Search This Blog

28.8.11

தேவ ப்ரச்னம் என்றால் என்னவாம்?

கேள்வி: தேவ ப்ரச்னம் என்னும் ஜோதிட சடங்கு நடத்தி, பத்ம நாபஸ்வாமி கோவிலில் மறைந்து கிடக்கும் விலை மதிப்பற்ற பொக்கிஷங்களைக் கண்டறி வதுபோல, ஸ்விஸ் வங்கியில் இந்தியர்கள் பதுக்கி வைத்திருக்கும் கருப்புப் பணத்தையும் இதன் மூலம் கண்டறிய முடியாதா?

பதில்: முதலில் ஒரு விஷயம். நல்ல வேளையாக ப்ரச்னம் என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். பிரசன்னம் என்று பல பத்திரிகைகள் எழுதிக் குழப்புகின்றன. ப்ரச்னம் என்றால், கேள்வி தெய்வத்திடம் கேள்வி கேட்டு, நிலை மையைப் புரிந்து கொள்ள முயல்வது, தேவ ப்ரச்னம்.

உங்கள் கேள்விக்கு வருகிறேன். மறைந்து கிடக்கிற பொருள் எங்கே இருக்கிறது - என்பது அல்ல அங்கு நடந்த ப்ரச்னம். அந்த நகைகளை எடுப்பதால், தீமை விளை யுமா, என்ன ஆகும், என்ன விளைவு என்பதைப் பார்க்கத்தான் அங்கு ப்ரச்னம் பார்க்கப்பட்டது.

ஆகையால், ஸ்விஸ் வங்கியில் எவ்வளவு பணம் பதுக்கப்பட்டிருக்கிறது என்பதை அங்கு கேட்க முடியாது. பதுக்கப்பட்ட பணத்தை அரசு எடுத்தால் என்ன நடக்கும் - என்று துக்ளக் ப்ரச்னம் பாருங்கள். நல்லதுதான் நடக்கும் என்று பதில் கிடைக்கும்.
-----------(துக்ளக் 31.8.2011)

தெய்வத்திடம் கேள்வி கேட்கலாம் என்று சொல்கிறார் திருவாளர் சோ. தெய்வ வாக்குதான் இறுதி வாக்கு என்று இனிமேல் சொல்ல முடியாது.

கடவுள் என்றாலும் கடவுள் அவதாரம் என்றாலும் கேள்வி கேள் என்றார் பகுத்தறிவுப் பகலவன் பெரியார்.

இப்பொழுது அந்த இடத்துக்குத் தானே வந்திருக்கிறார் திருவாளர் சோ.

திருவனந்தபுரம் பத்மநாபன் கோயில் அறையைத் திறப்பதால் தீமை விளையும் என்று சொல்லத் தெரிந்த கடவுளுக்கு, அந்த அறையில் என்ன இருக்கிறது என்று சொல்லத் தெரியாதா?

அப்படி சொல்லத் தெரியாதவருக்குப் பெயர் சர்வ சக்தி கடவுளா என்ற கேள்வி எழாதா?

மறைந்து கிடக்கிற பொருள் எங்கே இருக்கிறது என்று கடவுளுக்குச் சொல்லத் தெரியும் என்று ஒப்புக் கொண்டால் ஸ்விஸ் வங்கியில் பதுக்கி வைத்திருக்கும் பணத்தையும் ப்ரச்னம் மூலம் தெரிந்து கொள்ளலாம் அல்லவா என்ற கேள்விக்குள் சிக்கித் தவிக்க வேண்டிவரும்.

அதிலிருந்து, தான் தப்பிப்பதற்காக அந்த சக்தி கடவுளுக்கு இல்லை என்று ஒரு முழு கரணம் அடிக்கும் சோவின் லாஜிக்கோ லாஜிக்!

உருவமற்ற கடவுள் என்று சொல்லிக் கொண்டு அதற்கு உருவம் அமைத்து, கோயில் கட்டி, ஆறு வேளை சோறு போட்டு, கல் யாணம் பண்ணி வைத்து, புருசனும் பெண்டாட்டியுமா கிய கடவுளுக்குப் பள்ளி அறை வேறு ஏற்பாடு செய்து, அதற்குப் பிறகு பிள்ளை குட்டிகள் பெற வைத்து, அந்தப் பிள்ளைக் குட்டிகளுக்கும் தனித் தனிப் புராணங்களை எழுதி... அப்பப்பா என் னென்ன கேலி கூத்து!

இந்த உலகமே அவன் படைத்தது, எல்லாமே அவன் சொத்து என்று ஆனபிறகு கடவுளுக்கென்று நகைகள் ஏன்?

அந்த நகைகளால் அந்தக் கடவுளுக்கு யாது பயன்? அரசனும், அர்ச்சகனும், டிரஸ்டிகளும் சுரண்டிக் கொழுக்கத்தானே?

அரச வம்சத்தவனோ, அர்ச்சகனோ, டிரஸ்டியோ திருட்டுத் தனமாக எடுத்துச் சென்ற போது பத்மநாபன் தடுத்ததாகக் கதைகூட இல்லையே!

இந்தக் கடவுளைக் காப்பாற்ற இந்தப் பூதேவர்களான பார்ப்பனர்கள் படும்பாடு அப்பப்பா... சொல்லுந் தரமன்று.

ஆம், அந்தக் கடவுள் என்று கல்லுக்குள் தான் பார்ப்பன உயர் ஜாதி ஆதிக்கத் தன்மை என்ற உயிர் இருக்கிறது என் பதை மறக்க வேண்டாம் - அதனால்தான் இவ்வளவு வக்காலத்து!

---------------------"விடுதலை” 28-8-2011

0 comments: