Search This Blog

31.1.12

ஆரியம் படமெடுத்தாடுகிறது - தமிழன் என்றால் யார்?

இனமான தந்தை பெரியார் பாதையில் பேராசிரியர் நூல்

தமிழ் சமுதாயத்திற்கு ஓர் ஆவணம்!
தமிழர் தலைவர் அறிவார்ந்த விளக்கவுரை

இனமான பேராசிரியர் க.அன்பழகன் பற்றி இனமான தந்தை பெரியார் பாதையில் பேராசிரியர் என்ற தலைப்பில் முனைவர் ந.க. மங்களமுருகேசன் தொகுத்த நூல் தமிழ் சமுதாயத்திற்கு ஒரு ஆவணம் என்று திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.

சென்னை பெரியார் திடலில் 5.1.2012 அன்று இரவு முனைவர் ந.க.மங்களமுருகேசன் தொகுத்த இனமானத் தந்தை பெரியார் பாதையில் பேராசிரியர் நூல் வெளியீட்டு விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:

இந்த நாள் முக்கியமான நாள்


இந்த நாள் நம்முடைய இயக்க வரலாற்றில் ஒரு முக்கியமான நாள் ஏனென்றால் நம்முடைய இயக்கம் பிரச்சார பெரும்புயலை சூறாவளியாக நாடெங்கும் நடத்தியிருக்கிறது என்றாலும் போதிய தகவல்களை அவ்வப்பொழுது ஆவணப்படுத்தக் கூடிய வாய்ப்பு திராவிடர் இயக்கத்திற்கு வெகு வெகு குறைவாக இருந்த காலகட்டம் என்று ஒன்று உண்டு.

பொதுவாகவே நீதிக்கட்சி என்றழைக்கக் கூடிய பார்ப்பனர் அல்லாதார் இயக்கமாக தொடங்கி பிறகு திராவிடர் இயக்கமாக மலர்ந்து வளர்ந்து சாதித்துள்ள இந்த இயக்கத்தின் அடிநாள் வரலாறுகளைப் பற்றிய குறிப்புகளைத் தேடினால் அப்பொழுது நடத்தப்பட்ட பல ஏடுகள் இப்பொழுது கைக்குக் கிடைப்பதில்லை.

நாங்கள் தொல்லைப்பட்டு...


மிகவும் நாங்கள் தொல்லைப்பட்டு திராவிடன் போன்ற இதழ்களை சேகரித்துஅல்லது ஜஸ்டிஸ் என்று ஆங்கிலத்திலே நடந்த அந்த ஏடுகளை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக சேகரித்தோம். எப்படி இருந்தது என்பதையாவது பார்க்கக்கூடிய அளவிலேதான் இருந்தது.

சிலவற்றைத்தான் தொகுத்திருக்க முடியும். அதற்கும் மிக சிறப்பான பதிலை நம்முடைய பேராசிரியர் அவர்கள் இனமானப் பேராசிரியர் அவர்கள் அற்புதமாக அளித்திருக்கிறார்கள் என்பதை இந்த உரையிலே சொன்னார்கள்.

தமிழனைப் போல சிறந்த அறிவாளியும் இல்லை...!


தமிழனைப் போல சிறந்த அறிவாளியும் இல்லை. தமிழனைப் போல தன்னை மறந்தவனும் இல்லை என்று அழகாகச் சொன்னார்கள். மற்றவர்களுடைய வரலாற்றை எல்லாம் தொகுத்தவன் - தன் வரலாற்றை மறந்துவிட்டானே? என்பதை மிக அழகாக எடுத்து சுட்டிக் காட்டினார்கள்.

ஜஸ்டிஸ் கட்சி இந்த நாட்டை ஆண்டிருக்கிறது. 1916லே தொடங்கி பிறகு 1920, 1926 பிறகு 1936 என்று வரலாற்றிலே பல இடங்கள் வந்திருக்கின்றது. ஏனென்றால் இது வரலாற்று ஆய்வாளர்கள் - அறிஞர்கள் சிறப்பாக குழுமியிருக்கக்கூடிய ஒரு அறிவு சார்ந்த அவையாகும்.

இந்த அவை அந்த நிலையிலே இதை நினைவூட்டுவது மிக மிக முக்கியம் தேவை என்று கோடிட்டுக்காட்ட விரும்புகிறேன்.

நீதிக்கட்சி ஆட்சி பற்றிய விவரங்கள்


நூல்களைத் தேடிப் பார்த்தேமேயானால் நீதிக்கட்சி ஆட்சி எவ்வளவு சிறப்பானதொரு ஆட்சி என்பதைப் பற்றி ஏடுகள் தொகுக்கப் படவில்லை.

இரண்டு மூன்று புத்தகங்கள்தான் ஆங்கிலத்திலே கிடைத்தன. அந்த புத்தகங்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக. நாங்கள் திராவிடர் கழகத்தின் சார்பிலே அவைகளைத் தேடி ஆங்கிலத்திலே இருந்ததால் வெளியிட்டு இன்றைக்கு நீதிக்கட்சி வரலாறு தமிழிலும் மொழி பெயர்க்கப்பட்டு விடுதலை ஏட்டிலே தொடர்ந்து வந்து கொண்டி ருக்கிறது.

நீதிக்கட்சி பற்றி விடுதலையில் கட்டுரைகள்


விடுதலை படிக்கக் கூடிய வாசக நேயர்களுக்கு மிகத் தெளிவாகத் தெரியும். 1917 ஒரு வரலாறு. ஒரே ஆண்டில் எத்தனை நிகழ்வுகள்? எத்தனை மாநாடுகள் இவை அத்தனையும் உண்டு. அந்த செய்தி விடுதலையிலே தொடர்ந்து கட்டுரைகளாக வெளியிடப்பட்டு வருகிறது. அவை தொகுக்கப் பட்டு தமிழ் நூலாக ஆக்கப்படும் விரைவிலேயே.

வரலாற்றுக்குறிப்புக்காக நீதிக்கட்சியினுடைய கொள்கைகள் - அதனுடைய சாதனைகள் - மாநாடுகள் ஒரு பக்கம். இன்னொரு பக்கம் சிறப்பாகச் சொல்ல வேண்டுமானால் நீதிக்கட்சி என்றழைக்கப்பட்ட தென்னிந்திய நல உரிமைச் சங்கம் (South Indian Liberal Foundation) என்பதுதான் அதற்கு அதிகார பூர்வமான பெயர். எஸ்.அய்.எல்.எஃப் என்று சொல்லுவார்கள்.

சேலம் மாநாட்டிலே அந்தப் பெயரைப் போட்டுத்தான் மாநாட்டையே நடத்தினார்கள். அன்றைக்கு ஜஸ்டிஸ் பத்திரிகையிலே சர்.ஏ. ராமசாமி முதலியார் அவர்கள் எழுதிய குறிப்புகள் Mirror of the year தலையங்கங்களின் தொகுப்பு இருக்கிறது. அற்புதமான ஆங்கிலம் - சிறந்த கருத்தோட்டம். பெரிய வரலாற்றுக் குறிப்புகள் இவைகள் எல்லாம் தொடங்கியது.

மிர்ரர் ஆஃப்தி இயர் புத்தகம்


சர். ஏ.ராமசாமி முதலியார் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடிய நேரத்திலே ஒரு புத்தகத்தை நண்பர் பேராசிரியர் சண்முசுந்தரம் அவர்கள் எங்களுக்கு அளித்தார். மறைந்தும், மறையாமல் நமது நெஞ்சங்களில் நிறைந்திருக்கின்ற பாலகாந்தன் அவர்கள் அவர் உயிருடன் இருக்கும் பொழுது சிறப்பாகச் சொல்லுவார்கள்.

நாங்கள் வெளியிட்டு அதை வெளியே கொண்டு வந்தோம். ரொம்ப பேருக்கு ஆச்சரியம். அந்த நூலுக்கு பெயர்தான். Mirror of the year அதே போல 1929 முதல் சுயமரியாதை மாநாடு உள்பட ஜஸ்டிஸ் கட்சி மாநாட்டின் தொகுப்புகள் இந்தத்தொகுப்பு கடந்த ஜனவரியிலே சரியாக திருச்சியிலே நம்முடைய டாக்டர் ராமசாமி அவர்களால்தான் வெளியிடப்பட்டது.

வரதராஜீலு என்று சொல்லக்கூடிய அவர்கள் மாவட்ட நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றவர்கள். அவர்கள் அந்த வரலாற்றை எழுதியவர்கள்.

முன்னாள் மேயர் சுந்தர்ராவ் நாயுடு சிந்தாதரிப் பேட்டையில் சிலை வைக்கப்பட்டிருக்கிறதே- சுந்தர்ராவ் அவர்களுடைய தந்தையார் வரதராஜீலு அவர்கள். இப்படி ஒரு மூன்று, நான்கு நூல்களையே கண்டுபிடிப்பதற்கு மிக சிரமமாக இருந்தது.

ராஜா சர் முத்தையா சொன்னார்


ராஜா சர் முத்தையா செட்டியார் அவர்களிடத்திலே பேசிக்கொண்டிருந்த பொழுது அவர் ரொம்பத் தெளிவாக ஒரு முறை சொன்னார். இந்த மூன்று நூல்களுக்கு மேலே எதுவும் புத்தகம் கிடையாது. நீங்கள் அதைத்தேடிக் கண்டு பிடித்தீர்க ளேயானால் போதும். ஜஸ்டிஸ் கட்சிக்கு ஏதாவது ஆதாரம் வேண்டுமானால் இந்த நூல்களிலிருந்துதான் கிடைக்கும்.

அந்தக் காலத்தில் 147 ஏடுகள்


திராவிடர் இயக்க காலத்திலே, சுயமரியாதை இயக்க காலத்திலே தந்தை பெரியார் அவர்கள் காலத்தில் குடிஅரசு பதிப்பகம், உண்மை விளக்கப் பதிப்பகம், அது போல பகுத்தறிவு நூற்பதிப்புக் கழகம் ஆகியவற்றில் சுப.வீரபாண்டியன் அவர்கள் சொன்னது போல 147 ஏடுகள் வந்தன. அவை எல்லாம் யாரும் பாதுகாத்து வைத்திருப்பதாக இல்லை.

பேராசிரியர் நடத்திய ஏடு புதுவாழ்வு ஓராண்டு நடந்தது என்று சொன்னால் பேராசிரியர் அவர்களிடத்திலே அந்த புதுவாழ்வு தொகுப்பு இருக்குமா என்பது சந்தேகம். பலர் நூல் எழுதியிருப்பார்கள். அவர்களது ஒன்றாம் பதிப்பு, இரண்டாம் பதிப்பு, மூன்றாம் பதிப்பு வந்திருக்கும். அதுவே அவர்களிடம் இருக்காது. ஆகவே இந்தப் பணி எவ்வளவு சிறப்பானது என்பதற்காக சொன்னேன்.

சமுதாயத்திற்கு ஒரு பெரிய ஆவணம்


பேராசிரியர் மங்களமுருகேசன் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். (கைதட்டல்). ஏனென்றால் அவர்கள் இன்றைக்கு தொகுத்து அளித்திருக்கக்கூடிய இனமான தந்தை பெரியார் பாதையில் பேராசிரியர் என்ற இந்த நூல் சமுதாயத்திற்கு ஒரு பெரிய ஆவணம். இதுதான் மிக முக்கியம்.

இன்னமும் பெரியார் தேவையா? என்று கேட்கக் கூடிய சில புரியாதவர்கள் இருக்கிறார்கள். அறியாமையில் உளறுகிறார்கள். நோயிலேயே தலைசிறந்த கொடுமையான நோய் ஒன்று இருக்கிற தென்றால் அது அறியாமை நோய். இந்த அல்சைமர்சை விட, அதாவது செலக்டிவ் அம்னீ சியா என்று சொல்லுகிறார்கள் பாருங்கள். மறதி நோய் என்று. அந்த மறதி நோயைவிட ரொம்ப கொடுமையான நோய் தமிழனுக்கு இருக்கிறது.

மதிக்கப்பட வேண்டியவர்கள்


அந்த நோய்க்காவது சிகிச்சை உண்டு. பல பேருக்கு இதை நினைவூட்ட வேண்டியவர்களாக இருக்கிறார்கள். ஏனென்றால் வரலாற்றையே மறந்துவிட்டோம்.

தன்னுடைய தாயை அடையாளம் காண வில்லை. இந்த நோய்க்கு ஆளான பல பேரை பார்த்தீர்களேயானால் வீட்டில் இருப்பார்கள். சில பேர் உளறிக்கொண்டிருப்பார்கள். இன்றைக்கு நம்மிடத்தில் சில பேர் உளறுகிறார்கள் என்று சொன்னார்கள் பாருங்கள். அந்த நோய்க்கு ஆளானவர்கள்தான் அவர்கள். அவர்கள் மன்னிக்கப்பட வேண்டியவர்களே தவிர, மதிக்கப்படவேண்டியவர்கள் அல்ல. இன்னும் கேட்டால் மதித்து பதில் சொல்லக்கூடியவர்களும் அல்ல. அவ்வளவு வேதனையாக இருக்கிறது. பெரியார் அவர்களுடைய பயணம் எவ்வளவு முக்கியமான பயணம் என்பதைச் சொல்லி பெரியார் பிறந்திருக்காவிட்டால்....?

ஒரே ஒரு கேள்வி


நாமெல்லாம் என்ன நிலைக்கு ஆளாகியிருப்போம். ஒரே ஒரு கேள்வி. அந்த கேள்விக்கு விடை காணட்டும். பெரியார் பிறந்திருக்கா விட்டால் நாமெல்லாம் முழங்காலுக்கு கீழே வேட்டிகட்ட வாய்ப்பு உண்டா? தோளிலே துண்டு போடக்கூடிய உரிமை உண்டா? நினைத்துப் பார்க்க வேண்டும்.

படிக்கிற உரிமை மற்ற உரிமைகள் எல்லாம் இருக்கட்டும். தெருவில் நடக்கிற உரிமை உண்டா? அந்த கொடுமைகள் எல்லாம் இருந்திருக்கின்றன. பேராசிரியர் அவர்களைப் பற்றி விளக்குகிற நேரத்திலே சுப.வீ. அவர்கள்இருக்கிறார்கள்.

தமிழனுக்குப் புத்தாண்டு எது?


ஆர்க்காட்டார் அவர்கள் அவரது பல்வேறு சிந்தனைகளை இணைத்து இங்கே சொன்னார்கள். இன்றைக்கு பெரியார் தேவைப்படுகிறார் என்று சொல்லுவதற்கு காரணம் என்ன? இன்றைக்கும் தைரிய மாகச் சொல்லுகின்றானே.

தமிழனுக்குப் புத்தாண்டு சித்திரை தான் என்று சொல்லுகின்றானே. எவ்வளவு பெரிய கொடுமை பாருங்கள். பகுத்தறிவு சாதாரண அறிவு. சிறு பிள்ளை கூட ஒரு கேள்வி கேட்குமே.

தமிழனுக்கு ஆண்டு எது? பிரபவ, விபவ, சுபவ என்று சொல்லுவது உண்மையாக இருக்குமே யானால் ஒரே ஒரு கேள்விக்கு பதில் சொல்லட்டும். துக்ளக் அய்யருக்கு என்ன வேலை என்றால் இந்த மாதிரி வேலை தான் பண்ணிக்கொண்டிருக் கின்றார்.

இன்னும் பல வேலை பண்ணிக்கொண்டிருக் கின்றார். ரொம்ப மிக முக்கியமான வேலை என்னவென்றால் யாராவது அடையாளம் தெரியாத ஆளை கூப்பிட வேண்டியது. உடனே இலக்கியத்தில் ஆதாரம் இருக்கிற மாதிரி சொல்லுவது.

காரணம் என்ன வென்றால் நம்முடைய தோழர்கள் சும்மா இருக்கிறார்கள். இலக்கியம் படித்தவர்கள், மற்றவர்கள் எல்லாம் அதுதான் தவறு. மறுக்க வேண்டிய நேரத்தில் மறுக்க வேண்டும்.

பெருங்கவிக்கோ இருக்கிறார்


இதோ நம்முடைய பெருங்கவிக்கோ இருக் கிறார். பெருங்கவிக்கோ இந்த மாதிரி ஒரு கூட்டத்திற்குப் போனால் சும்மா இருக்க மாட்டார். பழைய காலத்தில் எப்படி சுய மரியாதைக்காரன் எப்படி மேடை ஏறி சட்டையைப் பிடிப்பானோ அது மாதிரி சட்டையைப் பிடிப்பதற்கு தயாரானவர்தான் அவர்.

இன்னமும் அந்த துணிச்சல் அவருக்கு இருக்கிறது. (கைதட்டல்). ஈழப்பிரச்சினை போன்ற சூழலில். நான் கலவரம் பண்ண வேண்டும் என்பதற்காகச் சொல்லவில்லை. கோபப்பட வேண்டிய நேரத்தில் கோபப்பட வேண்டும். ஆத்திரப்படவேண்டிய நேரத்தில் ஆத்திரப்பட வேண்டும். அமைதியாக இருக்க வேண்டிய நேரத்தில் அமைதியாக இருக்க வேண்டும்.

சில நேரங்களில் ரொம்ப பகுத்தறிவு பேசியதாலே இப்படி ஆகிவிட்டோமோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

உணர்ச்சிக்கு ஆட்படக் கூடாது


பகுத்தறிவு என்றால் உணர்ச்சிக்கு ஆட்படக் கூடாது. அறிவு வயப்படு, அறிவு வயப்படு என்று சொல்லி எல்லாவற்றிலும் அறிவு வயப்பட்டுக் கொண்டேயிருக்கின்றான். சில நேரங்களில் அறிவு வயப்பட வேண்டியதும் உண்டு. உணர்ச்சி வயப்படவேண்டியதும் உண்டு. என்னுடைய மகளை, என்னுடைய தாயை ஒருவன் மான பங்கப்படுத்தினால் இதைப் பார்த்து அறிவு பூர்வமாக இதற்கு என்ன செக்சன் வரும்?

அதற்கு என்ன வரும் என்று யோசனை பண்ணிக்கொண்டிருப்பேனா? அப்பொழுது நாம் உணர்ச்சி வயப்படுவோம். அந்த உணர்வு நமக்கு வரவேண்டும்.

தமிழ் ஆண்டுகள் 60 என்று சொல்லுகின் றார்கள். 60க்கு மேல் இருந்தால் இவனுக்கு சொல்வதற்கு வழி கிடையாது. 60 ஆண்டுகளோடு முடிந்துவிட்டது என்பதை பகுத்தறிவு கண்ணோட்டத்தோடு ஏற்க முடியுமா? 60 ஆண்டுகள் என்று பெயர் சொல்லுகின்றார்களே இதில் ஒன்றாவது தமிழ்ச் சொல் உண்டா?

படை எடுப்பிலேயே ஆபத்தான படை எடுப்பு


தந்தை பெரியார் ஏன் இவைகளைப் பற்றிக் கேள்வி கேட்டார். ராமையாவாக அண்ணா மலைப் பல்கலைக் கழகத்தில் நுழைந்த பேராசிரியர் அவர்கள் ஏன் அன்பழகனாக மாறினார்? நாராயணசாமியாக இருந்தவர் நெடுஞ்செழியனாக ஏன் மாறினார்?. அதனுடைய அடிப்படை என்ன? எந்த பெயர் இருந்தால் என்ன? என்று ஏன் அவர்கள் நினைக்கவில்லை?

படை எடுப்பிலேயே ரொம்ப ஆபத்தான படை எடுப்பு பண்பாட்டு படை எடுப்புதான். கைகளிலே கால்களிலே போடப்பட்ட விலங்கு கண்ணுக்குத் தெரியும். ஆனால் மூளையிலே போடப்பட்ட விலங்கு கண்ணுக்குத் தெரியாது.

இந்தத் தொண்டு செய்ய யாரும் முன்வராததால்


அந்தத் திரையில் இருப்பதால்தான் தமிழன் இன்றைக்கும் அடிமையாக இருக்கக்கூடிய சூழ்நிலை இருக்கிறது. அதனால்தான் தந்தை பெரியார் சொன்னார் திராவிடர் சமுதாயத்தை திருத்தி மானமும், அறிவும் உள்ள மக்களாக ஆக்குவதுதான் என்னுடைய ஒரே வேலை என்று சொன்னார். இந்தத் தொண்டு செய்ய எனக்குத் தகுதி உண்டா என்று யாரும் கேட்காதீர்கள். இந்தத் தொண்டை யாரும் செய்ய முன்வராததால்தான் அந்தத் தொண்டை நான் மேற்போட்டுக் கொண்டு செய்கின்றேன் என்று பெரியார் சொன்னார்.

95 ஆண்டுகள் வரையிலே தன்னுடைய மூத்திர சட்டியைத் தூக்கிக்கொண்டு, அலைந்தார் தந்தை பெரியார். இந்த மக்களுக்கு அறிவு கொடுக்க வேண்டும். இந்த மக்களுக்கு உணர்ச்சி ஊட்ட வேண்டும் என்பதற்காகத்தான் அவர்கள் பாடு பட்டார்கள்.

பெரியார் நடத்திய மொழிப்போராட்டமா? அதனுடைய வேர் எங்கே என்று பார்த்தால் இந்த பண்பாட்டுப் படை எடுப்புதான் காரணம் என்றிருக்கும். அரசியல் போராட்டமா? அதனுடைய வேர் இங்கே தான் இருக்கும். பெரியார் சொன்ன உதாரணம் ரொம்ப அற்புதமான உதாரணம். இதுவரையில் யாரும் பதில் சொல்ல முடியாது.

எனக்கு அறிவுப் பற்றுதான் முக்கியம். வளர்ச்சிப் பற்றுதான் முக்கியம் என்று சொன்னார்.

எனக்கு மனிதநேயம்தான் முக்கியம்


இவருக்கு தேச பக்தி இல்லையா? என்று பெரியாரைப் பார்த்துக்கேட்டார்கள். பெரியார் சொன்னார். நான் மனிதனை நேசிக்கிறேன். எனக்கு மனிதநேயம்தான் முக்கியம் என்று சொல்லி ஒரே வார்த்தை கேட்டார்.

என்ன தேச பக்தி. எனக்கு பக்கத்து வீட்டுக்காரன் என்னைத் தொட்டால் குளிக்க வேண்டும் என்று சொல்லுகின்றான். என்னைப் பார்த்தால் ஏழு மைல் ஓட வேண்டும் என்று சொல்லுகின்றான். தீட்டு பட்டுவிடும் என்று ஓடுகிறான்.

யார் அந்நியன்?


பத்தாயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்து வந்தவன். ஹலோ என்று சொல்லி என்னிடம் கைகுலுக்குகின்றான். இவன் எனக்கு அந்நியனா? அவன் எனக்கு அந்நியனா? என்று கேட்டார்.

இதுவரையில் யாராவது பதில் சொல்ல முடிந்ததா? அந்நியன் என்றால் யார்? எனக்கு பக்கத்து வீட்டுக்காரன்தான் அந்நியன் ஆரியன்-திராவிடன் அந்தி வேளையில் கலந்ததா? இடையூறாக இருந்ததா? என்பது பிரச்சினை இல்லை. திராவிடன், ஆரியன் என்பதை இரத்தப் பரிசோதனை செய்து கொண்டு பேசவில்லை. அது பிரச்சினை இல்லை. பண்பாட்டு அடிப்படையில் எங்களுடைய தமிழை இன்னமும் நீச பாஷை என்று சொல்லுகிறாய். தமிழன் அர்ச்சகனாக இருக்கக் கூடாது என்றுசொல்லுகின்றாய்.

தமிழன் அர்ச்சராகவில்லையே


தமிழன் கட்டிய கோவில், தமிழன் வடித்த சிலை, தமிழன் கொடுத்த மானியத்தைப் பெற்றுக்கொண்டு கோவில் கருவறைக்குள்ளே தமிழனை விட மறுக்கிறாய். இன்னமும் நீதிமன்றத்திற்குச் சென்று தடுக்கிறார்களே. இதுதானே பண்பாட்டு அடிமைத் தனம். இதை சொல்லிவிட்டு தந்தை பெரியார் சொன்னார்.

எங்கும் பெரியார் கருத்துகளை பேசக்கூடியவர்


பேராசிரியர் அவர்கள் எங்கு சென்றாலும் பெரியாரின் தத்துவங்களை எல்லாம் பேசாத நாள்கள் எல்லாம் பிறவா நாள்கள் என்று கருதகக்கூடியவர். தெளிவாகச் சொல்லக்கூடியவர். பெரியார் என்ன சொன்னாரோ அந்தக் கருத்தை விரிவாக்கி அதை இன்றைய தலைமுறைக்கும், நாளைய தலைமுறைக்கும் உரையிலே எழுத்திலே இனமானப் பேராசிரியர் அவர்கள் வடித்துக் காட்டியிருக்கின்றார்.

அய்யா அருமையாகச் சொன்னார். சிறைச் சாலைக்குள்ளே போன ஒருவன் விடுதலையாகி வெளியே வரவேண்டும் என்றால் அப்படி வர வேண்டும், எந்த வழியாக அவன் உள்ளே போனானோ எந்த வழியாக அவனை அழைத்துக் கொண்டு போனார்களோ அந்தக் கதவு திறக்கப் பட்டு அவன் வெளியே வர வேண்டும். அதற்குப் பெயர்தான் விடுதலை.

----------------(தொடரும்) 27-1-2012

ஆரியம் படமெடுத்தாடுகிறது தமிழர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

சென்னை பெரியார் திடலில் தமிழர் தலைவர் விளக்கவுரை

ஆரியம் படமெடுத் தாடுகிறது. தமிழர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலகட்டம் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் பேராசிரியர் கருத்தை எடுத்துக்காட்டி விளக்கவு ரையாற்றினார்.

சென்னை பெரியார் திடலில் 5.1.2012 அன்று இரவு முனைவர் ந.க.மங்களமுருகேசன் தொகுத்த இனமானத் தந்தை பெரியார் பாதையில் பேராசிரியர் நூல் வெளியீட்டு விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

ஜன்னலை உடைத்துக்கொண்டு வந்தால் அதற்கு விடுதலை என்று பெயரா? அவருடைய நிலைமை என்ன ஆகும்? மறுபடியும் சிறையில்தானே இருக்க வேண்டும். குறுக்கு வழியிலேயே போக முடியுமா?

மூளையில் போடப்பட்ட விலங்கு

எப்படி மூளையில் விலங்கு போட்டு அவன் அடிமைப்படுத்தி வைத்தானோ. அந்த பண்பாடு, அந்த மொழி அந்த அமைப்பு, அந்த நாகரிகம் இவை மூலமாக நீ அடிமைபட்டாயே அந்த அடிமைத்தனத்திலிருந்து உன்னை வெளியே கொண்டு வரவேண்டாமா? என்று கேட்டுத்தான் அதனுடைய விளைவு தானே சுயமரியாதைத் திருமணம். அதனுடைய விளைவுதானே பார்ப்பனரை நீக்கிய நிலை.

நல்ல மந்திரம் சொல்ல ஆள் இல்லை என்று ம.பொ.சி.சொன்னதை எடுத்து சுப.வீ. சொன்னார். நல்ல மந்திரம் சொல்லியிருந்தால் என்ன சொல்லியிருப்பார்? இவர் வீட்டுப் பெண் காப்பாற்றப் பட்டிருக்குமா?

சோமன் முதலில், கந்தர்வன் இரண்டாவது என்று சொல்லி நமது சமுதாயத்தை அல்லவா இழிவுபடுத்தினான். சோமோ, பிரதமோ,விவிதே, கந்தர்வோ

என்று மந்திரம் சொன்னால் என்ன நிலை. முதலில் புரோகித திருமணம் செய்பவர்களுக்கு நல்ல புத்தி இருந்தால், மானமும், அறிவும் இருந்தால் முதலில் மந்திரத்தில் என்ன சொல்லு கிறார்கள் என்று புரிந்துகொண்டார்களா? அதை புரிந்துகொண்டால்அந்தமந்திரத்தை அனுமதிப்பார்களா?

பார்ப்பன மந்திரத்திற்கு என்ன அர்த்தம்?

மறைமலை அடிகளார் தமிழர் சமயம் என்ற நூலில் சொல்லுகிறார். பெரியாரை விட்டு விடுங்கள். மறைமலை அடிகளார் சொல்லுகிறார். ரிக்வேதத்தில் இருக்கிறது. மற்றதில் இருக்கிறது என்று சொல்லிவிட்டுச் சொல்லுகிறார்.

ஆரிய முறைப்படி மந்திரங்கள் சொல்லி நடத்தக்கூடிய திருமணம் விவாஹம் என்பது நடந்தால் அதிலே எந்தப் பெண்ணும் முதலில் மணமகனுக்குக் கட்டி வைக்கப்படுவதில்லை. மணமகனுக்கு அவர் துணைவி ஆவதில்லை. மனைவியாவதில்லை. மாறாக முதலில் சோமனுக்கு, இரண்டாவது கந்தர்வனுக்கு, மூன்றாவது இவனுக்கு என்று ஆகி நான்காவதாகத்தான் மனுஷ ஜாதிக்கு மனைவியாகிறாள் என்று மந்திரம் சொல்லுகிறார்கள்.

மறைமலை அடிகளார் இந்த மந்திரத்தை விளக்கிச் சொல்லுகிறார். விவாக மந்திரார்த்த போதினி என்ற பெயரில் பார்ப்பனர்களே இந்த மந்திரத்தை நூலாக வெளியிட்டிருக்கிறார்கள்.

பார்ப்பனர் தமிழர் அல்லர்

அது இன்றைக்கு மாற்றப்பட்டதா இல்லையா? தமிழன் தமிழனாக திராவிடனாக தன்னை உணரக் கூடிய நிலை வந்ததா இல்லையா? தமிழன் கண்டாய், ஆரியன் கண்டாய் என்று பிரிக்கும் பொழுது ஆரியன் வேறு தமிழன் வேறு என்று ரொம்பத் தெளிவாகத் தெரிந்துவிட்டது.

பார்ப்பனர் தமிழர் அல்லர். ஒரு அத்தியாயத்தை எழுதியிருக்கிறார் மறைமலை அடிகள் அவர்கள். ஆனால் அதையும் தாண்டி தமிழன், தமிழன் என்று சொல்ல ஆரம்பித்தவுடனே பெரியார் பார்த்தார். எதை சொல்லி வைத்தால் இவனைத் தடுக்க முடியும் என்று பார்த்தார். ரொம்ப சரியான வார்த்தையைப் பிடித்தார்.

திராவிடன் என்று சொன்னால்தான் பார்ப்பான் மறுபடியும் தமிழன் என்ற போர்வையில் வரமாட்டான் என்று நினைத்து சொன்னார். தமிழ் பேசுகிறவன் எல்லாம் தமிழனா? என்று அண்ணா கேட்டாரே.

ரைட் ஹானரபிள் சீனிவாச சாஸ்திரி ரொம்ப அற்புதமாக தமிழ் பேசக் கூடியவர். அவருக்கு வெள்ளி நா படைத்த பேச்சாளர் என்று பெயர். சீனிவாச சாஸ்திரி அற்புதமாக ஆங்கிலம் பேசுகிறார் என்பதால் அவர் வெள்ளைக்காரராக ஆகிவிடுவாரா? தமிழன் என்பதற்கு என்ன அடையாளம் என்பதை விளக்கும் பொழுது அண்ணா சொன்னார். சும்மா தமிழன், தமிழன் என்று எல்லோரையும் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்.

தமிழன் என்றால் யார்?

மொழியால் தமிழன் மட்டுமல்ல. வழியால் தமிழன். விழியால் தமிழன் இந்த மூன்று சொல்லும் எவ்வளவு அழகாக செய்திருக்கிறது பாருங்கள்.

பார்வை என்றால் வெறும் பார்வையில்லை. அவனுடைய நோக்கு. அவனுடைய இலக்கு. இவை அத்தனையையும் பார்க்க வேண்டும்.

தமிழன் இதிலே அடிமையானான் பாருங்கள். அதனுடைய விளைவுதானே சித்திரை தமிழ் வருடப்பிறப்பு. தமிழ் வருடப் பிறப்பு ஆபாசமான அருவருப்பான கதை. நாரதனுக்கும், கிருஷ்ண னுக்கும் குழந்தை பிறந்தது என்று எழுதி வைத்திருக்கின்றான். இதைவிட கொடுமையான அசிங்கம். இதை ஏற்றுக்கொண்டிருக்கக் கூடிய ஆபாசம் வேறு உண்டா?

ஜாதியினால் எவ்வளவு பெரிய கொடுமை நடந்தது என்பதைப் பற்றிச் சொல்லும்பொழுது எவ்வளவோ செய்திகள் இருக்கின்றன.

இலக்கியம் படித்த அறிஞர்கள் நிறைய பேர் இந்த அரங்கத்தில் இருக்கிறார்கள். பல்கலைக் கழகத்தில் படித்துக்கொண்டிருக்கும் பொழுதே சொல்லு கிறார். 1944-லிலே திராவிட நாடு பத்திரிகையிலே நம்முடைய இனமானப் பேராசிரியர் அவர்கள் எழுதிய ஒரு கட்டுரை. பண்பாட்டுப் படை எடுப்பைப் பற்றி எழுதுகிறார்.

இலக்கியங்களில் பற்பல மூடநம்பிக்கைகள் புகுந்து பழைமை மலிந்து மக்கள் கருத்தைப் பாழாக்குகின்றன என்பது ஒரு புறமிருக்க புலவர் பெருமக்களுக்குரிய இலக்கணங்கள்தான் என்ன?

1944இல் பேராசிரியர் சொல்லுகிறார்

இந்த செய்தியை எப்பொழுது எழுதுகின்றார்? 1944இல். இன்றைக்கும் இதை நமது புலவர்களுக்கு நினைவூட்ட வேண்டியிருக்கிறது. தந்தை பெரியார் ஏன் இலக்கியங்களை குறை சொன்னார்?


ஒன்றையும் அவர் விட்டு வைக்கவில்லை என்று சொல்லுவார்கள். அவரைத் தவிர வேறு யாராலும் துணிச்சலாக சொல்ல முடியாது. அதே உணர்வை பேராசிரியர் அவர்கள் கொஞ்சம் கூட மறைக்காதவர்.


அவர்கள் கையில் தூரிகை இருந்ததில்லை. அவர்களுடைய கையில் இருந்தது எக்ஸ்ரே கருவிகள்தான். உடைந்த எலும்பை உடைந்த எலும்பாகக் காட்டினால்தான் அதை ஒட்ட வைக்க முடியும் என்பதில் மாறுபட்ட கருத்து கிடையாது.

இலக்கணத்திலும் மூடநம்பிக்கை

இலக்கியங்களில் மூடநம்பிக்கை புகுந்தது முக்கியமல்ல. இலக்கணத்திலும் புகுந்தது என்பது தான் பேராசிரியர் அவர்களின் கருத்து. ரொம்ப ஆழமானது. இன்றைக்குப் பல புலவர்கள் இதைப் பற்றிப் பேச வேண்டும்.

பேராசிரியர் மேலும் சொல்லுகிறார்.

தொல்காப்பியத்திலே சில இடைச்செருகல் வீர சோழியமும், நன்னூலும் வடமொழி இலக்கியத்தை தழுவியவை. இவைகளின் உரைகளோ ஒப்பியன் மொழி தோன்றாக் காலத்திலேயே தமிழ் மொழி, வடமொழி ஒப்பிலக்கணங்களாக அமைந்தன. ஆனால் பிற்கால இலக்கணங்களில் அய்ந்தெழுத் தால் ஒரு பாடை உண்டென அறையவும் நாணு வரோ மக்கள் என்று இலக்கண கொத்து சாமிநாத தேசிகர் கூறுகின்ற அளவுக்கு தமிழ் இழிந்தது எதனால்? வடமொழி இலக்கணத்தில் ஆழ்ந்து தமிழ்மொழி இலக்கணத்தை புறக்கணித்ததால் அன்றோ? இலக்கியத்திற்குக் கற்பனை துணை என்றாலும் இலக்கணத்திற்கு கற்பனை கேடு பயப்பதன்றோ பேராசிரியர் சொல்லுகிறார்.

ஆரியத்தின் ஊடுருவல்

ஆரியத்தின் ஊடுருவல் வருணாஸ்ரம தர்மம், மனுதர்ம தத்துவம், ஜாதி தத்துவம் எப்படி உள்ளே நுழைந்தது? தந்தை பெரியாருடைய கொள்கையை ஏற்ற நிலையிலே மாணவராக அவர் உருவான காலகட்டத்திலேயே அவர் வெறும் அண்ணா மலைப் பல்கலைக் கழகத்தில் மட்டும் படித்தவராக இல்லை. அய்யாவின் பகுத்தறிவுப் பல்கலைக் கழகத்தில் சுயமரியாதைப் பல்கலைக் கழகத்திலும் படித்தவராக இருந்த காரணத்தினாலே தெளிவாக இந்தக் கருத்தைச் சொல்லுகிறார். இலக்கியத்திற்குக் கற்பனை துணை என்றாலும் இலக்கணத்திற்குக் கற்பனை கேடு பயப்பதன்றோ வெண்பா பாட்டியல். (இங்கே அறிஞர்கள் உட் காந்திருக்கிறார்கள். இவர்கள் அளவுக்கு எனக்குத் தமிழ் தெரியாது. பேராசிரியர் அவர்கள் மாணவராக இருந்தபொழுது துணிச்சலாக சொல்லியிருக் கின்றார். பெரியாருடைய கருத்துகளை பின்பற்றும் பொழுது இந்த கருத்துகள் வரும்.)

வச்சனந்தி மாலை என்ற பிற்கால நூல் எவ்வளவு கற்பனையில் சூழ்ந்ததாகவும், கருத்துக்கு ஒவ்வாத தாகவும் அமைந்திருக்கிறது என்பதை புலவர்கள் நினைத்துப் பார்க்கட்டும். பல்கலைக் கழகங்களில் பாடமாக வைக்கலாமா?

ஏன் இந்த அறியாமை உருவெடுத்து வந்த பாட்டியல் ஏடு பல்கலைக் கழகங்களில் பாடமாய் அமைதல் வேண்டும்? (வச்சனந்தி மாலை என்பதை பல்கலைக் கழகத்தில் பாடமாக வைத்தார்கள். இன்னமும் இந்த அழுக்கு மூட்டை கருத்துகள், அறிவுக்கு ஒவ்வாத கருத்துகள் செல்லரித்த கருத்துகள் தான் இன்றைக்கு நாம் இலக்கியம், இலக்கணம் என்ற பெயராலே மாணவர்களுக்குப் படிப்பு சொல்லிக்கொடுத்துக் கொண்டிருக் கின்றோம். இதை தந்தை பெரியார் கண்டித்தார். இந்த இயக்கம்தான் கண்டித்தது.)

ஒரு பண்பாட்டுப் படை எடுப்பை எதிர்த்து எப்படிப்பட்ட போர் நடைபெற்றது. கருத்துப் போர் அறிவுப்போர் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். மேலும் சொல்லுகிறார்) இதனைப் படிப்பதனால் ஏதாவது பயனிருக்க முடியுமா? என்று கேட்கிறார் பேராசிரியர்.

ஆரியம் படமெடுத்தாடுகிறது

நால்வகை ஜாதியை இந்நாட்டினில் நாட்டினீர் என்று கபிலர் அகவல் ஆரியரைப் பார்த்து முறையிடும் உண்மையை உணர்த்தும் எழுத்திலும் நால்வகை ஜாதியா? (எழுத்தில் நால்வகை ஜாதி என்பது ரொம்ப பேருக்குத் தெரியாது.) உயிரெழுத்தும், மெய் எழுத்தும் முதலெழுத்து உயிர் மெய் சார்பு எழுத்தின் வகையாம் என அறிவுடன் எட்டு ஆயிரம் ஆண்டுகளாய் வழங்கிய உண்மைக்கு மாறாக ஆரியம் புகுந்து வளம் பெற்று தமிழக இலக்கியம் இயற்றும் தொண் டினை ஏற்று மெல்ல, மெல்ல ஆரியப் புலவர் எல்லோர் உள்ளமும் ஆரியக் கருத்துறையும் மடமாக்கி அவர்கள் எழுப்பிடும் ஒலியும், பொருளும் ஆரியத்தை வெளியிடும் நிலையை உண்டாக்கிவிட்டது.

முக்காலத்திலும், மொழி வழங்கிட துணை புரியும் அறிவியற் சாலையாம் இலக்கணத்திலும் ஆரிய நச்சரவு தன்படத்தினை எடுத்து ஆடிடு கின்றது. (பேராசிரியருடைய எழுத்து 1944இல் வெளிவந்தவை) பாட்டியலில் பன்னீருயிரும் முதலாறு மெய்யும் பார்ப்பன வருணம் என்றும் (இலக்கியத்தோடு நிற்கவில்லை. பார்ப்பன படைஎடுப்பு இலக்கணத்திலும் ஊடுருவி விட்டது. மொழியை எப்படிக் கெடுத்தார்கள் என்பதை ரொம்ப அற்புதமாக சொல்லுகின்றார் பேராசிரியர்)

அடுத்த ஆறு மெய்கள் அரச வர்ணமென்றும் நான்கு மெய்கள் வைசிய வர்ணமென்றும் பிற இரண்டும் சூத்திர வர்ணமென்ற ஜாதி (எழுத் திலேயே இப்படி நான்கு ஜாதியை உண்டாக்கி விட்டார்கள் பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திர என்று உண்டாக்கிவிட்டார்கள்)

பிரிவுகள் என்றெண்ணி நாட்டின் அறிஞர் என்று எண்ணப்படும் புலவர் வழங்கிடும் பாவிலும் எழுத்திலும் வருணப் பொருத்தம் வகுத்துள்ளனர்.

சூத்திர எழுத்துகள்

ல,வ,ர,ன என்ற நான்கும் வைசிய எழுத்துகள். ழ, ற என்பன சூத்திர எழுத்துகள் ஆகும். இதிலும் ஒரு உண்மை விளங்குகிறது. (பேராசிரியர் சொல் லுகிறார்). தமிழ் மொழிக்கே சிறப்பாக உள்ள ழ,ற,ண என்ற மூன்று எழுத்துகளும் வைசிய சூத்திர இனமாக அமைக்கப்பட்டுள்ளன.

வடமொழி, ல,ள வாகவும், ஒலித்திடுமானாலும் தமிழுக்கு சிறப்பு தனி எழுத்தாக உள்ளது. ழ வடமொழியில் இல்லை. இதை சூத்திர எழுத்து என்று கூறப்படுவதின் பொருள் என்ன? ஆரியரிடமிருந்து பிரித்துக்காட்டக் கூடிய அளவுக்கு தனித்து வாழ்ந்த திராவிடர்களைத் தான் ஆரியர்-சூத்திரர், தாசி மக்கள் என்று நான்காம் வருணத்தினராய் வழங்கினர் என்பதினுடைய விளைவன்றோ என்று கேட்கின்றார்.

அது மட்டுமல்ல. பாட்டு எழுதும் பொழுது இலக்கணத்தில் விதி வைத்திருக்கின்றார்கள். இங்கே கவிஞர்கள் இருக்கிறார்கள். இதை எல்லாம் இன்றைக்குத் தாராளமாக எழுது கிறார்கள். ஏன்? இந்த இயக்கம் வந்ததினாலே தாராளமாக எழுதுகிறார்கள்.

தலையை வாங்கியிருப்பான்!

பழைய காலத்து ராஜாவாக இருந்தால் தலையை வாங்கியிருப்பான். அதுவும் நமது சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் செய்த கொடுமை சாதாரண கொடுமையல்ல. அது மிகப்பெரிய கொடுமை. அதில் ரொம்ப அழகாக சொல்லு கின்றார்.

பார்ப்பனரை வெண்பாவிலும் (பார்ப்பனருக்கு வெண்பா இடஒதுக்கீட்டை முதன் முதலில் ரிசர்வ் செய்த வர்கள் அவர்கள்தான்) அரசரை ஆசிரியப் பாவிலும் வணிகரை கலிப்பாவிலும் சூத்திரரை வஞ்சிப்பாவிலும் பாட வேண்டுமாம்.

சூத்திரனுக்குவஞ்சிப்பாவை ஒதுக்கியிருக்கின் றார்கள். கவிஞர்கள் இங்கே இருக்கிறார்கள் அவர்களுக்காகவே இதை நான் படிக்க வேண்டும் என்று நினைத்தேன்.

வைசியருக்குப் பலவகை அதற்கடுத்து ஆசிரியப்பா வைசியருக்கு வகை பல குறைந்த கவி சூத்திரர் என்ற திராவிடருக்கு ஆரிய வஞ்சனை உருவெடுத்து வழங்கிய வஞ்சிப்பா. கொஞ்சிடப் பயனற்ற வஞ்சியினம் பல கொண்ட பாவன்று.

இனம் பல கலந்த வெண்பா கலப்புடைய ஆரியத்துக்குப் பண்பால் பொருத்தும் பகுத்து பாகுபடுத்திடும் முறை பொருத்தமுடையதா? தாழ்ப்பாள் இயற்றுமிடத்திலும் ஆரியத்துக்கு முதல் தாம்பூலம் என்ன அழகாக எழுதியி ருக்கின்றார் பாருங்கள். இது கவிதை. இலக்கியம் இலக்கணம். இதெல்லாம் உண்டு.

மகாபாரத சூடாமணி

இன்னொரு செய்தியையும் இந்த இடத்தில் இதற்கு தொடர்பாக சொல்ல வேண்டும். மகாபாரத சூடாமணி, என்று ஒரு நூல் இசைக்கு இந்த நூலை யார் எழுதியவர்கள் என்றால் சங்கீத கலாநிதி முடிகொண்டான் வெங்கட் ராம அய்யர் மற்றும் ஆர்.விசுவநாத அய்யர். சங்கீதாதிராக மேள லட்சணம் என்னும் நான்காம் பகுதியில் கீழ்க் கண்டவாறு கூறப்பட்டுள்ளது.

நம்முடைய மறைந்தும் மறையாமல் நம் நெஞ்சங்களில் இருக்கின்ற இறையனார் இருக்கிறார் பாருங்கள். அவர் நன்றாகப் பாடுவார். அவர் ஒரு முறை இந்த செய்தியை சொல்லி புத்தகத்தையே கொண்டு வந்து காட்டிவிட்டார். அதிலிருந்து தான் நான் குறிப்பெடுத்தே வைத்தேன். வம்சம் நான்கு என்று போட்டு எழுதப்பட்டிருக்கிறது.

பாட்டிலும் ஜாதி

சட்ஜம், மத்திமம் காந்தாரம் இவை மூன்றும் தேவர். (பாட்டு பாடுவதில் ராகத்தில்) பஞ்சமம்-விதுரர். ரிஷபம், தைவதம்-ரிஷிகள், நிஷாதம்-ராட்சதர் வம்சங்களாம்.

பாட்டு நான்கு. அந்தணன் ஜட்சமத்திமமான பஞ்சமே ஜாதி தந்தவைத்த முந்தானே ரிஷபம், சத்திரியனாகும் முன்பு காந்தார நிஷாத மொழித் திடல் வைசியனாகும்.

சிந்தை சேர் அந்தக ஜாதிகள் சூத்திரனாகுமே. சட்ஜமம், மத்திமம் பஞ்சமம் மூன்றும் பிராமண ஜாதி, வைதம், ரிஷபம், இவ்விரண்டும் சத்ரிய ஜாதி, காந்தாரம், நிஷாதம் இவ்விரண்டும் வைசிய ஜாதி, அந்தரகா களீஸ் வரங்கள் சூத்திரஜாதி.

பாட்டில் ஏழு சுரங்கள் பாடினால் கூட அதிலேயும் ஜாதி. இலக்கணத்தில் ஜாதி. வர்ணாஸ்ரம தர்மம். இலக்கியத்தில் வர்ணாஸ்ரம தர்மம். இவை அத்துணையும் இன்றைக்கு இல்லையே. எல்லோரும் பாடுகிறார்கள். சூத்திரன் பாடுகிறான் என்று சொல்லக்கூடிய அளவுக்கு வந்திருக்கிறதென்றால் இதற்கு என்ன காரணம்? பெரியார் பிறந்திருக்கா விட்டால் இதை எடுத்துச் சொல்ல பேராசிரியர் போன்றவர்கள் விளக்கியிருக்காவிட்டால் இந்த வாய்ப்பெல்லாம் கிடைக்குமா?

பண்பாட்டுப் படை எடுப்பை முறியடிக்க அவர்களுடைய ஆதிக்கத்தை மறுபடியும் கொண்டு வரலாம் என்கின்ற சூழ்நிலைகள் இன் றைக்கு உருவாகிக்கொண்டிருக்கின்ற.ன தமிழர்களே நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? அதை சொல்வதற்குத் தான் தமிழ்ப்புத்தாண்டு வருகிறது.

கலைஞர் சட்டம் கொண்டு வந்தார் என்பதற்காக தடுக்கப்பார்க்கிறார்கள். எந்த சட்டத்தை தடுத் தாலும் தமிழர்களுடைய திராவிடர்களுடைய திருநாள் ஒரே திருநாள் தை முதல்நாள்தான் என்பதைக் கொண்டாடக் கூடிய அளவிற்கு ஒரு பெரிய பண்பாட்டுப் படை எடுப்பை முறியடிக்கக் கூடிய புரட்சியை ஆழமாக அமைதியாக உறுதியாக செய்யுங்கள். பெரியார் திடலில் மூன்று நாள்கள் தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழா கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் தமிழ்ப்புத்தாண்டு கொண்டாடுங்கள்.

நம்மால் மட்டும்தான் முடியும். கொள்கை உள்ளவர்களால் முடியும். இலட்சியத்திலே நம் பிக்கை உள்ளவர்களால் முடியும். தங்களை சமுதாயத்திற்காக அர்ப்பணிக்கத் தயாராக இருக்கிறவர்களால் முடியும் என்ற உணர்வோடு இந்த புத்தகத்தை வாங்குங்கள். படியுங்கள். படிப்பதோடு நிறுத்திக்கொள்ளாதீர்கள். உங்கள் ரத்தங்களிலே இந்த உணர்வுகளை எற்றிக்கொள் ளுங்கள் என்று கூறிமுடிக்கின்றேன்.

-இவ்வாறு தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

---------------------"விடுதலை” 28-1-2012


30.1.12

பகுத்தறிவுக்கு தடை செய்யவே கிளர்ச்சிகள்! - பெரியார்

தந்தை பெரியார் அவர்கள் நன்றி தெரிவித்துப் பேசுகையில் குறிப்பிட்டதாவது:-

பேரன்புமிக்க தலைவர் அவர்களே, தாய்மார்களே, தோழர்களே!

எனது 87-ஆம் பிறந்த நாள் என்ற பேரால் பெரிய ஏற்பாடுகள் செய்து பணப் போர்வை போர்த்தியும் பல அன்பளிப்புகள் செய்தும் பெருமைப் படுத்திய கழகத் தோழர்களுக்கும், மகளிர் கழகத்திற்கும் எனது நன்றியறிதலை தெரிவித்துக் கொள்ளுகின்றேன். சென்ற ஆண்டும் இதுபோல செய்தீர்கள். எதற்காக இப்படிச் செய்கின்றீர்கள் என்றால், எனது தொண்டை உற்சாகப்படுத்தும் முறையில் இப்படிச் செய்கின்றீர்கள்.

எனது தொண்டு உங்களுக்குத் தெரியும். மனித சமுதாயத் தொண்டு சாதாரணமான தொண்டல்ல. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக மக்களிடையே இருந்து வருகின்ற இழிவை, அறியாமையைப் போக்கச் செய்யப்படும் தொண்டாகும்.

இன்றைக்கு சட்டசபைக்குப் போக வேண்டும். மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்க வேண்டும். பதவிக்குப் போக வேண்டும். பொறுக்கித் தின்ன வேண்டும் என்பதைத் தான் பொதுத் தொண்டாகக் கொண்டவர்கள் இருக்கின்றார்களே ஒழிய, மனித சமுதாயத்தின் திருத்தப்பாட்டுக்குத் தொண்டாற்ற எவரும் இல்லை. மனித சமுதாயத்துக்காக உழைத்தார்களா என்று பார்ப்போமானால், விரலை விடக்கூட ஒரு ஆள் இல்லை.

இந்த நாட்டில் எத்தனையோ மகான்கள், மகாத்மாக்கள், அவதார புருஷர்கள் எல்லாம் தோன்றியுள்ளார்கள் - ஒருவருக்குக்கூட கவலை இல்லை. இந்தியாவுக்கு வெளியே போனால், நம் நாட்டைப் பற்றி அவர்கள் என்ன எண்ணிக் கொண்டு இருக்கின்றார்கள் என்றால், மூட நம்பிக்கையைக் கொண்ட மக்களைக் கொண்ட நாடு, காட்டுமிராண்டி நாடு என்று தான் கருதுகின்றார்கள். உலகத்தினர்கள் கண்களுக்கு முன்னால் நாம் சுத்த காட்டு மிராண்டிகள் என்று எண்ணப்படுகின்றோம்.

இன்றைக்கு உலகம் மளமளவென்று வளர்ந்து கொண்டே போகின்றது. விஞ்ஞான அதிசய அற்புதங்களை எல்லாம் கண்டு உன்னத நிலைக்குப் போய்க் கொண்டு இருக்கிறார்கள். ஆனால், நம் நாடு மட்டும் காட்டுமிராண்டி நிலையிலேயே இருக்கின்றது.

நமது காட்டுமிராண்டி நிலைக்குக் காரணம் நமது மதங்கள், இலக்கியங்கள், கடவுள்கள், சாஸ்திரங்கள் இவைகள் என்றுதான் சொல்லலாம். இப்படி கடவுள், மதம், சாஸ்திரம் என்பவைகள் எல்லாம் நமக்கு மட்டும் அல்ல, உலகில் மற்ற நாட்டினருக்கும் இருக்கின்றது. கிட்டத்தட்ட 100, 120 கோடி மக்களுக்கு மட்டும் கடவுள் இல்லை. இவைகள் ரஷ்யா போன்ற சில நாடுகள் தான் இவைகளை நீக்கிப் பார்த்தால் மற்ற நாட்டுக்காரர் களுக்கு எல்லாம் கடவுள் உண்டு, மதம் உண்டு, சாஸ்திரமும் உண்டு. இவர்கள் 150 - 200 கோடி இருப்பார்கள். அப்படித்தான் மேல் நாட்டுக்காரர்கள் புத்தகங்களே எழுதி வெளியிட்டுள்ளார்கள்.

நம் நாட்டைத் தவிர மற்ற நாடுகளில் உள்ள மதங்கள், கடவுள்கள், சாஸ்திரங்கள் பகுத்தறிவையோ, விஞ்ஞானத் தையோ புதுப்புது கண்டுபிடிப்புகளையோ தடை செய்து குறுக்கே நிற்கவில்லை. உலகில் கிறித்தவர்கள், முஸ்லிம்கள் ஆகிய இரண்டு சமுதாயமும் பெரிய எண்ணிக்கையைக் கொண்ட மதத்தினர்கள் ஆவார்கள். அவர்களுக்கு நம்மைப் போல பல கடவுள்கள் இல்லை. பல சாஸ்திரங்கள் இல்லை. ஒரே கடவுள், ஒரே சாஸ்திரம்தான் உண்டு. அவர்களுக்கு எல்லாம் மதத்திற்கு ஒரு தலைவன்தான் உண்டு. ஒன்று அல்லாமல் இரண்டு என்று நம்புகின் றவன் கிறித்துவனோ, முஸ்லிமோ ஆகமாட்டான். அவன் அஞ்ஞானி என்றே கருதப்படுவான்.

கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய மூன்று துறைகளிலும் நாம் எவ்வளவு மடையர்களாக உள்ளோம் என்பதை நினைத்துப் பாருங்கள். கிறித்துவ மதத் துக்கோ, முஸ்லிம் மதத்துக்கோ என்றைக்கு முதல் ஏற்பட்டது என்பதற்கு காலக் குறிப்பு உள்ளது.

நமது மதத்துக்குக் குறிப்பே கிடையாதே. நமக்கு எது மதம்? எது சாஸ்திரம்? எது முதல் ஏற்பட்டது? என்பதற்கு ஆதாரமே கிடையாது. பார்ப்பான் நமது மதத்தையே வேத மதம் என்றுதான் கூறுவான். நமது மானங்கெட்டவர்கள் ஆமாம் என்று ஒத்துக் கொள்ளுவார்கள்.


வேதம் என்றால் என்ன என்று எவனுக்காவது தெரியுமா என்றால் தெரியாது. நாம் ஏன் சூத்திரன்? தீண்டத்தகாதவன் என்றால் இந்து மதப்படி, கடவுள்படி, சாஸ்திரபடி தான் ஆகும். இவை எல்லாம் ஒழிக்கப்பட வேண்டும் என்று நான் தொண்டாற்று கின்றேனே, இதற்காகத்தான் இப்படி பாராட்டுகின்றீர்கள்.

கிறித்தவரும், முஸ்லிமும் கடவுள் ஒருவர்தான், உருவம் கிடையாது. அவருக்கு ஒன்றும் வேண்டியது இல்லை. அவர் கருணையானவர், அன்பானவர், அருளாளர் என்று தான் கூறுகின்றார்கள்.

நமது கடவுள் இப்படியா பல கடவுள், பல உருவங்கள், பெண்டு பிள்ளைக் குட்டிகள், சோறு, சாறு, கல்யாணம், கருமாதி எல்லாம் பண்ணுகின்றானே. எந்தக் கடவுளை எடுத்தாலும் கையில் அரிவாள், கொடுவாள், வேலாயுதம், சூலாயுதம் இவற்றை அல்லவா கொடுத்து உள்ளீர்கள்.

இவற்றை எல்லாம் கண்டிக்க, புத்தி கூற எங்களை தவிர யார் உங்களுக்கு பாடுபட்டார்கள்?


இத்தகைய மடமைகளை எல்லாம் மாற்ற நமது அரசாங்கத்துக்கு சக்தி போதவே இல்லை. நம்மை மனிதத் தன்மையில் பழக்கும்படியான நூல்கள் நம்மிடையே இல்லையே? நமது நாட்டில் ஏராளமான பத்திரிகைகள் இருக்கின்றன. ஒருவன்கூட மக்களை திருத்தும்படியாக நாலு வரிகூட எழுதுவது கிடையாது. மக்களை மடத்தனத்தில் ஆழ்த்தும்படியான செய்திகளைத் தான் வெளியிட்டு காசு சம்பாதிக்கின்றார்கள்.

எனவே, இந்த நாட்டில் பகுத்தறிவு ஊட்டக் கூடிய சாதனங்களே இல்லாமல் போய் விட்டதே! ஏதோ, காமராஜர், நேரு ஆகியவர்கள் முயற்சியின் காரணமாக கடந்த 10 ஆண்டுகளில் ஓரளவுக்கு மாறுதல் ஏற்பட்டுள்ளது.

இன்றைக்கு ஆட்சிக்கு எதிர்ப்பாக, காங்கிரசுக்கு எதிர்ப்பாக போராட்டங்கள் நடைபெறுகின்றது என்றால் எதற்காக நடக்கின்றது? பகுத்தறிவு வளர்ச்சிக்கு எதிர்ப்பாகத்தான்.

காங்கிரஸ் ஆட்சி நல்ல ஆட்சி என்று வாதாட வரவில்லை. இது போய்விட்டால் இன்று விடப் பல மடங்கு கேடான ஆட்சி தானே ஏற்படும்? என்பதற்காகத்தான் ஆகும்.

தோழர்களே, நாட்டில் எப்படி இத்தனை கடவுள்கள் தோன்றியுள்ளன. நமது முட்டாள்தனத்தை முதலாகக் கொண்டுதானே ஆரம்பிக்கப்படுகின்றன?

இந்த நாட்டில் மதத் துறையில், கடவுள் துறையில், சாஸ்திர, சம்பிரதாயத் துறையில் எவ்வளவு முட் டாளாக இருக்கின்றோமோ, அவ்வளவு முட்டாள் களாகத்தானே அரசியல் துறையிலும் இருக்கின்றோம்.

------------------17.9.1965 அன்று பெங்களூருவில் நடை பெற்ற விழாவில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை - விடுதலை 23.9.1965

29.1.12

பெரியார் எழுதிய - பதிப்பித்த நூல்கள்

(கழக பொதுச் செயலாளர் கலி. பூங்குன்றன் 24.12.2011 அன்று வானொலியில் ஆற்றிய உரை)


நான் எழுத்தாளன் அல்லன்; பேச்சாளன் அல்லன்; கருத்தாளன் என்று தந்தை பெரியார் அவர்கள் கூறுவார்.

தந்தை பெரியார் கருத்தாளர் என்பது அறியப்பட்ட உண்மை என்றாலும், அவர் எழுத்தாளர் அல்லர் என்று சொல்ல முடியாது; அன்னை நாகம்மையார் மறைந்த போதும், ஏ.டி. பன்னீர்செல்வம் அவர்கள் மறைந்தபோதும் அவர் எழுதிய எழுத்துகள் இரங்கல் இலக்கிய வரலாற்றில் என்றென்றுமே பேசப்படும்.


தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்ட குடிஅரசு இதழின் 16 ஆம் ஆண்டு தொடக்க இதழில் (18.8.1940, பக்கம் 10) எழுதும் அவர் சிங்க நடை இதோ:

பயங்கரமான பாதை!

பயமா அது என்னை என்ன செய்யும்?

சறுக்கு நிலம்! சந்திரனில்லா இரவு!!

காலை ஊன்றி நடப்பேன்!

கண்ணை அகலத் திறந்து பார்ப்பேன்!

பசியும், தாகமும் வாட்டும்

கிடைத்ததைப் புசிப்பேன் -

புதர்களிலிருந்து பலர் வெளிவந்து தாக்குவர்!

நான் கோழையல்ல!!

உனக்கு முன் பலர் இப்படித்தான் சென்று மாண்டனர்!!

நானும் அந்த வழியே செல்லுகிறேன் உயிர் வெல்லமல்ல!

நீ வெற்றி பெறுவது கஷ்டம்!

நான் என் கடமையைச் செய்கிறேன்!

உருவகமாக எழுதப்பட்ட தந்தை பெரியாரின் இந்த எழுத்துக்களில் துடிக்கும் துணிவை, வீரத்தை மனக்கண் முன் காண்கிறோமே!
எதைச் சொன்னாலும், எழுதினாலும் அவை பெரியாரின் தனித் தன்மையான சுய சிந்தனைகளாகும்.

தன்னைப்பற்றி பெரியார் சொல்கிறார்:

நான் எனது கொள்கைக்கு - பேச்சுக்கு எந்த மேற்கோளையும் காட்டி விளக்குபவன் அல்ல. அப்படி அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று தேடித் திரிபவர்களின் செயல் அறிவுடைமை ஆகாது. ஆனால், நான் கூறிய கருத்துக்கு ஆதரவாக இன்னாரும் கூறியுள்ளார் என்று எடுத்துக்காட்ட வேண்டுமே அல்லாது, இன்ன இன்னார் இன்ன இன்ன கூறியுள்ளார் - ஆகவே நான் கூறுகிறேன் என்று எடுத்துக்காட்டக் கூடாது. (விடுதலை, 26.2.1961)

என்று கூறும் தன்னிலை விளக்கத்தைக் கவனிக்கத் தவறக்கூடாது.

தந்தை பெரியார் அவர்களை அறிந்தவர்களுக்கு இச்சொற்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்தாது.

சென்னை சட்டக் கல்லூரியின் இயக்குநரும், பிற்காலத்தில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியுமான ஏ.எஸ்.பி. அய்யர் - தந்தை பெரியார் கலந்துகொண்ட சென்னை சட்டக் கல்லூரி முத்தமிழ் விழாவுக்குத் தலைமை ஏற்றபோது சொன்ன கருத்துக் கணிப்பு முக்கியமானது (10.2.1960).

கீழை நாடுகளைப்பற்றி பெர்ட் ரண்ட் ரசல் ஒரு நூலில் எழுதும் போது, இங்குள்ளவர்கள் எதை எழுதினாலும், பேசினாலும் மேற் கோள்காட்டிப் பேசுவதுதான் வழக்கம். தனது கருத்து என்று வெளியிட மிகவும் தயங்குவார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார். நான் அறிந்தவரையில் மேற்கோள் காட்டிப் பேசாமல் தன் அறிவையே முன்னி றுத்திப் பேசும் தனித்த சிந்தனை யாளர் பெரியார் ஒருவர்தான் என்று குறிப்பிட்டார் நீதிபதி ஏ.எஸ்.பி. அய்யர் அவர்கள்.

திருக்குறளைப்பற்றி சொல்லும் பொழுதுகூட நான் சொன்ன கருத்தை திருவள்ளுவர் சொன்னார் என்று சொல்வாரே தவிர திருவள்ளுவர் கருத்தைத்தான் நான் சொல்லுகிறேன் என்று சொல்லமாட்டார் சிந்தனைச் சிற்பியான பெரியார்.

பேச்சு என்று எடுத்துக் கொண் டாலும், பெரியாருக்கு நிகர் பெரி யார்தான்.

கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர் கள் மிக நேர்த்தியாக தந்தை பெரியார் அவர்களின் பேச்சை படம் பிடித்துக் காட்டியுள்ளார்.

தமிழ்நாட்டில் இராமசாமியாரின் பிரசங்கம் ஒன்றை மட்டும்தான் மூன்று மணி நேரம் உட்கார்ந்து கேட்க முடிவுமென்று தயங்காமல் கூறுவேன். அவர் உலகானுபவம் என்னும் கலாசாலையில் முற்று முணர்ந்த பேராசிரியர் என்பதில் சந்தேகமில்லை. எங்கிருந்துதான் அவருக்கு அந்தப் பழமொழிகளும், உபமானங்களும், கதைகளும், கற்பனைகளும் கிடைக் கின்றனவோ நானறியேன் என்று தந்தை பெரியார் அவர்களின் பேச்சுக் குறித்து கல்கி கூறியுள்ளார்.

பத்திரிகைத் துறையில் பழுத்த அனுபவசாலி பெரியார்; 1925 ஆம் ஆண்டிலேயே குடிஅரசு இதழைத் தொடங்கி நடத்தியவர்; ஒரு கட்டத்தில் அனைத்தையும் அவரே எழுதிக் குவித்த நிலைகள் உண்டு.

அவரால் தோற்றுவிக்கப்பட்ட ஏடுகளின், இதழ்களின் பெயர்கள் தனித் தமிழ் மட்டுமல்ல; தனித்தன்மையும் கொண்டவையாகும்.
குடிஅரசு, பகுத்தறிவு, புரட்சி, விடுதலை, உண்மை என்ற பெயர்கள் அதனைப் பறைசாற்றும்.

வணிக நோக்குக்காக அவர் ஏடு நடத்தியது கிடையாது. கருத்துப் பிரச்சாரம்தான் அதன் முதன்மையான நோக்கமாகும்.

நீங்கள் எந்தப் புத்தகத்தைப் படித்தால்தான் என்ன பயன்?

படிப்பு என்பது அறிவு உண்டாவதற்கு. ஆனால், நீங்கள் படிக்கும் புத்தகம் எல்லாம் மடமை வளர்ப் புக்கும், மூடநம்பிக்கை ஏற்படவும் பயன்படுகிறது. அதனால்தான் இன்றும் நம் மக்கள் பகுத்தறிவற்று இருக்கிறார்கள்...

நீங்கள் குடிஅரசு பதிப்பகப் புத்தகங்களை வாங்கிப் படித்தால் கட்டாயம் பகுத்தறிவுவாதி ஆகிவிடு வீர்கள்.

இந்தப் புத்தகம் மதம், ஜாதி, நாடு, அரசியல் துறைகளில், அவற்றில் உள்ள புரட்டுகளை விளக்கி, உங் களைப் பகுத்தறிவுவாதிகளாக ஆக்கும். விலை மிகமிக மலிவுக்கு பொது நலத்தை முன்னிட்டு, நட்டத்திற்குப் பதிப்பிக்கப்படுகிறது என்று கூறியுள்ளார் பெரியார் (1962).

பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் மற்றும் திராவிடர் கழக வெளியீடுகள் இன்றுவரைகூட இந்த அடிப்படைத் தடத்தில்தான் பயணிக் கின்றன.

கருத்துப் பிரச்சார இலாபம்தான் இந்த வெளியீடுகளைக் கொண்டு வருவதன் அடிப்படை நோக்கமாகும்.

பெரியார் அவர்கள் பொதுக்கூட்டங்களில் பேசி முடித்து, வாகனத்தில் ஏறும்போது அவர் கேட்கும் முதல் கேள்வி, இன்றைக்கு எவ்வளவு ரூபாய்க்குப் புத்தகங்கள் விற்றன? என்பதுதான் அந்தக் கேள்வி.

பெருங்கூட்டம் இருந்து நூல்கள் விற்பனை குறைவாக இருந்தால், அவர் கருத்து பிரயோசனமற்ற கூட்டம்; மக்கள் கூட்டம் குறைவாக இருந்து நூல்கள் விற்பனை அதிகமாக இருந்தால், பயனுள்ள கூட்டம் என்பது அய்யாவின் கணிப்பு!

நூல்கள் பரவுதல் மூலம்தான் மக்கள் மத்தியில் கருத்துப் போய்ச் சேரும் என்பது பெரியார் அவர்களின் கருத்துக் கணிப்பாகும்.

இலட்சியத்தை நிறைவேற்றுவதில் பெரியார் கண்ட இயக்கத்தின் அணுகுமுறைதான் இரண்டு.

ஒன்று பிரச்சாரம் - மற்றொன்று போராட்டம். சுவர் கடிகாரத்தின் நடுத்தண்டு அசைவது போன்றது அது.

பெரியார் பேசி, எழுதி வெளிவந்த நூல்கள் நீண்ட பட்டியலுக்கு உரிய வையாகும்.

அறிவு விருந்து

கடவுள் மறுப்புத் தத்துவம்

வைக்கம் வீரர் சொற்பொழிவு

இராமாயண ஆபாசம் (முதற்பதிப்பு)

கர்ப்ப ஆட்சி

ஈ.வெ.ரா. இலங்கை உபந்யாசம்

ஈ.வெ.ரா. சீர்திருத்த மாநாட்டு உபந்யாசம்

சமதர்ம உபந்யாசம்

சோஷியலிசம்

சோதிடப் புரட்டு

பொதுவுடைமைத் தத்துவங்கள்

ெண் ஏன் அடிமையானாள்?

தமிழர் - தமிழ்நாடு - தமிழர் பண்பாடு

பிரகிருதிவாதம்

மதம் என்றால் என்ன?

குடிஅரசுக் கலம்பகம் (முதற்பாகம்)

சோதிட ஆராய்ச்சி

தமிழ்நாடு தமிழருக்கே!

திருவாரூர் மாநாட்டுத் தலைமையுரை

இனிவரும் உலகம்

இராமாயணப் பாத்திரங்கள்

தமிழ் இசை நடிப்புக் கலைகள்

கிராமச் சீர்திருத்தம்

உண்மைத் தொழிலாளி யார்?

தொழிலாளியின் இலட்சியம் என்ன?

இன இழிவு நீங்க இஸ்லாமே நன் மருந்து

தத்துவ விளக்கம்

விழாவும் நாமும்

தில்லையில் பெரியார்

சுயமரியாதை இயக்கத்தைத் தோற்று வித்தது - ஏன்?

திராவிடர் கழக இலட்சியம்

திராவிடர் ஆரியர் உண்மை

மொழி - எழுத்து

தூத்துக்குடி மாகாண மாநாட்டுத் தலைமை உரை

இந்திப் போர் முரசு (பெரியார் ஈ.வெ.ரா. மற்றும் தலைவர்கள்)

மொழியாராய்ச்சி

திருக்குறளும் திராவிடர் கழகமும்

மேல்நாடும் கீழ்நாடும்

புரட்டு, இமாலயப் புரட்டு!

புரட்சிக்கு அழைப்பு

முதலாளி தொழிலாளி ஒற்றுமைப் பிரச்சினை

சிந்தனைத் திரட்டு

கடவுள்

புராண ஆபாசங்கள்

அய்க்கோர்ட் அவதூறு வழக்கில் பெரியார் ஸ்டேட்மெண்ட்டும் தீர்ப்பும்

சித்திரபுத்திரன் எழுதுகிறார்

போர்ச் சங்கு

வெளியேறு!

நாடகமும், சினிமாவும் நாட்டை நாசமாக்குகின்றன

சுயமரியாதைத் திருமணம் ஏன்?

வாழ்க்கைத் துணைநலம்

நீதி கெட்டது யாரால்?

சித்திரபுத்திரன் கட்டுரைகள்

ஜனநாயகம்

அறிவுச் சுடர்

வாழ்க்கைத் துணைநலம்

தாய்ப் பால் பைத்தியம்

ஆச்சாரியார் ஆட்சியின் கொடுமைகள்

அய்க்கோர்ட்டின் நீதிப்போக்கு (இரு பாகங்கள்)

தமிழ்நாடா? திராவிட நாடா?

மனுநீதி ஒரு குலத்துக்கு ஒரு நீதி

ஆச்சாரியார் ஆத்திரம்

தீண்டாமையை ஒழித்தது யார்?

மறுத்தலும் பகுத்தறிவும்

கழகமும் துரோகமும்

புராணம்

மதுவிலக்கின் இரகசியங்கள்

தமிழருக்குச் சோதனை காலம்

ஏன் இல்லை - எல்லோருக்கும் கல்வி, உணவு, உடை, வீடு?

இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி

அறிவுச் சுடர்

மதச் சார்பின்மையும், நமது அரசும்

கடவுளும், மனிதனும்

கடவுள் குழப்பம்

நமது இன்றைய நிலையும் - பரிகாரமும்

புத்த நெறி

சுயநலம் பிற நலம்

கடவுள் ஒரு கற்பனையே!

பெரியார் பேசுகிறார்

கோயில் பகிஷ்காரம் ஏன்?

உயர் எண்ணங்கள்

பெரியாரின் மரண சாசனம் (இறுதிச் சொற்பொழிவு) - என்று ஒரு நீண்ட பட்டியலே உண்டு.

பெரியார் பதிப்பித்த நூல்கள்

ஞானசூரியன்

இந்தியாவின் குறைபாடுகள் Temple Entry (English)

லெனினும் மதமும்

கடவுளும், பிரபஞ்சமும்

கைவல்யம் அல்லது கலைக்கியானம்

இராமாயண ஆராய்ச்சி

பாரத ஆராய்ச்சி

மேயோ கூற்று மெய்யா, பொய்யா?

இராமலிங்க சுவாமிகள் பாடல் திரட்டு

சுயமரியாதைப் பாடல்

சுயமரியாதைத் தாலாட்டு

பர்னாட்ஷா உபந்யாசம்

போல்ஷ்விக் முறை

மதப் புரட்சி (ஜோசப் மெக்கேல் - மொழி பெயர்ப்பு)

முன்னேற்றத்திற்கு மதம் முட்டுக்கட்டை

மதம் மக்களுக்குச் செய்த நன்மை என்ன?

பாதிரியும், பெண்களும், பாவமன்னிப்பும்

மதமும் விஞ்ஞான சாஸ்திரமும்

பிரபஞ்ச உற்பத்தி

நான் ஏன் கிறிஸ்தவனல்ல? (ரசல் - மொழி பெயர்ப்பு)

நான் சம்சயவாதி ஆனதேன்? - இங்கர்சால்

பகத்சிங்கின் நான் நாத்திகன் ஏன்? (ப. ஜீவானந்தம் மொழி பெயர்ப்பு)

பகுத்தறிவு அல்லது கத்தோலிக்க குருவின் மரண சாசனம் (மூன்று பாகங்கள்)

கைவல்ய சுவாமியார் கட்டுரைகள் (இரண்டு பாகங்கள்)

தமிழர் தலைவர் (பெரியார் வரலாறு)

சாதிக் குறி (தமிழ்)

Caste Mark 111 (ஆங்கிலம்)

Periyar - A Pen Portait (English)

பிர்லா மாளிகை மர்மங்கள்

சாதியை ஒழிக்க வழி

அப்பரும் சம்பந்தரும்

லெனினும் மதமும்

மார்க்ஸ் - ஏஞ்சல்ஸ் அறிக்கை

பொதுவுடைமை வினா-விடை

பலசரக்கு மூட்டை (குத்தூசி தொகுப்பு நூல்கள் - இரு பாகங்கள்)

அகத்தியர் ஆராய்ச்சி

மெய்ஞானமுறையும் மூட நம்பிக்கையும் (2 பாகங்கள்)

பெரிய புராண ஆராய்ச்சி

கோயில்கள் தோன்றியது ஏன்?

