Search This Blog

18.1.10

தலித் விடுதலை முன்னோடி பெரியார் - 7



இதுதான் யானை என்று உருவகப்படுத்திக் கொண்ட விழி இழந்த அய்வர் கதை கேள்விப்பட்டிருப்பீர்கள். அது உண்மையோ பொய்யோ எனக்குத் தெரியாது.பகுத்தறிவு ஒளி மூலம் நமது விழிகளைத் திறந்த சமுதாய மருத்துவராம் தந்தைபெரியாரைப் பற்றி அந்த விழி இழந்தோர் உருவகப்படுத்தியதை விடவும் அதிகமான அளவில் பொய்யும், புனைவுமாக பல உருவகங்களை உலவவிட்டுள்ளனர் பார்ப்பனர்களும் ,பார்ப்பன அடிவருடிகளும்.

எடுத்துக்காட்டாக பெரியார் கடவுள் இல்லை என்று சொல்லிவிட்டு வீட்டில் பிள்ளையாரை வணங்கினார், வெள்ளைக்காரனுக்கு வால் பிடித்தார்,பெரியார் தாழ்த்தப்பட்டவர்களுக்கு பாடுபடவில்லை,அவர்களை இழிவாகப் பேசினார் என்பது போன்ற பல அவதூறுகளை அள்ளிவீசி வருகின்றார்கள். இந்த அவதூறுகள் பெரியார் உயிரோடு இருந்த போதிலிருந்தே சொல்லப்பட்டு வருகிறது. இந்த அவதூறுகளுக்கெல்லாம் பெரியாராலும், பெரியார் தொண்டர்களாலும் மற்றும் நேர்மையான வரலாற்று ஆய்வாளர்களாலும் தகுந்த ஆதாரங்களுடன் பதில் அளிக்கப்பட்டே வந்துள்ளது.

இருந்தாலும் திரும்பத் திரும்ப அதே அவதூறுகளை ஒரு சில அரைவேக்காடுகள் இப்போதும் சொல்லிவருகிறார்கள். இவர்கள் வைத்த குற்றச்சாட்டுக்கெல்லாம் நாம் http://thamizhoviya.blogspot.com “தமிழ் ஓவியா” வலைப்பூவில் பதில் அளித்துள்ளோம். குறிப்பாக பெரியார், பெரியார்-தலித், அய்யத்தெளிவு என்ற சுட்டியை சுட்டிப் படித்தால் உண்மையை தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

பணிப்பளு மற்றும் குடும்பச் சுமை காரணமாக இந்தப் பார்ப்பனக்கும்பலுக்கு உடனுக்குடன் பதில் அளிக்க கால தாமதமாகிறது. அதோடு ஏற்கனவே இது குறித்து பதில் அளித்து விரிவான நூல்கள் வந்து விட்ட நிலையில் திரும்பத் திரும்ப எழுத வேண்டுமா? என்ற எண்ணமும் ஏற்படுகிறது.

அந்த வகையில் 2004 அம் ஆண்டு “உலகத் தமிழர் சக்தி” ஜூன் 2004 இதழில் “தலித் தலைமை –பெரியாரின் நிலை என்னவாக இருந்தது?” என்ற தலைப்பில் டாக்டர் வேலு அண்ணாமலை அவர்கள்,எழுதிய கட்டுரைக்கு மறுப்பாக நான் எழுதிய கட்டுரையை இங்கு தொடர்ச்சியாகப் பதிவு செய்கிறேன்.
சமூகப் பொறுப்பில் என்னுடைய பங்கும் இருக்க வேண்டும் என்று கூறியதோடு இந்த கட்டுரையை தட்டச்சு செய்து கொடுத்த எனது இனிய தோழர் “ஆதிஆனந்த்அப்பா” அவர்களின் உதவிக்கு மிக்க நன்றி
****************************************************************************



“பெரியாருடன் ஒப்பிட்டு நமது பாபாசாகேப்பை நாம் இழிவு படுத்த வேண்டாம். பாபாசாகேப்பை பற்றி எழுதும் சூத்திர பத்திரிக்கையை யாராவது காட்டமுடியுமா பாபாசாகேப் பற்றி புகழந்து பேசுவதை எத்தனை தடவை கேட்டிருக்கிறோம்” என்று அடுத்த கேள்வியை எழுப்பியுள்ளார் டாக்டர் வேலு அண்ணாமலை

ஒரு நாணயத்திதன் இரண்டு பக்கங்களான பெரியாரையும், அம்பேத்கரையும் வேறுபடுத்தியோ, பேதப்படுத்தியோ எழுதுவது, பேசுவது என்பது இந்துத்துவத்திற்கே வலு சேர்க்கும் என்பதாலும், நயத்தக்க நாகரிகத்துடனும், பண்பாட்டுடன் நடந்து கொள்பவர்கள் பெரியாரின் சீடர்கள் என்பதால் நீங்கள் எவ்வளவு மோசமாக எழுதினாலும் பொறுமையுடன் பதில் அளித்துக் கொண்டிருக்கிறோம் என்பன மட்டும் நினைவில் நிறுத்திக் கொள்ளுங்கள்.

அம்பேத்கரை எப்படி பெரியார் மக்களிடம் கொண்டு சேர்த்தாரோ அதிலிருந்து ஒரு அங்குலம் கூட மாறாமல் அம்பேத்கரை மக்களிடம் கொண்டு சேர்த்துக் கொண்டிருக்கிறhர்கள் பெரியாரின் சீடர்கள்.

1986ஆம் ஆண்டு டாக்டர் அம்பேத்கர் பற்றி நாக்பூர் பல்கலைகழகத்தில் தி.க.தலைவர் கி.வீரமணி அவர்கள் 3 சொற்பொழிவுகள் நடத்தினார். ஆதற்குக் கிடைத்த வெகுமதித் தொகையை நன்கொடையாக அளித்து அதே பல்கலைகழகத்தில் டாக்டர் அம்பேத்கர் பெயரால் அவரது சிந்தனைகளைப் பரப்ப தனித்துறையை ஏற்படுத்தச் சொன்னவர் பெரியாரின் சீடர் கி.வீரமணி அவர்கள்தான் என்பதை நாடு அறியும்.

நாம் ஏற்கனவே சுட்டிக் காட்டிய அம்பேத்கர் பற்றிய அருண்ஷோரியின் நூலுக்கு மறுப்பு சொற்பொழிவு நடத்தி “அருண்ஷோரியின் அம்பேத்கர் பற்றிய நூலுக்கு மறுப்பு“ என்ற நூலை வெளியிட்டவர் பெரியாரின் சீடர் கி.வீரமணி அவர்கள்தான்.
டாக்டர் அம்பேத்கர் பேசுகிறார்” என்ற நூலை எழுதியவர் பெரியாரின் சீடர் தி.க. பொருளாளர் கோ.சாமிதுரை அவர்கள் தான்.

அது மட்டுமல்லாமல் “விடுதலை” ”உண்மை” “The modern Ratinalist” இதழ்களில் அம்பேத்கர் பற்றியும், தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர்கள் பற்றியும், பிரச்சினைகள் பற்றியும் எழுதி தீர்வு கண்டவர்கள் பெரியாரும் பெரியாரின் சீடர்களும்தான்.

அம்பேத்கர் நினைவு நாள், பிறந்த நாள்களில் தவறாமல் அவருக்கு அஞ்சலி செலுத்திக் கொண்டிருப்பவர்கள் பெரியாரும், பெரியாரின் சீடர்களும்தான் என்பதை டாக்டர் வேலு அண்ணாமலைகள் எப்போது உணர்ந்து கொள்வார்களோ! பூனை கண்ணை மூடிக் கொண்டு உலகமே இருண்டு விட்டது என்று நினைக்குமாம் அது போலத்தான் டாக்டர் வேலு அண்ணாமலைகள் செயல்களும் உள்ளது.

கட்டுரையின் இறுதியில் வேலு அண்ணாமலை கீழ்க்கண்ட கேள்விகளைக் கேட்டுள்ளார். அதற்கான பதிலையும் பார்ப்போம்.

கேள்வி: பார்ப்பனர்களுக்கு எதிராக போராடிய பெரியார் தனது சீடர்களிடம் தலித்துகளை இழிவுபடுத்தக்கூடாது என்றோ அவர்களை சமமாக நடத்த வேண்டும் என்றோ சொல்லியிருப்பாரா?

நமது பதில்:

தலித்துகளை இழிவுபடுத்துபவர்கள் எப்படி பெரியாரின் சீடராக இருக்க முடியும் இந்த அடிப்படை அறிவு நாணயம் கூட இல்லாமல் கேள்வி கேட்கும் டாக்டர் வேலு அண்ணாமலைகளே, பெரியாரின் எந்த சீடர் தலித்துகளை இழிவு படுத்தினார். விளக்க முடியுமா?. பெரியாரின் சீடர்கள் தமக்கு மேலோ அல்லது தமக்குக் கீழோ யாரும் கிடையாது. அனைவரும் சமம் என்ற சமத்துவ சமுதாயமாகத்தான் வாழந்து வருகிறார்கள்
. உங்களுக்கு இதில் எந்த அய்யமும் தேவையில்லை. உங்களின் கேள்விக்கு பெரியாரின் பதில் இதோ:

‘பார்ப்பனர்கள் மட்டும் தான் ஜாதி வித்தியாசம் பார்க்கிறார்கள் என்று சொல்லி விடுவதற்கில்லை. பார்ப்பனரல்லாதாருக்குள்ளும் பற்பல ஜாதிகள் ஏற்பட்டு ஒருவருக்கொருவர் வித்தியாசம் பாராட்டுகின்றனர். ஆதலால் “மேல் ஜாதியார்”களை நீங்கள் உங்களுக்கும் சமமாக இருக்கவேண்டுமென்று விரும்புவீர்களானால், எங்களுக்குக் கீழேயுள்ள ஜாதியார்களுக்கும் நீங்கள் சமத்துவம் அளிக்க வேண்டும்.

பார்ப்பனரல்லாதாரிடமிருக்கும் கொடுமை, பார்பனர்கள் காட்டும் கொடுமைகளை விட சில விஷயங்களில் சற்று அதிகம் என்றே சொல்லவேண்டும், ஆனால் நாம் பார்ப்பனர்களை ஏன் அதிகமாகக் குற்றம் சொல்லுகிறோமென்றால் அவர்கள் வைத்த தீ தான் நமக்குள்ளும் பற்றிக் கொண்டது. நாம் மேல் ஜாதி என்பதோடு சண்டை செய்து வகுப்புவாரிப் பிரதிநிதித்துவப்படி உத்தியோகம் கொடுக்க வேண்டுமென்ற கொள்கையில் வெற்றி பெற்றால் , கீழ் ஜாதியார்களெனச் சொல்லப்படுகிறவர்களுக்கும் அவர்களுக்குரிய பங்கை நாம் கொடுக்க வேண்டும்.

சர்வகட்சி மகாநாட்டுத்திட்டத்தில் எல்லா வகுப்பாருக்கும் சமத்துவம் கொடுக்க வேண்டுமென்ற விசயமே காணப்படவில்லை. பார்பனர்களுக்குப் பயந்தே எல்லோரும் அதில் கையெழுத்துப் போட்டு விடுகிறார்கள். முதலில் எல்லா வகுப்பாருக்கும் சமத்துவம் கொடுப்பதை விட வேறு என்ன சீர்திருத்தம் வேண்டுமென்று நினைக்கிறீர்கள்?

-------------- (26.11.1928 அன்று தென்னிந்திய சீர்திருத்தக்காhரர்கள் மாநாட்டில் ஆற்றிய சொற்பொழிவு)

இது போன்ற கருத்துக்களை செயல்களை ஜாதி ஒழப்புக்காக பெரியார் பாடுபட்ட வரலாற்றை அறியாமல் கட்டுரை எழுதும் வேலு அண்ணாமலைகள் முதலில் இவைகளையெல்லாம் படித்துவிட்டு பேனாவை எடுக்க வேண்டுகிறோம். (தாழ்த்தப்பட்டவர்களையும் உள்ளடக்கித்தான் பெரியார் பார்ப்பனரல்லாதார் என்று அழைத்தார். பார்ப்பனர் ஒரு ஜாதி மற்ற அனைவரும் பார்ப்பனரல்லாதவர்கள்)

கேள்வி: பார்ப்பனர்களுக்கு எதிரான இந்துக்களுக்கு எதிரான பிரச்சாரத்தை பெரியார் ஆரம்பித்தார். ஆனால் தலித்துகளுக்கு எதிரான தீண்டாமையை முடிவுக்கு கொண்டு வர ஏதாவது பிரச்சாரம் செய்திருப்பாரா?

பதில்:-

அடடா. எவ்வளவு அற்புதமான புதிய கண்டுபிடிப்பு.. இப்படிப்பட்ட கேள்விகளை டாக்டர் வேலு அண்ணாமலைகளை தவிர வேறு யாராலும் கேட்க முடியாது. ஜாதி ஒழியாமல் தீண்டாமை எப்படி ஒழியும்? தீண்டாமைக்கு அடிப்படைக் காராணமாக இருக்கும் ஜாதி ஒழிய இந்திய அரசியல் சட்டத்தை எரித்தவர்களில் பெரியாரைத் தவிர வேறு எவர்? அத்தோடு ஜாதிக்கு பாதுகாப்பு அளிக்கும் கடவுள் , மதம், பார்ப்பனர், சாஸ்திரம்,புராணங்கள் போன்றவைகளை ஒழிக்க கருத்தியல் ரீதியாக மட்டுமல்ல களப்பணியும் ஆற்றியவர்களில் பெரியாரைத் தவிர வேறு எவர்?

தீண்டாமைக் கொடுமையை முடிவுக்குக் கொண்டு வர பெரியார் பல வழிகளிலும் போராடியுள்ளார், அரசாங்கத்திற்கு பல யோசனைகளையும் அழுத்தங்களையும் கொடுத்துள்ளார். அத்தனையும் எழுதினால் பெரிய நூலாகி விடும். ஏனவே ஓரிரு சான்றுகளை மட்டும் பார்ப்போம்.

எப்போதும் ஆதி திராவிடர்களுக்கு ஊருக்கு வெளியே ஒரு மைல் இரண்டு மைல் தூரத்தில்தான் வீடுகள் கட்டிக் கொடுக்கிறார்கள். அதனால் அது “பறையர்தெரு” ‘பள்ளர் தெரு’; என்று அழைக்கப்பட்டு வருகிறதே தவிர எதிர்பார்க்கிற மாற்றம் ஏற்பட வழயில்லாமல் போய்விட்டது. ஊருக்குள் பெரிய சமுதாயம் வசிக்கிற தெருவில் அக்கிரகாரத்தில் 4,5 வீடுகளை அரசாங்கமே பணம் கொடுத்து (அக்கொயர் செய்து) வாங்கி அந்த வீடுகளில் ஆதி திராவிட மக்களைக் கொண்டு வந்து குடியேற்ற வேண்டும். அப்போது மற்ற மக்களோடு கலந்து பழக வாய்ப்பு ஏற்படும். வீடுகளை வாடகைக்கு எடுத்துக் கொடுத்தால் கொஞ்சம் காலத்துக்குதான் இருப்பார்கள். பிறகு போய் விடுவார்கள் அதனால் பயன் ஏற்படாது என அரசாங்கமே முன் வந்து செய்ய வேண்டும்
---------------------(விடுதலை 27.01.1970)

போலீசு உத்தியோகங்களை தாழ்த்தப்பட்டவர்களுக்கே கொடுக்க வேண்டும். அவர்களை அக்கரகாரத்தில் குடியிருக்கச் செய்ய வேண்டும். தீண்டாமை பாராட்டாத சிறந்த கிராமங்களுக்கு பரிசளிக்க வேண்டும். தாழ்த்தப்பட்டவர்களுக்கென்று தனியாக சேரி கட்டி அங்கே குடியேறுவதை மாற்ற வேண்டும்

--------------------(95 வது பெரியார் பிறந்த நாள் மலர்)

இப்படியெல்லாம் பெரியார் போராடியதன் விளைவாகத்தான் இன்று தீண்டாமை ஜாதியின் கோரப்பிடி தளர்ந்துள்ளது. இன்று வசதியாக ‘சொகுசு’ வாழ்ககை வாழ்நது வரும் டாக்டர் வேலு அண்ணாமலைகளுக்கு இந்த வரலாறு எல்லாம் தெரியாததில் வியப்பொன்றுமில்லை. இதையெல்லாம் எதிர்த்து பெரியார் போராடியிருக்காவிட்டால் . . . நினைத்துப் பாருங்கள். தெளிவடையுங்கள்.

---------------------தொடரும்..............

0 comments: