Search This Blog

24.6.09

பெண்கள் ஏர் பூட்டி உழுதால் மழை பெய்யுமா?



மழைக்காக

உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத் சுற்று வட்டாரப் பகுதியில் மழை இல்லாமல் கடும் வறட்சி அதற்காக அந்தப் பகுதி மக்கள் என்ன செய்கிறார்களாம்? இரண்டு பெண்கள் ஏர் பூட்டி உழுதனராம்.

ஏர் பூட்டி உழுதால் மழை பெய்யுமா என்று கேட்டு விடாதீர்கள் - பெண்கள் ஏர் பூட்டி உழுதால் மழை பெய்யுமாம்!

இதன் மூலம் தமிழ் நாட்டு மக்கள் கொஞ்சம் ஆறுதல் அடையலாம். மழைக்காக வேண்டி தவளைக்கும் தவளைக்கும் கல்யாணம், கழுதைக்கும் கழுதைக்கும் கல்யாணங்களைத் தமிழ்நாட்டில் நடத்துவதில்லையா?!

ஏதோ மூடர்கள் தமிழ்நாட்டில் மட்டும்தான் இருக்கிறார்கள்; முட்டாள்தனம் தமிழ்நாட்டுக்கு மட்டுமே காப்புரிமை என்று நினைத்து விடாமல் இருக்க, உ.பி. தகவல் கொஞ்சம் ஆறுதல் அளிக்கிறது. பரவாயில்லை நம்மை விடவும் முட்டாள்கள் உ.பி.யிலும் இருக்கிறார்கள் என்று தேற்றிக் கொள்ளலாம்.

மழை வளம் குன்றியதற்குக் காரணம் என்ன? தவளைகளுக்குக் கல்யாணம் செய்யாததுதானா? பெண்கள் ஏர் உழாததாலா? மழை பொழிவதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்
இந்தக் கேள்விகளுக்கு பத்தி லோகம் பதில் சொல்லுமா? மூடத்தனம் பெருகினால் மக்களைச் சுரண்டலாம் என்பதால் பக்தி வியாபாரிகள் இடை இடையே இதுபோல பிரச்சாரங்களைக் கிளப்பி விடுவார்கள்.


உ.பி.யில் மழைக்காக இரண்டு பெண்கள் ஏர் உழுதனர் என்கிற சேதி வெளிவந்துள்ள அதே நேரத்தில் நேற்று இன்னொரு மாலை ஏட்டில் பருவ மழை பொய்த்ததற்கான காரணத்திற்கு விஞ்ஞானிகள் விளக்கியுள்ள தகவலும் வெளிவந்துள்ளது.

வங்கக் கடலில் அய்லார் புயல் உருவானதால் இந்தியத் துணைக் கண்டத்தின் காற்று மண்டலத்தில் உள்ள அனைத்து ஈரப்பசையையும் உறிஞ்சிக் கொண்டு விடுகிறது என்று வானிலை நிபுணர்கள் கூறியுள்ளனர்.

பசிபிக் கடலில் ஏற்பட்டுள்ள வெப்ப நீரோட்டம் காரணமாகவும் மழை பெறும் வாய்ப்பு குறைந்து விட்டது என்பது நிபுணர்கள் கணிப்பு.


அறிவியல் இப்படி கூறும்போது அறியாமை இருளில் சிக்குண்ட மக்களோ வேறு வகையில் செயல்படுகிறார்கள். இதில் இன்னொரு வெட்கக்கேடு பெண்கள் நிர்வாணமாக ஓடினால் மழை பெய்யும் என்கிற கதையையும் வக்கிரப் புத்தி கொண்ட ஆண்கள் இவ்வாறு கிளப்பி விட்டிருக்கக் கூடும்.

பகுத்தறிவு வேலை செய்யாவிட்டால் நாட்டில் ஆபாசங்களும், அறியாமையும் தானே கழைக் கூத்தாடும்?

- மயிலாடன் அவர்கள் 24-6-2009 "விடுதலை"யில் எழுதிய கட்டுரை

0 comments: