Search This Blog

5.7.10

பெரியார் கண்ட வாழ்வியலைத் தெரிந்து கொள்ள வேண்டும்

பிறக்கும்பொழுது எல்லா குழந்தைகளும் நாத்திகக் குழந்தைகளாகத்தான் பிறக்கின்றன
சென்னை புரட்சிக் கவிஞர் விழாவில் தமிழர் தலைவர் பேச்சு

பிறக்கின்ற எந்தக் குழந்தையும் பக்தி எண்ணத்தோடு பிறப்பதில்லை. நாத்திகக் குழந்தையாகத்தான் பிறக்கின்றது என்று வாழ்வியல் சிந்தனை கருத்துகளை எடுத்துக் கூறி தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

சென்னை_வியாசர்பாடியில் 19.6.2010 அன்று நடைபெற்ற புரட்சிக் கவிஞர் விழாவில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:

அற்புதமான விழா !

மிகுந்த மகிழ்ச்சிக்கும், எழுச்சிக்கும் இடையிலே புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் விழா இங்கே நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

இன்று பிற்பகல் 3 மணிக்குத் தொடங்கி இதுவரையிலே சிறப்பாக நடைபெறுகின்றது இந்த விழா. குடும்பங்கள் இணைந்த அற்புதமான விழாவாக அமைந்திருக்கிறது. இந்த நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்த பகுத்தறிவாளர் கழகத் தோழர்களுக்கும், பொறுப்பாளர்களுக்கும், திராவிடர் கழகத் தோழர்களுக்கும் என்னுடைய மனமுவந்த நன்றியைப், பாராட்டைத் தெளிவாக தெரிவித்துக்கொள்கிறேன்.

எடுத்துக்காட்டான விழா!

ஏனென்றால் இது ஓர் எடுத்துக்காட்டான விழா. ஏற்கெனவே நம்முடைய தலைமை நிலையத்தாலே நடத்தப்பட்டிருந்தாலும்கூட, புரட்சிக் கவிஞர் அவர்களுடைய பெயரைப் பயன்படுத்தி ஒரு நல்ல விழாவை, அருமையான பெரியார் குருத்துகளை அழைத்து வந்து அவர்களுக்குள்ளே இருக்கின்ற ஆற்றல்களை அற்புதமாக வெளியே கொண்டு-வந்திருக்கின்றீர்கள்.

பெரியார் பிஞ்சுகளின் கலை நிகழ்ச்சிகள்

இங்கே நம்முடைய இளம் பெரியார் பிஞ்சுகள் அற்புதமாக கலை நிகழ்ச்சிகளை நடத்தினார்கள். அவர்களுக்குள்ளே எவ்வளவு பெரிய ஆற்றல் புதைந்திருக்கிறது என்பதை எண்ணிப் பார்க்கும் பொழுது புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் மிக அழகாகச் சொன்னார்.

இன்று குழந்தைகள் நீங்கள்!

இன்று குழந்தைகள் நீங்கள் எனினும்

இனி இந்த நாட்டினை ஆளப்பிறந்தீர்!

இன்று குழந்தைகள் நீங்கள்!

தின்றதையே தின்று தெவிட்டுதல் இல்லாமல்

அன்றன்று வாழ்விற் புதுமை காண வேண்டும்!

இன்று குழந்தைகள் நீங்கள்!

என்று அவர்கள் சொன்னார்கள். அப்படிப்பட்ட அறிவார்ந்த ஒரு கருத்தரங்கம். வெறும் கேளிக்கை சிரிப்பு, அர்த்தமற்றது என்று இல்லாமல், பொருள் பொதிந்த ஒரு சமுதாய மாற்றத்திற்கான நிகழ்ச்சியாக இந்த நிகழ்ச்சியை அமைத்த தோழர்களைப் பாராட்டுகிறோம்.

பெரியார் மய்யம்பற்றி தகவல் நூல்

அது போல பெரியார் மய்யம் தகவல்கள் அடங்கிய குறிப்பு நூலை பகுத்தறிவாளர் கழக மாநில பொதுச்செயலாளர் தோழர் வீ.குமரேசன் அவர்களாலே தொகுக்கப்பட்டு சிறப்பாக அந்த நூலை இங்கே வெளியீட்டீர்கள்! அதற்காகவும் எனது மனம் நிறைந்த பாராட்டுதல்கள். நம்முடைய பிள்ளைகள் நல்ல அளவுக்கு நடனம் ஆடியது. புரட்சிக் கவிஞரின் சங்கே முழங்கு என்ற பாடலைப் பாடும்பொழுது மிகச் சிறப்பாக இருந்தது.

வெற்றிச்செல்வன் ஆற்றல்

நம்முடைய பெரியார் பிஞ்சு வெற்றிச்செல்வன் அவர்களுடைய ஆற்றலை நாம் கண்டோம். அந்த அளவிற்கு நம்முடைய இனத்தில் ஆற்றல் வாய்ந்தவர்கள் இருக்கிறார்கள்.

ஒரு காலத்திலே நம்முடைய பிள்ளைகள் நன்றாகப் படித்தால் பார்ப்பாரக் குழந்தைகள் மாதிரி இருக்கிறது என்று சொல்லுவார்கள். குழந்தை சிவப்பாக இருந்தால் பார்ப்பாரக் குழந்தை மாதிரி இருக்கிறது என்று சொல்லுவார்கள்.

நம் பிள்ளைகளைப் பார்த்துதான்....

இன்றைக்கு அப்படி இல்லை. நம்முடைய பிள்ளைகளைப் பார்த்துதான் மற்றவர்கள் வரவேண்டும் என்று சொல்லக்கூடிய அளவிற்கு வளர்ந்திருக்கிறார்கள். (கைதட்டல்).

இன்றைய விடுதலை ஏட்டைப் பார்த்தீர்களேயானால் கூட உங்களுக்குத் தெரியும். பொறியியல் துறையிலே பெண்கள் முதன்மையாக வந்திருக்கிறார்கள்.

பொதுப்போட்டியில் பிற்படுத்தப்பட்டவர்களும், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களும், தாழ்த்தப்பட்டவர்களும், மலைவாழ் மக்களும் வருகிறார்கள் என்று சொன்னால் இதுதான் மிகப்பெரிய செய்தி. இதுதான் ஆச்சரியம். நமக்குத் தகுதி இல்லை. திறமை இல்லை என்று சொன்னார்கள்; அது அத்துணையும் மாய்மாலம்.

அவை அத்துணையும் புரட்டு. அந்தப் புரட்டுகளை உடைக்கின்ற சக்தி பெரியாரின் கைத்தடிக்கு உண்டு. இந்த கழகத்தினுடைய பணி_இந்த கொள்கையினுடைய பயனால் இவை எல்லாம் விளைந்திருக்கிறது.

ஆகவே அருமை மாணவச் செல்வங்கள், இளம் பெரியார் பிஞ்சுகள், இவர்களின் பெற்றோர்களாகிய நீங்கள் அருமையாக வழிநடத்தியிருக்கின்றீர்கள். அதற்காகப் பாராட்டு. ஏனென்றால் எல்லா குழந்தைகளும் பிறக்கும்பொழுது நாத்திகக் குழந்தைகள்தான்.

கடவுள் நம்பிக்கையோடு பிறப்பதில்லை

எந்தக் குழந்தையும், அது யார் வீட்டில் பிறந்தாலும் கடவுள் நம்பிக்கையோடு பிறப்பதில்லை. எந்தக் குழந்தையாவது கும்பிட்டுக் கொண்டே வந்து பிறந்தது என்று சொல்வதற்கு ஏதாவது அடையாளம் உண்டா? அந்த குழந்தைக்கு சாமி எப்பொழுது தெரியும் என்றால் பெற்றோர்கள் கோவிலுக்குப் போய், பஸ்கி போட்டு, தண்டால் போட்டு, பழக்கம் ஏற்படுத்துவதன் காரணமாகத்தான் குழந்தைகள் சாமி கும்பிடுகின்றன. கன்னத்தில் போட்டுக்கொள் என்றால் போட்டுக்கொள்ளும்.

நாத்திக குழந்தைகள்தான்!

ஆகவே பிறந்த குழந்தைகள் அத்துணை குழந்தைகளும், பிறக்கும்பொழுது நாத்திகக் குழந்தைகள்தான். அவர்கள் யாரும் நம்பிக்கைவாதிகள் அல்ல. இயல்பாகவே அவர்கள் பகுத்தறிவுவாதிகள் தான். பசித்தால் அழும். குழந்தைக்கு என்ன உணர்வோ அதைக் காட்டும்.

குழந்தைகளின் ஆற்றலை, அறிவை நாம் தடுத்து விடுகின்றோம். இதைப் பண்ணாதே, அதைப் பண்ணாதே நம்பு, நம்பு, என்று சொல்லி பல வகையிலும் நாம் கட்டுப்பாடுகளைப் போடுகின்றோம்.

சிறார் முதல் பெற்றோர்வரை

இந்த நிகழ்ச்சிக்கு சிறார்கள் முதல் பெற்றோர்கள் வரை நிறைய பேர் வந்திருக்கிறீர்கள். இந்த முயற்சி ஒரு நல்ல வாழ்வியல் அரங்கம். இதுமாதிரி முயற்சிகளை நம்முடைய தோழர்கள், பகுத்தறிவாளர் கழகத் தோழர்களும், திராவிடர் கழகத் தோழர்களும் சென்னையில் பல்வேறு அரங்கங்களில் இப்படி மாதாமாதம் நடத்தினால் அந்த குடும்பங்களை அழைத்து நடத்தினால் அது மிகச்சிறப்பாக இருக்கும்.

ஏனென்றால் நம்முடைய குடும்பங்களுக்கு வேறு பொழுது போக்கெல்லாம் கிடையாது. எல்லோரும் இந்த மாதிரி ஒன்று சேரவேண்டும். அவர்களுக்கு பெரிய சாப்பாடு எல்லாம் தேவையில்லை. சாதாரணமான சிற்றுண்டியே கொடுக்கலாம்.

மாலை நேரத்தில் நிகழ்ச்சி தொடங்க வேண்டும். மாலை 4மணிக்குத் தொடங்கி இரவு 7 மணிக்கெல்லாம் முடித்துவிட வேண்டும். எல்லோரும் இரவு ஏழு மணிக்கெல்லாம் வீட்டிற்குப் போய்விட வேண்டும்.

பிள்ளைகள் எல்லாம் இந்த நிகழ்ச்சிக்கு வர வேண்டும். குடும்பத்தோடு வரவேண்டும். கணவன், மனைவி, பிள்ளைகள் எல்லோரும் வரவேண்டும். நல்ல நிகழ்ச்சிகளை நடத்தவேண்டும். உடல் கூறுகளைப் பற்றி ஒரு சிலர் பேச வேண்டும். உடல் நலனை எப்படி பாதுகாப்பது? மனவளத்தை எப்படி பெருக்கிக்கொள்வது இவை அத்துணையும் தெளிவாக எடுத்துச்சொல்ல வேண்டும்.

குழந்தைகளிடம் நேரத்தை
செலவு செய்வீர்!

அதிலேயும் அண்மைக் காலத்திலே நாம் குழந்தைகள் மத்தியில் செலவு செய்கிற நேரம் குறைந்து வருகிறது. இப்பொழுது கணவன்_மனைவி இரண்டு பேருக்கும் வருவாய் இருக்க வேண்டும் என்று நாம் நினைக்கின்றோம். இரண்டு பேரும் உத்தியோகத்திற்கும் போகிறார்கள். அவர்கள் வளர்ச்சி அடைகிறார்கள். நல்ல குடும்பம்.

அதில் ஒன்றும் சந்தேகமில்லை. ஆனால் குழந்தைகளோடு நாம் நேரத்தை செலவு செய்வது இருக்கிறதே. இந்த வேகமான வாழ்க்கையிலே ரொம்ப குறைவாக இருக்கிறது. இது குழந்தைகளின் மனோ தத்துவ வளர்ச்சிக்கு ரொம்ப இடையூறாக இருக்கிறது.

பெற்றோர்கள் குழந்தைகளைப் படிக்க சேர்த்து விடுவார்கள். குழந்தை என்ன படிக்கிறது என்று கேட்டால் பல பேருக்குத் தெரியாது.

தாத்தா-பேரப் பிள்ளைகள்

தாத்தாக்கள் பேரப்பிள்ளைகளிடம் நன்றாகப் பழகுவார்கள். ஆனால் அப்பாக்கள் பிள்ளைகளோடு அந்த அளவுக்குப் பழகுகிறார்களா? என்றால் கிடையாது. பல குழந்தைகளிடம் நட்பு ரீதியாக நாம் பழக வேண்டும்.

குழந்தைகள் ஏன்? எதற்கு? என்று கேள்வி கேட்க வேண்டும். அதை விளக்கி நாம் சொல்ல வேண்டும். அது மாதிரி குழந்தை வளர்ப்பிலே மேலெழுந்த வாரியாக வரவேண்டும். நான் கூட வாழ்வியல் சிந்தனையில் ஒன்றை எழுதினேன்.

