Search This Blog

6.1.10

செருப்பொன்று போட்டால் சிலையொன்று முளைக்கும்!

எங்க ஊரு அய்யா சிலை

தந்தை பெரியார் சிலை - கடலூர்
நாள்: 13-08-1972 இடம்: கடலூர் எழில் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பழைய பாலத்திற்கும், புதிய அண்ணா பாலத்திற்கும் இடைப்பட்ட பகுதி,
தலைமை : சி.பி. சிற்றரசு (முன்னாள் மேலவைத் தலைவர்)
திறப்பாளர்: கலைஞர்

“கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
என்ஆற்றுங் கொல்லோ உலகு’’


இது பொய்யா மொழியாரின் வாக்கு. மழையானது உலகத்தாரிடம் எத்தகைய உதவியையும் எதிர்பார்ப்பதில்லை. காரணம், அதற்கு பேதம் எதுவும் இல்லை. அதுபோலத்தான் அறிஞர்கள் கைம்மாறு கருதி எதையும், யாருக்கும் செய்வதில்லை. இது யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ நம் மானமீட்பர், மனித நேயர் தந்தை பெரியாருக்கு முற்றிலும் பொருந்துகின்ற ஒன்றாகும்.


மடமையில் மயங்கிக் கிடந்த மக்கள் தங்களின் இந்த இழி நிலைக்கு முற்பிறப்பில் தாங்கள் செய்த பாவம்தான் காரணமே தவிர, வேறொன்றுமில்லை என்று தங்களுக்குத் தாங்களே சமாதானப்பட்டுக் கொண்டு, தங்களுக்கு விடிவு என்பது தேவைதானா என்று கூட தெரியாமல் மலத்தில் புழுத்த புழுக்களாக இருந்தபோது அவர்களே எதிர்பாராத நேரத்தில் மழையாக வந்தார் பெரியார். அந்த மழை மக்களிடம் என்ன எதிர்பார்த்தது? ஒன்றுமே இல்லை. ஆனால் அந்த மழையில் மக்களின் தரிசு மனங்கள் நனைந்தன. பிறகு தழைத்தன, குறுகிய காலமே ஆனாலும் தமிழன் இன்று ஓரளவிற்கு மற்ற மற்ற நாடுகளின் மக்களைப் போல மானமும், அறிவும் பெற்று சுயமரியாதையோடு வாழ்ந்து கொண்டிருக்கிறான். அது மட்டுமல்ல, இந்துத்துவத்தை வேரறுக்கும் பேராயுதமான தந்தை பெரியாரின் கொள்கைகள் ஆல்போல தழைத்து அருகுபோல் வேரோடி மூன்று தலைமுறைகளாக நிலைபெற்று நின்று விட்டது. மூன்றாவது தலைமுறை பெரியார் தொண்டர்கள் என்கின்ற சொல் வழக்கே வந்துவிட்டது. இனிமேல் தமிழ் நாட்டில் இந்துத்துவம் எதையும் ஆட்டவும் முடியாது, அசைக்கவும் முடியாது.


இன்றைய இளைய தலைமுறையினர் பலருக்கும் இன்று வாழ்கின்ற இந்த வாழ்க்கை யாரால் வந்தது என்பதுகூட தெரியாமல் தான்தோன்றித்தனமாக வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர். காலத்தை கொஞ்சம் Rewind செய்து பார்க்கக் கூடிய வசதி இருந்திருக்கு மேயானால், இளைஞர்களுக்கு வசதியாகத்தான் இருக்கும். வரலாற்றை அறிந்து கொள்வதில் ஆர்வமில்லாதவர்களை ஆர்வம் கொள்ளச் செய்ய ஒரே ஒரு சம்பவத்தை சொன்னாலே போதும் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமல்லவா?


ஆம், 29-07-1944 இல் கடலூரில் ஒப்பாரும் மிக்காரும் இலாத நமது இனக் காவலர் மீது ஏதேதோ வீசப்பட்டன. அதில் பாம்பும் உண்டு, செருப்பும் உண்டு பெரியார் திரைப்படத்தை பார்த்தவர்களுக்கு இந்த வரலாறு ஒளிப்படமாகவே மனத்திரையில் விரியும். தன்மீது விழுந்த அந்த ஒற்றைச் செருப்பு தனக்கும் பயன்படாது. மீதமிருக்கும் ஒற்றைச் செருப்பு அதை வீசியவனுக்கும் பயன்படாது என்று கருதி அதன் ஜோடியான மற்றொன்றையும் பெரியார் பெற்றுக்கொண்ட யுக்தி நாம் அறிந்ததே.

ஆனால், அடுத்து வரப்போகின்ற செய்தியை நம்ப முடிகின்றதா என்று பாருங்கள். எந்த இடத்தில் பெரியார் மீது பூணூல் திருமேனிகளான ஆரியக்குடி-கேடிகள் செருப்பு வீசினார்களோ, அதே இடத்தில் ஏறத்தாழ 28 ஆண்டுகள் கழித்து 13-08-1972 ஆம் ஆண்டு பெரியாருக்கு அந்த ஊர் மக்களே சிலையெழுப்பி கொண்டாடி மகிழ்ந்தார்கள். நம்ப முடியவில்லை அல்லவா? அவர்தான் பெரியார்!


ஆம், இந்த வாரம் நாம் காண இருப்பது கடலூரில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலையாகும்.


பகுத்தறிவாளர்களின் சமயோசித புத்திக்கு ஆயிரமாயிரம் சம்பவங்களைச் சொல்லலாம். அதில் கடலூர் சிலை திறப்பு விழாவுக்கு முன்பு நடந்த நிகழ்வு கூடுதல் சுவைகொண்டது. இன்றைய பொதுச் செயலாளரும் அன்றைய பகுத்தறிவாளர் கழகப் பொதுச் செயலாளரும், தமிழ்நாடு என்.ஜி.ஜி.ஓ. சங்கத்தின்தலைவருமான சு. அறிவுக்கரசு சிலைத் திறப்புப் பணிகளை கவனித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது மாவட்ட ஆட்சியரும், காவல்கண்காணிப்பாளர் ஒருவரும் வந்தனர். இவர் பார்ப்பனர் ‘‘சிலையில் கடவுள் மறுப்பு வாசகங்கள் எதுவும் பொறிக்கப்பட்டிருக்கிறதா?’’ என கலெக்டர் சு. அறிவுக்கரசு அவர்களிடம் கேட்டிருக்கிறார். அவர் ‘‘இல்லை’’ என்று சொல்லியிருக்கிறார். கலெக்டர் எஸ்.பி.அய்ப் பார்த்து, “பார்த்தீர்களா’’ (யு.சி) என்று மகிழ்ச்சியாகக் கூறினார். அவர்கள் போன பிறகு, அறிவுக்கரசு அவர்களைப் பார்த்து அவருடைய நண்பர்கள், ‘‘வாசகங்கள் இல்லை என்று ஏன் பொய் சொன்னீர்கள்’’ என்று கேட்டனர். இவரும் சிரித்துக் கொண்டே சிலையில் ஏது வாசகம் ? பீடத்தில்தானே இருக்கிறது. என்று சொல்லியிருக்கிறார். இதைக் கேட்டு நண்பர்கள் விழுந்து விழுந்து சிரித்திருக்கிறார்கள். கலெக்டர் “Fedestal’’ என்ற சொல்லுக்கு பதிலாக “Statue’’ என்ற சொல்லை பயன்படுத்தி இருந்தார். இது எப்படி? பகுத்தறிவாளர்களிடம் ஆணானப்பட்ட கடவுள்களே படாதபாடு படும்பொழுது மற்றவர்களைப் பற்றி என்ன சொல்வது?


அன்றைக்கு தந்தை பெரியார் அவர்கள், சிலை அமைப்புக் குழு பொருளாளரும் வழக்கறிஞருமான எஸ்.ஜனார்த்தனம் அவர்களின் இல்லத்தில் தங்கியிருந்தார். அவருடன் ஆசிரியர் வீரமணி அவர்களும் மற்றவர்களும் இருந்தனர். இந்த எஸ்.ஜனார்த்தனம் தான் பின்னாட்களில் மாவட்ட நீதிபதியாகி, உயர்நீதிமன்ற நீதிபதி யாகி ஜஸ்டிஸ் எஸ்.ஜனார்த்தனம் ஆகி ஓய்வு பெற்ற பின்னர் மாநில நுகர்வோர் நீதிமன்ற தலைவராகவும் பிற்படுத்தப்பட் டோர் நலக்கமி ஷனராகவும் நியமிக்கப்பட் டவர். அப்படி அய்யா எஸ். ஜனார்த்தனம் அவர்களின் வீட்டில் இருந்தபொழுது கழகத் தோழர்களும் முக்கிய பிரமுகர்களும் குடும்பம் குடும்பமாக வருகை தந்து அய்யாவைப் பார்த்து தங்கள் வணக்கங்களையும், நன்றியையும் தெரிவித்தவண்ணம் இருந்தனர்.


பெரியாருக்கு ஓய்வில் கூட பிரச்சாரப்பணி நடந்திட வேண்டும். ஆயிரமாண்டுகளில் சாதிக்க வேண்டியவைகளை நூறாண்டுகளில் சாதிக்க போராடும் தாய்மையின் அவசரம் அது. அப்படித்தான் சிலை திறப்பு நாளன்று மதியஉணவு ஏற்பாடு செய்வதற்கு சு.அறிவுக்கரசு அவர்கள் ஆசிரியரிடம் கேட்டு தந்தை பெரியாரின் அனுமதியைப் பெற்று நல்லவண்ணம் சுமார் நூறு பேர்களுக்கு அசைவ உணவு ஏற்பாடு செய்திருந்தார். அவருடைய வீடு சிறியது என்பதால் அவருடைய நண்பர் ஹாஜிமஸ்தான் அவர்களின் சினிமாத் தியேட்டரில் வைத்து உணவு பரிமாறப்பட்டது. உண்டு முடித்ததும் தந்தை பெரியார் அறிவுக்கரசு அவர்களைப் பார்த்து “இவர்கள் எல்லாம் சர்க்கார் உத்தியோகஸ்தர்களா?’’ என்று கேட்டிருக்கிறார். ஆம் என்று இவர் சொன்னதும் “இவங்க மத்தியில் நான் கொஞ்சம் பேசலாமா?’’ என்று கேட்டார். அய்யாவின் பேச்சுக்கு அப்பீல் ஏது? கோழி தின்பதற்கு கூலி எதற்கு? உடனே மைக் ஏற்பாடு செய்யப்பட்டது. சைவக்காரரான நீரியல் விஞ்ஞானி குமாரசாமி தலைமையில் அய்யா முக்கால் மணிநேரம் பேசினார். சினிமா பார்க்க வந்த ஏராளமான மக்கள் வந்த காரியத்தை மறந்து, அய்யாவின் பேச்சை ஆர்வத்துடன் கேட்ட வாறிருந்தனர். தியேட்டர் மேலாளர்தான் மூக்கால் அழுதுவிட்டார். காரணம் மேட்னி காட்சி தொடங்கியாக வேண்டும். காலம் கடந்து விட்டது இதை ஆசிரியர், அய்யாவிடம் கூறிய பிறகே அய்யா தனது உரையை நிறைவு செய்தார்.
ஆயிரமாயிரம் தமிழ் மறவர்கள் சூழ மேள தாளத்துடன் அய்யா பவனி வந்தார். ஊர்வலம் லாரன்ஸ் ரோட்டில் (திருப்பாதிரி புலியூர் கடைத்தெரு) முதல்வர் கலைஞர் உணவு அமைச்சர் ப.உ. சண்முகம், போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ். இராமச்சந்திரன், அன்பில் தர்மலிங்கம் ஆகியோர் அய்யாவுடன் பவனி வந்தார்கள். அந்தக் காட்சி மக்களை உணர்ச்சிப் பெருக்கில் தள்ளி அதில் தத்தளிக்க வைத்து விட்டது. அதிலிருந்து மீள்வதற்குள் அவர்களுக்கு போதும் போதுமென்றாகிவிட்டது.


விழாவில், கலைஞர் ‘அங்கிங்கெனாதபடி எங்கெங்கும் தமிழகம் முழுவதும், தமிழகத்தைத் தாண்டியும் தந்தை பெரியாருக்கு திருவுருவச் சிலைகள் நிறுவப்பட வேண்டும். அவர் தனிமனிதரல்ல; சகாப்தம்; இயக்கம்; காலகட்டம் என்று முழங்கினார். அன்று கலைஞர், தமிழர் தலைவரை ‘விடுதலை வீரமணி‘ என்ற சொல்லாடலை பயன்படுத்தி பேசினார். மேலும், கலைஞர் ‘சிலை’ என்ற சொல்லுக்குப் பொருள் கூறியது சுவையாக இருந்தது. சிலை என்றால் உருவம் என்றும் வில் என்றும் பொருள் உண்டு. அந்த வில்லிலிருந்து புறப்பட்ட நாண்தான் பட்டுக்கோட்டை அழகிரி. அந்த வில்லில் இருந்து புறப்பட்ட ‘நாண்’ தான் அறிஞர் அண்ணா. அது மட்டுமல்ல, அந்த வில்லில் இருந்து புறப்பட்ட அம்புகள் எதிரிகளின் கொத்தளங்களை எல்லாம் சல்லடைக் கண்களாக ஆக்கிப் போட்டுவிட்டது. கூட்டம் இந்த வார்த்தை விளையாட்டுகளில் சொக்கிப் போனது.


அன்றைய ‘விடுதலை’ வீரமணியும் இன்றைய தலைவருமான தமிழர் தலைவர் வீரமணி அவர்கள் விழா பேருரையில் தேர்தல் நேரத்தில் ‘கடவுள் இல்லை’ என்று கூறும் பெரியாரின் சிலையை திறந்து வைத்த கலைஞருக்கா உங்கள் ஓட்டு?’’ என்றனர். பொதுமக்கள் ஆம், அவருக்குதான் எங்கள் ‘ஓட்டு’ என்று கூறி தீர்ப்பு அளித்து இருக்கின்றனர் என்று கூறினார். நாத்திகத்தை வெகுஜனமாக்கிய விந்தை தமிழ்நாட்டைத் தவிர வேறு எந்த நாட்டிலும் கிடையாது.
தந்தை பெரியாரின் போர் உத்திகளை எதிரிகளால் கணிக்கவே முடியாது. அப்படியே கணித்தாலும் கையறு நிலைதான் அவர்களுக்கு. இல்லாமலா செருப்பு வீசிய இடத்தில் 28 ஆண்டுகளுக்குப் பிறகு சிலை முளைத்தது? இன்றைய கணக்கிற்கு சுமார் 65 ஆண்டுகள் ஆகின்றன. இனி யாருக்காவது அய்யா சிலையின் மீது செருப்பு வீசும் துணிச்சல் வருமா? அப்படி வந்தால் இன்னொரு சிலைமுளைக்கும் என்பது அவர்களுக்குத் தெரியாதா?


“செருப்பொன்று போட்டால் சிலையொன்று முளைக்கும்’’
என்ற புகழ்பெற்ற கவிதை பிறந்தது
கடலூரில்தான் இதைப் பாடியவர்
கவிஞர் கருணானந்தம்.

---------------------உடுமலை வடிவேல் அவர்களால் 12-12-209 “விடுதலை” யில் எழுதப்பட்ட கட்டுரை

0 comments: