Search This Blog

20.1.10

மும்பை தாக்குதல் - கர்கரேயைக் கொன்றது யார்? - 10




(முகமூடி அணிந்துள்ள ஆர்.எஸ்.எஸ். அதன் ஆயுதமான ஹிந்துத்வத்தை எப்படியெல்லாம் சந்தர்ப்பத்திற்கேற்ப பயன் படுத்துகிறது என்பதைப் புரிந்து கொள்ள மிக அருமையான நூல் கர்கரேயைக் கொன்றது யார்? என்ற தலைப்பில், ஓய்வு பெற்ற அய்.பி.எஸ். அதிகாரியும் விருப்ப ஓய்வு பெற்று பதவி விலகிய மகாராஷ்டிர அய்.ஜி.யுமான முஷ்ரப் அவர்கள் எழுதியுள்ள நூல்!

பல திடுக்கிடும் உண்மைகள், மறைக்கப்படும் செய்திகள், இவற்றிற்கெல்லாம் மூல காரணங்கள் பார்ப்பனப் பிடிப்புக்குள் சிறைப்பட்டுள்ள அல்லது பார்ப்பனமயமான இந்திய உளவுத் துறையும், இந்திய ஊடகத்துறையும், கடமை தவறி ஒரு குலத்துக்கொரு நீதி சொல்லும் மனுநீதியின் மறு உருவங்களாகத் திகழ்கின்றன.

இந்நூல் முன்னுரை, மற்றும் முக்கிய சில அத்தியாயங்களை தமிழ் கூறும் நல்லுலகம் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, மானமிகு சு.அறிவுக்கரசு அவர்கள் தமிழாக்கம் செய்து தருகிறார்; படியுங்கள்; (பேச்சாளர்கள்) பரப்புங்கள்.

- ஆசிரியர் கி.வீரமணி)



நேற்றைய தொடர்ச்சி...

7. 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் நடந்து கடைசியில் பாபர் மசூதியை இடிப்பதிலும் 2002 குஜராத் கலவரத்திலும் தொடர்ந்து கொண்டிருக்கும் வகுப்புக் கலவரங்களைத் திட்டமிட்டுத் தூண்டிவிட்டுக் கொண்டு இருப்பவர்கள் மராட்டியப் பார்ப்பனர்கள்.

8. முக்கியமான 48 வகுப்பு மோதல்களில் 35 மகாராட்டிராவில் நடந்துள்ளன. சாதாரண இந்துக்கள் இதில் சம்பந்தப்பட்டுள்ள மாதிரி தெரிந்தாலும், தீவிர விசாரணை செய்தால், இதில் பார்ப்பனர்கள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் எனும் உண்மை வெளிவரும்.

9. அரசமைப்புச் சட்டப்படி ஏற்படுத்தப்பட்ட மக்களாட்சி அரசை இறக்கி விட்டு இந்து ராஷ்ட்ரம் எனும் பெயரில் பார்ப்பன ராஷ்டிரம் அமைத்திட நடைபெற்ற சதித்திட்டங்கள் மாலேகாவ்ன் குண்டு வெடிப்பு விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது கூட, மகாராட்டிரத்தில் திட்டமிடப்பட்ட சதிதான்; சதியில் ஈடுபட்ட முக்கிய ஆளான லெப். கர்னல் சிறீகாந்த் புரோகித் மகாராட்டிரப் பார்ப்பனர்தான்.

10. நாட்டில் நடைபெற்ற பல பயங்கரச் செயல்களுக்கு ஊற்றுக் கண்ணாகவும் சதிகளின் பிறப்பிடமாகவும் இருக்கும் அபிநவ்பாரத் எனும் பயங்கரவாத இயக்கம் மகாராட்டிரத்தில் தோன்றியதுதான். அதன் தலைவராக பச்சைப் பார்ப்பனியவாதி ஹிமானி சவர்க்கார் என்பவர் வி.டி.சவர்க்காரின் சகோதரரின் மருமகள். இவரும் மகாராட்டிராக்காரரே.

11. 2008 ஆம் ஆண்டு ஜூலையில் நடந்த அகமதாபாத் குண்டு வெடிப்பு, சூரத்தில் கண்டு பிடிக்கப்பட்ட வெடி குண்டுகளை வைத்தது போன்றவற்றிற்கும் மகாராட்டிரா மாநிலத் தொடர்பு உண்டு. குண்டுகள் வெடிப்பதற்குச் சில நிமிடங்கள் முன்பு தொலைக் காட்சிகளுக்கு அனுப்பப்பட்ட இ-மெயில் செய்திகள் புதிய மும்பையிலிருந்து அனுப்பப்பட்டன. இதற்குப் பயன்படுத்தப்பட்ட வண்டிகள் நவி மும்பையிலிருந்து திருடப்பட்டு தலசாரி வழியாகச் சென்றன. இந்த நகரம் மகாராட்டிரத்தின் தானே மாவட்டத்தில் உள்ளது. தணிக்கைச் சாவடியில், உள்ள கண்காணிப்புக் காமிராவில் ‘தில்லு முல்லு‘ செய்து விட்டு, மராத்தி செய்தித் தாள்களில் மூடி வைக்கப்பட்ட வெடிகுண்டுகள் எடுத்துக் செல்லப்பட்டிருக்கின்றன. ஆனாலும் கூட மகாராட்டிரப் பார்ப்பனியர்கள் இதனை மறைத்து விசாரணை செய்திட அய்.பி. உதவி செய்து முற்றிலும் எதிர்மறையான திருப்பத்தை உண்டாக்கியிருக்கிறது.

12. டில்லியில் பட்லா ஹவுஸ் பகுதியில் நடந்த என்கவுண்டரில் தொடர்புடைய செல்பேசி சிம் கார்டுகள் மகாராட்டிரா மாநிலத்தின் அவுரங்காபாத் மாவட்டத்தைச் சேர்ந்தவை. அவுரங்காபாதில் உள்ள சிலருடன் தொடர்பு கொண்டு பேசுவதற்கு இந்த சிம் கார்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆனாலும் கூட மிகவும் மேம்போக்கான விசாரணை நடத்தப்பட்டு சதிகாரர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. ஆழ்ந்த விசாரணை நடத்தப்பட்டால், பார்ப்பனியர்களுக்கு இருக்கும் தொடர்பு நிச்சயம் வெளிவரும்.

13. உத்தரப்பிரதேசம் கான்பூரில் 2008 ஆகஸ்டில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் மகாராட்டிராவுக்கு உள்ள தொடர்பு வெளிப்பட்டுள்ளது. வெடி குண்டுகளைத் தயாரித்த பஜ்ரங் தளத் தீவிர உறுப்பினர்களான ராஜிவ் மிஸ்ரா, பூபிந்தர்சிங் ஆகிய இருவர் வெடிகுண்டுகளைச் செய்து கொண்டு இருக்கும்போது இறந்துவிட்டனர். சிறுபான்மையர் பெருமளவில் வசிக்கும் பெரோசாபாத் பகுதியில் வெடி வைக்கத் திட்டமிட்டு இருந்ததாக விசாரணையின் மூலம் தெரிய வந்தது; மேலும், குண்டு வெடிப்புக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பிருந்தே மும்பையில் உள்ள இரண்டு செல்பேசிகளுடன் இவர்கள் பேசி வந்துள்ளனர். அவர்கள் யார் என்பதைக் காவல்துறை இன்னும் கண்டுபிடிக்க வில்லை. இதற்கு அய்.பி. ஆள்கள் கொடுத்த நிர்ப்பந்தம் காரணமாக இருந்திருக்கலாம்.

14. மும்பையில் 26.11.2008 இல் நடந்த பயங்கரவாதத் தாக்குதலின் போது சி.எஸ்.டி. நிலையத்தில் பயங்கரவாதிகள் பயன்படுத்திய செல்பேசிகள் மகாராட்டிராவின் சதாரா மாவட்டத்தைச் சேர்ந்தவை. அவை யாருடைய பெயர்களில் இருந்தன என்பதைக் கண்டுபிடித்தால் பார்ப்பனிய அமைப்புகளை அடையாளம் காட்டிவிடும் என்பதால், இந்தச் சங்கதி அய்.பி. அயல் அப்படியே அமுக்கப் பட்டுவிட்டது; மும்பை குற்றப் புலனாய்வுப் பிரிவும் (வெளிப்படையாகத் தெரிந்த காரணங்களுக்காக) சும்மா இருந்துள்ளது.

மேலே கண்ட சம்பவங்கள் எல்லாமே, சுருக்கமாக மகாராட்டிரத்தில் உள்ள பார்ப்பனிய அமைப்புகள், நாட்டில் வகுப்பு மோதல் சம்பவங்களைச் செய்து வருகின்றன என்பதைக் காட்டக்கூடியவை.

இந்துத்வ (பார்ப்பன) ஆய்வகமே மகாராட்டிரம்தான்

2002 குஜராத் இனப்படுகொலைச் சம்பவங்களுக்குப் பிறகு, குஜராத் மாநிலத்தை இந்துத்வ (பார்ப்பனிய) ஆய்வகம் என்றே ஊடகங்கள் குறிக்கின்றன. குஜராத்தைப் பொறுத்தமட்டில் ஆய்வகம் என்பதனை விட பரிசோதனைச் சாலை என்று அழைப்பது பொருத்தமாக இருக்கும். 1893 முதலே மகாராட்டிராதான் இந்துத்வ ஆய்வுச் சாலை ஆகும்.

பார்ப்பனர்களை தவிர்த்து விட்டு, இந்துக்களையும் முசுலிம்களையும் மோதவிட்டு பார்ப்பன மேலாதிக்கத்தையும் பிற ஜாதியரைக் கீழ் நிலையில் வைத்திருக்கும் செயலையும் எப்படித் திட்டமிட்டுச் செயல்படுத்துவது என்பது பற்றி மகாராட்டிரப் பார்ப்பனர்கள் ஆய்வுப் பொருளாக வைத்துக் கொண்டனர். இத்தகைய ஆய்வுப் பணியைச் செய்து, பிற மாநிலங்களில் அதனைப் பரிசோதனை செய்து பார்த்ததன் விளைவுதான் - பாபர் மசூதி இடித்ததும் குஜராத் இனப்படுகொலையும்! இந்தச் சம்பவங்களில் எல்லா ஜாதியைச் சேர்ந்தவர்களும் பாதிக்கப்பட்டனர். பார்ப்பனர்களைத் தவிர.

1960_களில் சிவசேனையில் திட்டமிட்டு நுழைக்கப்பட்ட பார்ப்பனரான மனோகர் ஜோஷி, பின்னாள்களில் மகாராட்டிராவின் முதலமைச்சராக ஆனார். மகாராட்டிரத்தை முதல் இந்து மாநிலமாக ஆக்கிக் காட்டுகிறேன் என்று சவால் விட்டுக் கூறியவர். இது தொடர்பாக பம்பாய் உயர்நீதி மன்றத்தில் தேர்தல் வழக்கு கூடப் பதிவாகி மனோகர் ஜோஷியின் தேர்தல் வெற்றி செல்லாது என்று தீர்ப்பளிக்கப் பட்டது. அரசமைப்புச் சட்டத்தில் உறுதியளித்துள்ள மதச்சார்பின்மைக்கு விரோதமாக, வாக்குகள் சேகரிப்பதற்காக இந்து ராஷ்ட்ரம் அமைப்பேன் எனக் கூறியது தவறு எனக் கூறியது உயர்நீதிமன்றம். ஆனால் உச்சநீதிமன்றமோ 1996 இல் உயர்நீதிமன்றத் தீர்ப்பை நிராகரித்துத் தீர்ப்பளித்தது. இந்து மாநிலம் அமைப்பேன் என்று பேசியது மத அடிப்படையில் வாக்கு கோரியதாக ஆகாது என நாங்கள் கருதுகிறோம் எனக் கூறியது

உச்சநீதிமன்றம்.

உச்சநீதிமன்றம் 1996 இல் இந்துத்வா பற்றி வழங்கிய சான்றிதழ் அரசியல் ரீதியான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது. தாங்கள் செய்து வரும் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு நியாயம் கற்பித்துக் கொள்ள சங்பரிவாரங்கள் இதனை மேற்கோள் காட்டி வருகின்றன... 1996 ஆம் ஆண்டைய இந்துத்வா பற்றிய இந்தத் தீர்ப்பை சட்டப்படி சமாதியாக்க அரசியலில் ஒன்றுபட்ட கருத்து உருவாக்கிட இதுவே சரியான தருணம் ஆகும் என்று ‘தி டைம்ஸ் ஆப் இந்தியா’ ஏட்டில் (டில்லி) 24.2.2009 இல் சட்ட விமர்சகர் மனோஜ் மித்ரா எழுதியுள்ளார்.
மித்ராவின் அறிவுரையை, அரசியல் கட்சிகள் எந்த அளவுக்குத் தீவிரமாகக் கருதுகின்றன என்பதை எதிர்காலம்தான் கூறவேண்டும். நான் வலியுறுத்த விரும்புவதெல்லாம் - மகாராட்டிர பார்ப்பனியர்கள் எல்லா வகுப்பு மோதல்களிலும் கலவரங்களிலும் பின்னணியில் இருந்து தூண்டிவிட்டு அம்மாநிலத்தை இந்துத்வாவின் ஆய்வகமாக ஆக்கிவிட்டனர் என்பதுதான்.
எளிதில் வசப்படுகிற வகுப்புவாதச் சூழ்நிலை நிலவினாலும் கூட, குஜராத் போல மகாராட்டிரா மாறவில்லை என்றால், அதற்கு முழுகாரணமும் அம்மாநிலத்தில் தோன்றியுள்ள சமூகச் சீர்திருத்த இயக்கங்களையே சாரும். மாநிலத்தில் இருந்த அறிஞர்களும் ஞானிகளும் வளர்த்த உணர்வு குறைந்து போய் இருந்தாலும் மகாராட்டிராவின் காவல்துறை (பல்வேறு குறைபாடுகள் இருந்தாலும்) வகுப்பு மோதல்கள் பற்றி மிகவும் விழிப்புடன் பணியாற்றுவதும் காரணம்.

பார்ப்பனியர்களைக் கண்டிக்க அரசியல் தலைவர்களின் அச்சம்

பிறமாநிலங்களில், பார்ப்பனர்களை எதிர் கொண்டு விமர்சித்துத் தாக்குதல் தொடுக்கும் தலைவர்களைப் போன்று மகாராட்டிரத்தில் அரசியல் தலைவர் ஒருவர் கூடக் கிடையாது என்பதும் ஒரு முரண்தான். பார்ப்பனர்களால் வீழ்த்தப்பட்ட அரசியல் தலைவர்களின் எலும்புக் கூடுகளை அடுக்கி வைத்துக் கொண்டு, எதிர்ப்பவர்களது நிலை இதுதான் எனஅச்சுறுத்தும் ஊடகங்களின் துணையும் பார்ப்பனர்களுக்கு இருப்பதால் மகாராட்டிர அரசியல் தலைவர்கள் எவ்வளவு சக்தி வாய்ந்த பெரிய தலைவர்களாக இருந்தாலும் பார்ப்பனர்களை எதிர்க்க அஞ்சுகின்றனர். தங்கள் எதிர்கால அரசியலுக்கு ஊடகங்களின் இருட்டடிப்பு பாதகமாக அமைந்துவிடும் எனும் அச்சத்தின் காரணமாக, இரண்டாம், மூன்றாம் நிலை அரசியல் தலைவர்களும் பார்ப்பனர்களை எதிர்க்கப் பயப்படுகின்றனர். இதன் விளைவு என்னவென்றால், பார்ப்பனர்களின் கொடிய வன்செயல்கள் கட்டுப்படுத்தப்படாமல் மாநிலத்தில் அதிகமாகி வருகின்றன.

--------------------(நிறைவு) ----- "விடுதலை” 19-1-2010

0 comments: