Search This Blog

22.7.10

நமக்கும் பார்ப்பனர்களுக்கும் என்ன வேறுபாடு?


விபீஷணர்களும் ஒழியவேண்டும்

இந்த நாட்டிலே பார்ப்பான் என்கிற ஒரு ஜாதி எதற்கு ஆக இருக்க வேண்டும்? பார்ப்பான் என்பதாக ஒரு ஜாதி இந்த நாட்டிலே இருந்துதான் ஆகவேண்டும் என்று சொல்லப்படுவதற்கு என்ன தேவை? பார்ப்பான் இல்லாவிட்டால் என்ன நட்டம் ஏற்பட்டுவிடும்? அல்லது குடிமுழுகிப் போய்விடும்?

2000-வருடமாக ஒரு ஜாதி பார்ப்பன ஜாதி உயர்ந்த ஜாதி அந்த உயர்ஜாதியின் பேராலே சகல வசதி, பெருமை, ஆதிக்கம், சுரண்டல் பெறவும், இன்னொரு ஜாதி இந்த நாட்டின் சொந்தக்கார ஜாதி நாட்டின் பெருவாரியான மக்கள் கொண்ட ஜாதி, கீழ் ஜாதி மக்களாகச் சமுதாயத்தில் எந்தவித உரிமை, வசதி, வாய்ப்பு பெறமுடியாத தற்குறிகளாய், காட்டுமிராண்டிகளாய் இருப்பது என்ன நியாயம்? இத்தனை நாளாக இந்த 2000 வருடமாக நாம் சூத்திரர்களாய் இருக்கிறோம்; இன்னொருவன் பிராமணாகவே இருக்கிறான் என்பது நமக்கு அவமானமல்லவா? இந்த 1953 ஆம் ஆண்டிலும் நம் கதி இதுதானா என்பதைச் சிந்திக்க வேண்டாமா?

தோழர்களே! வெள்ளைக்காரன் இந்த நாட்டை விட்டு வெளியேற வேண்டும்; அவன் நம்மை அடிமைப்படுத்தி ஆளுகிறான்; நமக்கு எவ்வித உரிமையும், வசதியும், அனுபோகமும் இல்லாதபடி எல்லாவற்றையும் அவனே கொள்ளை கொண்டுபோகிறான். ஆதலால் இந்த வெள்ளைக்காரனை ஒழித்துக்கட்ட வேண்டும்; இந்த நாட்டை விட்டு வெளியேறச் செய்ய வேண்டும் என்றெல்லாம் சொல்லி, எதற்கு ஆக எங்களுக்கு ஒரு ராஜா சக்கரவர்த்தி இருக்க வேண்டும் என்பதாகக் கூறி வெள்ளைக்காரனை விரட்டிவிட்டோம். இப்போது நடைபெறுவது சுதந்திர ராஜ்ஜியம். அதுவும் ஜனநாயக குடிஅரசு ராஜ்ஜியம் என்றெல்லாம் சொல்லப்படுகிறது.

ஆனால் உண்மையில் என்ன என்று பார்ப்போமானால், வெள்ளைக்காரன் போன இடத்தில் இன்றைய தினம் சுதந்திரத்தின் பெயராலும் ஜனநாயகத்தின் பேராலும் பார்ப்பனரும், வடநாட்டுக்காரரும் வந்து உட்கார்ந்து கொண்டார்கள்.

உள்ளபடியே கேட்கிறேன்: இந்த நாட்டுக்குப் பிரதம மந்திரியாக தோழர் பண்டித நேரு அவர்களும், இந்த நாட்டுக் குடியரசுத் தலைவராக தோழர் பாபு ராஜேந்திரபிரசாத்தும் அல்லது இந்த ராஜ்ஜியத்து முதல் மந்திரியாக தோழர் ராஜகோபாலாச்சாரியாரும், இது போன்று எங்கே பார்த்தாலும், எந்த இடத்தை எடுத்துக் கொண்டாலும் அங்கெல்லாம் உயர் பதவியில் பார்ப்பனர்களாகவே இருக்கிறார்களே, இந்த நிலைமை எப்படி ஏற்பட்டது என்பதை நீங்கள் சிந்திக்க வேண்டும்! வெள்ளையனை விரட்டுவதாகப் பேர் பண்ணிக் கொண்டு, இந்த நாட்டில் அசல் பார்ப்பன நாயகத்தை, பனியா நாயகத்தை உண்டாக்கிக் கொண்டார்கள்; இந்த நாட்டை ஆளுவதற்கு இவர்களுக்கு என்ன உரிமை நியாயம் இருக்கிறது என்று யாராவது சொல்ல முடியுமா?

இந்த நாட்டின் உரிமைக்காரர்களாகிய, இந்த நாட்டின் சொந்தக்காரர்களாகிய நாம், எங்கிருந்தோ, எப்படியோ வந்த இந்தப் பார்ப்பனர்களுக்கு ஏன் அடிமையாக இருக்க வேண்டும்? எதற்கு ஆக இந்தப் பார்ப்பனர்கள் நம்மை ஆளுகின்றவர்களாகவும், நாம் ஆளப்படுகிறவர்களாகவும் இருக்க வேண்டும்?

தோழர்களே! திராவிடர் ஆகிய நம்மை ஆளுகிற இந்தப் பார்ப்பனக் கூட்டம் ஒழிய வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்?

வெள்ளைக்காரனை ஒழிக்க, வெளியேற்ற இவர்கள் செய்தமுறையை எல்லாம் நாமும் செய்துதான் தீரவேண்டும். அதுதான் நாம் விடுதலை பெறவும் நம்முடைய உரிமைகளைப் பெற்றுக் கொள்ளவும் பரிகாரம் என்றால் அதைத்தானே செய்ய வேண்டியிருக்கும்?

ஆனால் நமக்கும் பார்ப்பனர்களுக்கும் ஒரு பெரிய வித்தியாசம் இருக்கிறது. என்ன வித்தியாசமென்றால் பார்ப்பனர்களுக்குள் கட்டுப்பாடான ஒற்றுமை இருக்கிறது. காஷ்மீர் பார்ப்பானுக்குத் தேள் கொட்டினால் கன்னியாகுமரியிலே இருக்கிற பார்ப்பானுக்கு நெறி ஏறும். அவ்வளவு தூரம் பார்ப்பனர்களுக்குள் கட்டுப்பாடு இருக்கிறது.

ஒரு பார்ப்பான் அவன் எவ்வளவு கீழ்மகனாக இருந்தாலும், மானமற்ற ஈனத்தொழில் புரிகிறவனாக இருந்தாலும் அவன்கூட ஒருக்காலமும் தன்னுடைய இனத்துக்கு, அதன் நலத்துக்கு, சவுகரியத்துக்கு, விரோதமான காரியம் செய்யமாட்டான். தன்னுடைய இனத்தை விட்டுக் கொடுக்க மாட்டான். காட்டிக் கொடுக்க மாட்டான்.

ஆனால் நம்முடைய திராவிட ஆட்கள் என்பவர்களோ அதற்கு நேர்மாறான குணம் படைத்தவர்கள் தன் வாழ்வுக்கு தன் சவுகரியத்துக்காகத் தன்னுடைய இனத்தை எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் காட்டிக் கொடுக்கத் தயங்கவே மாட்டான் திராவிடன். இனத்தைக் காட்டிக் கொடுப்பதிலேயே தன்னுடைய வாழ்வை அமைத்துக் கொள்ளும் விபீஷணர்கள், அனுமார்கள் தான் அதிகமாய் இருக்கிறார்கள். ஆனதால் நாம் பார்ப்பனர்களை எதிர்ப்பதோடு, இந்த இனத்துரோக வீபிஷண அனுமார்களையும் சேர்த்து எதிர்த்து வெற்றி பெற வேண்டியிருக்கிறது.

திராவிடர் கழகத்தின் திராவிடக் கொள்கைகளைப் பேசுபவர்கள் இந்த நாட்டிலே, இந்த இந்தியாவிலேயே திராவிடர் கழகத்தாரைத் தவிர வேறு எந்தக் கட்சியாரும் யாரும் இல்லை. எந்தக் கட்சியாரும் இல்லை என்பதோடு, இருக்கிறவர்கள் எல்லாரும் இதற்கு மாறானவர்களே ஆவார்கள். இன்று மட்டுமல்ல; இந்த 2000 வருடமாக யாரும் இதைப்பற்றிப் பேசவே இல்லை; கேட்கவில்லை. அதற்கு முன்னாலே வள்ளுவர் கேட்டிருக்கிறார்; புத்தர் கேட்டிருக்கிறார்; அதற்கும் முன்னாலே புராணங்களில் சொல்லப்படுகிற ராட்சதர்கள், அசுரர்கள் கேட்டிருக்கிறார்கள். அதைத் தவிர இந்த 2000 ஆண்டுகாலத்தில் யாரும் கேட்கவே இல்லை நான் ஏன் சூத்திரன்? இன்னொருவன் ஏன் பிராமணனாய் இருக்க வேண்டும் என்பதாக. திராவிடர் கழகம் ஒன்றுதான் இன்றைய தினம் இந்தக் கொள்கைகளை எடுத்துக் கொண்டு பாடுபட்டு வருகிறது.

இந்த நாட்டின் சகல துறைகளிலும் ஆதிக்கம் செய்யும் நம்மை முன்னேற விடாமல் அடிக்கும் பார்ப்பனர்களை வெளியேற்றினாலொழிய இந்த நாட்டுத் திராவிட மக்களுக்கு விமோசனமில்லை.

வெள்ளைக்காரன் இந்த நாட்டை ஆண்டான் என்றால் அவனுடைய ஆட்சிக்காலத்திலே இந்த நாட்டு மக்களுக்குப் பல நன்மைகள் செய்திருக்கிறான்.

