Search This Blog

11.10.09

சோ கூட்டத்திற்கு இது தெரியாதாம்!


தெரியாதாம்!

கேள்வி: இலங்கை அரசு தொடர்ந்து தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவது பற்றி?

பதில்: இதுபற்றி வருகிற செய்திகள் அனைத்தும் உண்மையானதா என்பது நமக்குத் தெரியாது. இந்த நிலையில் என்ன கருத்துச் சொல்வது?

-----------------------துக்ளக் 14.10.2009

ஆகா! என்ன சாமர்த்தியம்! சங்கடமான சர்ச்சைகளைக் கிளப்பும்போது, அதுவும் தமிழர்கள் பற்றிய பிரச்சினை பற்றி வினா எழும்பும்போது மட்டும், சில உண்மைகள் இவாளுக்குத் தெரியாமல் போகும் சாமர்த்தியத்தைப் பார்த்தீர்களா!

அணுவைப் பிளந்து அன்டார்டிகா வரை, அள்ளி விசிறிவிடும் ஆசாமிகள், இந்துமகா சமுத்திரத்தில் மூழ்கி முத்து எடுக்கும் முப்புரிகளுக்கு அன்றாடம் செய்தி ஏடுகளில் வெளிவரும் அதிகாரப்பூர்மாக மாநில அரசும், மத்திய அரசும் வெளியிடும் தகவல்கள் மட்டும் இவர்களுக்குத் தெரியவே தெரியாது. சத்தியமாகத் தெரியாது. நம்புங்கள்!

மீனவர்கள் அதுவும் தமிழின மீனவர்கள் எல்லாம் சூத்திரர்கள் தானே அவர்கள் பற்றி, அவர்கள் அன்றாடம் தாக்கப்படுவது குறித்த செய்திகளைப்பற்றி தெரிந்துகொள்வதில் பிரம்மாவின் நெற்றியில் பிறந்த கூட்டத்திற்கு எப்படி அக்கறை இருக்க முடியும்?

எப்படியும் மீனவர்கள் பார்ப்பனர்களாக இருக்கப் போவதில்லை. அவர்கள் தாக்கப்பட்டால் என்ன? சிறையில் அடைக்கப்பட்டால்தான் என்ன?

அழுத்திக் கேட்டால் அதெல்லாம் அவாள், அவாள் தலையெழுத்து என்று மொட்டைத் தலையை ஒரு தடவை தடவிக்கொண்டு புன்னகைப்பார்கள்.

இதே ஈழத் தமிழர் பிரச்சினையில்கூட அங்கு தாக்கப்பட்டபோது, பாதிக்கப்படுவது பார்ப்பனர்களாக இருந்திருந்தால், அடேயப்பா அய்நா மன்றத்தையே அலற வைத்திருப்பார்களே!

பி.வி.நரசிம்மராவ் வெளியுறவு அமைச்சராக இருந்தபோது இலங்கையில் தமிழர்கள் மீது வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்ட அந்தத் தருணத்தில் ஒரு குடும்பத்தையே தன்னுடைய விமானத்தில் ஏற்றிக்கொண்டு திரும்பினார்.

அந்தக் குடும்பம் ஒரு பார்ப்பனக் குடும்பம் என்பதுதான் அடிக்கோடிட்டுக் காட்டப்பட வேண்டியதாகும்.

வெகுதூரம் போவானேன்? நேப்பாளத்தில் இரண்டு பார்ப்பனர்களின் பூணூல்கள் அறுபட்டன என்றவுடன் அரசாங்கம் முதல் அம்மாமி பத்திரிகைகள் வரை எப்படியெல்லாம் குத்தாட்டம் போட்டன!

ஊருக்கு இளைச்சவன் தமிழன்தானே! அவன் தாக்கப்படுவதெல்லாம் ஒரு பொருட்டா? அதுபற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்பதெல்லாம் அவாளைப் பொறுத்தவரை தேவையற்றதான ஒன்று தானே!

தமிழனைப்பற்றி இவ்வளவு இளக்காரமாக எழுதினாலும், இந்தப் பார்ப்பன ஏடுகளை காசு கொடுத்து வாங்கிப் படித்து சப்புக் கொட்டுவதில் மட்டும் தமிழன் தவறவே மாட்டான். இந்த அடிமைப்புத்தி தமிழனிடம் இருக்கும்வரை, சோ கூட்டம் இதையும் எழுதும். இதைவிட அதிகமாகவும் எழுதும்.

------------------- மயிலாடன் அவர்கள் 11-10-2009 "விடுதலை" யில் எழுதிய கட்டுரை

0 comments: