Search This Blog

19.2.10

மூடநம்பிக்கைகளை விடத் தயாரா?

மூட நம்பிக்கை

மூடநம்பிக்கைகளை எதிர்ப்பது தமிழகத்தின் ஒரு சாராருக்கு மட்டும் உரித்தானது அல்ல என்று சொல்லியிருப்பவர் ஆர்.எஸ்.எஸில் பயிற்சி பெற்று அதன்பின் பா.ஜ.க.விற்குச் சென்ற தமிழக பா.ஜ.க.வின் முன்னாள் தலைவர் திரு இல.கணேசன் என்பார் (கல்கி 21.2.2010 பக்கம் 90,91).

அவர் யாரை, எந்த இயக்கத்தை நினைத்துக் கொண்டு இப்படிச் சொல்லியிருக்கிறார் என்பது வெளிப்படை.

பரவாயில்லை, காலந்தாழ்ந்தாவது மூடநம்பிக்கைகள் நாட்டில் இருப்பதை ஒப்புக்கொண்டு அவை ஒழிக்கப்படத்தான் வேண்டும் என்ற நினைப்பது கூட ஒரு அடி முன்னேற்றம்தான் பாராட்டுகள்

அந்த மூடநம்பிக்கைகளை எதிர்த்தவர்களுள் பாரதியார் இல்லையா? கல்கி கிருஷ்ணமூர்த்தி இல்லையா? விவேகானந்தர் இல்லையா என்று எடுத்துக்காட்டியும் உள்ளார்.

அப்படிதான் சிந்திக்க வேண்டும். சிந்திக்கும் வேளையில் அவர்கள் எவற்றையெல்லாம் மூடநம்பிக்கைகள் என்று கூறியிருக்கிறார்களோ அவற்றையெல்லாம் முண்டா தட்டித் தூக்கி எறிவதுதானே புத்தி சாலித்தனம்?

பாரதியாரையே எடுத்துக்கொள்ளலாம்.

கடலினைத்தாவும் குரங்கும் வெங்

கனலிற் பிறந்ததோர்

செவ்விதழ்ப் பெண்ணும்

என்று ஆரம்பித்து கடைசியில் எப்படி முடிக்கிறார்?

கவிதை மிக நல்லதேனும்

அக்கதைகள் பொய்யென்று

தெளிவுறக் கண்டோம்

என்று பாடியிருக்கிறாரே பாரதியார்.

இராமாயணத்தில் குரங்கு கடலைத் தாண்டியதாகவும், பாலம் கட்டியதாகவும் கூறி, ராமன் பாலத்தை இடிக்காதே என்று போர்க்கொடி தூக்குவது ஏன் இல.கணேசன்கள்?

எந்த பாரதியார் மூடநம்பிக்கைகளை எதிர்த்தவர் என்று பெருமையாகப் பேசுகிறாரோ அந்தப் பாரதியார் மூடநம்பிக்கை என்று சொல்லுவதைக் கட்டியழுவது ஏன்?

இரண்டாவதாக கல்கி கிருஷ்ணமூர்த்தி மூடநம்பிக்கைகளை எதிர்த்தவர் என்று சொல்லியிருக்கிறார். அதற்கு கல்கியிலிருந்தே (4.10.2009) எடுத்துக்காட்டி கேள்வி கேட்க முடியும்.

இராகு காலம் பார்ப்பது, அலகு குத்திக்கொள்வது, தீ மிதிப்பது போன்றவை கல்கிக்குப் பிடிக்காது என்று கூறிவிட்டு, இறை உணர்வு என்பது வேறு, மதம் என்பது வேறு, பகுத்தறிவு என்பது வேறு, இவற்றை ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுத்திக் குழப்பிக் கொள்ளக்கூடாது. இதேபோல அறநெறி நூல்கள் வேறு, இதிகாசங்கள் வேறு, புராணக்கதைகள் என்பன வேறு என்று கல்கியிலேயே வெளிவந்துள்ளது. (4.10.2009),

இதையாவது இல.கணேசன்கள் ஏற்றுக்கொள்வார்களா? இறை உணர்வு வேறு, மத உணர்வு வேறு என்று பிரித்துக் கூறியுள்ளாரே! இவர்கள் மதவுணர்வை மட்டுமல்ல, வெறியையல்லவா தீமூட்டிக் குளிர்காய்கிறார்கள்? அறநெறி நூல்கள் வேறு, இதிகாசங்கள் வேறு என்று சொல்லும்போது இதிகாசமான இராமாயணம் புறந்தள்ளப்பட்டுள்ளதே! அந்த இராமாயண ராமனைப் பிடித்துக்கொண்டு தானே இல.கணேசன் கூட்டம் தொங்கிக்கொண்டிருக்கிறது!. மூடநம்பிக்கைகளை எதிர்ப்பது ஒரு சாராருக்கு மட்டும் உரித்தானதல்ல என்று உரிமை முழக்கம் இடும் இவாள் எடுத்துக்காட்டும், பிரமுகர்கள் எடுத்துக்காட்டும் மூடநம்பிக்கைகளை விடத் தயாரா?

----------------- மயிலாடன் அவர்கள் 19-2-2009 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

0 comments: