Search This Blog

16.8.10

உலகத்தைத் திருத்த ஏற்றது ஆன்மிகமா சமத்துவமா?


பொறாமை!

கேள்வி: போட்டியும், பொறாமையும் நிறைந்த உலகத்தைத் திருத்த ஏற்றது ஆன்மிகமா சமத்துவமா?

பதில்: சமத்துவம்தான் என நினைத்து செயல்பட்ட இடங்களில் நாடுகளில் எல் லாம் அக்கொள்கை அடிபட்டு பொடி, பொடியாகிவிட்டதே!

(தினமலர், வாரமலர் கேள்வி பதில் பகுதி 15.8.2010).

தினமலர் வகையறா சொல்லுவதைப் பார்த்தால் ஆன்மிகம்தான் போட்டி, பொறாமையற்ற சமத்துவத்துக்கான அடித்தளம் அப்படிதானே!

உலக வரலாற்றை எடுத் துக்கொண்டால் மதக்கார ணங்களுக்காக மனித ரத்தம் சிந்தப்பட்டதுபோல் வேறு எதற்காகவும் சிந்தப்படவில்லை என்பதுதான் வரலாறு.

பார்ப்பனர்கள் போற்றும் மனுதர்மம் என்ன சொல்லுகிறது?

சூத்திரன் மற்ற மூன்று வருணத்தாருக்கும் பொறா மையின்றி பணி செய்வதை முக்கியமான தர்மமாக ஏற்படுத்தினார் (மனு அத்தி யாயம் 1 சுலோகம் 91).

சூத்திரனின் கெதியைப் பார்த்தீர்களா? மற்ற மூன்று வருணத்தாருக்கு பொறாமையின்றிப் பணி செய்ய வேண்டுமாம். பொறாமையின்றி என்பதுதான் மிக முக்கியம். அப்படி பொறாமையின்றிப் பணி செய்வதுதான் அவனுக்குத் தர்மமாம்.

இந்த யோக்கியதையில் போட்டியும், பொறாமையும் உள்ள உலகத்தைத் திருத்த ஆன்மிகம்தான் உதவுமாம்.

பொறாமையின்றிப் பணி செய்வதை தர்மம் ஆக்கிய வெட்கம் கெட்டவர்கள் பொறாமை பற்றிப் பேசுவது தான் வேடிக்கை!

அடிமைப் பணியைப் பொறாமையின்றி ஆற்றுவது தருமம் என்று ஆணி அடித் துச் சொன்ன பிறகு பொறாமையற்ற உலகைப்பற்றிப் பேசுவது அசல் வஞ்சகம் அல்லவா!

தினமலர் தூக்கிப் பிடிக்கும் இந்து மத ஆன்மிகத்தின் கொள்கை என்ன? சதுர் வர்ணம் மயா சிருஷ்டம்! தானே. நான்கு வகையான வருணங்களையும் உண் டாக்கியது நானேதான் அதனை மாற்றியமைக்க நானே முயற்சித்தாலும், அது முடியாத காரியம் என்று சொல்லப்படவில்லையா? (கீதை அத்தியாயம் 4, சுலோகம் 13).

என்ன அந்த வருண தருமம்? பிறப்பின் அடிப்படை யில் உயர்ஜாதி, தாழ்ந்த ஜாதி என்பதுதானே! மனிதன் செத்தாலும் ஜாதி சாகாது சுடுகாடு வரை அந்தப் பேதம் உண்டு என்பதை மறுக்க முடியுமா?

ஏன், இவர்கள் தலையில் கரகமாக வைத்து ஆடும் இந்து மதத்துக்குள்ளேயே சைவ வைணவ சண்டை சாதாரணமானதுதானா?

வைணவத்துக்குள்ளும் வடகலை, தென்கலை சண்டை காஞ்சிபுரம் யானைக்கு வடகலை நாமம் போடுவதா? தென்கலை நாமம் போடுவதா? என்ற சர்ச்சை லண்டன் பிரிவி கவுன்சில்வரை சென்று சிரிப்பாய்ச் சிரித்ததே! இதற்குள் போட்டிகளும், பொறாமைகளும் கொப்பளித்துக் கொண் டிருக்கவில்லையா?

அர்த்தமுள்ள இந்து மதத்தில் தாழ்த்தப்பட்டவரும் அர்ச்சகராக உரிமை உண்டு என்ற சட்டத்தை உச்சநீதி மன்றத்தில் இன்றுவரை வழக்குப் போட்டு முட்டுக் கட்டை போட்டுக் கொண்டி ருக்கும் முப்புரி கூட்டமா ஆன்மிகம்தான் சமத்துவத் திற்கான தாய்ப்பால் என்பதைவிட அதிகபட்சப் பித்தலாட்டம் வேறு ஒன்று இருக்க முடியுமா?

---------------மயிலாடன்அவர்கள் 16-8-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

0 comments: