Search This Blog

8.8.09

இனி இந்தியாவுக்கு ஆபத்தே இலங்கை அரசால்தான்!




இனி இந்தியாவுக்கு ஆபத்தே இலங்கை அரசால்தான்!
குருவரெட்டியூர் பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் முன்னுணர்வுடன் விளக்கம்


இனி இந்திய அரசுக்கு ஆபத்தே இலங்கை அரசால்தான் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அவர்கள் குருவரெட்டியூர் பொதுக்கூட்டத்தில் கூறி விளக்கவுரையாற்றினார்.

குருவரெட்டியூரில் 18.7.2009 அன்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

நான் கடவுள் மீது மந்திரம் விட்டுவிட்டேன்; தண்ணீர் ஊற்றி விட்டேன்; கும்பாபிஷேகம் பண்ணிவிட்டேன்; அதனால் கடவுள் உள்ளே வந்துவிட்டார் என்று சொல்லுகின்றான் அர்ச்சகப் பார்ப்பான்.

அனைத்து ஜாதியினர் அர்ச்சகராக

நான் மட்டும் தான் உள்ளே வரவேண்டும். நீங்கள் எல்லாம் வெளியே நிற்க வேண்டும் என்று சொன்னான். அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்று ஏன் பெரியார் சென்னார்? பெரியாருக்கு என்ன மோட்சத்தில் முன்சீட்டு கிடைக்க வேண்டும் என்பதற்காகவா?

ஆனால், இன்றைக்கு மணியடிக்கின்ற கோவலில் நாங்கள் மட்டும் தான் அர்ச்சகராவோம் என்று சொன்னால் என்ன அர்த்தம்? ஆதிதிராவிடர் அய்க்கோர்ட் ஜட்ஜாகலாம்; ஆதிதிராவிடர் அய்.ஏ.எஸ் ஆகலாம்; ஆதிதிராவிடர் அர்ச்சகராக முடியாது என்று சொன்னால் என்ன அர்த்தம்?

அர்ச்சகர் வேலை ரொம்ப முக்கியமா? என்று கூட நீங்கள் நினைக்கலாம். அர்ச்சகர் வேலை ரொம்பப் பெரிதா? எவனுக்கு சமஸ்கிருதம் புரியும்?

கலைஞர் போட்ட முதல் சட்டம்

கல்யாண மந்திரத்தை கருமாதி வீட்டில் சொல்லுவது; கருமாதி வீட்டில் கல்யாண மந்திரத்தை சொல்லுவது; இது தானே பார்ப்பனர்களுடைய வேலை. தந்தை பெரியார் அவர்கள் பாடுபட்டதனுடைய விளைவு கலைஞர் ஆட்சிக்கு வந்த நிலையில், அய்யா அவர்கள் மறைந்தபொழுது அரசு மரியாதையோடு அவரைப் புதைக்கத் தான் முடிந்தது.

ஆனால், நெஞ்சில் தைத்தமுள். அந்த முள்ளை நான் எடுக்க முடியவில்லையே என்று கலைஞர் அவர்கள் வேதனைப்பட்டார். அய்ந்தாவது முறையாக ஆட்சிக்கு வந்து பொற்கால ஆட்சியை நடத்திக்கொண்டிருக்கிறாரே இந்த, காலகட்டத்திலே கலைஞர் அவர்கள் ஆட்சிக்கு வந்தவுடனே இந்த முறை முதலில் போட்ட சட்டம் அமைச்சரவைக் கூட்டத்திலே எடுத்த முதல் முடிவே சொன்னதைச் செய்வோம். செய்வதையே சொல்வோம் என்பதற்கு ஏற்ப அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் என்ற சட்டத்தைப் போட்டு, அய்யர் உள்பட ஆதிதிராவிடர் வரை அர்ச்சகர் ஆக எல்லோருக்கும் கலைஞர் அர்ச்சகர் பயிற்சியைக் கொடுத்து விட்டாரே!

கருவறைக்குள் கருப்புருவம்

இன்னும் ஆறு மாதத்தில் பார்ப்பீர்கள், பெரிய பெரிய கோவில்களில் எல்லாம் கருப்பாக ஓர் உருவம் மணி ஆட்டிக் கொண்டு வெளியே வரும். பார்ப்பனர் எல்லாம் வெளியே நிற்பான். நம்மாள் பிரசாதம் கொடுப்பான். பார்ப்பான் கை கீழே இருக்கும்.

பெரியார் இதைத்தான் சொன்னார், பார்ப்பான் கடவுள் இல்லை என்கிற வேலையை அவன் எடுத்துக் கொள்வான் என்று.

நாங்கள் சொல்ல வேண்டிய அவசியமில்லை. செட்டியார்வாள் எங்கே போறேள். கோயிலிலே ஒன்றும் இல்லை. கடவுள் இல்லை; கடவுள் இல்லை! என்று அவர்களே சொல்ல ஆரம்பித்துவிடுவார்கள். என்ன, ஆம்பிளை சாமி பொம்பிளை சாமியைக் குளிப்பாட்டுவதா?

கடவுள் இல்லை என்பது அவர்களுக்குத் தான் நன்றாகத் தெரியும். மனித உரிமை என்று சொல்லுகின்ற பொழுது ஒரு மனிதனுக்கு இருக்கின்ற உரிமை இன்னொரு மனிதனுக்கு மறுக்கப்படக்கூடியது.

மனித உரிமைக்காகப் போராடிய புரட்சியாளர்

மனித உரிமைக்காகப் போராடிய மாபெரும் புரட்சியாளர்தான் இதோ சிலையாக நிற்கிறாரே பகுத்தறிவு பகலவன் அறிவு ஆசான் அவர்கள். அதனுடைய விரிவாக்கம்தானே இன்றைக்கு நடைபெறுகிறது. இங்கு சொன்னார்களே பக்கத்திலே 30 கல் தொலைவில் இலங்கையில் என்ன நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என்பதைப் பற்றி.

நம்முடைய தொப்புள் கொடி உறவுள்ளவர்கள். அங்கேயிருக்கிற சிங்களர்கள் நம்மக்களை எல்லாம் மதிக்காமல், நம் மாணவர்களுக்கு வாய்ப்புக் கொடுக்காமல், நம்முடைய மொழி தமிழ் மொழிக்கு இடம் தராமல், சிங்களம் மட்டும் தான் ஆட்சி மொழி. சிங்களன் மட்டும்தான் இந்த நாட்டிலே வாழ வேண்டும் என்று சொல்லி தமிழினத்தை அழிக்கின்றார்கள்.

இலங்கையே நம்மவர்கள் அரும்பாடுபட்டு வளர்த்த நாடு

நம்மவர்கள் தேயிலைத் தோட்டத்தில் நுழைந்து நம்மவர்கள் அரும்பாடுபட்டு வளர்ந்த நாடு அந்த நாடு. 1948லே இந்த நாடு சுதந்திரம் பெற்றது. அதை வைத்துக்கொண்டு சிங்களர்கள் தங்கம் இஷ்டம் போல எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்று முடிவு எடுத்து தமிழினத்தை சிங்களன் அழிக்கத் தொடங்கிய பொழுதுதான் தமிழ் ஈழத்தை தந்தை பெரியார் போன்றவர்கள் சொல்லத் தொடங்கினார்கள்.

சிங்களனோடு ஒத்துப்போக முடியாது

முதலில் தமிழ் ஈழத்தைக் கேட்டது பிரபாகரன் அல்ல. பல பேருக்கு இந்த செய்தி தெரியாது. தமிழீழத்தைக் கேட்டது விடுதலைப்புலிகள் அல்லர். தமிழ் ஈழத்தை எப்படி ஆயுதத்தின் மூலமாகப் பெற்றுத் தருவது என்று போனவர்களே தவிர, அதற்கு முன்னாலே ஓர் அறப்போட்டத்தின் மூலமாக நாடாளுமன்றத் தேர்தலிலேயே தெளிவான தீர்ப்பை வாங்கி எங்களுக்கு தனிநாடுதான் தேவை. இனி சிங்களரோடு ஒத்துப்போகமாட்டோம் என்று தமிழர்களுடைய தீர்ப்பை, 19 இடங்களிலே போட்டியிட்டு 18 இடங்களிலே வெற்றி பெற்று நிலைநாட்டிய பெருமை ஈழத் தந்தை செல்வா அவர்களையே சாரும். அதுதான் வரலாறு. இன்றைக்கு அதற்காகத் தான் போராடுகிறார்கள்.

ரத்தம் சரணம் கச்சாமி

புத்தம் சரணம் கச்சாமி என்று சொன்ன சாமியார்கள் எல்லாம் இப்பொழுது ரத்தம் சரணம் கச்சாமி என்று சொல்லுகின்றார்கள்.

ஹிட்லரைவிட மிக மோசமானவன் ராஜபக்சே. இன்றைக்கும் 3 இலட்சம் பேருக்கு மேல் ஈழத்திலே தமிழர்கள் அகதிகளாக முள்வேலிக்குள் இருக்கிறார்கள். அகதிகள் கழிப்பறைக்கு கூட சுதந்திரமாகப் போக முடியவில்லையே. சிறைச்சாலையில் இருக்கிற கைதிகளுக்குக் கூட மனித உரிமைகள் உண்டு. ஆனால் இன்றைக்கு ஈழத்திலே வாழக்கூடிய எம்தமிழர் சமுதாயம், எம்முடைய தொப்புள் கொடி உறவுள்ள ஒரு சமுதாயத்திற்கு அந்த நிலைமை இல்லையே. இதைஅன்றிலிருந்து இன்றுவரை கேட்கிறோம். நேற்றும் கேட்டோம். தேர்தல் நேரத்திலும் கேட்டோம். இன்றும் கேட்கிறோம்.

சிலருக்குத் தேர்தல் வாண வேடிக்கை

சிலபேர் இந்தப் பிரச்சினையை தேர்தல் வாண வேடிக்கையாக, தேர்தலில் பணயம் வைத்து பந்தயம் கட்டலாமா என்று பார்க்கிறார்கள். கிராமத்தில் ஒரு பழமொழி சொல்லுவான், கருமத்திற்குரியவன் கடைசி வரையில் இருப்பான் என்று. நாங்கள் கருமத்திற்குரியவர்கள் அதனால் கடைசி வரையில் இருப்போம். இன்றைக்கு ஈழத்தில் உள்ள தமிழர்கள் உண்ண உணவின்றி செத்து மடியக்கூடாது என்பதற்காக உணவு, மருந்துப் பொருள்களை உலகத் தமிழர்கள் அனுப்புகிறார்கள்.

அந்த மருந்துகளைக் கூட நாங்கள் ஈழத்தமிழர்களுக்குத் தர மாட்டோம் என்று சொல்லக்கூடிய ஈவு இரக்கமற்ற மனிதாபிமானற்ற ஒரு கொடுமையான அரக்க உணர்வு இருக்கிறதென்று சொன்னால், இரக்க உணர்வு, இல்லாத ஓர் உணர்வு இருக்கிறதென்று சொன்னால் அது ராஜபக்சேவினுடைய அரசுக்கு அந்த ஆணவத்தனம் இருக்கிறது.

வணங்காமன்

ஆனால், இன்றைக்கு கலைஞர் அவர்கள் மத்திய அரசிலே பங்கேற்றிருக்கின்ற காரணத்தினாலேதான் முதலமைச்சராக அவர் உட்கார்ந்திருந்த காரணத்தினாலேதான் உடனடியாகத் தன்னுடைய அமைச்சர்களை அனுப்பி வணங்காமண் கப்பலில் இருக்கின்ற சரக்குகள் ஈழத்தமிழர்களுக்குக் கிடைக்க கலைஞர் அவர்கள் சொல்லி மத்திய அமைச்சர் ஆ.இராசா, வெளியுறவுத்துறை அமைச்சர் கிருஷ்ணா அவர்களை சந்தித்து சொன்னார்.

பிரச்சினைக்காகத்தான் நான் இங்கு திறக்கப்பட்ட பெரியார் சிலை திறப்பு விழாவில் கலந்துகொள்ள முடியவில்லை.

சோனியாகாந்தி அம்மையார், குடியரசு தலைவர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆகியோரைச் சந்திக்கின்ற ஈழத்தமிழர் பிரச்சினைக்கான குழுவில் நாங்கள் எல்லாம் அமைப்பாளர்களாக இருந்தோம்.

மத்திய அரசு உணர ஆரம்பித்திருக்கிறது

இந்தக் குழுவை முதல்வர் கலைஞர் மருத்துவ மனையி-லேயி-ருந்து அன்றைக்கு அனுப்-பினார்கள். நாம் கேட்டவுடனே தான் வேறு கப்பலுக்குப் பொருள்கள் மாறிஅங்கே செல்லுகிறது. அப்படி அனுப்பிய பொருள்கள் சரியாகச் சேர வேண்டும் என்று நமக்குக் கவலையிருக்-கிறது. செஞ்சிலுவைச் சங்கம் உலகளாவிய நிலையில் நடுநிலையில் இருக்கிறது. மூன்று லட்சம் ஈழத்தமிழர்கள் பசி, பட்டினியால் செத்துக்கொண்டிருக்-கின்றார்கள். இதற்கெல்லாம் தீர்வு வேண்டாமா? மனித உரிமை அடிப்படையிலே கேட்க வேண்டாமா? மத்திய அரசு சொன்னால் கூட இலங்கை அரசு கேட்பதில்லை. இதை மத்திய அரசு கொஞ்சம், கொஞ்சமாகப் உணர ஆரம்பித்திருக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக புரிந்து கொள்ள ஆரம்பித்திருக்கிறது. மூன்று செய்திகள் வந்திருக்கின்றன. அந்த மூன்று செய்திகளை மட்டும் உங்களுக்கு நான் சுட்டிக்காட்ட விழைகின்றேன்.

ராஜீவ் காந்தியை கொல்ல அன்றே முடிவெடுத்த சிங்களன்கள்

ராஜீவ் காந்தியைக் கொல்ல சிங்கள ராணுவம் சதி செய்தது. இலங்கை ராணுவ முன்னாள் தளபதி தகவல் என்று செய்தி வெளிவந்து உள்ளது. இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களுக்கு இலங்கை அரசு ராணுவ மரியாதை கொடுத்த பொழுது சிங்கள ராணுவக்காரன் கையில் கொடுக்கப்பட்ட துப்பாக்கியில் குண்டு இல்லாததால் ராஜீவ் காந்தி அன்றைக்குத் தப்பித்தார்.

ராணுவ மரியாதை கொடுக்கும் பொழுது துப்பாக்கியில் இருக்கின்ற குண்டுகளை எடுத்துவிட்டுக் கொடுப்பது தான் சம்பிரதாயம். அந்தக் குண்டுகள் எடுக்கப்பட்ட காரணத்தால்தான் ராஜீவ் காந்தி தப்பித்தார் என்று யார் சொல்லுவது? ஜெயவர்த்தனேவின் மகன் ரவி சொன்னார் என்று இந்தச் செய்தி பத்திரிகையில் வந்திருக்கிறது.


வெளியுறவுக் கொள்கை மறு பரிசீலனை

இன்னொரு செய்தி ஈழத்தமிழர்களுக்கு இந்தியா உதவி செய்வதற்கு சிங்களக் கட்சிகள் எதிர்ப்பு. போராட்டம் நடத்தப் போவதாக அறிவிப்பு. இலங்கையில் சிங்கள வெறித்தனமான கட்சி இருக்கிறது. அவர்களுடைய தயவில்தான் ராஜபக்சே அரசாங்கம் நடந்து கொண்டி-ருக்கிறது. ராஜபக்சே அரசுக்கு மெஜாரிட்டி கிடையாது. அந்த சிங்கள கட்சிக்குப் பெயர் ஜனதா விமுக்கி பெருமுனா. இந்த வெறி பிடித்த கட்சியின் ஆதரவினால் ராஜபக்சே அரசு நடக்கிறது.

அந்தக் கட்சி இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு இந்தியா உதவக் கூடாது என்று சொல்லுகிறது. இந்தியா சொல்வதை இலங்கை கேட்கக் கூடாது என்று சொல்லுகிறது. அப்படியானால் நேரடியான சவால் யாருக்கு? இந்திய அரசுக்கா? அல்லது இங்கிருக்கிறவர்களுக்கா? முடிவு செய்ய வேண்டிய தொலை நோக்ககோடு முன்னுணர்வோடு பார்க்க வேண்டிய பொறுப்பு இந்திய அரசுக்கு உண்டு.

எனவே, இந்திய அரசினுடைய மத்திய அரசினுடைய வெளியுறவுத்துறை கொள்கை மறுபரிசீலனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும். முன்னால் கடந்தவைகள் கடந்தவைகளாக இருக்கட்டும். நடந்தவைகள் நடந்தவைகளாக இருக்கட்டும்.

மத்திய அரசாங்கத்திற்கு சொல்கிறோம்.

காரணம் என்ன என்று சொன்னால் பாகிஸ்தானிலிருந்து ஆயுதம், ஈரானிலிருந்து ஆயுதம், சீனாகாரனிடம் அதைவிட ஆயுதம் இவ்வளவும் வாங்கி வைத்துக்கொண்டு அவர்களுக்கு இராணுவத் தளம் அமைக்க இடம் கொடுத்து, அரபிக் கடலில் ஒரு பக்கம் தளம் என்று சொன்னால் எந்த நேரமும் சங்கடங்கள் வரும் என்று சொல்லக்கூடிய அந்த சூழல்.

அதே போல இதிலேயே ஒரே நாள் பத்தி-ரிகையில் இன்னொரு செய்தி. இதையும் உங்கள் பார்வையை விட அரசாங்கத்தின் காதுகளுக்கு, குறிப்பாக மத்திய அரசாங்கத்தின் காதுகளுக்கு இந்தச் செய்தி போய்ச் சேரவேண்டும். உங்களுக்காக மட்டும் இதைச் சொல்லவில்லை. அரசாங்கத்திற்குச் சுட்டிக்காட்ட நாங்கள் கடமைப்பட்டிருக்கின்றோம்.

இந்திய இறையாண்மைக்கு ஆபத்து

ஏனென்றால், இறையாண்மைக்கு ஆபத்து இங்கிருக்கிறவர்களால் அல்ல. இந்தியா மீது 2012க்குள் சீனா போர் தொடுக்கும் என்று பத்திரிகையில் செய்தி வெளியாகி யிருக்கிறதென்றால் மிகப்பெரிய ஆபத்து எப்படி உருவாகியிருக்கிறது?

அந்த ஆபத்தின் பொழுது இலங்கை எப்படிச் செயல்படும். உங்களுக்கு நண்பர்கள் யார்? எதிரிகள் யார்? என்று பிரித்துப் பார்க்கத் தெரியாமல் இருந்தால், அதைவிட பேரபாயம், வெட்கக்கேடு வேறு கிடையாது.

மாபெரும் சீலரின் இறுதி மூச்சு அடங்குகிறவரை

ஆகவே, மனித உரிமைகளுக்காக இந்த இயக்கம் போராடினாலும், வெறும் தேர்தல் கண்ணோட்டம் எங்களுடைய கண்ணோட்டமல்ல. அடுத்த தலைமுறைக் கண்ணோட்டம் எங்களுடைய கண்ணோட்டம். சென்ற தலைமுறை மானமில்லாத தலைமுறையாக வாழ்ந்தது. உரிமையற்ற தலைமுறையாக வாழ்ந்தது. இந்தத் தலைமுறையாவது மானத்தோடு வாழட்டும். மரியாதையோடு வாழட்டும் என்பதற்காகத்தான் இதோ சிலையாக நிற்கிறாரே அந்த மாபெரும் சீலர், தன்னுடைய கொள்கையை இறுதி மூச்சு அடங்குகின்ற வரையிலே உருவாக்கினார்கள்.

எனவே இளைஞர்களே! தோழர்களே! தாய்மார்களே! நீங்கள் அந்தத்துறையிலே நன்றி காட்டியிருக்கின்றீர்கள். இந்தக் கொள்கையை உங்களுடைய வாழ்க்கை முறையாக ஏற்றுக்-கொள்ளுங்கள்.

தத்தெடுக்கப்பட்ட ஓர் ஊர்

அதன் மூலமாக நீங்கள் வளருவதற்கு வாய்பேற்படும் என்று கூறி, சிறப்பாக சிலை அமைத்த அத்துணை தோழர்களுக்கும் என்னுடைய அன்பை, நன்றியை அனைவருக்கும் தெரிவித்து, இந்த குருவரெட்டியூர் எங்களாலே தத்தெடுக்கப்பட்ட ஓர் ஊர் என்பதை பெருமையோடு சொல்லிக் கொண்டு அதற்கு எல்லா வகையிலும் நாங்கள் ஒத்துழைப்பாக இருப்போம் என்று கூறி எனது உரையை நிறைவு செய்கிறேன்.

இவ்வாறு தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.


--------------------"விடுதலை" 7-8-2009

0 comments: