Search This Blog

31.8.12

பாகவதம் ஓர் ஆராய்ச்சி புராணங்கள் ‍- 8

ஸ்திரீகளும் ஸ்ரீ கிருஷ்ணரும்
வாருங்கள் விரதசீலகளான சுந்தரவதிகளே! நான் இந்த ஸ்ரீ நந்தவ்ரஜத்தில் ஆவிர்ப்பவித்த நாள் முதல் உங்களுடன் விருத்தியடைந்து கொண்டிருக் கின்றேன். இதுவுமன்றி எனது நிசாம்சத்தாலும் உங்களுடைய சம்பந்தத்தாலும் உங்களுள்ளும் புறம்புமாக வியாபித்துக் கொண்டிருக்கின்றேன். உங்களிடத்தில் நானறியாத தர்மங்களுண்டோ? உங்கள் மனோவாக்குக் காய முதலிய சரீர குண தர்மங்களுக்கு நான் அன்யனோ? ஆகையால் நீங்கள் நன்றாயோசித்துப் பாருங்கள். என் விஷயத்தில் நாணிக் கூசத்தக்க வியவகாரம் எவ்வளவுமில்லை. மேலும் நீங்கள் யாவரும் விரத நிஷ்டைகளில் அன்புடையவர்களாயிருந்து, சாஸ்திரோக்த விதிக்கு வேறுபாடாக வஸ்திர ஈனமாய் இம்மகா புண்ய நதியில் இறங்கி ஸ்நானஞ் செய்யத் தகுமோ? ஆதலால் நீங்கள் தெரியாமல் நடந்ததைக் குறித்து பிராயச்சித்தமாக யாவருமிரண்டு கைகளை யுமெடுத்து அஞ்சலி செய்து உங்கள் வஸ்திரங்களை வாங்கி யுடுத்திக் கொள்ளுங்ளென்றார்.
இவ்விதமாகச் சொல்லிய ஸ்ரீ கிருஷ்ண பகவானுடைய வசனங்களைக் கேட்டு, இந்தக் கோபிகா ஸ்திரீகள் யாவரும் பிரணாமஞ்செய்ய வொப்புக்கொண்டு ஸ்வாமியினுடைய ஆக் கினைக்கு வித்யாசம் நேரிடுவதைத் தங்களுக்குள் யோசியாமல் வந்தனக் கிரமத்தை யுணராமல் ஒருகையினால் தங்கள் மர்மாவயங்களை மறைத்து மற்றொரு அஸ்தத்தைச் சேவிக்கத்தக்கதாகக் காட்டினார்கள். அப்படி கையைக் காட்டிய மாத்திரத்தில் ஸ்ரீ பகவான் கோபகன்னிகைகளைப் பார்த்து உங்கள் மனோரதங்கள் ஸ்பலமாகும் படிக்கும், விரதம் பங்கமில்லாமல் நிறைவேறப் பிராயச்சித்தத்தின் பொருட்டுஞ் சேவிக்கச் சொன்னதற்கு இன்னுமதிக குற்றமுண்டாகவே யொரு ஹஸ்த மெடுத்தீர்கள். அப்படி ஒரு கையெடுத்ததனால் ஸ்ரீ பாகவதபசாரம் உண்டாகும். இதற்கு விதி யாதொருத்தன் ஸ்ரீ பகவானைத் தரிசனஞ் செய்யும்போது வஸ்திரானனாகியும் அல்லது ஏகவஸ்திரனாகியும் அரையில் வஸ்திரத்தின்மேல் வஸ்திரத்தை யிறுக்கிக் கட்டாதவனாகியும் இருக்கிறானோ அவனுஞ், சிரத்தையற்று ஒரு கையைக் காட்டி எவன் வந்தனஞ் செய்கின்றானோ அவனும், மகா அபராதியாவர் களென்றும் எவனாவது ஒருவன் ஒருவேளை ஒருகை காட்டி வந்தனஞ் செய்வானாகில் அவனைத் தர்ம நிர்ணயம் அந்த ஹஸ்தத்தை அறுக்கும்படி சொல்லியிருக்கின்றது. நீங்கள் அது தெரியாமல் செய்தீர்கள். ஆதலால், அதிக அபராதிகளான நீங்கள், இந்த அபராதங்களெல்லாம் நிவாரண மாகும் பொருட்டு இரண்டு கரங்களையும் உயரவெடுத்துக்கொண்டு சீக்கிரமாகத் தண்டன் சமர்ப்பியுங்களென்று சொன்னார்.
அதைக் கேட்டு தம்மைத் தரிசித்தவர்களுக்கு தானென்கிற அகங்காரம் விடும்படிச் செய்து, ஆட்கொள்ளத்தக்க ஸ்ரீ கிருஷ்ண பகவானைப் பார்த்து, அவருடைய கடாக்ஷத்தினால் அகங்காரத்தை விட்டவர்களாய், சிறிதும் பற்றில்லாதவர்களுக்கே தமது நிஜஸ்வருப தரிசனந் தந்தருளத்தக்க  ஸ்வாமியைக் குறித்து, இந்தக் கோபகன்னிகைகளும் அந்த ஸ்வாமியினுடைய நியமனப்படியே, பயபக்தி விசுவாசத்துடன் தங்களிரண்டு கரங்களையுஞ் சிரசின்மீது உயரவெடுத்துப் பக்தி பரவசர்களாய் ஸ்ரீ கிருஷ்ணா! சரணமென்று தண்டன் சமர்ப்பித்து ஸ்ரீ பகவானுடைய கிருபாமாத்திர பிரசன்னத் வங்களைப் பெற்று, தங்கள் ஆடைகளையும் வாங்கியுடுத்திக் கொண்டு திருப்தியுள்ள மனமுடையவர்களாய் ஸ்ரீ கிருஷ்ணபகவானைப் பார்த்தாவென்கிற இச்சையுடையவர்களாய்ச் சலியாமல் நின்று பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
அந்தச் சமயத்தில் ஸ்ரீ பகவானானவர் வாருங்கள் விரத நிஷ்டைகளை அநுஷ்டித்த மகா லட்சணவதிகளே! நீங்களே சொல்லாவிடினும் உங்கள் மனோரதங்கள் இன்னவையென்று எனக்கு நன்றாய்த் தெரியும்; நீங்கள் என்னைப் பார்த்தாவாக வரித்து, எனக்கு அடியார்களாய் எனது சாரூப்பியத்தை யடைந்து, சுகிகளாய்த் தனுகரண போகங்களையடைந்து அநந்தவிதவுபசார கைங்கர்யங்களைச் செய்ய வேண்டுமென்று கோரி, விரதத்தை யநுஷ்டித்தீர்கள். ஆகையால், சத்யமாகப் பலகாக்ஷியை இச்சித்து, மகா காமிய தேவதையாகிய அம்பிகா தேவியைக் குறித்து விரத மநுஷ்டித்ததற்குப் போகங்களும், என்னைச் சரணமடைந்ததற்குத் தேகாந்தரத்தில் முக்தியும், உங்களுக்கு ஸபலமுமாகும். நீங்கள் யாவரும் என்னைத் தியானித்துக் கொண்டு உங்கள் கிருகங்களுக்குச் செல்லுங்கள். இன்று முதல் அவரவர்கள் காலாநுகுணமாய் ஏகாந்த சமயங்களில் தியானித்து நினைக்குந்தோறும் நான் பிரசன்னனாய் உங்கள் இஷ்டங்களை திருப்தியடையச் செய்கின்றேனென்று கிருபையாகச் சொல்லி விடை கொடுத்தருளினார்.
அப்போது அந்தக் கோபகன்யா ஸ்திரீகளும் அவ்வண்ணமே மஹத்தாகிய சந்தோஷ முடையவர்களாகி, ஸ்ரீ பகவான் வஸ்திர அபகாரத்தினால் நாணம் விடும்படிச் செய்து பரிகாசமாகப் பேசினது முதலிய செய்கைகள் தங்களுக்கு விரத பங்கமில்லாமல் சிக்ஷபூர்வமாக நிறைவேறச் செய்து தமது மனோபீஷ்டங்களை பரிபாலித்து இரக்ஷிக்கின்றதின் நிமித்தமேயன்றி வேறில்லை யென்று நினைத்து, திருப்தியான மனதுடையவர்களாகி, யாவரும் சாஷ்டாங்கமாகத் தண்டன் சமர்ப்பித்து ஸ்ரீ பகவானை விட்டுப் பிரிய மனமில்லாதவர்களாய் ஸ்ரீ பகவதாக்கினையினால் சம்பூர்ண இச்சைகளையடைந்து, அந்த ஸ்ரீ கிருஷ்ணபாதார விந்தங்களைச் சலனமில்லாத பக்தியுடன் தியானஞ் செய்துக் கொண்டு, தங்கள் சர்வேந்திரியங்களும் ஸ்ரீ கிருஷ்ண சௌந்தர்யங் களிற் செல்லத் தங்கள் தங்கள் கிருகங்களுக்கு வந்து சேர்ந்தார்கள்.
பிறகு ஸ்ரீ கிருஷ்ண பகவானானவர் முன்போலவே தமது இஷ்டஜனங்களாகிய கோபாலர் களுடன் கூடி, இவ்வுபவனத்தைக் கடந்து சென்று, வெகுதூரத்தில் சஞ்சரித்துக் கொண்டிருக்கின்ற ஸ்ரீ பலராமரிடத்திற் சேர்ந்து அவருடனே அந்தப் பிருந்தாவன தூரப்பிரதேசங் களில் பிரவேசித்து, பசுக்கூட்டங்களை மேய்த்துக் கொண்டு சந்தோஷமாய் விளையாடினார்.
ஸ்ரீ சுகர் வாக்கியம்
ஹே ராஜபுருஷ சிரேஷ்டனே! சகல லோக சிகாமணியாகிய ஸ்ரீ கிருஷ்ண பகவான் தமது துணைவர்களாகிய கோபாலர்களுடன் புண்ய வசனங்களைப் பேசிக்கொண்டு சந்தோஷ சித்தராய், இலை, கனி முதலியவைகளால் விருத்தியடைந் திருக்கின்ற விருக்ஷங்களின் நிழலில் சஞ்சரித்துக் கொண்டு யமுனா நதி தீரத்தில் சகல கோபால கோகண சமேதராய் வந்து சேர்ந்தார். ஸ்ரீ பலராமகிருஷ்ண சகிதர்களான இந்தக் கோபாலர்கள் அந்த யமுனாநதியில் பிரவாகிக்கின்ற நிர்மலமாகியும், அதி சீதளமாகியுமிருக்கின்ற தீர்த்தத்தைப் பசுக் கூட்டங்களுக்குப் பானம் செய்வித்துத் தாங்களுமதிலிறங்கி மிகவுஞ் சந்தோஷத்துடன் ஸ்ரம நிவாரனமாகக் குளித்துத் தாபந் தீரத் தீர்த்தபானஞ்செய்து, அந்த நதியின் சமீபத்தில் ஒரு குளிர்ந்த தோப்பில் பசுக்களை மேயவிட்டு எல்லா கோபாலர்களும் பசியினால் பீடித்தவர்களாய், அவ்விருக்ஷங்களின் நிழல்களில் சஞ்சரித்து, ஓரிடத்தில் சுகாசனர்களாயிருக்கின்ற ஸ்ரீ பலராம கிருஷ்ண மூர்த்திகளைப் பார்த்து மகாவீர்யதேஜோ ஜயசாலிகளான ஸ்ரீ பல ராம கிருஷ்ணர்களே! நாங்கள் மிகவும் பசித்திருக்கின்றோம். எங்கள் பசிக்குச் சாந்தஞ் செய்து ரக்ஷிக்கக் கடவீர்கள் என்று பிரார்த்தித்த மாத்திரத்தில், ஜகதீஸ்வரராகிய ஸ்ரீ  பகவானானவர் கம்ஸ மகாராஜனுக்குப் பயந்து குடும்ப சமேதர்களாய் அந்தப் பிருந்தாவனத்தின் ஒரு சார்பில் வந்து வானப்பிரஸ் தாசிரமிகளைப் போல வாசஞ் செய்துகொண்டு, சொர்க்க விச்சை யுள்ளவர்களாகி நல்ல கர்மங்களை வேதோக்த கிரமமாகவும், ரகசியமாகவும் செய்து கொண்டிருக்கின்ற பிராஹ்மணர் களினுடைய பத்னீ சமூகங்கள் தம்மிடத்தில் வைத்திருக்கிற பக்தி யதிசயங்களைக் குறித்துத் தாம் பிரசன்னராய், அவர்கள் இஷ்டங்களை திருப்தியடையச் செய்ய மனமுவந்து அந்தக் கோபாலர்களைப் பார்த்து சொல்லுகின்றார்.
------------------ கி.வீரமணி  அவர்கள் ஆகஸ்ட் 16-31 2012 “உண்மை” இதழில் எழுதிய கட்டுரை

30.8.12

உலகத்தில் பெரியார் ஒருவரே!



அமெரிக்காவில் கென்னடி சாதனைகளை விளக்கும் காட்சிகளைப் போல தந்தை பெரியாருக்கும் அமைப்போம்! சென்னைப் பாராட்டு விழா ஏற்புரையில் விடுதலை
                                                        
அமெரிக்கா பாஸ்டனில் கென்னடி யின் சாதனைகளை விளக்கும் காட்சி அமைப்பினைப் போல தந்தை பெரியார் அவர்களுக்கும் அமைப்போம் என்றார் விடுதலை ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

விடுதலை ஆசிரியராக தமிழர் தலைவர் மான மிகு கி. வீரமணி அவர்களின் அரை நூற்றாண்டு (50 ஆண்டுகள்) நிறைவுப் பெருவிழா சென்னை - பெரியார் திடல் எம்.ஆர். இராதா மன்றத்தில் 25.8.2012 அன்று காலை நடைபெற்றது. விடுதலை ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விழாவில் ஏற்புரை ஆற்றினார். இதில் விழா நாயகர் விடுதலை ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:

பேரன்பிற்கும், பெருமதிப்பிற்கும் உரிய இந்த இனிய குடும்ப விழாவின் பெருமதிப்பிற்குரிய தலைவர் - எனது சட்டக் கல்லூரி பேராசிரியர் மாண்பமை உச்சநீதிமன்றத்தின் மேனாள் நீதியரசர் அய்யா மோகன் அவர்களே, அதேபோன்று, சிறப்பான வழக்கறிஞராகத் தொடங்கி இளமையிலேயே பல்வேறு அரசு பொறுப்புகளில் முத்திரை பதித்து, தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக, பிறகு கேரள உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக, ஆந்திர உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக,  ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஆகிய பதவி களையெல்லாம் வகித்து, அவருடைய ஆசிரியர் ஜஸ்டீஸ் மோகன் அவர்களே பாராட்டக் கூடியவ ராக உயர்ந்து, உச்சநீதிமன்றத்தினுடைய நீதியரசராக உயர்ந்து, சட்டக் கமிஷன் பொறுப்பிலே இருந்து, இன்னும் பல்வேறு பொறுப்புகளிலே இருக்கக் கூடிய ஆற்றல் வாய்ந்த நீதியரசர் ஏ.ஆர். இலட்சு மணன் அவர்களே, பெரியார் பேருரையாளர் கொள்கை வைரம், சுயமரியாதை வீரர்  அன்பிற்குரிய பேராசிரியர் நன்னன் அவர்களே,

இந்நிகழ்ச்சியிலே நம் அனைவரையும் வரவேற்று உரையாற்றிய திராவிடர் கழகப் பொருளாளர் எனது அன்பிற்குரிய சகோதரர் வழக்கறிஞர் கோ. சாமி துரை அவர்களே, அறிமுக உரையில் சில செய்திகளை எடுத்து வைத்த அருமை நண்பர் வழக்கறிஞர் த. வீரசேகரன் அவர்களே, இந்த நிகழ்ச்சியிலே கலந்துகொண்டு, மிகச் சிறப்பாக பெருமை சேர்த்து, நாங்களெல்லாம் என்றென்றைக்கும் நன்றிக் கடன் பட்டவர்கள் என்று சொல்லக்கூடிய அளவிற்கு உயர்ந்த சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதியரசர் அன்பிற்குரிய அய்யா மாண்பமை பாலசுப்பிரமணியன் அவர்களே,
இந்நிகழ்ச்சியினைத் தொகுத்து வழங்கிக் கொண் டிருக்கின்ற பாராட்டுக்குரிய அருமை நண்பர்  பகுத்தறிவாளர் கழகத்தின் பொதுச்செயலாளர் வீ.குமரேசன் அவர்களே,
இறுதியிலே நன்றியுரை கூற இருக்கின்ற இந்திய நீதிபதி சங்கத்தின் பொதுச்செயலாளர் நீதிபதி இரா. பரஞ்ஜோதி அவர்களே,
இங்கே கூடியுள்ள சான்றோர் பெருமக்களே, வழக்கறிஞர் பெருமக்களே, எங்களுக்கு எப்போதும் தோன்றாத் துணையாக இருந்து இவ்வளவு பெரிய சுமையை எங்களைப் போன்றவர்கள் சுமப்பதை பளுவாக நினைக்காமல் அதை எளிதாக சுமக் கக்கூடிய அளவில் வழிக்காட்டிக் கொண்டிருக்கக் கூடிய அருமை நண்பர் நிதித்துறை அறிவுரையாளர் இராஜரத்தினம் அவர்களே, திராவிடர் கழகத்தினுடைய செயலவைத் தலைவர் அருமைச் சகோதரர் சு. அறிவுக்கரசு அவர்களே, கழகத்தின் துணைத் தலைவர் மானமிகு கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்களே, மற்றும் இயக்கக் குடும்பத் தவர்களே, அருமைப் பெரியோர்களே, தாய்மார்களே, நண்பர்களே உங்கள் எல்லோருக்கும் அன் பான வணக்கம்.

ஒரு மனிதனுக்கு மிகப்பெரிய தண்டனை எது என்று சொன்னால்...
நம்முடைய அறிவு ஆசான் தலைவர் தந்தை பெரியார் அவர்கள் ஒன்றைச் சொல்லுவார்கள்; பல மேடைகளிலே, பல விழாக்களிலே அவர் எடுத்து வைத்ததை நான் நினைவுபடுத்திக்கொண்டே, அசை போட்டுக்கொண்டே அமர்ந்துகொண்டிருந்தேன். ஒரு மனிதனுக்கு மிகப்பெரிய சங்கடமான ஒரு கட்டம் எது என்று சொன்னால், மிகப்பெரிய தண்டனை எது என்று சொன்னால், அவனை உட்கார வைத்துக்கொண்டு பாராட்டுவதைவிட மிகப்பெரிய தண்டனை வேறு கிடையாது.

நீதியரசர்கள் முன்னாலே இதுவரையிலே எந்த வழக்கிலும் சென்று நான் நின்றதில்லை. ஆனால், இப்பொழுது நான் சிக்கிக் கொண்டேன் என்பதற்காக, அவர்கள் கொடுத்த தண்டனை இருக்கிறதே,  அது ஒரு பக்கம் சுவையானது என்று சொன்னாலும்கூட, இன்னொரு பக்கம் என்றென்றைக்கும் அதற்குத் தகுதியானவனா என்ற கேள்வியை  நானே  என்னை கேட்டுக்கொண்டு, தகுதி ஆக்கிக் கொள், தகுதி ஆக்கிக் கொள் என்று சொல்லக்கூடிய அந்த உணர்வுகளை இவர்கள் அளித்திருக்கிறார்கள். அதற்காக தலைதாழ்ந்த நன்றியை அவர்களுக்கும், இந்த விழாக்குழுவினருக்கும் தெரிவித்துக் கொள் கிறேன்.

எவையெல்லாம் செயல்படுத்த முடியுமோ...

இந்த விழாவிலே உரையாற்றிய பெரியார் பேருரையாளர் நன்னன் அவர்கள் பல்வேறு ஆக்க ரீதியான யோசனைகளை எடுத்துச் சொன்னார். அவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு, எவை எவையெல்லாம் செயல்படுத்த முடியுமோ, அவை எல்லாவற்றையும் செயல்படுத்த முயற்சிப்போம் என்று அவருக்கு வாக்குறுதியைத் தருகிறோம்.
ஏனென்றால், அவர்கள் போன்றவர்கள் எதையும் எதிர்பார்க்காமல், தன் மனதில் பட்டதை அப்பட்டமாக, ஒளிவு மறைவு இல்லாமல், எந்த மேடையாக இருந்தாலும், ஏன் தொலைக்காட்சி யாக இருந்தாலும்கூட அதைப் பற்றி கவலைப்படாமல் எடுத்துச் சொல்லக்கூடிய அன்பு உள்ளம், உண்மை உள்ளம், சுயமரியாதைக்காரருடைய ஓர் வடிவம் அவர்கள்.

உலகத்தில் பெரியார் ஒருவரே!

அய்யா நன்னன் அவர்கள் என்மீதுள்ள பற்றினாலே சொன்னார்கள், நீதியரசர்கள் உள்பட பெரியாருடைய இடத்தை பூர்த்தி செய்கிறேன் என்றும், பெரியாருடைய நகல் என்றும் சொன்னார்கள், அதை பாராட்டுக்குரிய சொற்களாக எடுத்துக் கொள்ளலாமே தவிர, அது உண்மை என்று ஒருபோதும் நான் சொல்லமாட்டேன்.

உலகத்தில் பெரியார் ஒருவர்தான் இருக்க முடியுமே தவிர, பெரியார் அவர்களைப் பின்பற்றக்கூடியவர்கள் ஏராளமாக இருக்கலாம். பின்பற்றுவதில் நாங்கள் சற்றுக் கூடுதலாக மதிப்பெண் பெற்றிருக்கலாமே தவிர, பெரியாருடைய நகலாக யாரும் இருக்க முடியாது;  பெரியாரின் இடத்தை யாராலும் பூர்த்தி செய்ய முடியாது; பெரியார் அவர்கள் விட்ட பணியை நாங்கள் தொடருகிறோம் அவ்வளவுதான், அவர்கள் போட்டுத் தந்த பாதையில், அவர்கள் விட்டுச் சென்ற பணிகளை, எந்தச் சபலங்களுக்கும் ஆளாகாமல், செய்யவேண்டும் என்று அன்னை மணியம்மையார் அவர்கள் தலைமையில் ஏற்ற உறுதிமொழிக்கேற்ப இந்தப் பணிகளை நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம்.

இந்த நேரத்திலே ஒன்றை நான் மிகுந்த அடக்கத் தோடும், உணர்வோடும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

அன்றுமுதல் இன்றுவரை நான் ஒரு பெரியார் தொண்டன்...

அறிவாசான் தலைவர் தந்தை பெரியார் அவர்களைப்பற்றி நன்னன் அவர்கள் மிக அழகாகச் சொன்னார், வாய்ப்போ, என்னுடைய ஆற்றலோ, என்னுடைய திறமையோ என்பதெல்லாம்விட, அய்யா அவர்கள்  எந்தப் பணியைக் கொடுத்தாலும், அந்தப் பணியை நான் அப்படியே கீழ்பணிந்து செய்யக்கூடிய ஒரு தொண்டன், அன்றுமுதல் இன்றுவரை ஏன் நாளை வரையும்கூட.
தத்துவங்களுக்கு மறைவு கிடையாது
தந்தை பெரியார் அவர்கள் தனி மனிதர் அல்லர்; அவர் ஒரு தத்துவம்; ஒரு காலகட்டம்; பேரறிஞர் அண்ணா அவர்கள் சொன்னதுபோல, ஒரு திருப்பம், ஒரு சகாப்தம். அந்த வகையிலே அய்யா அவர்களை, நாம் தத்துவமாக, ஸ்தாபனமாக, ஒரு இன்ஸ்டிடியூசனாக பார்க்கவேண்டுமே தவிர, ஒரு தனி நபராகப் பார்க்கக் கூடாது.  நபர்களுக்குத் தோற்றம் உண்டு, மறைவு உண்டு. தத்துவங்களுக்கு மறைவு கிடையவே கிடையாது.
நான் அண்மையிலேகூட அமெரிக்காவுக்குச் சென்றிருந்தபோது, பாஸ்டன் மாநகரிலே ஓர் அரிய வாய்ப்பைப் பெற்றேன். பாஸ்டனிலே என்ன புதுமையாக இருக்கிறது என்று பார்த்தபோது, அறிவுச் செறிவுக்கான அந்தச் செய்தியைப் பார்த்தபோது ஜே.எஸ். கென்னடி அவர்களுடைய காட்சிகளும், அவருடைய வாழ்க்கை வரலாறு, அவருடைய சாதனை இவற்றையெல்லாம் புதிதாக மிகப்பெரிய அளவிலே அங்கே அமைத்திருக்கிறார் கள். அதுபோல, தந்தை பெரியார் அவர்களுடைய வாழ்க்கை வரலாறு, தத்துவங்கள் இவற்றையெல் லாம் நாம் அமைப்பதற்கு, அது எந்த அளவிற்கு நமக்கு வழிகாட்டியாக, நமக்கு ஒரு பாடமாக அல்லது தெரிந்துகொள்ளக் கூடிய வாய்ப்பாக அமையும் என்பதற்காக நாங்கள் சென்றிருந்தோம்.
அப்போது அதிலே பல்வேறு கருத்துகளை அவர்கள் எப்படியெல்லாம் சொல்லியிருக்கிறார் கள், செய்திருக்கிறார்கள் என்பதைப் பார்த்தோம். அதை செய்திருப்பது ஒரு அரசாங்கம், ஒரு மிகப்பெரிய அமைப்பு, மிகப்பெரிய அளவிலே செய்திருக்கிறது. நாம் அந்த அளவிற்கு இல்லா விட்டாலும் கூட, இங்கே அதுபோல் பல்வேறு செயல்களை செய்யவேண்டும்.
ஜான்.எஃப். கென்னடியின் அருமையான மேற்கோள்!
அங்கே அருமையான வாசகங்கள் பொறிக்கப் பட்டிருந்தன. ஒவ்வொரு பகுதியாக பார்த்துக் கொண்டு வருகிறபோது, ஒரு இடத்தில் இருந்த ஜான் எஃப் கென்னடி அவர்களுடைய  அற்புதமான மேற்கோள் ஒன்றினை நான் குறித்து வைத்தேன்.
அது என்னவென்றால்,
A man may die, nations may rise and fall, but an idea lives on
- என்று சொல்லியிருக்கிறார்.
இது எவ்வளவு அற்புதமான கருத்து என்பதை நாம் எண்ணிப் பார்க்கவேண்டும்.
                                      -------------------------”விடுதலை” 30-8-2012

மூன்று பேர்களுக்கு எனது நன்றி! தோன்றாத் துணையாக இருக்கும் தோழர்களுக்கும் நன்றி! நன்றி!! விடுதலை ஆசிரியர் ஏற்புரை
எழுத்துரு அளவு   


 எனது ஆசிரியர் பணிக்கு, இயக்கப் பணிக்குக் காரணமாக இருக்கும் அனைவருக்கும் நன்றி! நன்றி!! என்று கூறினார் விடுதலை ஆசிரியர்.
விடுதலை ஆசிரியராக தமிழர் தலைவர் மான மிகு கி. வீரமணி அவர்களின் அரை நூற்றாண்டு (50 ஆண்டுகள்) நிறைவுப் பெருவிழா சென்னை - பெரியார் திடல் எம்.ஆர். இராதா மன்றத்தில் 25.8.2012 அன்று காலை நடைபெற்றது. விடுதலை ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விழாவில் ஏற்புரை ஆற்றினார். இதில் விழா நாயகர் விடுதலை ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

மனிதர்கள் பிறந்தால், இறப்பார்கள். அதுபோல் தேசங்கள் முன்னாலே வரும், பிறகு கீழே போகும் அல்லது அழியும். ஆனால், ஒரு கருத்தாக்கம், ஒரு புரட்சிகரமான ஒரு சிந்தனை, கருத்து என்று சொன்னால், அந்த சிந்தனை பிறந்துவிட்டால், அதனை அழிப்பதற்கு யாராலும் முடியாது.
அந்த சிந்தனை வளரக்கூடிய சிந்தனையாக இருக்கும். அதைத்தான் அறிஞர் பெருமக்கள், சான்றோர் பெருமக்கள் இங்கு சிறப்பாக எடுத்துச் சொன்னார் கள். அந்த வகையிலே மிக முக்கியமாக உங்களு டைய வழிகாட்டுதல் உரைகளாக, நெறிகளாக நாம் எடுத்துக்கொண்டு, இந்த நேரத்திலே இதற்குக் காரணமான அறிவாசான் தலைவர் தந்தை பெரியார் அவர்களையும், அன்னை மணியம்மையார் அவர் களையும் நினைத்துப் பார்க்கிறேன்.
விடுதலையில் பணி புரிபவர்கள் சம்பளத்திற்காகப் பணி புரிபவர்கள் அல்லர்...
இவ்வளவுப் பணிகளையும் நான்  செய்திருக்கிறேன் என்று சொன்னால், அதற்காக என்னைப் பாராட்டுகிறீர்கள் என்று சொன்னால், அதற்கு நான் ஒரு சிறிதளவாவது தகுதி உள்ளவன் என்று சொன்னால், நான் தனி நபர் அல்ல; அத்தனை பெருமைகளும் சக தோழர்களான இயக்கத் தோழர்களுக்குத்தான் போய்ச் சேரும். நான் தொண்டர் களுக்குத் தொண்டன்.
அதுபோல, விடுதலை அலுவலகத்தில் பணி செய்பவர்கள் யாரும், நான் சேர்ந்த இந்த அய்ம்பதாண்டு காலம்முதல் இன்று வரையிலே ஊதியத்திற்காக என்னுடைய தோழர்கள் வேலை செய்பவர்கள் அல்லர். அவர்கள் தொண்டூழி யம் செய்பவர்களே தவிர, சம்பளத்திற்காக பணி செய்பவர்கள் அல்லர்.

நாங்கள் எதிர்பார்க்கின்ற லாபம் என்னவென்றால்...

இது ஒரு மிஷனரி என்று சொல்லக்கூடிய அளவிற்கு ஓர் அறப்பணி இயக்கம். இது லாப நோக்கத்தோடு நடத்தப்படக்கூடியது அல்ல; இதில் எதிர்பார்க்கும் ஒரே லாபம் மான உணர்வு. அவ்வளவுதானே தவிர, நம்முடைய இனத்திற்கு மான உணர்வு வரவேண்டும்; சமத்துவ சமுதாயம் அமையவேண்டும். மூட நம்பிக்கையற்ற சமுதாயம் உருவாகவேண்டும். அறிவியல் மனப்பான்மை இனி வரக்கூடிய தலைமுறையினருக்கும், இப்போது இருக்கக்கூடிய தலைமுறையினரிடையே செழிப் பாக வளரவேண்டும் என்பதுதான் நாங்கள் எதிர் பார்க்கிற லாபமே தவிர, வேறு கிடையாது.

என் இறுதி மூச்சு அடங்கும்வரையில் உறுதியாக இருப்பேன்

அந்த அளவிலே எத்தனையோ சோதனைகளை யெல்லாம் விடுதலை ஏடு தாங்கியிருக்கிறது. இதற்கெல்லாம் காரணம் என்னவென்றால், இது ஒரு கூட்டு முயற்சி; தனி மனிதரின் (என்னுடைய) முயற்சி அல்ல; தவறுகள் நடந்தால் அது என்னு டைய பொறுப்பு; இது வெற்றிகரமாக நடப்பதை நினைத்தால், அந்தப் பெருமை சக தோழர்கள், உழைக்கின்ற, உற்சாகப்படுத்துகின்ற அத்தனை தோழர்களையும் சேர்ந்தது. இந்தப் பெருமைக்கு அவர்கள் உரியவர்கள் என்று சொல்கின்ற இந்த நேரத்திலே, நான் நன்றிக்குரியவனாகக் கருதுவது, முதலாவது என்னுடைய ஆசான் தலைவர் தந்தை பெரியார் அவர்கள் எந்த நம்பிக்கையை என்னிடத் திலே வைத்தார்களோ, அந்த நம்பிக்கையை இறுதி மூச்சு அடங்கும்வரையில் காப்பாற்றுவேன் என்பதை இந்த அவையில் உறுதியாக நான் மீண்டும் கூறிக் கொள்கிறேன்.
அதுபோலவே, அன்னை மணியம்மையார் அவர்கள், அவர் பெறாத பிள்ளை நான். அந்த வகையிலே அந்த வாய்ப்பைப் பெற்றவன் நான். அதைத் தெளிவாக நான் மேலும் மேலும் வலி யுறுத்தவேண்டும் என்பதைப்போன்ற ஓர் உணர்வு. அய்யாவிடத்தில், அம்மாவிடத்தில் பணியாற்றக் கூடிய ஒரு வாய்ப்பு எனக்குக் கிடைத்த  மிகப்பெரிய பேறு என்று நான் நினைக்கிறேன். மற்ற எவருக்கும் கிட்டாத பெரும் பேறாக அந்தப் பேறு அமைந்தது.

மூன்று பேருக்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறேன்

இந்தப் பேறு எனக்குக் கிடைத்ததற்கு நான் மூன்று பேருக்கு என் நன்றியினை சொல்லவேண்டும்.
முதலாவதாக, என் வாழ்விணையராக இருக்கக் கூடியவர் திருமதி மோகனா அவர்கள் ஆவார்கள், இங்கே வந்திருக்கிறார்கள். அவர்கள்தான் எந்தவித மான சிந்தனையும் எனக்கு ஏற்படாமல் (அதாவது குழந்தைகள், குடும்பம் மற்ற பிரச்சினைகள் உள்பட) முழுக்க முழுக்க நான் இயக்கத்திலே, ஏட்டிலே எனது சிந்தனையைச் செலுத்துவதற்கு உறுதுணை யாக, எல்லா சுமைகளையும், எல்லா துன்பங் களையும் தாங்கிக்கொண்டு, அதுவும் குறிப்பாக நெருக்கடி கால கட்டத்தில் எத்தனையோ சங்கடங் களைத் தாங்கிக்கொண்டு அவர் எனக்கு உறு துணையாக இருந்தார்.
அதுபோலவே, இப்படி நான் வருவதற்கு, எனக்கு ஏற்பட்ட மனப்போராட்டத்திலே, மிக முக்கியமான ஒரு மனப்போராட்டத்திலே, அய்யாவின் அடிச்சுவட்டிலேகூட நான் குறிப்பிட்டிருக்கிறேன். அது என்னவென்று சொன்னால்,
குறிப்பாக, தேர்தல் பிரச்சாரத்திற்குப் பிறகு அய்யா அவர்கள், சென்னை பெரிய மருத்துவ மனையில் சேர்ந்திருந்தார்கள். தந்தி கொடுத்து என்னை வரவழைத்தார். நான் வந்த உடனே, அய்யா அவர்கள் விடுதலையை நிறுத்திவிடலாமா என்று இருக்கிறேன் என்று சொன்னார். பிறகு இதைப்பற்றி ஆய்வு செய்த நேரத்திலே, நீ பொறுப்பேற்பதாக இருந்தால் நாம் இதனை தொடரலாம் என்று அய்யா அவர்கள் கூறினார்.

இயக்கத்திற்கு பலமாக, - பயனாக அமையும் என்பதால்...

அய்யா அவர்கள் எதை சொன்னாலும் நான் கேட்கக் கூடியவன். என்னுடைய திருமண விஷயத் திலும் அய்யா சொன்னபடிதான் நான் நடந்தேன்.
அய்யா, இப்போது இது எதற்கு என்று நான் கேட்டபோது, இயக்கத்திற்கு இது பலமாக இருக்கும் என்று அய்யா கூறினார்.
இயக்கத்திற்கு அது பலமாக, பயனாக அமையும் என்றால், எனக்கு எவ்விதமான மறுப்பும் இல்லை; தாராளமாக நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன். எனக்காக தனி வாழ்க்கை என்றே நான் அமைத்துக் கொண்டதில்லை, என் திருமண வாழ்க்கை உள்பட.

ஊதியம் பெறமாட்டேன்...

அய்யாவிடம் ஒன்றே ஒன்று சொன்னேன். நீங்கள் எந்தப் பொறுப்பைக் கொடுத்தாலும், நான் ஏற் பதற்குத் தயாராக இருக்கிறேன். ஆனால், ஒரு சிறு வேண்டுகோள் என்னவென்றால், தங்களிடத்திலே இயக்கத்திலே நான் ஊதியம் பெறமாட்டேன்; அதை நீங்கள் தவறாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்றேன்.
உடனே அய்யா அவர்கள் சிரித்துக்கொண்டே சொன்னார்கள்:
இல்லை, இல்லை இதற்குச் சம்பளமாகக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. ஹானரோ ரியம் கொடுக்கலாம் என்று இருக்கிறேன் என்றார். ஹானரோரியம் கொடுக்கலாம்னு இருக்கிறேன் என்று சொல்லிவிட்டு, நான் என்ன பதில் சொல்கிறேன் என்று என்னைப் பார்த்தார்.
நான் ரொம்ப அமைதியாக நின்றிருந்தேன். நின்றுகொண்டுதான் அய்யாவிடம் பேசுவேன். நான் அப்போது சிரித்தேன்.
என்னப்பா, சிரிக்கிறாய், பதில் சொல் என்றார் அய்யா.
இல்லீங்கய்யா, அய்யாவிற்குத் தெரியாதது இல்லை. இரண்டும் ஒன்றுதானே அய்யா, பேரு தானே மாற்றி சொல்கிறீங்க என்றேன்.
உடனே, அய்யா சிரித்துவிட்டார்.
அதற்கு முழுக்க முழுக்கக் காரணம் என்னுடைய வாழ்விணையர்தான்.
அன்றைய காலகட்டத்தில் எங்களுடைய நண்பர்கள் சாமிதுரை, ஜனார்த்தனம், கிருஷ்ண மூர்த்தி நாங்கள் எல்லோரும் சேர்ந்து கூட்டு அலுவலகம் வைத்திருந்தோம் - வழக்குரைஞர் தொழிலுக்காக.
முழுநேரமாக விடுதலைப் பணியைப் பார்த்தால்தான் சிறப்பாக செய்ய முடியும்
அய்யாவிடத்தில் சம்பளம் வாங்கமாட்டேன் என்பதில் உறுதியாக இருந்தேன். நமக்கு வசதி யில்லை; சென்னையில் போய் இருக்கவேண்டும். வழக்குரைஞராக முழுநேரம் பிராக்டீஸ் செய்ய லாம்ணு நினைத்து அய்யாவிடம் அதைப்பற்றிக் கூறினோம்.
அய்யா அவர்கள், அதையும் சரியாக செய்ய முடியாது; இதையும் சரியாக செய்ய முடியாது. அதனால் முழுநேரமாக இதைப் பார்த்தால்தான் சிறப்பாக செய்ய முடியும் என்றார்.
சரிங்க அய்யா, உங்கள் கருத்தை நான்  ஏற்றுக் கொள்கிறேன். அப்படி என்றால், உங்களிடம் இருந்து சம்பளம் வாங்கமாட்டேன்; இயக்கத்திலி ருந்தும் சம்பளம் வாங்க மாட்டேன் என்று சொன்னேன்.
அதைப்பற்றி பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்றார் அய்யா.

எனது மாமியார், மாமனார் நன்றிக்குரியவர்கள்

எனக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்த -எனக்கு மகிழ்ச்சி அளித்த நிலை என்னவென்றால்,  என்னுடைய மாமனார், மாமியார் வசதியானவர்கள். (ரங் கம்மாள் - சிதம்பரம் ஆகியோர்) அவர்கள் அய்யா விடம் மிக மகழ்ச்சியாக சொன்னார்கள், உங்களுக்குப் பயன்படுகிறார் என்றால் எங்களுக்கு இதைவிட வேறு மகிழ்ச்சி ஏது? எங்களுக்கு வேறு என்ன செலவு இருக்கிறது? தாராளமாக அவர்களது குடும்பத்தை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று சொன்னார்கள்.
மாமியார், மாமனாரிடத்தில் பணம் வாங்கினாலும் சுயமரியாதையை இழக்கிறோம்; இயக்கத்திலே பணம் வாங்கினாலும் நம்முடைய கொள் கைக்கு முரண்பாடு. இந்த இரண்டில் எதை செய்வது என்பதைப்பற்றி நானும், எனது துணை வியாரும் ஒன்றிரண்டு நாள் விவாதம் செய்தோம்.
தன்மானத்தை விட்டாலும், இனமானத்தை காப்பாற்றக் கூடிய வாய்ப்பைப் பெற்றேன்
தனிப்பட்ட முறையில் மாமனார், மாமியாரிடம் பணம் வாங்கினால், கொஞ்சமாக சுயமரியாதையை இழக்கிறோம்; ஆனால், இயக்கத்தின் பணம், பொதுப்  பணம். ஆகவே அதைப் பெற்றுக் கொள்ளவேண்டிய அவசியம் இல்லை. கொஞ்சம் தன்மானத்தை நாம் விட்டாலும் பரவாயில்லை; இனமானத்தை நாம் காப்பாற்றக்கூடிய வாய்ப்பைப் பெறுகிறோம்.
ஆகவே, மாமனார், மாமியாரிடம் பணம் வாங்கினால் யார் என்ன சொல்வார்கள்? நமக்கு என்ன கவலை இந்தப் பணியை செய்வதற்கு? என்று நானும், எனது துணைவியாரும் ஒரு முடிவுக்கு வந்தோம்.
ஆகவே, அன்றிலிருந்து இன்றுவரை உறுதியாக இருக்கக் கூடிய ஒரு நிலை. ஆகவே, இந்தப் பணியை நான் செய்வதற்கு எனது வாழ்விணையர் எவ்வளவு பெரிய துணையோ, அதுபோல் என்னுடைய மாமனார், மாமியார் அவர்களையும் இந்த நேரத்தில் நான் நினைத்துப் பார்க்கிறேன். அந்த மூவருக்கும் எனது நன்றியை உரித்தாக்குகிறேன்.

ஆகவேதான் இந்த வாய்ப்பு  எனக்குக் கிடைத்தது.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் என்னை பாராட்டுவது போல, தாலாட்டுவதுபோல மிகப்பெரிய தண்ட னையை வழங்கியிருக்கிறார்கள். அவர்களுக்கு நன்றி எப்படி சொல்வது என்பது தெரியவில்லை.
நம்முடைய சமுதாயத்திலிருந்து நீதியரசர்கள் வரமாட்டார்களா?
அய்யா நன்னன் அவர்கள் மிக அழகாகச் சொன்னார், மாணவர் சுற்றுப்பயணத்தின்போது நான் பல நாள் தூங்கிவிடுவேன்; அவர்தான் என்னை எழுப்பியிருக்கிறார். இப்படி பல்வேறு செய்திகளை அவர் எடுத்துச் சொல்லியிருக்கிறார். அந்த வகையிலே எங்களுக்குப் பெருமை.
விடுதலைக்கு வந்தபோது, நம்முடைய சமுதாயத்திலிருந்து நீதியரசர்கள் வரமாட்டார்களா? என்று தலையங்கம் எழுதிய கரம் என்னுடைய கரம்.
அய்யா அவர்களே அழைத்து வந்து அமர்த்தியது (பழைய சிந்தாதிரிப்பேட்டை, 2, பாலகிருஷ்ணப் பிள்ளை தெருவிலே) விடுதலை அலுவலகத்திலே, அண்ணா போன்றவர்களும், மிகப்பெரிய முன்னோ டிகளாக இருந்த மேதைகளும் அமர்ந்திருந்த அந்த ஒரு கை இல்லாத நாற்காலியிலே என்னை அய்யா அவர்கள் அமர வைத்துவிட்டு எதிரே  உட் கார்ந்தார்.

நான் எழுதிய முதல் தலையங்கம்

அவர்கள் முன்னாலேயேதான் அன்றைய காலகட்டத்தில் முதல் தலையங்கம் எழுதினேன். 25 ஆம் தேதி அங்கே அதிகாரப்பூர்வமாக எழுதி அச்சிடப்பட்டு வந்த நாள் இன்றைக்குத்தான் (25.8.1962).

சமூகநீதிக் கொடி பறக்காத காரணத்தினால்...

ஆனால், இந்த விடுதலையினாலே பலன் ஏற்பட்டு இருக்கிறதா இல்லையா என்பதை அளந்து பார்த்தோமானால், விடுதலையில் பொறுப்பேற்று அய்ம்பதாவது ஆண்டு எனக்கு நடந்துவிட்டது என்ற பெருமையிலே நான் மூழ்கவில்லை;  அதிலே பெருமைப்படவில்லை. மாறாக, இந்த அய்ம்ப தாண்டு காலத்திலே இரண்டு தமிழர்கள் உச்சநீதி மன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதிகளாக இருந்து இந்த விழாவிலே என்னை பெருமைப்படுத்தினார்கள்.
அவர்கள் பெருமைமிக்க வழக்குரைஞர்கள்; ஆற்றலாளர்கள், உழைப்பினாலே உயர்ந்த பெருமக்கள். எல்லாம் இருந்தும் சமூகநீதி கொடி பறக்காத காரணத்தால், பலருக்கு அந்த வாய்ப்பு கிட்டாத வாய்ப்பாக இருந்தது. விடுதலையினுடைய குரல், இயக்கத்தினுடைய குரல், அவர்களே சொன்னது போல, தந்தை பெரியார் அவர்கள் இல்லை என்று சொன்னால், நாம் யாருமே இல்லை என்று சொல்லக்கூடிய ஒரு நிலை.

விடுதலையின் விழுமிய பயன்!

இந்த அரை நூற்றாண்டு காலத்திலே கிடைத்த வெற்றி என்னவென்றால், ஒரு பக்கம் பெரும் பேராசிரியர்கள், மற்றொரு பக்கம் பெரும் நீதியரசர்கள், இன்னொரு பக்கம் பெரும் வழக்குரை ஞர்கள் என்றெல்லாம் இன்றைக்குக் கிடைக்கக் கூடிய  அளவிற்கு இந்த விடுதலையின் விழுமிய பயன் வந்தது என்று சொன்னால், இந்தப் பயன் பெருகட்டும்; இந்த சமுதாயம் எழுச்சி பெறட்டும் என்று கூறி, அனைவருக்கும் நன்றி! விருந்துண்டு செல்க! என்று கூறி விடைபெறுகிறேன்.

வாழ்க பெரியார்! வளர்க விடுதலை!!
வணக்கம், நன்றி!
- இவ்வாறு விடுதலை ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
                        -----------------------”விடுதலை”30-8-2012

29.8.12

ஓணம் தத்துவம் என்ன?



ஓணம் பண்டிகையாம்; இது தமிழ்நாட்டை விட கேரள மாநிலத்தில் வெகு விமர்சையாகக் கொண் டாடப்படுகிறது.

இதன் கதை என்ன?

சோழ நாட்டில் திருமரைக்காடு (வேதாரண்யம்); அங்கு ஒரு சிவன் கோயில். அங்குள்ள சிவனின் மனைவிக்குப் பெயர் ஞானம் பழுத்த நாயகி என்பதாகும்.

ஒரு நாள் தன் மனைவியோடு சிவன் புணர்ந்து கொண்டு இருந்தானாம். (இது மாதிரி சமாச்சாரம் இல்லையென்றால், இந்து மதம் என்பதற்கு அர்த்தமே கிடையாது!)

அந்த நேரத்தில் எரிந்து கொண்டிருந்த தீபம் ஒளி குன்றி எரிந்து கொண்டிருந்ததாம். அந்த சமயத்தில் அங்கு வந்த எலி விளக்கில் இருந்த நெய்யைக் குடித்துவிட்டு, எலியின் வால் திரியின் மேல் பட்டதால்,  தூண்டப்பட்டு ஒளி பிரகாசமாகிவிட்டதாம்.

சிவனா கொக்கா? எலியைப் பார்த்து சிவன், நீ மூவுலகையும் அரசாட்சி செய்வாய்! என்று வரம் கொடுத்தானாம்.

விளக்கைத் தூண்டவேண்டும் என்ற எண் ணத்தில்கூட எலி அந்த வேலையைச் செய்யவில்லை; எதிர்பாராவிதமாக வால் பட்ட சங்கதி! சிவன் எவ்வளவு பெரிய முட்டாளாக இருந்தால் இப்படி ஒரு வரம் கொடுத்திருப்பான்? (ஓ, இது மாதிரி கடவுள் சமாச்சாரங்களில் எல்லாம் அறிவைச் செலுத்தக் கூடாதே - கண்மூடி தண்டனிட வேண்டுமே!)


மாவலி என்னும் பெயரோடு பிறந்த அசுர குல அரசன் மண்ணுலகம், விண்ணுலகம், பாதாள உலகம் மூன்றையும் கட்டி ஆண்டானாம்.

விண்ணுலகையும் மாவலி ஆண்டதால், இந்திர லோகத்தின் அதிபதியாகிய இந்திரன் கூட மாவ லிக்குக் கட்டுப்பட்டவனாகிவிட்டான். பொறுக்குமா அவர்களுக்கு?

அதே நேரத்தில் யாருக்கும் எந்த கேட்டையும் செய்யாமல் நல்லாட்சி புரிந்து, நல்ல பெயர் எடுத்தான் மாவலி!

அசுர குலத்தவன் நல்லாட்சி செய்வதாவது! நல்ல பெயர் எடுப்பதாவது! விட்டுவிடுவார்களா? இந்திரனின் தகப்பனாகிய காசிப முனிவன், விஷ்ணுவிடம் மனு போட்டானாம். கடும் தவமிருந்து விஷ்ணுவிடம் வரம் வேண் டினானாம். விஷ்ணு தமக்கு மகனாகப் பிறந்து மாவலியை ஒழித்துக் கட்ட வேண்டும் என்று மன்றாடினானாம். அதன்படியே வரமும் கிடைத்தது.

(மூன்று உலகத்தையும் மாவலி கட்டி ஆள வேண் டும் என்று சிவன் கொடுத்த வரம் என்னவாயிற்று? சிவனை விட வைணவக் கடவுளுக்குச் சக்தி அதிகம் என்று காட்டுவதற்கு இதுபோன்ற கதைகள் போலும்!)

ஒருமுறை யாகம் செய்த மாவலி தான தருமங்களைச் செய்தான். இதுதான் சந்தர்ப்பம் என்று கருதி காசிப முனிவருக்குப் பிறந்த வாமனன் (குள்ளப் பார்ப்பான் - சூழ்ச்சி என்று வந்தால் புராணங்கள் கூட பார்ப்பானைத்தான் தேடிப் பிடிக்கின்றன.) பிச்சைக்காரனாக (யாசகம் புருஷ லட்சணம் என்பதே பார்ப்பன தருமம் ஆயிற்றே!) சென்று மூன்று அடி மண்ணைக் கேட்டானாம். கேட்பாருக்கு இல்லை என்று சொல்லிப் பழக்க மில்லாத அந்தத் தர்மப்பிரபுவாகிய மாவலி எனும் அசுர அரசன் சம்மதித்தான்.

சூழ்ச்சிக்காரக் குள்ளப் பார்ப்பனனாகிய  வாமனன் பேருரு எடுத்து (விசுவரூபம்) ஓரடியை மண்ணுலகத்திலும் மற்றொரு அடியை விண்ணு லகத்திலும் வைத்து, மூன்றாவது அடியை எங்கு வைப்பது என்று கேட்டானாம். என் தலையில் வை! என்றானாம் அந்த அப்பாவி; அவ்வளவுதான். தலையில் காலை வைத்து மிதித்து சிறையிலும் அடைத்தானாம்.

இந்த நாளில் மாவலி வீட்டுக்கு வீடு வருகிறானாம். கேரளத்தில் அப்படி ஒரு நம்பிக்கை. வீட்டு வாசலில் கோலம் போட்டு வைக்கிறார்கள்- மாவலியின் வருகைக்காக. ஓணம் பண்டிகை என்பது இதுதான்.


இந்தக் கதை மூடத்தனத்தின் மொத்தக் குத்தகை என்பது ஒருபுறம். இந்து மதத்தில் விஷ்ணு அவதாரம் எடுப்பதெல்லாம் அசுரர்களை அழிக்கத் தான் என்பதை மறந்துவிடவேண்டாம். தீபாவளிக் கதையும் இந்த ரகத்தைச் சேர்ந்ததே!

நல்லவனாக இருந்தாலும் அவன் அசுர குலத்தவன் என்றால் - சூத்திரன் என்றால் அவனை ஆளவிடாதே- அழித்துவிடு! என்கிற ஆரிய தத்துவம்தான் இந்த வாமன அவதாரக் கதை!

இங்கு மதம், கடவுள், பக்தி என்பதெல்லாம் நம்மை ஒழிப்பதற்கே! இந்தச் சூழ்ச்சி புரியாமல் கடவுள், காடாத்து என்று அலைவது பரிதாபமே!


                -----------------------"விடுதலை” தலையங்கம் 29-8-2012

28.8.12

உலகின் ஒரே நாத்திக ஏடு!



விடுதலை  ஆசிரியர் நாற்காலியில் அமர வைத்து என்னை எழுது என்ற ஆணையைப் பிறப்பித்தவர் அய்யா!
அரை நூற்றாண்டுகள் விடுதலை பணி தொடர அயராது உழைத்த - ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி! நன்றி!!
உங்கள் நம்பிக்கை பொய்த்துவிடாமல் உறுதியாக உழைப்பேன்! உழைப்பேன்!!
விடுதலை ஆசிரியர் அவர்களின் நெக்குருகும் அறிக்கை

 

அரை நூற்றாண்டுக்காலம் விடுதலை ஆசிரியராகப் பணியாற்றியதற்கு ஒவ்வொரு வகையிலும் காரணமாக இருந்த - அய்யா தொடங்கி தொண்டர்கள் உள்பட அனைவருக்கும் நன்றி கூறி, திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

நம் அறிவு ஆசான் தலைவர் தந்தை பெரியார் அவர் கள் மனிதகுலத்தின் சுயமரியாதையைப் பாதுகாக்கும் பகுத்தறிவு நாளேடான விடுதலையில் அய்யா அவர்கள் தொண்டர்களில் ஒருவனான என்னை- கடந்த 50 ஆண்டு களுக்குமுன்பு, அவர்களே அழைத்து வந்து (சிந்தாதிரிப் பேட்டை, 2, பாலகிருஷ்ணப்பிள்ளைத் தெருவில்) விடுதலைப் பணிமனையில் பணியாற்ற என்னை ஒரு குரு சீடனைப் பீடத்தில் அமர்த்தி எழுத்தாணியைத் தந்து எழுது, துணிவாக எழுது, தெளிவாக எழுது, அச்சமின்றி உண்மையை எழுது என்று அறிவுறுத்துவதுபோல் அறிவுரை தந்து, தனது சிம்மப் பார்வையோடும், அன்பு நதியினில் நனைத்து கட்டிப் போட்ட இதயத்தோடும், பணித்தார்கள்!

அய்யா - அம்மா

அரை நூற்றாண்டு உருண்டோடிவிட்டது! இது எனது வாழ்வில் யான் பெற்ற பெரும்பேறு!! அய்யாவுக்கும், அம்மாவிற்கும் (அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார்) கடைசிவரை உடனிருந்து பணி செய்து பயன்பட்டு, மனநிறைவு கொள்ளச் செய்த மகத்தான பணிதான் எனது வாழ்வின் விழுமித்த பயன்.

எண்ணற்ற கழகக் குடும்பங்களின் இணையற்ற பாசம் தான் யான் பெற்ற - பெறுகின்ற, பெரும் ஊதியம்!

உலகின் ஒரே நாத்திக ஏடு!

உலகிலேயே பகுத்தறிவு - (நாத்திக) கொள்கையைப் பரப்பும் சமூக அறிவியல் புரட்சிப் பணிக்கென நாள்தோறும் அச்சிடப்பட்டு வெளியாகும் ஒரே ஒரு நாளேடு, விடுதலை நாளேடுதான் என்பதை உலகப் பகுத்தறிவாளர் - மனிதநேயர்கள் அமைப்பின் தலைவரான, நார்வே நாட்டினைச் சார்ந்த லெவிஃபிராகல் (டுநஎல குசயபரட) அவர்கள் டில்லி பெரியார் மய்யம் திறப்பு விழாவின்போது, உலகுக்கே பிரகடனப்படுத்திப் பெருமைப்பட்டார்கள்!

அரசியல், பொருளாதாரத் துறைகளில் மக்களின் பெரும்பான்மைக் கருத்துக்கு எதிரான நிலைப்பாடு எடுத்து, வெற்றி பெறுவதுகூட (ஒப்பீட்டு அடிப்படையில்) எளிது; ஆனால், மக்களிடம் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக மண்டிக் கிடக்கும் மூட நம்பிக்கைகளை, கடவுள், மதம், ஜாதி, பெண்ணடிமை போன்ற மனித ஒருமைப்பாட்டிற்கும், சமூக முன்னேற்றத்திற்குமான முட்டுக்கட்டைகளை எதிர்த்து - எதிர்நீச்சல் போட்டு 78 ஆண்டுகள் ஒரு நாளேடு தாக்குப் பிடித்து நிலைப்பது, நீடிப்பது என்பதே ஒரு தனித்ததோர் சாதனையென்றே சொல்லவேண்டும்.

எப்படி சாத்தியமாயிற்று?

நட்டத்திற்கென நடந்த ஏட்டினை, அய்யா தந்தை பெரியார்தம் சொந்த செல்வமும், சலிப்பறியாத உழைப்பும், எதிர்ப்பினால் கலங்காத நெஞ்சுரமும், நேர்மைத் திறனும், பற்றற்ற நிலையும் (அறிவுப் பற்று, கொள்கைப் பற்று, மனிதகுலப் பற்று தவிர வேறு எந்தப் பற்றும் - புகழ்ப்பற்றுகூட இல்லாத தலைவர்) உடைய அவர்களால் தான் தொடர்ந்து நடத்திடச் சாத்தியமாயிற்று.

அந்தப் பணி - அதே எதிர்நீச்சல், அடக்குமுறை - அரசுகளின் ஆதரவின்மை - இவைகளைத் தாண்டி தொடர்கிறது இன்றும்கூட - மூலகாரணம் அய்யாவின் அருந்தொண்டர்களான பற்றற்றான் பற்றினை பற்றி நடக்கும் மாவீரர்களான கருஞ்சட்டை வீரர் - வீராங்கனைகளின் கடும் உழைப்பும், பெரியார் ஆணை ஒன்றே நமக்குப் பெரிது; வேறு எந்த சுயநலச் சிந்தனையோ, ஆசா பாசமோ அல்லவென்றே கருதி, தம் வறுமை நிலையில்கூட கொள்கை வளத்தினை சுவாசிக்கும் தொண்டர் கூட்டத் தின் கட்டுப்பாடு தளரா பேராதரவின் காரணமாகத்தான்.

அவர்களின் பணியாளர்களில் - தோழர்களின் வரிசையில் கடைகோடியில் நின்று கடமையாற்றும் எளியவன் யான். எவ்வளவு மகத்தான ஆதரவு இப்பணி புரியும் எனக்கு!

என்னை ஊக்கப்படுத்தினால்...!

என்னை ஊக்கப்படுத்தினால், அது விடுதலைக் குழுமத்திற்கு உற்சாகத்தைப் பெருக்கும்; கழகக் குடும்பத்தினரை மேலும் உழைக்க, பெரியாரின் மண்டைச் சுரப்பை உலகு தொழ வைக்க வாய்ப்பாகும் என்பதற்கு - 25 ஆம் தேதி ஆகஸ்ட் விடுதலை நாள் விழா - ஓர் எடுத்துக்காட்டே!

நன்றி! நன்றி!!
அனைவருக்கும் நன்றி!!!

அதில் கலந்துகொண்டு மனந்திறந்து பாராட்டி, சீராட்டிய தமிழினக் காவலர் - எம் இனத்தின் இன்றைய இராவணன், ஆட்சியைவிட இனத்தின் மீட்சிக்காக அல்லும் பகலும் அயராது உழைக்கும் ஓய்வறியா உழைப்பின் உருவம் - எம்மூத்த சகோதரர் மானமிகு கலைஞர் அவர்களும், காலையில் வந்து கலந்து, கருத்துமழை பொழிந்த தன்மானப் பெரும் புலவர் டாக்டர் மா. நன்னன் அவர்களுக்கும், உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதியரசர்கள் ஜஸ்டீஸ் டாக்டர் எஸ். மோகன், ஜஸ்டீஸ் டாக்டர் ஏ.ஆர். இலட்சுமணன், அகில இந்திய எழுத்தாளர் சங்கத் தலைவர் புரட்சி எழுத்தாளர் பொன்னீலன், ஊடகவியலா ளர்கள் பெருமைக்குரிய ஏ.எஸ். பன்னீர்செல்வம், ரமேஷ் பிரபா, லக்னோ பல்கலைக் கழக சமூகவியல் பேராசிரியர் ஜெக்மோகன்சிங்வர்மா மற்றும் கழகப் பொறுப்பாளர்கள் அனைவருக்கும் எனது உளம் நெகிழ்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன்.

உங்களது நம்பிக்கைகளை பொய்க்கவிடாமல், இறுதி மூச்சு உள்ளவரை - உழைத்து உழைத்து, காப்பாற்றிடு வேன் என்று உறுதி கூறுகிறேன்.

உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ?

எனது உடல்நலப் பாதுகாப்புக்கென அரும்பெரும் முயற்சிகளை மேற்கொண்டு, என்னை தாயினும் சாலப் பரிந்து காக்கும் புரவலர்களுக்கும், அவர்களின் அன்பு மழைத் துளிகளை, அணைகளாகக் கட்டி ஒழுங்குபடுத்தி அறக்கட்டளை உருவாக்கி, எனது வேண்டுகோளை ஏற்று, பெரியார் நலநிதி அறக்கட்டளையாக்கிட இசைவு தந்து ஏற்பாடு செய்துள்ள அதன் தலைவர், எமது மதியுரைஞர் அய்யா மானமிகு எஸ். இராஜரத்தினம் மற்றும் அவர்தம் அணியினர், அனைவருக்கும் நன்றி.

என்றும் எனது காவலராக - நலம் பாதுகாப்பு அரணாக உள்ள டாக்டர் சோம. இளங்கோவன் அவர்களுக்கும், உலக முழுவதிலும் உள்ள நலம் நாடிடும் நண்பர்களுக்கும் எனது இதயமார்ந்த நன்றி! நன்றி!! நன்றி!!!

உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ?

அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்?

சென்னை 
28.8.2012

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்.

27.8.12

திராவிடம் என்பது ஆரியத்தை வென்று நம்மை நாம் மீட்டுக் கொள்வது


திராவிடர் கழகம் பிறந்த நாள்!


இன்று ஒரு பொன்னாள் - தமிழர் வரலாற்றில் திருப்பம் தந்த திருநாள்! ஆம், இன்றுதான் சேலம் மாநகரில் திராவிடர் கழகம் என்று பெயர் சூட்டப்பட்ட சூரிய வெப்ப நாள் (1944).

தந்தை பெரியார் அவர்களால் உருவாக்கப்பட்டு, அறிஞர் அண்ணா அவர்களின் பெயரால் தீர்மானம் முன்மொழியப்பட்ட நாள்.

ஆரிய தர்மம் என்பது திராவி டனுக்குச் சிறிதும் பொருந்தாது என்பதை எந்தத் திராவிடனும் மறுக்க முடியாது - என்றார் தந்தை பெரியார்.

(நெல்லை திராவிடர் கழக மாநாட்டில் தந்தை பெரியார், குடிஅரசு, 9.2.1946)

இதற்குள் திராவிடர் கழகத்தின், திராவிட இனத்தின் அனைத்துத் தத்துவமும் அடங்கிவிடவில்லையா?

பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப் பிலிருந்து அனைத்துத் துறைகளிலும், நிலைகளிலும் மீட்கும் இயக்கம் எது?

திராவிட நாட்டில் புகுந்த ஆரியன் (பார்ப்பான்) சுவாமியாய் ஆகிவிட்டான். பணம் திரட்ட வந்த மார்வாடி சவுகார், சேட்டு ஆகி விட்டான். இவர்கள் இருவருக்கும் உதவி செய்வதாக ஒப்பந்தம் பேசிக் கொண்டு ஆட்சி நடத்தவந்த பிரிட்டீஷ்காரன் துரையாகிவிட் டான். இந்நாட்டுப் பழங்குடி மக்களான குடிமகனான திராவிடனாகிய நாம் சூத்திரன் நாலாம், அய்ந்தாம் வருணத்தவன், அடிமை என்று இழிமகனாக ஆக்கப்பட்டு விட்டோம். இனி சிறிதும் சகித்து இருக்கக் கூடிய காரியம் அல்ல. தேசியம், சுயராஜ்யம், சட்ட சபை, மகாத்மா காந்தியார் உபதேசம் என்பவை களெல்லாம் நம் முயற்சியைக் கெடுக்க வந்த (தபசைக் கலைக்க வந்த மோகினிகளாகும்) தந்திரங் களாகும்.

உண்மையில் இப்பொழுது நமக்கு முதலாவதாக வேண்டியது நமக்குள் நாம் ஒன்றுபடுவதே யாகும். அது இல்லாமல் ஒரு அளவும் நம்மால் விடுதலையோ, முற்போக்கோ பெற முடியாது. இதற்காக எந்த உருவத்திலாவது எந்தத் தலைமையிலாவது ஆரியம் இருந்தால் முடியுமா என்று சிந்தித்துப் பாருங்கள். (அதே உரை, குடிஅரசு, 9.2.1946).

இதற்கு விளக்கமும் தேவையோ! புத்தர் இயக்கத்தைச் சிதைத்து ஆரியம் தலைமை தாங்கியதிலிருந்து, திராவிட இயக்கத்தைச் சிதைக்க ஊடுருவல் கொண்ட இந்தக் காலம்வரை நமது இனத்தின் பண்பாட்டுக்கு, (தைமுதல் நாள் தமிழ்ப்புத்தாண்டு என்பதை மாற்றியதை எடுத்துக்கொள்ளலாமே!) முற்போக்குக்கு (கோவில் புனருத் தாரணங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை எடுத்துக்கொள்ளலாமே!) கல்வி வளர்ச்சிக்கு (சமச்சீர்க் கல்வி எதிர்ப்பை எடுத்துக்கொள்ளலாமே!) ஏற்பட்டுவரும் கேடுகளைக் கணக்கில் கொண்டால் நம் பகுத்தறிவுப் பகலவன் கணிப்பைக் கச்சிதமாய்ப் புரிந்துகொள்ள முடியுமே!

நமக்கு முதலாவதாக வேண்டியது நாம் ஒன்றுபடுவதே என்றார், திராவிடத்தை முன்னிறுத்திய தந்தை பெரியார்.

இப்பொழுதோ ஒரு கும்பல் திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று ஆரியத்துக்குக் கால் கழுவிவிடும் தொண்டை தலைமேல் தூக்கிப் போட்டுக்கொண்டு திரிகிறது.

திராவிடம் என்பது ஆரியத்தை வென்று நம்மை நாம் மீட்டுக் கொள்வது - இனப் போராட்டம் இன்று, நேற்று அல்ல - இராமாயண காலத்திலிருந்தே! அதனை அதே பெயரைக் கொண்ட (இராம+சாமி) தலைவரின் சகாப்தத்தில் வெற்றி காணவேண்டாமா? திராவிடர் கழகம் பிறந்த இந்நாளில் சிந்திப் போமாக! செயல்படுவோமாக!!

                       -----------------------”விடுதலை” 27-8-2012

ஈழத்தமிழர்களுக்காக எங்களை விட வேகமாகச் செயல்படக் கூடியவர்களா?-கி.வீரமணி

எங்களைவிட ஈழத்தமிழர்களுக்கு வேகமாக செயல்படக் கூடியவர்களை நாங்கள் தடுக்கவில்லையே! வேகம் விவேகத்தோடு இருக்கட்டும்! வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம்! டெசோ விளக்கக் கூட்டத்தில் தமிழர் தலைவர் கருத்துரை


 ஈழத்தமிழர்களுக்காக எங்களை விட வேகமாகச் செயல்படக் கூடியவர் களை நாங்கள் தடுக்கவில்லை; தாராளமாகச் செயல்படட்டும். ஆனால் வெறும் வேகமாக இல்லாமல், விவேகத்தோடு அது இருக்கட்டும், வீண் விவாதங்கள் தேவையில்லை என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

சென்னையில் 21.8.2012 செவ்வாயன்று திராவிடர் கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட டெசோ தீர்மான விளக்கச் சிறப்புக் கூட்டத்தில் அவர் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

 என்ன சூழ்நிலை என்றால், அவர்கள் இந்த மாதிரி பிரச்சினைகளால் உருவாக்கப்பட்டவர்கள். இதற்குத் தீர்வு காணவேண்டும் என்பதற்காகத்தான் விடுதலைப்புலிகள் அமைப்பு வளர்ந்தது.

ஆனால், 2001 ஆம் ஆண்டு அமெரிக்காவில் இரட்டைக் கோபுர தகர்ப்பு நடைபெற்றதால், இது மாதிரி யார் நடத்தினாலும் அது பயங்கரவாதம், அது எந்த நாட்டில் நடந்தாலும் பயங்கரவாதம் என்று முத்திரை குத்திவிட்டார்கள். ஆகவே, எந்த நாட்டிலும் அதனை பரவ விடக்கூடாது என்று முடிவெடுத்துவிட்டார்கள். சுதந்திரப் போராட்டத் திற்காகப் பாடுபடக் கூடியவர்களா, பயங்கர வாதிகளா? அதைப் பற்றி அவர்களுக்குக் கவலை இல்லை, எல்லோரும் ஒரே கண்ணோட்டத்தோடு பார்த்தனர். கூண்டு நூலில் உள்ள ஒரு செய்தியை சொல்லுகிறேன்:

யூதர்களும், சிங்களவர்களும்

நாஜி ஜெர்மனியில் யூதர்களின் கடைகள் உடைக்கப்பட்டு, பலர் கொல்லப்பட்டு 30,000 பேர் வரை சித்திரவதை முகாம்களுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்ட அக்கண்ணாடிகள் உடைந்த இரவு, க்ரிஸ்டால்நாட் எப்படி அய்ரோப்பிய வரலாற்றில் மிகக் கொடுமையானதொரு பகுதியோ, யூத மனங்களில் ஆறாத ரணத்தை அச்சம்பவங்கள் ஏற்படுத்தினவோ, அதேபோல்தான் இலங்கைத் தமிழர் அனைவரையும் அக்கறுப்பு ஜூலை நாளும் மிக ஆழமாகப் பாதித்தது.

ஜெர்மனியில் நடந்ததைப்போலவே இலங்கையிலும் அரசே முன்னின்று அரங்கேற்றிய கொடுமைகள்தான் அவை. படுகொலை செய்து, சொத்துக்களைத் தீக்கிரையாக்கி, இனியும் அங்கு வாழவியலாது என்ற அச்சத்தை உருவாக்கி, தமிழர்களை நாட்டை விட்டே வெளியேறச் செய்த நாள். அச்சம் பவங்களின் உடனடி விளைவு, சில நூறு பேர் மட்டுமே இருந்த விடுதலைப்புலிகள் அமைப்பில் ஆயிரக்கணக்கில் இளைஞர்கள் இணைந்தனர்.

இதுதான் அதனுடைய அடிப்படை என்று பொது நிலையில் இருக்கக் கூடியவர்கள் சொல்கிறார்கள்.

2001 செப்டம்பரில் உலகே தலைகீழாய் மாறியிருந்ததை விடுதலைப்புலித் தலைமை புரிந்துகொள்ளவில்லை. பயங்கரவாதத்திற் கெதிரான போரில் பல நாடுகள் இணைந்த பிறகு போராளிக் குழுக்களுக்கான ஆதரவும் உலக அளவில் குறையத் தொடங்கியது.

இப்படி பல சூழ்நிலைகள் அதிலே சேர்ந்தி ருக்கின்றன. அதுமட்டுமல்ல, மிகப்பெரிய அளவிற்கு எப்படி சூழ்நிலை உருவாகி உள்ளது என்பதற்கு இன்னொரு செய்தியையும் சொல்லி யிருக்கிறார்.

தவிரவும், சோவியத் யூனியன் வீழும் வரை நிலவிய பனிப்போரின் ஒரு பகுதியாக, அந்நாடும், அமெரிக்காவும் காலனிய ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்ற நாடுகளைத் தத்தம் அணிப் பக்கம் இழுக்க முயன்றன. அத்தகையதொரு சூழலில் நாடுகள் எவ்வித மனித உரிமை மீறல்களில் ஈடுபட் டாலும் அதைக் கண்டும் காணாமல் இருந்தன.

இவர்களுக்குக் கிடைக்கவேண்டிய  ஆதரவு, பன்னாட்டு ஆதரவு, நியாயமான ஆதரவை அவர்கள் கொடுக்கத் தயாராக இல்லை. ஏனென் றால், அவர்களுக்கு நிர்ப்பந்தங்கள் அப்படி. அந்த நிர்ப்பந்தத்தை எவ்வளவு முறையாகப் பயன் படுத்திக் கொண்டார்கள் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

அதை இந்நூலில் அழகாக விளக்குகிறார்:

மனித நாகரிகத்திற்குச் சவால் விடும் வகையில் இலங்கை நிகழ்வுகள் அமைந்தாலும், சீனா, ரஷ்யா மற்றும் இந்தியா அய்.நா. தலையீட்டை எதிர்த்தன.

ஆனால், நண்பர்களே அய்.நா. தலையீட்டை எதிர்த்தனர் என்பது  அன்றைய நிலை. ஆனால், அதே இந்தியா, நம்முடைய நாடு, இது பயங்கர வாதத்திற்கு எதிரான போர் ஆகவே, நீங்கள் (அய்.நா.) தலையிடக் கூடாது என்று சொன்ன இந்தியா, அய்.நா. பொதுச்செயலாளர் பான்-கீ-மூனால் உருவாக்கப்பட்ட மூவர் குழுவினுடைய பரிந்து ரைக்கு ஏற்ப கொண்டுவரப்பட்ட தீர்மானம் (போர்க்குற்றவாளி)  இருக்கிறதே அதிலே இந்தியா தனது ஆதரவை அமெரிக்கத் தீர்மானத்திற்குக் கொடுத்தது என்று சொன்னால், இது எவ்வளவு பெரிய மாற்றம்! இந்த மாற்றம் எப்படி நிகழ்ந்தது?

இது தமிழ்நாடு ஒருங்கிணைந்து கொடுத்த குரல் - அழுத்தத்தினாலும், அதைவிட முக்கியம் திராவிட முன்னேற்றக் கழகம் மத்திய ஆட்சியிலே இருந்த காரணத்தினாலே, அவர்கள் இதனை வலியுறுத்தி இறுதிவரையிலே கொடுத்த அழுத்தம், அதனு டைய விளைவாக இந்தியா வாக்களிக்காது என்ற நிலை உருவானது.

ஆனால், நம் ஊடகங்கள் எல்லாம் என்ன கூறின? இந்தியா கடைசிவரைக்கும் இலங்கையின் பக்கம்தான் இருக்கும் என்று நஞ்சைக் கக்கின. இந்தியா இலங்கைக்கு எதிராக வாக்களித்தவுடன், ஆமாம், இது என்ன தீர்மானம்? இந்தத் தீர்மா னத்தை நிறைவேற்றி என்ன பயன்? என்று பல்டியடித்தன. ஒன்றுமில்லாத தீர்மானத்திற்கு நீங்கள் ஏன் அவ்வளவு தூரத்திற்குக் கவலைப் பட்டீர்கள்? அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்றால், திராவிட இயக்கத்திற்கு இந்தப் பெருமை வந்துவிடக் கூடாது என்ற அற்பப் புத்தியைத் தவிர, வேறென்ன இதற்கு அடிப்படையாக இருக்க முடியும்? ஒரு காலத்தில் விரோதமாக இருந்ததை மாற்றிக் காட்டியிருக்கிறோம்.

இன்றைக்கு ஈழம் என்று சொல்லக் கூடாது என்று யாரோ ஒரு அதிகாரி எழுதினான்; ஈழம் என்ற சொல் இருக்கிறதா? இல்லையா? என்று கேட்டவுடன்,
ஈழம் என்ற சொல்லைப் பயன்படுத்தலாம் என்று ஒப்புக்கொண்டுவிட்டார்களே, அது டெசோ மாநாடு நடைபெறுவதற்கு முன்னாலே, மாநாட்டிற்குக் கிடைத்த வெற்றியல்லவா! இன்றைக்கு அந்த உரிமை எல்லா இடத்திலும் பேசப்படக்கூடிய உரிமையாக ஆக்கப்பட்டுவிட்டதல்லவா!

கலைஞரின் ராஜ தந்திரம்!

கலைஞருடைய ராஜதந்திரம், அவருடைய முதிர்ச்சி, டெசோவினுடைய அணுகுமுறை, ஒவ்வொரு கட்டத்தையும் தாண்டி, மாநில அரசுகள், மத்திய அரசைத் தாண்டி இன்று உலகப் பார்வை யோடு, உலக நாடுகள் மத்தியிலே அய்க்கிய நாடுகள் வரையிலே போகக்கூடிய அளவிற்கு, இந்தத் தீர்மானத்தை லட்சக்கணக்கான மக்களைத் திரட்டி, அதுவும் மாநாட்டிற்கு யாரும் வரக்கூடாது என்று சொல்லி, மக்கள் கூடக் கூடாது என்று சொல்லி, உலகத்திலே கேள்விப்படாத விஷயம் இதுவரையில், மாநாட்டிற்கு ஏற்பாடு செய்தவர்களே, மாநாட்டிற்கு அதிகம் வரவேண்டாம் என்று  சொன்ன மாநாடு இந்த டெசோ மாநாடுதான்! அதிகம் பேர் வந்து விடாதீர்கள், வீட்டில் இருந்துகொண்டே மாநாட் டினை பாருங்கள், உரையைக் கேளுங்கள் என்று நாங்களே சொன்னோம். அப்படி இருக்கும்போது மாநாடு வெற்றிகரமாக நடைபெற்றதா இல்லையா? நண்பர்களே, இதுதான் வீழ்ந்துவிட்ட இனத்தை எழுச்சி பெறுவதற்காக செய்த முயற்சியின் வெற்றி! அதை எண்ணிப் பார்க்கவேண்டும்.

கூண்டு நூலின் ஆசிரியர் மேலும் கூறுகையில்,

விடுதலைப் புலிகளுடனான மோதல்களின் இறுதிக் கட்டங்களில் தலையிட்டுப் பேரழிவினை நிறுத்த உலக நாடுகள் முயலத்தான் செய்தன. அரச படையினரின் தாக்குதலின் உக்கிரத்தைத் தணிக்க அய்.நா. பொதுச்செயலாளர் பான்-கீ-மூன் தனிப்பட்ட முறையில் கடும் முயற்சிகள் மேற்கொண்டார்.

பத்திரிகை ஆசிரியர் கொல்லப்பட்டாரே!

2009 ஆம் ஆண்டு ஜனவரியில் அரசைக் கடுமை யாக விமர்சனம் செய்துகொண்டிருந்த சண்டே லீடர் என்னும் ஆங்கில ஏட்டின் ஆசிரியர் வசந்த விக்கிரம துங்க பட்டப் பகலில் கொல்லப்பட்டார். தனது அலுவலகத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது அவரது காரை வழிமறித்து, முகமூடியணிந்த சிலர் அவரைச் சரமாரியாகச் சுட்டார்கள்.

அங்கே நிலைமை என்னவென்றால், தமிழர்கள் மட்டுமல்ல, யாராவது நியாயத்தைப் பேசினால், யாராவது தவறினை சுட்டிக்காட்டினால், அந்த ஆளையே காணாமல் போகச் செய்துவிடுவார்கள்.

வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று பேசக் கூடியவர்களுக்காக அந்தப் புத்தகத்தில் உள்ளவற்றை கூறுகிறேன்:

ஆனால், 2009 மே மாதத்தில் தலைவர்க ளெல்லாம் நந்திக்கடல் கடலோரப் பிராந்தியத்தில் உயிரற்று வீழ்ந்து கிடந்தனர். அதற்கு முந்தைய 5 மாதங்களில் ஆயிரக்கணக்கில் பொதுமக்களும் அதே பகுதியில் கொல்லப்பட்டிருந்தனர். இன்னும் சிலர் சகதியில் இறந்து கொண்டிருந்தனர். ஆனால், இலங்கை அரசோ பொதுமக்கள் யாருமே சாக வில்லை என மிகத் தைரியமாக சாதித்தது.

நாடுகள் பல வற்புறுத்தின

அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படுவதைத் தடுப்பதற்கு அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், மெக்சிகோ உள்ளிட்ட பல நாடுகள் அய்.நா. பாதுகாப்புக் கவுன்சில் மூலமாகப் பல முயற்சிகளை மேற்கொண்டன. பிரபாகரனும் மற்ற புலிப்படை யினரும் சுற்றி வளைக்கப்பட்டு விட்டனர். இனி மேலும் பொதுமக்களைக் கொல்ல வேண்டாமே. அவ்வாறு நீங்கள் பெருந்தன்மையுடன் செயல் பட்டால், உங்களுக்குத்தான் நல்லது என்று இலங்கையிடம் மன்றாடினர். சற்று உங்கள் வேகத்தைக் குறையுங்கள் என்று ஒபாமா அறிவு றுத்தினார். பொதுமக்களை அவ்விடத்திலிருந்து வெளியேற்றுவது எங்கள் பொறுப்பு. அதன்பிறகு ஆயுதமேந்தியவர்களை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் என்று சொல்லிப் பார்த்தார் ஹில்லரி கிளிண்டன். ரஷ்யாவும், சீனாவும் தீவிர மாக இலங்கையை ஆதரிக்க, அமெரிக்க முயற்சிகள் தோல்வியுற்றன.

பல்லாயிரக்கணக்கில் மக்களைக் கொலை செய்துதான் விடுதலைப் புலிகளை வென்றிருக்க முடியும் என்பதில்லை. நம்மைப் பதைபதைக்க வைக்கும் அவ்வழித்தொழிப்பு இலங்கையில் நிலவிய சூழலால், தவிர்க்க முடியாது மேற் கொள்ளப்பட்ட போர்த் தந்திரங்களின் விளைவல்ல. மாறாக இலங்கையின் விடுதலைக்குப் பின் அமைந்த அரசுகள் தொடர்ந்து, தமிழ்ச் சிறு பான்மையினரை எதிரிக ளாகவே பாவித்து, மனித நேயத்திற்கு முரணான பாதையில் பயணித்ததன் விளைவுதான் 2009 இல் உலகத்தினை அதிர்ச்சிக் குள்ளாக்கிய அக்கொடுமைகள். என்று மிகப் பெரிய அளவுக்குக் கூறியிருக்கிறார். அதுமட்டு மல்ல, இன்னமும் உலகத்தார் பார்வை, அய்க்கிய நாடுகளின் அழுத்தம் தொடர்ந்து கொடுக்க வேண்டும், ஏனென்றால், அவர் அவ்வளவு சுலப மாக கீழிறங்கி வரக்கூடியவர் அல்ல என்பதை நடு நிலையாளர்கள், பொதுநிலை யாளர்கள் சொல் கின்றார்கள் என்பதை கூறுகிறேன் கேளுங்கள்.

இலங்கை ஓர் ஆபத்தான இடம்

அரசுடன் முரண்படுபவர்களுக்கு, அரசை எதிர்ப்பவர்களுக்கு இலங்கை ஓர் ஆபத்தான இடம். 2010 செப்டம்பரில் கொண்டுவரப்பட்ட அரசியல் அமைப்புச் சட்டத் திருத்தத்திற்குப் பின் நிலை இன்னமும் மோசமாயிருக்கிறது. அத்திருத் தத்தின் விளைவாக ராஜபக்சே சகோதரர்களின் அதிகாரம் உச்சத்திற்குப் போய்விட்டது. இனி அவர்களை எவரும் எதுவும் கேட்க முடியாது என்ற நிலை உருவாகியிருக்கிறது.

மஹிந்த ராஜபக்சே காலத்திலோ முன்னெப் போதையும்விடச் சமூகத்தின் பல்வேறு அங்கங்கள் அனைத்தும் அதிபரின் குடும்பத்தினரைக் கண்டு நடுங்கின. நீதிமன்றங்கள், ஊடகங்கள், அரசியல் வாதிகள் எல்லோருமே அவர்கள் கட்டுப் பாட்டில்.

இட்லருடைய காலத்தில் கூட இப்படி கிடையாது. இதனைச் சொல்வது யார்? - அங்கே பல காலம் தங்கியிருந்து இப்பொழுது சிட்னியில் வசிக்கக் கூடியவர் அந்நூலாசிரியர் கூறியிருக்கிறார். மேலும் அவர் கூறுகையில்,

2007 இல் மஹிந்தவின் கரங்களில் நீதித்துறை, கோத்தாபயவிடம் பாதுகாப்புத் துறைச் செயலர், துறைமுக மற்றும் விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்குப் பொறுப்பானவர் சமால் ராஜபக்ச, கிழக்கைச் சீரமைக்கும் பணிகளெல்லாம் பாசில் ராஜபக்சவிடம். இவ்வாறு இந்நான்கு சகோதரர் களிடம் 94 அரசுத் துறைகள். கஜானா இருப்பில் 70 சதம் அவர்கள் கட்டுப்பாட்டில். பெரிய முதலீடுகள் எதுவும் ராஜபக்ச குடும்பத்தினரின் ஆசியின்றிச் செய்ய முடியாது. பாசில் திருவாளர் பத்து சதம் என்றே கேலி செய்யப்படுகிறார். எல்லாப் பணிகளுக்கான செலவிலும் பத்து சதம் அவர் பங்கு என்பதுதான் பொருள்.

எல்லாம் ராஜபக்சே குடும்ப மயம்!

ராஜபக்ச குடும்பத்தினர் கண் வைக்கும் எந் நிறுவனத்தையும் அவர்கள் நொடிப்பொழுதில் எடுத்துக்கொண்டுவிட முடியும். அவர்கள் அட்ட காசம் ரோமானியப் பேரரசன் கொடியவன் காலிகுலாவை நினைவுபடுத்துவதாகக் காணாமல் போன சிங்கள பத்திரிகையாளர் ஏக்னெலி கொட எழுதினார். விடுதலைப் புலிகளுக்கெதிரான போரில் உதவியதற்காக, சீனா, இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்குப் பகிரங்கமாக நன்றி தெரிவித்தார் அதிபர் ராஜபக்ச. ஆயுத உதவி செய்த, இலங்கை வீரர்களுக்குப் பல்வேறு காலகட்டங்களில் ஆயுதப் பயிற்சியும் அளித்த மேற்கத்திய நாடுகளைப்பற்றி அவர் குறிப்பிடவில்லை. அவருக்கு அந்நாடுகளின் நல்லெண்ணமே தேவையில்லை என்பதைப் போலத்தான் அவர் தொடர்ந்து நடந்துகொண்டார்.

எதற்கு அவர்கள் உதவி? இந்தியாவைக் காட்டி பாகிஸ்தானிடமிருந்தும் பாகிஸ்தானைக் காட்டி இந்தியாவிடமிருந்தும், இந்தியாவைக் காட்டி சீனாவிடமிருந்தும், சீனாவைக் காட்டி இந்தியா விடமிருந்தும் அம்மூன்று நாடுகளுக்கிடையே இருந்த சிக்கல்களைப் பயன்படுத்தி, நாம் உதவ முன்வராவிட்டால் எதிரி நாடு உதவி செய்து தன்னுடைய செல்வாக்கை இலங்கையில் அதி கரித்துக் கொண்டுவிடுமோ என்றஞ்சியே மூன்று நாடுகளும் போட்டி போட்டுக் கொண்டு இலங் கைக்குப் பல்வேறு உதவிகள் செய்தன. அய்.நா.வின் கண்டனக் கணைகளிலிருந்தம் அந்நாட்டைக் காப் பாற்றின என்று அந்நூலாசிரியர் எழுதியுள்ளார்.

டெசோ மாநாட்டுத் தீர்மானங்களின் சிறப்பு

ஆக, எவ்வளவு பெரிய சூழ்ச்சி வலைகள் பின்னப் பட்டிருக்கின்றன. எவ்வளவு சிக்கலான பிரச்சினை. இந்தப் பிரச்சினையில் என்ன செய்ய முடியுமோ அதனை தாராளமாக செய்வது மட்டுமல்ல, நடந்தவை எப்படி இருந்தாலும், இனி நடப்பவை தெளிவானவையாக, வாழ்வுரிமையை நிலை நாட்டக் கூடியவையாக இருக்க வேண்டாமா? என்பதை சிந்திப்பதற்காகத்தான்  டெசோ மாநாட்டின் தீர்மானங்கள்  எல்லாப் பிரச்சினை களையும் உள்ளடக்கி எல்லாவற்றையும் தழுவிய நிலையில், மிக அருமையாக வடிவமைக்கப் பட்டு, இன்றைக்கு இந்திய அரசு, அதேபோல்,   அய்க்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவராக இருக்கக் கூடிய அந்த அம்மையார் அவர்களிடம் ஏற்கெனவே ஒரு குழுவிலே போகும்போதுகூட நாங்கள் வலியுறுத் தினோம்; அதனை அவர்கள் ஏற்றார்கள்.

ஆகவே, அந்த சூழ்நிலையிலும் இந்தப் பணிகள் தொடர்ந்து கொண்டு இருக்கின்றன. அடுத்து, அய்க்கிய நாடுகளின் மாமன்றத்திலும் இந்தத் தீர்மானங்களை அனுப்பி,  அதனுடைய கடிடடடிற-ரயீ என்று சொல்லக்கூடிய தொடர்ச்சியாக நடக்க வேண்டியவை நடக்கவிருக்கின்றன. எனவே, நம் முடைய சக்திக்கேற்ப, டெசோவினுடைய சக்திக் கேற்ப இதனை நாங்கள் செய்கிறோம்.

கருமத்துக்கு உரியவர்கள் நாங்கள்!

இதைவிட இன்னும் தீவிரமாக செய்யக் கூடிய நண்பர்களாக இருந்தால், வாருங்கள், உங்களுக்கு நாங்கள் வழிவிட்டு ஒதுங்கிக் கொள்கிறோம். குறுக்கே நிற்கமாட்டோம். எங்களுக்கு நீங்கள் வழிகாட்டியாகவும் இருங்கள். உங்களுடைய வேகம், விவேகத்தோடு சேர்ந்ததாக இருக்க வேண்டும் என்பதை மட்டும் பார்த்துக் கொண்டு, வீர வசனத்தோடு முடிந்துவிடக் கூடாது   வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம் என்பதைக் கூறி, என் றைக்கும் கருமத்திற்கு உரிய வர்கள் கடைசிவரை இருப்பார்கள்.

நாங்கள் ஈழத் தமிழர் மட்டுமல்ல,  உலகத்தில் மனிதநேயம் எங்கும் தழைக்கவேண்டும் என்ற அடிப்படை யிலே மனிதனைப்பற்றி கவலைப் படக் கூடிய இயக்கம்தான் சுயமரியாதை இயக்கம். ஆகவே, அவர்கள் மான வாழ்வை மீட்பதற்கு, கொள்கை வாழ்வை மீட்பதற்கு முன்னெடுத்துச் செல்வோம் வாருங்கள், வாருங்கள் என்று கேட்டு முடிக்கிறேன். நன்றி, வணக்கம்!

-இவ்வாறு தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் உரையாற்றினார்
                                  ------------------.-----------”விடுதலை” 25-8-2012

26.8.12

பெரியார் இல்லாவிட்டாலும் வீரமணி இருக்கிறார்

50 ஆண்டுகளாக விடுதலையைப் படிப்பவன் நான்!
விடுதலையும், முரசொலியும் இரட்டைக் குழல் துப்பாக்கி!
பெரியார் விட்டுச் சென்ற கொள்கை உட்பட எல்லா உடைமைகளையும் காப்பாற்றுபவர் வீரமணியார்! வீரமணியார்!! வீரமணியார்!!!
விடுதலை ஆசிரியராக அரை நூற்றாண்டுத் தொண்டாற்றிய தமிழர் தலைவரைப் பாராட்டி கலைஞர் பெருமிதம்!



கலைஞர் அவர்களுக்குச் பொன்னாடை போர்த்தி நினைவுப் பரிசு அளிக்கிறார் விடுதலை ஆசிரியர்.

 பெரியார் விட்டுச் சென்ற எல்லா உடைமைகளையும், கொள்கைகள் உட்பட எதையும் காப்பாற்றுகின்ற திறன் உடையோர் யார் யார் என்ற கேள்விக்குக் கிடைக்கின்ற ஒரே பதில் வீரமணியார்! வீரமணியார்!! வீரமணி யார்!!! என்று திமுக தலைவர் கலைஞர் அவர்கள் புகழாரம் சூட்டினார்.

சென்னை பெரியார் திடலில் நேற்று மாலை கலைஞர் அவர்கள் ஆற்றிய தலைமை உரை வருமாறு:-

தமிழ்ப் பெருங்குடி மக்களின்  -  திராவிடப் பெருங்குடி மக்களின்  தலைவர்களில் ஒருவராக  -  என்னுடைய  அன்புக்கும் மரியாதைக்கும் உரிய வராக  -  இன்றையதினம் ஏற்றுக்  கொண்ட பொறுப்பிலே அய்ம்பதாண்டுகள் நிறைவு பெற்ற வராக  -  அதற்கான நாளைக் கொண்டாடுகின்ற நேரத்தில் -  இந்த விழாவின் தலைமகனாக அமர்ந்திருக்கின்ற  விடுதலை ஏட்டின் ஆசிரியர், தமிழர் தலைவர் மானமிகு  இளவல் வீரமணி அவர்களே,  இந்த விழாவில் பாராட்டுரை வழங்கிய  திரு.  பொன்னீலன் அவர்களே,  திரு. ரமேஷ் பிரபா அவர்களே,  திரு. ஏ.எஸ். பன்னீர்செல்வம் அவர்களே,  பேராசிரியர் ஜெக்மோகன்சிங் வர்மா அவர்களே,  அறிமுக உரையாற்றிய அறிவுக்கரசு அவர்களே,  வரவேற்புரை ஆற்றிய கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்களே, இணைப்புரை மொழிந்த டெய்சி மணியம்மை அவர்களே, நன்றியுரை ஆற்றிய தம்பி அன்புராஜ் அவர்களே,   தாய்மார்களே,  பெரியோர்களே, என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புக்களே,

 



விடுதலை ஆசிரியருக்குப் பொன்னாடை போர்த்தி நினைவுப் பரிசு அளிக்கிறார் கலைஞர்.

இன்று  நடைபெறுகின்ற இந்த விழா உங்களுக் கெல்லாம் என்ன உணர்வை ஊட்டியிருக்கிறதோ; அந்த உணர்வைவிட ஒரு படி மேலாக ஏன் ஆயிரம் படிகள் மேலாக எனக்கு உணர்வை ஊட்டி யிருக்கின்ற விழாவாகும். `விடுதலை, `குடியரசு, `பகுத்தறிவு என்றெல்லாம் ஏடுகள் தமிழகத்தில் வெளிவந்த அந்தக் காலம் தொட்டு இன்று அந்த ஏடுகளுடைய பயனை அனுபவித்துக்  கொண்டி ருக்கின்ற  இந்தக் காலம் வரையில் இந்த ஏடுகள் எவ்வளவு சங்கடங்களுக் கிடையே,  இடர்ப்பாடு களுக்கிடையே வெளிவருகின் றன, வெளிவந்தன என்பதை நினைவு கூர்ந்திடுவது தான், யாரை இன்றைக்கு நாம் பாராட்டுகிறோமோ, யாருக்கு வாழ்த்து வழங்குகிறோமோ அதற்கு உரிய பயனை தரக்கூடிய ஒன்றாக அமையும்.

என்னைப் பொறுத்தவரையில், இங்கே வந்த விருந்தினர்கள், பாராட்டிய அன்பர்கள் யாரும் தவறாக எண்ணிக் கொள்ளக் கூடாது. என் வீடு இது;  (பலத்த கைதட்டல்). என் வீட்டிற்குள்ளேயே வந்து என்னுடைய தம்பியை - என்னுடைய ஆருயிர் இளவலை நான் பாராட்டுகிற நேரத்தில், என்ன உணர்வு எனக்கும், பாராட்டப்படுகின்றவருக்கும் ஏற்படுமோ அந்த உணர்வில் இம்மியும் குறைவில்லாமல் இன்றைய தினம் நாங்கள்  பெற்றிருக்கிறோம் என்பதை துடிக்கின்ற எங்களது இதயங்களைக் கேட்டால் அது சொல்லும் (கைதட்டல்).

இரட்டைக் குழல் துப்பாக்கி

விடுதலையும், முரசொலியும் இரட்டைக் குழல் துப்பாக்கியாக இன்றைக்கு பத்திரிகை உலகத்தில் திராவிட இயக்கத்தைக் காப்பாற்றுகின்ற - திராவிட இயக்கத்திற்காகக் குரல் கொடுக்கின்ற இரண்டு மாபெரும் சக்திகளாக இருக்கின்றன என்பதை எல்லோரும் உணருவார்கள். நான் விடுதலையிலே நம்முடைய இளவல் வீரமணி அவர்களைப் போல 50 ஆண்டு காலம் ஆசிரியராக  இருந்தவன் என்று மார்தட்டிக் கொள்கின்ற அந்தப் பெருமையை பெறாவிட்டாலும்கூட, விடுதலை பத்திரிகையை தினந்தோறும் படிக்கின்ற ஒருவன் நான் (கைதட்டல்). அதைப் படித்த பிறகு தான் அடுத்த பத்திரிகையை எடுப்பது என்கின்ற  வழக்கத்தை மாற்றிக் கொள்ளாதவன் நான்.

இன்னும் சொல்லப் போனால், சில நேரங்களில் அவசரத்தின் காரணமாக விடுதலை இதழிலே வருகின்ற பிழைகளைக் கூட -  எப்போதாவது வருகின்ற ஒன்றிரண்டு பிழைகளைக் கூட உடனடியாக நான் அதைத் திருத்தி தொலைபேசி மூலமாக உரியவர்களுக்கு உணர்த்தி, அந்தப் பிழையை திருத்திக் கொள்ளுங்கள், கருத்துப் பிழை அல்ல, எழுத்துப் பிழை என்று குறிப்பிடத் தவறாதவன். அந்த அளவிற்கு இன்றைக்கும் விடுதலையோடு சொந்தம் கொண்டாடிக் கொண்டு, உரிமை ஏற்படுத்திக்  கொண்டு வாழ்பவன் நான்.  (கைதட்டல்)

தி.மு.கழக ஆட்சியில் பல்வேறு  துறைகளில் வளர்ச்சி

இன்றைக்கு இங்கே பேசிய நம்முடைய நண்பர் பன்னீர் செல்வம் அவர்கள், சில செய்திகளை திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலத்திலே பொருளாதாரத் துறையிலே, தொழில் துறையிலே, வேறு பல மறு மலர்ச்சித்  துறைகளிலே ஏற்பட்ட வளர்ச்சி விகிதாச் சாரத்தை நாம் பதிய வைக்கத் தவறிவிட்டோம் என்று குறிப்பிட்டார்கள். நாம் பதிய வைக்கக் கூடாது என்று அல்ல, பதிய வைப்பதற்கு நம்மிடத்திலே பிரபலமான பத்திரிகைகள் இல்லை என்பதுதான்.

எந்த வானொலியோ, தொலைக்காட்சியோ அப்படி நாம் பதிய வைப்பதற்கு பயன்படாமலே ஆகிவிட்டன என்பதுதான் முக்கியமான காரணமேதவிர, பதிய வைக்கக் கூடாது என்பதல்ல. இருந்தாலும் எனக்குள்ள மகிழ்ச்சி, பன்னீர் செல்வம் போன்றவர்கள் பதிய வைக்க வேண்டிய காரியங்கள் கழக அரசிலே நிரம்ப உண்டு என்பதை உணர்ந்து, அப்படி பதிய வைக்கத் தவறிவிட்டோம் என்று நம்மிடம் கூறாமல் கூறி அந்தக் குறையை எடுத்துக் காட்டினார்களே அதுவே நமக்கு நிறைவான ஒன்று என்று நான் கருதுகின்றேன்.

திராவிட இயக்கத்தினுடைய பல கருத்துக்கள் தந்தை பெரியார் அவர்கள் எடுத்துச் சொன்னது, பேரறிஞர் அண்ணா அவர்கள் எடுத்துச் சொன்னது, என்னுடைய அருமை இளவல் வீரமணி அவர்கள் எடுத்து இயம்பி வருவது இவைகளெல்லாம் நாங்கள் நடத்துகின்ற ஏடுகளோடு  நின்று விடுகின்றன.

உண்மைதான். காரணம், இது மற்றவர்களால் வெளியிடப்படாமல் இருட்டடிப்புக்கு  உள்ளாக்கப் படுகிறது. அதையும் இங்கே குழுமியிருக்கின்ற நீங்கள் உணர்ந்து கொண்டால் மாத்திரம் போதாது, நம்முடைய பன்னீர் செல்வத்தைப் போன்றவர்கள் தங்களுக்குள்ள வாய்ப்புக்களை, வசதிகளை, தங்களுக்குள்ள தொடர்புகளை பயன்படுத்தி அதை நாட்டுக்கு ஏட்டாளர்களுக்கு இதழாளர்களுக்கு  எடுத்துச் சொல்கின்ற பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அதைத்தான் நான் இந்த விழாவிலே ஒரு வேண்டுகோளாக வைக்க விரும்புகின்றேன்; எனக்காக அல்ல, நாட்டுக்காக. சமுதாயத்திற்காக. இந்தச் சமுதாயம் ஏற்றம் பெற வேண்டும் என்ப தற்காக. ஒரு ஆட்சி எந்த அடிப்படையிலே உருவாகிறது, எந்த அடித்தட்டு மக்களுக்காக பணியாற்றிக் கொண்டிருக்கிறது, தொண்டாற்றுகிறது என்பதை தொகுத்துச் சொல்ல வேண்டிய கடமை எங்களுக்கு இருப்பதைப் போல், பத்திரிகைகாரர்களுக்கும் இருக்கிறது.

நாம் எங்களுடைய ஏடுகளைப் பற்றிய வளர்ச்சியைப் பற்றிச் சொல்ல  வேண்டுமேயானால்  இன்றைக்கு விடுதலை 4 பக்கங்களில் வண்ண முகப் போடும், வண்ண எழுத்துக்களோடும், இன்னும் சொல்லப் போனால் பல்வேறு விஞ்ஞான புதுமை களை எடுத்துச் சொல்கின்ற ஏடாகவும் இன்றைக்கு  விளங் குகின்றது.  நான் ஆசிரியர் அவர்களிடத்திலே சொன்னேன்,  இப்பொழுதெல்லாம் விடுதலையை இயக்கத்திலே ஆர்வம் கொண்டவர்கள் மாத்திர மல்ல, உலகச் செய்திகளை தெரிந்து கொள்ள வேண் டும் என்று கருதுகின்றவர்களும், உடற்கூறுகள் பற்றிய செய்திகளை தெரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகின்றவர்களும், மருத்துவத் துறை யிலே தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களில் அக்கறை செலுத்துபவர்களும்  படிக்கக் கூடிய ஏடாக விடுதலை ஏடு மாறி வருகிறது என்று நான் அவர்களிடத்திலே சொன்னேன்.

இதைச் சொல்வதால், இந்தச் செய்திகளோடு நீங்கள் விடுதலையைப் பார்த்து நிம்மதி அடைந்து விடக் கூடாது. இவைகளோடு ஏற்கனவே வந்து கொண்டிருக்கின்ற செய்திகளும் நம்முடைய சமுதாயத்தை சீரழிக்கின்ற உயர் ஜாதியின ருடைய ஆணவங்கள், அட்டகா சங்கள், அவர்களுடைய நிதானமற்றப் போக்குகள், அவர்களுடைய நெறியை நம்முடைய நெறியோடு கலப்பதற்கு நடத்துகின்ற நரித் தந்திரங்கள் இவை களையும், அதே நேரத்தில் நம்முடைய ஏடுகளின் மூலமாகச் சொல்ல வேண்டியவர்களாக இருக்கின் றோம். அதை முரசொலி முடிந்த வரை செய்யும்.

விடுதலை நிச்சயமாக எப்போதும் செய்யும். முரசொலி முடிந்த வரை செய்யும் என்று சொல்வதற்குக் காரணம், அது ஒரு முழுக்க முழுக்க அரசியல் கட்சியினுடைய ஏடாகவும், திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய செய்திகளை எடுத்துச் சொல்கின்ற ஏடாகவும் அது நடைபெறுகின்ற காரணத்தால், அப்படி பழகி விட்ட காரணத்தால் முடிந்த வரையில் என்று சொன்னேன். விடுதலை அப்படியல்ல. எடுத்த எடுப்பிலேயே சனாதனத்தை, மதத்தை, மதவெறியை, மடாதிபதிகளின் கொட் டத்தை இவைகளையெல்லாம் எடுத்துக்காட்டி, அவைகளையெல்லாம் அடையாளம்  காட்டி எச்சரித்த, எச்சரித்துக் கொண்டிருக்கின்ற புரட்சி ஏடுதான் விடுதலை இதழ்  என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை.

புரட்சி என்றால் என்ன பொருள்? புரட்சி என்ற வார்த்தையைப் பயன்படுத்தினால் மாத்திரம் அது புரட்சி ஆகிவிடாது.  (கைதட்டல்)  புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் என்று சொன்னால் தான் பொருந்துகிறது.   எல்லோரையும் புரட்சிக் கவிஞர் என்று சொல்லி விட்டால், அது பொருந் தாது.   அதைப் போல புரட்சி ஏடாக விளங்குவது விடுதலைப் பத்திரிகை.

அந்த விடுதலைப் பத்திரிகை அளவுக்குக் கூட இல்லாமல்  நான் 1942ஆம் ஆண்டு  முரசொலி என்கிற கையேட்டைத் தொடங்கி, அதை  துண்டு அறிக்கைகளாக  வெளியிட்டு  எல்லோரி டத்திலும் இனாமாகவே  அதை வழங்கி  -  வரட்டுமே  வடலூர் வள்ளலார்   என்ற தலைப்பிலே  ஒரு கட்டுரை!   சிதம்பரத்திலே வர்ணாசிரம மாநாடு நடைபெற்ற போது, அதை எதிர்த்து ஒரு கட்டுரை.   இவைகள் எல்லாம்  முரசொலியில் எழுதிய  காலம் ஒன்று உண்டு.

நன்றாக எனக்கு நினைவு இருக்கிறது.  வருணமா?  மரணமா?  என்ற தலைப்பில்  ஒரு கட்டுரை.  எதற்காகத் தெரியுமா?  சிதம்பரத்திலே  உள்ள பார்ப்பனர்கள் எல்லாம் ஒன்று கூடி,  வர்ணாஸ்ரம மாநாட்டை நடத்தினார்கள்.  அந்த மாநாட்டை எதிர்த்து  முரசொலி என்கிற அந்தத் துண்டு தாளில் நான் எழுதிய நீண்ட அறிக்கை  -  நீண்ட கட்டுரைக்குத் தலைப்பு தான்  வருணமா?  மரணமா? என்பதாகும்.

பரணி  பல  பாடிப் பாங்குடன்

வாழ்ந்த பைந்தமிழ் நாட்டில்

சொரணை சிறிதுமிலாச் சுயநலத்துச்

சோதாக்கள் சில கூடி

வருணத்தை நிலை நாட்ட     வகையின்றிக் கரணங்கள் போட்டாலும்

மரணத்தின் உச்சியிலே  மானங் காக்க

மறத்தமிழா  போராடு!  (கைதட்டல்)

இதிலே ஆயிரம் துண்டு அறிக்கைகள் தயாரித்து சிதம்பரம் வீதிகளிலே விநியோகிக்கச் சொன்னேன்.    அன்றையதினம்  நான் சிதம்பரம் செல்ல வேண்டும்.  காரணம், என்னுடைய திருமணம் முடிந்து  முதல் இரவு நாள்.  அதற்கு நான் சிதம்பரம் செல்ல வேண் டும்.   திருவாரூரில் ரெயில் ஏறி, என்னுடைய நண்பன் தென்னனோடு  சிதம்பரத்தில் இறங்கினேன்.    புகை வண்டி நிலையத்திலேயே  போலீசார் வந்து,  நகருக்குள் போகக் கூடாது என்றார்கள்.  ஏன் என்று கேட்டேன்,  உங்களுக்கு  144 தடை உத்தரவு.   காரணம் இந்த நோட் டீஸ்.  மாநாட்டிற்கு எதிராக,  வர்ணாஸ்ரம மாநாட் டிற்கு எதிராக நான் எழுதி அச்சிட்டுத் தந்த  வருணமா? மரணமா?  என்ற  அந்த நோட்டீசை வைத்து சிதம்பரத்திற்குள் நுழையக் கூடாது என்றார்கள்.

என்னோடு வந்த  தென்னன்,  அய்யா அவருக்கு இன்றைக்கு முதல் இரவு, தயவு செய்து விடுங்கள் என்று சொல்லியும்,  போலீசார் விடவில்லை.   திரும்பி மறு ரெயிலிலே  ஏறி திருவாரூர்  வந்து  சேர்ந்தோம்.   முதல் இரவு இப்படி முடிந்தது.   (சிரிப்பு)  ஏன் இதைச் சொல்கிறேன்  என்றால்  ஒரு பத்திரிகையில் கருத்துக்களை வெளியிடக் கூட எவ்வளவு  கர்ணக் கடூரமான, கடுமையான அடக்கு முறைகள்  வைதீகத்தைக் காப்பாற்ற இருந்தன என்பதை எடுத்துச் சொல்லத்தான்  இதை நான் நினைவூட்டுகின்றேன்.

இயக்கத்தை எப்படி எல்லாம் வளர்த்தோம்?

அதற்குப் பிறகு  இப்படி பல கஷ்டங்கள்  - பத்திரி கையை நடத்த முடியாமல்!   நம்முடைய ஆசிரியர் வீரமணி அவர்களும், நானும்  அப்போதெல்லாம்  தந்தை பெரியார் அவர்களின் கட்டளைப்படி  சுற்றுப் பயணம்  - கூட்டங்களுக்குச் செல்வோம்.   அந்தக் கூட்டங்கள், மாணவர்கள் சுற்றுப் பயணம் என்ற பெயரால் நடை பெற்றது.   அப்படி நடைபெற்ற அந்தச் சுற்றுப் பயணங்களில்  அவரும் நானும்  எங்களோடு  ஈரோடு சுப்பையா போன்ற வர்களும்   கலந்து கொண்டு  மக்களுக்கு  விழிப்பு ணர்வை ஏற்படுத்தக் கூடிய  தந்தை பெரியாரின் கொள்கைகளை எடுத்துச் சொல்கின்ற பெரும் பணியிலே நாங்கள் ஈடுபட்டோம்.   இவைகளைச் சொல்வதற்குக் காரணம், இந்த இயக்கத்தை  சுலபமாக யாரும் வளர்த்து விடவில்லை.

இந்த இயக்கத்தை வளர்ப்பதற்கு  ஏதோ சொன்னோம், எழுதினோம், பேசினோம் என்ற அளவோடு யாரும் இருந்து விடவில்லை.   அடிகள் பட்டிருக்கிறோம், தாக்குண் டிருக்கிறோம்,  காயப்பட்டிருக்கிறோம், கல்லடி பட்டிருக்கிறோம்,  இன்னும் சொல்லப் போனால்  நாம் கண்ணெனப் போற்றிப் பாராட்டு கின்ற  தந்தை பெரியார் அவர்கள் மீது  சில காலிகள் கடலூரிலே செருப்பையே வீசினார்கள்.

அந்தச் செருப்பை எடுத்து  தந்தை பெரியார் அவர்கள்,  இன்னொரு செருப்பையும் தேடிப் பாருங்கள், கிடைத்தால் இரண்டையும் சேர்த்து மாட்டிக் கொள்ளலாம் என்று சொல்கின்ற அளவிற்கு   தந்தை பெரியார் அவர்கள்  தன்னுடைய பெருந்தன்மையைக் காட்டினார்கள்.  சாதி வெறியர்களை அடையாளம் காட்டினார்கள்.  

பெரியார் இல்லாவிட்டாலும் வீரமணி இருக்கிறார்

இப்படியெல்லாம் இந்த இயக்கத்தை நாங்கள் வளர்த்தோம். அப்படி வளர்க்கப்பட்ட இந்தப் பேரியக்கம்  இன்றைக்கும்  மற்றவர்கள் பார்த்து அஞ்சுகின்ற அளவிற்கு நடை போடுகிறது என்றால், காட்சி அளிக்கிறது என்றால்,  பெரியார் இல்லா விட்டாலும்  என்னுடைய இளவல்  வீரமணியைப் போன்றவர்கள்  (கைதட்டல்)  இருக்கின்ற காரணத்தினாலேதான்.  பெரியார் விட்டுச் சென்ற  எந்த உடை மைகளையும்,  கொள்கை உட்பட எதையும்  காப் பாற்றுவதற்கு திறன் உடையவர் யார் யார் யார்  என்ற கேள்விக்குக் கிடைக்கின்ற ஒரே பதில்  - வீரமணியார்!  வீரமணியார்!  வீரமணியார்!  என்பது தான்.

அத்தகைய  அரும் பெரும் ஆற்றலாளர்  என்னுடைய அன்புக்குரிய இளவல் வீரமணி அவர்கள் .  அண்மையிலே  நம்முடைய டெசோ மாநாடு நடைபெற்ற நேரத்தில் -  விரைவில் திரும்பி விடுவேன் என்று சொல்லி  அமெரிக்கா  சென்றார்.   ஆனால்  அவர்  சொன்னபடி விரைவிலே திரும்ப வில்லை.   என்ன காரணம் என்று  நானும் விசாரித் துக் கொண்டிருக்கிறேன்.   தம்பி அன்புராஜைக் கேட்டாலும் அல்லது பூங்குன்றனைக்  கேட்டா லும்  வந்து விடுவார் என்று சொன்னார்களே தவிர,  எதையோ மறைத்து  இவர்கள் பேசுகிறார்கள் என்பதை நான் உணர்ந்து  கொள்ள முடிந்தது.    அதற்குப் பிறகு தான் வீரமணி அவர்கள்  அமெரிக்காவிலிருந்து திரும்பி வந்து என்னைச் சந்தித்த போதுதான் நடந்தவைகளை சொன்னார். 

  நாம் பெற்ற பேறு!

நடந்தவைகளாக அவர் சமாதானமாகச் சொல்லப்பட்டது, இனி  என்றைக்கும் நடப்பவை களாக இருக்கக் கூடாது என்கின்ற   அந்த உணர்வோடுதான்  அந்தச் செய்திகளைக் கேட்டேன்.   அவர்  மீண்டும் நம்மோடு வந்து இன்றைக்கு அவரு டைய  அய்ம்பதாவது  விடுதலை ஆசிரியாகப் பொறுப்பேற்றிருந்த விழாவை நடத்துகின்ற அளவிற்கு இருக்கிறார்  என்றால்   இது நாமெல்லாம் பெற்ற பேறு  என்றுதான் சொல்ல வேண்டும்.  (கைதட்டல்)

அத்தகைய பேறு நமக்கு இன்றைக்குக் கிடைத்திருக்கின்றது.   அவர் வாழ வேண்டும்.  எனக்கும் அவருக்கும்  வயது வித்தியாசம் உண்டு.   என்னை விட இளையவர்.   இன்னும் நீண்ட காலம் வாழ வேண்டும்.  வாழப் போகிறவர்  (கைதட்டல்)  அப்படி அவர் வாழ்கின்ற நேரத்தில்  - தமிழ் நாட்டிற்கு,  தமிழ்ச் சமுதாயத்திற்கு,  அடித்தட்டு மக்களுக்கு, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்குப் பணியாற்ற வேண் டும்.

அந்தப் பணிக்கு  நான் இருந்தால்,  நானும் அவருக்கு உதவியாக இருப்பேன்  என்று கூறி  இன்றைய விழாவில் பங்கெடுத்துக் கொண்டதை  ஒரு பெரும் பேறாகக் கருதி அவருக்கு  என்னுடைய  வாழ்த்துக்களை மேலும் மேலும் குவித்து விடைபெற்றுக் கொள்கிறேன். -இவ்வாறு தலைவர் கலைஞர் அவர்கள் உரையாற்றினார்

                          -----------------------"விடுதலை” 26-8-2012

பிறந்த குழந்தை பேசியதா?உண்மைத் தன்மை என்ன?

கேழ்வரகில் நெய் வடிகிறதா?

கேழ்வரகில் நெய் வடிகிறது என்று ஒருவன் சொன்னால் கேட்பாருக்கு மதி எங்கே போயிற்று? என்ற பழமொழி நம் நாட்டில் உண்டு. இதே செய்தியை மதத்தின் பெயரால், பக்தியின் பெயரால் சொன்னால் கேட்பார் யாராக இருந்தாலும் கண்களையும், காதுகளையும் பொத்திக் கொண்டு ஆமாம், ஆமாம்; கேழ்வரகில் நெய் வடியத்தான் செய்யும் என்று சொல்லிக் கொண்டு தோப்புக் கரணமும் போடுவார்கள்.மாட்டுச்சாணி, மாட்டு மூத்திரம், பால், தயிர், வெண்ணெய் ஆகிய அய்ந்தினையும் ஒரு கலக்குக் கலக்கி, பஞ்ச கவ்யம் என்று கொடுத்தால் தட்சணை கொடுத்தல்லவா பக்தி மயமாகி முகம் சுளிக்காமல் குடிக்கின்றனர்?

பக்தி வந்தால் புத்தி போகும், புத்தி வந்தால் பக்தி போகும் என்று தந்தை பெரியார் அவர்கள் சொன்னது வார்த்தை அழகுக்காக அல்ல; அர்த்தம் நிறைந்த யதார்த்தம் ஆகும்.

கடவுள் நம்பிக்கை நாளும் குறைந்து வரும் நிலையில், அதனைத் தூக்கி நிறுத்த இடைஇடையே சில மூடத்தனங்களைக் கட்டி விடுவார்கள்.

பிள்ளையார் பால் குடித்தார் என்ற புரளியைக் கிளப்பி விடவில்லையா ஆர்.எஸ்.எஸ்.கும்பல்?

பிள்ளையார் கொழுக்கட்டை தின்றால் பத்து லட்சம் ரூபாய் தரத் தயார் என்று திராவிடர் கழகத் தலைவர் சென்னை - அண்ணாசாலையில் டாம் டாம் போட்டுச் சொல்லவில்லையா?

சில ஆண்டுகளுக்கு முன் சிலுவைக் குழந்தை என்ற ஒரு புரளி கிளப்பப்பட்டது. மார்பில் இருந்த மச்சத்தை மய்யப்படுத்தி மக்களை மடையர் களாக்கினார்கள்.

தலையில்லா முண்டம் டீ குடித்தது என்ற தலை நகரமான சென்னையிலேயே கிளப்பி விட் டார்கள். செய்தியாளர்கள் காவல்துறை ஆணையர் சிறீபால் அய்.பி.எஸ். அவர்களை இதுபற்றிக் கேட்டபோது யாராவது முண்டம்தான் இதைக் கிளப்பி விட்டிருக்க வேண்டும் என்று கன்னத்தில் அறைந்ததுபோல் பதில் கூறினாரே!

இப்பொழுது திருப்பூர், ஈரோடு பகுதிகளில் ஒரு வதந்தியைக் கிளப்பியுள்ளனர். திருப்பூர் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தை உடனே பேசியதாகக் கட்டிவிட்ட கரடி அந்த வட்டாரம் முழுவதையும் கிடுகிடுக்க வைத்துள்ளது.

பிறந்த குழந்தை பேசியதால் மற்ற குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து என்றும் பிரச்சாரம் செய்யப் பட்டது.

பிள்ளைகளைப் பெற்ற மகராசிகள் என்ன செய்தார்கள்? வீட்டு வாசல்களில் தேங்காய்களை உடைத்தனராம். குழந்தைகளின் தலையைச் சுற்றியும் தேங்காய் உடைத்தனராம். (தேங்காய் வியாபாரியின் வேலையாக இருக்குமோ!)


இதன் உண்மைத் தன்மை என்ன? திருப்பூர் அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் மதி வாணன் இதுகுறித்து என்ன சொன்னார்?

மருத்துவமனையில் பிறந்த குழந்தை பேசிய தாகச் சொல்வது உண்மையல்ல! ஒரு குழந்தை பிறந்தவுடன் சரளமாகப் பேச நூறு சதவீத வாய்ப்பு இல்லை. இது  முழுக்க முழுக்க வதந்தியாகும். இதை யாரும் நம்பிப் பயப்பட வேண்டாம் என்று கறாராகச் சொல்லி விட்டாரே!

இதற்கு என்ன பதில்? காவல்துறையில் உள்ள உளவுப் பிரிவினர், இந்த வதந்தியைக் கிளப்பி விட்ட விஷமிகளைக் கண்டுபிடித்து சட்டப்படி தண்டிக்க வேண்டாமா? அவ்வாறு செய்யாவிட்டால் இது போன்ற வதந்திகள் கிளப்பப்பட்டுக் கொண்டே இருக்கும்.

ஊடகங்கள் இத்தகைய பொய்ச் சேதிகளை தோலுரித்துக் காட்ட வேண்டாமா? மக்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் கடமை ஏடுகளுக்குக் கிடையாதா?

ஊடகங்கள் மூடநம்பிக்கைகளுக்கு இறக்கை கட்டி பறக்க விடாமல் இருந்தால் போதாதா என்றுதான் கேட்கத் தோன்றுகிறது.

அறிவை நாசப்படுத்துபவர்களுக்குத் தூக்குத் தண்டனை கொடுக்க வேண்டும் என்ற பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் கருத்துதான் நினைவிற்கு வருகிறது. மக்களை மீட்பது பெரியாரியலே! மறக்க வேண்டாம்!


               ------------------"விடுதலை” தலையங்கம் 25-8-2012

25.8.12

ஒவ்வொரு பார்ப்பனரையும் நெஞ்சில் கைவைத்துப் பார்க்கும்படி வேண்டிக்கொள்கிறேன்

உருப்போட்டு மார்க் வாங்குவது தகுதி திறமை ஆகிவிடுமா?

சர்க்கார் பரீட்சை தேர்வு முடிவுகளைத் தெரிவிக்கும் சர்ட்டிஃபிகேட் (நற்சான்று பத்திரங்)களில் சர்க்கார் (முடிவை வெளியிடும்) இலாகாதாரர்கள் - பாஸ் ஃபெயல் (Pass - Fail) தேர்வு பெற்றார் - தேர்வு பெறவில்லை என்பதான இரண்டு சொற்களில் ஒன்றைத்தான் எழுதுவேண்டுமே ஒழிய மார்க்கு (குறியீடு) எண்களைத் தெரிவிக்க வேண்டியதில்லை என்பதாக அரசாங்கத்தார் ஏற்பாடு செய்ய வேண்டியது அவசியமாகும்.

சில பரீட்சைகளில் (தேர்வுகளில்) அப்படித்தான் சர்டிஃபிகேட்களில் குறிப்பிடப்படுகின்றன.

இப்போது சர்க்கார் பார்ப்பனருக்கு விரோதமாக முடியும் என்கிற கருத்தின்மீது உத்யோக அபேட்சை விண்ணப்பங்களில், தொழில் கல்லூரி அபேட்சை விண்ணப்பங்களில் தெரிந்தெடுப்பவருக்கு தெரியாமல் இருக்க வேண்டுமென்பதற்கு ஆகவே ஜாதிப்பெயர்இருக்கக்கூடாது என்று உத்தரவு போடவில்லையா? சர்க்கார் தெரிந்தெடுக்க ஒரு மாணவனுக்கு வேண்டியது குறிப்பிட்ட பரீட்சையில் தேர்வு பெற்றானா?  இல்லையா? என்பதும், நேர்ப் பார்வையில் போதிய அறிவு உடையவனா, இல்லையா என்பவை மாத்திரமே கவனிக்கப்பட வேண்டுமே ஒழிய, மற்றவை பற்றிய கவலை எதற்கு என்றுதான் கேட்கிறேன்.

மார்க்குகளைப் பார்ப்பதில் ஒரு மாணவன் தமிழில், ஆங்கிலத்தில் 42 மார்க்கு வீதம் வாங்கி தேர்வு பெற்றிருக்கிறான்; மற்றொரு மாணவன் 85 மார்க்கு வீதம் வாங்கினதாலும் முதல் வகுப்பில் வெற்றி பெற்று இருக்கிறான். இந்தப்படி மொத்தம் 170 மார்க் அதாவது 86 மார்க்குகள் அதிகம் வாங்கி தமிழிலும், ஆங்கிலத்திலும் முதல் வகுப்பில் பாஸ் செய்துவிட்டதால் இந்தப் பையன் எப்படி வைத்தியத்திற்கும், பொறியியலுக்கும் வேண்டிய உயர்ந்த யோக்கியதாம்சமுடையவனாகிவிடுவான்? தேவையான அளவுக்கு 42+42=84 மார்க்கு வாங்கிய பையன் எப்படி தாழ்ந்த யோக்கியதாம் சமுடையவனாகிவிடுவான்? மனிதனுடைய அறிவுசக்தி, திறமை சக்தி வேறு, உருப்போடும் புரோகித சக்தி வேறு என்பதை எந்த அறிவாளியும் ஒப்புக்கொண்டே தீர்வான்.

உருப்போடுவது என்பது ஒரு வித்தை. அதை பொது அறிவிலும் பொது யோக்கியதாம்சத்திலும் சேர்ப்பது சுத்த மதியீனம்; அல்லது சூழ்ச்சி_தந்திரம் என்றுதான் சொல்லவேண்டும். உருப்போடுவதில் ஞாபசக்தியில் திறமை உடைய அஷ்டாவதானிகள், சதாவதானிகள், வேதபாராயண புரோகிதர், புலவர்கள் பலர் இருக்கிறார்கள். இவர்கள் பொது அறிவில் மேம்பட்டவர்கள் ஆகிவிடுவார்களா? எனவே பரீட்சைத் தேர்வுப்பத்திரங்களில் மார்க்கு எண்களைக் குறிப்பிடுவதும் அந்த அளவை யோக்கியதாம்சத்தில் சேர்ப்பதும் தகுதி திறமையைப் பாழாக்கிவிடும் என்றே கூறுவேன். உருப்போடுவதில் தேர்ந்தவன் எல்லாம் ஒழுக்கம், நாணயம், வேலைத்தகுதி உடையவன் ஆகிவிடுவானா என்பதை உருப்போடும் திறமையை யோக்கியதாம்சமாய் எடுத்துக்கொள்ள வாதாடும் ஒவ்வொரு பார்ப்பனரையும் நெஞ்சில் கைவைத்துப் பார்க்கும்படி வேண்டிக்கொள்கிறேன்.
                             ----------------- ஈ.வெ.ராமசாமி 7.10.1962
    *************************************************************
  டெல்லி கிருஷ்ணனும் தமிழ்நாட்டு கிருஷ்ணனும்!

டெல்லியில் உள்ள பாலகிருஷ்ண சுவாமி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி என்கிற பண்டிகையின் போது தீண்டாதவர்கள் என்கிறவர்களை எல்லாம் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டிருப்பதாகத் தமிழ்நாடு பத்திரிகையில் காணப்படுகிறது.  புராணங்களின் படி கிருஷ்ணன் என்பதாக ஒரு சுவாமியோ, ஆசாமியோ இருந்ததாக நாம் ஒப்புக் கொள்வதானால் அது ஒரே சாமியாகத்தான் இருந்திருக்கலாமே தவிர, டெல்லிக்கு ஒரு கிருஷ்ணனும், தமிழ்நாட்டுக்கு ஒரு கிருஷ்ணனும், இருந்திருக்க முடியாது.
அப்படியிருக்க, டெல்லி கிருஷ்ணன் தீண்டாதவர்கள் கோவிலுக்குள் போனால் ஓடிப்போகாமல் கோவிலுக்குள்ளாகவே தைரியமாக உயிருடன் இருக்கும்போது, நமது தமிழ்நாட்டு கோவில்களில் உள்ள கிருஷ்ணன் மாத்திரம் தீண்டாதவர்கள் உள்ளே போனால் கோவிலை விட்டு ஓடிப்போவதோ, அல்லது ஒரே அடியாக செத்துப்போவதோ ஆனால், இந்த மாதிரி கிருஷ்ணனை வைத்துப் பூஜை செய்வதால் நமக்கு என்ன பலன் அவரால் உண்டாகக் கூடும்.  ஒரு மனிதன் உள்ளே வந்தால் தாக்குப் பிடிக்காத கிருஷ்ணன் யாருக்கு என்ன செய்ய முடியும்? ஆதலால் நாம் தமிழ்நாட்டுக் கிருஷ்ணனைத் தூக்கி விட்டு இனிமேல் டெல்லி கிருஷ்ணனைத் தான் தருவித்துக் கொள்ள வேண்டுமேயல்லாமல், இந்த மாதிரி சக்தியில்லாத, கிட்டப் போனால் ஓடிப் போகிற கிருஷ்ணன் இனி நமக்கு அரை நிமிஷங்கூட கண்டிப்பாய் உதவவே உதவாது.
                   -----தந்தை பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் சித்திரபுத்திரன் என்ற புனை பெயரில் எழுதிய கட்டுரை-"குடிஅரசு" 28.8.1927

24.8.12

கச்சத்தீவு மீட்கப்பட வேண்டும் - கி.வீரமணி

கச்சத்தீவைத் தூக்கிக் கொடுத்தது சட்ட விரோதமே! சென்னை சிறப்புக்கூட்டத்தில் தமிழர் தலைவர்


கச்சத்தீவை இலங்கைக்கு இந்திய அரசு அளித்த விதம் சட்டத்திற்கு விரோ தமானது. நாடாளுமன்றத்தில் ஒப்புதல் இல்லாமல் வழங்கப்பட்டது சட்டப்படி குற்றம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

சென்னை - பெரியார் திடலில் 21.8.2012 அன்று அவர் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

டெசோ மாநாட்டிலே கூட ஒரு செய்தியை நாம் எடுத்துச் சொன்னோம். திடீரென்று இவங் களுக்கென்ன அக்கறை வந்துவிட்டது; திடீரென்று இவங்க கவலைப்படுகிறார்கள், அதுவும் அரசியல் ரீதியாக - இது அவரின் புனர்வாழ்வுக்காக, இவரை உயர்த்துவதற்கு என்றெல்லாம் பொறுப்பற்ற வர்களும், பார்ப்பன ஊடகங்களும் இதைப் பேசுகி றார்கள் என்று சொன்னால், அது அப்படிப்பட்ட தல்ல, இயல்பாகவே நாங்கள் அதனைப்பற்றிக் கவலைப்பட்டவர்கள் என்பதற்கு ஆதாரமாகத் தான் உங்களுக்கெல்லாம் நினைவிலே இருக்கும், இலங்கைத் தமிழர் இன்னலும், நீதிக்கட்சியும் என்று போட்டு தென்னிந்திய நலவுரிமைச் சங்கத் தின் நிருவாகக் கமிட்டிக் கூட்டம் 10.8.1939 ஆம் ஆண்டு ஈரோட்டில் பெரியார் மாளிகையில் நடை பெற்ற ஒரு நிகழ்ச்சியை, கடந்த 12.8.2012 அன்று நடைபெற்ற டெசோ மாநாட்டில் நான்  உரை யாற்றிய போது கூட சுட்டிக்காட்டினேன்.

1939ஆம் ஆண்டிலேயே...

இலங்கையில் உள்ள தமிழ் மக்களை இலங்கை அரசு கொடுமையாய் நடத்தியதையும், அவர்களை நாட்டை விட்டு அப்புறப்படுத்த ஏற்பாடு செய்வதையும் கமிட்டி கண்டிப்பதாகவும், அதற்கு ஈ.வெ.ராமசாமி, ராவ்பகதூர் சாமியப்ப முதலியார், சர்.ஏ.டி. பன்னீர்செல்வம், டபிள்யூ,பி.ஏ. சவுந்தர பாண்டியன் ஆகியோரை இலங்கைக்குச் சென்று, தமிழர்களின் நிலைமையை ஆராய்ச்சி செய்து அறிக்கை வெளியிடவேண்டுமாய் கேட்டுக் கொள்வதாகவும் முதல் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

ஈரோட்டிலிருந்து விடுதலை வெளிவந்தபோது, விடுதலையின் அய்ந்தாம் பக்கத்தில் வந்த செய்தி இது என்று சுட்டிக்காட்டினேன். பல நண்பர்கள் என்னிடம் சொன்னார்கள், இந்த வரலாற்று உண்மை எங்களுக்குத் தெரியாது; இது அனை வரும் தெரிந்துகொள்ளவேண்டிய ஒரு செய்தி என்று சொன்னார்கள்.

இப்பொழுதெல்லாம் விமர்சனம் செய்பவர்கள் யாரென்று கேட்டால், நேற்று பெய்த மழையில் இன்று மாலையிலே முளைத்த காளான்கள், அவர்களுக்கு வரலாறே தெரியாது; ஆனால், பேசுவதைப் பார்த்தால், வசனங்கள்; வசனம் பேசி பேசிய விசனத்தில் தள்ளிவிட்ட இனம் இது.

அரிய நூல் வெளிவந்துள்ளது

அற்புதமான மற்றொரு ஆதாரம் நமக்கு இப் பொழுது கிடைத்திருக்கிறது. அது என்னவென் றால், இவர் திராவிடர் இயக்கத்தைச் சார்ந்தவரல்ல; சிட்னி பல்கலைக் கழகத்திலே இருக்கக் கூடிய ஈழத் தமிழர்; ரொம்ப ஆழமாக ஆய்வு செய்து,  700 பக்கங்களுக்கு ஒரு நூலை எழுதியிருப்பவர்; இது வரை கிடைக்காத ஒரு தகவலைச் சொல்லியி ருக்கிறார்.

தொப்புள்கொடி உறவு அவர்களை காப்பாற்ற வேண்டும் என்று நாம் சொல்லுகிறோம்; இது ஒரு கற்பனைச் சொல் அல்ல; அலங்காரச் சொல்லும் அல்ல; முழுக்க முழுக்க இரத்த உறவுச்சொல், அதுதான் மிக முக்கியம். இன அடிப்படையிலே உருவானது என்பதற்கு ஒரு அடையாளம், ஆதாரம் என்னவென்றால், இங்கே ஒரு செய்தியைச் சொல்கிறார்:

Tamil -Ceylon State Council and Sinhalese - Ceylon State Council என்ற தலைப்பின் கீழ் வெளிவந்துள்ள ஒரு செய்தியைச் சொல்லியிருக்கிறார்.

1940இல் ஒரு மனு

அதாவது எம். கணபதிபிள்ளை என்பவர் All Ceylon Aboriginal Inhabitants’ Association Jaffna (Ceylon) என்ற அமைப்பின் செயலாளர், அவர் டில்லிக்கு வந்து  1.3.1940 இல் ஒரு மனுவை வெள்ளைக் காரர்களிடம் கொடுக்கிறார்.

அந்த மனுவில் இருக்கின்ற ஒரு பகுதியை இங்கே படிக்கின்றேன்:

Ceylon and India are one country. Ceylon forms the Southern part of India. The Tamils of Ceylon who are Dravidians and the Indian Dravidians are of one race. The Tamils are all Dravidians. The Sinhalese have therefore no right to treat the Indians as separate from the Ceylon Tamil.

The whole of Ceylon was originally a Tamill Country, The Tamils also called Dravidians were the aboriginal inhabitants of Ceylon and ruled over the whole land.

The Sinhalese came to Ceylon from Central Asia by way of Bengal. They (Sinhalese) are therefore foreigners to Ceylon. The Indian Dravidians (Tamils) belong to the same race and are entitled to the same rights as the Dravidians of Ceylon.

இங்கே வரலாற்று ஆய்வாளர்கள், பேராசிரி யர்கள் எல்லாம் இருக்கிறீர்கள். அவர்கள் இதனை எடுத்து ஆராய்ச்சி செய்யவேண்டும். இது ஓர் அற்புதமான ஓர் ஆவணம். இதுவரை கிடைக்காத ஓர் ஆவணம்.

அந்த மனுவிற்குக் கீழே ஒரு குறிப்பை பதிவு செய்திருக்கிறார்:

மேலும், நவம்பர் 1940 ஆம் ஆண்டு டில்லியில் நடைபெற்ற மாநாட்டில் All Ceylon Aboriginal Inhabitants’ (Tamil) Association இலங்கை, யாழ்ப்பாணப் பிரதிநிதிகள் முன் வைத்த கோரிக்கையை மேற்படி சங்கத்தின் செயலாளர், குடியேற்ற நாடுகளின் அரசு செயலாளருக்கு அனுப்பிய ஆவணத்தையும் இங்கு இணைப்பதன் மூலம், தமிழரின் அரசியல் பிரச்சி னையைத் தெளிவாக விளக்கிக் கொள்ள முடியும்.

நீதிக்கட்சி - திராவிடர் இயக்கம் எப்பொழுது தீர்மானம் போட்டிருக்கிறது 1939 ஆம் ஆண்டு. இத்தாக்கத்தின் விளைவாகத்தான் மேற்கண்ட மனு டில்லியில் கொடுக்கப்பட்டிருக்கிறது. வரலாற்றில் மறைக்கப்பட்ட உண்மைகளை நாம் எடுத்துச் சொல்லுகிறோம். மேற்கண்ட செய்திகளைப்போல் இன்னும் நிறைய செய்திகளை ஆய்வாளர் பதிவு செய்துள்ளார்.

இன்றைய அரசியலுக்காக அல்ல!

ஆகவே, நம்முடைய தொப்புள்கொடி உறவு, நம்முடைய இன உணர்வு, நம்முடைய மனிதநேயம் என்பது காலங்காலமாக இருக்கக்கூடிய ஒன்று. இது திடீரென்று நேற்றைய அரசியலுக்காக, இன்றைய அரசியலுக்காக, நாளைய அரசியலுக்காக உருவாக்கப் பட்டது அல்ல. இதனை எல்லோரும் அருள்கூர்ந்து புரிந்துகொள்ளவேண்டும். எனவே, நாம் அதற்காக பாடுபடக்கூடிய, அந்த உரிமைக்காக குரல் கொடுக்கக்கூடியவர்களாக இருக்கிறோம்.

அப்படிப்பட்ட சூழ்நிலையிலே அடுத்து ஒரு கேள்வி, டெசோ மாநாட்டில் மிக முக்கியமான தீர்மானங்களை நிறைவேற்றி, அத்தீர்மானங்கள் அனைத்தையும் பிரதமரிடம் அளிக்கவேண்டும் என்று டெசோ மாநாட்டு அமைப்பாளர்களெல் லாம் கலைஞர் தலைமையில் முடிவெடுத்தோம். அம்முடிவின்படி, இன்று (21.8.2012) காலையில் டி.ஆர். பாலு அவர்கள் தலைமையில் திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தி.மு.க. தலைவர் கலைஞரின் ஆணைக்கிணங்க, பிரதமர் மன்மோகன்சிங் அவர்களை நேரில் சந்தித்து, டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங் களை அளித்து கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

மீனவர் பிரச்சினை

இலங்கையில் இருக்கும் ஈழத் தமிழர்களுக்குக் கொடுக்கும் இன்னல்கள்போதாதென்று, இங்குள்ள மீனவர்களின் உரிமைகளையும் சிங்களவர்கள் விட்டு வைக்கவில்லை; மீனவர்களுக்கு மீன் பிடி தொழிலைத் தவிர வேறெதுவும் தெரியாதே, வாழ்வாதாரம் அது ஒன்று மட்டும்தானே! வேறு எந்தத் தொழிலை மீனவர்கள் செய்யப் போகிறார்கள்? இன்று தொலைக்காட்சி, நாளிதழ்களைப் பார்த்தால், தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் சிறைப் பிடித்தனர், வலைகளை அறுத்தனர்; மீன்களைப் பிடுங்கிக் கொண்டனர்; தாக்கினர் இப்படி நாள் தோறும் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. மீனவப் பிரச்சினை தொடர்ந்துகொண்டே தான் இருக்கிறது.

இதற்கு முன் இருந்த முதல்வர் கலைஞர் அவர்கள் மீனவர் பிரச்சினை குறித்து கடிதம் எழுதிக் கொண்டே இருக்கிறார் என்று சொன்னார்கள்; இப் பொழுதுள்ள முதல்வர் மட்டும் என்ன கடிதம்தானே எழுதுகிறார்; அங்கே போய் என்ன குடியிருக்கிறாரா? நாம் சண்டை போட்டுக்கொள்ள விரும்பவில்லை; ஏதோ எழுதுகிறார், எழுதட்டும்; எல்லோரும் சேர்ந்து குரல் கொடுக்கிறோம், அந்த அளவுக்காவது பயன் படட்டும். நமக்குள்ள அரசியல் பிரிவினைகளைக் கூட தள்ளி வைத்துவிட்டு, நாம் பொதுநோக்கோடு பார்ப்போம். இன்றைக்கு காவிரி பிரச்சினை பற்றி முதலமைச்சர் சொல்லியிருக்கிறார், அதனை நாம் வரவேற்றுள்ளோமே!

கச்சத்தீவுப் பிரச்சினை

கச்சத்தீவை யாரையும் கேட்காமல் தாரை வார்த்த நிலையில், தி.மு.க. சார்பில் கண்டனக் கூட்டம் நடத் தியது; நாங்களும் அக்கூட்டங்களில் கலந்துகொண்டு பல ஊர்களில் உரையாற்றியுள்ளோம். ஒரு நாட்டி னுடைய இடத்தை மற்றொரு நாட்டிற்குத் தர வேண்டுமென்றால், நாடாளுமன்றத்தின் அனுமதி பெற்று சட்டப்படித்தான் மாற்ற முடியும்; ஆனால், கச்சத்தீவை தாரை வார்த்த விஷயத்தில் சட்டப்படி, முறைப்படி வழங்கப்படவில்லை என்பது சட்டத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய ஓட்டை.

இராமேசுவரத்தில், மீனவர்களைப் பாதுகாக்கும் மாநாட்டை திராவிடர் கழகம் நடத்தியபோது, இம்மாநாட்டில் ஜார்ஜ் பெர்னாண்டசு, சகோதரர் நெடுமாறன் போன்றவர்கள் கலந்துகொண்டார்கள். அம்மாநாட்டில் உரையாற்றும்போது, கச்சத் தீவைப் பற்றி நான் விளக்கம் சொன்னேன், அரசியல் சட்ட விதிகளை எடுத்துக்காட்டி, இந்த விதிகளுக்கு மாறாக, ஒருவருடைய சொந்தப் பொருளை எடுத்து மற்றொருவருக்குத் தருவதுபோல, அது சட்ட விரோதமாகச் செய்யப்பட்ட காரியம், சட்டப்படி செய்யப்பட்ட காரியமல்ல; ஆகவே, அது மாற்றப் படாவிட்டால், நாங்கள் நீதிமன்றத்திற்குச் சென்று அங்கே சுட்டிக்காட்டுவோம் என்று சொல்லி, திராவிடர் கழகம் உடனடியாக வழக்குப் போட்டது.
அவ்வழக்கு இன்னமும் நிலுவையில் இருக்கிறது. உங்களுக்குத்தான் தெரியுமே, நம் நாட்டின் நீதி மன்றங்களைப் பார்த்தோமேயானால், வெள்ளி விழா, பொன்விழா, வைர விழா என்று இப்படியே சென்று கொண்டிருக்கும் வழக்குகள்.

மீனவ சமுதாயத்தை, மீனவ சகோதரர்களை நாம் காப்பாற்றவேண்டுமென்றால், மிகப்பெரிய அளவில் நாம் குரல் கொடுக்கவேண்டியது அவசியம்.

கச்சத்தீவு மீட்கப்பட வேண்டும்

கச்சத்தீவுக்கென்று தனி வரலாறு உண்டு. கச்சத்தீவு நமக்குச் சொந்தமானது; அதையெடுத்து யாருக்கோ கொடுத்துவிடுவதா? மீண்டும் மீனவ சமுதாயத்திற்கு  நிரந்தரமான ஒரு பாதுகாப்பைப் பெற்றுத் தரவேண்டும் என்று சொன்னால், கச்சத்தீவை மீண்டும் மீட்போம் என்று சொல்லக்கூடிய நிலையை உருவாக்கவேண்டும். தீர்மானம் போட்டிருக்கின்றோமா - இல்லையா? அதற்குரிய வழி வந்திருக்கின்றதா - இல்லையா? எப்போது தீர்மானம் போட்டோம், எப்போது வழக்கு போட்டோம்? டெசோ அமைப்பைச் சேர்ந்தவர்கள்தானே வழக்கு போட்டோம், தீர்மானம் போட்டோம். தோழர் ஜார்ஜ் பெர்னாண்டசு அவர்களே ஆச்சரியப்பட்டார், இந்த மாதிரியா என்று. அவர் ஒரு நல்ல நாடாளு மன்றவாதி; அப்பேர்ப்பட்டவர் கச்சத்தீவை தாரை வார்த்ததில் சட்ட ஓட்டை இருக்கிறது என்பது நீங்கள் எடுத்துச் சொன்னபொழுதுதான் புரிகிறது என்று சொன்னார்.

இதைவிட இன்னொரு கொடுமை என்ன வென்று சொல்லவேண்டுமென்றால், இந்தியக் கடற்படையே சிங்களவர்களுக்குச் சாதகமாக நடந்துகொண்டு வருகிறது. காரணம் என்னவென் றால், இந்த உணர்வு இல்லாமல் இருக்கிறார்கள். இதற்கு என்ன செய்யவேண்டும் என்பதற்கு, டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் கண்டனத்தோடு நிறுத்தாமல், தீர்மானத்தை விளக்கிச் சொல்லும்பொழுது, தனுஷ்கோடி அல்லது இராமேசுவரம் பகுதியில் ஒரு கடற்படை தளத்தை உருவாக்கவேண்டும்; அதன்மூலம் தமிழக மீனவர்களுக்குப் பாதுகாப்புக் கொடுக்கவேண்டும் என்று சொல்லக்கூடிய ஒரு நிலையை உருவாக்கி இருக்கிறோம்.

வட நாட்டிலுள்ளவர்கள்  துப்பாக்கி வைத்துக் கொள்கிறான்; ஆர்.எஸ்.எஸ்.காரன் திரிசூலத்தைத் தூக்குகிறான், எல்லா இடத்திலும் துப்பாக்கியைத் தூக்கிக் காட்டுகிறான்.  நாட்டின் எல்லையைத் தாண்டி வந்தான், தாண்டி வந்தான் என்று சொல்வது இருக்கிறது பாருங்கள், அதைப்பற்றி நீங்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும்; நிலம் என்றால், அதில் கோடு போட்டிருப்பார்கள்? அதைத் தாண்டி வந்தான் என்று சொல்லலாம்; ஆனால், கடலில் அப்படி செய்ய முடியாது;
காற்றடித்தால், டக்கென்று அங்கே போய்விடக் கூடிய சூழல் இருக்கிறதல்லவா? அங்கே என்ன கோடா போட்டிருப்பார்கள்? பூமத்திய ரேகை எங்கே இருக்கிறது என்று பார்ப்பதுபோல், அங்கே பார்க்க முடியுமா? ஆகவே, அறிவுபூர்வமான சிந்தனையோடு பார்க்கின்றபோது நீக்குப்போக்கு தான் இதில் தேவை; நல்லெண்ணம் இருக்க வேண்டும். ஆனால், அந்த நாட்டிற்குத்தான் நாம் உதவி செய்துகொண்டிருக்கிறோம். அவன் நாட்டு குடிமக்களுக்கு புத்தாக்கம் கொடுக்கவேண்டும், புது நிவாரணம் கொடுக்கவேண்டும் என்பதற்காக நாம் பணம் கொடுக்கின்றோம். எது இறையாண்மை?

ஆனால், அவர்கள் எங்களுடைய இறையாண் மைக்கு எதிராக விரோதமாகப் பேசுகிறார்கள் என்று சொல்லுகிறாயே, நம்மகிட்டே பணம் வாங்கினார் என்றாலே, அந்நாட்டின் இறை யாண்மை போயே போச்சு; அப்புறம் என்ன தனியா உங்களுக்கு இறையாண்மை உங்க நாட்டுக் குடி மக்களாய் இருக்கக் கூடிய தமிழர்களுக்கே வீடு கட்டி, அதில் சிங்களவர்களைக் குடியேற்றிக் கொண்டிருக்கிறாய் நீ - பிச்சை எடுக்கும்பொழுது, காசு வாங்கும் பொழுது உனக்கு இறையாண்மை கிடையாது - எங்கள் இனத்தவர்களை ஒழுங்காக நடத்துங்கள் என்று சொன்னால் மட்டும்  இறையாண்மை வந்துவிடுமா? இறையாண்மை இல்லை ஆண்மையே இல்லாத விஷயம் அது. நீங்கள் மிகத் தெளிவாக நினைத்துப் பார்க்க வேண்டும்.
எப்படிப்பட்ட ஒரு சிந்தனை என்பதை ஆழமாக யோசித்துப் பார்க்கவேண்டும். ஆகவே, அந்தத் தீர்மானத்திலே ஆக்க ரீதியான திட்டங் களைக் கொடுத்திருக்கிறோம். கண்டனத்தை மட் டும் சொல்லவில்லை. டெசோ தீர்மானம் இருக் கிறதே நண்பர்களே, இதனுடைய முக்கியத்துவம் காலம் தீர்ப்பளிக்கக் கூடிய அளவிற்கு, இன்றைக்கு இருக்கக் கூடியதைவிட வருங்காலத்தில் இதன் மூலம் விடிவு ஏற்படப் போகிறது என்பது திண்ணம். ஒரு பிரச்சினைக்குத் தீர்வு என்பது பல கட்டங்களாக ஏற்படக்கூடியது. உடனே எல்லாமே முடிந்துவிடும் என்பதல்ல.
இவர் நினைத்திருந்தால் அப்போதே எல்லோரையும் காப்பாற்றி இருக்கலாம் என்று கூறுகிறார்கள். இப்போதுகூட ஒரு தொலைக் காட்சியில் கேள்வி கேட்டார்கள், அதற்கு நானும் பதில் சொன்னேன். பலர் அதைப் பார்த்திருப்பீர்கள்.  பொது எதிரி யார்? நம்ம கவலை அதுதான்? பொது எதிரி சிங்களப் பேரின வாதம் - தனி நபர்கூட அல்ல. அப்படி இருக்கும்பொழுது நாம் அதில் கவனம் செலுத்த வேண்டும் என்று நினைக்கிறோம். அதனாலே தேவையில்லாதவர்களுக்கு நாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. நம்ம ஊரில் உள்ள ஊடகங்களுக்கு, பார்ப்பன ஊடகங்களுக்கு குறிப் பாக நம்ம இரண்டு பேரையும் முட்ட விடறதுதான் ஆசை.
இவர் அதைச் சொன்னார்; அவர் இதைச் சொன்னார் என்று சொல்லி இரண்டு பேர் சொன்னதையும் பத்திரிகையில் போட்டு, அதை நம்ம ஆட்களே வாங்க வைத்திடுவான். ஆகவே, அப்பேர்ப்பட்ட சூழ்நிலை இருப்பதை மாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் பதில் சொல்ல வில்லையே தவிர, கலைஞர் என்ன செய்யாமல் இருந்தார் ஆட்சியில் இருக்கும்பொழுது? ஒரு ஆட்சி, அதுவும் மாநில அரசு - அவர் என்ன பிரத மரா? கூண்டு என்ற நூல்

இங்கே இன்னொரு தகவலைச் சொல்கிறேன் கேளுங்கள், கார்டன் வைஸ் என்பவர் கூண்டு என்ற தலைப்பில் ஒரு நூலை எழுதியுள்ளார். ஆங்கிலத் திலிருந்து தமிழாக்கம் செய்யப்பட்ட நூல் இது. இந்த நூலைப்பற்றி சொல்கிறபோது இவர் அத்தாரிட்டி திங்ஸ் கொஞ்சம் அனுபவபூர்வமாக, பயனுள்ளதாக இந்தப் பிரச்சினையை - ஈழத் தமிழர் பிரச்சினையை அணுகி இருக்கிறார். இதில் எத்தனையோ மாறு பட்ட கருத்துகளும் இருக்கும்.

நான் அங்கே அதாவது இலங்கையிலே மூன் றாண்டுகள் வாழ்ந்தேன். மோதல் பிராந்தியங்களில் மொத்தம் 20 ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறேன். யுத்தத்தின் இறுதிக் காலங்களில் நான் அய்.நா.வின் செய்தித் தொடர்பாளராகவும், ஆலோசகராகவும் இருந்திருக்கிறேன் என்று அந்நூலின் முன்னு ரையிலே சொல்லியிருக்கிறார்.அவர் ரொம்ப ஆழ மாகச் சொன்ன ஒரு செய்தி இருக்கிறதே, அதைக் கவனமாக கேட்கவேண்டும்.

எல்லோரையும் ஏமாற்றி இருக்கிறது இலங்கை அரசு என்றுதான் சொல்லவேண்டும்; யாரை என்று சொன்னால், அய்.நா.வை ஏமாற்றி இருக்கிறது; அமெரிக்காவை ஏமாற்றி இருக்கிறது; உலக நாடுகளையும் எந்தெந்த வகையில் ஏமாற்றி இருக் கிறது என்பதை அந்நூலில் அவர் சுட்டிக் காட்டி யிருக்கிறார். அதையெல்லாம் பார்க்கும்பொழுது இங்கே நடந்த சம்பவங்கள் எவ்வளவு கெட்ட வாய்ப்பான சம்பவங்கள்;
எந்த அளவுக்கு நமக்கு வாய்ப்புகள் அமைந்தன என்பதை யோசித்துப் பார்க்கவேண்டாமா? ஏதோ எல்லாம் முடிந்து விட்டதுமாதிரி ஏன் உடனே அங்கே போய் தடுக்கவில்லை? ஏன் சும்மா இருந்தீர்கள் என்று கேட்டால் என்ன அர்த்தம்? ஒரு மாநில அரசின் முதல்வர், அவரால் என்ன செய்ய முடியும்?
மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் என்பதற்காக தானே முன்வந்து சென்னையில் முதலமைச்சர் கலைஞர் உண்ணாவிரதம் இருந்தார்; அங்கிருந்து போர் நிறுத்தம் வந்துவிட்டது; போர் நிறுத்தம் செய்துவிட்டோம்.  Light Machine only with the spad என்று சொல்லி, Heavy ordinal மற்ற எதையும் நாங்கள்  பயன்படுத்தமாட்டோம் என்று எங்களுக்கு உறுதியான தகவல் தளத்திலிருந்து வந்துவிட்டது என்று மத்திய உள்துறை அமைச்சரிடமிருந்து தகவல் வந்ததும்தானே கலைஞர் அவர்கள் உண்ணா விரதத்தை நிறுத்தினார்கள். இதைத்தானே நம்ப முடியும், இல்லை இல்லை, நான் நேரே இலங் கைக்குப் போய் பார்த்தால்தான் நம்புவேன் என்று யாராவது சொல்ல முடியுமா? மத்திய உள்துறை தகவலைத்தானே நாம் நம்ப முடியும்.

புலிகளுக்கு மக்கள் மத்தியில் எப்படி செல்வாக்கு ஏற்பட்டது?

கூண்டு என்ற நூலில் அந்நூலாசிரியர் மேலும் கூறுகையில், இலங்கையைப் பொறுத்தவரை ஏதோ விடுதலைப்புலிகளினால்தான் யுத்தமே துவங்கியது என்ற ரீதியில் சிலர் தவறாக விளக்கமளிக்கின்றனர்.  வாதத்திற்காக அது சரி என்றே வைத்துக் கொள் வோம். ஆனால், புலிகளுக்கு மக்கள் மத்தியில் பரவ லான செல்வாக்கு எப்படி உருவாயிற்று என்று கேட்க வேண்டாமா?

இதுதானே மிக முக்கியம். சரியான ஒரு கேள்வியை நடுநிலையில் இருந்து ஒரு ஆஸ்தி ரேலியன் ஒரு வெளிநாட்டுக்காரர் கேட்கிறாரே, அதுமட்டுமல்ல, 1983 கலவரங்களில் சில ஆயிரம் தமிழர்கள் இறந்ததுதான் விடுதலைப்புலிகள் உருவாக வழிவகுத்தது. இப்படிச் சொல்வது, கலைஞரோ, வீரமணியோ, டெசோ அமைப்போ அல்ல; இப்படிச் சொல்வது ஆஸ்திரேலிய செய்தியாளர் கார்டன் வைஸ். இலங்கையில் இருந்து, அங்கிருந்த நிலை மையைப் பார்த்து விடுதலைப் புலிகள் செய்தது தவறு என்று சில இடங்களில் சுட்டிக்காட்டியுள்ளார் -  அவருடைய கண்ணோட் டத்தில்.

அண்மைய சம்பவங்கள் என்னென்ன தாக்கங் களை ஏற்படுத்தும், நினைவுகள் மரிப்பதில்லை; அது எப்பொழுதும் உயிரோடு இருக்கும். அதிகாரப் பகிர்வு வேண்டும் என்று வலியுறுத்தி வருபவர்தான் தயான் ஜயதிலக.  இவர் இப்படிச் சொன்னதால், இவரின் தூதுவர் பதவியும் பறிபோயிற்று. அவன் சிங்களவனாக இருந்தாலும் அவர்கள் அதைப்பற்றி கவலைப்படுவதில்லை. இந்த மாதிரி யாராவது சொன்னால் அவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. இவர்களுடைய நிலை என்ன என்று சொல்லுகிறது போது, எப்படிப்பட்ட எழுச்சிகள் உருவானது? ஏன் இந்த நிலைமைகள் வந்தது? என்று சொல்லும்போது, வெறும் பயங்கர வாதம், பயங்கரவாதம் என்ற சொல்லக்கூடிய நிலையிலே, அதனுடைய அடிப்படையிலே ஒரு விஷயத்தை சொல்கிறார்:

                    -(தொடரும்)-----”விடுதலை”  24-8-2012