Search This Blog

21.9.14

காலத்தைத் தாண்டி சிந்தித்தவர் பெரியார்! - 2

காலத்தைத் தாண்டி சிந்தித்தவர் பெரியார்!

புதிய தலைமுறை தொலைக்காட்சிக்குத் தமிழர் தலைவர் பேட்டி


காலத்தைத் தாண்டி சிந்தித்தவர் பெரியார் என்று தமிழர் தலைவர் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி வருமாறு:


பெரியாருடைய தனி மனித நாணயம்!

அதுமட்டுமல்ல, பெரியாருடைய தனி மனித நாணயம் இருக்கிறதே, பின்னாளில் அவருடைய இயக்கத்திற்கே ஒரு பெரிய உடைமையாக ஆகக்கூடிய சிறப்பு அம்சமாக ஆகிவிட்டது.

அதில் ஒரு சிறப்பான செய்தி என்னவென்றால், வெங்கட்ட நாயக்கர் மண்டி என்று அவருடைய தந்தை பெயரில் மஞ்சள் வியாபாரம் ஈரோட்டில் நடைபெற்ற அந்தக் காலகட்டத்தில், இவருக்கு மாற்றி விடுகிறார்கள். இவர் துடிப்பான இளைஞர் என்பதனால், பள்ளிக்கூடத்திற்கே அதிகம் செல்லாதவர் என்கிற காரணத்தினாலும், வியாபாரத்தையே நன்றாகப் பழகிக் கொண்டவர் என்கிற காரணத்தினாலும். இவர் நாணயமான வியாபாரத்தை எல்லோரிடத்திலும் செய்துகொண்டிருந் தார். அவருடைய தந்தையார் கையெழுத்தை, வியா பாரத்திற்காக போடுவது என்பது அப்போது சர்வ சாதாரணமானது. மண்டி அவர் தந்தையார் பெயரில் இருந்தது; பிறகுதான் ராமசாமி நாயக்கர் மண்டி என்று மாறியது. அப்பொழுது பெரியார் அவர்கள் தந்தையார் கையெழுத்தைப் போட்டுவிட்டார். இவரைப் பிடிக்காத வர்கள் அரசாங்கத்திற்கு புகார் கடிதம் அனுப்பி விட்டார்கள். போர்ஜரி என்று புகார் செய்திருந்தனர்.


அப்பொழுது பிரிட்டிஷார் அரசாங்கம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. போர்ஜரி என்பது பெரிய கிரிமினல் குற்றமாகும். பலரும், உங்களுடைய பையன் நிச்சயமாக சிறைச்சாலைக்குச் செல்வான் என்று பெரியாருடைய தந்தையாரிடம் சொல்லி பயப்படுத்தி விட்டார்கள்.


சிறைச்சாலைக்குச் செல்வது என்பது அந்தக் கால கட்டத்தில் பெரிய அவமானமாகக் கருதக்கூடிய பருவம். அந்தக் காலகட்டத்தில் பெரியாரை இதிலிருந்து காப்பாற் றவேண்டும் என்று கவலைப்பட்ட அவர் தந்தை, ஒரு பிரபல அய்யங்கார் வக்கீலை வைத்து, பெரியார் சிறைச்சாலைக்குச் செல்லாமல் தடுக்கவேண்டும் என்று நினைத்த நேரத்தில்,
பெரியார் அவர்கள் இதனைப்பற்றி கவலைப்படாமல், இந்த வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுதே, தன்னுடைய கட்டிலில் படுத்துக்கொள்ளாமல், கீழே படுத்து உறங்கினார். ஏன் என்று கேட்டதற்கு, சிறைச் சாலைக்குச் சென்றால், நான் கீழேதானே படுக்கவேண்டும்; அதை இப்பொழுதிருந்தே பழகிக் கொள்கிறேன் என்றார்!


அந்த வழக்கிற்காக பிரபலமான வழக்குரைஞரை  பெரியாருடைய தந்தையார் அமர்த்தினார். அந்த வழக்குரைஞர் தந்தை பெரியாரிடம், அந்தக் கையெழுத்தை நீங்கள் போடவில்லை என்று சொல்லி விடுங்கள். அது போதும் உங்களை காப்பாற்றிவிடுவேன், என்னுடைய வாதத் திறமையாமல் என்று சொல்கிறார்.


எந்தவிதமான தண்டனை கொடுத்தாலும் நான் ஏற்றுக்கொள்கிறேன்

அந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்ற நேரத்தில்,  தந்தை பெரியார் அவர்கள் எனக்காக வழக்குரைஞர் வாதாடவேண்டாம்; நீங்கள் கேள்வி கேளுங்கள், நான் பதில் சொல்கிறேன் என்று வெள்ளைக்கார நீதிபதியிடம் சொல்கிறார். கையெழுத்தை நீங்கள் போட்டீர்களா? என்று நீதிபதி கேட்டவுடன்.


ஆமாம், நான்தான் போட்டேன். எங்கள் அப்பா  கையெழுத்தை நான் போடவில்லை என்று மறுக்க மாட்டேன். இது வழமையாக நடப்பதுதான். எல்லா வியாபாரத்திலும் நடப்பதுதான். அதனால் யாருக்கும் எந்த விதமான நட்டமும் இல்லை. மண்டி அவருடைய பெயரில் இருந்ததால், வரவு - செலவிற்காக அதனை நான் செய்தேன். தவறு செய்யவேண்டிய கெட்ட எண்ணம் எனக்கு எதுவும் கிடையாது. நான் போட்ட கையெழுத்தை நான் மறுக்க மாட்டேன். எந்தவிதமான தண்டனை கொடுத் தாலும் நான் ஏற்றுக்கொள்கிறேன் என்று சொன்னார்.


அந்த வெள்ளைக்கார நீதிபதி வியந்து சொன்னார், இவரால் எந்தவிதமான நட்டமும், இந்தக் கையெழுத் தினால் இல்லை. தவறான நோக்கத்துடனோ, சட்டத்தை துஷ்பிரயோகம் செய்யவேண்டிய வகையிலோ இல்லை. ஆகவே, இவரை விடுதலை செய்கிறேன் என்றார். ஆகவே, எந்தக் காலகட்டத்திலும் பெரியார் அவர்கள் சொன்ன சொல்லை, நாணயத்தை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று நினைத்ததே கிடையாது.


காங்கிரஸ் இருந்தபொழுது 1920 ஆம் ஆண்டு  நடைபெற்ற ஒரு சம்பவம்; பெரியார் அவர்கள் காங்கிரசில் இருந்தபொழுது,  காந்தியாரின் சீடராக, பெரியார் மாறு கிறார். தீவிரமான காங்கிரசுகாரராக இருக்கிறார். அப் பொழுது நீதிமன்றத்தை பகிஷ்கரிக்கவேண்டும் என்பது காங்கிரசின் திட்டமாக இருந்தது. கடன் கொடுத்ததால் புரோநோட் எழுதி வாங்கியது. 50 ஆயிரம் ரூபாயை திரும்பப் பெறுவது தொடர்பாக,


குறுக்குவழியில் நான் போகமாட்டேன்; நான்  நாணயத்தை மீறமாட்டேன்


சேலம் விஜயராகவாச்சாரியார் என்பவர் மிகவும் பிரபலமானவர். காங்கிரஸ் தலைவர்களில் மிகவும் முக்கியமானவர். ராஜகோபாலாச்சாரியாருடன் இருந்தவர். அவர் சொல்கிறார், நாயக்கரே நீங்கள் வசூல் செய்ய வில்லை என்றால் பரவாயில்லை, எனக்கு அதிகாரம் கொடுங்கள்; என் பெயருக்கு மேடோவர் (Made Over) மாற்றிவிடுங்கள்; நான் வசூல் செய்துகொள்கிறேன் என்று சொல்கிறார். உடனே பெரியார் அவர்கள், எப்பொழுது நாம் கோர்ட்டைப் புறக்கணிக்கிறோம் என்று நாம் தீர்மானமாக எடுத்திருக்கிறோமே, பிறகு எனக்குப் பதில் நீங்கள் வசூல் செய்யலாம் என்று சொன்னால், அது ஏமாற்றுவதுபோல, குறுக்குவழியில் நான் அப்படி போகமாட்டேன். நான் நாணயத்தை மீறமாட்டேன், பணம் போனால் போகிறது என்று சொன் னவர். ஆகவே, எல்லாத் துறையிலும் அவரு டைய உழைப்பு, அவருடைய அறிவு நாணயம், அவருடைய சிந்தனை வந்ததினால், இந்த இயக்கம் பதவிக்குப் போகாத ஒரு இயக்கம். நாணயம், ஒழுக்கத்தோடு எது மனதில் படுகிறதோ, அதை சொல்லவேண்டும் என்கிற நினைப்பு, அதற்காகப் போராடுவது, அவருடைய காலத் திலேயே அவர் சொன்ன கொள் கைகள் வெற்றிகரமாக ஆகக்கூடுவ தாக ஆகி, சுயமரியாதைத் திருமணத் திற்குச் சட்ட வடிவம், பெண்களுக்குச் சொத்துரிமை, படிப்புரிமை இவை களையெல்லாம் பார்த்த ஒரு தலைவர், ஒரு மிகப் பெரிய எதிர்ப்பையும் சந்தித்து, அதன்மூலமாக மிகப்பெரிய அறுவடையையும், கொள்முதலையும், விளைச்சலையும் செய்தவர் ஒரே தலைவர் தந்தை பெரியார் அவர்கள், ஒப்பற்ற சுயமரியாதைத் தலைவர் ஆவார்.

அறிவுப் பற்று; மானிடப் பற்று மட்டும்தான் எனக்குண்டு


பெரியாருடைய பார்வையில் இன்றைய நிலைமை என்ன?


பெரியாருடைய பார்வை என்பது முழுக்க முழுக்க மனிதாபிமானத்தை அடிப்படையாகக் கொண்ட பகுத்தறிவு பார்வை. வெறும் பகுத்தறிவுக்காக, பகுத்தறிவு என்பது அல்ல. மனிதநேயத்தையும், மனிதாபிமானத்தையுமே மய்யப்படுத்திக் கொண்டிருக்கின்ற ஓர் அற்புதமான பார்வை. அவருக்கு எதுவாக இருந்தாலும், அவர் தெளிவாகச் சொன்னார், எனக்கு எந்தப் பற்றும் கிடையாது. எனக்கு மொழிப் பற்று, நாட்டுப் பற்று, ஜாதிப் பற்று, மதப்பற்று, கடவுள்பற்று கிடையாது. ஒரே ஒரு பற்று உண்டு. அறிவுப் பற்று; மானிடப் பற்று இதுதான் எனக்கு உண்டு என்று சொன்னார். இவரைவிட தலைசிறந்த மனிதநேயத் தலைவரை வரலாற்றில் எளிதில் பார்க்க முடியாது.
அதனால்தான் தனது முழுச் சொத்தையும் பொது மக்களுக்கே விட்டுச் சென்றார், அறக்கட்டளை மூலம்.

அதுமட்டுமல்ல,  பூரண பகுத்தறிவுவாதியாகவே தன்னை உருவாக்கிக் கொண்ட காரணத்தினாலே, அவர் எல்லாவற்றையும் இந்த அளவுகோலை வைத்துத்தான் பார்த்தார். வளர்ச்சி என்பதும் சரி, தளர்ச்சி என்பதும் சரி, ஓங்கி உயர்ந்துகொண்டிருக்கிறார்கள் என்றாலும் சரி, வீழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று சொன்னாலும் சரி, அவருடைய அளவுகோல் என்பது முழுக்க முழுக்க மனித நேயத்தையும், பகுத்தறிவையும், சுயமரியாதையும் சார்ந்தது.


மனிதனுக்குத்தான் சுயமரியாதை


இல்லையென்றால், அவருடைய இயக்கத்திற்கு சுயமரியாதை இயக்கம் என்று பெயர் வைத்திருக்க மாட்டார். உலகத்திலேயே சுயமரியாதை இயக்கம் என்று பெயர் வைத்த ஒரே தலைவர் தந்தை பெரியார்தான்.


மனிதனுக்குத்தான் சுயமரியாதை; அய்ந்தறிவு படைத்த விலங்குகளுக்கு சுயமரியாதை என்றால் என்னவென்றே தெரியாது. இது 6 ஆம் அறிவின் விளைவு.


மனிதனுடைய அறிவு, அந்த அறிவினாலே ஏற்படு கின்ற திறன், அது சமுதாயத்தில் அவருக்கு, மான உணர்ச்சி யையும், உரிமை உணர்ச்சியையும் ஏற்படுத்தவேண்டும் என்பதை அடிக்கடி அவர் சொல்வார்.
ஆகவே, அவரைப் பொறுத்தவரையில் அந்தக் கோணத்தோடு பார்க்கிறபொழுது, அறிவு ஒரு பக்கத்தில் வளர்ந்துகொண்டிருக்கிறது. அன்றைக்கு அவர் ஒரு தொலைநோக்கோடு சொல்லியது எல்லாம், இன்றைக்கு நடைமுறையில் வந்துகொண்டிருக்கிறது.


கடவுள் நம்பிக்கை என்பது ஆழமாக இருக்காது வருங்காலத்தில் ஒவ்வொருவரின் கையிலும் தொலைப் பேசி இருக்கும் என்று சொன்னார். இன்றைக்கு எல்லோ ருடைய கைகளிலும் செல்பேசி இருக்கிறது. ஒருவருக் கொருவர் முகம் பார்த்து பேசிக் கொள்வார்கள் என்று சொன் னார். இன்றைக்கு ஸ்கைப் எல்லா இடத்திலும் வந்தாயிற்று.


இனிவரும் உலகம் என்ற நூலில் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்.


இனிமேல் கடவுள் நம்பிக்கை என்பது ஆழமாக இருக்காது என்று சொன்னார். இப்பொழுதுகூட நீங்கள் கேட்கலாம், நிறைய கோவில் இருக்கிறது, திருவிழாக்கள் நடைபெறுகிறதே என்று. கோவில் இருக்கிறது, திருவிழா நடைபெறுகிறதே தவிர, கடவுள் நம்பிக்கை என்பது அடித்தளத்தில் கிடையாது. வள்ளலார் சொல்லியதுபோல, பிள்ளை விளையாட்டே தவிர, கேளிக்கை போல, வியாபாரத்திற்காகவே தவிர ஆழ்ந்த நம்பிக்கையில்லை அதில். காரணம் நம்பிக்கை இருந்தால், அர்ச்சகனாக இருப்பவன் கர்ப்பக் கிரகத்திலேயே ஒழுக்கக்கேடாக நடக்கவேண்டிய அளவிற்கு வராது.
ஆகவே, இப்படியெல்லாம் நடந்துகொண்டிருக்கிறது என்று சொன்னாலே, பெரியாருடைய சிந்தனை வெற்றி பெற்றிருக்கிறது. பெரியாருடைய சிந்தனை நடைமுறையில் நேரடியாக அவர்களால் ஒப்புக்கொள்ளாததாக இருந்தா லும், தவிர்க்க முடியாது, ஏற்கப்பட்டே தீர வேண்டியதாகி விட்டது.
மதவெறியைப் பற்றி தந்தை பெரியார் அன்றே சொன்னார். இன்றைக்கு எல்லோரும் பார்த்தீர்களேயானால், மதவெறி, மதவெறி என்று சொல்கிறார்கள். மதம் எவ்வளவு பெரிய கேடு செய்யும் என்பதை இப்பொழுது அல்ல, மதத் தால் ஏற்பட்ட நன்மை என்ன? என்பதை சிறந்த சிந்தனை யாளர்களாக இருக்கக்கூடிய வெளிநாட்டுக்காரர்கள் சொல்லியிருப்பதையும்கூட, அந்தக் காலத்திலேயே மொழி பெயர்த்து நூல்களாக வெளியிட்டிருக்கிறார் பெரியார்.


நம்மைப் போன்ற பலர் பிறக்காத காலத்தில் பெரியார் இந்தப் பணியை செய்திருக்கிறார்! அதுகூட அவர்கள் (மேலை நாட்டு அறிஞர்கள்) சொன்னார்கள் என்பதற்காக அல்ல; தன்னுடைய சுயமரியாதை கருத்தை, மற்ற மேல் நாட்டுக்காரர்களும் சொல்கிறார்கள். படித்த நண்பர்களே, நான் மட்டும் இந்தக் கருத்தை சொல்கிறேன் என்று நினைக்காதீர்கள். இவ்வளவு பெரிய அறிஞர்கள், விஞ் ஞானிகள், சிந்தனையாளர்கள்கூட சொல்லியிருக்கிறார்கள் புரிந்துகொள்ளுங்கள் என்று சொன்னார்.


சில பேர் ஜாதியை பாதுகாப்பதுபோல், முட்டுக்கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்!


இன்றைக்குப் பார்த்தீர்களேயானால், மதங்கள்தான் மிகப்பெரிய கேடு. மதம்தான் மண்டையை உடைத்துப் போட்டு இருக்கிறது. மதம்தான், ரத்த ஆறு  ஓடுவதற்குக் காரணமாக இருக்கிறது. அதேபோல், ஜாதிப் பிரச்சினை. இன்றைக்கு ஜாதிப் பிரச்சினையை சிலர் பிடித்துக் கொண்டிருப்பதாகக் காட்டினாலும், ஜாதியினுடைய அடித்தளம் என்பது இருக்கிறதே, அது இப்பொழுது நொறுங்கி இருக்கிறது. மேல்தட்டு மக்கள் சில பேர் ஜாதியை பாதுகாப்பதுபோல், முட்டுக்கொடுத்துக் கொண்டு இருக் கிறார்களே தவிர, அடிப்படையில் பார்த்தீர்களேயானால் ஏதும் கிடையாது.


உதாரணமாக பெரியார் ஆணித்தரமான ஒரு கேள்வி கேட்டார்: சுதந்திர நாட்டில், சூத்திரன் இருக்கலாமா? பஞ்சமன் இருக்கலாமா? பார்ப்பான் இருக்கலாமா? பறையன் இருக்க லாமா? மனிதன்தானே இருக்க வேண்டும் என்று ஒரு கேள்வி கேட்டார். இந்தக் கேள்வியை நோக்கி சமு தாயம் செல்ல வேண்டும். இப்பொழுது அதுதான் முக்கியத் தேவை!


இந்த நாட்டில் இன்னமும் ஜாதி பாதுகாக்கப்பட்டதாக இருக்கிறது. அதேநேரத்தில், பள்ளத்தை மூடும் வரையில் நாம் அதனைத் தாண்ட வேண்டுமே! பாதையை போடுகிற வரையில், அதற்கு மாற்றுப் பாதை தேவை. அதற்கு இட ஒதுக்கீடுபோல, சமூக பாதுகாப்புக்கு, வளர்ச்சிக்கு தேவை என்று தந்தை பெரியார் சொன்னார். அந்தக் கருத்து இப்பொழுது மிகப்பெரிய அளவிற்கு வந்துவிட்டது.


பெரியாருடைய கொள்கையை எதிர்க்கக் கூடிய அமைப்பு ஆர்.எஸ்.எஸ்.

அண்மைக் காலத்தில் வாக்கு வங்கிக்காகவோ, மற்றவைக்காகவோ, பெரியாருடைய கொள்கைக்கு நேரிடையாக எதிர்க்கக் கூடிய அமைப்பு ஒன்று என்றால், அது ஆர்.எஸ்.எஸ். அமைப்பாகும். அந்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பே, இன்றைக்கு இல்லை, இல்லை, உங்களுக்கு இட ஒதுக்கீடு தேவை; காலங்காலமாக ஒடுக்கப்பட்டீர்கள்;  ஆகவே, நாங்கள் அதனை ஆதரிக்கிறோம். எதுவரையில் என்றால், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நல்லிணக்கமும், சமூக சமத்துவமும் ஏற்படுகின்ற வரையில் என்று இப்பொழுது சொல்கிறார்கள்.


வாக்கு வங்கிக்காக, தேர்தலுக்காக சொல்கிறார்கள் என்று சொன்னாலும்கூட, அந்த அமைப்பைப் பொறுத்த வரையில், இது பெரிய மாற்றம். இந்த மாற்றத்தை பெரியார் சொன்னபொழுது, அவர்கள் எதிர்த்தார்கள். இன்னுங் கேட்டால், அந்த அமைப்பின் தலைவர், இட ஒதுக்கீடே கூடாது என்று முன்பு சொல்லி எழுதியிருக்கிறார்.


இளைஞர்கள் யாரும் இன்றைக்கு ஜாதியைத் தூக்கிப் பிடிப்பதில்லை


அதேபோல், ஜாதியை வெளிப்படையாக அவர்களுக்கு ஆதரிப்பதற்கு மனமில்லை. இப்பொழுதுகூட அவர்களு டைய வார ஏட்டில், ஜாதியைப்பற்றி பேசுகிறபொழுது, பூசி மெழுகுகிறார்களே தவிர, ஜாதியை நியாயப்படுத்தக்கூடிய அளவிற்கு அவர்களுக்குத் தைரியமும், துணிச்சலும் இல்லையென்றால், பெரியாருடைய பார்வையினாலே ஏற்பட்ட மாற்றங்கள்; பெரியாருடைய சிந்தனைகளினாலே, இன்றைக்கு இளைஞர்களுக்கு இந்த சிந்தனைகள் வந்திருக்கிறது. இளைஞர்கள் யாரும் இன்றைக்கு ஜாதியைத் தூக்கிப் பிடிப்பதில்லை.

ஆனால், அதேநேரத்தில், தேர்தலில் அரசியல்வாதிகள் ஜாதியைப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். வேறு எந்தத் தகுதியும் இல்லாத தலைவர்களுக்கு, ஜாதி என்கிற மேடை கிடைத்ததால், அதை வைத்துக்கொண்டு வியாபாரம் செய்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரையில் ஜாதியால் அவர்களுக்குப் பயன் இருக்கிறது.


கொசுவத்தி வியாபாரி கொசு ஒழியவேண்டும் என்று நினைப்பானா?


இதற்கு உதாரணம் சொல்லுவதென்றால், கொசுவத்தி வியாபாரிகள் இருக்கிறார்களே, அவர்களுக்கு வியாபாரம் செழிக்கவேண்டும் என்றால், என்ன செய்யவேண்டும்? கொசுக்கள் ஒழியக்கூடாது; கொசு நிறைய இருந்தால்தான், இந்தக் கொசுவத்திகளைக் கொளுத்துங்கள், அந்தக் கொசுவத்திகளைக் கொளுத்துங்கள் அப்பொழுதுதான் கொசுக்கள் அழியும் என்று சொல்வார்கள். கொசுவை அறவே ஒழித்துவிட்டோம் என்றால், அப்பொழுது அந்தத் தொழிற்சாலைகளையெல்லாம் மூடவேண்டியது இருக்கும். அதுபோல, அரசியல்வாதிகள் சில பேர், கொசுவத்தி வியா பாரிகள்போல, சில அரசியல் கட்சிகள் ஜாதியை வைத்துக் கொண்டு, இன்றைக்கு அவ்வளவையும் செய்துகொண்டி ருக்கிறார்கள். ஆகவே, அதனுடைய விளைவை நாம் இன்றைக்குப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
நீங்கள் ஒரு கேள்வி கேட்கலாம், அது என்னவென்றால், ஜாதியைப்பற்றி இவ்வளவு பிரச்சாரம் செய்கிறீர்களே? இன்னும் ஜாதி இருக்கிறதே? ஜாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டால், கவுரவக் கொலை செய்கின்ற நிலை இருக்கிறதே என்று?


தந்தை பெரியாருடைய இயக்கத்தின் தாக்கத்தினால் வந்தது!


இன்றைக்கு இருபால் இளைஞர்கள் இவ்வளவு பேர் படித்திருக்கிறார்கள் என்றால், ஒரு காலத்தில் அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு என்று கேட்ட நிலை இருந்தது. இன்றைக்குப் பெண்கள் அதிகமாக படிக் கிறார்கள். நீங்களே இங்கே வந்து என்னை பேட்டி எடுக்கிறீர்கள்.  மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒரு காலத் தில் இதுபோன்ற தகுதியெல்லாம் நம் பெண்களுக்குக் கிடையாது. வீட்டில் உள்ளவர்கள் பெண்களை தனியே அனுப்பமாட்டார்கள். எப்படி அந்தத் தைரியம் வந்தது? இவையெல்லாம் தந்தை பெரியாருடைய இயக்கத்தின் தாக்கத்தினால் வந்தது. அதுதான் மிக முக்கியம்.


தொலைக்காட்சிகளில் செய்தி படிப்பவர்களில்கூட பெண்கள்தான் அதிகமாக செய்தி வாசிக்கிறார்கள். சிறப் பாகவும் செய்கிறார்கள். பெண்கள்தான் ஆசிரியர்களாக இருக்கிறார்கள்; பெண்கள்தான் வழக்குரைஞர்களாக வருகிறார்கள்; நீதிபதிகளாக வருகிறார்கள்; பொறியாளர் களாக வருகிறார்கள்.
ஒரு 60, 70 ஆண்டுகளுக்கு முன்பாக, கிண்டி பொறியி யல் கல்லூரியில், மூன்றே மூன்று பெண்கள்தான் இருந் தார்கள். பெண்கள், பொறியியல் துறைக்கே செல்லமாட் டார்கள். நாங்கள் பெரியார் மணியம்மை கல்லூரியை ஆரம்பித்து, பெண்களுக்காகவே பொறியியல் கல்லூரியை உலகின் முதல் பெண்களுக்காக மட்டுமே உள்ள கல்லூரி யாக ஆரம்பித்தோம். அந்தக் கல்லூரியில் படித்த பெண்கள், அங்கே படித்து முடித்து, இன்றைக்கு 20 ஆயிரம் பெண்கள் பொறியாளர்களாக உலகம் முழுவதும் இருக்கிறார்கள்.


பெண்களுக்காகவே தனி பொறியியல் கல்லூரியா? வியப்புடன் கேட்ட வெளிநாட்டவர்!


அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளுக்கு நான் சென்றபொழுது, என்னிடம் கேட்டார்கள், உங்கள் நாட்டில் பெண்களுக்காகவே தனிக் கல்லூரியே நடத்துகிறீர்களே, அவ்வளவு பெண்கள் பொறியியல் படிப்பு படிக்க முன்வந்து படிக்கிறார்களா?  இது எங்கள் நாட்டில்கூட இல்லையே! என்றார்கள். அமெரிக்கா வளர்ந்த நாடு, கனடா வளர்ந்த நாடு; வளர்ந்த நாடுகள் என்று சொல்லக்கூடிய இடத்திலேயே பெண்கள் பொறியியல் படிப்பை படிக்க முன்வரவில்லை. ஆனால், வளராத நாடுகள் பட்டியலில் இருந்து, இன்றைக்கு வளரும் நாடுகள் பட்டியலில் உள்ள இந்திய நாட்டில், இவ்வளவு பெண்கள் படிக்கிறார்கள் என்றால், குறிப்பாக தமிழ்நாட்டில் படிக்கிறார்கள் என்றால், இது சரசுவதி பூஜையினால் வந்தது இல்லை; பிள்ளையார் சதுர்த்தியால் வந்தது இல்லை. முழுக்க முழுக்க சுயமரியாதை இயக்கம், பெரியாருடைய இயக்கம், திராவிட இயக்கம், அதனுடைய பணிகள், கல்வி வள்ளல் காமராச ருடைய அற்புதமான பணிகள் இவைகளெல்லாம் சேர்ந்த தினால் ஏற்பட்ட சமுதாய மாறுதல்கள். ஆகவேதான், பெரி யாருடைய சிந்தனைகள் என்பது முழுக்க வந்திருக்கிறது.


ஆனால், கற்றது கைமண் அளவு; கல்லாதது உலகளவு என்பதுபோல், இன்னமும் பெற்றது கைமண் அளவு; பெற வேண்டியது உலக அளவு இருக்கிறது! உதாரணத்திற்கு ஜாதி, அய்யாயிரம் ஆண்டுகளுக்குமுன்பிருந்து, மனதில் ஊறியிருக்கின்ற ஒன்று. அதனை எதிர்த்து வேலை செய்யவேண்டும் என்று சொல்லும்பொழுது, அதற்கு ஆதரவாக, அரசியல்வாதிகள், மற்றவர்கள் முட்டுக் கொடுக்கிறார்கள்.


திருமணத்திற்கு முன்பு மணமக்கள் உடற்பரிசோதனை செய்துகொள்ளுங்கள்!


எங்களின் அமைப்புகள் சார்பாக, ஜாதி மறுப்புத் திருமணம், மத மறுப்புத் திருமணம், விதவை மறுமணம், மன்றல் விழாவினை நடத்துகிறோம். எல்லா இடங்களிலும் மக்கள் தாராளமாக வந்து கலந்துகொள்கிறார்கள்.
உயர்நீதிமன்ற நீதிபதியே எழுதுகிறார், ஜாதகப் பொருத்தத்தைவிட, திருமணத்திற்கு முன்பு மணமக்கள் உடற்பரிசோதனை செய்துகொண்டு சான்றிதழ் வாங்கிக் கொள்ளுங்கள் என்று.


ஆகவே, பெரியாருடைய சிந்தனையின் தாக்கம் ஒவ்வொருவரையும் சிந்திக்க வைத்திருக்கிறது. மிகப்பெரிய மாறுதலை ஏற்படுத்தியிருக்கிறது. சில  மாற்றங்கள் நேரிடையாகத் தெரியும்; சில மறைமுகத் தாக்கமாகவே இருக்கும்.


இன்னொன்று, ஜாதி மறுப்புத் திருமணம் செய்தால், உடனடியாக சில இடங்களில் கலவரங்கள் நடைபெறுகிறது என்று நீங்கள் சொன்னீர்கள்.
ஜாதி மறுப்புத் திருமணம் செய்தால், எங்கோ சில இடங்களில் நடைபெறுகின்ற ஒன்று. ஜாதி மறுப்புத் திருமணங்களை பெற்றோர்களின் ஒப்புதலோடு நாங்களே பல திருமணங்களை நடத்தி வைத்திருக்கிறோம்.


ஒட்டுமொத்த மாணவர் சமுதாயத்தைக் குறை சொல்ல முடியாது!


இன்னமும் சில கிராமங்களில் சில பகுதிகளில், அரசியல் தூண்டியலைத் தூக்கிக் கொண்டு போகக்கூடியவர்கள், ஜாதிவெறியை மய்யப்படுத்தி, அதன்மூலம் தங்களுக்கு ஒரு பெரிய ஆதரவினை உருவாக்கலாம் என்கிற நோக்கத் தோடு, வன்முறையைத் தூண்டி விடுகிறார்கள். எப்படி சில மாணவர்கள், விரும்பாத மாணவியின்மேல் அமிலத்தை ஊற்றுகிறார்கள் என்று சொன்னால், எல்லா மாணவர்களும் அப்படி ஆகிவிட்டார்கள் என்று நாம் ஒட்டுமொத்த மாணவர் சமுதாயத்தைக் குறை சொல்ல முடியாது. யாராவது ஒரு கிறுக்கன், வெறியன் அப்படி செய்பவனாக இருப்பான். எல்லோரும் அப்படி இருக்கமாட்டார்கள்.


அதுபோல், ஜாதி வெறித்தனம் படமெடுத்தாடும் நேரத்தில் இப்படி இருக்கிறது; ஆனால், அதைத் தாண்டி ஏராளமாக ஜாதி மறுப்புத் திருமணங்கள் நாள்தோறும் நடைபெற்று வருகின்றன.


பெரியாருடைய சிந்தனை பரவாத துறையே கிடையாது!


வடநாட்டில் கிராமங்களில்  இருக்கக்கூடிய சூழ் நிலைகள் இங்கே தமிழ்நாட்டில் கிடையாது. வடநாட்டில் தலைவர்களின் பெயருக்குப் பின்னால், ஜாதிப் பட்டங்கள் உண்டு. ஆனால், தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் பெரியாருடைய இயக்கம் இருந்ததினால், இங்கே ஜாதியைப்பற்றி பேசக்கூடிய தலைவர்களேகூட, ஜாதிப் பட்டங்களைப் போட்டுக் கொள்வதற்குத் தயங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அந்த அளவிற்கு இன்றைக்கு இந்த இயக்கம், பெரியாருடைய பணி என்பது மிகப்பெரிய அளவிற்கு வந்திருக்கிறது. அதுபோலவே, பெரியாருடைய எழுத்துச் சீர்திருத்தின்மூலமாக, மொழி, தனி மொழியாக, தமிழ்மொழிக்கு பெரிய வாய்ப்புகள் ஏற்பட்டிருக்கிறது. உலகளாவிய நிலையில்,  இன்றைக்கு தமிழ் மொழி செம்மொழியாக ஆனது மட்டுமல்ல; கணினிக்குப் பயன்படக் கூடியதாகவும், மற்ற பகுதிகளில் எல்லாம் தமிழ் என்று சொல்லக்கூடியதற்கு வாய்ப்பாக அதில் அடித்தளம் ஏற்பட்டிருக்கிறது. எனவே, பெரி யாருடைய சிந்தனை பரவாத துறையே கிடையாது.


தந்தை பெரியாரைப் பொறுத்தவரையில், பகுத்தறிவு என்பது வெறும் ஆய்வுக்கல்ல; பகுத்தறிவு என்பது வாழ்க்கைக்காக. எனவே, அந்த வகையில், அண்ணா அவர்கள் சொன்னார், தமிழ்நாட்டின் முதல் பேராசிரியர் பெரியார் அவர்கள்தான்; அவருடைய வகுப்பு, மாலை நேரத்தில் தொடங்கி மக்களுக்கு எடுத்துச் சொல்வார் என்று சொன்னார். அது முற்றிலும் உண்மை.
அதுபோல், மணிக்கணக்காகப் பேசிப் பேசி மக்களை சிந்திக்க வைத்தார்கள். அதன் காரணமாகத்தான், உலக கலாச்சார மய்யமான யுனெஸ்கோ அவருக்கு விருது கொடுத்து, தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரட்டீஸ், தொலைநோக்காளர், மூட நம்பிக்கையினுடைய கடும் எதிரி என்று பாராட்டியது.


பெரியாருடைய சிந்தனை மிகப்பெரிய அளவிற்கு உயர்ந்த சிந்தனை!


ஆகவேதான், மிகப்பெரிய அளவிற்கு பெரியாருடைய சிந்தனை என்பது இளைஞர் உலகத்திற்குப் போய் சேரவேண்டும். அதேநேரத்தில், பெண்ணுரிமை என்று வருகின்ற நேரத்தில், பெரியாருடைய சிந்தனை மிகப்பெரிய அளவிற்கு உயர்ந்த சிந்தனை. மற்றவர்களோடு, உலகத் தலைவர்கள், உலகப் பெண்ணுரிமைக்காகப் பாடுபட்டவர் களோடு ஒப்பிடப்பட முடியாத எல்லை அளவிற்கு, அவருடைய சிந்தனை மேலோங்கியுள்ளது. எதிர்காலத் தில், திருமணம் என்ற அமைப்பு இருக்குமா? என்ற ஒரு கேள்வியை கேட்டு, அதுவேகூட கிரிமினல் குற்றம் ஆக் கப்படக்கூடிய ஒரு சூழ்நிலை வரலாம் என்று சொன்னார்.


இன்னமும் சிலர் அந்தப் புரட்சிகர சிந்தனைகளை செரிமானம் செய்துகொள்ளக்கூடிய அளவில் இல்லை. எனவே, காலத்தைத் தாண்டி சிந்தித்தவர் பெரியார். அவர் காலத்திற்குப் பின்னாலே சென்றவர் அல்ல; காலம் அவருக்குப் பின்னாலே சென்றது.


------------------ இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பேட்டியில் கூறினார்.

                           -----------------------"விடுதலை” 21-09-2014

2 comments:

முனைவர். வா.நேரு said...

மிக ஆழமான பதில்கள். படிப்பவர்கள் பொறுமையாகப் படித்தால் உண்மை எளிதாகப்புரியும்.வாழ்த்துக்கள்-மிகச்சிறப்பாக பதிவேற்றீயுள்ள தமிழ் ஓவியா அவர்களுக்கு.

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அய்யா