Search This Blog

4.3.09

நோய்தீர்க்கும் மருத்துவர் தந்தை பெரியார்!








தமிழ்நாட்டில் தலைமைப் பொறுப்பு நீதிபதியாக இன்றைய தினம் இருக்கக்கூடிய மாண்புமிகு திரு. இஸ்மாயில் அவர்கள்கலந்துகொள்ளக்கூடிய இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதிலே நான் பெருமைப்படுகிறேன்.

ஜாதி, மவுடீகம் அறியாமை முதலியவைகளால் நோயுற்றுக் கிடந்த சமுதாயத்தின் நோய் தீர்க்கும் மருத்துவராய் பல்லாண்டு காலம்பணியாற்றிய பெரியார் பெயரால் ஒரு இலவச மருத்துவமனை திறப்பது என்பதுமிகப் பொருத்தமான ஒன்றாகும். சமுதாயக் காவலராக - மருத்துவராக வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து காட்டிய பெரியார் அவர்களின் பெயரால் இலவச மருத்துவமனையை பெரியார் சுயமரியாதைப்பிரசார நிறுவனம் நடத்திட முன்வந்துள்ளது. நான் பத்து வருட காலம் வருமான வரி மேல் முறையீட்டு டிரிப்யூனலில் பணியாற்றி இருக்கிறேன். பெரும் பாலான அறக்கட்டளைகள் வருமானவரி இலாகாவிடம் சலுகைகளைப்பெறுவதற்காகத்தான் இருப்பதை நான் எனது அனுபவத்தில் பார்த்திருக்கிறேன்.

வருமானவரி வரிகளைப்பற்றிக் கவலைப்படாதவர்!

ஆனால், பெரியார் சுயமரியாதைப்பிரசார நிறுவனம் வருமானவரிச் சலுகைகளுக்காக ஏற்பட்டதல்ல.

உண்மையிலேயே பெரியார் வருமானத்தைப் பற்றியும் கவலைப்படவில்லை; வருமான வரியைப்பற்றியும் கவலைப் படவில்லை.

வருமானத்தைப்பற்றிக் கவலைப்பட்டு இருந்தால், தான் ஏற்றுக்கொண்ட கொள்கைக்காகத் தனது தோட்டத்திலே இருந்த 500 தென்னை மரங்களை அடியோடு வெட்டித்தள்ளி இருப்பாரா?

பெரியார் ஏற்படுத்தி பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன அறக்கட்டளையின் அடிப்படை, மனிதாபிமானமாகும். பெரியார் ஒரு ‘கிரேட் ஹீமானிஸ்ட்’ தலைசிறந்த மனிதாபிமானியாவார்.


மதமும், தெய்வ நம்பிக்கையும் மனிதாபிமானத்துக்கு மயிரிழை அளவுக்கு முட்டுக்கடை போடுவதாக இருந்தால் அவற்றைத் தூக்கிக்கடலில் எறி என்று சொன்னவர் பெரியார். அதை வெளிப்படையாகப் பேசியவர் பெரியார். மனிதன் மனிதனுக்கு இழைத்த கொடுமைகளின் தொகுப்புத்தான் சரித்திரம் என்று ‘ரிப்பன்’ என்று அறிஞன் சொல்லி இருக்கிறான். மனிதன் நாயிடம் அன்பு செலுத்துவான்; கிளியிடம் கொஞ்சுவான்; ஆனால், மனிதன் மனிதனினடம் அன்பு செலுத்துதல் மட்டும் கடினம். ஆனால், பெரியாரின் மனிதபிமானமோ ஆச்சரியப்படத்தக்க ஒன்றாகும். இன்றைக்கு 35 ஆண்டுகளுக்கு முன்பு ஏழாண்டுக் காலம் அவரோடு நெருக்கமாகப் பழகி இருந்தவன் என்ற முறையிலே அவை எல்லாம் எனக்கு மிக நன்றாகத் தெரியும்.

நாமாக இருந்தால் என்ன செய்வோம்? ஒரு சிறிய உதவியை பிறர்க்கு நாம் செய்திருந்தாலும் அதைச்சொல்லிச் சொல்லிக் காட்டுவோம். நன்றியைச் சிறிதும் எதிர்பார்க்காது பெரியார் தொண்டு செய்தார் என்றால் அது அவரது பரந்த சிறந்த மனிதாபிபனாமத்தைக்காட்டுகிறது. பெரியாரால் முன்னேற்றம் அடைந்தவர்கள் கூட பின்னால் ஏசினார்கள். அதைப்பற்றி அவர் பொருட்படுத்தியது கிடையாது. அதை ஒரு குறையாகவும் கருதமாட்டார். அந்த அவருக்கு அவர் உள்ளம் பரிபக்குவப்பட்ட மனிதாபிமான உள்ளமாகும்.

நானே கூடக் கேட்டதுண்டு. அதற்கு அவர் சொல்லுவார்: “எனது கடைமையை நான் செய்தேன். அவ்வளவுத்தான்; அதற்கு மேல் என்ன இருக்கிறது?” என்பார். அத்தகைய தலைவரைக் காப்பாற்றுவதற்காத் தன் வாழ்வையே அர்ப்பணித்துக் கொண்டவர் மணியம்மையாவார்.

ஆசாபாசங்களைத் துறந்தவர்!

சாதாரணமாகப் பெண்களுக்கு இருக்கும் ஆசாபாசங்களை யெல்லாம் துறந்து அதிசய மனிதராக வாழ்ந்து காட்டியவர்;பெரியார் தொண்டு சமூகத்துக்கு அதிகக் காலம் கிடைக்கக் காரணமாக இருந்தவர் மணியம்மையார் ஆவார்கள். அந்த இருவர் பெயராலே துவங்க இருக்கும் இலவச மருத்துவமனை திறப்புவிழா நிகழ்ச்சியிலே கலந்து கொள்வதிலே நான் மிகுந்த மகிழ்ச்சியும் மனநிறைவும் கொள்கிறேன்.

இந்த விழாவிலே நமது தலைமை நீதிபதி அவர்கள் கலந்து கொண்டு இருப்பது பெருஞ்சிறப்பாகும். நாம் படித்த, கேட்ட தமிழ்ப்பண்பாட்டை அவரது வாழ்வில் காணலாம். தமிழ்ப் புலவர்கள் என்றால் பழைமையில் புதுமை, புதுமையில் பழைமை காண்பவர்கள். அதற்கு விதிவிங்க்கு நமது தலைமை நீதிபதியாவார்கள். அத்தகையவர் கலந்து கொள்ளும் விழாவிலே நானும் கலந்து கொள்ளும் வாய்ப்புப் பெற்றதிலே மகிழ்ச்சியும் நிறைவும் கொள்ளுகிறேன். வாய்ப்பு அளித்தவர்களுக்கு நன்றி கூறுகிறேன்.

--------------------30-5-75 அன்று சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற “பெரியார் மணியம்மை இலவச மருத்துவமனை” திறப்புவிழாவில் கலந்துகொண்டு சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி மாண்புமிக வேணுகோபால் அவர்கள் ஆற்றிய உரை - -நூல்:- "நீதிபதிகள் கண்ணோட்டத்தில் பெரியார்"- பக்கம்:-46-49

2 comments:

Unknown said...

//ஜாதி, மவுடீகம் அறியாமை முதலியவைகளால் நோயுற்றுக் கிடந்த சமுதாயத்தின் நோய் தீர்க்கும் மருத்துவராய் பல்லாண்டு காலம்பணியாற்றிய பெரியார் பெயரால் ஒரு இலவச மருத்துவமனை திறப்பது என்பதுமிகப் பொருத்தமான ஒன்றாகும். சமுதாயக் காவலராக - மருத்துவராக வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து காட்டிய பெரியார் அவர்களின் பெயரால் இலவச மருத்துவமனையை பெரியார் சுயமரியாதைப்பிரசார நிறுவனம் நடத்திட முன்வந்துள்ளது. நான் பத்து வருட காலம் வருமான வரி மேல் முறையீட்டு டிரிப்யூனலில் பணியாற்றி இருக்கிறேன். பெரும் பாலான அறக்கட்டளைகள் வருமானவரி இலாகாவிடம் சலுகைகளைப்பெறுவதற்காகத்தான் இருப்பதை நான் எனது அனுபவத்தில் பார்த்திருக்கிறேன்.//

பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தைப் பற்றி பெருமையாகப் பேசியுள்ளார் நீதிபதி வேணுகோபால்.


ஆனால் ஒரு சிலர் அந்த நிறுவனத்தை அன்றிலிருந்து இன்று வரை குறைகூறிக் கொண்டிருப்பது ஏன் என்று இப்போதுதான் புரிகிறது..

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி