Search This Blog

31.5.15

பெரியாரைப் பற்றி பேரறிஞர்கள்! -- 1


தந்தை பெரியாரைப் பற்றி பேரறிஞர்கள்!





எங்கள் நட்பு என்றும் குறையாது.
கவர்னர் - ஜெனரல்,
திரு.சி. இராஜகோபாலாச்சாரியார்
எழுபதாவது ஆண்டு விழாவுக்கு,
தில்லி 22-11-1948

சீரார் ஈ.வெ.ரா. அவர்களுக்கும், எனக்கும் உள்ள அக நகும் நட்பு யார் என்ன சொன்ன போதிலும் என்றும் குறையாது.

                                                                            -----------------------இராஜகோபாலாச்சாரி

**************************************************************************************

பெரியார் நீடு வாழ்க!

தமிழ்ப் பேராசிரியர்
உயர் திரு. மறைமலை அடிகளார் அவர்கள்.

சாதி, சமயப் பூசல்களை யொழித்து, "எவ்வுயிரும் என்னுயிர் போல் எண்ணி யிரங்கி"த் திருவருள் நெறி நின்று ஒழுகுதலாகிய பழந்தமிழ்க் கொள்கையே சைவ நன் மக்கட்குரிய உண்மைக் கொள்கையாயிருந்தும், முப்பத்தைந்தாண்டுகட்குமுன், சொற்பொழிவாலும், நூல்களாலும் யான் அதனை விளக்கிய காலையில், அதனை எதிர்த்தும், என்னைப் பகைத்தும், எனக்குத் தீது செய்தவர்கள் சைவரிற் கற்றவர்களே. அஞ்ஞான்று எனக்குதவியாய் நிற்றற்கு எவருமில்லை. பின்னர், பெரியார் திரு. ஈ.வெ.ரா. இராமசாமி அவர்கள், யான் விளக்கிய கொள்கைகளையே மேலுந் திட்பமாய் எடுத்து விளக்கிப் பேசவும், எழுதவுந் துவக்கிய காலந்தொட்டு, ஆரியச்
சேர்க்கையால் தமிழ் மொழிக்குந் தமிழர் கோட்பாட்டிற்குந், தமிழரது வாழ்க்கைக்கும் நேர்ந்த குறைப்பாட்டைத் தமிழர் உணர்வாராயினர்.
அவரிற் கற்றவரும் என் மேற்கொண்ட சீற்றந் தவிர்வாராயினர். ஆதலால் பெரியார் இராமசாமி அவர்களின் தமிழ்த் தொண்டைப் பெரிதும் பாராட்டி அவர்கள் நீடு இனிது வாழ்கவென்று திருவருளை வேண்டி வழுத்துகின்றேன்.

                           ----------------------------மறைமலையடிகள், 05-12-1948
*****************************************************************************************

கருத்து வேற்றுமைக்கு மதிப்பளிப்பவர்!

தமிழ்ப் பெரியார்.
திரு.வி.கல்யாண சுந்தரனாரவர்கள்.

ஈரோட்டில், சென்னை மாகாணச் சங்க இரண்டாம் ஆண்டு மாநாடு (11,12-10-1919)-ல் குழுமியது. அதன் தலைவர் திரு.லாட் கோவிந்ததாஸ், வரவேற்புத் தலைவர் திரு. ஈ.வெ. இராமசாமிப் பெரியார் நட்பை அம்மாநாட்டிலேயே யான் பெற்றேன்.


.....நாயக்கர், சென்னை மாகாணச் சங்கத்தின் உதவித் தலைவருள் ஒருவர். யான் அமைச்சருள் ஒருவன்.

டாக்டர் வரதராஜீலு நாயுடுவும், யானும், நாயக்கர் வீட்டில் தங்கினோம். நாயக்கர் தலையிலும், உடலிலும், இடுப்பிலும் பட்டணி ஒளி செய்தது. அவர் மனைவியார் தோற்றம் மணிபூத்த பொன் வண்ணமாகப் பொலிந்தது. அவர் ஜமீன்தாராகவும், இவர் ஜமீன்தாரணியாகவும் காணப்பட்டனர்.


நாயக்கர், பேச்சில் கருத்துச் செலுத்தாத காலமுண்டு. அவர் பேச்சில் கருத்து செலுத்திய பின்னர், தமிழ்நாட்டிக் காளமேகமானார். நாயக்கர் பேச்சு மழையாகும்; கன மழையாகும்; கல் மழையாகும். மழை மூன்று மணிநேரம் - நான்கு மணிநேரம் பொழியும்.


முன்னாலில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் தொண்டு செய்தவர் என்ற முறையில் எவர்க்கேனும் பரிசில் வழங்கப்புகுந்தால், முதற்பரிசில் நாயக்கருக்கே செல்வதாகும். தமிழ்நாட்டுக் காங்கிரஸ், நாயக்கர் உழைப்பை நன்றாக உண்டு கொழுத்தது. அவர் காங்கிரசில் வெறி கொண்டு நானா பக்கமும் பறந்து உழைத்ததை, யான் நன்கு அறிவேன். நாயக்கரும், யானும் சேர்ந்து, சேர்ந்து, எங்கெங்கேயோ தொண்டு செய்தோம். காடு, மலையேறியும் பணி புரிந்தோம்.


நாயக்கர் ஒத்துழையாமையில் உறுதி கொண்டு, பலமுறை சிறை புகுந்தார். அவ்வுறுதிக்கு இடர் விளைவித்தது சுயராஜ்யக் கட்சி. சுயராஜ்யக் கட்சியின் கிளர்ச்சிக்கு இணங்கிக் காங்கிரஸ் சட்டசபை நுழைவுக்கு ஆதரவு நல்கியதானது, நாயக்கருக்கு எரியூட்டிற்று....


..... நாயக்கர் "சுயராஜ்யக் கட்சி ஒத்துழையாமை உணர்வையே போக்கும், பட்டம் - பதவிக் கட்சியாகும்" என்பார். "தற்போது காங்கிரசில் உற்றுள்ள சோர்வை நீக்கிப் பழைய ஒத்துழையாமையை உயிர்ப்பிக்கச் சுயராஜ்யக் கட்சியை ஒரு கருவியாகப் பயன்படுத்தல் வேண்டும்" என்று யான் சொல்வேன். "மீண்டும் ஒத்துழையாமை எழுமா?" என்று அவர் கேட்பார். "அது எழுந்தே தீரும்; வேறு வழியில்லை என்று யான் உரைப்பேன். "சுயராஜ்யக் கட்சியால் பிராமணர்க்கு ஏற்றமும், மற்றவர்க்கு இறக்கமும் உண்டாகும் என்று இராம சாமியார் கூறுவார். யான் அதை மறுப்பேன்.


.... நாயக்கர் ஜஸ்டிஸ் கட்சியில் சேர்ந்து சுயமரியாதை இயக்கங்கண்டு பிரசாரம் செய்தார். அதனால், தென்னாட்டுக்குக் கேடு விளைதல் கண்டு, யான் எதிர்ப் பிரசாரம் செய்தேன். இருவர் போரையும் தென்னாடு வேடிக்கை பார்த்தது. போரிட்டோம்; பத்திரிக்கையில் போரிட்டோம். மேடையில் போரிட்டோம்; என் உடல் நலம் குன்றும் வரை, யான் முன்னணியில் நின்று போர் புரிந்தே வந்தேன். போர் உச்சம் பெற்ற காலத்திலும் நாயக்கர் வீட்டுக்கு யான் செல்வேன்; என் வீட்டிற்கு அவர் வருவார். எங்கள் நட்புக்கு குலையவே இல்லை. ஒரே மேடையில் இருவரும் பேசுவோம். அவர் கொள்கையை அவர் சொல்வார். என் கொள்கையை யான் சொல்வேன். ஒரே இடத்தில் உண்போம்; உறங்குவோம்; நட்பு முறையில் உறவாடுவோம்.


நாயக்கர் சுயமரியாதை, எனது சன்மார்க்க இயக்கத்தினின்று பிறந்தது. அதற்கும் இதற்கும் நூற்றுக்குத் தொண்ணூறு பங்கு ஒற்றுமை; பத்துப் பங்கு வேற்றுமை. எங்களுக்குள் போர் மூட்டியது. வேற்றுமைப் பகுதி ஆக்கம் பெறவில்லை. ஆக்கம் பெறாமையும், எங்கள் போர் நிறுத்தத்துக்கு ஒரு காரணம்.


இளமையில் யான் பொறுமை காப்பது அரிதாகவே இருந்தது.... காஞ்சி மாநாட்டிலே நாயக்கருக்கும், எனக்கும் உற்ற கருத்து வேற்றுமை காரணமாக அவர் "குடிஅரசு" எய்த சொல்லம்புகள், பொறுமையை என்பால் நிலை பெறுத்தின. சொல்லம்புகளை யான் தாங்கப் பெருந்துணை செய்தவர் நண்பர் நாயக்கரே.... நாயக்கர், சாதி வேற்றுமையை ஒழித்தவர்; அதை நாட்டினின்றுங் களைந்தெறிய முயல்பவர்.


வைக்கத்தில் (1924) தீண்டாமை ஒழிப்புப் போராட்டம் எழுந்தது. நாயக்கர் அங்கே சென்று சத்தியாக்கிரகஞ் செய்தார். திருவாங்கூர் அரசாங்கம் அவரைச் சிறைப்படுத்தியது. அப்பொழுது யான் "வைக்கம் வீரர்" என்ற தலைப்பீந்து, பெரியாரின் தியாகத்தை வியந்து வியந்து நவசக்தியில் எழுதுவேன். "வைக்கம் வீரர்" என்பது பெரியாருக்கொரு பட்டமாகவே வழங்கலாயிற்று.


இராமசாமியார் காங்கிரசில் தொண்டாற்றிய காலத்தில் இவர் முயற்சியால் ஈரோட்டில் இந்தி வகுப்பொன்று நடைபெற்றது. திறப்பு விழாவுக்கு யானும் சென்றிருந்தேன். தென்னாட்டில் இந்தி விதையிட்டவர் நாயக்கரே. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில், அது செடியாகி நின்றது. காங்கிரஸ் ஆட்சி, அச்செடியைத் திடீரென மரமாக்கக் கட்டாயத்தில் இறங்கியது. "அது இஷ்டப்படி வளரலாமே" என்றார் நாயக்கர். இக்கருத்து வேற்றுமை பெருங்கிளர்ச்சித் தீயாயிற்று. நாயக்கர், கிளர்ச்சித் தலைவராக முன்னணியில் நின்றார். அவரது கெழுதகை நண்பர் இராஜகோபாலாச்சாரியார், காங்கிரஸ் ஆட்சித் தலைவராக வீற்றிருந்தார். அடக்குமுறை எழுந்தது. நாயக்கர் ஏறக்குறைய ஆயிரவருடன் சிறை புகுந்தார். அடக்குமுறையை யான் "நவசக்தி" வாயிலாக மறுத்து வந்தேன். அம்மறுப்பு, நாயக்கர் கிளர்ச்சிக்குத் துணை போயிற்று.


வைக்கம் வீரர்க்குப் பலதிற அணிகளுண்டு. அவைகளுள் ஒன்று வைராக்கியம்.



மயிலை மந்தைவெளியிலே (08-03-1924) நாயக்கரால் நிகழ்த்தப் பெற்ற சொற்பொழிவிலே இராஜ நிந்தனை இயங்கியதென்று அவர் கைது செய்யப்பட்டார். வழக்கு நடந்தது. நாயக்கர் இராயப்பேட்டையிலே தங்கினார். ஓர் இரவு "குகானந்த நிலைய"த்திலே நாயக்கர் ஒரு திண்ணையில் உறங்கினார். யான் மற்றொரு திண்ணையில் உறங்கினேன். பதினொரு மணிக்கு மழை தொடங்கியது. நண்பரை எழுப்பினேன். அவர் கண் விழிக்கவில்லை. மழை பெருகியது. மீண்டும் நேயரை எழுப்பினேன். கண்கள் மூடியபடியே இருந்தன. பெரியாரைப் பலமுறை எழுப்பி எழுப்பி பார்த்தேன். பயன் விளையவில்லை. நாலு மணிக்கு மழை நின்றது. ஆறு மணிக்கு வைக்கம் வீரர் எழுந்தார். எனக்குச் சொல்லொண்ணாச் சிரிப்பு. "மழை பெய்தது தெரியுமா?" என்று நண்பரைக் கேட்டேன். "மழையா?" என்றார். நாயக்கரைத் தீண்டியுள்ள பாம்பு, 124-ஏ வழக்கு நடப்புக் காலம்! அந்நிலையில், நண்பருக்குக் கவலையற்ற உறக்கம்! என் எண்ணம் நாயக்கர் மனத்தின் மீது சென்றது. "அவர் மனம் பொன்னா? சஞ்சலமுடையதா?" என்ற ஆராய்ச்சியில் இறங்கினேன்.



1942-ம் ஆண்டு இராமசாமிப் பெரியார் ஜெனரல் ஆஸ்பத்திரியில் படுக்கையில் கிடந்தபோது, அவரைக் காணச் சர்க்கரைச் செட்டியாரும், சண்முகானந்தசாமியும், ஜானகிராம் பிள்ளையும், யானும் சென்றோம். யான் அவர் கட்டிலிலே நெருங்கி அமர்ந்தேன். நாயக்கர் என் கையைப் பற்றிக் கதறினார். என் கைக்குட்டை நனைந்தது. இருவருங் கருத்து வேற்றுமையுடையவர்; போரிட்டவர். பெரியார் கண்கள் ஏன் முத்துக்களை உகுத்தன? அக்காட்சி கண்டவர், "இங்கே பலர் வருகிறார்; போகிறார். எவரைக் கண்டும் பெரியார் அழுதாரில்லை. இவரைக் கண்டதும் அவருக்கு அழுகை ஏன் பெருகியது? என்று ஒருவரோடொருவர் பேசியது என் காதுக்கு எட்டியது. அழுகைக்குப் காரணம் என்ன?


அஞ்சாமையும், உண்மையும் உள்ள இடத்தில் கருத்து வேற்றுமைக்கு இடந்தரல் என்ற பெருங்குணம் அமைந்திருக்கும். கருத்து வேற்றுமைக்கு இடமுள்ள நாடுதான், நாகரிக நாடாக இருக்க முடியும். கருத்து வேற்றுமைக்கு இடங்கொடாத ஆட்சி கொடுங்கோல் ஆட்சியாகத்தான், மிருக ஆட்சியாகத்தான் காட்சியளிக்கும். நாங்கள் பல்லாண்டுகளாகக் கருத்து வேறுபாடுடையவராக இருந்தும், சென்னை வந்தால், அவர் இராயப்பேட்டையிலுள்ள என் வீட்டிற்கு வருவார். நானும் அவர் அழைக்கும் போதெல்லாம் ஈரோடு செல்வேன்.

                                      *********************************************

இராமசாமிப் பெரியார், ஈரோட்டில் பிறந்து வளர்ந்தவர். அவர் தம் புகழோ, தென்னாட்டிலும், வடநாட்டிலும் பிற நாடுகளிலும் மண்டிக் கிடக்கின்றது! காரணம் என்ன? தோழர் ஈ.வெ.ரா. வின் உண்மையும், வாய்மையும், மெய்மையுஞ் செறிந்த அறத் தொண்டாகும்.

ஈ.வெ.ரா.விடம் ஒருவித இயற்கைக்கூறு அமைந்துள்ளது. அதனின்றும் அவரது தொண்டு கனிந்தது. அஃதென்னை? அஃது அகவுணர்வு வளர்ந்து செல்லும் பேறு. இப்பேறு பலர்க்கு வாய்ப்பதில்லை. மிகச் சிலர்க்கே வாய்க்கும்.

உரிமை வேட்கை, அஞ்சாமை முதலியன ஈ.வெ.ரா.வின் தோற்றத்திலேயே பொலிதல் வெளிடைமலை.


பெரியார் கல்லூரி காணாதவர்; பாடசாலைப் படிப்புக் குறைவு. ஆனால், எவருக்கும் எளிதில் கிடைக்காத இயற்கையறிவை ஏராளமாகப் பெற்றிருக்கிறார்.


..... இவர் இயற்கைப் பெரியார். நான் என் வாழ்நாளில், இதுகாறும் செய்த ஆராய்ச்சிகளுள் அகப்படாத பல பெரியார் கருத்துக்களும், அரிய யோசனைகளும், இப்பெரியாரின் இயற்கையறிவில் உதித்திடக் காண்கிறேன்.


"தனக்கென வாழாப் பிறர்க்குரியாளன்." இது பெரியாருக்குத் தான் பொருந்தும்.

***********************************************************************************************

பிறர் செய்திராத பெரும்பணி செய்தவர்!

சர்.ஏ. இராமசாமி முதலியார் அவர்கள்.
(1928)

சென்ற நாற்பதாண்டுகளாகத் திரு. ஈ.வெ.ரா. அவர்கள், இத்தென்னாட்டில் பிரம்மாண்டமான பணியாற்றி வருகின்றவர். இன்றைய தமிழ்நாட்டில் ஒவ்வொரு வீட்டிலும் ஈ.வெ.ரா. அவர்களின் பெயர் சொந்தப் பெயராகவே உரிமையுடன் வழங்கப்படுகிறது. அவருடைய பெயரும், புகழும் தமிழ்நாட்டில் மட்டுமின்றி ஆந்திர தேசத்திலும், பம்பாயிலும், மத்திய மாகாணங்களிலும், பிற இடங்களிலும் பரவி இருக்கின்றன என்பதைப் பெருமிதத்தோடு நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.


"எங்கெங்கே தமிழ் உணர்ச்சி தவழ்கின்றதோ, எங்கெங்கே சமூதாய சீர்திருத்தம் பேசப்படுகின்றதோ, எந்தெந்த இடத்தில் புரட்சி வாடை வீசுகின்றதோ - அங்கெங்கெல்லாம் ஈ.வெ.ரா.வின் ஒளிவீசித் திகழ்கின்றது." ஒரு சில ஆண்டுகளுக்குள் இத்தகை பரந்த செல்வாக்கு அவருக்கு எப்படி ஏற்பட்டுவிட்டது? அவருடைய வாழ்க்கை முறையில், நடைமுறைத் திட்டத்தில் இடையறாத பெருந்தொண்டில், பேச்சில், எழுத்தில் பொதுமக்களை எல்லாம் தன்பால் ஈர்க்கத்தக்க அத்தகைய தனிச் சிறப்பு என்னதான் பொதிந்து கிடக்கின்றது?


சென்ற முப்பது அல்லது நாற்பது ஆண்டுகளில், வேறு யாரும் செய்து முடிக்காத அரும்பணியை அவர் ஒருவரே ஆற்றி இருக்கிறார் என்று எல்லோராலும் சொல்லப்படுகின்றதே, அதெற்கென்ன காரணம்? பொதுநலத் தொண்டு புரிவதில் அவர் அப்படி என்ன பதைபொருளைக் கண்டுபிடித்துவிட்டார்? இதைத் தான் நாம் சிந்தித்தறிய வேண்டும்.


இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னே நாங்களெல்லாம் கூடத்தான், சமூக சீர்திருத்தத்தைப் பற்றிப் பேசி வந்தோம். சமூக சீர்திருத்தத்தைத் தேசீய முறையில் கையாளுவதா, அல்லது ஆராய்ச்சி முறையில் கையாளுவதா என்று நாங்கள் அக்காத்தில் தர்க்கம் பண்ணிக்கொண்டிருந்தோம். நான் அந்த நாட்களையும் நினைத்துப் பார்க்கிறேன். இந்த நாட்களையும் பார்க்கிறேன். வியக்கத்தக்க பேராற்றலைப் பொதுமக்களிடத்தெல்லாம் நண்பர் நாயக்கர் எழுப்பிவிட்டதைத்தான் பார்க்கிறேன்.


அந்தக் காலத்தையும், இந்தக் காலத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கிறேன்; மக்களிடத்தே புது எழுச்சியைப் பார்க்கிறேன்.


நண்பர் ஈ.வெ.ரா. காலத்தையே மாற்றிவிட்டாரா என்ன?


அந்தக் காலத்தில் நாங்கள் படித்த கூட்டத்தாரைக் கொண்டு, சீர்திருத்த ஆர்வத்தை நாட்டில் எழுப்பிவிடலாம் என்று நம்பினோம். ஆனால் இராமசாமி நாயக்கரவர்கள், படித்த கூட்டத்தாரைப்பற்றிக் கவலைப்படுவதே கிடையாது. என்ன ஆனாலும் சரி, சீர்திருத்தம் மட்டும் கூடவே கூடாது என்று சூள் உரைத்துவிட்ட (படித்த) கூட்டத்தாரிடம், சீர்திருத்தப் பணியாற்றுவதில் ஈ.வெ.ரா. அவர்களுக்கு நம்பிக்கை கிடையாது; ஆம்! படிப்பு வாசனை அறியாத பாமர மக்களிடம் தம் முழுச் சக்தியையும் அவர் செலவிட்டுப் பணியாற்றி வருகிறாரே, அதிலேதான் அவருடைய வெற்றியின் ரகசியம் அடங்கி இருக்கிறது. பரிதாபத்திற்குரிய வாழ்க்கையில் உழன்று கொண்டிருக்கும் பாமர மக்களை, அவர்களுடைய நீண்ட உறக்கத்தினின்றும் தட்டி எழுப்புவது, அவர்களுடைய உள்ளத்தில் தம் கருத்துக்கள் நேரே சென்று பதியக்கூடிய வண்ணம் பேசுவது; எழுதுவது - இவற்றின் தொகுப்புத் தான், இராமசாமி நாயக்கரின் பெருந்தொண்டு.


தங்கள் வாழ்க்கையின் இலட்சியத்தை உணர வழியின்றி, எங்கும் நிறைந்த அந்தகாரத்தில் தங்களுக்கு வழிகாட்டக்கூடிய ஒளி ஒன்று கிடைக்குமா என்று வாடி வருந்திக் கொண்ட ஆயிரமாயிரம் மக்கள் வதைவதை அவர் கண்டார். சோர்ந்து போன அவர்களுடைய உள்ளங்களுக்குச் சுறுசுறுப்பை ஊட்டினார். மங்கி மறைந்து போன பகுத்தறிவு உணர்ச்சியைத் தட்டி தட்டி எழுப்பினார்; எதனையும் ஆராய்ந்து பார்க்கத் தூண்டும் சிந்தனா சக்தியை அவர்களுக்கு அளித்தார். இதைவிடச் சிறந்த தொண்டு வேறு என்னதான் இருக்க முடியும்?


எந்தக் கருத்தையும் பகுத்தறிவுக் கண்கொண்டு ஆராய்ந்து காரணகாரியத் தத்துவங்களுக்குப் பொருந்தி வருகின்றதா என்று எண்ணிப் பார்த்து அதன் பின்னரே ஒப்புக் கொள்ள வேண்டும் என்னும் உணர்ச்சியை, அவர் பாமர மக்களுக்கெல்லாம் ஊட்டிவிட்டார். உண்மை விடுதலைக்கு இதைவிட விரைவாக நம்மைச் செலுத்தும் பாதை வேறு இருக்க முடியுமா?


சமூதாய சீர்திருத்தத் துறையில் அவர் ஆற்றிய பெரும்பணி, சிந்தனா சக்தியை மக்கள் உள்ளத்திலெல்லாம் எழுப்பிவிட்டதே. சீர்திருத்த எண்ணங்களின் வளர்ச்சிக்கு மட்டுமல்ல, இந்த நாட்டின் வளர்ச்சிக்கே இப்பணி மிகமிக இன்றியமையாதது என்பதை யார் மறுக்க முடியும்?


தம்முடைய அச்சம், தயை, தாட்சண்யமற்ற - ஆணித்தரமான கண்டனங்களால் யார் யார் மனம் புண்படும் என்பதைப் பற்றி அவர் கவலைப்படுவதே கிடையாது. தாம் எடுத்துக்கூறும் கருத்துக்கள் அறிவுக்கும், ஆராய்ச்சிக்கும், அநுபவத்திற்கும் பொருந்துவனதாமா என்பதைத் தான் அவர் எண்ணிப் பார்ப்பார். மற்றபடி தம்முடைய தொண்டு யார் யார் உள்ளத்தில் என்னென்ன எதிரொலிகளைக் கிளப்பும் என்பதைப் பற்றி அவர் சிறிதும் எண்ணமாட்டார். சமூதாய சீர்திருத்தவாதி ஒருவருக்கு அமைந்திருக்க வேண்டிய சிறப்பான பண்பு - இந்த அஞ்சாத நெஞ்சந்தான். இது என்னுடைய நண்பர் இராமசாமி நாயக்கர் அவர்களிடம் பூரணமாய் அமைந்திருக்கிறது.


நண்பர் நாயக்கர் அவர்கள், இதுவரையில் வேறு யாரும் செய்திராத அளவு, மறுமலர்ச்சி இயக்கத்தை இந்தத் தென்னாட்டில் பரவச் செய்துவிட்டார். இளைஞர் உலகத்தின் முழு ஆற்றலையும், பெருந்தீரத்தையும் ஒன்றாய்க் கூட்டிக் கலந்து, பேரெழுச்சியை உண்டு பண்ணி விட்டார். இளைஞர் கூட்டம் மட்டுமன்று முதியவர் கூட்டமுந்தான் அவரால் எழுச்சி பெற்றுவிட்டது. உள்ளபடியே தம்முடைய நாட்டு வளர்ச்சியில் நாட்டம் கொண்ட ஒவ்வொருவரும் ஈ.வெ.ரா. அவர்களுக்குக் கடமைப்பட்டுத்தான் இருக்கிறார்கள்.
                                            ************************************************

பிரெஞ்சு தேசத்தில் ருசோ என்பவர் (1712 - 1778) அந்நாட்டின்
சுயமரியாதையைக் காப்பாற்ற உழைத்ததுபோல், நம் நாட்டின்
சுயமரியாதையைக் காக்க உழைக்கும் நமது நாயக்கர், 'தமிழ்நாட்டின் ருசோ' ஆவார். (1926)

********************************************************************************************
சிறந்த மனிதர்களில் ஒருவர்!

சர். ஆர். சண்முகஞ் செட்டியார் (1939)


இராமசாமிப் பெரியார் அவர்களுடைய பொதுநலத் தொண்டுகள் பலவற்றில் நான் நெருங்கிக் கலந்திருக்கிறேன். அதுமட்டுமல்ல, அவர்களோடு கால் நூற்றாண்டுக்கு மேல் அந்நியோன்யமாகப் பழகக்கூடிய நல்ல அதிர்ஷ்டத்தையும் பெற்றிருக்கிறேன். இந்தியாவில் இன்று பொதுவாழ்வில் உள்ள மிக முக்கியமான பிரபலஸ்தர்களில் பெரியார் அவர்களும் ஒருவர் என்பதைத் தயங்காமல் கூறுவேன். சென்ற 25-ஆண்டுகளாக இந்நாட்டின் பொதுவாழ்வில் முக்கியமான பங்கெடுத்துக் கொண்டிருப்பவர்களில் மிகப் பேர்பெற்ற தலைவர்கள் அனேகருடன் நெருங்கிப் பழகியுள்ள காரணத்தைக் கொண்டே நான் மேற்கண்ட கருத்தை அழுத்தமாய்த் தெரிவிக்கிறேன்.


செய்கையில் உண்மை - நீதியை நிலைநாட்டுவதில் அடங்கா ஆர்வம் - சிறிதும் தன்னலமென்பதே இல்லாத வாழ்க்கை - இவைகளே ஒரு மனிதனைச் சிறந்தவனாக ஆக்கக்கூடியனவென்றால், உண்மையிலேயே பெரியார் நம்முடைய மிகக் சிறந்த மனிதர்களில் ஒருவராவார்.


நாட்டிற்குத் தொண்டு புரிவதாகவே தம்முடைய வாழ்க்கையைப் பயன்படுத்துவதிலுள்ள அவரது ஆர்வமும், இந்திய சதூயத்திலுள்ள கேடுகளை ஒழிப்பதற்காக அவைகளுக்கெதிராய்ச் செய்து வரும் பிரசார முறைகளும், அவற்றின் மீது அவருக்குள்ள நியாயமான கோபாவேசமும், இக்காரணங்களுக்காக அவர் செய்துள்ள மகத்தான தியாகங்களும், தமிழ்நாட்டு மக்களின் உள்ளத்தில் பெரியாருக்கு ஒரு நிரந்தரமான இடங்கிடைக்குமாறு செய்துவிட்டன.


நமது நாட்டைப் போன்ற பெரும்பரப்பான ஒரு நாட்டில், குறிப்பிட்ட அளவான துறைகளில், உண்மையான தேசத்தொண்டு செய்வதற்கு இடமிருக்கிறது. பெரியார் அவர்கள், சிறப்பாகத் தமிழ்நாட்டிற்குள் மட்டும் தமது வேலையைச் செய்வதென்று நிர்ணயித்துக் கொண்டிருக்கிறார். ஆனால், இக்குறிப்பிட்ட எல்லைக்குள் அவர்கள் செய்யும் தொண்டானது அரசியல், சமூகம், பொருளாதாரம், மதம் ஆகிய பொது வாழ்க்கையின் எல்லாத் துறையிகளிலும் மிகமிகத் தீவிரமான முறையியென்றே சொல்ல வேண்டும். தாம் மேற்போட்டுக் கொண்ட இவ்வேலையினின்றும், அகில இந்தியத்தலைமையென்னும் பேராசைகளால் அவர் எக்காலத்திலம் இழுக்கப்பட்டதேயில்லை.

*****************************************************************************************


தென்னிந்தியாவிலேயே ஓர் இளைஞர்!

ரெவரண்ட் ஜான் பிட்மன் (1928)

சமூக சீர்திருத்தத் துறையில் இடைவிடாத சேவை செய்து வரும் இராமசாமி நாயக்கர் அவர்கள், தென்னிந்தியாவிலேயே ஓர் இளைஞர் ஆவார்.

******************************************************************************************


கொள்கைக்காக உயிரையும் கொடுப்பவர்!


முன்னால் முதல் மந்திரி,
பனகல் அரசர், சர்.பி. ராமராயநிங்கவாரு அவர்கள்
(1928)


மதிப்பு வாய்ந்த எனது நண்பர் தோழர் இராமசாமி நாயக்கர் அவர்கள் தற்காலத்திய பெரிய சமூக சீர்திருத்தக்காரராவார். அவர், சமூக சீர்திருத்தத்தை மிகவும் புனிதமாகக் கருதுகிறார். தம் கருத்தை நிறைவேற்றுவதில் அவர் எத்தகைய தியாகமும் செய்யத் தயாராயிருக்கிறார். எந்த ஒரு கொள்கையைத் தாம் நேர்மையானதாக எண்ணினாரோ, அதற்காக அவர் பல தடவை சிறை சென்றதும் உங்களுக்குத் தெரியும். சமூக சீர்திருத்தக் கொள்கை முற்போக்கடைய இன்னும் எத்தனை தரம் வேண்டுமானாலும் சிறைக்குப் போகவும், மற்றும் தமது உயிரையே கொடுக்கவும் அவர் தயாராயிருக்கிறார்.



தோழர். ஆர்.கே. சண்முகம் அவர்கள் தெரிவித்தது போல் சமூக சீர்திருத்தத் துறையில் பலர் அனேக வருஷம் பாடுபட்டுப் பயன்பெறாமற் போன வேலையைச் சில வஹஷத்தில் இவர் பயனளிக்குமாறு செய்துவிட்டார். அரசியல் சீர்திருத்தத் துறையில் பலர் அனேக வருஷம் பாடுபட்டுப் பயன்பெறாமற் போனவேலையைச் சில வருஷத்தில் இவர் பயனளிக்குமாறு செய்துவிட்டார். அரசியல் சீர்திருத்தத்தைவிடச் சீர்திருத்தம் இன்றியமையாதது என்பதை அவரே முதலில் கண்டவர். இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்னால், சமுதாய சீர்திருத்தத்தை துறையில் பெரும்பணி ஆற்றியாக வேண்டுமென்பது அவருடைய முடிந்த முடிவு.

**********************************************************************************************

ஓர் உண்மையான சிங்கம்!


முன்னால் கவர்னர்,
சர்.கே.வி.ரெட்டிநாயுடு அவர்கள்.
(1928)


தமக்கு ஒன்றை உரியதாக்கிக் கொண்டு, அதையே தம் முழு வேலையாகவுங் கொண்டு கடந்த 20-அல்லது 25-ஆண்டுகளாக வேலை செய்கிற ஒருவருக்கு, இரண்டு அல்லது மூன்று விசேஷ குணங்கள் அமைய வேண்டும். அவ்விதக் குணங்களமைந்தவர்கள் இத்தென்னிந்தியா முழுவதும் தேடினாலும், நமது நாயக்கரைத் தவிர, வேறு யாரையும் கண்டுப்பிடிக்க முடியாது. அத்தகைய குணங்கள் எவையெனில், முதலாவது தைரியம், இரண்டாவது தியாகம், மூன்றாவது தம்முடைய வேலையை எவ்வாறு நடத்தி அனுபவத்திற்குக்
கொண்டு வருவது என்பது.


தோழர் இராமசாமி நாயக்கர் அவர்களின் தைரியத்தைப் பற்றி அதிகம் விவரிக்க வேண்டியதில்லை. அவர் ஓர் உண்மையான சிங்கம்! சிங்கத்தின் இதயத்தைப் பெற்றிருக்கிறார்! வாழ்க்கையில் பயமென்பது அவருக்கு இன்னதென்றே தெரியாது. அத்தகைய பயமின்மை இருந்தாலொழிய இத்தகைய (சமூதாய சீர்திருத்தக்) காரியங்களில் யாரும் வேலை செய்ய முடியாது.


அவசியம் நேர்ந்தால், அவர் எவ்விதத் தியாகமும் செய்யத் தயாராயிருக்கிறவர். பழைய காலத்து வீரர்கள் தங்கள் ஆயதத்தை உபயோகிப்பது போல், தோழர் நாயக்கர் தமது பேனாவைப் பயமின்றி எங்கும் செலுத்துகிறவர்.

*********************************************************************************************

பெரிய தியாகி!


கப்பலோட்டிய தமிழர்,
வ.உ. சிதம்பரம்பிள்ளை அவர்கள்.
(1928)

திரு. இராமசாமி நாயக்கரைப்பற்றி, நான் அதிகம் சொல்ல வேண்டியதில்லை. அவரைப் பற்றி "அய்ரோப்பாவிலே உள்ள பார்லிமெண்டில்" பேசப்படுகிறது என்றால் நாயக்கரின் புகழைப்பற்றி நான் என்ன சொல்வது?


திரு. நாயக்கரிடத்திலுள்ள விசேஷ குணம் என்னவென்றால், மனதிற்படும் உண்மையை ஒளிக்காமல் சொல்லும் ஓர் உத்தம குணந்தான். அவரை எனக்கு 20-வருடமாய்த் தெரியும். அவரும் நானும் ஒரே இயக்கத்தில் சேர்ந்து வேலை
செய்து வந்தோம். அந்த இயக்கத்தின் (காங்கிரஸ்) நேர்மையற்றவர்கள் சிலர் வந்து புகுந்த பின், நானும் அவரும் விலகிவிட்டோம். பிறகு நாயக்கர் அவர்களால் ஆரம்பித்தது நடத்தப்பெறும் சுயமரியாதை இயக்கத்தைப் பார்த்து இது எல்லா இயக்கத்திலும் நல்ல இயக்கமாயிருப்பதால் நானும் என்னாலான உதவியை அவ்வியக்கத்திற்குச் செய்து வருகிறேன். சுருங்கச் சொல்லின், நாயக்கவர்கள் தமிழ்நாட்டின் எல்லாத் தலைவர்களையும் விடப் பெரிய தியாகி என்று தான் சொல்ல வேண்டும்.

******************************************************************************************

எங்களால் மறக்க முடியாதவர்!

ராவ்சாகிப் N. சிவராஜ் B.A., B.L., M.L.C., அவர்கள்
(1928)

தாழ்த்தப்பட்ட வகுப்பினர்களுக்காக மகத்தான வேலை செய்திருக்கும் திரு. நாயக்கர் அவர்களை எங்கள் சமூகத்தார்; என்றும் மறக்கவே முடியாது. வைக்கத்தில் அவர் செய்துள்ள வேலை, அளவிடற்பாலது அன்று. அவர் ஒரு காலத்தில் தேசீயப் போராட்டத்தில் அமிதவாதக் கொள்கையுடையவராக இருந்தார். சமூக சீர்திருத்தமின்றி அரசியல் சுதந்திரம் கொடுக்கப்படுமாயின், அதனால் எவ்வித நன்மையும் ஏற்படாது. சீர்திருத்தக்காரர்கள் பின்பற்றத் தகுந்த தலைவர் நாயக்கர் ஒருவரேயாவார்.
********************************************************************************************
ஒரு கொள்கையாகவே தோன்றுகிறார்! 

முன்னாள் அமைச்சர், 
திரு.எஸ்.இராமநாதன் M.A., B.L., 
(1930)


வைக்கம் வீரர் ஒரு மனிதரல்லர்; அவர் எனக்கு ஒரு மனிதராகத் தோன்றவில்லை. ஒரு கொள்கையாகவே தோன்றுகிறார். 


உலகத்தில் எந்தெந்தத தேசங்கள் முன்னேறியிருக்கின்றனவோ, அந்தந்தத் தேசங்களில் இவரது கொள்கை நிலவக் காணலாம். மற்றும், தீவிரமாக எந்த மக்கள் சுதந்திரப் போராட்டம் செய்திருக்கின்றரோ அந்த மக்கள் இந்தக் கொள்கையையே கொண்டிருப்பதையும் காணலாம்.

********************************************************************************************

சரியென்று பட்டதை வலியுத்துபவர்!

முன்னாள் முதன்மந்திரி, 
டாக்டர் பி.சுப்பராயன் அவர்கள் 
(1928)



நான் காங்கிரசிலிருந்த காலம் முதற்கொண்டு நாயக்கர் அவர்களை அறிவேன். அவர் - மற்றவர்களுடைய உணர்ச்சி எவ்வாறு பாதிக்கப்படும் என்பதை கொஞ்சமும் மதியாது, தமக்குச் சரியென்றுட்டதை வலியுறுத்திவந்த ஒரு காரணத்தாலேயே நான் அவரிடம் மாறாத அன்பு கொண்டேன். அத்தகைய ஒரு சிறந்த குணமே, இப்போது நம் மக்களின் முற்போக்கக்கு அவசியமாயிருக்கிறது.


நம்மால் கற்பிக்கப்பட்ட - மனிதனுக்கு மனிதன் உள்ள வேற்றுமையே நமது தேசத்தை நாம் ஆள்வதற்குத் தகுதியற்றவர்களாகச் செய்திருக்கிறது..... அந்த அர்த்தத்தோடுதான், இன்று இராமசாமி நாயக்கர் அவர்கள், பிராமணரல்லாதார் இயக்கத்தின் தலைவராய் விளங்குகிறார். இந்த இயக்கத்தின் முக்கிய அம்சத்தை அவர் அறிந்துவிட்டார். காலஞ்சென்ற எனது நண்பர் நாயர் பெருமாள் இவ்வியக்கத்தைத் துவக்கும் போது, சமூக சீர்திருத்தத்தையே குறிக்கோளாகக் கொண்டிருந்தார். அத்தகைய கொள்கையே, தோழர் நாயக்கர் அவர்களும் கொண்டிருக்கிறார்.
                                                ********************************

(1929)

எனது நண்பர் திரு. ஈ.வெ.ரா. இராமசாமி நாயக்கர் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட இந்த (சுயமரியாதை) இயக்கம், நன்றாக வேருன்றி அசைக்க முடியாத நிலையோடு நிற்பதல்லாமல் அது பெரும்பான்மையான மக்களைத் தன்னுள் கவர்ந்து கொண்டு வருவதைக் காணக்காண, நான் அளவிட முடியாத மகிழ்ச்சியடைகிறேன். 

*******************************************************************************************************

நாயக்கர் சேவையை நாடு மறவாது! 


டாக்டர் பி.வரதராஜீலு நாயுடு அவர்கள், 
(1934)


"............. ஸ்ரீ நாயக்கர் தமிழ்த் தேசத்திற்குச் செய்துள்ள ஊழியத்தை ஒருவரும் மறந்திருக்க முடியாது. பெரும் தனவந்தராகவும், ஈரோட்டு முனிசிபல் சேர்மன் தாலுக்கா, ஜில்லா போர்டு மெம்பர் ஆகிய பதவிகளையும் வகித்து உல்லாசமாயிருந்த ஸ்ரீராமசாமி நாயக்கர், 1915-ம் வருடம் முதற்கொண்டு தேசீய இயக்கத்தில் ஈடுபட்டார். கோயம்புத்தூர் ஜில்லா மாநாட்டிற்கும், சென்னை மாகாணச் சங்க மாநாட்டிற்கும் 1915, 1917- ஆகிய வருடங்களில் வரவேற்புத் தலைவராயிருந்து நாயக்கர் செய்த சேவைகளை யாவரும் அறிவார்கள். பிறகு காங்கிரசில் சேர்ந்து, ஒத்துழையாமைப் போராட்டத்தில் முன் அணியில் நின்று அவர் தொண்டாற்றியதை நாம் எடுத்துக்காட்ட வேண்டியதே இல்லை.

1924-ம் ஆண்டில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்குத் தலைவராகவும், அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டியில் மெம்பராகவும் இருந்து, நாயக்கர் நல்ல வேலைகளைச் செய்துள்ளார். தீண்டாமையைத் தொலைக்க வைக்கத்தில் சத்தியாக்கிரகம் செய்து சிறைப்பட்ட பாக்கியம் பெற்ற தமிழ்த் தலைவர் நாயக்கர் ஒருவரேயாவர். அரசியல் போராட்டத்தில் அவர் சிறைப்பட்டு கோயம்புத்தூர் சிறையில் 1922-ஆம் ஆண்டில் தவம் செய்தார். பிறகு காங்கிரசிலிருந்து விலகி (ஸ்ரீவரதராஜீலு நாயுடு உட்பட) எல்லாத் தேசியவாதிகளையும் எதிர்த்துப் பிரசாரம் செய்ததும், "சுயமரியாதை"  இயக்கத்தை அவர் தோற்றுவித்ததும் யாவருக்கும் தெரிந்த விஷயமேயாகும். அய்ரோப்பாவில் யாத்திரை செய்து ரஷியாவைத் தரிசித்ததன் பயனாகப், "பொது உடைமை"க் கொள்கையில் இன்று வெகு தீவிரமாக இறங்கியிருக்கின்றார். அவருக்கும் நமக்கும் மாறுபட்ட கருத்துக்கள் என்னவிருப்பினும், தமக்கு நியாயமென்றுபட்ட கருத்துக்களை அஞ்சாது வெளியிடுவதில் ஸ்ரீநாயக்கர் முதல் ஸ்தாபனம் பெற்றவரென்பதை ஒருவரும் மறுக்க முடியாது. சமய - சமூக - அரசியல் துறைகளில் ஸ்ரீநாயக்கர் செய்துள்ள தியாகமும், ஊழியமும், அவர் பட்டுள்ள கஷ்டங்களும் இத்தேசத்தினர் ஒருநாளும் மறக்க முடியாதென்பதே நமது கருத்தாகும்..." 
                                                -------------------------"தமிழ்நாடு" தலையங்கம்
***************************************************

1933


"நாயக்கர் அவர்கள் நபட்டிற்குப் புரிந்த சேவையை நான் மறுக்க முடியாது. நானும், சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியாரும், நாயக்கரும் ஒரே சமயத்தில் இரவும் பகலும் இடைவிடாமல் ஒன்றித்துப் பிரசாரம் புரிந்துவந்திருக்கிறோம். தோழர் ஈ.வெ.ரா. அவர்கள் மிகப் பரந்த நோக்கமுடைய உலக அபிமான இயக்கத்தை (International Movement) ஆதரித்துப் பிரசாரம் செய்கிறார்."

************************************************************************************************

உண்மைக் களஞ்சியம்! 


சர். ஏ.டி. பன்னீர் செல்வம், பார் - அட்- லா 
(1938) 


நமது மாபெரும் தலைவர் பெரியாருக்குச் சத்தியாக்கிரகம், அகிம்சை, "சாகும்வரை உண்ணாவிரதம்" முதலிய வித்தைகளில் நம்பிக்கை இல்லை. ஆனால், அவர் தமக்குச் சரியெனப்பட்டதை எவருடைய தயவு தாட்சணியத்திற்கும் கட்டுப்படாது. பட்டவர்த்தனமாகச் சொல்லுவார். அது மற்றவர்களுக்குப் பிடிக்குமோ, பிடிக்காதோ அதைப்பற்றி அவருக்குக் கவலையே கிடையாது. தம் கருத்தைப் பற்றி மற்றவர்கள் என்ன எண்ணுவார்ககளோ என்ற பயம் அவருக்கு இருப்பதே இல்லை. 


நமது பெரியார் அவர்கள் ஒரு மகாத்மாவல்ல. ஆனால், தாம் நினைத்ததைச் சாதிக்கும் ஒரு நேர்மைவாதி. அவருடைய அபிப்பிராயங்கள் ஆணித்தரமானவை. ஆனால், அவர் பிடிவாதக்காரரல்ல. தம் காரியத்தைச் சாதித்துக் கொள்வதற்காக அவர் பட்டினி கிடப்பதில்லை; "சாகும்வரை உண்ணாவிரத"மிருப்பதில்லை. நேர்மையான வழியிலேயே பாடுபடுவார். காங்கிரஸ்காரருக்கு வார்தா எப்படியோ, அப்படியே திராவிடருக்கு ஈரோடு. அவர்கள் வார்தா போவது போல, நாம் அறிவுரை கேட்க ஈரோடு வருகிறோம். பெரியார் தமிழ்நாட்டின் உண்மைக் களஞ்சியம்! 


*****************************************************************************************

முதலமைச்சராயிருக்க உரிமையுடையவர்! 

திருவாங்கூர் முன்னாள் திவான், 
சர். சி.பி. இராமசாமி அய்யர் அவர்கள் 
(1945)


ஈ.வெ.ராமசாமி நாயக்கர் அவர்கள், வெகுவாக மதிக்கப்படுகின்ற ஒரு பார்ப்பனரல்லாத தலைவர். இந்நாட்டின் பிற பகுதிகளிலிருந்து தமிழ்நாட்டைத் தனியாகப் பிரித்துவிடவேண்டுமென்பதைப் பகிரங்கமாகவே அவர் சொல்லி வருகிறார். அத்தகைய தீர்மானம் ஒன்று, சமீப காலத்தில் நடைபெற்ற சேலம் ஜஸ்டிஸ் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. பாகிஸ்தானைப் போலவே தமிழ்நாடும் ஒரு சுதந்திர அரசாங்கத்தைக் கொண்ட தனிநாடாகவே அவரால் சித்தரிக்கப்படுகிறது. இன்றைய நிலைமை அடிப்படையாய்க் கொண்டு பார்த்தால் பாகிஸ்தானத்தில் முதல் அமைச்சராக இருப்பதற்கு ஜின்னாவிற்கு எவ்வளவு உரிமை உண்டோ, அவ்வளவு உரிமை தமிழ்நாட்டின் தனி ஆட்சியில் இராமசாமி நாயக்கருக்கு உண்டு.


*************************************************************************************

பெரியார் இராமசாமி! 


முன்னால் அமைச்சர், 
அட்வகேட், S.முத்தையா முதலியார் அவர்கள்


"பெரியார் இராமசாமி"க்குக் கருத்துரை தர, திருவாளர் சிவப்பிரகாசத்தின் வேண்டுகோளை உவப்புடன் ஏற்கிறேன்.


"மகாத்மா" வெனுஞ் சொல் காந்தியாருக்கே சிறப்புப் பெயராக உரிதாய்விட்டது போல், "பெரியார்" எனும் சொல் "ஈ.வெ.ரா" வுக்கே இந்நாட்டில் உரிதாய்விட்டது. பத்தாண்டுகளுக்கு முன் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈ.வெ.ரா. சிறை சென்று, காங்கிரசு கவர்ன்மெண்டின் காருண்யத்தினால் பெல்லாரி ஜெயிலில் வதியும் பொழுது, கடற்கரையில் தீவிரமாய் நடக்கும் கூட்டங்களொன்றில் நான் பேசுகையில், வடநாட்டுத் தலைவரை "மகாத்மா" வென்று அழைப்பதுபோல், தென்னாட்டுத் தலைவரை அதற்கீடான "பெரியார்" என்றே அழைக்கவேணும், அச்சொல் அவருக்கே தனிச் சொல்லாக வழங்கவேணுமென்று சொன்னது, இப்பொழுது ஞாபகம் வருகிறது. அச்சொல் நிலைத்தது பற்றி மகிழ்ச்சி. அச்சொல்லைத் தலையாகக் கொண்ட நூல் வருவது, மேலும் மகிழ்ச்சி.


இவ்விருவர்களுக்குமுள்ள பொருத்தங்களில் சிலவற்றைக் குறிப்பிடுகிறேன். மகாத்மா, தம் தொழிலையும், பதவிகளையும் விட்டுப் பொதுநல ஊழியத்தில் ஈடுபட்டார். அப்படியே பெரியாரும், தம் பெரிய லாபகரமான வியாபாரத்தையும், பல பொது ஸ்தாபனங்களில் தலைவர், அங்கத்தினர் என்ற பதவிகளையும் உதறித் தள்ளிவிட்டு வெளியேறினார். அன்னிய ஆங்கிலேய ஆட்சியை ஒழிக்க, இருவரும் பலமுறை சிறை சென்றுள்ளார்கள். மகாத்மாவின் மனைவி ஸ்ரீமதி கஸ்தூரியம்மையாரும் மகாத்மாவைப் பின்பற்றிச் சிறை சென்றார். பெரியாரின் மனைவி ஸ்ரீமதி நாகம்மையாரும் அவ்வாறே. காந்தியாரும் கதர் நூல் நூற்றார். பெரியார் நூலும் நூற்றார்; மூட்டை தலையில் தாங்கி கதரும் விற்றார். மகாத்மா அகிம்சா தர்மத்தையும், சாத்வீகத்தையும் கையாண்டார். பெரியாரும் அக்கொள்கையை ஏற்று, அவ்விதமே நடக்க அறிவுரை செய்கிறார். 


இவர்களுக்குள்ள மாறுபாடுகளையும் சில சொல்லுகிறேன்.


மகாத்மா எளிய வாழ்வென்று சொல்லிக் கொண்டு மன்னரும் மகிழக்கூடிய சுகவாழ்வு வாழ்ந்தார். குறிப்பிட்ட நேரத்தில் நிமிஷம் தவறாமல் ஸ்தானம், உணவு, பானம், நடை, வேலை, உறக்கம் முதலியன. ஆட்டுப் பால் என்றால் ஆடே உடன் பிரயாணம் செய்ய வேண்டும். பழங்கள், பருப்புகள் முறைப்படி தவறாமல் எக்காலத்திலுமுண்டு. பணிவிடையாட்கள் பல பேர். டாக்டர் எப்போழுதும் கூடவே பிரயாணமென்றால் தகுந்த முன்னேற்பாடு, பரிவாரங்கள், வேலையாட்கள், காரியதரிசிகள் உட்பட எவரும். 3 வது வகுப்பு வண்டி பிரயாணமென்றால் வண்டி முழுமையும் சில சமயங்களில் தனி இரயில்ககள் கூட. சென்ற இடங்களிலெல்லாம் அரண்மனையையொத்த விடுதிகள். பங்கி காலனியானாலும் முன்னதாகவே லட்ச ருபாய் செலவில் வசதிகள் செய்தபிறகு! நடக்கும் பொழுது கைலாகு கொடுத்துத் தாங்கி நடப்பவர்கள் பலர். எட்டியிருந்து பார்ப்பவர் சொல்வது இது. கிட்டவிருந்து பழகுபவர்கள் சொல்வது பலவிருக்கலாம்.


பெரியார் கதையென்ன? எளிய வாழ்வு என்று சொல்லிக் கொள்ளாமல், வறியவனும் வெறுக்கக்கூடிய வண்ணம் பாடுபடுகிறார். கிடைத்ததை உண்பதும், கண்டதைக் குடிப்பதும், கிடைக்காவிட்டால் பட்டினியுமே. ஸ்நானம் 4, 5- நாட்களுக்கு இல்லாமலே போனாலுமே போய்விடும். கூப்பிட்ட இடத்திற்குப் போக வேண்டியது. (பிறர்) நினைத்த நேரத்திலெல்லாம் தொண்டை காய்ந்து கால் கடுக்கும் வரையில் பேச வேண்டியது. 3-வது வகுப்புப் பிரயாணம்தான். ஆனால், மூச்சுவிடக்கூட இடமிருக்காத கூட்டம். தப்பித் தவறி மேல் வகுப்புக்குப் போனால் அங்கும் அப்பொழுதும் அதே அவஸ்தைதான். பரிவாரம் ஒன்றுமில்லை. தம் பையைத் தாமே தூக்கிக் கொள்ளவேணும். தளர்ச்சி அதிகரிக்க துணையாகச் சகா ஒருவர் இருவர் - இவ்வளவு தான். சென்றவிடயங்களில் அனேகமாய்த் தோப்போ, திடலோ, ரயிலடியோ அல்லது போகும் வண்டிதானோ! எங்காவது ஜாகை, சௌகரியமிருந்தால், அங்கும் 20-பேர் கூட்டம். உறங்க, ஓய்வெடுக்க இடமில்லாமல்! டாக்டர் என்றால் விரோதி. மருந்தென்றால் விஷம். வரவர இப்பொழுது தான், தன்னுடம்பும் தசை, நரம்புகளாலானதுதான் என்ற எண்ணமுண்டாகியது.


காங்கிரசில் முழுமையும் ஈடுபட்டு நடந்துவரும்பொழுது, காஞ்சீபுரம் மாநாட்டில் இந்த ஸ்தாபனத்தினால் தமிழருக்கு நலன் கிடைக்காது; திராவிடனுக்குத் தாழ்மையும், தீமையுந்தான் உண்டாகுமென்று இவரும், திரு.வி. கல்யாணசுந்தர முதலியாரும் கண்டு கொண்டார்கள். பெரியார் அதைவிட்டு அப்பொழுதே விலகினார். திரு. வி.க. - திருத்தலாமென்ற எண்ணங்கொண்டு அங்கே இருந்தார். அவருக்கும் பின்பு நினைவெல்லாம் கனவாகிவிட்டது. இருவரும் மறுபடியும் ஒன்று சேர்ந்துவிட்டார்கள். திராவிடஸ்தான் பிரிவினையிலும், இந்தியெதிர்ப்பிலும் இருவரும் ஒத்துழைக்கிறார்கள். வெற்றி கிடைக்குமென்ற நம்பிக்கை நம்பிக்கை அதிகரிக்கிறது. தென்னாடு தனிநாடாகி, தமிழும், தமிழனும் தழைத்து மகிழும் நாள் கிட்டுகிறது. ஆண், பெண் ஒவ்வொருவரும் தழைத்து மகிழும் நாள் கிட்டுகிறது. ஆண், பெண் ஒவ்வொருவரும்உணர்ச்சியுடனும் ஊக்கத்துடனும் செயல்புரிய வேண்டும். (20-11-1948)

                                            **********************************************                                         

                                             நம் மதிப்பிற்குரிய தலைவர் ஈ.வெ.இராமசாமி அவர்கள் தலைமையேற்று உயிர் நாடியாயிருந்து வேலை செய்துவரும் திராவிடர் கழகத்துக்குத் திராவிட நாட்டுப் பிரிவினையையே அதன் முக்கியக் கொள்கையாக அமைத்துவிட்டார். அதற்குப் பெருத்த ஆதரவு கிடைத்து விட்டதென்பதோடு, அதன் கொள்கையும் நன்கு பரவி, பொதுமக்களுடையவும், இதர அரசியல் ஸ்தாபனங்களைச் சேர்ந்தவர்களுடையவும் ஒருமித்த ஆமோதிப்பைப் பெற்றுவிட்டது மகிழ்ச்சிக்குரியதொன்றாகும்.

                                              *********************************************

சுதந்திரத் திராவிடத் தனியரசுக்குப் பெரியார் இராமசாமியவர்கள் பெரும் போராட்டம் துவக்கி நடத்தி வருகிறார்கள். பெரியாரோடு கருத்து வேறுபாடு கொண்டு நிற்போர்கூட, இந்த நிலையில் வினயமாக ஆலோசித்து சுதந்திரத் திராவிடத் தனியரசு பெற அவருடன் ஒத்துழைக்க முன்வர வேண்டியது அவசியம் (1947)

*******************************************************************************************************

நீண்ட காலம் வாழ்வாராக!

முன்னால் உயர்மன்ற நீதிபதி.
மலையாளம், M.கோவிந்தன். B.A.,B.L., 
(1929)


உலகத்திலுள்ள எல்லா மக்களும் ஒரே ஜாதியினர் என்று உபதேசித்த காலஞ்சென்ற பெரியார் ஸ்ரீநாராயண குருசாமி அவர்களால் இவ்வுண்மை மலையாளம் என வழங்கப்படும் நாட்டில் நன்கு உணரப்பட்டது. மக்கள் அனைவரும் சகோதரர்களென்பதே அவரது மதத்தின் சாரம். இவ்வுண்மையை உள்ளபடி நன்கு உணர்ந்த திரு.கே. அய்யப்பன் என்னும் பிறர்க்கென வாழும் வாலிபர், இவ்வுபதேசத்தைப் பரப்பி வருகின்றார்.


மேற்கு மலைத் தொடர்ச்சிக்குப் பக்கத்தே என் நண்பர் திரு.ஈ.வெ.இராமசாமியார் மற்றெவரையும் விட நன்றாக இவ்வுண்மையை உணர்ந்து, ஜாதி என்னும் பேயைப் போராடி ஒழிக்கத் தமது ஆயுள் முழுவதிலும் உழைக்கத் தயாராக முன்வந்துள்ளனர். திரு. இராமசாமியார் பலசாலி என்பது உங்கட்குத் தெரியும். சுதந்திரத்திற்காக நன்றாகப் போராடுபவர்.


வைக்கம் சத்தியாக்கிரக நாட்களில், யான் இவருடன் முதன்முதல் அறிமுகமானேன். வைக்கம் சத்தியாக்கிரகத்திற்கு இவரே உயிராக இருந்தார். அந்நீண்ட தொடர்ச்சியான போரைச் சித்தியேற்படும் படியான முடிவிற்குக் கொண்டு வந்துவிட்டுத் திரு. இராமசாமி சுயமரியாதை இயக்கத்தைத் துவங்கினார். ஏனைய நடவடிக்கைகளையும் அவர் நடத்தி வைத்தார். இவர் அழுத்தமான காங்கிரஸ்வாதியாகவும், ஒத்துழையாமையிலீடுபட்டவராகவும் இருந்தார். அரசியல் துறையில் அவர் ஆற்றிய சேவையைப்பற்றி நாங்கள் அவ்வளவு தெரிந்தவர்களல்ல. அவரது மனம், இப்போது மிகவும் முக்கியமான சமூதாயத்துறையிலீடுபட்டிருக்கிறது. கோட்டயத்தில் நடைப்பெற்ற எஸ்.என்.டி.பி. மாநாட்டில் 10.000- க்கு அதிகப்பட்ட மக்கட்கு இவர் சுயமரியாதை இயக்கத்தின் தத்துவங்களைப் பற்றிச் செய்த சொற்பொழிவை யான் கேட்டேன்.

சொற்பொழிவு எளியதாகவும், நேரானதாகவுமிருந்தது. அவரது வாயினின்றும் வந்த ஒவ்வொரு சொல்லும் உண்மையுணர்வோடு வந்தது. மிகக் கவனத்துடன் மக்கள் கேட்டனர். எனது சுயமரியாதை விதைகள் முளை கண்டிருந்ததானது, இவரால் போஷிக்கப்பட்டன. மிகுந்த விளைவு கட்டாயம் ஏற்படும். நல்ல காலத்திலேயே இவர் இங்குச் "சுயமரியாதை" இயக்கத்தைத் துவக்கினார். செல்வாக்குடையவர்கள் இவரைப் பின்பற்றுகின்றனரென்பதை, யான் பார்க்கிறேன்..... 

இந்நாட்டிலே களங்கமற்ற கோடிக்கணக்கான மக்களுக்குப் பிறப்பினால் ஏற்பட்டிருக்கும் அநீதியான தடை நீக்கவும், ஒவ்வொரு மனிதனும் யாதொரு தடையுமின்றி முன்னேற்றமடையச் சமயமும், வசதியுமளிக்கவும், நாகரிக உலகத்தால் எள்ளி நகையாடப் பாத்திரமாகவிருக்கும் தாழ்ந்த நிலைமையிலிருந்து இந்தியாவை முன்னேற்றவும் திரு. இராமசாமியார் சுயமரியாதை இயக்கத்தைத் துவங்கினார். முன்னரே அவ்வியக்கம் பரவி இம்மாகாணத்தின் பல பாகங்களில் வேரூன்றிவிட்டது. இப்போதிருக்கும் பொதுஜன இயக்கமென்பதையும் விட இவ்வியக்கம் நன்கு நடவடிக்கை எடுத்து வருகின்றது. மக்களைப் பிளவுப்படுத்தும் தடைகளையொழித்துச் சித்தி பெறுமென்பதும், மக்களை அய்க்கியப்படுத்துமென்பதும் திண்ணம்.



இயக்கத்தைச் சித்தியான முடிவுக்குக் கொணரப் பணியாற்றவும், ஒற்றுமைப்பட்ட இந்திய மக்களின் உன்னத நிலையைக் கண்டு களிக்கவும், திரு. ராமசாமியார் நீண்ட காலம் உடல் நலத்துடனும், வன்மையுடனும் வாழ்வாராக!


*************************************************************************************************

                           -------------------------------------நூல்:- சாமி சிதம்பரனார் எழுதிய “தமிழர் தலைவர்” நூலிலிருந்து 9 ஆம் பதிப்பு  பக்கம் 199-226 




30.5.15

அய்.அய்.டி.யில் அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டத்தைத் தடை செய்வதா?போராட்டம் வெடிக்கும்!-கி.வீரமணி

மொட்டைக் கடிதத்தை ஆதாரமாகக் கொண்டு  அய்.அய்.டி.யில் அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டத்தைத் தடை செய்வதா?
தடையை விலக்கிக் கொள்ளாவிட்டால்
பெரியார், அம்பேத்கரிஸ்டுகளை இணைத்து
மிகப் பெரிய போராட்டம் வெடிக்கும்!

தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை

சென்னை அய்.அய்.டி.,யில் மாணவர்கள் அமைப் பான அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்ட அமைப்பினை மொட்டைக் கடிதத்தின் அடிப்படையில் தடை செய் துள்ளதைக் கண்டித்தும், போராட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அறிவித்தும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார். அவரது அறிக்கை வருமாறு:

மீண்டும் குலக்கல்வித் திட்டமா?  பிஜேபி அரசின் அபாய அறிவிப்பு!  கிளர்ச்சி வெடிக்கும் - எச்சரிக்கை! தமிழர் தலைவரின் தணல் பொங்கும் அறிக்கை
சென்னை அய்.அய்.டி.,யில் படிக்கும் மாணவர்கள் அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டம் எனும் பெயரில் அமைப்பு ஒன்றை நடத்தி வருகின்றனர் (தொடக்கம் 14.4.2014). ஜாதி ஒழிப்பு, சமூகநீதி இவற்றை மய்யப்படுத்திக் கருத்துகளைப் பரிமாறிக் கொள்ளும் உயர் சிந்தனை அமைப்பு இது.
முக்கிய பதவிகளில் உயர்ஜாதியினர் - கீழ்மட்ட பதவிகளில் தாழ்த்தப்பட்டவரா?
இந்த அமைப்பு நடத்திய கூட்டம் ஒன்றில், எண்ணிக் கையில் சிறிய அளவு உள்ளவர்கள் முக்கியமான பதவி களைப் பெரும்பாலான அளவுக்கு ஆக்கிரமித்துக் கொண் டுள்ளார்கள் என்றும், அதேநேரத்தில் கீழ்மட்ட உடலுழைப் புப் பணிகளில் நூற்றுக்கு நூறு தாழ்த்தப்பட்டவர்களுக்கே ஒதுக்கப்படுகிறது என்றும் எடுத்துக் கூறியுள்ளனர்.
இதில் என்ன குற்றம்?
இதில் என்ன குற்றம் நேர்ந்துவிட்டது? இந்தப் பணியைத்தானே - பிரச்சாரத்தைத் தானே திராவிடர் கழகமும், சமூகநீதியில் அக்கறை உள்ள கட்சிகளும் செய்துவருகின்றன. இதில் சட்ட மீறலோ - வெறுப்போ எங்கே இடம்பெற்று இருக்கிறது?
மாட்டிறைச்சியும் -மதச்சார்பின்மையும்!
அதேபோல, மாட்டிறைச்சி தடை குறித்தும், மதச் சார்பின்மைக்கு விரோதமாக மத்திய ஆட்சி செயல்படுவது குறித்தும் துண்டறிக்கைகளை விநியோகம் செய்தார்களாம்.
இதிலும் குற்றம் காண இடம் எங்கே இருக்கிறது? நடப்பைத்தானே விமர்சித்து வருகிறார்கள்? மாணவர் களுக்குச் சமுதாய அக்கறை இல்லையா? கருத்துக் கூறும் உரிமை கிடையாதா?
மாணவர்களுக்குக் கருத்துச் சுதந்திரம் கிடையாதா?
ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தங்கள் முழு வாழ்க்கையையே ஒப்படைத்துக்கொண்டு ஓயாது உழைத்த தலைவர்கள் தந்தை பெரியார், பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கர் பெயரில் அமைப்பினை நடத்திட மாணவர்களுக்கு உரிமை கிடையாதா?
இந்தத் தலைவர்கள் எல்லாம் சமூக விரோதிகளா?
மனித உரிமைக்காகவும், சமத்துவத்துக்காகவும், சமூக நீதிக்காகவும் பாடுபட்ட தலைவர்கள் பெயரில் மாணவர் சமுதாயம் ஓர் அமைப்பை ஏற்படுத்துவது பாராட்டுக் குரியதே - சட்டப்படியும் சரியானதே!
மதவாதத்தைத் தூண்டும் ஆர்.எஸ்.எஸின் துணை அமைப்பான ஏபிவிபி செயல்படலாம்; பெரியார் அம்பேத்கர் பெயரில் முற்போக்குச் சிந்தனை அமைப்புகள் செயல்படக்கூடாதா?
மொட்டைக் கடித அடிப்படையில் தடை போடுவதா?
இதுகுறித்து மொட்டைக் கடிதம் ஒன்றை மத்திய மனித வள மேம்பாட்டுத் துறைக்குக் கடிதம் எழுதியுள்ளனராம். அதன் அடிப்படையில் அம்பேத்கர் - பெரியார் பெயரில் உள்ள அமைப்புத் தடை செய்யப்பட்டுள்ளது.
இது மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கதாகும். முதலாவதாக கையொப்பம் போடாத மொட்டைக் கடிதத்தை ஆதாரமாகக் கொண்டு நடவடிக்கை எடுப்பதே சட்ட விரோதமும், நியாய விரோதமும், நடைமுறை விரோதமும் ஆகும்.
விளக்கம் கேட்காதது ஏன்?
அதுமட்டுமல்ல; ஓர் அமைப்பைத் தடை செய்வதற்கு முன் சம்பந்தப்பட்ட அமைப்பின் பொறுப்பாளர்களிடம் விளக்கம் கேட்டிருக்கவேண்டும்.
இரண்டையும் பின்பற்றாமல் நியதிகளுக்கு விரோதமாக மனித வள மேம்பாட்டுத் துறையும், அய்.அய்.டி. நிருவாகமும் நடந்துகொண்டுள்ளது என்பது மிகவும் வெளிப்படையாகும்.
இந்த நடவடிக்கைமூலம் என்ன தெரிகிறது? அம்பேத்கர் பெரியார்  அமைப்பு மிகவும் தேவை என்பதைத்தான் புலப் படுத்துகிறது. அய்.அய்.டி.,யும், மனித வள மேம்பாட்டுத் துறையும் சமூகநீதிக்கும், மதச்சார்பின்மைக்கும் விரோதமாக நடந்துகொண்டுள்ளது. அதேநேரத்தில், அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டம் சட்டப்படியான சமூகநீதிக்கும், மதச்சார்பின்மைக்குமாகப் பாடுபடுகிறது என்பது விளங்கவில்லையா?
தடையை உடனே நீக்குக! - இன்றேல் போராட்டம்!
மனிதவள மேம்பாட்டுத் துறை - அம்பேத்கர் பெரியார் பெயரால் அமைந்த வாசகர் வட்டத்தின்மீதான தடையை உடனே விலக்கிக் கொள்ளவேண்டும்; இல்லையெனில், திராவிடர் மாணவர் கழகம்  ஒத்த கருத்துள்ள பிற அமைப்புகளின் தலைவர்களையும், மாணவர்களையும் கூட்டி, இணைந்து உரிய வகையில் போராட்டத்தை முன்னெடுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தந்தை பெரியார், பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கர் சிந்தனையாளர்களுக்கு, சமூகநீதி அமைப்புகளுக்கு விடப்பட்ட மிகப்பெரிய சவாலாக இதனைக் கருத வேண்டும். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் இந்நாட்டின் பெரும்பான்மையினர் ஆவர். அவர்களுக் கான சவாலை எதிர்கொள்வோம்.
வாழ்க தந்தை பெரியார்!
வாழ்க பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கர்!!

     ------------கி.வீரமணி,  தலைவர்,  திராவிடர் கழகம். சென்னை 30.5.2015



Read more: http://www.viduthalai.in/e-paper/102352.html#ixzz3bchI0URo

29.5.15

கோர்ட்டில் பிரமாணம் - பெரியார்

கோர்ட்டில் பிரமாணம் - பெரியார்




மேஜிஸ்ட்ரேட்: (சாட்சியைப் பார்த்து) உன் பேரன்ன?

சாட்சி: என் பேர் சின்னசாமிங்கோ.

மே: உன் தகப்பன் பேர் என்ன?

சா: என் தகப்பன் பேர் பெரியசாமிங்கோ.

மே: உன் வயது என்ன?

சா: என் வயசு 36ங்கோ.

மே: உன் மதம் என்ன?

சா: இந்து மதமுங்கோ.

மே: உன் ஜாதி என்ன?

சா: சாதியா?

மே: ஆமா.

சா: சாமி குடியான சாதிதாங்கோ.

மே: சரி, சத்தியமாய்ச் சொல்கிறேன் என்று சொல்லு.

சா: சத்தியமாச் சொல்றேனுங்கோ.

மே: நீ இப்ப சத்தியம் செய்திருக்கிறே, உண்மையைச் சொல்ல வேணும், எது உனக்கு நல்லா தெரியுமோ எதை நீ கண்ணில் பார்த்தாயோ அதைத்தான் சொல்ல வேண்டும். இல்லாவிட்டால் தண்டனை கிடைக்கும் தெரியுமா?

சா: சாமி அப்படியே ஆகட்டுங்கோ. நான் நேர்லே பார்த்ததைத்தான் சொல்லணுமே? காதுலே கேட்டதைக்கூட பெரியவங்க சொன்னதைக்கூட சொல்லக் கூடாதா சாமி?

மே: நேரில் பார்த்ததை மாத்திரம் சொல்லு தெரிந்ததா?

சா: தெரிஞ்சிகிட்டேஞ் சாமி. அப்பளையே (அப்பொழுதே) நாஞ் சொன்னதெயெல்லாம் அடிச்சுப் போடுங்கோ.

மே: எதை அடிக்கிறதுடா?

சா: சாமி பின்னே நாஞ் சொல்லல்லே, எம்பேரு எங்கப்பம் பேரு எம்பட வயசு அதல்லாந்தா.

மே: அதையெல்லாம் நான் எதற்காக அடிப்பது?

சா: எசமாங்கோ "நேர்லே பார்த்ததுதான் சொல்லணு, காதுலே கேட்டது சொல்லக் கூடாது, சத்தியம் பண்ணி இருக்கிறே, பாக்காதது சொன்னா தெண்டிச்சிப் போடுவே" எண்ணு சொன்ணீங்களே. நம்முளுக்கு எனத்துக்குங்கோ அந்த வம்பெல்லாம்.

எங்கப்பெ என்னைப் பெக்க பாடுபட்டதெ பாத்தனா? எங்கம்மாதா என்னைப் பெத்ததெ பாத்தனா? எம்பட வயசைத்தான் நானு எண்ணிகிட்டு வந்தெனா? நமக்கு நேர்லெ ஒணுந் தெரியாது சாமி. நானும் ஒரு எளவையும் பாக்கில்லை. அடீங்கோ! அடீங்கோ!! எளிதினதை எல்லாம் அடிங்கோ. அல்லாத்தையும் அடிங்கோ.

மே: அதைப் பற்றியெல்லாம் ஒன்றும் இல்லை. கேசைப் பற்றித்தான் கேட்கப் போகிறேன். அதைப் பற்றி நீ பார்த்ததைச் சொல்லு.

சா: அந்த எளவே நமக்கு வாண்டாம். நம்மொ பாக்காத சங்கதி நம்மாலெ ஒண்ணுஞ் சொல்ல முடியாது. அப்பறம் நாளைக்கு ஒருத்தெ கேப்பானுங்கோ, எதிரி வக்கீலு உனக் கெப்படி தெரியும் எம்பான். அப்பரம் கடசீலே எல்லாம் தகராரா வந்து சேரும். அடீங்கோ! அடீங்கோ!! நாஞ் சொன்னதை யெல்லாம் அடீங்கோ!!! இல்லாவிட்டா நாம் போறே வெளியிலே.

மே: டேய் என்ன? ரம்ப குறும்பு பண்ணுகிறாய். கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு, இல்லாவிட்டால் உன்னை தண்டித்து விடுவேன். நீ யென்ன பலே போக்கிரியாய் இருக்கிறயே.

சா: இல்லைங்க சாமி! நீங்கத்தானே பாத்ததெச் சொல்லூண்ணு சொன்னீங்கோ!

மே: உஸ். கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு.

சா: சரி கேளுங்க சாமி. நாம் பாத்ததையும் கேட்டதையும் சொல்லிப்புட்டு போறேன்.

மே: இந்தக் கேசில் உனக்கு என்ன தெரியும்?.

சா: நான் கடவீதிக்குப் போனே, போனனா? கருப்பன் சுப்பனெ அடிக்கப் போனான். அப்போ கருப்பந் தம்பி "அடிடா சுப்பனை வந்தது வரட்டும். மேசத்திரட்டு சுப்பய்யனுக்கு 100 ரூ கொடுத்தா பேசாத உட்டுடுறான்" எண்ணு சொன்னான். கருப்பந் தம்பி ரங்கன் "அடிடா பார்க்கலாம் மேசத்திரட்டு பொண்டாட்டி பாகிரதிகிட்டே 200 ரூ கொடுத்து உன்னை ஆறு மாசம் தண்டிக்கச் சொல்லி மண்ணு செமக்க வைக்கிறேம் பாரு. மின்ன எத்தனையோ தடவை கொடுத்து இருக்கிறேன்" எண்ணு சொன்னா.

பெரிய காத்தடிச்சது கண்ணுலெ மண்ணை ரப்ராப்லெ இருந்ததுங்கோ. கண்ணெ இருக்கி மூடிக்கிட்டே. அப்பறம் என்ன நடந்ததுண்ணு தெரியாதுங்கோ. இப்ப இரண்டு பேரும் பணத்தை வச்சிகிட்டு எசமாங்க ஊட்டுலே காத்து கிடக்கிறாங்களாம்! அம்புட்டுத்தா எனக்குத் தெரியுஞ் சாமி. இதை எளுதிக்கிங்கோ அப்பறம் என்னமோ பண்ணிக்கிங்கோ.

மே: என்ன உளறுகிறாய்?

சா: நானா உளர்ரே. ஊர்லெ சாமி அல்லாரும் அப்படித்தா பேசிக்கிறாங்கோ. என்ன பண்ணுனாலும் மேசத்திரட்டுக்கு பணம் கொடுத்தா உட்டுடுவாங்கோண்ணு கொஞ்சம் பேறா பேசராங்கோ. மேசத்திரட்டு பொண்டாட்டிகிட்டே பணங் கொடுத்தா ஆரையும் தண்டிக்கப் பண்ணலாமுண்ணு பேசராங்க. அம்புட்டுத்தான் நம்முளுக்குத் தெரியும். நா ஒண்ணும் ஔரலே.

கடைசியாக மேஜிஸ்ட்ரேட்டு ஒன்றையும் எழுதிக் கொள்ளாமல் சாட்சியை அதட்டினதற்கு ஆகவும் மரியாதை இல்லாமல் பேசினதற்கு ஆகவும் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு கேசை ராஜி செய்துவிடும்படி கெஞ்சி சாட்சியை வீட்டிற்கு வரச் சொன்னார்.

----------------------1.9.1935 குடிஅரசு இதழில் சித்திரபுத்திரன் என்ற புனைப் பெயரில் தந்தைபெரியார் அவர்கள் எழுதிய  சுவையான உரையாடல்

28.5.15

தாழ்த்தப்பட்ட மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்-பெரியார்



என் மீதோ, எனது இயக்கத்தைப் பற்றியோ எந்தவிதக் குறையும் கண்டுபிடிக்க முடியாததன் காரணமாக அவர்களின் வண்டவாளங்கள் வெளியாகின்றதே என்ற ஆத்திரத்தினால் ஏதேதோ பொய்ப் பித்தலாட்டமான பிரச்சாரங்களை எல்லாம் கிளப்பி விட்டு இருக்கின்றனர். 


 எல்லா ஜாதி மக்களிலும் சில புல்லுருவிகள் 4  அணா கொடுத்தால் சொன்னபடி எல்லாம் ஆடும் எச்சக்கலை ஆட்கள் இருப்பது போல ஆதித்திராவிடர்களிலேயே சில எச்சக்கலை ஆசாமிகளைப் பிடித்து தவறாக நோட்டீஸ்கள் போட்டு உள்ளார்கள். இது கண்டு அந்த ஆதித்திராவிட மக்களும் நம்பி விட மாட்டார்கள். இப்படிப்பட்ட பித்தலாட்டப் பிரச்சாரங்களை எல்லாம் கண்டு நான் பதில் சொல்ல வேண்டியதில்லை. கழகத் தோழர்கள் எல்லோரும் கூறினார்களே, அதுவே போதும். 


திராவிடர் கழகமானது இந்த நாட்டில் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக ஆற்றிய தொண்டு இன்றைய இளைஞர்களுக்கு என்ன தெரியப் போகின்றது? 50-ஆண்டுகளுக்கு முன் தாழ்த்தப்பட்ட மக்கள் நிலை எவ்வாறு இருந்தது? இன்றைய நிலை எப்படி உயர்ந்து உள்ளது? என்று ஒப்பிட்டுப் பார்க்கும் வயதானவர்களுக்குத்தான் தெரியும். இன்றைய இளைஞர்கள் - இன்றைய நிலை போலத்தான் அன்றைக்கும் இருந்ததாக எண்ணிக் கொண்டு இருப்பார்கள். நான் பள்ளியில் படிக்கும்போது வண்ணார், நாவிதர் வீட்டுப் பிள்ளைகள் கூட, தனியாகத் தாழ்வாரத்தில் அமர்ந்துதான் படிக்க வேண்டும். அவர்களுக்கே இப்படி என்றால் ஆதித்திராவிடர்களைப் பற்றிக் கேட்கவும் வேண்டும்? 


 வீதியில் நடக்க முடியாதவர்களாக, நல்ல உடை உடுத்தவோ, உணவு உண்ணவோ முடியாதவர்களாக கல்வி, உத்தியோகம் பெறக் கூடாதவர்களாக இருந்த நிலையானது இன்றைக்கு மாறி அவர்களும் மனிதத் தன்மையுடன் நடத்தும்படியான நிலை யாரால் ஏற்பட்டது என்பதை மக்கள் அறிவார்கள்.

 

எனவே, ஆதித்திராவிடர் மக்கள் இப்படிப்பட்ட கீழ்த்தரமான பிரச்சாரங்களுக்கு எல்லாம் செவி சாய்க்க மாட்டார்கள் என்பதும் எங்களுக்குத் தெரியும்.

 தாழ்த்தப்பட்ட மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். 

               -----------------------தந்தைபெரியார் -”விடுதலை” 18-12-1961

27.5.15

பார்ப்பனரிடத்தில் உயர்ந்த பண்புகள் நம்மைவிட என்ன இருக்கிறது?-பெரியார்

மக்கள் மீது மடமையை ஏவி, ஏமாற்றிப் பிழைத்தது இனியும் செல்லாது!




அன்பர்களே, நான் ஆரியர் - திராவிடர் என்ற வேற்றுமைகளையும் அதன் காரணமாக நாட்டிலேயுள்ள மடமைகளையும் எடுத்துக் கூறினால் நம்மிலே மிகப் பெரியவர்கள் என்று கருதப்படும் சிலர் ஆரியராவது திராவிடராவது என்று அலட்சியம் செய்கின்றனர். நான் கூறுகிறேன் பார்ப்பனர் உயர்ந்த ஜாதி என்பதால்தானே அவர்கள் பாடுபடாமலேயே கஷ்டப்படாமலேயே சுகம் அனுபவிப்பதும், அதே சமயத்தில் பாடுபட்டும், கஷ்டப்பட்டும், வரி கொடுத்தும், சுருங்கக் கூறின் நாட்டின் வாழ்வுக்கு அஸ்திவாரமான காரியங்களைச் செய்து வரும் நாட்டுக்குரியவர்களாகிய நமது இனத்தவர்கள் அதாவது திராவிடர்கள் - சூத்திரர் என்ற காரணத்தால் இழிவு படுத்தப்பட்டு வருகிறோம். இதைத்தவிர பார்ப்பனரிடத்தில் உயர்ந்த பண்புகள் நம்மைவிட என்ன இருக்கிறது? 
  
 
இவ்வித வித்தியாசங்கள் ஒழிய வேண்டும் என்று எங்களை விட வேறு யார் கவலைப்பட்டு வருகிறார்கள். அக்காலத்திலேயிருந்த ஆழ்வார்களோ, நாயன்மார்களோ, மகான்களோ, கவலைப்படாதிருந்தார்கள் என்பது மட்டுமல்ல, இக்காலத்திலும் அதற்கு யார் பாடுபடுகின்றனர்.
 
  
கம்யூனிஸ்டுகள் என்போர் ஏதோ சில பணக்காரர்களைத் திட்டவதும், அதிலே கஷ்டப்படும் தொழிலாளி ஜே போடுவதையுந்தான் பொதுவுடமை என்று இந்நாட்டிலே கருதப்படுகிறதேயன்றி, பார்ப்பனர்களில் மட்டும் ஏன் பாடுபடும் தொழிலாளி இல்லை என்பதற்குக் காரணங்கள் என்ன கற்பிக்கப்பட்டுள்ளன என்பதைக் கண்டுபிடித்து அவைகளை ஒழித்து யாவரும் சரிநிகர் சமானமாயிருக்க வழி வளர செய்தார்களா? 
 
 
 
சோஷலிஸ்டுகள் தானாகட்டும், உண்மையிலேயே, மக்கள் சமூதாயத்திலே சமதர்மம் நிலவ வேண்டுமானால் அதற்கானவற்றை செய்தார்களா? ஏதோ காங்கிரசின் பலம் சரியாதிருக்க அதற்கு முட்டுக் கொடுக்கும் வஸ்துக்கள் போலவே இந்நாட்டு சோஷலிசமும் இருந்து வருகிறதேயன்றி அதனின் உண்மைத் தத்துவம் வளர்க்கப்படுகிறதா? 
 
  
தீவிரவாதிகளெனப்படும் கம்யூனிஸ்டு - சோஷலிஸ்டுகளின் நிலையே இவ்வாறு இருக்கும்போது நாம் காங்கிரசாரைப் பற்றி கூறத் தேவையேயில்லை.
 
 
 
ஆனால், இவர்களுக்கெல்லாம் மக்களின் உண்மையான விடுதலைக்கு ஏற்ற மார்க்கங்கள் எவை எவை என்பது தெரியாததா? தெரிந்தும் ஏன் இவ்வாறு நடக்கின்றனர் என்றால் பொது மக்களிடத்திலே செல்வாக்கு இருக்காது. ஓட்டு வராது. அரசைக் கைப்பற்ற முடியாது என்று கருதியே பொது மக்களின் காதுக்கினிய வார்த்தைகளைக் கூறி அவர்களது கருத்தை அழிய வைக்கின்றனர்.
 
ஆனால் திராவிடர் இயக்கமானது கேவலம் பட்டம், பதவி, சட்டசபை வேலை, அதற்காக ஓட்டு ஆகியவைகளை லட்சியம் செய்யாமல் மனித சமூதாயத்திலே வளர்ந்துள்ள மடமையை ஒழிக்க சற்ற கடினமான மருந்து கொடுத்து வருகிறோம். நாங்கள் மக்களின் எதிர்ப்புக்கும், அதனால் ஏற்பட்ட பெரும் கஷ்ட நஷ்டங்களுக்கும், அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கும் ஆளாகியதால்தான் இன்றைய நிலையிலாவது மக்கள் ஓரளவுக்க அறிவு பெற்ற வருவதோடு, நான் எந்த கொள்கைக்காக காங்கிரசை விட்டு வெளியேறினேனோ அது இன்று மக்கள் சமூதாயத்திலே வேறுன்றி விட்டது. 
  
 
அச் சக்தியை இனி, எவராலும் அசைக்க முடியாது; அழிக்கவும் முடியாது; அழிக்கவோ, அசைக்கவோ முற்படுபவர்கள் யாராவராயிருப்பினும், கடவுளாயிருந்தாலுங்கூட தாங்களாகவே தங்களுக்கு அழிவு தேடிக் கொண்டவர்களாவார்களென்பதை எடுத்தக்காட்ட விரும்புகிறேன்.
 
 
 
மடைமையை மக்கள் சமூதாயத்திலே பரப்பி ஏமாற்றிப் பிழைத்து வந்த கூட்டத்தினர் மீது அவர்களால் கற்பிக்கப்பட்ட கடவுள் - ஜாதி - மதம் - புராணம் - இதிகாசங்கள் மீது இன்று மக்களுக்கு அவ்வளவு வெறுப்புணர்ச்சி ஏற்பட்டு விட்டது என்பதை பார்ப்பனீயத்தை ஆயுதமாகக் கொண்ட ஒவ்வொருவரும் உணர்ந்து விரைவில் தங்களைத் திருத்திக் கொள்ள வேண்டுகிறேன். 
 
 
 
இனி எங்களை வகுப்பு வாதிகள், தேசத் துரோகிகள், கடவுள் துரோகிகள் என்று எவரும் கூற முடியாது ஏன்? 
 
 
இதுவரை, வகுப்பு வித்தியாசங்களைப் பிறவியின் பேரால் தனிப்பட்ட உரிமையை, ஜாதியின் பேரால் சலுகையை அடைந்துவந்த பார்ப்பனர்களே இந்நாட்டில் வகுப்புவாதிகளாயிருக்கின்றனர். வகுப்புவாதம் நம் நாட்டிலே தலைவிரித்தாடுவதற்குக் காரணமே பார்ப்பனர்கள்தானென்று நமது நிதி அமைச்சர் கனம் கோபால் ரெட்டியார் அவர்கள் சட்டசபையில் பார்ப்பன அம்மையார் ருக்குமணி லட்சுமதி அவர்கள் கேட்ட கேள்விக்கு விவரமாகப் பதிலளித்துள்ளதை நேயர்கள் அறிந்திருப்பீர்கள்.
 
 
அவர் மட்டுமல்ல; மற்றொரு அமைச்சர் கனம் பக்தவச்சலம் கூட "இதுவரை பார்ப்பனர்கள் தங்கள் வகுப்பின் நலனுக்காக தனி உரிமையைப் பெற்று வாழ மிக சாமர்த்திமாக வகுப்புவாதத் தன்மையுடன் நடந்து கொண்டு அதே சமயத்தில் மற்றவர்களை வகுப்புவாதிகள் என்று கூறி வந்துள்ளனர்" என்று சில நாட்களுக்கு முன் சென்னை மவுண்ட்ரோட் சர்க்கார் மாளிகையிலே நடைபெற்ற பத்திரிகை செய்தியாளர்கள் மாநாட்டிலே கூறியிருக்கிறார். 
 
 
 
இவ்விதமாக காங்கிரஸ் மந்திரிகளும் பொதுவாக மக்களும், உணர ஆரம்பித்துவிட்டனர். யார் வகுப்புவாதிகளென்பதை. 
 
 
 
அதே போன்று கோயில் - மடங்கள் ஒழிய வேண்டுமென்று நான் கூறி வந்த போது என்னையும் எங்கள் இயக்கத்தாரையும் நாத்திகர்கள் என்று கூறி நாட்டிலே எங்களுக்குப் பொல்லாப்பை உண்டாக்கியப் பார்ப்பனர்களே! நீங்கள் இனி அத்துறையிலும் மக்களை ஏமாற்ற முடியாது. சர்க்காரே அச்சட்டத்தைக் கொண்டு வர முனைந்துவிட்டனர். முன்னாள் பிரதமர் ஓமத்தூரார் ஆட்சியின் கடைசி கட்டத்தில் கொண்டு வரப்பட்ட கோயில் - மட சொத்து பாதுகாப்பு மசோதாவின் போது பார்ப்பனர்களும் அவர்களின் கையாட்களான இரண்டொரு திராவிட விபீஷணர்களும் கொடுத்தத் தொல்லை எவ்வளவு? இதை நாட்டினர் அறிந்ததுதானே! எனினும் மக்களிடத்தில் அம்மசோதாவுக்கு பேராதரவு இருந்து வருகிறதென்பதைப் பார்க்கும்போது எங்களைக் கோயில் - மட எதிரிகள் என்று கூறி எங்களது கொள்கைக்கு அழிவுதேட எவராலும் முடியுமா? 
 
 
 
எனவே, நான் கூறிவந்த கொள்கைகள் இனி ஒவ்வொன்றாக நடைபெற்றாக வேண்டிய கால நிலையை நாடும் மக்களும் அடைந்து விட்டனர். காலமாறுதல் மனப் புரட்சி என்னும் வேகத்திலே பழமையெனும் பித்தலாட்டங்கள் இனி எதிர்த்து நிற்க முடியாது என எச்சரிக்கிறேன்.
 
 
 
----------------------------------------தாராபுரத்தில் தந்தை பெரியார் அவர்கள் 13-04-1949 அன்று ஆற்றிய சொற்பொழிவு. "விடுதலை" 19-04-1949

26.5.15

என்னைப் பற்றி - பெரியார்

என்னைப் பற்றி...  



பெரியார் ஈ.வெ.ரா.


நான் ஏறக்குறைய சுமார் 50– ஆண்டு காலமாகவே பார்ப்பன மேல் ஜாதி மக்கள் என்பவர்கள் - சட்டப்படி - சாஸ்திரப்படி - மதத்தின்படி என்று தாங்கள் அடைந்திருக்கும் வசதியையும், உயர்நிலையையும் பார்ப்பனரல்லாத "கீழ் மக்கள்" நலனுக்குக்கேடாகப் பயன்படுத்தும் வாய்ப்பை ஒழிக்க வேண்டுமென்று பாடுபட்டு வருகிறேன். என்னுடைய பிராதன ஒரே தொண்டு இது தான். இனியும் என் வாழ்நாள் வரையிலும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிற தொண்டும் இது தான். இவ்வளவு நாள் வரையிலும் பாடுபட்டும், இந்த நாட்டுப் பார்ப்பனரல்லாத மக்களுக்கு பார்ப்பனரால் ஏற்பட்டு வருகிற கொடுமைகள் அவர்கள் தலையெடுக்கவொட்டாமல் அழுத்தப்பட்டு வருகிற "துணிச்சலான அநீதிகள்" ஒரு குறிப்பிடத்தகுந்த அளவுக்காவது, குறைந்திருக்கின்ற அளவு நிலைத்திருக்குமா? என்று சொல்ல முடியாது. 



                             ---------------------அய்க்கோர்ட் அவதூறு வழக்கில் தந்த அறிக்கை.

*********************************************************************************

நான் சாதாரண ஆள்தான் என்றாலும், இன்றைய மந்திரிகள் போன்றவர்களை விட எவ்வளவோ மேலானவன்; உலகம் சுற்றியவன்; பூணர பகுத்தறிவாதி; சொத்து சம்பாதிக்க வேண்டிய அவசியமில்லாதவன்; சொந்தத்திற்கும் பணம் சேர்க்க வேண்டிய தேவையில்லாதவன்; ஜாதி உணர்ச்சி, ஜாதிப்பற்று இல்லாதவன்; என்ன செய்தாவது ஜாதியை ஒழிக்க வேண்டும் என்பவன். 



70- ஆண்டு கால அனுபவம், 30- ஆண்டு வியாபார அனுபவம்.1915-16,17,18,19- வரை ரிஜிஸ்தர் செய்யப்பட்ட ஈரோடு வியாபாரச் சங்கத் தலைவன். தெ.இ.வியாபாரச் சங்க நிர்வாக சபை அங்கத்தினராக இருந்தவன். 5- ஜில்லாவுக்கு இன்கம்டாக்ஸ் டிரிபியூனல் கமிஷனர்கள் மூவரில் ஒருவனாக இந்திய கவர்ன்மெண்டாரால் நியமிக்கப்பட்டவன். 




ஈரோடு டவுன் ரீடிங்ரூம் செக்ரட்டரி, பழைய மாணவர் சங்க செக்ரட்டரி, ஹைஸ்கூல் போர்டு செக்ரட்டரி, பிறகு தலைவர்.1914- ஆம் ஆண்டு நடந்த கோவை ஜில்லா காங்கிரசு மாநாடு செக்ரட்டரி, 10- ஆண்டு ஆனரரி மாஜிஸ்ட்ரேட், ஈரோடு தாலுக்கா போர்ட் பிரசிடெண்ட் பல வருடங்கள் ஈரோடு முனிசிபல் சேர்மென். ஜில்லா போர்டு மெம்பர்; வாட்டர் ஓர்க்ஸ் கமிட்டி செக்ரட்டரி, பிளேக் கமிட்டி செக்ரட்டரி, கோவை ஜில்லா 2-வது சர்க்கிள் தேவஸ்தான கமிட்டி செக்ரட்டரியாக 10- ஆண்டு, பிறகு 1929- வரை வைஸ்பிரசிடெண்ட்; பிரசிடெண்ட், 1918- ஆம் ஆண்டு உலக யுத்தத்தில் ஆனரரி ரெக்ரூட்டிங் ஆஃபீசர்; 1918- ஆம் ஆண்டு யுத்தத்தில் தாலுகா, ஜில்லா அரிசி கண்ட்ரோலில் கவர்மெண்டாரின் நிர்வாகி; அதாவது, அரிசி கண்ட்ரோலில் கவர்ன்மெண்டாருக்கு வரும் அரிசி வாகனங்களின் ரசீதுகளை வாரம் ஒவ்வொரு தாலுக்காவிலிருந்தும் 15, 20- டன் வீதம் எனக்கே கொடுத்து மற்ற வியாபாரிகளுக்கு விநியோகிக்கும்படி ஜில்லா கலெக்டர் கேட்டுக் கொள்ளும் டிஸ்டிரிபியூட்டிங் ஆஃபீசர்; கார்னேஷன் கமிட்டி செக்ரட்டரி; காங்கிரசிலும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செக்ரட்டரி தலைவர்; காதிபோர்டு (ஃபவுண்டர்) அமைப்பாளராக இருந்ததோடு, 5- வருடம் தலைவராக இருந்த போது எனக்குச் செயலாளராக டாக்டர் டி.எஸ்.எஸ்.ராஜன், கே. சுந்தானம், எஸ்.ராமநாதன், கே.எம்.தங்கபெருமாள், அய்யாமுத்து முதலியவர்கள் இருந்தார்கள். 



இவைகள் ஒருபுறமிருக்க, 1940, 42- இல் 2- வைஸ்ராய்கள்; 2- கவர்னர்கள் என்னை அழைத்து மந்திரிசபை அமைக்க வேண்டினார்கள். ராஜாஜியும் வேண்டினார். நான் மறுத்து விட்டேன்.



1919- ஜீலையில் நான் ஜில்லா தாலுக்கா போர்ட் மெம்பர் சேர்மென் முதலிய பதவியை ராஜிநாமா கொடுத்த காரியம் பேப்பரில் வெளியானவுடன் லோகல் அண்டு முனிசிபல் போர்டு கவுன்சில் மெம்பர் பி.ராசகோபாலாச்சாரியார் அவர்கள் ஈரோடு வந்து, "என்ன ராமசாமி நாயக்கரே! இப்படி முரட்டுத்தனமான வேலை செய்து விட்டீரே! உமக்குப் புத்தியில்லையா?" என்றார். அவர் பக்கத்தில் கெரோசின் ஆயில் டீலர்ஸ் ஏஜெண்ட் கோவிந்தாச்சாரி இருந்தார். உடனே நான் வணங்கி, "நான் என்ன செய்து விட்டேன்" என்று கேட்டேன். அவர் தனது மனைவியைப் பார்த்து "அம்மா இவருக்குச் சொல்லு" என்று சொல்லி விட்டு மௌனமாக இருந்துவிட்டார்.



அந்த அம்மையார், "அய்யர் உங்களுக்கு, நீங்கள் உங்கள் முனிசிபாலிடியில் தண்ணீர்க் குழாய் ஏற்படுத்தியதற்காக "ராவ்பகதூர்" கொடுப்பது என்று சிபாரிசு பண்ணியிருக்கிறார். உங்கள் கலெக்டர் ராவ் சாகிப் தான் சிபாரிசு செய்தார். அய்யர் ராவ்பகதூர் என எழுதி கவர்னருக்கு ஃபைல் போய் இருக்கிறது. நீங்கள் இப்படி அய்யருக்கு அவமானம் செய்துவிட்டீர்களே; இது சரியில்லை" என்று சொன்னார். நான் பல காரணங்களைக் கூறி மறுத்து விட்டேன். 




நான் காங்கிரசுக்கு விரோதி என்று ஆனபிறகுங்கூட, ஆச்சாரியார் என் வீட்டிற்கு வந்தும் என்னை (காங்கிரசில் சேராமல், கதர் போடாமல்) சட்டசபைக்கு நாமினேஷன் போட ஃபாரம் நீட்டிக் கையெமுத்து கேட்டார். நான் மறுத்து விட்டேன். 41- இல் மந்திரிசபை அமைக்க ஒப்புக் கொள்ளும்படி சொன்னார். நான் கவர்னர் கவர்னர் ஜெனரல் ஆகியவர்கள் இடமெல்லாமல் மந்திரிசபை அமைக்க மறுத்து விட்ட பிறகு, என்னை அழைத்து மந்திரிசபை அமைக்கும்படியும், நான் விரும்பினால் தானும் ஒரு மந்திரியாயிருந்து எனக்கு உதவியும், காங்கிரசுக்கு ஆதரவும் தருவதாயும் சொன்னார். நான் மறுத்து விட்டேன். 




போதும், இவ்வளவு எடுத்துக் காட்டுவகற்கே நான் மிகமிக வெட்கப்படுகிறேன். தறுதலைகளும்! பொறாமைக்காரர்களும்! சொந்த எதிரிகளும்! இதன் மூலம் ஒரு பொது மனிதன் என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டுமோ அதைவிட்டு விட்டு குற்றம் குறை சொல்ல வழி காணத்துடிக்கிறார்கள்.




இருந்தாலும், நான் ஏன் 'வெட்கம்' என்பதை விட்டு விட்டு இவ்வளவு எடுத்துக்காட்டுகிறேன் என்றால், துரோகம் செய்து அயோக்கியனாய் வாழ வேண்டிய அவசியம் எனக்கு எந்தக் கட்டத்திலும் வந்ததில்லை என்பதை எடுத்துக் காட்டவேயாகும். எல்லாத் துறைகளிலும் எனக்கு இந்த மந்திரிகளுக்குச் சிறிது கூட குறையாத அனுபவமும், திறமையும் உண்டு என்பதைக் கூறவுமேயாகும். ஒன்றை ஒப்புக் கொள்கிறேன். 




அதாவது, நான் பல விஷயங்களில் அறிவுக்குறைவு உள்ளவனாக இருக்கக் கூடும்; பல தவறுகள் செய்திருக்கக் கூடும்; இன்றைய கருத்தில் இருந்து நாளை மாறுதல் அடையக்கூடும்; பல கருத்துக்களை மாற்றியும் இருக்கிறேன். இவைகள் எல்லாம் எனது கண்ணியமான அனுபவம் ஆராய்ச்சியைக் கொண்டே இருக்குமே தவிர, பணம் சேர்க்கவோ, பதவி பெறவோ, வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ளவோ, பெரிய ஆள் ஆகவோ, இழிவை மறைத்துக் கொள்ளவோ, கடுகளவு கூட காரணம் கொண்டதாய் இருக்காது. 




அதாவது, ஒரு பண்டம் கைநழுவி விழுந்து உடைந்து போவதற்கும், 
உடைக்க வேண்டுமென்றே கருதி கீழே போட்டு உடைப்பதற்கும் உள்ள பேதம் போன்றதாகும். இப்படிப்பட்ட என்னை இந்நாட்டு விடுதலைக்கு குறுக்கே இருந்தவன், துரோகம் செய்தவன் என்று சொல்லும் போது, எவ்வளவு "மன உரம் இருந்தாலும் நிதானம் தவறத் தூண்டுகிறது". 
அந்த நிதானம் தவறிய சொற்கள் தான் மேலே என்னைப் பற்றிக் குறிப்பிட்டவையாகும். பொருத்தருள்க.



இன்னமும் சொல்கிறேன், நான் வெள்ளையன் வெளியேறுவதற்குக் குறுக்கே இருந்திருந்தாலும்,  இந்திய சுதந்திரத்திற்கு நான் துரோகம் செய்தது உண்மையாக இருந்திருந்தாலும், இந்தப் பாவிகள், மாபாவிகள் ஆதிக்கத்திற்கும் அதனால் ஏற்பட்ட வடநாட்டான் சுரண்டல் ஆட்சிக்கும் இடம் கொடுத்து அடிமையாக்கி அதனால் பணமும் பெருமையும் சம்பாதிக்கும் சுயநலம் கொண்டல்ல.
 *********************************************************************************

சட்டசபையும் மந்திரி பதவியும் பார்ப்பானிடத்திலும் வடநாட்டானிடத்திலும் இருப்பதால் இன்றைய மந்திரிகள் இதை ஆதரித்து இவைகளை மக்களிடம் பரப்ப கங்காணிகளாக இருக்கிறார்களேயொழிய மற்றபடி அவர்கள் சொந்தப் புத்தியிலா? தேசபக்தியிலா? பொது நல உணர்ச்சியிலா? சொல்லட்டுமே! அமெரிக்க ரஷ்யநாட்டு நீதிபதிகள் முன்னிலையிலோ அரசியல் நிபுணர்கள் முன்னிலையிலோ சொல்லட்டுமே பார்ப்போம். பல நாட்டு அரசியல் தலைவர்கள் மந்திரிகள் இங்கு வருகிறார்களே - அவர்களிடம் இந்த தக்ளி ராட்டினம் பஞ்சுப்பட்டை போடுதல் கதர் நெசவு கை நெசவு - அடிப்படைப் பள்ளிகள் - இவைகளைக் கொண்டுபோய்க் காட்டி விசிட்டர் புத்தகங்களில் கையெழுத்து வாங்கட்டுமே பார்ப்போம். உலகில் எங்குமேயில்லாத காட்டுமிராண்டிகள் ஆட்சி எந்த நாட்டிலுமே இல்லாத பார்ப்பன பனியா துரோகிகள் ஆதிக்கம் ஒரு பர்மாவும் பாகிஸ்தானும் ஒரு இலங்கையும் ஒரு ஆஃப்கானிஸ்தானமும் ஒரு நேப்பாளமும் வெள்ளையனை விரட்டிவிட்டுச் சகமாக வாழும்போது திராவிடர் நாடாகிய தமிழ்நாடு பார்ப்பன ஆதிக்கத்தை விரட்டிவிட்டு சுதந்திரமாக வாழ முடியாதா? 

                                                     ----------------------------------யார் துரோகிகள்.

******************************************************************************

என் அபிப்பிராயத்தை மறுக்க உங்களுக்கு உரிமையுண்டு. ஆனால் என் அபிப்பிராயத்தை வெளியிட எனக்கு உரிமை உண்டு.
                                               -------------------------------------------பகுத்தறிவு 1935

*********************************************************************************

திராவிடர்களிடையில் எனக்குக் கெட்டபேர் வளர்கிறது என்று கூடச் சிலர் சொன்னார்கள். எனக்கு இந்தவிதமான உணர்ச்சிக்கு இடமில்லாத, மானத்தைப் பற்றிக் கவலைப்படாத, திராவிட மக்களிடையில் நல்ல பெயர் வாங்க வேண்டுமென்ற கவலை சிறிதுமில்லை. அப்படிப் போலி நல்ல பெயரின் மீது என் வாழ்வு ஏற்பட்டிருக்கவில்லை. திராவிட மக்களுக்கு ஏதாவது தொண்டாற்ற வேண்டும். அதில் முதன்மையானதாய் திராவிடன் இழிவு நீங்க வேண்டும் என்கிற ஆசையும், கவலையும் தவிர, வேறு ஒன்றுமே எனக்குக் கவலையாக இல்லை. எனக்கு வேறு அடைய வேண்டிய சாதனமும் இல்லை. இன்று திராவிடனுக்கு உள்ள இழிவு என்னவென்றால், அவன் சூத்திரனாகவிருக்க வேண்டியிருக்கும் "இந்து"வாக இருப்பதைத் தவிர வேறில்லை.
                                                         ----------------------------------இன இழிவு ஒழிய....

*********************************************************************************


இந்த காலத்து இளைஞர்கள் மனம் என் மீது வெறுப்புக் கொள்ளாது. வெறுப்புக் கொண்டு விடுமானாலும் கூட நான் அதற்கு அஞ்சவில்லை. இனி வருங்கால இளைஞர்கள் பாராட்டுவார்கள்; பாராட்டாவிட்டாலும் இன்று நான் சொன்னதைப் பின்பற்றி வீரத்தோடு, மான வாழ்வு வாழும் வழியில் இருப்பார்கள். சரியாவோ, தப்பாகவோ நான் அதில் உறுதி கொண்டிருப்பதால் எனக்கு எக்கேடு வருவதானாலும் மனக்குறையின்றி, நிறைமனதுடன் அனுபவிப்பேன் - சாவேன் என்பதை உண்மையாய் வெளியிடுகின்றேன்.

                                                       --------------------------------------------------- குடிஅரசு


*********************************************************************************


என்னைப் பொறுத்தவரையில், என்னைப் பின்பற்றி நடந்து வருபவர்கள் புத்திசாலிகளாய் இருக்க வேண்டுமென்ற கவலை எனக்கு ஒரு சிறிதும் கிடையாது. தங்கள் அறிவை, ஆற்றலை மறந்து என் லட்சியத்தை நிறைவேற்றிக் கொடுக்கக் கூடிய ஆட்கள் தான் எனக்குத் தேவையே ஒழிய, அவர்கள் புத்திசாலிகளா? முட்டாள்களா? பைத்தியக்காரர்களா? கெட்டிக்காரர்களா? என்பதுபற்றி எனக்குக் கவலை இல்லை.



இந்தச் சந்தர்ப்பத்தில் எனது மதிப்பிற்குரிய நண்பர் பா.வே. மாணிக்கநாயக்கர் அவர்கள் கூறியது எனது ஞாபகத்திற்கு வருகிறது. அவர் ஈரோட்டில் எக்சிகியூட்டிவ் எஞ்சினீயராய் இருந்தபோது அவர் எங்கள் வீட்டில் குடியிருந்தார். மாடுகளுக்குச் சுலபமாய் இழுக்கக்கூடிய புதுமாதிரியான கவலை ஒன்று செய்யத் தனக்கு இரண்டு கொல்லர்களைத் தருவித்துக் கொடுக்கும்படி சொன்னார். நான் யோசித்து இரண்டு கெட்டிக்காரக் கொல்லர்களின், அதாவது துப்பாக்கி செய்யக் கூடியவர்கள் பெயரைக் குறிப்பிட்டு அவர்களை அழைத்து வரும்படி என் காரியஸ்தர்களுக்குக் கூறினேன்.





அப்போது அவர் சொன்னார், "கொல்லன் கெட்டிக்காரன் என்பவர்களை அனுப்பி வைப்பாயானால், அவர்கள் இருவருக்குள்ளும் கெட்டிக்காரத்தனப் போட்டி வேலையைக் கெடுத்துவிடும். அவர்களே எனக்கு யோசனை சொல்ல முந்துவார்கள். என் திட்டம் ஆட்டம் கொடுத்து வேலை நடவாது. ஆகவே, சொல்வதைப் புரிந்து கொண்டு அதன்படி வேலை செய்யக்கூடிய ஒரு படிமானமுள்ள சொன்னபடி நடக்கக்கூடிய, இரண்டு சம்மட்டியும், கத்தியும் பிடித்துப் பழகிய ஆளை அனுப்பி வைத்தால் போதுமானது. அவர்கள் முட்டாள்களாயிருந்தாலும் சரி; அவர்களைக் கொண்டு சுலபத்தில் வேலையை முடித்து விடலாம் என்று கூறினார். 




புத்திசாலிகள் சண்டையிட்டுக் கொள்வது எப்போதுமே இயற்கைதான். ஆகவேதான், நான் நீடாமங்கலம் மாநாட்டின் போதே மிகத் தெளிவாகக் கூறியிருக்கிறேன். என்னைப் பின்பற்றுகிறவர்கள் தங்கள் சொந்த பகுத்தறிவைக் கூட கொஞ்சம் தியாகம் செய்ய வேண்டுமென்று. யாராவது ஒருத்தன்தான் நடத்தக்கூடியவனாக இருக்க முடியுமே தவீர, எல்லோருமே தலைவர்களாக இருக்க முடியாது. மற்றவாகள் தலைவர் இட்ட கட்டளைப்படி நடக்க வேண்டியவர்கள்தான். தோழர்களே! நான் இப்போது கூறுகிறேன். நீடாமங்கலத்தைவிட ஒருபடி மேல் செல்லுகிறேன். 




நீங்கள் இந்த இயக்கத்தில் உள்ளவரை உங்கள் சொந்த பகுத்தறிவை மட்டுமல்ல, உங்கள் மனசாட்சி என்பதைக் கூட நீங்கள் கொஞ்சம் மூட்டைக் கட்டி வைத்துவிட வேண்டியதுதான். கழகத்தில் சேரு முன்பு நீங்கள் உங்கள் பகுத்தறிவு கொண்டு கழகக் கோட்பாடுகளை எவ்வளவு வேண்டுமானாலும் ஆராய்ந்து பார்க்கலாம். என்னுடன் வாதாடலாம். உங்கள் மனசாட்சி என்ன கூறுகிறது என்றும், என்னுடைய தன்மை எப்படிப்பட்டது என்றும் நீங்கள் எவ்வளவு காலத்திற்கு வேண்டுமானாலும் ஆர அமர இருந்து யோசித்துப் பார்க்கலாம்!





ஆனால், எப்போது உங்கள் மனசாட்சியும், பகுத்தறிவும் இடங் கொடுத்து நீங்கள் கழகத்தில் அங்கத்தினர்களாகச் சேர்ந்துவிட்டீர்களோ; அப்போதிலிருந்து உங்கள் பகுத்தறிவையும், மனச்சாட்சியையும் ஒருபுறத்தில் ஒதுக்கி வைத்துவிட்டு கழகக் கோட்பாடுகளைக் கண்மூடிப் பின்பற்றி நடக்க வேண்டியதுதான் முறை. 




ஒரு எஜமான் வேலைக்காரனைப் பார்த்து, 'அந்தப் பெட்டியைக் கொஞ்சம் எடப்பா' என்று கூறினால், 'என் மனசாட்சி என்னை அதற்கு அனுமதிக்கவில்லையே' என்று கூறினால், அது முறையாகுமா? ஒரு டிஸ்டிரிக் சூப்ரண்டென்டெண்ட் 'சுடு!' என்று போலீஸ்காரனுக்கு உத்தரவுபோட, அவன் 'என் மனசாட்சி அதற்கு இடங்கொடுக்கவில்லையே' என்று கூறினால் அந்த சூப்ரண்டென்டெண்ட் கதி என்னாவது? கசாப்புக்கடையில் வேலை பார்க்க ஒப்புக் கொண்டவன், 'அந்த ஆட்டை வெட்டுடா' என்று எஜமான் உத்தரவு விடும்போது, 'அய்யோ என் மனசாட்சி மாட்டேன் என்கிறதே நான் என்ன செய்யட்டும்?' என்று கூறினால், 'ஏண்டா மடப்பயலே! முன்னாடியே உனக்கு இது தெரியாமற் போனதேனடா? அப்போது உன் மனச்சாட்சி எங்கேயடா போயிருந்தது?' என்று கேட்பானா, இல்லையா அவனை? 





ஆகவே, மனச்சாட்சியோ, சொந்தப் பகுத்தறிவோ, கழகக் கொள்கையை ஒப்புக் கொள்ள மறுக்குமானால், உடனே விலகிக் கொள்வது தான் முறையே ஒழிய, உள்ளிருந்து கொண்டே குதர்க்கம் பேசித் திரிவது என்பது 'விஷமத்தனமே' ஆகும் என்பதைத் தெரிவித்துக் கொள்ள ஆசைப்படுகிறேன்.





சிலருக்கு நான் ஏதோ சர்வாதிக்காரம் நடத்த முற்படுகிறேன் என்று தோன்றலாம். இது ஓரளவுக்குச் சர்வாதிகாரம்தான் என்பதையும் ஒப்புக் கொள்கிறேன். ஆனால், தோழர்களே நீங்கள் சிந்திக்க வேண்டும். "இந்தச் சர்வாதிகாரம் எதற்குப் பன்படுகிறதென்று? என்னுடைய சர்வாதிகாரத்தைக் கழக இலட்சியத்தின் வெற்றிக்காக; பொது நன்மைக்காகப் பயன்படுத்துகிறேனே ஒழிய, எந்த சிறு அளவுக்கும் எனது சொந்தப் பெருமைக்காகவோ, ஒரு கடுகளவாவது எனது சொந்த நன்மைக்காகவோ பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதை நீங்கள் ஆராய்ந்து பார்த்துத் தெரிந்து கொள்ள வேண்டுகிறேன். 


              -------------------------1948 இல் நடந்த தூத்துக்குடி மாகாண மாநாட்டில் தலைமையுரை, "குடிஅரசு" - 29-05-1948.


********************************************************************************


'கையை வெட்டினாலொழிய பிழைக்கமாட்டாய்' என்று டாக்டர் சொன்னால் வெட்டிவிடச் சம்மதிக்கிறோம். 'காலை வெட்டினால் ஒழிய பிழைக்கமாட்டாய்' என்றால், காலை வெட்டிவிடச் சம்மதிக்கிறோம். மலஜலம் கழிக்க வேறு ஓட்டை போடவேண்டமென்றால், போட்டுக் கொண்டு அதில் மலஜலம் கழிக்கிறோம். எடுத்துவிட வேண்டுமென்றால், கருப்பையை எடுத்துவிடச் சம்மதிக்கிறோம். இன்னும் முக்கிய உறுப்புகளை, முக்கிய பண்டங்களை இழந்தாவது உயிர் வாழச் சம்மதிக்கிறோம்.





அப்படியிருக்க, ஒரு அயோக்கியக் கூட்டம் நம்மை ஜெயித்து அடிமையாக்கி, தங்களுக்கு அடிமை என்கிற தத்துவம் கொண்ட ஒரு கொள்கையை நம்மீது பலாத்காரத்தாலும், தந்திரத்தாலும் புகுத்தி, இழிவபடுத்தி வைத்திருப்பதை ஒழிக்க வேண்டும் என்றால், இதற்கு இவ்வளவு யோசனை, எதிர்ப்பு, தயக்கம், வெட்கம் என்றால், இந்த இழிவு (சூத்திரத்தன்மை) எப்பொழுதுதான் எந்த வகையில்தான் மறைவது? என்று கேட்கிறேன். என் மீது கோபிப்பவர்கள் இதற்குப் பரிகாரம் சொல்லாமல் கோபித்தால், அவர்களை வெறும் வெறியர்கள் என்றுதானே அறிவாளிகள் சொல்லுவார்கள்? 


                                                                     ---------------------------------------- "குடிஅரசு" - 1947
*******************************************************************************



'சூத்திரன்' என்கிற பட்டம் இழிவு என்று கருதுகிறவர்களுக்குத் தான் நான் இந்த யோசனை சொல்கிறனே ஒழிய, சூத்திரப் பட்டத்தைப் பற்றிக் கவலையில்லை என்பவர்களுக்கு இதைச் சொல்லுவதில்லை.



சூத்திரப் பட்டத்தைப் பற்றிக் கவலைப்படுகிறவர்களையும்கூட, சூத்திரப் பட்டம் ஒழிய வேறு வழி இருந்தால் சொல்லுங்கள் என்று கேட்டுவிட்டுத்தான் நான் இதைச் சொல்லுகிறேனே தவிர, மற்றபடி அவசரப்பட்டு ஆணவத்தால் இதைச் சொல்லவில்லை.



                                                     ------------------------------------------ "குடிஅரசு" - 1947.


*********************************************************************************



வைத்தியத்திலேயே இரண்டு முறை சொல்லுவார்கள்.


1. Physician's Cure

2. Surgeon's Cure



அதாவது, மருந்து கொடுத்து வியாதியை சொஸ்தப்படுத்துவது ஒருமுறை. கத்தியைப் போட்டு அறுத்து ஆபரேஷன் செய்து நோயாளியைப் பிழைக்க வைப்பது இன்னொருமுறை.




என்னைப் பொறுத்தவரையில் நான் நோயாளி செத்துப் போனாலும் பரவாயில்லை. நோய்க்குக் கஷ்டமில்லாமல் மருந்து மட்டுமே கொடுத்து சொஸ்தப்படுத்தலாம் என்று கருதுபவன் அல்ல.




நோயாளிக்குக் கஷ்டம் ஏற்பட்டாலும் பரவாயில்லை, அவன் சாகக் கூடாது என்று கருதி, அறுத்து ஆபரேஷன் செய்யும் இரண்டாவது முறையில் நம்பிக்கை உள்ளவன். எனது இலட்சியமெல்லாம் கஷ்டமாக இருந்தாலும் ஆள் பிழைக்க வேண்டும் என்பதுதான்.




நம்முடைய தோல் அப்படி லேசான தோல் அல்ல. 2,000- 3,000 
வருஷங்களாக தடித்துப்போன கெட்டியான தோல், அதில் உறைக்க வேண்டுமென்றால், சிறிது கடினமாகத்தான் சொல்லியாக வேண்டும். உங்கள் நாட்டு மக்களைப் பாருங்கள். உலகத்தையும் பாருங்கள், சிந்தியுங்கள், பரிகாரம் தேடுங்கள்!
********************************************************************************
--------------------- நூல்:- சாமி சிதம்பரனார் அவர்கள் எழுதிய ”தமிழர் தலைவர்” பக்கம் 11-18