Search This Blog

20.2.10

பெரியார் ஈ.வெ.ரா. வேண்டுகோள்

(தமிழர்கள் செய்யக்கூடாத காரியங்களை அய்ந்து (பஞ்சமா) பாதகங்கள்! ” என்ற தலைப்பில் பட்டியலிட்டுள்ளார் பெரியார் . ஊன்றிப் படித்து உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.)

******************************



அய்ந்து (பஞ்சமா) பாதகங்கள்!



முதல் பாதகம் :- ஒன்று.

பார்ப்பனன் ஓட்டலுக்குச் (உணவகத்துக்குச்) செல்வது.


நமது தன்மானத்திற்குக் கேடு. நாமே பார்ப்பனரை மேல் ஜாதி என்று கருதுகிறோம் என்பதாகும்.

நம்மவர்கள் ஓட்டல், சிற்றுண்டி சாலை, உணவு விடுதி முதலியவைகள் ஏற்படுத்துவதையும், நம்மவர்கள் வேலையில்லாத் திண்டாட்டத்தைக் குறைப்பதையும், நம்மவர்கள் பொருளாதார வசதி உயர்வதையும் தடுக்கிறது.

உண்மையிலேயே "நாம் கீழ் ஜாதி என்று பார்ப்பனரால் ஆக்கப்பட்டிருக்கிறோம்" என்பதை நாமே நம்பவில்லை; உணரவில்லை என்பதைக் காட்டுகிறது.

ஜாதி ஒழிப்புக்கு ஆக இவ்வளவு பெரிய கிளர்ச்சி நடக்கிற போதும், "பார்ப்பான் ஓட்டலுக்குப் போவதில்லை; அங்குச் சென்று உணவருந்துவதில்லை; சிற்றுண்டி அருந்துவதில்லை என்று 10000 பேருக்கு மேல் தங்கள் உறுதிமொழி கையொப்பமிட்டு பெயர்கள் விளம்பரப்படுத்தி இருக்கிற போதும், ஏறத்தாழ 700 பேர் வரை பார்ப்பனர் ஓட்டல் முன் நின்று மக்களை வேண்டிக் கொண்டு அதற்கு ஆக 5 வாரம், 4 வாரம், 3 வாரம், 2 வாரம், ஒரு வாரம் தண்டனை பெற்றுச் சிறை சென்றும், சுமார் 1,00,000 ரூபாய் (ஒரு இலட்சம் ரூபாய்) வரை அபராதம் செலுத்த வேண்டுமென்று தண்டிக்கப்பட்ட பின்பும் மற்றும் பல பெரும் உயிர் தியாகப் பெரும் கிளர்ச்சிகள் நடக்கும் போதும், தமிழன் - திராவிடன் ஒருவன் பார்ப்பான் ஓட்டலுக்குப் போவான், போகிறான் என்றால் அவன் குலத்தின் கண் அய்யப்பட வேண்டியதைத் தவிர அப்படிப்பட்டவனைப் பற்றி மக்கள் வேறு என்னதான் எண்ணுவார்கள்? வேறு என்னதான் எண்ண முடியும்? அப்படிச் செல்லுவதானது தன்குலம் இன்னது என்று காட்டிக் கொள்வதைத் தவிர வேறு என்ன காரியத்திற்காகவது பயன்படுமா?

பாதகம் :- இரண்டு -

பார்ப்பனரைப்பற்றிக் குறிப்பிட வேண்டிய அவசியம் வரும்போது அவர்களைப் பிராமணர்கள் என்கிற சொல்லால் குறிப்பிடுவதானது.

இது நம்மை நாமே சூத்திரன் என்று ஒப்புக்கொண்டதாகிறது அல்லவா? அவன் பிராமணன் என்றால் நாம் யார்? அந்த முறையில் நம்மைக் குறிப்பிடும் சொல் 'சூத்திரன்' என்பதைத் தவிர வேறு என்ன இருக்கிறது?
"பிராமணன்" என்ற சொல்லால் ஒருவரைக் குறிப்பிடுவதைத் தவிர வேறு சொல் இல்லா விட்டால், வேறு சொல்லால் சொன்னால் ஒருவரின் வகுப்பு, குறிப்பு, அடையாளம் தெரியாது என்ற நிர்பந்தம் (கட்டாய நிலை) இருந்தால் மாத்திரம் அப்படிக் குறிப்பிடலாம். ஆனால் அந்தப் பெயரைக் குறிப்பிடாமலேயே வேறு சொல்லால் குறிப்பிடலாம் என்பதற்குத் தக்க சொல்லாகப் 'பார்ப்பனர்' என்கிற தமிழ்ச் சொல்லே இருக்கும் போது, ஒருவரைப் 'பிராமணன்' என்கிற சொல்லால் குறிப்பிட்டால் நமக்கு மானம் இல்லை; அறிவு இல்லை; மனித உணர்ச்சி இல்லை.

நாட்டில் மற்றத் தமிழர்கள் நடத்துகிற கிளர்ச்சிகளுக்கு விரோதமாய் நடந்து, பார்ப்பனருக்கு அடிமையாகி, எப்படி எப்படி ஈனப் பிழைப்பையாவது நடத்தி வாழவேண்டுமென்கிற இழிநிலையில் இருப்பவர் நாம் என்பதல்லாமல், இதற்கு வேறு என்ன பெயர்க் கருத்து கொள்ள முடியும்?

பாதகம் : மூன்று -

தீபாவளி கொண்டாடுவது

இது ஒரு பொய்க்கதையை, அதுவும் காட்டமிராண்டித்தனமான முட்டாள் தன்மை கொண்ட, ஒரு துவேஷ சூழ்ச்சித் தன்மையைக் கொண்ட கதையை அடிப்படையாகக் கொண்டது. திராவிடனை இழிவு படுத்திய, கொலை செய்ததாகிய கருத்தைக் கொண்ட கதையை அடிப்படையாகக் கொண்டது. கதை அறிவுக்கோ, ஆராய்ச்சிக்கோ, உண்மைக்கோ, படிப்பினைக்கோ சிறிதும் ஏற்றமும் பொருத்தமும் அற்றது தீபாவளி.

-------------------- தொடரும்

--------------------- பெரியார் ஈ.வெ.ரா. வேண்டுகோள்: "விடுதலை" 21-10-1957




0 comments: