Search This Blog

10.8.08

திருக்குறள் ஹிந்து மதக் கண்டன நூலாகும்!நல்வழிகாட்டி, நற்பண்புகளைப் புகட்டும் நூலுமாகும்!





மனித சமுதாயத்திற்கே நல்வழிகாட்டி நன்னெறியூட்டி நற்பண்புகளையும் ஒழுக்கங்களையும் கற்பிக்கும் வகையில் எழுதப்பட்ட நூல்தான் திருக்குறள்

- பண்டிதர்களிடம் இருந்த திருக்குறளை பாமரர்க்கும் பரப்பிய தந்தை பெரியார்
1948-இல் பேசியது


கீதை எவ்வளவு அக்கிரமத்திற்கும் முக்காடு போட்டுவிடும் காவியுடையைப்போல் - ஏன் கீதைக்குத் தலைவனான கிருஷ் ணனே அக்கிரமத்தின் தலைவன் ஆன காரணத்தால்.
தோழர்களே - நாம் எதிர்க்கும் நான்கு ஜாதி முறையைக் கடவுளின் பேரால் வலியுறுத்தத்தான் கீதையும் - கிருஷ்ண பஜனையும் என்பது உங்களுக்கு நினைவிருக்கட்டும்.
கீதை படிப்பவர்கள் - எத்தகைய தர்மத்தையும் ஒழுக்கத்தை யும் கடைப்பிடிக்க வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் - பகவானே இதைச் செய்துள்ள போது, சாதாரண மனிதனான நான் எம்மாத்திரம் என்றோ, எல்லாம் பகவான் செயல் என்றோ, நான் ஏன் பார்ப்பான் என்பதை கிருஷ்ணனிடம் கேட்டுத் தெரிந்து கொள் என்றோ சுலபமாகப் பதில் கூறிவிடலாம். ஆனால், குறளைப் படித்தாலோ - தர்மத்தின் படி நடக்க வேண் டும்; பித்தலாட்டம் செய்ய முடியாது - பித்தலாட்டம் செய்ப வரைக் கண்டாலும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது.
குறளிலும் இன்றைய நிலைக்குப் புறம்பாக கருத்துக்கள் சில இருக்கலாம். அவற்றை மாற்றிவிட வேண்டியதுதான். அத்தகைய மாற்றத்திற்கு இடம் தருவதுதான் குறள்.
குறளை முஸ்லிம்கள், கிருத்தவர்கள் உட்பட யாரும் ஆட் சேபிக்க மாட்டார்கள். மாம்சம் சாப்பிடுவது மறுக்கப்பட்டிருக் கிறது என்னலாம். காய்கனி, தான்யம் இவை அபிரிமிதமாகக் கிடைக்குமானால் மாம்சம் தின்ன வேண்டிய அவசியம் தான் என்ன இருக்கிறது? மகம்மது நபியவர்களால் கூறப்பட்டுள்ள பல கருத்துக்களைக் குறளில் அப்படியே காணலாம். முஸ்லிம் களுக்கு எதிராக அதில் ஒன்றுமே காண முடியாது. அது மனு தர்மத்துக்கு உண்மையான விரோதி நூல் என்று திடமாகவே சொல்லலாம். மனுதர்ம சூத்திரங்களுக்கு நேர்மாறான கருத்துக் களைக் கொண்ட குறள் அடிகளை ஏராளமாகத் திருக்குறளி லிருந்து எடுத்துக்காட்டலாம்.

மனித சமுதாயத்திற்கே நல்வழி காட்டி, நன்னெறி யூட்டி, நற்பண்பு களையும் ஒழுக்கங்களையும் கற்பிக்கும் வகையில் எழுதப்பட்ட நூல்தான் திருக்குறள்.
எனவேதான் எல்லா மக்களும் எல்லா மதத்தவரும் எங்கள் குறள், எங்கள் மதக் கருத்தை ஒப்புக் கொள்ளும் குறள், என்றெல்லாம் அதைப் போற்றி வருகிறார்கள்.
எனவேதான் அதன் ஆசிரியரைக்கூட சில மதத்தினர் நம்மவர்கள் என்று உரிமை பாராட்டிக் கொள்கின்றனர். ஜைனர் நம்மவர் என்று கூறி அவரை மொட்டைத் தலையராகக் காட்டுகிறார்கள். சைவர்கள் அவரைத் தம்மவர் என்று கூறி ஜடா முடியுடன் விபூதிப் பட்டையுடன் காட்டுகிறார்கள். அவரோ எம்மதமும் இல்லாதவராகவே தோற்றுகிறார். ஒரு இடத்தில் மயிரும் வைத்துக் கொள்ள வேண்டியதில்லை; மொட்டையும் அடித்துக் கொள்ள வேண்டியதில்லை - யோக்கியனாய் இருக்க வேண்டுமானால்! என்று கூறியிருக்கிறார். அப்படியான பெரியாரை வைணவர்கள் தம்மவர்தான் என்று கூறிக் கொண்டு வடகலை நாமம் போட்டுக் காட்டுகிறார்கள். அவரை ஆள் வாரில் ஒருவராகவும் ஆக்கி விடுகிறார்கள். அவருக்கு வடகலை நாமம் போட்டது மகாமகாக் கொலைபாதகத்தனமாகும்.
திருவள்ளுவர் தவிர்த்த வேறு யாரையும் மற்ற மதத்தவர்கள் இம்மாதிரி மதிப்பதில்லையே. இதிலிருந்தே தெரியவில்லையா, குறளில் காணப்படும் திராவிடப் பண்பு எத்தகையது? என்று. இப்படிப்பட்ட திருக்குறளை விரும்புவதைவிட்டு நம் நாட்டவர்கள் இராமா யணத்தை வைத்துக் கொண்டு கூத்தடிக்கிறார்களே - அது நியாயமா?


எவளோ ஒருத்தி சொன்னாளாம். பன்னாடைக்குப் பிறந்த தெல்லாம் பந்தம் பிடிக்குது; பண்டாரத்துக்குப் பிறந்ததெல்லாம் மணியம் பார்க்குது! என்று. அதாவது மதிக்கப்பட வேண்டியது மதிக்கப்படாமல் மதிக்கப்படக் கூடாதன மதிக்கப்படுகின்றன வென்று அர்த்தம். மேற்படி பழமொழி எப்படி வந்ததென்றால் முன்பெல்லாம் மிராசுதாரர்கள் கூத்திகளை வைத்துக் கொள்வார்கள். அவர்கள் கூத்தியோடு இருந்தால் அவர்கள் மனைவிமார் ஊர்ப் பண்டாரத்தைத் துணைக்கு வைத்துக் கொள்வார்கள். தாசி வீட்டில் மிராசுதாரர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் தாசி மக்கள் தொழிலையொட்டி கோயிலில் பந்தம் பிடிக்கும். ஆனால் மிராசுதாரர்பேரால் பண்டாரத்திற்கு அவர் வீட்டில் பிறந்த குழந்தைகள் மிராசு பார்க்கும் என்று கற்பனைக் கதை சொல்லுபவர்கள் இதைக் குறிப்பது தான் அப்பழமொழி.



அதுபோல் உண்மைத் திராவிடன் தீட்டிய திருக்குறள் குப்பையிலே கிடக்க, திராவிடத் துரோகி தீட்டிய ராமாயணமும் ஆரியர் தீட்டிய கீதையும் அதிகாரத்தில் இருந்து வருகின்றன.
இந்த இழி தன்மையை மானமற்ற தன்மையை கவலையற்ற தன்மையை உங்களிடம் முறையிட்டுக் கொள்ள வேண்டித்தான் வள்ளுவர் படத்தைத் திறந்து வைக்க ஒப்புக் கொண்டேன். குறளுக்குள் நான் இன்று புகவில்லை. மற்றொரு சமயம் எடுத்துக்காட்டுகிறேன். தாழ்த்தப்பட்ட வகுப்பார் உணர வேண்டும். ஹிந்துக்கள் இருப்பதால்தான் தாழ்த்தப்பட்ட வகுப்பாரென்கிறவர்களும் இருக்கிறார்கள் என்பதை.
குறள் - ஹிந்து மதக் கண்டனப் புத்தகம் என்பதையும், அது சர்வமதத்திலுமுள்ள சத்துக்களை எல்லாம் சேர்த்து எழுதப்பட்டுள்ள மனிததர்ம நூல் என்பதையும் எல்லோரும் உணர வேண்டும்.


விரும்பிப் படித்து அதன்படி நடக்க வேண்டும். ஒவ்வொரு வனும் தான் ஹிந்துவல்ல திராவிடனே - திருக்குறளானே என்று கூறிக் கொள்வதில் பெருமையடைய வேண்டும். விபூதியையும் நாமத்தையும் விட்டொழிக்க வேண்டும். புராணங்களைப் படிக்கக் கூடாது. என்ன மதம் என்றால் குறள் மதம், மனித தர்ம மதம் என்று சொல்லப் பழக வேண்டும். யார் எதைச் சொல்லிய போதிலும், எது எத்தன்மையுடையதாயிருப்பினும் ஒவ்வொரு வரும் நன்கு சிந்தித்துப் பார்த்து ஆராய்ச்சி செய்து பார்த்து பிறகே எது உண்மை உன்பதை முடிவு செய்ய வேண்டும்.

சுய அறிவே பிரதானம் என்ற, வாலறிவன் நற்றாள் என்ற வள்ளுவர் கருத்துப்படி, அனைவரும் நடக்க வேண்டும். உருவ வழிபாட்டை ஒதுக்கிவிட வேண்டும்.

முஸ்லிம் தோழர்கட்கு


முஸ்லிம் தோழர்களுக்கு ஓர் விண்ணப்பம். உங்களை ஏனோ எங்களுடன் நன்கு சேர ஒட்டாமல் உங்கள் தலைவர்கள் தடுத்து வருகிறார்கள். ஜின்னா சாகிப் ஒரு காலத்தில் முஸ்லிம்கள் யாரும் வேறு கட்சியில் சேரக்கூடாது என்று கூறினார் என்றால், அதற்கு அர்த்தம் இருந்தது. முஸ்லிம்களின் லட்சியமான பாகிஸ் தானையடைய எல்லா முஸ்லிம்களும் ஒரே கட்சியின் கீழிருந்து வேலை செய்ய வேண்டும் என்பதற்காக அவர் அவ்விதம் சொல்லியிருந்தார். அப்பொழுது நானும் முஸ்லிம் கட்சியி லிருந்தேன். பாகிஸ்தான் பெற்றாகிவிட்டது. எனவே அவர் கூறியது காலாவதியாகி விட்டது. லிமிட்டேஷன்பார் ஆகி விட்டது. இனி முஸ்லிம்கள் தங்களின் பாதுகாப்புக்காக ஏதாவது ஒரு கட்சியில் சேர்ந்து கொள்வதுதான் நல்லது. இன்றுள்ள இம்மாகாண முஸ்லிம் தலைவர்கள் சொற்ப சலுகைகளுக் காகவும் பயந்துக்காகவும் சுயநலத்துக்காகவும் காங்கிரஸ்காரர் களின் காலடியில் இருந்து கொண்டு வருகின்றனர். தமக்குக் கிடைக்கும் சலுகைக்காக முஸ்லிம் இனத்தையே காட்டிக் கொடுக்கத் துணிந்த அவர்களைக் கோழைகளாக்கி விட்டனர். இதை முஸ்லிம் பாமர மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். காங்கிரஸுடன் சேர்ந்து கொள்வதாயிருந்தால் தாராளமாய்ச் சேர்ந்து கொள்ளுங்கள். நாங்கள் வேண்டாமென்று கூறவில்லை. 100-க்கு 90- பேராயுள்ள எங்களையே ஏமாற்றிக் கொண்டிருக்கும் பார்ப்பனர்களா 100-க்கு 7 பேரான உங்களுக்கு வளைந்து கொடுத்து விடப்போகிறார்கள். எங்களைப் பொறுத்தவரை இன்னும் நாங்கள் உங்களை எங்கள் உடன் பிறந்தவர்களாகத் தான் கருதி வருகிறோம். நீங்களும் குறள் மதக்காரர்கள் என்றே கருதுகிறோம். நாங்களும் உங்களைப் போல் ஹிந்து மதத்தை வெறுக்கிறோம் என்பதோடு குறளை ஒருபோதும் வெறுப்ப வர்கள் அல்ல. ஒன்றுமே முடியாது போனால் உங்களைப் போன்று குல்லாயாவது போட்டுக் கொள்ளலாம் என்றுதான் நாங்கள் கருதியிருக்கிறோம். எனவே எங்கள் இனத்தவர் நீங்கள் என்பதற்காக உங்களை இந்த அளவுக்கு அளவளாவும் ஆதரிக்கும் எங்கள் கழகத்தில் வேண்டுமானாலும் சேருங்கள். அல்லது வடநாட்டானால் பல கோடி செலவிட்டு பத்திரிக்கைகளை கொண்டு தீவிரப் பிரச்சாரம் செய்து ஹிந்துக்களை தூண்டிவிட்டு, உங்களைக் கொள்ளையடிக்க நினைக்கும் பார்ப்பனர்களோடா வது சேர்ந்து கொள்ளுங்கள்.


எச்சரிக்கை

சேருமுன் கொஞ்சம் தீர்க்க யோசித்து விட்டு மட்டும் சேருங்கள். திருவண்ணாமலையும் ஈரோடும் திருநெல்வேலியும் உங்களுக்கு ஞாபகமிருக்கட்டும். முஸ்லிம்களுடைய குறைவான எண்ணிக்கையுடைய கிறிஸ்தவர்களுக்கும் சொல்கிறேன். கிறிஸ்தவர்களாகி விட்டதாலேயே நீங்கள் உயர்ந்தவர்களென்று கருதிக் கொண்டு விடாதீர்கள். நீங்களும் குறள் மதக்காரர்கள். பைபிளுக்கு விரோதமாக குறளில் ஒன்றும் கிடையாது. பார்ப்பனர்களின் தயவுக்காக வேண்டி சுயமரியாதை இழந்து விடாதீர்கள். உங்கள் நன்மையைப் பாதுகாத்துக் கொள்வதாயிருந்தால், ஜாதி சமய பேதமின்றிப் பாடுபடும் திராவிடர் கழகத்தில் சேருங்கள். திராவிடர் கழகம் திருவள்ளுவர் குறளைப் பின்பற்றி நடந்து வரும் கழகம். இந்நாட்டில் மனுதர்மம் ஒழிந்து மனிதத் தன்மை ஏற்படப் பாடுபட்டு வரும் கழகம். அதற்குக் குறள்தான் வழிகாட்டி. எந்த முன்னேற்றத்திற்கும் விரோதமில்லாமல் பணியாற்றி வரும் கழகம் என்பதை உங்களால் உணர்ந்து, ஆன எல்லா உதவியையும் அதற்களித்து ஆதரியுங்கள் என்று கூறி முடித்தார்.

0 comments: