க வேண்டும். மக்களிடத்தில் பசுமை உணர்ச்சி வளர வேண்டும்.

சீனாவும் சைக்கிளும்

இன்றைக்கு சீனாவை எடுத்துக் கொண்டால் சைக்கிள் புழக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் உடல் நலம் பேணப்படுகிறது என்பதோடு, எரிபொருள் மூலம் வெளியேறும் மாசும் தடுக்கப்படுகிறது.

திராவிடர் கழகம் தானே செய்கிறது!

இதைப் பற்றியெல்லாம் எடுத்துச் சொல்லும், மக்களிடத்தில் விழிப் புணர்வை ஏற்படுத்தும் அவசியமான பணியைத்தான் திராவிடர் கழகம் செய்துவருகிறது.

மக்களிடத்தில் பகுத்தறிவு உணர்ச் சியை வளர்க்க வேண்டும் என்பதற்காகத் தான் தந்தை பெரியார் வாழ் நாள் முழுவதும் பாடுபட்டார்கள். அந்தப் பணியைத் தொடர்ந்து நாங்கள் செய்து கொண்டுள்ளோம். திராவிடர் கழகம் திட்ட மிட்ட வகையில் செயல்பட்டு வருகிறது.

பெரியார் பகுத்தறிவு கலை இலக்கிய அணிக்குப் பாராட்டு

திராவிடர் கழகத்தின் இளைஞர்கள், மாணவர்கள் இங்கு வீதி நாடகத்தை நடத்தி நல்ல கருத்துக்களை உங்களிடம் பரப்பினார்கள்.

பெரியார் பகுத்தறிவு கலை இலக்கிய அணி இதனை முன்னெடுத்துக் கொண் டுள்ளது. அவர்களை பாராட்டுகிறேன். இவ்வளவுத் திரளாகக் கூடி நின்று எங்கள் கருத்துக்களைச் செவி மடுக்கும் உங்களுக்கும் நன்றி.

தேவை விஞ்ஞான மனப்பான்மை

விஞ்ஞானத்தை பயன்படுத்திக் கொள் வதோடு விஞ்ஞான மன்பான்மையை உடையவர்களாக மாறுங்கள்.

பூமி வெப்பமாதலைத் தடுக்கும் பொறுப்பு ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு என்பதை மறவாதீர்கள்.

வாழ்க பெரியார்!

வளர்க பகுத்தறிவு! என்று குறிப்பிட் டார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

தோழர்கள் வருகை!

பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், வழக்குரைஞர் த. வீரசேகரன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் க. திருமகள், மண்டல செயலாளர் வெ. ஞானசேகரன், தென் சென்னை மாவட்ட தி.க. தலைவர் இரா. வில்வநாதன், தாம்பரம் மாவட்டக் கழகத் தலைவர் முத்தையன், ஆவடி மாவட்டக் கழகச் செயலாளர் தென்னரசு, கார்த்தி, கும்முடிப்பூண்டி மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் பொன்னேரி பன்னீர்செல்வம், தாம்பரம் மாவட்ட பொதுக் குழு உறுப்பினர் ஆர்.டி. வீரபத்திரன், தென் சென்னை மாவட்டக் கழகத் துணைத் தலைவர் கி.செங்குட் டுவன்,  காரைக்குடி மாவட்டச் செயலாளர் பிராட்லா, செல்வநாதன்,

இளைஞரணி தோழர்கள் பாஸ்கர், தாஸ், மற்றும் தங்கமணி செயலட்சுமி, செல்வேந்திரன், பண்பொளி, சி. வெற்றிச்செல்வி, மரகத மணி, பார்த்தீபன், குன்னூர் இராவணன், திராவிடர் கழக மாநில இளைஞரணி துணைச் செயலாளர் தமிழ் சாக்ரடீஸ், இராமேசுவரம் சிகாமணி,  ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி பரஞ்ஜோதி, ஏழுகிணறு கதிரவன், இதழாளர் கோவி. லெனின் அறிவியல் அறிஞர் சித்து முருகானந்தம், சுரேஷ், போக்குவரத்து தொழிலாளரணி நாகரத்தினம், புரசை அன்புசெல்வன், மாநில ஊடகத்துறை செயலாளர் பிரின்ஸ், இறைவி, இசையன்பன்,