முதலாவது இந்த நாட்டு மக்கள் உலக விழிப்பு பெறுவதற்கும் உலகஞானம் விஞ்ஞான அறிவு பெறுவதற்கும் அவனுடைய முயற்சிதான் பெருத்த அளவில் உதவி புரிந்தது. இன்னும் சாதி பேதம் உயர்வு தாழ்வு என்கிறதன்மையில்லாமல் எல்லோருக்கும் உத்தியோகம் பெறுவதற்கும் படிப்பதற்கும் சமத்துவ உரிமை அவனால்தான் கொடுக்கப்பட்டது. இன்னும் இன்றைய தினம் இந்த நாட்டிலே காணப்படுகிற விஞ்ஞான வசதிகள் எல்லாம் வெள்ளையன் செய்து வைத்ததுதான். இவ்வளவு தூரம் நன்மை செய்த வெள்ளையனையே நீ என்ன எங்கள் நாட்டை ஆளுவது? என்று சொல்லி வெளியேற்றி விட்ட பிறகு எல்லாத்துறைகளிலும் நம் உயிரை வாங்கும் இந்தப் பார்ப்பனர்களை வெளியேற்றி விட்ட பிறகு எல்லாத்துறைகளிலும் நம் உயிரை வாங்கும் இந்தப் பார்ப்பனர்களை வெளியேறு என்று சொல்லுவதிலே என்ன தவறு தப்பு இருக்க முடியும்?

பார்ப்பான் இருக்கிறவரையிலே இந்த நாடு ஒரு காலத்திலும் விமோசனம் பெறமுடியாது. அப்படி முன்னேற்றம் பெற பார்ப்பான் விடமாட்டான். எனவேதான் இங்கே இருந்தால் மனிதனாக இரு; இல்லாவிட்டால் வெளியேறு என்று கூறுகிறோம்.

தோழர்களே! என் ஆயுளுக்குள்ளேயே இந்தப் பேதங்களைத் தீர்ப்ப்தற்கு முயற்சி செய்தால்தான் ஆயிற்று. உண்மையாகச் சொல்லுகிறேன். என் காலத்துக்குள் ஏதாவது முயற்சி செய்தால்தான் கலவரமில்லாமல் ரத்தம் சிந்தாமல் காரியம் சாதிக்க முடியும். நான் கண்ணை மூடிவிட்டால் அப்புறம் என்ன நடக்குமோ? ஏன்? ஆள் இல்லை. அப்புறம் மூலபலம் தான். தடி யெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்கிற நிலைமைதான் ஏற்படும். பொறுப்பான ஆட்கள், கவலை எடுத்துக் கொண்டு முயற்சி செய்கிறவர்கள் இல்லை. ஏதோ கலவரத்தை ஏற்படுத்தி நானும் இருக்கிறேன் என்று காட்டிக் கொள்ளுகிறவன்தான் இருக்கிறானே தவிர இந்தக் காரியத்தின் மூலம் தன் சொந்த லாபம் விளம்பரம் பெறுகிறவர்கள் தான் இருக்கிறார்களே தவிர வேறு ஆள் இல்லை.

தோழர்களே! சமீபத்தில் சுமார் 500, 600 ஸ்டேஷன்களில் (தொடர்வண்டி நிலையங்களில்) இந்தியை அழித்தோமே, அது எவ்வளவு ஒழுங்காய் நடந்தது! எவ்வளவு ஜாக்கிரதையாக கவலையோடு சேதம் பலாத்காரம், நாசம், இல்லாமல் காரியம் செய்து வருகிறோம்! சும்மா மக்களைத் தூண்டி விட்டுக் கலவரம் ஏற்படுத்தச் செய்து, அதனால் லாபம் பெறுகிறவர்கள் அல்ல நாங்கள்.

---------------- 30.08.1953 இல் ஆம்பூர் முகமதலி மைதானத்தில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் சொற்பொழிவு: “விடுதலை” 08.09.1953

2 comments:

Unknown said...

///கீழ்மகனாக இருந்தாலும், மானமற்ற ஈனத்தொழில் புரிகிறவனாக இருந்தாலும்///

இந்தச் சொற்களைப் பெரியார் அப்படியே பயன்படுத்தினாரா???? பெரியாரின் விம்பம் உடைகிறதே.

நம்பி said...

Blogger கிருத்திகன் said...

// ///கீழ்மகனாக இருந்தாலும், மானமற்ற ஈனத்தொழில் புரிகிறவனாக இருந்தாலும்///

இந்தச் சொற்களைப் பெரியார் அப்படியே பயன்படுத்தினாரா???? பெரியாரின் விம்பம் உடைகிறதே.

July 23, 2010 1:38 AM//

இப்படி கீழே உள்ளதுபடி வாசித்து பார்த்தால் ஒன்னும் உடையாது...

""ஒரு பார்ப்பான் அவன் எவ்வளவு கீழ்மகனாக இருந்தாலும், மானமற்ற ஈனத்தொழில் புரிகிறவனாக இருந்தாலும் அவன்கூட ஒருக்காலமும் தன்னுடைய இனத்துக்கு, அதன் நலத்துக்கு, சவுகரியத்துக்கு, விரோதமான காரியம் செய்யமாட்டான். தன்னுடைய இனத்தை விட்டுக் கொடுக்க மாட்டான். காட்டிக் கொடுக்க மாட்டான்.""

இப்படி வாசித்தபிறகு நம்ம பிம்பம் தான் உடையும்...