9.7.09

மைக்கேல் ஜாக்சனின் ஆவி நடமாடுகிறதா

ஜாக்சன் ஆவி

பிரபல பாப் இசைப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் மரணம் அவருடைய இரசிகர்கள் மத்தியில் உலக அளவில் பெரும் அதிர்வினை ஏற்படுத்தியுள்ளது. அவரது மற்றொரு பக்கம் எப்படியிருந்தாலும் பாப் இசையில் முடிசூடா மன்னராகப் பவனி வந்தார்.

கடந்த ஒரு வார காலமாக ஏடுகளை ஆக்கிரமித்துக் கொண்டது அவரைப்பற்றிய செய்திதான்.

இதற்கிடையே சந்தடி சாக்கில் கந்தப் பொடி தூவும் மூட நம்பிக்கை மத வியாபாரிகளின் சேட்-டையும் தன் கைச்சரக்கைக் காட்டத் தொடங்கிவிட்டது.

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அவரது பங்களாவில் மறைந்த மைக்கேல் ஜாக்சனின் ஆவி நடமாடுகிறதாம். இப்படி ஒரு கட்டுக்கதையை அவிழ்த்துவிட்டுள்ளார்கள்.

மைக்கேல் ஜாக்சனுக்கு இருக்கும் உண்மையான புகழும், பெருமையும் போதாதா? அவர்மேல் ஒரு தெய்வீக மூட சரக்கை ஏற்றிதான் வித்தை காட்டவேண்டுமா?

இதில் என்ன வேடிக்கை தெரியுமா? பங்களா முழுவதும் படம் எடுத்த வீடியோ கலை-ஞர்களுக்கோ, பேட்டி கொடுத்த மைக்கேல் ஜாக்சனின் உடன்பிறப்பு ஜெர்மைன் என்பவருக்கோ ஆவி என்று அளந்து கொட்டும் அந்த நிழல் உருவம் தெரியவில்லையாம்!

நிழல் உண்மையாக இருந்தால், அதனைக்கூட வீடியோ துல்லியமாகப் படம் எடுத்துக்கொடுத்து விடுமே.

மக்கள் மத்தியில் கடவுள், மதம், வழிபாடு போன்ற மூடச்சரக்குகள் எடுபடவில்லை. கிறித்துவ நாடுகளில்கூட சர்ச்சுக்குச் செல்லும் மக்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாகப் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. சர்ச்சுகள் விலைக்குக் கிடைக்கும் என்று விளம்பரப் பலகைகள் தொங்க ஆரம்பித்துவிட்டன!

நெருக்கடி நிலைக்கு ஆளாகியிருக்கும் மத நிறுவனங்களைக் காப்பாற்றிக் கொள்ள, புகழ் பெற்ற ஒருவரின் பெயரை மோசடியாகப் பயன்படுத்தி தெய்வீகத்துக்கு முட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் இதற்குள் இருக்கும் சிதம்பர இரகசியமாகும்.

திராவிடர் கழகத் தோழர் நாகர்கோவில் புவனன் ஒருமுறை கூறியதுபோல உண்மையான ஆவியில் இட்லியாவது வேகும், மதவாதிகள் கூறும் அந்த ஆவி அதற்குக்கூடப் பயன்படாது என்று பளிச்சென்று சொன்னாரே!

மைக்கேல் ஜாக்சனுக்கு மட்டும்தான் ஆவி உண்டா? செத்துப் போகும் ஒவ்வொருவருக்கும் ஆவி உண்டா?

பதில் சொல்வார்களா பக்தக்கே()டிகள்?

-------------மயிலாடன் அவர்கள் 9-7-2009 "விடுதலை"யில் எழுதிய கட்டுரை

8.7.09

"கடவுள்" என்ற எண்ணமே செயற்கையானது!


கடவுள் அவசியமா?

கடவுள் இருக்கிறதா? இல்லையா? என்பது ஒருபுறமிருக்கட்டும்.

மனிதனுக்கு (ஆறு அறிவு, பகுத்தறிவு, சிந்தனா சக்தி கொண்ட மனிதனுக்கு) கடவுள் அவசியமா என்பது பற்றி மனிதன் சிந்திக்க வேண்டும். மனிதன் இன்று கடவுளைப்பற்றிச் சிந்திக்கிறான். கடவுளை வணங்குகிறான் என்றால் அவனது பெற்றோர் பயிற்சி, சுற்றுச்சார்பு, பழக்க வழக்கம் அவற்றினால் ஏற்பட்ட எண்ணங்கள், ஆசைகள் முதலியவைகளால் அல்லாமல் வேறு எதனால் கடவுளைக் கருதுகிறான், வணங்குகிறான் என்பது பற்றி நீங்களே சிந்தித்துப் பாருங்கள்!

கடவுள் என்பது, மதங்கள் போன்று செயற்கைப் பண்டம் என்பது மாத்திரமல்லாமல், கடவுள் எண்ணமே செயற்கை எண்ணம் அல்லாமல் இயற்கையாகத் தோன்றிய எண்ணமென்று யாராவது சொல்ல முடியுமா?

கிருத்தவர் வீட்டில் பிறந்தவன் கிருத்தவன் இஸ்லாம் வீட்டில் பிறந்தவன் இஸ்லாம் (மகமதியன்), பவுத்தன் வீட்டில் பிறந்தவன் பவுத்தன், கடவுள் இல்லை என்கின்ற நாத்திகன் வீட்டில் பிறந்தவன் நாத்திகன். பிறப்பும் அதுபோலவே; இந்தியாவில் பிறந்தவன் இந்தியன், அய்ரோப்பாவில் பிறந்தவன் அய்ரோப்பியன். அதுபோலவே தமிழ் பேசுபவன் வீட்டில் பிறந்தவன் தமிழ் பேசுகிறான். கன்னடம் பேசுபவன் வீட்டில் பிறந்தவன் கன்னடம் பேசுகிறான். துருக்கன் வீட்டில் பிறந்தவன் துரு(துலு)க்கு பேசுகிறான். இவை போன்று தான் ஒருவன் கடவுள் - மதம் - நாடு- மொழி உடையவனாகிறான். இவற்றுள் எதுவும் இயற்கையல்ல; அதாவது தானாக ஏற்பட்டு தானாக வந்து புகுந்ததல்ல.


இவற்றுள், எதுவும் மனிதனுக்கு இயற்கையானதுமல்ல என்பதோடு, குறிப்பிட்ட எதுவும் மனிதனுக்கு தனிப்பட்ட அவசியமானதுமல்ல. சந்தர்ப்பம் போல் சரி செய்து கொள்ள வேண்டியதேயாகும். இவற்றுள் எதையும் மனிதன் மாற்றிக் கொள்ளலாம். எது இல்லாவிட்டாலும் மனிதன் வாழலாம். அது போலத்தான் மனிதன் கடவுள் (எண்ணம்) இல்லாவிட்டாலும் வாழலாம். உலகில் கோடிக்கணக்கான பேர்கள் கடவுள் இல்லாமல் வாழ்கிறார்கள்.

கடவுள் நம்பிக்கையுள்ள மக்களிலும் ஒருவர் கூடக் கடவுளை கடவுள் (சொல்லப்பட்டிருக்கிற) சக்திப்படி நம்புவதில்லை.

எப்படிப்பட்ட யாரும் தம் சக்திப்படி, தம் செய்கைப்படி, தம் எண்ணப்படி, தமக்கு ஏற்பட்ட வாய்ப்புப்படி, அதாவது எதிர்பாராத ஏற்பாடு இல்லாத வாய்ப்புப்படித்தான் பலன் அனுபவிக்கிறார்கள்.

வாய்ப்பு என்பதை சிலர் (அது தான்) கடவுள் செயல் என்று சொல்லலாம்.

வாய்ப்பு என்பது, ஒரு சந்தைக்கு, ஒரு காட்சிக்கு, காட்சிக் கூட்டத்திற்கு ஒருவன் போகிறான்; அங்கு பெரும் கூட்டமாக மக்களைப் பார்க்கிறான். அப்பெருங் கூட்ட மக்களும் (அங்கு வந்தவர்கள், போகிறவர்கள், உள்ளவர்கள்) அவனை சந்திப்பது போல்தான். இவர்களில் அவனோ, மற்றும் அங்கு வந்தவர்களோ ஒருவரையொருவர் பார்க்க முன் ஏற்பாடு செய்து கொண்டு அங்கு வரவில்லை. சென்ற காரணத்தால் ஒருவரையொருவர் சந்திக்க நேருகிறது. இதுதான் வாய்ப்பு என்று சொல்வதாகும். அகஸ்மாத்தாக நேர்ந்தது என்றும் சொல்வதாகும். இவையெல்லாம் குறிப்பிட்ட அமைப்பு ஆகுமோ?

சந்திப்பது என்பது மனிதனை மாத்திரமல்ல. ஈ, எறும்பு, கொசு, ஆடு, மாடு, எருமை, யானை, குதிரை, அரசன், திருடன், கொலைக்காரன் முதலிய அநேக ஜந்துக்களைக் காண்கிறோம். அவைகளால் தொல்லைப்படுகிறோம். அவையெல்லாம் முன்னேற்பாடு, தலைவிதி, அமைப்பு, கடவுள், செய்தது என்பதாகுமா? இவற்றிற்கெல்லாம் "நேர்ந்தது" என்பதல்லாமல் கடவுள் காரணமாக இருக்க முடியுமா? அப்படியானால் அவற்றிற்கு, கடவுளுக்குக் காரணம் வேண்டாமா? அந்த ஜீவப்பிராணிகளுக்குக் காரணம் வேண்டாமா? வெள்ளம் வந்து நாசம் ஏற்பட்டது, இடி விழுந்து நாசம் ஏற்பட்டது, திருடன் வந்து நாசம் ஏற்பட்டது, ரயில் விபத்தில் நாசம் ஏற்பட்டது, பஸ் ஏறி நாசம் ஏற்பட்டது என்பவை போன்ற காரியங்களுக்குக் காரணம் அமைப்பு முன்னேற்பாடு தலைவிதி இருக்க முடியுமா? இவற்றால் மனிதனுக்கு மாத்திரமல்லாமல் மிருகங்கள் முதலிய ஜீவன்களுக்கு வீடு வாசல் முதலிய கட்டிடங்களுக்கு ஏற்படுகிற நாசங்களுக்கு அவைகளுக்கு அமைப்பு, தலைவிதி, கர்ம பலன் இருக்க முடியுமா? எனவே, இவற்றில் கடவுளுக்கோ, கடவுள்களுக்கோ என்ன வேலை? ஏனந்த வேலை? இதை எப்படி மனிதன் தெரிந்து கொள்வது?

கடவுள் நம்பிக்கையுள்ள மக்களே இப்படிப்பட்ட நாசவேலைக்கு ஆளாகிறார்களே! அது ஏன்? கடவுள் நம்பிக்கையால் ஏதாவது பாதுகாப்பு ஏற்படுகிறதா? அல்லது மனிதனாவது கடவுளை நம்பி பாதுகாப்புச் செய்து கொள்ளாதவனாக இருக்கிறானா? யாவும் கடவுள் செயல் என்று வெறியோடு கடவுளை நம்புகிறவனுக்கே கடவுள் என்ன செய்யப் போகிறார் என்பது தெரிவதில்லையே?

இப்படிப்பட்ட நிலையில், கடவுள் இல்லையென்று ஒருவன் சொன்னால், உண்டு என்று கூற மனிதன் தான் முயற்சிக்கிறானே ஒழிய, "நான் இருக்கிறேன்" என்று சொல்ல, காட்ட ஒரு கடவுளையும் காண முடியவில்லையே!

இது மாத்திரமா? கடவுளையே திருடிக்கொண்டு போகிறான், திருடன்; கடவுள் மனைவியின் தாலியையும், சீலையையும் திருடிக் கொண்டு போகிறான். பூசாரி, இதைத் தடுக்கவே கடவுள் செயலால் முடியவில்லையென்றால் மனிதனுக்கு கடவுள் எதற்காக வேண்டும்? எதற்காக வேண்டியதாய் இருக்கிறது?

