Search This Blog

2.7.10

பெண்கள் உண்மை விடுதலையடைய வேண்டுமானால் ஆண்மை அழிய வேண்டும்




பெண்கள் விடுதலையின் பேரால் உலகத்தில் அனேக இடங்களில், அனேக சங்கங்களும், முயற்சிகளும் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டு வருவது யாவரும் அறிந்ததே. இம்முயற்சிகளில் ஆண்களும் மிகக் கவலையுள்ளவர்கள் போலக் காட்டிக் கொண்டு மிகப் பாசாங்கு செய்து வருகின்றார்கள். ஆண்கள் முயற்சியால் செய்யப்படும் எவ்வித விடுதலை இயக்கமும் எவ்வழியிலும் பெண்களுக்கு உண்மையான விடுதலையை அளிக்கமுடியாது. தற்காலம் பெண்கள் விடுதலைக்காக பெண்மக்களால் முயற்சிக்கப்படும் இயக்கங்களும் யாதொரு பலனையும் கொடுக்காமல் போவதல்லாமல் மேலும் மேலும் அவை பெண்களின் அடிமைத்தனத்திற்கே கட்டுப்பாடுகளை பலப்படுத்திக்கொண்டே போகும் என்பது நமது அபிப் பிராயம். எதுபோலவென்றால், இந்திய பொதுமக்கள் விடுதலைக்கு வெள் ளைக்காரரும் பார்ப்பனரும் பாடுபடுவதாக ஏற்பாடுகள் நடந்து வருவதின் பலனாக எப்படி நாளுக்கு நாள் இந்திய மக்களுக்கு அடிமைத்தனம் விடுதலை பெற முடியாதபடி பலப்பட்டு என்றென்றைக்கும் கட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறதோ அதுபோலவும் சமூகசீர்திருத்தம், சமத்துவம் என்பதாக வேஷம் போட்டுக் கொண்டு பார்ப்பனர்களும் புராணக்காரர்களும் சீர் திருத்தத்தில் பிரவேசித்து வருவதன் பலனாக எப்படி சமூகக் கொடு மைகளும் உயர்வு தாழ்வுகளும் சட்டத்தினாலும் மதத்தினாலும் நிலை பெற்று பலப்பட்டு வருகின்றதோ அது போலவுமே என்று சொல்லலாம்.

அன்றியும் ஆண்கள், பெண்கள் விடுதலைக்குப் பாடுபடுவதால் பெண்களின் அடிமைத்தனம் வளருவதுடன் பெண்கள் என்றும் விடுதலை பெற முடியாத கட்டுப்பாடுகள் பலப்பட்டு கொண்டு வருகின்றன. பெண்களுக்கு மதிப்புக் கொடுப்பதாகவும் பெண்கள் விடுதலைக்காக பாடுபடுவதாகவும் ஆண்கள் காட்டிக்கொள்வதெல்லாம் பெண்களை ஏமாற்றுவதற்குச் செய்யும் சூழ்ச்சியே ஒழிய வேறல்ல. எங்காவது பூனைகளால் எலிக்கு விடுதலை உண்டாகுமா? எங்காவது நரிகளால் ஆடு கோழிகளுக்கு விடுதலை உண்டாகுமா? எங்காவது முதலாளிகளால் தொழிலாளிகளுக்கு விடுதலை உண்டாகுமா? எங்காவது வெள்ளைக்காரர்களால் இந்தியர் களுக்கு செல்வம் பெருகுமா? எங்காவது பார்ப்பனர்களால் பார்ப்பனரல் லாதார்களுக்குச் சமத்துவம் கிடைக்குமா? என்பதை யோசித்தால் இதன் உண்மை விளங்கும். அப்படி ஒருக்கால் ஏதாவது ஒரு சமயம் ³ விஷயங்களில் விடுதலை உண்டாய் விட்டாலுங் கூட ஆண்களால் பெண்களுக்கு விடுதலை கிடைக்கவே கிடைக்காது என்பதை மாத்திரம் உறுதியாய் நம்பலாம். ஏனெனில் ஆண்மை என்னும் பதமே பெண்களை இழிவுபடுத்தும் முறையில் உலக வழக்கில் உபயோகப்படுத்தப்பட்டு வருகின்றது என்பதைப் பெண்கள் மறந்துவிடக் கூடாது அந்த ஆண்மை உலகில் உள்ள வரையிலும் பெண்மைக்கு மதிப்பு இல்லை யென்பதைப் பெண்கள் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். உலகத்தில் “ஆண்மை” நிற்கும் வரையில் பெண்கள் அடிமையும் வளர்ந்தே வரும். பெண்களால் “ஆண்மை” என்ற தத்துவம் அழிக்கபட்டாலல்லாது பெண்மை விடுதலை யில்லை யென்பது உறுதி. “ஆண்மை”யால்தான் பெண்கள் அடிமையாக்கப்பட்டிருக்கின்றார்கள்.

சுதந்தரம், வீரம் முதலிய குணங்கள் உலகத்தில் “ஆண்மை”க்குத்தான் உரியதாக்கப்பட்டுவிட்டது. ஏன்? “ஆண்மை”க்குத்தான் அவைகள் உண்டு என்று ஆண்மக்கள் முடிவு கட்டிக் கொண்டிருக்கிறார்கள். இதை மாத்திரம் பெண்கள் நன்றாய் உணர வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுகின்றோம்.

எனவே பெண்மக்கள் அடிமையானது ஆண் மக்களாலேயேதான் ஏற்பட்டது என்பதும், அதுவும் “ஆண்மை”யும் பெண் அடிமையும் கடவுளாலேயே ஏற்படுத்தப்பட்டதாக எல்லா ஆண்களும் கருதிக் கொண்டி ருக்கிறார்கள் என்பதும், அதோடு பெண் மக்களும், இதை உண்மை என்றே நினைத்துக்கொண்டு வந்த பரம்பரை வழக்கத்தால் பெண் அடிமைக்கு பலம் அதிகம் ஏற்பட்டிருக்கின்றதென்பதும், நடுநிலைமைப் பெண்களுக்கும் ஆண்களுக்கும் யோசித்துப்பார்த்தால் விளங்காமல் போகாது. பொது மக்கள் பிறவியில் உயர்வு தாழ்வு ஒழிய வேண்டுமானால், எப்படி கடவுளாலேயே மக்களுக்கு பிறவியில் உயர்வு தாழ்வு கற்பிக்கப்பட்டிருக்கின்றது என்ற இந்துமதக் கொள்கையைச் சுட்டுப்பொசுக்க வேண்டியது அவசியமோ அதுபோலவே பெண்மக்கள் உண்மை விடுதலை பெற்று உண்மை சுதந்திரம் பெற வேண்டுமானால் “ஆண்மை”யும் “பெண் அடிமையும்” கடவுளால் உண்டாக்கப்பட்டவை என்பதற்குப் பொறுப்பாயுள்ள கடவுள் தன்மையும் ஒழிந்தாக வேண்டும்.

பெண்கள் விடுதலை பெறுவதற்கு இப்போது ஆண்களைவிடப் பெண்களே பெரிதும் தடையாயிருக்கின்றார்கள். ஏனெனில் இன்னமும் பெண்களுக்கு தாங்கள் முழு விடுதலைக்கு உரியவர்கள் என்கின்ற எண்ணமே தோன்றவில்லை. தங்களுடைய இயற்கைத் தத்துவங்களின் தன்மையையே தங்களை ஆண்களுக்கு அடிமையாகக் கடவுள் படைத்தி ருப்பதின் அறிகுறிகளாய்க் கருதிக் கொண்டிருக்கின்றார்கள். எப்படியெனில் பெண் இல்லாமல் ஆண் வாழ்ந்தாலும் வாழலாம்; ஆனால் ஆண் இல்லாமல் பெண் வாழமுடியாதென்று ஒவ்வொரு பெண்ணும் கருதிக் கொண்டிருக் கிறாள். அப்படி அவர்கள் கருதுவதற்கு என்ன காரணம் என்று பார்ப்போ மானால், பெண்களுக்குப் பிள்ளைகள் பெறும் தொல்லை ஒன்று இருப்பதால் தாங்கள் ஆண்கள் இல்லாமல் வாழ முடியும் என்பதை ருஜுப்படுத்திக் கொள்ள முடியாதவர்களாயிருக்கின்றார்கள். ஆண்களுக்கு அந்தத் தொந்த ரவு இல்லாததால் தாங்கள் பெண்கள் இல்லாமல் வாழ முடியும் என்று சொல்ல இடமுள்ளவர்களாயிருக்கின்றார்கள். அன்றியும் அப்பிள்ளை பெறும் தொல்லையால் தங்களுக்குப் பிறர் உதவி வேண்டியிருப்பதால் அங்கு ஆண்கள் ஆதிக்கம் ஏற்பட இடமுண்டாய்விடுகின்றது. எனவே உண்மை யான பெண்கள் விடுதலைக்கு பிள்ளை பெறும் தொல்லை அடியோடு ஒழிந்து போகவேண்டும். அது ஒழியாமல் சம்பளம் கொடுத்து புருஷனை நியமித்துக் கொள்வதாயிருந்தாலும் பெண்கள் பொதுவாகஉண்மைவிடுதலை அடைந்துவிட முடியாது என்றே சொல்லுவோம். இம்மாதிரி இதுவரை வேறு யாரும் சொன்னதாகக் காணப்படாவிட்டாலும் நாம் இதைச் சொல்வது பெரிதும் முட்டாள்தனமோ என்பதாகப் பொதுமக்கள் கருதுவார்கள் என்று இருந்தாலும் இந்த மார்க்கத்தைத் தவிர - அதாவது பெண்கள் பிள்ளை பெறும் தொல்லையில் இருந்து விடுதலையாக வேண்டும் என்கின்ற மார்க்கத்தைத் தவிர - வேறு எந்த வகையிலும் அவர்களுக்கு விடுதலை இல்லை என்கின்ற முடிவு நமக்குக் கல்லுப் போன்ற உறுதி உடையதாய் இருக்கின்றது. சிலர் இதை இயற்கைக்கு விரோதம் என்று சொல்லவரலாம். உலகத்தில் மற்றெல்லாத் தாவரங்கள், ஜீவப்பிராணிகள் முதலியவை இயற்கை வாழ்வு நடத்தும்போது மானிட வாழ்க்கையில் மாத்திரம் இயற்கைக்கு விரோதமாகவே அதாவது பெரும்பாலும் செயற்கைத் தன்மையாகவே வாழ்வு நடத்தி வருகின்றபோது, இந்த விஷயத்திலும் இயற்கைக்கு விரோத மாய் நடைபெறுவதில் ஒன்றும் முழுகிப் போய்விடாது.

தவிர “பெண்கள், பிள்ளை பெறுவதை நிறுத்திவிட்டால் உலகம் விர்த்தியாகாது, மானிட வர்க்கம் விர்த்தியாகாது” என்று தர்ம நியாயம் பேசச் சிலர் வருவார்கள். உலகம் விர்த்தியாகாவிட்டால் பெண்களுக்கு என்ன நஷ்டம்? மானிட வர்க்கம் பெருகாவிட்டால் பெண்களுக்கு என்ன ஆபத்து ஏற்பட்டுவிடக்கூடும்? அல்லது இந்த தர்ம நியாயம் பேசுபவர்களுக்குத்தான் என்ன கஷ்டம் உண்டாகிவிடும் என்பது நமக்குப் புரியவில்லை. இதுவரையில் பெருகிக் கொண்டு வந்த மானிட வர்க்கத்தால் மானிட வர்க்கத்திற்கு ஏற்பட்ட நன்மைதான் என்ன என்பதும் நமக்குப் புரியவில்லை.

பெண்களின் அடிமைத்தன்மை பெண்களை மாத்திரம் பாதிப்ப தில்லை. அது மற்றொரு வகையில் ஆண்களையும் பெரிதும் பாதிக்கின்றது. இதைசாதாரண ஆண்கள் உணருவதில்லை. ஆனால் நாம் இவ்விஷயத்தில் அதைப்பற்றிச் சிறிதும் கவலைகொள்ளவில்லை. பெண்களைப் பற்றியே கவலைகொண்டு சொல்லுகின்றோம். தற்கால நிலைமையில் பெண்களின் விடுதலைக்குப் பெண்களே வேறு எந்த முயற்சி செய்தாலும் அது சிறிதாவது ஆண்களுக்குக் கஷ்டத்தைக் கொடுக்கக்கூடியதாக இருக்கலாம். ஆனால் இந்தக்காரியத்தில், அதாவது பெண்கள் பிள்ளை பெறுவதில்லை என்கின்ற காரியத்தில் ஆண்களுக்கு எவ்விதக் கஷ்டமும் நஷ்டமும் கிடையாது என்ப தோடு ஆண்களுக்கு இலாபமும் உண்டு என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகிறோம். எப்படியெனில் ஒரு மனிதன் தான் பிள்ளைகுட்டிக் காரணாயிருப்பதினாலேயே யோக்கியமாகவும் சுதந்திரமாகவும் நடந்து கொள்ளப் பெரிதும் முடியாமலிருக்க வேண்டியவனாய் விடுகிறான். அன்றி யும் அவனுக்கு அனாவசியமான கவலையும் பொறுப்பும் அதிகப்படவும் நேரிடுகின்றது. மற்றபடி இதனால் ஏற்படும் மற்ற விஷயங்களையும் முறைகளையும் மற்றொரு சமயம் விரிப்போம்.

-------------------- தந்தைபெரியார் - “குடி அரசு” - தலையங்கம் - 12-08-1928

0 comments: