Search This Blog

26.3.09

மொழி என்பது ஒரு போராட்டக் கருவி காலத்திற்குத் தகுந்தாற்போல் மாறி வரவேண்டும்





மொழி என்பது ஒரு போராட்டக்கருவி அது காலத்திற்குத் தகுந்தாற்போல் மாறி வர வேண்டும் என்று தந்தை பெரியார் அவர்கள் கூறிய கருத்துகளை எடுத்துக்காட்டி விளக்கவுரையாற்றினார் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

சென்னைப் பல்கலைக் கழகத்தில் 6.2.09 அன்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

ஜோதி பாஃபுலே, ஈ.வெ.ராமசாமி நாயக்கர், பீமராவ் அம்பேத்கர் போன்றவர்கள் சமுதாயப் போராட்டத்திலே ஈடுபட்டார்கள்.

இரண்டு வகையான போராட்டம் - ஒரு பக்கத்திலே பண்பாட்டுத் தளத்தைவைத்து பிற்போக்குச்சக்திகள். இன்னொரு பக்கத்திலே அந்தப் பண்பாட்டுத் தளத்தையே மாற்றிக் காட்ட வேண்டும் என்ற முற்போக்குச் சிந்தனையாளர்கள். இவர்களுக்கிடையே நடந்த போராட்டம் தான் இன்றைக்கும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது என்று வரலாற்று ஆசிரியர்கள், வரலாற்றுப் பேராசிரியர்கள் ஆய்வு செய்யக்கூடிய அளவிலே இது அண் மையிலே கூட வந்திருக்கிறது. எனவே பெரியார் அவர்களுடைய சிந்தனை என்பது உலகளாவிய போக்கு. அன்றைக்குத் தந்தை பெரியார் அவர்கள் சொன்னது தான் அதிர்ச்சிக்குரியது. ஏனென்றால் அவர்கள் காலத்திற்கு முன்னோடி - காலத்தை வென்றவர்கள்.

யுனெஸ்கோவினர் இதைத் தெரிந்து தான் தந்தை பெரியார் அவர்கள் காலத்தை வென்ற சிந்தனையாளர். தொலை நோக்காளர் என்பதைக் குறிப்பிட்டுச் சொன்னார்கள். அந்த வகையிலே ஒவ்வொன்றும் வியப்பாக இருக்கிறது.


சுயமரியாதைத் திருமணத்திற்கு ஒரு மாற்றம் ஏற்படுத்தி தமிழ்த் திருமணம், சுயமரியாதைத் திருமணம் என்றெல்லாம் வைத்திருக்கின்ற நேரத்திலே மூடநம்பிக்கைக்கு இடமில்லாமல் ஆண் பெண் சமமாக மதிக்கப்படவேண்டும் - நண்பர்களாக இருக்க வேண்டும்-வாழ் விணையர்களாக இருக்க வேண்டும். ஒப்பந்தக்காரர்களாக வேண்டும். அவர்கள் விரும்பினால் தனியே பிரிந்து போகக் கூடிய உரிமை இருக்க வேண்டும் என்று பல சீர் திருத்தக் கருத்துக்களைச் சொன்னார்கள்.

பேரறிஞர் அண்ணா அவர்களுடைய ஆட்சிக் காலத்திலே தந்தை பெரியார் அவர்கள் விரும்பிய சுயமரியாதைத் திருமணத்தை சட்டமாகப் பார்த்த ஒரு பெரிய பெருமை படைத்த சமுதாயப் புரட்சியாளர் தந்தை பெரியார் அவர்கள் தான். அந்த வரலாற்றுப் பெருமைகளை எல்லாம் அவர்கள் பெற்றார்கள் என்பது ஒரு பக்கத்திலே இருந்தாலும் கூட, அதற்கு அடுத்தக் கட்டத்திற்கு சென்றார்.

அவர் அதோடு திருப்தி அடையவில்லை. பெரியாருடைய சிந்தனையின் ஓட்டமிருக்கிறதே அது அடுத்த கட்டத்திற்குச் சென்றது. திருமணம் என்பதே கிரிமினல் குற்றமாக் கப்பட வேண்டும் என்றார்.

இதை இன்றைக்குக் கூட ரொம்பப்பேருக்கு செரிமானம் செய்து கொள்ளக் கூடிய அளவுக்கு வருமா?

ஆனால் அந்தக் கருத்து இன்றைக்கு உலகளாவிய அளவுக்கு வந்து விட்டது.

ஆண்-பெண் இருவருமே நண்பர்களாக வேண்டும். திருமணம் என்கிற சட்டம் கிடையாது. இன்றைக்கு வந்திருக்கின்ற றுடிஅநளே நுசய என்ற இந்த இதழிலே ஒரு கட்டுரை வந்திருக்கிறது. அந்தக் கட்டுரையிலே ஒரு செய்தி வந்திருக்கிறது. மகாராஷ்டிரா அரசாங்கம் 125வது கிரி மினல் சட்டப்படி ஒரு சட்டம் கொண்டு வந்திருக்கிறது. பெண்களு டைய உரிமையைக் காக் கின்ற வகையிலே கொண்டு வந்திருக்கின்றது. ஜனவரி 2008 உச்சநீதிமன்றம் திரு மணங்களை சட்டப்படி அங்கீகரித்திருக்கிறது.

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழும் திருமண முறை ஒழிதல் நன்றாம்! என்று குடும்ப விளக்கிலே அதைச் சொல்லியிருக்கின்றார்கள்.

இதை இன்றைக்குக் கூட ஏற்பார்களா? இங்கேயிருக்கிற உங்களிலே கூட எத்தனைபேர் இதை அதிர்ச்சியில்லாமல் ஏற்கின்றீர்கள்? என்பது கேள்விக்குறிதான்.

தந்தை பெரியார் அவர்களுடைய சிந்தனை இன்றைக்கு தமிழ்நாட்டைத்தாண்டி மகாராட்டிரா மாநிலம் ஏற்கக்கூடிய அளவிற்கு வந்திருக்கிறது என்று சொன்னால் தந்தை பெரியார் - கால எல்லையைக் கடந்தவர்.

தந்தை பெரியார் அவர்களுடைய எழுத்துச் சீர்திருத்தம் இன்றைக்கு உலகளாவிய நிலையிலே இருக்கிறது. இன்றைக்கும் அதைத் தொடர்ந்து அடுத்த கட்டத்திற்குக் கொண்டு போக வேண்டும் என்பதிலே விடாப்பிடியாக கொண்டு செல்லுகின்ற ஒரு தமிழர் அறிஞர் உண்டென்றால் டாக்டர். வா. செ. குழந்தைசாமி அவர்கள் தான் (கை தட்டல்)

இன்றைக்கும் அதை ஒரு பெரிய கனவுத் திட்டமாகக் கொண்டிருக்கின்றார்.

அதைத் தீவிரமாக எங்கு போனாலும் வலியுறுத்திக் கொண்டிருக்கின்றார்கள். அதன் கார ணமாகத் தாக்குதலுக்கும் ஆளாக்கப்படுகிறார்கள். தாக்குதல் இருந்தால் தான் வெற்றி என்பது நிச்சயம். தாக்கம் இல்லா விட்டால் தாக்குதல் வராது. ஆனால் என்ன? எங்களுக்கெல்லாம் கொஞ்சம் தடித்த தோல் கள். பொதுவாழ்க்கை யிலே இருப்பதால் சில விமர்சனங்களைக் கேட் கும் பொழுது வருத்தத் தைத் தரும். நீங்கள் அதைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை.

உங்களுக்குப் பின்னாலே உங்கள் கருத்தைத் தூக்கிப் பிடிப்பதற்கு பல இலட்சக்கணக் கான இளைஞர்கள்- முற்போக்குச் சிந்தனையாளர்கள் இருக்கின்றார்கள்.

தமிழ்த்துறை சார்பிலே இந்த நிகழ்ச்சி பற்றி நடைபெறுகின்றது. பெரியாருடைய பார்வை பற்றி பேராசிரியர் ந. இராமநாதன் அவர்கள் பாடங்களாக நடத்திய நேரத்திலே ஒரு கருத்தை மிக அழகாக எடுத்துச் சொன்னார்.

ஒரு மொழிக்கு சிறப்பு என்ன? என்பதைச் சொல்லுகின்ற நேரத்திலே அய்யா அவர்கள் என்ன சொல்லுகிறார்?

மொழி என்பது ஒரு போராட்டக்கருவி ஒவ்வொரு காலத்திலும் போராட்டக் கருவி எப்படி மாறுகிறது? முதலில் அம்பை - வில்லை வைத்து மனிதன் போராடினான்.

இப்பொழுது ஏவுகணைக் காலம். அந்த மாதிரி போராட முடியாது.

எனவே மொழி என்பது மனிதனுடைய கருத்துகளுக்கு பரிமாற்றம் என்று மட்டுமே இருந்து விடக்கூடாது.

மொழி என்பது ஒரு போராட்டக் கருவி. அந்த உணர்வுகளை உருவாக்க வேண்டும். பழைய - நம்முடைய தமிழுக்குப் பெருமை என்ன?

தமிழுக்கு எதிரிகள் யார்? அவர்களை ரொம்பத் தெளிவாக அடையாளம் கண்டு கொள்ள லாம். ஆனால் தமிழைப் புகழ்ந்து பாராட்டக் கூடிய பழமையாளர்கள் இருக்கிறார்கள் அல் லவா? அவர்களை விட பெரிய எதிரிகள் தமிழுக்கு தமிழ் வளர்ச்சிக்கு வேறு யாரும் கிடையாது.

அய்யா அவர்கள், யாருடைய தாட்சண்யத்திற்கும் கவலைப்படாமல் எவரையும் எதைப் பற்றியும் விமர்சனம் செய்தவர்கள். உதாரண மாக - நம்முடைய தமிழை கடவுளோடு இணைத்து, தமிழோடு இணைத்து தான் பெருமைப்படுத்த வேண்டும் என்ற நிலைக்குக் கொண்டு போனார்கள்.

கண்ணுதற் பெருங் கடவுள் கழக மோடமர்ந்து
பண்ணுதல் ஆய்ந்து
பழந்தமிழ் என்றெல்லாம் சொல்லி அப்படிப்பட்ட தமிழ் இது என்று சொன் னார்கள். கடவுளோடு அமர்ந்த தமிழ் என்று சொன்னார்கள். அடுத்து,

தொண்டர் நாதனை
தூது விடுத்ததும்
முதலை உண்ட பாலகனை அழைத்ததும்
எலும்பு பெண்ணுரு வாகக்
கண்டதும்
மறைக் கதவைத் திறந்ததும் என்று திருவிளை யாடல் புராணத்தில் சொன்னதாக இன்னமும் சொல்லிக் கொண்டிருக்கின்றோம்.

எல்லா துறைகளிலும் பெரியாருடைய கருத்துகள் சென்றன. ஒரே ஒரு கருத்தைச் சொல்லி என்னுடைய உரையை நிறைவு செய்யலாம் என்று கருதுகின்றேன்.

அய்யா வா.செ. அவர் கள் பேசுவதற்கு இது ஒரு முன்னுரையாக - வாய்ப்பாக இருக்கும் என்பதற்காக இவைகளைச் சொன்னேன்.

பெரியாருடைய சிந்தனை என்பது - அது சமுதாயமாக இருக்கட்டும், மொழியாக இருக்கட்டும் சமுதாய வாழ்வாக இருக்கட்டும் எல்லாவற்றிலும் தனித் தன்மையாக அய்யா அவர்கள் கருத்துகளைச் சொன்னார்கள்.

தந்தை பெரியார் அவர்கள் மொழி எழுத்து என்ற நூலிலே ஒரு பகுதியைச் சொல்லுகின்றார் கள்.

இந்த மாதிரி சொல்லிக் கொண்டிருக்கின்ற காலகட்டங்களிலே அய்யா அவர்கள் சொல்லுகின்றார். அற்புத அதிசயங்களை விளைவிக்கக் கூடியது என்பதற்காக தமிழ் மீது பற்று கொள்ளவில்லை. எனக்கு தமிழ் மீது பற்று வரவில்லை. புலவர்கள் இது ஒரு அற்புதமான அதிசயமான மொழி என்று சொன்னார்கள். பாட்டு பாடினவுடனே கதவு திறந்தது, முதலை உண்ட பாலகனை வெளியே விட்டது என்றெல்லாம் சொன்னதினால் இந்த மொழி அற்புதம் நிறைந்த மொழி என்று சொல்ல மாட்டேன்.

அற்புத அதிசயங்கள் விளைவித்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. அக்கருத்து நமக்குத் தேவையில்லை. ஆயிரம் குதிரைகளை வைத்துக் கொண்டு பாடிப்பாருங்களேன்.

அவற்றில் தான் தின்ற கீரையை ஏதாவது கக்குகிறதா? என்று. பொது மக்களுக்கு விளங்கும் படியாக அய்யா அவர்கள் எவ்வளவு சாதாரணமாகக் கேட்கிறார்கள் பாருங்கள். இப்படி சிந் திக்க வைத்தவர் தந்தை பெரியார். சிக்கலான விசயங்களைக் கூட நேரடியாக சிந்திக்க வைத் தவர்.

தாழ்ப்பாள் போட்ட சிற்றறையின் முன்னே நின்று மனம் உருகிப் பாடிப் பாருங்களேன். சிறிதாவது தாழ்ப்பாள் அசைகிறதா? என்று. ஏனென்றால் பாட்டு பாடினால் மறைக்கதவு திறந்தது என்று நம் முடைய புலவர்கள் பாட்டு பாடினார்கள்.

அற்புத சக்தி படைத்த மொழி என்பது அறியாமைதான். அது தமிழ்ப்பண்புகூட அல்ல. அடுத்த கேள்வி ரொம்ப முக்கியமானது. சும்மா முரட்டுத்தனமாக பெரியார் சொல்லுகிறார் என்று தமிழறிஞர்களாக இருந்தாலும், யாரும் இந்த கருத்தைத் தள்ளி விட முடியாது.


அடுத்த வாக்கியத்தை எவ்வளவு எளிமையாக சொல்லுகின்றார் பாருங்கள். தமிழ் மொழியில் அதிசயம், அற்புதம், சக்தி முதலிய சொற்களே இல்லை.

எனவே, அந்தச் சொற்களே இல்லை என்று சொல்லுகின்ற பொழுது, அந்தக் கருத்து எங்கே யிருந்து வந்தது? என்ற ஒரு கேள்வியை தந்தைபெரியார் அவர்கள் ஆழமாக இலக்கண ரீதியாகக் கேட் கின்றார்.

இப்படி எத்தனையோ செய்திகளை சொல்லிக் கொண்டிருக்கலாம். அப்படிப்பட்ட ஒரு சிறப் பான உயர் எண்ணங்கள் மலரும் சோலை என்னும் தந்தை பெரியார் அவர்களுடைய சிந்தனை வலிமையானது.

தொண்டு செய்து பழுத்தபழம்
தூய தாடி மார்பில் விழும்
மண்டைச் சுரப்பை உலகு தொழும்
மனக்குகையில் சிறுத்தை எழும்


அவர்தாம் பெரியார் என்று சொல்லக்கூடிய அந்த சிறப்பான உரையை அய்யா வா. செ. குழந்தை சாமி அவர்கள் விளக்க வருகின்றார்கள். சற்று கூடுதலாக நான் நேரத்தை எடுத்துக் கொண்டமைக்காகப் பொறுத்தருள வேண்டும் என்று கூறி, மீண்டும் அனைவருக்கும் நன்றி கூறி அமைகிறேன். இவ்வாறு தமிழர் தலை வர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

---------------"விடுதலை" -26-3-2009

0 comments: