Search This Blog

29.1.10

இலங்கைத் தீவு அடுத்து என்ன?



ராஜபக்சே இலங்கைத் தீவில் 2017 வரை அதிபராக இருப்பது உறுதியாகிவிட்டது.

அவர் வெற்றி பெற்றாலும் அவருக்கு எதிராக 42 லட்சம் வாக்குகள் பதிவாகியுள்ளன என்பதை மறந்துவிடக்கூடாது,

தமிழர்கள் ராஜபக்சேவுக்கு எதிராகத்தான் வாக்களித்துள்ளனர் என்பதும் தெரிந்துவிட்டது. இந்த வெளிச்சத்தில் ஒரு ஆட்சி என்ற முறையில் ராஜபக்சே தனது நிலையில் மாற்றத்துடன் செயல்படத் தவறினால் சர்வதேச அரங்கில் பலத்த அடி வாங்க வேண்டியிருக்கும்.

தமிழர்களுக்கு எந்த உதவி செய்வதாக இருந்தாலும், அதனைப் பெரும்பான்மை மக்களான சிங்களர்கள் ஏற்றுக் கொண்டால்தான் முடியும் என்று ராஜபக்சே சொல்லுவது எந்த வகையில் நியாயமானது? ஆட்சி என்பது அனைவருக்கும் பொதுவானதுதானே!

உலக நீதிமன்றத்தில் அவர் நிறுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை முயற்சி ராஜபக்சேயின் வெற்றியால் தடைபட்டுவிடும் என்று நினைக்க முடியாது.

சிங்கள இனம், தமிழர் இனம் என்ற பகை ஊட்டப்பட்ட ஒரு தீவில், பெரும்பான்மை யாக இருக்கக்கூடிய சிங்களர்கள் இன வெறியோடு, ஓர் இனவெறியனைத் தேர்வு செய்ததில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்?

இலங்கைத் தீவில் போர் முடிவுற்ற நிலையில் அங்கு நடைபெற்ற உரிமை மீறல்கள் ஒவ்வொன்றாக மேலும் மேலும் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

போரில் உயிரிழந்த பெண் விடுதலைப்-புலிகளை நிர்வாணப்படுத்தி குதூகலித்தனர் என்றால் இந்தக் காட்டுவிலங்காண்டி மக்களை சர்வதேச மக்கள் எப்படி பொறுத்துக் கொள்வார்கள்?

ராஜபக்சேயின் தேர்தல் வெற்றி மூலம் இவற்றையெல்லாம் மக்கள் ஏற்றுக் கொண்டுவிட்டனர் என்று வக்காலத்து வாங்க மனிதனாக உள்ள எவரும் முன்வரமாட்டார்கள். சோ போன்ற வக்கிரப்புத்தி கொண்ட பார்ப்பனர்கள் வேண்டுமானால் அதற்கு ஒரு வெண்டைக்காய், விளக்கெண்ணெய் விளக்கம் கூறக்கூடும். அந்த நிலையில் தமிழர்கள் பதிலடி கொடுப்பார்கள் என்பதில் அய்யமில்லை.

ஈழத் தமிழர்கள் வஞ்சிக்கப்பட்டதற்கும், அழிக்கப்பட்டதற்கும் தங்களால் முடிந்த உதவிகளையெல்லாம் தாராளமாகச் செய்திட்ட இந்திய அரசு, இப்பொழுது என்ன செய்யப் போகிறது என்கின்ற கேள்விக்குறி உலகத் தமிழர்கள் மத்தியிலும், மனித உரிமையாளர்கள் மத்தியிலும் செங்குத்தாக எழுந்து நிற்கிறது.

முள்வேலி முகாமுக்குள் இன்னும் முடங்கிக் கிடக்கும் தமிழர்கள் சொந்த ஊர்களுக்கும், சொந்த வீடுகளுக்கும் திரும்பிடச் செய்யவும், தமிழர்களின் பூர்வீக நிலமான வடக்கு கிழக்கு மாகாணங்களின் இணைப்பிற்கும், நிரந்தரமான அரசியல் தீர்வுக்கும் வழி காண இந்தியா தீவிரமாக முயலவேண்டிய தருணம் இது.

இன்னும் பழைய பாணி சிந்தனைகளும், செயல் முறைகளும் இந்தியாவில் இருக்கக்கூடாது. வாங்கிக் கட்டிக் கொண்ட கெட்ட பெயர்களும், அவதூறுகளும் போதும், போதும்.

தொடக்க நிலையிலேயே அதில் தெளிவாக இந்திய அரசு செயல்பட்டால்தான் ராஜபக்சே போன்ற வெறியர்களைக் கட்டுப்படுத்த முடியும்.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தமிழ் நாட்டில் தி.மு.க.வுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்துக் கொண்டிருந்தாலும், குறிப்பிட்ட காங்கிரஸ் பிரமுகர்கள் போட்டியிட்ட தொகுதிகளில் தமிழ்நாட்டு மக்கள் தங்கள் உணர்ச்சிகளை எப்படி வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அகில இந்திய காங்கிரசின் தலைவர் சோனியா காந்தியும், பிரதமர் மன்மோகன்சிங்கும் சற்றுக் கூர்மையாக ஆய்ந்து சிந்திப்பார்களாக!

--------------------- "விடுதலை” தலையங்கம் 29-1-2010

0 comments: