ஒரு முக்கிய அறிவிப்பு

நான் http://thamizhoviya.blogspot.com/ (தமிழ் ஓவியா) என்ற பெயரில் வலைப்பூ ஒன்று தொடங்கப் பட்டு பெரியாரின் சிந்தனைகளை பதிவு செய்து வருகிறேன். ஏதோ ஒரு நோக்கத்திற்காக பெயர் தெரியாத நபர் ஒருவர் http://thamizhovia.blogspot.com/ (THAMIZHOVIA) என்ற பெயரில் வலைப்பூ ஒன்றைத்தொடங்கியுள்ளார் நன்றாக கவனியுங்கள் எனது வலைப் பூவின் பெயர் http://thamizhoviya.blogspot.com/ (தமிழ் ஓவியா). வேறு ஒரு நபரால் தொடங்கப்பட்ட வலைப்பூ வின் பெயர் http://thamizhovia.blogspot.com/ (THAMIZHOVIA) மிக நுணுக்கமான வேறுபாட்டைக் கவனித்தீர்களா? எனது வலைப்பூவில் oviya (தமிழ் ஓவியா) என்று இருக்கும் வேறு ஒரு நபர் தொடங்கிய வலைப்பூவில் ovia (THAMIZHOVIA) என்று இருக்கும் . எனவே தோழர்கள் ஏமாறாமல் இருக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். அந்த வலைப்பூ விற்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. தோழர்கள் இதைக் கவனத்தில் கொண்டு தமிழ் ஓவியா வலைப்பூ விற்கு ஒத்துழைக்கும் படி வேண்டுகிறேன். நன்றி

தமிழ் ஓவியா படைப்புகளில் தேட..!

Loading...

12.11.09

அண்ணா அவர்களின் தலைப்புகளைப் பாருங்கள்

அண்ணா எழுதிய தலைப்புகள் ஆராய்ச்சிப் பட்டம்
பெறுவதற்குரிய தகுதியைப் பெற்றதாகும்!
தமிழர் தலைவர் அறிவார்ந்த விளக்கவுரை

அண்ணா அவர்கள் எழுதிய தலைப்புகளே பெரிய ஆராய்ச்சிக்குரிய, டாக்டர் பட்டம் பெறுவதற்குரிய தகுதி பெற்றது என்று தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறினார்.

சென்னை பெரியார் திடலில் அறிஞர் அண்ணா நூற்றாண்டை ஒட்டி ‘‘அறிஞர் அண்ணாவின் நிலைத்த எழுத்தோவியங்கள்’’ என்ற தலைப்பில் 1.9.2009 அன்று திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:

அறிஞர் அண்ணா அவர்களின் நூற்றாண்டை நாம் பல்வேறு வகையிலே கொண்டாடிக் கொண்டிருக்கிறோம் என்று சொன்னாலும்கூட, அண்ணா அவர்களின் சிந்தனைகள் உலகை ஆளவேண்டும். ஆட்சி ஒரு பக்கத்திலே இருந்தாலும் அவருடைய சிந்தனைகள் என்பது தனித்த சிந்தனை அல்ல. தந்தை பெரியார் அவர்களுடைய உலைக்களத்திலே உருவாக்கப்பட்ட, பக்குவப்படுத்தப்பட்ட, சிந்தனைகள். எப்படிச் சொன்னால் மக்கள் ஏற்பார்கள், இளைஞர்கள் ஏற்பார்கள் என்பதை அறிந்து அதற்கேற்ப மிகப்பெரிய ஆற்றலோடு கருத்துகளைச் சொன்னார்கள்.

அண்ணா காலத்திற்கு முன்பு இருந்த நிலை...

நேற்று நான் குறிப்பிட்டதைப் போல அண்ணா அவர்கள் ஒரு பல்கலைக் கொள்கலன். ஒரு தனி மனிதர் இத்தனை ஆற்றலோடு திகழ்ந்தார் என்பதற்கு அண்ணா அவர்களைத் தவிர வேறு எவரையும் எளிதில் ஒப்பிடவே முடியாது.

அந்த அளவிற்கு ஒரு சிறந்த எழுத்தாளராக, சிறந்த கருத்தாளராக, நல்ல ஆட்சியாளராக, நல்ல சிறந்த நாடக ஆசிரியராக அவர்கள் திகழ்ந்தார்கள். அவர் எந்தக் கொள்கையை ஏற்றாலும் அந்தப் பரிமாணத்தோடு மிகச் சிறப்பாக நடத்திக் காட்டியிருக்கின்றார்.

அண்ணா காலத்திற்கு முன்னாலே தமிழ் எழுத்துகளிலே இருந்த சுவை என்பது அவ்வளவு ஈர்ப்பில்லாத ஒன்றாகும். கட்டுரைகளிலே கருத்தாழம் இருந்திருக்கலாம். ஆனால், அதை கவர்ச்சியோடு சொல்லக்கூடிய அளவிற்கு அவரைப் போல எவரும் ஆற்றல் பெற்றவர் என்று சொல்லிவிட முடியாது. தலைப்பேகூட வியப்படையக்கூடிய தலைப்பாக அவர்கள் வழங்கக்கூடிய ஆற்றல் அண்ணா அவர்களிடத்திலே இருந்தது.

அண்ணாவின் தலைப்புகள் என்றே ஓர் ஆய்வு செய்யலாம். அந்த அளவிற்கு ஆய்வாளர்களுக்கு அண்ணா அவர்கள் ஒரு சுரங்கம்.

குறுக்கிவிடக்கூடாது

அண்ணா ஓர் ஆழ்கடல். அண்ணா அவர்களுடைய கருத்துகளை இனிவரக்கூடிய இளைய தலைமுறையினர் தெரிந்துகொள்ள வேண்டும். அதுவும் அண்ணா அவர்களை பிற்காலத்திலே எப்படிப் பார்ப்பார்கள் என்றால், முதலமைச்சர் வரிசையிலே வைத்து எண்ணிப் பார்த்து அவரை குறுக்கிவிடக் கூடிய சரித்திர சதிகள் நடைபெறலாம்.

ஆகவே, அண்ணா அவர்களுடைய சிந்தனை என்பது எப்படிப்பட்டது என்பதனைப் பார்க்க வேண்டும். திருப்பூர் மாநாட்டிலே அய்யா அவர்கள் முன்பு தன்னை ஒப்படைத்துக் கொண்டார். அதன் பிறகு சுயமரியாதை இயக்கத்தில் ஒரு தனிப்பெரும் தளபதியாகத் திகழ்ந்தார்.

பெரியார் எண்ண ஓட்டத்திலேயே...

அடித்தளத்திலே தந்தை பெரியார் அவர்களுடைய கருத்துகளை வேகமாக எடுத்து வைத்து எழுத்தோவியங்களாகத் தந்தார்கள்.

விடுதலை இதழுக்கு பொறுப்பாசிரியராக அண்ணா அவர்கள் இருந்தார்கள்.

இந்தி எதிர்ப்புப் போராட்டக் களத்திலே நின்றார்கள். பிறகு ‘கபோதிபுரம் காதல்’ என்ற கதை விடுதலையில் தொடர்கதையாக வந்திருக்கிறது என்பது பலபேருக்குத் தெரியாது.

அப்படி அவர்களுடைய எழுத்தோவியங்கள் என்று சொன்னால் சிறுகதைகளாக, தொடர்கதைகளாக ஏராளமாக வந்தது என்பதை எல்லாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

பிறகு நாடகங்கள், அதுபோல சிறு சிறு கதைகளாக வந்தன. அண்ணா அவர்களுடைய நாடகத்தை தெருமுனை நாடகங்களாகப் போடலாம். அவருடைய எழுத்தோவியங்கள் இப்படி ஏராளம் இருக்கின்றன.

பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார் போராட்டம்

இங்கே நம்முடைய பொதுச்செயலாளர் அறிவுக்கரசு அவர்கள் சொன்னார்கள். காமராஜருக்கும், ஆச்சாரியாருக்கும் நடந்த மிகப்பெரிய இனப்போராட்டம் அரசியல் போராட்டம் என்று வெளிஉலகத்திற்குத் தெரிந்திருந்தாலும் முழுக்கமுழுக்க அது பார்ப்பனருக்கும், பார்ப்பனரல்லாதாருக்கும் நடந்த போராட்டம். அதிலே யார் கை ஓங்கியது? யார் தாழ்ந்தார்கள்? யாருடைய கை தாழ்ந்தது என்பதை எல்லாம் எண்ணிப் பார்க்கக்கூடிய அரசியல் வரலாற்றைத் தெரிந்து கொள்ள வேண்டுமானால் வேறு எங்கும் போய்த் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை.

தந்தை பெரியார் அவர்களுடைய பழைய ஆவணங்களை, விடுதலையில் வந்த பழைய ஆவணங்களை, விடுதலையில் வந்த பழைய சம்பவங்களைப் பார்த்தாலே தெரியும்.

அண்ணா அவர்களின் தலைப்புகளைப் பாருங்கள்

கோடு உயர்ந்தது; குன்றம் தாழ்ந்தது’’ எவ்வளவு அற்புதமான தலைப்பைப் பாருங்கள். கோடு என்பது திருச்செங்கோடு. குன்றம் என்பது திருப்பரங்குன்றம்.

அதை அண்ணா அவர்கள் அமைத்த முறை இருக்கிறதே இதுபோன்ற தலைப்புகளே வியப்பாக இருக்கும்.

இரு கொடி ஏந்திகள்’ என்று கம்யூனிஸ்ட்களைப் பார்த்து எழுதினார். இப்பொழுதும் அவர்கள் இருகொடி ஏந்திகள்தான். அப்பொழுதே அண்ணா அவர்கள் இருகொடி ஏந்திகள் என்ற தலைப்பில் அற்புதமான கட்டுரையை எழுதினார்கள்.

அண்ணா அவர்கள் இதுபோன்று எழுதிய தலைப்புகளே மிகச் சுவையாக இருக்கும். அந்தத் தலைப்புகளைப் பார்த்தாலே மற்றவர்கள் சிந்திக்கக்கூடிய அளவிற்கு இருக்கும். அண்ணா அவர்களின் தலைப்புகள் சில நேரங்களில் எளிமையாக இருக்கும்.

இலக்கிய நயத்தோடு இருக்கும். ‘இடம் தேடிகள்’, ‘சிலந்தி சிரிக்கிறது’, ‘பிரபுக்களின் புதிய கோலம்’, ‘சமாதானப் பரிட்சையா?’, ‘முடியுமானால்’, ‘கிளி நிறம் பெற்ற கழுகு’, இதுவரை யாரும் இப்படிப்பட்ட தலைப்புகளை சிந்திக்கவே முடியாது. கழுகு ரொம்ப ஆபத்தானது.

ஆனால், கழுகு கிளி நிறம் பெற்றிருந்தால் என்ன நிலைமை? மற்றவர்களை ஏமாற்றுவதற்காக அது பயன்படும்.

‘சீடர் சிலம்பம் எடுக்கிறார்’

அண்ணா அவர்கள் போட்ட தலைப்பே ரொம்ப வியப்பாக இருக்கும். ‘நீதிதேவன் மயக்கம்’ என்ற தலைப்பே ரொம்ப வியப்பான தலைப்பு. அதற்கு முன்னாலே அப்படி ஒரு தலைப்பே வந்தது கிடையாது. அவ்வளவு அற்புதமான தலைப்பைப் போட்டு அண்ணா அவர்கள் எழுதுவார்கள்.

ஒருமுறை சி.சுப்பிரமணியம் அவர்கள் ஆவேசமாக நமது இயக்கத்தைத் தாக்கினார். அதற்கு அண்ணா அவர்கள் பதில் சொன்னார்.

சீடர் சிலம்பம் எடுக்கிறார் என்று. ரொம்ப அற்புதமான தலைப்பு. அவருடைய குருவே சிலம்பம் எடுக்க முடியாமல் உட்கார்ந்திருக்கின்ற பொழுது ஏன் இந்தச் சிக்கலில் சீடர் மாட்டிக் கொள்கிறார் என்பதைக் காட்டுவதற்காக அவர் அப்படிப்பட்ட தலைப்பைப் போட்டுச் சொல்லுகின்றார்.

இப்படி எத்தனையோ தலைப்புகள் உண்டு. அந்தத் தலைப்பிலே அவர்கள் எழுதுகின்ற முறை மாறவில்லை.

அண்ணா அவர்களை விட்டு மாறவில்லை. என்னதான் அவர் பொறுப்புக்கு வந்தாலும் அவருடைய எண்ண ஓட்டம் மாறவில்லை.

அவர் ‘சூழ்நிலைக் கைதி’ என்று முதலமைச்சர் பதவியைப் பற்றிச் சொல்லும் பொழுது சொன்னார். அவர் விரும்பி ஏற்றுக்கொண்டதல்ல, அது இயல்பானது.

ஒருவரை ஒருவர் தாக்கினாலும்...

காட்டிலே இருக்கக்கூடிய ஒரு சிங்கத்தைக் கொண்டு வந்து ஒரு கூண்டிலே போட்டு வைத்தால் அதை எல்லாரும் வியப்பாகப் பார்ப்பார்கள். சிங்கத்தை ஒரு சர்க்கசில் கொண்டு வந்து காட்டினால் எப்படியிருக்குமோ அப்படி இருக்கும். அண்ணா அவர்கள் தனது பதவியை ஒரு துண்டு போலக் கருதினார்கள்.

அண்ணா அவர்கள் பதவிக்கு வந்திருக்கிறார்கள். 16 ஆண்டுகளாக அய்யா அவர்களும், அண்ணா அவர்களும் பிரிந்திருக்கிறார்கள் என்ற புறத்தோற்றம் நம்மிடையே இருக்கிறது. ஒருவருக்கு ஒருவர் மேடைப் பேச்சில் தாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் இரட்டைக் குழல் துப்பாக்கி என்று அண்ணா அவர்கள் சொன்னாலும்கூட, இடையிலே தேர்தல் வந்து குறுக்கிட்டு, அரசியல் கட்சியாக மாறிய காரணத்தினாலே எதிர்ப்பு என்ற நிலையெல்லாம் வந்த பிற்பாடுகூட அண்ணா அவர்கள் அப்பொழுது ஒரு புதிய அணுகுமுறையைக் கையாண்டார்.

அண்ணா தேர்தலிலே வெற்றி பெற்று காரைவிடச் சொன்ன நேரத்திலே எல்லோரும் நினைத்தார்கள். காரில் கலைஞர் இருந்தார். நாவலர் இருந்தார். எல்லாரும் இருந்த நேரத்திலே காரை விடுங்கள் என்று சொன்னார்.

ஓட்டுநர் என்ன நினைத்தார். நேரே கிண்டி கவர்னர் மாளிகைக்குத்தான் கார் போகப் போகிறது என்று நினைத்த நேரத்திலே அதையும் தாண்டி ஓட்டு என்று அண்ணா அவர்கள் சொன்னார்கள்.

காரோட்டி நினைத்தார். ஒரு வேளை காஞ்சிபுரம் போகிறார் போல இருக்கிறது என்று நினைத்தார்.

அண்ணாவின் கார் பெரியார் மாளிகைக்குத்தான் சென்றது

செங்கல்பட்டையும் தாண்டிபோ என்று அண்ணா அவர்கள் சொல்லுகிறார். எங்கே போவது என்று காரோட்டிக்குத் தெரியவில்லை.

அண்ணா அவர்களிடம் நீண்ட நாள்களாக இருக்கிறவர் தோழர் சண்முகம் அவர்கள். அப்படி ஓட்டிக்கொண்டு சென்றபொழுது நேராக திருச்சிக்குச் செல் என்று பிறகு அண்ணா அவர்கள் சொன்னார்.

அண்ணா அவர்களுடைய கார் திருச்சி பெரியார் மாளிகைக்கு இரவு 10 மணிக்கு வந்து சேர்ந்தது. அண்ணா அவர்கள் தேர்தலில் வெற்றி பெற்றவுடன் 200 மைல்களுக்கு அப்பால் உள்ள பெரியார் மாளிகைக்குத்தான் சென்றார்.

எப்பொழுது? ஆச்சாரியார் உதவியோடு ஆட்சிக்கு வந்த பிற்பாடு. ஆச்சாரியாரும் புரிந்து கொண்டார். கடற்கரையில் நடைபெற்ற கூட்டத்திலே சொன்னார்.

கடற்கரையிலே ஒரு பெரிய வெற்றி விழாக் கூட்டம். தி.மு.க. பெற்ற வெற்றி அபாரமான வெற்றி. எதிர்பாராத வெற்றி. காமராஜர் பெற்ற, காங்கிரஸ் பெற்ற பெரும் தோல்வி.

நான் வாழ்க்கையிலே இரண்டு, மூன்று தோல்விகளை சந்தித்திருக்கிறேன் என்று அய்யா அவர்களே அறிக்கையில் எழுதினார்.

அப்படிப்பட்ட நிலையிலே ஒரு பெரிய கூட்டம் நடைபெறுகின்றது. திருவல்லிக்கேணி, மயிலாப்பூர் மக்கள் எல்லாம் முழுமையாக திரண்டிருக்கின்றார்கள்.

-------------- தொடரும் ... "விடுதலை" 12-11-2009

மனோரமா அவர்களும்-மருத்துவப் பரிசோதனையும்

16 ஆவது
திருமணமாம்!

உத்தரப்பிரதேச மாநிலம் ஜோதிபா புலே மாவட்டம் ராய்ப்பூர் கலன் கிராமத்தைச் சேர்ந்த அப்துல் வாகித் என்பவர் கடந்த 40 ஆண்டுகளில் 15 திருமணங்களைச் செய்துகொண்டு இப்-பொழுது 16 ஆவது திருமணத்திற்கும் ‘அடி’ போடுகிறாராம். என்ன காரணமாம்? இதுவரை ஒரு குழந்தைகூடப் பிறக்கவில்லையாம்; அதற்காகத்தான் 16 ஆவது திருமண ஏற்பாடாம்.

ஒரு அப்துல் வாகித் மட்டுமல்ல; இதுபோல எத்தனையோ வாகித்துகளும், வாஞ்சிநாதர்களும் நாட்டிலே இருக்கவே செய்கிறார்கள். குழந்தைகள் இல்லையென்றால் அதற்குப் பெண்கள்தான் காரணம் என்கிற அறியாமை, ஆண்களுக்கே உரிய ஓர் அகம்பாவம் இந்த நாட்டிலே தலை கொழுத்துக் காணப்படுகிறது.

15 பெண்களைத் திருமணம் செய்தும் குழந்தை இல்லையென்றால், கண்டிப்பாக குறைபாடு இந்த ஆணிடம்தான் இருக்கிறது என்பது வெளிப்படை; இதனை அந்த ஆசாமியிடம் சுட்டிக்காட்டி இடித்துக் கூற எந்த பகுத்தறிவுவாதியும் அல்லது பொது அறிவுவாதியும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் இல்லை போலும்.

திருமணத்துக்குமுன் மருத்துவ சோதனை ஆண் _ பெண் இருபாலரிடத்திலும் மேற்கொள்ளப்படவேண்டும் என்ற கருத்தினை தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் தொடர்ந்து திருமண மேடைகளில் சொல்லிக் கொண்டு வருகிறார்.

ஜாதகப் பொருத்தம் என்பது பொய்; குருதிப் பொருத்தமே தேவை என்பது பகுத்தறிவு அறிவியலின் நிலைப்பாடாகும்.

இந்த நாட்டில் சோதிடப் பலன்களையும், ராசிப் பலன்களையும் பக்கம் பக்கமாக எழுதும் ஏடுகள், இதழ்கள் மக்களுக்குத் தேவையான இதுபற்றியெல்லாம் எழுதாதது அவற்றின் பொறுப்பற்ற தன்மையையும், பகுத்தறிவற்ற நிலையையும் தான் படம் பிடித்துக் காட்டும்.

மக்கள் கலையரசி மனோரமா திருமணத்துக்குமுன் மருத்துவ சோதனை என்று வலியுறுத்துவது வரவேற்கத்தக்கதாகும். கலை உலகினர் எடுத்துக் கூறினால் மக்களிடத்திலே வேகமாகச் சென்றடையும்தானே!

இன்னொரு மூட நம்பிக்கை உண்டு. குழந்தை ஆணா, பெண்ணா என்று முடிவு செய்வது ஆண்களின் ‘குரோமோசோம்கள்’தான். இந்த அறிவியல் உண்மை தெரியாத நிலையில், ஆண் குழந்தை வேண்டும் என்பதற்காக அடுத்தடுத்து திருமணம் செய்துகொள்ளும் மூடர்களை என் சொல்ல!

---------------- மயிலாடன் அவர்கள் 11-11-2009 "விடுதலை" யில் எழுதிய கட்டுரை

11.11.09

நேபாளத்தில் நடக்கும் இந்து மதக் குரூரம்!



உலகில் ஒரே இந்து நாடாகவிருந்த நேபாளத்தில் இந்துமத ஆட்சி மாறினாலும், மாவோயிஸ்ட்கள் கையில் ஆட்சி வந்தாலும் இந்து மத சனாதன சடங்குகள் மட்டும் ஆணி அடித்ததுபோல அப்படியே ஆணிவேருடன் அப்படியே நிலை பெற்றுதான் இருக்கின்றன.

அய்ந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நேபாள நாட்டின் தென்பகுதியில் உள்ள பர மாவட்டத்தில் நேபாள பெண் கடவுளான காதிமையைச் சாந்திபடுத்த அய்ந்து லட்சம் ஆடு, மாடு, கோழி, புறா, வாத்துகளைப் பலியிடுவார்களாம். இம்மாதம் 24, 25 ஆகிய நாள்களில் இந்த காட்டுவிலங்காண்டித்தனமான நிகழ்ச்சி நடைபெறவுள்ளதாம்.

ஒருகணம் நினைத்துப் பார்ப்போம்; அய்ந்து லட்சம் உயிர்களைப் பலியிடுவதென்றால் அது எவ்வளவுப் பெரிய அச்சுறுத்தக்கூடிய பயங்கரமான செயலாக, கோர காட்சியாக இருக்க முடியும்? அந்த வட்டாரமே ரத்த வெள்ளமாகப் பெருக்கெடுத்து ஓடாதா? அந்தப் பகுதிவாழ் மக்களின் அன்றாட வாழ்வு பாதிக்கப்படாதா? சுற்றுச்சூழல் பாதிக்கப்படாதா? எவ்வளவு குரூர நெஞ்சம் படைத்திருந்தால் அய்ந்து லட்சம் உயிர்களை துடிக்கத் துடிக்க வெட்டிக் கொல்லுவார்கள்!

இந்த நிகழ்ச்சியைத் தடுக்கவேண்டும் என்ற கோரிக்கையை நேபாள அரசு நிராகரித்துவிட்டதாம். மக்களின் மத நம்பிக்கைகளில் தலையிடாதாம் நேபாள அரசு.

பக்தியின் பெயரால் நடக்கும் இந்தக் காட்டுவிலங்காண்டித்தனத்தைத் தடுக்க முடியவில்லையே மாவோயிஸ்ட்களால் என்றால், அந்நாடு மன்னராட்சியிலேயே இருந்துவிட்டுப் போகலாமே! மார்க்சியம் என்பது மந்தையோடு மந்தையாக செல்வதுதானா? மூட நம்பிக்கைகளை அழிக்கும் சக்தியை, ஆற்றலை, அறிவை மார்க்சியம் அளிக்கவில்லையா? அல்லது அதனை இந்த மாவோயிஸ்ட்கள்தான் புரிந்துகொள்ளவில்லையா?

பசுவதையைத் தடுக்கவேண்டும் என்று கூறும் சங்கராச்சாரியார்களும், சங் பரிவார்க் கும்பலும் இதுபற்றியெல்லாம் கவலைப்படுவது கிடையாது.

இவர்களின் அர்த்தமுள்ள இந்து மதத்தில் மனிதர்களையே கொன்று யாகம் நடத்தியிருக்கிறார்களே, அதற்கு “புருஷ யஜ்ஞ’’ என்று பெயர் ஆகும்.

“இந்தியாவில் உள்ள ஆரியர்களிடம் மனிதனைக் கொன்று யாகம் செய்யும் வழக்கம் இருந்திருக்கிறது என்று நிச்சயமாகச் சொல்லலாம்’’ (இம்பீரியல் இந்தியன் கெஜட் 1909 ஆம் வருடத்தில் பதிப்பு வால்யூம் ஒன்று 405 ஆம் பக்கம்).

மனிதனையே கொன்று குவிக்கும் கொலைகாரத்தனத்துக்கு இந்து மதம் சூட்டும் பெயர் “புருஷ யஜ்ஞ’’வாம்.

மாட்டுக்குத் தார்குச்சி போட்டால் அது மிருகவதை என்று கூறி, அது குற்றச்செயல் என்று (ஷிறிசிகி) தண்டிக்கும் சட்டம் தனியே இருக்கிறது. ஆனால், யாகம் என்ற பெயரால் மாடுகளையும், ஆடுகளையும் வெட்டிக் கொல்லுவது அனுமதிக்கப்பட்டுள்ளது என்றால், இது என்ன இரட்டை அளவுகோல்!

ஒரே நேரத்தில் 5 லட்சம் உயிர்களைப் பலி கொடுப்பது என்பது உலகில் வேறு எங்குமே கிடையாதாம்.

வேறு எங்கு இருக்க முடியும்.ஒரு இந்து நாட்டைத் தவிர? இதே நேபாளத்தில்தானே (2001) சோதிடக் கிறுக்குத்தனம் காரணமாக தாய், தந்தையர் உள்பட எட்டு பேர்களைச் சுட்டுக் கொன்றான் இளவரசன்.

எந்த சோதிடனும் இதுபோல் நடக்கும் என்று முன்கூட்டியே சொல்லவில்லையே! இவ்வளவு கொடூரம் நடந்ததற்குப் பிறகும்கூட அதுபற்றிய உரத்த சிந்தனைக்கு இடமில்லாமல், தோஷம் கழிக்கும் பார்ப்பனிய சடங்குகளைத்தானே நடத்தினார்கள்.

இது ஏதோ நேபாள நாட்டின் உள்நாட்டுப் பிரச்சினை என்று மற்ற நாடுகள் ஒதுங்கிக் கொள்ளக்கூடாது. கொடூரமான செயல்கள் எங்கு நடந்தாலும் அதனைக் கண்டிக்க, தடுத்து நிறுத்த உலக நாடுகள் கடமைப்படவில்லையா?

----------------"விடுதலை" தலையங்கம் 11-11-2009

பெரியார் வெங்காயம் என்று எந்தப் பொருளில் சொன்னார்?


எப்போதுமே நான் கடவுளையும், மதத்தையும் அவை சம்பந்தப்பட்டவை எவற்றையுமே, "வெங்காயம்" என்று தான் சொல்லுவேன். வெங்காயம் என்றால் வித்து இல்லாதது. வெறும் சதை. அச்சொல்லின் பொருள் வெங்காயம் வெறும் காயம்; உயிரற்ற உடல்; விதை இல்லாதது உரிக்க உரிக்கத் தோலாகவே சதையாகவே வந்து முடிவில் சூனியமாய் விதை இல்லாத தன்மையாய் முடிவது என்பது பொருள்.

ஆகவே விதை வித்து இல்லாத காரணத்தால் தான் அதற்கு வெங்காயம் என்ற பெயர் உண்டாயிற்று. அது போன்றவைதான் கடவுளும் மதமுமாகும். இச்சொற்களுக்கு இயற்கைப் பொருளே இல்லை. கற்பிக்கிறவர்கள் சொல்லும் பொருள்தான்.

------------------ தந்தைபெரியார் - "விடுதலை" 21-9-1973

கட்டுப்பாடு பற்றி பெரியார்




திராவிடர் கழகம் கட்சியல்ல- இயக்கம்!

பேரன்புமிக்க தலைவர் அவர்களே, தாய்மார்களே, பெரியோர்களே, இந்த மயிலாப்பூர் திராவிட இளைஞர் கழகத்தின் சார்பாக பேசும்படி எனக்கு வாய்ப்பு அளித்த செயலாளர்களுக்கு எனது நன்றி. வரவேற்றுப் பத்திரம் வாசித்தளித்து புகழ்மாலை கூறியதற்காகவும் எனது நன்றி. அதிலே கூறியிருக்கிற புகழுக்குத் தகுதியற்றவன் ஆனாலும் உங்களுடைய அன்புக்கும், நம்பிக்கைக்கும் பாத்திரமாக நடக்க முயற்சிக்கிறேன். இவ்வளவு ஆடம்பரமாக பணம் செலவு செய்து பூமாலைகள் போடுவதைவிட கருப்புத் துணியாவது போடலாம். முதன் முதலிலே இந்த இளைஞர்களுக்கு, மாணவர்களுக்கு சில வார்த்தைகள் சொல்ல ஆசைப்படுகிறேன். இளைஞர்களாகிய நீங்கள் கட்டுப்பாடாக இருந்து ஒழுங்காய், மற்றவர்கள் நம்மைப் பார்த்து மதிக்கும்படி நடந்து கொள்ளுங்கள். வெற்றி ஒலி முழங்குகிற காலங்களிலும், கழகக் கொள்கை ஒலி முழங்குகிற காலங்களிலும், கேட்கிறவர்கள் இதற்கு வசப்படும்படியாக இணங்கும்படியாக இருக்க வேண்டும் மற்றவர்கள் மன வருத்தம் அடையும்படியாகவோ வெறுப்பு அடையும் படியாகவோ ஆத்திரப்படக் கூடியதாகவோ இருக்கக் கூடாது. வேண்டுமானால் அறியாமை ஒழிய வேண்டும், மூட நம்பிக்கை ஒழியவேண்டும் என்பது போன்ற சொல்லைச் சொல்லுங்கள். எப்பொழுதும் 'வாழ்க' என்றே முழக்கம் செய்யுங்கள்.

ஏன்? இப்பொழுது நாம் நல்ல வெற்றியடைந்து வருகிறோம். யாரையும் நாம் வைது வெற்றியடைய வேண்டியதில்லை. நம்முடைய குறைபாடுகளைச் சொல்வதன் மூலமே, நம்மை நொந்து கொள்வதன் மூலமே இனி நாம் வெற்றியடையப் போகிறோம். சிறிது காலமாக நம் மக்களுக்குச் சிறிதாவது மான உணர்ச்சி உண்டாகும்படி செய்து வந்திருக்கிறோம். இது வளர்ச்சியடைய வேண்டும். எதிரிகளும் திருந்தும்படிச் செய்ய வேண்டும்.

உங்களுக்குக் கட்டுப்பாடு அவசியம் வேண்டும். இதில் நம்பிக்கை வைத்து ஒழுங்காய் நடக்க வேண்டும். நமது கழகக் கொள்கையைப் பற்றிய போராட்டம் நமக்குள்ளேயே நடக்கக்கூடாது. இந்தக் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு எப்பொழுது கழகத்தில் சேர்ந்து விட்டோமோ அதற்குமேல் அந்தக் கொள்கையைப் பற்றிச் சந்தேகப்படக் கூடாது. தலைவர்களை உண்மையாய் பின்பற்ற வேண்டும். சுயநலத்துக்காக வஞ்சகக் கருத்தோடு கட்சிப் போர்வையில் இருக்கக் கூடாது. தலைவரைக் குறைகூறிக் கொண்டு வைது கொண்டு கட்சிக்குள்ளேயே கலகம் செய்யக்கூடாது. இது எல்லாக் கட்சிக்கும் உள்ள பொதுவான விதி.

தோழர்களே சிந்தித்துப் பாருங்கள். கட்சிக்குள்ளேயே கலக உணர்ச்சியும் கட்டுப்பாடற்ற தன்மையும் ஏற்பட்டால், கட்சி கலகலத்து விடாதா? தோழர்களே! நம்முடைய நிலைமை இன்றைய தினம் மிக மிக பரிதாபகரமான தன்மையிலேயே இருக்கிறது. நாம் ஆதரவற்ற நிலையிலேயே இருக்கிறோம். நமக்கு ஏற்படும் தொல்லைகள் ஏராளம். நமது கட்டுப்பாட்டைத் தடுக்கும் சூழ்ச்சிகள் ஏராளம் நம்முடைய திட்ட நடப்பைத் தடுக்கும் காரியங்கள் ஏராளமாய் நடைபெறுகின்றன. வெள்ளையாகப் பேசுகின்றேன். நமக்கு யாருடைய ஆதரவு இருக்கிறது? ஒரு சர்.ராமசாமி முதலியார், சர். அண்ணாமலைச் செட்டியார், சர்.ஆர்.கே.சண்முகம் செட்டியார் போன்ற அறிவாளிகளுடைய செல்வான்களுடைய ஆதரவு உண்டா? எந்தப் பிரபுக்கள் மிராசுதார்கள் நம்மை ஆதரிக்கிறார்கள்? எந்தப் பத்திரிகை நம்மை ஆதரிக்கிறது? நன்றாகச் சிந்தித்துப் பாருங்கள். யாரையும் குறை சொல்வதற்காகச் சொல்லவில்லை.

கார்ப்பரேஷனில் உள்ள ஒரு பார்ப்பனன் ஆயிர ரூபாயைத் திருடிவிட்டால், திருவாங்கூரிலுள்ள திவான் கவர்னருக்குச் சிபாரிசு செய்ய வருகிறார், நமக்கு என்ன ஆபத்து வந்தாலும் கேட்க நாதியில்லை. நமது கொட்டகையைக் கொளுத்தினார்கள். நம் தோழர்களை அடித்தார்கள். கண்களைக் குத்தினார்கள். சட்ட சபையிலே இதைப்பற்றி யாராவது கேட்டார்களா? சட்ட சபையிலே காங்கிரஸ் கட்சிக்கு எதிரான கட்சிகள் இல்லையா? யாராவது ஒரு வார்த்தை கேட்டார்களா? நமது நிலைமை அவ்வளவு நாதியற்றதாக, கதியற்றதாக இருக்கிறது. பத்திரிகை வசதி யாராவது உண்டா? நமது செய்தியை ஒரு பத்திரிகைக் கூட போடுவதில்லை. இல்லை பத்திரிகை ரிப்போர்ட்டர்களாவது நம்மைப் பற்றிச் சரியாக எழுதுகிறார்களா? அவர்கள் இங்கே எதற்காக வருகிறார்கள் என்றால், நமது கூட்டத்தில் கல், செருப்பு விழுந்ததா? கலகம் நடந்ததா என்பவைகளைக் காணவும், எழுதவும் தான் வருகிறார்கள். இந்த ஊரில் எப்படி இருந்தாலும் வெளியூர்களிலேயுள்ள ரிப்போர்ட்டர்கள் அப்படித்தான், நம் இயக்கப் பத்திரிகைகள் என்பவைகளால் நமக்குத் தொல்லை தான் அதிகம். எனவே நமக்கு நாதியுண்டா? நமக்குள்ள குறைபாடுகள் அவ்வளவு இருக்கின்றன. இவைகளுக்கிடையே தான் நாம் வளரவேண்டியிருக்கிறது. இந்த நிலையில் தான் இயக்கத்தில் தொண்டாற்றி வருகிறோம். இயக்கமும் வளர்ந்து வருகிறது.

தோழர்களே, நமது திராவிட கழகம் என்பது கட்சியல்ல. காங்கிரசைப் போல் நமது கழகம் கட்சியல்ல; இயக்கமாகும். கட்சி என்பது தோல்விக்கும், வெற்றிக்கும் கட்டுப்பட்டது. இயக்கம் என்பது இவைகளுக்கெல்லாம் கட்டுப் பட்டதேயல்ல. ஒரு தனி மனிதனுடைய உள்ளத்தில் உணர்ச்சி யிருக்கும் வரையில் அது இருந்துதான் தீரும்.

ஜஸ்டிஸ் கட்சி ஒரு கட்சியாயிருந்தால் தோல்வி நிலைக்கு வந்தது. அதேபோல காங்கிரஸ் இப்போது வெற்றியடைந்து பதவியேற்கும் நிலைமைக்கு வந்துங்கூட அது சாகவேண்டிய நிலைமைக்கு வந்துவிட்டது. வெற்றி பெற்றே சாகவேண்டிய நிலைமைக்கு வந்துவிட்டது. வைசியராய், முதன் மந்திரி, கவர்னர் போன்ற பதவிகளும் பட்டங்களும் காங்கிரஸ்காரர்கள் காலடியிலே வந்து விழுகின்றன என்றாலும் அவர்கள் தலைவர்களே சொல்கிறார்கள் "இனி காங்கிரஸ் இருக்க வேண்டியதில்லை. கலைத்துவிடலாம்" என்று, அந்த நிலைக்கு வந்துவிட்டது. வெற்றி பெற்றாலும் தோல்வியடைந்தாலும் கட்சி என்பது அழியவேண்டியது தான். ஆனால் நாம் வெற்றி பெற்றாலும் தோல்வியடைந்தாலும் இயக்கம் ஒழிய வேண்டியதில்லை. ஒரு மனித சமுதாயம் உள்ள வரையில் அது பணியாற்றியே தீரும்.

நமது இயக்க வேலைகளை, நாம் மந்திரிப் பதவியடைவதன் மூலமே அடையமுடியும் என்று கருதுவதும் பிசகு. ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள் தோல்வியடைந்த பிறகு நெல்லிக்காய் மூட்டைகளானார்கள். அதுபோல காங்கிரஸ் கட்சிக்காரர்கள் வெற்றியடைந்த பிறகு நெல்லிக்காய் மூட்டைகளாகி வருகிறார்கள். இப்பொழுது பார்க்கிறோமே தினம் தினம் வேடிக்கையை, ஹோம் ரூல் கட்சி என்ன ஆனது? ஆங்காங்கே கிளை ஸ்தாபனங்களை ஏற்படுத்தி நல்ல அமைப்பு அமைந்ததிலே அன்னி பெசன்ட் அம்மையார் பேர் எடுத்தார்கள். ஸ்தாபன ரீதியாக வேலை செய்தார்கள். சி.பி. ராமசாமி அய்யர் போன்ற பார்ப்பனர் எல்லாம் பெரும் பெரும் பதவிகளை அடைந்தார்கள். இப்பொழுது அந்தக் கட்சி எங்கே இருக்கிறது? அழிந்துவிட வில்லையா? ஆனால், இயக்கம் அப்படியல்ல. அது தன்னுடைய காரியத்தை பதவியின் மூலம் தான் செய்ய முடியும் என்பதில்லை. மக்களுடைய உள்ளத்தில் கருத்துக்களைப் புகுத்தி வைப்பதன் மூலம் தான் அது வெற்றி அடைவது.


மற்றும் எதைச் சொன்னால் மக்கள் நம்மை ஆதரிப்பார்கள், எதைச் சொன்னால் மக்களுடைய ஆதரவு கிடைக்கும். எதைச் சொன்னால், மக்களுடைய ஆதரவு கிடைக்காது என்றெல்லாம் சிந்தித்து சிந்தித்து கட்சி என்பது பணியாற்றும். ஆனால், நாம் இயக்கத்தவர்களாகிய நம் மக்களைத் திருத்த வேண்டும். அவர்களுடைய மனதை மாற்ற வேண்டும். அவர்களுக்கு விளக்கிக் கூறவேண்டும். அவர்களுடைய புத்தி திருந்த வேண்டும். அவர்கள் உள்ளத்தில் மாறுதல் அடைய வேண்டும் என்று வேலை செய்பவர்கள் அப்பொழுதுதான் நமது லட்சியம் வெற்றி அடையும்.

மக்களுடைய ஆதரவுக்காக நாம் கவலைப்பட மாட்டோம். மக்கள் ஏற்றாலும் வைதாலும் கவலைப்படாமல் இருப்போம். நம்மைப் பொறுத்தவரையில் நம் பின்னாலே மக்கள் வரவேண்டுமே தவிர, பாமர மக்கள் பின்னாலே ஓடுவது இல்லை. கல்லடி பட்டாலும் சரி, வெற்றியடைந்தாலும் சரி, நமக்குப் பட்டதைச் சொல்லியே தீருவோம். அப்படி நாங்கள் எங்களுடைய பின்னாலேயே மக்கள் பின் தொடரவேண்டும் என்று வேலை செய்தனாலேயே தான், இப்பொழுது எங்களுக்கு ஓரளவு வெற்றி கிடைத்து வருகிறது.

எங்களைக் கல்லால் அடித்தவர்கள் எல்லாம், "அப்போது உங்கள் மீது கல் போட்டது ஒரு கை; இப்போது உங்களைக் கூப்பிடுவது இரு கையால்", என்று கூப்பிட்டு அழைக்கிறார்கள். ஓடி ஓடிக் காங்கிரஸ்காரர்களுக்கு ஓட்டுப் போட்டவர்கள் எல்லாம் அவர்களை ஓட ஓட விரட்டி அடிக்கிறார்கள். ஆனால், அதே சமயத்தில் கொஞ்சம் கொஞ்சமாக நமக்கு ஆதரவு வளர்ந்து கொண்டே இருக்கிறது. மக்கள் உள்ளத்தில் உள்ள பல தவறுதல்களை, மக்களுடைய மனதில் படிந்துள்ள மாசுகளை, மக்களுடைய அறியாமையைத் திருத்தி அவர்களுடைய உள்ளத்தையே திருப்பும் புரட்சிகரமான வேலையையே நாம் லட்சியமாகக் கொண்டிருக்கிறோம். நாம் திராவிடர்கள் என்பதையும், நமக்கு இருந்ததை நம் எதிரிகள் மறைத்து விட்டதை ஞாபகப்படுத்தி நாம் யாவரும் திராவிடர் உணர்த்துவதும் நமது திராவிடர் கழக வேலை திராவிடர்கள் என்றால், சில உரிமைகளுக்குத் தகுதியற்றவர்களாக ஆக்கப்பட்டவர்கள். இழிவுகளைத் தாங்குபவர்கள் என்பது கூடவே ஞாபகத்துக்கு வருகிறது. திராவிடர்கள் என்றால், திராவிடர்கள் எப்படி இருந்தார்கள்? திராவிடனுடைய உரிமை என்ன? திராவிடனுடைய தனிப் பண்புகள் என்ன? திராவிடனுடைய நாகரிகம் எப்படி இருந்தது? என்பவைகளையும் உணரும் தன்மை கூடவே வருகிறது.


திராவிடன் என்று கூறிக்கொள்ள வெட்கப்பட்டால், வேறு மாறு பெயர் சூத்திரன் என்று கூறிக் கொள்ளத்தான் வேண்டும். சூத்திரன் என்று கூறிக்கொள்ள வெட்கப்படுவதாலேயே திராவிடன் என்று கூறிக்கொள்கிறோம். திராவிடர் கழகம் என்றால் இன்று சூத்திரர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் கழகம் என்றுதான் அர்த்தம். ஏன் சூத்திரர்களுக்கும் கழகம் என்று கேட்டால், அந்த இழிவு நீங்குவதற்காகக் கழகம் வைத்துக் கொண்டிருக்கிறோம். சூத்திரர்கள் என்று கூறிக்கொள்ள வெட்கப்படுகிறோம். அதனால் ஏற்படும் இழிவை ஒழிக்க விரும்புகிறோம் என்பதற்காகவே திராவிடர் கழகம் இருக்கிறது.

பிராமணர்கள் என்று கூறிக் கொள்ள பிராமணர்கள் பெருமைப்படுகிறார்கள். ஆகையால், அவர்கள் பிராமணர்கள் சங்கம் என்று வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.ஆகவே, இந்தக் குறைபாடுகள் ஒழியவேண்டும். சூத்திரன், பஞ்சமன், பார்ப்பனன் என்ற தன்மைகள் ஒழிக்கப்பட வேண்டும்.

நமது முன்னேற்றத்துக்கு இருந்து வருகிற தடைகள் எல்லாம் நீங்க நமக்கு மனிதத் தன்மை ஏற்பட வேண்டும். நமது அறியாமை ஒழிய வேண்டும்; இதற்குப் பாடுபடவே நாம் இருக்கிறோம். நம்மைத் தவிர வேறு யாரும் இன்று இவ்வேலையை ஏற்றுக் கொள்ளவில்லை. நாம் சூத்திரராய் இருப்பதற்குக் காரணம் ஹிந்து மதம். ஆகையால் அது ஒழிய வேண்டும் என்கிறோம். வேறு மார்க்கம் இருந்தால் சொல்லுங்கள். நம்மைச் சூத்திரனாக்கியது இந்த இந்து மதமும், இந்து மதக் கடவுள்களுமாதலின் அவை ஒழிய வேண்டும் என்கிறோம். இதில் என்ன பிசகு. சூத்திரர்கள் இருப்பதற்கு இந்து மதம், இந்து சாஸ்திரங்கள், இந்து குழவிக் கற்கள் சாமிகள் தான் காரணம். இவைகளை ஒழிக்காமல் இருப்பது மானமுள்ள ஒருவன் செயலாகுமா? எண்ணிப் பாருங்கள். இவை ஒழிந்து ஒழுக்கமுள்ள கடவுள், எல்லோரையும் ஒன்றாகவே பாவிக்கும் கடவுள் இருக்க வேண்டும் என்றுதான் கூறுகிறோம்.

வேறு யார் இவைகளையெல்லாம் சொன்னார்கள். ஆழ்வார்கள், நாயன்மார்கள், விவேகானந்தர்கள், மகாத்மாக்கள் என்பவர்கள் எல்லாம் ஏதாவது ஒரு வார்த்தை இந்தப் பேதங்கள் எல்லாம் ஒழியவேண்டும், என்று சொன்னார்களா? இவைகளைச் சொல்லாததற்காக இவர்கள் எல்லாம் "சாமிகள்" ஆனார்கள்; இவைகளைச் சொன்னதற்காக நாங்கள் "பாவிகள்" ஆனோம். வணக்கமாய் தெரிவித்துக் கொள்கிறேன் தோழர்களே, எல்லாருடைய இழிவைப் போக்கத்தான் நாங்கள் போராடுகிறோம்.

-------------- தந்தைபெரியார் - "குடிஅரசு" 30.05.1947

10.11.09

விதண்டாவாதிகளை நடுங்க வைத்த வெடிகுண்டு - கைவல்யனார் !




"புராணம் - ஒரு பித்தலாட்டம்’’ - என்று வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்பதாகக் கூறிவிடலாம். இப்போதிருக்கும் வாலிப உலகுக்கு இது போதும்.

ஆனால், முப்பது ஆண்டுகளுக்கு முன்பு! தமிழகத்தின் நிலை, அதுவல்ல. காலக்கழனி, காய்ந்து உலர்ந்து கிடந்த நேரம் அது! சுயமரியாதைக் கொள்கை யென்றாலே தூற்றப்பட்ட காலம் அது!! - அந்த நேரத்தில், வெட்டு ஒன்று துண்டு இரண்டாக,எதனையும் எடுத்துச் சொல்லிவிட முடியாது. அவ்விதம் சொல்வதன் மூலம், அவைகளிலுள்ள குற்றங் குறைகளை மக்களும் உணர்ந்துவிட மாட்டார்கள். ‘`புராணத்தை ஏன் குற்றம் சொல்கிறோம்?’’ என்பதில் ஆரம்பித்து ``இவ்வளவு கடவுள்கள் யாருடைய சிருஷ்டி?" என்ற கேள்வியை எழுப்பி, `` மனிதன் தவிப்பதேன்?" என்கிற சிந்தனையைத் தூண்டுவ தென்றால், ஒவ்வொன்றுக்கும் விளக்கங்கள் தரப்பட வேண்டும்.

அத்தகைய விளக்கங்களைத்தான் அந்தக் காலத்திய `குடியரசு’ ஏடு ஏந்தி வந்தது.

அதனைப் பார்த்ததால்தான் மதவாதி கள் மருண்டனர் - பண்டிதர்கள் பயந்தனர்.

"தேள், கொட்டும். தீண்டாதே!’’ என்று சொல்லுவதைவிட, தேள் கொட்டியதால் ஏற்பட்ட வலியைத் தெரிந்தவன், அதனைப் பற்றி விளக்கினால், யார் மறுக்க முடியும்?


எனவேதான், கைவல்ய சாமியார் அவர்களின் கட்டுரைகள், வெளி வருவதைக் கண்ட, பண்டிதரும் பக்தர் குழாமும் , திகைத்தனர் - விழித்தனர்.


கைவல்ய சாமியார்! - இந்தப் பெயர். அவர்களை நடுங்க வைத்தது. `இந்த வாரம் என்ன எழுதுவாரோ?’ என்று ஏங்குமளவுக்கு, அவர்தம் சிந்தையைக் குழப்பிற்று.


புராணங்களைக் கரைத்துக் குடித்து, தமிழ் மறைகளின் பெருமைகளைத் தினமும் ஓதி, தமக்கு நிகர் தரணியில் எவருமில்லையென்கிற தருக்கோடு உலவிய பண்டித மணிகளிடையே ஒரு வெடிகுண்டாக விளங்கினார் நமது கைவல்யம்.

கைவல்யத்திடம் சிக்கினோர், மீள முடியாது. அகில உலக வளர்ச்சி, அங்கிருக்கும் ஆண்டவன், நமது மதம். இங்கிருக்கும் தேவாதி தேவர்கள், அவர்களது திருவிளையாடல்கள் அத்தனையையும், ஆதாரங் களோடு எடுத்துக் காட்டுவார். பதிலா கூற முடியும்? - திகைத்தவனாயிருந்தால், `சு.ம. வைப்பார்த் தீங்களோ?’’ என்று கேலி செய்து விடலாம். அவர், கைவல்யமாச்சே! பண்டிதரும் பக்தரும் கூறும் அத்தனை நூல்களையும் கரைத்துக் குடித்தவராச்சே!


"வேதம் உயர்ந்ததா? ஆகமம் உயர்ந்ததா? இரண்டும் ஒன்றா? எதிலிருந்து எது வந்தது? எதை எது போர்த்துக் கொண்டிருக்கிறது? - என்று சண்டை போட்டு, வேதத்தும்ஸ கோளரி, சைவ மத சண்டமாருதம், மாயாவாத கண்டன கேசரி என்கிற பட்டங்களைச் சூட்டிக் கொள்வோரின் தர்க்கங்களும், கடவுள் பக்திகளும், எழுதின புஸ்தகங்களும் மோட்சம் கொடுக்காதென்று நாங்கள் சொல்ல வரவில்லை. ஆனால், இதில் செலவழிப்பதில் சிறிது நேரத்தை எடுத்து `பெப்பர் மிண்டு’ செய்யப் புஸ்தகம் எழுதியிருந்தால் இவர்கள் பிள்ளைகள் ஆசார தோஷமில்லாமல் பெப்பர்மிண்டு தின்னலாமே? தங்கள் பிள்ளைகள் `பெப்பர்மிண்ட்" கேட்கையில் ஆசாரதோஷம் வந்துவிடுமென்று அதை அடிக்க வேண்டாமே?"

எவ்வளவு குறும்பு- வேதநூல்களைப் புரட்டி விதண்டாவாதம் செய்வதைவிட, `பெப்பர்மிண்ட்’ செய்யக் கற்றிருக்கலாமே! என்று கேலி செய்வதைப் படிக்கும் எவர்தான் மறுப்புக் கூறமுடியும்?


-----------------------நூல்:-"பேரறிஞர் அண்ணாவின் உள்ளம் வருந்திய நிகழ்ச்சிகள்" மூன்றாம் தொகுப்பிலிருந்து!

ஹரிஜன் விஷ்ணுவின் புத்திரர்கள்என்றால் மற்றவர்கள் எல்லாம் சிவனின் புத்திரர்களா?


குமரி

குமரி மாவட்டத்திலிருந்து சில தகவல்கள்:

1. “மார்த்தாண்டம் பேச்சிப்பாறை சாலையிலிருந்து இட்டவேலி சாஸ்தான் கோயில் சாலை (வழி) தெங்கன் விளை, ஹரிஜன் காலணி சாலை கி.மீ. 0/0.1/0.

குமரி மாவட்டம் செருப்பாலூரில் இருந்து அதன் அருகில் இருக்கும் ஒரு கிராமத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் இருக்கிறார்களாம். அதைக் குறிப்பிடுவதற்காக இப்படி ஒரு விளம்பரப் பலகையினை நெடுஞ்சாலைத் துறை பொறித்திருக்கிறது.

தாழ்த்தப்பட்டவர்கள் ‘ஹரிஜன்’ அதாவது இந்து மதக் கடவுளான விஷ்ணுவின் புத்திரர்கள் என்றால், மற்றவர்கள் எல்லாம் ‘ஹரன்- சிவனின்’ புத்திரர்களா?

இது காந்தியார் கிளப்பிவிட்ட கூத்து! கடவுளின் பிள்ளைகள் என்றால் அதன் பொருள் தீண்டத்தகாதவர்கள் என்று அர்த்தமா? ஊருக்கு வெளிப்புறத்தில் குப்பைமேடுகளில் வாழவேண்டும் என்று பொருளா?

இந்த ஹரியின் புத்திரர்கள் சிறீரங்கம் ரெங்கநாதர் கோயில் கருவறைக்குள் நேராக நுழைய முடியுமா?

தாழ்த்தப்பட்ட தோழர்களைத் தனியே பிரித்துக் காட்டும் அவசியம் நெடுஞ்சாலைத் துறைக்கு என்ன வந்தது? அதுகூட காலனி அல்லவாம் காலணியாம்! உண்மைதானே, செருப்பாகத்தானே அந்த உழைப்பாளித் தோழர்களை பாழ்படுத்தும் இந்த இந்து மதம் இறுக்கி வைத்திருக்கிறது.

ஹரிஜன நலத்துறை என்ற பெயர் ஆதிதிராவிடர் நலத்துறை என்று மாற்றப்பட்டதுகூட நெடுஞ்சாலைத் துறைக்குத் தெரியவில்லையே!

2. குமரி மாவட்டம் மருங்கூர் சுப்பிரமணியசாமிக்கு ஆராட்டு விழாவாம். நடந்து தொலையட்டும்! அதற்குப் பேரூராட்சி மன்றத்தின் நிதியிலிருந்து நாளேட்டுக்கு பல்லாயிரம் ரூபாய் செலவில் விளம்பரமாம்.

இங்குதான் இடிக்கிறது. பேரூராட்சி என்பது மதச் சார்பற்றது. அப்படியிருக்-கும்போது குறிப்பிட்ட ஒரு மதத்தின் விழாவுக்கு ஊராட்சி நிதியிலிருந்து எப்படி பணம் செலவு செய்யலாம் என்பது நியாயமான வினாதானே?

3. நாகர்கோவிலில் சட்டப்பேரவை உறுப்பினர் நிதியிலிருந்து குறிப்பிட்ட கோயிலுக்கு ரூபாய் 5 லட்சம் தரப்பட்டதற்காக இந்து முன்னணி நன்றி தெரிவித்து சுவரொட்டி வெளியிட்டுள்ளது.

சட்டப்பேரவை உறுப்பினர் நிதி மக்கள் நல்வாழ்வுக்குப் பயன்படவேண்டுமே தவிர, குட்டிச் சுவர்களுக்கு வண்ணம் தீட்டுவதற்காக அல்லவே! இதுகுறித்தெல்லாம் தெளிவுபடுத்தி அரசு சுற்றறிக்கைவிட்டால் நல்லது.

---------- மயிலாடன் அவர்கள் 10-11-2009 "விடுதலை" யில் எழுதிய கட்டுரை

வீரமணி பெயரில் விருது ஏன்?

மூத்த வழக்கறிஞர் ரவிவர்ம குமாருக்கு சமூகநீதிக்கான வீரமணி விருது


சிகாகோவை தலைநகரமாகக் கொண்ட பெரியார் பன்னாட்டு மய்யத்தின் சார்பாக, சமூக நீதிக்கான வீரமணி விருது வழங்கும் விழா பெங்களுரு நகர அரங்கில் 04.11.2009 அன்று மாலை சிறப்பாக நடைபெற்றது. கருநாடக மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் முதல் தலைவராக சிறப்பாகப் பணியாற்றிய மூத்த வழக்கறிஞரான பேராசிரியர் ரவிவர்மகுமாருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. புதுடில்லி சமூக நீதிக்கான வழக்கறிஞர்களின் அமைப்பு இந்த விழாவிற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தது.

பெங்களூரு நகரின் மய்யத்தில் அமைந்திருந்த டவுன்ஹால் மண்டபத்தில் மாலை 5.30 மணிக்-கெல்லாம் முக்கிய பிரமுகர்கள் வருகை தந்தனர். நிகழ்ச்சி அமைப்பாளர்கள் வழக்கறிஞர் யு.பூபதி, அன்னம் சுப்பாராவ், மற்றும் தோழர்கள், தோழியர்கள் வந்த அனைவரையும் அன்புடன் வரவேற்று, சிற்றுண்டியுடன் தேநீர் விருந்தும் அளித்தனர்.

அரங்கின் மேடையில் தந்தை பெரியார், தமிழர் தலைவர் கி.வீரமணி, வழக்கறிஞர் எல்.ஜி.காவனூர், பேராசிரியர் ரவிவர்மகுமார் படங்கள் வைக்கப்பட்டிருந்தன. பெரியார் பன்னாட்டு மய்யத்தின் சார்பாக சமூக நீதிக்கான வீரமணி விருது வழங்கும் விழா எனப் பதாகையில் பொறிக்கப்பட்டிருந்தது. நிகழ்ச்சியின் தொடக்கமாக கவிஞர் ஜென்னியும், அவரது மகன் சிந்தனுமும் சமூக நீதிக்கான போர்க்குரலை பாடல்கள் மூலம் எழுப்பினர். விழா சரியாக மாலை 6 மணிக்கு தொடங்கிது. விழா ஏற்பாட்டா-ளர்கள் தமிழர் தலைவர் உள்ளிட்ட விருந்தினர்களை மேடைக்கு அழைத்து, அமர வைத்து, பூங்கொத்து கொடுத்து மகிழ்ந்தனர். வரவேற்புரை ஆற்ற பெரியார் பன்னாட்டு மய்யத்தின் தலைவர் மானமிகு டாக்டர் சோம.இளங்கோவன் அழைக்கப்பட்டார்.

வீரமணி பெயரில் விருது ஏன்?

மானமிகு டாக்டர் சோம. இளங்கோவன் எல்லோரையும் வரவேற்று உரை நிகழ்த்தினார். சமூக நீதிக்காகப் பாடுபட்ட அய்ம்பெரும் தலைவர்களான ஜோதிபா பூலே, சாகுமகாராஜ், நாராயணகுரு, தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர் மற்றும் கர்மவீரர் காமராஜர், பேரறிஞர் அண்ணா, சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் ஆகியோரின் பணிகளை நினைவு கூர்ந்து, அவர்களுக்கு நன்றி செலுத்தினார்.

கம்ப்யூட்டர் சிலைடுகள் (பவர் பாயிண்ட்) மூலம் தந்தை பெரியார் அவர்களின் சுயமரியாதை, நாத்திகக் கொள்கைகளை விளக்கினார். பெரியார் பன்னாட்டு மய்யம் வீரமணி பெயரில் ஏன் விருது வழங்குகிறது என்ற வினாவையும் எழுப்பி அதற்கான விடையையும் தெரிவித்தார்.

தந்தை பெரியாரின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு பத்து வயதிலேயே மேடை ஏறியவர் ஆசிரியர் கி.வீரமணி. மிகச் சிறந்த பேச்சாளர், மிகச் சிறந்த எழுத்தாளர், வழக்கறிஞர், மனித நேயர், பத்திரிகை ஆசிரியர், கல்வியாளர் எனப் பல பரிமாணங்களைக் கொண்டவர். என்றைக்கும் பெரியாரின் தொண்டர்களுக்குத் தொண்டன் நான் என்று கூறி, அதன்படி நடப்பவர். கல்வி என்பதனை அடிப்படையாகக் கொண்டு சமூக மாற்றத்திற்கான, சமூக நீதிக்கான அடித்தளம் அமைப்பவர்.


பெரியார் அறக்கட்டளையால் நடத்தப்படும் கல்வி நிறுவனங்களின் சிறப்புகளைப் பட்டியலிட்டு, இதற்கொல்லாம் காரணம் 25 வயது இளைஞரைப்போல, ஓடி ஓடி உழைக்கும் தலைவர் வீரமணி. எனவேதான் அவரது பெயரில் விருது ஏற்படுத்தப்பட்டது என்றார்.

பெரியார் பன்னாட்டு மய்யம், சமூக நீதிக்கான வீரமணி விருதினை 1994 இல் கொடுக்க ஆரம்பித்தோம். இன்று 10 ஆவது விருதினை கருநாடகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் பேரா. ரவிவர்ம குமார் அவர்களுக்கு வழங்குகிறோம்.

மார்டின் லூதர் கிங் கண்ட கனவு இன்று அமெரிக்காவில் ஒபாமாவால் நிறைவேறியுள்ளது. தந்தை பெரியார் கண்ட கனவான ஜாதியற்ற சமூகம் ஒரு நாள் நிச்சயமாக நிறைவேறும் என்று சொன்னார்.

ஈழத் தமிழர்கள்

விருது பெறும் பேராசிரியர் ரவிவர்மகுமாருக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தார். ‘மல்ட்டி லிங்கேஜ்’ என்னும் கணினி வசதியைப் பயன்படுத்தி, சமூக நீதிக்கான கருத்துகளை ஒரே நேரத்தில், பல்வேறு மொழிகளில் மக்கள் படிக்க இணையதளத்தில் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கும் இலங்கைத் தமிழர்களின் இன்னல்களை எடுத்துக் கூறி, சமூக நீதிக்கான வழக்கறிஞர்கள் அமைப்பு மனிதநேயமற்ற இலங்கை அரசின் செயலைக் கண்டிக்க முன்வரவேண்டும் என்று கூறினார்.


-------------------"விடுதலை" 6-11-2009




9.11.09

யாகத்தில் என்னதான் செய்வார்கள்?பார்ப்பான் பண்ணையம் கேட்பாருண்டோ?


யாகமாம்!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் அண்மையில் வேள்விச் சாலை (யாகம்) நடத்தினார்கள். செலவு எவ்வளவு தெரியுமா? பதினாறு லட்சம்தான்.

அப்படி யாகத்தில் என்னதான் செய்வார்கள்? உணவுப் பொருள்களையும் (மிக முக்கியமாக நெய், பால் வகையறாக்கள்) பட்டுத் துணிகள் முதலானவற்றையும் தீயில் போட்டுக் கொளுத்துவார்கள். அதாவது மக்களுக்கு அன்றாடத் தேவையான உணவுப் பொருள்களைத் தீயில் போட்டுப் பொசுக்கி நாசப்படுத்துவார்கள்.

இவ்வளவுக்கும் இந்தியாவில் 50 விழுக்காடு குழந்தைகள் ஊட்டச் சத்து குறைவால் மரணம் அடைகின்றனர். ஊட்டச்சத்து இல்லாத உலக மக்களில் 27 விழுக்காட்டினர் இந்தியாவில் உள்ளனராம்.

இந்த நிலையில்தான் 17 லட்சம் ரூபாய் மதிப்புள்ள உணவுப் பொருள்கள் உள்ளிட்ட இன்றியமையாத பொருள்களை பக்தி என்ற பெயரால் ‘‘கிரிமினல் வேலையில்’’ ‘பிள்ளை விளையாட்டாக’ ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இந்த யாகத்தில் பொருள்கள் நட்டமடைந்தாலும், யாகப் புரோகிதப் பார்ப்பான் வயிற்றில் மட்டும் அறுத்துக் கட்டுவது ஏராளம்.

பார்ப்பான் வயிறு பரலோகத்துக்குத் தபால் பெட்டியோ என்பார் நடிகவேள் ராதா இரத்தக்கண்ணீர் நாடகத்தில் அதுதான் நினைவிற்கு வருகிறது.

பாலில் நீர் கலந்தால் கலப்படக் குற்றத்தின்கீழ் கைது செய்யும் சட்டம் இருக்கிறது. ஆனால், நெருப்பில் உணவுப் பொருள்களைக் கொட்டினால், அது தெய்வ காரியமோ!

இதில் இன்னொரு கொடுமையும் கூத்தாடுகிறது. இந்த யாகத்தைச் செய்வதற்குமுன் பூமி பூஜை செய்யவேண்டுமாம்; அதைச் செய்யாமல் யாகம் செய்துவிட்டார்களாம். அது சாத்திரக் குற்றமாம்! நீதிமன்றம் எதற்கு இருக்கிறது?

இந்து மதவாதி ஒருவர் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்குத் தொடுத்தார். கனம் நீதிமன்றம் சாத்திரங்களையெல்லாம் கரைத்துக் குடித்து சோதனை செய்து பார்த்து, ‘ஆமாம், ஆமாம் சாத்திரக்குற்றம்தான், எனவே, பரிகாரப் பூஜை செய்யவேண்டும்’ என்று ‘கறாராக’ தீர்ப்பு அளித்துவிட்டது.

இந்தப் பரிகாரப் பூஜைக்கு ஆன செலவு என்ன தெரியுமா? மறுபடியும் ரூ.17 லட்சமாம்.

பார்ப்பனிய அமைப்பில் சாத்திரப்படி நடந்துகொண்டாலும் அவாளுக்கு இலாபம் சாத்திரத்தை மீறி நடந்துகொண்டாலும் கொள்ளை இலாபம்.

இந்தத் தகடுதத்தம் மோசடியை உலகில் எங்காவது கேள்விப்பட்டதுண்டா?

நியாயப்படி என்ன செய்திருக்கவேண்டும்? பூமிப் பூஜை செய்யாததால் ஏற்பட்ட நட்டத் தொகையை, அதற்குக் காரணமான புரோகிதர்களிடமிருந்துதானே பறிமுதல் செய்திருக்கவேண்டும்?

பார்ப்பான் பண்ணையம் கேட்பாருண்டோ?

-------------------- மயிலாடன் அவர்கள் 9-11-2009 "விடுதலை" யில் எழுதிய கட்டுரை

தேவஸ்தான மசோதா ஒரு பார்வை


தேவஸ்தான மசோதா

சென்னை மாகாணத்தில் தேவஸ்தானங்களும், தர்ம ஸ்தாபனங்களும், இந்து மத ஸ்தாபனங்களும், மொத்தத்தில் கோடிக்கணக்கான வரும்படி உடையவைகளாயிருந்தும், அவைகள் குறிப்பிட்ட காரியங்களுக்கு உபயோகப்படாமல் பெரும்பாலும் பிராமணர்களும், தாசி, வேசி முதலிய விபச்சாரிகளும், வக்கீல்களும், அனுபவிக்கவும் - தேவஸ்தான டிரஸ்டி என்போர்களும், மடாதிபதியென்போர்களும், சமயாச்சாரி என்போர்களும், லோககுரு என்போர்களும், மகந்துக்கள் என்போர்களும் சுயமாய்த் தங்கள் இஷ்டம்போல் அனுபவிக்கவும் கொலை, களவு, கள் குடி, விபச்சாரம் முதலிய பஞ்சமா பாதகங்களுக்கு உபயோகப்படுத்தவும், சோம்பேறிகளுக்கும், விபசாரத் தரகர்களுக்கும், பொங்கிப் போடவும், உபயோகப்படுத்திக் கொண்டு வருவதைக் தென்னிந்தியர்கள் வெகுகாலமாய் அறிந்து வந்திருக்கிறார்களென்பதை நாம் கூறத் தேவையில்லை.

அதன் பலனாய், காங்கிரஸ் கான்பரன்ஸ் என்று சொல்லப்படும் ராஜீய ஸ்தாபனங்களின் மூலமாயும், பல சமய சபைகள் மூலமாயும், இவ்வக்கிரமங்களையெல்லாம் அடக்கிக் கோடிக்கணக்கான வரும்படியுள்ள சொத்துக்கள் ஒழுங்காய் பரிபாலிக்கப்படவும், அதன் வரும்படிகள் குறிப்பிட்ட விஷயங்களுக்குக் கிரமமாய் உபயோகிக்கப்படவும், மீதியிருந்தால் இந்துமத சம்பந்தமான ஒழுக்கங் கற்பிக்க பொது ஜனங்களுக்கு உபயோகப்படவும் தக்கதான ஓர் சட்டம் செய்ய வேண்டியது நமது அரசாங்கத்தின் முக்கியக் கடனென்றும், கொஞ்சமும் காலதாமதம் செய்யாமல் உடனே செய்யப்பட வேண்டியது மிகவும் அவசியமானதென்றும், இதுவரை செய்யாமல் அரசாங்கத்தார் கவலையீனமாயிருந்தது பெரிய குற்றமென்றும், இதற்கு முன் இதற்காக ஆயிரத்தெட்டு நூற்றுப்பதினேழிலும், ஆயிரத் தெட்டு நூற்று அறுபத்திமூன்றிலும் அரசாங்கத்தாரால் செய்யப்பட்டிருக்கும் இந்து மத தர்ம சொத்துக்கள் பரிபாலன சட்டம் போதுமான அளவு பந்தோபஸ்தளிக்கக் கூடியதாயில்லையென்றும், பல தீர்மானங்களைச் செய்து அரசாங்கத்திற்கு அனுப்பியுமிருக்கிறது.

உதாரணமாக, ஈரோட்டில் 1915 வருஷம் ஜூலை மாதம் 24,25 தேதிகளில் டாக்டர் டி.எம். நாயர் அவர்கள் அக்கிராசனத்தின் கீழ் நடந்த கோயமுத்தூர் ஜில்லா இரண்டாவது கான்பரன்ஸ் என்னும் ராஜீய மகாநாட்டில் 8ஆவது தீர்மானமாக அடியிற்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

அதாவது தர்ம ஸ்தாபனங்கள் மத சம்பந்தமான தேவாலயங்கள் சரிவர பரிபாலனம் செய்யப்படாததால் கிரமமாய் நடக்கும் வண்ணம் இப்போதிருக்கிற சட்டத்தைக் கொஞ்சமேனும் தாமதிக்காமல் சீர்திருத்தம் செய்து மாற்றிவிட வேண்டுமென்று கவர்ன்மெண்டாரை இக்கூட்டம் வற்புறுத்துகிறது (இந்தத் தீர்மானத்தை ஸ்ரீமான் பி.வி.நரசிம்ம அய்யர்தான் பிரேரேபித்திருக்கிறார் என்பது நமது ஞாபகம்)

இவற்றை அனுசரித்தே சர்க்காரிலுள்ள இது சம்பந்தமான அதிகாரம், ஒரு இந்திய மந்திரியின் கைக்கு வந்ததும் அதற்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்து சென்னை இந்துமத பரிபாலன மசோதா என்னும் பெயரால் ஓர் சட்டத்தை இயற்றி பொதுமக்கள் பிரதிநிதியென்று சொல்லும் சட்டசபை அங்கத்தினர்களின் சம்மதம் பெற்று நிறைவேற்றி அமலுக்குக் கொண்டுவரப்பட்டிருக்கிறது.

இந்தச் சட்டமானது மேலே குறிப்பிட்டபடி தர்ம சொத்துக்களை அதன் கிரமமான உபயோகத்திற்கு அன்றி, தங்களுடைய சுயநலத்துக்காக உபயோகித்துக்-கொண்டு வந்த சில மடாதிபதிகளுக்கும், பொதுமக்கள் தர்ம சொத்தைத் தங்கள் வகுப்பார்களே உண்ணவேணும் என்னும் கருத்தின் பேரில் சூழ்ச்சி செய்து பொதுமக்களிடம் பணம்பறித்து, தங்கள் வகுப்பார்க்கே பொங்கிப்போட்டுக் கொண்டிருந்த சில சமயாச்சாரிகளென்போரான சில பிராமணர்களுக்கும், அதன் பலனாய்த்தின்று கொழுத்துத் திரிந்து கொண்டிருக்கும் சில திண்ணைத் தூங்கிகளுக்கும், இவர்களின் தீச்செயல்களுக்கு அனுகூலமாயிருந்தது, பணம் பறித்துக் கொண்டிருந்த வக்கீல்கள், பஞ்சமாபாதகத் தரகர்கள், முதலியவர்களுக்கும் விரோத மாயிருந்தபடியாலும் இக்கூட்டத்தார் பெரும்பாலும் பிராமணர்களென்று சொல்லப்படுவோராயிருந்து விட்டபடியாலும், இவைகளுக்கு ஏராளமாக சொத்துக்கள் விட்டவர்களும், இன்னமும் கொடுத்துக் கொண்டிருக்கிறவர்களும், பிராமணரல்லாதாராயிருப்பதனாலும் இந்த சட்டமானது பிராமணர்களுக்கு விரோதமாகவும் பிராமணரல்லாதார்களுக்கு அனுகூலமாகவும் இருப்பதாக எற்பட்டுப் போய்விட்டது.

இதனால், இக்கூட்டத்தைச் சேர்ந்த பிராமணர்களெல்லாம் ஒன்றுசேர்ந்து இந்தச் சட்டமானது மதத்திற்கு விரோதமானது என்றும், மதமே போய்விட்டதென்றும், சர்க்காரார் இந்துமதத்தில் பிரவேசித்து விட்டார் களென்றும், ஜஸ்டிஸ் கட்சி மெம்பர்களும் மந்திரிகளும் இச்சட்டத்தை உண்டாக்க அனுகூலமாயிருந்தார்களென்றும், பொய்யழுகை அழுதும், பொய்ப்பழி சுமத்தியும், தங்கள் ஜாதிப் பத்திரிகைகளான, ‘இந்து’, ‘சுதேசமித்திரன்’, ‘சுயராஜ்யா’ முதலிய பிராமணப் பத்திரிகைகள் மூலமாய்ச் சூழ்ச்சிப் பிரசாரம் செய்தும், பிராமணரல்லாதாரான சில அப்பாவிகளை ஏமாற்றியும், பிராமண கீர்த்திக்கு ஆசைப்பட்ட சில பயங்கொள்ளிகளைச் சுவாதீனம் செய்து கொண்டும் இச்சட்டத்தை ஒரேயடியாகத் தொலைத்துவிடத் தங்களாலான முயற்சிகளெல்லாம் செய்து பார்த்தார்கள்.

ஜஸ்டிஸ் கட்சி மந்திரிகள், மெம்பர்கள் முதலானவர்களுடைய உறுதியினாலும், முயற்சியினாலும், ஸ்ரீமான்களான ஈ.வெ. ராமசாமி நாயக்கர், வரதராஜுலு நாயுடு முதலியவர்கள் இந்தச் சட்டத்தின் அனுகூலத்தைப் பொது ஜனங்களுக் எடுத்துக்காட்டி இந்து மதத்திற்கும் இந்துமத பரிபாலனத்திற்கும் இச்சட்டத்தால் யாதொரு கெடுதியும் உண்டாகாது என்றும், ஆனால் ஊரார் முதலைத்தின்று வாழ்வதுதான் தர்மமென்ற கொள்கையை உடைய பிராமண மதத்திற்குத்தான் ஒரு சமயம் ஆபத்து வந்தாலும் வரலாம் என்றும் பத்திரிகை மூலமாகவும், பிரசங்க மூலமாகவும் பொது ஜனங்களுக்கு வெளிப்படுத்தியதன் பேரில், பிராமணர்களின் விஷமப் பிரசாரம் ஒருவாறாய் வெளிப்படையாய்க் குறைந்தது என்றாலும் இன்றைக்கும் ரகசியத்தில் எவ்வளவோ தந்திரங்களும், மந்திரங்களும் நடந்து கொண்டுதான் வருகின்றது.

இதற்கு அனுகூலமாய் நமது மடாதிபதிகளும், மகந்துக்களும் பொது ஜனங்களின் தர்மப் பணத்தை அள்ளி புளியங்கொட்டை போல் இறைத்துக் கொண்டுதான் வருகிறார்கள்.

ஹைக்கோர்ட்டிலும் இச்சட்டம், சட்டப்படி செல்லாதென்றும், இதைத் தள்ளிவிட வேண்டுமென்றும் வியாஜ்யம் தொடுத்திருக்கிறார்கள். இச்சட்டத்தில் என்ன கெடுதல் இருக்கிறது என்பதையாவது, இந்தச் சட்டத்தின் எந்தப் பிரிவின்படி இந்துமதத்திற்கோ தர்மபரிபாலனத்திற்கோ என்ன ஆபத்திருக்கிறது என்பதையாவது இதுவரை எந்த பிராமணரும் எடுத்துச் சொன்னதேயில்லை. மதம் போச்சு; தர்மம் போச்சு; இந்தமதத்தில் சர்க்கார் பிரவேசிக்கிறார்கள் என்று பொய்யழுகை அழுகிறது தவிர வேறொன்றும் சொல்வதே கிடையாது.

எந்த உலகத்தில் மதவிஷயங்களை அரசாங்கத்தார் திருத்த பிரவேசிக்காதிருக்கிறார்கள்? 1817 லும், 1863 லும் பிரவேசித்த காலத்தில் இந்த ஜாதியார் எங்கு போயிருந்தார்கள். அரசாங்கத்தார் தாமதமின்றி உடனே பிரவேசித்துத் தக்கது செய்ய வேண்டும் என்று காங்கிரஸிலும், கான்பரன்ஸிலும் தீர்மானித்த காலத்தில் இந்த ஜாதியார் எங்கு போனார்கள்?

சட்டம் செய்யும் அதிகாரம் நம் கைக்கு வந்துவிடும் நம்மிஷ்டம் போல் ஜாதிக்கே எல்லா உரிமைகளும் இருக்கும் படியாகச் சட்டம் செய்து கொள்ளலாம் என்று நம்பியிருந்தார்கள் போலும் அல்லது பிராமணரல்லாதார் இவற்றைக் கவனியாமல் இன்னும் பிராமணர்களே ஏகபோகமாய் உண்ணும்படிவிட்டுக் கொண்டிருப்பார்கள் என்று நினைத்தார்கள் போலும். எந்த காரியத்திற்கு நாம் அரசாங்கத்தாரிடம் போகாமல் இருக்கிறோம்? நம்முடைய சாமிக்கு நாமம் வட கலையா, தென் கலையா என்பதை சர்க்காரிடம் போய்த்தான் தீர்மானித்துக் கொள்கிறோம். மடாதிபதி யார்? இவரா அவரா? என்று தீர்மானிக்க சர்க்காரிடம்தான் போகிறோம்.

நாம் கோவிலுக்குள் போகலாமா, வேண்டாமா என்பதற்கு சர்க்காரிடம்தான் போகிறோம். என் ஜாதி பெரியதா, உன் ஜாதி பெரியதா என்பதற்கு சர்க்காரிடம் தான் போகிறோம். ஏழ்மைப்பட்ட தேசத்து பொது ஜனங்களின் பணம் வருஷம் ஒன்றரைக் கோடி ரூபாயுக்கு மேல் மதத்தின் பேரால் வசூலித்து அயோக்கியர்களுக்கும், பஞ்சமா பாதகத்துக்கும் உபயோகப்படுத்துவதைக் கவனிக்க ஒரு சட்டம் வந்தால் அது கூடாது என்று சொல்லுபவர்கள் யோக்கியர்களா? நமக்குள் நாமே பார்த்துக் கொள்ளக்கூடாதா என்றால் இது விஷயத்தில் நமக்குள் என்ன யோக்கியப் பொறுப்பு இருக்கிறது?

10 லட்சம், இருபது லட்சம் போட்டு நீ கோயில் கட்டிக் கொடுத்து சொத்தும் விட வேண்டும் - நான் செங்கல்லை அடுப்பில் போட்டுச் சூடேற்றி ஈரத்துணி மேல்போட்டு ஆவியுண்டாக்கி, சுடுசாதம் என்று வெறும் பாத்திரத்தைச் சாமிக்கு வைத்து ஆராதனை செய்ய வேண்டும். அது சாதத்தின் ஆவியா, சுடு செங்கல் ஆவியா என்பதைக் கூட நீ பார்க்கக்கூடாது, பார்த்தால் பாவம் என்று சொல்லுகிற ஜனங்களை வைத்துக்கொண்டு நமக்குள் எப்படி சரிசெய்து கொள்ளுகிறது?

வைக்கத்தில் தெருவில் நடக்க எத்தனை பேர் ஜெயிலுக்கு போக வேண்டிவந்தது? கல்பாத்தியில்* தெருவில் நடக்க 144 யார் வேண்டுகோளின்பேரில் போடப்பட்டது? அதற்காக சர்க்காரிடம் யார் போனது? நமக்குள் சரிப்படுத்திக் கொள்ளக்கூடாதா? என்கிற யோக்கியர்கள் இந்த சமயம் ஏன் சர்க்காரிடம் போக விட்டார்கள்? பொது ஜனங்கள் பணத்தில் நடத்தப்படும் வேதபாடசாலைகளில் பிராமணன்தான் படிக்கலாம். சூத்திரர்கள் படிக்கக்கூடாது என்று சொல்லுகிறபோது நமக்குள் சரிபடுத்திக் கொள்ளக்கூடாதா என்கிற பிரபுக்கள் எங்கே போயிருந்தார்கள்? இவற்றை பிராமணரல்லாதார் தயவு செய்து கருத்தாய்க் கவனிக்க வேண்டும். பிராமணரல்லாதாருக்குள் கொஞ்சம் பிளவு ஏற்பட்டவுடன் சட்டசபையில் இந்து தேவதான சட்டத்தை மாற்ற பிராமணர்களால் தீர்மானம் கொண்டு வந்தாய்விட்டது.

இனி வரப்போகும் சட்டசபைக்கும் தேவஸ்தான சட்டத்தை மாற்ற சம்மதிக்கும் அங்கத்தினர்களுக்குச் சாதகமாய் பிரசாரம் செய்யவும், அவர்கள் செலவுக்குப் பணம் கொடுக்கவும் மகந்துகளும், மடாதிபதிகளும் இப்போதிருந்தே எற்பாடு செய்து வருகிறார்கள். சுயராஜ்யக் கட்சி பிரசாரத்திற்கு இந்தப் பணம்தான் தாண்டவமாடும்.

சில பிராமணரல்லாதாரும் இப்பொழுதிருந்தே இதற்குச் சம்மதம் கொடுத்து மகந்துகள் தயவையும், மடாதிபதிகள் தயவையும் சம்பாதித்துக் கொண்டு வருகிறார்கள். பிராமணரல்லாத ஓட்டர்களே! ஜாக்கிரதை! ஜாக்கிரதை! கோட்டை விட்டீர்களானால் பிறகு வெகு நாளைக்குப் பிடிக்க முடியாது.

-------------- ‘குடிஅரசு’ கட்டுரை 22.11.1925