Search This Blog

19.8.11

இந்தியாவின் ராஜபக்சே நரேந்திரமோடி



2002ஆம் ஆண்டில் குஜராத் மாநிலத்தில் நரவேட்டை நரேந்திரமோடி - தனது ஆட்சி அதிகாரத் தின் முழுபலம் கொண்டு சிறுபான்மை மக்களைக் கொத்துக் கொத்தாக வேட்டையாடித் தாகம் தீர்த்தார். புரியும்படிச் சொல்ல வேண்டும் என்றால் இந்தியாவின் ராஜபக்சே என்றே வைத்துக் கொள்ளலாம். சிறுபான்மை மக்களின் வணிக நிறுவனங்கள் எல்லாம் கொடிய தீயின் நாக்குக்கு ருசியாகின. கர்ப்பிணிப் பெண்கள்கூட இந்தக் காட்டு மிராண்டிகளின் கத்திக் குத்துகளுக்குத் தப்பவில்லை. ஒன்பதாண்டுகள் உருண்டோடி ஓய்ந்து விட்டன. இன்னும் இந்தப் படுகொலைபற்றி விசாரணைகளின் அடிப்படையில் குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் இஹ்சான் ஜாஃப்ரி இந்துத்துவக் கொடியவர்களால் கொடூரமான முறையில் எரித்துக் கொல்லப்பட்டார். அவரின் மனைவி ஜாகியா அம்மையாரின் கடும் முயற்சிக்குப்பிறகு உச்சநீதி மன்றம் சிறப்புப் புலனாய்வுக் குழு ஒன்றை அமைத்து விசாரணையை நடத்துமாறு உத்தரவிட்டது. சிறப்புப் புலனாய்வுக்குழு குஜராத் முதல் அமைச்சர் மோடியைப் பல மணி நேரம் விசாரித்தது. இந்த வழக்கில் குஜராத் மாநில உளவுத்துறை முன்னாள் தலைவர் சஞ்சீவ்பட்டின் பிரமாண வாக்கு மூலம் மிகவும் முக்கியமானது. காவல்துறை அதிகாரிகள் மத்தியில் முதல் அமைச்சராகவிருந்த நரேந்திரமோடி எத்தகைய ஆணைகளைப் பிறப்பித்தார் என்பதை எல்லாம் அவர் போட்டு உடைத்து விட்டார். இதுதான் சரியான சந்தர்ப்பம், முஸ்லீம்களைத் தண்டிக்க வேண்டும்? கலவரங்களைக் காவல்துறை கண்டு கொள்ளக் கூடாது என்று வாய்மொழி ஆணைகளைப் பிறப்பித்தார். முதல் அமைச்சர் என்கிற தகவல்களை எல்லாம் இந்த மூத்த காவல்துறை அதிகாரி கூறியுள்ளார். இந்தக் காவல்துறை அதிகாரி மாத்திரம் அல்ல; கலவரத்தின் போது காவல்துறை உதவி டைரக்டர் ஜெனரலாக விருந்த ஸ்ரீகுமார் நானாவதி ஆணையத் தின் முன்னர் என்ன கூறினார்? பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் காவல்துறைக்குப் புகார் கொடுத்தும் காவல்துறையின் கைகள் கட்டப்பட்டு இருந்தன. அவர்கள்மீது முதல் தகவல் அறிக்கை (FIR) போடப்பட்டு இருந்தும் உடனே விடுதலை செய்யப்பட்டனர். அரசுத் துறையின் வழக்கறிஞர்கள் இதற்குத் துணை போனார்கள்; சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொண்டும் அரசு ஏற்றுக் கொள்ளவில்லை என்று சொன்னாரே! குஜராத்தில் பெஸ்ட் பேக்கரி - படுகொலை சாதாரணமானதா? ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 14 பேர்களை விறகு கட்டைகளைக் கட்டுவதுபோல கட்டி பேக்கிரியின் அடுப்பில் துடிக்கத் துடிக்கக் கொன்று குவித்தார்களே கொடூரக்காரர்கள் - அந்தக் குடும்பத்தில் தப்பிப் பிழைத்த ஜாஹிரா தொடுத்த வழக்கில் உச்சநீதிமன்றம் நரேந்திரமோடியை நீரோ மன்னனுக்கு ஒப்பிடவில்லையா? 14 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் உயர்நீதி மன்றம் குற்றவாளிகளை விடுதலை செய்ததற்கு உச்சநீதிமன்றம் கடுமையாக விமர்சித்ததே! வழக்கை குஜராத்திலிருந்து மும்பையில் நடத்த உத்தரவிட்டதே! இதில் என்ன கொடுமை தெரியுமா? வழக்குத் தொடுத்த அந்த ஜாஹிராவே பிறகு பல்டி அடித்துவிட்டார். இல்லை பல்டியடிக்க வைக்கப் பட்டாரே! எந்த நியாயத்துக்கும் தர்மத்துக்கும் கட்டுப்படாதவர்கள் பிஜேபி - சங்பரிவார்க் கும்பல்!

உச்சநீதிமன்றத்தில் சிறப்புப் புலனாய்வுக் குழு இப்பொழுது அறிக்கையைக் கொடுத்துள்ளது அல்லவா - அதன் நிலை என்ன தெரியுமா? அட்வகேட் ஜெனரல் அந்த அறிக்கையின் முக்கிய அம்சத்தைக் குற்றவாளிகளுக்குக் கசிய விட்டார் என்ற குற்றச்சாற்று எழுந்துள்ளது.

ஆர்.எஸ்.எசுக்கு ஆலோசகராக இருக்கக்கூடிய கோயங்கா வீட்டுக் கணக்கப் பிள்ளைக்கும் அந்த ரகசிய அறிக்கை வந்து சேர்ந்ததாக என்.டி.டி.வி. போன்ற தொலைக்காட்சிகளிலேயே செய்தியாக வெளிவந்து விட்டது.

இன்னும் என்னதான் செய்ய மாட்டார்கள்? சூத்திரன் சம்பூகனை வெட்டிக் கொன்ற ராமனின் பெயரால் ஒரு ராஜ்ஜியத்தை உருவாக்கத் துடிப்பவர்கள் ஆயிற்றே!

குஜராத் கலவர வழக்கில் மோடியும், மசூதி இடிப்பு வழக்கில் அத்வானியும் தண்டிக்கப்படாவிட்டால் நாட்டில் நீதிக்கும், சட்டத்துக்கும் மரியாதை இல்லாமல் போய்விடும் என்பது மட்டும் உறுதி! உறுதி!!

--------------------- "விடுதலை” தலையங்கம் 18-8-2011

0 comments: