Search This Blog

6.10.09

தேரில் மனிதப் பெண்ணை கழுதை சம்போகம் பண்ணுவது போல் சித்திரம்!! ஆபாசம்!!!அசிங்கம்!!!


கோவில் கோபுரங்களின் ஆபாசங்கள்!


"மேல்நாட்டின் ஜோதியும், கீழ் நாட்டின் பீதியும்"என்னும் விஷயமாய் இன்று மறுபடியும் நான் பேசவேண்டுமென்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். இந்தத் தலைப்பைக் குறிப்பிட்டவர்கள் என்ன கருத்தைக் கொண்டு நான் இத்தலைப்பில் என்ன பேசவேண்டுமென்று கருதி ஏற்பாடு செய்தார்களென்பது எனக்குத் தெரியாது. ஒரு சமயம் மேல் நாட்டின் பெருமையையும், கீழ்நாட்டின் சிறுமையையும் பற்றி நான் பேச வேண்டுமென்று கருதினார்களோ என்னமோ தெரியவில்லை. ஆனபோதிலும், இந்தத் தலைப்பை நான் காலையில் பார்த்தவுடன் சில விஷயங்கள் சொல்லலாமென்பதாகக் கருதி சில குறிப்பு வைத்திருந்தேன்.

ஆனால், இப்போது எனக்கு முன்பேசிய மன்னார்குடி ஜனாப் யூசுப்பாவலர் அவர்கள், சமாதி வணக்கம், கொடி, பஞ்சாங்கம் முதலிய உற்சவங்கள் இஸ்லாம் மார்க்க ஆதாரங்களில் கிடையாதென்றும், அவையெல்லாம் புரோகிதக் கூட்டத்தாரால் புகுத்தப்பட்டு மக்கள் மூட நம்பிக்கையால் பின்பற்றுவதாகுமென்றும் சொன்னபோது, இங்குக் கூட்டத்திலிருந்து இரண்டொருவர் ஏதோ பிரமாதமாய் முழுகிப்போய் விட்டது போல் கருதிக் கூக்குரலிட்டதையும், கோபத்துடன் ஆஷேபித்ததையும் பார்த்தவுடன் நான் முன் குறிப்பிட்டு வைத்தவற்றையெல்லாம் தூரத்தள்ளி விட்டு அவருக்கேற்பட்ட பீதியையும், இன்னும் அதுபோலவே இந்துக்களென்பவர்களுக்கு ஏற்பட்ட பீதியையும் பற்றியே பேச வேண்டியது அவசியம் என்று கருதி விட்டேன்.

அதாவது, இம்மாதிரிக் கீழ் நாட்டின் பீதியை ஒழிக்க வேண்டியது நமது முதற்கடமையென்பதைப் பற்றியே பேசுகிறேன்.

நண்பர்களே! ஏதாவதொரு விஷயத்திற்கு ஆதாரமில்லையென்றோ, அது அறிவுக்குப் பொருத்தில்லையென்றோ, அதனால் பயனில்லையென்றோ அல்லது அதனால் இன்னின்ன கெடுதி என்றோ யாராவதொருவர் எடுத்துச் சொன்னால், அதற்கு மாறுபட்டவர்கள் அறிவுள்ளவர்களாயிருந்தால் அல்லது தங்கள் கருத்தில் உறுதியான நம்பிக்கையுள்ளவர்களாய் இருந்தால் அப்படிப்பட்டவர்கள் செய்ய வேண்டிய யோக்கியமான வேலையென்னவென்றால் தைரியமாய்த்தக்க சமாதானம் சொல்லித் தங்கள் கொள்கைகளை தாங்கள் நடந்து வருவதற்கேற்ற ஆதாரங்களைக் காட்டி அறிவு அனுபவம் ஆகியவற்றிற்குப் பொருத்தி மெய்ப்பித்துக் காட்ட வேண்டியது யோக்கியமான கடமையாகும்.


அந்தப்படியான காரியம் ஒன்றும் செய்யாமல், எடுத்ததற்கெல்லாம் "கடவுள் போச்சு, மதம் போச்சு, மார்க்கம் போச்சு, ஆண்டவனின் நம்பிக்கை போச்சு, ஆண்டவன் வார்த்தைக்கு விரோதமாச்சு" என்று வெறும் கூப்பாடு போடுவதனால் என்ன பயன் விளையக்கூடும்? மக்கள் மூடர்களாயிருக்கும் வரை இம்மாதிரி கூப்பாடுகளை மதித்து அவர்களும் ஏதோ முழுகிப் போய்விட்டது போல் ஆத்திரப்படக்கூடும். பிறகு அவர்களுக்கும் விவரம் தெரிந்து விட்டால் இந்த மாதிரி கூப்பாடு போட்டவர்களை வட்டியோடு அவமானம் செய்து விடுவார்கள். விஷமப் பிரசாரமும், சுயநலப் பிரசாரமும் வெகு நாளைக்கு இருக்க முடியாது. எந்த மக்களுக்கும் பகுத்தறிவு செல்வாக்குப் பெறும்போது ஏமாற்றினவர்கள் மீதுதான் முதலில் அவர்களது ஆத்திரமெல்லாம் திரும்பும். பிறகு தான் தங்கள் தங்கள் முட்டாள்தனத்தைப் பற்றி வருந்துவார்கள்.

ஆகையால் தான் விஷமப் பிரசாரங்களைப் பற்றி நான் எப்போதுமே பயப்படுவதில்லை. ஆனால், சொல்லுபவர்கள் சொன்னால் கேட்பவர்களுக்கு மதி வேண்டாமா? என்பதுதான் எனது கேள்வி.


நண்பர்களே! என்னைப் போல் ஒரு சாதாரண மனிதன் பேசுவதனாலோ, தனக்குத் தோன்றியதை எழுதுவதனாலோ, கடவுள் போய்விடும், மார்க்கம் போய்விடும், சமயம் போய்விடும் என்று நீங்கள் பீதி அடைவீர்களானால் உங்கள் கடவுளுக்கும், மார்க்கத்திற்கும் உள்ள யோக்கியதை எவ்வளவு என்பதை யோசித்துப் பாருங்கள். நீங்கள் உங்கள் கடவுள் உறுதியானவரல்ல, உண்மையானவரல்ல என்றும், உங்கள் சமயம் உறுதியானது அல்ல, உண்மையானது அல்ல என்றும் நீங்களே கருதியிருக்கின்றவர்களாகிறீர்கள்.

நாங்கள் உங்கள் கடவுளையோ, சமயத்தையோ இல்லையென்று சொல்லுவதற்காக இங்கு வரவில்லையென்பதை உறுதியாய் நம்புங்கள். அவற்றைப் பற்றி உண்டு - இல்லை என்று சொல்லிக் கொண்டு திரிவதல்ல எனது வேலை. நீங்கள் சொல்லுவதற்கு நீங்கள் பின்பற்றுவதற்கு ஆதாரமென்ன? அது உங்கள் பகுத்தறிவுக்குப் பொருத்தமாயிருக்கின்றதா? அனுபவத்திற்கு ஒத்துவருகின்றதா? என்று யோசித்துப் பாருங்கள் என்று உங்களைக் கேட்டுக் கொள்ளுவது தான் எனது வேலையாகும். அவற்றிற்கு இடம் கொடுப்பதாலேயே உங்கள் கடவுளோ, மதமோ, ஆதாரமோ போய்விடுமென்று நினைத்தீர்களானால் அவற்றைப் பற்றி மறுபடியும் வெளியில் பேசுவது வெட்கக்கேடான காரியமல்லவாவென்று கேட்கின்றேன்.

இந்தப்படி ஆராய்ச்சி செய்து பார்ப்பதாலேயே மறைந்து போகும் மார்க்கமும், ஆண்டவனும் பிறகு என்ன காரியத்திற்குத் தான் பயன்படக்கூடும் என்பதை நீங்களே ஆத்திரப்படாமல் யோசித்துப் பாருங்கள். "எங்கள் கடவுள் சர்வ சக்தி, சர்வ வியாபகமாயிருக்கக்கூடியவர்" என்று கருதிக் கொண்டு, "அவரால் ஏற்பட்டது எங்கள் மார்க்கம்" என்று சொல்லிக் கொண்டு இருக்கின்ற நீங்கள், "அப்படியானால் சற்று ஆராய்ச்சி செய்து அறிவிற்குப் பொருத்தமாயிருக்கின்றதாவென்று பார்க்கலாமா?" என யாராவது கேட்டால், உடனே இந்த மாதிரி பயந்தால் அப்பொழுது இந்தப் பயப்படுகின்ற ஆட்களுக்குக் கடவுள் சர்வ வியாபகமுள்ளவர் என்கின்ற விஷயத்திலும் நம்பிக்கையிருக்கின்றதா? என்பதைச் சற்று யோசித்துப் பாருங்கள்.

மனிதனுடைய அறிவிற்குப் பயன்படும் கடவுளும், அவனது ஆராய்ச்சிக்குப் பயப்படும் மார்க்கமும் உலகத்தில் யாருக்கென்ன பயனை அளிக்கக் கூடும்? அறிவையும், ஆராய்ச்சியையும் கண்டால் ஏன் இப்படி பயந்து ஓடுகின்றீர்கள்? ஆராய்ச்சிக்கு மதிப்புக் கொடுக்காத காரணமே இன்று இந்தியா உலகிலுள்ள நாடுகளெல்லாம் அடிமையான நாடாகவும், இந்தியர்கள் உலகிலுள்ள மக்களிலெல்லாம் இழிவான மக்களாகவும் இருக்க வேண்டியதாகி விட்டது.

கடவுள் என்றால் குருட்டு நம்பிக்கை, மதம் என்றால் மூடநம்பிக்கை என்கின்ற தீர்மானம் ஏற்பட்டு விட்டது. இந்த நிலையைத் தவிர கடவுளுக்கும், மதத்திற்கும் வேறு அவமானம் வேண்டியதில்லை. இந்த மாதிரி அறிவிற்கும், ஆராய்ச்சிக்கும் பயந்த கடவுளையும், மதத்தையும் வைத்திருக்கின்றவனை விட கடவுளையும், மதத்தையும் பற்றிக் கவலைப்படாதவனோ இல்லையென்று கருதிக் கொண்டிருக்கின்றவனோ வீரனென்றே நான் சொல்லுவேன். ஏனெனில், கவலைப்பட்டுக் கொண்டு மெய்பிக்கத் திண்டாடிக் கொண்டும், நடுங்கிக் கொண்டும் திரிவது பயங்காளித்தனமென்றே சொல்லுவேன்.

சகோதரர்களே! நாங்கள் வேலையில்லா வெட்டி ஆட்களா? அல்லது ஏதாவது பூசாரி புரோகிதர் கூட்டத்தைச் சேர்ந்தவர்களா? அல்லது ஏதாவது பண்டித புராண காலசேஷபக் கூட்டத்தார்களா? எங்களுக்கு இந்த வேலையில் ஏதாவது ஜீவனத்திற்கோ, பெருமைக்கோ சிறிதாவது வழியுண்டா? நாங்கள் ஏன் எங்கள் சொந்தக்காசையும், நேரத்தையும் செலவு செய்து கொண்டு, இந்தமாதிரி ஊர் ஊராய்ச் சுற்றிக் கொண்டு, காசுக்கு உதவாத வெறும் ஆட்கள் எல்லாம் எங்களை வையும்படியாகவும், "சாபம்" கொடுக்கும்படியாகவும், வெட்டுகின்றேன் - குத்துகின்றேன் என்று மிரட்டவும், அவ்வளவையும் இலட்சியம் செய்யாமலும், வந்தது வரட்டும் நாம் செத்துப் போனால் நமக்குத்தானாகட்டும் மற்றும் யாருக்குத்தானா கட்டும் என்ன முழுகிப் போகும் என்கின்ற துணிவின் பேரில் வீட்டிலுள்ளவர்களிடம் கடைசிப் பயணம் சொல்லிக் கொண்டு வந்து, இந்த மாதிரி அலைவதற்குக் காரணம் என்ன? என்பதை யோசித்துப் பாருங்கள்.

இக்கூட்டத்திற்குத் தலைமை வகித்திருக்கும் தலைவர் ஜனாப் தாவுத்ஷா பி.ஏ.அவர்கள் இஸ்லாம் மதத்திற்கு எவ்வளவோ பாடுபடுகின்றவர். அவர் சப் மேஜிஸ் திரேட் உத்தியோகத்தை இராஜிநாமாக் கொடுக்காமல், இப்போது அவர் உத்தியோகத்திலேயே இருந்திருப்பாரேயானால் இன்றைய தினம் ஏதாவது ஒரு பெரிய பதவியில் இருப்பார். மாதம் 4000,5000 சம்பளமுள்ள உத்தியோகத்தில் இல்லாவிட்டாலும் மாதம் ரு. 900,1000 உத்தியோகத்திலாவது இருந்திருப்பார். அப்படிப்பட்டவர் ஏன் இந்த மாதிரி பாடுபடுகிறார் என்பதை யோசித்துப் பாருங்கள்.

இன்று உலகம் போகின்ற போக்கில் உலகமக்கள் அடைந்திருக்கின்ற முற்போக்கில் - நாகரிகத்தில் நாம் எந்த நிலையிலிருக்கின்றோம் என்பதை யோசித்துப் பாருங்கள்.

நம் "அறிவாளிகள்" இன்று சாமி போச்சு, சமயம் போச்சு, சைவம் போச்சு, சாமியும், சைவமும் நெருக்கடியான நிலையில் இருக்கின்றன என்பதாக சிறிதும் வெட்கமில்லாமல் பேசிக் கொண்டிருக்கின்றார்கள். நம்மைக் காப்பாற்ற ஏற்பட்ட சர்வசக்தியுள்ள கடவுளை, நம்மை வாழ்விக்க ஏற்பட்ட பரிசுத்த சமயத்தை, நாம் காப்பாற்ற வேண்டிய அளவு நெருக்கடியான சமயம் ஏற்பட்டு விட்டது என்று சொல்ல ஆரம்பித்தால் அது கடவுளுடையவும், சமயத்தினுடையவும் பலக்குறைவா? அல்லது அந்த மாதிரி சொல்லுகின்ற மக்களின் அறிவுக்குறைவா என்பதை நீங்களே யோசித்துப் பாருங்கள். மனிதனுக்கு எப்படிச் சுயமரியாதை பிராதனமோ அப்படியே கடவுளுக்கும், மதத்திற்கும் கூடச் சுயமரியாதை அவசியம் என்பதை நீங்கள் உணருங்கள். அப்படியானால் தங்களைக் காப்பாற்ற இந்த மாதிரி இத்தனை வக்காலத்து கொடுத்திருக்கும் அவற்றிற்கு சுயமரியாதை இருக்கின்றதா என்று யோசித்துப் பாருங்கள்.

சகோதரர்களே, அய்ரோப்பாவின் "நோயாளியான" துருக்கியானது ஆண்டவனுக்கும், மார்க்கத்திற்கும் வந்த நெருக்கடிகளைக் காப்பாற்றுகின்ற வேலையில் ஈடுபட்டிருந்திருக்குமானால், இன்று அது இன்றைய மாதிரியில் இருந்திருக்க முடியுமா என்பதை யோசித்துப் பாருங்கள்! கொடுங்கோல் மன்னன் ஆட்சியில் இருந்த ருஷியா இன்று அண்டவனையும், மார்க்கத்தையும், ஆதாரத்தையும் காப்பாற்றுகின்ற வேலையில் ஈடுபட்டிருந்தால், அது இன்றைய நிலையை எந்தக்காலத்திற்காவது அடைய முடியுமாவென்பதை யோசித்துப் பாருங்கள். அதுபோலவே, சீனாவையும், ஜப்பானையும், பிரான்சையும், இங்கிலாந்தையும், அமெரிக்காவையும் நினைத்துப் பாருங்கள். எந்த நாட்டுக்காரனாவது அவனுடைய வாழ்நாளையும், சொத்தையும், நேரத்தையும் இந்த மாதிரிக் கடவுளையும், மதத்தையும் காப்பாற்றுகின்ற முட்டாள்தனமானதும், பயனற்றதும், நாசவேலையானதுமான வேலையில் ஈடுபடுத்தியிருக்கின்றார்களாவென்பதை நடு நிலையிலிருந்து யோசித்துப் பாருங்கள். கடவுள் போய்விடும் என்று பயந்த மக்களால் வேறு என்ன வேலையாகும்? என்று நினைக்கின்றீர்கள்? அவர்களை விடப் பயங்காளிகளிகள் - அறிவிலிகள் வேறு யார் இருக்கக் கூடும்? என்று எண்ணுகின்றீர்கள். கடவுளுக்கும், சமயத்திற்கும் அடிமையான நாடு ஒரு நாளும் சுதந்திரத்திற்கு அருகதையுடையதாகவே ஆகாது.

ஆகவே, நீங்கள் முதலில் அந்தப் பயத்தை ஒழியுங்கள். "சாமியை வணங்க வேண்டாம்" அதற்குப் "பூசை செய்ய வேண்டாம்" என்றால், உங்கள் மார்க்கம் போய்விடுமா? அப்படியானால் இந்து மதத்திற்கும், இஸ்லாம் மதத்திற்கும் வித்தியாசமென்ன? இந்துமத சம்பந்தமான கேள்விகளெல்லாம் பெரிதும் சமாதிதான். அந்தக் கடவுள்களெல்லாம் அநேகமாய் அந்தச் செத்துப்போன ஆள்களே தான் என்பதே எங்கள் ஆராய்ச்சிக்காரர்கள் துணிபு. அதனால் தான் பல புண்ணிய ஸ்தலங்களும், பல கடவுள்களும் ஏற்பட வேண்டியதாயிற்று. அதையொழிப்பதற்குத் தோன்றியதுதான் இஸ்லாம் மார்க்கமாகும்.

இஸ்லாம் மார்க்கத்தில் தான் ஒரே ஒரு கடவுள் என்பதும், அதற்கும் உருவமில்லை என்பதும், அதைத் தவிர வேறொன்றையும் வணங்கக் கூடாதென்பதுமான கொள்கைகள் சொல்லப்படுகின்றன. அதற்கு நேர் விரோதமாக நீங்கள் சமாதிகளையெல்லாம் வணங்கவும், பூசிக்கவும் ஆரம்பித்து விட்டீர்களானால் நீங்கள் எப்படி மற்றவர்களைக் குற்றம் சொல்ல யோக்கியதை உடையவர்களாவீர்கள்?

அதுமாத்திரமல்லாமல், அல்லாசாமி பண்டிகையிலும் கூண்டு முதலிய திருவிழாக்களிலும் இஸ்லாமானவர்கள் சிலர் நடந்து கொள்வது மிகவும் வெறுக்கத்தகுந்ததாகும். இப்படிப்பட்டவர்களைக் கொண்ட மார்க்கம் எப்படிப் பகுத்தறிவு மார்க்கமென்றும், இயற்கை மார்க்கமென்றும் சொல்லிக் கொள்ளக் கூடும்? என்பதை யோசித்துப் பாருங்கள். இவற்றையெல்லாம் ஒரு மார்க்கக் கட்டளை என்று சொல்லுவதானால் அந்த மார்க்கம் ஒருநாளும் அறிவு மார்க்கமாகவோ, உண்மையில் நன்மை பயக்கும் மார்க்கமாகவோ இருக்க முடியவே முடியாது.

அதோடுமாத்திரமல்லாமல், மார்க்கத் தலைவருக்கும் மார்க்க வழி காட்டியாருக்கும் கூட இது அவமானமும், வசைச் சொல்லுமாகும் என்றே சொல்லுவேன். இன்று இந்துவும், கிறிஸ்தவரும் பகுத்திறவைக் கண்டால் பயப்படுகின்றார்கள். இஸ்லாம் மார்க்கத்தில் தான் தங்கள் மார்க்கம் பகுத்தறிவுக்கு ஏற்றது என்று நிருபிக்க பந்தயம் கட்ட வருகிறார்கள். ஆனால், இப்படிப்பட்ட அதாவது சமாது வணக்கமும், பஞ்சாவணக்கமும், கொடி வணக்கமும், கூண்டு உற்சவமும், அல்லாசாமி பண்டிகையும் கொண்ட மக்களை ஏராளமாய் வைத்துக் கொண்டு அவற்றையும் மார்க்கக் கொள்கைகளோடு சேர்த்துக் கொண்டிருக்கின்றவர்களையும் வைத்துக் கொண்டு, இஸ்லாம் மார்க்கம் பகுத்தறிவு மார்க்கம் என்று எப்படிச் சொல்லிக் கொள்வதென்பது எனக்குத் தெரியவில்லை. நீங்களே சொல்லுங்கள். இவற்றைக் கொண்ட இஸ்லாம் மார்க்கம் பகுத்தறிவு மார்க்கமாகுமா? கோபிப்பதில் பயனில்லை.

இந்துமதம் என்பதை விட, கிறிஸ்து மதம் என்பதை விட, இஸ்லாம் மதம் என்பது மேலானது என்பது எனதபிப்ராயம் என்று எங்கும் சொல்லுவேன். ஆனால், அதில் இனி சிறிது கூடச் சீர்திருத்தம் செய்ய வேண்டிய அவசியமில்லை என்பவர்களுடன் நான் சிறிது பலமாக முரண்பட்டவனே யாவேன். ஏனெனில், நான் கண்களில் பார்ப்பதைக் கொண்டு தான் சொல்லுகின்றேன். அதுவும், இன்று இஸ்லாம் மார்க்கத்தார் என்பவர்களில் பெரும்பான்மையான மக்கள் அனுஷ்டித்து வரும் - நடந்துவரும் கொள்கைகள் இஸ்லாம் மார்க்கக் கொள்கைகள் என்றால், ஆண், பெண் இரு துறையிலும் சீர்திருத்தம் செய்ய வேண்டிய சங்கதி பல இருக்கின்றதென்று தைரியமாய்ச் சொல்லுவேன்.

நீங்களும் அவற்றைச் சீர்திருத்த வழிதேடுங்கள். அவற்றை நிலைக்க வைக்க ஆதாரத்தைத் தேடாதேயுங்கள். மனிதனின் நன்மைக்கும், சவுகரியத்திற்கும், மார்க்கம் ஏற்பட்டதென்று கருதித் தற்கால அறிவுக்கும், நிலைமைக்கும் ஒப்பிட்டுப் பாருங்கள். எக்காலத்திற்கும் ஏற்ற மதமென்றால் காலத்திற்கு ஏற்றபடி தானாகவே மாறவோ, மாற்றிக் கொள்ளவோ சவுகரியமிருக்கும் என்பதில் பயமோ, அவநம்பிக்கையோ கொள்ளாதீர்கள். இருட்டானால் விளக்கைப் பற்றவைத்துக் கொள்ளுங்கள் - பகலானால் விளக்கை அணைத்து விடுங்கள் என்று தான் பகுத்தறிவுள்ள மார்க்கம் சொல்லி இருக்கும். எப்போதும் விளக்கு வைத்திருங்கள் என்றோ, எப்போதும் விளக்கு வைத்திருக்காதீர்கள் என்றோ சொல்லி இருக்க முடியாது.

ஆகவே, காலப் போக்குடன் கலந்து கொள்ளப் பயப்படாதீர்கள். இந்தியாவுக்கு இரண்டு மதம் சொந்தமாய் விட்டது. அதாவது இந்து மதம், இஸ்லாமிய மதம் இரண்டும் ஒன்றுபட்டாலொழிய, இந்தியாவுக்கு விடுதலை இல்லை. ஒருவர் மதத்திற்கு ஒருவர் வரவேண்டுமென்றால் ஒரு நாளும் முடிவு பெறாது. இருவரும் பகுத்தறிவுப்படி நடந்து கொள்ளலாம் என்றால் யாருக்கும் ஆட்சேபனை இருக்க வழியிருக்காது. தங்கள் மதம் பகுத்தறிவுக்கு ஏற்றதாய்த் தான் இருக்கும் என்ற நம்பிக்கையுள்ளவர்கள் கண்டிப்பாய் இந்த ராஜிக்கு ஒப்புக் கொள்ளலாம். அப்படிக்கு நம்பிக்கை இல்லாதவர்கள் எடக்குப் பேசிதான் தீருவார்கள். அவர்கள் அதன் பயனை அடைந்து தான் தீருவார்கள்.

இந்த நிலையில் என்ன சுயராஜ்யம் வந்தாலும், பூணர விடுதலை வந்தாலும் அவை நமக்குள் உதை போட்டுக் கொள்ளத்தான் உதவும். இதுவரை பொதுவாகப் பேசினேன். ஏனெனில், நானும் சில நண்பர்களும் சாப்பிட்டதற்குப் பிறகு ஒரு நண்பர் இந்த ஊர் கோவில் தேரையும், கோபுரத்தையும் வந்து பார்க்கும்படி கூப்பிட்டார். நாங்கள் பார்ப்பதற்காக அங்கு சென்றோம். பிறகு அங்குப் பார்த்த ஆபாசங்களை அப்படியே சொல்ல வெட்கப்பட வேண்டியதாகவே இருக்கின்றது. காட்டுமிராண்டிகள் காலத்தில் தான் சாமிகளும், கோவில்களும் ஏற்பட்டதென்று சொன்னால் யாராவது மறுக்க முடியாதபடி அவை அமைக்கப்பட்டிருக்கின்றன.

முதலாவது நாங்கள் இந்த ஊர் (களக்காடு) தேரைப் பார்த்தோம். அதில் சித்தரித்து வைக்கப்பட்டிருக்கும் உருவங்கள் மிகமிக ஆபாசமானவையாய்க் காணப்பட்டன. அவற்றிற்கு என்னதான் தத்துவார்த்தம் சொல்லுவதானாலும், மனிதப் பெண்ணை கழுதை சம்போகம் பண்ணுவது போலும், இது போன்ற மற்றும் பல உருவங்களைச் சித்தரித்து வைத்திருப்பதை எப்படி ஒப்புக் கொள்வது என்பது எனக்கு விளங்கவில்லை. கோபுரங்களைப் பார்த்ததைப் பற்றிச் சொல்லலாம் என்றாலோ, அவற்றைப் பற்றி இன்னும் ஒரு தடவை நினைப்பதற்குக் கூடக் கஷ்டமாய் இருக்கின்றது. பெண்களை அதில் படுத்துகின்ற பாடும், காம விகாரங்களை அதில் எடுத்துக் காட்டி இருக்கும் முறையும் அநியாயம், அநியாயம். இவற்றையெல்லாம் நெருப்பு வைத்துக் கொளுத்தி இடித்து எறிந்து, இவற்றிற்கு ஆதாரமான சாத்திரங்களையெல்லாம் பொசுக்கி சமூத்திரத்தில் கரைத்துவிட்டாலொழிய இதைச் சேர்ந்த மனிதர்கள் மனிதர்களாகக் கருதப்பட முடியவே முடியாது.

"சுயமரியாதைக்காரர்கள், புராணக் குப்பைகளைக் கிளறிக் கிளறி வெறும் ஆபாசங்களைப் பேசுகின்றார்கள், எழுதுகின்றார்கள்" என்று பேசுகின்றீர்கள். எங்கள் மீது சில சமயத்தில் வெறுப்பும் கொள்ளுகின்றீர்கள். ஆனால், இந்தக் கோவில்களுக்குப் போய் தேங்காய், பழம் உடைத்து வைத்து, காசு கொடுத்து இந்த உருவங்களைப் பார்க்க வந்து கொண்டிருப்பவர்கள் மனிதர்களா? என்பதைப் பற்றி நீங்கள் சிறிது கூடச் சிந்திப்பதில்லை. நாங்கள் எழுதுவதையும், பேசுவதையும் பார்த்து வெறுப்புக் கொண்டு என்ன செய்வது? இவ்வளவு பேசியும், எழுதியும் இந்த நடவடிக்கைகள் நின்றதா? நிறுத்த யாராவது பாடுபட்டீர்களா? காரமடைத் தேரில் இதைவிட அசிங்கமாகப் பார்த்தேன். திருவொற்றியூரில் வெகு ஆபாசமாய்ப் பார்த்தேன். மதுரை முதலிய இடம் சொல்லவே வேண்டியதில்லை. ஆனால், இந்த ஊர் கோபுரம் எல்லாவற்றையும் மீறி விட்டது. இதுவரை நாங்கள் எழுதாத, பேசாத, நினைக்கவே முடியாத விஷயங்கள் எல்லாம் சாமிகளாகவும், ரிஷிகளாகவும், முனிவர்களாகவுமே காணப்படுவது இன்னும் மோசமாய் இருக்கின்றது.

இதையெல்லாம் பற்றி அந்நிய மதக்காரர்கள் பரிகாசம் பண்ண மாட்டார்களா? கேவலமாய் நினைக்க மாட்டார்களா? என்கின்ற மான அவமானமே இல்லாமல் போய்விட்டது. இதை நிறுத்த வேண்டுமா, வேண்டாமா? நிறுத்த வேண்டுமானால் என்ன செய்வது? இதுவரை சமய திருத்தக்காரரும், சமூக திருத்தக்காரரும் இந்த ஆபாசங்களின் பக்கம் திரும்பியாவது பார்த்தார்களா? போதாக் குறைக்குப் பணம் படைத்த மூடர்களும், யோக்கியப் பொறுப்பற்றவர்களும், இந்த சித்திரங்களுக்குச் சாயம் அடித்து ரிப்பேர் செய்கின்றார்களே அவர்களை என்னவென்றுதான் சொல்லுவது என்பது விளங்கவில்லை. சிறிதும் ஈவு இரக்கமில்லாமல் ஊரார் பணத்தை ஏழைகள் பணத்தைக் கொள்ளை அடித்து, அவர்களைப் பட்டினி போட்டுவிட்டு இந்த மாதிரி மிருக – மனிதப் புணர்ச்சிகளுக்குப் பொம்மைகள் செய்து சாயம் அடித்து பூசை செய்வது என்பது எவ்வளவு இழிவானதும், திமிர்பிடித்ததுமான காரியமாகும் என்பதை யோசித்துப் பாருங்கள்.

இந்த இலட்சணத்தில் நாங்கள் இந்தக் கோவிலுக்குள் புகுந்து விடுவோமென்று இப்போது போலீசு காவல் போடப்பட்டிருக்கின்றதாம். நாங்கள் எந்த ஊருக்குப் போனாலும் அங்குள்ள கோவில்காரர்கள் எல்லாம் இப்படியே தான் செய்கின்றார்கள். ஆகவே இந்துக்கள், சமயவாதிகள், சைவர்கள், வைணவர்கள் என்பவர்கள் இவற்றிற்கெல்லாம் என்ன பதில் சொல்லுகின்றார்கள்? என்று கேட்கின்றேன். இந்த இந்து மதத்தை இன்னமும் எத்தனை நாளைக்குத் தான் காப்பாற்றப் போகின்றீர்கள்? என்று கேட்கின்றேன்.

மதம், ஜாதி, கோவில் என்றால் முட்டாள்தனம், அயோக்கியத்தனம், ஆபாசம் என்று தான் சொல்ல வேண்டியிருக்கின்றது. வருத்தப்பட்டுப் பயனில்லை வெட்கப்பட வேண்டும். அப்போது தான் அறிவு, ஒழுக்கம், நாகரிகம் விளங்கும்.

ஆகவே, சகோதரர்களே! இவ்விஷயங்களை நன்றாய் ஆலோசித்துப் பார்த்து ஒரு முடிவுக்கு வாருங்கள். பொருளற்ற கூப்பாடு போடுவதால் பயன் விளையாது. இனியும் இந்த மாதிரி குஷ்ட வியாதி வந்த சரீரம் இந்தச் சமூகம் நாறி அழுந்திக் கொண்டிருப்பதில் பயனில்லை என்பதை வணக்கமாய்த் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.

--------------------27-12-1930 இல் களக்காடு அய்க்கிய முஸ்லிம் சங்கத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு - "குடிஅரசு"01-02-1931.

4 comments:

சங்கதி said...

ஓவியா...
நீங்கள் கூறும் அல்லாசாமி பண்டிகையெல்லாம் இஸ்லாத்தில் இல்லையம்மா. இஸ்லாம் பற்றி பூரண அறிவில்லாதவர்கள் இந்து மதத்தையும் இஸ்லாத்தையும் ஒன்றாக கழந்து கட்டி புதிய மதமொன்றை பின்பற்றுபவர்கள் செய்கின்ற வேலைகள்தான் இவை. இஸ்லாத்தில் பண்டிகைகள் இரண்டுதான். நோன்புப் பெருநாள் மற்றும் ஹஜ்ஜுப் பெருநாள்.
எந்த மார்கத்தையும் அதன் அடிப்படையை விளங்கிய பிறகு கருத்துக் கூறுங்கள். இந்துத்துவ கண்ணோட்டத்தில் இஸ்லாத்தை நோக்க வேண்டாம்.

6 said...

இந்த உரையில் உள்ள ஒரு வார்த்தையை கூட தவிர்க்க முடியாதது அய்யாவழி என்றும் அறிவு வழி

6 said...

இந்த உரையில் உள்ள ஒரு வார்த்தையை கூட தவிர்க்க முடியாதது அய்யாவழி என்றும் அறிவு வழி

6 said...

அய்யாவழி என்றும் அறிவுவழி :)