தமிழ் ஓவியா படைப்புகளில் தேட..!

Loading...

3.2.12

வாழ்க பெரியார்! வாழ்க அண்ணா!!



இன்று அறிஞர் அண்ணா அவர்களின் 43ஆம் ஆண்டு நினைவு நாள். இது ஒன்றும் சடங்காச்சரியமான நாள் அல்ல.

திராவிடர் மக்களின் வரலாற்றில் புதிய தன்மான அத்தியாயத்தை, சமதர்ம சகாப்தத்தை, சமூகநீதி சரித்திரத்தை உருவாக்கிய திராவிடர் இயக்கம் அதன் தன்னிகரில்லாத மிகப் பெரிய புரட்சியாளர் தந்தை பெரியார் அவர்களின் கொள்கை வழி நின்று, புத்தாக்கச் சமூகத்தை உருவாக்க தமது ஆற்றல் வாய்ந்த பேச்சாற்றலையும், எழுத்தாற்றலையும் சுழல விட்ட ஒரு தலைவரின் மறைந்த நாள் இந்நாள்.

அண்ணா அவர்கள் அரசியலில் நுழைந்திருக்கலாம்; சட்டமன்றத்திற்குச் சென்றிருக்கலாம்; இத்துறையில் காலடி பதித்தவர்கள் பகுத்தறிவின் அடிப்படையில், முடை நாற்றமெடுக்கும் மூட நாற்றங்களை எதிர்க்கும் தன்மையில் சிந்திப்பது. இயங்குவது என்பது எளிதிற் காணக் கிடைக்காத ஒன்றாகும்.

அண்ணா அவர்களைப் பொருத்தவரையில், ஆட்சியைக் கருவியாகப் பயன்படுத்தி சமுதாய மாற்றத்திற்கான சட்டங்களை உருவாக்கியவர். இவற்றிற்கு முன்னுரிமை கொடுத்தவர்.

1) அரசுப் பணிமனைகளில் கடவுள், மதப் படங்களை நீக்குதல்.

2) சுயமரியாதைத் திருமணத்துக்குச் சட்ட வடிவம்.

3) சென்னை மாநிலத்துக்கு தமிழ்நாடு என்று பெயரிடல்.

4) இந்திக்குத் தமிழ்நாட்டில் இடமில்லை - தமிழ், ஆங்கிலத்திற்கு மட்டுமே இடம் உண்டு.

மிகக் குறுகிய காலந்தான் முதல் அமைச்சர் பொறுப்பை வகித்தவர் என்றாலும், வரலாற்றில் என்றென்றும் நிலைக்கத்தக்க சாதனைகளை யல்லவா பொறித்துள்ளார்.

ஒருபடி மேலே சென்று இந்த ஆட்சியே பெரியாருக்குக் காணிக்கைதான் என்று சட்டப் பேரவையிலேயே பிரகடனப்படுத்தி விட்டாரே!

இந்த அறிவிப்புக்குள் அனைத்தும் அடங்கி விடவில்லையா?

சட்டமன்றத்துக்குச் செல்லாத தமக்காக வாக்குக் கேட்காத ஒரு தலைவருக்குக் காணிக்கை, ஓர் ஆட்சி என்று அறிவிக்கப்பட்டது - இதுவரை எங்கும் கேள்விப்பட்டிராத புதுமையாகும். அந்தப் புதுமையைச் செய்தவர் அறிஞர் அண்ணா அவர்களே ஆவார்.

ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகும்கூட, பெரியார் ஆணையிட்டால் மீண்டும் அந்தச் சமூகப் பணிகளில், பகுத்தறிவுப் பிரச்சாரப் பணியில் ஈடுபடத் தயார் என்று தன் உள்ளத்தைத் திறந்து காட்டிய திராவிடர் இயக்கச் செம்மல் அண்ணா அவர்கள்.

இன்றைக்குப் பெரும்பாலும் அண்ணா ஓர் அரசியல்வாதி என்பது போன்ற தோற்றம் அளிக்கப்பட்டு வருகிறதே தவிர - (இது வெறும் மேலோட்டமான பார்வையே!) அவர்தம் ஆழமான சமூகப் பார்வை - சிந்தனையோட்டம் குறிப்பிடத்தக்க வகையில் வெளிப்படுத்தப்படவில்லை.

அண்ணாவின் பெயரைக் கட்சியிலும், உருவத்தை கொடியிலும் பறக்கவிட்டுள்ள ஓர் அரசியல் கட்சி தான் தமிழ்நாட்டை இப்பொழுது ஆண்டு கொண்டுள்ளது. ஆனால், அண்ணாவின் அடிப்படைக் கொள்கைக்கு நேர் எதிரான சிந்தனைகள் - செயல்கள்தான் இரண்டு தண்டவாளங்களாக உள்ளன.

எடுத்துக்காட்டாக, தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டின் பிறப்பு என்ற தமிழ்ப் பண்பாட்டு அடையாளத்தை ஒரு திராவிட இயக்க அரசியல் கட்சி (திமுக) சட்டம் செய்த நிலையில், அண்ணாவின் பெயரைத் தாங்கிய இன்னொரு அரசியல் கட்சி (அ.இ.அ.தி.மு.க.) தனிச் சட்டம் இயற்றி, அதனை ரத்து செய்கிறது என்றால் இது எத்தகைய கேலிக் கூத்து என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

புத்த மார்க்கத்தில் ஏற்பட்ட ஊடுருவல் - இப்பொழுது திராவிடர் என்ற பெயரைத் தாங்கியுள்ள அமைப்பிலும் நடந்திருக்கிறது.

அந்தப் புன்னகை என்று கவுதமப் புத்தரைப்பற்றி அண்ணாவும் எழுதியுள்ளாரே!

அசல் எது, போலி எது என்பதை உணர்ந்து நடந்து கொள்வதுதான் அண்ணா நினைவு நாளுக்குப் பெருமை சேர்ப்பதாகும்.

வாழ்க பெரியார்! வாழ்க அண்ணா!!

------------------------”விடுதலை” தலையங்கம் 3-2-2012

பாவத்தைப் போக்க வந்த பரமபிதா -பைபிள் கூறும் உண்மைகள்


லகிலுள்ள மக்கள் அனைவரையும் உலுக்கி எடுக்கும் வார்த்தை ஒன்று உண்டானால் அது பாவம் என்பதாகும். அது ஒருவனைப் பிடித்துக் கொண்டால் அவன் பாவியாகிவிடுகின்றான். அப்படிப்பட்ட பாவம் உலகத்தில் எப்போது தோன்றியது? எப்படித் தோன்றியது? அதை விரட்டுவது எப்படி என்ற விவரங்கள் உலகின் பெரும்பான்மையான மக்களுக்குத் தெரியாமலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

அந்த விவரங்கள் பைபிளிலேயே இருக்கின்றது என்ற உண்மை எல்லோருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லாததால், எல்லோருமே தெரிந்து கொள்ளும்படிச் செய்வது அவசியமாகின்றது. முழுமையாகத் தெரிந்து கொள்ள தேவன் உலகத்தைப் படைத்த ஆதிகாலத்திலிருந்தே வரவேண்டும்.

(பேதுரு 3:5) பூர்வ காலத்தில் தேவனுடைய வார்த்தையினாலே வானங்களும், ஜலத்தினின்று தோன்றி நிலைகொண்டிருக்கிற பூமியும் உண்டாயின.

இறைவனாகிய தேவன் ஆதிநாளிலே பூமியையும், சூரியனையும், சந்திரனையும், நீரையும், காற்றையும் படைத்தார். பூமியில் வாழ்வதற்கு ஆதாம், ஏவாள் என்று பெயரிடப்பட்ட ஆண், பெண் இருவரையும் படைத்தார். பூமியிலே அவர்கள் மகிழ்ச்சியோடு வாழ்வதற்காக கார்டன் ஆப் ஈடன் (Garden of Eden) என்ற தோட்டத்தையும் உருவாக்கி அதில் அவர்களை ஆனந்தமாக வாழும்படிச் செய்தார் சில நிபந்தனைகளுடன்.

ஆதாம், ஏவாள் இருவருக்கும் இறைவன் விதித்த நிபந்தனைகள் என்ன என்று பார்ப்போம். அவர்கள் இருவரும் தோட்டத்திலோ, உலகின் மற்ற பகுதிக்கோ எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம். ஆனால், இறைவனால் அமைக்கப்பட்ட கார்டன் ஆப் ஈடன் என்ற தோட்டத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்திலே உள்ள ஒரு குறிப்பிட்ட மரத்தின் கனியை மட்டும் சாப்பிடக்கூடாது. மேலும், அந்தக் கனி இருக்கும் மரத்தின் அருகில்கூட போகக் கூடாது என்று நிபந்தனையாக மட்டுமல்லாது கட்டளையாகவும் கூறியிருந்தார்.

ஆண்டவனின் ஆணைப்படியே நடந்து ஆனந்தமாக வாழ்ந்து வந்தார்கள் தேவனால் படைக்கப்படாத சாத்தானைக் காணும் வரை.

சாத்தானின் ஏமாற்று வார்த்தைகளில் சிக்கிய ஆதாமும், ஏவாளும் தேவனுடைய கட்டளைப்படி நடக்காமல், எந்தக் கனியைக் கண்டிப்பாகச் சாப்பிடக்கூடாது என்று தேவன் கட்டளை யிட்டிருந்தாரோ அந்தக் கனியை இருவரும் சாப்பிட்டார்கள். பழத்தைச் சாப்பிட்ட மறுவிநாடியே பாவம் அவர்கள் இருவரையும் பிடித்துக் கொண்டது. மேலும், அவர்கள் இருவரும் பாவிகள் ஆகிவிட்டனர். இந்தப் பாவமானது அவர்கள் இருவரோடு மட்டும் விடாமல், ஆதாம், ஏவாள் இருவருக்கும் பிறந்த அவர்களின் சந்ததியினரையும் தொடர்ந்து பிடித்துக் கொண்டது. இதனால் ஆதாம், ஏவாளுக்குப் பின் தோன்றிய உலக மக்கள் அனைவரையும் பாவம் பிடித்து பாவிகளாக மாறினார்கள்.

பாவம் என்றால் என்ன? அது எப்போது எப்படித் தோன்றியது என்ற கேள்விக்கு விடை இப்பொழுது எல்லோருக்கும் நன்றாக, தெளிவாக விளங்கியிருக்கும். உலகில் இப்படித் தோன்றிய பாவத்தைப் போக்கவே இயேசு பூமிக்கு வந்தார்.

1. மத்தேயு (1:15) பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார். அவர்களில் பிரதான பாவி நான்.

இப்படியாக உலகில் தோன்றிய பாவத்தினால் ஜனங்கள் பாவியாகி விட்டதால், அந்தப் பாவிகளைக் காப்பாற்றவே இயேசு உலகிற்கு வந்தார் என்பதனைப் பைபிள் மூலம் தெளிவாகத் தெரிந்து கொள்கின்றோம். ஆதாமையும், ஏவாளையும் அவர்களால் உண்டான உலக மக்கள் அனைவரையும் பாவியாக்கியது அவர்கள் சாப்பிட்ட பழத்தினால் அல்லவா. அப்படியானால் அவர்கள் சாப்பிட்ட பழத்தில் என்னதான் மகிமை இருக்கின்றது. இதனுடைய மகத்துவம்தான் என்ன? மர்மம்தான் என்ன என்பதையும் நாம் கண்டிப்பாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆதாம், ஏவாள் இருவரும் சாப்பிட்ட பழத்தின் பெயர் ஆங்கிலத்தில் புரூட் ஆப் நாலெட்ஜ் (Fruit of knowledge), தமிழில் அறிவுக் கனி என்பதாகும்.

அதாவது, உலகத்தைப் படைத்த தேவன் ஆதாம், ஏவாள் இருவரையும் படைக்கும் பொழுது அவர்கள் இருவரது அறிவையும் எடுத்து, அதைப் பழமாக்கி தோட்டத்திலுள்ள ஒரு மரத்திலே வைத்துவிட்டு ஆதாம், ஏவாள் இருவரையும் முட்டாள்களாக உலாவ விட்டிருந்தார். அவர்கள் இருவரும் சாத்தானின் பேச்சைக் கேட்டு அறிவுக்கனியைச் சாப்பிட்டதால் அறிவாளி ஆகிவிடுகிறார்கள்.

ஒரு மனிதன் அறிவாளியாக ஆவது என்பது இயேசுவின் கணிப்பின்படி பாவியாக ஆவது என்பதாகும். எனவேதான் இந்தப் பாவத்தைப் போக்கி, அதாவது அவர்களுடைய அறிவைப் போக்கி மனிதர்களை மீண்டும் பழைய நிலைக்கு, அதாவது அவர்களை முட்டாள்களாக மாற்றுவதற்காகவே இயேசு பூமிக்கு வந்தார் என்பது தெளிவாக நமக்குத் தெரிய வருகின்றது.

மத்தேயு (3:11) மனந்திரும்புதலுக்கென்று நான் ஜலத்தினால் ஞானஸ்நானங் கொடுக்கிறேன்.

ஜலத்தினால் ஞானஸ்நானம் கொடுத்து மக்களிடமுள்ள பாவத்தைப் போக்குவதாகக் கூறி ஜனங்களிடையே பிரச்சாரத்தை ஆரம்பித்தார். பாவத்தைப் போக்கக்கூடிய ஞானஸ்நானம் என்றால் என்ன? ஜலத்தைக் கொண்டு ஞானஸ்நானம் செய்வது என்பது எப்படி என்ற கேள்வி எழக்கூடும்.

ஞானம் என்றால் அறிவு. ஸ்நானம் என்றால் கழுவுதல், குளிப்பாட்டுதல் என்று பொருள். ஒரு மனிதனுடைய பாவத்தைப் போக்க அதாவது அவனுடைய அறிவைப் போக்க, அவனுடைய அறிவை ஜலத்தினாலே கழுவி, குளிப்பாட்டி ஞானத்தை ஸ்நானம் செய்து முட்டாளாக்குவதுதான் இயேசு தேர்ந்தெடுத்த வழி. இதே முறைதான் இன்றும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

எவ்வளவோ முயன்றும் இயேசுவால் பன்னிரெண்டு பேர்களை மட்டுமே சீடர்களாக ஆக்கி முழு முட்டாள்களாக மாற்ற முடிந்தது. பதிமூன்றாவது நபரான யூதாசை இயேசுவால் பாதிதான் முட்டாளாக மாற்ற முடிந்தது. பாதி அறிவாளியாக இருந்தான். பாதி அறிவாளியாக இருந்த யூதாஸ் இயேசுவின் செயலை பிலாத்து மன்னனிடம் காட்டிக் கொடுத்தான்.

மாற்கு (15:15) அப்பொழுது பிலாத்து இயேசுவை வாரினால் அடிப்பித்து, சிலுவையில் அறையும்படிக்கு ஒப்புக்கொடுத்தான்.

மாற்கு (15.24) அவரைச் சிலுவையில் அறைந்தார்கள்.

மாற்கு (15:37) இயேசு மகா சப்தமாய்க் கூப்பிட்டு ஜீவனை விட்டார்.

பூமிக்கு வந்த நோக்கம் முழுமையாக முடிவடையாமல் இறக்க நேரிட்டதால், ஆவி வடிவமெடுத்து இயேசு தன்னுடைய பன்னிரெண்டு சீடர்களைச் சந்தித்து, தாம் பூமிக்கு வந்த நோக்கத்தை அவர்கள் மூலம் நிறைவேற்றுவதற்காக அவர்களிடம் வந்து கீழ்க்கண்டவாறு கட்டளையிடுகிறார்.

மத்தேயு (28:18) இயேசு சமீபத்தில் வந்து அவர்களை நோக்கி,

மத்தேயு (28:19) நீங்கள் புறப்பட்டுப் பேய், சகல ஜாதிகளையும், சீஷராக்கி அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்து,

மத்தேயு (28:20) நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேஷம் பண்ணுங்கள்.

அவர்களுடைய ஞானத்தை ஸ்நானம் செய்து அவர்களுடைய பாவத்தை, அதாவது அறிவைப் போக்கி, புனிதர்களாக அதாவது முட்டாள்களாக மாற்றுங்கள். முட்டாள்களாக மாறிவிட்டார்களா? என்பதைக் கண்டுகொள்வதற்குச் சில வழிமுறைகளையும் கூறினார்.

மாற்கு (16:16) விசுவாசமுள்ளவனாகி ஞானஸ் நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்.

மாற்கு (16:17) விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள்.

மாற்கு (16:18) சர்ப்பங்களை எடுப்பார்கள். சாவுக்கேதுவான யாதொன்றையும் குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது.

மனிதர்களுக்கு அறிவை உண்டாக்கிய சாத்தானாகிய பிசாசுவை விரட்டியடிப்பார்கள். பாம்புகளைக் கையிலே பிடிக்கச் சொன்னாலும் பிடிப்பார்கள். சாவைத் தரக்கூடிய விஷத்தைக் குடித்தாலும் சாகமாட்டார்கள் என்று சொன்னாலும் நம்புவார்கள். இதில் எதையேனும் நம்ப மறுத்தால் அவர்களுடைய ஞானம் சரியாக ஸ்நானம் செய்யப்படவில்லை. அவர்கள் புனிதர்களாக அதாவது முட்டாள்களாக மாறவில்லை என்பதை நாம் எளிதாகக் கண்டு கொள்ளலாம் என்று இயேசு எல்லா விஷயங்களையும் அவர்களுக்கு விளக்கமாக எடுத்துரைத்தார். அதன்பின்,

லூக்கா (24:51) அவர்களை ஆசீர்வதிக்கையில் அவர்களை விட்டுப் பிரிந்து பரலோகத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டார்.

மாற்கு (16:20) அவர்கள் புறப்பட்டுப் போய் எங்கும் பிரசங்கம் பண்ணினார்கள்.
கொர்த்தியர் (1:23) நாங்களோ சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறோம்.

ரோமர் (6:6) நாம் இனி பாவத்துக்கு ஊழியம் செய்யாதபடிக்கு

ரோமர் (6:12) சாவுக்கேதுவான உங்கள் சரீரத்தில் பாவம் ஆளாதிருப்பதாக மாற்கு (1:4) யோவான் வனாந்திரத்தில் ஞானஸ்நானம் கொடுத்து பாவமன்னிப்புக்கென்று மனந்திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானத்தைக் குறித்துப் பிரசங்கம் பண்ணிக் கொண்டிருந்தான்.

மாற்கு (1:8) நான் ஜலத்தினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்தேன் என்று பிரசங்கித்தான்.

இவ்வாறாக உலக முழுவதும் பல இடங்களையும் சுற்றி பல்வேறு விதமாகப் பிரசங்கம் செய்து அனைத்து ஜாதியிலும் அநேகம் பேருக்கு ஞானஸ்நானம் செய்து புனிதர்களாக அதாவது முட்டாள்களாக மாற்றினார்கள். தன் வாழ்நாளிலேயே இயேசுவால் பன்னிரெண்டு பேர்களை மட்டுமே பாவத்தைப் போக்கிப் புனிதர்களாக மாற்ற முடிந்தது. ஆனால், இயேசுவால் புனிதர்களாக மாற்றப்பட்ட பன்னிரெண்டு சீடர்களும் உலக முழுவதும் பெரும்பான்மையான மக்களைப் புனிதர்களாக, அதாவது முட்டாள்களாக மாற்றி இயேசுவுக்குள் பலப்படுத்தினார்கள். ஒருவன் ஸ்நானம் பெற்று முழுமையான இயேசுவின் விசுவாசியாக அதாவது கிறித்தவனாக மாறிவிட்டான் என்று சொன்னால் அவன் ஒரு முழு முட்டாளாக மாறிவிட்டான் என்றே அர்த்தம்.

ரோமர் (5:14) ஆதாம் முதல் மோசே வரைக்கும் ஆதாமின் மீறுதலுக்கொப்பாய் பாவஞ் செய்தவர்களையும் ஆட்கொண்டது.

1. யோவான் (3:8) பாவஞ் செய்கிறவன் பிசாசினாலுண்டாகிறான். ஏனெனில், பிசாசானவன் ஆதி முதல் பாவஞ் செய்கிறான். பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார். ரோமர் (16:20) சீக்கிரமாய் சாத்தானை உங்கள் கால்களின் கீழே நசுக்கிப் போடுவார்.

ஆதியிலேயே சாத்தானுடைய செயல்பாடுகளால் பூமியில் பாவம் உண்டாயிற்று. அந்தப் பாவத்தைப் போக்கவே இயேசு பிறந்து வர வேண்டியதாயிற்று. சாத்தானால் உண்டான ஞானத்தை, ஸ்நானம் செய்து ஒவ்வொருவருடைய பாவத்தை அதாவது அறிவைப் போக்கி அவர்களை இயேசுவுக்குள் பலப்படுத்தினாலும் ஞானஸ்நானம் பெற்றவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் பாவியாகவே அதாவது அறிவாளியாகவே பிறக்க ஆரம்பித்து, இதனால் ஞானஸ்நானம் பெற்று கிறித்துவின் விசுவாசியாக மாறிய ஒவ்வொரு குடும்பத்தாரும் தங்களுக்குக் குழந்தை பிறந்தவுடன் அந்தக் குழந்தையை சர்ச்சுக்குக் கொண்டு சென்று அந்தக் குழந்தையின் ஞானத்தை ஸ்நானம் செய்து அதனுடைய பாவத்தை - அறிவைப் போக்கி இயேசுவின் விசுவாசியாக்கி, கிறித்தவனாக மாற்றி வீட்டுக்குக் கொண்டுவரும் நிகழ்ச்சியானது தொடர்ந்து நடந்து வருகின்றது என்ற விஷயம் எல்லோருக்கும் தெரிந்த உண்மையாகும். ஆதாம், ஏவாள் காலத்திலிருந்தே இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதை உண்மையென்று பைபிளும் ஒப்புக் கொள்கின்றது. அப்படியானால், பாவத்தை - அறிவை நிரந்தரமாகப் போக்கும் வழிதான் என்ன? அறிவை உண்டாக்கிய சாத்தானை நசுக்கி அழிப்பதுதான் அதற்கு ஒரே தீர்வு. அப்படியானால் சாத்தானை அழிப்பதற்கு இயேசு மறுபடியும் பிறந்து வரவேண்டுமே. அதுவும் சீக்கிரமாய் வரவேண்டுமே.

(வெளி 22:20) இவற்றைச் சாட்சியாக அறிவிக்கிறவர் மெய்யாகவே நான் சீக்கிரமாய் வருகிறேன் என்கிறார். ஆமென், கர்த்தராகிய இயேசுவே வாரும்.

சாத்தானை நிரந்தரமாக அழித்து, பூமியின் மேலுள்ளோரின் பாவத்தை அதாவது அறிவை நிரந்தரமாகப் போக்கி அவர்களை நிரந்தர முட்டாள்களாக மாற்றி இரட்சிக்க பரம பிதாவாகிய இயேசு மீண்டும் சீக்கிரமாய் பிறந்து வர தயார் ஆகிவிட்டார். பாவத்தை, அதாவது அறிவை நிரந்தரமாகப் போக்கிக் கொள்ள நீங்கள் தயாரா? இயேசுவே சீக்கிரமாய் வாரும். ஆமென்.

கிறித்தவர்களும், கிறித்தவ மதபோதகர்களும் மற்றவர்களைப் பாவிகளே என்று அழைப்பதற்கான காரணமும், இயேசு விரைவில் வருகிறார் என்று கூறுவதன் காரணமும் எல்லோருக்கும் புரிந்திருக்கும் என நம்புகிறோம்.

-------------------- ஆய்வாளன் ”உண்மை” 1-15 2012 இதழில் எழுதிய கட்டுரை

2.2.12

காதல் திருமணங்கள் வளரட்டும் - பெரியார்


ங்குக் கழகம் சார்பில் கூட்டம் நடப்பதற்கு முன் வேறு ஒரு புதிய பணியைச் செய்யக் கருதுகிறேன். இங்கு நடைபெறும் இத்திருமணமானது காதல் திருமணம் என்று சொல்லப்படக் கூடியது ஆகும். இதை முதலில் நடத்திவிட்டுப் பிறகு கூட்டத்தை நடத்தலாம் என்றார்கள். நானும் சரி என்று ஏற்றுக் கொண்டேன். இந்தத் தம்பதிகள் இன்று வாழ்க்கைத் துணைவர்களாக ஏற்றுக் கொள்ளும் திருமண நிகழ்ச்சி நடைபெறுகிறது. இத்திருமணம் பற்றி ஒரு சிறு விளக்கம் சொன்னால், தெளிவாக இருக்கும் என்று கருதுகிறேன். இம்மணமக்கள் இருவரும் ஒருவருக்கொருவர் நேரிலேயே சந்தித்து, தங்களுக்குக் காதல் ஏற்படுத்திக் கொண்டார்கள். இது, இவர்கள் இரண்டு பேர்களின் பெற்றோர்களுக்குத் தெரியுமோ, தெரியாதோ, எனக்குத் தெரியாது. என்னிடம் வந்தார்கள், இம்மாதிரி நாங்கள் வாழ்க்கைத் துணைவர்களாக ஏற்றுக் கொள்ள இருக்கிறோம், நடத்திக் கொடுங்கள் என்றார்கள். ஏற்றுக் கொண்டேன்.

இம் மணமக்கள் யார் என்றால், மணமகன் சனார்த்தன ம் அவர்கள் திருச்சி நகர திராவிட கழகத் தலைவர் டி.டி.வீரப்பா அவர்களுடைய மகன். இவர் பி.யு.சி. படித்திருக்கிறார். சோழிய வெள்ளாளர் வகுப்பு. மணமகள் தோழி கிருஷ்ணாபாய், கோயம்புத்தூர் மணவாள நாயுடு என்பவரின் மகள். அவர் ஒரு சர்க்கார் அதிகாரி என்று கேள்விப்பட்டேன். நாயுடு வகுப்பு மணமகள் பி.எஸ்சி. படித்திருக்கிறது. அவர்கள் கதையை இனிமேல்தான் நானும் கேட்டுத் தெரிந்து கொள்ளப் போகிறேன்.

மணமகனுக்கு வயது என்ன என்று கேட்டேன். 23 முடிந்து 24ஆவது வயது நடக்கிறது என்றார். மணமகளுடைய வயது 21 முடிந்து 22 நடக்கிறது. சும்மா கூறவில்லை, பரீட்சை சர்டிஃபிகேட்டில் உள்ளபடியாகும். ஆக வயது வந்தவர்கள்தான். எப்படியோ இரண்டு பேர்களும் நேரில் சந்தித்து ஒருவருக்கொருவர் காதலராக ஆகி வந்து விட்டார்கள். இங்கே இது இரண்டு பெற்றோர்களுக்கும் தெரியாது என்று கருதுகிறேன். எனக்குக் கவலையில்லை. இவர்கள் இருவருக்கும் தெரிந்திருக்கிறார்களா என்பதுதான் எனலாம். மணமகன் வசதியான இடத்தைச் சார்ந்தவர்தான். வீரப்பா அவர்கள் எனக்கு முக்கியமாக வேண்டியவர்தான்/ அவர்கள் ஒரு சமயம் என்னைக் கேட்கக் கூடும்.

என்ன என்னைக் கூடக் கேட்காமல் இப்படிச் செய்து விட்டீர்களே என்று அதற்கு நான் என்ன செய்வது? அவர்கள் வயது வந்தவர்கள், படித்தவர்கள். அவர்களாக வந்து காதலராகி விட்டோம். திருமணம் செய்து கொள்ள இருக்கிறோம். நடத்தித் தாருங்கள் என்றார்கள். நான் நடத்தித் தந்தேன்.

மேல்நாட்டில் எல்லாம் இப்படித்தான். மணமக்கள் இருவரும் தங்களுக்குள் பார்த்து முடித்துக் கொண்ட பிறகுதான் பெற்றோர்களுக்குத் தெரியும். மேல்நாட்டில் ஒருவனிடம், உன் பெண்ணுக்கு எப்போது அய்யா கல்யாணம் என்று கேட்டால், அதற்கு அவன் என்ன அய்யா என் பெண் திருமணம் பற்றி என்னைக் கேட்டால் எனக்கென்ன தெரியும்? பெண்ணையே போய்க் கேள் என்பான். அப்படி அங்கெல்லாம் அவர்களுக்குச் சுதந்திரம் தரப்பட்டுள்ளது.

அந்நிலை இந்நாட்டிலும் வளர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். என் அண்ணார் மகன் சம்பத் கூட அப்படித்தான் அவனாகவே பெண் பார்த்து விட்டு, பிறகுதான் எங்களிடம் கூறினான். மற்றும் எங்கள் குடும்பத்தில் அநேக திருமணங்கள் இப்படி மணமக்களே பார்த்து முடித்துக் கொண்டது உண்டு.

(15.4.1962 அன்று சிதம்பரத்தில் வீ.சனார்த்தனம் - கிருஷ்ணாபாய் வாழ்க்கை ஒப்பந்தத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை) விடுதலை 18.4.1962

நாம் உயரவில்லை - ஏன்?

தோழர்களே! நம் மக்கள் உயரம் கம்மியாக இருக்கக் காரணம்? ஜாதிக்குள் - உள் வகுப்புக்குள், அதுவும் சொந்தத்துக்கு, இப்படித் திருமணம் செய்து கொள்வதுதான். பல வகுப்புக்குள், பல மாகாணத்துக்குள், பல நாட்டுக்குள் திருமணம் ஏற்பட வேண்டும். அப்போதுதான் அவர்களுக்குத் திடகாத்திரமும், அறிவு வளர்ச்சியும் ஏற்படும்.

----------------17.5.1962 அன்று மன்னார்குடி திருமணத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை. விடுதலை 21.5.1962.

திருமணப் பதிவு எளிமையாக்கப்பட வேண்டும்

தோழர்களே! இம்மாதிரித் திருமணங்களை எல்லாம் சிக்கன முறையில் நடத்த வேண்டும். ஊர் முழுவதும் சொல்லி, எல்லோரையும் அழைத்து, ஆடம்பரமாகச் செலவு செய்து திருமணம் செய்யக் கூடாது. இதிலும் பெரிய மாறுதல் அடையணும். இப்போது ரிஜிஸ்தார் முன்னிலையில் ரிஜிஸ்டிரார் ஆபீசுக்குச் சென்று, அங்குதான் இந்தப்படியான திருமணங்களைப் பதிவு செய்ய வேண்டும் என்று இருக்கிறது. இது கூடாது. எப்படிக் கிராமங்களில் ஜனன - மரணக் கணக்குப் பதிவு செய்ய, மணியக்காரர் - கணக்குப் பிள்ளையிடம் பதிவு செய்தால் போதும் என்ற நிலை இருக்கிறது. அப்படியே திருமணங்களையும் அவர்களிடையே பதிவு செய்தால் போதும் என்ற நிலை வரணும். அப்படித் திருமணத்தை அவரிடம் பதிவு செய்து கொண்டு உறவினர்கள், நண்பர்களுக்கு நாங்கள் இன்ன தேதியில் திருமணம் செய்து கொண்டோம் என்று கடிதம் மூலம் தெரிவித்தால் போதும். அல்லது பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்து விட்டால், ஆயிரக்கணக்கானவர்களுக்கும் விஷயம் தெரிந்து போகும் என்பதாகக் கூறி முடித்தார்.

------------------25.5.1962 அன்று நச்சலூர் திருமண விழாவில், தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை) விடுதலை 27.5.1962.

பெரியாரின் பெண்ணுரிமைச் சிந்தனையும் சமுதாய மாற்றமும்

இக்கட்டுரை பெரியார் சிந்தனையின் வெளிப்பாடாகப் பெண்கள் திருமண உரிமை, சொத்துரிமை, வேலை வாய்ப்பில் பெண்களுக்கான இடஒதுக்கீடு முதலியன கிடைக்கப் பெற்றுள்ள சிறப்பினை எடுத்துரைக்கிறது.

மனித குலத்தின் சரிபாதியாகிய மகளிர் அறியாமையினால் அடிமையுணர்வைப் பண்பாடு எனக்கருதித் தம்மைத்தாமே ஒடுக்கிக் கொண்டு வாழ்ந்து வருகின்றார்கள். ஆண்களோ பெண்ணடிமைகளால் தங்களுக்கு வசதிமிக்க வாழ்வு அமைந்திருப்பதாகக் கருதிக் கூட்டு வாழ்வின் முழுமையான இன்பத்தையும் பயனையும் முழுமையாக நுகரும் சிந்தனை அற்றவர்களாக வாழ்ந்து வருகிறார்கள். குருடன் விடியலைப் பற்றி அறிந்து கொண்டதாகப் பாடுவதுபோல் இந்தப் பேதைமை இருள் மனித சமூகத்தைக் கவித்துக் கொண்டுள்ளது.

ஆண் - பெண் இருபாலரும் தம்முள் மேல்கீழ் என்னும் பிரிவினை கருதாது, மாந்தத்துவ மேன்மையினையே கருத்தில் கொள்வதெனில் மனிதகுலம் தனது மேன்மையை மீட்டெடுக்கும் நிலைப்படுத்தும் மென்மேலும் வளரும்.

ஒட்டு மொத்தமான சமுதாய விடுதலை, மனித குலத்தின் நிறைவான வாழ்வு, தடையற்ற வளர்ச்சி என்பன வற்றையே தமது வாழ்நாள் இலக்காகக் கொண்டவர் பெரியார். அவர் அந்த இலக்கிற்கான பாதையில் தடைகளாக அமைந்தவற்றைத் தகர்த்து நிர்மூல மாகக்குவதன் வாயிலாகப் புதியதோர் உலகம் அமைக்கப் புறப்பட்டார். போராளியான பெரியார் பெண் விடுதலையின் இன்றியமையாமை யினைப் பெரிதும் உணர்ந்து வலியு றுத்தினார். பெண்ணுரிமை பற்றியும் பெரியார் பேசினார் என்று கருதாது, சமுதாய மேம்பாட்டுச் சிந்தனையின் ஒரு தவிர்க்க இயலாத கூறாகவே பெண்ணுரிமைக் கருத்துக்களை அவர் முன்வைத்துள்ளார்.

சட்டமாற்றம், மனமாற்றம், பொருளாதார மாற்றம், ஆண்கள் திருந்துவது போன்றவற்றினால் மட்டுமே பெண் களுக்கான சமூக மதிப்பு வந்துவிடாது.

பெண்கள் உணர வேண்டும்
பெண்களே முன்வந்து போராட வேண்டும்
ஆண்மை என்ற பதமே ஒழிய வேண்டும்

இந்தியச் சூழல் சாதீயப் பிடிப்புக்குள்ளாகி வர்க்க முரண்பாடு கூர்மையுறாது, சமூக மாற்றத்துக்கான போராட்டம் நிகழ்வது தவிர்க்கப்பட்டே வருகிறது. சாதி ஒழியக் கலப்பு மணங்கள் நடைபெற வேண்டும். கலப்பு மணங்கள் நிகழ வேண்டுமாயின் துணைவர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமை பெண்களுக்கு வேண்டும்.

பெண்கள் தங்களுக்கு உரிய உரிமை எது என்பதில் தெளிவாய் இருத்தல் வேண்டும். பெண்கள் உயரதிகாரிகளாக இருந்து, அரசாங்க ஊதியம் வாங்கியும் அடிமைகளாகவே இருக்கின்றனர். பட்டங்களும், பதவிகளும் பெற்றாலும் பல பெண்கள் வரதட்சணைக் கொடுமைகளுக்கும் சதி போன்ற கொடுமைகளுக்கும் உள்ளாகின்றனர்.

அறிவியல் முன்னேற்றத்தினால் கருவிலேயே பெண் குழந்தை அழிக்கப்படுகிறது. பிறந்த பெண் குழந்தை கண் விழிப்பதற்கு முன்னால் கொலை செய்யப்படுகிறது. இதற்கெல்லாம் காரணம் பெண்கள் விழிப்புணர்வு அற்று இருப்பதே.

பெண்கள் விழிப்புணர்வு பெற்றால்தான் நாட்டுப் பற்றும், ஊக்க மிக்க குடிமக்களும் தோன்ற முடியும், சமுதாயத்தில் மாற்றமும் நிகழும்.

மற்றச் சமூக சீர்திருத்தவாதிகளில் இருந்து முற்றிலுமாக மாறுபட்டவர் பெரியார். வேறு எந்தச் சமூகவியல் சிந்தனையாளரும் வெளிப்படுத்தத் தயங்கு கின்ற கருத்துக்களைத் துணிவுடன் பேசியவர் பெரியார். உளவியல் அடிப் படையிலும், சமூகவியல் அடிப்படையிலும் பெண்களுக்குரிய பிரச்சினை களுக்குத் தீர்வு கண்டவர் பெரியார். உரிமை என்று வரும்போது ஆணுக்குரிய அனைத்து உரிமைகளையும் பெண்ணுக்குக் கொடுக்க வேண்டும் என்று முதன் முதலில் கூறியவர் பெரியார் ஆவார்.

தந்தை பெரியார் தம்முடைய எண்ணங்களையும் கருத்துக்களையும் அஞ்சா நெஞ்சுடனும் கொள்கைப் பிடிப்புடனும் ஓயாது உழைத்து மக்களிடையே பரவச் செய்தார்.

சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்துச் சாதி, சமயம், பார்ப்பனீயம் ஆகியவற்றைக் கடுமையாக எதிர்த்தார். ஆண், பெண் இருபாலரும் கல்வியறி வில் மேன்மையடைய வேண்டும் என்றும், ஆண், பெண் என்ற ஏற்றத் தாழ்வுகள் இல்லாமல் சமத்துவத்துடன் நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தார். பெண் ஏன் அடிமையானாள்? என்று சிந்திக்கத் தலைப்பட்டார். அதற்கான காரணத்தை வெளிப்படுத்தினார்.

மதப்பிடியிலிருந்து மக்களை மாற்றி நிறுத்தும்
முயற்சியை ஈ.வெ.ரா. மேடைப் பேச்சினாலும்
வெளியீடுகளின் மூலமாகவும் தமது செயற்பாட்டி
னாலும் எல்லோரும் பாராட்டும்வண்ணம் வெற்றிகரமாகச் செய்தார்.

சமுதாயச் சீர்கேடுகளின் வேர் மூலங்களைக் கிள்ளி எறிவதுதான் சிறந்தது என்ற தமது போர்முறையைப் பெரியார் செயல்படுத்தினார். பெரியாரின் புதிய போர் முறைகளையும், அவருடைய அணுகுமுறைகளையும் உணர்வது அவசியமாகும்.

உலகில் நாகரிகம் அடைந்த பல நாடுகளில்கூடப் பெண்ணடிமைத்தனம் இருந்து வந்திருக்கின்றது. பெண் சமுதாயத்தில் இரண்டாம் இடத்தையே பெற்று வந்திருக்கிறாள். இன்றைய மறுமலர்ச்சிக் காலத்தில் பெண்ணின் அடிமைத்தனம் மறைந்து பெண் ணுரிமை மேலோங்கி நிற்கின்றது. ஆனால், நம் நாட்டிலோ சாதி சமயத் தின் பெயரால் பெண்ணடிமைத்தனம் மேலோங்கி இருக்கிறது. இந்த ஆண் _ பெண் பேத உணர்வால் மழுங்கிப் போன சமூக உணர்வற்ற நிலைமையைக் கண்டு வேதனை கொண்ட சமூகவியல் சிந்தனையாளர்களுள் பெரியாரும் ஒருவர்.

மனிதகுல விடுதலையென்பது மாந்த இனத்தின் எல்லையற்ற மகிழ்வை, நலனை, நாளுக்குநாள் மேம்பாடடையச் செய்வதாக அமைதல் வேண்டும். அந்த நிலையை அடையத் தடையாய் இருப்பவற்றில், ஆண், பெண் பேதநிலை முதன்மையான தடையாகும்.

மாதர் எந்த அளவுக்கு விடுதலை பெற்றிருக்கிறார்கள்
என்பது வேறு எந்த ஒரு விடுதலைக்கும் உரைகல்லாகும்

என்னும் சார்லஸ் ஃபேரியர் கருத்து நினைவில் கொள்ளத்தக்கது. பெண்கள் விடுதலை உணர்வு பெற்ற நாடுகள் இன்று உலகளவில் சிறப்புடன் விளங் குவதை உணர முடிகிறது. எனவேதான், நம் நாட்டு பெண்களும் மேல் நாட்டுப் பெண்களைப் போல் சம உரிமை பெற்று வாழ வேண்டும் என்று பெரியார் பெரிதும் விரும்பினார் அவ்வாறு உரிமை உணர்வடைதல் சமூக விடுதலைப் போராட்டத்தை விரைவுபடுத்துமென்று நம்பினார். எனவே, பெண்ணுரிமைக் கருத்துக்களைப் பேசியும், எழுதியும் வந்ததோடு மட்டுமல்லாமல், பெண்கள் பெருமளவில் பங்கேற்கும் திருமணவிழா, காதணிவிழா மட்டுமின்றிப் பூப்பெய்தி யமைக்கான விழாக்களிலும் கூடத் தமது கொள்கைக்கு மாறுபாடானவை என்றபோதும் கலந்துகொண்டு கருத்துப் பிரச்சாரத்தை நடத்தினார். மாநாடுகள் வாயிலாகப் பல புரட்சிகரமான தீர்மானங்களையும் வெளியிட்டார். பெரியாரின் மாநாட்டுத் தீர்மானங்கள் பல அவருடைய காலத்திலேயே நடைமுறைக்கு வந்துவிட்டன.

1929ஆம் ஆண்டு செங்கற்பட்டு மாநாட்டில் பெண்களுக்குச் சொத்துரிமையும், தொழில் நடத்தும் உரிமையும், ஆசிரியர் பணியில் பெருமளவு வாய்ப்புகளும் வழங்கப்பட வேண்டும் என்பன போன்ற முடிவுகள் மேற் கொள்ளப்பட்டன. அவை இன்று நடை முறையில் சட்ட வடிவிலும் நிறைவேறியுள்ளன. 1989ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டசபையில் மாண்புமிகு தமிழக முதல்வர் மு. கருணாநிதி முதல் அய்ந்து வகுப்புகளுக்குத் தமிழ்நாட்டில் பெண் கள் மட்டுமே ஆசிரியர்களாகப் பணிய மர்த்தப்படல் வேண்டுமென்று சட்டசபையில் அறிவித்துள்ளார்.

10.05.1930இல் ஈரோடு மாநாட்டில் பெண்களுக்குத் திருமண வயது 16 ஆகவும், ஆண்களுக்கு 19ஆகவும் இருக்க வேண்டுமென்று பெரியார் கூறினார். இன்று பெண்ணின் திருமண வயது 21 ஆகவும், ஆணின் திருமண வயது 24 ஆகவும் சட்டப்படி உள்ளன. சடங்குகள், மற்றும் வைதீகர் இல்லாத பதிவுத் திருமணம், சுயமரியாதைத் திருமணம், 1967ஆம் ஆண்டு தமிழகத்தில் அறிஞர் அண்ணாவின் ஆட்சிக் காலத்தில் சட்ட வடிவில் ஏற்கப்பட்டுள்ளது. 1937ஆம் ஆண்டு குடும்பச் சொத்தில் விதவைப் பெண்களுக்கு உரிமையும், 1956ஆம் ஆண்டு பெண்கள் தமக்குக் கிடைத்த சொத்தை முழுமையாக அனுபவிக்கவும் (விற்பதற்கும், அனுப விப்பதற்கும்) முழு உரிமை கொடுக்கப் பட்டன. அவற்றைத் தொடர்ந்து 1989ஆம் ஆண்டு மூதாதையர் சொத்தில் பெண்ணுக்கும் உரிமைகள் உண்டு என்று தமிழக அரசு அறிவித்துள்ளது (தமிழ் மாநிலத்தில் மட்டும்)
1929ஆம் ஆண்டு குழந்தை மணத் தடுப்புச் சட்டமும் 1956ஆம் ஆண்டு பரத்தமை தடுப்புச் சட்டமும் கொண்டு வரப்பட்டன.

பெண்களுக்கான சட்டங்கள்:

பலதார மணத்தினால் பெண்கள் ஆண்களின் அதிகாரத்திலும் ஆதர விலும் வாழ வேண்டிய நிலைக்கு உட்பட்டனர். இந்நிலையை மாற்ற 1947இல் இருதார மணம் சட்டப்படி குற்றம் என்று சென்னை மாநிலம் சட்டம் இயற்றியது. இதைப்போன்றே தேவதாசி ஒழிப்புச் சட்டம் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் அரிய முயற் சியால் 1934ஆம் ஆண்டு இயற்றப் பட்டது.


1937ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தின்படி இறந்த கணவனின் சொத்தில் ஒரு பங்கை அடையப் பெண் உரிமை உள்ளவளாகின்றாள். 1955 இல் இந்து திருமணச் சட்டமும், 1956இல் இந்துவாரிசுச் சட்டமும், பராமரிப்புச் சட்டமும், இந்து தத்தெடுப்புப் பராமரிப்புச் சட்டமும், பெண்களையும் பெண் குழந்தைகளையும் வற்புறுத்தி பாலுறவுக்கு உட்படுத்துவதைக் குற்றமாக்கும் சட்டமும் அமலுக்கு வந்தன.

திருமண உறவுக்கு வெளியில்: பாலுறவில் ஈடுபட்ட ஆணும் பெண் ணும் தண்டனைக்குரியவர்கள் என்னும் சட்டமும், பெண்களை இழிவான காட்சிப் பொருளாக்குவதைத் தடை செய்யும் சட்டமும் 1986இல் கொண்டு வரப்பட்டன.

1971இல் கருக்கலைப்புச் சட்டமும், 1987இல் இராஜஸ்தானில் கணவருடன் உடன்கட்டை ஏறியதை அடுத்து உடன் கட்டை ஏறுவதைத் தடை செய்யும் மற்றொரு சட்டமும் இயற்றப்பட்டன.

1993ஆம் ஆண்டு அரசியல் அமைப் பில் செய்யப்பட்ட 73 மற்றும் 74ஆவது சட்டத் திருத்தங்கள் பஞ்சாயத்து மற்றும் ஏனைய உள்ளாட்சி அமைப் புகளில் பெண்களுக்குக் குறைந்தது 1.3 பங்கு இடஒதுக்கீடு செய்ய வழி வகுக்கின்றன.

விபச்சாரத் தொழிலில் ஈடுபட்டு வந்த பெண்களுக்குப் புதுவாழ்வு கொடுக்க மகளிர் காப்பகம் ஏற்படுத்த வேண்டும் என்ற பெரியாரின் கனவு நனவாகி இன்று மய்ய மாநில அரசுகளால் மகளிர் காப்பகங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. மேலும், மகளிர் நலன் பேணும் நோக்கில் 1932ஆம் ஆண்டு பெண் தொழி லாளர்கள் சட்டமும், கொண்டுவரப் பெற்றது.

சமூகப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு உழைக்கும் மகளிருக்கான விடுதிகளும் அமைக்கப்பட்டு வருகின்றன.

மாதர் மாநாட்டுத் தீர்மானத்தின்படி ஆண்,பெண் இருபாலருக்கும் கட்டாய இலவசக் கல்வியும், தாய்மொழிக் கல்வியும் நடைமுறையில் உள்ளன. குழந்தைகளுக்குப் பாதுகாவலர் உரிமை, தந்து எடுத்துக் கொள்ளும் உரிமை போன்றவற்றில் ஆண் _ பெண் இருபாலருக்கும் சம உரிமை உள்ளது.

இவ்வாறு சட்டத்தில் பெண்களுக்கு உரிமை இருந்தாலும் ஆண் - பெண் பேத உணர்வு சட்டத்திலும் இடம் பெறுவதைக் காண முடிகிறது.

பெண்களின் சமுதாய மாற்றங்கள்:

இன்று அருந்ததிராய், மேத்தா பட்டேக்கர் போன்ற சமூகப் போராளிகள் பெண்களுக்காகப் பாடுபட்டு வருகின்றனர். பெரியாரின் மாதர் மாநாட்டுத் தீர்மானங்கள் இன்று நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. திருமதி தமிழரசி திருமதி பூங்கோதை (தகவல் தொழில் நுட்பம்) ஆகியோர் தமிழ் நாட்டு அமைச்சர்களாக விளங்கு கின்றனர். செல்வி சல்மா, செல்வி மம்தாபானர்ஜி ஆகியோர் நடுவண் அரசின் அமைச்சர்களாகவும், திருமதி ஷிலாதீட்சித் (புதுடில்லி) செல்வி மாயாவதி (உ.பி.) செல்வி ஜெயலலிதா (தமிழ்நாடு), திருமதி இராபுரிதேவி (பீகார்), செல்வி உமாபாரதி (ம.பி.), திருமதி வசந்தராஜசிந்தியா (இராஜஸ் தான்) ஆகியோர் மாநில முதலமைச்சர்களாகவும் விளங்கினார்கள். திருமதி பெனாசீர்பூட்டோ, மியான்மாவின் சுவின்கி போன்றோர் மிகச் சிறந்த போராளிகளாவர்.

முதன்முதலில் இந்தியாவிலேயே சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் முத்துலெட்சுமிரெட்டி. இவர் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர். மருத்துவக் கல்லூரியில் பயின்று, மருத்துவப் பட்டம் பெற்ற முதல் இந்தியப் பெண்ணும் ஆவார். இவரது அரிய முயற்சியால் ஏற்படுத்தப்பட்ட அவ்வை இல்லம் சென்னையில் உள்ளது. இவ்வில்லம் கைவிடப்பட்ட மகளிருக்குக் கருணை இல்லமாய், காப்பகமாய் விளங்கி வருகிறது.

பெண்கள் மருத்துவத் தொழிலிலும், ஆசிரியர் தொழிலிலும் ஈடுபட வேண்டுமென்று பெரியார் கூறினார். இன்றைய நடைமுறையில் பெண்கள் அதிக அளவில் மருத்துவத் தொழிலும், ஆசிரியர் தொழிலும் செய்து வருகின் றனர். பெண்கள் வலிமையற்றவர்கள், துணிவற்றவர்கள், எனவே அவர்களால் கடுமையான வேலைகளோ உடற் பயிற்சிகளோ செய்ய இயலாது என்ற நிலைமாறி இன்று அவர்கள் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். விளையாட்டுத் துறையில் இந்தியா விற்குப் பெருமை சேர்க்கும் வகையில் பி.டி. உஷா, டென்னீஸ் சானியாமிர்சா முதலியோரும், பளுதூக்கும் போட் டியில் குந்திராணி முதலியோரும், பெண் வீராங்கனைகளாக அதிக அளவில் பரிசுகளைப் பெற்று வருகின் றனர். இலத்திகாசரண் (முதல் பெரு நகரக் காவல்துறைத் தலைவர்), திலகவதி அய்.பி.எஸ்., நிரூபமாராவ், கிரண்பேடி, அர்ச்சனா இராமசுந்தரம் போன்றோரால் இராணுவத்திலும், காவல்துறையிலும் பெண்களால் பணியாற்ற முடியுமென்ற பெரியாரின் கருத்து இன்று நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளது. மாலதி (உள்துறை முதன்மைச் செயலாளர்), ஷீலாராணி சுங்கத், உமாமகேஸ்வரி, சிவகாசி, சந்திரலேகா, கண்ணகி போன்ற பெண் கள் பல உயர்ந்த பதவிகளில் பணி யாற்றி வருகின்றனர்.

இந்தியன் ஏர்லைன்சிங் போயிங் 737 ஜெட்
விமானத்தை (அய்சி-169) பைலட்-காப்டன்
சவுதாமினி தேஷ்முக், கோ பைலட்
காப்டன் நிவேதிதா பாசின் மற்றும் விமானக்
குழுவினர் சரஸ்வதி அய்யர், ஜோஸ்ஃபின் ஜேரி,
வீராமித்தாய்வாலா, உஸ்ரத்தா வாரங் என்று
ஒரு மினிப்படை சென்றதாக ஆனந்தவிகடன்
வார இதழ் கூறுகின்றது

இதிலிருந்து விமானப் பைலட்டாக இந்தியப் பெண்மணிகள் பணியாற்றி வருகின்ற செய்தியை அறிய முடி கின்றது. இன விடுதலைப் போரில், தென் ஆப்பிரிக்காவில் வின்னிமண் டேலாவைத் தொடர்ந்து ஈழ விடுதலைப் போராளிக் குழுவில் பெண் போராளிகளும் ஈடுபட்டுள்ளனர் என்பதும் இங்குக் குறிப்பிடத்தக்கன.

மேற்கண்ட துறைகள் மட்டுமின்றி வழக்கறிஞர் துறையிலும் பெண்கள் அதிகமாக ஈடுபட்டுள்ளனர். இந்தி யாவில் உச்சநீதிமன்றத்தின் நீதிபதி யாகப் பாத்திமாபீவி என்ற முகமதியப் பெண் அறிவிக்கப்பட்டுள்ளது சிறப் புக்குரிய ஒன்றாகும். இவர் உலகிலேயே இரண்டாவது பெண் நீதிபதியாம். இவர் தமிழ்நாட்டின் ஆளுநராகவும் இருந்துள்ளார்.

இன்றைய கல்வித் துறையில் அதிகமான பங்களிப்பும், மதிப்பெண் களும் பெண்களே பெற்று வருகின் றனர். இன்றைய ஆண்டுத் தேர்வு முடிவுகளில் பெண்களே அதிக மதிப் பெண்கள் பெற்று முதலிடத்தில் உள் ளனர். ஆசியாவிலேயே பெண்களுக்காகப் பல்கலைக் கழகம் ஒன்று பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் என்ற பெயருடன் தஞ்சை மாவட்டம் வல்லத்தில் இயங்குகிறது.

இவ்வாறு பல்வேறு சமூக அரங்குகளில் மகளிர் தம் தகுதியினையும், ஆற்றலையும் அய்யமற நிறுவியுள்ளனர் என்ற போதும். உத்தரப்பிரதேச மாநிலத்தில் சதிமாதா வாக்கப்பட்டு உடன்கட்டை ஏறிய ரூப்கன்வர் களையும் அன்றாடம் செய்தித் தாள்களில் காண்கிறோம். மேலும், வரதட்சணைக் கொடுமையினாலும், பெண்களுக்கு எதிரான வன்முறையி னாலும் சித்ரவதைக்கு ஆளாகிற - தற்கொலை செய்து கொள்கிற அல்லது கொலை செய்யப்படுகிற பெண்களின் எண்ணிக்கைகள் பெருகியுள்ளன. மேற்குறித்த குற்றங்கள் சமூக அரங்குகளில் பணியாற்றுவதாயினும், பொருளாதாரச் சுதந்திரம் பெற்று விடுவதனால் மட்டுமே ஆண் - பெண் சமத்துவமோ சமுதாய விடுதலையோ வந்துவிடாது என்பதையே நிறுவு கின்றன. இந்த வகையில் ஒரு முழுமை யான சமூக மாற்றத்தை மானுட விடுதலையைக் கருத்தில் கொண்டும், இலக்காகக் கொண்டும்தான் தமது சமுதாயச் சீர்திருத்தக் கருத்துகளையும், போராட்டங்களையும், பிரச்சாரத்தையும் பெரியார் வடிவமைத்ததார் என்பது சிந்தனைக்குரிய ஒன்றாகும்.

முனைவர்.இரா.திராவிடராணி,இணைப் பேராசிரியர்,அரசு மகலிர் கல்லூரி ,புதுக்கோட்டை - "விடுதலை” 8-1-2012

1.2.12

பெரியாரும் தமிழ் இலக்கியங்களும்

லக மக்கள் வாழ்வாங்கு வாழ்வதற்குரிய வாழ்வியல் கருத்துகளை வழங்கிய உலகப் பேரறிஞர்கள் பலருள்ளும் பெருஞ்சிறப்பினைப் பெற்று விளங்குபவர் தந்தை பெரியார் ஆவார். உலகிற் சிறந்த பேரறிஞர்களான சாக்கிரடீசு, வால்டேர், ரூசோ, காரல் மார்க்ஸ், இங்கர்சால், லெனின் ஆகிய பெருமக்களின் ஒட்டுமொத்தக் கூட்டுச் சிந்தனையாளராகத் திகழ்ந்தவர் பெரியார் ஈ.வெ.ராமசாமி ஆவார்.

பெரியார் தாமாகவே சிந்தித்துக் கூறிய கருத்துகளில், மேற்கூறிய பேரறிஞர்கள் பலரும் கூறிய கருத்துகள் அடங்கியுள்ளன என்பதை ஆய்வாளர்கள் விளக்கியுள்ளனர்.

இத்தகைய பெருமை கொண்ட பெரியார் அவர்கள் உலகளாவிய சிந்தனையாளராக இருப்பினும், தமிழ்நாட்டு மக்களின் தாழ்ந்த நிலையை எண்ணிப் பெரிதும் கவலைகொண்டு, தமிழர்கள் தலைநிமிர்ந்து மானத்தோடும் அறிவோடும் வாழ்வதற்குரிய வழிமுறைகளை வகுத்துத் துறைதோறும் தமிழர்கள் ஆற்றவேண்டிய பணிகளைத் தொடர்ந்து செய்து கொண்டே வாழ்ந்தார்.

தமது இயக்கத்தைச் சார்ந்த அறிஞர்களையும் கலைஞர்களையும் மக்களுக்குத் தொண்டாற்றுவதில் ஈடுபடுத்தினார் என்றாலும் பெரியாரது எண்ணம் இன்றும் முழுமையாக நிறைவேறாத நிலையையே காண்கிறோம். இதற்குரிய காரணத்தை அறிஞர்கள் சிந்திக்க வேண்டும்.

ஆரியர்கள் தங்கள் கடவுள் கொள்கைகளைத் தமிழர்கள் மீது திணித்துத் தலைவிதித் தத்துவத்தை ஏற்கச் செய்து, வருணாசிரம தர்மத்தைத் தமிழ்நாட்டில் நிலைபெறச் செய்ததுதான் தமிழ் மக்கள் முன்னேற்றம் அடையாமல் தாழ்ந்து போனதற்கு முக்கியமான காரணம் என்பதைத் தந்தை பெரியார் ஆய்ந்தறிந்து தெளிந்த காரணத்தினாலேதான், கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்; பரப்பியவன் அயோக்கியன்; வணங்குகிறவன் காட்டுமிராண்டி என்று கூறித் தமது கடவுள் மறுப்புத் தத்துவத்தைக் கட்டுரைகள் மூலமும் சொற்பொழிவுகள் மூலமும் தமிழ்நாட்டில் பரப்பத் தொடங்கினார்.

தான் பிறந்த ஜாதி தாழ்ந்த ஜாதியாக இருப்பதற்கும், தான் ஏழ்மையிலே உழலுவதற்கும் தன் தலைவிதிதான் காரணம் என்றும், அந்தத் தலைவிதியை உருவாக்குபவர் கடவுள்தான் என்றும் தமிழர்களை எண்ணச் செய்தவர்கள் ஆரியப் பார்ப்பனர்கள் என்பதை உணர்ந்த காரணத்தினாலேதான் தந்தை பெரியார் ஆரியர்களையும், அவர்கள் தங்களுக்குச் சாதகமாக எழுதி வைத்துள்ள இதிகாச புராணங்களையும், மனுநீதி கூறும் வருணாசிரம தர்மத்தையும் எதிர்த்துப் பேசலானார்; எழுதலானார்.

ஜாதி மதமற்ற சமுதாயத்தை உருவாக்க எண்ணிய பெரியார், அதற்குத் தடையாக நிற்கும் சாத்திரங்களையும், இதிகாச புராணங்களையும், அவை கூறும் கடவுள்களையும், கடவுள்பற்றிக் கூறும் மதங்களையும், இலக்கியங்களையும் சாடலானார்.

இராமாயணம், மகாபாரதம் ஆகிய இரண்டு இதிகாசங்களின் கதைகளாலும் பெரிய புராணம், பாகவதம், கந்தபுராணம் போன்ற பார்ப்பனியம் புகுத்தப்பட்ட இலக்கியங்களாலும் தமிழர்கள் தன்மானம் அற்றவர்களாகவும், பகுத்தறிவு இல்லாதவர்களாகவும் ஆயினர் என்பது பெரியாரின் கருத்தாகும்.

அவற்றின் கதைகள் அநாகரிகமான, ஆபாசமான காட்டுமிராண்டித் தனமான பாத்திரங்களைக் கொண்ட வை என்பதைப் பெரியார் பல்வேறு சொற்பொழிவுகள் மூலமாகவும், நூல்கள் வாயிலாகவும் எடுத்துரைத் துள்ளார்.

இராமாயணம், பாரதக் கதைக ளைக் குறை கூறி விளக்கிய அளவுக்குச் சங்ககால இலக்கியங்களையோ, அய்ம்பெருங்காப்பியங்களையோ குறைகூறிப் பெரியார் விளக்கவில்லை. எனினும் சிலப்பதிகாரக் கதையைக் குறைகூறிச் சொற்பொழிவாற்றியுள்ளார்.

சங்க இலக்கியங்கள் பற்றிப் பெரிதும் குறைகூறிப் பேசாவிட்டாலும், தமிழர்கள் கொள்கைகளுக்கு முரணான கருத்துகள் தமிழ் இலக்கியங்களில் ஏறிவிட்டன என்று கூறியுள்ளார். தேவார திருவாசகங்கள் பார்ப்பனக் கடவுள் கொள்கை களையே கூறுகின்றன என்பதைப் பெரியார் விளக்கியுள்ளார்.

பெரியாரின் கருத்து ஆரியக் கடவுட் கொள்கை கூறப்பெற்ற எந்த இலக்கியமும் தமிழர்களுக்குத் தேவையில்லை என்பதாகும். சான்றாகக் கூறவேண்டுமானால், சங்ககால இலக்கியமான கலித்தொகையுள் ஆரியக் கடவுளர் பற்றி மிகுதியாக வருவதைக் காணலாம். உதாரணத்துக்குச் சில பாடல்களின் கருத்தை நோக்குவோம்.

கலித்தொகைக்கு நல்லந்துவனார் கூறியுள்ள கடவுள் வாழ்த்து ஆரியக் கடவுள்கள் பற்றியதே ஆகும். அந்தணர்க்கு அருமறை பகர்ந்தவன் என்றும், கங்கையாற்றைச் சடையிலே கொண்டவன் என்றும், திரிபுரத்தை எரித்தவன் என்றும், நீலகண்டன் என்றும், எட்டுக் கரங்களை உடையவன் என்றும் சிவன் என்னும் கடவுளைச் சுட்டி, அவன் மூன்று வகையான சிவத்தாண்டவங்களை ஆடியதாக நல்லந்துவனார் கூறுகிறார்.

சங்ககாலத்திலேயே புலவர்கள் உள்ளத்தில் ஆரியப் புராண இதிகாசக் கதைகள் வேரூன்றிவிட்டன என்பதற்கு இந்தக் கடவுள் வாழ்த்து ஒன்றே போதும்.

இவ்வாழ்த்தில், சிவன் உமையொரு பாகனாகிய கதை உள்ளது. சிவன் புலித்தோலை ஆடையாகக் கொண்ட வன் என்ற செய்தியும் கூறப்பட்டுள்ளது. சிவன் புலித்தோலை ஆடையாகக் கொண்ட கதையை எண்ணிப் பார்த்தால் மிகவும் அருவருக்கத்தக்க கதையாக உள்ளது.

தாருகாவனத்து முனிவர்களின் பத்தினிகளுடைய செருக்கினை அடக்க எண்ணிய சிவன், திருமாலை மோகினி உருக் கொள்ளச் செய்து முனிவர்களை மயங்கச் செய்தான். அந்த நேரத்தில் சிவன் பைரவக் கோலம் கொண்டு முனிவர்களின் பத்தினிகளைக் கற்பழித்தான். அதனை அறிந்த முனிவர்கள் அபிசார வேள்வி செய்து சிவன் மீது தமருகம், அக்கினி, மழு, சூலம், புலி முதலியவற்றை ஏவினர். அவ்வேள்வியில் வந்த புலியைக் கொன்று அதன் தோலைச் சிவன் ஆடையாக்கிக் கொண்டான்.

இந்தக் கதை தமிழர்களுக்குத் தேவையா என்பதுதான் பெரியாரின் வினா. சிவனை நீலகண்டன் என்று கூறுவதற்கான கதையும் நம்பக்கூடியதன்று. முப்புரம் எரித்த கதையும் மூடத்தனத்தின் மொத்த உருவமாகவே உள்ளது.

புலவர் பெருங்கடுங்கோ இயற்றிய பாலைக்கலியின் முதற்பாட்டு, தோழி தலைவிக்குக் கூறுவதாக அமைந்தது. தலைவியைப் பிரிந்து பொருளீட்டச் செல்லும் தலைவனை அணுகி, தலைவன் செல்லக் கருதியுள்ள பாலை நிலக் கொடுமைகளைக் கூறி தலைவியின் வருத்தத்தைச் சொல்லி அவனைப் பொருளீட்டச் செல்லாதவாறு தோழி தடுத்து நிறுத்தினாள். இச்செய்தியைத் தோழி தலைவியிடம் கூறி தலைவியை மகிழ்ச்சியில் ஆழ்த்தினாள்.

இந்தச் செய்தியைக் கூறும் கலிப்பாடலில், பாலைநிலத்து வெம்மையை விளக்கும் வகையில் இரண்டு உவமைகள் கூறப்பெற்றுள்ளன. உவமைகள் பாடலுக்கு இனிமையூட்டும் எனினும், இப்பாடலில் கூறப்பெற்ற உவமைகள் பகுத்தறிவுக்கு மாறாக, மூடநம்பிக்கை கொண்டனவாக உள்ளமை காண்கிறோம்.

கதிரவன் எவ்வண்ணம் சுடுகிறான் என்பதற்கும், வெம்மையால் பிளவுற்ற மலைகள் எவ்வண்ணம் உதிர்கின்றன என்பதற்கும் கூறப்பெற்ற உவமைகளே அவை.

தேவர்களைக் காப்பாற்ற முப்புரங்களைச் சிவன் எரிக்கும்போது அவனது முகம் எத்தகைய வெம்மையைக் கொண்டிருந்ததோ அத்தகைய வெம்மையைக் கதிரவன் கொண்டிருந்தான் என்பது ஓர் உவமை.

சிவன் தனது முக்கண்களால் முப்புரங்களையும் எரித்தபோது அவை எப்படிச் சிதறினவோ அப்படிக் கதிரவனின் வெப்பத்தால் மலைகள் பிளவுற்றுச் சிதறின என்பது இரண்டாவது உவமை.

பாலை பாடிய பெருங்கடுங்கோவுக்குத் தம் பாடலில் உவமை கூற ஆரியக் கதைதானா கிடைத்தது! இப்படிக் கூறியதற்குக் காரணம், அந்தக் கால அரச பரம்பரையினர்கூட ஆரியத்துக்கு அடிமைகளாயிருந்ததுதான் என்பது பெரியார் கருத்தாகும்.

இப்பாடலில் வரும் இன்னொரு உவமைகூட ஆரியக் கதை கொண்டதுதான். புலவர் தம் பாடலில் தலைவியைக் குறிப்பிடும் போழ்து, தலைவி அருந்ததி போன்ற கற்புடையவள் என்று கூறுகின்றார். கற்புக்கு எடுத்துக்காட்டாக இந்த அருந்ததியைக் கூறுவதைச் சங்ககாலப் புலவர்களுக்கு மட்டுமன்றிப் பிற்காலப் புலவர்களுக்கும் வழக்கமா கவே உள்ளதைக் காணலாம். பாமரர்களும்கூட அருந்ததியைப் பற்றி அறிந்து கொண்டுள்ளனர். அவள் கற்புக்கரசி எனக் கருதித் திருமணச் சடங்குகளில் அம்மி மிதித்து அருந்ததி பார்க்குமாறு மணமக்களை வற்புறுத்துகின்றனர்.

யார் இந்த அருந்ததி? அவள் என்ன தமிழ்ப் பெண்ணா? தமிழ்நாட்டிலே அவள் எவ்வாறு புகழ் கொண்டாள்? அவளைப் பற்றித் தமிழ்ப் புலவர்கள் பாடிப் புகழ்ந்ததால் வந்த விளைவுதானே.

அருந்ததி கருத்தமன் என்ற வடஇந்திய முனிவரின் புதல்வி என சிவபுராணம் கூறுகிறது. அவளை வசிட்ட முனிவன் மணந்து கொண்டான். வசிட்டன் இராமனின் குலகுரு; ஆரியன். வசிட்டனாகிய தன் கணவன் மீது அருந்ததி அய்யம் கொண்டாள். அஃதறிந்த வசிட்டன் அருந்ததிக்குச் சாபம் கொடுத்தான். அந்தச் சாபத்தின் விளைவே அவள் நட்சத்திரமானது. அந்த நட்சத்திரத்தைப் போன்று தலைவி இருப்பதாகப் புலவர் கூறுவது பகுத்தறிவுக்கு ஏற்றதாகுமா? மூடநம்பிக்கையைப் பாடலிலே புகுத்துவானேன்?

இந்த அருந்ததியின் கற்பைக் கெடுக்க முனைந்தவர்களுள் ஒருவன் சிவன், இவன் எவ்வாறு தமிழர்களுக்கு முழுமுதற் கடவுளாக ஆகமுடியும்? இன்னொருவன் அக்கினி. இவனையும் பகவான் என்கின்றனர். மற்றொருவன் இந்திரன். இவனைப் போன்ற காமாந்தககாரனை எங்குமே காணமுடியாது. இந்திரன், கௌதம முனியின் பத்தினி அகலிகையை அனுபவிக்கப் பலமுறை முயன்று இறுதியாக ஒருநாள் இரவு நடுச்சாமத்தில் சேவல் உருவெடுத்து -_ சேவலைப் போலக் கூவ அகலிகையின் கணவனான கௌதமன் விடிந்துவிட்டதாகக் கருதி நீராட நதிக்குச் செல்லும்படி செய்து அந்த நேரத்தில் கௌதம முனிவர் வேடத்தில் சென்று அகலிகையைக் கற்பழித்தான். இதனை அறிந்த கௌதம முனிவன் இந்திரன் உடல் முழுதும் பெண்குறிகளைப் பெறச் சாபமிட்டான். இதைத்தான் ஆயிரம் கண்களுடைய இந்திரன் என்று புராணிகர்கள் போற்றித் துதிபாடுகின்றனர். இவன்தான் தேவர்களுக்கெல்லாம் வேந்தனாம்.

இப்படிப்பட்ட ஈனர்களைப் போற்றும் ஆரியக் கதைகளை நம் தமிழ்ப் பாக்களில் ஏன் புகுத்த வேண்டும்? இவற்றைப் புகுத்தினால்தான் புகழ் பெறமுடியுமா? புலவர்கள் நல்ல பண்பாடுகளைக் கூறும்பொழுது ஆரியக் கதைகளைக் கலப்படம் செய்துள்ளனர். சங்க நூலான நந்றிணையில் கபிலர் என்னும் அந்தணப் புலவன் பாடிய பாடல்களுள் ஒன்றைக் காண்போம்.

தலைவனின் மலையைப் பற்றித் தோழி கூறுவதாக அமைந்துள்ளது அப்பாடல் (நற்றிணை 32). அந்த மலையைத் திருமாலுக்கும், மலையின் வீழருவியைப் பலராமனுக்கும் ஒப்பிடுகிறார். மலையையும் அருவியையும் ஒப்பிடுவதற்கு மாயோனும், வாலியோனும்தானா கிடைத்தார்கள்? புலவனுக்கு வேறு உவமைகளே கிடைக்கவில்லையா? அதுவும் பெரும் புலவனாகிய கபிலனுக்கு.

அப்படிப் பாடியதற்குக் காரணம் அவனுக்கு வேறு உவமை கிடைக்காததன்று; அதன் மூலம் கடவுள் கொள்கையை நிலைநிறுத்த வேண்டும் என்பதுதான். மாயோனைக் கூறி கடவுள் கொள்கையையும், வாலியோனைக் கூறி திருமாலின் அவதாரமான கண்ணன் கதையையும் நிலைபெறச் செய்வதுதான் ஆரியப் பார்ப்பனனாகிய கபிலனின் எண்ணமாக இருந்திருக்க முடியும்.

கண்ணன் அவதாரம் ஆரியக் கதை. இதைக்கூறி ஆரியக் கலாச்சாரம் தமிழ்நாட்டில் பரவுவதற்குக் கபிலன் வித்திட்டிருக்கின்றான். அவன் பார்ப்பனன் அல்லவா? அதனால்தான் இவ்வாறு பாடினான் என்று எண்ணத் தோன்றுகிறது.

இப்படிப் பல சான்றுகளைச் சொல்ல முடியும். பண்டைக்காலப் புலவர்களில் பலர் ஆரியப் பண்பாட்டில் மூழ்கியவர்கள் என்பதற்கு.

சங்ககாலத் தமிழர்கள் பலர் கடவுள் நம்பிக்கை உடையவர்களாக வாழ்ந்திருக்கக் கூடும் என்பதைச் சங்ககாலப் பாடல்கள் நமக்கு உணர்த்துகின்றன.

சங்கப் புலவர்களும் கடவுளை வணங்கியிருக்கக்கூடும். தொல்காப்பியர் காலம் மூவாயிரம் ஆண்டுகளுக்கு உட்பட்டதாகவே ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். சங்ககாலத்துக்கு முற்பட்ட பாடல்களைக்கூட சங்ககாலப் பாடல்களாகவே அமைத்துக் கொண்டுதான் தொகை நூல்கள் தொகுக்கப்பட்டுள்ளன என்றாலும் இப்பொழுது நமக்குக் கிடைத்திருக்கும் பாடல்கள் யாவும் நான்காயிரம் ஆண்டுகளுக்கு உட்பட்டவை என்பதில் யாருக்கும் அய்யம் ஏற்படுவதற்கில்லை.

ஆரியர்கள் தமிழ்நாட்டுக் குள் புகுந்து அய்யாயிரம் ஆண்டுகள் ஆயின என்பதும் யாவரும் ஒப்பிய கருத்தேயாகும். ஆரியர்கள் வருவதற்கு முன்னர் தமிழர்களின் கடவுட் கொள்கை யாதாக இருந்தது எனும் ஆய்வு சரிவர நடைபெற வில்லை.

ஆரியர்கள் தமிழகம் வந்து புகுவதற்கு முன்னர் தமிழர்களுக்குக் கடவுள் சிந்தனையே இல்லை என்பது பெரியாரின் ஆய்வு முடிவாக உள்ளது. தம் குடும்பத்தில் வீர மரணம் அடைந்தவர் களைச் சிறப்பிக்கும் பொருட்டும் நினைவுகூரும் வகையிலும் கல் நட்டுப் பெருமை செய்துள்ளனர். அவர் வழி நடத்தலையே வழிபாடு என்று கொண்டிருக்க வேண்டும்.

அளவுக்கு மீறிய மழை பொழிந்து வாழிடம் வெள்ளக்காடாக மாறிய போழ்தும், மழையே பொழியாது பஞ்சம் ஏற்பட்ட போழ்தும், காடுகள் வெப்பத்தால் தீப்பற்றிக் கொண்ட போழ்தும், கொள்ளை நோய் ஏற்பட்டுப் பலர் மாண்ட போழ்தும், இவையாவும் ஏற்படக் காரணம் யாதென அறிவியல் மூலம் ஆராய்ந்து பார்க்க இயலாத நிலையிலே வாழ்ந்தவர்கள், ஆரியர்கள் கூறும் கடவுள்கள்தான் காரணமாக இருக்கக் கூடுமோ என்று எண்ணி ஆரியர்களின் கடவுள் கொள்கையை ஏற்கத் தொடங்கிவிட்டனர் என்பதுதான் பெரியாரின் கருத்து.

அக்கடவுள் கொள்கையை ஏற்றுக்கொண்டவர்களுள் சிலர் புலவர்களாகவும் இருந்திருக்கக்கூடும். அவர்கள் இயற்றிய பாடல்களிலே அக்கடவுள்கள் பற்றிக் கூறியிருப்பதில் வியப்பொன்றும் இல்லை. ஆகவே சங்கப் பாடல்களில் கடவுள்கள் பற்றிய கருத்துகள் உள்ளன என்பதாலேயே பண்டைக் காலத் தமிழர்கள் யாவரும் கடவுளை நம்பியவர்கள் என்று கருதக்கூடாது.

இயற்கையை மட்டுமே பண்டைத் தமிழர்கள் கடவுளாகக் கொண்டனர் என்று கூறி, இயற்கை என்றால் அழகு, அழகு என்றால் முருகு, அந்த முருகு உருவமாகி முருகன் என்ற கடவுள் உருவானார் என்று சில தமிழறிஞர்கள் கூறியுள்ளனர். அவ்வாறு கூறியிருப்பினும், ஆரியர்கள் முருகனை ஆறுமுகன் என்று கூறி அதற்கொரு நம்பமுடியாத ஆபாசமான கதையையும் மக்களிடையே பரப்பிவிட்டனர். அப்பனுக்கு மகன் தோன்றுவது இயற்கை. ஆனால் மகனுக்கு அப்பனைத் தோற்றுவித்தது ஆரியம். இதுவே ஆரியப் புரட்டு என்று கூறுகிறார் பெரியார்.

இத்தகைய ஆரியப் புரட்டுகள் எப்படி எப்படியெல்லாம் தமிழர்களை ஆட்டுவித்துள்ளன என்பதைப் பெரியார் ஆராய்ந்துள்ளார். ஆட்டுவிக்கத் துணை புரிந்த புலவர்களையும், அவர்கள் இயற்றிய புராண இதிகாசக் கதைகளையும், காப்பியங்களையும் குற்றவாளிக் கூண்டிலே பெரியார் ஏற்றுகிறார். இவ்வழக்கை ஆராய்ந்து தீர்ப்பளிக்க வேண்டியது நமது கடமையாகும்

------------ முனைவர் இரா.மணியன் எம்.ஏ., பிஎச்.டி., பி.ஓ.எல்., பி.டி.,

(ஆய்வுக்குரிய இக்கட்டுரையாளர் சீரிய பெரியார் பற்றிய சிறந்த சிந்தனையாளர். அவரது இலக்கிய ஆய்வுப் படைப்பு இது. - ஆசிரியர்) - "உண்மை”16-13-2012

31.1.12

ஆரியம் படமெடுத்தாடுகிறது - தமிழன் என்றால் யார்?

இனமான தந்தை பெரியார் பாதையில் பேராசிரியர் நூல்

தமிழ் சமுதாயத்திற்கு ஓர் ஆவணம்!
தமிழர் தலைவர் அறிவார்ந்த விளக்கவுரை

இனமான பேராசிரியர் க.அன்பழகன் பற்றி இனமான தந்தை பெரியார் பாதையில் பேராசிரியர் என்ற தலைப்பில் முனைவர் ந.க. மங்களமுருகேசன் தொகுத்த நூல் தமிழ் சமுதாயத்திற்கு ஒரு ஆவணம் என்று திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.

சென்னை பெரியார் திடலில் 5.1.2012 அன்று இரவு முனைவர் ந.க.மங்களமுருகேசன் தொகுத்த இனமானத் தந்தை பெரியார் பாதையில் பேராசிரியர் நூல் வெளியீட்டு விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:

இந்த நாள் முக்கியமான நாள்


இந்த நாள் நம்முடைய இயக்க வரலாற்றில் ஒரு முக்கியமான நாள் ஏனென்றால் நம்முடைய இயக்கம் பிரச்சார பெரும்புயலை சூறாவளியாக நாடெங்கும் நடத்தியிருக்கிறது என்றாலும் போதிய தகவல்களை அவ்வப்பொழுது ஆவணப்படுத்தக் கூடிய வாய்ப்பு திராவிடர் இயக்கத்திற்கு வெகு வெகு குறைவாக இருந்த காலகட்டம் என்று ஒன்று உண்டு.

பொதுவாகவே நீதிக்கட்சி என்றழைக்கக் கூடிய பார்ப்பனர் அல்லாதார் இயக்கமாக தொடங்கி பிறகு திராவிடர் இயக்கமாக மலர்ந்து வளர்ந்து சாதித்துள்ள இந்த இயக்கத்தின் அடிநாள் வரலாறுகளைப் பற்றிய குறிப்புகளைத் தேடினால் அப்பொழுது நடத்தப்பட்ட பல ஏடுகள் இப்பொழுது கைக்குக் கிடைப்பதில்லை.

நாங்கள் தொல்லைப்பட்டு...


மிகவும் நாங்கள் தொல்லைப்பட்டு திராவிடன் போன்ற இதழ்களை சேகரித்துஅல்லது ஜஸ்டிஸ் என்று ஆங்கிலத்திலே நடந்த அந்த ஏடுகளை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக சேகரித்தோம். எப்படி இருந்தது என்பதையாவது பார்க்கக்கூடிய அளவிலேதான் இருந்தது.

சிலவற்றைத்தான் தொகுத்திருக்க முடியும். அதற்கும் மிக சிறப்பான பதிலை நம்முடைய பேராசிரியர் அவர்கள் இனமானப் பேராசிரியர் அவர்கள் அற்புதமாக அளித்திருக்கிறார்கள் என்பதை இந்த உரையிலே சொன்னார்கள்.

தமிழனைப் போல சிறந்த அறிவாளியும் இல்லை...!


தமிழனைப் போல சிறந்த அறிவாளியும் இல்லை. தமிழனைப் போல தன்னை மறந்தவனும் இல்லை என்று அழகாகச் சொன்னார்கள். மற்றவர்களுடைய வரலாற்றை எல்லாம் தொகுத்தவன் - தன் வரலாற்றை மறந்துவிட்டானே? என்பதை மிக அழகாக எடுத்து சுட்டிக் காட்டினார்கள்.

ஜஸ்டிஸ் கட்சி இந்த நாட்டை ஆண்டிருக்கிறது. 1916லே தொடங்கி பிறகு 1920, 1926 பிறகு 1936 என்று வரலாற்றிலே பல இடங்கள் வந்திருக்கின்றது. ஏனென்றால் இது வரலாற்று ஆய்வாளர்கள் - அறிஞர்கள் சிறப்பாக குழுமியிருக்கக்கூடிய ஒரு அறிவு சார்ந்த அவையாகும்.

இந்த அவை அந்த நிலையிலே இதை நினைவூட்டுவது மிக மிக முக்கியம் தேவை என்று கோடிட்டுக்காட்ட விரும்புகிறேன்.

நீதிக்கட்சி ஆட்சி பற்றிய விவரங்கள்


நூல்களைத் தேடிப் பார்த்தேமேயானால் நீதிக்கட்சி ஆட்சி எவ்வளவு சிறப்பானதொரு ஆட்சி என்பதைப் பற்றி ஏடுகள் தொகுக்கப் படவில்லை.

இரண்டு மூன்று புத்தகங்கள்தான் ஆங்கிலத்திலே கிடைத்தன. அந்த புத்தகங்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக. நாங்கள் திராவிடர் கழகத்தின் சார்பிலே அவைகளைத் தேடி ஆங்கிலத்திலே இருந்ததால் வெளியிட்டு இன்றைக்கு நீதிக்கட்சி வரலாறு தமிழிலும் மொழி பெயர்க்கப்பட்டு விடுதலை ஏட்டிலே தொடர்ந்து வந்து கொண்டி ருக்கிறது.

நீதிக்கட்சி பற்றி விடுதலையில் கட்டுரைகள்


விடுதலை படிக்கக் கூடிய வாசக நேயர்களுக்கு மிகத் தெளிவாகத் தெரியும். 1917 ஒரு வரலாறு. ஒரே ஆண்டில் எத்தனை நிகழ்வுகள்? எத்தனை மாநாடுகள் இவை அத்தனையும் உண்டு. அந்த செய்தி விடுதலையிலே தொடர்ந்து கட்டுரைகளாக வெளியிடப்பட்டு வருகிறது. அவை தொகுக்கப் பட்டு தமிழ் நூலாக ஆக்கப்படும் விரைவிலேயே.

வரலாற்றுக்குறிப்புக்காக நீதிக்கட்சியினுடைய கொள்கைகள் - அதனுடைய சாதனைகள் - மாநாடுகள் ஒரு பக்கம். இன்னொரு பக்கம் சிறப்பாகச் சொல்ல வேண்டுமானால் நீதிக்கட்சி என்றழைக்கப்பட்ட தென்னிந்திய நல உரிமைச் சங்கம் (South Indian Liberal Foundation) என்பதுதான் அதற்கு அதிகார பூர்வமான பெயர். எஸ்.அய்.எல்.எஃப் என்று சொல்லுவார்கள்.

சேலம் மாநாட்டிலே அந்தப் பெயரைப் போட்டுத்தான் மாநாட்டையே நடத்தினார்கள். அன்றைக்கு ஜஸ்டிஸ் பத்திரிகையிலே சர்.ஏ. ராமசாமி முதலியார் அவர்கள் எழுதிய குறிப்புகள் Mirror of the year தலையங்கங்களின் தொகுப்பு இருக்கிறது. அற்புதமான ஆங்கிலம் - சிறந்த கருத்தோட்டம். பெரிய வரலாற்றுக் குறிப்புகள் இவைகள் எல்லாம் தொடங்கியது.

மிர்ரர் ஆஃப்தி இயர் புத்தகம்


சர். ஏ.ராமசாமி முதலியார் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடிய நேரத்திலே ஒரு புத்தகத்தை நண்பர் பேராசிரியர் சண்முசுந்தரம் அவர்கள் எங்களுக்கு அளித்தார். மறைந்தும், மறையாமல் நமது நெஞ்சங்களில் நிறைந்திருக்கின்ற பாலகாந்தன் அவர்கள் அவர் உயிருடன் இருக்கும் பொழுது சிறப்பாகச் சொல்லுவார்கள்.

நாங்கள் வெளியிட்டு அதை வெளியே கொண்டு வந்தோம். ரொம்ப பேருக்கு ஆச்சரியம். அந்த நூலுக்கு பெயர்தான். Mirror of the year அதே போல 1929 முதல் சுயமரியாதை மாநாடு உள்பட ஜஸ்டிஸ் கட்சி மாநாட்டின் தொகுப்புகள் இந்தத்தொகுப்பு கடந்த ஜனவரியிலே சரியாக திருச்சியிலே நம்முடைய டாக்டர் ராமசாமி அவர்களால்தான் வெளியிடப்பட்டது.

வரதராஜீலு என்று சொல்லக்கூடிய அவர்கள் மாவட்ட நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றவர்கள். அவர்கள் அந்த வரலாற்றை எழுதியவர்கள்.

முன்னாள் மேயர் சுந்தர்ராவ் நாயுடு சிந்தாதரிப் பேட்டையில் சிலை வைக்கப்பட்டிருக்கிறதே- சுந்தர்ராவ் அவர்களுடைய தந்தையார் வரதராஜீலு அவர்கள். இப்படி ஒரு மூன்று, நான்கு நூல்களையே கண்டுபிடிப்பதற்கு மிக சிரமமாக இருந்தது.

ராஜா சர் முத்தையா சொன்னார்


ராஜா சர் முத்தையா செட்டியார் அவர்களிடத்திலே பேசிக்கொண்டிருந்த பொழுது அவர் ரொம்பத் தெளிவாக ஒரு முறை சொன்னார். இந்த மூன்று நூல்களுக்கு மேலே எதுவும் புத்தகம் கிடையாது. நீங்கள் அதைத்தேடிக் கண்டு பிடித்தீர்க ளேயானால் போதும். ஜஸ்டிஸ் கட்சிக்கு ஏதாவது ஆதாரம் வேண்டுமானால் இந்த நூல்களிலிருந்துதான் கிடைக்கும்.

அந்தக் காலத்தில் 147 ஏடுகள்


திராவிடர் இயக்க காலத்திலே, சுயமரியாதை இயக்க காலத்திலே தந்தை பெரியார் அவர்கள் காலத்தில் குடிஅரசு பதிப்பகம், உண்மை விளக்கப் பதிப்பகம், அது போல பகுத்தறிவு நூற்பதிப்புக் கழகம் ஆகியவற்றில் சுப.வீரபாண்டியன் அவர்கள் சொன்னது போல 147 ஏடுகள் வந்தன. அவை எல்லாம் யாரும் பாதுகாத்து வைத்திருப்பதாக இல்லை.

பேராசிரியர் நடத்திய ஏடு புதுவாழ்வு ஓராண்டு நடந்தது என்று சொன்னால் பேராசிரியர் அவர்களிடத்திலே அந்த புதுவாழ்வு தொகுப்பு இருக்குமா என்பது சந்தேகம். பலர் நூல் எழுதியிருப்பார்கள். அவர்களது ஒன்றாம் பதிப்பு, இரண்டாம் பதிப்பு, மூன்றாம் பதிப்பு வந்திருக்கும். அதுவே அவர்களிடம் இருக்காது. ஆகவே இந்தப் பணி எவ்வளவு சிறப்பானது என்பதற்காக சொன்னேன்.

சமுதாயத்திற்கு ஒரு பெரிய ஆவணம்


பேராசிரியர் மங்களமுருகேசன் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். (கைதட்டல்). ஏனென்றால் அவர்கள் இன்றைக்கு தொகுத்து அளித்திருக்கக்கூடிய இனமான தந்தை பெரியார் பாதையில் பேராசிரியர் என்ற இந்த நூல் சமுதாயத்திற்கு ஒரு பெரிய ஆவணம். இதுதான் மிக முக்கியம்.

இன்னமும் பெரியார் தேவையா? என்று கேட்கக் கூடிய சில புரியாதவர்கள் இருக்கிறார்கள். அறியாமையில் உளறுகிறார்கள். நோயிலேயே தலைசிறந்த கொடுமையான நோய் ஒன்று இருக்கிற தென்றால் அது அறியாமை நோய். இந்த அல்சைமர்சை விட, அதாவது செலக்டிவ் அம்னீ சியா என்று சொல்லுகிறார்கள் பாருங்கள். மறதி நோய் என்று. அந்த மறதி நோயைவிட ரொம்ப கொடுமையான நோய் தமிழனுக்கு இருக்கிறது.

மதிக்கப்பட வேண்டியவர்கள்


அந்த நோய்க்காவது சிகிச்சை உண்டு. பல பேருக்கு இதை நினைவூட்ட வேண்டியவர்களாக இருக்கிறார்கள். ஏனென்றால் வரலாற்றையே மறந்துவிட்டோம்.

தன்னுடைய தாயை அடையாளம் காண வில்லை. இந்த நோய்க்கு ஆளான பல பேரை பார்த்தீர்களேயானால் வீட்டில் இருப்பார்கள். சில பேர் உளறிக்கொண்டிருப்பார்கள். இன்றைக்கு நம்மிடத்தில் சில பேர் உளறுகிறார்கள் என்று சொன்னார்கள் பாருங்கள். அந்த நோய்க்கு ஆளானவர்கள்தான் அவர்கள். அவர்கள் மன்னிக்கப்பட வேண்டியவர்களே தவிர, மதிக்கப்படவேண்டியவர்கள் அல்ல. இன்னும் கேட்டால் மதித்து பதில் சொல்லக்கூடியவர்களும் அல்ல. அவ்வளவு வேதனையாக இருக்கிறது. பெரியார் அவர்களுடைய பயணம் எவ்வளவு முக்கியமான பயணம் என்பதைச் சொல்லி பெரியார் பிறந்திருக்காவிட்டால்....?

ஒரே ஒரு கேள்வி


நாமெல்லாம் என்ன நிலைக்கு ஆளாகியிருப்போம். ஒரே ஒரு கேள்வி. அந்த கேள்விக்கு விடை காணட்டும். பெரியார் பிறந்திருக்கா விட்டால் நாமெல்லாம் முழங்காலுக்கு கீழே வேட்டிகட்ட வாய்ப்பு உண்டா? தோளிலே துண்டு போடக்கூடிய உரிமை உண்டா? நினைத்துப் பார்க்க வேண்டும்.

படிக்கிற உரிமை மற்ற உரிமைகள் எல்லாம் இருக்கட்டும். தெருவில் நடக்கிற உரிமை உண்டா? அந்த கொடுமைகள் எல்லாம் இருந்திருக்கின்றன. பேராசிரியர் அவர்களைப் பற்றி விளக்குகிற நேரத்திலே சுப.வீ. அவர்கள்இருக்கிறார்கள்.

தமிழனுக்குப் புத்தாண்டு எது?


ஆர்க்காட்டார் அவர்கள் அவரது பல்வேறு சிந்தனைகளை இணைத்து இங்கே சொன்னார்கள். இன்றைக்கு பெரியார் தேவைப்படுகிறார் என்று சொல்லுவதற்கு காரணம் என்ன? இன்றைக்கும் தைரிய மாகச் சொல்லுகின்றானே.

தமிழனுக்குப் புத்தாண்டு சித்திரை தான் என்று சொல்லுகின்றானே. எவ்வளவு பெரிய கொடுமை பாருங்கள். பகுத்தறிவு சாதாரண அறிவு. சிறு பிள்ளை கூட ஒரு கேள்வி கேட்குமே.

தமிழனுக்கு ஆண்டு எது? பிரபவ, விபவ, சுபவ என்று சொல்லுவது உண்மையாக இருக்குமே யானால் ஒரே ஒரு கேள்விக்கு பதில் சொல்லட்டும். துக்ளக் அய்யருக்கு என்ன வேலை என்றால் இந்த மாதிரி வேலை தான் பண்ணிக்கொண்டிருக் கின்றார்.

இன்னும் பல வேலை பண்ணிக்கொண்டிருக் கின்றார். ரொம்ப மிக முக்கியமான வேலை என்னவென்றால் யாராவது அடையாளம் தெரியாத ஆளை கூப்பிட வேண்டியது. உடனே இலக்கியத்தில் ஆதாரம் இருக்கிற மாதிரி சொல்லுவது.

காரணம் என்ன வென்றால் நம்முடைய தோழர்கள் சும்மா இருக்கிறார்கள். இலக்கியம் படித்தவர்கள், மற்றவர்கள் எல்லாம் அதுதான் தவறு. மறுக்க வேண்டிய நேரத்தில் மறுக்க வேண்டும்.

பெருங்கவிக்கோ இருக்கிறார்


இதோ நம்முடைய பெருங்கவிக்கோ இருக் கிறார். பெருங்கவிக்கோ இந்த மாதிரி ஒரு கூட்டத்திற்குப் போனால் சும்மா இருக்க மாட்டார். பழைய காலத்தில் எப்படி சுய மரியாதைக்காரன் எப்படி மேடை ஏறி சட்டையைப் பிடிப்பானோ அது மாதிரி சட்டையைப் பிடிப்பதற்கு தயாரானவர்தான் அவர்.

இன்னமும் அந்த துணிச்சல் அவருக்கு இருக்கிறது. (கைதட்டல்). ஈழப்பிரச்சினை போன்ற சூழலில். நான் கலவரம் பண்ண வேண்டும் என்பதற்காகச் சொல்லவில்லை. கோபப்பட வேண்டிய நேரத்தில் கோபப்பட வேண்டும். ஆத்திரப்படவேண்டிய நேரத்தில் ஆத்திரப்பட வேண்டும். அமைதியாக இருக்க வேண்டிய நேரத்தில் அமைதியாக இருக்க வேண்டும்.

சில நேரங்களில் ரொம்ப பகுத்தறிவு பேசியதாலே இப்படி ஆகிவிட்டோமோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

உணர்ச்சிக்கு ஆட்படக் கூடாது


பகுத்தறிவு என்றால் உணர்ச்சிக்கு ஆட்படக் கூடாது. அறிவு வயப்படு, அறிவு வயப்படு என்று சொல்லி எல்லாவற்றிலும் அறிவு வயப்பட்டுக் கொண்டேயிருக்கின்றான். சில நேரங்களில் அறிவு வயப்பட வேண்டியதும் உண்டு. உணர்ச்சி வயப்படவேண்டியதும் உண்டு. என்னுடைய மகளை, என்னுடைய தாயை ஒருவன் மான பங்கப்படுத்தினால் இதைப் பார்த்து அறிவு பூர்வமாக இதற்கு என்ன செக்சன் வரும்?

அதற்கு என்ன வரும் என்று யோசனை பண்ணிக்கொண்டிருப்பேனா? அப்பொழுது நாம் உணர்ச்சி வயப்படுவோம். அந்த உணர்வு நமக்கு வரவேண்டும்.

தமிழ் ஆண்டுகள் 60 என்று சொல்லுகின் றார்கள். 60க்கு மேல் இருந்தால் இவனுக்கு சொல்வதற்கு வழி கிடையாது. 60 ஆண்டுகளோடு முடிந்துவிட்டது என்பதை பகுத்தறிவு கண்ணோட்டத்தோடு ஏற்க முடியுமா? 60 ஆண்டுகள் என்று பெயர் சொல்லுகின்றார்களே இதில் ஒன்றாவது தமிழ்ச் சொல் உண்டா?

படை எடுப்பிலேயே ஆபத்தான படை எடுப்பு


தந்தை பெரியார் ஏன் இவைகளைப் பற்றிக் கேள்வி கேட்டார். ராமையாவாக அண்ணா மலைப் பல்கலைக் கழகத்தில் நுழைந்த பேராசிரியர் அவர்கள் ஏன் அன்பழகனாக மாறினார்? நாராயணசாமியாக இருந்தவர் நெடுஞ்செழியனாக ஏன் மாறினார்?. அதனுடைய அடிப்படை என்ன? எந்த பெயர் இருந்தால் என்ன? என்று ஏன் அவர்கள் நினைக்கவில்லை?

படை எடுப்பிலேயே ரொம்ப ஆபத்தான படை எடுப்பு பண்பாட்டு படை எடுப்புதான். கைகளிலே கால்களிலே போடப்பட்ட விலங்கு கண்ணுக்குத் தெரியும். ஆனால் மூளையிலே போடப்பட்ட விலங்கு கண்ணுக்குத் தெரியாது.

இந்தத் தொண்டு செய்ய யாரும் முன்வராததால்


அந்தத் திரையில் இருப்பதால்தான் தமிழன் இன்றைக்கும் அடிமையாக இருக்கக்கூடிய சூழ்நிலை இருக்கிறது. அதனால்தான் தந்தை பெரியார் சொன்னார் திராவிடர் சமுதாயத்தை திருத்தி மானமும், அறிவும் உள்ள மக்களாக ஆக்குவதுதான் என்னுடைய ஒரே வேலை என்று சொன்னார். இந்தத் தொண்டு செய்ய எனக்குத் தகுதி உண்டா என்று யாரும் கேட்காதீர்கள். இந்தத் தொண்டை யாரும் செய்ய முன்வராததால்தான் அந்தத் தொண்டை நான் மேற்போட்டுக் கொண்டு செய்கின்றேன் என்று பெரியார் சொன்னார்.

95 ஆண்டுகள் வரையிலே தன்னுடைய மூத்திர சட்டியைத் தூக்கிக்கொண்டு, அலைந்தார் தந்தை பெரியார். இந்த மக்களுக்கு அறிவு கொடுக்க வேண்டும். இந்த மக்களுக்கு உணர்ச்சி ஊட்ட வேண்டும் என்பதற்காகத்தான் அவர்கள் பாடு பட்டார்கள்.

பெரியார் நடத்திய மொழிப்போராட்டமா? அதனுடைய வேர் எங்கே என்று பார்த்தால் இந்த பண்பாட்டுப் படை எடுப்புதான் காரணம் என்றிருக்கும். அரசியல் போராட்டமா? அதனுடைய வேர் இங்கே தான் இருக்கும். பெரியார் சொன்ன உதாரணம் ரொம்ப அற்புதமான உதாரணம். இதுவரையில் யாரும் பதில் சொல்ல முடியாது.

எனக்கு அறிவுப் பற்றுதான் முக்கியம். வளர்ச்சிப் பற்றுதான் முக்கியம் என்று சொன்னார்.

எனக்கு மனிதநேயம்தான் முக்கியம்


இவருக்கு தேச பக்தி இல்லையா? என்று பெரியாரைப் பார்த்துக்கேட்டார்கள். பெரியார் சொன்னார். நான் மனிதனை நேசிக்கிறேன். எனக்கு மனிதநேயம்தான் முக்கியம் என்று சொல்லி ஒரே வார்த்தை கேட்டார்.

என்ன தேச பக்தி. எனக்கு பக்கத்து வீட்டுக்காரன் என்னைத் தொட்டால் குளிக்க வேண்டும் என்று சொல்லுகின்றான். என்னைப் பார்த்தால் ஏழு மைல் ஓட வேண்டும் என்று சொல்லுகின்றான். தீட்டு பட்டுவிடும் என்று ஓடுகிறான்.

யார் அந்நியன்?


பத்தாயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்து வந்தவன். ஹலோ என்று சொல்லி என்னிடம் கைகுலுக்குகின்றான். இவன் எனக்கு அந்நியனா? அவன் எனக்கு அந்நியனா? என்று கேட்டார்.

இதுவரையில் யாராவது பதில் சொல்ல முடிந்ததா? அந்நியன் என்றால் யார்? எனக்கு பக்கத்து வீட்டுக்காரன்தான் அந்நியன் ஆரியன்-திராவிடன் அந்தி வேளையில் கலந்ததா? இடையூறாக இருந்ததா? என்பது பிரச்சினை இல்லை. திராவிடன், ஆரியன் என்பதை இரத்தப் பரிசோதனை செய்து கொண்டு பேசவில்லை. அது பிரச்சினை இல்லை. பண்பாட்டு அடிப்படையில் எங்களுடைய தமிழை இன்னமும் நீச பாஷை என்று சொல்லுகிறாய். தமிழன் அர்ச்சகனாக இருக்கக் கூடாது என்றுசொல்லுகின்றாய்.

தமிழன் அர்ச்சராகவில்லையே


தமிழன் கட்டிய கோவில், தமிழன் வடித்த சிலை, தமிழன் கொடுத்த மானியத்தைப் பெற்றுக்கொண்டு கோவில் கருவறைக்குள்ளே தமிழனை விட மறுக்கிறாய். இன்னமும் நீதிமன்றத்திற்குச் சென்று தடுக்கிறார்களே. இதுதானே பண்பாட்டு அடிமைத் தனம். இதை சொல்லிவிட்டு தந்தை பெரியார் சொன்னார்.

எங்கும் பெரியார் கருத்துகளை பேசக்கூடியவர்


பேராசிரியர் அவர்கள் எங்கு சென்றாலும் பெரியாரின் தத்துவங்களை எல்லாம் பேசாத நாள்கள் எல்லாம் பிறவா நாள்கள் என்று கருதகக்கூடியவர். தெளிவாகச் சொல்லக்கூடியவர். பெரியார் என்ன சொன்னாரோ அந்தக் கருத்தை விரிவாக்கி அதை இன்றைய தலைமுறைக்கும், நாளைய தலைமுறைக்கும் உரையிலே எழுத்திலே இனமானப் பேராசிரியர் அவர்கள் வடித்துக் காட்டியிருக்கின்றார்.

அய்யா அருமையாகச் சொன்னார். சிறைச் சாலைக்குள்ளே போன ஒருவன் விடுதலையாகி வெளியே வரவேண்டும் என்றால் அப்படி வர வேண்டும், எந்த வழியாக அவன் உள்ளே போனானோ எந்த வழியாக அவனை அழைத்துக் கொண்டு போனார்களோ அந்தக் கதவு திறக்கப் பட்டு அவன் வெளியே வர வேண்டும். அதற்குப் பெயர்தான் விடுதலை.

----------------(தொடரும்) 27-1-2012

ஆரியம் படமெடுத்தாடுகிறது தமிழர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

சென்னை பெரியார் திடலில் தமிழர் தலைவர் விளக்கவுரை

ஆரியம் படமெடுத் தாடுகிறது. தமிழர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலகட்டம் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் பேராசிரியர் கருத்தை எடுத்துக்காட்டி விளக்கவு ரையாற்றினார்.

சென்னை பெரியார் திடலில் 5.1.2012 அன்று இரவு முனைவர் ந.க.மங்களமுருகேசன் தொகுத்த இனமானத் தந்தை பெரியார் பாதையில் பேராசிரியர் நூல் வெளியீட்டு விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

ஜன்னலை உடைத்துக்கொண்டு வந்தால் அதற்கு விடுதலை என்று பெயரா? அவருடைய நிலைமை என்ன ஆகும்? மறுபடியும் சிறையில்தானே இருக்க வேண்டும். குறுக்கு வழியிலேயே போக முடியுமா?

மூளையில் போடப்பட்ட விலங்கு

எப்படி மூளையில் விலங்கு போட்டு அவன் அடிமைப்படுத்தி வைத்தானோ. அந்த பண்பாடு, அந்த மொழி அந்த அமைப்பு, அந்த நாகரிகம் இவை மூலமாக நீ அடிமைபட்டாயே அந்த அடிமைத்தனத்திலிருந்து உன்னை வெளியே கொண்டு வரவேண்டாமா? என்று கேட்டுத்தான் அதனுடைய விளைவு தானே சுயமரியாதைத் திருமணம். அதனுடைய விளைவுதானே பார்ப்பனரை நீக்கிய நிலை.

நல்ல மந்திரம் சொல்ல ஆள் இல்லை என்று ம.பொ.சி.சொன்னதை எடுத்து சுப.வீ. சொன்னார். நல்ல மந்திரம் சொல்லியிருந்தால் என்ன சொல்லியிருப்பார்? இவர் வீட்டுப் பெண் காப்பாற்றப் பட்டிருக்குமா?

சோமன் முதலில், கந்தர்வன் இரண்டாவது என்று சொல்லி நமது சமுதாயத்தை அல்லவா இழிவுபடுத்தினான். சோமோ, பிரதமோ,விவிதே, கந்தர்வோ

என்று மந்திரம் சொன்னால் என்ன நிலை. முதலில் புரோகித திருமணம் செய்பவர்களுக்கு நல்ல புத்தி இருந்தால், மானமும், அறிவும் இருந்தால் முதலில் மந்திரத்தில் என்ன சொல்லு கிறார்கள் என்று புரிந்துகொண்டார்களா? அதை புரிந்துகொண்டால்அந்தமந்திரத்தை அனுமதிப்பார்களா?

பார்ப்பன மந்திரத்திற்கு என்ன அர்த்தம்?

மறைமலை அடிகளார் தமிழர் சமயம் என்ற நூலில் சொல்லுகிறார். பெரியாரை விட்டு விடுங்கள். மறைமலை அடிகளார் சொல்லுகிறார். ரிக்வேதத்தில் இருக்கிறது. மற்றதில் இருக்கிறது என்று சொல்லிவிட்டுச் சொல்லுகிறார்.

ஆரிய முறைப்படி மந்திரங்கள் சொல்லி நடத்தக்கூடிய திருமணம் விவாஹம் என்பது நடந்தால் அதிலே எந்தப் பெண்ணும் முதலில் மணமகனுக்குக் கட்டி வைக்கப்படுவதில்லை. மணமகனுக்கு அவர் துணைவி ஆவதில்லை. மனைவியாவதில்லை. மாறாக முதலில் சோமனுக்கு, இரண்டாவது கந்தர்வனுக்கு, மூன்றாவது இவனுக்கு என்று ஆகி நான்காவதாகத்தான் மனுஷ ஜாதிக்கு மனைவியாகிறாள் என்று மந்திரம் சொல்லுகிறார்கள்.

மறைமலை அடிகளார் இந்த மந்திரத்தை விளக்கிச் சொல்லுகிறார். விவாக மந்திரார்த்த போதினி என்ற பெயரில் பார்ப்பனர்களே இந்த மந்திரத்தை நூலாக வெளியிட்டிருக்கிறார்கள்.

பார்ப்பனர் தமிழர் அல்லர்

அது இன்றைக்கு மாற்றப்பட்டதா இல்லையா? தமிழன் தமிழனாக திராவிடனாக தன்னை உணரக் கூடிய நிலை வந்ததா இல்லையா? தமிழன் கண்டாய், ஆரியன் கண்டாய் என்று பிரிக்கும் பொழுது ஆரியன் வேறு தமிழன் வேறு என்று ரொம்பத் தெளிவாகத் தெரிந்துவிட்டது.

பார்ப்பனர் தமிழர் அல்லர். ஒரு அத்தியாயத்தை எழுதியிருக்கிறார் மறைமலை அடிகள் அவர்கள். ஆனால் அதையும் தாண்டி தமிழன், தமிழன் என்று சொல்ல ஆரம்பித்தவுடனே பெரியார் பார்த்தார். எதை சொல்லி வைத்தால் இவனைத் தடுக்க முடியும் என்று பார்த்தார். ரொம்ப சரியான வார்த்தையைப் பிடித்தார்.

திராவிடன் என்று சொன்னால்தான் பார்ப்பான் மறுபடியும் தமிழன் என்ற போர்வையில் வரமாட்டான் என்று நினைத்து சொன்னார். தமிழ் பேசுகிறவன் எல்லாம் தமிழனா? என்று அண்ணா கேட்டாரே.

ரைட் ஹானரபிள் சீனிவாச சாஸ்திரி ரொம்ப அற்புதமாக தமிழ் பேசக் கூடியவர். அவருக்கு வெள்ளி நா படைத்த பேச்சாளர் என்று பெயர். சீனிவாச சாஸ்திரி அற்புதமாக ஆங்கிலம் பேசுகிறார் என்பதால் அவர் வெள்ளைக்காரராக ஆகிவிடுவாரா? தமிழன் என்பதற்கு என்ன அடையாளம் என்பதை விளக்கும் பொழுது அண்ணா சொன்னார். சும்மா தமிழன், தமிழன் என்று எல்லோரையும் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்.

தமிழன் என்றால் யார்?

மொழியால் தமிழன் மட்டுமல்ல. வழியால் தமிழன். விழியால் தமிழன் இந்த மூன்று சொல்லும் எவ்வளவு அழகாக செய்திருக்கிறது பாருங்கள்.

பார்வை என்றால் வெறும் பார்வையில்லை. அவனுடைய நோக்கு. அவனுடைய இலக்கு. இவை அத்தனையையும் பார்க்க வேண்டும்.

தமிழன் இதிலே அடிமையானான் பாருங்கள். அதனுடைய விளைவுதானே சித்திரை தமிழ் வருடப்பிறப்பு. தமிழ் வருடப் பிறப்பு ஆபாசமான அருவருப்பான கதை. நாரதனுக்கும், கிருஷ்ண னுக்கும் குழந்தை பிறந்தது என்று எழுதி வைத்திருக்கின்றான். இதைவிட கொடுமையான அசிங்கம். இதை ஏற்றுக்கொண்டிருக்கக் கூடிய ஆபாசம் வேறு உண்டா?

ஜாதியினால் எவ்வளவு பெரிய கொடுமை நடந்தது என்பதைப் பற்றிச் சொல்லும்பொழுது எவ்வளவோ செய்திகள் இருக்கின்றன.

இலக்கியம் படித்த அறிஞர்கள் நிறைய பேர் இந்த அரங்கத்தில் இருக்கிறார்கள். பல்கலைக் கழகத்தில் படித்துக்கொண்டிருக்கும் பொழுதே சொல்லு கிறார். 1944-லிலே திராவிட நாடு பத்திரிகையிலே நம்முடைய இனமானப் பேராசிரியர் அவர்கள் எழுதிய ஒரு கட்டுரை. பண்பாட்டுப் படை எடுப்பைப் பற்றி எழுதுகிறார்.

இலக்கியங்களில் பற்பல மூடநம்பிக்கைகள் புகுந்து பழைமை மலிந்து மக்கள் கருத்தைப் பாழாக்குகின்றன என்பது ஒரு புறமிருக்க புலவர் பெருமக்களுக்குரிய இலக்கணங்கள்தான் என்ன?

1944இல் பேராசிரியர் சொல்லுகிறார்

இந்த செய்தியை எப்பொழுது எழுதுகின்றார்? 1944இல். இன்றைக்கும் இதை நமது புலவர்களுக்கு நினைவூட்ட வேண்டியிருக்கிறது. தந்தை பெரியார் ஏன் இலக்கியங்களை குறை சொன்னார்?


ஒன்றையும் அவர் விட்டு வைக்கவில்லை என்று சொல்லுவார்கள். அவரைத் தவிர வேறு யாராலும் துணிச்சலாக சொல்ல முடியாது. அதே உணர்வை பேராசிரியர் அவர்கள் கொஞ்சம் கூட மறைக்காதவர்.


அவர்கள் கையில் தூரிகை இருந்ததில்லை. அவர்களுடைய கையில் இருந்தது எக்ஸ்ரே கருவிகள்தான். உடைந்த எலும்பை உடைந்த எலும்பாகக் காட்டினால்தான் அதை ஒட்ட வைக்க முடியும் என்பதில் மாறுபட்ட கருத்து கிடையாது.

இலக்கணத்திலும் மூடநம்பிக்கை

இலக்கியங்களில் மூடநம்பிக்கை புகுந்தது முக்கியமல்ல. இலக்கணத்திலும் புகுந்தது என்பது தான் பேராசிரியர் அவர்களின் கருத்து. ரொம்ப ஆழமானது. இன்றைக்குப் பல புலவர்கள் இதைப் பற்றிப் பேச வேண்டும்.

பேராசிரியர் மேலும் சொல்லுகிறார்.

தொல்காப்பியத்திலே சில இடைச்செருகல் வீர சோழியமும், நன்னூலும் வடமொழி இலக்கியத்தை தழுவியவை. இவைகளின் உரைகளோ ஒப்பியன் மொழி தோன்றாக் காலத்திலேயே தமிழ் மொழி, வடமொழி ஒப்பிலக்கணங்களாக அமைந்தன. ஆனால் பிற்கால இலக்கணங்களில் அய்ந்தெழுத் தால் ஒரு பாடை உண்டென அறையவும் நாணு வரோ மக்கள் என்று இலக்கண கொத்து சாமிநாத தேசிகர் கூறுகின்ற அளவுக்கு தமிழ் இழிந்தது எதனால்? வடமொழி இலக்கணத்தில் ஆழ்ந்து தமிழ்மொழி இலக்கணத்தை புறக்கணித்ததால் அன்றோ? இலக்கியத்திற்குக் கற்பனை துணை என்றாலும் இலக்கணத்திற்கு கற்பனை கேடு பயப்பதன்றோ பேராசிரியர் சொல்லுகிறார்.

ஆரியத்தின் ஊடுருவல்

ஆரியத்தின் ஊடுருவல் வருணாஸ்ரம தர்மம், மனுதர்ம தத்துவம், ஜாதி தத்துவம் எப்படி உள்ளே நுழைந்தது? தந்தை பெரியாருடைய கொள்கையை ஏற்ற நிலையிலே மாணவராக அவர் உருவான காலகட்டத்திலேயே அவர் வெறும் அண்ணா மலைப் பல்கலைக் கழகத்தில் மட்டும் படித்தவராக இல்லை. அய்யாவின் பகுத்தறிவுப் பல்கலைக் கழகத்தில் சுயமரியாதைப் பல்கலைக் கழகத்திலும் படித்தவராக இருந்த காரணத்தினாலே தெளிவாக இந்தக் கருத்தைச் சொல்லுகிறார். இலக்கியத்திற்குக் கற்பனை துணை என்றாலும் இலக்கணத்திற்குக் கற்பனை கேடு பயப்பதன்றோ வெண்பா பாட்டியல். (இங்கே அறிஞர்கள் உட் காந்திருக்கிறார்கள். இவர்கள் அளவுக்கு எனக்குத் தமிழ் தெரியாது. பேராசிரியர் அவர்கள் மாணவராக இருந்தபொழுது துணிச்சலாக சொல்லியிருக் கின்றார். பெரியாருடைய கருத்துகளை பின்பற்றும் பொழுது இந்த கருத்துகள் வரும்.)

வச்சனந்தி மாலை என்ற பிற்கால நூல் எவ்வளவு கற்பனையில் சூழ்ந்ததாகவும், கருத்துக்கு ஒவ்வாத தாகவும் அமைந்திருக்கிறது என்பதை புலவர்கள் நினைத்துப் பார்க்கட்டும். பல்கலைக் கழகங்களில் பாடமாக வைக்கலாமா?

ஏன் இந்த அறியாமை உருவெடுத்து வந்த பாட்டியல் ஏடு பல்கலைக் கழகங்களில் பாடமாய் அமைதல் வேண்டும்? (வச்சனந்தி மாலை என்பதை பல்கலைக் கழகத்தில் பாடமாக வைத்தார்கள். இன்னமும் இந்த அழுக்கு மூட்டை கருத்துகள், அறிவுக்கு ஒவ்வாத கருத்துகள் செல்லரித்த கருத்துகள் தான் இன்றைக்கு நாம் இலக்கியம், இலக்கணம் என்ற பெயராலே மாணவர்களுக்குப் படிப்பு சொல்லிக்கொடுத்துக் கொண்டிருக் கின்றோம். இதை தந்தை பெரியார் கண்டித்தார். இந்த இயக்கம்தான் கண்டித்தது.)

ஒரு பண்பாட்டுப் படை எடுப்பை எதிர்த்து எப்படிப்பட்ட போர் நடைபெற்றது. கருத்துப் போர் அறிவுப்போர் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். மேலும் சொல்லுகிறார்) இதனைப் படிப்பதனால் ஏதாவது பயனிருக்க முடியுமா? என்று கேட்கிறார் பேராசிரியர்.

ஆரியம் படமெடுத்தாடுகிறது

நால்வகை ஜாதியை இந்நாட்டினில் நாட்டினீர் என்று கபிலர் அகவல் ஆரியரைப் பார்த்து முறையிடும் உண்மையை உணர்த்தும் எழுத்திலும் நால்வகை ஜாதியா? (எழுத்தில் நால்வகை ஜாதி என்பது ரொம்ப பேருக்குத் தெரியாது.) உயிரெழுத்தும், மெய் எழுத்தும் முதலெழுத்து உயிர் மெய் சார்பு எழுத்தின் வகையாம் என அறிவுடன் எட்டு ஆயிரம் ஆண்டுகளாய் வழங்கிய உண்மைக்கு மாறாக ஆரியம் புகுந்து வளம் பெற்று தமிழக இலக்கியம் இயற்றும் தொண் டினை ஏற்று மெல்ல, மெல்ல ஆரியப் புலவர் எல்லோர் உள்ளமும் ஆரியக் கருத்துறையும் மடமாக்கி அவர்கள் எழுப்பிடும் ஒலியும், பொருளும் ஆரியத்தை வெளியிடும் நிலையை உண்டாக்கிவிட்டது.

முக்காலத்திலும், மொழி வழங்கிட துணை புரியும் அறிவியற் சாலையாம் இலக்கணத்திலும் ஆரிய நச்சரவு தன்படத்தினை எடுத்து ஆடிடு கின்றது. (பேராசிரியருடைய எழுத்து 1944இல் வெளிவந்தவை) பாட்டியலில் பன்னீருயிரும் முதலாறு மெய்யும் பார்ப்பன வருணம் என்றும் (இலக்கியத்தோடு நிற்கவில்லை. பார்ப்பன படைஎடுப்பு இலக்கணத்திலும் ஊடுருவி விட்டது. மொழியை எப்படிக் கெடுத்தார்கள் என்பதை ரொம்ப அற்புதமாக சொல்லுகின்றார் பேராசிரியர்)

அடுத்த ஆறு மெய்கள் அரச வர்ணமென்றும் நான்கு மெய்கள் வைசிய வர்ணமென்றும் பிற இரண்டும் சூத்திர வர்ணமென்ற ஜாதி (எழுத் திலேயே இப்படி நான்கு ஜாதியை உண்டாக்கி விட்டார்கள் பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திர என்று உண்டாக்கிவிட்டார்கள்)

பிரிவுகள் என்றெண்ணி நாட்டின் அறிஞர் என்று எண்ணப்படும் புலவர் வழங்கிடும் பாவிலும் எழுத்திலும் வருணப் பொருத்தம் வகுத்துள்ளனர்.

சூத்திர எழுத்துகள்

ல,வ,ர,ன என்ற நான்கும் வைசிய எழுத்துகள். ழ, ற என்பன சூத்திர எழுத்துகள் ஆகும். இதிலும் ஒரு உண்மை விளங்குகிறது. (பேராசிரியர் சொல் லுகிறார்). தமிழ் மொழிக்கே சிறப்பாக உள்ள ழ,ற,ண என்ற மூன்று எழுத்துகளும் வைசிய சூத்திர இனமாக அமைக்கப்பட்டுள்ளன.

வடமொழி, ல,ள வாகவும், ஒலித்திடுமானாலும் தமிழுக்கு சிறப்பு தனி எழுத்தாக உள்ளது. ழ வடமொழியில் இல்லை. இதை சூத்திர எழுத்து என்று கூறப்படுவதின் பொருள் என்ன? ஆரியரிடமிருந்து பிரித்துக்காட்டக் கூடிய அளவுக்கு தனித்து வாழ்ந்த திராவிடர்களைத் தான் ஆரியர்-சூத்திரர், தாசி மக்கள் என்று நான்காம் வருணத்தினராய் வழங்கினர் என்பதினுடைய விளைவன்றோ என்று கேட்கின்றார்.

அது மட்டுமல்ல. பாட்டு எழுதும் பொழுது இலக்கணத்தில் விதி வைத்திருக்கின்றார்கள். இங்கே கவிஞர்கள் இருக்கிறார்கள். இதை எல்லாம் இன்றைக்குத் தாராளமாக எழுது கிறார்கள். ஏன்? இந்த இயக்கம் வந்ததினாலே தாராளமாக எழுதுகிறார்கள்.

தலையை வாங்கியிருப்பான்!

பழைய காலத்து ராஜாவாக இருந்தால் தலையை வாங்கியிருப்பான். அதுவும் நமது சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் செய்த கொடுமை சாதாரண கொடுமையல்ல. அது மிகப்பெரிய கொடுமை. அதில் ரொம்ப அழகாக சொல்லு கின்றார்.

பார்ப்பனரை வெண்பாவிலும் (பார்ப்பனருக்கு வெண்பா இடஒதுக்கீட்டை முதன் முதலில் ரிசர்வ் செய்த வர்கள் அவர்கள்தான்) அரசரை ஆசிரியப் பாவிலும் வணிகரை கலிப்பாவிலும் சூத்திரரை வஞ்சிப்பாவிலும் பாட வேண்டுமாம்.

சூத்திரனுக்குவஞ்சிப்பாவை ஒதுக்கியிருக்கின் றார்கள். கவிஞர்கள் இங்கே இருக்கிறார்கள் அவர்களுக்காகவே இதை நான் படிக்க வேண்டும் என்று நினைத்தேன்.

வைசியருக்குப் பலவகை அதற்கடுத்து ஆசிரியப்பா வைசியருக்கு வகை பல குறைந்த கவி சூத்திரர் என்ற திராவிடருக்கு ஆரிய வஞ்சனை உருவெடுத்து வழங்கிய வஞ்சிப்பா. கொஞ்சிடப் பயனற்ற வஞ்சியினம் பல கொண்ட பாவன்று.

இனம் பல கலந்த வெண்பா கலப்புடைய ஆரியத்துக்குப் பண்பால் பொருத்தும் பகுத்து பாகுபடுத்திடும் முறை பொருத்தமுடையதா? தாழ்ப்பாள் இயற்றுமிடத்திலும் ஆரியத்துக்கு முதல் தாம்பூலம் என்ன அழகாக எழுதியி ருக்கின்றார் பாருங்கள். இது கவிதை. இலக்கியம் இலக்கணம். இதெல்லாம் உண்டு.

மகாபாரத சூடாமணி

இன்னொரு செய்தியையும் இந்த இடத்தில் இதற்கு தொடர்பாக சொல்ல வேண்டும். மகாபாரத சூடாமணி, என்று ஒரு நூல் இசைக்கு இந்த நூலை யார் எழுதியவர்கள் என்றால் சங்கீத கலாநிதி முடிகொண்டான் வெங்கட் ராம அய்யர் மற்றும் ஆர்.விசுவநாத அய்யர். சங்கீதாதிராக மேள லட்சணம் என்னும் நான்காம் பகுதியில் கீழ்க் கண்டவாறு கூறப்பட்டுள்ளது.

நம்முடைய மறைந்தும் மறையாமல் நம் நெஞ்சங்களில் இருக்கின்ற இறையனார் இருக்கிறார் பாருங்கள். அவர் நன்றாகப் பாடுவார். அவர் ஒரு முறை இந்த செய்தியை சொல்லி புத்தகத்தையே கொண்டு வந்து காட்டிவிட்டார். அதிலிருந்து தான் நான் குறிப்பெடுத்தே வைத்தேன். வம்சம் நான்கு என்று போட்டு எழுதப்பட்டிருக்கிறது.

பாட்டிலும் ஜாதி

சட்ஜம், மத்திமம் காந்தாரம் இவை மூன்றும் தேவர். (பாட்டு பாடுவதில் ராகத்தில்) பஞ்சமம்-விதுரர். ரிஷபம், தைவதம்-ரிஷிகள், நிஷாதம்-ராட்சதர் வம்சங்களாம்.

பாட்டு நான்கு. அந்தணன் ஜட்சமத்திமமான பஞ்சமே ஜாதி தந்தவைத்த முந்தானே ரிஷபம், சத்திரியனாகும் முன்பு காந்தார நிஷாத மொழித் திடல் வைசியனாகும்.

சிந்தை சேர் அந்தக ஜாதிகள் சூத்திரனாகுமே. சட்ஜமம், மத்திமம் பஞ்சமம் மூன்றும் பிராமண ஜாதி, வைதம், ரிஷபம், இவ்விரண்டும் சத்ரிய ஜாதி, காந்தாரம், நிஷாதம் இவ்விரண்டும் வைசிய ஜாதி, அந்தரகா களீஸ் வரங்கள் சூத்திரஜாதி.

பாட்டில் ஏழு சுரங்கள் பாடினால் கூட அதிலேயும் ஜாதி. இலக்கணத்தில் ஜாதி. வர்ணாஸ்ரம தர்மம். இலக்கியத்தில் வர்ணாஸ்ரம தர்மம். இவை அத்துணையும் இன்றைக்கு இல்லையே. எல்லோரும் பாடுகிறார்கள். சூத்திரன் பாடுகிறான் என்று சொல்லக்கூடிய அளவுக்கு வந்திருக்கிறதென்றால் இதற்கு என்ன காரணம்? பெரியார் பிறந்திருக்கா விட்டால் இதை எடுத்துச் சொல்ல பேராசிரியர் போன்றவர்கள் விளக்கியிருக்காவிட்டால் இந்த வாய்ப்பெல்லாம் கிடைக்குமா?

பண்பாட்டுப் படை எடுப்பை முறியடிக்க அவர்களுடைய ஆதிக்கத்தை மறுபடியும் கொண்டு வரலாம் என்கின்ற சூழ்நிலைகள் இன் றைக்கு உருவாகிக்கொண்டிருக்கின்ற.ன தமிழர்களே நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? அதை சொல்வதற்குத் தான் தமிழ்ப்புத்தாண்டு வருகிறது.

கலைஞர் சட்டம் கொண்டு வந்தார் என்பதற்காக தடுக்கப்பார்க்கிறார்கள். எந்த சட்டத்தை தடுத் தாலும் தமிழர்களுடைய திராவிடர்களுடைய திருநாள் ஒரே திருநாள் தை முதல்நாள்தான் என்பதைக் கொண்டாடக் கூடிய அளவிற்கு ஒரு பெரிய பண்பாட்டுப் படை எடுப்பை முறியடிக்கக் கூடிய புரட்சியை ஆழமாக அமைதியாக உறுதியாக செய்யுங்கள். பெரியார் திடலில் மூன்று நாள்கள் தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழா கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் தமிழ்ப்புத்தாண்டு கொண்டாடுங்கள்.

நம்மால் மட்டும்தான் முடியும். கொள்கை உள்ளவர்களால் முடியும். இலட்சியத்திலே நம் பிக்கை உள்ளவர்களால் முடியும். தங்களை சமுதாயத்திற்காக அர்ப்பணிக்கத் தயாராக இருக்கிறவர்களால் முடியும் என்ற உணர்வோடு இந்த புத்தகத்தை வாங்குங்கள். படியுங்கள். படிப்பதோடு நிறுத்திக்கொள்ளாதீர்கள். உங்கள் ரத்தங்களிலே இந்த உணர்வுகளை எற்றிக்கொள் ளுங்கள் என்று கூறிமுடிக்கின்றேன்.

-இவ்வாறு தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

---------------------"விடுதலை” 28-1-2012


30.1.12

பகுத்தறிவுக்கு தடை செய்யவே கிளர்ச்சிகள்! - பெரியார்

தந்தை பெரியார் அவர்கள் நன்றி தெரிவித்துப் பேசுகையில் குறிப்பிட்டதாவது:-

பேரன்புமிக்க தலைவர் அவர்களே, தாய்மார்களே, தோழர்களே!

எனது 87-ஆம் பிறந்த நாள் என்ற பேரால் பெரிய ஏற்பாடுகள் செய்து பணப் போர்வை போர்த்தியும் பல அன்பளிப்புகள் செய்தும் பெருமைப் படுத்திய கழகத் தோழர்களுக்கும், மகளிர் கழகத்திற்கும் எனது நன்றியறிதலை தெரிவித்துக் கொள்ளுகின்றேன். சென்ற ஆண்டும் இதுபோல செய்தீர்கள். எதற்காக இப்படிச் செய்கின்றீர்கள் என்றால், எனது தொண்டை உற்சாகப்படுத்தும் முறையில் இப்படிச் செய்கின்றீர்கள்.

எனது தொண்டு உங்களுக்குத் தெரியும். மனித சமுதாயத் தொண்டு சாதாரணமான தொண்டல்ல. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக மக்களிடையே இருந்து வருகின்ற இழிவை, அறியாமையைப் போக்கச் செய்யப்படும் தொண்டாகும்.

இன்றைக்கு சட்டசபைக்குப் போக வேண்டும். மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்க வேண்டும். பதவிக்குப் போக வேண்டும். பொறுக்கித் தின்ன வேண்டும் என்பதைத் தான் பொதுத் தொண்டாகக் கொண்டவர்கள் இருக்கின்றார்களே ஒழிய, மனித சமுதாயத்தின் திருத்தப்பாட்டுக்குத் தொண்டாற்ற எவரும் இல்லை. மனித சமுதாயத்துக்காக உழைத்தார்களா என்று பார்ப்போமானால், விரலை விடக்கூட ஒரு ஆள் இல்லை.

இந்த நாட்டில் எத்தனையோ மகான்கள், மகாத்மாக்கள், அவதார புருஷர்கள் எல்லாம் தோன்றியுள்ளார்கள் - ஒருவருக்குக்கூட கவலை இல்லை. இந்தியாவுக்கு வெளியே போனால், நம் நாட்டைப் பற்றி அவர்கள் என்ன எண்ணிக் கொண்டு இருக்கின்றார்கள் என்றால், மூட நம்பிக்கையைக் கொண்ட மக்களைக் கொண்ட நாடு, காட்டுமிராண்டி நாடு என்று தான் கருதுகின்றார்கள். உலகத்தினர்கள் கண்களுக்கு முன்னால் நாம் சுத்த காட்டு மிராண்டிகள் என்று எண்ணப்படுகின்றோம்.

இன்றைக்கு உலகம் மளமளவென்று வளர்ந்து கொண்டே போகின்றது. விஞ்ஞான அதிசய அற்புதங்களை எல்லாம் கண்டு உன்னத நிலைக்குப் போய்க் கொண்டு இருக்கிறார்கள். ஆனால், நம் நாடு மட்டும் காட்டுமிராண்டி நிலையிலேயே இருக்கின்றது.

நமது காட்டுமிராண்டி நிலைக்குக் காரணம் நமது மதங்கள், இலக்கியங்கள், கடவுள்கள், சாஸ்திரங்கள் இவைகள் என்றுதான் சொல்லலாம். இப்படி கடவுள், மதம், சாஸ்திரம் என்பவைகள் எல்லாம் நமக்கு மட்டும் அல்ல, உலகில் மற்ற நாட்டினருக்கும் இருக்கின்றது. கிட்டத்தட்ட 100, 120 கோடி மக்களுக்கு மட்டும் கடவுள் இல்லை. இவைகள் ரஷ்யா போன்ற சில நாடுகள் தான் இவைகளை நீக்கிப் பார்த்தால் மற்ற நாட்டுக்காரர் களுக்கு எல்லாம் கடவுள் உண்டு, மதம் உண்டு, சாஸ்திரமும் உண்டு. இவர்கள் 150 - 200 கோடி இருப்பார்கள். அப்படித்தான் மேல் நாட்டுக்காரர்கள் புத்தகங்களே எழுதி வெளியிட்டுள்ளார்கள்.

நம் நாட்டைத் தவிர மற்ற நாடுகளில் உள்ள மதங்கள், கடவுள்கள், சாஸ்திரங்கள் பகுத்தறிவையோ, விஞ்ஞானத் தையோ புதுப்புது கண்டுபிடிப்புகளையோ தடை செய்து குறுக்கே நிற்கவில்லை. உலகில் கிறித்தவர்கள், முஸ்லிம்கள் ஆகிய இரண்டு சமுதாயமும் பெரிய எண்ணிக்கையைக் கொண்ட மதத்தினர்கள் ஆவார்கள். அவர்களுக்கு நம்மைப் போல பல கடவுள்கள் இல்லை. பல சாஸ்திரங்கள் இல்லை. ஒரே கடவுள், ஒரே சாஸ்திரம்தான் உண்டு. அவர்களுக்கு எல்லாம் மதத்திற்கு ஒரு தலைவன்தான் உண்டு. ஒன்று அல்லாமல் இரண்டு என்று நம்புகின் றவன் கிறித்துவனோ, முஸ்லிமோ ஆகமாட்டான். அவன் அஞ்ஞானி என்றே கருதப்படுவான்.

கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய மூன்று துறைகளிலும் நாம் எவ்வளவு மடையர்களாக உள்ளோம் என்பதை நினைத்துப் பாருங்கள். கிறித்துவ மதத் துக்கோ, முஸ்லிம் மதத்துக்கோ என்றைக்கு முதல் ஏற்பட்டது என்பதற்கு காலக் குறிப்பு உள்ளது.

நமது மதத்துக்குக் குறிப்பே கிடையாதே. நமக்கு எது மதம்? எது சாஸ்திரம்? எது முதல் ஏற்பட்டது? என்பதற்கு ஆதாரமே கிடையாது. பார்ப்பான் நமது மதத்தையே வேத மதம் என்றுதான் கூறுவான். நமது மானங்கெட்டவர்கள் ஆமாம் என்று ஒத்துக் கொள்ளுவார்கள்.


வேதம் என்றால் என்ன என்று எவனுக்காவது தெரியுமா என்றால் தெரியாது. நாம் ஏன் சூத்திரன்? தீண்டத்தகாதவன் என்றால் இந்து மதப்படி, கடவுள்படி, சாஸ்திரபடி தான் ஆகும். இவை எல்லாம் ஒழிக்கப்பட வேண்டும் என்று நான் தொண்டாற்று கின்றேனே, இதற்காகத்தான் இப்படி பாராட்டுகின்றீர்கள்.

கிறித்தவரும், முஸ்லிமும் கடவுள் ஒருவர்தான், உருவம் கிடையாது. அவருக்கு ஒன்றும் வேண்டியது இல்லை. அவர் கருணையானவர், அன்பானவர், அருளாளர் என்று தான் கூறுகின்றார்கள்.

நமது கடவுள் இப்படியா பல கடவுள், பல உருவங்கள், பெண்டு பிள்ளைக் குட்டிகள், சோறு, சாறு, கல்யாணம், கருமாதி எல்லாம் பண்ணுகின்றானே. எந்தக் கடவுளை எடுத்தாலும் கையில் அரிவாள், கொடுவாள், வேலாயுதம், சூலாயுதம் இவற்றை அல்லவா கொடுத்து உள்ளீர்கள்.

இவற்றை எல்லாம் கண்டிக்க, புத்தி கூற எங்களை தவிர யார் உங்களுக்கு பாடுபட்டார்கள்?


இத்தகைய மடமைகளை எல்லாம் மாற்ற நமது அரசாங்கத்துக்கு சக்தி போதவே இல்லை. நம்மை மனிதத் தன்மையில் பழக்கும்படியான நூல்கள் நம்மிடையே இல்லையே? நமது நாட்டில் ஏராளமான பத்திரிகைகள் இருக்கின்றன. ஒருவன்கூட மக்களை திருத்தும்படியாக நாலு வரிகூட எழுதுவது கிடையாது. மக்களை மடத்தனத்தில் ஆழ்த்தும்படியான செய்திகளைத் தான் வெளியிட்டு காசு சம்பாதிக்கின்றார்கள்.

எனவே, இந்த நாட்டில் பகுத்தறிவு ஊட்டக் கூடிய சாதனங்களே இல்லாமல் போய் விட்டதே! ஏதோ, காமராஜர், நேரு ஆகியவர்கள் முயற்சியின் காரணமாக கடந்த 10 ஆண்டுகளில் ஓரளவுக்கு மாறுதல் ஏற்பட்டுள்ளது.

இன்றைக்கு ஆட்சிக்கு எதிர்ப்பாக, காங்கிரசுக்கு எதிர்ப்பாக போராட்டங்கள் நடைபெறுகின்றது என்றால் எதற்காக நடக்கின்றது? பகுத்தறிவு வளர்ச்சிக்கு எதிர்ப்பாகத்தான்.

காங்கிரஸ் ஆட்சி நல்ல ஆட்சி என்று வாதாட வரவில்லை. இது போய்விட்டால் இன்று விடப் பல மடங்கு கேடான ஆட்சி தானே ஏற்படும்? என்பதற்காகத்தான் ஆகும்.

தோழர்களே, நாட்டில் எப்படி இத்தனை கடவுள்கள் தோன்றியுள்ளன. நமது முட்டாள்தனத்தை முதலாகக் கொண்டுதானே ஆரம்பிக்கப்படுகின்றன?

இந்த நாட்டில் மதத் துறையில், கடவுள் துறையில், சாஸ்திர, சம்பிரதாயத் துறையில் எவ்வளவு முட் டாளாக இருக்கின்றோமோ, அவ்வளவு முட்டாள் களாகத்தானே அரசியல் துறையிலும் இருக்கின்றோம்.

------------------17.9.1965 அன்று பெங்களூருவில் நடை பெற்ற விழாவில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை - விடுதலை 23.9.1965