Search This Blog

12.1.10

நமது நிலைமையும், பார்ப்பனர் நிலைமையும்


பார்ப்பன ஜாதியில் எண்ணிக்கையற்ற உட்பிரிவுகள் எவ்வளவோ இருக்கின்றன. பார்ப்பன சமூகம் மேன்மையாக இருப்பதற்கு அவற்றிற்கான எல்லா உட்பிரிவுகளும் ஒற்றுமையாகச் சேர்ந்து கொண்டு எப்படி மேன்மை கொண்டிருப்பது என்பதைப்பற்றி ஆலோசித்தும் கடைசியாக மூன்று வித தீர்மானங்கள் ஏற்படுத்தப்பட்டன.

1.அதாவது ராஜ்ய ஸ்தாபனங்களில் இருக்கும் பார்ப்பனரல்லாத தலைவர்களை விலக்கி, எல்லா ஸ்தாபனங்களையும் கைப்பற்றுவது.

2 ஆவது, தமது ஜாலவித்தையினால் பார்ப்பனரல்லாத மக்களை மூடர்களாக்கி, பஞ்சாங்கம், தர்ப்பை புல்லை வைத்துக்கொண்டு, இறந்துபோன பெற்றோர்களை வைத்துக்கொண்டு இந்த இரண்டு பலமான ஆயுதங்களால், நரகத்திலிருந்து மோட்சத்துக்கு அனுப்புவது.

3ஆவது, பார்ப்பனரல்லாத மக்களால் நிருமானிக்கப்பட்ட தெய்வ ஸ்தலங்களில் இருக்கும் பார்ப்பனரல்லாத தலைவர்களை விலக்கி சமஸ்கிருத பாஷையில் உயிர் இருப்பதாகக் காட்டி அபகரித்துக்கொள்வது.

இந்த மூன்று தீர்மானங்களையும் பலமான ஆயுதமாக வைத்துக்கொண்டு காரியம் செய்ய ஆரம்பித்தார்கள். கொஞ்ச காலத்தில் பார்ப்பனரின் எண்ணத்தின்படி எல்லாக் காரியங்களும் சாதித்துக்கொண்டார்கள். அதன் பயனாக பார்ப்பன சமூகம் உலகத்தில் சீரும் சிறப்புடன் வளர்ந்து வருவதும் அல்லாமல் பார்ப்பன சமூகத்துக்கு ஆதிக்கம் வலுக்கவோ, ராஜ்ய ஸ்தாபனங்களில் இருக்கும் பார்ப்பனர்கள் அவர்கள் படித்த சட்டத்தைக் காட்டி, பார்ப்பனரல்லாத மக்களிடத்தில் கோடிக்கணக்கான பணத்தை சம்பாதித்துக்கொள்கிறார்கள்.

பஞ்சாங்கம், தர்ப்பைப்புல் என இரண்டு பலமான ஆயுதங்கள் வைத்துக்கொண்டிருக்கும் பார்ப்பனர்கள் நமது மக்களிடம் பயமுறுத்தி பெற்றோர்களுக்கு மோட்சம், நரகம் என்கிற வார்த்தையினால் நமது மக்களிடத்தில் கோடிக்கணக்கான பணத்தை வரி வசூல் செய்து கொள்கின்றார்கள்.

சுவாமி கோவிலிலிருக்கும் பார்ப்பனர்களும், லோக குருக்களும் சாமி கோவிலுக்கு வரும் கோடிக்கணக்கான மக்களிடத்தில், சுவாமி பேரால் மோட்சம் கிடைக்குமென்று சொல்லி அர்ச்சனை, அபிஷேகம், சமாராதனை இன்னும் எவ்வளவோ காரியங்களைக் செய்யச் சொல்லியும், நமது மக்களிடத்தில் கோடிக்கணக்கான ரூபாய்களை வசூல்செய்து கொள்கிறார்கள். அல்லாமலும் அவர்களை நாம் சுவாமி என்று கும்பிடும்படியாகவும் செய்துவிட்டார்கள். தவிரவும் நமது மக்களைத் சூத்திரன், வேசிமகன், தீண்டாதவன், சண்டாளன், அடிமையிலும் அடிமை இன்னும் எவ்வளவோ சொல்லத்தகாதவை சொல்லி பார்ப்பனர்கள் சட்டமும் செய்து கொண்டார்கள். பார்ப்பனர்கள் இட்டதே சட்டம் என்று நமது மக்கள், அவர்கள் சொல்வதையெல்லாம் நம்பி அடிமைப்பட்டு, சுயமரியாதையின்றிக் கேவலமாக வாழ்கின்றோம். இப்போது நமது சமூகம் அடிமை சமூகமாகப் பார்ப்பனர்களுக்கு வேலைசெய்து கொண்டு வருகின்றோம்.

அந்தோ பரிதாபம்! என் மனம் துடிக்கின்றது. கையும் நடுங்குகின்றது. நமது பதிவிரதா ரத்னங்கள், காலையில் பார்ப்பனர்கள் வீட்டுக்குப்போய் வாசல் பெருக்குவதும், சாணம் போடுவதும், பாத்திரங்களைத் தேய்ப்பதும் மலஜலமான துணிகளைத் துவைப்பதும் இன்னும் சொல்லமுடியாத வேலைகள் செய்கின்றார்கள். இவர்களுக்கு சம்பளமோ மாதம் ஒரு ரூபாய்தான். இன்னும் சில நமது பெண்மணிகள், வயல்களுக்கும் தோட்டங்களுக்கும் காடுகளுக்கும் காலையில் போய் சாயங்காலம் வரைக்கும் குனிந்த வண்ணமாகவே வேலை செய்துவிட்டு வரும்போது 3 அனா கூலி வாங்கிக்கொண்டு கிடைக்கும் குருணை அரிசி வாங்கிக்கொண்டு வீடுபோய்ச் சேருகின்றார்கள்.

ஒரு ஏழைப் பார்ப்பனப் பெண்ணாவது வேலைக்கு போய் வருவது யாராவது பார்த்திருக்கின்றீர்களா? இன்னும் சந்தைக்கூட்டங்களிலும், மார்க்கட்டுகளிலும் வியாபாரம் செய்யவோ வாங்கவோ நமது பெண்மணிகளும் ஆண்மக்களும்தான் அவதிப்படுகின்றார்கள். இந்தக் கூட்டங்களிலாவது பார்ப்பனப் பெண்ணாவது ஆண்மகனாவது கூலிவேலைசெய்வதைப் பார்க்க முடியுமா?

இன்னும் இயந்திரசாலைகளிலும், காப்பி தோட்டங்களிலும், ரப்பர் தோட்டங்களிலும் கப்பல் துறைமுகத்திலும், சிங்கப்பூர், பினாங்கு, கொழும்பு, மலேயா நாடுகளிலும் எங்கு பார்த்தாலும் நமது ஆண்மக்களும் பெண்மக்களுமே அல்லாமல் இக்கூட்டத்திலாவது ஒரு பார்ப்பனப் பெண்ணையாவது, ஆணையாவது பார்க்க முடியுமா?

நமது வருமானம், சராசரி 5 ரூபாய்தான். இதில் நாலுரூபாயைப் பலவழிகளிலும் பார்ப்பனர்களுக்கு கொடுத்துவிட்டு மீதி ரூபாயில்தான் நாம் காலம் கழிக்கவேண்டும். இதன் பலனாக நமது மக்களுக்குச் சொல்லமுடியாத கஷ்டங்கள் ஏற்படுகின்றன.

நம்மை ஆளும் இங்கிலீஷ்காரர்கள் என்ன செய்கின்றார்கள். திரேக கஷ்டத்தினாலும், அறிவினாலும் புதுப் புது கருவிகள் கண்டுபிடித்து அந்தக் கருவிகளின் மூலம் பணம் சம்பாதிக்கிறார்கள். தொழில் செய்யாமல் பார்ப்பனர்களைப் போல் மனிதரிடத்திலிருந்து ஏமாற்றிப் பணம் கொள்ளை அடிக்கமாட்டார்கள். ஆகையால் பார்ப்பனர்களைவிட இங்கிலீஷ்காரர்கள் எவ்வளவோ நல்லவர்கள். எம்பெருமான் காந்தியடிகளால் சிருஷ்டிக்கப்பட்ட கதரென்னும் குழந்தையை நமது மக்கள் தான் உயிர் கொடுத்து ஆதரிக்கின்றார்கள். கைராட்டையினால் நூல் நூற்பவர்கள் நமது மக்கள்தான் உயிர் கொடுத்து ஆதரிக்கின்றர்கள். கைராட்டையினால் நூல் நூற்பவர்கள் நமது பெண்மணிகளே. நமது ஜில்லாவில் பெருவாரியான கதர் உற்பத்தி செய்யாத நமது பதிவிரதாரத்தினங்களே ஏது. திருப்பூரில் இருக்கும் கதர் கடைக்காரருக்கு நூல் நூற்று கொடுப்பது நமது பெண்களே. மேற்படி கடைக்காரருக்கு ஒரு பார்ப்பனப் பெண்ணாவது நூல் நூற்றுக்கொண்டுவந்து கொடுத்து பஞ்சும், கூலியும் வாங்கிக்கொண்டு போகின்றாளா அல்லது ஓர் பார்ப்பனராவது கைத்தறியினால் நெசவு செய்து கதர் துணிகள் உற்பத்தி செய்கின்றாரா? இல்லவே இல்லை.

பார்ப்பனருக்கும் அவர்கள் பெண்களுக்கும் வேலைதான் என்ன? வாய்க்காலுக்கும், ஆறு குளங்களுக்கும் போய் குளித்துவிட்டு வருவதும் நம்மை ஏமாற்றி வயிறுபுடைக்க உண்பதும் தான் வேலை. இதுகளை எல்லாம் பார்த்துதான் நமது தலைவர் வைக்கம் வீரர் சத்தியாக்கிரகி, மனம் பொறுக்காமல் பார்ப்பன சமூகம் தொழில் செய்யாமல் சும்மா இருந்து கொண்டு சாப்பிடுவதோடு நமது மக்களை ஏமாற்றி அடிமையாகக் நடத்துகின்றார்கள், என்பதை தெரிந்து எம்பெருமான் காந்தியடிகளால் சிருஷ்டிக்கப்பட்ட ஒத்துழையாமை என்னும் சுயமரியதையை பார்ப்பனர்கள் சின்னாபின்னப்படுத்தியும், அதற்கு உயிர் கொடுத்து குடிஅரசின் மூலமாக நமது மக்களுக்கு ஞானப்பால், ஊட்டிக்கொண்டு வருகிறார். சுயமரியாதை என்னும் குழந்தை நாளொருமேனியும் பொழுதொருவண்ணமுமாக குடிஅரசில் சீரும் சிறப்புடன் வளர்ந்து வருவதைக்கண்டு பார்ப்பன வலையில் சிக்குண்டு கிடக்கும் பாவலர், நாவலர்களைப்போல் இருக்கும் சில ஆசாமிகள் குடிஅரசைக் கொன்றுவிடுவதற்கு பாடுபடுகின்றார்கள். இதை எல்லாம் பொருட்படுத்தாமல் குடிஅரசு வீர கர்ஜனை செய்து நமது சமூகத்துக்கு இருக்கும் அடிமைத்தனத்தை விலக்கி சுயமரியாதை என்னும் சுயராஜ்ஜியத்திற்காகப் பாடுபடுகிறது.

-----------------குடிஅரசு, 28.11.1926

0 comments: