Search This Blog

7.8.09

கிருஷ்ணஜெயந்தி கொண்டாடுவோரே சிந்திப்பீர்!




இரண்டு புரட்டுகள்!


அர்ஜுனன்:


சகேசீனாம், நிகேசீனாம் காகதி புருஷோத்தமா!

கிருஷ்ணன்: அஹம் சந்யாசி ரூபேணாம், புரோஷ்டிதாம் தனஞ்செயா! இதன் பொருள்.

அர்:


ஹே புருஷோத்தமா! தலையில் மயிருடனும், மயிரில்லாமல் மொட்டைத் தலையுடனும் இருக்கும்படியாய் நீ செய்திருக்கின்ற விதவைகளுக்கு என்ன கதி?

கிரு:

ஹே அர்ஜுனா! நானே சந்நியாசியாக பூமியில் அவதரித்து அவர்களின் ஆசையை பூர்த்தி செய்வேன்.

அர்:

ஹே கிருஷ்ணா! உன்னை ஒரு பொய்க் கடவுளென்று சொல்லி விட்டுப் பிறகு நீ இப்படிச் செய்தாய், அப்படிச் செய்தாய், கண்ட ஸ்திரீகளுடன் கலந்தாய், உதைபட்டாய், அடி பட்டாய், அழுவாரற்ற பிணமாய் செத்தாய் என்றெல்லாம் எழுதி வைத்திருக்கின்றார்களே. இதைப்பற்றி உனக்குச் சிறிதும் அவமான மில்லையா?

கிரு:


ஹே அர்ஜுனா! அதைப்பற்றி நீ சிறிதும் கவலைப்பட வேண்டாம். இதெல்லாம் எனது திருவிளையாடலென்றும் இவற்றைப் படித்த கேட்ட ஒவ்வொருவரும் இதனைக் கொண்டாட வேண்டுமே ஒழிய குற்றம் சொன்னால் பாவமென்றும், நரகமென்றும் அவற்றை எழுதின அவர்களே எழுதி இழிவை அடக்கி விட்டார்கள். ஆதலால் நமக்கு ஏன் கவலை?

அர்:

கிருஷ்ணா! அதுதான் போகட்டும். நம்ப முடியாத அநேக பொய்யையும், புளுகையும் சொல்லி நீ சின்னக் குழந்தையாயிருக்கும்போது பெரிய முலையை உறிஞ்சி சூப்பையாக்கி விட்டாயென்றும், மலையை சுண்டு விரலால் குடையாய்ப் பிடித்தாய் என்றும், 10 ஆயிரம் பெண்களை ஏககாலத்தில் கலந்தாய் என்றும் இப்படியெல்லாம் எழுதி இருக்கின்றார்களே, இந்தப் புளுகுகளை எவன் நம்புவான்?

கிரு:

ஓ அர்ஜுனா! அதைப்பற்றியும் நீ கவலைப்படாதே! ஏனென்றால் அந்தப்படியெல்லாம் எழுதினவர்கள் இவற்றையெல்லாம் எவன் நம்பவில்லையோ அவன் நாஸ்திகன் என்றும் அவனை அரசன் தண்டிக்க வேண்டுமென்றும் அரசன் தண்டிக்காவிட்டாலும் அவன் நரகத்துக்குப் போக வேண்டும் என்றும் எழுதி மக்களை மிரட்டி பயப்படுத்தி வைத்திருக்கிறார்கள். ஆதலால் எவனும் தைரியமாய் தான் இவற்றை நம்புவதில்லை என்று வெளியில் சொல்ல வரமாட்டான்!

அர்:
அதென்ன கிருஷ்ணா! பாவம் என்றாலென்ன? நரகம் என்றால் என்ன? எனக்கு ஒன்றும் புரியவில்லையே?

கிரு:

அந்தப்படி புரியாமலிருக்கிறதாகவே பார்த்துத்தான் சொல்லியிருக்கின்றார்கள்.

அர்:

அதென்ன, புரியாததைச் சொன்னால் என்ன பயன்?

கிரு:

ஒருவனுக்குத் தெரியாததையும், புரியாததையும் சொன்னால் தான் மனிதர்கள் பயப்படுவார்கள்! புரியும்படியானதாக எதைச் சொன்னாலும் திருப்பிக் கேட்க ஆரம்பித்து விடுவார்கள். ஆதலால் தான் அது செய்தால் பாவம், இது செய்தால் பாவம், நினைத்தால் பாவம் என்றெல்லாம் மிரட்டி வைத்திருக்கிறார்கள்.

அர்: இந்த மாதிரி எத்தனை நாளைக்கு ஏமாற்ற முடியும்?

கிரு:

முடிந்த வரையில் முடியட்டும்.

அர்:

இந்தப் புரட்டு வெளியாய்விட்டால் அப்புறம் என்ன செய்வது?

கிரு:

அப்புறம் வேறு புரட்டை உண்டாக்கிக்கொள்ள அவர்களுக்குத் தெரியும்.

அர்:

அதென்ன புரட்டு?

கிரு:

அரசியல் புரட்டு.

அர்:

அதுவும் வெளியாகி விட்டால்...?

கிரு:

அதற்குள் பார்த்துக் கொள்வோம். இந்த இரண்டு புரட்டும் மண்டுகள் நிறைந்த இந்தியாவுக்கு சுலபத்தில் வெளியாய்விடவா போகின்றது?

அர்:

சுயமரியாதைக்காரர்கள் இந்த இரண்டையுமே சேர்த்து வெட்ட வெளியாக்கிக் கொண்டு வருகின்றார்களே சீக்கிரத்தில் வெளியாய் விடாதா?

கிரு:

அவர்களால் சுலபத்தில் முடியாது. ஏனென்றால் இந்த இரண்டு புரட்டின் மேல் தங்கள் வாழ்வையே ஏற்பாடு செய்துகொண்ட அநேகர் சுயமரியாதைக்காரர்களுக்குள்ளாகவே இருக்கிறார்கள். அந்தப்படி மீறி அவர்கள் எல்லாம் தங்கள் வாழ்க்கைக்குக் கேடு வந்தாலும் வரட்டுமென்று துணிந்து கட்டுப்பாடாய் வேலை செய்தாலுங்கூட அது தமிழ்நாட்டிலும், மலையாளத்திலும்தான் செல்லும், இந்தியாவில் மற்ற பாகங்கள் எவ்வளவோ இருக்கின்றன!

அர்:

எப்படியானாலும் என்றைக்கிருந்தாலும் இந்த இரண்டு புரட்டுக்கும் ஆபத்து ஆபத்துத் தான்!

கிரு:

அந்தக் காலத்தில் பார்த்துக் கொள்ளலாம். நடந்தவரை நடக்கட்டும்.


------------------12.5.1945 "குடிஅரசு" இதழில் சித்திரபுத்திரன் என்ற புனை பெயரில் தந்தை பெரியார் அவர்கள் எழுதியது

0 comments: