Search This Blog

30.9.14

பிள்ளைப்பேறு - உடல்கூறு கல்வி பற்றி பெரியார்

பிள்ளைப்பேறு - உடல்கூறு கல்வி

நமது பெண்களுக்கு முக்கியமாய்த் தெரிய வேண்டியது பிள்ளைப் பேறு, பிள்ளை வளர்த்தல், ஆண் பெண் உடல்கூறு ஆகியவைகளாகும். பிள்ளைப்பேறு விஷயத்தில் நமது பெண்களுக்கு ஒன்றுமே தெரியாது. அனேகம் பேர்களுக்குச் சேர்க்கையால்தான் பிள்ளைப்பேறு கர்ப்பம் உண்டாகின்றது என்பதுகூடத் தெரியாது.

ஏதோ கடவுள் கொடுக்கிறார்; கடவுளே வயிற்றில் கொண்டு விடுகிறார், கடவுளே பெற்ற பின்பும் நோய் உண்டாக்குகிறார், கடவுளே வளர்க்கிறார், கடவுளே சாகடிக்கிறார் என்று கருதிக் கொண்டு இது விஷயங்களில் மிருகங்களைவிடக் கேவலமாய் நடந்து கொள்ளுகிறார்கள். நண்பர் கல்யாணசுந்தர முதலியார் அவர்கள் பிள்ளைப் பேறு விஷயத்தில் ஆண் பிள்ளை வேண்டுமென்று கருதினால் ஆண் பிள்ளை பெறவும் பெண் பிள்ளை வேண்டுமென்று கருதினால் பெண் பிள்ளை பெறவும் மனிதனால் கூடும் என்னும் அந்த வித்தையைத் தான் படித்திருப்பதாகவும் அவர்கள் சொன்னதால் அது விஷயமான மற்ற விஷயங்களைப்பற்றியும் நான் சொல்லத் துணிந்தேன்.


அந்த மாதிரி, அதாவது முதலியார் அவர்களைப் போல் நான் சொல்லி இருந்தால் ஒரு நாஸ்திகன் சொல்லுகிறான் என்று சொல்லியிருப்பீர்கள். ஆஸ்திக சிகாமணியும் ஆஸ்திகப் பிரச்சாரம் செய்பவருமான அவர் சொன்னதினால் பிள்ளைப் பேறுக்கும் கடவுளுக்கும் யாதொரு சம்பந்தமுமில்லை என்றாவது தெரிந்திருப்பீர்கள். இல்லா விட்டால் எல்லாம் கடவுள் செயல் என்றும், அதற்கு மாறுபட்ட அபிப்பிராயமெல்லாம் கடவுள் செயலை மறுப்பதென்றுமே சொல்லுவீர்கள். இந்தக் காரியத்தில் எல்லாம் கடவுள் பிரவேசிக்க முடியாது. அவர் இருந்தால் அவருக்கு வேறு எத்தனையோ வேலை இருக்கிறது. சோம்பேறிகளும் மூடர்களும் பித்தலாட்டக்காரரும்தான் தொட்டதற்கெல்லாம் கடவுளைக் கொண்டு வந்து குறுக்கே போட்டுவிட்டு தங்கள் பொறுப்பைக் கைவிட்டு விடுவது. அறிவு வளரவளர இது குறைந்துவிடும்.


மேல் நாட்டில்

மேல் நாடுகளில் பிள்ளைப் பேறு விஷயத்தில் ஒவ்வொரு பெண்ணும் ஆணும் சிறிதாவது அறிவுடையவர்களாகவே இருக்கிறார்கள். அதனாலேயே அங்கு பிள்ளைகள் சாவு மிகவும் குறைச்சல்; கர்ப்பத்தில் சாவதும் மிக மிகக் குறைச்சல், கர்ப்ப ஸ்திரீகள் சாவும் குறைச்சல், பிள்ளைகளுக்கு வியாதி வருவதும் குறைவு. அளவுக்கு மீறியும் வளர்க்க முடியாத அளவும் இளம் வயதிலும் பிள்ளைப் பெறுவது முதலாகிய காரியங்கள் அங்கு அதிகம் காண முடியாது. மனித வாழ்வு ஆயுளும் நம்மைவிட இரட்டிப்பு நாள் வாழ முடிகிறது. இவற்றில் எல்லாம் கடவுள் செயல் இருக்குமானால் கடவுளுக்கு நம் நாட்டின்மீதும், நம் சமூகத்தின்மீதும் கெட்ட எண்ணமே என்று யோசித்துப் பாருங்கள். இந்தக் காரியம் அங்கெல்லாம் மனித அறிவினாலும் மனித முயற்சியாலுமே சீர்படுத்தப்படுகிறது. இங்கு அறிவீனத்தாலும் கவலை ஈனத்தாலுமே இப்படி ஆகி வருகிறது.

சேர்க்கை விஷயம்

சேர்க்கை விஷயம் அது சம்பந்தமான உடல் கூறு ஆகியவைகளைப் பற்றித் தெரிவது வெகு கேவலமாக இங்கு பேசப்படுகிறது. கதைகளில் புராணங்களில் நாடகத்தில் பச்சை பச்சையாய் கேட்கிறபோதும் பார்க்கிறபோதும் ஆனந்தக் கூத்தாடுகிறோம். அந்தக் கலைகளை நமது ஆண் பெண் இருபாலருமே ஒரு அளவுக்காவது தெரிந்து இருக்க வேண்டும். அது தெரிந்து கொள்ளாமல் வெறும் மிருகப்பிராயமாய் இருப்பதாலேயே அநேக நோய் சாவு ஊனம் மனச்சஞ்சலம் பொருந்தா வாழ்வு ஆகியவைகள் பெருகுகின்றன. குழந்தைகள் பெறுவதில் கர்ப்ப காலத்தில் எப்படி இருக்க வேண்டும், குழந்தை பிறந்த பின்பு எப்படி இருக்க வேண்டும், அதை எப்படி வளர்ப்பது, எத்தனை நாள் பொறுத்து மறுபடியும் கர்ப்பம் தரிக்க இடம் கொடுக்க வேண்டும் என்பவைகளையாவது ஒவ்வொரு பெண்ணும் தெரிந்திருக்க வேண்டும். சேர்க்கையில் எப்படி இருக்க வேண்டும் என்பது தெரியாமல் நடந்து கொண்டு நோய் வந்தால், அதற்குப் பொம்பளை (பெண்பிள்ளை) நோவு என்று சொல்லி விடுகிறார்கள். இதில் ஒரு விசேஷம் என்னவென்றால், பெண்களுக்கு அது சம்பந்தமான நோய் வந்தாலும் பெண்கள் அதையும் பொம்பளை வியாதி என்றுதான் சொல்லுகிறார்கள். இது பெண்கள் சமூகத்திற்கே இழிவான காரியமாகும். இது சம்பந்தமான வியாதி நம் நாட்டில் இருப்பதுபோல் மேல் நாட்டில் இவ்வளவு கிடையாது.

அறிந்தால் தவற மாட்டார்

ஆண்-பெண் தன்மை, உடல்கூறு சேர்க்கை விளக்கம், கர்ப்பம் - பிள்ளைப்பேறு ஆகியவைகளைப்பற்றி சர்க்கார் அத்தருணம் நெருங்கிய பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். அல்லது மேல்வகுப்புக்குப் பாடமாகவாவது வைக்க வேண்டும். இவற்றை நன்றாக மக்கள் அறிந்தால் இக்காரியங்களில் ஒழுக்கத் தவறுதல் கூட  ஏற்படாது என்பது எனது அபிப்பிராயம். எப்படி எனில், மனிதன் இன்னஇன்ன பதார்த்தம் சாப்பிட்டால் உடலுக்கு ஒத்துக் கொள்ளாது நோய்வரும் என்று கருதினால் எப்படிச் சாப்பிடாமல் விட்டுவிடுகிறானோ அதுபோல் இன்ன மாதிரி நடந்தால் கேடுவரும் என்று தெரிந்தால் அதைச் செய்யாமல் தப்பித்துக் கொள்வான். அப்படிக்கில்லாமல் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்று தெரியாமல் இஷ்டப்படி நடந்து கொண்டு வந்த வினையை கடவுள் செயல் என்று சொன்னால் மனிதனுக்கும் மிருகத்திற்கும் என்ன வித்தியாசம்?

கவலையற்ற இன்பம்

கல்யாணம் செய்துகொண்டவர்கள் அவசரமாகப் பிள்ளை பெற வேண்டுமென்று ஆசைப்படக் கூடாது. 10 வருஷமாவது சுதந்திரமாய் கவலையற்று வாழ்க்கை இன்பம் அனுபவிக்க வேண்டும். அல்லது குறைந்தது கல்யாணமாகி 5,6 வருஷத்திற்காவது பிள்ளை பெறாமல் கவலையற்று வாழ வேண்டும். இந்தக் காலத்தைத் தவிர மனிதனுக்கு கவலையற்ற இன்பமனுபவிக்க காலமே கிடையாது. இந்தக் கொள்கைகள் எல்லாம் சரி என்று பட்டால் பிறகு இவைகளுக்கு அறிவும் சவுகரியமும் தானாகவே ஏற்பட்டு விடும்.

செல்வம்

தாய் தகப்பன்மார்கள் மகளுக்கு துணிமணி வாங்கிக் கொடுப்பதிலும், நகை போடுவதிலும், ஆடம்பரச் செலவு செய்வதிலும் செலவிடும் பணத்தை ரொக்கமாகச் சேர்த்து வைக்கும்படி பெண்ணின்பேரால் பாங்கியில் போட்டு பெருக்கி வைக்க வேண்டும். குழந்தை பிறந்த உடன் குழந்தையைப் பார்த்துக் கொள்ளும் தாதிக்கு (ஆயாம்மாளுக்கு) சம்பளம் கொடுக்கவும் அந்தப் பணம் உதவும்படி இருக்க வேண்டும். தாய் தகப்பன் பெண்களுக்குச் செய்ய வேண்டிய முக்கிய உதவி இதுவேயாகும். அதாவது கல்வி அறிவு கொடுப்பதும் பிள்ளை வளர்க்க பணம் சவுகரியம் செய்து கொடுப்பதுமேயாகும்.

சுகாதாரம்

தவிர, நமது பெண்களுக்குச் சுகாதார அறிவும் ஏற்படுத்த வேண்டும். நம் நாட்டில் நன்றாகப் படித்த பெண்களுக்குக்கூட சுகாதார அறிவு கிடையாது. நமது வீட்டுக் குப்பையைப் பக்கத்து வீட்டுப் பக்கம் கொட்டுவதும் நமது வீட்டுப் பிள்ளையை எதிர்த்த வீட்டு டிச்சில் வெளிக்கு இருக்க விடுவதும் வீட்டில் உள்ள அசிங்கத்தைக் காகிதத்தில் மடித்து நடு வீதியில் எறிவதும் சுகாதாரமாய் கருதப்படுகிறது. இப்படியே ஒவ்வொருவரும் செய்து தங்களை ஏமாற்றிக் கொள்ளுகிறார்கள். கடைசியில் சுகாதாரக் குறைவினாலேயே பல நோய்கள் உண்டாகின்றன. மேல்நாடுகளில் ஒரு பெண்ணோ ஓர் ஆணோ ஒரு பற்ற வைத்த நெருப்புக்குச்சித் துண்டைக்கூட ரோட்டில் போட மாட்டார்கள். ஜோப்பிலாவது போட்டுக் கொண்டு போய் குப்பைத் தொட்டி கண்ட பக்கம் அதை எடுத்து அதில் போடுவார்களே ஒழிய வீதியில் போட மாட்டார்கள். சத்தமாய் இரும மாட்டார்கள். தெருவில் எச்சில் துப்ப மாட்டார்கள். 

இவ்விஷயங்களில் ஆண்களைவிட பெண்களே அதிகம் கவலை செலுத்துவார்கள். இங்கே சில பெண்கள் மூக்குத்தி, நத்து பேசரி போட்டுக் கொண்டு மூக்கைச் சிந்துவதும் வீதியில், சுவரில், நிலத்தில் வீசி எறிவதும் வெகு ஆபாசமாய் காணப்படும்.

--------------------------------16.06.1940 அன்று காஞ்சிபுரத்தில் திருவாட்டி லீலாவதி திருமணத்தில் கலந்து கொண்டு தந்தை பெரியார் ஆற்றிய சொற்பொழிவு.
- "குடிஅரசு" - 30.06.1940

பெரியாருடைய கொள்கைகள் முழுமையாக வாழ்ந்து கொண்டிருக்கிறது-கி.வீரமணி

திருமணத்திற்கு முன் மருத்துவச் சோதனை பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு தரும் 

சேலம் தமிழ் மறவர் புலவர் பி.அண்ணாமலை - சரசு அம்மையார் இல்ல மணவிழா
திருமணத்திற்கு முன் மருத்துவச் சோதனை பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு தரும்
தண்ணிழல்-சிவசங்கரி வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழாவில் கழகத் தலைவர் ஆசிரியர் சிறப்புரை
திருச்சி, செப். 29-  திருமணத்திற்கு முன் மருத்துவ சோதனை பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு தரும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் உரையாற்றினார்.

ஆத்தூரில் உள்ள விஷ்ணுபிரியா திருமண அரங்கில் 11.9.2014 அன்று காலை 10 மணிக்கு அ.கு.தண்ணிழல் - ப.சிவசங்கரி ஆகியோரது வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழா தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. அவரது உரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:


மணமக்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்வது மிகமிக அவசியம்


ஜோதிடம் பார்ப்பதற்குப் பதிலாக, என்ன செய்ய வேண்டும்? பெற்றோர்களே மணமக்களைத் தேர்ந்தெடுத்து ஏற்பாடு செய்கின்ற திருமணங்களாக இருந்தாலும் சரி, அல்லது காதல் திருமணங்களாக இருந்தாலும் சரி, சிறப்பாக, வெற்றிகரமாக அந்த மணவாழ்க்கை அமைவதற்கு, நல்ல பாதுகாப்பான ஏற்பாடுகள் என்ன என்று சொல்வதற்கு, வெறும் விசாரணைகள் மட்டும் உதவி செய்யாது. அதற்கு மேலாக ஒன்றைச் சொல்லலாம். அதற்குரிய வாய்ப்புகள் இப்பொழுது ஏராளமாக இருக்கின்றன. அந்த வாய்ப்பு களைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று, திராவிடர் கழகம்போல் இருக்கக்கூடிய பெரியார் சிந்தனையாளர்கள், பெரியாருடைய இயக்கங்கள் தெளிவான இந்தக் கருத்தினை முன்வைத்து வருகிறோம். அது என்ன? மணமக்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்வது மிகமிக அவசியமாகும். அது தேவையும்கூட. இதனை எடுத்துச் சொல்லும்பொழுது, சில பேருக்குப் பக்குவம் இல்லை, சொல்வதைக் கேட்பதற்கு. ஜோசியக்காரனிடம் செல்வதை விட, மருத்துவரிடம் போய் இரண்டு பேருடைய உடல் நிலையைப் பரிசோதனை செய்து, சான்றிதழ் வாங்க வேண்டும்; அந்த சான்றிதழ் தவறான சான்றிதழாக அமைந்துவிடாமல், பாதுகாப்பு ஏற்பாட்டோடு செய்து வந்தால், இப்பொழுது வருகின்ற வழக்குகளில், பெரும் பாலான அளவிற்கு வருவதற்கு வாய்ப்பில்லாமல் போகும்.


வழக்குரைஞர்களாக இருக்கின்றவர்களுக்கு, அருள் மொழி போன்றவர்களுக்கு வழக்குகள் குறைந்துவிட் டனவே என்று யாரும் வருத்தப்படவேண்டாம்; அவர்களுக்கு வேறு வழக்குகள் நிறையவே இருக்கின்றன, தாராளமாக!
எதற்காக இதனை எடுத்துச் சொல்கிறோம் என்று சொன்னால், இந்தச் சிந்தனை இருக்கிறதே, அதற்கு முதலில் விதை போட்டவர்கள் பெரியார் தொண்டர்கள். இப்பொழுது எந்த அளவிற்கு வளர்ந்திருக்கிறது என்று சொன்னால், ஒவ்வொரு நாளும் வெற்றிப் பாதையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம் என்பதற்கு அடையாளம், சென்னை உயர்நீதிமன்றத்தினுடைய மதுரைக் கிளையில் ஒரு நீதியரசர் கிருபாகரன் அவர்கள், வழக்கொன்றில் தீர்ப்பு அளிக்கும்பொழுது அண்மையில் அந்தக் கருத்தை வலியுறுத்தியிருந்தார்.


உயர்நீதிமன்ற நீதிபதி அளித்த தீர்ப்பு


சமூகத்தின் அடிப்படையாக இருப்பது குடும்பம். குடும்பத்தின் தலைவன்-தலைவி சாதாரண இணையர் களாக இல்லாத பட்சத்தில், மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடுகிறது. ஆண்மையின்மை திருமண முறிவுக் குக் காரணமாக இருக்கிறது. ஆனால், இதை மறைத்து திருமணம் செய்து விடுகின்றனர்.


இதனால் விவாகரத்து வழக்குகள் எண்ணிக்கை அதி கரிப்பதற்கு, ஆண்மையின்மை முக்கியக் காரணமாக இருக் கிறது. இந்த இயலாமையின் காரணமாக தம்பதியரில் ஒருவர் பாதிக்கப்படுகின்றனர். பெரும்பாலான வழக்குகளில் அதிகம் பாதிக்கப்படக் கூடியவர்களாக பெண்கள் இருக் கின்றனர். இது அவர்களின் அடிப்படை உரிமையை மீறுவ தாக உள்ளது.
சமூகக் கட்டுப்பாடுகள், கலாச்சாரத்தின் பெயரில் இத்தகைய பிரச்சினை பெரும்பாலும் வெளியில் சொல்லப் படுவதில்லை. ஆனால், இதைத் தடுக்காத பட்சத்தில் பாதிக் கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கும். திருமணத்துக்கு முன்பு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்வதன் மூலம் இப்பிரச்சினையைத் தவிர்க்க முடியும். அதோடு, எச்அய்வி, எய்ட்ஸ் பாதிக்கப்பட்ட வர்கள் திருமணம் செய்துகொள்வதையும் தடுத்துவிட முடியும். மத்திய, மாநில அரசுகள் இப்பிரச்சினைக்குத் தீர்வு காண முன்னுரிமை அளிக்கவேண்டும்.


மேற்குறிப்பிட்ட கருத்துகளின் அடிப்படையிலும், பொது மக்களின் நலனைக் கருத்தில் கொண்டும் மத்திய, மாநில அரசுகளுக்கு இந்த கேள்விகளை நீதிமன்றம் முன் வைக்கிறது.


ஆண்மையின்மை குறைபாட்டின் காரணமாக ஏற்படக் கூடிய மண முறிவுகளின் எண்ணிக்கை மத்திய, மாநில அரசுகளின் கவனத்துக்கு வரப்பெற்றுள்ளதா?


இத்தகைய மணமுறிவைத் தடுக்க திருமணத்துக்கு முந்தைய மருத்துவப் பரிசோதனை கட்டாயம் என்பது அவசியம் இல்லையா?


இத்தகைய வழக்குகளை 6 மாதங்கள் அல்லது ஓராண் டுக்குள் முடிப்பதற்கான திருமணச் சட்டத்தை மத்திய அரசு ஏன் கொண்டு வரவில்லை?


இந்த வழக்குகளில் பாதிக்கப்படும் வாழ்க்கைத் துணைக்கு இழப்பீடு மற்றும் ஏமாற்றியவருக்குத் தண்டனை ஆகிய பிரிவுகளை ஏன் சேர்க்கவில்லை?
இப்பிரச்சினைக்குத் தீர்வுகாண எத்தகைய நடவடிக் கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ளன எனத் தெரிவிக்கவேண்டும்.


மேற்கண்டவாறு நீதியரசர் தன்னுடைய தீர்ப்பில் கூறியிருந்தார்.


இதுபற்றிய கருத்தரங்குகளை நடத்தவேண்டும் என்று நீதியரசர் கேட்டுக்கொண்டிருக்கிறார். நேற்றுகூட சென்னையில் டாக்டர் ராஜசேகர் போன்ற நண்பர்கள், அந்தத் துறையின் வல்லுநர்கள் ஒரு செய்தியாளர்கள் சந்திப்பினை நடத்தியிருக்கிறார்கள். அந்தச் செய்திகள் ஏடுகளிலே வந்திருக்கிறது.


எதற்காக இதனைச் சொல்கிறோம் என்றால், திராவிடர் கழகத்துக்காரர்களான நாங்கள் சொல்கின்ற கருத்துகள் எல்லாம் முதலில் அதிர்ச்சிக்குரியதாக இருக்கும்; நடை முறையில் அவை ஒத்துவருமா என்றெல்லாம் சிலர் நினைப்பார்கள். ஆனால், காலப்போக்கில் அதுதான் சிறப்பாக அமையும். யாரும் அதனை மறுக்க முடியாது.


பெரியாருடைய அருந்தொண்டினாலே இந்த மாற்றங்கள் வந்திருக்கின்றன


சுயமரியாதைத் திருமணங்கள் சட்டப்படி செல்லாது என்று சொன்னார்கள்; பிறகு, சுயமரியாதைத் திருமணங்கள் சட்டப்படி செல்லும் என்று நீதிமன்றங்களே தீர்ப்பளிக்கக் கூடிய அளவில் வாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இது வளர்ந்து கொண்டிருக்கிறது. ஆகவேதான், இங்கே வந்திருக்கின்ற சகோதரிகளுக்குத் தாய்மார்களுக்குச் சொல்லிக் கொள்கிறோம், இந்த மணமுறையைப் பார்த்து யாரும் அச்சப்படவேண்டிய அவசியமில்லை. அதனை நீங்கள் நன்றாகப் புரிந்துகொள்ளவேண்டும்.


ஒரு காலத்தில் நமக்கெல்லாம் படிப்பு வராது என்று சொன்னார்கள். ஆண்களே படிக்காத ஒரு சமுதாயம்; பெண்களைப்பற்றி கேட்கவேண்டிய அவசியமே இல்லை. அதேநேரத்தில் இப்பொழுது நீங்கள் எண்ணிப் பாருங்கள்; இப்பொழுது பெண் குழந்தைகளை யாராவது பள்ளிக்கூடத் திற்கு அனுப்பாமல் இருக்கக்கூடிய துணிச்சல் யாருக்காவது உண்டா? அப்படி நாம் வீட்டில் வைத்திருக்க முடியுமா? அப்படி வைத்திருந்தால், யாராவது ஒப்புக்கொள்வார்களா? நன்றாக நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும். 

இப்பொழுது ஏராளமாகப் படித்தவர்கள், ஆண்களைவிட பெண்கள்தான் அதிகமாக படித்து வருகிறார்கள். பெண்கள்தான் முதன்மை யாக வருகிறார்கள். இவையெல்லாம் எப்படி நடந்தது? தந்தை பெரியாருடைய அருந்தொண்டினாலே இந்த மாற்றங்கள் வந்திருக்கின்றன.
இந்த அழைப்பிதழைப் பார்த்தாலே உங்களுக்குத் தெரியும். ஒவ்வொருவரும் சிறந்த பட்டதாரிகளாக, இந்தக் குடும்பத்திற்கு வந்த பெண்கள் பொறியாளர்களாக, வழக் குரைஞர்களாக, மருத்துவர்களாக இவ்வளவு பேர் வரக் கூடிய அளவிற்கு சமுதாய மாற்றங்கள் இன்றைக்கு ஏற் பட்டிருக்கின்றன.


அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு என்று கேட்ட காலம் இப்பொழுது இல்லை.  அப்படி பேசினால், கேலி செய்வார்கள். அப்படிப்பட்ட மாற்றங்கள் எல்லாம் வருகிறது என்று சொன்னால், தந்தை பெரியாருடைய இயக்கத்தினாலே - இந்த இயக்கம் என்ன செய்தது என்பதை புரிந்துகொள்ளவேண்டும். இந்த இயக்கம் இல்லா விட்டால், இவ்வளவு மகிழ்ச்சியாக, இவ்வளவு கற்றோர் களாக சரி பகுதியாக பெண்கள் ஆகியிருக்கமாட்டார்கள். எனவேதான், அருமைத் தாய்மார்களே, அன்புள்ளம் கொண்ட சகோதரிகளே இன்னமும் சொல்லிக் கொள் கிறோம், உங்கள் உரிமைகளை நீங்கள் தெளிவாக உணருங் கள். இன்னமும் சொத்துரிமை - சம உரிமையாக சட்டம் வந்திருக்கிறது. ஆனால், இந்த உண்மை பல பெண்களுக்கு இது தெரியாது. சொத்துரிமை சமமாக இருக்கிறது - நம்மை எந்த ஆணும் இழிவுபடுத்தி பேச முடியாது என்பதுபற்றி. ஆனால், இன்றைக்கு எவ்வளவு பெரிய கொடுமைகள் பெண்களுக்கு நடந்துகொண்டிருக்கின்றன என்பது ஒரு பக்கம் நடந்தாலும்கூட, மற்றொரு பக்கத்தில், அதனை எதிர்த்துப் போராடக்கூடிய அளவிற்கு துணிச்சலைப் பெற்றிருக்கிறார்கள், சட்டப் பாதுகாப்பைப் பெற்றிருக் கிறார்கள்.

கறுப்புச் சட்டைக்காரர்கள் இடையறாது உழைத்ததினால்தான், இன்றைக்கு மகளிரும் சம உரிமை பெற்றனர்


இவைகளெல்லாம் ஏதோ திடீரென்று நடந்தவைகள் அல்ல; சத்திய சாய்பாபா கையைத் தூக்கியதால், பொத் தென்று கீழே விழுந்ததல்ல; ஆதிபராசக்தி, ஓம் சக்தி என்று சொன்னதனால் வந்ததல்ல. மாறாக, இடையறாத இந்த இயக்கம், சுயமரியாதை இயக்கம், தலைவர் தந்தை பெரியார் அவர்கள், கறுப்புச் சட்டைக்காரர்கள் இடையறாது உழைத் ததினால்தான், இன்றைக்கு மகளிரும் சம உரிமை பெற்றனர்.


பெரியார் கேட்டார், மக்கள்தொகையில் சரி பகுதியாக இருக்கின்ற பெண்கள்; அவர்களுக்கு உரிமை வேண்டாமா? முதலில் பெண்களுக்கு உரிமை கொடு என்று சொன்னார். பெண்ணை பூட்டி வைக்காதே! பெண்ணை பொருளென்று நினைக்காதே! பெண்கள் வெறும் அலங்கார பொம்மைகள் அல்ல; பெண்கள் வெறும் சமையல் கருவிகள் அல்ல! பெண்கள் வெறும் பிள்ளை பெறும் இயந்திரங்கள் அல்ல என்று இவ்வளவு கடுமையாகச் சொன்னார். இப்படி சொன்ன பிறகுதான், ஒரு பெரிய திருப்பம் ஏற்பட்டது. அந்தத் திருப்பம் ஏற்பட்டதன் விளைவுதான், இப்படிப்பட்ட அற்புதமான குடும்பங்கள் உருவாகியிருக்கின்றன. இந்தக் குடும்பம் ஒரு நல்ல கொள்கைப் பல்கலைக் கழகம். இதனால் பெரியாருக்கு லாபமா? என்று நீங்கள் கேட்கலாம். எங்களுக்கு என்ன இதில் லாபம் இருக்கிறது. உங்களுடைய வாழ்க்கை சிறப்பாக அமையப் போகிறது. உங்களுடைய பிள்ளைகள் சொந்தக்காலில் நிற்கிறார்கள். உங்களுடைய பெண் பிள்ளைகள் சொந்தக் காலில் நிற்கிறார்கள். படித்துவிட்ட பெண்கள், உத்தியோகத்திற்குச் செல்லும் பெண்கள், பதவியில் இருக்கும் பெண்கள் என்று சொன்னால், அவர்களை எந்த ஆணும் எளிதில் விரட்டிவிட முடியாது. என்னை அடித்தால், நீயும் அடி வாங்குவாய் என்ற நிலை, 70 ஆண்டுகளுக்கு முன்னால் இல்லை. உன்னால் என்ன செய்ய முடியும்? என் காலைக் கட்டிக்கொண்டுதானே இருக்கவேண்டும் என்று சொன்னார் கள். இன்றைக்கு அப்படி அல்ல; பெண்கள் துணிந்து எதிர்த்துப் போராடக் கூடிய நிலையில் இருக்கிறார்கள். அந்த அளவிற்கு துணிச்சல், தெளிவு வந்திருக்கிறது. இவையெல்லாம் இந்த இயக்கத்தினாலே ஏற்படுத்தப் பட்டவை. திராவிடர் இயக்கம் மலர்ந்த காரணத்தினாலே, செயல்பட்ட காரணத்தினாலே இன்றைக்கு இவ்வளவு பெரிய மாறுதல்கள் வந்திருக்கின்றன. எனவே, அந்த மாறுதல்களில் பூத்த அற்புதமான மலர்கள்தான் இங்கே மணமக்களாக இருக்கிறார்கள்.


யாருடைய படம் உங்கள் வீட்டில் இருக்கிறதோ, இல்லையோ பெரியார் படம் இருக்கவேண்டும்!


இதிலே காய்த்து கனிந்தவைதான் அவர்களின் வாழ்க்கை வெற்றிகளாக அமைந்து கொண்டிருக்கின்றன. எனவே, அருமைத் தாய்மார்களே, யாருடைய படம் உங்கள் வீட்டில் இருக்கிறதோ, இல்லையோ பெரியார் படம் இருக்க வேண்டும். காரணம், பெரியார் இல்லையானால், மகளிர் இந்த உரிமைகளைப் பெற்றிருக்க முடியாது; மகளிருக்கு இந்தத் துணிச்சல் வந்திருக்க முடியாது. மகளிருக்குச் சொத்துரிமை, மகளிருக்கு கல்வி உரிமை, மகளிருக்கு பதவி உரிமை, மகளிருக்கு மான உரிமை, மகளிருக்கு ஒட்டு மொத்தமான வாழ்வுரிமை இவை அத்தனையும் தந்தவர் அறிவாசான் தலைவர் தந்தை பெரியார் அவர்கள் ஆவார்.


எனவேதான், இன்றைக்கு வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. உங்கள் பெண் குழந்தைகளாக இருந்தாலும், அவர்களை நன்றாகப் படிக்க வையுங்கள். அவர்களுக்கு எவ்வளவு சொத்து கொடுப்போம் என்பதைப்பற்றி கவலைப்படா தீர்கள்; அறிவுசார் சொத்து படிப்பு என்று சொல்லி, அதனை நீங்கள் தாராளமாகக் கொடுங்கள். அதனை நீங்கள் கொடுத்து, சொந்தக்காலில்  நிற்க அந்தப் பெண்ணை நீங்கள் தயாரித்துவிட்டால், நிச்சயமாக, ஆமையாகவோ, ஊமையா கவோ ஒருபோதும் அந்தப் பெண் இருக்கமாட்டார். இதைத்தான் தந்தை பெரியார் சொன்னார். இது நடை முறையில் இன்றைக்கு வந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில், தாய்மார்களே, சகோதரிகளே நீங்கள் நினைத் துப் பார்க்கவேண்டும்.


சுயமரியாதைத் திருமணங்கள் உங்கள் வீட்டிலும் நடைபெறவேண்டும்


அதேபோல, வைதீக மணம் இங்கே இல்லையென்ப தால், என்ன சங்கடம்? தேவையற்ற சடங்குகள் இல்லை. மணமக்கள் இருவரும் எவ்வளவு மகிழ்ச்சியோடு அமர்ந் திருக்கிறார்கள். வைதீக முறையில் மணவிழா நடைபெற்றி ருந்தால், இவ்வளவு மகிழ்ச்சியாக உட்கார விட்டிருப்பார் களா? இவ்வளவு வசதியாக உட்கார்ந்திருப்பார்களா? மாங்குச்சி சுள்ளியைப் போட்டுக் கொளுத்தி, மணமகள் கண்ணைக் கசக்க, மணமகன் கண்ணை கசக்க எதிரே இருக்கின்ற பாட்டி, ஏன் மணமகள் அழுகிறார் என்று கேட்க, ஏதோ இருக்கும்போல இருக்கு என்று பக்கத்தில் அமர்ந்திருப்பவர் சொல்ல, இவ்வளவும் ஏற்படுமே, அதற்கெல்லாம் வாய்ப்புகள் இங்கே இருக்கிறதா என்பதை நீங்கள் எல்லாம் நினைத்துப் பார்க்கவேண்டும்.


ஆகவேதான், சடங்கில்லை, சம்பிரதாயம் இல்லை என் பதற்காக, நீங்கள் யாரும் கூச்சப்படவேண்டாம்; பயப்பட வேண்டாம்; அச்சத்தை அகற்றுங்கள்; வாழ்வியலை நோக்குங்கள். அந்த வகையில்தான், இந்த மணமக்களின் வாழ்க்கையைப் பார்த்து, இதுபோன்ற திருமணங்கள் நம் வீட்டிலும் நடைபெறவேண்டும் என்று எண்ணுங்கள்.


இன்னமும்கூட, பிராமணன், சடங்கு, சம்பிரதாயங்கள் இல்லாமல் மணவிழாவினை நடத்தினால் என்னாகுமோ, ஏதாகுமோ என்று நினைக்கிறார்கள். அது முற்றிலும் தவறு. எது அறிவுக்கு சரி என்று படுகிறதோ, எது உங்களுக்குத் தேவை என்று படுகிறதோ அதனை செய்யுங்கள். மணவிழாவிற்கு மாமா வரவில்லை, சித்தப்பா வரவில்லை, அப்பா வரவில்லை, அம்மா வரவில்லை என்றால் கவலைப்படுவதில் நியாயம் இருக்கிறது. புரோகிதர் வரவில்லை என்று கவலைப்பட்டால், அவர்களுக்கும், நமக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது.


பெரியாருடைய கொள்கைகள் முழுமையாக வாழ்ந்து கொண்டிருக்கிறது


திருமணத்தை நடத்தி வைக்கும்பொழுது அந்தப் புரோகிதர் சமஸ்கிருத மொழியில் சொல்லும் மந்திரத்திற்கு என்ன பொருள் என்று தெரியாது.  மறுபடியும்  சமஸ்கிருதம் வரவேண்டும் என்று நினைத்தார்கள். பெரியார் ஊட்டிய உணர்வுகள் இங்கே கொழுந்து விட்டு எரிகின்ற காரணத் தினால்தான், அத்துணைக் கட்சிகாரர்களும் சேர்ந்து தமிழ் நாட்டில் எதிர்த்தன, அதை உள்ளே நுழையவிடுவதில்லை என்று சொன்னால், இன்னமும் பெரியாருடைய கொள்கை கள் முழுமையாக வாழ்ந்து கொண்டிருக்கிறது, அசைக்க முடியாத, வேரோடி இருக்கிறது என்பதற்கு அடையாளம்.


நான் பொதுவாகவே மணமக்களுக்கு அறிவுரையை சொல்வதில்லை. ஏனென்றால், இன்றைய இளைஞர்கள் அறிவுரையை விரும்புவதில்லை. மணமக்களுக்கு வேண்டு கோளாக சில செய்திகளை சொல்லவேண்டும்.
உங்களுடைய அறிவு, ஆற்றல் தெளிவானது, உறுதி யானது. உங்கள் உழைப்பு உங்களை உயர்த்தும்; உங்களு டைய பகுத்தறிவு உங்களை உயர்த்தும். அது உண்மை. ஆனால், நீங்கள் வாழ்க்கையில் எவ்வளவு உயர்ந்தாலும், எவ்வளவு பெரிய பதவிக்குச் சென்றாலும், கை நிறைய எவ்வளவு சம்பாதித்தாலும், எவ்வளவு புகழ் பெற்ற நபராக நீங்கள் ஆனாலும், நீங்கள் மறவாமல் ஒன்றைச் செய்யவேண்டும். அதுதான், உங்கள் பெற்றோர்களுக்கு நன்றி காட்டவேண்டும்; உங்கள் பெற்றோரிடம் நீங்கள் பாசம் காட்டவேண்டும்; உங்கள் பெற்றோர்களுடைய உதவியை நீங்கள் மறக்கக்கூடாது. ஏனென்றால், இப் பொழுது படிப்பு உயர்கிறது; பாசம் குறைகிறது பல குடும்பங் களில். அது வேதனையாக ஆகக்கூடிய சூழல் ஏற்படுகிறது.


ஆகவேதான் நண்பர்களே, எல்லா மணவிழாக்களிலும் உரையாற்றும்பொழுது நான் சொல்வது என்னவென்றால், இல்லறம், துறவறம் என்றுதான் முன்பு சொன்னார்கள். பெரியார்தான் அதனை மாற்றினார்; இல்லறம் - தொண்டறம் என்று சொன்னார். இல்லறத்தில் இருந்துகொண்டே தொண்டறத்தை செய்யுங்கள். தொண்டறம் என்பது வேறொன்றும் இல்லை. யார் யாருக்கு உதவ முடியுமோ, அவர்களுக்கெல்லாம் நீங்கள் உதவுங்கள். உங்களுக்கு யார் உதவினார்களோ அவர்களுக்கு உங்கள் சக்திகேற்ப, உங்கள் வாய்ப்புக்கேற்ப உதவுங்கள். அதன்மூலமாக மகிழ்ச்சியை நீங்கள் அற்புதமான ஊதியமாகப் பெறக் கூடிய வாய்ப்பு ஏற்படும்.


அடுத்து, அன்புச் செல்வங்களே, நீங்கள் சிக்கனமாக வாழுங்கள்; எளிமையாக வாழுங்கள். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழுங்கள். அண்ணா சொன்னதை ஒவ்வொரு மணவிழாவிலும் நான் சொல்வது வழக்கம். விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை; கெட்டுப் போகிறவர்கள் விட்டுக் கொடுப்பதில்லை. இதனை நீங்கள் மனதில் வைத்துக்கொண்டு, ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழுங்கள்; வாழ்க்கைக்கும் விளையாட்டுக்கும் ஒரு அடிப்படையான வேறுபாடு உண்டு. அது என்ன வென்றால், விளையாட்டில் யார் வெற்றி பெறுகிறார்களோ, அவர்களுக்குப் பரிசு உண்டு. ஆனால், இல்லற வாழ்க் கையைப் பொறுத்தவரையில், யார் தோற்கிறார்களோ, அவருக்குத்தான் பரிசு உண்டு. ஆகவேதான், தோற்றுப் போவதால், நீங்கள் யாரும் வருத்தப்படாதீர்கள். ஒருவர்  முந்த, இன்னொருவர் முந்தாமல், ஒருவரிடம் இன் னொருவர் தோல்வியை விரும்புங்கள். அதில் ஏற்படுகின்ற சுவையை நீங்கள் அனுபவிக்கலாம். அதில் ஏற்படுகின்ற இன்பத்தைப் புரிந்துகொண்டு வாழலாம்.


ஆகவே, அற்புதமான வாழ்க்கையை உங்கள் வாழ்க் கையை அருமை இளஞ்சிட்டுக்களே, இளம் மணமக்களே நீங்கள் உங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள். அதன்மூலம் இல்லறத்தையும், தொண்டறத்தையும் சிறப் பாக நடத்துங்கள்.


பெரியார் சொன்னது இன்றைக்கு நடைமுறைக்கு வந்துவிட்டதே


தந்தை பெரியாரிடம் ஒருவர் கேட்டார், சுயமரியாதைத் திருமண முறையை நடத்துவதற்கு சில வழிமுறைகளைப் பின்பற்றவேண்டும் என்று சொல்லலாம் அல்லவா என்று.


உடனே பெரியார் சொன்னார், அதுபோல் நான் செய்தால், அதுவே பிற்காலத்தில் சடங்காக மாறிவிடும். அது தேவையில்லை. அவ்வப்பொழுது அறிவுக்குத் தோன்றுவது என்னவோ அதுபோல் செய்யவேண்டும். நான் திருமணம் நடத்துவது என்பது, கார் மாடல் மாதிரி என்று சொன்னார்.
உதாரணத்திற்கு, 2000 ஆம் ஆண்டு வாங்கிய கார் இப்பொழுது 2014 ஆம் ஆண்டு அவுட் ஆஃப் பேஷனாகி விட்டது. 2013 ஆம் ஆண்டு வந்த கார் மாடலே, 2014 ஆம் ஆண்டு பழைய மாடலாகப் போய்விட்டது.


அதுபோல, சுயமரியாதைத் திருமணத்தை நடத்துவ தற்கு நாங்கள் தேவையில்லை; போகப் போக, அவர்களே முடிவு செய்து, தேவையானால் பெற்றோர்கள், நண்பர்களை மட்டுமே வரச் சொல்லி மாலை மாற்றிக்கொண்டால் போதும் என்று சொன்னார் தந்தை பெரியார்.
பெரியார் சொன்னது இன்றைக்கு நடைமுறைக்கு வந்துவிட்டதே! ஆப்பிரிக்காவில் பெண் இருக்கிறார்; அமெரிக்காவில் மாப்பிள்ளை இருக்கிறார். திருமணத்தை தள்ளிப் போட இருவருக்கும் விருப்பம் இல்லை. உடனே திருமணத்தை இணையத்தின்மூலம் செய்து கொள் கிறார்கள். பெரியார் என்பவர் எவ்வளவு பெரிய முன் னோக்கு உள்ளவர்கள்; தொலைநோக்காளர் என்பதற்கு இது ஒரு அற்புதமான எடுத்துக்காட்டாகும்.
ஆகவேதான், அதைத்தான் இந்த மணவிழா அழைப் பிதழில் அழகாக எடுத்துப் போட்டிருக்கிறார்கள்;


மணமுறைக்கு பழைமையைத் தேடித் திரியவேண்டிய தில்லை. கால நிலைக்கும், சமுதாய நிலைக்கும், அறிவு முதிர்ச்சி நிலைக்கும் ஏற்றபடிதான் முறைகள் வகுக்கப்பட வேண்டுமே ஒழிய, ஒரு காலத்து முறைகளே, எக்காலத்திற்கும் என்றால், மனிதனுக்கு அறிவு வளர்ச்சி இல்லை என்பதுதான் பொருள்.

அழைப்பிதழில் இருக்கின்ற மற்ற பகுதிகள் எல்லாம் தகவல்கள். ஆனால், இது இருக்கிறது பாருங்கள்; அறிவை சாணைப் பிடிக்கின்ற பகுதி. ஆகவேதான், பெரியாருடைய பொன்மொழியை மிகச் சிறப்பாக எடுத்துப் போட்டிருக் கிறார்கள். அந்த வகையில், சுயமரியாதைத் திருமண முறையைப் புகுத்தியவர் அறிவு ஆசான் தலைவர் தந்தை பெரியார் அவர்கள். இதற்குச் சட்ட வடிவமாக்கிய பெருமை பேரறி ஞர் அண்ணா அவர்களையே சாரும். 1967 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியை அமைத்து, தந்தை பெரியார் அவர்களுக்கே அந்த ஆட்சி காணிக்கை என்று சட்டமன்றத்தில் அறிவித்த அண்ணா அவர்கள், அந்த மணமுறைக்குச் சட்ட  வடிவம் கொடுத்தார்கள். நடந்த திருமணங்கள், நடக்கும் திருமணங்கள், இனி நடக்கப் போகும் திருமணங்கள் எல்லாம் செல்லுபடியாகும் என்று சொன்னார்கள்.
அந்த மணமுறை இப்பொழுது சிறப்பாக நடைபெறு கிறது. எனவே, இங்கு இப்பொழுது நடைபெறுவது சமு தாயத்தாலே ஒப்புக்கொள்ளப்பட்ட மணவிழா; சட்டத்தாலே அங்கீகரிக்கப்பட்ட மணவிழா. ஆகவே, அதற்குக் காரணமான இருபெரும் தலைவர்களான தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகிய இருவருடைய நினைவிற்கும் வீரவணக்கம் செலுத்தி, அவர்களுடைய தொண்டினை நினைவு கூர்ந்து, மணமக்கள் தண்ணிழல், சிவசங்கரி ஆகியோருடைய மணவிழாவினை நடத்தி வைக்கிறேன்.
நன்றி, வணக்கம்!


வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!


-------------------------------- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உரையாற்றினார்---”விடுதலை” 29-09-2014

29.9.14

பன்னீர்செல்வம் முதல் அமைச்சரானது வரவேற்கத்தக்கதே!-கி.வீரமணி

பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஓ. பன்னீர்செல்வம் முதல் அமைச்சரானது வரவேற்கத்தக்கதே!
எதிர்க்கட்சிகளையும் மதித்து  நீதியான ஆட்சி நடைபெற வாழ்த்துகிறோம்!
தமிழர் தலைவரின் அறிக்கை
பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த திரு ஓ. பன்னீர் செல்வம் அவர்கள் முதல் அமைச்சராக வந்திருப்பது வரவேற்கத்தக்கதே!

எதிர்க்கட்சிகளையும் மதித்து, நீதியான, நிலையான ஆட்சியைத் தர வாழ்த்துகிறோம் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

பெங்களூரு தனி நீதிமன்றத்தில் முன்னாள் முதல்வர் செல்வி ஜெ. ஜெயலலிதாமீதான சொத்துக் குவிப்பு வழக்கில் ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவுகளின்படி தலா 4 ஆண்டுகள் தண்டிக்கப்பட்டு, நூறு கோடி ரூபாய் அபராதம் (இதற்கு ஜாமீன் கோரியும், தண்டனைக்கு தடைகோரியும் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் அவர் சார்பில் மேல் முறையீடு (அப்பீல்) இன்று செய்யப்படுகிறது) விதித்துள்ள தாலும், இப்படி தண்டனை பெற்றதால் அவர்கள் வகிக்கும் பதவிகள் உடனடியான இழப்புக்கு உள்ளாகும், அடுத்து தண்டனைக் காலத்திற்குப் பிறகும் 6 ஆண்டுகள் தேர்தலில் நிற்கத் தடை என்று உச்சநீதிமன்றம் 2013இல் வழங்கிய தீர்ப்பின் காரணமாக ஏற்பட்ட சட்டப் படிக்கான விளைவு ஆகும்.

இதற்குமுன் நாடாளு மன்றத்தில் பதவி களில் இருந்த  நான்கு பேர்கள் லாலுபிரசாத் உட்பட இத் தீர்ப்பின் அடிப்படையில் பதவி இழப்புக்கு ஆளாகி யிருக்கிறார்கள்.

இதற்குமுன்பு (2013க்கு முன்பு) இருந்த நிலை வேறு.

முதல் அமைச்சர் பொறுப்பில் உள்ள ஒருவர் இப்படி தண்டனை பெற்று உடனடி பதவி இழப்புக்கு ஆளாவது இதுவே இச்சட்டத்தின் கீழ்  முதல் நிகழ்வு இந்திய அரசியலில்!

அதிமுகவுக்குப் பெரும்பான்மை உண்டு என்றாலும் அதிமுக போதிய பெரும்பான்மையும், கட்டுக்கோப்புடனும் உள்ள ஆளுங் கட்சியாக இருக்கிற காரணத்தாலும், அதிமுகவின் ஆற்றல், அதிகாரம் மிக்க தலைவராக பொதுச் செயலாளர் என்ற பொறுப்பில் அம்மையார் ஜெயலலிதா அவர்கள் இருக்கின்ற காரணத்தாலும் அவரது ஆணைப்படி நேற்று (28.9.2014) அக்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள்கூடி, நிதியமைச்சராக இருந்த திரு. ஓ. பன்னீர்செல்வம் அவர்களை சட்டமன்றக் கட்சித் தலைவராக ஒரு மனதாகத் தேர்வு செய்து, அவர் தலைமையில் புதிய அமைச்சரவை செயல்படும் என்பதற்கு தமிழக ஆளுநர் திரு. ரோசய்யா அவர்களைச் சந்தித்து, அவரும் சட்டப்படி அழைப்பு விடுத்து, இன்று அமைச் சர்கள் பதவியேற்று, அரசியல் சட்டப்படி கடமையாற்ற விருக்கின்றனர்.

நீதியான ஆட்சி தருக!

அமைதியும், அடக்கமும் நிறைந்தவர் திரு. ஓ. பன்னீர் செல்வம். அவர் ஏற்கெனவே ஒரு முறை இப்பதவியில் அமர்த்தப்பட்டும் உள்ளார். அவரது தொடர் விசுவாசத் திற்கு அத்தலைமை தந்த அங்கீகாரப் பரிசு இது!

ஜனநாயகத்தில் எதுவும் நிரந்தரமோ, மாறாததோ அல்ல.

பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த ஒருவர் மீண்டும் (இரண்டாவது முறையாக) அ.தி.மு.க. முதல்வர் ஆவது சமூகநீதிக் கண்ணோட்டத்தில் பெரிதும் வரவேற்கத்தக்கது.

அவரது தலைமையில் அமைந்த புதிய அரசு அனைத்து மக்கள் நலத்திலும் அக்கறை காட்டி, எதிர்க் கட்சிகளையும் மதித்து, தமிழகத்தில் ஒரு நிலையான ஆட்சி, நீதியான ஆட்சி என்ற பெயரை எடுத்து வரலாறு படைக்க வாழ்த்துகிறோம்.

------------------------- கி.வீரமணி தலைவர்திராவிடர் கழகம் சென்னை  
29.9.2014

பெரியார் வெறும் சீர்திருத்தக்காரரல்ல மாபெரும் புரட்சியின் வடிவம்

 

சென்னை பெரியார் திடலில் செப்டம்பர் 23 முதல் 26 வரை ஓர் அறிவு விருந்துக்கு ஏற்பாடு.

1970 ஜூன் 27 நினைவிருக்கிறதா? அன்று ஒரு பொன்னாள் - அறிவு மலர்ந்து மணம் வீசிய நாள் - அன்றுதான் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களுக்கு அய்.நா.வின் யுனஸ்கோ தேடி வந்து விருது அளித்து பெருமை என்னும் விருதினை அணி கலனாக பூண்ட நாள்!

புதிய உலகின் தொலை நோக்காளர்
தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரட்டீஸ்
சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை
அறியாமை, மூடநம்பிக்கை, பொருளற்ற பழக்க வழக்கங்கள் மற்றும் கீழான நடவடிக்கைகளுக்கு கடும் எதிரி என்ற விருது வழங்கப்பட்ட நாள்!

மத்திய அமைச்சர் திரிகுண சென் தலைமையில் தமிழக முதல்வர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்களால் தமது ஆசானின் திருக்கரங்களில் அந்த விருது வழங்கப்பட்டது.


அதில் காணப்படும் ஒவ்வொரு சொல்லும், ஒவ்வொரு வரியும் ஒப்பற்ற மாணிக்கப் பரல்! ஒளிவீசும் நன் முத்துச் சுடர்!

அந்த ஆபரணத்தின் ஒவ்வொரு வரியையும் முன்னிறுத்தி, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அளிக்கும் அறிவு விருந்தின் திரட்சிதான் இந்தத் தொடர்!
நேற்று முதல் நாள் நிகழ்ச்சி - எடுத்துக் கொண்ட தலைப்பு: புதிய உலகின் தொலை நோக்காளர்! (THE PROPHET OF THE NEW AGE).

தலைமை வகித்தவரோ - உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி மாண்புமிகு எஸ்.மோகன் அவர்கள் இரத்தினப் பிழிவாக தலைமையுரையை வழங்கினார்.
எனது சட்டக் கல்லூரி மாணவர் வீரமணியின் சொற்பொழிவு - அதுவும் நம் ஒப்பற்ற தலைவர் தந்தை பெரியார் அவர்களைப் பற்றிய சொற்பொழிவுக்கு தலைமை வகிப்பதில் எல்லையற்ற மகிழ்ச்சி என்றார் எடுத்த எடுப்பிலேயே.
புதிய உலகின் தொலைநோக்காளர் - இந்த உலகில் தந்தை பெரியாரன்றி வேறு எவர்? 1950அய் நினைத்துப் பார்க்கிறேன்; நம் இனத்தைச் சேர்ந்தவர் உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக அலங்கரிக்க முடிந்ததா? இன்றைக்கு எத்தனை எத்தனைப் பேர்! இவ்வளவுக்கும் இந்த ஆசான் பகுத்தறிவுப் பகலவன் அல்லவா காரணம்!


அதனால்தான் நான் சென்னை உயர்நீதின்றத்தின் நீதிபதியாக பதவியேற்கும் முன் இந்தத் திடலுக்கு வந்து, அய்யா அவர்களின் நினைவிடத்தில் தலை வணங்கி என் நன்றியைத் தெரிவித்தேன் என்று மிகவும் நெகிழ்வாக எடுத்துரைத்தார்கள்.


நமது ஒப்பற்ற தலைவர் பெரியார் பற்றி நம் மக்களே இன்னும் முழுமையாகத் தெரிந்து கொள்ளாமல் இருக்கிறார்களே என்று தமது ஆதங்கத்தையும் வெளிப்படுத்தத் தவறவில்லை நீதிபதி. இன்னும் மண் சோறு சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்களே! இவர்கள் திருந்துவது எந்நாள்? என்ற அர்த்தம் செறிந்த வினாவை எழுப்பினார் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி.
தமிழர் தலைவர் ஆசிரியரின் அறிவுப் படையல் ஆரம்பமானது.
முக்கால் நூற்றாண்டுக்கும் மேலான பொதுத் தொண்டுக்குச் சொந்தக்காரரின் வாழ்க்கை மகா சமுத்திரத்திலிருந்த அலைகளைக் கணக்கெடுத்துத் தோரணமாகத் தொங்க விடுவது அவ்வளவு எளிதா? மூச்சடக்கி முத்தெடுப்பது முடியக் கூடிய செயலா?


அதுவும் அவர் வகுத்துக் கொண்ட அந்த ஒரு மணி நேரத்தில் என்றால் எளிதானதன்று, ஆனாலும் பத்து வயது முதற்கொண்டே இந்த மகா சமுத்திரத்தில் மூழ்கி எழுந்தவர் ஆயிற்றே - பயிற்சி மிகப் பெற்றவராயிற்றே - அதன் காரணமாக அவை அணியாக அணி வகுத்து வந்தன தகவல் களஞ்சியங்களாக!


மற்ற நாட்டு அறிஞர்களுக்கெல்லாம் ஆய்வுக் கூடம், நூலகங்கள்; ஆனால் அறிவுலக ஆசான் அய்யாவின் ஆய்வுக் கூடம் தம்மைச் சுற்றியிருந்த மக்கள்தான்! சமூகம்தான்!!


பேதமற்ற சமுதாயம்தான் அவரின் பாடுபொருள் - அதனை அடைய அனைத்தையும் செய்த ஆசான் அய்யா!


அய்யாவின் தொலைநோக்கில் - சோதனைக் குழாய்க் குழந்தை - மின்சாரம் இல்லாத கார் - முகம் காட்டிப் பேசும் சாதனம் - தொப்பிக்குள் ரேடியோ - கர்ப்ப ஆட்சி வரை அடுக்கிக் கொண்டே போனார் ஆசிரியர்.


அது ஒரு புறம் இருக்கட்டும்!


1944இல் ஈரோட்டில் கிராம அலுவலர்கள் மத்தியில் அய்யா பேசியதுதான் கிராமச் சீர்திருத்தம் என்ற சிறிய நூல்.


கிராமம் - நகர பேதம் ஒழிக்கப்பட வேண்டும்! கிராமத்தான் உழைப்பில் உண்டு கொழுப்பதுதானே நகரத்தான் என்ற அதிர்வேட்டைக் கிளப்பியது அந்த அரிமா!
நகரம் என்றால் பிராமணன், கிராமம் என்றால் சூத்திரன் - எனும் வருணாசிரம வேறுபாடு வேரோடு களையப்படவேண்டாமா?


குடியரசுத் தலைவராக இருந்த விஞ்ஞானி ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்கள் வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் சிறப்பு விருந்தினராக வந்து கலந்து கொண்டார்கள்.


நகர்ப் புறங்களில் உள்ள வசதிகள் எல்லாம் கிராம மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற பொருளாதார சிந்தனையை அவர் கொண்டிருந்தார்.
1944ஆம் ஆண்டிலேயே அத்தகைய கருத்துக் களை அறிவுலக ஆசான் கூறிய அந்த அதிசயத்தை கிராமச் சீர்திருத்தம் என்ற நூலின் வழியாக அறிந்து கொண்டபோது ஆச்சரியத்தின் விளிம்புக்கே சென்றார்


65 கிராமங்களை ஒருங்கிணைத்து பெரியார் பெயரில் துலங்கும் பல்கலைக்கழகம் மேற்கொண்டி ருந்த ஆக்கப்பணிகளை வெகுவாக பாராட்டினார். உலகத்தின் எந்தப் பகுதிக்கு சென்றாலும் பெரியார் மணியம்மைப் பல்கலைக்கழகத்தின் இந்தச் செயலாக்கப் பணியை எடுத்துரைக்க இன்று வரை யிலும் அவர் தவறுவதில்லை - என்பதை ஆசிரியர் அவர்கள் எடுத்துரைத்தார்!


பெரியார் ஆண் - பெண் வேற்றுமை ஏன் என்று கேட்டார். உடையிலும் கூட ஏன் வேறுபாடு என்று கேட்டார்,


இன்று அந்நிலை வந்துவிட்டதே! ஒரே மாதிரி உடை என்றால் தேவைப்படும் பொழுது ஒருவருக் கொருவர் மாற்றிக் கொள்ளவும் வசதி உண்டே!
பெண்ணுரிமை பற்றி பேசும்போது உங்கள் மனைவி மார்களை நினைத்துப் பேசாதீர்கள். உங்கள் அருமை மகளையும், அன்புச் சகோதரியையும் மனதிற் கொண்டு பேசுங்கள் என்ற தந்தை பெரியார் அவர்களின் மனித நேயம் மணக்கும் பெண்ணுரிமையின் பெற்றியை நினைப்பீர்!


தொழிலாளர் குறித்த சிந்தனைதான் சாதாரண மானதா? முதலாளி, தொழிலாளி பெயர்கள் ஏன்? தொழிலாளியைப் பங்காளி என்று சொன்னவர் யார் - பெரியாரைத் தவிர?


காந்தியாரின் படுகொலையைத்தான் எடுத்துக் கொள்ளுங்களேன்! உங்களைப் பார்ப்பான் விட்டு வைக்க மாட்டான் என்று முகத்துக்கு முகம் காந்தியாரிடமே நேரில் 1927ஆம் ஆண்டிலேயே சொன்னவராயிற்றே தந்தை பெரியார். இந்து மதத்தில் கைவைத்து மாற்றிவிடலாம் என்று நினைத்த எவரையும் பார்ப்பான் விட்டு வைத்ததில் லையே! கோட்சே உருவத்தில் பார்ப்பான் காந்தியா ரைத் தீர்த்துக் கட்டியது தந்தை பெரியார் அவர்களின் தொலை நோக்குக்குத் தலைசிறந்த எடுத்துக்காட்டு அல்லவா?


இந்தியைத் திணித்த ராஜாஜியை எதிர்த்தார் தந்தை பெரியார்; அதே ராஜாஜி தந்தை பெரியார் வழிக்குப் பின்னர் வரவில்லையா?


“HINDI NEVER ENGLISH EVER” ஸி என்று ராஜாஜி சொல்லும் அளவுக்குப் பெரியாருடைய வழிக்கு வந்தாரா இல்லையா?


பெரியார் - மணியம்மை திருமணம் என்பது கவர்னர் ஜெனரல் ராஜாஜி கருத்தைக் கேட்டு அதன்படி நடந்து கொண்டார் பெரியார் என்று குற்றம் சுமத்தப்படவில்லையா? அதைக் காரணம் காட்டி திராவிடர் கழகத்தில் கூடப் பிளவு ஏற்படவில்லையா?


ஆனால் உண்மை நிலை என்ன? ராஜாஜி பெரியார் மணியம்மை திருமண ஏற்பாட்டுக்கு ஆதரவாக கருத் தைக் கூறிடவில்லை. அவர் கருத்தை ஏற்காமல்தான் திருமணம் என்ற ஏற்பாட்டைச் செய்தார்; அதிலும் அய்யா வெற்றி பெற்றாரே!


அன்னை மணியம்மையார் இயக்கத்துக்குத் தலைமையேற்று அய்யாவுக்குப்பின், கழகத்தை வெற்றிகரமாக தலை நிமிரச் செய்து வழி நடத்தவில்லையா?


கவர்னர் ஜெனரல் ராஜாஜியின் கடிதத்தை பெரியார் ஏன் அப்பொழுது வெளியிடவில்லை?


கவர்னர் ஜெனரலாக இருந்த ஒருவர் தனக்குப் பர்சனல் என்று குறிப்பிட்டு எழுதியிருந்த நிலையில் அதனை வெளியிடுவது பண்பாடு அல்ல என்ற உயர்ந்த நெறியைப் பின் பற்றிய ஒப்பாரும், மிக்காரும் இல்லாத உயர் பண்பின் பெட்டகம்தான் கடவுள் மறுப்பாளரான - நாத்திக நெறியாளரான தந்தை பெரியார்! இதுபோல இன்னும் எத்தனை எத்தனை சிந்தனை முத்துக்களை வாரி இறைத்தார் - தகவல் சுரங்கத்தைத் திறந்து காட்டினார் தமிழர் தலைவர்.



முதல் நாள் அறிவு விருந்தை அனுபவிக்காமல் கோட்டை விட்டவர்கள் - இன்று முதல் மூன்று நாட்கள் தொடரும் சொற்பொழிவைத் தவற விடுவது நல்லதல்ல என்பதே நமது கனிவான வேண்டுகோள்.
அறிவுத்தாகம் கொண்டவர்கள் எல்லாம் சிறகடித்துப் பறந்து வரட்டும்.!


குறிப்பு: தொடக்கத்தில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அறிமுகவுரை ஆற்றினார். மாநில மாணவரணி செயலாளர் பிரின்சு என்னாரசு பெரியார் வரவேற்புரையாற்றினார். பார்வையாளர்களின் கேள்விகளுக்கு விடையளித்தார் தமிழர் தலைவர்.

                    ----------------- மின்சாரம்  24-09-2014
Read more: http://viduthalai.in/page1/88163.html#ixzz3EbbCqwPT
              *********************************************************************************

இளைஞர் சிங்கங்களே! மாணவத் தங்கங்களே!

நீங்கள் என்ன செய்து கொண்டுள்ளீர்கள் - சென்னைப் பெரியார் திடலிலே அறிவு வெள்ளம் கரை புரண்டு ஓடும் பொழுது நீங்கள் ஓய்வெடுத்துக் கொண்டு இருக்கலாமா?


திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள், அறிவுலக ஆசான் அவர்கள் பெரியார் அவர்களின் அறிவுச் சுரங்கத்திலிருந்து கருத்து மணிகளை எடுத்து கருத்தோவியத்தைத் தீட்டிக் கொண்டிருக்கும் கவினுறுக் காட்சிகளைக் காணாமல் காலத்தை என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள்?


அய்.நா. விருதில் குறிப்பிடப்பட்ட தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரட்டீஸ் பெரியார் எனும் தலைப்பில் நடைபெற்ற கருத்துரை மேடைக்கு தலைமை வகித்த வர் பாரதிதாசன் பல்கலைக்கழக மேனாள் துணை வேந்தரும், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் துணைத் தலைவருமான பேராசிரியர் முனைவர் பெ.செகதீசன் தலைமையுரை என்ற பெயரில் மிகவும் ஆழமான சமூகவியல் சிந்தனை ஆரத்தைத் தொடுத்துத் தந்தார்.


இந்திய சடங்குகள் அனைத்தையும் ஒட்டு மொத்த மாக ஒழித்துக் கட்டினால் இந்திய மக்களிடையே மகத்தான மனமாற்றம் மலர்ச்சி அடையும். அதன் மூலம் வருணாசிரம அமைப்பு முறையும் முற்றாக மாண்டொழியும்; வருணாசிரமம் வாழ்விழந்தால் இந்து மதமும் இறந்து இடுகாடு போய்ச் சேரும் என்று ஒரு லாஜிக்கான கருத்துகளை எடைபோட்டு எடுத்து வைத்தார்.

 

நூறு ரூபாய் கட்டணம் கொடுத்து மக்கள் செவி விருந்து அருந்த வந்தது குறிப்பிடத்தக்கது. இப்பல்லாம் யார் சார் கூட்டங்களுக்கு வருகிறார்கள் என்று மேல் தட்டு மொழி பேசும் மேதாவிகள் உண்டு.

வரமாட்டார்களா? யார் சொன்னது? நூறு ரூபாய் கட்டணம் கொடுத்துக் கேட்க வருவார்கள் என்பதைப் பெரியார் திடல் மெய்ப்பித்துக் காட்டிவிட்டதே!
பேசுகின்றவர்கள் யார்? பேசப்படும் பொருள் என்ன? என்பதுதான் முக்கியம். கட்டணம் வைத்து எத்தனை எத்தனை சிறப்புக் கூட்டங்களை நடத்தி ஏற்றம் பெற்றது - இந்தத் திராவிடர் இயக்கம்! இளைஞர்கள் எல்லாம் இத்தகு உரை வீச்சுகள் மூலம் இன உணர்வு பெற்றிட வில்லையா? இலட்சியக் சூடேறி களமாட வில்லையா?


மீண்டும் அதனைத் தொடங்கியுள்ளது திராவிடர் கழகம் - பெரியார் திடல் புது அத்தியாயத்தைத் மீண்டும் புதுப்பித்துள்ளது. தென் இந்திய சாக்ரட்டீசையும், ஈரோட்டு ஏந்தல்  தந்தை பெரியார் அவர்களையும் ஒப்பிட்டுக் காட்டினார், தம் ஒரு மணி நேர உரையில் தமிழர் தலைவர்.


சாக்ரட்டீசு என்றும், இங்கர்சால் என்றும், ராசூல் என்றும், லெனின் என்றும், ஸ்டாலின் என்றும், பிள்ளைகளுக்குப் பெயர் சூட்டி, அந்த உச்சரிப்பில் கூட புரட்சி மகரந்தத்தையும் பூட்டிய உன்னதமான புரட்சித் தலைவர் அல்லவா தந்தை பெரியார். இந்த இரு சாக்ரட்டீசுகளும் இளைஞர்களை நோக்கி ஈட்டி முனை இலட்சியக் கருத்துகளை வாரி இறைத்தனர்.


இந்த இரு பெரும் சிந்தனையாளர்களும் எதிர் நீச்சல் போட்டார்கள். யார் எவர் சொன்னாலும் ஏற்காதே! உன்னறிவால் எடை போட்டுப் பார்! என்ற  உன்னத அறிவுச் சாணையைத் தீட்டிக் கொடுத்தனர்.


ஒரு மனிதன் யாரை மதிக்க வேண்டும்? எதை மதிக்கக் கூடாது, ஒரு மனிதர் எதில் உயர்ந்தவர்? என்பதைத் தந்தை பெரியார் மொழியில் எடுத்துக் காட்டினார் கழகத் தலைவர்.


அரசர்களை மதிக்கிறோமா? பெரிய மனிதர்களை, ஆழ்வார்களை மதிக்கிறோமா? அல்லது தெய்வங்கள் என்பவர்களையாவது மதிக்கிறோமா? இவர்களை யெல்லாம் அவரவர்களிடத்தில் சம்பந்தமும், தனிப் பட்ட நலமும், பெறுகிறவர்கள்தான் மதிப்பார்கள் - மற்றவர்கள் ஏன் மதிப்பார்கள்? ஏன் என்றால் வியாபாரம் செய்து லாபம் சம்பாதிப்பவனை, யார் எதற்காக மதிப்பார்கள்? ஓட்டல் காரன், அன்னதான பிரபு ஆவானா?

சம்பள உபாத்தியாயர், குருநாதனா வானா? தாசி, காதலியாவாளா? என்பது போல், தான் தன் நலத்துக்கு, தன் தன் பொறுப்புக்காக காரியம் செய்யும், எவனுடைய காரியம் எப்படிப்பட்டதாயினும், அது சாதாரண ஜீவ சுபாவமே யொழிய போற்றக் கூடியதாகாது.

 


அப்படியில்லாத தன்மை, செய்கை, வாழ்வியல் கொண்ட மனிதர்கள் ஏதாவது தன்னைப் பற்றிய கவலை இல்லாமல், பிறருக்கென்று தன்னாலான ஒப்பற்றத் தொண்டாற்று கிறவன் மதிக்கப்பட்டே தீருவான். அத்தொண்டால் பாதகமடையும் தனிப்பட்ட வர்கள், தனிப்பட்ட வகுப்புகள், கும்பல்கள் - மதிக்கா மல் இருக்கலாம், அவமதிக்கலாம், அது பொதுவாய் மதிக்காததாகாது.
1945இல் தந்தை பெரியார் ஆற்றிய உரையிலிருந்து நறுக்கு மணியாக எடுத்துக் காட்டினார்.

தந்தை பெரியார் அவர்களுக்கும், சாக்ரட்டீசுக்கும் இடையே நிலவும் ஒற்றுமையும் உண்டு, வேறுபாடும் உண்டு. சாக்ரட்டீசு கடவுள் நம்பிக்கையாளர் - தந்தை பெரியார் அவர்களோ கடவுள் மறுப்பாளர் - முழு நாத்தகர்!


ஜனநாயகத்தை இருவருமே எள்ளி நகையாடினர்.
தங்கள் இலட்சியத்துக்காக எந்த விலையும் கொடுக்கத் தயாராக இருந்தவர்கள்தாம் இருவரும்.


சாக்ரட்டீஸ் உயிர் வாழ நினைத்திருந்தால், உயிர் தானே பெரிது என்ற சபலத்திற்கு ஆட்பட்டு இருந்தால், தன் கருத்தைக் கொஞ்சம் மழுப்பலாக முனைமழுக்கிச் சொல்லியிருக்கலாம்.


ஆனால் கொள்கைதான் பெரிது என்று உறுதியாக எண்ணியதால் கொடிய நஞ்சை (HEMLOCK) அருந்த நேரிட்ட அந்தத் தருணத்திலும் கூட கை நடுக்கமின்றி, நஞ்சை அருந்தக் கொடுத்த அரசாங்க ஆள்மீது ஆத்திரம் கொள்ளாமல், அருமையான - பண்பு மிளிர்ந்த சொற்களைக் கூறி, உயிர் கொல்லும் அந்த நஞ்சினை அருந்தினார்.


தந்தை பெரியார் அவர்களுக்கும் எதிர்ப்பு இருந்தது. எத்தனையோ எதிர்ப்புப் புயல்கள் தோள் தட்டி வந்தன. செருப்புத் தோரணங்களைத் தொங்கவிட்டு அவமானப் படுத்தினர் - கூட்டத்தில் பாம்புகளை விட்டனர் - கழுதை களை விட்டனர். உயிருக்குக் குறி வைத்த கொடுமையான சம்பவங்கள் உண்டு. ஆனாலும் எதிரிகள்தான் தோற்றோடி னர் - இறுதியில்.


சிரிப்பவன் யார் என்பது தானே முக்கியம் - ஆம் அதிலே நம் அறிவுலக ஆசான்தான் வெற்றிப் புன்னகை புரிந்தார். தமிழ்நாட்டின் முதல் பேராசிரியர் பெரியார் - அந்தப் பேராசிரியரின் வகுப்புகள் மாலை நேரத்தில் தொடங்கும் என்றார் அண்ணா அவர்கள்.


இராமலிங்கர் போல கடைவிரித்தேன் கொள்வாரில்லை, கட்டிக்கொண்டேன்  என்று துவண்டு போனவர் அல்லர் - தொண்டுப் பழமான தலைவர் பெரியார்.
தான் விதைத்த விதைகள் கனியாகப் பலன் கொடுத்ததைப் பார்த்து மகிழ்ந்த ஒப்பாரும், மிக்காரும் இல்லாத உயர் எண்ணங்கள் மலரும் சோலையாம் நம் அய்யா என்று நெஞ்சு நிமிர்த்தி சொன்னார்.

நீதிமன்றங்கள் முன் இரு பெரும் தலைவர்களும் எப்படி நடந்து கொண்டார்கள் என்பது முத்தாய்ப்பாக இருந்தது.


நீதிமன்ற விசாரணையை ஒரு நாடகம் என்று சொன்னார் சாக்ரட்டீசு என்றால், அதே வார்த்தையை அட்சரம் பிறழாமல் சொன்னவரும் நம் அய்யாவே!
1938 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது நீதிமன்ற குற்றக் கூண்டில் நிறுத்தி வைக்கப்பட்ட அந்த வெண்தாடிச் சிங்கம் எப்படி கர்ச்சித்தது? இதோ...
(நீதிபதியைப் பார்த்து) தாங்களும் பார்ப்பன வகுப்பைச் சேர்ந்தவர்கள்; இவர்களுடன் இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியை ஒழிக்க வேண்டும் என்பதில் காங்கிரஸ் மந்திரிகள் அதி தீவிர உணர்ச்சி கொண்டிருக் கிறார்கள்.
தங்களால் காங்கிரஸ் மந்திரிகள் இஷ்டத்திற்கு விரோதமாக எதுவும் செய்ய முடியாது. பொது ஜனங்களுக்கு விஷயம் தெரியட்டும் என்றும், நான் சட்டத்தை மீறினேன் என்றும் மற்றவர்கள் கருதி, அதை செய்ய துணிந்துவிடக் கூடாது என்பதற்கும், இந்த இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியும் என்னுடைய எந்த முயற்சியும் செய்கையும் இன்று வரை யிலும் கூட சட்டத்திற்குக் கட்டுப்பட்டதென்றும், துவேஷம், குரோதம், பலாத்காரம் சிறிதும் சம்பந்தப்பட்டதல்ல வென்றும் தெரிவிப்பதற்காகவேயாகும்.


ஆகவே, கோர்ட் டார் அவர்கள், தாங்கள் திருப்தி அடையும் வண்ணம் அல்லது மந்திரிமார் திருப்தி அடையும் வண்ணம், எவ்வளவு அதிக தண்டனையைக் கொடுக்க முடியுமோ, அவைகளையும் பழி வாங்கும் உணர்ச்சி திருப்தி அடையும் வரைக்கும், எவ்வளவு தாழ்ந்த வகுப்பு கொடுக்க உண்டோ அதையும் கொடுத்து இந்த விசாரணை நாடகத்தை முடித்து விடும்படி விளக்கமாகக் கேட்டுக் கொள்ளுகிறேன் என்றார்.


தந்தை பெரியார் வாக்குமூலமாகக் கொடுத் ததை தமிழர் தலைவர் எடுத்துக்காட்டிய போது, மன்றமே ஆழமான உணர்வின் மடியிலே விழுந்து கிடந்தது என்றே சொல்ல வேண்டும்.


இலட்சியத்தை இன்னுயிருக்கும் மேலாக மதிக்கத் தக்கவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ப தற்கான சுவரெழுத்தாக தந்தை பெரியார் அவர்களின் வாக்குமூலம் கால வெள்ளத்தையும் எதிர் நீச்சல் போட்டு வெற்றிகரமாகக் கடந்தது. கலங்கரை விளக் கமாக என்றென்றும் ஒளிவீசிக் கொண்டேயிருக்கும் அன்றோ!


இன்னும் ஆசிரியர் எடுத்துக் சொன்னவை ஏராளம் உண்டு. எடுத்துரைக்க ஏடு கொள்ளாது.


இன்றும், நாளையும் நேரில் வந்து கிடைத்தற்கரிய அறிவுச் செல்வத்தைத் திரட்டிச் செல்லுமாறு அன் போடு அழைக்கிறோம் - வாரீர்!


குறிப்பு: தொடக்கத்தில் பெரியார் நூலக வாசகர் வட்ட செயலாளர் கி.சத்தியநாராயணன் வரவேற்புரை ஆற்றினார். பார்வையாளர்கள் கேள்விகளுக்கு கழகத் தலைவர் விடையளித்தார்.
                    ----------------- - மின்சாரம் --25-09-2014
Read more: http://viduthalai.in/page1/88186.html#ixzz3EbbNXjxG
***************************************************************************************
தந்தை  பெரியார் வெறும் சீர்திருத்தக்காரரல்ல
மாபெரும் புரட்சியின் வடிவமே அவர்!
  • பெரியார் கொள்கையை மறந்தால் இந்துத்துவா தலைதூக்கும் - எச்சரிக்கை!
  • தமிழர் தலைவர் ஆசிரியரின் ஆய்வுரை
- நமது சிறப்புச் செய்தியாளர் -
சென்னை, செப்.26- தந்தை பெரியார் வெறும் சீர்திருத்தக்காரரல்ல - மாபெரும் புரட்சியின் எல்லை - வடிவம் அவர். அந்தக் கொள்கையை மறந்தால் மீண்டும் இந்துத்துவா தலைதூக்கும் எச்சரிக்கை என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள்.


அய்.நா. மன்றத்தின் யுனெஸ்கோ நிறுவனம் தந்தை பெரியார் அவர்களுக்கு அளித்த விருதில் (27.6.1970) காணப்பட்ட வரிகளுள் ஒன்று சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை (Father of the Social Reform Movement) என்பதாகும். இந்தத் தலைப்பில் திராவிடர் கழகத் தலைவர்ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் நேற்று (25.9.2014) மாலை சென்னையில் நடிகவேள் எம்.ஆர். ராதா மன்றத்தில் நூறு நிமிடங்கள் பேசினார். அதில் முக்கியமாகக் குறிப்பிட்டதாவது:


தந்தை பெரியார் அவர்களுக்கு முன்புகூட சீர் திருத்தவாதிகள் இருந்திருக்கிறார்கள். அவர்களோடு அவை நின்று விடும். தமது கருத்துக்கள், தத்துவங்கள் பரவிட இயக்கம் கண்டவர், தனக்குப் பிறகும்கூட அப்பணி தொடரப்பட வேண்டும் என்பதற்காக இயக்கம் கண்டவர் தந்தை பெரியார் அவர்கள் மட்டுமே!


அப்படி அவர்கள் ஒர் இயக்கத்தைக் கண்டதால்தான். அவர்களின் மறைவிற்குப் பிறகு இங்கே பேசிக் கொண்டு இருக்கிறோம்.
இயக்கம் கண்டதால் தான் இந்த மன்றம்; இயக்கம் கண்டதால்தான் விடுதலை ஏடு; இயக்கம் கண்டதால்தான் வெளியீடுகள், பிரச்சாரங்கள்;  பெரியார் கல்வி நிறுவ னங்கள், பல்கலைக் கழகம் வரை வளர்ந்ததற்குக் காரணம் பெரியார் உருவாக்கிய இயக்கமே!


அதனால்தான் யுனஸ்கோ தந்தை பெரியார் அவர்களைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை என்று ஆழமாகக் குறிப்பிட்டுள்ளது என்று கூறிய திராவிடர் கழகத் தலைவர் பெரியார் சீர்திருத்தம் என்ற நிலையையும் தாண்டிய மகத்தான புரட்சிக்காரர் என்பதை விளக்கினார்.


ஏதோ பொதுவாகக் கூறியதாகக் கருத முடியாது 1928இல் (நவம்பர் 26) சென்னையில் நடைபெற்ற சீர்திருத்தக் காரர்கள் மாநாட்டுக்குத் தலைமை வகித்து உரை யாற்றுகையில் தந்தை பெரியார் கூறியதை எடுத்துக் காட்டினார்.


வர வர எனக்கு சமூக சீர்திருத்தம் என்பதில் உள்ள நம்பிக்கை குறைந்து கொண்டே போகின்றது. பெரும் பான்மை மக்களுக்குச் சுயமரியாதையும், சமத்துவமும், விடுதலையும் உண்டாக்கச் செய்ய வேண்டும் என்பவர் களுக்கு எதிரில் இருக்கும் வேலை சீர்திருத்த வேலையல்ல என்பதே எனது தாழ்மையான அபிப்ராயம். மற்றென்ன வெனில் உறுதியும், தைரியும் கொண்ட அழிவு வேலையே ஆகும். அளவுக்கு மீறிய பொறுமை கொண்ட யோசனை யின்மீதே இந்த முடிவுக்கு வருகிறேன் என்று தந்தை பெரியார் சொன்ன, பீடிகையோடு ஆசிரியர் அவர்கள் இந்த ஆய்வுரையைத் தொடங்கினார்.
அழிவு வேலை என்று சொல்லுகிறபோது - அது ஆக்கத்திற்கான அடிப்படைப் பணியாகும்; புதர்களை அழித்தால்தானே பூங்காவை உருவாக்க முடியும்? தந்தை பெரியார் அவர்களின் அழிவு வேலை என்பது இந்த வகையைச் சேர்ந்தது என்று அருமையாக அதற்கு விளக்கமும் அளித்தார்.
தீண்டாமையை ஒழிக்க வேண்டும் என்று பொதுவாக சொல்லுவார்கள்; அந்தத் தீண்டாமையின் மூலம் எது? ஜாதிதானே - அந்த ஜாதிக்குப் பாதுகாப்பாக இருப்பது எது?


கடவுளும், மதமும் தானே இவற்றுக்குப் பாதுகாப்பு அரணாக உள்ளன! இந்தக் கடவுளும், மதமும் எப்படி உயிர் வாழ்கின்றன? இதோ தந்தை பெரியார் பேசுகிறார் கேட்போம்.


மதம், கடவுள் என்பவை மனிதனின் மூட பக்தியும், குருட்டு நம்பிக்கையும் என்கின்ற அஸ்திவாரத்தின்மீதே கட்டப்பட்டிருக்கின்றன. ஏனெனில் குருட்டு நம்பிக்கையின் பயனாய் ஏற்பட்ட கடவுளிடத்தில் பொறுப்பை வைத்து பெரிதும் மூடப் பக்தியால் ஏற்பட்ட மதவிதியை - கொள்கைகளை வகுத்து வாழ்க்கையை நடத்துகிறோம். இம்மூடப் பக்தியையும், குருட்டு நம்பிக்கையையும் ஒழிக்க வேண்டும் என்று சொல்லுவது சீர்திருத்த வேலையின் பாற்பட்டதாகுமா? அது ஆகவே ஆகாது. மற்றபடி மனித சமூகத்தின் நன்மைக்காக அழிக்கப்பட வேண்டிய ஒரு பெரிய அழிவு வேலையின் பாற்பட்டதாகும். ஏனெனில் அடியோடு அழித்து தரைமட்டமாக்கி புதுப்பிக்க வேண்டியிருக்கும். வேலை சீர்திருத்த வேலையாகாது. வேண்டுமானால் புனருத்தாரண வேலை (Reconstruction) என்று சொல்லலாம். அதாவது முதலில் அழித்து பின்னால் புதிதாய் நிர்மாணிப்பது என்பதாகும். இவ்வேலையில் ஈடுபடுபவர்களுக்கு மகத்தான மன உறுதியும், சந்தேகமற்ற தெளிவும் இருக்க வேண்டும்! என்று தென்னிந்திய சீர்திருத்தக்காரர்கள் மாநாட்டுத் தலைமை உரையில் தந்தை பெரியார் கூறிய தன்னிலை விளக்கத்தை தமிழர் தலைவர் மிகவும் சரியாக - பொருத்தமாக எடுத்துக்காட்டினார்.


சதுர்வர்ணம் மயாசிருஷ்டம் என்று கீதையிலே கிருஷ்ணன் சொல்லுவதைப் பெரிதாகப் பேசுகிறார்கள். நான்கு வருண ஜாதியை நானே உண்டாக்கினேன் என்று கூறும் கிருஷ்ணன் என்னால் உண்டாக்கப்பட்ட இந்த நால் வருணத்தை படைத்தவனாகிய நானே நினைத்தாலும் மாற்றியமைக்க முடியாது என்று கூறுகிறார் என்றால் இந்தப் பிறவிப் பேதத்தை எப்படி கட்டிக் காப்பாற்றுகிறார்கள் என்பதைக் கவனிக்க வேண்டும்.


இந்த ஜாதியை ஒழிக்க வேண்டுமானால், அதற்கு மூலமாக இருக்கக் கூடிய கீதையையும், அதைப் படைத்ததாகக் கூறும் கடவுள் கிருஷ்ணனையும், இதை வலியுறுத்தும் மதத்தின் மீதும் கை வைக்காமல் ஆகக் கூடிய காரியமா? தந்தை பெரியார் அவர்கள் கூறும் இந்த அறிவு ரீதியான நேர்மையான நியாயத்தை யார்தான் குற்றம் கூற முடியும்? என்ற வினாவை எழுப்பினார் திராவிடர் கழகத் தலைவர்.


வருணாசிரம தர்மம் என்று கூறுகிறபோது, பிராமண, சத்திரிய, வைசியர், சூத்திரர் என்ற நான்கு பிரிவின்கீழ் அவர்ணஸ்தர் (Out caste)  என்று ஆக்கப்பட்டவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள்; இந்த அய்ந்துக்கும் கீழே தள்ளப் பட்டவர்கள் உண்டு என்றால் அவர்கள்தான் நம் நாட்டுப் பெண்கள்! பெண்கள் என்று சொல்லும் பொழுது எல்லா வருணங்களையும் சேர்ந்த பெண்களும் இதில் அடங்குவார்கள். தந்தை பெரியார் அவர்களின் தொண்டு என்று சொல்லும்பொழுது ஜாதி ஒழிப்பும், பெண்ணடிமை ஒழிப்பும் மிக முக்கியமானதாகும்.


இதோ தந்தை பெரியார் பேசுகிறார் கேளுங்கள்.


பொது மக்களில் பெண்கள் தீண்டாதார்கள் என்பவர்களைவிட மிக மோசமாக அழுத்தப்பட்டிருக் கிறார்கள். புலிக்கு - ஆடு  கடவுளால் ஏற்படுத்தப்பட்டுள்ள உணவு என்பது போலவும், பூனைக்கு எலி கடவுளால் ஏற்படுத்தப்பட்ட உணவு என்பது போலவும், ஆணுக்குப் பெண் கடவுளால் ஏற்படுத்தப்பட்ட அடிமை என்பதாகக் கருதி நடத்தப்பட்டு வருகிறார்கள். உண்மையிலேயே இப்படி ஒரு கடவுள் நீதி ஏற்படுத்தியிருப்பாரேயானால், முதலிலே அந்தக் கடவுளை ஒழித்து விட்டுத்தான் வேறு காரியம் பார்க்க வேணடும் - என்று தந்தை பெரியார் எடுத்துரைத்த கருத்தில் ஒரு சொல்லைக் குற்றம் சொல்ல முடியுமா?


பெண்ணடிமை ஒழிப்புத் தளத்தில் தந்தை பெரியார் ஆற்றிய தொண்டால் எத்தகைய மாற்றங்கள் எல்லாம் ஏற்பட்டுள்ளன! பார்ப்பனப் பெண்கள்கூடப் பலன் பெற்று இருக்கின்றனர். பார்ப்பனக் குலத்தில் ஒரு பெண் விதவையானால் மொட்டையடித்து வெள்ளைப் புடவை யைக் கொடுத்து, மொட்டைப் பாப்பாத்தி  என்று முத்திரை குத்தி, மூலையில் உட்கார வைத்திருந்தார்களே - இப்பொழுது அந்த நிலை உண்டா? விதவையர்க்குப் பூச்சூட்டு விழாக்களை நடத்தியவர்கள் அல்லவா நாம்?


பெண்களுக்குச் சொத்துரிமை தேவை என்று 1929 செங்கற்பட்டு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றினார் தந்தை பெரியார்.


தந்தை பெரியாரின் சீடர் மானமிகு கலைஞர் அவர்கள் ஆட்சியிலே பெண்களுக்குச் சொத்துரிமை சட்டத்தைக் கொண்டு வந்ததோடு, திமுக இடம் பெற்ற மத்திய அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியிலும் அப்படி ஒரு சட்டம் நிறைவேற்றபபட்டதே!


இப்படி ஒரு சட்டத்தை நிறைவேற்ற முடியாமல் தானே சட்ட அமைச்சராக இருந்த இந்திய அரசமைப்புச் சட்டத்தையே உருவாக்கிய அண்ணல் அம்பேத்கர் அமைச்சர் பதவியையே தூக்கி எறிந்து வெளியேறினார்.
பதவி பெரிதல்ல -  கொள்கை பெரிது என்று நினைத்த வராயிற்றே! அப்போது குடியரசுத் தலைவராக இருந்த ராஜேந்திர பிரசாத் போன்றவர்கள் தானே முக்கிய முட்டுக்கட்டைகளைப் போட்டவர்கள்! பிரதமர் நேரு அவர்களுக்கு நல்லெண்ணம் இருந்தும் சனாதனிகளின் ஆதிக்கத்துக்குத் தானே கட்டுப்பட வேண்டியவர் ஆனார். அன்று நிறைவேற்றப்பட முடியாமல் போனது -இப்பொழுது பெண்களுக்குச் சொத்துரிமை கிடைத்ததை விளக்கினார் கழகத் தலைவர்.


தந்தை பெரியார் அறிமுகப்படுத்திய சுயமரியாதைத் திருமணம் என்பது பார்ப்பனீயத்தையும் பெண்ணடிமை யையும், மூடச் சடங்குகளையும் உடைத்தெறிந்த மகத்தான புரட்சியாகும்.


அக்னியைச் சுற்றி சப்தபதி எடுத்து வைக்காமல், (ஏழு அடிகள்) சடங்குகளைச் செய்யாமல் நடத்தப்படும் திரு மணங்கள் செல்லாது என்று இதே சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது 1955இல். அதே சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சி.எஸ். கர்ணன் 58 ஆண்டுகளுக்குப்பின் 2013இல் என்ன தீர்ப்பு வழங்கினார்? சடங்குக்கும் திருமணத்திற்கும் சம்பந்தம் இல்லை. திருமணத்திற்குரிய வயதும், மனமும் ஒத்துப் போனால் தாராளமாக திருமணம் செய்து கொள்ளலாம் என்று தீர்ப்புக் கூறினாரே!


சுயமரியாதைத் திருமணம் சட்டப்படி செல்லும் என்று ஆக்கப்பட்டு விட்டதே! இங்கு மட்டுமல்ல - சிங்கப்பூர், மலேசியாவிலும்கூட சட்ட சம்மதம் பெற்று விட்டதே! மலேசியாவில் சுயமரியாதைத் திருமணத்தை நடத்தி வைக்கும் அதிகாரிகளாக அந்த அரசே திராவிடர் கழக நிருவாகிகளுக்கு அளித்துள்ளதே!
தம் வாழ் நாளிலேயே தாம் கூறியவை வெற்றிக் கனிகளாகக் குலுங்கியதைப் பார்த்துக் களித்தவர் தந்தை பெரியார் அன்றோ என்று அடுக்கடுக்காக கூறிக் கொண்டே போனார் விடுதலை ஆசிரியர் வீரமணி அவர்கள்!


சுதந்திரம் அடைந்து 67 ஆண்டுகள் ஆகி விட்டன. இன்னும் பிராமணன் - சூத்திரன் என்ற பேதம் இருக்கிறதே - பிறப்பின் அடிப்படையில் இது தீர்மானிக்கப்படுகிறதே!


மனிதனுக்கு இல்லாத சுதந்தரம், சமத்துவம் மண்ணுக்கு இருந்து என்ன பயன் என்று தந்தை பெரியார் எழுப்பிய வினாவுக்கு விடை எங்கே? எங்கே?
ஜாதி இருக்கும் நாட்டில் உண்மையான சுதந்திரம் எப்படி இருக்க முடியும்? எனவேதான் தந்தை பெரியார் அவர்கள் தமது அடிப்படைக் கொள்கையான ஜாதி ஒழிப்பை முன்னிறுத்தி, ஜாதிக்கு மூல வேர்களாக இருக்கக் கூடிய கடவுள், மதம்! வேதம், சாஸ்திரம் புராணங்கள் மீது கை வைத்து அவைகளை நிர்மூலமாக்க வேண்டும் என்று ஓயாது உழைத்தார்.


சுவீடன் நாட்டைச் சேர்ந்த குன்னர்மிர்தால் என்ற அறிஞரால் எழுதப்பட்ட நூல். ஆசியன் டிராமா என்பதாகும்.

அந்நூலில் முக்கியமாக ஒன்றைக் குறிப்பிட்டார்: Caste is deeply entrenched in Indian tradition and it could be removed  only by drastic Surgery.


இந்திய சமூகத்தில் மிகவும் ஆழமாக வேரூன்றியுள்ளது. ஜாதி! அதனைக் கடுமையான அறுவைச் சிகிச்சையால் தான் ஒழிக்க முடியும் என்று கூறவில்லையா?


இந்தக் கருத்தினைத் தானே இந்த நாட்டில் முக்கால் நூற்றாண்டுக்குமேல் கூறி வந்தார் - தந்தை பெரியார்


இந்தக் கருத்தினை நூலாக வெளியிட்ட குன்னர்மிர் தாலுக்கு நோபல் பரிசு கிடைத்தது என்றாலும், தத்துவப்படி தந்தை பெரியார் அவர்களுக்குக் கிடைத்த நோபல் பரிசாகத் தான் இதனைக் கருத வேண்டும் என்று தமிழர் தலைவர் சொன்ன பொழுது பலத்த கரஒலி!

பிரபல எழுத்தாளரான இராமச்சந்திர குகா  Makers of The Modern India    என்ற நூலை எழுதியுள்ளார்.

19 பேர்களைக் குறிப்பிட்டுள்ள அவர் தென்னிந்தியா விலேயே தந்தை பெரியாரை மட்டுமே குறிப்பிட்டு இருந்தார்.


அதற்கு அவர் விளக்கம் சொல்லும் பொழுது அவர் மட்டுமே சுயசிந்தனையாளராகவும், தலை சிறந்த நிருவாகியாகவும் அமைப்பை ஏற்படுத்தி செயல்பட்டவ ராகவும் உள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆயிரம் ஆண்டின் வரலாற்றை உருவாக்கியவர்கள் என்ற ஒரு தொகுப்பு நூலை வெளியிட்டு இருக்கிறது.


அதில் தந்தை பெரியாரையும் அண்ணல் அம்பேத் கரையும் குறிப்பிட்டுள்ளனர்.
வேதங்களில் பார்ப்பனர்களுக்கு மிகப் பெரும் சலுகைகள் அளிக்கப் பெற்றுள்ளன; எது நாள் வரை அந்தச் சலுகைகளுக்கு அறைகூவல் விடப்படவில்லையோ, அதுவரை மட்டுமே அவை புனிதமானவை. அந்த அறைகூவல் தமிழ்த் தேசத்தில் புயலென எழுந்தது. தெய்வச் சிலைகளை உடைத்த ஒருவர் அதைத் தொடங்கினார். அவர் வேதங்களை மட்டுமின்றிக் கடவுளர்களைப் பற்றியும் கேள்விகள் எழுப்பினார். சில பிரச்சினைகளில் தீவிரமாகத் தோன்றும் நிலைகளை எடுத்தார். ஆனால் அவர் செய்த சமூகப் புரட்சியின் அடிப்படையான இயல்பை, அந்தப் புரட்சியால் பாதிக்கப்பட்டவர்கள் கூடத் தெளிவாகக் கண்டனர். தமிழ்நாட்டில் அரசியல் கட்சியும், அத்துடன் இந்தியாவின் பெருமளவு அரசியல் காட்சியும், இறுதி வடிவைப் பெற்றுவிட்டதாகத் தோன்றும் வகையில் இராமசாமி நாயக்கரால் (1879-1973) மாற்றப்பட்டது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது என்பதைத் தமிழர் தலைவர் எடுத்துக் காட்டினார்.


தந்தை பெரியார் வெறும் சீர்திருத்தவாதியல்ல - புரட்சியின் வடிவமே அவர்தான் ஒரு துளி ரத்தம் சிந்தாமல் மக்கள் மத்தியிலே அமைதியான முறையில் பெரும் புரட்சி செய்த மாபெரும் சமூகச் சிற்பி தந்தை பெரியார்.
இந்த மாறுதல்களை மாற்றிக் காட்ட வேண்டும்; மீண்டும் மனு தர்மக் கொடி பறக்க வேண்டும் என்று ஆசைப் படுகிறார்கள். மக்கள் ஏமாந்தால் மீண்டும் இந்துத்துவா வரும் - அதன் விளைவு பார்ப்பன ஆதிக்கத்துக்குத்தான் வழிகோலும். எனவே சமுதாய சமத்துவத்துக்கும், சம வாய்ப்புக்கும் தந்தை  பெரியார் என்றும் தேவைப்படுகிறார் என்று எடுத்துரைத்தார் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள்.


குறிப்பு; கூட்டத்தின் இறுதியில் பார்வையாளர்கள் கேள்விகளுக்கு தமிழர் தலைவர் பதில் அளித்தார். திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் அறிமுகவுரை ஆற்றினார். தென் சென்னை மாவட்ட இளைஞரணித் தலைவர் செல்வேந்திரன் வரவேற்புரையாற்றிட  திராவிட இயக்கத் தமிழர்பேரவையின் பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் தலைமை உரையாற்றினார். (ஆசிரியரின் நான்கு நாள் முழு உரைகளும் பின்னர் வெளிவரும்).


சுபவீ. தலைமை உரையிலிருந்து...

பணம் கொடுத்து கூட்டம் கேட்கும் - அதுவும் ஆய்வுச் சொற்பொழிவைக் கேட்கும் மக்கள் இங்கே கூடியிருப்பது மகிழ்ச்சியினைத் தருகிறது.
அய்.நா.மன்றம் அளித்த விருதின் வாசகங்களை முன்வைத்து ஒரு வரி தலைப்பில் ஒரு நாள் பேசுவது என்பது சாதாரமானதல்ல; ஆசிரியர் அவர்களால் தான் அது முடியும்.


19 ஆம் நூற்றாண்டில் பல சீர்திருத்த இயக்கங்கள் தோன்றியதுண்டு. பிரம்மசமாஜம், ஆரிய சமாஜம் என்பவை சீர்திருத்த இயக்கம் என்று சொல்லிக் கொண்டாலும் வேதங்களில் நம்பிக்கை கொண்டவர்கள். தமிழ்நாட்டில், வடலூர் இராமலிங்க அடிகள் தோன்றினார். தொடக்கத்தில் நடராஜர் கடவுள் மீதெல்லாம் பாடி முடித்தாலும் கடைசியில் வேதம், ஆகமம், புராணம் குப்பைகளையெல்லாம் சாட ஆரம்பித்தார். பிள்ளை விளையாட்டு என்று விமர்சித்தார். அப்படிச் சொன்ன ஆறு மாதத்திற்குள் அவர் ஜோதி யாக்கப்பட்டார்.


அண்ணல் அம்பேத்கர் இந்து மதத்திலிருந்து புத்த மார்க்கம் சென்றார். காந்தியார் அதை மறு பரிசீலனை செய்யுமாறு வற்புறுத்தினார்.
அப்போது காந்தியாரிடம் அம்பேத்கர் ஒரு நிபந்த னையை வைத்தார். சங்கர மடத்தில் ஒரே ஒரு ஆண்டு ஒரு தாழ்த்தப்பட்டவரை சங்க ராச்சாரியார் ஆக்க வேண்டும். அந்த ஓராண்டுக்குள் நான்கு பார்ப்பனர்கள் அந்த சங்கராச்சரியாரைக் கண்டு வணங்கி ஆசிர்வாதம் பெற வேண்டும், அப்படி செய்தால் நான் இந்து மதத்தைத் துறப்பது பற்றி மறுபரிசீலனை செய்ய தயார் என்றார். காந்தியார் மவுனம் ஆனார்.


நாட்டில் கடவுள் நம்பிக்கையற்றவர்கள் எண்ணிக்கை நாளும் வளர்ந்து கொண்டு தான் வருகிறது. சீனாவில் அத்தகையவர்கள் 26 சதவீதமாக உள்ளனர்.
- சிறப்பு கூட்டத்திற்கு தலைமை வகித்த திராவிட இயக்க தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் பேரா. சுப.வீரபாண்டியன் ஆற்றிய தலைமை உரையின் ஒரு பகுதி.

                                    --------------- - மின்சாரம் - 26-09-2014
***************************************************************************************
தந்தை பெரியாரின் ஏற்புரையை எடுத்துக்காட்டி தமிழர் தலைவர் ஆசிரியரின் சிறப்பு மிளிரும் பேருரை!

அய்.நா. மன்றத்தின் கிளை அமைப்பான யுனெஸ்கோ தந்தை பெரியார் அவர்களுக்கு அளித்த விருதில் அடங்கிய வாசகத்தின் கடைசிப் பகுதி - அறியாமை, மூட நம்பிக்கை, பொருளற்ற பழக்கவழக்கங்கள், இழிவான நடவடிக்கைகள் ஆகியவற்றின் கடும் எதிரி  என்று தந்தை பெரியார் அவர்கள்பற்றி அந்த விருதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.


நான்காம் நாளான நேற்று (26.9.2014) இந்தப் பகுதியைத் தலைப்பாக எடுத்துக்கொண்டு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் 75 மணித் துளிகள் உரையாற்றினார்.


அந்த விருது அளிப்பு விழாவில் தந்தை பெரியார் ஏற்புரையில் கூறிய கருத்தை எடுத்துச்சொல்லி, தன் நிறைவுரையைத் தொடங்கினார் தமிழர் தலைவர்.
இதோ தந்தை பெரியார் அவர்களின் ஏற்புரை:


யுனெஸ்கோ பாராட்டும் - பெரியார்  ஏற்புரையும்!


எனக்களிக்கப்பட்டுள்ள பாராட்டுகளை அப்படியே ஏற்றுக் கொள்வதற்கு எனக்கு தகுதி இருக்கிறது என்று நான் கருதவில்லை. அவற்றை அப்படியே ஏற்றுக் கொள்ள நான் மிகவும் வெட்கப்படுகின்றேன்.  ஆனால் அவற்றில் ஒன்றை மட்டும் நான் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறேன். அறியாமை, மூடநம்பிக்கை, அர்த்தமற்ற சம்பிர தாயம், இழிந்த வழக்கங்கள் ஆகியவற்றிற்கு நான் கடும் எதிரி என்பதை ஏற்றுக் கொள்கின்றேன்.


போதுமான அளவுக்கு நான் எதிரியோ, இல்லையோ என்பது ஒருபுறமிருந்தாலும் இவை களை எதிர்ப்பது இலேசான காரியமல்ல. சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன் மனிதன் பக்குவப் படாமலிருந்த போதும், மனிதத் தன்மையற்றிருந்த போதும், ஏற்பாடு செய்யப்பட்ட அமைப்புகளை எதிர்ப்பது என்பது மிக்க சாதாரண காரிய மென்றாலும் அவைகளை பாதுகாப்பதற்காக பத்தாயிரக்கணக்கான கோயில்கள், இலட்சக் கணக்கான கடவுள்கள், இதை பரப்புவதற்கு பல பத்து இலட்சக்கணக்கான பேர்கள் இருக் கிறார்கள்.
ஆனால் இவற்றையெல்லாம் எதிர்ப் பவர்கள் நாம் மட்டும் தான் இருக்கின்றோம்.என்று ஏற்புரை ஆற்றினார் தந்தை பெரியார். இன்றைய தலைப்புக்கு இது மிகவும் பொருத்த மானதாகும்.


எதிர்ப்பவர்களைப்பற்றி சொன்ன தந்தை பெரியார் அவர்கள், யார் யாரை எல்லாம் எதிர்க்க வேண்டியிருந்தது என்பதையும் பட்டியலிட்டுள்ளார்.
இதோ அந்தப் பட்டியல்:


பொதுவாக நமது பிரசங்கத்தினாலும், குடி அரசுவினாலும் நான் செய்துவந்த பிரச்சாரத்தில் அரசியல் இயக்கங்கள் எனபவற்றைக் கண்டித் தேன். அரசியல் தலைவர் என்பவர்களைக் கண்டித்தேன். மதம் என்பதைக் கண்டித்தேன். மதச் சடங்கு என்பவற்றைக் கண்டித்திருக்கின்றேன். குருக்கள் என்பவர்களைக் கண்டித்திருக்கின்றேன். கோயில் என்பதைக் கண்டித்திருக்கின்றேன். சாமி என்பதைக் கண்டித்திருக்கின்றேன். வேதம் என்று சொல்லுவதைக் கண்டித்திருக்கின்றேன்.


சாத்திரம் என்பதைக் கண்டித்திருக்கின்றேன். புராணம் என்பதைக் கண்டித்திருக்கின்றேன். பார்ப்பனியம் என்பதைக் கண்டித்திருக்கின்றேன். ஜாதி என் பதைக் கண்டித்திருக்கின்றேன். அரசாங்கம் என் பதைக் கண்டித்திருக்கின்றேன். உத்தியோகம் என் பதைக் கண்டித்திருக்கின்றேன். நீதி ஸ்தலம் என் பதைக் கண்டித்திருக்கின்றேன். நிருவாக ஸ்தலங் கள் என்பவைகளைக் கண்டித்திருக்கின்றேன்.

ஆடியோ கேசட் (ஒலிக் குறுந்தகடு) வெளியீடு
பகுத்தறிவும், மூட நம்பிக் கையும் என்ற தலைப்பில் பிரச்சார நோக்கத்திற்காக என்றே சிறப்பாகத் தயாரிக்கப் பட்ட  பகுத்தறிவும் மூட நம் பிக்கையும்! என்ற தலைப்பில் தமிழர் தலைவர் உரை அடங் கிய ஒலிக் குறுந்தகட்டினை (நன்கொடை ரூ.50) நேற்று (26.9.2014) மாலை பெரியார் திடலில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் பெரியார் பேருரை யாளர் பேராசிரியர் புலவர் மா.நன்னன் அவர்கள் வெளி யிட, பேராயர் எஸ்றா சற்குணம், உரத்தநாடு காந்தி, வீ.குமரேசன், மயிலை நா.கிருஷ்ணன், சிங் கார. இரத்தினசபாபதி உள்பட ஏராளமான தோழர்கள் மேடை யில் பெற்றுக்கொண்டனர்.


ஜனப் பிரதிநிதித்துவம் என்பதைக் கண்டித்திருக் கின்றேன். தேர்தல் என்பதைக் கண்டித்திருக்கின் றேன். கல்வி என்பதைக் கண்டித்திருக்கின்றேன். சுயராச்சியம் என்பதைக் கண்டித்திருக்கின்றேன். சிறீ மான்கள் கல்யாணசுந்தர முதலியார், வரதராசுலு நாயுடு, இராஜகோபாலாச்சாரியார் முதலிய ஒரே துறையில் வேலை செய்து வந்த நண்பர்களைக் கண்டித்திருக்கின்றேன். இன்னும் என்னென்ன வற்றையோ - யார் யாரையோ கண்டித்திருக்கின் றேன். கோபம் வரும்படி வைதும் இருக்கின்றேன்.


எதைக் கண்டித்திருக்கின்றேன்;  எதைக் கண்டிக்கவில்லை என்பது எனக்கு ஞாபகத்திற்கு வரமாட்டேன் என்கின்றது. இன்னமும் ஏதாவது எழுதலாமென்று பேனாவை எடுத்தாலும், பேசலா மென்று வாயைத் திறந்தாலும் கண்டிக்கவும் - வையவும் - துக்கப்படவுமான நிலைமை ஏற்படு கின்றதே ஒழிய, வேறில்லை. கண்டிக்கத்தகாத இயக்கமோ, திட்டமோ, அபிப்பிராயமோ என் கண்களுக்குப் படமாட்டேன் என்கிறது.
என்று பட்டியலிட்டுள்ளார் தந்தை பெரியார். அவற்றை எடுத்துக்காட்டினார் ஆசிரியர்.


போதைப் பொருள் விற்பதுபோல, நம் நாட்டுத் தொலைக்காட்சிகளும், ஊடகங்களும் மூட நம்பிக் கைகளைப் பரப்பிக்கொண்டே இருக்கின்றன. இந்தக் கூடுதல் சுமைகளையேற்றுப் பிரச்சாரம் செய்ய வேண்டிய நிலைதான் நமக்கு!


மற்ற மற்ற மதங்களில் சிறுசிறு அளவில் பாவ மன்னிப்பு என்றால், இந்து மதத்தில் ஒட்டுமொத்தமான பாவ மன்னிப்புண்டு. 12 ஆண்டுகள் துணிந்து பாவங் களைச் செய்யலாம்.


12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் மகாமகத்தன்று கும்பகோணம் மகாமகக் குளத்தில் ஒரு முழுக்குப் போட்டுவிட்டால், ஒட்டுமொத்த பாவங்களுக்கும் நிவாரணம் கிடைக்கும் என்று நம்புகிறார்கள். இந்த நம்பிக்கை உள்ள மக்களைத் திருத்துவது என்பது எளிதான காரியமா?


புனித கங்கையைச் சுத்தப்படுத்தப் போகிறோம் என்கிறார்கள். அதுதான் புனித கங்கையாயிற்றே! அதை ஏன் சுத்தப்படுத்தவேண்டும்!
அப்படி என்றால், கங்கை புனிதமான நதியில்லை என்று ஒப்புக்கொள் வதாகத்தானே அர்த்தம்?


இன்னொரு பக்கத்திலே இராமாயணம், மகாபாரதம் என்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பிக் கொண்டு இருக்கிறார்கள். இவற்றால் மக்கள் ஒழுக்கம் பெறு வார்களா?


கட்டண வசூல் ரூ.66,100
தமிழர் தலைவர் சிறப்புரை ஆற்றிய நான்கு நாள் சொற்பொழிவின்மூலம் கிடைத்த கட்டணம் ரூ.66,100-அய் திராவிடர் கழக இளைஞரணி, மாணவரணி, மகளிரணி, பகுத்தறிவாளர் கழகம், பெரியார் நூலக வாசகர் வட்ட பொறுப்பாளர்கள் - மேடையில் கழகத் தலைவரிடம் வழங்கினர்.

தொலைக்காட்சிகளில் இராமாயணம் தொடர் ஒளிபரப்பான காரணத்தினால்தான் ராமர் கோவில் பிரச்சினை எழுந்து, பாபர் மசூதி இடிக்கப்பட்டது என்று முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் மகன் டாக்டர் கோபால் எழுதிய நூலில் குறிப்பிட்டுள்ளாரே!


இராமாயணம் பரவினால் சகோதரத் துரோகம் வளராதா? காட்டிக் கொடுக்கும் விபீஷணர்கள் வளர மாட்டார்களா?


இன்னும் கம்பர் விழா நடத்துகின்ற நமது புலவர் பெருமக்களும் இருக்கத்தானே செய்கிறார்கள்.


இந்த நேரத்திலே நான் ஒன்றைச் சொல்ல விரும் புகிறேன். ஒவ்வொரு ஆண்டும் இராவண காவி யத்துக்கு நாம் விழா எடுக்கவேண்டும் என்று தமிழர் தலைவர் சொன்ன பொழுது பெரிய ஆதரவுக் கையொலி எழுந்தது.
தந்தை பெரியார் இராமாயணத்தைப்பற்றிச் சொன்ன கருத்துகளுக்கு இதுவரை மறுப்புகள் சொன்னவர்கள் யார்?


முதலில் இராமாயணம் நடந்ததாகக் கூறும் காலமே அசல் புரட்டாச்சே! தந்தை பெரியார் கேட்கிறார், இராமாயணம் நடந்த காலம் என்று சொல்லப்படும் திரேதாயுகம், துவாபரயுகம் இவற்றின் கூட்டுத் தொகையே 21 லட்சத்து 60 ஆயிரம் ஆண்டுகள்தான்; அப்படி இருக்கும்போது இராவணன் 50 லட்சம் ஆண்டுகள் இந்த யுகங்களில் ஆண்டான் என்பது எப்படி? என்ற தந்தை பெரியார் அவர்களின் வினாவுக்கு விடையெங்கே?


தந்தை பெரியார் அவர்களால் எழுதப்பட்ட இராமாயணப் பாத்திரங்கள் என்னும் நூல் Ramayana - A True Reading என்று ஆங்கிலத்தில் வெளிவந்தது. உத்தரப்பிரதேசத்தில் சச்சு இராமா யணம் என்று இந்தியில் மொழி பெயர்க்கப்பட்டது.


உத்தரப்பிரதேச மாநில ஆட்சி, அதனைத் தடை செய்தது; அதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டபோது, நீதிபதி வீ.ஆர். கிருஷ்ண அய்யர் தடை செல்லாது என்று அருமை யான தீர்ப்பு வழங்கினாரே!
(நெருக்கடி நிலை காலத்தில் அந்தத் தீர்ப்பை விடுதலையில் வெளியிடக்கூடாது என்று பார்ப் பனர்களின் கூடாரமாக இருந்த தணிக்கைக் குழுவினர் தடை செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது).


இராமாயணத்தைப்பற்றி மக்கள் மத்தியில் தந்தை பெரியார் எடுத்துக் கூறிக்கூறி பக்குவப்படுத்தி வைத் திருந்ததால்தான் பாபர் மசூதி இடிக்கப்பட்டபொழுது இந்தியா முழுமையும் கலவரங்கள் ஏற்பட்ட நிலையில், தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக விளங்கியதையும் இந்த நேரத்தில் குறிப்பிட்டாகவேண்டும்.


1971 இல் சேலத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் மூட நம்பிக்கை ஒழிப்பு மாநாடு நடைபெற்றது.


ஊர்வலத்தில் வந்த தந்தை பெரியார்மீது ஜன சங்கத்தினர் செருப்பை வீசினார்கள்;  அந்தச் செருப் பைக் கையில் பிடித்த திராவிடர் கழகத் தோழர்கள் ஊர்வலத்தில் எடுத்து வரப்பட்ட ராமன் படத்தின்மீது சாத்தினார்கள். எங்கள் தலைவர் மீதா செருப்பை வீசினாய்? இதோ பார் உங்கள் ராமனுக்குச் சாத்துப்படி என்று அடித்தார்கள்.

தமிழ்நாடு மின் கழக தொழிலாளர் முன்னேற்றக் கழகத்தின் சார்பில், அதன் பொதுச்செயலாளர் சிங்கார.இரத்தினசபாபதி மற்றும் பா.சுகுமாரன் (அமைப்புச் செயலாளர்), ரா.குருநாதன் (வெளியீட்டு செயலாளர்), மு.சடாச்சரம் (பொருளாளர்), தே.முரளிகுமார் (அலுவலக செயலாளர்) ஆகியோர் பெரியார் உலகத்திற்கு ரூ.25 ஆயிரத்தை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினர் (சென்னை, பெரியார் திடல், 26.9.2014).

அது சட்டமன்ற தேர்தல் நெருங்கிய நேரம். உடனே அதனைப் பிடித்துக்கொண்டார்கள். இராமனை செருப்பாலடித்த திராவிடர் கழகம் ஆதரிக்கும் தி.மு.க.வுக்கா உங்கள் ஓட்டு என்று பிரச்சாரம் செய்தார்கள். அப்பொழுது காமராசரும், ராஜாஜியும் தேர்தலில் கூட்டணி வைத்துக்கொண்டிருந்தனர்.


சேலத்தில் ராமனை தி.க.வினர் செருப்பால் அடித்ததால், தி.மு.க. தோற்கப் போகிறது என்றெல்லாம் ஆரூடம் கணித்தார்கள்.


முடிவு என்ன? இராமனை செருப்பாலடிக்காத தேர்தலில் 1967 இல் தி.மு.க. வெற்றி பெற்ற இடங்கள் 138; இராமனை செருப்பாலடித்த பிறகு 1971 இல் நடை பெற்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்ற இடங்கள் 184.


(உங்களைப் பாராட்ட எனக்குத் தமிழில் வார்த் தைகளே இல்லை; எனக்குப் பழி நீங்கியது, உங்களுக்கு உலகப் புகழ் கிடைத்தது என்று தந்தை பெரியார் அவர்கள் முதலமைச்சர் மாண்புமிகு கலைஞர் அவர்களுக்குத் தந்தி கொடுத்தார்).


184 இடங்களை வென்ற தி.மு.க. அமைச்சரவை யினர் சென்னைப் பல்கலைக் கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் தந்தை பெரியார் முன்னிலையில் பதவியேற்றனர். (15.3.1971) என்பது இங்கு நினைவூட்டத்தக்கதாகும்.
தொடர்ந்து, கீதை, ஆத்மா, சோதிட மூடநம்பிக் கைகள்பற்றியெல்லாம் தந்தை பெரியார் மக்கள் மத்தியில் எப்படியெல்லாம் பிரச்சாரம் செய்தார் என்பதை எடுத்துக்காட்டினார் திராவிடர் கழகத் தலைவர்.


இறுதியாக தந்தை பெரியார் தம்மைப்பற்றித் தன்னிலை விளக்கமாகக் கூறியதை எடுத்துக்காட்டி னார் தமிழர் தலைவர்.


இனி எனது சமுதாயத் திட்டந்தானாகட்டும், வருணாசிரம தர்மமுறை ஒழிய வேண்டு மென்பதும், பார்ப்பனச் சமுதாயத்துக்கு எந்தத் துறையிலும் அவர்கள் எண்ணிக்கைக்கு மேற்பட்ட பங்கும் - எண்ணிக்கைக்கு மேற்பட்ட உரிமையும் - சராசரி வாழ்க்கை முறைக்கு மேற்பட்ட தன் மையும் இருக்கும்படியான எவ்வித நடப்பும் வசதியும், சலுகையும் இருக்கக்கூடாது என்பதுந் தானே?
சமுதாயத்தில் தாழ்த்தப்பட்டு, பிற்படுத்தப்பட்டு இருக்கும் திராவிட மக்களுக்குத் தனிச் சலுகையும் கொடுத்து, கூடிய வரையில் சமச்சமுதாயமாக் கப்பட வேண்டுமென்பதுந்தானே?


சமயத்துறையில் புராணக் கடவுள்கள் பிரச்சாரமும் விக்ரக ஆராதனையும் அனுமதிக்கக் கூடாது என்பதோடு, கோயில் - மடம் - வர்ணமுறை தர்மம் என்பவற்றின் பேரால் பணம் இருப்பு இருப்பதோ, செலவு செய்வதோ கூடாது என்பதும், தர்மம் என்பதெல்லாம் மக்கள் வாழ்வில் உயர்வு தாழ்வும், வாழ்க்கைத் தேவையில் பெருமித உயர்வு தாழ்வும் இல்லாமல் நித்திய ஜீவனத்தைப் பொறுத்தவரையிலாவது அடிமையுணர்ச்சி தேவையில்லாத ஆண்மை வாழ்வு வாழ வகை செய்ய வேண்டுமென்பதுந்தானேயொழிய, மற்றபடி எந்தத் துறையில் என்ன கெடுதி ஏற்பட நான் ஆசைப்படுகிறேன்?
கல்வியில் தானாகட்டும், 100-க்கு 90 திராவிட மக்கள் கைந்நாட்டுத் தற்குறிகளாய் இருக்க இதைச் சரிப்படுத்தாமல் (ஹைஸ்கூல், உயர்தரப்பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் என்னும் பேரால்) பாட்டாளி மக்களின் உழைப்பை வரியாக வாங்கிக் கோடிக்கணக்கான ரூபாய்களைச் செலவு செய்யக்கூடாது என்பதைத் தவிர, கல்விக்கு நான் எந்தவிதத்தில் என்ன கெடுதி செய்கிறேன்?
நமக்கு அரசியலுக்கோ - சமய சமுதாய இயலுக்கோ - வேறு கலை இயலுக்கோ ஆட்கள் வேண்டுமானால், வேண்டிய அளவுக்குக் கிராண்டு, ஸ்காலர்ஷீப், ஸ்டைபெண்டு கொடுத்து எங்காவது சென்று படித்து வரும்படி செய்து வேலை வாங்கலா மென்றும், ஏராளமான பிரபுக்கள் இருக்கிற நாட் டில் பிரபுகளுக்கு மாத்திரம் கிடைக்கும்படி பணம் ஏன் செலவு செய்யவேண்டும் என்பதுந்தானே?


இவை போன்ற கருத்தின்றி, மற்றப்படி நான் எந்த விதத்தில் நாட்டுக்கு - சமுதாயத்துக்குக் கேடு விளைவிப்பவனாக இருந்தேன்? அன்றியும் என்னிடத்தில் எங்காவது எப்போதாவது பலாத் காரத்தைத் தூண்டும் சொல்லையோ - செய்கை யையோ - ஜாடையையே கண்டீர்களா? அல்லது என் பேச்சால் எழுத்தால் செய்கையால், என்றாவது பலாத்காரம், குழப்பம் ஏற்பட்டதா?


சர்க்காரைக் கவிழ்க்கும் ஜாடையைக் கண்டீர் களா? குழப்பம், கலவரம் உண்டாகும் ஜாடையைக் கண்டீர்களா? அனுபவத்தையோ கண்டீர்களா? என்று தந்தை பெரியார் 1948 இல் எழுதியதை தமிழர் தலைவர் எடுத்துக்காட்டியபோது, புதிய தலைமுறை யினருக்குப் பொன்னேடாக ஒளிர்ந்தது.


எத்தகைய உயர்ந்த பொதுவாழ்க்கைக்குச் சொந்தக் காரர் தந்தை பெரியார் என்பதை விளக்கினார் திராவிடர் கழகத் தலைவர்.


திராவிடர் சமுதாயத்தைத் திருத்த மானமும், அறிவும் உள்ள மக்களாக ஆக்கும் பணியைத் தன் தோள்மீது போட்டுக்கொண்டு செய்கிறேன் என்று தந்தை பெரியார் கூறியதையும் எடுத்துக்காட்டினார்.


தடைகள் எவை நம் முன்வந்தாலும், அவற்றைத் தகர்த்து தந்தை பெரியார் காண விரும்பிய சமூகத் தைப் படைப்போம் என்று கூறி நிறைவு செய்தார்.
மூச்சடக்கிக் கடலில் முத்தெடுப்பவன் அவன் சக்திக்கேற்பவே எடுப்பான்; கடலில் உள்ள எல்லா முத்துக்களையும் எடுத்துவிட்டதாகக் கூற முடியுமா? அதுபோலவே, நானும் தந்தை பெரியார் அவர்களின் தத்துவக் கடலிலிருந்து என்னால் முடிந்தவரை மூழ்கி முத்துக்களாக எடுத்துக் கொடுக்க முயலுகின்றேன். உங்களது தூண்டுதல்தான் என் தேடலுக்குக் காரணம் என்றும் தன்னடக்கமாகத் தம் உரைபற்றிக் கூறினார் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்.


தமிழர் தலைவர் ஆசிரியரின் உரை கேட்க, அவையில் திரண்டிருந்த அறிவார்ந்த அறிஞர் பெருமக்கள் (சென்னை, 26.9.2014)

பார்வையாளர்களின் கேள்விகளுக்கும் பதில் சொன்னார். தொடக்கத்தில் பகுத்தறிவாளர் கழக மாநிலப் பொதுச்செயலாளர் வீ.குமரேசன் வரவேற்புரையாற்றிட, பெரியார் பேருரையாளர் பேராசிரியர் புலவர் மா.நன்னன் அவர்கள் தலைமை வகித்து உரையாற்றினார். துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் அறிமுக உரையாற்றினார்.

நான்கு நாட்கள் தொடர்ந்து நிகழ்ச்சிக்கு வருகை தந்த பார்வையாளர்கள் சார்பில் ப.சேரலாதன் நன்றி கூறினார். அரங்கம் நிரம்பி வழியும் அளவுக்குக் கட்டணம் செலுத்தி உரையைக் கேட்க வந்தது குறிப்பிடத் தக்கதாகும்.


புலவர் மா.நன்னன்  தலைமை உரையிலிருந்து...
கட்டணம் கொடுத்து நான்கு நாள்கள் தொடர்ந்து வந்து ஒரு கூட்டத்தைக் கேட்பது என்பது அரிதினும் அரிது.

பேராயர் சற்குணம் போன்றவர்கள் எல்லாம் பார்வையாளர் வரிசையில் அமர்ந்து கேட்பது பெருமையாக இருக்கிறது.

பல்லி முட்டையிலிருந்து வெளிவந்த நிலையில், அதற்குத் தாய்ப் பல்லி இரையை ஊட்டுவதில்லை; தானாகவே தன் இரையைத் தேடுகிறது. ஆனால், பகுத்தறிவு ஜீவனான குழந்தையோ, தன் உணவைத் தானே தேடுவதில்லை; தாய்தான் ஊட்டுகிறார்.

பகுத்தறிவிற்கு குருடன் யானையைப் பார்த்ததுபோல், பலரும் பல விளக்கங்களைக் கூறக்கூடும்.

ஆனால், தந்தை பெரியார் கூறும் பகுத்தறிவு என்பது மானுடத்திற்கு மிகவும் அவசியமானது. தந்தை பெரியார் அவர்களின் கொள்கைதான் சரியானது என்று கருதி இறுதியில் இந்த இடத்திற்குத் தான் வந்து சேரவேண்டும்.
அறியாமை என்கிறபோது அதன்கீழ் கிரகணம், அம்மை நோய், பேய் போன்றவற்றில் உள்ள நம்பிக்கையைக் கூறலாம்.

மூட நம்பிக்கை என்று வருகிறபோது, ஆன்மா, கடவுள், விதி இவற்றை அந்தப் பட்டியலில் வைக்கலாம். பொருளற்ற பழக்கவழக்கங்கள் என்கிற பட்டியலில் வணக்கம் கூறுதல் போன்றவற்றை வைக்கலாம்.

இழிவான நடவடிக்கைகள் என்பதில் தரைச்சோறு சாப்பிடுவது, சாந்தி முகூர்த்தம் என்று நாள் வைப்பது, ஆட்டோயூரின் தெரஃபி போன்றவற்றைக் கூறலாம்.

அறியாமை, மூடநம்பிக்கை, பொருளற்ற பழக்க வழக்கங்கள், இழிவான நடவடிக்கைகள் - இவை எல்லாம் மனித வளர்ச்சிக்குக் கேடானவை.
பெரியாரின் பெருநெறிப் பிடித்தொழுகுவோரே இவைபற்றியெல்லாம் அறிந்து அறிவு பெற்றவர்கள் ஆகின்றனர்.

திராவிட இயக்கத்தின் ஆணி வேராகவும், விழுதாகவும் ஆகியுள்ள திராவிடர் கழகத் தலைவர் பெரியாரின் முதற்பெருந்தொண்டர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களே இப்பொருள்பற்றி உரைக்க முதற்பெருந்தகுதியுடையவர் ஆகிறார்.

---------------------------------------- 26.9.2014 அன்று மாலை சென்னை பெரியார் திடலிலுள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் நடைபெற்ற சிறப்புச் சொற்பொழிவுக் கூட்டத்திற்குத் தலைமை வகித்த புலவர் மா.நன்னன் அவர்களின் உரையிலிருந்து....

                ------------------ மின்சாரம்  --  27-09-2014
*************************************************************************************
செப்டம்பர் 23 முதல் 26 வரை நான்கு நாள்கள் தந்தை பெரியாருக்கு யுனெஸ்கோ அளித்த விருது பற்றி பேசியது நான் பெற்ற பேறு!
எதிர்காலம் பெரியார் இலட்சியங்களால் நிறையட்டும்
அந்நிலை உருவாகிட அயராது உழைப்போம் வாருங்கள்!
தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை
செப்டம்பர் 30ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் - கி.வீரமணி அறிவிப்பு


சென்னை பெரியார் திடல் - நடிகவேள் எம்.ஆர். இராதா மன்றத்தில், தந்தை பெரியாரும் அய்.நா.வின் யுனெஸ்கோ மன்றம் அளித்த விருதில் அடங்கும் வாசகங்களை மய்யமாக வைத்து செப்டம்பர் 23 முதல் 26 முடிய நான்கு நாள்கள் தொடர் சொற்பொழிவினை ஆற்றிய என் வாழ்வில் நான் பெற்ற பெரும் பேறு! என்று புளகாங்கிதம் அடையும் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள், தந்தை பெரியார் விரும்பிய இலட்சிய உலகைப் படைக்க அயராது உழைப்போம் என்று குறிப்பிட்டுள்ள அறிக்கை வருமாறு:
நமது அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களது பிறந்த நாள் பெரு விழா என்பது ஆண்டுக்கு ஆண்டு மேலும் மேலும் சிறப்புகள் சேர்க்கப்பட்ட அறிவுப் பிரச்சாரத்தை அகிலம் எங்கும் நடத்திடும் அற்புதப் புத்துலகத்திற்கான புத்தாக்கப் புதுமை விழாவாகவே நடத்தப்பட்டு வருகின்றது.


மானுடப் பரப்பு முழுவதும் மனிதத்தின் பெருமையை உணர்ந்தோர் உய்ய, உயர உலகத் தலைவர் தந்தை பெரியார்தம் ஒப்புவமையற்ற உயர் எண்ணங்களே நமக்கு வழிகாட்டும் வெளிச்சம் என்பதை உணரத் தொடங்கி விட்டனர்.

உலகம் முழுவதும் அய்யா விழா!

கடந்த 13-ஆம் தேதி (செப்டம்பர்) வாஷிங்டன் அமெரிக்கத் தலைநகர் மற்றும் கனெக்டிகட் மாநிலத்திலும் (இவ்வாரம்), சிங்கப்பூர் நாட்டிலும், துவங்கிய பெரியார் 136ஆவது ஆண்டு பிறந்த நாள் விழா, மலேசியா, ஆப் பிரிக்கக் கண்டத்து நாடான கானா நாட்டிலும், இந்திய நாட்டின் வடபுலத்திலும் மிகச் சிறப்பாக, சமூக நீதி, பகுத்தறிவு, பெண்ணுரிமை, மனித உரிமை, மூடநம்பிக்கை ஒழிப்பு என்ற பெரியார்தம் விழுமிய கோட்பாடுகளைப் பரப்புரை செய்யும் பகுத்தறிவு திருவிழாக்களாக நடை பெற்று வருகின்றன.

நன்றித் திருவிழாவாகக் கொண்டாட்டம்!

தலைநகர் சென்னை துவங்கி குமரி வரை வெகு சிறப்பாக விழாக்கள், பேரணிகளாகவும் பிரச்சார நிகழ்ச்சி களாகவும், கருத்தரங்குகளாகவும் நடைபெற்ற வண்ணம் உள்ளன!

இதை திராவிடர்கள் ஓர் நன்றித் திருவிழா வாக கொண்டாடி மகிழ்கின்றனர்!
வெறும் பெரியார் தொண்டின் பெருமையோடு கூட்டங்கள் முடிந்து விடக் கூடாது; தந்தை பெரியாரின் தத்துவக் கருத்துக்கள் எப்படிப்பட்ட அரிய சிந்தனைக் கருவூலம் என்பதை இளைய தலைமுறையினரும் புரிந்து உள்வாங்கி, தங்கள் வாழ்க்கையை அறிவும், மானமும் உள்ள பயனுறு பகுத்தறிவு வாழ்க்கையாக, தொண்டறமாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என்ற சீரிய நோக்கத்துடன், இது அமைய வேண்டும்.

யுனெஸ்கோ அளித்த விருது

தந்தை பெரியார் அவர்களை உலகத்தின் ஒப்பற்ற சிந்தனையாளராக, புரட்சிக்காரராக - அய்.நா.வின் ஒரு கலாச்சாரப் பிரிவான யுனெஸ்கோ மன்றம் சார்பாக, 1970இல் மத்திய கல்வி அமைச்சர் டாக்டர் திரிகுணசென் தலைமையில், மாநில முதல் அமைச்சர் டாக்டர் கலைஞர் அவர்களால் வழங்கப் பெற்று அத்துடன் விருது ஏன் என்பதற்கான விளக்கப் பட்டயமும் அளிக்கப்பட்டது.

அதில் உள்ள அருமையான கருத்தாக்கம் (சிவீணீவீஷீஸீ) தான் பெரியார்  புது உலகின் தொலைநோக்காளர்; தென் கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ்; சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை; அறியாமை, மூடநம்பிக்கை, பொருளற்ற பழக்க வழக்கங்கள், இழிவான நடவடிக்கைகள் ஆகியவற்றின் கடும் எதிரி! என்று அதில் கூறப்பட்டு இருந்தது. இந்த நான்கு மய்யக் கருத்தோட்டக் காரணங்கள் ஏதோ அழகோ, அலங்காரத்திற்கான ஆங்கில மொழிச் சொற்றொடர்கள் அல்ல; மாறாக ஒவ்வொரு எழுத்தும் அதன் பின்னே ஒரு மகத்தான வரலாற்றை உள்ளடக்கியுள்ள காலப் பெட்டகம் என்பதை விளக்கிட வேண்டும் என்ற விழைவு என்னுள் முளை விடத் தொடங்கி சில ஆண்டுகள் ஆயின!

நான்கு நாள் சிறப்புச் சொற்பொழிவு

ஆனால், கடந்த நான்கு நாள்களும் 2014 செப்டம்பர் 23,24,25,26 ஆகிய நாள்கள் அதற்காக அமைந்தன - ஆய்வரங்கமாக! இதுவரை பெரியாரை வாசித்த நாம், பெரியாரை சுவாசிக்கத் தொடங்கினோம்!

பொறுப்பும் அக்கறையும் உள்ளவர்களே வரட்டும், கேட்கட்டும் சிந்திக்கட்டும் என்று எண்ணியதன் விளைவாகவே, ஒவ்வொரு நாளும் நன்கொடை பெரியார் உலகத்திற்கு (சிறுகனூரில் அமையவிருக்கும் மெகா திட்டம்) ரூ.100 - 4 நாள் பொழிவுகளைக் கேட்க அளித்து வரட்டும் என்று அறிவித்தது  நமது தலைமைக் கழகம்.

திட்டமிட்ட ஏற்பாடுகளாக அவை அமைந்து விட்டன. தெள்ளுத் தமிழ் அறிஞர்கள் மேனாள் உச்சநீதிமன்ற நீதிபதி ஜஸ்டீஸ் மோகன் (எனது சட்டக் கல்லூரி ஆசிரியர்) மேனாள் பாரதிதாசன் பல்கலைக் கழகத் துணைவேந்தர் டாக்டர் பெ. ஜெகதீசன், பேராசிரியர் சுப.வீ, பகுத்தறிவுப் புலவர் முனைவர் மா.நன்னன் ஆகியோர் உற்சாகம் வழிந்த உரைகளோடு தொடங்கி 4 நாள் என்னை மெய் மறந்து நேரம் துறந்து பல மணி நேரங்கள் ஒவ்வொரு நாளும் சரி (ஒரு மணி 20 நிமிடங்கள்) உரையாற்றிடவும் அதைக் கூடியிருந்தோர் உள்வாங்கி சுவைத்து சுவாசித்த முறையும், பெரியார் தம் வாழ்நாள் மாணவனாகிய எனக்கு என் பணியின் உந்து சக்தியாக உழைக்கும் உறுதியைப் பெருக்கின-  களைப்பைச் சுருக்கின!


இருபாலர்களும் வந்திருந்தனர்! குடும்பம் குடும்பமாக வந்திருந்தனர்!!


புதிய இளைஞர்கள் பொங்கிய மகிழ்வுடன் வந் திருந்தனர்! கேட்டனர் - மகிழ்ந்தனர்!

கடைசிவரை ஒருவரும் எழவே இல்லை. என்னை மறந்தேன். பெரியார் என்ற பெருங்கடலில் மூச்சடக்கி மூழ்கி எடுத்த முத்துக்களை அவர்களுக்குப் பரிமாறி, அரிய பகுத்தறிவு சொத்துக்களாக்கி மகிழ்ந்தேன். இவ் ஏற்பாட்டினை செய்த திராவிடர் கழக மாண வரணி, இளைஞரணி, மகளிரணி, பகுத்தறிவாளர் கழகம், பெரியார் நூலக வாசகர் வட்டம், புதுமை இலக்கியத் தென்றல் பொறுப்பாளர்களுக்கு நன்றி ! நன்றி!!

வசூலான நன்கொடை 4 நாள்களில் கட்டண சொற் பொழிவுக்கானது ரூ.66,100 ஆகும்.

என் வாழ்நாளில் மறக்க முடியாத நான்கு நாள்கள்

இது ஒரு, நம் இயக்க வரலாறு காணாத சாதனை அல்லவா?
எனது வாழ்நாளில் இந்த நான்கு நாள்கள் மறக்க முடியாத யான் பேறு பெற்ற நாள்கள்.

பெரியாரின் பெருமைகளைப் பேசா நாட்கள் எனக்குப் பிறவா நாட்கள் அல்லவா?

சாதனை அல்லவா! நெருப்பான கருத்தினைக் கேட்க பொறுப்பான கூட்டம் திரண்டது! கொள்கை - லட்சியத்தில் திளைத்தது!

நமது நம்பிக்கை மிகப் பெரிய அளவில் நிலைத்தது.

இனி எதிர்காலம் பெரியார் லட்சியங்களால் நிறை யட்டும்!

எனவே உழைப்போம்! வெற்றி பெறுவோம்.

------------------கி.வீரமணி  தலைவர் திராவிடர் கழகம் சென்னை 27.9.2014