Search This Blog

8.1.10

இலங்கை அதிபர் தேர்தலில் யாரை ஆதரிப்பது?

இலங்கை அதிபர் தேர்தலில் யாரை ஆதரிப்பது?
இரண்டு தீமைகளில் தவிர்க்க முடியாத தீமை பொன்சேகா!
தேர்தலில் ராஜபக்சேவைத் தோற்கடிப்பதே முக்கியம்
தமிழர் தலைவர் அறிக்கை

இலங்கையில் நடை பெற உள்ள அதிபர் தேர் தலில் ராஜபக்சேவைத் தோற்கடிக்க பொன் சேகாவை ஆதரிப்பது தவிர்க்க முடி யாத தீமையாகும் என் றாலும் வேறு வழியில்லை என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அறிக் கையில் குறிப்பிட்டுள்ளார்.

அறிக்கை வருமாறு:

இலங்கையில் இன்னும் சில வாரங்களில் குடிஅரசுத் தலைவர் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதில் தற்போது அதிபராக உள்ள ராஜபக்சேவும், அவரிடத்தில் இராணுவ தளபதியாக இருந்து, பதவி விலகி போட்டியிடும் சரத் பொன்சேகாவும் தேர்தலில் முக்கிய வேட்பாளர்களாகக் களம் இறங்கியுள்ளனர்.

ஈழத் தமிழர்களின் வாக்குகள் பெரும் அளவுக்கு அதில் வெற்றி பெறவிருக்கும் வேட்பாளரைத் தீர்மானிக்கும் சக்தி வாய்ந்ததாக உள்ளன. இந்த நிலையில், ஈழத் தமிழர்கள் யாருக்கு வாக்களிப்பது என்பதை மிகவும் ஆழமாகச் சிந்தித்து முடிவு எடுக்கவேண்டிய தருணம் இது.

இக்கேள்வியை, சிங்கப்பூர் தொலைக்காட்சியினர் அங்கே தங்கி இருந்த என்னிடம் ஒரு பேட்டியின்மூலம் சென்ற ஒரு மாதத்திற்குமுன் எடுத்து, டிசம்பர் 8 ஆம் தேதி ஒளிபரப்பினார்கள்.

அப்போது கேட்கப்பட்ட சிங்கப்பூர் தொலைக்காட்சி பேட்டியாளரின் கேள்விகளுக்கு நான் அளித்த பதில்களை ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைக்குச் சோதனையான இந்த காலகட்டத்தில் முன்வைப்பது மிகவும் அவசியமாகிறது.

உணர்ச்சி வாய்ந்த இந்தப் பிரச்சினைக்கு ஈழத் தமிழர்கள் தீர்வு காணுவது அவ்வளவு எளிதல்ல. காரணம், இந்த இனம் சந்தித்துள்ள, சந்தித்துவரும் இழப்புகளும், அனுபவித்துவரும் கொடுமைகளும் சொல்லொணாதவை ஆகும்!

இதற்கு எப்படி எப்போது விடிவு ஏற்படுமோ என்று மனிதநேயம் உள்ள அனைவரும் கவ-லையோடு சிந்திக்கின்றனர்.

உணர்ச்சி அடிப்படையில் அல்ல

ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்த இருவர் இத்தேர்தலில் வேட்பாளர்களாகப் போட்டியிடும் நிலையில், யாருக்கு வாக்களிப்பது என்ற கேள்விக்கு வெறும் உணர்ச்சி அடிப்படையில் பதில் அளிக்க முன்வந்தால், எரிகிற கொள்ளிகளில் எந்தக் கொள்ளியை நல்ல கொள்ளி என்று கருதுவது? எனவே, இத்தேர்தலில் இந்த இருவருக்குமே வாக்களிக்காமல் தேர்தலை தமிழர்கள் புறக்கணிப்பதே சரியானது என்று கூறக்கூடும்.

ஆனால், அதைவிட, நமது ஈழத் தமிழர்கள் வெறும் உணர்ச்சிபூர்வமாக இப்பிரச்சினையை அணுகாது, அறிவுபூர்வமாக அணுகவேண்டும் என்று நாம் சிங்கப்பூர் தொலைக்காட்சி பேட்டியில் கூறினோம். அதனை முன்வைப்பது இக்கால கட்டத்தில் மிகவும் முக்கியமானது; தேவையானதும்கூட.

தமிழர்கள் தேர்தலை, சென்ற தேர்தலில் புறக்கணித்த காரணத்தால்தான் அதிபராக இராஜபக்சே வரும் வாய்ப்பே ஏற்பட்டது.

அவ்வாட்சி செய்த அக்கிரமங்களுக்கு இனப் படுகொலைகளுக்கு இட்லரின் செயல்களால் இரண்டாம் உலகப் போரின்போது ஏற்பட்டதைவிட மிகவும் கொடுமையானது என்பது உலக நாடுகள் பலவற்றிற்கும் கூடத் தெரியும்.

சென்றமுறை, தேர்தலைப் புறக்கணிக்காமல், இந்த இராஜபக்சேவை பதவிக்கு வரவிடாமல் தடுத்திருந்தால் இவ்வளவு மோசமான நிலை ஈழத் தமிழர்களுக்கு ஏற்பட்டிருக்க வாய்ப்பு வந்திருக்காது.

தவறான முடிவு, மிகப்பெரும் இழப்புகளுக்கும், சோகத்திற்கும் அவர்களை ஆளாக்கக் காரணமாக அமைந்தது.

அதே தவறை மீண்டும் ஈழத் தமிழர்கள் செய்துவிடக் கூடாது.

நேற்று விழுந்த அதே இடத்தில் இன்றும் விழுந்துவிடக் கூடாது ஈழத் தமிழர்கள்.

யார் வரக்கூடாது என்பதே முக்கியம்

இத்தேர்தலில் அவர்களின் அணுகுமுறை எப்படி இருக்கவேண்டும் என்றால், யார் வர வேண்டும் என்பதைவிட யார் வரக்கூடாது - யார் வெற்றி பெறக்கூடாது என்பதே முக்கியமாக இருக்கவேண்டும்.

அதற்குரிய முக்கிய காரணங்கள்:

1. இராஜபக்சே மீண்டும் வெற்றி பெற்றால் அவரது ஆட்சி செய்த அத்தனை இனப்படுகொலைகள், உரிமை மறுப்புகள், முள்வேலி சோகங்கள் உலகத்தார் கண்முன் ஜனநாயக முத்திரையுடன் நியாயப்படுத்தப்படும். வரலாற்றின் இரத்தக் கறை மீண்டும் முக்கியமானதொரு இடத்தில் இருக்கவே செய்யும்.

2. தமிழர்களின் வாக்குரிமை, தேர்தல் வெற்றியை நிர்ணயிக்கக் கூடியதாக உள்ளது அது சிறுபான்மையாக இருந்தபோதிலும்கூட.

இலங்கையைப் பொறுத்தவரை, தமிழர்கள் யாரும் அதிபராக வரும் வாய்ப்பு வாக்கு பலம் அடிப்படையில் கிடையாது. இப்போது அவர்கள் இரண்டு தீமைகளில், எது தவிர்க்க முடியாத குறைந்த தீமை ((to Choose the lesser evil) என்பதைத்தான் தேர்ந்தெடுக்கவேண்டிய கட்டாயம் இருக்கிறது! இருவரில், யாரையுமே ஆதரிக்கமாட்டோம் என்றால், அது அங்குள்ள ஈழத் தமிழர்களின் பாதுகாப்புக்கு எதிராக அமைந்துவிடும் ஆபத்து உண்டு.

(3) பொன்சேகாவும் தளபதியாக இருந்து தமிழர்களுக்குக் கொடுமை செய்தவர்தானே இவரை எப்படி ஆதரிக்க முடியும் என்ற கேள்வியில் நியாயம் உண்டு என்றாலும், அவர் ஒரு வேலைக்காரர் அதிபர் இராஜபக்சேவுக்கு. முடிவு எடுத்த இடத்தில் இருந்தவர் அல்லர்; அவர் தன் செயலை நியாயப்படுத்தாது, ஓரளவு மனந்திறந்து தன் செயலுக்கு வருத்தம் தெரிவிக்கும் நிலை ஒரு திருப்பமாகும். அதை தமிழர்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக அவர் நிறுத்தப்பட்டிருக்கிறார்; அவர் தமிழர்களின் வாக்குகளைக் கேட்க, அவர்களின் முக்கிய கோரிக்கைகளை ஏற்கத் தயாராக உள்ளார் என்பது நேற்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருடன் பேசி அதில் பல அம்சங்கள் ஏற்க இசைவு தெரிவித்துள்ளார்! அந்த நிபந்தனைகளோடு அவருக்கு ஆதரவு தரும் முடிவுதான் சரியானது, வரவேற்கவேண்டிய முடிவாகும்.

பொன்சேகாவை ஆதரிப்பதே புத்திசாலித்தனம்

பொன்சேகா ஒரு இராணுவப் பணியாளராகத்தான் செயல்பட்டார்; அவர் கீழ்ப்படிய மறுத்திருந்தால்முடிவில் என்ன மாற்றம் ஏற்பட்டிருக்கும்? அவர் சிறையில் இருந்திருப்பார், அல்லது காணாது போயிருப்பார்; நிலைமை மாறியிருக்காது. எனவே, அதற்குக் காரணம் இராஜபக்சே தோற்கடிக்கப்படுவதே, சரியான மக்கள் தீர்ப்பாக அமையவேண்டும். இதற்கு தமிழர்களின் பங்களிப்பு இருப்பதே முக்கியம்; காலத்தின் கட்டாயம். சில நேரங்களில் கசப்பான முடிவுகள் தவிர்க்கப்பட முடியாதவைகள்தாம் என்றாலும், வேறு வழியில்லை என்னும்போது, அதனை மேற்கொள்வதே, தமிழர்களின் வருங்காலத்திற்கு நல்லது ஆகும்.

எந்தத் தடியை எடுத்து அடித்து பாம்பை வீழ்த்தினோம் என்பது முக்கியமல்ல; சீறிய பாம்பை அது மீண்டும் படம் எடுத்துக் கடிக்காமல், அதனை வீழ்த்தினோம் என்பதே அறிவுப்பூர்வச் சிந்தனை.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முடிவு மனித உரிமை பாதுகாப்புக் கண்ணோட்டத்தில் மிகவும் சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான முடிவு ஆகும்.

தலைவர்,
திராவிடர் கழகம்.


------------------ "விடுதலை” 7.1.2010

0 comments: