Search This Blog

31.8.09

தந்தைபெரியார் -கலைவாணர்(என்.எஸ். கிருஷ்ணன்) ஒரு பார்வை



நாகரிகக் கோமாளி

இனி என்.எஸ்.கே. செத்தாலும் சரி, அவர் பணம் காசெல்லாம் நழுவி அன்னக்காவடி கிருஷ்ணன் ஆனாலும் சரி. நாடக புரட்சி உலகைப் பற்றி சரித்திரம் எழுதப்பட்டால், அந்தச் சரித்திரத்தின் அட்டைப் படத்தில் கிருஷ்ணன் படம் போடாவிட்டால் அந்தச் சரித்திரமே தீண்டப்படாததாகி விடும்

--------------------(குடிஅரசு 11.11.1944)
கலைவாணர் என்.எஸ்.கே. பற்றி தந்தை பெரியார் அவர்களின் கணிப்பு _ வரைபடம் இது.

அந்தப் புகழுக்குரிய நாட்டுக்குச் சேவை செய்ய வந்த நாகரிகக் கோமாளி என்.எஸ். கிருஷ்ணன் அவர்களின் நினைவு நாள் இன்று (1957).

சிரிக்க வைத்துச் சிந்திக்க வைத்த கலைக் கோட்டம் அவர்.





கலைவாணரின் கொள்கை என்ன? 1952 தென்றல் பொங்கல் மலரில் அவரே சொல்லுகிறார்:

வினா: தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளில் உங்களுக்குப் பிடித்தமான கட்சி எது?

விடை: இந்தக் கேள்விக்கு நான் பதில் சொல்லக் கூடாது என்றாலும் பரவாயில்லை. சந்தேகமில்லாமல் நான் ஆதரிப்பது, விரும்புவது சுயமரியாதைக்கட்சிதான்.

வினா: உங்கள் கொள்கை என்ன?

விடை: ஆதி முதல் குடிஅரசு கிருஷ்ணசாமி பாவலர் நடத்திய தேசபந்து ஆகிய இரண்டு பத்திரிகைகளை நான் படித்து வந்தேன்; அப்போது நான் சிறுவ. நாடகக் கம்பெனியில் வேலை. பக்தி மார்க்கத்திற்கும் நாடகத்திற்கும் உள்ள வேறுபாடுகளை நான் அப்போது நன்றாகத் தெரிந்து கொண்டேன். படித்து ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வந்தேன்.

வினா: உங்கள் முடிவு?

விடை: சுயமரியாதைக் கொள்கை நம் நாட்டுக்குத் தேவை என்பதுதான் அந்த முடிவு.


கலைவாணரின் இந்தப் பதிலைப் படிக்கும்போது என்.எஸ்.கே. அவர்களைப்பற்றி தந்தை பெரியார் கணித்ததன் உண்மை புரியும்.

வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது என்று சொல்வார்களே _ அது கலைவாணர் அவர்களுக்குத்தான் நூற்றுக்கு நூறு பொருந்தும். யார் பையன்? என்ற ஒரு திரைப்படம்.

கலைவாணரின் துணைவியார் டி.ஏ. மதுரம் ஒரு கீழ் ஜாதிக்காரருக்குத் தண்ணீர் கொடுப்பார். அவரும் குடித்துவிட்டு அந்தப் பாத்திரத்தைத் திண்ணையில் வைப்பார். டி.ஏ. மதுரம் உள்ளே போய் தண்ணீர் கொண்டு வந்து அந்தப் பாத்திரத்தின்மீது தெளித்து, அதை வீட்டுக்குள் எடுத்துச் செல்லுவார். சிறிது நேரம் கழித்து ஒரு தாழ்ந்த ஜாதிக்காரர் கலைவாணரிடம் ரூபாய் நோட்டுகளைக் கொண்டு வந்து கொடுப்பார்; கலைவாணர் என்ன செய்தார்? அந்த ரூபாய் நோட்டுகள்மீது தண்ணீரை ஊற்றுவார். அய்யயோ பணம் எல்லாம் பாழாய்ப் போச்சே! என்று மதுரம் கத்துவார். தாழ்த்தப்பட்டவர்கள் கொண்டு வந்து கொடுத்த நோட்டாச்சே அதை உயர்ந்த ஜாதிக்காரர்களான நாம் கையால் தொட்டால் தீட்டாச்சே! என்பார்.
என்னே நையாண்டி! இவர்தான் நம் கலைவாணர். வாழ்க! வாழ்கவே!!


--------------- மயிலாடன் அவர்கள் 30-8-2009 "விடுதலை" யில் எழுதிய கட்டுரை

ஈழத் தமிழர்கள் வாழ்வுரிமை காப்பாற்றப்பட செப்டம்பர் 2_இல் இரயில் மறியல்


ஈழத்தில் இதற்குமேல் தமிழர்கள் துயரத்தை அனுபவிக்கவே முடியாது
முதல்வரின் வேண்டுகோளை ஏற்று இந்திய அரசு செயல்பட வேண்டும்
தமிழர்களின் உணர்வை வெளிப்படுத்த செப்.2-இல் ரயில் மறியல்!


ஈழத்தில் முள்வேலி முகாமுக்குள் முடங்கிக் கிடக்கும் மூன்று லட்சம் தமிழர்கள் காப்பாற் றப்பட வேண்டும்; வாழ் வுரிமை மீட்கப்பட வேண் டும் என்பதை வலியு றுத்தி வரும் செப்டம்பர் 2-ஆம் தேதி திராவிடர் கழகத்தின் சார்பில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலை யத்தில் ரயில் மறியல் போராட்டம் நடை பெறும். திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

செய்தியாளர்களிடம் தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் அவர்கள் நேற்று கீழ்க்கண்டவாறு கூறியுள்ளார்:

நாங்கள் இந்திய அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டு வருகிறோம். இந்திய அரசு அதிலே இன்னும் அதிகமாகக் கவனம் செலுத்த வேண்டும். இப்போது செலுத்தப்படுகிற கவனம் போதுமானதாக இல்லை என்று அதாவது இலங்கையிலே முள்வேலிக்கு இடையிலே சிக்கி, மழை தண்ணீரில் நனைந்து கொண்டிருக்கின்ற அப்பாவி தமிழ் மக்களுக்குப் போதுமானதாக இல்லை என்பதையும் இன்னும் போதுமான அளவிற்கு அரசு நடவடிக்கை தேவை என்பதையும் தெரிவித்து வருகிறார்கள். அதை நானும் மத்தியிலே உள்ள பிரதமர் மற்றும் வெளி உறவுத் துறை அமைச்சர் போன்றவர்களுக்கு உடனுக்கு உடன் தெரிவித்து வருகின்றேன். நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழகத்தின் சார்பாக மத்தியிலே அமைச்சர்களாக இருப்பவர்கள் வாயிலாகவும் வலியுறுத்தி தெரிவித்து வருகிறேன். உடன் நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் வாக்குறுதி அளித்திருக்கிறார். அந்த வாக்குறுதியை விரைவிலே நிறைவேற்றி இலங்கையிலே இன்னமும் அவதிப்படுகின்ற தமிழர்கள் நிம்மதியாக வாழ்வதற்கு நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறேன்.

மரண வேதனையில் தமிழர்கள்

ஒரு முதல் அமைச்சரே இவ்வாறு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ள கருத்து என்பதுமிக முக்கியமானதாகும். முள்வேலிக்குள் மூன்று லட்சம் மக்கள் ஒவ்வொரு நொடியும் மரண வேதனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்; அடிப்படை வசதிகள் புறக்கணிக்கப்படுகின்றன என்று செய்திகள் வந்த வண்ணமாகவே உள்ளன.
தமிழ்நாட்டில் உள்ள பார்ப்பன ஏடுகள்தான் உண்மைக்கு மாறான செய்திகளை வெளியிட்டு தங்களின் பாரம்பரியமான தமிழின வெறுப்பு உணர்வை வெளிப்படுத்திக் கொண்டுள்ளன.

இலங்கைத் தலைமை நீதிபதியின் ஒப்புதல்

இலங்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சரத் என் சில்வா முள்வேலி முகாம்களைப் பார்வையிட்டு ரத்தக் கண்ணீர் வடித்தார்.

நமது நாட்டின் சட்டத்தில் மூலம் தமிழர்கள் நீதியை எதிர்பார்க்க முடி யாது. தமிழர்களின் துய ரங்கள் நீதிமன்றத்தின் முன் கொண்டு வரப்பட வேயில்லை. இலங்கையின் சிறுபான்மையினர் பெரும்பான்மையினர் என்று இரண்டு இனம் இல்லை; ஒரே இனம் தான் என்று நாம் சொல்லிக் கொண்டிருப்பதெல்லாம் பச்சைப் பொய்கள். இதனையெல்லாம் நான் பகிரங்கரமாக வெளிப்படுத்துகிறேன். இந்நிலை நீடித்தால் விடுதலைப் புலிகளின் போர் மீண்டும் வெடிக்கலாம். இப்படிச் சொல்வதன் மூலம் இலங்கை அதிகாரி களால் நான் தண்டிக்கப் படலாம், கவலை யில்லை என்று இலங்கையின் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியே கூறிவிட்ட பிறகு அங்கு நிலவும் கொடூரம் எத்தகையது என்பதை எளிதில் அறிந்து கொள்ளலாம்.

பிரிட்டன் தொலைக்காட்சி அம்பலப்படுத்தி விட்டது

கடைசி ஒரு வாரத்தில் எத்தனை இலட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள் என்கிற தகவல் எல்லாம் உலகையே உலுக்கிவிட்டது. அண்மையில் பிரிட்டனைச் சேர்ந்த சாணல் 4 தொலைக்காட்சி தமிழர்களை எப்படியெல்லாம் சிங்கள இராணுவத்தினர் சித்திரவதை செய்து கொன்றனர் என்ற உண்மையை உலகம் பூராவும் ஒளிபரப்பி விட்டது. இதுகுறித்து போர் விசாரணை நடத்த வேண்டும் என்று நார்வே அமைச்சரும் முன்னாள் சமாதான சிறப்புத் தூதருமான எரிக்-சொல்ஹைம் வலியுறுத்தியிருப்பது குறிப்பிடத் தகுந்ததாகும். இதற்கு மேலும் ராஜபக்சே நாகரிக உலகின் முன் முகத்தைக் காட்டத் எந்த வகையில் தகுதி உடையவராக இருக்க முடியும்?

தமிழினத்தை நிரந்தரமாக அழிக்கும் வேலை

இலங்கையில் இரண்டு இனங்கள் என்ற பேச்சுக்கே இடமில்லாமல் ஒரே ஒரு இனம்தான். அது சிங்கள இனம்தான் என்பதை நிரந்தரமாக நிலை நிறுத்தும் அழிவு வேலையில் அவசர அவசரமாக ஈடுபட்டு வருகிறார்.

போரில் பல லட்சம் தமிழர்களைக் கொன்று குவித்தது போதாது என்று முள் வேலிகளுக்குள் மூன்று லட்சம் தமிழர்களை முடக்கி மிருகங்களைவிட கேவலமாக நடத்துகிறார்.

விலங்குகளைக் கூட வதைக்கக் கூடாது என்று சர்வதேச சட்டங்கள் கூறுகின்றன. ஆனால் இங்கே மனிதர்கள் வதைக்கப்படுகிறார்களே _ உலகில் மனசாட்சி உறங்குகிறதா என்கிற கேள்விதான் நம் முன் எழுந்து நிற்கிறது. அய்ரோப்பிய கூட்டமைப்பு நாடுகளும், அமெரிக்காவும்கூட இலங்கையின் போர்க் குற்றத்தை விசாரிக்க வேண்டும் என்று முன்வந்தபோது இந்தியா நடந்து கொண்ட முறை உலக முழுவதும் உள்ள தமிழர்களையும் மனிதாபிமானிகளையும் ரத்தக் கண்ணீர் வடிக்கச் செய்து விட்டது.

போர் முடிந்து விட்டது என்று அறிவித்த ராஜபக்சே தமிழர்கள் என்ற இன அடையாளம் எந்த விதத்திலும் இருக்கக் கூடாது என்கிற முறையில் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறார்.
ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தைக் குப்பைக் கூடையில் தூக்கி எறிந்து விட்டு, தமிழர்களின் பூர்வீகமான இடங்களில் சிங்களக் குடியேற்றத்தை நடத்திக் கொண்டு இருக்கிறார். தமிழர்கள் மீண்டும் அங்கு குடியேறும் நிலை ஏற்பட்டாலும், தமிழர்கள் தங்களின் பூமியில் சிறுபான்மையினர் என்ற நிலைதான் ஏற்படும். அன்றாடம் சிங்களர்களின் வெறியாட்டத்துக்குப் பலியாகும் ஆடுகளாகத்தான் தமிழர்கள் ஆக்கப்படுவார்கள். தமிழர் பகுதிகளுக்குச் சிங்களப் பெயர்கள் சூட்டப்பட்டு வருகின்றன.

தமிழர்களே, நம் உணர்வைக் காட்ட வேண்டாமா?

இந்த இன சுத்திகரிப்பு தடுக்கப்பட்டாக வேண்டும். அதற்கான குரல் தமிழ் நாட்டிலிருந்து வெடித்துக் கிளம்பியே ஆக வேண்டும். முதல் அமைச்சர் என்ற முறையில் நமது மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்கள் இந்திய பிரதமருக்கு வேண்டுகோள் வைத்துள்ளார். இந்திய அரசின் உதவி போதுமானதாக இல்லை என்று கூறியுள்ளார். அது ஒரு பக்கம் நடக்கட்டும். தமிழ்நாட்டுத் தமிழர்கள் நம் உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டியது நமது முக்கிய கடமையாகும். வீதியில் இறங்கி நாம் நடத்தும் போராட்டம் இந்திய அரசையும் உலகத்தையும் தட்டி எழுப்பக் கூடியதாக இருக்க வேண்டும். இந்தப் பிரச்சனையின்மீது கவனத்தை ஈர்க்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும்.

தமிழக மீனவர்களின் நிலை

தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையினரால் அத்துமீறி தாக்கப்படுவது என்பது சர்வ சாதாரணமாகி விட்ட ஒன்றாகும். கடந்த சில ஆண்டுகளில் மட்டும் முந்நூறுக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அவ்வப்பொழுது இந்திய அரசு வருத்தம் தெரிவித்து விட்டதோடு அதன் கடமை முடிந்து விட்டது.

இந்த நிலையில் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல இந்திய அரசு கடலோர ரோந்து பணிக்காக இலங்கைக் கடற்படைக்கு விக்ரஹா என்ற கப்பலை வழங்கியுள்ளது. திரிகோண-மலையில் இந்தக் கப்பலை கோத்தபயா ராஜபக்சே தொடங்கி வைத்து இந்திய அரசை வானாளாவப் புகழ்ந்து தள்ளியுள்ளார். இது மிகவும் வன்மையகக் கண்டிக்கத்தக்க நடவடிக்கை-யாகும். இதன் மூலம் இந்தப் பிரச்சினையில் தமிழ்நாட்டுத் தமிழர்களின் வெறுப்புணர்வை மேலும் மேலும் மத்திய அரசு தேடிக் கொண்டு இருக்கிறது. இந்தக் கப்பல் திரும்பப் பெறப்பட வேண்டும்.

இதே செப்டம்பரில்தான்!

கடந்த ஆண்டு இதே செப்டம்பரில் 23_ஆம் தேதி திராவிடர் கழகம் இரயில் மறியல் போராட்டத்தை நடத்தி தமிழர்களின் போராட்ட உணர்வைத் தொடங்கி வைத்தது. அதே போல இந்த செப்டம்பரிலும் இரண்டாம் தேதி (2.9.2009) அதே இரயில் மறியல் போராட்டத்தை நடத்த வேண்டிய அவசியத்திற்கு ஆளாகி இருக்கிறோம்.

இதற்கு மேலும் ஈழத் தமிழர்கள் துன்பத்தை அனுபவிக்கவே முடியாது _ முடியவே முடியாது.
இந்திய அரசு உடனடியாக தலையிட்டு முகாம்களில் முடங்கிக் கிடக்கும் தமிழர்களை உடனடியாகக் காப்பாற்ற வேண்டும். அவர்களின் வாழ்வுரிமை காப்பாற்றப்பட வேண்டும்; இது மிக மிக அவசரம்! அவசியம்!

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் செப்டம்பர் 2_இல் இரயில் மறியல் போராட்டம் நடைபெறும்.

ஒரு கட்சியின் போராட்டமல்ல!

இது ஒரு கட்சியின் போராட்டமோ, அரசியல் போராட்டமோ அல்ல _ ஓர் இனத்தின் வாழ்வுரிமைக்கான அடிப்படைப் போராட்டம். உணர்வுள்ள தமிழர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.

அன்று காலை 10 மணிக்கு சென்னை பெரியார் திடலிலிருந்து எனது தலைமையில் போராட்ட வீரர்கள் புறப்பட்டு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் சென்று ரயில் மறியலில் ஈடுபடுவார்கள்.

தடையை மீறுவோம்!

அனுமதி கிடைக்காது என்று நன்றாகவே தெரியும். ஆனாலும் தடையை மீறிப் போராட்டத்தைத் தொடருவோம் வாரீர்! வாரீர்!! என்று கழகத் தோழர்களையும் இனவுணர்வுகொண்ட தமிழர்களையும் அழைக்கிறோம்!

-----------------------"விடுதலை"30-8-2009

30.8.09

விடுதலை ஏடு சாதித்திருக்கின்ற சாதனை

ஈரோட்டில் துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

விடுதலை ஏடு சாதித்திருக்கின்ற ஒரு சாதனைக்கு ஒரு வரலாற்றுப் பட்டியலையே எடுத்துச் சொல்லலாம் என்று தமிழ்நாட்டின் துணை முதல-மைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.

ஈரோட்டில் 25.8.2009 அன்று நடைபெற்ற விடுதலை பவள விழாவில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

விடுதலை ஏடு சாதித்திருக்கின்ற சாதனை

விடுதலை ஏடு செய்திருக்கக் கூடிய சாதனைகளுக்காக ஒரு பெரிய வரலாற்றைப் பெற்றிருக்கக் கூடிய அந்தப் பின்னணியை அடிப்படையாக வைத்து இன்றைக்கு இந்த சிறப்பு சேர்க்கப்பட்டிருக்கிறது என்று பெருமையோடு எடுத்துச் சொன்னார்கள்.

நான் குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன். இதே தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என்று அழைக்க வேண்டுமென்று முதன் முதலில் எழுதிக்காட்டியது எந்த ஏடு என்று கேட்டால் விடுதலை என்கிற ஏடுதான் என்பதையும் இங்கே பெருமையோடு நான் குறிப்பிட்டுக் காட்ட விரும்புகிறேன்.

தமிழ்நாடு எழுதிய ஏடு விடுதலை

ஆந்திரா தனி மாநி-லமாகப் பிரிந்தபொழுது அந்த நேரத்திலே தமிழ்நாடு என்று அழைக்க வேண்டுமென்று முதன் முதலில் எழுதிக் காட்டிய ஏடுதான் இந்த விடுதலை ஏடு.

அதே போல தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகமாக இருக்கக் கூடிய அந்த கோட்டையிலே பொறிக்கப்பட்டிருக்கக் கூடிய ஒரு வாசகம் நம்முடைய தமிழ்நாட்டின் சின்னத்தைப் பதித்து அதிலே எழுதப்பட்டிருக்கக் கூடிய வாசகம் சத்தியமேவ ஜெயதே என்ற வடமொழிச் சொல்தான் பொறிக்கப்பட்டிருக்கும்.

வாய்மையே வெல்லும்!

அந்தச் சொல்லை மாற்றி வாய்மையே வெல்லும் என்று தமிழிலே மொழி பெயர்த்து எழுத வேண்டுமென்று முதலில் எழுதிக்காட்டிய ஏடும் இந்த விடுதலை ஏடுதான் என்பதை நான் பெருமையோடு குறிப்பிட்டுக் காட்ட விரும்புகிறேன். (கைதட்டல்).

எனவே, அதைத்தான் 1967ஆம் ஆண்டு தமிழகத்திலே அறிஞர் அண்ணா அவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு அதை நிறைவேற்றித் தந்தார்கள்.

அதுமட்டுமல்ல, அறிஞர் அண்ணா அவர்கள் விடுதலை ஏட்டினுடைய பொறுப்பாசிரியராக இருந்த பொழுதுதான் அறிஞர் அண்ணா அவர்களுடைய எழுத்து அதிலே கட்டுரைகளாக, தலையங்கங்களாக வந்தநேரத்திலே மக்களிடத்திலே விழிப்புணர்வு ஏற்பட்டது; ஒரு பரபரப்பு ஏற்பட்டது.

படிக்கத் தூண்டக் கூடிய ஒரு சூழ்நிலைக்கு தள்ளப்பட்டது.

அதனால் பத்திரிகையைப் படிப்பவரின் எண்ணிக்கையும் உயர்ந்திருக்கிறது என்பது வரலாறு.

அது மட்டுமல்ல. கல்கத்தா காய்ச்சல் அதிர்ச்சி வைத்தியம், கோடு உயர்ந்தது, குன்றம் தாழ்ந்தது என்ற தலைப்புகளில் எல்லாம் எழுதினார்.

1939ஆம் ஆண்டில் ரிப்பன் மண்டபத்து மகான்கள் என்ற தலைப்பில் அண்ணா அவர்கள் எழுதிய தலையங்கத்தைப் படித்த தந்தை பெரியார் உடனே மாடிப்படி ஏறி அறிஞர் அண்ணாவைத் தட்டிக்கொடுத்து அன்றைக்கே அவர் பாராட்டியிருக்கின்றார் என்பதும் வரலாறு என்பதை இங்கே நான் பதிவு செய்ய விரும்புகிறேன். அதுமட்டுமல்ல, விடுதலை யிலே என்னென்ன தலையங்கங்கள் வெளியிட வேண்டுமென்று அங்கேயிருக்கின்ற பொறுப்பாசிரியர்கள் கேட்டால் தந்தை பெரியார் கேட்பாராம்_இன்று காலை இந்து பத்திரிகை படித்தாயா? அதைப் படி எதிர்ப்பதமாக அதற்குப் பதில் சொல்லக் கூடிய வகையிலே நீங்கள் எழுதுங்கள். அதை எழுதினாலே நம்முடைய தலையங்கம் சிறப்பாக அமைந்துவிடும் என்று எடுத்துச் சொல்லக் கூடிய வகையிலேதான் அன்றைக்கு அந்த விடுதலை ஏடு விளங்கியிருக்கிறது என்பதையும் நான் இங்கே தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டிருக்கின்றேன்.

கலைஞர் தாழ்த்தப்பட்டவரை நீதிபதியாக்கினாரே!

அதுமட்டுமல்ல, தலைவர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்த நேரத்திலே இதே விடுதலை ஏட்டிலே இன்றைக்கு இருக்கக் கூடிய இந்தியாவில் இருக்கக் கூடிய எந்த உயர்நீதிமன்றமாக இருந்தாலும், ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த ஒரு நீதிபதி கூட இல்லையே என்ற ஒரு ஏக்கத்தை வெளியிட்டிருந்தார்கள்.

அதைப்படித்து மனதிலே வைத்திருந்த காரணத்தால்தான் நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் அவர்கள் ஒரு மாவட்ட நீதிபதியாக இருந்த ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த வரதராஜன் அவர்களை உடனடியாக உயர்நீதிமன்றத்தினுடைய நீதிபதியாக அன்றைக்கு அந்தப் பொறுப்பிலே உட்கார வைக்கக் கூடிய வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தார்கள் என்பது வரலாறு.

1929 செங்கற்பட்டு சுயமரியாதை மாநாட்டில்

இங்கே அஞ்சலுறையைப் படித்த பொழுது ஆசிரியர் அவர்கள் குறிப்பாக பெண்களுக்கு தாய்மார்களுக்கு, எப்படிப்பட்ட உரிமைகளைப் பெற்றுத்தர வேண்டும் என்று டாக்டர் பொன்முடி அவர்கள் இங்கே பேசும்பொழுது எடுத்துச் சொன்னார்கள்.

இன்றைக்கு பெண்கள் சுயஉதவிக்குழுக்கள் தொடங்கப்பட்டிருப்பதைப் பற்றி எடுத்துச் சொன்னாரே, இது எங்கிருந்து தோன்றியது என்று கேட்டால், 1929ஆம் ஆண்டு செங்கல்பட்டில் நடைபெற்ற சுயமரியாதை சீர்திருத்த மாநாடு.

அந்த மாநாட்டில் தந்தை பெரியார் அவர்களால் கொண்டு வரப்பட்ட தீர்மானங்கள் எத்தனையோ தீர்மானங்கள் இடம் பெற்றன. அப்படி இடம் பெற்ற தீர்மானங்களில் பெண்களின் முன்னேற்றத்திற்கான முக்கியமான தீர்மானங்கள் அதில் இடம் பெற்றிருந்தன. அதிலே இடம் பெற்ற தீர்மானங்களை நிறைவேற்றிக் காட்டியிருக்கக் கூடிய ஆட்சிதான் இன்றைக்குத் தமிழ்நாட்டிலே நடைபெறக் கூடிய கலைஞர் ஆட்சி என்பதையும் நான் பெருமையோடு நினைவுபடுத்த விரும்புகிறேன்.

கலைஞர் தொடங்கிய சுயஉதவிக்குழு

சொத்திலே பெண்களுக்குச் சமஉரிமை. இன்றைக்குப் பெண்கள் சுயஉதவிக்குழு என்கிற ஓர் அமைப்பு தொடங்கப்பட்டிருக்கிறது என்று சொன்னால் தன்னம்பிக்கை பெற்றவர்களாக பெண்கள் வாழ்ந்திட வேண்டும். யாருடைய தயவையும் எதிர்பார்க்காமல் அவரவர்கள் சொந்த காலில் நிற்கக் கூடிய சூழ்நிலையைப் பெற்றிட வேண்டும்.

சுயமரியாதையோடு அவர்கள் வாழ்ந்திட வேண்டும் என்பதற்காகத்தான் 1989ஆம் ஆண்டு முதன்முதலில் தருமபுரி மாவட்டத்திலே தலைவர் கலைஞர் அவர்களால் சுய உதவிக்குழு என்கிற ஓர் அமைப்பு தொடங்கப்-பட்டது.

அப்படித் தொடங்கப்பட்டு, இன்றைக்குப் பறந்து விரிந்து கம்பீரமாக விளங்குவதைப் பெருமையோடு எடுத்துக் கூற விரும்புகிறேன்.

இந்தியாவிலேயே இருக்கின்ற மாநிலங்களை எல்லாம் ஒப்பிட்டு பார்க்கின்ற பொழுது நம்முடைய தமிழ்நாட்டில்தான் சுயஉதவிக்குழு இன்றைக்கு கம்பீரமாக வளர்ந்து வந்திருக்கிறது. அந்தக் காட்சியை நாம் பார்க்கிறோம். ஆக இப்படி பல திட்டங்கள்.

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று ஒரு சட்டத்தை நிறைவேற்றித் தந்திருக்கக் கூடிய ஆட்சி, இந்த ஆட்சி.

நம்முடைய மத்திய அமைச்சர் ஆ.இராசா இங்கே குறிப்பிட்டுச் சொன்னாரே. தந்தை பெரியாருடைய நெஞ்சிலே குத்திய அந்த முள்_ அது இன்றைக்குத் தலைவர் கலைஞர் அவர்களால் எடுக்கப்பட்டு இன்றைக்கு அதை சட்ட-வடிவமாக்கித் தந்திருக்கிறார். அதே போல சுயமரியாதைத் திருமணங்கள் நடைபெற வேண்டும் என்று தந்தை பெரியார் அவர்கள் எடுத்து வைத்த கொள்கையைத்தானே 1967லே அறிஞர் அண்ணா அவர்கள் ஆட்சிக்கு வந்தவுடனே, சட்டமன்றத்திற்குள் முதன் முதலாக நுழைந்து நிறைவேற்றிய தீர்மானம்தான் சீர்திருத்தத் திருமணங்கள் அனைத்தும் சட்டப்படி செல்லுபடியாகும் என்பது.

ஒட்டுமொத்த இந்தியாவிற்கு

இன்றைக்கு நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள், நம்முடைய மாநிலத்திலே மட்டுமல்ல, ஒட்டு மொத்த இந்தியாவிலும் அந்தத் திருமணம் சட்டப்படி செல்லுபடியாகும் என்று இன்றைக்கும் தலைவர் கலைஞர் அவர்கள் குரல்கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

ஆக,இப்படி பல திட்டங்களை பல சாதனைகளை தொடர்ந்து தந்தை பெரியார் கண்ட கனவை, அறிஞர் அண்ணா எண்ணியிருந்த அந்த இலட்சிய உணர்வை, தொடர்ந்து நிறைவேற்றிக்கொண்டிருக்கக் கூடிய தந்தை பெரியாருடைய ஆட்சியாக, அறிஞர் அண்ணா அவர்களு-டைய ஆட்சியாக இன்றைக்குத் தமிழகத்திலே நடைபெற்றுக்கொண்டிருக்கக் கூடிய இந்த ஆட்சிக்கு நீங்கள் என்றைக்கும் துணை நிற்கக் கூடிய வகையிலே உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும் என்றுதான் விடுதலை ஏட்டினுடைய பவள விழா நிகழ்ச்சியிலே உங்களை எல்லாம் நான் அன்போடு கேட்டுக்கொண்டு இந்த சிறப்பான வாய்ப்பினை தந்திருக்கக்கூடிய அனைவருக்கும் இந்த நேரத்திலே என்னுடைய இதயமார்ந்த நன்றியைத் தெரிவித்து இந்த அளவில் விடைபெறுகின்றேன்.

இவ்வாறு துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றினார்.

-------------------"விடுதலை" 29-8-2009

பா.ஜ.க.வின் பரிதாபமும், பார்ப்பனர்களின் பார்வையும்




பாரதிய ஜனதா கட்சியில் இன்று நிலவும் உள்கட்சிச் சண்டையில் பெரும்பாலும் பார்ப்பனர்களின் பார்வை எப்படி இருக்கும் என்பதை திருவாளர் சோ ராமசாமி மூலம் தெரிந்துகொள்ளலாம்.

ஜஸ்வந்த் சிங் எழுதிய நூலில் படேலைப்பற்றி குறை சொல்லப்பட்டுள்ளது என்பதை அந்தக் கட்சியினர் பெரிதுபடுத்துகின்றனர். அதற்குக் காரணம் படேல் இந்துத்துவாவாதிகளுக்குச் சாய்காலாக இருந்து வந்ததுதான். ஜின்னா புகழப்பட்டு இருக்கிறார் என்பதைவிட படேல் குறை சொல்லப்பட்டிருக்கிறார் என்பதுதான் இவர்களைப் பொறுத்தவரை தூக்கலாக இருக்கிறது.

இந்த உண்மையைத் துக்ளக் தலையங்கத்திலும் சோ ஒப்புக்கொண்டும் எழுதியுள்ளார். சர்தார் படேலை பா.ஜ.க. ஒரு முன்னோடியாகக் கருதுகிறது என்பது ஊரறிந்த விஷயம், இதை ஜஸ்வந்த் மட்டும் அறியாதவரா என்ன? இதன்மூலம் எங்களப்பன் குதிருக்குள் இல்லை என்று கூறி தன் அடையாளத்தைக் காட்டிக் கொண்டுள்ளார்.

பார்ப்பனர்களின் எண்ணமெல்லாம் அத்வானியோ, நரேந்திர மோடியோ பா.ஜ.க.வின் தலைமைப் பீடத்துக்கு வரவேண்டும் என்பதுதான்.

ஏனிந்த இருவர்மீது மட்டும் இவர்களுக்குப் பற்று, பாசம்? இவர்கள்தான் ஆர்.எஸ்.எஸின் தீவிரத்தன்மை கொண்டவர்கள் _ இந்துத்துவா என்னும் உலைக் களத்தில் தயாரிக்கப்பட்ட குரூரமான ஆயுதங்கள்.


பா.ஜ.க.வின் ஆட்சிமன்றக் குழுவிலும், தேர்தல் குழுவிலும் நரேந்திர மோடிக்கு இடம் இல்லை என்ற நிலையில், இதனைக் கண்டித்து எழுதியவர்தான் இந்த சோ (துக்ளக், 14.2.2007, தலையங்கம்).

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் என்ற ஒன்றைக் கற்பித்து சிறுபான்மை மக்களான 2000 முஸ்லிம்களைக் குரூரமான முறையில் கொன்று குவிப்பதற்கும், அவர் களின் வீடுகளையும், வணிக நிறுவனங்களையும் எரியூட்டி சாம்பல் ஆக்கியதற்கும் பின்னணியில் இருந்தது நரேந்திர மோடியின் தலைமையிலான ஆட்சியே! சகல அதிகாரங்களையும், சக்திகளையும் பயன்படுத்தி இந்தப் படுகொலைகளும், திட்டமிட்ட நாச வேலைகளும் நடந்தன.

குற்றவாளிகள்மீது நடவடிக்கை எடுக்காத காரணத்தால் மீண்டும் பல வகையில் புலன் விசா ரணை நடத்தி வழக்குகளை நடத்தவேண்டும் என்று உச்சநீதிமன்றமே ஆணையிட்டுள்ளது என்றால், நிலைமையைப் புரிந்துகொள்ளலாமே!

இவ்வளவுக் குரூரமான ஒரு ஆசாமி பதவி விலக வேண்டும் என்று பிரதமராக இருந்த வாஜ்பேயியே விரும்பிய நிலையில், அதற்கு முட்டுக்கட்டை போட்டவர் அத்வானிதான் என்ற உண்மைகளும் வெளியில் வந்துவிட்டன.

அத்வானியோ, மோடியோ தான் தலைமைப் பொறுப்புக்கு வரவேண்டும் என்று பார்ப்பன சக்திகள் விரும்பியதற்குக் காரணமே ஹிட்லர் பாணியில் சிறுபான்மை மக்களை முற்றிலுமாக அழிக்கக் கூடிய மனநோயாளிகள் இவர்கள்தான் என்று உறுதியாக அடையாளம் கண்டதுதான் - நம்பியதுதான்.

அத்வானி தலைமையில் தானே பா.ஜ.க. தோற்றது? மோடி பிரச்சாரம் செய்தும்தானே தோற்றது? என்ற கேள்வி எழலாம். உண்மைதான். அவ்விருவரின் முயற்சிகள் இல்லையென்றால், இந்தளவுகூட வெற்றி கிட்டியிருக்காது. தோல்வி இன்னமும் கடுமையாக இருந்திருக்கும் என்று சப்பைக் கட்டு கட்டும் (துக்ளக் தலையங்கம், 2.9.2009) சாமர்த்தியத்தை ரசிக்கவேண்டும்.

கொலைக் குற்றவாளியாக நிறுத்தப்பட்ட ஒருவனின் வழக்குரைஞர் _ என் கட்சிக்காரர் அந்த இடத்தில் இருந்ததால்தான் குறைந்த அளவு கொலைகள் விழுந்தன. வேறு யாராவது இருந்திருந்தால் அன்றைய சூழலில் மேலும் பல கொலைகள் விழுந்திருக்கும்; அதனால் என் கட்சிக்காரரை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரினால் எப்படியிருக்கும்? இந்தப் பாணியில் தான் இந்த ஞாயிற்றுக்கிழமை வக்கீலான திருவாளர் சோ வக்காலத்துப் போட்டு எழுதுகிறார்.

என்னதான் சாமர்த்தியத்தைக் காட்டினாலும், எடுத்துக்கொண்ட வழக்கின் பலகீனம் அவரைக் குப்புறத் தள்ளிவிட்டது; பிள்ளை பிழைத்தபாடில்லை; விளக்கெண்ணெய்க்குக் கேடாகத்தான் முடிந்துள்ளது.

கட்சியின் சகலப் பொறுப்புகளிலிருந்து விலகு வதாகவும், திட்டமிட்டிருந்த ரத ஊர்வலத்தையும் கைவிட்டதாகவும் அத்வானி கூறும் நிலை ஏற்பட்டுவிட்டது.

லஸ்கர் தீவிரவாதிகள் 160 பயணிகளுடன் விமானத்தைக் கடத்திய நிகழ்வில், தீவிரவாதிகளை விடுதலை செய்ததும், அவர்களைப் பத்திரமாக காந்தகாரில் கொண்டு விட்டதும் தமக்குத் தெரியாது என்று உள்துறை அமைச்சராக இருந்த ஒருவர் (அத்வானி) எழுதுகிறார் என்றால், எப்படிப்பட்ட நாணயக்காரராக இருக்கவேண்டும். இத்தகைய வர்கள்தான் சோ போன்ற பார்ப்பனர்களின் கண்ணில் பிரமாதமான மனிதர்கள், வெட்கக்கேடு!


-------------------"விடுதலை" தலையங்கம் 29-8-2009

பெரியாரின் போர்க்கருவி - விடுதலை


தந்தை பெரியாரின் போர்க்
கருவியாக விளங்கிய ஏடு - விடுதலை

ஈரோட்டில் துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு

தந்தை பெரியார் அவர்-களுடைய போர்க்கருவியாக விளங்கிய ஏடுதான் விடுதலை நாளிதழ் என்று தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பாராட்டி விளக்கவுரையாற்றினார்.

ஈரோட்டில் 25.8.2009 அன்று நடைபெற்ற விடுதலை பவள விழாவில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:

விடுதலை பவள விழா

விடுதலை பவள விழாவை ஒட்டி மத்திய அரசின் அஞ்சல்துறை சார்பிலே சிறப்பு அஞ்சல் உறை வெளியிடப்பட்டு, அதனுடைய தொடர்ச்சியாக நடைபெற்றுக்கொண்டிருக்கக் கூடிய விடுதலை பவள விழா நிகழ்ச்சியில் நானும் உங்களோடு பங்கேற்று சில கருத்துகளை, என்னுடைய உணர்வுகளை உங்களிடத்திலே வெளிப்படுத்துவதிலே நான் பெருமைப்படுகிறேன். மகிழ்ச்சிடைகிறேன்.

இந்த மகிழ்ச்சியை இந்தப் பெருமையை எனக்கு உருவாக்கித் தந்திருக்கக் கூடிய இந்த விழாவை நடத்திக் கொண்டிருக்கக் கூடிய விழா குழுவினருக்கு, குறிப்பாக திராவிடர் கழகத்தினுடைய நிர்வாகிகளுக்கு _ அதையும் தாண்டி பெருமையோடு குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்று சொன்னால் நம்முடைய தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் பெருந்தகை அவர்களுக்கு நான் இந்த நேரத்திலே நன்றியைக் காணிக்கையாக்க விரும்புகின்றேன்.

பெரியாரின் போர்க்கருவி விடுதலை

தொண்டு செய்து பழுத்த பழம்

தூயதாடி மார்பில் விழும்

மண்டைச் சுரப்பை உலகு தொழும்

மனக்குகையில் சிறுத்தை எழும்

அவர்தாம் பெரியார்

என்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களால் பாடப்பெற்று அவருடைய சிறப்பான பாராட்டுதல்களைப் பெற்றிருக்கக் கூடிய ஈரோட்டுச் சிங்கம், பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களுடைய போர்க்கருவியாக விளங்கிய ஏடுதான் விடுதலை என்பதை யாரும் மறுத்திட முடியாது.

அப்படிப்பட்ட விடுதலை ஏடு இன்றைக்குப் பவள விழா காணக் கூடிய வகையில் அதை ஒட்டி பவளவிழா அஞ்சல் உறை வெளியிடப்பட்டு அப்படிப்பட்ட அந்த சிறப்பான நிகழ்ச்சியிலே இன்றைக்கு உங்களோடு பங்கேற்கக் கூடிய வாய்ப்பை நான் பெற்றி-ருக்கின்றேன்.

விடுதலை ஏடு தந்தை பெரியாருடைய செல்லப் பிள்ளையாக விடுதலை ஏடு, தந்தை பெரியார் அவர்களுடைய கைத்தடியாக விடுதலை ஏடு, தந்தை பெரியார் அவர்களுடைய போர்வாளாக, விளங்கியிருக்கிறது என்பதை எண்ணிப்பார்க்கின்ற பொழுது நாம் உள்ளபடியே பெருமைப்படுகிறோம்.

ஈரோட்டு குருகுலத்திலே பயின்றவர் கலைஞர்

தந்தை பெரியார் அவர்களையும், விடுதலை ஏட்டினையும் யாரும் பிரித்துப் பார்க்க முடியாது.

தந்தை பெரியாருடைய வாழ்விலே பிணைந்து, இணைந்த ஒரு மிகப்பெரிய வரலாற்றைப் பெற்றிருக்கக் கூடிய ஏடுதான் விடுதலை ஏடாக அமைந்திருக்கிறது.

பேரறிஞர் பெருந்தகை அறிஞர் அண்ணா அவர்கள், தந்தை பெரியார் அவர்களுடைய தளபதியாக இருந்தவர். அதே போல் தலைவர் கலைஞர் அவர்கள், தந்தை பெரியாருடைய பல்கலைக் கழகத்தில் குறிப்பாக ஈரோட்டு குருகுலத்திலேதான் பயின்றவர் என்பதை அவரே பெருமையோடு குறிப்பிட்டுக் காட்டியிருக்கின்றார்கள்.

திராவிட இயக்கத்தால் பல இதழ்கள் வளர்ந்திருக்கின்றன. அதே போல பல்வேறு இதழ்களால் திராவிட இயக்கங்களும் வளர்ந்து வந்திருக்கிறது என்பதை நாம் ஒப்புக்கொண்டாக வேண்டும்.

அந்தக் காலத்தில் இருந்த பத்திரிகைகள்

தென்னிந்திய நல உரிமைச்சங்கம் தொடங்கப்பட்ட காலத்தில் அன்றைக்கு இருந்த பத்திரிகைகள்.

திராவிடன் என்கிற ஒரு தமிழ் ஏடு; அதே போல ஆந்திர பிரகாசினி என்கிற தெலுங்கு ஏடு ஜஸ்டிஸ் என்கிற ஆங்கில ஏடு, இந்த மூன்று பத்திரிகைகள் அன்றைக்கு இருந்திருக்கின்றன.

அதிலே குறிப்பாக திராவிடன் ஏட்டைப் பொறுத்த வரையிலே 1916 முதல் 1931ஆம் ஆண்டு வரையிலே ஏறக்குறைய 16 ஆண்டுகாலம் அன்றைக்கு மக்களிடத்திலே ஓர் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்திய ஏடாக அந்த ஏடு விளங்கியிருக்கிறது.

ஜஸ்டிஸ் ஏடு-ஜஸ்டிஸ் கட்சி

ஜஸ்டிஸ் என்கிற அந்த ஏட்டைப் பொறுத்த வரையில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்று சொன்னால், அந்த ஆங்கில ஏடு அன்றைக்கு மக்களிடத்திலே ஒரு சிறப்புக்குரிய செல்வாக்கைப் பெற்று ஒரு மிகப்பெரிய வகையிலே தங்களுடைய கடமையை நிறைவேற்றிக்கொண்டிருந்தது.

ஆக, மக்களிடத்திலே ஒரு சிறப்பான செல்வாக்கைப் பெற்ற காரணத்தால் அந்த ஏட்டினுடைய பெயரையே கட்சிக்குப் பெயராக வைத்து ஜஸ்டிஸ் கட்சி என்றும், நீதிக்கட்சி என்றும் அன்றைக்கு எல்லோராலும் அழைக்கப்பட்டது.

இவைகள் எல்லாம் வரலாற்றிலே இடம் பெற்றிருக்கக் கூடிய செய்திகளாகும்.

நான் இன்னும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்று சொன்னால் காங்கிரஸ் கட்சியினுடைய தலைவர்களாக தமிழ்நாட்டிலே இருந்தவர்களில் தந்தை பெரியார் அவர்களும் ஒருவராக இருந்திருக்கிறார்.

தந்தை பெரியார் அவர்கள் காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறி 1925இலே சுயமரியாதை இயக்கத்தைத் கண்டார்கள்.

ஏடுகள் நிலைத்து நிற்கமுடியாக்காலம்

சுயமரியாதை இயக்கத்தை கண்டதற்குப் பின்னால் அந்த இயக்கத்தினுடைய கொள்கைகளை மக்களிடத்திலே பரப்புவதற்காக குடிஅரசு என்கிற வார இதழை தந்தை பெரியார் அவர்கள் தொடங்கினார்கள்.

அந்தக் காலத்திலே பிராமணர்களுக்கு எதிராக எழுதக் கூடிய எந்த ஏடாக இருந்தாலும் அந்த ஏடுகளைத் தொடர்ந்து நடத்திட முடியவில்லை. எவ்வளவு வேகமாக நம்முடைய ஏடுகள் அன்றைக்குத் தொடங்கப்பட்டிருந்தாலும், அந்த ஏடுகள் நிலைத்து நிற்கக் கூடிய நிலையை நாம் பெற்றிருக்கவில்லை.

நீதிக்கட்சித் தலைவர்கள் ஒன்று சேர்ந்து

அதனால்தான் அன்றைக்கு விடுதலை ஏட்டைத் தொடங்கியிருக்கின்றார்கள். அப்படித் தொடங்-கப்பட்ட விடுதலை ஏடு இன்றைக்கு கம்பீரமாக 74 ஆண்டுகளை முடித்து 75ஆம் ஆண்டிலே அடி எடுத்து வைத்து இன்றைக்குப் பவள விழா காணக் கூடிய ஒரு மிகப்பெரிய சிறப்பை இன்றைக்கு இந்த விடுதலை ஏடு பெற்றிருக்கிறது.

1935லே நீதிக்கட்சி-யினுடைய தலைவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து கட்சிக்கென்று ஒரு அதிகார பூர்வ ஏடாக விடுதலை ஏட்டை தந்தை பெரியாரிடத்திலே அன்றைக்கு ஒப்படைத்தார்கள்.

நீதிக்கட்சியாக இருந்தாலும் சரி, சுயமரியாதை இயக்கமாக இருந்தாலும் சரி, திராவிடர் கழகமாக இருந்தாலும் சரி, அதனுடைய கொள்கைகளை எல்லாம் பரப்பக்கூடிய ஒரு நாளிதழாக விடுதலை விளங்கி 75 ஆண்டு காலத்தை தொட்டு இன்றைக்குப் பவள விழா காணக்கூடிய வகையிலே கம்பீரமாக தன்னுடைய நடையை இன்றைக்கு மக்களிடத்திலே போட்டுக் கொண்டிருக்கிறது.

திராவிட இதழ்களின் பொற்காலம்

நான் இன்னொன்-றையும் குறிப்பிட்டுக் காட்ட விரும்புகின்றேன். 1942ஆம் ஆண்டு அறிஞர் அண்ணா அவர்கள் திராவிட நாடு இதழை அன்றைக்கு தொடங்கினார்கள்.

திராவிட இயக்கத்தின் சார்பிலே அந்த காலக்கட்டத்தில் ஏராளமான ஏடுகள் அப்பொழுது தொடங்கப்பட்டிருக்கின்றன. 1942 முதல் 1962வரை திராவிட இதழ்களுடைய பொற்காலம் என்று சொன்னால் நிச்சயம் அது மிகையாகாது என்பதை நான் பெருமையோடு குறிப்பிட விரும்புகின்றேன்.

1942க்குப் பிறகு திராவிட இயக்கத்தினுடைய முன்னணித் தலைவர்கள் அன்றைக்கு இதழ்களினுடைய ஆசிரியராக இருந்திருக்கின்றார்கள்.

விடுதலை பவள விழா கொண்டாடுகின்ற இந்த நேரத்தில் அதைப் பற்றி நான் நினைவுகூர்வது என்னுடைய கடமையாகக் கருதுகின்றேன்.

குடிஅரசு, பகுத்தறிவு, புரட்சி, ரிவோல்ட், விடுதலை போன்ற பத்திரிகைகளுக்கு அன்றைக்குத் தந்தை பெரியார் அவர்கள் ஆசிரியராக இருந்திருக்கின்றார்கள்.

அண்ணா-கலைஞர் வழி நடத்தினர்

அதே போல நம்நாடு, திராவிட நாடு, காஞ்சி போன்ற பத்திரிகைகளுக்கு அறிஞர் அண்ணா அவர்கள் ஆசிரியர் பொறுப்பை ஏற்று அதை வழிநடத்தியிருக்கின்றார்கள்.

அதே போல மறவன் மடல், முரசொலி, முத்தாரம், மாணவர் நேசன், போன்ற பத்திரிகைகளைத் தொடங்கி அதற்கு ஆசிரியராக இருந்து வழி நடத்தியவர் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள்.

புதுவாழ்வு என்கிற பத்திரிகைக்கு கலைஞர் அவர்கள் ஆசிரியராக இருந்து அந்த பத்திரிகையை பேராசிரியர் அவர்கள் வழி நடத்தியிருக்கின்றார்கள்.

அதே போல மன்றம் என்ற ஒரு பத்திரிகையை நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் அன்றைக்கு ஆசிரியர் பொறுப்பை ஏற்று அதை அவர்கள் வழி நடத்திக்காட்டிருக்கின்றார்கள்.

ஏன், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் குயில் என்கிற பத்திரிகையையும், அதே போல கவிஞர் கண்ணதாசன் அவர்கள் தென்றல் என்ற அந்த பத்திரிகையையும் கே.ஏ.மதியழகன், தென்னகம் என்ற அந்த பத்திரிகையையும் அன்றைக்கு ஆசிரியராகப் பொறுப்பில் இருந்து அவைகளை எல்லாம் வழி நடத்திக் காட்டியிருக்கின்றார்கள்.

விடுதலையின் ஆசிரியர்கள்

நான் இன்னொரு செய்தியைக் குறிப்பிட்டுக் காட்ட விரும்புகின்றேன். இன்றைக்கு பவள விழா காணக்கூடிய விடுதலை இதழைப் பொறுத்த வரையிலே இதனுடைய அதிகாரபூர்வ ஆசிரியர்களாக இருந்திருக்கக் கூடியவர்களின் பட்டியலைப் பார்த்தோம் என்று சொன்னால், டி.ஏ.வி.நாதன், பண்டித எஸ்.முத்துச்சாமி, பொன்னம்பலனார், கரிவரதசாமி அவர்கள் , கே.ஏ.மணி _ அன்னை மணியம்மையாருடைய இயற்பெயர் அந்த பெயர். அதற்குப் பிறகு திருமணத்திற்குப் பின் ஈ.வெ.ரா மணியம்மையார் அவர்கள்; அதற்குப் பிறகு இன்றைக்கு விடுதலைக்கு 75ஆம் ஆண்டு பவள விழாவை எழுச்சியோடு கொண்டாடுகின்றாரே நம்முடைய மதிப்பிற்குரிய ஆசிரியர்கள் அவர்கள்.

அன்றைக்கு விடுதலை இதழின் விலை...

அதே விடுதலையினுடைய பொறுப்பாசிரியராக இருந்து இந்த பத்திரிகையை நடத்தியிருக்கக் கூடியவர்கள். சி.என்.அண்ணாதுரை என்கிற நம்முடைய அறிஞர் அண்ணா அவர்கள், சா.குருசாமி, சாமி.சிதம்பரனார், ஏன், பொறுப்பாசிரியராக நம்முடைய ஆசிரியர் அவர்கள் கூட இருந்திருக்கின்றார்.

1935ஆம் ஆண்டு விடுதலை இதழ் வாரத்திற்கு இருமுறையாக வந்து கொண்டிருந்தது.

விடுதலையின் விலை எவ்வளவு என்று கேட்டால் அரையணா. அதற்குப் பிறகு 1937ஆம் ஆண்டு நாளேடாக வரத்தொடங்கியதற்குப் பிறகு காலணா.

ஒரு ரூபாயிலே 64 இல் ஒரு பங்குதான் காலணா என்பதாகும். ஆக அந்த நிலையிலே வந்து கொண்டிருந்த ஒரு பத்திரிகைதான் ஒரு ஏடுதான் இன்றைக்குப் பவள விழாவைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. இங்கே குறிப்பிட்டுச் சொன்னார்கள். எவ்வளவுதான் நட்டம் வந்தாலும், அதைப்பற்றிச் கிஞ்சித்தும் கவலைப்படாமல் லாப நோக்கத்தை கருதாமல் கொள்கையிலே எந்த லாபம் பெற்றிருக்கிறோம்? லட்சியத்தில் எந்த லாபம் பெற்றிருக்கிறோம் என்ற உணர்வோடு நடத்தக் கூடிய ஒரு பத்திரிகையாக இன்றைக்கு விடுதலை ஏடு விளங்கியிருக்கிறது என்று சொன்னால், அந்த ஏட்டினுடைய பவளவிழாவிலே இன்றைக்கு நாமெல்லாம் பெருமையோடு பங்கேற்றிருக்கின்றோம்.

அஞ்சல் உறை பற்றி ஆசிரியர்

இங்கே அஞ்சல் உறையைப் பற்றி நம்முடைய ஆசிரியர் அவர்கள் பேசுகிற பொழுது குறிப்பிட்டுச் சுருக்கமாகச் சொன்னார்.

இன்றைக்கு வெளியிடப்பட்டிருக்கின்ற அந்த அஞ்சலுறையில் வெளியிடப்பட்டிருக்கின்ற அந்த வாசகங்களைக் கூட அவர் படித்துக் காட்டினார்.

-------------------தொடரும் ....."விடுதலை" 28-8-2009

29.8.09

ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர்களின் அமைப்பு

மரண ஓலை எழுதப்படட்டும்!

பாரதீய ஜனதா கட்சி அழிவின் விளிம்பில் தொங்கிக் கொண்டிருக்கிறது. அதற்காக வெகுமக்கள் யாரும் இரங்கப் போவதில்லை. காரணம் அது ஒரு பிற்போக்குத்தனமான கட்சி; மக்கள் நலன் என்கிற பரந்த பார்வை அதற்குக் கிஞ்சிற்றும் கிடையாது.

இந்து மதக் கொள்கைகளையும், குறிப்பாக அதன் வருணாசிரமக் கொள்கைகளையும் உணர்ந்தோர் அதனை எந்த வகையில் ஏற்றுக் கொள்வார்கள்?

பிறப்பின் அடிப்படையில் பேதம் கற்பிக்கும் ஒரு மதத்தை சமத்துவம் விரும்புவோர், மனித உரிமைகளை நேசிப்போர் எப்படி ஏற்றுக்கொள்வார்கள்?

21 ஆம் நூற்றாண்டிலும் இதுபோன்ற கட்சிகள் இயங்குவது என்பதே பெரும் தலைக்குனிவாகும்.

பிரபல பத்திரிகையாளரும், இங்கிலாந்துக்கான இந்தியத் தூதராகப் பணியாற்றியவருமான குல்தீப் நய்யார் பா.ஜ.க.பற்றி சொன்ன கருத்துக் கணிப்பு, கருத்தில் கொள்ளத்தக்கதாகும்.

முன்னாள் ஜனசங்கம் மற்றும் பா.ஜ.க.வின் அனைத்துக் கூட்டங்களையும், கருத்தரங்குகளையும், பேச்சுகளையும் கடந்த நாற்பது ஆண்டுகளாகத் தொடர்ந்து நான் கவனித்து வருகிறேன். இந்த இந்துக்களின் கட்சி ஏன் எப்பொழுதுமே தீண்டாமை பற்றி கேள்வியை எழுப்பியதே இல்லை? இந்துக் களிடையே உள்ள ஜாதி நடைமுறை மிகவும் அடக்கு முறை நிறைந்த ஒன்றாகவே உள்ளது. பா.ஜ.க.வை கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ள ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர்களின் அமைப்பு என்பது இதன் காரணங்களில் ஒன்றாக இருக்கலாம். இதனைச் சீர்திருத்த வேண்டும் என்று பா.ஜ.க. நினைத்திருக்கக் கூடும் என்று நான் நினைக்கவே இல்லை. உண்மையைக் கூறுவதானால், அனைத்து மக்களுக்கும் பொருளாதார சமத்துவம் அளிக்கும் எந்த சட்டத்தையும் பா.ஜ.க. விரும்புவதில்லை. உயர்ஜாதி மக்களின் கட்சி அது. தொடக்க முதல் அக்கட்சிக்குப் பிரியமானது என்னவென்றால், சிறுபான்மையினரை குறிப்பாக முஸ்லிம்களை இழிவுபடுத்திக் கொடுமைப் படுத்துவதுதான்.

(டெக்கான் கிரானிக்கிள், 4.2.2008)

கணித்திருப்பவர் பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பாளர் அல்ல. அத்தகைய இயக்கத்தோடு தொடர்பு கொண்டவர்கூட அல்ல. ஒரு மூத்த பத்திரிகையாளர் என்ற முறையில் கடந்த 40 ஆண்டுகாலம் கணித்த முறையில் இப்படியொரு கருத்தை அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார்.

ஜாதி அமைப்பு தேவை_ வருணாசிரமம் நல்லது என்பதுதான் சங் பரிவார்க் கும்பலின் குருநாதரான கோல்வால்கரின் வேத நூலில் மிகவும் வெளிப்படையாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது.

செத்த பசு மாட்டின் தோலை உரித்தனர் அய்ந்து தாழ்த்தப்பட்டவர்கள் என்பதற்காக, அந்த அய்வரையும் படுகொலை செய்த கூட்டம் இது. இதற்குமேல் இதன் தீண்டாமை வெறியை, ஜாதி வெறியை எடை போடுவதற்கு வேறு எந்த எடுத்துக்காட்டு தேவை?

சமூகநீதியை எடுத்துக்கொண்டாலும், அவர்கள் அதற்கு எதிராகவே இருந்து வருகின்றன.

மண்டல் குழுப் பரிந்துரைகளுள் ஒன்றான வேலை வாய்ப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு செய்தார் என்பதற்காகத்தானே. அதுவரை வெளியிலிருந்து ஆதரவு கொடுத்து வந்த பி.ஜே.பி. தன் ஆதரவை விலக்கிக் கொண்டு ஒரு சமூகநீதி ஆட்சியைக் கவிழ்த்து மகிழ்ச்சிக் கூத்தாடியது.

ஒரு பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த உமாபாரதி மத்திய பிரதேச முதலமைச்சராக இருந்தார். அவர்மீது தொடுக்கப்பட்ட ஒரு வழக்குக்காக அவர் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகினார்.

வழக்கில் அவர் குற்றமற்றவர் என்று கூறி விடுதலை செய்யப்பட்டார். நேர்மையான கட்சியாக இருந்தால் பி.ஜே.பி. என்ன செய்திருக்கவேண்டும்? மீண்டும் முதல மைச்சர் பதவியை அவருக்கு அளித்திருக்கவேண்டுமே! செய்யவில்லையே! மாறாக ஆர்.எஸ்.எஸின் தலைவர் கே.எஸ். சுதர்சன் என்ன சொன்னார்? அம்மையாரின் பிறந்த குடியும், பிறப்பு வளர்ப்பும் சரியில்லை என்று கூறினாரே. இதன் பொருள் என்ன? பார்ப்பனரான சுதர்சனின் ஜாதிப் பார்வை இதில் பளிச்சிடவில்லையா? உமாபாரதியேகூட பி.ஜே.பி.யை உயர்ஜாதியின் கட்சி என்று விமர்சித்தது உண்டே.

இத்தகைய ஒரு கட்சி பிளவுபட்டு மேலும் மேலும் பலகீனப்பட்டு அழிவின் விளிம்பிற்குச் செல்லுகிறது என்றால், நேர்மையாக மகிழ்ச்சி அடையவேண்டும்.

இக்கட்சி வளர்ந்தாலோ, ஆட்சிக்கு வந்தாலோ அதனால் மக்களின் அமைதி கெட்டு, ஒவ்வொரு நொடியும், வன்முறையிலும், வெறுப்பிலும், கலகத்திலுமே காலத்தைக் கழிக்கவேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்படும்.

பதவியைப் பிடிக்க முடியவில்லை என்ற காரணத்துக்காக அக்கட்சிக்குள் ஏற்படும் சர்ச்சைகளும் குடுமிபிடிகளும் எதைக் காட்டுகின்றன? நேர்மையான சித்தாந்தமும், வழிகாட்டுதலும் அங்கு இல்லை என்பதுதான் அதற்கான விடையாகும்.

இனவெறியரான அடால்ஃப் ஹிட்லர் தற்கொலைமூலம் தன் முடிவைத் தேடிக்கொண்டார்.

பாசிஸ்ட், நாஜிகளின் வரலாறு அப்படித்தான் இருக்கிறது. பி.ஜே.பி. மட்டும் அதற்கு விதிவிலக்கா என்ன?

-----------------------"விடுதலை"தலையங்கம் 27-8-2009

28.8.09

வீரமணி போட்ட போடு! சிக்கும் சாமியார்கள்!!




ஆன்மிக நகரான திருவண்ணாமலையில் போலி சாமியார்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திராவிடர் கழகம் அதிரடிப் பொதுக்கூட்டத்தை நடத்தியது.

இதில் காரசாரமாக மைக் பிடித்த திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி.

குறி சொல்வது, மந்திர மாயம் பண்ணுவது என ஏமாற்றுத் தொழிலில் இத்தனை நாள் ஆண்கள்தான் அதிகம் இறங்கியிருந்தார்கள். இப்போது அவர்களுக்குப் போட்டியாக இந்த மந்திர மாய ஏமாற்று பிசினஸில் பெண்களும் குதித்திருப்பதோடு, சாராயம் குடித்தும், சுருட்டு குடித்தும் ஆட்டம் போடுகிறார்கள்.

இங்கே கருப்பண்ணசாமியின் பெயரால் சுதா என்கிற பெண்மணி மது அருந்திவிட்டு குறி சொல்வதாக அப்பாவி பக்தர்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார். இத்தகைய போலிச் சாமியார்கள் மீதும் போலி மந்திரவாதிகள் மீதும் காவல்துறை நடவடிக்கை எடுக்காதது ஏன்? 30 நாட்களுக்குள் காவல்துறை தனது நடவடிக்கையை ஆரம்பிக்கா விட்டால், திராவிடர் கழகம் சார்பில் சாலை மறியல் போராட்டத்தை இங்கே நடத்துவோம் என்று கர்ஜனை செய்தார்.


இவர் குரலில் இருந்த தீவிரத்தின் சூடு மாவட்ட காவல்துறையைத் திகைக்க வைத்தது. இதன் விளைவு டி.எஸ்.பி. வைத்தியலிங்கம் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ், கங்கைராஜ் உள்ளிட்டோர் அடங்கிய காவல்துறை தனிப்படை 22 ஆம் தேதி மாலை, திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் இருக்கும் கருப்பண்ணசாமி ஆசிரமத்தை முற்றுகையிட்டு குபீரென உள்ளே நுழைந்தது. அப்போது பெண் சாமியாரான சுதா ஒரு ஃபுல் மது பாட்டிலை கடக் கடக் என வாயில் சரித்துக் கொண்டு, பக்தர்களே கவலைப்படாதீங்க. உங்க குற்றம் குறைகளைத் தீர்க்கத்தான் கருப்பணசாமி வந்திருக்கேன். உங்க பிரச்சினைகளைச் சொல்லுங்க என ஓங்காரக் கூச்சலோடு சொன்னதோடு, ஏய். சைடிஸ் சிக்கன்-எங்கடா? என்றார்.

அருகே பயபக்தியோடு நின்றுகொண்டிருந்த சுதாவின் அப்பா, சாமி. இதோ என சில்வர் வாளியை அவர் முன் நீட்ட அதிலிருந்து ஒரு சிக்கன் பீஸை எடுத்து வாயில் போட்டுக்கொண்டு, பொங்கிப் பொங்கி அர்த்தமில்லாமல் சிரித்தார் சுதா.

அப்போது டி.எஸ்.பி. டீம் அவர் முன் போய் நிற்க, சட்டென சுதாவின் உடம்பில் இருந்த கருப்பணசாமி காக்கிச் சட்டைகளைக் கண்டு எஸ்கேப் ஆக, சர்வமும் ஒடுங்கிப்போய் பீதியோடு நின்றார் சுதா.

குறிகேட்க வந்தவர்களை வெளியே அனுப்பி விட்டு, ஏம்மா உன் மேல் புகார் வந்திருக்கே. மங்களம் அருகே உள்ள கலத்தம்பாடி அண்ணாமலைங்கிறவர் நீ ஏமாத்தினதா புகார் கொடுத்திருக்கார் என இன்ஸ்பெக்டர் ரமேஷ் சொல்ல,

அருகிலிருந்த சுதாவின் அப்பா துரை, அய்யா, மூணு நாளைக்கு முன்னாடியே கருப்பண்ணசாமி போலீஸ் வந்து விசாரிக்கும்னு சொல்லுச்சு, அது நடந்திருச்சி என்று அலற,

அப்பனும் மகளும் ஜெயில்ல களி திங்கப் போறதையும் உங்க கருப்பண்ணசாமி சொல்லியிருப்பாரே என மற்றொரு இன்ஸ்பெக்டரான கங்கைராஜ் சொல்ல,

துரையோ, அய்யய்யோ, அப்படியெல்லாம் எங்களை ஜெயில்ல போட்றாதீங்க என வெடவெடத்தார். அருகே சுதா அடித்த மப்பெல்லாம் இறங்கிப் போன நிலையில் முகம் வெளிறி நின்றார்.

சரி. சரி. வாங்க என சுதாவையும் அவரது அப்பா துரையையும் வாகனத்தில் ஏற்றிக் கொண்டு போலீஸ் ஸ்டேஷனுக்குக் கொண்டுவந்தனர். அங்கு சுதா, என் உடம்பில் கருப்பண்ணசாமி இறங்கினா, நான் என்ன பண்றேன்னே எனக்குத் தெரியாது. ஒரு நாளைக்கு 5 ஃபுல் மது. 20 கட்டு சுருட்டுன்னு உள்ளே போகும். நானா எதுவும் பண்ணலை என திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார்.

புகார் கொடுத்த விவசாயி கலத்தம்பாடி அண்ணாமலை, எங்க தோட்டத்தில் தண்ணி வறண்டு போச்சு, குறி கேட்க வந்தேன். 5 ஆயிரம் ரூபாயை வாங்கிக்கிட்டு, ஈசான மூலையில் எங்க கிணறு தோண்டினாலும் தண்ணி பொங்கி வரும்னு சொன்னாங்க. அங்க பல இடங்களில் தோண்டியும் தண்ணிவரலை. அதனால், கொடுத்த பணத்தைக் கேட்டேன். சாமியார் சுதா கொடுத்த பணத்தைத் தர முடியாதுன்னு சொல்ல, அவங்க அப்பா துரை அரிவாளை காட்டி மிரட்டினார். அதான் புகார் கொடுத்தேன் என்றார் எரிச்சலான குரலில்.

சுதா மீதும் அவர் அப்பா துரை மீதும் மோசடி மற்றும் மிரட்டல் புகாரை பதிவு செய்த காக்கிகள், இருவரையும் வேலூர் சிறைக்கு அனுப்பி வைத்தனர். கைதான சுதாவுக்கு ராஜா என்ற கணவரும் அய்ந்து, ஏழு படிக்கும் இரண்டு மகன்களும் உள்ளனர்.

இந்த துரையின் அண்ணன் கனகராஜ், அதிமுக நகர செயலாளரா இருக்கார். இவரோட ஆளுங்கதான் கருப்பண்ணசாமி ஆசிரமம் இருந்த இடத்தில் ஏற்கெனவே ஓம்சக்தி ஆஸ்ரமம் என்ற பெயரில் தியான சாலை நடத்தி வந்தவங்களை விரட்டிவிட்டு, ஆசிரமத்தை துரையிடம் ஒப்படைச்சாங்க. துரை, தன் மகள் சுதாவுக்கு மதுப் பழக்கத்தைக் கற்றுக் கொடுத்து குறி சொல்ல வச்சி, வருமானம் குவிக்க ஆரம்பிச்சார். சுதா குறி சொல்ல ஆரம்பிச்சி 2 மாசம்தான் ஆகுது. அதுக்குள்ள தி.க. வீரமணியால் மாட்டிக்கிச்சி என்றார் சுதாவின் நெருங்கிய உறவினர் ஒருவரே.

இந்து மக்கள் கட்சி பிரமுகர் சிவபாபு, இந்த நடவடிக்கையை நாங்க வரவேற்கிறோம். இது போன்ற போலி சாமியார்களை களை எடுத்தாதான் உண்மையான துறவிகளின் மதிப்பு வெளிப்படும் என்கிறார் உற்சாகமாக.

இந்து முன்னணியைச் சேர்ந்த வழக்கறிஞர் சங்கரோ, திராவிடர் கழகத்தின் நிர்பந்தத்தால் இப்படி ஒரு நடவடிக்கை எடுக்கப்பட்டது சரியல்ல. இந்த சுதா மட்டுமல்ல, கிரிவலப் பாதை முழுக்க நிறைய போலி சாமியார்கள் இருக்காங்க. பலர் கோயில் இடத்தை ஆக்ரமிச்சிருக்காங்க. இவைகளையும் கிரிவலப் பக்தர்களின் நலனுக்காக அரசு கவனிக்கனும் என்கிறார் அழுத்தம் திருத்தமாக.

கிரிவலப் பாதையில் பக்தர்களை கிறுகிறுக்க வைக்கும் டுபாக்கூர் சாமியார்கள் யார், யார் என்பதை அறிய, பவுர்ணமி அல்லாத நாளிலேயே நாம் கிரிவலம் வந்தோம்.

அப்போது, வள்ளலார் பெயரிலான ஆசிரமத்தில் (?) அருள் மணி அடிகளால் என்ற பெயரில் ஒரு வாட்ட சாட்ட நபர் காவி சகிதம் குறி சொல்லிக் கொண்டிருந்தார். ஆத்தா, இந்த பொண்ணுக்கு வரன் நல்லவனான்னு சொல்லு ஆத்தா, சொல்லாட்டி விடமாட்டேன் என நவசக்தி அம்மனை அவர் மிரட்டிக் கொண்டிருக்க அம்மன் சிலை மேலே அடுக்கப்பட்ட பூ ஒன்று காற்றில் உதிர்ந்தது.

ஆஹா, அம்மா பலன் சொல்லிட்டா என எதிரே பவ்யமாய் நின்ற குடும்பத்திடம் தட்சணை வாங்கினார். இவருக்கு ஊர் செங்கம். இவர் மேல் தார்ப்பாய் திருடிய கேஸ் இருக்கு. இவருக்கு மாஜி புதுவை முதல்வர் ரெங்கசாமி, முன்னாள்பிரதமர் தேவேகவுடா, தற்போதைய கர்நாடக முதல்வர் எடியூரப்பா போன்ற பிரபலங்கள் பக்தர்கள். வி.அய்.பி.களை ஏமாத்துற விசித்திர சாமியார் இவர் என்கிறார் நமது லோக்கல் நண்பர்.

அடுத்து துர்வாசர் கோயில் அருகே சடாமுடி, தாடியோடு மை போட்டு குறி சொல்லிக் கொண்டிருந்தார் சடைசாமி. உன் காணாமல் போன பம்பு செட்டை தேடாதே. உன் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சு , போ, போ என ஒரு பக்தரிடம் 500 ரூபாயைக் கறந்து கொண்டிருந்தார்.

ராதா அமமாள் என்பவர் நடத்தும் ஆசிரமத்துக்குள் நம்மை அனுமதிக்க மறுத்தனர். ஆனால் ஃபாரின் ஜோடிகள் மட்டும் உள்ளே சென்றன. உள்ளே ஆட்டம், பாட்டம் என ஒரே சத்தம் கேட்க, உள்ளே கிக்கான சமாச்சாரங்கள் நடக்கும். ஒரு இளைஞனை அந்த அம்மா வசியம் பண்ணி வச்சிருக்கிறதா மதுரை தம்பதிகள் 2006 இல் புகார் கொடுத்தாங்க. வந்த காக்கிகளை கரன்ஸியால் வாயடைச்சிட்டார் அம்மையார் என்று குறிப்புரை தந்தார் ஏரியா பக்தர்.

இவர்களைப் போலவே பஞ்சமுக தீர்த்தம் அருகே அடிக்கடி நள்ளிரவு பூஜை நடத்தும் மணிசாமி, குட்டிச் சாத்தான்களை ஏவுவதாக பீலா விடும் பிச்சைசாமி, வாழ்வின் தடைகளை நீக்குவதாக பூஜை பண்ணும் பரிகார சித்தர், மூலிகை இலைகைளைக் கொடுத்து அருள் சொல்லும் முடிசாமி, செய்வினை செய்வதோடு கந்துவட்டி புகாருக்கு ஆளான வேதவித்து சித்தர், விபூதி பாக்கெட்டுகளை விற்றே இடம் வாங்கி மடம் கட்சிய சிவசித்தர், தான் பிடிக்கும் சுருட்டால் பக்தர்களுக்கு சூடு வைத்து ஆசீர்வாதம்(?) பண்ணும் கொல்லிமலை சித்தர், பேய் பிடித்தவர்களை சாட்டையால் அடித்து விளாசும் மலையாள மாந்த்ரீகர், சின்ன சின்ன கற்சிலைகளைக் கொடுத்து-ஆயிரக்கணக்கில் வசூலிக்கும் நாடி சித்தர். ஓம் உலகநாதன் என கிரிவலப் பாதை முழுக்க சிறுசிறு போலி சாமியார்கள் கடை விரித்திருக்கிறார்கள்.

இப்படிப்பட்டவர்கள் மீதும் நடவடிக்கை எடுத்து பக்தர்களைக் காப்பாற்ற வேண்டியவர்கள் காவல் துறையினர்தான். மாவட்ட எஸ்.பி. பாண்டியனோ, ஆக்ஷன்களை ஆரம்பிச்சிட்டோம். இனி பாருங்க என மீசையை முறுக்கி விட்டபடி சிரிக்கிறார்.

---------------------- நன்றி: நக்கீரன், 29.8.2009

நாராயண குரு மூட நம்பிக்கையின் எதிரி




நாராயணகுரு

இன்று நாராயண குரு பிறந்த நாள் (1854) கேரள மாநிலம் திருவாங்கூரிலிருந்து பத்துகல் தொலைவில் உள்ள செம்பழாண்டி என்னும் ஊரில் பிறந்தவர். பெற்றோர் மாடன் ஆசான், குட்டியம்மா. 18 வயது வரை உள்ளூரிலேயே இருந்தார்.

மதமே கூடாது, கடவுள் இல்லவே இல்லை என்ற கொள்கை உடையவர் அல்லர். கடவுள் நம்பிக்கையோடே அதேநேரத்தில் அதற்குள்ளேயே சில மாற்றங்களைக் கொண்டு வந்த ஒரு சீர்திருத்தக்காரர்.

ஒரே கடவுள், ஒரே மதம் என்ற போக்கைக் கொண்டவர், பிரச்சாரம் செய்தவர்.

ஒன்றே குலம் என்பதன்மூலம் வருண தர்மத்தை முற்றிலும் எதிர்த்தவர். அதன் காரணமாகப் பார்ப்பனர்கள் எதிர்ப்புக்கு ஆளானவர். நான் சொல்லும் சிவன் வேறு; பார்ப்பனர்களின் சிவன் வேறு என்று கூறியவர்.

அவர் இயற்றிய கவிதைகள் வெளிவந்துள்ளன. ஒரே இனத்தினுள் ஆணும், பெண்ணும் இணைந்தால் பிள்ளை பிறப்பதில்லையா? மனித இனத்தில்தான் பார்ப்பானும் பிறக்கிறான். பறையனும் பிறப்பதும் அதே மனித இனத்தில்தான். அப்படியானால் மனிதர்களிடையே ஜாதியில் வேறுபாடு ஏனிருக்கவேண்டும்?


பழங்காலத்திலேயே முனிபுங்கவரான பராசரர் பிறந்தது பறைச்சி ஒருத்திக்கே; வேதவியாசர் பிறந்தது மீனவக் கன்னி ஒருத்திக்கே என்றெல்லாம் பாடியிருக்கிறார்.

நாராயண குரு மூட நம்பிக்கையின் எதிரி. ஒருமுறை அவரின் சீடர் ஒருவர் குருவுக்குக் கஞ்சி கொண்டு வந்தார். உப்பு சரியாக இருக்கிறதா என்று கேட்டார். குருவுக்குக் கொண்டு போவதை நான் எப்படி ருசித்துப் பார்க்க முடியும் என்றான் சீடன்.

சீடனின் மூட நம்பிக்கையைக் கண்டித்த நாராயண குரு, அப்படியானால் அதை நாய்க்கு ஊற்று; அதாவது ருசித்து சாப்பிடுகிறதா என்று பார்ப்போம்! என்றாராம். அந்த அளவுக்கு அவர் பகுத்தறிவாளராக இருந்திருக்கிறார்.

தம் கருத்துகளைப் பரப்புவதற்காகவே என்.டி.பி.ஒய். என்னும் ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன யோகம் என்னும் அமைப்பினைத் தொடங்கினார் (1903). நாடெங்கும் இந்தச் சீர்திருத்தக் கருத்தினை பிரச்சாரம் செய்தார். 1926 இல் தமிழ்நாட்டில் கோவையிலும், நீலகிரியிலும் சுற்றுப் பயணம் செய்திருக்கிறார். வைக்கம் போராட்டத்தில் நேரிடையாக ஈடுபடாவிட்டாலும், மறைமுகமாக உதவி செய்திருக்கிறார்.

மதத்தில் இருந்துகொண்டே அவர் செய்த சீர்திருத்தங்களைக்கூட கேரள நம்பூதிரிப் பார்ப்பனர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. எதிர்த்து வந்துள்ளனர். மாற்றம் என்றாலே மரணம் என்பதுதானே பார்ப்பனர்களின் சித்தாந்தம்!

------------ மயிலாடன் அவர்கள் 28-8-2009 "விடுத்லை"யில் எழுதிய கட்டுரை

27.8.09

கடவுள் கற்பனையைவிட பிரார்த்தனைக் கற்பனை மிக மிக மோசமானது


பிரார்த்தனை


பிரார்த்தனை என்பது இன்று உலகில் மக்கள் சமூகம் எல்லோரிடத்திலும் - அதாவது
கடவுளால் மக்கள் நடத்தப்படுகிறார்கள் என்று நம்பும் எல்லோரிடத்திலும் இருந்து வருகிறது. இது எல்லா நாடுகளிலும் எல்லா மதக்காரர்களிடத்திலும் இருந்து வருகிறது.

பிரார்த்தனை என்பதற்கு ஜபம், தபம், வணக்கம், பூசனை, தொழுகை முதலிய காரியங்களும், பெயர்களும் சொல்லப்படுவதுண்டு. இவை எல்லாம் கடவுளை வணங்கித் தங்களுக்கு நன்மை அளிக்கவேண்டும் என்று கேட்டுக் கொள்வதேயாகும்.

தனக்கு வேண்டியவற்றை எல்லாம் - அதாவது இம்மையில் - இவ்வுலகில் புத்தி, செல்வம், சுகம் இன்பம், ஆயுள், கீர்த்தி முதலியவைகளும்; மறுமையில் - மேல்லோகத்தில் பாவ மன்னிப்பு, மோட்சம், நல்ல ஜென்மம் முதலியவைகளும் கிடைக்கவேண்டும் என்கின்ற ஆசையே பிரார்த்தனையின் முக்கிய நோக்கமாக இருந்து வருகிறது.

இந்தப் பிரார்த்தனையின் அஸ்திவாரம், உலகத்தைப் படைத்துக் காத்துவரும் கடவுள் ஒருவர் இருக்கிறார் என்பதும்; அவர் சர்வ வல்லமையும், சர்வ வியாபகமும், சர்வமும் அறிவும் ஞானமும் உடையவர் என்பதும், அப்படிப்பட்ட அக் கடவுளை வணங்குவதால் ஒருவனுக்கு வேண்டிய சகல காரியங்களிலும் சித்தி பெறலாம் என்பதுமானவைகள்தாம் பிரார்த்தனைக்காரர்களின் கருத்தாயிருக்கின்றது.

இப்படிப்பட்ட பிரார்த்தனைக்கு அக்கடவுளை வணங்குவது, தோத்திரம் செய்வது, புகழ்வது, பஜனை செய்வது முதலிய காரியங்கள் ஒருபுறமிருக்க, பொருள்களைக் கொண்டும் கடவுளைத் திருப்தி செய்து அவற்றால் பயன்பெறலாம் என்பதும் இந்தப் பிரார்த்தனையில் சேர்ந்ததாகும்.

அதாவது, கடவுளுக்கு இன்ன இன்னது செய்வதாக நேர்ந்துகொள்வது, ஜீவப் பலி கொடுப்பது, கோவில் கட்டுவது, உற்சவம் செய்வது முதலிய காரியங்கள் செய்யப் படுவனவாகும். ஆகவே, இப்படிப்பட்ட பிரார்த்தனை என்பதற்கு வேறு வார்த்தையில் ஒரு மாறு பெயர் சொல்ல வேண்டுமானால் ‘பேராசை’ என்றுதான் சொல்லவேண்டும். பேராசை என்றால் தகுதிக்குமேல் விரும்புவது, வேலை செய்யாமல் கூலி பெறுவது என்பதே ஆகும்.

படித்துப் ‘பாஸ்’ செய்யவேண்டியவன் பிரார்த்தனையில் பாஸ் செய்வது என்றால்; பணம் வேண்டியவன் பிரார்த்தனையில் பணம் சம்பாதிக்க வேண்டுமென்றால்; மோட்சத்துக்குப் போகவேண்டும் என்கின்றவன் பிரார்த்தனையில் மோட்சத்துக்குப் போக வேண்டும் என்றால் இவைகளெல்லாம் பேராசை என்று சொல்லுவதோடு, வேலை செய்யாமல் கூலி கேட்கும் பெரும் சோம்பேறித்தனமும் மோசடியும் ஆகும் என்று சொல்லுவதுதான் மிகப் பொருத்தமாகும்.

பேராசையும், சோம்பேறித்தனமும், ஏமாற்றும் தன்மையும் இல்லாவிட்டால் பிரார்த்தனைக்கு இடமே இல்லை.

மற்றும், முன் குறிப்பிட்ட தேவைகளுக்காகப் பிரார்த்தனை செய்வதும், பிரார்த்தனையில் அவைகளை அடையப் பார்ப்பதும், முன் குறிப்பிட்ட சர்வ வல்லமை, சர்வ வியாபகம் உள்ள கடவுளைச் சுத்த முட்டாள் என்று கருதி அவனை ஏமாற்றச் செய்யும் சூழ்ச்சி என்று கூடச் சொல்லியாக வேண்டியிருக்கிறது. எந்த மனிதனும் தகுதியினால் எதையும் அடையலாம். அதற்கு வேண்டிய காரியங்கள் செய்து தகுதியாக்கிக்கொண்டு பலனடைய எதிர்பாராமல் காரியத்தைச் செய்யாது பிரார்த்தனையில் பலன் அனுபவிக்க வேண்டும் என்று கருதினால், கடவுள் வேலை செய்யாமல் கூலி கொடுக்கும் ஒரு அறிவாளி என்றும், தன்னைப் புகழ்வதாலேயே வேண்டியதைக் கொடுக்கும் ஒரு தற்புகழ்ச்சிக்காரனென்று தானே சொல்லவேண்டும்?

தவிர, இந்தப் பிரார்த்தனையின் தத்துவமானது மனிதனைச் சோம்பேறியாக்குவதோடு, சகலவித அயோக்கியத்தனமான காரியங்களுக்கும் ‘லைசென்சு’ (அனுமதிச் சீட்டு) கொடுப்பது போலாகிறது. விதை நட்டுத் தண்ணீர் பாய்ச்சாமல் அறுப்பு அறுக்க அரிவாள் எடுத்துக் கொண்டு போகிறவனுக்கும், யோக்கியமான காரியங்களைச் செய்யாமல் கடவுள் கருணையை எதிர்பார்ப்பவனுக்கும் என்ன வித்தியாசம் என்பது விளங்கவில்லை.

ஏனென்றால், சகல காரியங்களும் கடவுளால்தான் ஆகும் என்று நினைத்துக் கொண்டு, கடவுள் யாருடைய முயற்சியும் கோரிக்கையும் இல்லாமல் அவனவன் செய்கைக்கும், எண்ணத்திற்கும், தகுதிக்கும் தகுந்தபடி பலன் கொடுப்பதற்குத் தகுந்த ஏற்பாடும் செய்துவிட்டார் என்றும் (அதாவது விதியின்படி தான் முடியும் என்றும்) தெரிந்திருக்கும் ஒருவன் அந்தத் தெளிவில் நம்பிக்கை இருந்தால் பிரார்த்தனை செய்வானா என்று யோசித்துப் பார்க்க வேண்டுகிறோம். சாதாரணமாக, மக்களில் 100-க்கு 90 பேர்களிடம் பிரார்த்தனை வெகு கேவலமான - அறிவற்ற வியாபாரத்தனமான முறையில் இருந்து வருகிறது.

அதாவது, ‘எனக்கு இன்ன பலன் ஏற்பட்டால் உனக்கு நான் இன்ன காரியம் செய்கிறேன்’ அல்லது ‘உனக்கு நான் இன்ன காரியம் செய்கிறேன்; அதற்குப் பதிலாக நீ இன்ன காரியம் எனக்குச் செய்’ என்கின்ற முறையிலேயே பிரார்த்தனை இருந்து வருகின்றது. இவர்கள் எல்லோரும் - அதாவது இந்தப் பிரார்த்தனைக்காரர்கள் எல்லோரும் கடவுளைப் புத்திசாலி என்றோ, சர்வசக்தி உள்ளவன் என்றோ, பெரிய மனிதத் தன்மையுடையவன் என்றோ கருதவில்லை என்றுதான் சொல்லியாக வேண்டும்.

சிலர் சொல்லுகிறார்கள், “மனிதன் பாபி; அவர்கள் பாப கர்மத்தைச் செய்துதான் தீருவான்; ஆதலால் மன்னிப்புக் கேட்டுத்தான் தீரவேண்டும்” என்று. “நான் பாபம் செய்துதான் தீருவேன்; நீ மன்னித்துத்தான் ஆகவேண்டும்” என்று பிரார்த்திப்பதைக் கடவுள் ஏற்றுக் கொள்ளுவதானால், மனிதன் எந்தப் பாவத்தைச் செய்வதற்கும் ஏன் பயப்படவேண்டும் என்பது நமக்குப் புலப்படவில்லை. பாபத்துக்கு எல்லாம் மன்னிப்பு இருக்குமானால் புண்ணியம் என்பதற்கு அர்த்தம் தான் என்ன?

ஆகவே, ‘கடவுள்’ கற்பனையைவிட இந்தப் பிரார்த்தனைக் கற்பனையானது மிக மிக மோசமானது என்றுதான் சொல்லவேண்டும். பிரார்த்தனைக் கற்பனை இல்லாவிட்டால் கடவுள் கற்பனை ஒரு பிரயோசனத்தையும் கொடுக்காமல் போய்விடும். மனிதன் பூசையும், பிரார்த்தனையும் செய்வதற்குத்தான் கடவுள் ஏற்படுத்தப்பட்டதே ஒழிய, கடவுளுக்காகப் பூசையும், பிரார்த்தனையும் ஏற்படுத்தப்படவில்லை. குரு (பாதிரி), புரோகிதன் (பார்ப்பான்) ஆகியவர்கள் பிழைப்புக்காகவே பிரார்த்தனையும் கடவுள் மன்னிப்பும் ஏற்படுத்தப்பட வேண்டியதாய் விட்டது.

இந்த இரண்டு காரியங்களும் இல்லாவிட்டால் பாதிரிக்கோ, முல்லாவுக்கோ, புரோகிதனுக்கோ ஏதாவது வேலை உண்டா என்பதை யோசித்துப் பாருங்கள். ஆத்திகர்கள் கொள்கைப்படி, மனிதனுடைய செய்கையும் எண்ணமும், ‘சித்திரபுத்திரனுக்கோ’ ‘கடவுளுக்கோ’ தெரியாமல் இருக்கவே முடியாது. இதற்காகப் பலன் கொடுக்கத் ‘தீர்ப்பு நாளும்’, ‘எமதர்ம ராஜாவும்’ இருந்தே இருக்கிறார்கள். மத்தியில் பிரார்த்தனை, பூசனை என்பவை - மேற்கண்ட இரண்டையும் ஏமாற்றவா அல்லது குருவும், புரோகிதனும் பிழைக்கவா என்பது யோசித்தால் விளங்காமல் போகாது.

பிரார்த்தனையில் செலவாகும் நேரத்தைப் போல் மனிதன் வீணாய்க் கழிக்கும் நேரம் வேறு இல்லை என்றே சொல்லுவோம். சில சோம்பேறிகள் பிழைப்பதற்காக மக்கள் புத்தி எவ்வளவு கெடுகிறது? மக்களுக்கு அயோக்கியத்தனமானவைகளைச் செய்ய எவ்வளவு தைரியம் ஏற்பட்டு விடுகிறது? பொருள்கள் எவ்வளவு நாசமாகின்றன என்பவைகளை எல்லாம் சிந்தித்துப் பார்த்தால் பிரார்த்தனை என்பது ஒரு புரட்டான காரியம் என்றோ, பயனற்ற காரியம் என்றோ, அறிவீனமான காரியம் என்றோ விளங்காமல் போகாது.


-------------- பெரியார் - "பகுத்தறிவு" மலர் 1, இதழ் 9, 1935

திருப்பதியில் பக்தர்களின் காணிக்கை மாயமா? திருட்டா?






கோயில்களிலேயே பணக்காரக் கோயில் எது?

திருப்பதி ஏழுமலையான் கோயில்தான் என்று யாரைக் கேட்டாலும் தயக்கமில்லாமல் பதில் சொல்லிவிடுவார்கள்!

ஏழை எளிய ஜனங்கள் மட்டுமல்ல; கோடீஸ்வரர்களும் லட்சாதிபதிகளும் கூட திருப்பதி கோயில் உண்டியலில் காணிக்கை என்ற பேரில் நகைகளையும் பணத்தையும் கொட்டோ கொட்டென்று கொட்டுகிறார்கள்!

இந்த மாதத்தில் கர்நாடகத்தைச் சேர்ந்த கோடீஸ்வர முதலாளி ஒருவர் திருப்பதி உண்டியலில் ஒண்ணரைக் கிலோ தங்கத்தைக் காணிக்கை யாக்கினார் என்ற செய்தி வந்தது. இப்படி,

எல்லோரும் கடவுள் நம்பிக்கையில் திருப்பதி உண்டியலில் நகைகளாகவும் தங்கமாகவும் ரூபாய் நோட்டுக் கட்டுகளாகவும் செலுத்தும் காணிக்கைகள் திருப்பதி கோயிலில் எப்படிப் பராமரிக்கப்படுகின்றன, யாருக்குப் பயன்படுகின்றன என்பது பற்றிய திடுக்கிடும் தகவல்கள் அவ்வப்போது ஏடுகளில் வெளி வந்தபடியேதான் இருக்கின்றன! லட்டு தயாரிப்பு - லட்டு வியாபாரத்தில் கூட எத்தனை முறைகேடுகள், மோசடிகள் நடைபெறுகின்றன என்று முன்பு ஒரு முறை செய்தி வந்தது.

இப்போது இன்று (23.8.2009) வந்த செய்தியில் - ஏழுமலையானுக்கு காணிக்கை அளிக்கப்படும் தங்க நகைகள் - வைர மாலைகள் - தங்கக் கிரீடங்கள் - வைரக்கிரீடங்கள் எல்லாம் எப்படி சாமார்த்தியமாகக் களவாடப்படுகின்றன! கண்டுபிடிக்கப்பட்டால் - அது எப்படி சரி செய்யப்படுகிறது என்பது பற்றி ஒரு செய்தி வெளிவந்திருக்கிறது! அதிலே கூட

திருப்பதி கோயில் நகைகள் திருட்டு என்று குறிப்பிடப்படவில்லை. பல லட்சம் மதிப்புள்ள நகைகள் மாயம் என்றுதான் குறிப்பிடப்பட்டிருக்கிறது!

திருப்பதி கோயிலில் நகைகளைத் திருடுபவர்கள் அல்லது மாயம் செய்தவர்கள் பல லட்சக்கணக்கிலான மதிப்புள்ள நகைகளை மாயம் செய்து விட்டு எப்படி சில நூறு ரூபாய்களை இழப்பீடாக செலுத்திவிட்டு தப்பிவிடுகிறார்கள் என்பதை அந்தச் செய்தி விவரமாகத் தந்திருக்கிறது!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நகைகள் மாயமானதாகக் கூறி, அவற்றுக்கு குறைந்த அளவு மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருள்களுக்கு சில ஆயிரங்களே ஈடு கட்டியிருப்பது கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.

திருப்பதி ஏழுமலையானின் நகைகள் விவரம் குறித்து தகவல் தரவேண்டும் என்ற பொதுநல வழக்கின் அடிப்படையில் தேவஸ்தானத்துக்கு அய்தராபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்பேரில், தேவஸ்தான அதிகாரிகள், திருப்பதி தேவஸ்தானத்துக்கு உட்பட்ட எல்லா கோயில்களில் உள்ள நகைகள் குறித்து கணக்கெடுத்து வருகின்றனர்.

சுவாமி நகைகள் பாதுகாப்பில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்ப தாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

கடந்த 1996 ஆம் ஆண்டு வரையில் ஏழுமலையான் நகைகள், அர்ச்சகர்களின் பாதுகாப்பில் இருந்தன. அதன்பிறகு விஜிலென்ஸ் அதிகாரிகள், தனி கமிட்டி பொறுப்பாளர்கள் கண்காணிப்பில் நகை விவரங்கள் ஆண்டுதோறும் பதிவு செய்து வந்தனர். விலை உயர்ந்த கோமேதகக் கற்கள் வைரக் கீரிடத்தில் இருந்து உதிர்ந்து காணாமல்போய் விட்டதாகக் கூறி அதற்கு தேவஸ்தான் சார்பில் 5 ஆயிரம் ரூபாய் செலுத்தியுள்ளனர். கடந்த 2005 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 ஆம் தேதி மேலும் ஒரு கோமேதக் கல் மாயமாகி விட்டதாகக் கூறி அதற்கு ரூ 200 மட்டுமே செலுத் தப்பட்டுள்ளது. ரத்தினம் பதித்த தங்கச் சங்கிலியில் பதித்திருந்த கோமேதகக் கற்கள் உதிர்ந்துவிட்டதாகக் கூறி, ஒவ்வொன்றுக்கும் ரூ.50 வீதம் செலுத்தியுள்ளனர். மற்றொரு கிரீடத்தில் இருந்த 5 வைரக் கற்கள் மாயமானதாக் கூறி 50 ரூபாய் மட்டுமே செலுத்தப்பட் டுள்ளது. மூலவருக்கு அணிவிக்கப்படும் வைரக் கிரீடத்தில் ஒரு வைரம் மாயமாகிவிட்டதாகக் கூறி, அதற்கு ரூ 10 மட்டுமே செலுத்தியுள்ளனர். மேலும் 13 தங்க நகைகள் தொலைந்து போனதாகக் கூறி 23,850 ரூபாய் மட்டுமே ஈடுகட்டப் பட்டதாக கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. மாயமானதாகக் கூறப்படும் இந்த 13 நகைகள் மட்டும் பல லட்சம் இருக்கலாம் என கூறப்படுகிறது. இவை தவிர 29 கிலோ எடையுள்ள 15 வெள்ளிப் பொருள்கள் காணாமல் போய்விட்டன என கணக்கு காண்பித்துள்ளனர். மேலும் 36 வெள்ளிப் பொருள் கள் உபயோகப்படுத்தாமல் வைத் திருந்ததால் அதன் எடை 411 கிராம் குறைந்துள்ளது எனவும் தெரிவிக் கப்பட்டுள்ளது. மூலவரின் வைரைக் கிரீடத்தில் இருந்த 2 தங்க தாமரைகள் மாய மானதாக ரூ 8 ஆயிரம் ஈடு கட்டி உள்ளனர். கடந்த 2007 மார்ச் 16 ஆம் தேதி 16 பவளம் பொறித்த டாலர் வைத்த தங்க செயினில் டாலர் மட்டும் மாயம் எனக்கூறி ரூ 10 மட்டுமே செலுத்தி உள்ளனர். ரத்தினக் கற்கள் பதித்த சூரியன், சந்திரன் தங்க ஜடை பில்லைகள் மாயமானதாக ரூ 300 ஈடு கட்டி உள்ளனர். பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளுக்கு சில ஆயிரம் ரூபாய் மட்டுமே செலுத்தியுள்ளனர்.

என்கிறது அந்தச் செய்தி.

பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் மாயமாகிவிடுமாம் - 200 ரூபாய், 50 ரூபாய், 60 ரூபாய், 10 ரூபாய் என்று இழப்பீட்டுத் தொகை செலுத்துவார்களாம்!

புனிதமானது என்று கூறப்படும் கோயிலில் நகைத் திருட்டுகூட- நகை மாயம் என்ற பெயரில் புனிதம் அடைந்துவிடும் அதிசயம் அல்லது அருள்மிகு செய்தி இது!

திருப்பதி மகாத்மியம் இத்தோடு முடிந்துவிடவில்லை. இன்னொரு செய்தி - அதுவும் திருப்பதி செய்தி.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு உட்பட்ட திருப்பதியில் உள்ள கோதண்டராமசாமி கோயிலில் 16 கிலோ எடையுள்ள 2 தங்க மாலைகள் காணாமல் போயுள்ளது தெரியவந்தது. (காணாமல் போகும் - மாயமாகும் ஒருபோதும் அது திருட்டு என்று ஆகாது அதுதான் ஏழுமலையானின் சட்டச் சொற்கள்.)

கண்காணிப்பு அதிகாரிகள், கோயிலின் அர்ச்சகர் வெங்கட்ரமண தீட்சிதரிடம் விசாரிக்க முடிவு செய்தார்கள். இது தெரிந்ததும் அவர் தூக்க மாத்திரை சாப்பிட்டுத் தற்கொலை செய்து கொள்ள முயன்றார்.

மருத்துவமனையில் விஜிலென்ஸ் அதிகாரிகள் வெங்கட்ராம தீட்சிதரை விசாரித்தார்கள். வெங்கட்ரமண தீட்சிதர் மட்டும் திருடினேன் என்றா வாக்குமூலம் கொடுப்பார்?

திருப்பதி கோயிலின் அகராதியில் காணாமல் போகும், மாயமாகுமே தவிர திருட்டுப்போகுமா?

எனது மகள் திருமணச் செலவுகளுக்காக சுவாமியின் நகைகளை அடகு வைத்தேன் என்றார் அவர்!

காணாமல் போய்விட்டது, மாயமாகி விட்டது என்று சொல்லியிருந்தால் அவரிடம் 50 ரூபாயோ 100 ரூபாயோ இழப்பீட்டுத் தொகை வாங்கிக் கொண்டு கணக்கை நேர் செய்து விட்டிருப்பார்களோ?

அவர் அடகு வைத்தேன் - என்று சொன்னதாலோ என்னவோ அவரைக் கைது செய்துவிட்டார்கள். அவருக்கு உடந்தையாக இருந்ததாக இரு செக்யூரிட்டி ஊழியர்களை சஸ்பெண்ட் செய்து விட்டார்கள். திருப்பதி கடையில் அடகு வைக்கப்பட்ட அந்த நகைகளை சென்னையில் உள்ள ஓர் அடகுக் கடையில் இருந்து மீட்டுவிட்டார்கள்காணாமல் போகும், மாயமாகுமே - இப்படிப்பட்ட செய்திகளைப் படிக்கும் திருப்பதி ஏழுமலையானின் பக்தர்களுக்கு என்ன தோன்றும்?


திருப்பதி சென்று பக்த கோடிகள் நேர்த்திக் கடன் என்ற பேரால் மொட்டை அடித்துக் கொள்வதுண்டு பட்டை நாமமும் தரித்துக் கொள்வதுண்டு. ஆனால் பக்தர்கள் தந்த காணிக்கைப் பொருள்களை அபகரித்துக் கொண்டு பக்தர்களுக்கு இலவச மொட்டையும் இலவச நாமமும் போடும் காரியங்கள் அல்லவா திருப்பதியில் நடைபெறுகிறது! என்று நினைப்பார்கள் பக்தர்கள். ஆனால்,

இத்தனையையும் பார்த்துக் கொண்டு சகல சக்திகளும் படைத்த திருப்பதி ஏழுமலையான் சும்மாதானே இருக்கிறார். விஜிலென்ஸ் அதிகாரிகளும், போலீசாரும்தான் பிடிக்கிறார்களே தவிர திருப்பதி வெங்கடாசலபதி யாரையும் பிடித்ததாக தண்டித்ததாக செய்தி எதுவும் வருவதில்லையே; ஏன் என்று எந்த ஒரு பக்தராவது நினைப்பாரா?


------------------ நன்றி: "முரசொலி", 24.8.2009 -இல் "சின்னக் குத்தூசி" அவர்கள் எழுதிய கட்டுரை

இந்துக்கள் கலாச்சாரத்தில் ஓரின சேர்க்கைக்கு இடம் இல்லையா?




ஹரிஹரபுத்திரன்

ஓரினச் சேர்க்கையைப்பற்றி நாடெங்கும் சர்ச்சைகள் வெடித்துக் கிளம்பியிருக்கின்றன. டில்லி உயர்நீதிமன்றம் இதனை அங்கீகரித்தது என்றவுடன், பிரச்சினை மேலும் சூடாகி, உச்ச கொதி நிலையை அடைந்துவிட்டது.

உத்தரப்பிரதேச மாநிலம் பக்பட் மாவட்டம் பாரட் நகரில் உள்ள ஒரு கோயிலில் இரு இளைஞர்கள் சென்று தாங்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகவும், மாங்கல்யம் தந்துனானே என்ற கல்யாண மந்திரத்தைச் சொல்லி கோயில் அர்ச்சகரை கல்யாணத்தை நடத்தி வைக்குமாறும் கேட்டுக்கொண்டனராம்.

அர்ச்சகர் அதிர்ச்சி அடைந்துவிட்டாராம். வாக்குவாதம் சூடு பிடித்ததாம். அந்த அர்ச்சகரை அடிக்கப் போகும் அளவுக்கு அந்த இளைஞர்கள் நடந்துகொண்டனராம். கூட்டம் கூடவே அந்த இரு இளைஞர்களும் நைசாகத் தப்பி விட்டனராம். இப்படியாக ஒரு தகவல் நேற்றைய மாலை ஏட்டில்.

ஓரினச் சேர்க்கையாளர் திருமணத்துக்கு அரசு அனுமதி அளிக்கக் கூடாது. நம் இந்துக் கலாச்சாரம் சீரழிவதை அரசு தடுக்கவேண்டும் என்று கோயில் அர்ச்சகர் குமுறினாராம்.

ஓரினச் சேர்க்கை சரியா, சரியில்லையா என்பது ஒருபுறம் இருக்கட்டும். இந்துக் கலாச்சாரம் அதனால் சீரழிவதாக ரொம்பவும் கவலைப்பட்டு கண்ணீர் வடிக்கிறார்களே, அது எப்படி?

இந்துக்கள் கலாச்சாரத்தில் ஓரின சேர்க்கைக்கு இடம் இல்லையா? அது என்ன அப்படி ஒரு இந்துக் கலாச்சாரம்?

இந்துக் கடவுளான அய்யப்பன் சங்கதி என்ன? பத்மாசுரன் என்ற அசுரன் சிவனிடம் வரம் கேட்டானாம்; எப்படிப்பட்ட வரம்? நான் யார் தலையில் கை வைத்தாலும் அவன் தலை பஷ்பமாகிட (எரிந்துவிட) வேண்டும் என்பதுதான் அந்த வரம். சிவனும் வரம் கொடுத்துவிட்டான்; சரி, வரம் வாங்கியாகிவிட்டது. பரீட்சித்துப் பார்க்கவேண்டாமா? வரம் கொடுத்த சிவன் தலையிலேயே கையை வைக்க விரும்பினானாம். கடைக்கண் பார்வையால் எரிக்கும் சக்தி வாய்ந்த கடவுள் என்று சொல்லப்படும் சிவன் ஓட்டம் பிடித்தானாம். விடவில்லை பத்மாசுரன்; துரத்தினான்; துரத்திக்கொண்டே ஓடினான்.

தன் மைத்துனன் ஆபத்தில் சிக்கிக்கொண்டதைப் பார்த்த விஷ்ணு, மோகினி அவதாரம் எடுத்து பத்மாசுரன் முன் வந்து நின்றானாம். போன காரியத்தை விட்டு விட்டு மோகினியின் அழகில் மயங்கி நின்றானாம். தன்னை அனுபவிக்கவேண்டுமானால், தலையைத் தேய்த்துக் குளித்துவிட்டு வரவேண்டும் என்று நிபந்தனையாம். பத்மாசுரன் தன் தலையில் கைவைத்தபோது, சிவன் வரத்தின் வலிமைப்படி எரிந்துபோய் விட்டானாம்.

அதன்பின், பத்மாசுரனுக்கு பயந்து அய்வேலங்காயில் ஒளிந்துகொண்டிருந்த சிவனை வெளியில் வர அழைத்தானாம். விஷ்ணுவாகிய அந்த மோகினியின் அழகில் மனதைப் பறிகொடுத்துக் கூடினானாம். ரிஷிப் பிண்டம் இராத்தங்காதாம் உடனே ஒரு குழந்தை பிறந்ததாம். அவன்தான் ஹரிஹரபுத்திரனாகிய அய்யப்பன் (ஹரி என்றால் விஷ்ணு; அரன் என்றால் சிவன்). அடேயப்பா, இந்தக் கடவுள்களுக்கு இந்து மதத்தில் எப்படிப்பட்ட மரியாதை!


சிவனும் ஆண், மோகினி உருவத்தில் இருந்த விஷ்ணுவும் ஆண். இருவரும் கூடி பிள்ளை பெற்றுள்ளார்களே. நாரதன் என்ற ஆணும், கிருஷ்ணன் என்ற ஆணும் கூடி 60 பிள்ளைகள் பெற்ற புராணமும் உண்டே! இந்த யோக்கியதையில் உள்ள இந்து மதத்தின் கலாச்சாரம் ஓரினச்சேர்க்கையால் கெட்டுப் போய்விடுமாம்!

ஹி.... ஹி... வாயால் சிரிக்க முடியவில்லையே!

---------------- மயிலாடன் அவர்கள் 27-8-2009 "விடுதலை"யில் எழுதிய கட்டுரை

ஜெயேந்திர சரஸ்வதிகளிலிருந்து சோ வரை யாருக்கும் வெட்கமில்லையே!


திராவிடர் கழகம் இந்து மதத்தை மட்டும் விமர்சிக்கிறதா? கிறித்து,இஸ்லாம் மதங்களை விமர்சிக்கவில்லையா?

சங்கராச்சாரிகள் தாழ்த்தப்பட்டவகளுக்காக பாடுபடுகிறார்கள் என்று சொல்லப்படுவது உண்மையா?

சங்கராச்சாரியார் பேச்சைகேட்டு துக்ளக் “சோ” ஆள்காட்டி வேலை பார்த்தது உண்மையா?

சங்கராச்சாரி வேண்டிக் கொண்டதால்தான் கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு காய்ச்சல் வந்ததா?

இவ்வளவுக்கும் பிறகும் பெரியார் தொண்டர்களின் பெருந்தன்மை எப்படிப்பட்டது என்பதை அறிந்து கொள்ளவும்,

இது போல் பல உண்மைச் செய்திகளை அறிந்து கொள்ள


("எதிரொலி" நாளேட்டில் அன்றாடம் சுயமரியாதைக் கருத்துக்களை கட்டுரைகளாக வடித்து வரும் சின்னக் குத்தூசி - ஞானி அவர்கள் - கஞ்சி சங்கராச்சாரியை நேரில் கண்ட கருத்தாழ மிக்க பேட்டி)

1983 ஆம் ஆண்டு உண்மை நாடுவோர் வெளியிட்டுள்ள சங்கராச்சரியாரின் முகத்திரையை கிழித்தெறிந்த “சின்ன சங்கராச்சாரி –யார் ?” என்ற நூலில் உள்ள கட்டுரைகள் இங்கு பதிவு செய்யப் படுகிறது. நமது வாசகர்கள் ஊன்றிப் படித்து உண்மையை அறிய வேண்டுகிறோம் -

நன்றி


*************************************************************************************
சின்ன சங்கராச்சாரி - யார்?


பகுதி -5




ஞாநியின் பதில்:

("எதிரொலி"யில் வெளியான சங்கராச்சாரி சின்னக்குத்தூசி சந்திப்பு பற்றிய கட்டுரைகள் தொடர்பாக துக்ளக் பத்திரிகையின் 15-4-83 இதழில் ஒருவாசகர் கடிதமும், ஆசிரியர் சோவின் விளக்கமும் வெளியிடப்பட்டிருந்தன. இதில் கூறப்பட்டிருந்த பொய்களை மறுத்து 15-4-83 அன்றே ஞாநி சோவுக்கு ஒருகடிதம் எழுதியும் அதை அவர் துக்ளக்கில் இதுவரை வெளியிடவில்லை. எனவே கடிதவிவரம் இங்கே வெளியிடப்படுகிறது.)

டியர் மிஸ்டர் சோ,

காஞ்சி சங்கராச்சாரியார் சின்னக் குத்தூசி பற்றி "எதிரொலி"யில் வெளியான கட்டுரையை ஒட்டி எழுந்துள்ள ஒரு சர்ச்சை பற்றி 15-4-83துக்ளக்கில் எழுதியிருந்ததைப் படித்தேன்.

இந்த விவகாரத்தில் நீங்கள் நடந்து கொண்டுள்ளவிதம் மிகுந்த வருத்தம் அளிக்கிறது.

சங்கராச்சாரியார் சந்திப்பு பற்றி 3-4-83ல் சின்னக் குத்தூசியும், 4-4-83 அன்று நானும் எதிரொலியில் எழுதிய கட்டுரைகள் வெளிவந்த ஓரிருநாட்கள் கழித்து புகைப்படக்கார நண்பர் சுபா சுந்தரம் போன் செய்ததையும் அதையடுத்து நானும் சின்னக் குத்தூசியும் உங்களுக்கு போன் செய்து பேசியதையும்உங்களுக்கு நினைவுபடுத்தவும் உங்கள் வாசகர்களுக்கு தெரியப்படுத்தவும் விரும்புகிறேன்.

சுபா சுந்தரம் போனில் என்னிடம் "சோ பலமுறைகள் என்னிடம் திரும்பத் திரும்பக் கேட்டார். 'சுவாமிகள் தியாகராஜனிடமும் (சின்னக் குத்தூசி)ஞாநியிடமும் அப்படித்தான் சொன்னாரா' என்று ரொம்ப அப்செட் ஆகிக் கேட்டார். நீங்கள் அவரோடு பேசுங்கள்" என்று சொன்னார். உடனே நான்போன் செய்து உங்களோடு பேசினேன். அப்போது ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்தினேன். ஸ்வாமி சொன்ன மாதிரி நீங்கள் யாரும் தயார் செய்து அனுப்பக் கூடிய ஆளல்ல. உங்களோடு எனக்குக் கருத்து வேறுபாடு உண்டு. ஆனால் நானும் தியாகராஜனும் நிச்சயம் சுவாமிகள் சொன்னதை இப்போதும் நம்பவில்லை. விநோ அபவுட் யுவர் இண்டிபெண்டண்ட் ஆட்டிட்யூட் என்று நான் சொன்னதற்கு நன்றி தெரிவித்தீர்கள். "இப்போது நான் ஒரு தர்மசங்கடமான நிலையில்இருக்கிறேன். சுவாமிகள் சொன்னது சரியல்ல என நான் மறுத்தே ஆக வேண்டும். பட் அய் ஹேவ் ரெஸ்பக்ட் பார் தட் இன்ஸ்ட்டிட்யூஷன்" என்றீர்கள்."என்ன செய்வது? உண்மைதான் முக்கியம்" என்று நான் சொன்னேன். "உங்களையும் தியாகராஜனையும் தவிர யாராவது அதை எழுதியிருந்தால் நான்நம்பியிருக்க மாட்டேன்" என்று நீங்கள் சொன்னீர்கள். பிறகு தியாகராஜனிடமும் இதுபற்றிப் பேசினீர்கள்.

இப்போது ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் உங்களிடம் தெரிவித்த பொய்யை வெளியிட்டிருக்கிறீர்கள்.

அது அவருடைய ஸ்டேட்மெண்ட். வெளியிடுவது முறைதான். அதைத் தொடர்ந்து, உங்கள் கமெண்ட் வேறு. நானும் தியாகராஜனும் பொய் சொல்லமாட்டோம் என்று நீங்கள் நினைப்பதாக போனில் எங்களிடம் சொல்லிவிட்டு, நாங்கள் பொய் சொல்லியிருப்பதாக அர்த்தம் வரும்படி பத்திரிகையில்எழுதியிருக்கிறீர்கள். உங்களுடைய ரெஸ்பெக்ட் பார் தட் இன்ஸ்ட்டிட்யூஷன் மேலோங்கியதில் உண்மை இரண்டாம் பட்சமாகிவிட்டது.

ஆசாரிய சுவாமிகளைச் சந்தித்தபோதே கட்டுரையை வெளியிடாமல் திடீரென்று கலாச்சார விழாவுக்குப் பிறகு வெளியிடுவானேன் என்று அவர் சார்பில்கேள்வி கேட்டிருக்கிறீர்கள். இதற்கான பதிலை அன்றைக்கு நாம் போனில் பேசியபோதே தியாகராஜன் உங்களிடம் தெரிவித்தார். சந்திப்பு முடிந்த ஓரிருதினங்களில் தியாகராஜன் ஏஜென்ஸி விஷயமாக டூர் போய்விட்டார். ஒரு மாத காலம் அவர் சென்னையில் இல்லை. அதனால்தான் அப்போதே வெளியிடமுடியாமல் போயிற்று.

தவிர, சுவாமிகள் நடத்திய விழாவில் பங்கேற்பதாக அழைப்பிதழில் அறிவிக்கப்பட்ட அமைச்சர் காளிமுத்து செல்லவில்லை. இந்த நிலையில் அடுத்த நாளேசுவாமிகள் திடீரென்று மறுநாள் முதலமைச்சர் (அழைப்பிதழில் குறிப்பிடப்படாதவரோ) வரப்போவதாக நிருபர்களிடம் அறிவித்தார். இப்படியாக சுவாமிகள்பாலிடிக்ஸ் செய்கிறார் என்ற நிலையில் அவர் எங்களோடு பேசியவற்றை எம்.ஜி.ஆர். விழாவுக்கு வரும் நாளன்று வெளியிடுவது பொருத்தமென்பதால்3-4-83 அன்று சின்னக்குத்தூசியின் கட்டுரை வெளியிடப்பட்டது. நடத்தது அவ்வளவுதான்.

"பிரசுரத்துக்காக அல்லாமல் சில கருத்துக்களை எதிரொலியின் பிரதிநிதிகளிடம் பேசிக் கொண்டிருந்ததாக சுவாமிகள் கூறினார்" என்றுஎழுதியிருக்கிறீர்கள். இது சுத்தப் பொய். பிரசுரிப்பதற்காக அல்ல என்று எதையும் சுவாமிகள் சொல்லவில்லை. அவருடைய தூதர் கார்ப்பரேஷன் பேங்க்சீனிவாசன் இதை அறிவார்.

குண்டுராவ் அருண்ஷோரியை சாப்பாட்டுக்கு அழைத்தபோது சாப்பிடும் வேளையில் இருவரும் சம்பாஷித்ததை அருண்ஷோரி சண்டே இதழில் வெளியிட்டபோதுயாரும் ப்ரைவேட் கான்வர்சேஷன் என்று எதிர்த்துப் பேசவில்லை. குண்டுராவ் மடாதிபதியாக இருந்தால் பேசி இருப்பார்களோ என்னவோ? அவ்வளவுஏன்? ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளைக் காண திருப்பூர் கிருஷ்ணனும் வலம்புரி ஜானும் பரணீதரனும், மணியனும்(!) போகிற வேளைகளில் யார் யாரோபக்தர்கள் சுவாமிகளைச் சந்திக்க வருவதையும் அவர்கள் தங்கள் பிரச்சனைகளைக் கூறுவதையும் அவற்றுக்கு சுவாமிகள் கூறும் அருளாசிகளையும்அப்படியே கண்டு மெய்சிலிர்த்து, நெகிழ்ந்து நெஞ்சுருகி எழுதுகிறபோது பக்தர்களின் ப்ரைவேட் பிரச்சனைகள் அச்சில் எழுதுவதை யாரும் விமர்சிப்பது இல்லை.சுவாமிகளைப் பாராட்டி அவரது இமேஜை பம்ப் வைத்துக் காற்றடித்து உயர்த்தும்போது வாய்மூடிக் கொண்டிருக்கிறார்கள். எந்த ஒரு மெடர்னிடிடாக்டரும் அபத்தம் என்று உடனடியாகச் சொல்லக் கூடிய விதத்தில் பிறக்கும்போதே கைகளைக் கூப்பியவாறு பிறந்த குழந்தை ஜெயேந்திரசரஸ்வதிகள் என்று உங்கள் சகோதர ஏடு எழுதுவதும் இமேஜூக்கு பம்ப் அடிக்கிற சமாசாரம்தான். இதைப்பற்றி உங்கள் பேனா எழுதாது.ஆனால் சுவாமிகளின் சுயரூபத்தை அம்பலப்படுத்தும்போதும் மட்டும் "பிரசுரத்துக்காக அல்லாமல்" என்று புதுக்கரடி விடுகிறது.

3-4-83 எதிரொலியில் சின்னக் குத்தூசியின் கட்டுரை வெளியான மறுநாள் சுவாமிகளின் தூதர் சீனிவாசன் போன் செய்தார். கட்டுரையாளர் தியாகராஜனுடன் பேசினார். "என்ன இப்படி திடீர்னு பப்ளிஷ் பண்ணீட்டிங்க" என்று கேட்டார். "பேசினதைத்தானே போட்டிருக்கிறது. பேசாததைப்போடவில்லை அல்லவா" என்றார் தியாகராஜன். "ஆமாமா பேசினது தான் வந்திருக்கு. தப்பா எதுவும் இல்லை. மைல்டாதான் இருக்குன்னுபெரியவா சொன்னா. ஞாநியோட கட்டுரை எப்படி இருக்கும்? அதுவும் மைல்டாதானே இருக்கும்?" என்று சீனிவாசன் கேட்டார். "எனக்குத்தெரியாது. நான் அதை இன்னும் படிக்கல" என்று தியாகராஜன் சொன்னார். என் கட்டுரை வந்தபிறகு சீனிவாசன் தொடர்பே கொள்ளவில்லை.

"வீணாக அவருடைய (சுவாமிகளுடைய) பெயரை சர்ச்சைக்குரிய வகையில் இழுத்திருப்பது வருந்தத்தக்க விஷயம்" என்று நீங்கள் தீர்ப்பு வேறு வழங்கிஇருக்கிறீர்கள்.

அவரை நாங்கள் எங்கே சர்ச்சைக்கு இழுத்தோம்?

கடந்த 6 மாத காலமாக எதிரொலி நிர்வாக இயக்குநர் ஆற்காடு வீராசாமியின் தம்பி தேவராஜனிடம் அவர் கணக்கு வைத்துள்ள கார்ப்பரேஷன்பேங்க் மேனேஜர் சீனிவாசன், எதிரொலியில் சங்கராச்சாரியார்களைப் பற்றி விமர்சிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டிருந்தார். இதை தேவராஜன்,சின்னக் குத்தூசியிடம் சொல்லிவிட்டு, "தகவலுக்காகச் சொல்கிறேன். நீங்கள் உங்கள் விருப்பப்படி எழுதுங்கள்" என்பார். முதல் நான்குமாத காலம் இப்படிநடந்தது. பிறகு சுவாமிகளின் தூதர் சீனிவாசன் தன் அப்ரோச்சை மாற்றினார்.

"சின்னக்குத்தூசியை ஒருதடவை பார்த்து பேசச் சொல்லிப் பெரியவர் கேட்டுண்டார். கொஞ்சம் அவரை கன்வின்ஸ் பண்ணி வரச் சொல்லுங்க" என்று தேவராஜனிடம் சொல்ல ஆரம்பித்தார். இது 2 மாத காலம் திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டது. சின்னக்குத்தூசி ஜெயேந்திரரை சந்திக்க ஆர்வம்காட்டவில்லை.

பிறகு தேவராஜன் ஒருநாள், "சார், போய்ப் பார்த்துவிட்டு வந்துடுங்க. பிரஷர் தாங்க முடியலே. நம்ம இருக்கிற இருக்கப் போகிறோம்;பார்க்கிறதுனாலே ஒண்ணும் தப்பில்லே" என்றார். இதன் பிறகே சின்னக் குத்தூசி ஒப்புக் கொண்டார்.

அதன்படி அவரை சீனிவாசன் அழைத்துச் சென்றபோதுதான் நான் தற்செயலாக உடன் சென்றேன்.

ஆக, சர்ச்சைக்கு சுவாமிகளை இழுத்தது யார்? அவர்தான் தன்னைப் பற்றிய விமர்சனங்களை விரும்பாமல் விமர்சகரின் மனதை மாற்ற முயற்சி செய்தார்.

அப்படிப்பட்ட ஒரு துறவிதான், உங்களைப் பற்றிச் சொன்னதை, இப்போது இல்லை என்று மறுக்கிறார். அவர் கூறியவிதம் கூட இன்னும் பசுமையாக எனக்கு நினைவிருக்கிறது.

"மத்த மதங்களை ஏன் டி.கே. விமர்சனம் பண்றது இல்லே? இதைக் கேட்டா மழுப்பிடறீங்க. வீரமணியை சோ பேட்டி கண்டாரோ, இல்லியோ?அப்பவும் அவனால் இதுக்கு பதில் சொல்ல முடியலியே!" இந்த இடத்தில் ஒரு கணம் நிறுத்திவிட்டு, முகத்தில் குதூகலப் புன்னகையோடு, சுவாமிகள் அடுத்துச்சொன்ன வாக்கியங்கள் இவைதான். "நான்தான் சோவை அதுக்கு தயார் பண்ணி அனுப்பிச்சேன். என்னென்ன கேக்கணும்னு ரெடி பண்ணி அனுப்பிச்சேன்.அவனால ஒண்ணுத்துக்கும் பதில் சொல்ல முடியலியே!"

இவ்வாறு தான் சொன்னதை, இல்லை என்று, இப்போது மறுக்கிற சுவாமிகள், 3-4-83 முதல் இன்றுவரை எதிரொலிக்கு மறுப்புஅனுப்பவில்லை. தூதனுப்பத் தெரிந்தவருக்கு நேரடியாக மறுப்பனுப்பத் தெரியாதது ஏன்? உங்களைப் பயன்படுத்திக் கொள்வது ஏன்?


இப்படிப்பட்ட ஒரு மனிதர், உங்களிடம் எங்கள் மீது குற்றச்சாட்டுகளை வேறு கூறியிருக்கிறார். நீங்கள் அதை அப்படியே வெளியிட்டு, அதன் அடிப்படையில்உங்கள் மேலான தீர்ப்புகளையும் வழங்குகிறீர்கள்.

அவர் சொல்லாதவற்றைச் சேர்த்தோமாம். சொல்லிய சிலவற்றை ஆங்காங்கே விட்டுவிட்டோமாம். சம்பாஷணைகளின் சில பகுதிகளை முற்றிலும்விட்டுவிட்டோமாம்.

இந்த மூன்றில் முதல் குற்றச்சாட்டை முழுமையாக மறுக்கிறேன். அவர் சொல்லாதவை என்னென்னவென்று விவரமாக தெரிவிக்கட்டும். அடுத்தஇரண்டு குற்றங்களை செய்திருப்பது உண்மைதான். ஒப்புக் கொள்ளுகிறேன்.

அவர் சொல்லிய சிலவற்றை ஆங்காங்கே விட்டுவிட்டது உண்மைதான். அவை என்ன தெரியுமா? மணியனைப் பற்றி அவர் கூறின அசலானவாக்கியங்கள்தான். "அவனைப்பத்தி என்னண்ட கேட்காதீங்கோ. அவனுக்கு ஆத்மாவும் கெடயாது. ஆத்மார்த்தமும் கெடயாது. அவன் வியாபாரி.அவனுக்கும், எனக்கும் ஸ்நானப் பிராப்திகூட கிடையாது" என்றார் சுவாமிகள். மணியனுக்கு சுவாமிகள் அங்கீகாரம் உள்ளதாகப் பலரும் கருதுவதை தவறென்று தெளிவுபடுத்த இதைப் பொது மேடையிலும் சொல்லி விடுங்களேன் என்று நான் கேட்டபோது வெறும் சிரிப்பே பதில்! பொது மேடையில் கூறமறுத்தால் மணியனுக்கு சுவாமிகள் உடந்தை என்றே நான் கருத வேண்டி வரும் என்ற போது அதற்கும் ஒரு சிரிப்பு. பதில் கூற முடியாமல் நழுவுவது யார்?இந்தப் பகுதியை நாங்கள் வார்த்தைக்கு வார்த்தை அப்படியே வெளியிடவில்லைதான்.

இதேபோல, உண்மையான பிராமணன் யார் என்ற சர்ச்சையை சின்னக்குத்தூசி எழுப்பியபோது சுவாமிகள் அருகிலிருந்த சீனிவாசனைக் காட்டிப் பேசியதைநாங்கள் வெளியிடவில்லை. "இவன் மீசையும் கிராப்பும். இவனை யார் பிராமணன்னு ஒத்துப்பா? 20 வருஷம் முன்னாடி இந்த மாதிரி இருந்துண்டு என் முன்னாலவர முடியுமோ? எல்லாம் வேலைக்குப் போக ஆரம்பிச்சுட்டா. அப்படித்தான் இருக்கும்" என்றார் சுவாமிகள். உடனே சீனிவாசன் வெட்கத்தோடுநெளிந்தார். இந்தப் பகுதியை நாங்கள் வெளியிடவில்லை.

இதேபோல வெளியிடாமல் விட்ட இன்னொரு பகுதி சின்னக்குத்தூசி தியாகராஜனை சுவாமிகள் எதிரொலி விஸ்வநாதன் என்பவரோடு குழப்பிக் கொண்டதுபற்றியது. தமிழ் எழுத்தாளர்களை, சுவாமிகள் தர்ம பிரகாஷில் சந்தித்தபோது எதிரொலியிலிருந்து ஒருவர் வந்து தம்மிடம் காலில் விழுந்து ஆசிர்வாதம்வாங்கிக் கொண்டதாக அவர் சொன்னார். "எதிரொலின்னு விக்கிரமன் மைக்ல சொன்னதும் எல்லோரும் ஒரு செகண்ட் ஆச்சரியமா பார்த்தா" என்றுசுவாமிகள், எதிரொலிக்காரர் ஒருவர் தம்மிடம் ஆசிர்வாதம் வாங்கியது பற்றிய பெருமிதத்தோடுச்சொன்னார். "நீங்கதான் அவர்னு நெனச்சேன். ஆனாஅவர் வேற மாதிரியிருந்தாரே" என்று சின்னக் குத்தூசியிடம் கேட்டார். நானும் அந்த நிகழ்ச்சிக்கு சென்றிருந்தேன். "அப்படி எதிரொலி பத்திரிகைக்காரர்யாரும் அங்கே சுவாமிகள் காலில் விழவில்லையே" என்று சொன்னேன். சுவாமிகள் "எதிரொலி விஸ்வநாதன்" என்று பெயரைச் சொன்னார்.அவருக்கும் எதிரொலி பத்திரிகைக்கும் ஒரு தொடர்பும் கிடையாது என்று விளக்கியபோது, சுவாமிகள் முகத்தில் ஏமாற்றம் தெரிந்தது.இதெல்லாம்தான் நாங்கள் வெளியிடாத பகுதிகள்.

வெளியிட்ட பகுதிகளில் உங்களைப்பற்றி சொன்னதை சுவாமிகள் இப்போது மறுத்திருக்கிறார்.

இன்னும் எதை எதையெல்லாம் மறுக்கிறார் என்றும் நீங்கள் கேட்டிருந்தீர்களானால் நன்றாயிருந்திருக்கும்.

1. எல்லோரையும் 'அவன் இவன்' என்று பேசியதை மறுக்கிறாரா?

2. கருணாநிதி மீது ஏற்பட்ட கோபத்தால் அவர் உடல்நிலை பாதிக்கப்பட வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வெற்றி பெற்றதாகச் சொன்னதைமறுக்கிறாரா?

3. மணியனைப் பற்றிச் சொன்னதை மறுக்கிறாரா?

4. தமிழ் அர்ச்சனை, அரிஜன அர்ச்சகர்கள் இரண்டையும் இவர் ஆதரித்தாலும் இவர் பக்தர்கள் அவற்றை எதிர்த்துக் கோர்ட்டுக்குப் போவதைத்தடுக்காதது ஏனென்று கேட்டபோது, வெறுமே சிரித்தாரே, அதை மறுக்கிறாரா?

5. எல்லா மனிதர்களைப் பற்றியும் கவலைப்படாமல் மத அடிப்படையில் பிரிப்பது சரியல்ல என்று நான் சொன்னபோது, "எனக்கு எல்லா மனுஷனைப்பத்தியும் கவலையில்லை. இந்துக்களைப் பற்றித்தான் கவலை" என்று சொன்னாரே, அதை மறுக்கிறாரா?

6. திராவிடர் கழகம் இந்து மதத்தை விமர்சிப்பதால் முஸ்லீம்கள் பலம் பெருகுவதாகக் கவலை தெரிவித்தாரே. அதை மறுக்கிறாரா?

7. "முஸ்லீம்கள் எக்கேடு கெட்டாலும் எனக்குக் கவலை இல்லை" என்று சொன்னதை மறுக்கிறாரா?

8. ஒரேயடியாக எதிரொலிக்கு சீனிவாசனைத் தூதனுப்பியதையும், சின்னக்குத்தூசியைச் சந்திக்க விரும்பியதையும், அதன்படி அவரும் அவரோடு நானும்சுவாமிகளை வசந்த மண்டபத்தில் சந்தித்ததையும், அப்போது பேசியதையும், கடைசியில் எங்களுக்குப் புரசை இலையில் கல்கண்டு கொடுத்ததையும் எல்லாவற்றையுமே கூட "அப்படி எதுவுமே நடக்கவில்லை. நான் அப்படி யாரையும் பார்க்கவில்லை" என்று மறுக்கிறாரா?


கேட்டுச் சொல்லுங்கள். சுவாமிகளிடம் மட்டுமல்ல; இந்தக் கடிதத்தில் நான் குறிப்பிட்டுள்ள விஷயங்களைப் பற்றிச் சம்பந்தப்பட்ட எல்லாரிடமும்போய்க் கேளுங்கள். மனசாட்சியின் நெருடலை காவி உடை சாகடித்து விடலாம். ஆனாலும், சாதாரண மனிதர்களின் மனசாட்சிகள் அவ்வளவு சுலபத்தில்சாவதில்லை என்று நம்புகிறேன்.

"நடக்காத ஒன்றை நடந்ததுபோல் கூறவேண்டிய அவசியமும், நடந்தவற்றை நடக்காதது போல் காட்டும் அவசியமும் கட்சி சார்புள்ள பத்திரிகைகளுக்குவேண்டுமானால் ஏற்படலாம். ஸ்ரீசங்கராச்சார்ய சுவாமிகளுக்கு அந்த மாதிரி ஏற்பட நியாயமில்லை" என்றும் நீங்கள் கூறியிருக்கிறீர்கள்.

எதிரொலி தி.மு.க. சார்புள்ள பத்திரிகைதான். ஆனால், நான் தி.மு.க.வையோ தி.க.வையோ சார்ந்தவன் அல்ல. அவர்களுடன் எனக்கு சிலவற்றில்உடன்பாடும், சிலவற்றில் மாறுபாடும் உண்டு. நான் எந்தக் கட்சியையும் சார்ந்தவனும் அல்ல. உங்கள் துர்வாசரைப் போல் நானும் (துக்ளக் உட்பட)எல்லா இடங்களிலும் உண்மையைத் தேடுகிறேன். அவ்வளவுதான்.

நீங்கள் கட்சி சார்புள்ளவர். ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்பவர். ஸ்ரீசங்கராச்சாரியார் இந்து முன்னணியையும் ஆர்.எஸ்.எஸ்.சையும்ஆதரிப்பவர். முஸ்லீம் லீக்கைப் போல் ஆர்.எஸ்.எஸ்.சும் ஒரு கட்சிதான் என்பதே என் கருத்து. எனவே, கட்சி சார்புள்ளவர்களுக்கு நடந்ததை நடக்காததாகவும், நடக்காததை நடந்ததாகவும் காட்டும் அவசியம் ஏற்படலாம் என்ற உங்களுடைய வியாக்கியானம் உங்கள் இருவருக்கேபொருந்தும். அந்தத் தியரியே எனக்கு உடன்பாடல்ல. (சரியான தத்துவம் உள்ள கட்சிக்கு அந்த அவசியமே வராது.) அந்தத் தியரி எனக்குப்பொருந்தவும் இல்லை.

மனிதர்களை நேசிப்பதும், வாழ்க்கையில் நல்ல நெறிமுறைகளோடு வாழ்வதும், மனிதர்கள் எல்லாரும் சமமாய் வாழும் சுருதி சுத்தமான ஒரு உலகம்அமையக் கண்ட கனவை நனவாக்க உழைப்பதும், இதற்கெல்லாம் எதிரான சக்திகளோடு தொடர்ந்து யுத்தம் செய்வதும்தான் சரியென்று நான்நம்புகிறேன்.

அன்பு, ஆன்மீகம், நெறி, நல்லொழுக்கம் இவற்றைத் தயவுசெய்து கடவுள், காவி, மதம், மடாதிபதிகளோடு இணைத்துக் குழப்பிக் கொள்ளாதீர்கள்.இரண்டும் வெவ்வேறு. சத்தியத்தைத் தேடுபவர்களில் ஒருவராக, நீங்களும் ஒரு காலத்தில் இருந்தீர்கள் என்பதனால்தான் (தொடர்ந்து ஒருவேளைஇருக்கவும் கூடும் என்ற நம்பிக்கையினாலும் தான்) உங்களுக்கு இதைச் சொல்கிறேன்.

அன்புள்ள, ஞாநி

15-4-83

இந்தக் கடிதத்தை 1.5.83 துக்ளக் இதழில் சோ வெளியிடாததன் வாயிலாக அவருடைய பத்திரிகை தர்மம் என்னவென்று தெரிந்துவிட்டது.

கடந்த மூன்று இதழ்களாக, துக்ளக் பத்திரிகையில் துர்வாசர் என்பவர் தமிழில் மலிந்திருக்கிற தரங்கெட்ட எழுத்துக்களை (சரியாகவே) விமர்சித்து எழுதிவருகிறார். இதுபற்றி 1-5-83 துக்ளக் இதழில் சோ வெளியிட்ட அறிவிப்பைப் பார்க்கலாம்.

"கவலையில்லை

குறிப்பு: திரு. ஹேமா ஆனந்த தீர்த்தன் மீண்டும் ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அதுவும் பிரசுரமாகும். வாசர்களில் மிகச்சிலர் எழுத்தாளர்கள் சிலரைஆதரித்துக் கடிதம் எழுதியிருக்கிறார்கள். அவையும் பிரசுரமாகும். இது பற்றிய எல்லா வாதங்களுக்கும் பதில் தர துக்ளக் தயாராக இருக்கிறது.இன்றைய பத்திரிகை உலகிலும் எழுத்துலகிலும் பலர் சேர்ந்து ஓட விட்டிருக்கும் சாக்கடையைச் சுத்தப்படுத்துவது என்ற முயற்சியில் அச்சாக்கடையில்இறங்குவது என்ற தீர்மானத்தை நன்றாக யோசித்தே செய்தோம். விடுவதாக இல்லை.

- ஆ.ர்."

இவ்வாறு அந்த அறிவிப்பில் சோ தெரிவித்திருக்கிறார். துர்வாசர் கட்டுரைக்கு எத்தனை பேர் பதில் எழுதினாலும் கவலையில்லை. சமாளிக்கலாம்.ஏனென்றால் துர்வாசர் சத்தியத்தின் பக்கம் நிற்பதுதான் அந்த பலத்தைத் தருகிறது.

ஆனால், சங்கராச்சாரி விவகாரம் பற்றி, சோ எழுதியதற்கு எதிராக ஒரு கடிதத்தைக் கூட அவரால் வெளியிட முடியவில்லை. ஏனென்றால், அவருடைய,சங்கராச்சாரியுடைய பொய்கள் அப்போது அம்பலமாகி விடுகின்றன.

ஆபாசப் பத்திரிகைகள் ஆபாசமாகத் தொடர்ந்து இயங்குவதில் ஆச்சரியமில்லை. ஆனால், கருத்துலகில் ஆரோக்யமான மாற்றங்களுக்காக உழைப்பதாகஒரு இமேஜை மூலதனமாக்கிக் கொண்டு இயங்கும் துக்ளக், அந்தக் கருத்துலக நேர்மை இல்லாத பத்திரிகையாக இருப்பது ஒரு சாதாரண விஷயமல்ல.மக்களின் மூளையை இன்னொரு வடிவத்தில் திசை திருப்பும் வேலையாக இதுவும் ஆகிவிடுகிறது.

எல்லாப் பத்திரிகைகளையும் விமர்சித்து சாக்கடையை சுத்தப்படுத்தும் வேலையில் துர்வாசரை இறக்கியுள்ள துக்ளக், தன்னையும் சுய விமர்சனம் செய்துகொள்ளும் நேர்மை அதற்கு இருக்குமா என்பது இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு நிச்சயம் சந்தேகத்துக்குரியதாகி விட்டது. அப்படி செய்தால் அதுவும் ஒருகண்துடைப்பு வேலையாக மட்டுமே மேற்கொள்ளப்படலாம்.

இங்கேதான் ஜெயேந்திர சரஸ்வதிகளிலிருந்து சோ வரை யாருக்கும் வெட்கமில்லையே!

இந்த சூழ்நிலையில் உண்மையே உன் நிலை, விலை என்ன?

- ஞாநி.



------------------------------------நூல்:-"சின்ன சங்கராச்சாரி - யார்?" - பக்கம்: 33-44

பத்திரிக்கை எப்படி இருக்க வேண்டும்?



26.8.09

1948 இல் ஈரோட்டில் நடந்த தி.க சிறப்பு மாநாடு- ஒரு பார்வை


1948-ஈரோட்டில் தடம் பதித்த வரலாற்றுச்சுவடுகள்!
19ஆவது தி.க சிறப்பு மாநாட்டில் மக்கள் வெள்ளம்
தந்தை பெரியார் தலைமையில் அண்ணா,திரு.வி.க., என்.எஸ்.கே பங்கேற்பு!
ஈரோட்டுப் பாசறையில் இளங்காளைகள் எக்காளம்!


விடுதலையில் அந்த காலத்தில் (ஈரோட்டில்) வெளிவந்த சம்பவங்களை இங்கே தருகின்றோம்.

ஈரோடு, அக். 24 (1948)_ ஈரோட்டில் திராவிடர் கழக 19ஆவது சிறப்பு (ஸ்பெஷல்) மாநாடு நேற்று பிற்பகல் தோழர் சி.என்.அண்ணாதுரை எம்.ஏ, தலைமையில் துவங்கியது.

இம்மாநாட்டில் திராவிடத் தலைவர் பெரியார் அவர்களும் தமிழ்ப்பெரியார் திரு.வி.க அவர்களும், நகைச்சுவை அரசு என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களும் ஏனைய தலைவர்களும் கலந்துகொண்டுள்ளனர்.

காலையில் ஈரோடு இதுவரை கண்டிராத அளவில் பிரம்மாண்டமான ஊர்வலம் நடைபெற்றது. ஆயிரமாயிரம் தாய்மார்களும், பல்லாயிரக்கணக்கான திராவிட இளங்காளைகளும் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். மாநாட்டிற்கு அய்ம்பது ஆயிரத்துக்கு மேற்பட்டு மக்கள் வந்து குழுமியிருந்தனர்.

தலைவராகத் தோழர் சி.என்.அண்ணாதுரை அவர்களைப் பிரரேபித்ததை ஆதரித்து திராவிடர் தலைவர் பெரியார் அவர்கள் குறிப்பிடுகையில் இளைஞர் வசம் பொறுப்பை ஒப்படைப்பதே தனது கருத்தாகுமெனக் குறிப்பிட்டார்.

மாநாட்டின் நேற்றைய நடவடிக்கை தலைவர் தளபதி அண்ணாதுரை அவர்கள் முன்னுரையுடனும் நகைச்சுவையரசு தோழர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் காந்தியார் படத்திறப்பு விழாவுடனும் முடிவடைந்துள்ளது.

பெரியாருடைய இடத்தில் மாநாடு


மாநாட்டில் கலந்துகொள்வதற்காக திராவிட நாட்டின் பல நாட்டின் பல பாகங்களிலிருந்தும் கழக நிருவாகஸ்தர்களும், தலைவர்களும், தோழர்களுமாக நேற்று காலை முதற்கொண்டே இவண் வந்து குவிந்து கொண்டிருந்தனர். மாநாட்டுத் தொண்டர்கள் ரயிலடியிலும், பஸ் நிலையங்களிலும் இருந்து, தோழர்களை வரவேற்று அவரவர்களுக்-கென்றே மாவட்ட வாரியாக ஒதுக்கப்பட்டிருந்த இருப்பிடங்களுக்கு அழைத்துச்சென்று வேண்டிய வசதிகளைச் செய்து கொடுத்து உதவிவந்தனர்.

மாநாட்டுப் பந்தல் பழைய ரயில்வே ஸ்டேஷனுக்கு அருகாமையில் வாய்க்காலுக்கு ஓரமாய் அமைந்துள்ள பெரியார் அவர்களுக்குச் சொந்தமான திடலில் அமைக்கப்பட்டிருந்தது. பந்தல் மிகப்பெரியதாகவும் பல்லாயிரக்கணக்கான மக்கள் இருக்க வசதியுள்ளதாகவும் அமைக்கப் பெற்றிருந்ததோடு மின்சார விளக்குகளால் நன்கு அழகு செய்யப்பட்டிருந்தது. ஒலிபெருக்கி வசதியும் நன்கு அமைக்கப்பட்டிருந்தது. இடையிடையே மழையினால் தொல்லை ஏற்பட்டுக்கொண்டிருந்தும் பந்தல் வேலை செவ்வனே முடிவு பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. தலைவர்கள் தங்கி சொற்பொழிவாற்றுவதற்கான மேடையும் கருப்பு துணிகளாலும், கருப்புக்கொடிகளாலும், படங்கள் வரைந்த பலகைகளாலும் மிக நேர்த்தியாக அலங்கரிக்கப்பட்டிருந்தது-.

மாநாட்டுப் பந்தலுக்கு அடுத்தாற்போலவே உணவு விடுதியும் அமைக்கப்பெற்றிருந்தது. மாநாட்டிற்கு வந்திருந்த தோழர்களுக்கு மிகுந்த வசதியாய் இருந்தது.

ஈரோடு கண்டிரா ஊர்வலம்

ஊர்வலத்தில் கலந்துகொள்ளவேண்டி உணவு விடுதியில் சிற்றுண்டி எடுத்துக்கொண்டு தோழர்கள் இன்று அதிகாலையிலேயே முனிசிபல் ரெஸ்ட் ஹவுஸூக்கு முன்னிலையில் வந்து சேர்ந்துவிட்டனர்.

பெரியார் அவர்கள் மற்ற தோழர்களுடன் காலை 9 மணி சுமாருக்கு மேற்படி ரெஸ்ட் ஹவுசை அடையவும் முன்னே மேள வாத்தியம் முழங்க அதைத் தொடர்ந்து கருஞ்சட்டைத் தோழர்கள் இயக்க ஒலி முழக்கம் செய்துகொண்டுபோக பெரியாரவர்கள், அவர்கள் பின் ஆயிரக்கணக்கான தாய்மார்கள் புடைசூழ, சிம்மநடை நடந்து செல்ல அவர்கள் பின் பெத்தாம்பாளையம் தோழர் பழனிசாமி, தோழர் சி.என்.அண்ணாதுரை, தோழியர் குஞ்சிதம் அம்மையார், தோழர் குருசாமி, தோழியர் இந்திராணி பாலசுப்பிரமணியம் ஆகியவர்கள் இரண்டு செங்காளைகள் பூட்டப்பட்ட சேரியெட்டில் அமர்ந்து செல்ல சுமார் 20 ஆயிரம் தோழர்களைக் கொண்டு ஊர்வலம் காலை 9 மணிக்குப் புறப்பட்டு மணிக்கூண்டு, கருங்கல்பாளையம் வழியாக சுமார் 5மைல் சுற்றி சரியாக 12 மணிக்கு மாநாட்டுப் பந்தலை வந்தடைந்தது. வழி நெடுக இருமருங்கிலும் தலைவர்களைக் காண பொதுமக்கள் கூடியிருந்து புன்முறுவல் செய்தும் வாழ்த்தொலி முழக்கம் செய்தும் வரவேற்றனர். வீதிகள் முழுவதும் தோரணங்களாலும், அட்டை வளைவுகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன. கருங்கல்பாளையத்தில் தலைவர்களுக்கு நேர்த்தியான வரவேற்பு அளிக்கப்பட்டது. (தந்தை பெரியார் ஊர்வலத்தில் நெஞ்சை நிமிர்த்தி பெருமிதத்துடன் நடந்தே வந்தார்)

பிறகு தோழர்களும் தாய்மார்களும் மாநாட்டு விடுதியில் உணவெடுத்துக்கொண்டு பந்தலில் வந்து அமர்ந்தனர்.

பிற்பகல் நிகழ்ச்சிகள்

சரியாக 3.30 மணி சுமாருக்கு பெரியார் அவர்கள், தமிழ்ப் பெரியார் திரு.வி.க, தோழர் அண்ணாதுரை, தோழர் என்.எஸ்.கிருஷ்ணன் ஆகிவர்களுடன் பந்தலை வந்தடையவும் கூடியிருந்த மக்கள் யாவரும் கைத்தட்டி ஆரவாரம் செய்து தமது மகிழ்ச்சியைக் காட்டிக்கொண்டனர்.

சற்றுநேரத்திற்குப் பிறகு அமைதி நிலவும் தோழர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் தமது பக்க வாத்தியங்களுடன் திராவிட மாநாடு வாழ்க செல்வத்திருநாடு என்று இன்னிசை பாட மாநாட்டு நிகழ்ச்சி இனிது துவக்கமாகியது-.

கொடியேற்றுவிழா

தோழர் பெத்தாம்பாளையம் பழனிச்சாமி அவர்கள் தோழியர் இந்திராணிபாலசுப்பிரமணியம் அம்மையார் அவர்களைக் கொடியேற்றுவிக்குமாறு கேட்டுக்கொள்ள அம்மையாரும் எழுந்துவந்து திராவிட நாட்டின் இணையற்ற இருண்ட நிலையையும் எடுத்துக்கூறி, தாய்மார்கள் தம் மூடநம்பிக்கைகளையும் மூட பக்தியையும் விட்டு திராவிட நாட்டிற்கு நற்பணியாற்ற முற்படக்-கேட்டுக்கொண்டு கழகக் கொடியை ஏற்றுவித்தார்கள்.

மாநாடு திறப்பு

பிறகு தோழர் எஸ்.குருசாமி அவர்கள் திராவிடர் கழகத்தின் வளர்ச்சியைப் பற்றி சுருக்கமாகக் கூறிவிட்டு இம்மாநாட்டில் சில முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என்று தாம் எதிர்ப்பார்ப்பதாகவும் இறுதியாக நடைபெற இருக்கும் ஆரியர் திராவிடர் போராட்டத்தில் எல்லா திராவிடத் தோழர்களும் கலந்துகொண்டு மிகுந்த கட்டுப்பாட்டோடும் பொறுப்போடும் பணியாற்ற வேண்டும் என்றும் ஒவ்வொரு திராவிடனும் ஒவ்வொரு பெரியாராக வேலை செய்ய வேண்டுமென்றும் கூறி மாநாட்டைத் திறந்து வைத்தார்.

பிறகு தோழர் பழனிசாமி அவர்கள் மாநாட்டிற்கு வந்திருந்த அனைவர்க்கும் நல்வரவு கூறி மாநாட்டிற்கு வந்துள்ள தோழர்களுக்கு போதிய வசதி செய்து கொடுக்க இயலாமற்போய்விட்டதற்காக தம்மை மன்னிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

பிறகு தோழர் ஈ.வி.கே.சம்பத் அவர்கள் தற்கால நெருக்கடியை உத்தேசித்து மாநாடு மிக அவசரமாகவும் போதிய முன்னேற்பாடில்லாமலும் கூறப்பட்டதால் சகிக்க முடியாத சில இடைஞ்சல்கள் ஏற்பட்டுவிட்டதென்றும் இவ்விடைஞ்சல்களை அண்மையில் வர இருக்கும் சிறைச்சாலை அனுபவத்தின் ஒத்திகையாகக் கருதிக்கொண்டு தோழர்கள் அனைவரும் மகிழ்ச்சியோடு ஏற்கவேண்டுமென்று கேட்டுக்கொண்டார். தோழர் கே.கே.நீலமேகம் அவர்கள் தோழர் சி.என்.அண்ணாதுரை அவர்களை தலைவராகப் பிரரேபித்தார்.

தலைவர் பிரரேபணை

குடந்தை தளபதி தோழர் கே.கே.நீலமேகம் அவர்கள் கழகத்தினிடையே இருந்து வந்த சில்லரை அபிப்பிராய பேதங்கள் எல்லாம் நெருப்பிலிடப்பட்டு சுட்டு சாம்பலாக்கப்பட்டதற்காக தாம் உண்மையிலேயே மிகமிக மகிழ்ச்சியடைவதாகவும் அம் மகிழ்ச்சிப் பெருக்கின் காரணமாகவே தாம் தோழர் சி.என்.அண்ணாதுரை அவர்களைத் தலைவராகப் பிரரேபிக்க முன்வந்திருப்பதாகவும் கூறி தோழர் சி.என்.அண்ணாதுரை அவர்களை தலைமையேற்று மாநாட்டைச் சிறப்பாக நடத்திக்கொடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.

பிறகு சேலம் தோழர் எ.சித்தையன் அவர்கள் இந்தி எதிர்ப்பு இயக்கத்தை கிண்டல் செய்து திரியும் காங்கிரஸ்காரர்களுக்கு நல்ல படிப்பினை கற்றுக்கொடுக்கும் ரீதியில் காரியம் ஆற்றப்படு-வதற்கான வகையில் இம்மாநாட்டின் கண் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என்று தாம் எதிர்பார்ப்பதாகக் கூறி தலைவர் பிரரேபணையை ஆதரித்துப் பேசினார்.

தள்ளாத நிலையில்

பிரரேபிக்கும் முறையில் பெரியார் அவர்கள் மாநாட்டில் தமிழ்ப்பெரியார் திரு.வி.க அவர்களும், நகைச்சுவை அரசு என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களும் மற்றும் தோழர் எம்.ஆர்.இராதா, தோழர் மு.கருணாநிதி ஆகியவர்கள் தம் குழுவினர்களுடனும் கலந்துகொண்டிருப்பதின் சிறப்பை எடுத்துக்கூறியதோடு,

தமது தள்ளாத நிலையில் இனி ஜெயிலில் நல்ல இடம் பார்த்துக்கொண்டு ஓய்வெடுத்துக்கொள்வது தான் விரும்பத் தக்கதென்றும், இனி இளைஞர்கள் கையிலேயே சகலமும் ஒப்படைக்கப்பட வேண்டும் என்ற விருப்பத்தினால்தான் தோழர் சி.என்.ஏ அவர்களை தலைமை வகிக்குமாறு கேட்டுக்கொள்ள வேண்டும் என்கிற வரவேற்புக்கமிட்டியினரின் விருப்பத்திற்கு தாம் ஒப்புக்கொண்டதாகவும் இளைஞர்களின் உள்ளங்களிலெல்லாம் தோழர் அண்ணாதுரை அவர்கள் எவ்வளவு தூரம் குடிகொண்டுள்ளார் என்பது தமக்குத்தெரியு-மென்றும் கூறி மாநாட்டிற்கு வந்திருப்போர் தமக்கு ஏற்படும் சில்லரை இடைஞ்சல்களுக்குத் தம்மை மன்னிக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.

தலைவர் அண்ணாதுரை

பிறகு தோழர் சி.என்.அண்ணாதுரை அவர்கள் தலைமை ஏற்று திராவிடர் கழகம், திராவிட நாட்டிற்கு நல்லதோர் திட்டம் வகுத்துத் தரத்தான் பாடுபட்டு வருகிறதே ஒழிய வேறு யாருக்கும் விரோதமாக அது வேலை செய்து வரவில்லையென்றும் திராவிடர் கழகம் எதை நல்ல திட்டமென்று கருதுகிறதோ அதை நிறைவேற்றி வைப்பதற்கு முட்டுக்கட்டைகளாக இருக்கும். மற்ற கட்சியினரை தமது முயற்சிக்கு விரோதமாயிருக்கும் அளவுக்குக் கண்டனம் செய்யத்தான் வேண்டியிருக்கிறதென்றும் விரைவில் அறப்போர் கூடுமானால் நவம்பர் முதல் தேதியே அறப்போர் துவங்கும் என்றும் அதில் எல்லோரும் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

பிறகு நகைச்சுவையரசு என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் காந்தியார் படத்தைத் திறந்து வைத்தார்கள்.

இதோடு மாலை நிகழ்ச்சி முடிவுற்றது. இரவு நாடகம் நடைபெறும். விவரம் நாளை. (நமது நிருபர்) விடுதலை 24.10.1948

ஈரோடு தனிமாநாட்டில் உரிமையாளரிடம் கழகச் சாவியை ஒப்படைக்க உறுதிகொண்டேன்- பயணம் சொல்லிக்கொள்ளும் மாநாட்டுச் சிறப்பு பற்றி- பெரியார்! மக்கள் உள்ளத்தின் சாவியைப் பெற்றேன் உவகையுடன் உபயோகிப்பேன் - அண்ணாதுரை!

இன்பத் திராவிடமெய்தப்பெற ஈரோடு காட்டும் பாதை

என்னுடைய பொறுப்பை ஒரு இளைஞரிடம் ஒப்படைக்க வேண்டுமென்று நெடு நாளாகவே எனக்கு ஆசையிருந்து வருகிறது. பெட்டிச் சாவி என்னிடமிருந்தால் ஆபத்து ஒன்றுமில்லை யென்றாலும், எத்தனை நாளைக்குத்தான் நாமே வைத்திருப்பதென்று அலுப்பு ஏற்பட்டு விடுகிறது. எனவே உரிமையாளரிடம் சாவியை ஒப்படைக்க உறுதி கொண்டுவிட்டேனென்பதாகத் தலைவர் பெரியாரவர்கள் ஈரோடு மாநாட்டில் தளபதி அண்ணாதுரையைத் தலைவராக வழி மொழிந்து பேசுகையில் குறிப்பிட்டார்.

பிரசார இயக்கமாகப் பணியாற்றி வந்த திராவிடர் கழகத்தை சர்க்கார் தாமாகவே பெரும் போராட்ட இயக்கமாக மாற்றிவிட்டனரென்பதாக மாநாட்டைத் திறந்து வைத்த ஆசிரியர் குருசாமி அவர்களும், பெரியார் தம் வாழ்விலேயே இன்பத் திராவிடத்தைக் கண்டு களிப்பாராக என்று கொடியேற்று விழாச் சொற்பொழிவாற்றிய இந்திராணி சுப்ரமணியம் அம்மையாரவர்களும், வாழ்வு அல்லது சாவு என்பதாக வரவேற்புக் கழகத்தலைவர் பெத்தாம் பாளையம் தோழர் பழனிசாமியவர்களும் குறிப்பிட்டார்கள்.

ஈரோட்டில் இம்மாதம் 23, 24 தேதிகளில் நடை பெற்ற 19 ஆவது திராவிட கழக தனி மாநாட்டில் தோழியர் இந்திராணி பாலசுப்ரமணியம் அம்மையார் அவர்கள் ஆற்றிய கொடியேற்று விழா சொற்பொழிவின் சுருக்கமாவது:

இம்மாதிரி நமது இயக்க சரித்திரத்திலேயே மிக முக்கிய மாநாடாக இருக்கும் என்று கருதுகிறேன். காங்கிரஸ்காரர்கள் இந்நாட்டுக்கு சுதந்திரம் வந்து விட்டதாகப் பறைசாற்றிக் கொண்டிருக்கும் இந்தக் காலத்தில் அது உண்மைதானா என்று பரீக்ஷை பார்க்கும் நீதியில் உண்மையில்லை என்று நிரூபிக்கும் ரீதியில் நாம் ஹிந்தி எதிர்ப்பு மறியலை மீண்டும் துவக்கி நடத்த தீர்மானம் செய்யப்போகும் மாநாடு இது. இதன் முக்கியத்தைக் கருதியே நீங்களும் பெருவாரியாக வந்திருக்கிறீர்கள். எங்கு பார்த்தாலும் எப்பக்கம் திரும்பினாலும் ஒரே கருப்பு மயமான காட்சியே கண்ணுக்குப் புலனாகிறது. நான் ஏற்றப்போகும் கொடியும் செங்குருதி தெளிக்கப்பெற்ற கருப்புக் கொடிதான். அக்கருப்பு நம் நாட்டின் இன்றைய நிலையையும், அச்சிகப்பு இவ்விருண்ட நிலையைப் போக்க நாம் எடுத்துக் கொள்ளும் முயற்சியையும் காட்டுகிறது. ஒரு காலத்தில் பகுத்தறிவுடைய மக்களாக வாழ்ந்த நாம்இன்று பல ஆரிய மூட நம்பிக்கைகளுக்கு உள்ளாக்கப்பட்டு அறிவிழந்திருக்கிறோம். ஒரு காலத்தில் இந்நாட்டைத் தவிர்த்த ஏனைய பல நாடுகளையும் புகழுடன் அரசாண்ட நம்மவர்கள் இன்று அதோ வெளிநாடுகளில் கால் வயிற்றுக் கஞ்சிக்கு கங்காணிகளாக, கூலிகளாக வேலை செய்து வருகிறார்கள்.

பெரியார் வழி நிற்போம்

சொந்த நாட்டில் சொந்த மொழிக்காக சொந்த மக்களுடனேயே போரிட்டுத் தீரவேண்டிய இழி நிலையில் நாமிருக்கிறோம். இதை விட இருண்ட நிலையையா நாம் காணப்போகிறோம்? இவ்விருண்ட நிலை ஒழிந்து நம்நாட்டில் சுதந்திரம் கமழ நாம் எல்லோரும் பெரியார் வழி நின்று பாடுபட்டு வருவோமாக. பெரியாரும் தம் வாழ்விலேயே நாம் நினைக்கும் இன்பத் திராவிடத்தை செங்கொடி பறக்கும் திராவிடத்தைக் கண்டு களிப்படையட்டும்.

மேற்படி மாநாட்டைத் திறந்து வைத்துப் பேசுகையில் தோழர் எஸ். குருசாமி அவர்கள் திறந்து வைத்தார்.

பிறகு மாநாட்டுத் தலைவர் தோழர் சி.என். அண்ணாத்துரை அவர்கள் தலைமையுரையாகப் பேசியதாவது:

மதிப்பிற்குரிய பெரியார் அவர்களே! பெரியார் திரு.வி.க அவர்களே! தோழர்களே! தாய்மார்களே!

இம்மாநாடு கூட்டப்பட்டிருக்கும் நோக்கம் எனக்கு முன்பேசிய தோழர்களாலும், தலைவர் பெரியார் அவர்களாலும் நன்கு எடுத்துக்கூறப்பட்டது. நமது சென்ற மாநாடு தூத்துக்குடியில் பாட்டாளிகளின் விடுதலை சரித்திரத்தில் உலக புரட்சி சரித்திரத்தில் முக்கியமாயமைந்துள்ள மே மாதத்தில் நடைபெற்றது. அதன் பிறகு 5 மாதங்கள் கழித்து அக்டோபர் மாதத்தில் நாம் இன்று இங்கு கூடியுள்ளோம். அக்டோபர் என்பது பாட்டாளி மக்களுடைய புரட்சிப் போராட்டத்தின் மிக பயங்கரமான ஒரு பகுதியை குறிப்பிடும் மாதமாகும். அது எவ்வளவுக் கெவ்வளவு பயங்கரமானதோ அவ்வளவுக்கவ்வளவு முக்கியத்துவமும் வாய்ந்தது. ஏனெனில் அது அவர்களுக்கு வெற்றிகரமாக முடிந்தது. விடுதலை வாங்கித் தந்தது.

அக்டோபர் சிறப்பு

மே மாதம் விடுதலைக்கு வித்திட்ட மாதம் என்றால் அவ்வித்து முளைவிட்டு வளர்ந்து மரமாகி பூத்துக் காய்த்தது போல் அக்டோபர் மாதம் ஒரு மாபெரும் புரட்சிப் புயல் வீசப்பட்ட மாதம் ஆகும். சோவியத் ரஷ்யாவில் அடக்குமுறைக்கு ஆளான பாட்டாளி மக்கள் தம் உடலிலிருந்து ரத்தம் ஒழுக ஒழுக தம் தலைவர் முன் நின்று இனி ஒருபோதும் சகித்திரோம். எப்பாடு பட்டாயினும் எவ்வளவு கஷ்டத்திற்குள்ளாயினும் இவ்வடக்குமுறையை இக்கொடுங்கோன்மையை ஒழித்தே தீருவோம் என்று சூளுரைத்து நின்ற காலம் அது.

நாமும் அதுபோல்தான் நம் தலைவர் தோட்டத்தில் அவர் முன் சூளுரைக்க நிற்கின்றோம். சிறை சென்று அவதிப்பட்டவர்கள், தடியடிக்கு ஆளாகியவர்கள், மற்றும் சர்க்காரின் பல கொடுங்-கோன்மைக்கு ஆளாகியவர்கள் என நாம் அதே அக்டோபரில் கூடியிருப்பது கவனிக்கத்தக்கது.

உரிமைப் போர் துவக்கம்


புரட்சி முழக்கம் செய்ய உரிமை முழக்கம் செய்ய, நாம் இன்று ஈரோட்டில் கூடியுள்ளோம். இவ் உரிமைப் போர் துவக்க நிகழ்ச்சி நம் நாட்டுச் சரித்திரத்தில் ஏன், உலக சரித்திரத்திலேயே கூட பொன்னெழுத்துக்களில் பொறிக்கப்பட வேண்டிய ஒரு முக்கிய நிகழ்ச்சியாய் அமையக் கூடியதாகும்.

இன்று துவங்கும் இவ்வுரிமைப் போர் நம் ஆயுட்காலத்திற்குள்ளாகவே ஆகிவிட்டால் நமது பிள்ளைகள் சந்ததியார் தொடர்ந்து நடத்திக்கொண்டிருப்பார்கள். அப்படிப்பட்ட தொடர்ந்து நடத்தப்பட்டு வரவேண்டிய ஒரு தொடர்கதைப் போராட்டமாகும் இது.

எனவே, சர்க்கார் நூலை ஹிந்தியை எடுத்துவிடுவார்களானாலும் அதோடு இப்போராட்டம் நின்றுவிடாது. தொடர்ந்து உரிமை கிடைக்கும் வரை அறப்போர் நடைபெற்றே தீரும்.

இம்மாநாட்டுக்கு நான் தலைமை வகிக்க ஏதேனும் தனிமையான தகுதியோ, தக்க காரணமோ, அவசியமோ உண்டென்றால் இல்லையென்றுதான் கூற வேண்டும்.

மகனிடம் பெட்டிச்சாவி ஒப்படைப்பு

போராட்டம் நடைபெறுமானால் அண்ணாத்துரை நழுவிவிடுவானோ என்று சிலர் கொண்டிருந்த சந்தேகத்தை போக்கும் அளவுக்கு மட்டும் வேண்டுமானால் இது பயன்படலாமென்று நினைக்கிறேன். என்னைப் பொறுத்த வரையில் இதில் யாருக்கும் சந்தேகம் இருக்க வேண்டாம் என்பதை தெரிவித்துக்கொள்ளுகிறேன். போராட்ட காலத்தில் அபிப்பிராயம் பேதங்கள் இருக்க இடமேயில்லை. மற்றபடி பெரியார் அவர்கள் பெட்டி சாவியை என்னிடம் ஒப்படைத்ததாகத் தெரிவித்தார். பொறுப்புள்ள மகனிடம் பெட்டி சாவி ஒப்படைப்பதால் அவன் தாறுமாறாக அதை உபயோகித்து விடமாட்டான். திறக்கும் போது தந்தையைக் கேட்டுக் கொண்டு தான் திறப்பான். தனக்கு வயதுவந்த பிறகும் சாவி தந்தையிடமே இருந்தால் எவ்வளவு சாதுவான மகனுக்கும் கொஞ்சம் அருவருப்பு ஏற்படுவது சகஜம்தான். இருந்தாலும் அப்படியொன்றும் கிளர்ச்சி செய்தவன் அல்ல நான். மேலும் இயக்க பணப்பெட்டியின் சாவியை அவர் என்னிடம் அளித்ததாக நான் கருதிக்கொள்ளவில்லை.

மக்களுடைய உள்ளத்தின் சாவியை, சிறைச்சாலை பூட்டுச்சாவியை, இதைத் தான் என்னிடம் ஒப்படைப்பதாக நான் கருகிதுகிறேன்.

அதை மிக மிக பொறுப்புணர்ச்சியோடு உபயோகித்து வருவேன்.

மேலும் பெரியாரவர்கள் என்னிடம் மக்கள் உள்ளத்தின் சாவியை சிறைச்சாலை பூட்டு சாவியையே ஒப்படைத்ததாகக் கருதுகிறேன். அதை மிக மிக மகிழ்ச்சியாக உபயோகித்து வருவேனென்பதாகத் தளபதி அண்ணாதுரையவர்கள் தனது தலைமையுரையில் குறிப்பிட்டார்.

---------------- தகவல்: சிங்.குணசேகரன் - "விடுதலை" 26.10.1948