மு. சண்முகப்பிரியன், கு. செல்வேந்திரன், தங்க. ரமேஷ், ச. மகேந்திரன், ச. தாஸ், மஞ்சை நாதன், பழனிசெல்வம், புரூனோ, பசும்பொன், மயிலை சாமிநாதன், அன்பு அப்துல்லா, வி. வளர்மதி, வி. யாழ்ஒளி, இரா. பிரபாகரன், பண்பொளி, கீர்த்தி, மாலதி, கலைமதி, மரகதமணி, செந்தமிழ் சேகுவோர, ஆனந்தி ஆ.செ. வசந்தன், வ. கலைச்செல்வி, ஆ.செ. பூங்குழலி மற்றும் ஏராளமான கழக தோழர் தோழியர்கள் பங்கேற்றனர்.
மக்கள் திரள்! மக்கள் திரள்!!

திராவிடர் கழக இளைஞரணி, மாணவரணியினர் நடத்திக் காட்டிய வீதி நாடகத்தினை கடற்கரையில் நடை பயிற்சி பெற்ற பெருமக்கள் ஏராளமாக  கூடிக் கண்டு ரசித்தனர். இடை இடையே கை தட்டி ஆதரவு காட்டினர். கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களின் உரையை ஆர்வமாகக் கேட்டனர்.


நிகழ்ச்சி முடிந்ததும் கழகத் தலைவரைச் சந்தித்து கை கொடுத்து இந்த முயற்சியை பெரிதும் பாராட்டினர். கடற்கரை நடைப் பாதையினர்க்குத் தேவைப்படும் வசதிகளையும் கூறி பரிகாரம் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.

தொடக்கத்தில்  திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் வரவேற்றுப் பேசினார். பெரியார் பகுத்தறிவு கலை இலக்கிய அணியின் ஒருங்கிணைப்பாளர் பிரின்ஸ் என்.ஆர்.எஸ். பெரியார் நன்றி கூறினார்.
தஞ்சையிலும் இனிப்பு வழங்கிக் கொண்டாட்டம்
22.12.2012 காலை 10 மணியளவில் தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் மனமே அஞ்சாதே உலகம் அழியாது உலகம் வாழும் உலகம் அழியும் என்ற மூடநம்பிக்கை முறியடிக்கப்பட்ட  விழிப்புணர்வு நாள் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு தஞ்சை மாவட்ட தலைவர் சி. அமர்சிங் தலைமை வகித்தார். கழக பொதுச் செயலாளர் தஞ்சை இரா. ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். நகரச் செயலாளர் அ. முருகேசன், நகர ப.க. அமைப்பாளர் ரவிக்குமார் ஒன்றிய அமைப்பாளர் போட்டோ மூர்த்தி நகர இளைஞரணி அமைப்பாளர் இரா. வெற்றிக்குமார், துணைத் தலைவர் பெரியார்செல்வன் மற்றும் மகளிரணி செயலாளர் அ. கலைச்செல்வி, கரந்தை டேவிட் சரபோஜி கல்லூரி மாணவர் கிருஷ்ணமூர்த்தி,

மண்டலச் செயலாளர் மு. அய்யனார் தஞ்சை ஒன்றிய இளைஞரணி தலைவர் அ.தனபால் நகரத் தலைவர் ஸ்டாலின், பகுத்தறிவாளர் கழக புரவலர் தஞ்சை இரத்தினகிரி மாவட்டத் துணைத் தலைவர் ப. தேசிங்கு, பெரியார் சமூக காப்பணி இயக்குநர் தே. பொய்யாமொழி, வழக்கறிஞர் சத்தியமூர்த்தி, ஓட்டுநர் அண்ணாத்துரை நகர தி.மு.க. பொரு ளாளர், வழக்கறிஞர் சத்தியமூர்த்தி,

ஓட்டுநர் அண்ணாதுரை ஒன்றிய ப.க. தலைவர் சோ. இராமகிருஷ்ணன் ஆகி யோர் பங்கேற்றனர். திறுவையாறு முன் னாள் சட்டமன்ற உறுப்பினர் இளங் கோவன், தஞ்சை இரத்தினகிரி ஆகியோர் மூடநம்பிக்கை முறியடிக்கப்பட்டதை விளக்கி உரையாற்றினர். ஏராளமான பொது மக்கள் தெளிவு பெற்றனர். இனிப்பு வழங்கப்பட்டது.
                       -----------------------------"விடுதலை” 23-12-2012

22.12.12

கடவுளை நம்பும் முட்டாள்களே!


அதாவது கடவுள் ஒருவர் இருக்கிறார்; அவரே உலகைப் படைத்து, காத்து, நடத்தி வருகிறார்; அவரன்றி ஓர் அணுவும் அசையாது; அவரே உலக நடப்புக்குக் காரணஸ்தர் ஆவார். என்றெல்லாம் கருதி வரும் முட்டாள்களே!

கடவுளால் உலகத்திற்கு, மனித சமுதாயத்திற்கு, ஜீவகோடி களுக்கு ஏற்பட்ட நன்மை என்ன?

கடவுள் இருக்கிறார் என்றால் ஜீவன்களுக்கு பசி, தாகம், புணர்ச்சி, ஆசை, கவலை, நோய், வேதனை, சாவு முதலியவை ஏன் ஏற்பட வேண்டும்?

பிறப்பு, சாவு, தோற்றம், அழிவு எதற்குத் தேவை?

இவைகளால் உலகமோ, மக்களோ அடைகிற லாபம் என்ன?

கடவுள் தோன்றி எத்துணையோ காலம் ஆகியும், எத்துணையோ காலமாக மக்கள் கடவுளை நம்பியும் வணங்கியும் வந்தும், யோக்கியனாகவோ கவலையற்றவனாகவோ ஒரு மனிதனைக் கூட காணமுடிவில்லையே. ஏன்?

கடவுள் பாதுகாப்பு இருந்தால் வீட்டிற்குக் கதவு, தாழ்போடா மலும், பெட்டிக்குப் பூட்டு போடாமலும் அவற்றில் பண்டங்கள் வைக்க முடியவில்லை, ஏன்? மனிதன் எதனால் கெட்ட காரியங்களைச் செய்கின்றான்?

ஒரு மனிதனால் மற்றொரு மனிதனுக்கு ஏன் தீங்குகள் செய்யப்படுகின்றன?

கடவுள் நம்பிக்கைக்காரர்களிடத்தில் காணப்படும் நற்குணங்கள் என்ன?

மனிதரிடம் காணப்படும் தீய குணத்திற்குக் காரணஸ்தர்கள் யார்?

ஒரு மனிதனுக்கு அவன் கெட்ட காரியம் செய்த பிறகு, செய்து விட்டுச் செத்த பிறகு அவனுக்குத் தண்டனையைக் கொடுக்கும் கடவுள், அந்த மனிதனைக் கெட்ட காரியம் செய்யாமல் தடுக்க முடியாமல் போவது ஏன்?

கெட்ட காரியம் செய்தவனுக்குத் தண்டனை கொடுப்பதானாலும், கெட்ட காரியம் செய்யப்பட்டதால் துன்பம், நட்டம், நோய், மரணம் அடைந்த வனுக்குக் கடவுள் என்ன பரிகாரம் செய்கிறார்?

மனிதனுக்கு நன்மை, தீமை, இலாபம், நஷ்டம், செல்வம், தரித்திரம், சுகம், துக்கம், திருப்தி, அதிருப்தி, கவலை, துன்பம் முதலிய அவஸ்தைகள் எதற்காக ஏற்பட்டும், இருந்தும் வரவேண்டும்?

மனிதன் படும் அவஸ் தைகள் கடவுளுக்குத் தெரி யாதா? தெரிந்திருந்தால் இவை கடவுளுக்குத் திரு விளையாடலா?

நரகத்தைப் பாவ காரியத்திற்குப் பரிகாரமாக, தண்டனையாகச் சிருஷ்டித்த கடவுளை விட அயோக்கியன், கொடியவன், துஷ்டன் உலகில் யாராவது இருக்க முடியுமா?

இப்படிப்பட்டவனை அன்புருவு, கருணையுரு என்று சொல்லுகிறவனை விட வேறு மடையன் உலகில் இருக்க முடியுமா?

ஏன் இதைப்பற்றி இவ்வளவு சொல்லுகிறேனென்றால் என் அனுபவத்தில் கடவுளால் உலக முன்னேற்றமும், மனித சமுதாய ஒழுக்கமும், மனிதத்தன்மையும் பெருமளவிற்குப் பாதிக்கப்பட்டு விட்டதுடன், கெட்டும் வருகிறது என்று உணர்ந்தாலும், இதை வெளிப்படுத்த வேறு ஆள் இல்லையென்று நான் காணுவதாலும், எனக்கு வயது எல்லைக்கு நெருங்குவதாலும் உணர்ந்ததை வெளிப்படுத்தி விடலாம் என்று கருதியதாலேயேயாகும்.

ஆகவே, மனிதன் எவ்வளவுக்கெவ்வளவு சீக்கிரம் கடவுளை மறுக்கிறானோ, மறக்கிறானோ அவ்வளவுக்கவ்வளவு சமுதாய முன்னேற்றம் இருக்கிறது என்பது எனது உறுதி.

----------------------------14.7.1970 உண்மை இதழில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய தலையங்கம்

21.12.12

தாழ்த்தப்பட்டவர்களை விலக்கி பார்ப்பனர்களை அரவணைத்துக் கொள்வதுதான் தமிழ்த் தேசியமா?


திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் மானமிகு க. அன்பழகன் அவர்களின் 91ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா வடசென்னையில் நேற்று மாலை கொண்டாடப்பட்டது.

திராவிடர் இயக்கத்தில் நீண்ட காலம் பொது வாழ்வுக்குச் சொந்தக்காரரான அவருக்கு இத்தகு விழா எடுத்தது சாலப் பொருத்தமே!

இந்த விழாவில் பேசிய தி.மு.க. தலைவர் மானமிகு கலைஞர் அவர்களும் சரி, பொதுச் செயலாளர் பேராசிரியர் மானமிகு க. அன்பழகன் அவர்களும் சரி, திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களும் சரி பேசிய உரையின் மய்ய நீரோட்டம் திராவிடர் இயக்கத்தைப் பற்றியதேயாகும்.
ஏதோ வெறும் பாராட்டு விழா என்றளவில் அமைந்திடாமல், திராவிடர் இயக்கத்தில் மூத்த தலைவராக இருக்கக் கூடிய ஒருவருக்கு எடுக்கப்பட்ட விழா - கொள்கையை மய்யப் புள்ளியாக வைத்து கருத்துக்கள் பரிமாறப் பட்டது வரவேற்கத்தக்கதே! அதுவும் திராவிடர் இயக்கத்தைப் பற்றி பல விமர்சனங்கள் கிளப்பப்பட்டு இருக்கும் ஒரு கால கட்டத்தில், மூத்த திராவிடர் இயக்கத் தலைவருக்காக நடத்தப்படும் விழாவில் அதுகுறித்த கருத்தினைப் பட்டாங்கமாகத் தெரிவிப்பதுதான் சரியானது. அந்தச் சரியான கடமையை நேற்றைய விழா ஆற்றியிருக்கிறது என்பதில் அய்யமில்லை.

திடீரென்று இந்தச் சர்ச்சையை ஏற்படுத்தி யவர்களுக்கு ஏதோ ஓர் உள் நோக்கம் இருக் கிறது. ஆரியர் - திராவிடர் என்பது எல்லாம் வெறும் கட்டுக் கதை, வெள்ளைக்காரன் ஏற்பாடு செய்த பிரித்தாளும் சூழ்ச்சி என்று பார்ப் பனர்கள்தான் கூறி வந்தனர்.

பார்ப்பனர்கள் கூறி வந்த இந்தக் கருத் தினைத்தான் தமிழ்த் தேசியவாதிகள் என்று தங்களுக்குத் தாங்களே அறிவித்துக் கொண் டவர்கள் கடன் வாங்கிக் கொண்டுள்ளனர்.

உண்மை என்னவென்றால் பார்ப்பன வரலாற்று ஆசிரியர்களே ஆரியர் - திராவிடர் பற்றி விரிவாக எழுதியுள்ளனர்.

திராவிடரா - தமிழரா என்ற வார்த்தை ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் சொல்லும் தமிழ்த் தேசியத்தில் பார்ப்பனர்கள் பற்றிய அவர்களின் புரிதல் என்ன என்பது தான் முக்கியம்.
பார்ப்பனர்களைத் தமிழர்களின் பட்டியலில் சேர்ப்பதன் மூலம், இந்த இனத்துக்கு மாபெரும் துரோகத்தைச் செய்துவிட்டனர்.

இன்னும் சொல்லப் போனால் பார்ப்பனர்களுக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு பார்ப்பன எதிர்ப்பு இயக்கமான திராவிட இயக்கத்தை எதிர்க்க ஆரம்பித்து விட்டனர்.

திராவிடர் இயக்கம் பார்ப்பன ஆதிக்கத்தை முன்வைத்து எதிர்த்துப் போராடியதன் விளைவாகத்தான் பார்ப்பனர் அல்லாதார்களுக்கு சிவில் உரிமை, கல்வி வாய்ப்பு, வேலை வாய்ப்பு உள்ளிட்ட எல்லா உரிமைகளும், வாய்ப்புகளும் கிடைத்தன.

சமூக நீதி என்னும் அருட்கொடையைப் பார்ப்பனர் அல்லாதாருக்குக் கிடைக்கச் செய்தது திராவிடர் இயக்கமே.

இதனை மறந்து விட்டு, தமிழ்த்தேசியம் என்ற பெயரால் பார்ப்பனர்களை வாரி அணைத்துக் கொள்ளத் துடிப்பது சமூக நீதிக்கு வெட்டப்படும் ஆழமான குழியாகும்.

தமிழ்த் தேசியவாதிகளைப் பார்ப்பன ஊடகங்கள் தாங்கிப் பிடிப்பதற்கே காரணம் - இப்பொழுது புரிந்திருக்க வேண்டுமே!

தாழ்த்தப்பட்டவர்களை ஒதுக்கி, தாழ்த்தப் பட்டோர் அல்லாதார் என்கிற அமைப்பை அரசியல் ரீதியாக உருவாக்கத் துடிப்பவரும் ஒரு தமிழ்த் தேசியவாதியே! தாழ்த்தப்பட்டவர்களை விலக்கி, பார்ப்பனர்களை அரவணைத்துக் கொள்வதுதான் தமிழ்த் தேசியமா? இந்த ஆபத்தைப் புரிந்து கொள்வீர்!  -------------20-12-2012


தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் திராவிடர் இயக்கம் இல்லாமல் எந்தச் சாதனையும் இல்லை - எந்த வளர்ச்சியும் கிடையாது.

1) பார்ப்பனர் அல்லாதாருக்காக ஓர் அமைப்புத் தொடங்கப்பட்டதே - அது என்ன சாதாரணமா?

2) பார்ப்பனர்கள் உருவாக்கிய வருண சமூக அமைப்பில் பார்ப்பனர் அல்லாதாரின் சமூகத் தகுதி என்ன? சூத்திரர்கள்தானே?

3) சூத்திரர்கள் என்றால் யார்? பிறவி அடிமைகள் தானே? வேசி மகன் தானே?

4) அந்தச் சூத்திரனுக்கு, பஞ்சமர்கட்கு படிக்கும் உரிமை உண்டா? பொது வீதிகளில் நடக்கும் உரிமை உண்டா? அரசர்கள் காலத்திலும் அதே நிலைதானே?

5) இலண்டன் வரை சென்று பார்ப்பன அல்லாதாரின் இடஒதுக்கீட்டுக்காக பிரிட்டிஷ் பாராளுமன்றமும் சாட்சியம் அளித்தது திராவிடர் இயக்கம்தானே?

6) பொது வீதிகளில் நடக்கும் உரிமை, பொது நீர் நிலைகளைப் பயன்படுத்தும் உரிமை, பேருந்துகளில் தாழ்த்தப்பட்டோர் பயணம் செய்யும் உரிமை, கல்விக் கூடங்களில் தாழ்த்தப்பட்டோர் கட்டாயம் சேர்க்கப்பட வேண்டும் என்ற நிலை இவை எல்லாம் திராவிடர் இயக்க ஆட்சியின் சாதனை அல்லாமல் வேறு என்னவாம்?

7) கல்லூரிகளில் மாணவர்களைச் சேர்க்கக் குழு அமைத்து, பார்ப்பனர் அல்லாதாரும் கல்லூரிக்குள் நுழைய கதவைத் திறந்து விட்டது யார்?
8) அரசுப் பணியாளர்களைத் தேர்வு செய்ய தனி அமைப்பை (ளுவயகக ளுநடநஉவடி க்ஷடியசன)  உண்டாக்கியது எந்த ஆட்சி?

9) வகுப்புவாரி பிரதிநிதித்துவ ஆணையைக்   கொண்டு வந்து தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் கல்வி, வேலை வாய்ப்பில் இடம் பெற்றதற்கு யார் காரணம்?

10) பெண்களுக்கு வாக்குரிமை இந்தியாவிலேயே முதன் முதலாக அளித்தது எந்த ஆட்சி?

11) பெண்களைக் கோயிலுக்குப் பொட்டுக் கட்டி விட்டு, இழிவுபடுத்திய முறையை ஒழித்திட தேவதாசித் தடுப்புச் சட்டத்தைக் கொண்டு வந்தது எந்த ஆட்சி?

12) பார்ப்பனர்களின் சுரண்டல் கேந்திரமாக இருந்த கோயில்களை இந்து அறநிலையத்துறையை உண்டாக்கிக் கொள்ளையைத் தடுத்தது எவர் ஆட்சியில்?

13) ஆங்கிலேயர் மயமாக இருந்த மருத்துவத் துறையை இந்திய மயமாக்கியது எந்த ஆட்சி?

14) சென்னைப் பல்கலைக் கழகத்தில் தமிழுக்கு இடம் அளித்தது யார்?

15) இந்தியை எதிர்த்ததும்,  தமிழ்நாட்டில் இந்திக்கு இடமில்லை என்று சட்டம் செய்ததும் யார் - எவர்?

16) சென்னை மாநிலத்துக்குத் தமிழ்நாடு என்று சட்ட ரீதியாகப் பெயர் சூட்டியது யார்?

17) பார்ப்பனீய முறையில் நடைபெற்று வந்த விவாஹ சுபமுகூர்த்த முறையைத் தூக்கி எறிந்து சுயமரியாதைத் திருமண முறையை அறிமுகப்படுத் தியது யார்? அதற்குச் சட்ட வடிவம் கொடுத்ததும் யார்?

18) தமிழுக்குச் செம்மொழித் தகுதியை ஏற்படுத்தியது யார்?

19) மாநில அரசு மட்டுமளவில் இருந்த இட ஒதுக்கீட்டை மய்ய அரசின் துறைகளிலும் (மண்டல் குழுப் பரிந்துரைகளை) பிற்படுத்தப்பட்டோருக்கு அகில இந்திய அளவில் கொண்டு வந்ததற்கு யார் காரணம்?

20) சுதந்திர தினக் கொடியை முதல் அமைச்சர் ஏற்றுவதற்கான உரிமையை அகில இந்திய அளவில் வாங்கிக் கொடுத்தவர் யார்?

இவை அனைத்திற்குமே முழு முதற் காரணம் திராவிடர் இயக்கமும், அதன் ஒப்பற்ற தலைவர்களும் அல்லவா?

இவற்றில் ஒன்று நீங்கினாலும் அது எவ்வளவுப் பெரிய இழப்பு என்பதை அறிவு நாணயத்தோடு எண்ணிப் பார்த்தால் திராவிடர் இயக்கத்தின் அருமை - பெருமை என்ன என்று எளிதில் விளங்குமே!

இனி மேலாவது திராவிடர் இயக்கத்தின்மீது சேற்றை வாரி இறைக்கும் துரோகத்தைக் கை விடுவார்களா - தமிழ்த் தேசியவாதிகள்?

                           --------------------------"விடுதலை” தலையங்கம் 20,21-12-2012