அமெரிக்காவில் நடைபெற்ற ஓரு சம்பவம்

அமெரிக்காவில் ஒரு குடும்பத்தில் நடைபெற்ற சம்பவத்தைப் படித்து விட்டு அதைப்பற்றி வாழ்வியல் பகுதியில் எழுதியிருந்தேன். பொதுவாக எல்லா பெண்குழந்தைகளும் அவர்களுடைய அப்பாவிடம் தான் அதிக ஈடுபாடு இருக்கும் நீங்கள் பார்த்திருப்பீர்கள். அந்த நிலையில் ஒரு குழந்தை திடீரென்று ஒரு கேள்வி கேட்டது. என்ன கேள்வி? அப்பா உங்களுக்கு எவ்வளவு சம்பளம் என்று கேட்டது. என்ன குழந்தை இந்த மாதிரி புதிதாக கேள்வி கேட்கிறதே என்று அப்பா நினைத்தார். அதற்கு ஒரு பத்து வயதுதான் இருக்கும். அதற்கு என்ன சம்பளத்தை பற்றி கவலை? வெளிநாட்டில் ஒருவருடைய கவலையை இன்னொருவர் பரிமாறிக்கொள்வது அவ்வளவு சுலபம் அல்ல. உங்கள் வயதென்ன? என்று எடுத்தவுடனே கேள்வி கேட்டுவிடமாட்டார்கள். உடனே தந்தை சொல்லுகிறார், ஏம்மா, உனக்கு எதைத் தெரிந்து கொள்ள வேண்டும்? என்று கேட்கிறார். அவர் தனக்கு சம்பளம் 100 டாலர், 200 டாலர் என்று சொல்லுகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். மகள் சேர்த்து வைத்திருந்த பணத்தைக் கொடுத்தார்

அந்த குழந்தைக்குப் பிறந்தநாள் வந்தது. மெழுகுவத்தி வைத்து கேக் வெட்டினார்கள். பிள்ளைக்கு அப்பா பரிசு கொடுப்பதற்குப் பதிலாக பிள்ளை ஞாபகமாக ஒரு செயலை செய்தது.

ஒரு கவரை எடுத்து எழுதியது நான் அப்பா அம்மாவை மகிழ்ச்சியாக நேசிக்கிறேன். விரும்புகிறேன் என்று ஒரு கவரை தனது தந்தையிடம், அந்த குழந்தை கொடுத்தது. அவருக்கோ ரொம்ப ஆச்சரியம். என்ன அதில் இருந்தது. என்றால் அப்பாவுக்கு மகள் கடிதம் எழுதியிருந்தது. அப்பா அவர்களுக்கு, உங்களுடைய சம்பளத்தை சொன்னீர்கள். நான் கணக்கு போட்டுப் பார்த்தேன் நீங்கள் சொன்ன சம்பளப்படி பார்த்தீர்களேயானால் பத்து பதினைந்து டாலர் வருகிறது. நீங்கள் கொடுக்கின்ற பணத்தை நான் சேமித்து வைத்திருந்தேன்.

4 நாட்களும் என்னோடு இருக்கவேண்டும்

நான்கு நாட்களுக்கு நீங்கள் என்னோடு இருக்க வேண்டும். நீங்கள் எழுப்பொழுதுமே இருப்பதில்லை. விடுமுறையில் கூட நீங்கள் வெளியில் போய் விடுகின்றீர்கள். ஆகவே நான்கு நாட்களுக்கு உங்களுக்கு என்ன சம்பளமோ அந்த சம்பளத்தை இந்தக் கவரில் வைத்திருக்கின்றேன் வாங்கிக் கொண்டு ஒழுங்காக நீங்கள் என்னோடு இருங்கள்.

இந்த நான்கு நாட்களும் நீங்கள் வேலைக்குப் போகாதீர்கள். சம்பளத்தைப் பிடித்துக் கொண்டால் கூட பரவாயில்லை என்று அந்த குழந்தை எழுதியிருந்தது. அப்பொழுதுதான் இவர்களுக்கு தெரிந்தது. நாம் குழந்தையைப் பெற்றால் மட்டும் போதாது. குழந்தைகளோடு நாம் நேரத்தை செலவழிக்க வேண்டும் என்று.

எனக்கு நேரமே இல்லை

எனக்கு நேரமே இல்லை, நேரமே இல்லை என்பதை விட ரொம்ப பைத்தியக்காரத்தனமான பதில் வேறு கிடையவே கிடையாது. சில பேர் சொல்லுவார்கள் என்னங்க உங்களுக்குக் கடிதம் எழுத வேண்டும் என்று தான் நினைத்தேன். ஆனால் நேரம் இல்லைங்க என்று சொல்லுவார். அமெரிக்காவில் இருக்கின்ற ஒபாமாவுக்கும் 24 மணி நேரம்தான். நம்ம ஊரில் இருக்கின்ற அப்பாசாமிக்கும் 24 மணி நேரம்தான். யார் யார் எப்படி நேரத்தைப் பயன்படுத்துகின்றார்கள்? கலைஞருக்கும் 24 மணி நேரம்தான் அவர் எப்படி பயன்படுத்துகின்றார் என்பது நமக்கு தெளிவாக தெரியும். (கைதட்டல்)

நேரம், நினைப்பு, உழைப்பு

ஆகவே நாம் நேரத்தை நினைப்பை உழைப்பை நல்ல வண்ணம் பயன்படுத்துவோம் என்று சொல்லும் பொழுது குழந்தைகளோடு நாம் நெருக்கமாக இருக்க வேண்டும். குழந்தைகளை கேள்வி கேட்கும் படியாகச் செய்ய வேண்டும். குழந்தைகளுக்கு பகுத்தறிவைச் சொல்லிக் கொடுக்க வேண்டும்.

கேள்வி கேட்கும் பழக்கம்

குழந்தைகளுக்கு ஏன்? எதற்கு? என்பதை எதிலும் விளக்கமாகச் சொல்லிக் கொடுக்க வேண்டும். நமது குழந்தைகளுக்கு நிலா நிலா ஓடிவா, நில்லாமல் ஓடிவா என்று சொன்னோம். இப்பொழுது நிலா ஓடி வராது.நிலவை நோக்கி நாம் தான் சென்று இறங்கி வந்தோம் என்கின்ற தகவலைச் சொல்லுகின்றோம். ஆகவே பழைய மாதிரி நிலா, நிலா ஓடி வா என்பது இன்றைக்குப் பொருத்த-மில்லை.

செவ்வாய்க் கிரகத்துக்கு மனிதன்

நிலவில் மனிதன் இறங்கி அதற்குப் பிறகு செவ்வாய்க் கிரகத்துக்குப் போகத் தயாராகி விட்டான். ஆகவே மூட நம்பிக்கை இல்லாத வாழ்க்கை வாழ வேண்டும். தன்னம்பிக்கை யோடு வாழ வேண்டும். நிறைய பெண்கள் சகோதரிகள் எல்லாம் வந்திருக்கின்றீர்கள். இந்த நிகழ்ச்சியினுடைய வெற்றியே இதுதான் மிக முக்கியம்.

சமையலறை - டிவிதானா?

தாய்மார்களின் பணி ஒவ்வொரு நாளும் சமையல் அறையில் அதிக நேரம் செலவழிப்பது, குடும்பத்-தாரை கவனிப்பது, டி.வி முன்னால் ரொம்ப நேரம் உட்கார்ந்திருப்பது, இது மாதிரி நேரத்தை தொலைத்துக் கொண்டிருக்கிறோம்.

அதற்குப் பதிலாக அறிவு வளருகிற மாதிரி பல சங்கதிகள் இல்லை. எப்படி குற்றங்கள் இழைப்பது? அதிலிருந்து எப்படி தப்பிப்பது என்கிற மாதிரிதான் பல செய்திகள் இருக்கிறது.

அதிலும் பல தொலைக்காட்சிகளில் பார்த்தீர்-களேயானால் பெண்களை வில்லிகளாகத் தான் சித்திரிக்கிறார்கள். ஒன்றும் பெண்களை நல்லவர்-களாகவே காட்டக் கூடிய அளவில் இல்லை. ஆகவே இதன் மூலம் தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகளை விட பொதுச் செய்திகளை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். பகுத்தறிவு கருத்துகளை படியுங்கள்

விடுதலை ஏட்டை படிக்க வேண்டும். உண்மை இதழைப் படிக்க வேண்டும், பெரியார் பிஞ்சு படிக்க வேண்டும். வீட்டுக்கு வீடு குழந்தைகள் பெரியார் பிஞ்சை படிக்க வேண்டும். நல்ல அளவுக்கு சிந்தனைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். பகுத்தறிவுக் கருத்து நூல்களைப் படிக்க வேண்டும். புரட்சிக் கவிஞர் பாடலை எடுத்து சொல்ல வேண்டும். ஒவ்வொரு இடத்திலும் பகுத்தறிவு சிந்தனையை வளர்த்தால் தன்னம்பிக்கை வளரும். தன்னம்பிக்கை வளர்ந்தால் மூடநம்பிக்கை தானே விட்டு விலகும்.

சூரியனைக் கண்ட பனிபோல்....

சூரியனைக் கண்ட பனிபோல அது விலகி விடும். ஆகவே அருமை தோழியர்களே! தோழர்களே! வ்ந்திருக்கின்ற பெற்றோர்களான அருமை தொண்டர்களே! எல்லாருக்கும் வேண்டுகோள். என்னவென்றால் இது போல குடும்ப நிகழ்ச்சியை அடிக்கடி நடத்துங்கள்.

பெரிய மண்டபத்தில் நடத்த வேண்டும் என்கிற அவசியம் கூட இல்லை. சிறிய இடமாக இருந்தால் கூட நடத்துங்கள். நான் சொன்ன மாலை 4 மணிக்கு ஆரம்பித்து இரவு 7 மணிக்கெல்லாம் நிகழ்ச்சி முடியும் என்று வையுங்கள். வீடு அகலமாக இருந்தால், வீட்டில் கூட நிகழ்ச்சிகளை நடத்தலாம். அது மட்டுமல்ல, நமக்கு வேண்டிய பத்து, இருபது குடும்பங்கள் சேர்ந்து ஒன்றாக சந்திக்க வேண்டும். நாளை ஞாயிற்றுக்கிழமை, இத்தனை மணிக்கு சந்திக்கிறோம் என்று சொல்லி விட்டால் வந்து விடுவார்கள். எல்லோரும் இப்பொழுது செல்போன் வைத்திருக்கின்றார்கள். எல்லோர் வீட்டிலும் தொடர்புகள் இருக்கிறது. ஆகவே அவர்களுக்கு நாம் சொல்லி விடலாம். 20 பேர் கொண்ட குடும்பம் ஒரு சிறிய அளவுக்கு சந்திக்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். நல்ல விவாதம் நடக்கும்.

ஆண்களுக்கு அனுமதி இல்லை

சில கட்டங்களில் மகளிர் மட்டுமே இருக்க வேண்டும், இதில் 4 மணியிலிருந்து 5 மணிவரை முதலில் மகளிர் மட்டும் தான் விவாதிப்பவர்களாக இருக்கலாம். ஆண்களுக்கு இதில் அனுமதி இல்லை என்று சொல்ல வேண்டும்.

ஏனென்று கேட்டால் உங்களுடைய பிரச்சினைகள், உடல் நலப் பிரச்சினைகளிலிருந்து, உளப் பிரச்சினைகளிலிருந்து வாழ்க்கைப் பிரச்சினை வரை நீங்கள் மனம் விட்டு ஒவ்வொரு வரும் விவாதிக்க வேண்டும்.

ஆண்களை வைத்துக் கொண்டு நீங்கள் விவாதம் செய்தவற்குரிய வாய்ப்பு இருக்கிறது. டாக்டர் ஷாலினி மாதிரி இருக்கிறவர்கள் வருகிறார்கள். அதே மாதிரி உடற்கூறு டாக்டர்களை அழைக்கிறோம். படித்த பெண்கள் கூட கவனிக்க வேண்டிய செய்திகளில் இருந்து தவறி விடுகின்றார்கள். பெரியார் கண்ட வாழ்வியலைத் தெரிந்து கொள்ள வேண்டும். உடல் நலன் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். பொருளாதாரம் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும்.

--------------தொடரும்... "விடுதலை” 2-7-2010


புரட்சிக் கவிஞர் விழா-அறிவை, ஆற்றலை வளர்க்கும் விழா!
சென்னை புரட்சிக் கவிஞர் விழாவில் தமிழர் தலைவர் விளக்கம்

புரட்சிக் கவிஞர் விழா - நம் அறிவை, ஆற்றலை வளர்த்துக் கொள்ளும் விழா என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.

சென்னை வியாசர்பாடியில் 19.6.2010 அன்று நடைபெற்ற புரட்சிக் கவிஞர் விழாவில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

கடனும் வாங்க மாட்டேன்!

நாம் வாழ்க்கையில் வரவுக்கு உட்பட்டு செலவழிக்க வேண்டும். நான் கடனும் வாங்க மாட்டேன். கடனும் கொடுக்க மாட்டேன் என்ற எண்ணம் உங்களுக்கு இருக்க வேண்டும். அதுமட்டுமல்ல, எல்லோரிடமும் நீங்கள் பழக வேண்டும். ஆண்கள் திருமணமானவராக இருந்தால் சம்பளம் வாங்கியவுடனேயே நேரடியாக மனைவியிடம் கொண்டு போய் கொடுக்க வேண்டும். இவருக்கு ஏதாவது தேவை என்று சொன்னால் காரணம் சொல்லி பணம் வாங்க வேண்டும். அனாவசியமாக செலவு பண்ணக்கூடாது.

பெரியார் அய்யா சொன்ன தத்துவப்படி 10 விழுக்காடோ, அல்லது 25 விழுக்காடோ நமது இல்லை என்று எடுத்து வைக்க வேண்டும். அதே மாதிரி இப்படிப்பட்ட குடும்பங்கள் சேர்ந்தால் ஒரு (பிக்னிக்) சுற்றுலா மாதிரி வெளியே செல்ல வேண்டும். அறிவு பூர்வமான சுற்றுலாவாக அது இருக்க வேண்டும்.

கோவிலுக்குப் போவதற்குப் பதிலாக

நாம் கோவிலுக்குப் போவதற்குப் பதிலாக நல்ல அறிவியல் மய்யங்களுக்குப் போய் பார்க்க வேண்டும். கல்விக் கூடங்களை பார்க்க வேண்டும். நல்ல சுகாதார வாய்ப்புகள் இருக்கும் படியாக பார்த்து கொள்ள வேண்டும்.

ஒரு காலத்தில் வேறு பொழுதுபோக்கு இல்லை. கோவிலுக்குப் போய்க் கொண்டிருந்தார்கள். ஆனால் இன்றைக்கு அறிவார்ந்த முறையில் வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்ள வேண்டும்.

தமிழர் கலை, பண்பாட்டுப் புரட்சி விழா

ஆகவே புரட்சிக் கவிஞர் விழா தமிழர் கலை, பண்பாட்டு புரட்சி விழா என்று சொன்னால் அது ஏதோ கடவுள் இல்லை என்று சொல்லுகின்ற விழா என்று நினைக்காதீர்கள். கடவுள் இல்லை. அதனால் இல்லை என்று சொல்லுகின்றோம். அவ்வளவுதானே தவிர ரொம்ப சுருக்கமான விசயம் இது. கடவுளை மற! என்று சொன்ன தந்தை பெரியார் மனிதனை நினை என்று சொன்னார். மனிதனை நினைத்தால்தான் அடுத்தவர்களுக்கு உதவி பண்ண முடியும்.

பகுத்தறிவு வாழ்க்கை முறை

மனிதனை நினைத்தால்தான் நம் பக்கத்தில் உள்ளவனை ஏமாற்றக்கூடாது. இன்னொருவர் நம்மை ஏமாற்றினால் எவ்வளவு சங்கடமாக இருக்கும் என்று நினைக்கக் கூடிய அளவில் வாழ்க்கை முறை இருக்க வேண்டும். எனவேதான் பகுத்தறிவு வாழ்க்கை முறை சுயமரியாதை வாழ்வே சுக வாழ்வு என்று சொன்னார்களே, அந்த சுயமரியாதை வாழ்வை சுகவாழ்வாக ஆக்கிக் காட்டுவதற்கு இது போன்ற கருத்தரங்குகள், குடும்ப விழாக்கள் ஒவ்வொரு மாதத்திலும் இந்த சென்னைப் பகுதியிலே சிறப்பாக நடத்தப்பட வேண்டும். அதிகம் செலவழிக்க வேண்டும் என்பது கூட அவசியம் இல்லை.

மாதாமாதம் நடத்த வேண்டும்

எப்படி பெரியார் நூலக வாசகர் வட்டத்தை வியாழக்கிழமைதோறும் அவர்கள் நடத்துகிற மாதிரி, நீங்கள் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பகுதியில் நடத்துங்கள். வடசென்னை மாவட்ட தி.க. தலைவர் தங்கமணி அவர்களைக் கேட்டேன். நீங்கள் இந்த மாதிரி செய்ய முடியுமா? என்று கேட்டேன். தாராளமாகச் செய்யலாம் என்று சொன்னார். பகுத்தறி வாளர் கழகம், திராவிடர் கழகம் மற்றும் ஒத்த கருத்துள்ளவர்கள் எல்லோரும் சேர வேண்டும். குடும் பத்தில் உள்ளவர்கள் கொஞ்ச நேரம் வீட்டை விட்டு வெளியே வந்து இதுமாதிரி கலந்து பேச வேண்டும்.

சிறுபிள்ளைகள் பார்க்கும் பொழுது...

நம்முடைய நிகழ்ச்சிகளை இந்த மாதிரி சிறு சிறு பிள்ளைகள் பார்த்தால் கூட ஓகோ, நாமும் அந்த மாதிரி செய்ய வேண்டும் என்கிற எண்ணம் ஏற்படும். அதை ஒரு ரோல் மாடல் மாதிரி எடுத்துக் கொள்வார்கள். சிறுவன் வெற்றிச் செல்வனைப் பார்க்கும் பொழுது இன்னொரு குழந்தைக்கு என்ன வரும்? நாமும் வெற்றிச் செல்வன் மாதிரி ஏன் செய்யக்கூடாது என்று சொல்லக் கூடிய எண்ணம் வரும்.

ஆற்றலை வளர்க்கும் நிகழ்ச்சி

ஆகவே, அந்த மாதிரி ஆற்றலை வளர்ப்பதற்கு இந்த மாதிரி விழாக்களைப் பயன்படுத்துங்கள். எவ்வெப்பொழுதெல்லாம் நான் சென்னையில் இருக்கின்றேனோ, அப்பொழுது உங்களுடைய விழாக்களிலேயே கலந்து கொள்வதற்கு நானும் இசைவு தருகிறேன். (கை தட்டல்)

எனவே எனக்கும் உங்களை எல்லாம் சந்திப்பதில் ரொம்ப மகிழ்ச்சி. நம்மை பொறுத்தவரையிலே நாம் தான் உற்றார், உறவினர்கள்.

இன்பம் - துன்பம்

ஒருவருக்கு ஏற்படுகிற இன்பம் அனைவர்க்கும். அதே போல நம்முடைய குடும்பங்களுக்கு ஏற்படுகின்ற துன்பம் நாம் எல்லோரும் பங்கெடுத்து கொள்ள வேண்டிய ஒன்றாகும். எனவேதான் தந்தை பெரியார் குடும்பங்கள் என்று சொன்னால் தன்னம்பிக்கை உள்ள குடும்பங்கள். பிறருக்கு உதவக்கூடிய குடும்பங்கள், சுய மரியாதை குடும்பங்கள், பகுத்தறிவுக் குடும்பங்கள், சமுதாய நோக்குள்ள குடும்பங்கள் பெண்ணடிமை இல்லாத குடும்பங்கள் என்று ஆக்க வேண்டும். 1935இல் பெண்கள் பற்றி அய்யா அடிக்கடி இந்த மாதிரி வந்து உங்களுடைய பிரச்சினைகளை சொன்னால்தான் ஆண்களுக்கும் தெரியவரும். ஓகோ பெண்களை அடக்கி வைக்கக் கூடாது என்று என்னதான் பெண்ணுரிமையைப் பேசினாலும் இன்னமும் பல ஆண்கள் செவிசாய்ப்பதற்குத் தயாராக இல்லை.

அய்யா அவர்கள் எழுதியதை நான் படித்தேன்.

அய்யா அவர்கள் 1935இல் பெயர்கள் நிலை பற்றி ஒரு கட்டுரை எழுதியிருக்கின்றார். அதில் தெளிவாகச் சொல்லுகிறார். பெண்களை நாம் எப்படி நடத்த வேண்டும்? எவ்வளவு கவுரவமாக நடத்த வேண்டும்? எவ்வளவு ஒழுக்கமாக நடந்து கொள்ள வேண்டும் என்பதை பற்றிச் சொல்லியிருக்கின்றார். நம்முடைய அமைப்பில் ஓர் ஒழுக்கக் கேட்டைப் பற்றி கூட யாராலும் சொல்லி விட முடியாது.

கோவிலிலே கோளாறு

அதே நேரத்திலே கோவில்களுக்குப் போனால் அங்கே என்ன கோளாறு என்பது நமக்குத் தெளிவாகத் தெரியும். ஆகவே அது மாதிரி இங்கு கிடையாது.

நம்முடைய நிகழ்ச்சிகளுக்குப் பக்கத்து வீட்டுக்காரர்களை அழைத்து வரவேண்டும். இங்கே வாருங்கள்; எங்கள் நிகழ்ச்சியை வந்து பாருங்கள்; என்ன சொல்லுகிறார்கள் என்று பாருங்கள்; உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்று சொல்லி ஒரு முறை அழைத்து வந்தால் நம்மைப் பற்றிய தவறான கண்ணோட்டம் இந்தக் கொள்கையினுடைய சிறப்பு பெரியார் எப்படி ஒரு வாழ்வியல் அறிஞர், வாழ்க்கைக்கு வழி காட்டியவர், நமக்கெல்லாம் விழி திறந்த வித்தகர் என்பது புரியும்.

இழந்ததை மீட்டெடுக்கும் விழா

ஆகவே இந்த முயற்சிகள் தொடரட்டும் என்று சொல்லி, தமிழர் கலை பண்பாட்டுத்துறை புரட்சி விழா என்றால், இழந்ததை மீட்டெடுக்கும் விழா.

இவ்வளவு அற்புதமாக இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த தோழர்களுக்கு பாராட்டு என்று கூறி எனது உரையை நிறைவு செய்கிறேன். இவ்வாறு அவர் உரையாற்றினார்.

---------------------------- “விடுதலை” 3-7-2010


0 comments: