Search This Blog

28.2.10

அறிவாயுதம் தேவையா? அக்கிரகார அடிமை வாழ்வு தேவையா?

எந்த வழி தேவை?

ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி 23.2.2010 சென்னை பாரிமுனை காளிகாம்பாள் கோவிலில் முன்னாள் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், மதுசூதனன், ஜெயகுமார், செங்கோட்டையன், பொன்னையன் மற்றும் பாலகங்கா, சேகர்பாபு எம்.எல்.ஏ., மனோஜ்பாண்டியன் ஆகியோர் வெள்ளித்தேர் இழுத்தனர். சைதாப்பேட்டை இளங்காளியம்மன் கோவிலில் பா. வளர்மதி தலைமையில் 62 பெண்கள் தீச்சட்டி எடுத்து வழிபட்டனர். (மாலைமலர் 23.2.2010)

டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டுக்கு அ.இ.அ.தி.மு.க., பொதுச் செயலாளர் ஜெயலலிதா பேட்டி (10.2.2010)

அந்தப் பேட்டி ஒன்று போதும் பகுத்தறிவு இயக்கமான திராவிட இயக்கத்தில் சாதாரண உறுப்பினராகக்கூட இருக்கத் தகுதியற்றவர் இந்த அம்மையார் என்பதற்கு

நீங்கள் விதியை நம்புபவரா என்பது கேள்வி; பதில் பளிச் சென்று வருகிறது.

ஆம், நான் விதியை நம்புகின்றேன். நான் அரசியலுக்கு வருவேன் என்று நான் நினைத்துப் பார்த்தது கூடயில்லை. நான் ஒரு முதல் அமைச்சர் ஆவேன் என்று கனவு கண்டதுகூட கிடையாது. ஆனால் அது நடந்திருக்கிறது. இத்தகைய வாழ்க் கைக்காக என்னை நான் தயாரித்துக் கொண்டதும் கிடையாது.

நான் சரியாகத் தமிழைப் படித்ததுகூட இல்லை. நான் படித்த பெங்களூர் பிஷப் காட்டன் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் ஆங்கிலப் பயிற்று மொழியில்தான் படித்தேன். இரண்டாவது மொழி கன்னடம் அல்லது இந்தி என்ற போது நான் இந்தியை எடுத்துக் கொண்டேன். அதன்பின் சென்னை வந்தேன். இங்கும் இரண்டாவது மொழியாக இந்தியைத்தான் தேர்ந்தெடுத்தேன். ஆனால் வீட்டில் ஆசிரியரை வைத்துத் தமிழைக் கற்றுக் கொண்டேன்.

ஒரு திராவிட இயக்கத்தின் தலைவராக வருவேன் என்று நான் கனவு கண்ட தில்லை என்று கடகடவென்று பதில் சொல்லியிருக்கிறார். இந்த நிலைகளையெல்லாம் எட்டியதற்கு அவர் தலையில் எழுதப்பட்ட விதிதான் தலையெழுத்துதான் காரணம் என்று திடமாகக் கூறுகிறார் நம்புகிறார்.

அவர் எப்படியோ இருந்துவிட்டுப் போகட்டும் அவரே சொல்லியிருக்கிறபடி ஒரு திராவிட இயக்கத்திற்குத் தலைவராக எப்படி இருக்கிறார்? எப்படி இருக்க முடியும்?

விதியைப்பற்றி தந்தை பெரியார் அவர்களின் கருத்தென்ன? அண்ணாவின் பெயரால் திராவிட இயக்கப் பெயரைத் தொற்றிக் கொண்டு இருக்கிறாரே அந்த அண்ணா விதியை நம்பியவரா, மதியை நம்பியவரா?

இந்தத் தலையெழுத்தையும், விதியையும் கூறிதான் இந்த நாட்டில் ஜாதி நிலை நாட்டப்பட்டது.

நீ தாழ்ந்த ஜாதியில் பிறந்தது உன் தலையெழுத்து! போன ஜென்மத்தில் செய்த பாவம்!! அவன் பிராமணனாகப் பிறந்தது அவன் விதி! போன ஜென்மத்தில் அவன் செய்த புண்ணியம்! என்று பிறவி ஏற்றத் தாழ்வுக்கு நியாயம் கற்பித்த கூட்டத்தைச் சேர்ந்தவரல்லவா, அதனால் தான் விதியைத் துணைக்கு அழைத்துக் கொள்கிறார்.

ஆரியம் திராவிடத்தில் புகுந்ததன் பயன் இதுதான் போலும்! அந்தக் கட்சியில் இருக்கும் தொண்டர்கள் ஒரு கணம் எண்ணிப் பார்க்க வேண்டாமா? அண்ணா பெயரில் இருக்கும் நம் கட்சிக்கு அதுவும் ஒரு திராவிடக் கட்சிக்கு விதியை நம்பக் கூடியவரை தலைவராக ஏற்றுக் கொண்டு விட்டோமேயென்று தலையில் அடித்துக் கொள்ள வேண்டாமா?

புத்த மார்க்கத்தில் ஆரியம் ஊடுருவி அதனைப் புதைக்குழிக்கு அனுப்பியதுபோல திராவிட இயக்கத்தில் ஊடுருவி, அடிப்படைக் கொள்கை வேரையே பதம் பார்க்க கிளம்பி விட்டார் பார்ப்பன அம்மையார் என்பதை பகுத்தறிவோடு சிந்தித்தால் பட்டாங்கமாய் விளங்கிவிடுமே!

12 வயது சிறுவனாகத் துள்ளித் திரிந்த பருவத்திலேயே சிறுவன் ராமன் (பெரியாருக்கு அப்பொழுது அதுதான் செல்லப் பெயர்) தலை எழுத்து பற்றி சொன்ன கள்ளிடைக்குறிச்சிப் பார்ப்பனர் ராமநாதய்யருக்குப் பாடம் கற்பித்தவராயிற்றே!

பன்னிரெண்டு வயதிலேயே பகுத்தறிவு ஒளி பெற்ற பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார்.

அவர் பெயரை ஒரு பக்கத்தில் உச்சரித்துக் கொண்டும், அவர்தம் திராவிட இயக்கம் என்று சொல்லிக்கொண்டும், தலைவிதியில் எனக்கு நம்பிக்கை உண்டு என்று ஒருவர் சொல்லுகிறார் என்றால் இது எவ்வளவு பெரிய திரிபுவாதம் கொள்கை மோசடி!

சரி அவர் கூற்றுப்படியே வினா தொடுப்போம். முதலமைச்சர் ஆனதற்கு அவரின் தகுதி உழைப்பு தொண்டு ஆகியவை காரணமில்லை அவரின் தலையெழுத்துதான் அதற்குக் காரணம், அப்படித்தானே?

தேர்தலில் தோல்வியைக் கண்டு மாஜி முதல் அமைச்சர் ஆனதற்குக் காரணம் தலைவிதிதான் என்று நினைத்துக் கொண்டு முடங்கிக் கிடக்க வேண்டியதுதானே!

பின் எதற்கு உப்புப் பெறாத பிரச்சினைக்கெல்லாம் போராட்டம் ஆர்ப்பாட்டம்?

எதற்கும் தலைவிதிதான் காரணம் என்றால் தேர்தல் தோல்விக்கு யார் யாரையோ, எதை எதையோ குற்றம் கூறுவானேன்? ஒரே வரியில் எல்லாம் விதிப்பயன் என்று வீட்டுக்குள் முடங்கிக் கிடக்க வேண்டியதுதானே!

பகுத்தறிவுக்கு இடமில்லாத, விஞ்ஞான மனப்பான்மை கிஞ்சிற்றும் பொறாத ஒருவர்தான் திராவிடக் கட்சியின் தலைவரா? ஒரு நாட்டுக்கான முதல் அமைச்சரா? இத்தகைய ஒருவர் முதல் அமைச்சராக இருந்தால் என்ன சொல்லுவார்?

பசி பட்டினி என்றால் பரதேசிகளே, பட்டினியாகக் கிடக்க வேண்டியது உங்கள் தலையெழுத்து, ஆண்டவன் அப்படி எழுதி விட்டான் உங்கள் தலையில்; நான் என்ன செய்யட்டும்? என்று என்று கூறிவிடுவாரோ!

வேலையில்லாத் திண்டாட்டமா? அதற்கு நான் என்ன செய்யட்டும்? ஆண்டவனாகப் பார்த்து அப்படி ஒரு திண்டாட்டத்தை உங்கள் தலையில் சுமத்தி விட்டான். சூத்திரதாரி ஆண்டவனே தவிர அவனால் ஆட்டுவிக்கப்படும் அப்பாவியாகிய நான் என்ன செய்ய முடியும்? என்று கைவிரித்து விடுவாரோ!

தலையெழுத்தா! அப்படியென்றால் என்ன? யார் தலையில் யார் எழுதியது? அப்படி சொன்னவன் யார்? அவனை இங்குக் கொண்டு வா, அவன் தலையில் நான் எழுதுறேன். உன் தலையெழுத்தை நான் மாற்றி எழுதுகிறேன் என்று சொல்லி ஏழை, எளிய பாட்டாளி மக்களின் வாழ்வில் வசந்தத்தை ஏற்படுத்திய பச்சைத் தமிழர் காமராசர் அமர்ந்திருந்த முதல் அமைச்சர் நாற்காலியில் அமர்ந்தவரா தலையெழுத்து பற்றியும் விதியைப் பற்றியும் நீட்டி முழக்குவது? தலையெழுத்தை நம்பி தாழ்ந்து கிடந்த மக்கள் மத்தியில் தன்னம்பிக்கையை ஊட்டும் தலைவர்கள்தான் நாட்டுக்குத் தேவை

தலையெழுத்தை நம்பச் செய்து கழுத்தறுக்கும் தம்பிரான்கள் நமக்குத் தேவையில்லை. அடிமையாக இருந்ததுபோதும், ஆர்த்தெழு என்று சொல்லும் அய்யாவின் தொண்டர்கள்தான் நமக்குத் தேவை. அடிமைகளாக, ஊமைகளாக தலைவிதியை நம்பியவர்களாக தலைப்பிரட்டை வாழ்க்கைக்கு வழி காட்டும் வனிதாமணிகள் நமக்குத் தேவையில்லை. அண்ணா திமுக முன்னணியினரே, அருமைத் தொண்டர்களே, ஒரு கணம் சிந்திப்பீர்!

அறிவாயுதம் தேவையா_ அக்கிரகார அடிமை வாழ்வு தேவையா?

அய்யா வழி தேவையா _ அக்கிரகார வழி தேவையா?

அண்ணா வழி தேவையா -_ அவாள் வழி தேவையா?

சுட்டிக்காட்ட வேண்டியது எங்கள் கடமை. சிந்திக்க வேண்டியது உங்கள் உரிமை!


ஜெயலலிதாவின் பார்வைக்கு...

சுயமரியாதை அகராதி

"அடுத்த ஜென்மம் என்பது முடிச்சுமாறிகள் பேச்சு

ஆரியர் சூழ்ச்சி அறிவுக்கு வீழ்ச்சி

இதிகாசம் என்பது மதிமோச விளக்கம்

உண்மையைச் சொல்ல ஒருபோதும் தயங்காதே!

ஊழ்வினை என்பது ஊக்கத்தைக் கெடுப்பது

கருமாந்திரம் என்பது காசு பறிக்கும் தந்திரம்

கல்லைத் தெய்வமென்று கற்பிக்க வேண்டாம்!

கோத்திரம் என்பது குலத்தைப் பிரிப்பது

சனாதன தர்மம் என்பது சண்டாள அதர்மம்

சாமி சாமி என்பது காமிகளின் உளறல்

சூத்திரன் என்றால் ஆத்திரங்கொண்டடி!

நிதியைக் கொடுப்பது நிதியைக் கெடுப்பது

தெய்வ வழிபாடு தேச மக்களுக்குக்கேடு

பார்ப்பனர்கள் என்போர் பகற்கொள்ளைக்காரர்கள்

புராணங்கள் என்பவை பொய்மைக் களஞ்சியங்கள்

பேதமென்பது வேதியருக்கணிகலம்

மகாபாரதம் என்பது பஞ்சமாபாதகம்

மடத்தலைவர்கள் மடமைத் தலைவர்கள்

மதக்குறி என்பது மடமைக்கு அறிகுறி

முக்தி முக்தி என்று புத்தியைக் கெடுக்காதே

விதி விதி என்பது மதியைக் கெடுப்பது

வேதம் என்பது சூதாய்ச் சொன்னது

ஜாதி வேறுபாடு ஜன சமூகக் கேடு

க்ஷேத்திரமென்பது சாத்திரப்புரட்டு"

-------------------------- குடிஅரசு 23.2.1936

மேற்கண்ட சுயமரியாதை அகராதியை அறிவாரா ஜெயலலிதா?

இவற்றை ஏற்றுக் கொண்டால் மட்டுமே சுயமரியாதை இயக்கம், திராவிட இயக்கத்தில் அடிஎடுத்து வைக்கத் தகுதி உடையவர் ஆவார்.

விதியை நம்புகிறேன் என்பவருக்கு திராவிட இயக்கத்தில் இடம் ஏது?


---------------------"விடுதலை” ஞாயிறுமலர் 27-2-2010

0 comments: