Search This Blog

21.1.10

பார்ப்பனர்களைக் குறை கூறுவது, எதிர்ப்பதுதான் தி.க.காரர்களின் வேலையா?

சிவகுமார்

நடிகர் சிவகுமார் ஓவியக் கல்லூரியில் படித்துத் தேர்ந்த முழுமையான ஓவியர். அதனைத் தொழிலாகக் கொள்ளாமல் திரைப்படத் துறையிலே அடியெடுத்து வைத்து உன்னத நிலையை அடைந்துள்ள அருமையான பண்பாளர். தமிழ்ப் பற்றும், இனப்பற்றும் மிகுந்த சீலர்.

ராணி இதழில் உங்களோடு பேசுகிறேன் என்ற தொடரை எழுதி வருகிறார். இவ்வார ராணியில் (24.1.2010, பக்கம் 22) ஒரு செய்தி.

பார்ப்பனர்களைக் குறை கூறுவதுதான், எதிர்ப்பதுதான் தி.க.காரர்களின் வேலை என்று பொறுப்பில்லாமல் பேசும் பேர்வழிகளின் செவிப்பறையில் அறைந்து கண்களைத் திறக்கச் செய்யும் தகவல் அது.

அவர் ஓவியர் ஆதலால் பல கோயில்களுக்கும் சென்று நேரிடையாக ஓவியம் தீட்டுவது அவரது வழக்கம். அந்த வகையில் தஞ்சாவூர் பெருவுடையார்கோயில், திருச்சி மலைக்கோட்டைக் கோயில்களுக்குச் சென்று கோபுரங்களின் ஓவியங்களைத் தீட்டினார். பலரும் அதற்கு உதவி செய்தனர்.

சிறீரங்கம் கோயில் கோபுரத்தையும் நேரில் சென்று ஓவியம் வரைந்திட விரும்பி அங்கு சென்ற போது ஓர் அவமதிப்பு அவருக்காகக் காத்துக் கொண்டிருந்தது.

கோபுரத்தில் சூரிய வெளிச்சம் நேரிடையாகப் படுகிற கோணம் புஷ்பகரணி தெப்பக்குளம் பக்கம்தான் கிடைக்கிறது என்பதால் அந்தப் பக்கம் சென்றார் இளைஞரான ஓவியர் சிவக்குமார்.

என்ன நடந்தது?

கோயில் அர்ச்சகப் பார்ப்பனர் ஒருவர் அந்த இடத்துக்கு வந்தார். உடனே, நீ யார்? உன் குலகோத்திரம் என்ன? என்ற கேள்விக் கணைகளை அவர்முன் எறிந்தார். பேச்சு, உடை, முக பாவனைகளை வைத்து வந்தவர் பார்ப்பனர் இல்லை என்று தெரிந்து கொண்டதும் அர்ச்சகர் முகம் போன போக்கே சரியில்லையாம். முறையா அனுமதி வாங்காம கோயிலுக்குள்ள படமெல்லாம் வரையக்கூடாது என்று முகத்தில் அடித்ததுபோல் கூறினாராம்.

நான் ஓர் ஓவியக் கல்லூரி மாணவன் என்று சொல்லிப் பார்த்திருக்கிறார். மசியவில்லை அர்ச்சகர்.

இத்தனை சொன்ன பிறகும் நீங்கள் கோபப்படுவது நியாயமில்லை என்று பணிவாக சொன்னாராம். ஓ, நீ நியாய தர்மம் வேறு பேசுறீயா? என்று கூறி உள்ளே போய் வேறு சில அர்ச்சகப் பார்ப்பனர்களையும் அழைத்து வந்தாராம்.

அடிக்காத குறைதானாம் _ அவமதிப்புடன் திரும்பினேன் என்று கூறும் சிவகுமார் ஒன்றைக் கூறுகிறார்:

இந்த இடத்தைக் கொஞ்சமென்ன, அதிகமாகவே கவனிக்கவேண்டும்; நெஞ்சில் நிலை நிறுத்தியும் கொள்ளவேண்டும்.

தந்தை பெரியார் மீது எனக்கு அப்பொழுது தான் பெரிய மரியாதை வந்தது

இப்படி எழுதியுள்ளார் மானமிகு சிவகுமார்.

தலைவலியும், திருகுவலியும் அவரவர்களுக்கும் வந்தால்தானோ!

----------- மயிலாடன் அவர்கள் 21-1-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

0 comments: