Search This Blog

Loading...

25.5.13

டாக்டர் வரதராஜுலு நாயுடு பெரியாரின் நண்பர் இல்லையா? தினமணி அய்யர்வாளுக்கு பதிலடி


டாக்டர் வரதராஜுலு நாயுடு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அறக்கட்டளை ஒன்றை நிறுவியுள்ளனர்.

அதன் இணையதளத் தொடக்க விழாவில் பங்கேற்க போயும் போயும் தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன் அவர்களை அழைத்துள்ளனர் - அந்த நிகழ்ச்சியில் பெரியாரின் நண்பர் என்று டாக்டர் வரதராஜூலு நாயுடு அவர்களை அழைக்கக் கூடாது என்று புலம்பியிருக்கிறார்.

சென்னை வானொலியில் பணியாற்றும் தோழர் பழ. அதியமான் அவர்கள் பெரியாரின் நண்பர் டாக்டர் வரதராஜுலு நாயுடு வரலாறு எனும் அரிய நூலை (479 பக்கங்கள்) ஆவணமாகத் தமிழ் உலகிற்குத் தந்துள்ளார். அதனை மனதிற் கொண்டுதான் திருவாளர் கே. வைத்தியநாதய்யர் தம் வயிற்றெரிச்சலைக் கொட்டியுள்ளார் என்பதைக் கவனத்தில் கொள்க!

தேசியத்தையும், சுதந்திரத்தை, பண்பாடுகளையும் டாக்டர் வரதராஜுலு நாயுடு பெரிதும் போற்றினார் அவரை பெரியார் ஈ.வெ.ரா.வின் நண்பர் என்று சிலர் குறிப்பிடுகிறார்கள். அது தவறு. அவர் பெரியாரின் நண்பராக இருந்திருந்தால் காங்கிரஸில் தொடர்ந்திருக்க மாட்டார். நீதிக் கட்சியின் தீவிரமான விமர்சகராக இருந்தவர் வரதராஜுலு நாயுடு. அவர் பெரியாரின் இறை மறுப்புக் கொள்கையிலும் உடன்பாடு இல்லாதவர். அவர் செக்கிழுத்த செம்மல் வ.உ.சி.; தமிழ்த் தென்றல் திரு.வி.க. ஆகியோரின் நண்பர் என்பது தான் நிஜம்! (தினமணி 12.5.2013 பக்கம் 6)

_ -இவ்வாறு பேசி இருப்பவர் தினமணியின் ஆசிரியர் திருவாளர் கே. வைத்தியநாதய்யர்.

தந்தை பெரியாரின் நண்பர்களாக இருந்தவர்கள் எல்லாம் அவர் கொள் கைகளை முழுக்க முழுக்க ஏற்றுக் கொண்டவர்கள் தானா?

ராஜாஜி அவர்கள் தந்தை பெரியாரைக் குறிப்பிடும் பொழுதுகூட எனது அன்பார்ந்த எதிரி என்கிறார்.

ராஜாஜி அவர்கள் மறைந்தபோது கூட தந்தை பெரியார் அவர்கள் நட்பின் மேலீட்டால் எப்படி துக்க முற்றார் என்பதை திரு. வைத்திய நாதன் அவர்களின் பத்திரிகைக் குருவான திருவாளர் சோ ராமசாமியே ஒப்புக் கொண்டும் எழுதியுள்ளார் (துக்ளக் 15.1.1973).

டாக்டர் வரதராஜுலு நாயுடு அவர் களிடமிருந்து தந்தை பெரியார் மாறு பட்டு நின்றதுண்டு; கடும் விமர்சனக் கணைகளை ஏவியதும் உண்டு.

அதே நேரத்தில் இருவரும் ஒத்திசைந்து பார்ப்பனர் எதிர்ப்பினைத் துவம்சம் செய்ததும் ஏராளம்.

தந்தை பெரியார் இதழ் ஒன்றைத் தொடங்கி நடத்த வேண்டும் என்று விரும்பினார்; அது குறித்த தகவல் ஒன்று இங்கே.

பத்திரிகை தொடங்குவது பற்றி முதலில் ஸ்ரீமான் திரு.வி. கலியாண சுந்தர முதலியார் அவர்களிடம் சொன் னேன்; அவர் எனது கொள்கையைக் கேட்டவுடன் சந்தோஷப்பட்டு, இப்படி ஒரு பத்திரிகை வேண்டியதுதான்; அதற்கு நீயே சரியானவன். நீ ஆரம்பித்தால் தமிழ் நாட்டிலேயே பதினாயிரக்கணக்கான சந்தாதாரர்கள் சேருவார்கள். ஆனால் அதிக நாள் நிலைக்காது; ஒரு கூட்டத்தார் எப்படி யாவது அதை ஒழித்து விடுவார்கள். ஆனாலும் நடந்தவரை லாபம் நடத்துங்கள் என்றார்.

பிறகு ஸ்ரீமான் வரதராஜுலு நாயுடு அவர்களிடம் சொன்னேன். அவரும் மிகச் சந்தோஷப்பட்டுச் சீக்கிரத்தில் வெளியாக்க வேண்டுமென்று விரும்பு வதாகவும், வெளியாகத் தாமதம் ஏற்பட்டால், அதுவரை தனது பத்திரிகையில் வேண்டுமானாலும்  எழுதி வரும்படியும் சொன்னார். பிறகு ஸ்ரீமான் சி. இராஜகோபாலாச் சாரியார் அவர்களிடம் சொன்னேன் அவர் இச்சமயம் இப்படிப்பட்ட பத்திரிகை கூடாது; அல்லாமலும் மகாத்மா ஜெயிலில் இருக்கும்போது இதை விட்டுவிட்டு நீ பத்திரிக்கை நடத்தப் போவது சரியல்ல என்றார் (குடிஅரசு 1.5.1927) _ என்று தந்தை பெரியார் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு பத்திரிகையைத் தொடங்கும் போது தனது சக நண்பர்களின் கருத்துக்களைத் தெரிந்து கொள்ள விரும்பினார் பெரியார் என்பதும், அந்த சகாக்களில் டாக்டர் வரதராஜுலு நாயுடு இருந்தார் என்பதையும் தினமணி ஆசிரியர் தம் அறியாமை யிலிருந்து விடுபட்டு, வெளிச்சமாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

தமது பொது வாழ்க்கைக்கு டாக்டர் வரதராஜுலு நாயுடு அவர்கள் எவ்வளவு முக்கியமானவர் என்பதைத் தந்தை பெரியார் அவர்களின் வாயிலாகத் தெரிந்து கொள்வதுதான் பொருத்தம். எனது (பெரியாரது) பொது வாழ்வுக்குத் தோழர் வரதராஜுலு நாயுடு அவர்களே காரணமாவார். அவரது கூட்டுறவு அந்தக் காலத்தில் எனக்குக் கிடைத்திருக்காவிட்டால், அக்காலத்தில் எனது தொழிலின் பயனாய் இன்று நான் ஒரு சமயம் ஒரு பெரிய முதலாளியாகவும்; வணிகனாகவும் இருந்திருப்பேன் அல்லது ஒரு சமயம் அம்முயற்சி யால் அநாமதேயப் பாப்பராகவும் இருந்திருப்பேன். எப்படியிருந்தாலும் அவரது நேசமே நான் இன்று 
இந்த நிலைக்கு வந்ததற்குக் காரணம் (புரட்சி 3, டிசம்பர் 1933)

கடந்த எடுத்துக்காட்டு கண்களை மறைத்திருந்தாலும் ஈரோட்டாரின் இந்த எடுத்துக்காட்டு திரு வைத்திய நாதருக்கு சாங்கோ பாங்கமாகத் தெரிவித்திருக்கும் என்று நம்பலாம்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் காங்கிரஸ் என்றால் நாயுடு, நாயக்கர், முதலியார் என்ற மும்மூர்த்திகள் என்பது ஒரு சொலவடையாகவே அமைந்த ஒன்று)

நாம் (பெரியார்) பச்சைத் தமிழில் எழுதுகிறோம். டாக்டர் (வரதராஜுலு நாயுடு) அவர்கள் ராஜதந்திரத் தமிழில் எழுதுகிறார்; ஸ்ரீமான் முதலியார் (திரு.வி.க.) அவர்கள் சங்கத் தமிழில் எழுதுகிறார்; பேசுகிறார்; இதுதான் வித்தியாசமே தவிர வேறில்லை (குடிஅரசு 1 ஆகஸ்டு 1926).

_ இதுவும் தந்தை பெரியார் அவர்களின் எழுத்து வடிவம்தான்;- எழுத்து நடை வேறாக இருந்தாலும் நோக்கம் ஒன்றே என்று நெற்றியடி கொடுத்து விட்டாரே வெண்தாடி வேந்தர்.

பார்ப்பனர் அல்லாதார் என்ற கண்ணோட்டத்தில் தந்தை பெரியார் அவர்களையும் டாக்டர் வரதராஜுலு நாயுடு அவர்களையும் ஒருக்கால் நாம் இணைத்துப் பேசலாம் என்று நினைக்கக் கூடும்.

பெரியாரையும், வரதராஜுலுவையும் பார்ப்பனர்கள் எந்தக் கண்ணோட் டத்தில் பார்த்தனர்?

இந்து அற நிலையப் பாதுகாப்புச் சட்டத்தையும் நீதிக்கட்சி தான் கொண்டு வந்தது. அப்பொழுது காங்கிரஸில் இருந்தபடியே ஆதரித்தும் குரல் கொடுத்தவர்கள் தந்தை பெரியாரும், டாக்டர் வரதராஜுலு அவர்களும்; அதைப் பற்றி பார்ப்பனர்களின் பார்வை என்ன?

தேவதாசி ஒழிப்புச் சட்டம் நீதிக்கட்சி ஆட்சியில் கொண்டு வரப்பட்டபோது அவாளின் கண்ணோட்டம் எப்படி இருந்தது?

பெண்களைக் கடவுள் பேராலும், மதத்தின் பேராலும் பொட்டுக்கட்டி விபசாரத்திற்கு விடுகிற பழக்கம் தப்பு என்பதாக  நாம் ஒருமுடிவு செய்து விடுவோமானால் ஈ.வெ. இராமசாமி நாயக்கரும், வரதராஜுலு நாயுடுவும் நாளைக்குக் கோயிலில் சுவாமிக்கு அர்ச்சகர்கள் வேண்டியதில்லை என்று சொல்லுவார்கள் அதையும் கேட்க வேண்டியதாய் ஏற்பட்டு விடும்!- -----------------------சத்தியமூர்த்தி அய்யர் சட்டசபை யில் பேச்சு (குடிஅரசு 11.3.1928).

இந்து தேவஸ்தான சட்டத்தைப் பற்றிப் பாமர ஜனங்களை ஏமாற்றத் தமிழ்நாட்டுத் தேசிய பிராமணர்களில் பெரும்பாலோர் செய்த கிளர்ச்சி ஈ.வெ. ராமசாமி நாயக்கர், வரதராஜுலு நாயுடு முதலியவர்கள் போட்ட வெடி குண்டு களால் நசுக்குண்டு போயிருந்தாலும் வேறுவிதமான தந்திரங்கள்  இன்ன மும் நடந்து கொண்டு தானிருக்கின்றன (குடிஅரசு 9.3.1926).

தமிழ்நாட்டின் பொது வாழ்வில், முக்கிய பிரச்சினைகளில் இரு கரங்களாக இருந்து பல முக்கிய கட் டங்களில் களமாடிய தலைவர்களை நண்பர்களாகப் பார்ப்பதில் பார்ப்பனர்களுக்கு என்ன கண்ணோவோ தெரியவில்லை.

டாக்டர் வரதராஜுலு நாயுடு அவர்கள் பெரியாரின் நண்பராக இருந்திருந்தால் காங்கிரஸில் தொடர்ந் திருக்க மாட்டார் என்று எம்டன் குண்டைத் தூக்கிப் போடுகிறார் தினமணியின் ஆசிரியர். டாக்டர் வரதராஜுலு அவர்கள் தந்தை பெரியாரைப் போல காங்கிரசை விட்டு விலகியதும் உண்டு.

குறிப்பிட்ட இடைவெளியில் மீண்டும் இணைந்ததும் உண்டு. இதற்குச் சாட்சியாக அவாள் ஆத்துக்காரரை விட்டே சொல்ல வைப்போம்.

வரதராஜுலு, திரு.வி.க., பெரியார் ஆகியோர் காங்கிரசை விட்டு விலகியபோது, இப்போதுதான் காங்கிரசு படுசுத்தமானது என்று எஸ். சீனிவாச அய்யங்கார் கூறியதைக் குடிஅரசு பலமாகக் கண்டித்தது (குடிஅரசு 26.9.1926).

டாக்டர் வரதராஜுலு நாயுடுவும், தந்தை பெரியார் அவர்களும் முறையே காங்கிரஸ் தலைவராகவும் செயலாளராகவும் இருந்து போரிட்ட வருணாசிரம ஒழிப்புப் பெருங்களம் சேரன்மாதேவி குருகுலப் போராட் டமாகும். காங்கிரஸின் நிதி உதவியால் சேரன் மாதேவியில் நடத்தப்பட்டு வந்த குருகுலத்தின் நிருவாகியாக இருந்தவர் வரகனேரி வேங்கட சுப்பிரமணிய அய்யர் -_- சுருக்கமாக வ.வே.சு. அய்யர்.

குருகுலத்தில் பார்ப்பன மாணவர் களுக்கும் பார்ப்பனர் அல்லாத மாண வர்களுக்கும் வருண வேறுபாடு காட்டப்பட்டது. தனித்தனி தண்ணீர் பானை என்கிற அளவுக்கு அது அருவருப்பாக இருந்தது. உணவில்கூட உப்புமா, இட்லி  பார்ப்பனர்களுக்கும் பழைய சோறு சூத்திரர்களான பார்ப்பனர் அல்லாதாருக்கும்;

பெரியார் காதில் விழுந்து விட்டால் சும்மா விடுவாரா? செவுள் பிய்ந்து விடாதா? வரதராஜுலு அவர்கள்தான் சாமானியமானவாரா? அந்தப் பிரச்சினையில் காந்தியாரின் வழவழா கொழ கொழா சமாதானத்தையே தூக்கி எறிந்தவராயிற்றே!

சேரன்மாதேவி குருகுலம்பற்றி காங்கிரஸ் செயற்குழுவில் கொந்தளித்த - பரிமாறிக் கொண்ட பிரயோகங்கள் தெரிந்து கொள்ளப்பட வேண்டியவை.
வ.வே.சு. அய்யர் வெவ்வேறு இடங்களில் பந்தி வைத்ததில் என்ன தவறு இருக்கிறது? பாரத கலாச்சாரத்தைக் காப்பாற்றவே குருகுலம் நடத்தத் தீர்மானிக்கப்பட்டது. வேத முறைப்படிதானே வ.வே.சு. அய்யர் நடந்து கொண்டுள்ளார் என்று ஒரு பார்ப்பனர் பூணூல் தாண்டவம் ஆடியது.
ஈரோட்டு எரிமலை வெடித்தது! ஜாதிப்பாகுபாட்டுக்கும், உயர்வு - தாழ்வுக்கும் வேதமும், சாஸ்திரமும் விதி வகுத்திருந்தால், அந்த வேதத்தையும், சாஸ்திரத்தையும் தீயிட்டுக் கொளுத்த வேண்டும் என்று குமுறினார் பெரியார்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்த டாக்டர் வரதராஜுலு அவர் களோ அக்னிக் குண்டமாக தகி தகித்தார்.

ஆரியர்களின் வேதகால கலாச் சாரம்தான் நம்முடைய கலாச்சாரமா? அதற்கு திராவிடக் கலாச்சாரத்தில் ஜாதிப் பிரிவினைக்கே இடமில்லையே! அந்த உயர்ந்த கலாச்சாரத்தைத்தான் நாம் பின்பற்ற வேண்டும்.

                               ------------------(குருகுலப் போராட்டம் நாரா. நாச்சியப்பன் பக்கம் 52)

திருவாளர் கே. வைத்தியநாத அய்யர் கூறியுள்ளாரே _- டாக்டர் வரத ராஜுலு நாயுடு நமது கலாச்சாரத்தைப் பெரிதும் போற்றினாரென்று. குருகுலப் போராட்டத்தில் டாக்டர் வரதராஜுலு நாயுடு எந்த கலாச்சாரத்திற்காகப் போர்க் குரல் கொடுத்தார்? அந்தக் கலாச்சாரப் போராட்டத்தில் தந்தை பெரியாரும், டாக்டர் நாயுடுவும் இரட் டைக் குழல் துப்பாக்கிகளாகத்தானே இருந்திருக்கின்றனர்.

குருகுலப் போராட்டத்தைத் தொடர்ந்து நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழுவில் டாக்டர் வரதராஜுலு மீது ராஜாஜி உட்பட பார்ப்பனர்கள் நம்பிக்கை இல்லாத் தீர்மானம்  கொண்டு வந்தபோது, அதனை எதிர்த்து முறியடித்தவர் தந்தை பெரியார். வரதராஜுலுவின் தியாகம் எந்த மற்றொரு தியாகத்துக்கும் குறைந்ததல்ல. வரதராஜுலுவின் தலைமையில் நம்பிக்கைத் தீர்மானம் இயற்றாமல் எவரும் கூட்டத்தை விட்டு வெளியில் போக முடியாது என்று எச்சரித்தவர் பெரியார் என்பது -_ வைத்தியநாதய்யர்வாள்களுக்குத் தெரியுமா? ராஜாஜி உட்பட நான்கு பார்ப்பனர்கள் காங்கிரஸ் செயற் குழுவிலிருந்து விலகுவதாக அப் பொழுதே கூறிடவில்லையா?

இன்னொரு களம் மிக முக்கிய மானது -_ அது தமிழ்நாட்டின் அரசி யல் களம்.
1952இல் தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக வந்த ராஜாஜி அவர் களால் கொண்டு வரப்பட்ட குலக் கல்வித் திட்ட ஒழிப்புக் களம்.

சேரன் மாதேவிக்குப் பிறகு அந்த நாயுடுவும், அந்த நாயக்கரும் (டாக்டர் வரதராஜுலுவும், பெரியாரும்) மீண்டும் நாயகர்களாக நின்று ஆச்சாரியாரைப் பந்தாடி பொது வாழ்க்கைக் கோட்டுக்கு வெளியே வீசி எறிந்ததாகும்.
ராஜாஜி முதல் அமைச்சர் பதவியி லிருந்து விலகி ஓடும்படிச் செய்ததில் தந்தை பெரியார் அவர்களுக்கும் திராவிடர் கழகத்திற்கும் மிகப் பெரிய பங்குண்டு.

வேறு வழியின்றி பதவி விலகிய நிலையில் அடுத்து யார் முதல் அமைச்சர் என்ற வினாக்  குறிக்கு விடை யளித்தவர்கள் தந்தை பெரியாரும் - டாக்டர் வரதராஜுலும் ஆவார்கள்.

அந்தச் சந்திப்பு சென்னை அர சினர் தோட்டத்தில் டாக்டர் வரத ராஜுலு நாயுடு அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது.

தந்தை பெரியார், டாக்டர் நாயுடு, காமராசர், குத்தூசி குருசாமி ஆகியோர் அங்கிருந்தனர். முதல் அமைச்சர் காமராசர் என்று அந்தச் சந்திப்பில் தான் முடிவு செய்யப்பட்டது.

காமராஜர் தயங்கிய நிலையில், தந்தை பெரியார் கொடுத்த துணிவுதான் அப்பொறுப்பை ஏற்கச் செய்தது.

முதல் அமைச்சர் பதவிக்கான சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் காமராசர் பெயரை முன்மொழிந்தவர் டாக்டர் வரதராஜுலு நாயுடு ஆவார்.
தந்தை பெரியாருக்கும் டாக்டர் வரதராஜுலு நாயுடு அவர்களுக்கும் இருந்த இந்த நெருக்கத்தில் நட்பு கிடையாது என்று தினமணியார் கூறப் போகிறாரா?
தந்தை பெரியார் அவர்களின் 78 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் சென்னை பெரியார் திடலில் கலந்து கொண்ட டாக்டர் வரதராஜுலு நாயுடு அவர்கள் ஆற்றிய உரை (17.9.1956) குறிப்பிடத் தகுந்ததாகும்.

தலைவர் அவர்களே! நண்பர் பெரியார் அவர்களே! சட்டசபை உறுப்பினர் மாநாடு ஒன்று நடந்தது.

கவர்னர் ஒரு விருந்து வைத்திருந்தார். அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டி இருந்தமையால் இங்கு கொஞ்சம் பின் தங்கி வர நேர்ந்தது. நான் அய்யாவுக்குப் பத்து வயது இளையவன். எனக்கு மூத்தவரை வாழ்த்துவதற்கு நான் தகுதி உடையவன் அல்லன். பெரியார் அவர்கள் இன்னும் நூறு வயது வாழ வேண்டும். அவரது புரட்சிகள் பயங்கரமானதாகத் தோன்றலாம். வேகமாகப் போகிறார் என்று படும். அவரது புரட்சி பெரும் புரட்சி!

எனக்கு வெகு நாளாய் ஒரு யோசனை உண்டு. பொது இடம் ஒன்றில் பெரியார் அவர்களின் சிலை இருக்க வேண்டும் என்ற ஆசை உண்டு. இதை நான் மந்திரிகளிடமும் கூறி இருக்கிறேன். இந்த நிலத்தில் (பெரியார் திடலில்) பெரிய மண்டபம் கட்டி பெரியார் அவர்களின் நல்ல சிலையை வைக்கும்படி திராவிடர் கழகத்தினரைக் கேட்டுக் கொள்கிறேன். பெரியார் அவர்கள் நீடூழி வாழ விரும்புகிறேன்

                                   ----------------------------------(விடுதலை 20.9.1956)
என்றாரே - இதற்கு என்ன பதில்? விளிக்கும் போதே நண்பர் பெரியார் என்றுதானே குறிப்பிடுகிறார்.

நான் சொல்லும் நண்பர் என்பதற்குப் புதுப் பொருள் கொடுக்கப் போகிறாரா தினமணி அய்யர்வாள்?

குறிப்பு: பெரியார் திடலில் மண்டபமும் இப்பொழுது இருக்கிறது _ பெரியார் சிலையும் இருக்கிறது; ஆம்! டாக்டர் வரதராஜுலு நாயுடு வின் ஆசை நிறைவேற்றப்பட்டுள்ளது.

பெரியார் பற்றி வரதராஜுலு நாயுடு''
புதிய கல்வித் திட்டம் குறித்த அரசின் அறிவிப்பு 1953 ஏப்ரலில் வெளியானது. நகராட்சி, பேரூராட்சி நீங்கலாகக் கிராமப் பள்ளிகளிலும் ஆதாரப்பள்ளிகள் தவிர்த்த அனைத்துத் தொடக்கப் பள்ளிகளிலும் 1953 (ஏப்ரலில் தொடங்கிய) கல்வி ஆண்டிலிருந்து அத்திட்டம் உடனே நடைமுறைக்கும் வந்தது.
இராஜாஜி முன்னுரைத்த கல்வித் திட்டத்திற்கு எதிராகத் தமிழ்நாட்டில் பெருங்கிளர்ச்சி ஏற்பட்டது.

பெரியார் அக்கல்வித் திட்டத்தை வர்ணாசிரம கல்வித் திட்டம், குலக்கல்வித் திட்டம் எனக் கண்டித்தார். தம்மைக் கலக்காமல் அறிவிக்கப்பட்டதால் காங்கிரசு கட்சி சட்டமன்ற உறுப்பினர் சிலரிடமும் அதிருப்தி நிலவியது.
அச்சமயத்தில் சேலம் சூரமங்கலத்தில் ஊராட்சி மன்றத்தேர்தலில் வெற்றிபெற்ற நமசிவாயம் என்பவருக்கு நடந்த பாராட்டுக் கூட்டத்தில் பெரியாருடன் வரதராஜுலு கலந்து கொண்டார். கல்வித் திட்டத்தை எதிர்த்துக் கிளர்ச்சி மேற்கொண்டிருந்த பெரியாருக்கு, காங்கிரசுகாரரான வரதராஜூலுவின் அக்கூட்டப் பேச்சு மானசீக ஆதரவாகத் தோன்றியிருக்கலாம்.

பெரியர் ஒரு புரட்சி வீரர், இருப்பதை அழித்துப் புது அமைப்பை உண்டாக்க வேண்டும் என்று போராடுகிறவர். நம்மால் அவ்வளவுக்கு வேகமாகப் போக முடியாது. ஏதோ இருப்பதை வைத்துக் கொண்டு காலம் கடத்தலாம் என்று நினைப்பவர்கள் நாம்.

சுதந்திரப் போராட்டக் காலத்திலேயே பெரியார் அவர்கள் நினைத்தார்கள் சமுதாய சீர்திருத்தம் எற்பட்டால் தான் சுயராஜ்யம் உதவுமென்று காந்தியார் அவர்களும் இந்தப்படியே கருதினார். சமுதாய சீர்திருத்தம் இல்லாமலே சுதந்திரம் வந்தது. அதன் பலனை இப்போது அனுபவிக் கிறோம். எங்கும் ஜாதி வெறி, ஜாதிப் பூசல்கள் தலைவிரித் தாடுகின்றன. இந்த ஜாதி வெறியெல்லாம் ஒழிய வேண்டும் இன்னும் இந்தக் கட்சிப் பூசல்கள் ஒழிய வேண்டும்.
இன்றைய தினம் பெரியார் அவர்களின் கொள்கையும் சேவையும் பலருக்கு பிடிக்காமலிருக்கலாம். ஆனால் இன்றைக்கல்ல இன்னும் 15 ஆண்டுகள் கழித்து பெரியார் அவர்களின் சேவை இந்தத் தேசத்திற்கு எவ்வளவு தேவையானது, அவசியமானது என்பதை எல்லோரும் உணருவார்கள். பெரியார் அவர்களின் சேவை  இந்த நாட்டின் வரலாற்றிலே போற்றி எழுதப்பட வேண்டியது; எழுதப்படும். எனக்கு முதல் மந்திரி பதவி கிடைக்குமானால் அந்த மந்திரி சபையிலே பெரியார் அவர்களை ஒரு மந்திரியாக நிச்சம் சேர்த்துக் கொள்வேன் - அவருடைய சேவை தேசத்திற்கு மிகவும் தேவை (விடுதலை, 15 மே 1985).
வரதராஜுலு -பெரியார் உறவு மீண்டும் நெருக்கமாக விட்டதை மேற்கண்ட பேச்சிலிருந்து உணர முடியும்.

(பெரியாரின் நண்பர் டாக்டரா? ராஜூலு நாயுடு வரலாறு
- அதியமான் -_ டாக்டர் 256_-257

டாக்டர் வரதராஜூலு நாயுடுக்காக பெரியார் சண்டமாருதம்

வரதராஜூலுவின் பார்ப்பனச் சார்பைக் கண்டிப்பவராக இருந்தாலும் பார்ப்பனர்கள் அவரைத் தாக்கும்போது காப்பாற்றுபவராகப் பெரியார் இக்கட்டத்தில் (1926) இருந்தார். சுயராஜ்யக் கட்சியைப் பார்ப்பனர்கள் கட்சி என்று வரதராஜூலுவை கூறியதையடுத்து எதிர்ப்பு எழுந்தது. அச்சம்பவத்தில் குடிஅரசு வரதராஜூலு அவர்களை ஆதரித்தது. சுயராஜ்யக் கட்சித் தலைவர்களைப் போல் கள், சாராயம், பிராந்தி சாப்பிடுகிறாரா? சுயராஜ்யக் கட்சிப் பிரதானிகள் போல் தேவடியாளைக் கூட்டிக் கொண்டு ஊர் ஊராய்த் திரிகிறாரா? அல்லது போன இடங்களில் எல்லாம் குச்சு புகுந்து அடிபட்டாரா? சாராயம், பிராந்தி விற்றுப் பணம் சம்பாதிக்கிறாரா? பத்திரிகைய்ல பேர் போடுவதாகவும் படம் போடுவதாகவும் சொல்லிப் பணம் சம்பாதித்தாரா? பத்திரிகைச் செல்வாக்கை உபயோகித்து மடாதிபதிகளிடம் பணம் வாங்கினாரா? மகனுக்கு உத்தியோகம் சம்பாதித்துக் கொண்டாரா? வாங்கின கடனை ஏமாற்றினாரா? அல்லது வீட்டில் மல் துணியும் பெண்சாதிக்குப் பட்டுச் சல்லா முதலிய அந்நிய நாட்டுத்துணியும் உபயோகித்துக் கொண்டு மேடைக்கு வரும்போது கதர் கட்டிக்கொண்டுவந்து பொது ஜனங்களை ஏமாற்றுகிறாரா? திருட்டுத்தனமாய் சர்க்கார் அதிகாரிகளிடம் கெஞ்சி ஏதாவது தயவு பெற்றுக் கொண்டாரா? மந்திரி உத்தியோகம் வேண்டுமென்று யார் காலிலாவது விழுந்தாரா? பெரிய பெரிய உத்தியோகங்களையும் பதவிகளையும் பெறலாமென்று தனது உத்தியோகத்தை இராஜினாமா கொடுத்து ஜனங்களை ஏமாற்றினாரா- அல்லது இன்னமும் தனக்கு ஏதாவது ஓர் உத்தியோகமோ பதவியோ கிடைக்குமென்று எதிர்பார்க்கிறாரா? இவர்கள் பூச்சாண்டிக்கு யார் பயப்படுவார்கள்? (குடிஅரசு, 10 அக்டோபர் 1926).
குடி அரசின் மேற்கண்ட எழுத்து, சுயராஜ்யக் கட்சியினரின் மோசமான செயல்களின் பட்டியலாகவே இருந்தாலும் எதிர்நிலையில் வரதராஜூலுவின் சிறப்பான ஆளுமையைப் புரிந்துகொள்ள முடிகிறது. அதனாலேயே வசையே வடிவான இப்பத்தியைத் தர நேர்ந்தது.
(பெரியாரின் நண்பர் டாக்டரா? ராஜூலு நாயுடு வரலாறு
- அதியமான் - டாக்டர் 224-_225

------------------------  மின்சாரம் அவர்கள் 25-5-2013 “விடுதலை” யிலெழுதிய கட்டுரை

24.5.13

தலித்துகளுக்கும் - ஏழைவன்னியர்களுக்கும் நல்லுணர்வை ஏற்படுத்துவதே நோக்கம்-தோழர் திருமா

விடுதலைச் சிறுத்தைகள் தலைவரின் விவேகமான பேட்டி

விடுதலைச் சிறுத்தைகளின் கட்சித் தலைவர் மானமிகு தொல். திருமாவளவன் அவர்கள் அளித்த விவேகமான பேட்டி ஒன்று ஏடுகளில் வெளி வந்துள்ளது.

தேர்தல் கூட்டணியில் இப்பொழுதுள்ள நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமும் இல்லை என்று உறுதிபடக் கூறி, சந்தேகத்தைக் கிளப்பும் பிராணிகளின் வாயை அடைத்துள்ளார்.

அக்கப் போர்களை எழுதிக் கல்லாப் பெட்டியை நிரப்பும் ஊடகங்களுக்கு மெல்லுவதற்குத் தேவையில்லாமல் அவலைக் கொடுப்பதற்குப் பதிலாக அவ்வப்பொழுது பளிச் சென்று சொல்லி வாயை அடைத்து விட்டால் தீர்ந்தது கதை.

அந்தப் பேட்டியில் தோழர் திருமா குறிப்பிட்டுள்ள ஒரு கருத்து நுட்பமானது. ஆரோக்கியமானது. தேவையானதும்கூட!

எங்களுடைய நோக்கம் தலித்துகளுக்கும் - ஏழை வன்னியர்களுக்கும் இடையே நல்லுணர்வை ஏற்படுத்துவதாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரின் முதிர்ச்சியையும் - பக்குவத்தையும், பொறுப் புணர்வையும் இது தெளிவுபடுத்துகிறது.
இந்து மதத்தின் வருண அமைப்பு முறையில் ஏணிப்படிக் கட்டுகள் முறையில் ஜாதிகள் அமைக்கப்பட்டுள்ளன; graded ineqality என்று மிக அழகாகக் கூறுவார் அண்ணல் அம்பேத்கர் அவர்கள்.

இதனைப் புரிந்து கொண்டால் எந்தத் தலைவர்களும் தவறான வழி காட்டுதல்களைத் தங்களைச் சார்ந்தவர்களுக்கு அளிக்க மாட்டார்கள்.
மூலபலம் எங்கே இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளாதவர்கள் தான் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர்க்கிடையே ஏற்பட்டுள்ள சிக்கலை அவிழ்ப்பதற்குப் பதிலாக மேலும் படுமுடிச்சுகளைப் போடுவார்கள்.
தாழ்த்தப்பட்டவர்களும், பிற்படுத்தப்பட்டவர்களும் அடிப்படையில் உழைப்பாளிச் சமூகம்; சமூக நிலையில் தாழ்த்தப்பட்டவர்கள் தீண்டாதவர் களாக ஆக்கப்பட்டவர்கள் - ஊருக்கு வெளிப்புறம் தள்ளி வைக்கப்பட்டவர்கள்.
முதல் உரிமை, முன்னுரிமை அவர்களுக்கு எல்லா வகைகளிலும் அளிக்கப்பட வேண்டியது தான் மனித உரிமை மீதும், மனித நேயத்தின்மீதும் சமத்துவத்தின் மீதும் அக்கறையுள்ள பகுத்தறிவுச் சிந்தனையுள்ளோரின் கடமையாகும்.

பறையன் பட்டம் ஒழியாமல் சூத்திரன் பட்டம் ஒழியாது என்று தந்தை பெரியார் இரத்தினச் சுருக்கமாக ஆழ்ந்த சமூகச் சிந்தனையில் வெளியிட்டுள்ளார்கள்.

நாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு செயலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு - பிற்படுத்தப்பட்ட மக்களுக்குமிடையே புரிந்துணர்வையும், நல்லிணக்கத்தையும் வளர்க்க உதவ வேண்டுமே தவிர வேறு வகையான முறையில்  அணுகக் கூடாது.

தாழ்த்தப்பட்டோர் படிக்கிறார்கள், உத்தியோகங்கள் பார்க்கிறார்கள் - குடிசைகளிலிருந்து வெளியேறுகிறார்கள் என்றால் அதனைக் கண்டு பார்ப்பனர் அல்லாதார் அனைவரும் கை தட்டி மகிழ வேண்டும் - பொறாமை உணர்வு எந்த வகையிலும் தலை தூக்கக் கூடாது!

அதே போல பிற்படுத்தப்பட்டவர்களின் வளர்ச்சிக்கு நல்லெண்ணத்திற்கு உதவக் கூடிய வாய்ப்புக்கிட்டும் பொழுதெல்லாம் தாழ்த்தப்பட் டோரின் வழிகாட்டிகள் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

நாம் அனைவரும் திராவிடர் என்ற உணர்ச்சி மிகுந்து - அதற்குத் தடையாக உள்ள ஜாதி உணர்வுகளை ஆணி வேரோடு கெல்லி எறிய வேண்டும்.
திராவிடர் கழகம் இந்த அடிப்படைப் பணிகளைத் தான் செய்து வருகிறது. அந்தக் காரணத்தால்தான் இப்பிரச்சினையில் உதவிட நான் தயார் என்று தமிழர் தலைவர் வலிய முன் வந்து கூறியுள்ளார்.

இதுவரை தவறான அணுகுமுறைகளை மேற்கொண்டிருந்தாலும், நடந்து முடிந்திருக்கும் கசப்பான அனுபவங்களுக்குப் பிறகு - தந்தை பெரியார் பெயரை பொருளோடு புரிந்து கொண்டு செயல்பட வேண்டும் என்பதுதான் திராவிடர் கழகத்தின் வேண்டுகோள்.

அடுத்தவர் உயிர் பிழைக்க ரத்தம் அளிக்கலாம் - அது வரவேற்கக் கூடியது. ஜாதியை முன்னிறுத்தி ரத்தம் சிந்தக் கூடாது - அடுத்தவர் உயிரைப் பறிக்கவும் கூடாது என்று தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் பொன் மணக்கும் சொற்களைச் செவி மடுக்கக் கோருகிறோம். மறக்க வேண்டாம்! பொருள்  தந்தை பெரியாருடையது;  குரல் - திராவிடர் கழகத் தலைவருடையது.
              ------------------------"விடுதலை” தலையங்கம் 24-5-2013

23.5.13

அய்.பி.எல். போட்டியைத் தடை செய்!கிரிக்கெட் பார்ப்பனர்களின் விளையாட்டு?



ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, கடைசியில் மனிதனைக் கடித்தது போல் என்று ஒரு சொலவடையைக் கூறுவார்கள்.

இது இன்றைய தினம் அய்.பி.எல். கிரிக் கெட்டுக்குத் தான் நூற்றுக்கு நூறு துல்லியமாகப் பொருந்தும்.

கிரிக்கெட் விளையாட்டுக்காரர்கள்  -தரகர்கள்தான் கிரிக்கெட் சூதாட்டத்தில்  ஈடுபட்டனர் என்றுதான் பொதுவாகப் பேசப்பட்டது.

துருவிச் செல்லும் பொழுது இதில் பெரும் பண முதலைகளும், சினிமாக்காரர்களும் மூக்கை நுழைத்து பெரும் பணம் சம்பாதித்துள்ளனர் என்று தெரிய வருகிறது.

இப்பொழுது அதையும் கடந்து கிரிக்கெட் வாரியத் தலைவரின் வீடு வரை இந்தச் சூதாட்டத்தின் கை நீண்டு கொண்டே போகிறது.

கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் சீனிவா சனின் மருமகனும் தொழிலதிபருமான குருநாத் வரை இதில் ஈடுபட்டு இருப்பதாகத் தகவல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

வாரியத் தலைவர் சீனிவாசன்மிக மோசமான சிக்கலுக்கு ஆளாகி விட்டார் என்றே நினைக்கத் தோன்றுகிறது.

கிரிக்கெட்டில் சூதாட்டத்தை ஒழிக்க முடியாது என்று சில நாட்களுக்கு முன் பேட்டி கொடுத்த மகானுபவர் இவர் .

சூதாட்டத்தை ஒழித்தே தீர வேண்டும் என்று சொல்ல வேண்டிய வாரியத் தலைவர், அதனை ஒழிக்கவே முடியாது என்று சொன்னது - பல அய்யப்பாடுகளுக்கு இடம் அளித்தது.

இப்பொழுது அவரது மருமகனே சம்பந்தப் பட்டுள்ளார் என்றால், பல்வேறு சந்தேகங்களுக்கு இடம் அளிக்கத்தான் செய்யும்.

எந்த பொந்தில் எந்த பாம்போ என்று கருதும் நிலை உருவாகி விட்டது. வேறு எந்த விளையாட்டையும்விட கிரிக்கெட் மட்டும் ஏன் இந்த நிலைக்கு உள்ளாகிறது என்பது மிகவும் முக்கியமான கேள்வி மட்டுமல்ல - சிந்திக்க வேண்டிய ஒன்றும் ஆகும்.

கிரிக்கெட்டில் தவறு செய்வதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது.
மற்ற மற்ற விளையாட்டு களில் ஆட்டக்காரர்கள் உயிரைக் கொடுத்து விளையாடுவார்கள்; அதில் ஒரு ஆவேசம் இருக்கும். கிரிக்கெட் அப்படியல்ல; ஒருவர் பந்து வீசுவார், ஒருவர் பந்தை அடிப்பார் - ஒருவர் மட்டும் பந்தைத் துரத்திக் கொண்டே செல்லுவார். வேண்டுமானால் விக்கெட் கீப்பராக இருக்கக் கூடியவருக்குக் கடுமையான சுமை என்று சொல்லலாம்.

இதில் வேடிக்கை என்னவென்றால், விளை யாட்டு நடந்து கொண்டு இருக்கும்போது விளை யாட்டுக்காரர்கள் ரசிகர்களின் ஆட்டோகிராபில் கையொப்பம் போட்டுக் கொண்டு இருப்பார்கள்.

கால் பந்தாட்டத்திலோ, ஹாக்கியிலோ, சடுகுடு ஆட்டத்திலோ
கூடைப்பந்திலோ, கைப்பந்திலோ இத்தகைய காட்சியைப் பார்க்க முடியுமா? அதற்கான வாய்ப்பே இந்த விளையாட்டுகளில் இருக்கவே முடியாது.
பெரும்பாலும் பார்ப்பனர்கள் கிரிக்கெட்டைத் தேர்ந்தெடுத்ததற்கே காரணம் இந்த வசதி இதில் இருப்பதுதான்.

கிரிக்கெட் என்றாலே பார்ப்பனர்களின் விளை யாட்டு என்று ஆன பிறகு, ஊடகங்கள் உயர்த்திப் பிடிக்கின்றன. நேர்முக வருணனைகளை ஒரு கட்டத்தில் வானொலி வழங்க ஆரம்பித்து, இப்பொழுது தொலைக்காட்சிகள் நேரடியாக ஒளிபரப்பவும் ஆரம்பித்து விட்ட நிலை; இதில் அரைகுறை உடையோடு ஆடும் அழகிகள் வேறு. விளையாட்டா - ரெக்கார்டு டான்ஸ் நடைபெறும் இடமா?

விளையாடுபவர்களுக்கு கோடி கோடியாகப் பணம் கொட்டுகிறது. கிரிக்கெட்டில் கிடைத்த செல்வாக்கைப் பயன்படுத்தி, விளம்பரத்தளத்திலும் அடிவைத்து கோடிக் கோடியாக வருமானம்!

அளவுக்கு விஞ்சி பணம் இதில் புழங்குவதும் இந்தச் சூதாட்டத்துக்கு மிக முக்கிய காரணமாகும்.

முதற் கட்டமாக இந்த அய்.பி.எல். போட்டியைத் தடை செய்ய வேண்டியது. ஒழுக்கத்திலும், நேர்மை யிலும் நம்பிக்கை உள்ளவர்கள் எதிர்பார்ப்பதாகும்.

                       ------------------------------"விடுதலை” தலையங்கம் 23-5-2013

22.5.13

தந்தைபெரியாரும் - இராஜகோபாலாச்சாரியாரும்

நடந்த விஷயம் என்ன?
ஈ.வெ.ரா. சி.ஆர். சந்திப்பு

தோழர் சி.ராஜகோபாலாச்சாரியார் அவர்களும் நானும் குற்றாலத்தில் கண்டு பேசிய விஷயம் தமிழ்நாடு பத்திரிகை உலகத்தில் மிகப் பிரமாதப் படுத்தப்பட்டு விட்டது.

என்னைச் சந்திக்கும் ஒவ்வொருவரும் முதலில் இந்த விஷயத்தை கேட்டு விட்டே மரியாதைக்கு விசாரிக்கும் க்ஷேம லாபங்களைக் கூட விசாரிக்கிறார்கள். சந்திக்க முடியாத அனேகம் பேர்கள் உள்ளத்திலும் இந்த எண்ணமே இருக்கும் என்பதில் ஆக்ஷேபணை இருக்க நியாயமில்லை.

ஆகையால் அதை விளக்கி விடுகிறேன். பத்திரிகை நிருபர்கள் பலர் என்னை விசாரித்தார்கள். நான் அது ஒன்றும் அவ்வளவு முக்கியமானதல்ல என்றே பதில் சொல்லிவிட்டேன். நிருபர்கள் சேதியில் 100க்கு 90 என் விஷயத்தைப் பொறுத்தவரை திரித்தும் பிசகாயும் மாற்றியுமே எனக்கு காணப்படுகின்றன. ஆதலால் நானே குறிப்பிட்டு விடுகிறேன். எங்கள் சம்பாஷணை ஒன்றும் உண்மையிலேயே அவ்வளவு குறிப்பிடக்கூடிய தல்ல. ஆனால் கவனிக்கக்கூடியதேயாகும்.

எனக்கு பொதுவாக தோழர் சி.ராஜகோபாலாச்சாரியாரிடம் எப்போதுமே மரியாதை உண்டு. அவருக்கும் என்னிடம் அன்பு உண்டு என்றே கருதிக் கொண்டிருக்கிறேன். அதாவது நான் அவரது அன்புக்கு பாத்திரமானவன் என்கின்ற கருத்தில்.

ஆச்சாரியாரைப்பற்றி அரசியல் விஷயத்தில் பொதுநல விஷயத்தில் எவ்வளவு மாறுபட்ட அபிப்பிராயங் கொண்டிருந்தாலும், கண்டித்துப் பேசியும் எழுதியும் வந்தாலும் தனிப்பட்ட விஷயத்தில் அவரை எனது மரியாதைக்கு உரியவர் என்றே கருதி இருக்கிறேன்.

நாங்கள் பொது வாழ்வில் நுழைவதற்கு முன் அவர் சேலம் சேர்மெனாயும் நான் ஈரோடு சேர்மெனாயும் இருக்கும் போதே எங்களில் ஒருவருக்கொருவர் நம்பிக்கையுள்ள மாதிரியில் நெருக்கமுள்ளவர்களாய் இருந்ததோடு இருவரும் சொந்த வாழ்க்கையை அலட்சியம் செய்து பொதுவாழ்வில் தலையிடுவது என்கின்ற அருத்தத்தின் மீதே சற்றேறக் குறைய ஒரே காலத்தில் இருவரும் சேர்மென் பதவியையும் மற்றும் உள்ள சில கவுரவ பதவிகளையும் ராஜினாமா செய்துவிட்டு தோழர் வரதராஜுலுவும் உள்பட நெருங்கி கலந்து இருந்தோம். பிறகு ஒத்துழையாமை ஆரம்பமான வுடன் நான் அவருடைய உள்ளத்தை கொள்ளை கொண்ட காதலி போலவே இருந்து வந்தேன்.

எங்களுக்குள் வெகுநாள் ஒத்துழையாமையில் அபிப்பிராய பேதமே இல்லாதிருந்தது. அவர் இஷ்டத்தை அறிந்து அதுவே என் அபிப்பிராயம் போல் காட்டி அவரை இணங்கச் செய்வதுபோல் ஒவ்வொரு விஷயத்திலும் நடந்து கொள்வேன். அதனாலேயே அனேகர் என்னைக் கண்டு விட்டே அவரைக் காணுவார்கள்.

அப்படிப்பட்ட நிலை வகுப்பு உணர்ச்சி காரணமாகவே இருவருக்கும் மாற்றமடைய நேரிட்டுவிட்டது. அதன் பிறகு பல சம்பவங்கள் ஏற்பட்டு விட்டன என்றாலும் அவரைக் காணும் போது என்னை அறியாமலே அவரிடத்தில் ஒரு மரியாதையும் பணிவும் ஏற்பட்டு விடுகின்றன.

அவரைக் காணும் போது எப்படி மரியாதையும் பணிவும் ஏற்படுகிறதோ அதுபோல் ஒரு பரிதாபமும் ஏற்படாமல் இருப்பதில்லை.

காரணம், எவ்வளவு பெரிய தியாகம் செய்தவர் அவ்வளவு தியாகமும் ஒரு பயனுமில்லாமல் போகும்படியாய் விட்டதே பாவம் என்று பரிதாபப்படுவதுண்டு. என்றாலும் அவருடைய ஒவ்வொரு வார்த்தையையும் இரண்டு மூன்று அர்த்தம் செய்து பார்க்காமல் நான் ஒரு முடிவுக்கு வருவதில்லை. நான் பிரிந்து விட்ட பிறகும் ஒரு சமயத்தில் சட்டசபைக்கு நிற்கும்படி என்னை வேண்டினார். இந்திய சட்டசபைக்கும் நான் நிற்பது நல்லது என்கின்ற ஜாடையும் காட்டினார். எனக்கு வெற்றி செலவில்லாமல் ஏற்படக்கூடும் என்கின்ற நம்பிக்கையும் உறுதியும் இருந்தும் இந்த ஸ்தானங்களுக்கு அவருடைய ஆதரவில் செல்வது எனது வாழ்வைக் கெடுத்து விடுமோ என்று அஞ்சியே மறுத்துவிட்டேன்.

இப்படியெல்லாம் இருந்தாலும் தற்கால அரசியல் புரட்டுக்களை நான் அறிந்திருப்பது போலவே ஆச்சாரியார் அவர்களும் அறிந்திருக்கிறார் என்பதில் எனக்கு சந்தேகமில்லை. இரு கட்சிகளிலும் பெரிதும் சமய சஞ்சீவிகளே பயன் அனுபவித்து விடுவதும் நாம் ஒருவரை ஒருவர் துவேஷித்து முன்னேற ஒட்டாமல் தடுத்துக் கொண்டு இருப்பதும் இந்த சந்தர்ப்பத்தில் பொது மக்கள் நலம் கொள்ளை போவதும் என்னைவிட நன்றாய் உணர்ந்திருக்கிறார் என்பதே என் அபிப்பிராயம்.

இந்த நிலையில் என்னை அவர் கோயமுத்தூர் ஜெயிலில் எதிர் பிளாக்கில் ஒரு கைதியாக சந்தித்தார். தோழர் சர். ஆர்.கே. ஷண்முகம் அவர்கள் என்னை ஜெயிலில் சந்தித்த அதட்டியினாலும் தோழர் ஆச்சாரியார் முயற்சியாலும் நான் ஆச்சாரியார் அறைக்குப் பக்கத்தில் அவருடைய சமையலறை சாப்பாட்டில் இருக்க நேர்ந்தது.

அப்பொழுதும் எங்கள் பழைய கதை ஞாபகத்துக்கு வந்ததுடன் இருவருக்கும் கண்களில் நீர் ததும்ப எங்கள் காதலைக் காட்டிக் கொண்டோம். எந்த கருத்தில் என்றால் எனக்கும் அப்படிப்பட்ட தலைவர் ஒருவர் கிடைக்கமாட்டார், அவருக்கும் என்னைப்போல ஒரு தொண்டன் கிடைக்க மாட்டான் என்கின்ற உணர்ச்சிக் கருத்தில் என்றே சொல்லலாம். முடிவில் இருவரும் சேர்ந்து முன்போல ஒத்து உழைக்க முடியுமா என்கின்ற விஷயமாகவே பேசிப் பேசி ஒத்து உழைக்க சந்தர்ப்பம் ஏற்படக்கூடும் என்கின்ற நம்பிக்கை மீதே ஜெயிலில் பிரிந்தோம்.

அதற்கு பிறகு ஒருதரம் சந்திக்க நேர்ந்தும் இருவரும் சரிவர அந்த அபிப்பிராயத்தை வலியுறுத்திக் கொள்ளவில்லை.

பிறகு சுமார் 20 மாதம் பொறுத்து நானும் தோழர்கள் பாண்டியன் முதலியவர்களும் குற்றாலத்தில் ஒரு நாள் ஸ்நானத்துக்கு போகையில் அங்கு நான்கு நாள் முன்னதாகவே சுகத்துக்காக போயிருந்த ஆச்சாரியார் அவர்கள் தன் ஜாகையிலிருந்தே என்னைக் கண்டார். பார்க்க வேண்டும் என்று சொல்லியனுப்பினார். அருவியில் குளித்துவிட்டு அவர் ஜாகைக்கு போனேன். அப்பொழுது மாலை 3 மணி இருக்குமாதலாலும் நானும் என் தோழர்களும் அதுவரை சாப்பிட வில்லையாதலாலும் ஆச்சாரியார் அவர்களிடம் அதிக நேரம் பேச சாவகாசமில்லை என்று சொல்லி அவசரமாய் விடை கேட்டேன். "ஏன் ஒரு நாள் சாவகாசமாக இங்கு தங்குவது தானே" என்றார். நான் இப்போது சாவகாசமில்லை என்றும் மற்றொரு நாள் வருவதாயும் சொன்னேன். அவசியம் வரவேண்டும் என்றார். ஆகட்டும் என்றேன். அந்தப்படியே 15 நாள் பொறுத்து மறுபடியும் குற்றாலம் சென்றேன். அது சமயம் அவர் ஒரு வனபோஜனத்துக்கு புறப்பட்டுக்கொண்டு வீட்டின் முன் வாசலுக்கு வந்துவிட்டார். என்னைக் கண்டதும் ஆசையாக வரவேற்று வன போஜனத்துக்கு அழைத்தார். நான் பின் சென்றேன். செல்லுகையில் வழியில் சிறிது முன்னாக சென்று கொண்டிருந்த நாங்கள் காதல் மிகுதியால் அர்த்தமற்ற வார்த்தைகளைப் பேசுவதுபோல் பல விஷயங்களை கலக்கிக் கலக்கி அங்கொன்று இங்கொன்றுமாக பேசிக் கொண்டே சுமார் 1 மைல் நடந்தோம். சங்கேத இடம் சென்று மற்ற எல்லோருடனும் சேர்ந்து சம்பாஷித்தோம். பிறகு வீட்டுக்கு திரும்பி அன்று மாலையும் இரவும் கழித்தோம். தானாக வந்த விஷயங்களைப் பற்றித்தான் பேசினோமே ஒழிய குறிப்பாக எதையும் வருத்தி ஒன்றும் பேசவில்லை. இவைகளிலேயே அனேக விஷயங்கள் கலந்து கொண்டன.

முடிவு என்ன வென்றால் இன்றைய இரு கட்சி கிளர்ச்சிகளும் எங்களுக்கு பிடிக்கவில்லை என்பதும், சேர்ந்து இன்ன இன்ன காரியம் செய்தால் நாட்டுக்கும் சமூகத்துக்கும் நலன் ஏற்படும் என்பதும் பேசி ஒரு அபிப்பிராயத்துக்கு வந்த விஷயங்களாகும். அவரை விட எனக்கு இருவரும் கலந்து ஒற்றுமையாய் ஒரு வேலை செய்யக்கூடிய காலம் வராதா என்கின்ற ஆசை ததும்பி இருந்தது.

அவ்வளவு பெரிய விஷயம் பேச அந்த சந்தர்ப்பம் போதாது என்கின்ற எண்ணமும் இருந்தது.

ஆனால் சில விஷயங்களில் இருவருக்கும் நேர்மாறான அபிப்பிராயம் இருப்பதும் அது விஷயத்தில் ஒத்து வர முடியாதே என்று பயப்படக் கூடிய அம்சங்களும் வெளியாயிற்று.

எப்படி இருந்த போதிலும் ஒரு சமயத்தில் கூடுவோம் என்கின்ற நம்பிக்கை குறையவில்லை.

இவ்வளவுதான் நாங்கள் கலந்து பேசியதின் தத்துவமாகும்.

----------------------------------ஈ.வெ.ரா.'குடி அரசு' துணைத் தலையங்கம் 14.06.1936

21.5.13

ஒன்றுபட்ட இலங்கையில்தான் தமிழர்கள் வாழ விரும்புகிறார்களா?


ஓநாய் சைவம் பேசினாலும்கூட ஏற்றுக் கொள்ளலாம்; ராஜபக்சே தமிழர்களுக்காக ஆதரவு காட்டிப் பேசுவதை மட்டும்  ஏற்றுக் கொள்ளவே முடியாது.

விடுதலைப்புலிகளை போரில் வீழ்த்திய தாகக் கூறி நான்காம் ஆண்டு வெற்றித் திருநாள் கொழும்பில் கொண்டாடப்பட்டுள்ளது (18.5.2013).
அந்த நிகழ்ச்சியில் அதிபர் ராஜபக்சே மிகவும் நீட்டி முழங்கியுள்ளார்.  ஒன்றுபட்ட இலங்கையில்தான் தமிழர்கள் அமைதியுடன் வாழ விரும்புகின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஈழத் தமிழர்கள் எல்லாம் நீண்ட வரிசையில் நின்று இலங்கை அதிபர் ராஜபக்சேயிடம் மனு கொடுத்திருப்பார்களோ என்று கூட நினைக்கத் தோன்றுகிறது.

பேரழிவுக்குப்பிறகு அங்கு வாழும் தமிழர்கள் ஒன்றுபட்ட இலங்கையில்தான் வாழ வேண்டும் என்று நினைப்பதற்கு, மறு சிந்தனை கொள் வதற்கு  உகந்த வகையில் அதிபர் ராஜபக்சே அப்படி என்ன என்னவெல்லாம் தமிழர்களின் அமைதிக்கும், சுதந்திரமான வாழ்வுக்கும், வளர்ச்சிக்கும் செய்துள்ளார் என்பதைப் பட்டியல் போட்டுக் காட்டியிருந்தால்கூட, ஏதோ தம் பக்கம் நியாயம் இருப்பதாகக் கருதி ஏதோ சொல்ல முயற்சிக்கிறார் என்றுகூட நினைக்கத் தோன்றும்.

மூன்றே மாதங்களில் முள்வேலி முகாமி லிருந்து, ஈழத் தமிழர்களை அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி, சொந்த வீடுகளில் குடியமர்த்தம் செய்வோம் என்றாரே - அதன்படி ஏதாவது நடந்திருக்கிறதா? தமிழர்களுக்குரிய பூர்வீக வீடுகளை எல்லாம், நிலங்களை யெல்லாம் சிங்களக் காடையர்கள் அல்லவா ஆக்கிரமித்துள்ளனர்.

அதைவிடப் பெரிய கொடுமை - தமிழன் ஊர்ப் பெயர்கள் எல்லாம் சிங்களமயமாக்கப் பட்டு விட்டதே - இன்னும் அந்தப் பகுதிகள் எல்லாம் இராணுவக் கட்டுப்பாட்டில்தானே இருக்கின்றன.

பத்திரிக்கை சுதந்திரம் உண்டா? வெளியுலக ஊடகக்காரர்களை அனுமதிக்காதது - ஏன்?

சண்டே லீடர் ஆசிரியர் வசந்த் பட்டப் பகலில் நடுவீதியில் சுடப்பட்டது எந்த நோக்கத்துக்காக? இந்த வரிசையில் பாசிச ஆட்சிக்கே உரித்தான போக்குகளில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நீண்ட பட்டியல் உண்டே!

எத்தனை ஆயிரம் ஈழத் தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டனர்? அவர்கள் உயிரோடுதான் இருக்கிறார்களா? யாருக்குத் தெரியும்?

எத்தனை எத்தனை ஆண்டுகளாக அவசர நிலைப் பிரகடனம்? உலகத்தின் கண்களில் மிளகாய்ப் பொடி தூவிட, 2011 ஆகஸ்டில் அவசர நிலையை ரத்துச் செய்ததாக அறிவிக்கப்பட்டது.

அதே நேரத்தில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் என்ற பெயரில் அவசர நிலைப் பிரகடனத்தில் இடம் பெற்றுள்ள அத்தனை அதிகாரங்களும் இதற்குள்ளும் இருக்குமாறு பார்த்துக் கொண்டார். மறுக்க முடியுமா? போர்க் குற்றங்கள்பற்றி இலங்கை அரசே விசாரிக்கும் என்று மனித உரிமை ஆணையம் கூறியதைத் தொடர்ந்து, எந்தவித உரிமை மீறலும் இலங்கையில் நடைபெறவில்லை என்று இலங்கை அரசால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழு அறிவித்து விடவில்லையா?

அதே போன்றதுதான் இப்பொழுது ராஜபக்சே வெளிப்படுத்தியிருக்கும் கூற்றும்.

அவர் சொல்லுவதை விவாதத்துக்காக ஏற்றுக் கொள்வதாக வைத்துக் கொள்வோம்.

சிங்கள மொழியோடு தமிழும் ஆட்சி மொழியாகும் என்று அறிவிக்கத் தயார் தானா?

இலங்கை அதிபராக சிங்கள மொழி பேசும் - பவுத்த மதத்தைப் பின்பற்றும் ஒருவர்தான் அதிபராக முடியும் என்பதை விலக்கிக் கொள்ளத் தயாரா?

வடக்கு - கிழக்கு மாகாணங்கள் ஒன்றாக இணைக்கப்படும் என்று முன்பு கொடுத்த உத்தரவாதத்தைச் செயல்படுத்த முன்வருவாரா?

குறைந்த பட்சம் இந்த மூன்று அம்சங்களுக் காவது பச்சைக் கொடி காட்டட்டும்; அதற்குப் பிறகு - ஒன்றுபட்ட இலங்கையில்தான் தமிழர்கள் வாழ  விரும்புகிறார்கள் என்பதைப் பேச முயற்சிக்கட்டும்!

                    ----------------------------"விடுதலை” தலையங்கம் 21-5-2013

இணைப்பில்...