அறிவைக் கொண்டு சிந்தித்துப்பார்!


--------------------"உண்மை" 14-3-2009 இதழில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய கட்டுரை.

பார்ப்பனர் தமிழரை வென்றது எப்படி? - 3



இந்திய நாகரிகம் தமிழ் நாகரிகமே


மேனாட்டறிஞருட் பலர் வடமொழி நூல்களையே படித்து, அவற்றுட் சொல்லியிருப்பதையெல்லாம் மறைநூற் கூற்றாகக் கொண்டு, ஆரியரே இந்தியாவில் நாகரிகத்தைப் பரப்பினர் என்று கூறுகின்றனர். ஆரியர்க்கு முன்னைய இந்திய நிலைமையையும், தமிழரின் தனி நாகரி கத்தையும், ஆரியரின் ஏமாற்றுத் தன்மையையும் அவர் கவனிக்கிறதில்லை. ரைஸ் டேவிட்ஸ் என்பவர், தமது ‘புத்த இந்தியா’ என்னும் நூலின் முகவுரையில், பிராமண நூல்களையே அளவையாகக் கொள்ளுகிறவர்கள் உண்மையைக் காணமுடியாமையைக் குறிப் பிடுகின்றார்.


இந்திய நாகரிகம், தமிழ் அல்லது திரவிட நாகரிகமேயென்று பின்னர் நூலில் விளக்கப்ப டுமாயினும் இங்கு ஒரே ஒரு செய்தியை மட்டும் கூற விரும்புகின்றேன். பார்ப்பனர் தங்களுக்குக் கூறிக்கொள்ளும் உயர்வுகளுள், ஊனுண்ணாமையும் ஒன்றாகும். ஆரியர் இந்தியாவிற்கு வந்த புதிதில், பலவகை விலங்குகளையும் கொன்று தின்றமைக்கு, அவர்களின் மறைநூலும் அறநூலுமே சான்றாகும். வடமொழியாரியரின் இனத்தினரான மேனாட்டாரியரெல்லாம் என்றும் ஊனுண்பவரே. அவரினின்றும்

பிரிந்துவந்த இந்திய ஆரியர்,இங்கு வந்த பிறகே திரவிடரைப்பின்பற்றி, ஊனுண்பதை ஒருவாறு நிறுத்தினர். இன்றும் வடநாட்டுப் பார்ப்பனர் ஊனுண்பதை முற்றும் ஒழிக்கவில்லை.

முட்டையும் மீனும் அவர்க்கு மரக்கறியின் பாற்பட்டனவாகும். தென்னாட்டுப்
பார்ப்பனரும், வேள்வியில் விலங்குகளைக் கொன்றுண்ணலாம் என்னும் கொள்கையுடையவரே; மேலும், தட்பவெப்பநிலை வேறுபட்ட விடத்தும்,நோயுற்றவிடத்தும் பெரும்பாலும் ஊனுண்டணும் நிலையினரே. பிரிவினையும், பார்ப்பனவுயர்வும். சைவ வேளாளரென்னுந் உயிர்க்கிறுதிவரினும் ஊனுண்ணார். சைவ மதத்தில் ஊனுண்ணாமை விதிக்கப்பட்டிருத்தல் பற்றி, சைவம் என்னும் மதப்பெயருங்கூட ஊனுண்ணாமையைக் குறிப்பதாகும். சைவாள் என்றும், சைவர் என்றும் இன்றும் சிறப்பித்துச் சொல்லப்படுபவர் தனித் தமிழரே.


பார்ப்பனர் ஊனுண்டமைக்கு இரு சான்றுகள் தருகின்றேன்:

(1) அகத்தியர் தென்னாட்டிற்கு வந்தபோது,வில்லவன் சமைத்தளித்த ஆட்டிறைச்சியை

உண்டார்.


(2) கபிலர் தாம் ஊனுண்டதைப் பின்வரும் புறநானூற்றுச் செய்யுளில், தாமே குறிக்கின்றார்:

“புலவு நாற்றத்த பைந்தடி

பூநாற் றத்த புகைகொளீஇ யூன்றுவை

கறிசோ றுண்டு வருந்துதொழி லல்லது

பிறிதுதொழி லறியா வாகலி னன்றும்

மெல்லிய பெரும தாமே...

செருமிகு சேஎய்நிற் பாடுநர் கையே” (புறம் 14)


இது “சேரமான்செல்வக்கடுங்கோ வாழியாதன் கபிலர் கைப்பற்றி, ‘மெல்லியவா
மால் நுங்கை’ எனக் கபிலர் பாடியது”

‘உப்புக்கண்டம் பறிகொடுத்த பாப்பாத்தி
போல’ என்னும் பழமொழியும் இங்கு நோக்கத் தக்கது.


இவற்றினின்றும், ஊனுண்ணாமை தமிழர் ஒழுக்காறே என்பது புலனாகும்.


ஒவ்வொரு நாட்டிலும் அது எத்துணை நாகரிகமடைந்திருப்பினும் நாகரிகம், அநாகரி-
கம் அல்லது உயர்ந்தது, தாழ்ந்தது என்னும் இரு கூறுகள் அருகருகே இருந்துகொண்டே யிருக்கும். தமிழ்நாட்டில் அங்ஙன மிருப்பவற்றுள் ஒவ்வொரு வகையிலும் உயர்ந்ததையே தெரிந்து கொண்டனர் பார்ப்பனர். அதனாலேயே உயர்வாகவே காணப்படுகின்றனர்.

பார்ப்பனர் தமிழரிடத்தில் நாகரிகம் பெற்றவரேயன்றித் தாம் அவர்க்குத் தந்தவரல்லர்;
தமிழரிடத்தினின்றும் தாம் பெற்ற நாகரிகத்தையே ஆரியப் பூச்சுப்பூசி வேறாகக்
காட்டுகின்றனர். ஆரியப் பூச்சாவது குலப் பெரும்பாலும் ஊனுண்டணும் நிலையினரே. பிரிவினையும், பார்ப்பன வுயர்வும். தமிழர் ஆரியரிடத்தினின்று நாகரிகம்
பெற்றவராயின், ஆரியர் வருமுன் தலைசிறந்த நாகரிகத்தை யடைந்திருந்து, அவர் வந்தபின் ஏன் வரவரத் தாழ்ந்து வரவேண்டும்?
ஆகையால், அக் கொள்கை உண்மைக்கும், இயற்கைக்கும் மாறானதென்று விடுக்க.

பார்ப்பனர் மதிநுட்பமுடையவர் எனல்


பார்ப்பனர் இதுபோது மதிநுட்பமுடையவ ரெனல் உண்மையே. ஆனால், அது எதனால்
வந்தது? அய்யாயிரம் ஆண்டுகளாகப் பார்ப்பனருக்குக் கல்வியே குலத்தொழிலாயிருந்து
வருதலால், பிறப்பிலேயே அவர்க்குக் கற்குந்திறன் சிறப்பு வாய்ந்துள்ளது. “குலவித்தை கல்லாமற் பாகம் படும்” என்றார் முன்றுறையரையனார்.

“மகனறிவு, தந்தையறிவு” என்றபடி ஒரு தலைமுறையிலேயே குலக் கல்வித் திறமை பிறப்பிலமைகின்றது. அங்ஙனமாயின், 5000 ஆண்டுகட்கு அத் திறமை எவ்வளவு பெருகியி ருக்கவேண்டும்? தமிழரோ, சென்ற 2000 ஆண்டுகளாக ஆரிய வர்ணவொழுக்கத்தால் தாழ்த்தப்பட்டு உயர்தரக் கல்வியை இழந்தவர்கள். ஆங்கிலேயர் வந்த பிறகே, ஆங்கிலத்தின் மூலமாய்க் கண்திறக்கப்பட்டுச் சென்ற இரண் டொரு நூற்றாண்டுகளாக உயர்தரக் கல்வி கற்று வருகின்றனர். அதற்குள் எவ்வளவோ முன்னேற்ற
மடைந்துவிட்டனர். இன்னும் இரண்டொரு நூற்றாண்டுகள் தொடர்ந்து கற்பின் தமிழர் தம்
முன்னோரின் நுண்ணறிவைப் பெறுவது திண்ணம். எந்தக் குலத்தையும் தலைமுறைக்
கல்வியால் அறிவிற் சிறந்த தாக்கலாம். கல்வி ஒருவரின் அல்லது குலத்தாரின் பங்கன்று.

--------------- தேவநேயப் பாவாணர்- “ஒப்பியன் மொழி”, நூல் பக்கம் 43-51

மகாவிஷ்ணு அவதாரங்கள் எடுத்தது எதற்கு? -8,9,10



மகாவிஷ்ணு பத்து அவதாரங்கள் எடுத்தானாம்.

இதில் சிவனும், பிரம்மாவும் ஏன் அவதாரம் எடுக்கவில்லை என்று தெரியவில்லை.

மகாவிஷ்ணு அவதாரம் எடுத்தது எல்லாம் `பாரத’ பூமிக்குள் மட்டும்தான். அமெரிக்காவிலோ, ஜப்பானிலோ, அண்டார்ட்டிகாவிலோ ஏன் அவதாரம் எடுக்கவில்லை என்று இதுவரை இந்து மதாபிமானிகள் யாரும் பதில் சொல்லவேயில்லை.

*****************************************************************************


8. பலராம அவதாரம்

கதை
: பூமாதேவியானவள் பசு மாடு உருவத்துடன் விஷ்ணுவிடம் வந்து `பூமியில் உள்ள துஷ்டர்களையும், கொலை பாதகர்களையும் என்னால் சுமக்க முடியாது; அதனால் அவர்களையெல்லாம் அழித்துவிட வேண்டும், என்று முறையிட்டாள். அதனை ஏற்று பலராம அவதாரம்.


கேள்வி: துஷ்டர்களைத் திருத்திட கடவுளிடம் நற்சிந்தனைகளும், நல்லுபதேசங்களும் கிடையாதா? அவன் கிடக்கிறான் குடிகாரன் எனக்கு இரண்டு மொந்தை போடு என்பதுபோல, கொலை பாதகர்களை அழிக்கவேண்டும் என்பதற்காகக் கடவுளே கொலை பாதகத்தில் ஈடுபடுவது எந்த ஊர் நியாயம் - தர்மம்?

சரி, இப்பொழுது நாட்டில் எத்தனை எத்தனையோ துஷ்ட காரியங்கள் நடந்துகொண்டு இருக்கின்றனவே, பூமாதேவியின் கடமை என்ன? தன் புருஷனிடம் சென்று விண்ணப்பம் ஏன் போடவில்லை?

9. கிருஷ்ணாவதாரம்

கதை: மதுரை மாநகரில் கம்சன் என்னும் அரசன் செய்து வந்த கொடுமைகளையும், அஸ்தினாபுரியை அரசாண்டு வந்த துரியோதனாதிகள் செய்த கொடுமைகளையும் பொறுக்க முடியாமல், பூதேவி மகாவிஷ்ணுவிடம் முறையிட்டதால், அவள் கஷ்டத்தைப் போக்க வாசுதேவருக்கும், ரோகிணிக்கும் புத்திரனாய் பிறந்து, தாய் மாமனாகிய கம்சனையும் கொன்று, பாண்டவர்களையும், கவுரவர்களையும் சூதினாலும், தந்திரத்தினாலும் அவர்களுக்குள்ளேயே சண்டையிடுமாறு செய்து குருசேத்திரப் போரில் பதினெட்டு நாளில் ஆயிரக்கணக்கானோரை மடியச் செய்து பூமிப் பாரத்தைத் தீர்த்து வைத்தான்.



கேள்வி
: சூதினாலும், தந்திரத்தாலும் ஒருவரை ஒருவர் மோதவிடுவது கீழ் மக்கள் செயல் அல்லவா? இவனை கிருஷ்ணபரமாத்மா என்று போற்றுகிறவர்களின் யோக்கியதைதான் என்ன?

இந்தக் கிருஷ்ணனின் யோக்கியதை இதோடு போய்விடவில்லையே! சின்ன வயதில் வெண்- ணெய்யைத் திருடி வாலிப வயதில் பெண்களைத் திருடிய கள்வனாயிற்றே.

இவன் கடவுளா? காமாந்தகாரனா?

10. பவுத்த அவதாரம்

கதை: அசுரர்கள் சிவ பக்தர்களாக இருப்பதாலும், அவர்களின் மனைவிமார்கள் கற்புக்கரசிகளாக இருப்பதாலும், அவர்களை வெல்ல முடியவில்லையாம். அதனால் தேவர்கள் விஷ்ணுவிடம் முறையிட்டார் களாம்.


மகாவிஷ்ணு புத்தன் வேடமிட்டு அர்ச்சகர்களை சிவ பக்தர்களாகவிருக்கும் தன்மையிலிருந்து விடுவித்து, ஏமாற்றி அழித்ததாக கந்த புராணம் கூறுகிறது.

கேள்வி: கந்த புராணத்துக்கு விஞ்சியது எந்த புராணத்திலும் கிடையாது என்கிற பழ மொழியே கூட இருக்கிறது. வருணாசிரம ஹிந்து மதத்தை கொலைவேள்வி ஹிந்து மதத்தின் ஆணி வேரையே அசைத்துத் தூக்கி எறிந்த புத்தரையே மகாவிஷ்ணுவின் அவதாரம் ஆக்குகிறார்கள் என்றால், அயோக்கியத் தனத்துக்குப் பிறந்த மோசடிக்காரர்கள் இவர்கள் என்பதல்லாமல் வேறு என்ன?




சிவ பக்தர்களாக இருந்தாலும் அசுரர்களை அழிக்கவேண்டும் என்று சூது செய்கிறார்கள் என்றால், பார்ப்பனர்களின் எண்ணமெல்லாம் அசுரர்களை (திராவிடர்களை) அழிக்கவேண்டும் என்பதுதான் என்று இதன்மூலம் விளங்க வில்லையா?


இந்து மதத்திற்கு முழுக்குப் போட்டு புத்த மார்க்கம் தழுவினார் அண்ணல் அம்பேத்கர். அந்தப் புத்தரையே இவர்கள் இந்து மதத்தின் அவதாரம் ஆக்குகிறார்கள் என்றால், எத்தகைய அறிவு நாணயமற்ற கீழ்மக்கள்?



விஷ்ணு என்பது பொய்; அவதாரம் என்பது கற்பனை; அறிவுக்குப் பொருத்தமற்றது என்பது பக்தர்கள் உள்பட அனைவருக்கும் தெரிந்தது தான். பூமியைப் பாயாகச் சுருட்டுவது, மேருமலையை மத்தாகப் பயன்படுத்துவது என்பதெல்லாம் பைத்தியக்காரனின் உளறல் என்று தெரியாதா?


அதேநேரத்தில் இதன் பின்னணி என்ன? வரலாற்றுப் பார்வையோடு அணுகினால் ஒன்று தெரியாமற் போகாது.

ஆரியர்களுக்கும் - திராவிடர்களுக்கும் நடைபெற்ற போராட்டங்களை மையப்படுத்தி, பக்தியின் பெயரால் திராவிடர்களை காலா- காலத்திற்கும் இழிவுபடுத்தி அடக்க நினைத்து, ஆரியப் பார்ப்பனர்களால் புனையப்பட்ட குப்பைகள்தான் இவை.


பக்தி என்கிற காரணத்தால் புத்தியைப் பயன்படுத்த மறுத்து, ஆரியத்திற்கு அடிமை யானதுதான் திராவிடர் வரலாறு.

இந்தக் காலகட்டத்தில் தந்தை பெரியார் என்கிற மாபெரும் புரட்சியாளர் தோன்றி, ஆரியத்தின் மூல பலத்தை உலுக்கி எடுத்து, தன்மான வீர உணர்ச்சியையூட்டி புத்துணர்வால் திராவிடர்களை உருக்கி எடுத்தார் என்பதுதான் புதிய வரலாறு.


தீபாவளி என்பது திராவிடர்களை ஆரியர்கள் வீழ்த்தியதை நிரந்தரமாகப் பதிய வைக்கும் ஓர் ஏற்பாடு. இதனைத் திராவிடர்கள் உணரவேண்டாமா?

அசுரன் (திராவிடன்) மலர் வெளியிடுவதன் நோக்கமும் இதுதான்.

----------------------தொடரும்.."விடுதலை" அசுரன் (திராவிடன்) மலர் 2006 -இல் மின்சாரம் அவர்கள் எழுதிய கட்டுரை

7.7.09

அரசு அலுவலக வளாகங்களுக்குள் மத நடவடிக்கைகள் மதச் சின்னங்கள் இருக்கலாமா?


முடிவு?

சட்டப்படியான நிலையைப் பாதுகாப்பது என்ற ஒரு நிலை இருக்கிறதே அது எவ்வளவு பெரிய வருந்தத்தக்க நிலை!

நம் நாட்டில் இதுபோன்ற அதிசயங்கள் நடப்பது சாதாரணமானதே!

இந்திய அரசமைப்புச் சட்டம் 340 பிரிவின்படி அமைக்கப்பட்ட மண்டல் ஆணையத்தின் அறிக்கையை நாடாளுமன்றத்தில் வைப்பது ஒரு சட்டப்படியான நிலைதான்.

ஆனால், நம் நாட்டில் என்ன நடந்தது? மண்டல் குழுப் பரிந்துரையை நாடாளுமன்றத்தில் வைக்கவேண்டும் என்பதற்காகவே திராவிடர் கழகம் மாநாடு நடத்த வேண்டியிருந்தது;
போராட்டங்களை நடத்தவேண்டிய அவசியமும் ஏற்பட்டது.

இது வேறு எந்த நாட்டிலும் கேள்விப்படாத விசித்திரமான நிலைப்பாடு!

பார்ப்பனர்களுக்கு அவர்களின் வசதிக்குக் கேடாக இருக்கும் எதுவும் இத்தகைய தூக்குக் கயிற்றில் தொங்குவது தவிர்க்க முடியாததாகிவிடும்.


42 மாநாடுகளையும், 16 போராட்டங்களையும் திராவிடர் கழகம் நடத்தித்தானே மண்டல் குழுப் பரிந்துரைகளில் ஒன்றை (வேலை வாய்ப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு) செயலாக்க முடிந்தது.

பார்ப்பனர்களுக்குச் சாதகமான நிலை உருவாக்கப்படவேண்டும் என்றால், சட்டத்தின் குடலை உருவிக்கூட காரியம் சாதித்துக் கொள்ளத் தயங்கமாட்டார்கள். அய்.ஏ.எஸ். தேர்வில் திறந்த போட்டியில் வெற்றி பெற்று பிற்படுத்தப்பட்டோரை, பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு விழுக்காட்டில் ஒதுக்கித் தள்ளி, திறந்த போட்டியில் உள்ள அத்தனை இடங்களையும் சுளை சுளையாக விழுங்கியதை இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம்.

அரசு அலுவலக, வளாகங்களுக்குள், அரசுக்குச் சொந்தமான இடங்களில் எந்த மத சம்பந்தமான மத நடவடிக்கைகளும் இருக்கக்கூடாது; மதச் சின்னங்களை நிறுவக்கூடாது என்று திட்டவட்டமான ஆணையே இருக்கிறது; மத்திய அரசின் சுற்றறிக்கைகளும் இருக்கின்றன. ஆனால், அவற்றை யார் பொருட்படுத்துகிறார்கள்? நீதிமன்ற வளாகத்துக்குள்ளேயே இந்த சட்ட மீறல் இருக்கிறதே நீதிபதியே அந்த வளாகத்துக்குள் இருக்கும் குழவிக்கல்லுக்குமுன் (கோயில் சாமிக்கு) பஸ்கி எடுக்கிறாரே இந்த நிலையில் சட்டத்தை யார் மதிப்பார்கள்?

ஒவ்வொரு ஊரிலும் அரசுக்குச் சொந்தமான இடங்களில் கோயில் கட்டுவதும், திராவிடர் கழகத்தினரும், பகுத்தறிவாளர் கழகத்தினரும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளைச் சந்தித்து அரசு ஆணையைக் காட்டுவதும், வழக்கறிஞர் மூலமாக தாக்கீதுகளை அனுப்புவதுமாகத்தானே நடப்பு இருக்கிறது.

பட்டுக்கோட்டையில் நகராட்சிக்குச் சொந்தமான அண்ணா அரங்கு வளாகத்தில் கோயில் கட்டுகின்றனர். நகர திராவிடர் கழகத் தலைவர் மானமிகு எஸ். சின்னகண்ணு கழக வழக்கறிஞர் அண்ணாதுரை ஆகியோர் தடுக்க முயற்சிகளை எடுத்து வருகின்றனர். கோட்டாட்சியருக்கும் எழுத்துமூலமாகவே தெரிவித்துள்ளனர்.

ஓடிப்பிடித்து விளையாடுகிறார்கள். தந்தை பெரியாரின் மண் அமைதிப் பூங்காவாக இருப்பதை மதவெறியர்கள் விரும்பல்லை. பிரச்சினையை ஊதிவிடுகிறார்கள்.
இதனை அரசு புரிந்துகொண்டு மாவட்ட ஆட்சியர்கள்மூலம் உரிய சுற்றிக்கைகளை மீண்டும் அனைத்து அலுவலகங்களுக்கும் அனுப்பி சட்டத்தின் நிலையை உறுதிப்படுத்தவேண்டுமாய் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறோம்.


------------ மயிலாடன் அவர்கள் 5-7-2009 "விடுதலை"யில் எழுதிய கட்டுரை

உலக நாடுகள் - தூரப்பார்வை - மார்ஷல் தீவுகள்-மாரிடானியா-மோரிஷஸ்


மார்ஷல் தீவுகள்

பசிபிக் பெருங்கடலின் வடபகுதியில், ஆஸ்திரேலியாவுக்கு வடக்கே அமைந்துள்ள சிறு, சிறு தீவுக் கூட்டங்களை ஸ்பெயின் நாட்டுக்காரர்கள்தான் 16ஆம் நூற்றாண்டில் கண்டுபிடித்தனர். பிரிட்டிஷ் கப்பல் படைத் தளபதி கேப்டன் மார்ஷல் பெயர் அந்தத் தீவுக் கூட்டத்திற்கு 1788 இல் சூட்டப்பட்டது.

அய்.நா. மன்றத்தின் கட்டுப்பாட்டில் மார்ஷல் தீவுகளும் மரியானா, கரோலின் தீவுகளும் 1947இல் கொண்டு வரப்பட்டன. இந்தப் பகுதியைச் சேர்ந்த பிகினி மற்றும் எனவெடக் தீவுகளில் 1946 முதல் 1958 வரை அணு ஆயுதச் சோதனைகள் நடத்தப்பட்டன. இதனால் ஏற்பட்ட மாசுகளுக்கு இழப்பீட்டுத் தொகையாக ஓர் ஆயிரத்து 837 லட்சம் டாலர் தொகையை இத்தீவுகளுக்கு அய்.நா. மன்றம் தந்தது. பிகினி தீவிலிருந்து இடம் பெயரச் செய்விக்கப்பட்ட குடிகளுக்கான இழப்பீடாக 38 லட்சம் டாலர் தொகையும் அய்.நா. மன்றம் வழங்கியது.
1986இல் மார்ஷல் தீவுகளுக்கு சுய ஆட்சி உரிமை வழங்கப்பட்டது.

இத்தீவுகளின் பரப்பளவு 181.3 சதுர கி.மீ. மட்டுமே. இத் தீவுகளில் வாழும் மக்களின் எண்ணிக்கை 61 ஆயிரம் மட்டுமே. மார்ஷலிஸ் எனும் தனி மொழியை 98 விழுக்காட்டிற்கும் மேற்பட்ட மக்கள் பேசுகின்றனர். இம்மொழியுடன் இங்கிலீசும் ஆட்சி மொழியாக உள்ளன.
94 விழுக்காடு மக்களுக்கு மேல் கல்வியறிவு பெற்றவர்கள். அதிபராக கொப்ஸாய் ஹேசா நோட் என்பவர் 2004 முதல் இருந்து வருகிறார். இவரே ஆட்சியின் தலைவரும் கூட.


மாரிடானியா

15ஆம் நூற்றாண்டில் இந்த ஆப்ரிக்க நாட்டில் குடியேறிய மக்கள் சஹாரா பாலை நிலப் பகுதியில் இருந்து வந்தவர்களும் பெர்பெர் இனத்தவருமே. பின்னர் அரபியர்கள் இந்நாட்டுக்கு ஒட்டகப் பாதை வழியாக வந்து இந்த நாட்டுக்கும் மொராக்கோவுக்கும் தொடர்பு ஏற்படுத்தினர். இதனால் அரேபியக் கலாச்சாரக் கலப்பு ஏற்பட வாய்ப்பு உண்டானது.
1904இல் மாரிடானியா, பிரான்சு நாட்டின் குடியேற்ற நாடாகியது. 1920இல் பிரெஞ்ச் மேற்கு ஆப்ரிக்கா எனும் நாட்டின் பகுதியாகக் கருதப்பட்டது. செனகல் நாட்டில் இருந்தவாறு, ஆதிக்கவாதிகள் ஆட்சி செலுத்தினர். 1960இல் மாரிடானியா விடுதலை அடைந்தது.
வடஆப்ரிகாவில் வட அட்லாண்டிக் பெருங்கடல் கரையில் செனகல் நாட்டுக்கும் சஹாராப் பாலைவனத்தின் மேற்குப் பகுதிக்கும் இடையில் அமைந்துள்ள நாடு மாரிடானியா. இதன் பரப்பளவு 10 லட்சத்து 30 ஆயிரத்து 700 சதுர கி.மீ. ஆகும். இதன் மக்கள்தொகை 32 லட்சம். நூற்றுக்கு நூறு இசுலாமியர்கள்.

அரபி மொழியின் ஹஸ்ஸானியா பிரிவு ஆட்சி மொழி நாடாக உள்ளது. வோலோப் எனும் இனக் குழு மொழியும் ஆட்சி மொழி. பிரெஞ்ச் மொழியும் பேசப்படுகிறது. 42 விழுக்காடு மக்கள் மட்டுமே கல்வியறிவு பெற்றவர்கள். இசுலாமிய ஷரியத் சட்ட முறை-களும் பிரெஞ்ச் சட்ட முறைகளும் கடைப் பிடிக்கப்படு-கின்றன. குடியரசுத் தலைவரும் பிரதமரும் உள்ளனர்.
40 விழுக்காடு மக்கள் வறுமைக் கோட்டிற்கும் கீழ் இருப்பவர்கள். 20 விழுக்காட்டுக்கு மேல் வேலை கிட்டாதோர் உள்ளனர்.


மோரிஷஸ்

ஆப்ரிக்காவின் தென்முனையைக் கண்டு அதற்கு நன்னம்பிக்கை முனை எனப் பெயர் வைத்து விட்டுத் தன் பயணத்தைத் தொடர்ந்த வாஸ்கோடகாமா தற்செயலாகக் கண்டுபிடித்த தீவுதான் மோரிஷஸ். மனித நடமாட்டமே இல்லாத இந்தத் தீவுக்கு டச்சு நாட்டினர் சொந்தம் கொண்டாடினர். அவர்கள் நாட்டின் மன்னரான ஆரஞ்சு இளவரசரின் பெயரான மோரிஸ் என்ற பெயரால் இத்தீவை அழைக்கத் தொடங்கினர்.

1715இல் பிரான்சு நாட்டின் கிழக்கு இந்தியக் கம்பெனி இத்தீவுக்கு உரிமை கொண்டாடியது. 1720 முதல் இத்தீவில் குடியேறத் தொடங்கினர். லூயி துறைமுகத்தை அமைத்தனர். அங்கிருந்து இந்தியாவில் உள்ள பிரிட்டிஷாரைத் தாக்கத் திட்டம். மாற்றாக, ஆவணங்கள் மூலம் ஒப்பந்தம் செய்து கொண்டு வேலை வாங்கும் வேலை செய்யும் முறையைக் கொண்டு வந்தனர். இதனால் இந்தியாவில் இருந்து ஒப்பந்தத் தொழிலா-ளர்களாக ஆயிரக் கணக்கானோர் இறக்குமதி செய்யப்-படும் நிலை ஏற்பட்டது.

1926இல் மோரிஷசில் குடியேறி வாழ்ந்த இந்தியர்கள் அரசு மன்றங்களுக்குத் தேர்ந்து எடுக்கப் பட்டனர். 1957இல் உள்நாட்டு மக்களைக் கொண்டு நடத்தப்பெறும் சுயாட்சி முறை அறிமுகப்படுத்தப் பட்டது. கடைசியில் 1968 மார்ச் மாதம் 12 ஆம் நாள் மோரிஷஸ் தீவுக்கு விடுதலை வழங்கப்பட்டது.

மடகாஸ்கருக்குக் கிழக்கே இந்தியமாக்கடலில் இருக்கும் தீவு நாடான இதன் பரப்பளவு 2 ஆயிரத்து 40 சதுர கி.மீ. மட்டுமே. அகலேகா தீவுகள், கார்கடோஸ் கராஜோஸ் மணல் மேடுகள் ஆகியவற்றின் பரப்பும் இதில் அடக்கம். மக்கள் தொகை 12 லட்சத்து 41 ஆயிரம்.
இந்து மதத்தினர் 48 விழுக்காடு. ரோமன் கத்தோக்கர் 27 விழுக்காடு. கிறித்துவ பிற பிரிவினர் 9 விழுக்-காடு. இசுலாமியர் 16 விழுக்காட்டினர் உள்ளனர்.

கிரியோல் எனும் மொழி பேசுவோர் 80 விழுக்காடு. போஜ்புரி மொழி பேசுவோர் 12 விழுக்காடு. இங்கிலீஷ்-தான் ஆட்சி மொழி. 86 விழுக்காடு மக்கள் கல்வி-யறிவு பெற்றவர்கள். இந்நாட்டில் தமிழர்களும் உள்ளனர். தமிழ் பேசுவர்; ஆனால் எழுதப் படிக்கத் தெரியாது. இவர்களுக்குத் தமிழ் மொழி கற்பிக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன.
அதிபரும் பிரதமரும் தேர்தலில் தேர்ந்து எடுக்கப்படுகின்றனர். 10 விழுக்காடு மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளனர். பத்து விழுக்காட்டுக்கு மேற்பட்டோர் வேலை கிட்டாதவர்கள்.

-------------------"விடுதலை" 7-7-2009

ஈழத்தமிழர்களுக்கு முதல் இடம் கொடுத்தது பெரியார் திடல்


பி.ஜே.பி மத்தியில் ஆட்சிக்கு வந்திருந்தால்
மக்களை அழிவுப்பாதையில் அல்லவா தள்ளியிருப்பார்கள்
திருப்பூரில் தோழர்களிடம் தமிழர் தலைவர் விளக்கம்


பி.ஜே.பி மத்தியில் ஆட்சிக்கு வந்திருந்தால் அழிவுப்பாதைக்கல்லவா கொண்டு வந்திருப்பாகள் என்று திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.

முதல் குரல் விடுதலைதான் கொடுத்தது


வி.அய்.சுப்பிரமணியம் அவர்களுக்கு சுயமரியாதையை ஏற்படுத்தியவர் தந்தை பெரியார் அவர்கள்தான் நம்முடைய இயக்கம் தான்.

அப்படிப்பட்ட ஒரு பெரிய காரியத்தை விடுதலை ஏடு தொடர்ந்து செய்து கொண்டிருக்கக் கூடிய நிலையிலே தமிழ்ப் புலவர்களுக்கு அந்த உணர்ச்சி. நமக்கு ஒவ்வொரு காரியத்திற்கும் அவ்வப்பொழுது தேவையானது. சமூக நீதியைப் பற்றி குமாரராஜா சொன்ன மாதிரி அல்லது மற்ற நண்பர்கள் சொன்ன மாதிரி ஆபத்து எப்பொழுது வருகிறதோ அதை தடுக்கின்ற ஆயுதம் தான் விடுதலை. நமக்கு free fighter மாதிரிதான். கபில்சிபல், எஸ்.எஸ்.-எல்.சி கூடாது உடனே எடுத்துவிட வேண்டும். அதே மாதிரி இந்தியா பூராவும் ஒரே கல்வி போர்டாக இருக்க வேண்டும் என்றால் மாநிலக் கல்வி என்னாவது என்று முதல் குரல் விடுதலையினுடைய குரலாகத்தான் இருந்தது.

இதை எத்தனை பேர் படித்தீர்களோ தெரியவில்லை. முக்கியமானவர்களை, பெரியவர்கள் அந்தச் செய்தியைப் படித்துவிட்டு, நல்ல கருத்துகளை நீங்கள் தான் வெளியாக்கியிருக்கின்றீர்கள் என்று இன்றைக்கு மற்றவர்கள் சொல்லுகிறார்கள்.
ஆகவே, இதனுடைய அடிப்படையை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதே போலத்தான் நமக்கு முக்கியமான ஒரு அடிப்படை ஈழப்பிரச்சினை.

ஈழத்தமிழர்களுக்கு முதல் இடம் கொடுத்தது பெரியார் திடல்

இந்த ஈழப்பிரச்சினையைத் துவக்கி, இன்னும் கேட்டால் மற்றவர்களுக்கு விடுதலைப்புலிகள், பிரபாகரன் என்றால் யார் என்று தெரியாத காலத்திலே, அவர்களுக்கு முதல் இடம் கொடுக்கப்பட்டது எது என்றால் _ பெரியார் திடல் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆக நமக்கில்லாத அக்கறை மற்றவர்களுக்கு என்ன? நமக்கு ஒன்று மட்டுமே பிரச்சினை அல்ல. மற்றவர்களைப் போல வியாபாரச் சரக்கல்ல. நமக்கு அது மட்டுமே ஒரே ஒரு தத்துவம் கிடையாது. அதைக் காட்டிக் கொண்டே சொல்லிக்கொண்டு வருவதற்கு நமக்கு பல நிலைகள் உண்டு.

மதவெறி ஆட்சி அமைந்துவிடக்கூடாது அடித்தளத்திற்கே ஆபத்து. மாநிலத்தில் ஆரியம் வெற்றி பெற்று விடக்கூடாது. நம்மால் எதுவுமே செய்ய முடியாது. இன்றைக்கு ஜெயலிதாவோ மற்றவர்களோ வந்திருந்தால் கனவு நனவாகியிருக்குமா?

தைமுதல்நாள் கலைஞர் ஆட்சியில்தான்

கலைஞர் வந்த பிற்பாடு தானே. இந்த காரியம் வந்தது. தை முதல்நாள் தான் தமிழ்த்திருநாள் தமிழர் ஆண்டு புத்தாண்டு என்றெல்லாம் சொல்லக்கூடிய அளவுக்கு வந்தது இந்த ஆட்சியினால்தானே.

தமிழ் செம்மொழி என்று வந்தது இந்த ஆட்சியினால் தானே. ஆக கலைஞர் அவர்கள் தன்னை மானமிகு சுயமரியாதைக்காரன் என்று தன்னை வர்ணித்துக் கொண்டவர்.
ஆக அப்படிப்பட்டவர் முதல்வராக இருக்கிறார். என்றால் விடுதலை ஏடு பலமான கருவி, பலமான ஒரு கேடயம். இங்கே நண்பர்கள் அழகாகச் சொன்னார்கள். அதற்கு மேல் விளக்கம் சொல்ல வேண்டியதில்லை.

முதல் கிளர்ச்சியை நாம் செய்தோம்

முதன்முதலில் ஈழத்தமிழர்களுக்குத் தொல்லை வருகிறது, சங்கடங்கள் வருகிறது என்கிற செய்தியை தமிழ் நாட்டிலே யாருமே பேசாத பொழுது, அதற்காக முதல் கிளர்ச்சியை செப் 23 இல் தொடங்கியது நாம் தாம்.

அதற்கப்புறம் தான் கம்யூனிஸ்ட்கள் எல்லாம் உண்ணாவிரதம் இருந்தார்கள். பத்திரிகைகாரர்-களுக்கு என்ன நினைப்பு? நாம் இவர்களுக்கு விளம்பரம் கொடுக்கக் கூடாது திராவிடர் கழகத்திற்கு விளம்பரம் கொடுக்கக்கூடாது என்று பத்திரிகைகாரர்களும் ஊடகத்துறையினரும் கருதுகின்றார்கள்.

இதையும் தாண்டித்தான் வளருகிறோம்

இதையும் தாண்டித்தான் நாம் வளர்கிறோம். நம்முடைய எதிரிகள் கொடுக்கிற விளம்பரம் அவ்வளவு தான். இப்பொழுது கூட பார்த்தீர்களேயானால் சாருவாகா என்று சொன்னால் இந்து மதத்தில் கடவுள் மறுப்பாளன் நாத்திகன் என்று பொருள்.

சாருவாகாவினுடைய புத்தகம் ஒன்று கூட கிடையாது. சாருவாகா தத்துவம் அவன் நாத்திகன் இப்படி ஒன்று கூட கிடையாது. இதை எப்படிக் கண்டு பிடிப்பது என்றால், இந்த சாருவாகனைப் பார்ப்பான் திட்டியிருக்கிறான் பாருங்கள். அதைப்பற்றி சாருவாகன் என்னென்ன சொன்னான் என்பது வெளியே வந்துவிட்டது. அதைவைத்துதான் கண்டுபிடிக்கின்றோம். அது மாதிரி நம்மைத் திட்டுகிறார்கள் பாருங்கள் அதன் மூலம் நமக்கு விளம்பரம் கிடைக்கிறது சில இடங்களில்

திமுக வியந்தது

ஓகோ, இப்படி எல்லாம் ஓர் ஆள் இருக்கிறார் போலிருக்கிறது. அவர்களைப் போய் நாம் சந்திருக்கிறோம் என்று வெளிநாட்டுக்காரர்கள் கெட்டிக்காரர்களாக இருக்கிறவர்கள் இருக்-கிறார்கள்.

ஆகவே அந்தக் கொள்கை அடிப்படையிலே பார்க்கும் பொழுது ஈழத்தமிழர்களுடைய பிரச்சினையை நாம் தாம் முதலில் எடுத்தோம். அடுத்து முதல்வர் கலைஞர் அவர்கள் மயிலை மாங்கொல்லையில் பொதுக்கூட்டம் போட்டார். ஈழத்தமிழர்களுடைய பிரச்சினையை உணர்ச்சிப் பூர்வமாகப் பேசினார். திராவிடர் கழகம் தான் சி.டியாகப் போட்டு எல்லா இடங்களிலும் நாம் ஒலிபரப்பினோம். திமுகவே வியந்தது. அவருக்கே வியப்பு. இவ்வளவு சிறப்பாக இந்தப் பணி இருக்கிதே என்று.

தி.க. தி.மு.க இரட்டைக் குழல் துப்பாக்கி

காரணம் என்னவென்றால், திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் இரட்டைக் குழல் துப்பாக்கிகள் என்று சொன்ன முறையிலே, நாம் அந்த முறையிலே தான் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றோம். அதே நேரத்தில் நாம் சுட்டிக்காட்ட வேண்டியவைகளை சுட்டிக்காட்டத் தவறுவதில்லை. அது எந்த ஆட்சியாக இருந்தாலும். நாம் யாருக்காகவும் விட்டுக்கொடுப்பதும் இல்லை.

கலைஞர் அவர்கள் நாம் எல்லோரும் ஓரணியில் இருக்க வேண்டும் என்று சொன்னார். அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டினார்.

கலைஞர் வரவில்லையென்றால் யார் வருவார்?

சிலர் நாடாளுமன்றத் தேர்தல் வாரப்போகிறது என்று அவர்கள் எல்லாம் தேர்தல் பக்கம் திரும்பினார்கள். நாம் ஈழத்துப் பக்கம் திரும்பினோம். அவர்களுடைய கவனமெல்லாம் தேர்தல் கண்ணோட்டமாக இருந்தது.

நம்முடைய கண்ணோட்டம் எல்லாம் ஈழத்தமிழர்களுடைய கொடுமை சங்கடங்கள் என்னவோ அதைப் பார்த்தது.

மற்ற அரசியல் அணியினரைப் பொறுத்த வரையிலே எப்படியும் கலைஞரை வீழ்த்த வேண்டும்; கலைஞர் கட்சி மறுபடியும் மத்தியில் ஆட்சிக்கு வரக்கூடாது. அப்புறம் அவர் வரக்கூடாது என்றால் யார் வருவார்கள்?

அவியல் வருமா?

அதிலே பார்த்தீர்களேயானால் ஒரு 31 பிரதமர்கள் இருந்தார்கள். இருந்தவர்கள் எல்லாம் பிரதமர்கள் தான். ஏனென்றால் கனவு காண்பதற்கு என்ன? அப்துல்கலாம் வேறு சும்மா சொன்னாலும் சொன்னார், கனவு காணுங்கள், கனவு காணுங்கள் என்று. மாணவர்கள் கனவு காணவேண்டும் என்பதை அவர் மனதில் வைத்துக்கொண்டு சொன்னார். ஆனால் அதைப் பார்த்து அரசியல்வாதிகள் கனவு காண ஆரம்பித்துவிட்டார்கள்.

31 பேர்களுக்கும் பிரதமர் கனவு தான்

அதனால் இருந்தவர்கள் பூராவும் என்ன நினைத்தார்கள் என்றால், நான் பிரதமர், நான் பிரதமர் என்று நினைத்தார்கள். மூன்றாவது அணியில் இருந்த 31 பேர்களுக்கும் பிரதமர் கனவுதான்.

நம்முடைய மருத்துவர் இருக்கிறார் பாருங்கள். எப்பொழுதுமே துல்லியமாக கவனிக்கக் கூடியவர். அவர் தமிழ்க் குடிதாங்கி. அந்தக் குடிதாங்கி தெளிவாகச் சொல்லிவிட்டார். ஜெயலலிதாவை பிரதமராக வைகோ முன்மொழிந்ததை நான் வழிமொழிகிறேன் என்று சொல்லிவிட்டார்.

அதன் பிறகு பார்த்தீர்களேயானால் அந்த அம்மையார் உண்ணாவிரதம் இருக்கிறார்கள். தா.பாண்டியன், மற்றவர்கள் உண்ணாவிரதம் இருந்த பொழுது இந்த அம்மையார் செய்தியாளர்களிடம் சொன்னார். இலங்கை அரசு தீவிரவாதத்தை ஒழிக்கப் பாடுபட்டுக்கொண்டிருக்கிறது. தீவிரவாதத்தை ஒழிக்க சுடுவார்கள்; சுட்டால் பல அப்பாவி மக்கள் சாவார்கள்; இதெல்லாம் சாதாரணம் தானே. இது போய் என்ன பெரிய விஷயம்.
ஜெயலலிதா சொன்னாரா? இல்லையா? அதுமட்டுமல்ல; ஈழம் என்று சொல்லாதீர்கள். இலங்கை என்று சொல்லுங்கள் என்று அந்த அம்மையார் பத்திரிகைக் காரரைப் பார்த்து சொன்னார். ஆனால், அதே அம்மையார் என்ன சொன்னார்கள்? தேர்தல் நெருங்க, நெருங்க அவர்களுக்கு ஒரு நப்பாசை. நாம் நன்றாகப் போட்டு பயன்படுத்தி விளைய வைத்திருந்தோம் பாருங்கள். இந்த விளைச்சலை சில பேர் ராத்திரியோடு ராத்திரியாக அறுத்துக் கொண்டு போய்விடுவார்கள். உழவன் கஷ்டப்பட்டு செய்திருப்பான்.

நாம் கண்ணீர் விடக்கூடியவர்கள்

நாம் ஒரு கொள்கைக்காக வைத்திருக்கின்றோம். உள்ளபடியே கண்ணீர் விடக்கூடியவர்கள். கிளிசரின் கண்ணீர் விடக்கூடியவர்கள் அல்லர். அரிதாரம் பூசிக்கொண்டு ஆக்ட் பண்ணக்கூடியவர்கள் நாம் அல்லர். அதனால் நமக்குத் தெளிவான சூழல் இருந்தது. எனவே நாம் தெளிவாகச் சொன்னோம். எல்லோரும் வாருங்கள் என்று திரும்பத் திரும்பக் கேட்டோம். அனைத்துக்கட்சிக் கூட்டத்தை முதலமைச்சர் கலைஞர் அவர்கள் கூட்டவில்லையா? அதிலே தான் துணிவாக முடிவெடுத்தார் திடீரென்று நாங்களே நினைக்கவில்லை.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிலை

பையிலே கையை விட்டு, பேனாவை எடுத்து முதலமைச்சர் எழுதினார். இந்தக் காரியத்தை செய்யவில்லையென்றால் உடனடியாகப் பதவி விலகுவது என்று சொன்னார்.
சி.பி.எம் கட்சியினர் உடனே சொல்லிவிட்டார்கள். எப்படிங்க எங்களால் உடனே சொல்ல முடியும். நாங்கள் பொலிட் பீரோ கூட்டத்தைக் கூட்டித்தான் முடிவு சொல்லமுடியும் என்று சொன்னார்கள். அதில் ஒன்றும் தவறில்லை.

நாங்களாக முடிவெடுக்க முடியாது. எங்களுடைய கட்சித் தலைமை டெல்லிதான் முடிவெடுக்கும். பிஜேபி மாதிரி மற்றவர்களும் வரவில்லை. இன்னும் சில பேர் பேசாமல் இருந்தார்கள். தா.பாண்டியன் மட்டும் நாங்கள் கேட்டு சொல்லுகிறோம் என்று சொன்னார். அ.தி.மு.க போன்றவர்கள் அனைத்துக்கட்சிக் கூட்டத்திற்கு வரவில்லை.

காங்கிரஸ்காரர்களும் இது எப்படிங்க எங்களால் முடியும்? என்று கேட்டார்கள். நான் தான் முதலமைச்சரிடம் தெளிவாகச் சொன்னேன். எல்லோரும் என்ன தீர்மானங்கள் என்று கேட்டார்கள். இராசா கொடுத்தார், கனிமொழி கொடுத்தார் என்றெல்லாம் பத்திரிகையில் வந்தது.

நான் முதலமைச்சரிடம் கேட்டேன்

நான் தான் முதலமைச்சரிடம் போய் கேட்டேன். இது சரியான முறை அல்ல. நீங்கள் ராஜினாமா கொடுத்துவிட்டு வெளியே வந்துவிட்டீர்களேயானால் எங்களை மாதிரியே சாலையில் நின்று கொண்டு தான் சொல்ல வேண்டும்.

நீங்கள் பதவி விலகினால் இப்பொழுது நீங்கள் ராஜினாமா கொடுத்துவிட்டால் மற்றவர்கள் சுலபமாக உட்கார்ந்து கொள்ளப் போகிறார்கள். ஈழத்தில் உள்ள மக்களுக்கு உணவு போக வேண்டும் என்று சொல்லுகின்றோம், மருந்து போக வேண்டும் என்று சொல்லுகின்றோம்.
நாங்கள் வெறும் ஆளாக இருந்து சட்டம் போடுவது சரி. ஆனால் செய்வதற்கு இங்கே ஆள் வேண்டுமா? இல்லையா? நீங்கள் பதவியில் இருந்தால்தானே மத்திய அமைச்சரவையில் என்ன முடிவெடுத்தார்கள் என்று தெரியும்; அல்லது வலியுறுத்தவாவது முடியும். ஆகவே ராஜினாமா கொடுப்பது என்பதிருக்கின்றதே. அது விளையாட்டுத்தனமில்லை.. ஆகவே நீங்கள் ராஜினாமா பண்ணக் கூடாது என்று நான் வெளிப்படையாகவே ஸ்டேட்மென்ட் கொடுக்கின்றேன் என்று சொன்னார். நீங்கள் பதவியை விட்டு வரக்கூடாது. நீங்கள் ராஜினாமா செய்யக்கூடாது. நீங்கள் பதவியில் இருந்தால் தான் ஏதாவது செய்ய முடியும் என்று நான் ஒருவன் தான் சொன்னேன்.

கலைஞர் சொன்னார் விவாதத்தில் ஆசிரியர் இப்படிச் சொல்லுகிறார் என்று சொன்னார். இதுதாங்க எதார்த்தம் என்று சொன்னவுடனே, பிறகு யோசிக்கலாம் என்று சொன்னார்.

----------------"விடுதலை" 7-7-2009

பார்ப்பனியக் கொடுமையை அனுபவித்த தாத்தா இரட்டைமலை சீனிவாசன்


இரட்டைமலை சீனிவாசன் (1860-1945)

அன்றைய செங்கல்பட்டு மாவட்டம் - மதுராந்தகத்தை அடுத்த கோழியானூர் கிராமத்தில் இரட்டை மலை என்னும் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவருக்கு மகனாகப் பிறந்தவர்தான் இரட்டைமலை சீனிவாசன் (1860 ஜூலை7).

தாழ்த்தப்பட்ட மக்களுக்காகத் தன்னையே அர்ப்பணித்துக் கொண்ட பெம்மான் இவர். தலித் சாகித்ய அகாடமி திவான் பஹதூர் இரட்டை மலை ஸ்ரீனிவாசன் அவர்களின் ஜீவிய சரித்திர சுருக்கம் என்ற 68 பக்கங்களைக் கொண்ட ஒரு சிறிய நூலை வெளியிட்டது (டிசம்பர் 1999). இந்நூல் அவரே எழுதிய சுயசரித்திரம் என்ற சிறப்புக்குரியது.

1893இல் பறையன் என்ற பெயரில் ஓர் இதழைத் தொடங்கினார். மூன்று மாதம் மாத இதழாகவும், அதன்பின் வார இதழாகவும் 7 ஆண்டு காலம் தொடர்ந்து அவரால் நடத்தப்பட்டது.

தன் சமுதாயம் வெளிப்படையாக அடையாளம் காட்டப்பட்டு இழிநிலை ஒழிக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் இப்படி ஒரு பெயரைச் சூட்டிக் கொண்டார்.

திராவிடர்களின் இழிவை வெளிப்படுத்த கறுஞ்சட்டையை எப்படி தந்தை பெரியார் அவர்கள் அறிமுகப் படுத்தினார்களோ, அதே கண்ணோட்டம் தான் இதிலும்!

அவர் காலத்தில் சமூக நிலையைத் தன் சுயசரிதையில் இவ்வாறாக வெளிப்படுத்தியுள்ளார்:
"
நான் செங்கற்பட்டு கிராமங்களிலொன்றில் 1860 ஆம் வருடம் பிறந்தேன். கோயம்புத்தூர் கலாசாலையில் நான் வாசித்த போது சுமார் 400 பிள்ளைகளில் 10 பேர் தவிர மற்றவர்கள் பிராமணர்கள். ஜாதிக் கோட்பாடுகள் மிகக் கடினமாய் கவனிக்கப்பட்டன. பிள்ளைகளிடம் சிநேகிதத்தால் ஜாதி, குடும்பம், இருப்பிடம் முதலானவைகளை தெரிந்து கொண்டால் அவர்கள் தாழ்வாக என்னை நடத்துவார்கள் என்று பயந்து, பள்ளிக்கு வெளியே எங்கேனும் வாசித்துக் கொண்டிருந்து, பள்ளி ஆரம்ப மணி அடித்த பிறகு வகுப்புக்குள் போவேன். வகுப்பு கலையும்போது என்னை மாணாக்கர்கள் ஒட்டாதபடி வீட்டுக்கு கடுகென நடந்து செல்வேன்"

என்று கண்ணீர் மல்க எழுதியுள்ளார். என்னே பார்ப்பனியக் கொடுமை!

1891 இல் ஆதிதிராவிட மகாசபையில் சேர்ந்து செயல்பட்டு, பின்னர் அந்த அமைப்பின் செயலாளராக இருந்து அரும்பணியாற்றினார். 1923 இல் சட்ட சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டு நீதிக் கட்சி ஆட்சியைப் பயன்படுத்தி பொதுச்சாலைகள், பொதுக் கிணறுகள் ஆகியவற்றில் தாராளமாக தாழ்த்தப்பட்டவர்கள் புழங்கிட வழிவகை செய்தார். ஒரு முக்கியமான தகவலைக் கண்டிப்பாகக் குறிப்பிட்டாக வேண்டும்.

1895 ஆம் ஆண்டில் லண்டனில் சிவில் சர்வீஸ் தேர்வு நடந்தது. அத் தேர்வில் வெற்றி பெறுகிறவர்கள் வெள்ளைக்காரர்களே! அவர்களில் இருந்துதான் மாவட்ட ஆட்சியர், நீதிபதிகள் போன்ற பதவிகளுக்கு நியமனம் செய்யப்பட்டு வந்தனர். அத் தேர்வு இந்தியாவிலும் நடைபெற வேண்டும் என்று லண்டன் பார்லிமெண்டுக்குக் காங்கிரஸ் சார்பில் மனு ஒன்றை அனுப்பினர்.

இதற்கு அதிகார பூர்வமான எதிர்ப்பைத் தெரிவிக்கக் காரணமாக விருந்தார் இரட்டை மலை சீனிவாசன். 112 அடிநீளமுள்ள ஒரு மனுவைத் தயாரித்து அதில் 3412 பேர்களின் கையொப்பங்களைப் பெற்றார்.

இந்தத் தேர்வு இந்தியாவில் நடந்தால் உயர்ஜாதி இந்துக்களான பார்ப்பனர்கள் உயர்தர உத்தியோகங்களை வகித்து, ஏழை ஜாதியினரை, தாழ்த்தப்பட்டோரை இம்சை செய்வார்கள் என்று அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. ஜெனரல் சர் சார்ஜ் செஸ்னி என்ற நாடாளுமன்ற உறுப்பினர் மூலம் இந்த மனுவை அனுப்பி வைத்தார்.

என்னே புத்தி கூர்மை
! பார்ப்பனியத்தின் ஆபத்தை எந்த அளவு புரிந்து கொண்டிருந்தார் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

------------------- மயிலாடன் அவர்கள் 7-7-2009 "விடுதலை" யில் எழுதிய கட்டுரை

ரகசியமில்லா ஒரே தலைவர்


அய்யா அவர்களுடைய விருப்பப்படி விடுதலை
சந்தாக்களை வசூலிக்க நானே கிராமம் கிராமமாகச் சென்றேன்
திருப்பூர் கலந்துரையாடலில் தமிழர் தலைவர் பேச்சு


விடுதலை சந்தா வசூலிக்க நானே கிராமம் கிராமமாகச் சென்றேன் என்று திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.

30.6.2009 அன்று திருப்பூரில் திருப்பூர், கோவை மாநகர், கோவை புறநகர், நீலமலை ஆகிய நான்கு மாவட்டங்களின் கலந்துரையாடல் கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

விடுதலை மலர் கருத்துச்சுரங்கம்

விடுதலை மலரை வாங்கிப் பார்த்தால் தெரியும். அய்யா அவர்கள் ஆர்.கே.சண்முகம் அவர்களுக்கு கடிதம் எழுதியிருக்கின்றார். அதை அப்படியே எடுத்துப் போட்டிருக்கின்றோம். இது ஒரு கருத்துச் சுரங்கம். 2.9.1937 இல் அய்யா எழுதுகிறார்: விடுதலை பத்திரிகை முதலில் தினசரி பத்திரிகையாக ஆரம்பிக்கப்பட்டது. அது நாளேடு அல்ல, வாரம் இருமுறை. தினசரி நாளேடாக ஆக்க வேண்டும் என்று அய்யா அவர்கள் ஈரோட்டுக்குக் கொண்டு வருகின்றார். விடுதலை பற்றி அய்யா எழுதியது

அய்யா எழுதுகிறார்: தமிழ் மக்கள் விடுதலையைப் படிப்பதில் பேரார்வம் காட்டினாலும் ஈரோட்டிலிருந்து வெளியிடப்பட்ட விடுதலையின் பராமரிப்பு நடப்பு செலவுக்காக இதழ் மாதம் ரூ.500 இழப்பிலேயே நடத்தப்படுவதாக 2.9.1937 இல் ஆர்.கே.சண்முகம் அவர்களுக்கு கடிதம் எழுதினார்கள்.

அந்தக் காலத்தில் 5000 விடுதலை

விடுதலை தினசரி பத்திரிகை 5000 பிரதிகள் வெளியாகின்றன. (அந்த காலத்தில் 5000 பத்திரிகைகள் விற்பனையானது பெரிய விசயம். அது அய்யா அவர்களுடைய முயற்சியின் வெற்றியைக் காட்டுகிறது)

அய்யா அவர்களை விட சிக்கனக்காரர் உலகத்தில் கண்டு பிடிக்க முடியாது. அய்யா அவர்கள் ஒரு முறை எங்களிடம் பேசிக்கொண்டிருக்கின்ற பொழுது சொன்னார்.

பச்சை அட்டை குடிஅரசு பத்திரிகையை வியாழக்கிழமை அன்றைக்கு நாங்கள் அச்சடித்து விடுவோம். வெள்ளிக்கிழமைக்குள் தபாலில் கொண்டு போய் போட்டு விடுவோம்.
வியாழக்கிழமை அன்று வெளியூர் சுற்றுபயணத்திற்கு நான் தேதி கொடுக்க மாட்டேன்.
ஈரோட்டில் பத்திரிகை ஒழுங்காகப் போக வேண்டும் என்பதற்காக நானே உட்கார்ந்திருப்பேன். லேபிளோடு கூடிய முகவரியை பேப்பரை மடித்து நானே உட்கார்ந்து ஒட்டுவேன் அப்பொழுது பக்கத்தில் உட்கார்ந்திருந்த புதிதாக சேர்ந்த ஒரு நண்பர் கேட்டார்.அய்யா, நீங்கள் போய் உட்கார்ந்து எதற்கு இதை ஒட்ட வேண்டும் என்று.

என்னைப் பார்க்க வருபவர்கள் சும்மா இருப்பார்களா?

அட போய்யா, நான் எதற்காக இங்கு உட்கார்ந்து ஒட்டுகிறேன் என்றால், நானே உட்கார்ந்து ஒட்டினால், என்னைப் பார்க்க வருபவர்களும் கூட உட்கார்ந்து அவரவர்களும் பத்து, பத்து பேப்பரை மடித்து ஒட்டுவார்கள் (சிரிப்பு-கைதட்டல்) (அய்யாவைப் பார்க்க வருகிறவர்கள் சும்மா இருப்பார்களா? அவர்களும் சேர்ந்து ஒட்டினால் வேலை சீக்கிரம் முடிந்து போய் விடும்) அதற்காகத்தான் இப்படி உட்கார்ந்து ஒட்டுகிறேன்) என்று சொன்னார். இப்படி அய்யா அவர்களுடைய அணுகுமுறை ஒவ்வொன்றிலும் சாதாரணமான அணுகுமுறை அல்ல. இப்படி சின்னச் சின்ன செய்திகள் கூட ரொம்ப சுவையாக இருக்கும் பத்திரிகை நடத்துவதில் எவ்வளவு சிக்கனமாக நடத்தியும், மாதம் ரூ.500 வீதம் நஷ்டமாகிறது.

இனி நஷ்டம் அதிகமாகுமே தவிர, குறையாது. ரகசியமில்லா ஒரே தலைவர் (ஆக பத்திரிகை அதிகம் போனால் நட்டம் அதிகமாகும் அய்யா அவர்கள் எப்பேர்ப்பட்ட ராஜவாழ்க்கை வாழக்கூடியவர். எவ்வளவு பெரிய வசதியாளர். ஈரோட்டிலேயே அதிகமான சொத்துகள் பெரியாருடைய சொத்துகள். இவர் கொடுக்கிற வரிதான் முனிசிபாலிடிக்கே முக்கியமான வருமானம். அப்படிப்பட்ட தந்தை பெரியார் அவர்கள் எழுதுகிறார்)

காலை 7.30 மணிக்கு ஆபிசுக்கு வந்தால் இரவு 10 மணிக்கு வீட்டுக்குப் போவேன். இதன் மத்தியில் சுற்றுப் பயணம். இந்த நிலைமையில் (அய்யா அவர்கள் எவ்வளவு பகுத்தறிவு சிந்தனையோடு சொல்கிறார் பாருங்கள். அய்யா அவர்களிடம் ரகசியம் என்பதே கிடையாது. எல்லா செய்திகளையும் மனம் திறந்து பகிர்ந்து கொள்வார். ரகசியமே இல்லாமல் வாழ்ந்த ஒரு தலைவர் உலகத்தில் உண்டென்றால் அவர்தான் தந்தை பெரியார் அவர்கள் என்பது அவருடைய வரலாற்றைப் புரிந்தவர்களுக்குத் தெரியும்) ரோஷம் என்னை அடிமையாக்கிக்கொண்டு இந்த மாதிரி தொல்லையில் இறக்கி விட்டது. (நான் ஏன் இவ்வளவு கஷ்டப்படுகிறேன் என்றால் ரோஷம் என்னை அடிமையாக்கிக்கொண்டது என்று அய்யா அவர்கள் சொல்லுகிறார்.) காசு, பணம் எதிர்பார்த்து இவற்றை நான் எழுதவில்லை என்று அய்யா அவர்கள் ஆர்.கே.எஸ் அவர்களுக்கு எழுதியிருக்கின்றார்.

சந்தா வசூல் செய்ய கிராமங்களுக்குச் சென்றேன்

1964இல் என்னை ஆசிரியராக அமர்த்திய பிறகு அய்யா, நீங்கள் எழுதுங்கள்; சந்தாவைத் தோழர்கள் திரட்டித் தருவார்கள் என்று சொன்னேன். நான் பொறுப்புக்கு வந்தவுடனே ஆயிரம் சந்தாக்களாவது சேர்க்க வேண்டும் என்று அய்யா அவர்கள் அறிக்கை எழுதிக்கொடுத்தார். அது வெள்ளி விழாவை ஒட்டி வந்தது. இந்த அறிக்கையை எடுத்துக்கொண்டு நீங்களே போய் வசூல் பண்ணுங்கள் என்று சொன்னார். தஞ்சை மாவட்டம் நமக்கு நன்செய் மாவட்டம். தஞ்சை மாவட்டத்தில் நானே ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்றேன். நம்முடைய தோழர்களை அழைத்துக்கொண்டு.

பெரியாரே அனுப்பியிருக்கிறார் என்று சொன்னேன். என்னை அப்பொழுது தெரியாது. நான் இளைஞர் ஒரு கிராமத்தில் மிராசுதார் இதைக் கேட்டு அப்படிங்களா! எவ்வளவு சந்தா கொடுக்க வேண்டும் என்று கேட்டார். நூறு ரூபாய், இரு நூறு ரூபாய் என்று சொல்லுவோம். அப்படி எல்லாம் அன்றைக்கு விடுதலைக்கு சந்தாக்களை சேர்த்தோம். அதன் பிறகு அய்யா எழுதினார்.

வியாபாரத்திற்காக அல்ல; கொள்கைக்காக

விடுதலை ஒரு கொள்கையை அடிப்படையாக வைத்து நடத்தப்பட்டு வந்ததால் அது மாதம் ஒன்றுக்கு மூவாயிரம் நஷ்டத்தில் நடத்தப்பட வேண்டியதாய் இருந்து வருகிறது. அந்த நஷ்டத்திற்குக் காரணம் கடவுள், மதம், புராணம், ஜோசியம் போன்ற மூடநம்பிக்கை கள்சம்பந்தமான விளம்பரங்களையும், சினிமா முதலிய ஒழுக்கக் கேடு மூடநம்பிக்கை கதைகளையும் பத்திரிகையில் போடாமல் பகிஷ்கரித்து வந்ததேயாகும். (நான் வியாபாரத்திற்கு நடத்தவில்லை. கொள்கைக்காக நடத்துகிறேன் என்று சொல்லுகின்றார்.) பொருள் நஷ்டம் இந்த அளவில் இருந்தாலும் அதன் பலன் அலட்சியப்படுத்தக் கூடியதாய் அல்லாமல், பாராட்டத்தக்கதாய் இருந்து வருகிறது என்பதில் அய்யமில்லை. அய்யா அவர்கள் கடைசியாக முடிக்கும் பொழுது வேண்டுகோள் வைக்கின்றார். (இன்றைக்கும் அது பொருந்தும் பெரியார் பேசுகிறார் கேளுங்கள். என்னுடைய வேண்டுகோளாக அல்ல, அய்யாவின் வேண்டுகோளாக வைக்க விரும்புகின்றேன்)

நமது பணிகளை மக்களிடம் சொல்லுங்கள்

நமது இயக்கம், நமது பத்திரிகை செய்துள்ள பணிகளை மக்களிடம் சொல்லுங்கள். இது மறைந்தால் என்ன ஆகும்? என்பதை விளக்குங்கள். அதிகாரிகளை, அரசாங்க சிறிய உத்தியோகஸ்தர்களை வியாபாரிகளை, விவசாய பொது மக்களை, தைரியமாய் அணுகுங்கள். வெட்கப்படாதீர்கள் என்று அய்யா அவர்கள் சொல்லுகின்றார்.
(நமது ஆட்களுக்கு என்ன கோளாறு என்பதை அய்யா அவர்கள் கண்டு பிடித்திருக்கின்-றார்கள் பாருங்கள். நம்மாள் போய்கேட்டால் எல்லோரும் கொடுப்பார்கள். நாம் போய் எப்படிங்க கேட்பது என்று வெட்கப்படுவது. பொது வாழ்க்கைக்கு வெட்கமே கூடாது. மக்கள் நம்மை நம்புகிறார்கள். விடுதலை தான் விடியல் என்று பல்வேறு காரணங்களினாலே நினைக்கிறார்கள். பன்முனைப்பட்ட பலனை அனுபவிக்கக் கூடியவர்கள். அடுத்த வாக்கியம் சொல்லுகிறார் பாருங்கள். அய்யா அவர்களுடைய ஒவ்வொரு சொல்லும் கணித்து எழுதக்கூடியது. அலங்காரத்திற்காகவோ அல்லது ஆடம்பரத்திற்காகவோ அவர்கள் எழுதவில்லை)

தமிழ்நாட்டு மக்களின் இன உணர்ச்சியையும், சமுதாய நலன் உணர்ச்சியையும் பரிட்சை பார்ப்பதில் நமக்குக் கவுரவக் குறைவு ஏற்பட்டுவிடாது என்று சொன்னார்.

குன்றக்குடி அடிகளார் சொன்ன செய்தி

(ஆகவே இந்த சந்தா கேட்பது என்பது ஒரு டெஸ்ட் நாடி பிடித்துப் பார்க்கின்ற மாதிரி. இவருக்கு சமுதாய நலன் உணர்ச்சி இருக்கிறதா? இன உணர்ச்சி இருக்கிறதா? விடுதலை புது பணிமனையை பெரியார் திடலில் அய்யா தலைமையில் குன்றக்குடி அடிகளார்தான் திறந்து வைத்தார்.
அப்பொழுது அவர் அழகாகச் சொன்னார்: தமிழன் இல்லம் என்பதற்கு ஒரு அடையாளம் என்றால், அங்கே விடுதலை வருவதுதான் தமிழன் இல்லம் என்பதற்கு அடையாளம் (கைதட்டல்)

காரணம் அந்த அளவிற்கு இந்த இயக்கம் வளர்ந்து கொண்டிருக்கக் கூடிய இயக்கம்.

பா.ஜ.க ஆட்சி செய்த கேடுகள்

நண்பர்கள் இங்கே சொல்லிவிட்டார்கள். நான் அதிகமாகச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. நாம் எவ்வளவு பெருமிதத்தோடு உட்கார்ந்திருக்கின்றோம். மத்தியில் காவி நிற முள்ள அரசு, பாரதீய ஜனதா கட்சி அரசு ஒரு பத்து வருடம் இந்த நாட்டை ஆண்டது. கூட்டணியை வைத்துக்கொண்டு. பாஜக ஆட்சியில் எவ்வளவு பெரிய கேட்டை உண்டாக்கினார்கள்.

பா.ஜ.க ஆட்சியில் வரலாற்றையே மாற்றினார்கள். கல்வியை காவி மயமாக்கினார்கள். பொடா சட்டத்தைக் கொண்டு வந்தார்கள். திராவிட வரலாற்றை மாற்ற அடிப்படையில் கைவைத்தார்கள். மேலெழுந்தவாரியாக செய்யவில்லை. மற்ற கட்சிக்காரர்கள் எல்லாம் ஏதோ வாய்ப்புள்ள வரை சம்பாதிக்கலாம் என்று நினைப்பார்கள். பா.ஜ.க வினர் அது மாதிரி இல்லை. மூளையில் உள்ள மூடநம்பிக்கை விலங்கை உடைக்க வேண்டும் என்று நாம் நினைக்கிறோம். பா.ஜ.க வினர் அந்த விலங்கு அப்படியே இருக்கு வேண்டும் என்று கருதினார்கள்.

ஆரியர்கள் பூர்வீக மக்களாம்!

ஆரியர்கள் இந்த நாட்டின் பூர்வீக குடிமக்கள் திராவிடர்கள் வெளியில் இருந்து வந்தவர்கள். அது மாதிரி அடிப்படையையே நொறுக்கி வரலாற்றைத் தலைகீழாக மாற்றினார்கள். மீண்டும் பா.ஜ.க ஆட்சிக்கு வந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? திராவிட என்ற ஒரு சொல் வெளிவந்திருக்குமா? தமிழ் பல்கலைக் கழகத்திற்கு முதல் துணை வேந்தராக வந்த நமது மரியாதைக்குரிய வி.அய்.சுப்பிரமணியம் நேற்று இயற்கை எய்தினார். இன்னும் கேட்டால் இரங்கல் தீர்மானத்தில் கூட அதை சேர்த்திருக்க வேண்டும்.

குப்பத்தில் திராவிட பல்கலைக்கழகம்

அவர் செய்த மிகப்பெரிய தொண்டு என்னவென்றால், நமது திராவிட இயக்கம் செய்ய வேண்டிய ஒரு வேலையை ஆந்திராவிலே வி.அய்.சுப்பிரமணியம் அவர்கள் தனித்து நின்று செய்தார்.

ஆனால், கலைஞர் அவர்கள்தான் அதற்கு பெரு உதவியாக இருந்தார். அதற்குப் பிறகுஅவருடைய பங்களிப்பைச் செய்தார். முதல்வர் என்ற முறையில் ஆந்திர மாநிலம் குப்பத்தில் திராவிட பல்கலைக்கழகம் என்பதை உருவாக்கினார். அதைவிட மிகப்பெரிய அளவிலே திராவிட களஞ்சியம் தொகுதிகளை (என்சைக்ளோபீடியா) போட்டிருக்கிறார். அதே போல திராவிட வரலாற்றை எழுதியிருக்கிறார். இதை எல்லாம் அரசுகள் செய்திருக்க வேண்டும்.

அரசுகள் செய்யத் தவறியதைக் கூட ஒரு தனிமனிதராக இருந்து அவர் சிறப்பாக செய்தார். அன்றைய மத்திய கல்வி அமைச்சர் முரளி மனோகர் ஜோஷியிடம் சென்றிருக்கின்றார்; அவரிடம் இதைக் கொடுக்கின்றார்.

இதைப் பார்த்து-விட்டு, (முரளி மனோகர் ஜோஷியினுடைய புத்தி எப்படி இருக்கிறது பாருங்கள்; பார்ப்பான் புத்தி எப்படியிருக்கிறது பாருங்கள். காவி புத்தி ஆர்.எஸ்.எஸ் புத்தி எப்படியிருக்கிறதென்றால், வி.அய்.சுப்பிரமணியம் அவர்கள் கொடுத்ததைப் பார்த்து விட்டு) நன்றாகப் பண்ணியிருக்கின்றீர்கள். திராவிட என்பதை எடுத்துவிடுங்கள்
இதில் திராவிட என்பதை விட்டுவிட்டுப் பண்ணியிருந்தால் நன்றாக இருந்திருக்குமே. பல்கலைக் கழகமே திராவிட பல்கலைக் கழகம். திராவிடக் களஞ்சியம் பண்ணியிருக்கிறார்கள்.

முரளி மனோகர் ஜோஷி இப்படி கேட்டவுடனே வி.அய்.சுப்பரமணியம் அவர்களுக்குக் கோபம் வந்துவிட்டது. அவர் மத்திய கல்வி அமைச்சர். இவர் சாதாரணமாக திருவனந்தபுரத்தில் தனியாக இன்ஸ்டிடியூட் வைத்து நடத்துகிறார்.

இவ்வளவு பெரிய சாதனையை செய்திருக்கிறேன் என்று சொல்லி கொடுக்கிறார். மற்ற ஆள்களாக இருந்திருந்தால் முதுகெலும்பு இல்லாத ஆள்களாக இருந்திருந்தால் சரிங்க, யோசிக்கிறேங்க என்று சொல்லி சும்மா திரும்பியிருப்பார்கள்.

ஆனால், வி.அய். சுப்பிரமணியம் அதைச் செய்யவில்லை. உடனே என்ன செய்தார் தெரியுங்களா? அப்படிங்களா! திராவிட என்ற சொல்லை நீக்க வேண்டும் என்று நினைக்கின்றீர்களா? செய்யலாம். ஒரே ஒரு காரியம் செய்தால் நீக்கலாம் என்று சொன்னார்.
என்ன செய்யனும் சொல்லுங்க? என்று மத்திய அமைச்சர் ஜோஷி கேட்டார்.

ஏன், இப்படி செய்யுங்களேன்

ஜனகணமன என்ற தேசிய கீதத்தில் திராவிட உத்கல வங்கா என்பதில் திராவிட என்ற வார்த்தையை அதில் எடுத்துவிடுங்கள் அப்புறம் நான் இதை எடுத்துவிடுகிறேன் என்று சொன்னார் (கைதட்டல்).

நம் மண்ணில் எப்படிப் பட்டவர்கள் மலர்ந்தார்கள் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். அதற்கெல்லாம் அடித்தளம் எது? சுயமரியாதை இயக்கம்.

----------------தொடரும்..."விடுதலை"-7-2009

உலக நாடுகள் - தூரப்பார்வை - மால்தீவ்ஸ்-மாலி-மால்டா

மால்தீவ்ஸ்

மாலத்தீவு எனக் கூறப்படும் மால்தீவ்ஸ் இந்திய மாக்கடலில் உள்ள தீவுகளின் கூட்டம். பழங்காலத்தில் இத்தீவுப் பகுதிகளில் கவ்ரி கிளிஞ்சல்கள் பிடிக்கப்பட்டன. இந்த வகைக் கிளிஞ்சல்கள் இந்தியாவில் நாணயமாகப் பயன் படுத்தப்பட்டன. தெற்கு ஆசிய மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலும் கூடப் பணப் பரிவர்த்தனைக்குப் பயன் பட்டன. இந்தக் கிளிஞ்சல்கள் சிந்து வெளி நாகரிகப் பகுதி-களில் கண்டெடுக்கப்பட்டன என்பது இதன் சிறப்புக்கு அடையாளம்.

இந்தியாவின் தென்மேற்குப் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள்தான் இத்தீவுகளில் முதன் முதல் குடியேறியவர்கள். தென் இந்திய வரலாற்று ஆவணங்களில் இத்தீவுகள் பற்றிய குறிப்புகள் காணப் படுகின்றன.

16.-12.-1887 இல் இந்நாட்டின் மன்னரான சுல்தான் முய்னுதீன்_மிமி என்பவர் இலங்கையில் பிரிட்டிஷ் ஆளுநர் ஒருவரோடு ஒப்பந்தம் செய்து கொண்டார். அதன்படி இந்நாட்டைப் பாதுகாக்கும் பணி இங்கிலாந்திடம் ஒப்படைக்கப்பட்டது.

26-.7.-1965 இல் மால்தீவ்சுக்கு விடுதலை வழங்கப் பட்டது. 11.-11.-1968 சுல்தான்களின் ஆட்சி ஒழிக்கப்பட்டு நாடு குடியரசு ஆனது.

இந்திய மாக்கடலில் 300 சதுர கி.மீ. பரப்பில் அமைந்துள்ள சிறு தீவுகளின் கூட்டம் மால்தீவ்ஸ். வெண் மணல் பரப்புடன் கூடிய கடற்கரை நாடு. மீன் மட்டுமே நாட்டின் வளம். இங்கே 3 லட்சத்து 60ஆயிரம் மக்கள் வாழ்கின்றனர். மக்கள் சன்னி முசுலிம் மதத்தினர். சிங்களமும் அரபியும் கலந்த கலவையான திவேகி என்ற மொழி பேசப்படுகிறது. இங்கிலீசும் நிருவாக அலுவலர்களிடையே உண்டு. 97 விழுக்காடு மக்கள் படிப்பறிவு பெற்றவர்.
நாட்டில் இருப்புப் பாதை இல்லை.


மாலி

5000 ஆண்டுகளுக்கு முந்தைய மனித உடல்களின் சிதைவுகள் இங்கே கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த நாட்டின் தங்கக் கனிம வளமும், பல்வேறு பொருள்களை வணிகம் செய்து வந்த விதமும் டிம்பக்டு மற்றும் ஓஜென்ன ஜெனோ போன்ற வணிக இடங்களை வளர்த்-தன. பொது ஆண்டுக்கு முந்தைய 100 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சஹாரா பாலை நிலத்தில் இருந்த ஒட்டக வணிகப் பாதையில் இந்நாடு அமைந்துள்ளதால் வணிக வாய்ப்புகள் பெருகின.

19 ஆம் நூற்றாண்டின் முடிவில் இந்நாடு பிரான்சின் ஆதிக்கத்தில் வீழ்ந்தது. 1904இல் பிரெஞ்சு குடியேற்ற நாடாகிப் போனது. 1920இல் நாட்டின் பெயரே, பிரெஞ்சு சூடான் என மாற்றப்பட்டு விட்டது. 1958 நவம்பரில் நாட்டுக்குச் சுயாட்சி உரிமை வழங்கப்பட்டு பிரெஞ்ச் சமுதாயத்தில் ஓர் அங்கம் ஆகியது. சூடான் குடியரசு என்று வழங்கப்பட்டது. பிறகு 1960 செப்டம்பர் 22 ஆம்நாள் குடியரசு நாடானது. மாலி என்ற பெயர் அறிவிக்கப்பட்டது.
மேற்கு ஆப்ரிக்காவில் அல்ஜீரியா, நைஜர் நாடுகளுக்கு அருகில் உள்ள இந்நாட்டின் பரப்பளவு 12 லட்சத்து 40 ஆயிரம் சதுர கி.மீ. ஆகும். மக்கள் தொகை ஒரு கோடி 10 லட்சம் ஆகும். இசுலாமியர்கள் 90 விழுக்காடும் மீதிப்பேர் ஆப்ரிக்கப் பழங்குடி நம்பிக்கைகளுடனும் உள்ளனர். ஒரு விழுக்காடு கிறித்துவர்கள் உள்ளனர்.

பிரெஞ்ச் மொழிதான் ஆட்சி மொழி. பாம்பரா எனும் மொழி 80 விழுக்காடு மக்களால் பேசப்படுகிறது. மீதியுள்ள மக்கள் ஏராளமான இனக் குழு மொழிகளைப் பேசி வருகின்றனர். நாட்டுக்குக் குடியரசுத் தலைவரும் பிரதமரும் உண்டு. 64 விழுக்காடு மக்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளனர். 15 விழுக்காடு மக்கள் வேலை கிட்டாதோர். இவ்வளவுப் பெரிய நாட்டில் 729 கி.மீ. நீளத்திற்கு மட்டுமே இருப்புப் பாதை வசதி உண்டு.


மால்டா

மால்டா நாட்டை அரபியர்கள், நார்மன்கள் மற்றும் பல பிற்போக்கு இனத்தவர்கள் ஆண்ட வரலாறு உண்டு. 1530 ஆம் ஆண்டில், ரோமன் கத்தோலிக்க தேவாலயத்தின் ஒரு பிரிவான செயின்ட் ஜான் மருத்துவ மனை அதிகாரம் என்ற மத, ராணுவத்தினர் இந்தத் தீவுகளின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றினர்.

19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் ஆட்சியில் அடங்கினர். இரண்டாம் உலகப் போர்க் காலத்தில், அச்சு நாடுகளின் கடுமையான தாக்குதலுக்கு மால்டா ஆளான போதும், அச்சு நாடுகளின் முயற்சி பலன் தரவில்லை. இதனால், இங்கிலாந்து அரசு அதன் உயரிய ராணுவ விருதான ஜார்ஜ் கிராஸ் விருதினை மால்டா நாட்டு மக்கள் அனைவருக்கும் அளித்து அவர்களைப் பெருமைப்-படுத்தியது. இன்றைக்கும் அந்நாட்டின் கொடியில் ஜார்ஜ் கிராஸ் அடையாளத்தைப் பொறித்துப் பெருமைப்பட்டுக் கொள்கிறது.
21-.9-.1964இல் விடுதலை அடைந்த மால்டா, காமன்-வெல்த்தில் அங்கம் வகிக்கிறது.13.-12.-1974இல் குடியரசு நாடாகியது. அய்ரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடாக 2004 மே மாதத்தில் இணைந்தது.

அய்ரோப்பாவுக்குத் தெற்கே மத்திய தரைக் கடல் பகுதியில் உள்ள இரு தீவுகள். இத்தாலியின் சிசிலித் தீவுக்குத் தெற்கேஅமைந்துள்ளவை. இவற்றின் பரப்பு 316 சதுர கி.மீ. நாட்டின் மக்கள் தொகை 4 லட்சத்-திற்-குச் சற்றுக் கூடுதல். மக்களில் 98 விழுக்காட்டினர் ரோமன் கத்தோலிக்கர்.

மால்டீஸ் மொழி ஆட்சிமொழி. இங்கிலீசு மொழியும் ஆட்சி மொழியாக உள்ளது. 93 விழுக்காடு மக்கள்-கல்வியறிவு பெற்றவர்கள். 8 விழுக்காடு மக்கள் வேலை கிட்டாதோர்.

------------------------"விடுதலை" 6-7-2009