Search This Blog

15.2.10

இந்து முன்னணிகள் காதலர் தினத்தைக் கொச்சைப்படுத்தத் தகுதி உடையவர்கள்தானா?

அட, கழுதையே!

காதலர் தினத்தைக் கேவலப்படுத்திட இந்து முன்னணியினர் கழுதைக்கும் கழுதைக்கும், நாய்க்கும் நாய்க்கும் கல்யாணத்தைக் கட்டி வைத்துள்ளனர். கழுதைத் திருமணத்தை இந்து முன்னணி ராம.கோபாலன் தலைமை தாங்கி நடத்தியுள்ளார்.

பலே, பலே இந்து மதப் பக்தர்களா கொக்கா! இதோடு சீதா கல்யாணத்தையும் நடத்தலாம். ரெங்கநாதனைக் காதலித்து ஆண்டாள் கல்யாணம் கட்டிக் கொண்டாரே அதையும்கூட சேர்த்துக் கொள்ளலாம்.

காதல் கடவுளான கிருஷ்ண பரமாத்மா கோபீகாஸ்திரிகளுடன் கொஞ்சிக் குலவுவதையும் இணைத்துக் கொள்ளலாம்.

கழுதையைக் கேவலப்படுத்துகிறார்கள் இந்து முன்னணியினர். காங்கேய முனிவன் கழுதைக்குப் பிறந்தான் என்று இந்து மதப் புராணங்கள் கூறுகின்றன.

அசுவத்தாமன் குதிரைக்குப் பிறந்திருக்கிறான். கலைக்கோட்டு முனிவர் மானுக்குப் பிறந்தார் என்று எழுதி வைத்துள்ள இந்து மதத்தின் சிரேஷ்டப் புத்திரர்கள் வெட்கம் சிறிதுமின்றி மனித உணர்வின் மெல்லிய இழையான காதலைக் கொச்சைப்படுத்துவதாக நினைத்துக்கொண்டு நாய்க்கும் நாய்க்கும், கழுதைக்கும் கழுதைக்கும் கல்யாணத்தைப் பண்ணி வைக்கிறார்களாம்.

நாயும்கூட இந்து மதத்தில் சாதாரணமா? வேத உருவமாம்; கடவுளின் வாகனமாம் (பைரவர்); அதைக் கேவலப்படுத்துகிறார்களே, இவர்கள் நாத்தி-கர்களாகிவிட்டார்களோ!

5.2.2010 நாளிட்ட டைம்ஸ் ஆஃப் இந்தியா ஏட்டில் ஒரு செய்தி வெளிவந்ததே. வேலூரையடுத்த சோளிங்கூரில் காதலர்களுக்கான கிருஷ்ணன் கோயில் ஜெகன் அறக்கட்டளையின் சார்பில் கட்டப்பட்டு வருகிறதே ஏப்ரலில் திறப்பு விழாவாமே!

இந்து முன்னணி வகையறாக்கள் பாபர் மசூதியை இடித்ததுபோல, கடப்பாறைகளையும், மண் வெட்டியையும் எடுத்துக்கொண்டு அவர்கள் பாஷையில் கரசேவையை ஜாம்ஜாமென்று நடத்தவேண்டியதுதானே!

பதினாறாயிரம் கோபிகாஸ்திரீகளுடன் லார்டு கிருஷ்ணன் கொஞ்சி விளையாடலாம். அதற்கு அவாள் கொடுத்த தலைப்பு லீலைகள். கடவுள் செய்தால் லீலை; மனிதன் அன்பைப் பரிமாறிக் கொண்டால் கலாச்சார சீர்கேடா?

குளிக்கும் பெண்களின் ஆடைகளைக் கவர்ந்து சென்று மரத்தின் கிளையில் ஓடிப்போய் உட்கார்ந்து கொண்டு நிர்வாணமாகக் கரைக்கு வந்து இரு கைகளையும் தூக்கிக் கும்பிட்டால்தான் ஆடைகளைக் கொடுப்பேன் என்று கூறும் காமவெறியனைக் கடவுளாகக் கும்பிடும் இந்து முன்னணிகள் அன்பின் அடையாளமான காதலர் தினத்தைக் கொச்சைப்படுத்தத் தகுதி உடையவர்கள்தானா?

---------------- மயிலாடன் அவர்கள் 15-2-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

0 comments: