Search This Blog

6.8.10

பகுத்தறிவும் கடவுள் வாக்கும்



வினா:- மதம் என்றால் என்ன?

விடை:- உண்மையில் நம்பிக்கை.

வினா:- உண்மை என்றால் என்ன?

விடை:- ஏதேனும் ஒரு குறிப்பிட்ட விஷயத்தைப் பற்றிய பரிபூரணமான ஞானமே உண்மை.

வினா:- உண்மையில் நம்பிக்கை என்றால் என்ன?

விடை:- அப்பேர்ப்பட்ட பூரண ஞானம் வாழ்க்கையின் உயரிய லட்சியத்தைப் பூர்த்தி செய்வதற்குப் போதுமானது என்ற நம்பிக்கையே உண்மையில் நம்பிக்கை எனப்படும்.

வினா:- உண்மையில் உள்ள நம்பிக்கையை எப்படி நிரூபித்துக் காட்டுவது?

விடை:- தன் உயர்வான - தெளிந்த - அறிவுக்குப் பொருத்தமாக நடப்பதனால் நிரூபித்துக் காட்டலாம்.

வினா:- உண்மை அல்லது பரிபூரண ஞானத்தை எப்படி அடைவது?

விடை:- அனுபவத்தினாலும், பயிற்சியினாலும் அடையலாம்.

வினா:- வேறு வழியில்லையா?

விடை:- இல்லை.

வினா:- மதத்தைப் பற்றி நீ கூறிய வியாக்கியானம் பொதுவாக ஒப்புக் கொள்ளப்பட்ட வியாக்கியானம் தானா?

விடை:- தெய்வ நம்பிக்கையும், தெய்வ அருளைப் பெற்ற மதாசிரியர்கள் வகுத்த விதிகளில் நம்பிக்கையுமே பொதுவாக மதம் என மதிக்கப்படுகிறது.

வினா:- தெய்விகம் என்றால் என்ன?

விடை:- தெளிவாய் அறியப்பட்ட இயற்கை விதிகளுக்குப் புறம்பானவைகளெல்லாம் தெய்விகமானவைகளே.

வினா:- அத்தகைய விஷயங்களில் நாம் கைக்கொள்ள வேண்டிய நிலை என்ன?

விடை:- அவற்றை நாம் எதிர்க்கக் கூடாது. அவற்றைப் பற்றி தாராளமாக விவாதிக்க இடம் கொடுக்க வேண்டும்.

வினா:- இதர வழிகளில் அறிந்து கொள்ள முடியாத பல விஷயங்களை கடவுள் வாக்கான வேதங்கள் நமக்கு விளக்கிக் கூறவில்லையா?

விடை:- எத்தனையோ வேதங்கள் இருக்கின்றன. எனவே எந்த வேதம் உண்மையான கடவுள் வாக்கு என்பதை நாம் முதலில் நிர்ணயம் செய்து கொள்ள வேண்டும்.

வினா:- வேதங்களில் சிலவற்றைக் கூறுக.

விடை:- ஜொராஸ்டிரிய வேதம், பிராம்மண வேதம், பவுத்த வேதம், யூத வேதம், கிறிஸ்தவ வேதம், முகமதிய வேதம், மார்மண் வேதம்.

வினா:- இந்த வேதங்கள் எல்லாம் தெய்வ வாக்கென உரிமை பாராட்டுகின்றவனவா?

விடை:- ஆம்.

வினா:- அந்த வேதங்கள் பரஸ்பரம் ஒன்றையொன்று கண்ணியம் செய்கின்றனவா?

விடை:- இல்லை. மாறாக ஒவ்வொன்றும் மற்றவை பொய்யென்று கண்டிக்கின்றன.

வினா:- அதை விளக்குக.

விடை:- எனக்கு நிகராக உலகத்திலோ, சுவர்க்கத்திலோ யாருமில்லை. நானே பூரண ஞானம் பெற்ற புத்தன் என்று புத்தர் கூறியிருக்கிறாராம்.

வினா:- வேறொரு உதாரணம் கூறுக.

விடை:- நானே உண்மையான வழிகாட்டி; எனக்கு முன் வந்தவர்கள் எல்லாம் பொய்யர்கள், திருடர்கள், என்னையன்றி வேறு ஒருவருக்கும் என் பிதாவை அணுக முடியாது என்று இயேசு கூறியிருக்கிறாராம்.

வினா:- இதை விட முக்கியமாக மதிக்கக் கூடிய ருசு வேறு ஏதாவதுண்டா?

விடை:- ஒவ்வொரு மதஸ்தரும் பிற மதஸ்தரை, தம் மதத்துக்கு இழுக்க முயல்கிறார்கள்.

வினா:- மதமாற்றம் என்றால் என்ன?

விடை:- நாம் நம்புவது போலப் பிறரும் நம்பும்படி செய்வதே மதமாற்றம்.

வினா:- அதன் நோக்கம் என்ன?

விடை:- நோக்கம் பலவாக இருக்கலாம். எனினும் அவற்றுள் முக்கியமானது நம்மைப் போல் மற்றவர்கள் நம்பாவிட்டால் நரக தண்டனை பெறுவார்கள் என்பதே.

வினா:- மேலே கூறப்பட்ட வேதங்களில் எது உண்மையானது?

விடை:- ஒன்றாவது - முழுதும் மெய்யானதோ பொய்யானதோ அல்ல.

வினா:- அவற்றுள் எது பொய், எது மெய் என்று எவ்வாறு அறிவது?

விடை:- பகுத்தறிவினால் அறிந்து கொள்ளலாம்.

வினா:- அப்படியானால் வேதங்களை விடப் பகுத்தறிவு மேலானது என்று ஏற்படாதா?

விடை:- ஆம். ஏற்படத்தான் செய்யும்.

வினா:- அவ்வளவு உயர்வான பகுத்தறிவு நம்மிடம் இருக்கையில், மேலும் நமக்கு மதங்களும், வேதங்களும் வேண்டுமா?

விடை:- நமக்கு வேண்டாம். பகுத்தறிவுக்குப் பொருத்தமான வேதங்களைத்தான் ஒப்புக் கொள்ள முடியும்.

வினா:- ஒரு புத்தகத்தில் கடவுள் வார்த்தை அடங்கியிருப்பதாக நீ நம்பினால், அது பகுத்தறிவுக்குப் பொருத்தமாக இருந்தாலும், இல்லாவிட்டாலும் நீ அதைப்பூரணமாக நம்ப வேண்டியது தானே?

விடை:- நம்பத் தேவை இல்லை.

வினா:- அது எப்படி?

விடை:- நான் குருட்டுத்தனமாக நம்பினால் அந்த நம்பிக்கைக்கு மதிப்பேயில்லை. கட்டாயத்தின்பேரில் நம்பினால் அது மனப்பூர்வமான நம்பிக்கையுமல்ல. பகுத்தறிவால் தூண்டப்பட்டு நான் நம்பினால் என் நம்பிக்கைக்குப் பாத்திரமானது என் பகுத்தறிவேயன்றி வேதமல்ல.

வினா:- இதற்கு ஒரு உதாரணம் கூறுக.

விடை:- பூமி பரப்பானது என்று எந்த வேதம் கூறினாலும் நாம் நம்ப மாட்டோம். ஏனெனில், நமது அனுபவத்திலும், ஆராய்ச்சியிலும் பூமி பரப்பாக இருக்கவில்லை.

வினா:- பகுத்தறிவுப்படி தப்பானதையும் நம்ப வேண்டுமென்று வேதம் கட்டளையிட்டால் நீ கடவுள் வாக்கான வேதத்துக்குக் கீழ்ப்படிவாயா? பகுத்தறிவுக்குக் கீழ்ப்படிவாயா?

விடை:- பகுத்தறிவுக்கு ஒத்தபடி நான் நடந்து கொள்ளாவிட்டால் நான் ஒழுக்கமுடையவன் ஆகமாட்டேன்.

வினா:- பகுத்தறிவு பொய் என்று கூறுவதை, மெய் என்று நம்புவது சாத்தியமில்லையா?

விடை:- சாத்தியமே அல்ல. பகுத்தறிவே மேலான ஆதாரம்; அதிகாரி. மெய்யானதை மெய்யென்று நம்பும்படி பகுத்தறிவைக் கட்டாயப்படுத்த யாருக்குமே அதிகாரமில்லை.

வினா:- பகுத்தறிவுக்கு முரணான விஷயங்களை எந்த வேதமாவது போதனை செய்கிறதா?

விடை:- ஆம். எல்லா வேதங்களும் போதனை செய்கின்றன.

வினா:- உதாரணம் கூறுக.

விடை:- படைப்புக் கதை.

வினா:- வேறொரு உதாரணம்.

விடை:- பிரளயக் கதை.

வினா:- மேலும் ஒரு உதாரணம்.

விடை:- மனிதன் சபிக்கப்பட்டுப் பாபியான கதை.

வினா:- அவற்றைப் பற்றி தற்காலத்திய அபிப்பிராயம் என்ன?

விடை:- வேதங்கள் கூறுகிறபடி மனிதன் சாபத்துக்கு உள்ளாகவில்லை; பிரளயம் உண்டாகவில்லை; கடவுள் பிரபஞ்சத்தைப் படைக்கவில்லை என இப்பொழுது நமக்கு நிச்சயமாகத் தெரிகிறது.

வினா:- வேதங்களில் உள்ள வேறு தப்புகள் எவை?

விடை:- சரித்திரப்படியும், விஞ்ஞான சாஸ்திரப்படியும் தப்பான பல விஷயங்கள் வேதங்களில் அடங்கியிருக்கின்றன. வேதங்களில் கூறப்பட்டவை எல்லாம் பரஸ்பரம் முரணாக இருக்கின்றன. பாபகரமான பல விஷயங்களையும், வேதங்கள் போதனை செய்கின்றன.

வினா:- வேதங்களில் காணப்படும் இத்தகைய தப்புகளுக்குக் காரணம் என்ன?

விடை:- மனிதன் தப்புச் செய்யக் கூடியவன்தானே!

வினா:- அப்படியானால் வேதங்கள் எல்லாம் மனிதன் வகுத்ததுதானா?

விடை:- வேதங்கள் மக்களின் அறிவும், அறியாமையும், நற்குணமும், துர்க்குணங்களும் அடங்கிய ஒரு நூலேயன்றி வேறல்ல.

வினா:- அப்படியானால் நாம் செய்ய வேண்டியது என்ன?

விடை:- நம்மிடமுள்ள ஒளி வழி காட்டுகிறபடி நடக்க வேண்டும்.

வினா:- அது என்ன ஒளி?

விடை:- அதுதான் பகுத்தறிவு.

வினா:- பகுத்தறிவு நம்மைத் தப்பு வழியில் செலுத்தாதா?

விடை:- ஆம். செலுத்தக் கூடும்.

வினா:- அப்படியானால் அதை ஏன் நாம் பின்பற்ற வேண்டும்?

விடை:- ஏனெனில், அதை விடச் சிறந்த வழிகாட்டி நமக்கு வேறில்லை.

வினா:- வேதங்களுக்கு ஜனங்கள் அதிக மதிப்புக் கொடுக்கக் காரணம் என்ன?

விடை:- வேதங்கள் இல்லையானால் ஒழுக்கங்கெட்டு விடும் என்ற பயமே அதற்குக் காரணம்.

வினா:- அத்தகைய பயத்துக்கு ஏதாவது ஆதாரமுண்டா?

விடை:- இல்லவே இல்லை. வேதங்களின் பெயரால் எவ்வளவோ பயங்கரக் குற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. மாறாக வேதங்களை நம்பாத அநேகர் உதவியாளராக இருந்திருக்கின்றார்கள்.

வினா:- எப்பொழுதாவது கடவுள் பிரத்தியட்சமாகி வேதத்தை அருளியதுண்டா?

விடை:- இல்லை. சுமார் 5,000 வருஷங்களுக்கு முன் கடவுள் வேதத்தை அருளியதாகவே நம்பப்படுகிறது.

வினா:- அதற்குமுன் உலகத்தில் ஒழுக்கம் இருந்ததில்லையா?

விடை:- நிச்சயமாக ஒழுக்கம் இருந்தே வந்தது. அதற்கு முன் மக்களும், சமூகங்களும், தேசங்களும் இருந்தே வந்திருக்கின்றன.

வினா:- உலகத்திலுள்ள ஒவ்வொரு தேசத்தாருக்கும் கடவுள் தனித்தனி வேதம் அருளினாரா?

விடை:- இல்லை. யூதர்களுக்கு மட்டும் கடவுள் வேதம் அருளியதாகவே பொதுவாக நம்பப்படுகிறது.

வினா:- அப்படியானால் உலக மக்களில் யூதர்கள் மட்டுந்தானா ஒழுக்கமுடையவர்கள்.

விடை:- இல்லவே இல்லை. கடவுள் மூலம் வேதம் பெறாத கிரேக்கர் பண்டு மிக்க நாகரிகம் உடையவர்களாக இருந்திருக்கிறார்கள்.

வினா:- அதனால் விளங்குவது என்ன?

விடை:- வேதத்துக்கும் ஒழுக்கத்துக்கும் எத்தகைய சம்பந்தமும் இல்லை யென்பது அதனால் விளங்குகிறது.

வினா:- வேதங்கள் இல்லையானால் ஒழுக்கம் கெட்டுவிடும் என்று போதிப்ப தனால் நன்மை ஏற்படுமா?

விடை:- ஏற்படாது. முதலில், வேதங்கள் இல்லை. இரண்டாவது வேதங்களில் ஜனங்களுக்கு நம்பிக்கை இல்லாமல் ஆகி விட்டால் ஒழுக்கத்திலும் நம்பிக்கை இல்லாமல் ஆகி விடும்.

வினா:- மெய்யான விஷயங்களில் நம்பிக்கையை வலுப்படுத்துவது எப்படி?

விடை:- பிரதிபலனை எதிர்பாராமல் நன்மையானதைச் செய்வதனாலும், விரும்புவதனாலும் வலுப்படுத்தலாம்.

வினா:- நல்ல ஒழுக்கத்திற்கு வேறு தூண்டுதல்கள் எவை?

விடை:- முக்கியமான தூண்டுதல் சுயமதிப்பில் விருப்பம்; இரண்டாவது பிற நல விருப்பம்; மூன்றாவது கடமை உணர்ச்சி.

வினா:- கடமையைச் சரிவரச் செய்வது எப்பொழுதும் இன்பகரமாக இருக்குமா?

விடை:- கடமை ஒரு சோதனை என்றும், உத்தமர்களாக இருக்க வேண்டுமானால் நம்மையே நாம் தியாகம் செய்துவிட வேண்டும் என பழைய மதங்கள் போதனை செய்கின்றன.

வினா:- அத்தகைய மத போதனையினால் விளையும் பயன் என்ன?

விடை:- அதனால் உத்தம வாழ்க்கை நடத்த ஜனங்கள் பயப்படுகிறார்கள். உத்தம வாழ்க்கையைப் பற்றி எண்ணும் போதும் பயமும் மனச்சோர்வுமே அவர்களுக்கு உண்டாகிறது.

வினா:- அவ்வளவுதானா?

விடை:- துஷ்டர்களுக்குத்தான் இந்த உலகத்தில் சந்தோஷமாக இருக்க முடியும் என்ற நம்பிக்கையும் பாமர மக்களுக்கு உண்டாகிறது.

வினா:- கடமை என்பதற்குச் சரியான பொருள் என்ன?

விடை:- கடமை ஒரு சோதனை அல்ல; தியாகமு மல்ல, கடமை என்பது ஒற்றுமை, அழகு. மகிழ்ச்சி, சரீர மானச விதிகளை நாம் மீறும்போதுதான் நாம் ஆத்ம தியாகம் செய்து சோதனைக்கு உள்ளாகிறோம்.

-------------------- தந்தைபெரியார் - “குடிஅரசு” 19.4.1936

2 comments:

Bibleunmaikal said...

click the link and read


ம‌த‌ம்மாற்ற‌ம் செய்ய தில்லுமுல்லு மொள்ள‌மாரித்த‌ன‌ம்.

.............

அ.முத்து பிரகாஷ் said...

//ஒழுக்கத்திற்கு தூண்டுதல்கள் எவை?
சுயமதிப்பில் விருப்பம்; இரண்டாவது பிற நல விருப்பம்; மூன்றாவது கடமை உணர்ச்சி...//

நன்றிகள் தோழரே! சிந்திக்க வைக்கின்றன உங்கள் வரிகள் ...
பின்பற்றவும் தான் ...