திருக்குறளும் - பெரியாரும்

நரகம் எங்கே இருக்கிறது?

கடவுள் தோன்றியது எப்படி? (இரண்டு பாகங்கள்)

கடவுளர் கதைகள்

உண்மை இந்து மதம் எது?

பேய் - பூதம் - பிசாசு

இரண்டு வழிகள்

பெரியார் ராமசாமி அவர்களைப் பற்றி....

மதப் புரட்சி

ஊழல் எங்கே? (நகர்வாலா மோசடி)

பகுத்தறிவு மணம்

கலியுக சமாதானம்

நமது குறிக்கோள்

இங்கர்சாலின் ஜீவிய சரித்திரம்

இந்தி எதிர்ப்புப் பாடல்கள்

காரல் மார்க்ஸ்

பஞ்சமா பாதகங்கள்

இராவணப் பெரியார்

சமதர்மக் கீதங்கள்

வால்டையரின் வாழ்க்கைச் சரிதம்

விவாக விடுதலை

இந்திய மாதா

இங்கர்சால் பொன்மொழிகள்

புராண ஆபாசங்கள்

கடவுளை நிந்திக்கும் கயவர்கள் யார்?

கோவில் பூனைகள் (கோவை கிழார்)

நமக்கு வேண்டியது எது? சுயராஜ்யமா? சமதர்ம ராஜ்யமா? (மூன்று பாகங்கள்)

பெரியாரும் - இராமலிங்கரும்

பெரியார் ஒரு சகாப்தம்

கடவுள் தோன்றியது எப்படி?

(ஆங்கிலத்தில் கிராண்ட் ஆலன் தமிழில் பேராசிரியர் வெள்ளையன் மொழி பெயர்ப்பு)

இன்னும் ஏராளம் உண்டு.

ஓர் இயக்கத்தின் கொள்கையைப் பரப்புவதற்காக ஒரு நிறுவனத்தை நிறுவி அவற்றின் சார்பாக வெளியீடு களைக் கொண்டு வந்து மக்கள் மத்தியில் பரப்பும் பணியைத் திட்ட மிட்டுச் செய்த ஏற்பாடு தந்தை பெரியார் அவர்களுக்கே உரித்தானதாகும். அவர் செய்து வைத்த ஏற்பாடுகள் இன்றுவரை தொடர்ந்து கொண்டு இருக்கின்றன - மேலும் செழுமைப்படுத்தப்பட்டும் உள்ளன.

தந்தை பெரியார் அவர்களின் வெளியீடுகள் இரண்டு வகையானவை. உயர் எண்ணங்கள் மலரும் சோலை என்று புரட்சிக்கவிஞரால் போற்றப் பெற்ற பெரியார் அவர்களின் சுயசிந்தனைக் கருத்துக்களைக் கொண்டவை ஒருவகை.

எடுத்துக்காட்டாக, தத்துவ விளக்கம், மெட்டீரியலிசம் அல்லது பிரகிருதவாதம், இனிவரும் உலகம் போன்றவை.

சோதனைக் குழாய்க் குழந்தை யைப்பற்றி விஞ்ஞானிகள்கூட கற் பனை செய்திராத காலகட்டத்தி லேயே 1938இல் சிந்தித்துச் சொன்ன சமூக விஞ்ஞானி - தொலைநோக்காளர் பெரியார்.

இன்னொரு வகை நூல்கள் - எதிரிகளின் ஆயுதங்களைக் கொண்டே எதிரிகளைத் தாக்கி அழிக்கும் ஆதாரங்களைக் கொண்ட நூற்கள்.

எடுத்துக்காட்டாக தந்தை பெரியார் அவர்களின் இராமாயணப் பாத்திரங்கள் மற்றும் இராமாயணக் குறிப் புகள். இதுவரை 50-க்கும் மேற்பட்ட பதிப்புகளாக இலட்சக்கணக்கில் மக்களிடம் போய்ச் சேர்ந்துள்ளன. இந்தியிலும், ஆங்கிலத்திலும், மராட் டியத்திலும் மொழி பெயர்க்கப்பட்டு வெளி வந்துள்ளன.

இந்த நூலில் காணப்படும் ஆதாரங்களை மூல நூல்களில் இருந்து எடுத்துக்காட்டி கூட்டங்களில் பெரியார் பேசுவார். அதன் விளைவு என்ன தெரியுமா? அந்த மூல நூல்களிலிருந்து அடுத்த பதிப்பில் மாற்றம் செய்யப் பட்டதும் உண்டு. அந்த மாற்றம் செய்யப் பட்ட நூல்களையும் பொதுக்கூட்ட மேடை களில் எடுத்துக்காட்டுவார்.

லாகூரில் ஜாட்-பட் தோடக் என்னும் ஜாதி ஒழிப்புச் சங்கம் நடைபெற்றது. அவர்கள் நடத்த இருந்த ஜாதி ஒழிப்பு மாநாட்டுக்குத் தலைமை வகிக்கும்படி அண்ணல் அம்பேத்கர் கேட்டுக்கொள்ளப் பட்டார். தலைமை உரையை எழுதி அனுப்பினார் அம்பேத்கர். அதில் கண்டுள்ள சில பகுதிகளை நீக்கி விடுமாறு அச்சங்கத் தார் கேட்டுக் கொண்டனர். அம்பேத்கர் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. அந்தத் தலைமை உரையை, அம்பேத்கர் அவர் களிடமிருந்து ஜாதியை ஒழிக்கும் வழி என்னும் தலைப்பில் தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டவர் பெரியார். முதல் பதிப்பு 1936. பதினாறாம் பதிப்பாக 2010 இல் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் சார்பில் வெளியிடப்பட்டது.

அம்பேத்கரின் கருத்துகள் தமிழ் நாட்டில் பெரும் அளவு பரவியதற்கு இந்நூல் முக்கிய காரணமாகும்.

இதழ் நடத்துவதில் பெரியார் கையாண்ட அறிவு நாணயம் சாதாரணமானதல்ல.

திராவிடன் இதழுடன் குடிஅரசு இதழையும் தொய்வில்லாமல் கவனித்து வந்தார் பெரியார். குடிஅரசு விற்பனை வாரம்தோறும் பதினாயிரமாக உயர்ந்தது. அதனையும் அத்துடன் சேர்த்துத் திராவிடன் நாளிதழையும் அச்சிட வேண்டியி ருந்ததால், குடிஅரசு இதழின் பக்கங்கள் 16 ஆக குறைக்கவேண்டிய கட்டாயம் ஏற் பட்டது. இதனால் கட்டுரைகளும், செய்திகளும் வெளியிடுவது பாதிக்கப்படக் கூடாதே என்பதற்காக விளம்பரங்களைப் பாதி அளவாகக் குறைத்துக் கொண்டு விளம்பரம் தந்தவர்களுக்குப் பெரியார் வருத்தம் தெரிவித்தார். பெரியாரின் தொழில் நேர்மைக்கு இது ஒரு சான்று. விஷயங்களை நிறைவாகத் தரவேண்டும் என்பதற்காக யார்தான் விளம்பரங்களின் மூலம் வரும் வருமானத்தை இழக்க முன் வருவார்கள் தந்தை பெரியாரைத் தவிர?

ஏடுகளை நடத்தும்போது எந்த வகை யிலும் கொள்கை சமரசத்துக்கு இடம் தந்தவரல்லர் பெரியார் -அதுபற்றி அவர் என்ன சொல்லுகிறார்?

தமிழ் மக்களுக்குத் தேவையான சில கருத்துகளைச் சொல்லிப் பதிந்தாக வேண்டும். இன்று ஏற்றுக்கொள்ளா விட் டாலும், நாளை ஒரு நாள் ஏற்றுக்கொள் ளும் நிலை வரும். இக்கருத்துகளை சொல்லும் நிலையில், நான்தான் இருக் கிறேன். சொல்லவேண்டிய கருத்துகளை நானே எழுதி, நானே அச்சுக் கோர்த்து, நானே அச்சிட்டு, நானே படித்துக் கொள்ளும் நிலைக்குப் போனாலும் குடிஅரசை வெளியிட்டு, என் கருத்துகளை வரும் தலைமுறைகளுக்கு விட்டுச் செல்ல வேண்டியது எனது கடமை (குடிஅரசு, 10.6.1929) என்று கூறும் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் இதழாளர் உலகிலும் - எவரும் நெருங்க முடியாத உயரத்தில் உயர் பண்புகளின் பெட்டகமாக ஒளி வீசிக் கொண்டிருக்கிறார்.

அவர்தம் 38 ஆம் ஆண்டு நினைவு நாளில் அம்மாபெரும் புரட்சியாளரின் சிந் தனைகளை வாசிப்போம் - சுவாசிப்போம்!

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!


-------------------கவிஞர் கலி. பூங்குன்றன்,
பொதுச்செயலாளர், திராவிடர் கழகம் -"விடுதலை” 29-1-2012

28.1.12

உடையும் இந்தியாவா? உடையும் ஆரியமா? இதோ மனுவின் கொள்ளுபேரர்கள்!

இதோ மனுவின் கொள்ளு, கொள்ளுப் பேரர்கள்!


உடையும் இந்தியா ஆரிய திராவிடப் புரட்டும், அந்நிய தலையீடுகளும் - எனும் தலைப்பில் ஆரிய மனுதர்மச் சுமையைத் தலையில் தாங்கி ராஜீவ் மல்ஹோத்ரா அரவிந்தன் நீலகண்டன் எனும் இருவரால் எழுதப்பட்ட அவதூறு நூலைப்பற்றி திராவிடர் கழகத் தலைவர் - தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் சென்னை பெரியார் திடலில் இம்மாதம் 8,9 ஆகிய இரு நாட்களில் அணு அணுவாகச் சிதைத்து உண்மை நிலையை உறுதிபடுத்தினார்.

அந்தவுரை உடையும் இந்தியாவா? உடையும் ஆரியமா? எனும் தலைப்பில் நூலாகவும் வெளியிடப்பட்டுள்ளது. மிக வேகமாக விற்பனையாகிக் கொண்டிருக்கிறது.

சில முக்கியமான அடிப்படையான அவதூறுகள் மறுக்கப்பட்டுள்ளன. வேரறுக்கப்பட வேண்டிய வேறு சிலவும் உள்ளன.

அதில் குறிப்பாக திருக்குறளை மனுதர்மத்தின் பதிப்பாகக் காட்ட முயலும் அயோக்கியத்தனம் _ புராணம் என்னும் புதைச் சேற்றில் திணிக்க முயலும் திரிநூல்தனம் - கண்டிப்பாக தீ வைத்துக் கொளுத்தப்பட வேண்டிய தாகும்.

ஒரு தமிழனிடம் எந்த இலக்கியத்தை 2000 ஆண்டு தமிழ் இலக்கிய வரலாற்றில் சிறந்த ஒன்றாகக் கூறுவாய் என்று கேட்டால் உடனடியாகத் தயக்கமின்றி வரும் பதில் திருக்குறள் என்பதாக இருக்கும். குறள் ஹிந்துப் பண்பாட்டுப் புலத்திலிருந்து வெட்டி எடுக்கப்பட்டு ஏதோ தமிழரின் தனித்தன்மை கொண்ட ஒழுக்கவியல் நூலாகக் கருதப்பட்டதும் போல் தனது மிஷனரி செயல் திட்டத்தை மேலும் விரிவுபடுத்தினார்

இந்த வரிகளில் உள்ள பார்ப்பனர்களுக்கே உரித்தான விஷமத்தனத்தைக் காணத் தவறக் கூடாது.

ஒரு தமிழனிடம் கேட்டால்.. என்று தொடக்கத்திலேயே ஒரு இடக்கு முடக்கு! அப்படி என்றால் இவர்கள் யார்?... வாசகர்களின் முடிவுக்கே விட்டு விடலாம்.

அடுத்தது.. ஏதோ தமிழரின் தனித் தன்மை கொண்ட ஒழுக்க நூலாகக் கருதப்பட்டதும்! என்று தெனாவெட் டான எழுத்துகள் தமிழர்களின் ஒழுக்க வியல் நூலாகக் கருதப்பட்டதாம் இதன் பொருள் என்ன? தமிழர்களின் ஒழுக்கவியல் நூலாக இவர்கள் கருதவில்லை என்பது இந்த வரிக்குள் இருக்கும் பூனைப் பதுங்கல்!

மூன்றாவதாக குறள் ஹிந்துப் பண்பாட்டுப் புலத்திலிருந்து வெட்டி எடுக்கப்பட்டதாம்...


இங்கேதான் கோணிப்பைக்குள் இருக்கும் பூனை வெளியில் வந்து மியாவ் மியாவ் என்று கத்துகிறது.

ஹிந்துப் பண்பாட்டிலிருந்து திருக்குறள் வெட்டி எடுக்கப்பட்டதே தவிர, தமிழர்களின் ஒழுக்கவியலாகக் கருத முடியாது என்று சொல்ல வருவது - அவர்களுக்கே உரித்தான தமிழ், தமிழன் என்று சொன்னால் அவற்றின் மீது விழுந்து கடிக்கும் துவேஷ நச்சுப் பற்கள்!

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற குறளின் கோட்பாடு எங்கே? அந்தப் பிரம்மாவானவர், இந்த உலகத்தைக் காப்பாற்றுவதற்காக தன் முகம், தோள், தொடை, பாதம் இவைகளினின்று உண்டான பிராமண, க்ஷத்திரிய, வைசிய, சூத்திர வருணத் தார்க்கு இம்மைக்கும் மறுமைக்கும் உரிய உபயோகமான கருமங்களைத் தனித் தனியாகப் பகுத்தார் (மனுதர்மம் - அத்தியாயம் 1 சுலோகம் 87).

இப்படி பிறப்பின் அடிப்படையில் பேதத்தைக் கற்பித்து அவர்களுக்குத் தனித்தனியாக கருமங்களையும் _ கடவுளே உண்டாக்கினார் என்கிற மனுதர்மம் எங்கே?

வள்ளுவர் செய்திருக்குறளை மறுவற
நன்குணர்ந்தோர்
உள்ளுவரோ மனுவாதி
ஒரு குலத்துக்கொரு நீதி?

என்று சாட்டை கொண்டு முகத்தில் சாத்தினார் பேராசிரியர் சுந்தரம் பிள்ளை. அதற்குப் பிறகாவது பார்ப் பனப் பன்னாடைகளுக்கு நற்புத்தி வரவில்லையே!

மானமுள்ள ஆயிரம் பேருடன் போராடலாம். மானமற்ற ஒருவனுடன் போராடுவது கஷ்டமான காரியம் (குடிஅரசு 10.5.1936) என்றாரே - தந்தை பெரியார் - ஒவ்வொரு சொல்லும் கோடி பெறும்.

பல இந்திய வாழ்வியல் நூல்களில் உதாரணமாக அர்த்த சாஸ்திரம் போன்றவற்றில் மூன்று விழைவுகளில் (திரிவர்க்க) அதாவது தர்ம (அறம்) அர்த்த (பொருள்) காம (இன்பம்) ஒத்திசைவு இருக்க வேண்டும் எனச் சொல்லப்படுவதை பொருளாதார நிபுணர் ரத்தன்லால் போஸ் சுட்டிக் காட்டுகிறார். நீதியரசர் ராமா ஜோய்ஸ் பிரசித்தி பெற்ற ஹிந்து ஸ்மிருதியான மனுதர்ம சாஸ்திரத்தில் இதே திரி வர்க்கப் பாதையே இருப்பதைச் சுட்டிக் காட்டுகிறார்.

ஆக திருவள்ளுவர் மூன்று புருஷார்த்தங்களை மட்டும் குறிப்பிடுவதில் தனித் தன்மை ஏதுமில்லை. அவர் பாரதம் அளாவிய ஒரு பார்வையையே இதன் மூலம் முன் வைக்கிறார் என்று எழுதுகிறார்கள்.

திருக்குறள் அறம், பொருள், இன்பம் என்று சொல்லப்படுவது அவாளின் அர்த்த சாஸ்திரத்தில் சொல்லப்பட் டவையாம். இது உண்மைக்கு மாறானது என்பது ஒருபுறம் இருக்கட்டும் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட மனுதர்ம சாஸ்திரத்திற்கு உண்மைக்கு மாறாகப் புரட்டுத்தனமாக வக்காலத்து வாங்குவது மூலம் இவர்கள் யார்? இவர்களின் நிறம் என்ன என்பது எளிதில் விளங்கும்.

பரிமேலழகர் என்ற பார்ப்பனர் முதல் அவரின் பாதந்தாங்கிய மனிதர்கள் வரை குறளின்மீது ஆரிய முத்திரையைத் திணிப்பதிலேயே ஆர்வ வெறி கொண்டு திரிகின்றனர்.

திருக்குறளின் அறமாவது மனு முதலிய நூல்களில் விதித்தன செய்தலும், விலக்கியன ஒழிதலும் ஆம் என்று கூறுகிறார் என்றால் பரிமேலழகருக்கு எவ்வளவு அசட்டுத் துணிச்சல் இருந்திருக்க வேண்டும் - அது பச்சையான பாசிசம் என்பதல்லாமல் வேறு என்னவாம்?

மக்கள் பேறு என்பதைப் புதல்வரைப் பெறுதல் என்று மாற்றியுள்ளார். பரிமேலழகருக்கு முன் உரை எழுதிய மணக்குடவர்கூட மக்கள் பேறு என்றுதான் குறிப்பிட்டுள்ளார்.

பரிமேலழகர் என்னும் மனுவின் மகாபுத்திரரோ அதனைப் புதல்வரைப் பெறுதல் என்று மாற்றியமைத்ததற்குக் காரணம் _ அவரின் மனுதர்மப் புத்தி.

தந்தையை புத் என்னும் நரகத்திற் சாராமல் காக்கின்றபடியால் மைந்தனுக்கு புத்திரன் என்ற பெயராயிற்று இது பிரமனாலேயே கூறப்பட்டது என்கிறதே மனுதர்மம் (அத்தியாயம் 9 - சுலோகம் 138).

இதற்காகத்தான் அதிகாரத்தில் தலைப்பையே மாற்றிய தில்லுமுல்லுத் தனத்தை செய்துள்ளார்.

கடவுள் வாழ்த்து, வான் சிறப்பு, நீத்தார் பெருமை, அறன் வலியுறுத்தல் என்ற நான்கு அதிகாரங்களைப் பாயிரத்தில் அடக்கிக் காட்டுகிறார் பரிமேலழகர்; பாயிரத்தை வள்ளுவரே இயற்றவில்லை என்பது ஆய்வறிஞர் வ.உ.சி. அவர்களின் கருத்தாகும்.

இன்னும் சொல்லப் போனால் திருக்குறளில் கடவுள் என்ற சொல்லோ கோவில் என்ற சொல்லோ கிடையாது.

சமயக்கணக்கா மதிவழி கூறாது
உலகியல் கூறி பொருளிது வென்ற
வள்ளுவன் என்கிறது கல்லாடம்

திருவள்ளுவர் யார் தெரியுமா? பகவன் என்ற பிராமணனுக்கும், ஆதி என்ற பறைச்சிக்கும் பிறந்தவர் என்று கதை கட்டுவதும் பார்ப்பனரே! ஏன் என்றால் அவாளின் அகராதிப்படி அறிவாளி பார்ப்பன விந்துக்குத் தவிர வேறு யாருக்கும் பிறக்க முடியாது என்பதாகும்.

இது தொடர்பாக பார்ப்பனப் பண்டிதருக்கு நேருக்கு நேர் சூடு கொடுத்தவர் அயோத்திதாசப்பண்டிதர் பெருமகனார் ஆவார்.

1892இல் சென்னையில் மகாஜன சபை கூட்டம் திரு. சிவநாமசாஸ்திரி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் அவர் பேசும்போது வள்ளுவர் பார்ப்பன விந்துக்கு பிறந்ததனால்தான் சிறந்த திருக்குறளைப் பாடினார் சுக்கில-சுரோனிதம் கலப்பரியாது என்று குறிப்பிடும்போது கூட்டத்தில் கேட்டுக் கொண்டிருந்த அறிஞர் திரு.க அயோத்திதாச பண்டிதர் எழுந்து நீங்கள் சொல்லியதை நான் ஏற்றுக் கொள்வதென்றால், நான் சில கேள்விகள் கேட்க வேண்டும் என்றார்.

அதற்கு திரு. சிவநாமசாஸ்திரி சரி, கேளும் என்றார். நமது நாட்டில் தீண்டாதவர்கள் என்று இழிவு படுத்தப்படும் பறையர்கள், என்பவர்கள் கிறித்துவ சங்கத்தார்களின் கருணையால் எம்.ஏ, பி.ஏ, படித்துப் பட்டங்களைப் பெற்று உயர் பதவிகளில் அமர்ந் திருக்கிறார்களே? அவர்கள் யார் விந்துக்குப் பிறந்திருப்பார்களென்று எண்ணுகிறீர் என்றார். அதற்கு திரு. சிவநாமசாஸ்திரி ஒன்றும் பதில் கூறாமல் நின்று கொண்டிருந்தார்.

பிறகு அறிஞர் திரு.க. அயோத்திதாச பண்டிதர் தொடர்ந்து பெருங்குற்றங்களைச் செய்து சிறைச்சாலைகளில் அடைக்கப்டிருக்கும் பார்ப்பனர்கள் யார் விந்துக்குப் பிறந்திருப்பார்களென்று நீர் நினைக்கிறீர் என்று கேட்டார்.

திரு.சிவ.நாம சாஸ்திரி ஒன்றும் பதில் கூறாமல் திரு திரு என்று விழித்துக் கொண்டு நின்றார். அறிஞர் திரு.க.அயோத்திதாச பண்டிதர், ஏன்? பதில் சொல்லாமல் நிற்கிறீர், சொல்லும், என்று சினந்து கேட்டுக் கொண்டிருக்கும் பொழுது, கூட்டத்திலிருந்த ஆனரபில், திரு.பி.அரங்கைய நாயுடும், திரு.எம். வீரராகவாச்சாரியாரும் அறிஞர் திரு.க.அயோத்திதாச பண்டிதரை அமைதிபடுத்தினார்கள்.

திரு.சிவ நாம சாஸ்திரியை கூட்டத்திலிருந்தவர்கள் இகழ்ந்து பேசினார்கள். திரு.சிவநாம சாஸ்திரி உட்கார்ந்து கொண்டார். பின்னர் மெல்ல கூட்டத் திலிருந்து நழுவி விட்டார்.

1796இல் சென்னைக்கு அரசுத் துறையில் பணியாற்ற வந்த எல்லீஸ் துரையவர்கள் தமிழ் படிக்க விரும் பினர்ர்.

அவருக்குத் திருக்குறள் ஏட்டுச் சுவடியொன்றைத் தாம் வேலை பார்த்து வந்த வெள்ளைக்காரர் வழி சேர்ப் பித்தவர் அயோத்திதாசரின் பாட்டனா ரான கந்தசாமி என்பவர்.

எல்லீஸ் தனக்கு தமிழ் கற்றுக் கொடுக்க வந்த பிராமணர்களிடம் கந்தசாமி திருக்குறள் கொடுத்தாரென்றார். அதற்கு அவர்கள், அவர் தீண்டத் தகாதவர், அவர் கொடுத்த திருக்குறள் தீண்டத்தகாதது என்றனர். காரணம் வள்ளுவர் புலச்சியின் மகன் என்பது அவர்கள் எண்ணம்.

ஏன் இப்படி பிராமணர்கள் கருகிறார்கள் என்று கந்த சாமியை அழைத்து எல்லீஸ்துரை கேட்க எங்களுக்கும் இவர்களுக்கும் விரோதம்.

எங்கள் வீதிக்குள் பிராமணர்கள் வந்தால் உங்கள் பாதம் பட்ட இடம் பழுதாகி விடும் என்று சொல்லிக் கொண்டு இவர்களைத் துரத்தி பிராமணர்கள் வந்த வழியிலும் சாணத்தைக் கரைத்துத் தெளித்து சாணச் சட்டியையும் உடைத்து வருகிறார்கள் என்று கூறினாராம்.

உண்மையான காரணத்தைப் புரிந்து கொண்ட எல்லீஸ் துரை திருக்குறளை ஆழமாகப் படித்து அதை ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்தார்.

1819இல் துரை திடுமென மறைய நேர்ந்ததால் நூல் முழுவதும் மொழி பெயர்க்காமல் போயிற்று.

(ஆதாரம்: குறளும் அயோத்திசாசரும் என்ற தலையங்கத்தில் செந்தமிழ்ச் செல்வி மார்ச் 2000)

இப்படியாக தொன்றுதொட்டுப் பார்ப்பனர்களுக்கு தமிழையும், திருக்குறளையும் திட்டுவதில் இழிவுப் படுத்துவதில் ஆனந்தமோ ஆனந்தம்!

மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி என்பவர் ஆண்டாளின் திருப்பாவையில் இடம் பெற்ற தீக்குறளைச் சென்றோதோம் என்னும் வரிக்கு எப்படி பொருள் சொன்னார்?

தீய திருக்குறளை படிக்க மாட்டோம் என்று வீம்புக்கு வம்பு இழுத்துக் கூறினார்.

குறளை என்றால் குள்ளம், கோள் சொல்லல், குற்றம் என்று பொருள் (உ.வே. சாமிநாதய்யர் முன்னுரையுடன் கூடிய மதுரைத் தமிழ்ப் பேரகராதி).

காஞ்சி சங்கராச்சாரியாருக்கு எவ்வளவு குள்ள உணர்வும், கோள் சொல்லும் புத்தியும், குற்றவாளியாகவும் இருந்திருந்தால் ஆண்டாளின் பாடல் வரிக்கு இப்படிப் பாட பேதம் செய்வார்?

இப்படித்தான் கொலைக் குற்றத் துக்காக நீதிக் கூண்டில் நின்று வேலூர் சிறைச்சாலையில் 61 நாள்கள் கம்பி எண்ணிக் கொண்டிருந்த காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி உளறித் தொலைத்து நன்கு வாங்கிக் கட்டிக் கொண்டார்.

திருக்குறளில் உள்ள அறத்துப் பாலை அதிலும் முதல் பத்து குறட் பாக்களை மட்டும் மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுத்துவிட்டு, பொருட் பால், காமத்துப் பாலை சொல்லிக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை என்று காஞ்சிமடத் தலைவரான தவத்திரு ஜெயேந்திர சரஸ்வதி துறவியார் திருக்குறளைப் பற்றித் திரிபான முறையில் தம் கருத்தைச் கூறயிருப்பது அதிர்ச்சியையும் வருத்தத்தையும் தருகிறது. காஞ்சி மடத்தார் அடுத்தடுத்து திருக்குறளை பற்றிப் புறங்கூறுவதற்குக் கண்டனம் தெரிவிப்பதுடன், அக்கருத்துக்களைத் திரும்பப் பெற வேண்டுமென காஞ்சி மடத்தை ஈரோடு திருக்குறள் பேரவை கேட்டுக் கொள்கிறது. (திருக்குறள் முனுசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் - தீர்மானம் 12.4.1982).

இந்திய அரசின் அட்டர்னி ஜெனரலாக இருந்த பராசுர அய்யங்காரின் தந்தையாரான கேசவ அய்யங்கார் என்பாரும் ஸ்ரீவள்ளுவர் உள்ளம் என்ற நூலில் சமஸ்கிருதத்திலிருந்து தொகுக்கப்பட்டதுதான் திருக்குறள் என்று எழுதியதற்காக _ சென்னைப் பெரியார் திடலில் அன்றைய பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர், பெரியார் பேருரையாளர் பேராசிரியர் முனைவர் மா. நன்னன் அவர்கள் சிறப்பான மறுப்புரையை ஆதாரக் குவியல்களுடன் தந்தார் (4.3.1986 மற்றும் 5.3.1986).

பெரிய வாச்சான் என்பவர் ஒரு வைணவ அய்யங்கார் பார்ப்பனர்; அவர் பெரிய திருமடல் கண்ணிக்கு உரை எழுதினார்.
தென்னுரையில் கேட்டதுண்டு என்ற வரிக்கு அவர் எழுதிய உரை என்ன?

மிலேச்ச சாதி பிதற்றும் தமிழின் கண் கேட்டறிவதுண்டு என்று எழுதவில்லையா?

பார்ப்பனர் தமிழின் பால், தமிழன்பால் கொண்டிருக்கும் இந்தப் பிறவித் துவேஷ நஞ்சு என்பது அவர் கள் கூறும் ஆலகால விஷத்தைவிடக் கொடுமையானது.

உண்மையைச் சொல்லப் போனால் ஆரிய பண்பாட்டை, தர்மத்தை எதிர்த்து எழுதப்பட்டதுதான் திருக் குறள் என்பது தந்தை பெரியார் அவர்களின் கணிப்பு.

வள்ளுவர் குறளை எழுதிய காலம் தமிழ்நாடு ஆரிய ஆதிக்கத்தில் ஆழ்ந்து கிடந்த காலம்;

குறள் தோன்ற வேண் டிய அவசியம்கூட ஆரிய ஆதிக்கம் தோன்றி மக்களை அழித்து நமது கலாச்சாரத்தை ஒழித்துக் கொண்டிருந்த நிலையைத் தடுப்பதற்காகத்தான் வள்ளுவர் குறளை எழுதினார் என்கிறார்.

தந்தை பெரியார் (ஆதாரம்: திருக்குறளும் பெரியாரும் பக்கம் 46-47).

மனு மாண்டு விட்டார்; ஆனால் அவரின் கொள்ளுக் கொள்ளுப் பேரர்கள் இன்னும் பூணூலோடு திரிந்து கொண்டு இருக்கிறார்கள் - எச்சரிக்கை!

--------------- கலி.பூங்குன்றன் அவர்கள் 28-1-2012 “விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை

27.1.12

என் நாத்திக ஆசான் பெரியார் ஈ.வெ.ரா - எம்.என். ராய் அறிவிப்பு


இந்தியாவின் மர்ம மனிதன் என்று கூறப்படுபவர் வங்காளத்தைச் சேர்ந்த எம்.என்.ராய். பல நாடுகளைச் சுற்றியவர் - அந் நாட்டு மக்களின் வாழ்க்கை முறைகளைக் கற்றுத் தேர்ந்தவர். ருசியாவில் தங்கி இருந்து லெனின், ஸ்டாலின் போன்றவர் களிடம் கருத்தாய்வு செய்தவர். அவர்களிடம் கருத்து முரண் பாடு கொண்டவர்.

பல்வேறு வழக்குகள் அவர் மீது வீறு கொண்டு பாய்ந்த துண்டு. மெக்சிகோவில் அவர் தங்கி இருந்த போது சமதர்மக் கட்சியை உருவாக்கினார். ருசியாவுக்கு வெளியே பொது உடைமைக் கட்சி என்பது இவரால்தான் உருவாக்கப்பட்டது.

ஆப்கானிஸ்தானத்தின் வழியாக பிரிட்டிஷ் இந்தியா மீது படையெடுக்கத் திட்டம் போட் டவர் - இந்த வகையில் நேதாஜி சுபாஷ் சந்திர போசுக்கு ஒப்பானவர்.

சமூகத்தில் நீண்ட நெடுங் காலமாகப் புரையோடிப் போன பழைமைப் பாசிகளை, கடவுள் மத நம்பிக்கைகளை முற்றாக எரித்து சாம்பலாக்கவேண்டும் என்பதில் எரிமலையாகத் தகித்து நின்றவர்.

வெறும் பொருளாதார மாற்றம் உண்மையான மாற்றத் திற்குப் பயன்படாது , கருத்துப் புரட்சி கை கோக்க வேண்டும் என்ற கருத்தில் தோய்ந்தவர். ரேடிகல் டெமாக்ரடிக் பார்ட்டி என்ற ஒரு கட்சியை நடத்தி வந்தார்.

தமிழ்நாட்டில் புரட்சிகர மான சமூக இயக்கத்தை நடத்தி வரும் தந்தை பெரியார் பற்றி அவர் செவியுற்றவர். பெரியாரைக் காண வேண்டும் என்று அவர் ஆவல் கொண்டார்; தந்தை பெரியார் அவர்களுக்கும் அந்த எண்ணம் இருந்தது.

சிவகங்கையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் தந்தை பெரியார் தெரிவித்த தகவல் மிக முக்கியமானது. இதோ, தந்தை பெரியார் பேசுகிறார்:

எம்.என்.ராயைக் காண வேண்டுமென்று நானும் எண்ணியிருந்தேன். ஒரு முறை சென்னைக்கு வந்திருந்த போது அவரைச் சந்திக்கச் சென்றேன். என்னைக் கண்டதும் என்ன செய்தார் தெரியுமா? எனக்கே சொல்வதற்கு வெட்கமாக இருக்கிறது. என் காலில் விழுந்து வணங்கினார். நான் மிகச் சங் கடப்பட்டு ஒரு பகுத்தறிவுவாதி இப்படி நடந்துகொள்ளலாமா? என்று கேட்டேன்.

பிறகு சில நாள்கள் அவருடன் சேர்ந்து பிரச்சாரம் செய்து வந்தேன். ஒரு முறை டேராடூனில் ஒரு விருந்து ஏற்பாடு செய்தார். விருந்துக்கு வந்தவர்களிடையே நான் எழுதிய புத்தகங்களைப் பற்றி விளக்கம் செய்து என்னை அறிமுகப்படுத்தினார். அங்கு வந்திருந்தவர்கள் அனைவரும் பலமுறை எழுந்து எனக்கு மரியாதை செய்தனர். (விடுதலை 22.4.1965)

கல்கத்தாவில் எம்.என்.ராய். ஏற்பாடு செய்திருந்த மாநாடு ரேடிகல் டெமாக்ரடிக் பார்ட்டி கான்பரன்ஸ் 27.12.1944 ஆம் ஆண்டில் நடந்தது. அதில் பெரியார் பேசினார். அம்மா நாட்டில் பெரியார் அவர்களை வரவேற்றுப் பாராட்டுரை வழங் கிய ராய், என் நாத்திக ஆசான் பெரியார் ஈ.வெ.ரா. அவர்களைப் பாராட்டி வரவேற்கிறேன் என்று குறிப்பிட்டார்.

பெரியார் தம்மைப் பற்றி இவ்வாறு குறிப்பிட்ட மைக்குத் தாம் வெட்கப்படுவ தாகத் தம் பேருரையில் குறிப் பிட்டார். உடனே ராய் இடை மறித்து, நான் உண்மையைத் தான் சொன்னேன். உலகத்தில் நாத்திகத்தைப் பற்றி இத்தனை நூல்கள் எழுதியும் வெளியிட்டு முள்ள மேதை எனக்கு யாரும் தென்படவில்லை. இதற்கு ஆதாரமாகக் குடிஅரசுப் பதிப்பக வெளியீட்டு விவரங்களைக் காட்டி நீங்களே பாருங்கள் என்று அவையோரை நோக்கிக் கூறி உறுதிப்படுத்தினார்.

1887 மார்ச் 21-இல் பிறந்த ராய் 1954 ஜனவரி 25-இல் மறைந்தார். வாழ்க எம்.என்.ராய்!


------------------- மயிலாடன் அவர்கள் 27-1-2012 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

26.1.12

பகடிக்குரிய பெயரா பாரிவேந்தர்?



கலை எனப்படுவது இனக்கொலையானால் கலையைக் கொலைசெய் என்றார் தந்தை பெரியார். ராமாயணத்தையும் பெரியபுராணத்தையும் அறிவார்ந்த முறையில் திறனாய்வு செய்த நிலையில்தான், அவ்விரண்டு நூல்களும் தமிழினத்தின் அடையாளத்தைச் சிதைப்பதைக் கண்டுணர்ந்த தந்தை பெரியார் மேற்காட்டிய முழக்கத்தை முன்வைத்தார். தீ பரவட்டும் என ஆணையிட்டார் பேரறிஞர் அண்ணா. பெரும் பேராசிரியர்களாகவும் வழக்கறிஞர்களாகவும் திகழ்ந்த இரா.பி.சேதுப் பிள்ளை, நாவலர் சோமசுந்தர பாரதியார் இருவரும் அண்ணாவிடம் வாதப்போர் புரிந்து தோற்றனர். திராவிடர் இயக்கத்தின் கொள்கை முழக்கம் பட்டி தொட்டியெல்லாம் பரவியது. தமிழ் உயிர்த் துடிப்போடு சிலிர்த்தெழுந்தது. எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு என்ற புரட்சிக் கவிஞரின் சங்கநாதம் தமிழரை வீறுகொள்ளச் செய்தது. ஆம் வீழ்ச்சியுற்ற தமிழகத்தில் எழுச்சியூட்டிய திராவிட இயக்கம், தமிழின் மறுமலர்ச்சிக்கும் உயிரும் உரமும் ஊட்டியது. மூடநம்பிக்கையின் முடை நாற்றம் வீசிய திரைப்படத்துறையைப் பகுத் தறிவுப் பாசறையாக மாற்றியது அப்பேரியக்கம். ஆகும் நெறி எது? ஆகா நெறி எது? அறிந்து சொல்வீரே! நன்றாய்த் தெரிந்து சொல்வீரே என மக்களிடம் வேண்டுகோள் வைத்தது. ஜாதித் தளைகளை உடைத்து, ஏற்றத்தாழ்வுகளை நீக்கி, சமத்துவத்திற்கான கருத்தியலை மக்கள் மனதில் ஆழப்படுத்தியது.

அந்த மறுமலர்ச்சியை, உணர்ச்சிப் பெருக்கை, அந்த இயக்கங்களின் ஆட்சிக் காலத்திலேயே சிதைக்கும் முயற்சி படிப்படியாக வெற்றி பெற்று வருகிறது.

மக்கள் திலகம் முதல்வராக இருந்த போது வெளிவந்த படம் ஒன்று அந்த ஏழு நாட்கள் என்பது. அதில் மலையாள இளைஞன் மிக நேர்மையானவனாகவும் அவனின் நண்பன் ஒரு சிறுவன் தமிழனாகவும் - திருடனாகவும் காட்டப்பட் டான். அது கண்டு தமிழினம் சிலிர்க்கவில்லை. தமிழின வளர்ச்சியில் பெரும்பங்கு ஆற்றிவருவதும் சமூகநீதியின் அடிப் படையாக விளங்கிவருவதுமான இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்கு எதிரான ஒரு திரைப்படம் ஜென்டில்மேன். அதை எதிர்த்து எந்தத் தமிழனும் ஆர்த்து எழவில்லை, உப்புக்கருவாடு ஊற வைத்த சோறு என சோற்றுப் பிண்டமானான் மானமிகு மனிதனாக இருக்க வேண்டிய தமிழன். கல்லக்குடி போராட்டத் தலைவனின் காதல் மொழியைக் காட்டி கலைஞரை கேலி செய்த இருவர். திராவிடர் இயக்கத்தின் மூத்த தலைவரை இழிவு செய்த ஒருநாள் முதல்வன், கலப்பு மணத்தை எதிர்த்து ஜாதி வெறியர்களின் கொலை வெறியைச் சித்தரித்த காதல் எனத் தமிழன் மறுமலர்ச்சியின் அடையாளங்களைச் சிதைப்பது.... இந்த போக்கின் விளைவாக தமிழ்ப் பெயர் வைத்தவர்களை ஒருபால் தொடர்பாளர்கள், கொலையாளிகளாகக் காட்டுவது, கரைவேட்டிக் கட்டியவர்களைக் கொடுமையாளர்களாகக் காட்டுவது, வெடிகுண்டு வைப்பவர்களையும் தேசத்துரோகம் செய்பவர்களையும் இசுலாமியர்களாகச் சித்திரிப்பது, கறுப்பு நிறமுடையவர்களைக் கேலி பேசுவது எனும் நிலையில் திரைப்படங்கள் வருவது தமிழினத்தை இழிவு செய்வதும், இன ஓர்மையைச் சிதைப்பதுமான திட்டமிடப்பட்ட செயல்களாகத் தொடர்கின்றன. இச்சூழலில் தமிழின் அடையாளக் குறியீடுகளை எவ்வளவு இழிவு செய்ய முடியுமோ அவ்வளவு இழிவு செய்யும் முயற்சியில் ஷங்கர் எனும் திரைப்பட இயக்குநர் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.

தமிழர் வரலாற்று மரபில் வள்ளல்கள் பலர் இருந்தாலும், அவர்களில் எல்லாம் தலைசிறந்தவனாகப் போற்றப்படுபவன் பாரிவள்ளல். முல்லைக்கு தேரீந்தவனாக மட்டும் அவன் இருந்ததில்லை. வறுமையால் வாடிய மக்களின் பசிப்பிணியைப் போக்கியவன். புலவர்களை நண்பர்களாகப் பெற்றிருந்தவன். நட்பின் இலக்கணமாகத் திகழ்ந்தவன். கொடை யின் குறியீடாகத் திகழ்பவன். அவன்மீது இந்த ஷங்கருக்கு என்ன கோபம்? ஒரு திரைப்படத்தில் அந்தக் கொடை வள்ளலின் இரண்டு மகள்களின் பெயரையும், அழகற்ற இரு பெண்களுக்குச் சூட்டி, அப் பெண்களின் தந்தையே அவர்களை வலிய ஒருவனுக்கு மணம் முடிக்க முன்வருவதாக காட்டினார். தந்தையே தரகனாகும் கொடுமை கண்டு தமிழினம் சிலிர்த்தெழவில்லை இப்போதோ நண்பன் எனும் திரைப் படத்தில் பாரிவேந்தர் என ஒரு பாத்திரம், அறிவும், முயற்சியும், ஒழுக்கமும் இல்லா ஒரு பாத்திரத்திற்குப் பாரிவேந்தர் எனப் பெயர்சூடியதில் அந்த இயக்குநர் யாரைப் பகடி செய்கிறார்? பாரியையா? இல்லை அந்தப் பட்டத்திற்கு உரியவரையா? இருவரையும் இழிவு செய்வதுதான் அவரின் நோக்கம் என்பது அவரது திரைப்படங்களின் தொடர்ச்சி காட்டு கிறது. இந்தப் போக்கு மிகவும் கண்டிக் கத்தக்கது. கன்னடத் திரைப்படம் ஒன்றில் ஒரு தமிழ்க்குடும்பமே தமிழில் பேசிக் கொள் வதாக ஒரு காட்சி, அதற்கே கருநாடக மாநிலம் கொதித்தெழுந்தது. அந்த உணர்வில் ஒரு விழுக்காடாவது தமிழகத்தில் இல்லையே?

ஷங்கர் அவர்களே, உங்களுக்கு ஒரு வார்த்தை இந்தியத் தத்துவ வரலாற்றில் மதிக்கத்தக்க ஒருவராக இன்றும் திகழ்பவர் மாத்துவர். இவரின் தத்துவம் துவைதம் என்பது. இவர் ஆதிசங்கரரின் பரம எதிரி, இவர் நூலில், ஆதிசங்கரரைக் குறிப்பிடும் இடங்களில் எல்லாம் சவுக்குப் பதிலாக ஷ வையே பயன்படுத்தியுள்ளார். அப்படி எழுதியதின் வாயிலாகச் சங்கரரின் பிறப்பையே இழிவு செய்துள்ளதாக அறிஞர்கள் கூறுகின்றனர். ஷங்கரர் என்றால் இழிபிறப்பினன் என்பது பொருளாம். பெயரிலேயே இழிவைச் சுமந்து திரியும் நீங்கள், மற்றவர்களை இழிவு செய்ய முன்வராதீர்கள். தமிழோ தமிழ்மரபோ உங்களின் கேலிக் குரியவை அல்ல. உங்களைத் திருத்திக் கொள்ளுங்கள். ஆம் உங்களின் பெயரில் உள்ள எழுத்தையும் கூடத்தான்.

பேராசிரியர் பச்சமுத்து உழைப்பின் குறியீடு. முயற்சியின் வடிவம். ஆல்போல் தழைத்து அருகுபோல் வேர்விட்டு வளர்ந்துவரும் ஒரு பெரிய நிறுவனத்தின் தலைவர். ஓர் அரசியல் கட்சியின் நிறுவனர். மணிமேகலை அமுதசுரபியைக் கொண்டு, காணார், கேளார், கால் முடப்பட்டோர் பேணுநரின்றிப் பிணியால் வாடியோர் ஆகியோருக்குச் செய்த அறங் களைப் போல, இன்று ஆயிரக்கணக்கான ஏழை, எளியோருக்கு வாழ்வளிக்கும் வள்ளல் பாரிவேந்தர் என அவரை மற்றவர்கள், அவரால் பயன்பெறும் மக்கள் அழைத்து மகிழ்கின்றனர். விருதுக்கு ஏற்ப வாழும் வாழ்க்கை அவரின் வாழ்க்கை. அவரைச் சிறுமைப்படுத்துவது தனிமனித அவதூறாகும் இது மன்னிக்க முடியாத குற்றமே!

--------------- பேராசிரியர் க.நெடுஞ்செழியன் அவர்கள் “விடுதலை” 26-1-2012 இல் எழுதிய ஆசிரியருக்கு கடிதம் பகுதியிலிருந்து